Friday, June 25, 2010

தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு என்ன இடம்?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடக்கிறது. ஏகப்பட்ட தமிழறிஞர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். தமிழ் மொழியின் தனித்தன்மை, சிந்துவெளி எழுத்துக்கள், திராவிடம் பற்றிய ஆய்வுகள், சங்க காலம் பற்றிய இன்றைய ஆய்வு நோக்கங்கள், இன்றைய நோக்கில் தொல்காப்பியம், தொல்லியல்,பொருளியல், நாணயவியல், வரலாற்றியல், ஆகிய பொருட்களில் பல்வேறு மொழியறிஞர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் தங்களின் ஆய்வுகளை வழங்க இருக்கிறார்கள். இவை மட்டுமின்றி இன்னமும் பல்வேறு பொருட்களும் ஆய்வுக்களமாக அமைந்திருக்கின்றன. உலக நாடுகளின் தமிழும் தமிழரும், உலக மயமாதல் சூழலில் தமிழ், தத்துவ உலகில் தமிழ், வேளாண்மையில் விண்வெளியில் ஆழ்கடல் சூழலில் கணிணியில் மருத்துவத்துறையில் என்று உலகம் இயங்கும் எல்லாச் சூழலிலும் தமிழின் தமிழனின் இயல் குறித்த ஆய்வுகள் படைக்கப்பட இருக்கின்றன. தமிழகத்தின் பண்டைய பெருமைகளை வண்ணக்கோலத்தில் விளக்கும் அலங்கார ஊர்திகளின் பவனியும் ஆர்ப்பாட்டமாய் நடந்து முடிந்துவிட்டது. பொதுமக்களின் கண்ணோட்டத்தில் இப்படிப்பட்ட காட்சிகளும் கேளிக்கைகளும் தேவைதான். ஏனெனில் மனிதமனம் எப்போதுமே கொண்டாட்டத்தை விரும்பும். அதுவும் ஊர்கூடி ஒரே நோக்கில் கொண்டாடப்படும் எந்த ஒரு திருவிழாவிலும் மக்கள் மனமுவந்து கலந்துகொள்வதும் அதனை மிகுதியாக ரசிப்பதும் இயற்கையான ஒன்றுதான். ஆனால் வெறும் ரசனைகளோடு முடிந்துவிடும் மாநாடு அல்ல இது. மாநாட்டின் விளைவுகள் காலாகாலத்திற்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும். கல்வெட்டுக்களாய்ச் சில பதிவுகளை வரலாற்றில் விட்டுச்செல்ல வேண்டும்.

ஏற்கெனவே சில மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும் கலைஞரே அறிவித்தபடி இந்த மாநாடு அவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டது என்பதாக அமைய வேண்டும். தமிழுக்குச் செம்மொழி தகுதியை அதிகாரபூர்வமாகப் பெறுவதற்கு நூறு ஆண்டுகள் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கும் கன்னடமும் ஒரேயொரு சாதாரணக் கடிதம்மூலம் செம்மொழி தகுதியைப் பெற்ற செய்தியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். காரணம் இந்த நாட்டின் அரசியல். அரசியல்தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம். மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு மாதிரியான அரசியல். தமிழகத்தைப் பொறுத்தவரை வேறுமாதிரியான அரசியல்.
இந்த அரசியல், மொழியிலும் ஊடுருவி கோலோச்சுவதுதான்இங்கே காலம்பூராவும் நடந்துவருகிறது. இலக்கியங்கள் எல்லாமே இங்கு இரண்டுவிதமாகத்தான் பிரிக்கப்படுகின்றன. ஒன்று திராவிட இலக்கியம். இன்னொன்று திராவிட வட்டத்துக்குள் வராத இலக்கியம்.இந்த இரு பிரிவுகளிலும் கச்சைக் கட்டிக்கொண்டு மோதிக்கொண்டிருப்பதிலேயே பெரும்பாலான இலக்கியவாதிகளின் பொன்னான நேரம் ஒரு பயனுமின்றி வீணடிக்கப்படுவதுதான் மிகப்பெரிய சோகம்.எல்லாமே தமிழுக்குக் கிடைத்த வரம்தான் என்று வரவு வைத்து நமக்கு வேண்டியதை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவதுதான் மொழிக்குச் செய்யும் தொண்டே தவிர இது எழுத்தே இல்லை, இது இலக்கியமே இல்லை என்று குழு அமைத்துக்கொண்டு அடித்துக்கொண்டிருப்பதில் என்ன பயன் என்று ஒன்றும் புரியவில்லை.

இது ஒருபுறமிருக்க தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள், மற்றும் பல்வேறு அமைப்புக்களும் சரி; இன்னொரு பெரிய தவறையும் செய்து வருகின்றன. தமிழ் வளர்ப்பது என்பதற்கு இவர்கள் எல்லாரும் எடுத்துக்கொண்டிருக்கும் அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கும் தளம் எது தெரியுமா? சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக் கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான். இது பற்றி ஆய்வுகள், இது பற்றி நூல்கள், இது பற்றி கருத்தரங்கங்கள், இது பற்றி கலந்தாய்வுகள், இதுபற்றி இலக்கியக் கூட்டங்கள்.....இவைதாம். திரும்பத் திரும்ப இவை மட்டுமேதான். தொல்காப்பியத்தில் ஆரம்பித்து புறநானூறு அகநானூறு சிலப்பதிகாரம் கம்பராமாயணம், பதிற்றுப்பத்து, பன்னிரு திருமுறை நளவெண்பா முத்தொள்ளாயிரம் என்று வருவார்கள். அதையும் தாண்டி வருவதற்குள் மூச்சு வாங்கிவிடும். இன்னும் கொஞ்சம் தம் பிடித்து பாரதியார்வரைக்கும் வருவார்கள். அங்கேயே ஆணி அடித்தார்போல் நின்றுவிடுவார்கள். இவர்கள் ஒருவகை. இன்னொருவகையினரோ தொல்காப்பியம் புறநானூறு சிலப்பதிகாரம் என்றெல்லாம் பயணப்பட்டு கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியங்களையும் கண்டுகொள்ளாமல் மிக கவனமாக பாரதியாரையும் தவிர்த்துவிட்டு பாரதிதாசனை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். தமிழுணர்வு பாடிய பாரதிதாசனின் ஒரு பத்துப்பாடல்களை மட்டும் மனப்பாடம் செய்துவைத்திருந்து ஒப்பிப்பார்கள். அவ்வளவுதான்; அவ்வளவேதான். பாரதிதாசனிலிருந்து ஒரு அங்குலம்கூட கீழே வரமாட்டார்கள். அங்கேயே நின்றுவிடுவார்கள். இவர்களைப்பொறுத்தவரை தமிழ் இலக்கியம் பாரதிதாசனுடன் நின்றுவிடுகிறது.அதன்பிறகு தமிழுக்கு இலக்கியம் இல்லை; இல்லவே இல்லை.

இந்தக் கண்ணோட்டம்தான் திராவிட அரசுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் இலக்கிய நிறுவனங்களுக்கும் இருந்துவருகிறது. தொண்ணூற்றைந்து சத இலக்கிய அமைப்புக்களுக்கும் இதே கண்ணோட்டம்தான் இருக்கிறது.இருபது இருபத்தோராம் நூற்றாண்டைப் பற்றியோ இதற்குப்பிறகு வரவிருக்கும் நூற்றாண்டுகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று இவர்களாகவே முடிவு செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. கண்ணதாசன் பற்றிய இலக்கிய அமர்வு ஒன்றில் பேசினேன். பேசிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அந்த அமைப்பின் தலைவர் தொலைபேசியில் வந்தார். "கண்ணதாசன் இப்படியெல்லாம் பாடி இருக்காரா? நான் பாரதிதாசனோடு படிக்கிறதை விட்டுட்டேன். அதனால எனக்குத் தெரியலை" என்றார். கண்ணதாசனுக்கே இந்த நிலைமை.

தமிழ் படித்த மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் படித்துமுடித்து வெளியேவரும் மக்கள் பாடப்புத்தகத்துக்கு வெளியே என்ன இருக்கிறது என்றுதான் தேட ஆரம்பிக்கிறார்களே தவிர, பாடப்புத்திகத்தின் தொடர்ச்சியையும் நீட்சியையும் மட்டுமே வைத்துக்கொண்டு அல்லாடுவதில்லை. அப்படியிருந்தால் இத்தனை வார ,மாத, நாளிதழ்களும் இலட்சக்கணக்கான நூல்களும் தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்ன! இத்தனை நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் தமிழில் இருக்குமா என்ன!

தமிழை தமிழின் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய முயற்சிகளை விட்டுவிட்டு வெறும் பழைய இலக்கியங்களை மட்டுமா பரிமாறிக்கொண்டிருப்பது? வெறும் பழங்கதைகள் பேசிக்கொண்டிருப்பதிலே ஒரு பயனுமில்லை என்று இவர்களுக்காகத்தான் பாரதி பாடி வைத்திருக்கிறான். திரும்பத் திரும்ப சங்ககால இலக்கியங்களும் பழைய நூல்களும்தானா? என்ற கேள்விக்கு இவர்களிடம் தயாரான பதில் ஒன்று இருக்கிறது. “சங்க இலக்கியத்தில் இல்லாத எதனைப் புதிதாகச் சொல்லிவிடப்போகிறார்கள்?” என்பார்கள். உலகம் புதிது. தினமும் புதிது. தினசரி தன்னைப் புதிப்பித்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பூவுலகம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று மனிதர்களைச் சொல்லுவதும் அதற்குத்தான். இன்று புதிதாய்ப் பிறந்த சிந்தனை வேண்டும்.எண்ணம் வேண்டும். அதற்குரிய செயல்பாடு வேண்டும். இந்தச் செயல்பாடு இலக்கியத்திலும் வேண்டும். இதை நோக்கித்தான் எல்லா மொழிகளும் செயல்படுகின்றன.
கன்னடத்திற்காக நடைபெறும் மாநாடுகளிலும் சரி சாதாரண கருத்தரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் சரி போய்ப்பார்த்தோமானால் வரிசையாகப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பேரும் படைப்பாளிகள். அதுவும் இந்த நூற்றாண்டின் படைப்பாளிகள், இன்றைய படைப்பாளிகள். இன்றைய படைப்பாளிகளைக் கொண்டாடும் மொழிகள்தாம் இலக்கியச் செழுமையில் முன்நிற்கும். மலையாளத்திலும் இந்தப் போக்கு இருக்கிறது. தமிழில்தான் அரசியல்வாதிகளுக்குத் தரப்படும் மரியாதையில் கால்தூசு அளவுக்குக்கூட இன்றைய படைப்பாளிக்குத் தரப்படுவதில்லை.' இன்றைய படைப்பாளி ஏதோ அவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போகட்டும் நாம் எதற்கு கண்டு கொள்வது?' என்ற மனப்பான்மைதான் இங்கு நிலவுகிறது.

பிரச்சினை என்னவென்றால் 1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.
2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.
3)ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது இந்தக் குப்பையான கலவைதான் அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது.

உலகத்தமிழ் மாநாடாக இருந்தாலும் சரி; செம்மொழி மாநாடாக இருந்தாலும் சரி தமிழ் இலக்கியத்தை நேற்று- இன்று- நாளை என்ற கண்ணோட்டத்தில் அணுகி அதற்கான செயல்பாடுகளையும் மேம்பாடுகளையும் ஆராய்ந்து செயல்திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர வெறும் பழம்பெருமைகளைப் பேச கூடிக்கலையும் ஒன்றாக இருக்கக்கூடாது. வெறும் சங்க கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளாகவும் கருத்தரங்கங்களாகவும் மட்டுமே இருத்தல்கூடாது. இந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் பேராசிரியப் பெருமக்களும் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இப்போதைய வார மாத நாளிதழ்களும் மற்ற நூல்களும் சங்க இலக்கியப்பாடல்களுக்கான விளக்கங்களையும் பொழிப்புரைகளையும் ஆய்வுகளையும் குறிப்புகளையும் தினசரி கொடுத்துக்கொண்டே வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இன்றைய கதைகளோ கவிதைகளோ கட்டுரைகளோ செய்திகளோ எதுவும் வேண்டாம். என்ன நடக்கும்? அவனவன் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆப்பிரிக்காவுக்கோ உகாண்டாவுக்கோ ஓடிவிட மாட்டானா?

பழந்தமிழ்ச் செய்யுள்கள் என்பவை என்ன? அந்தக்கால புலவர் பெருமக்கள் அவர்களின் உணர்வுகளை அனுபவங்களை அவர்களின் மனதில் உதித்த காட்சிப்படிவங்களை அன்று வழங்கிவந்த தமிழில் அந்தக்கால மொழிநடையில் பாடி வைத்த படைப்புக்கள்தானே? அவை சிறப்பாயிருப்பதில் மிக மிகச் சிறப்பாயிருப்பதில் நமக்கெல்லாம் பெருமை. அவற்றை நாம் பொக்கிஷம் போல் என்றென்றும் கொண்டாடலாம். அதே போல இந்தக்கால படைப்பாளி தன்னுடைய உணர்வுகளை அனுபவங்களை தன்னுடைய மனதில் உதித்த காட்சிப்படிவங்களை இந்தக்கால மொழிநடையில் இந்தக்காலத் தமிழில் இயற்றுவதுதானே இன்றைய இலக்கியம்? இந்த எளிய உண்மையை நீங்கள் உணர்ந்ததே இல்லையா?' காரொடு நிறைமரு திறமிசை விரியொரு ஞாலம் புகவொண்ணும் ஆதிரைக்கால்' என்று இருந்தால் நீங்கள் கொண்டாடுவீர்கள். 'மலை உச்சியைத் தொட்டுத் தழுவிய மேகங்களின் ஊடாக' என்று புரிகிறமாதிரி இருந்துவிட்டால் சாதாரணம் என்று விட்டுவிடுவீர்கள் என்றால் எப்படி?
தமிழை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டங்களில் தோன்றிய படைப்பாளிகள்தாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டும் விஷயங்கள் மட்டுமே அல்ல என்கிற புரிதல் வேண்டும். அதற்காக கல்வெட்டுக்களையும் இன்னபிற ஆய்வுகளையும் புறக்கணிக்கவேண்டும் என்று அர்த்தமல்ல; அவற்றுக்குத் தரப்படும் அதே முக்கியத்துவம் அல்லது அதைவிட அதிக முக்கியத்துவம் வாழும் படைப்பாளிகளுக்கும் தரப்பட வேண்டும்.
இந்த இருபதாம் நூற்றாண்டை எடுத்துக்கொள்வோம். பாரதிக்குப் பிறகு பள்ளிகள் கல்லூரிகளைத் தாண்டி தமிழை வீட்டுக்குள்ளே எடுத்துச்சென்று வாழ வைத்தவர்கள் யார்? கல்கியும் அகிலனும் புதுமைப்பித்தனும் அல்லவா? புதிய நூல்களும் புதிய இதழ்களும் புதிய புதினங்களும் அல்லவா தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.

அந்திகீரனார், பரணர், பெருந்தலைச்சாத்தனார் பெயரில் அரங்கங்கங்கள் அமைக்கும்பொழுது கல்கியின் பெயரிலும் அகிலன் பெயரிலும் புதுமைப்பித்தன் பெயரிலும் ஜெயகாந்தன் பெயரிலும் கண்ணதாசனின் பெயரிலும் அரங்கங்கங்கள் வேண்டாமா?

தமிழ் இலக்கியம் தொடர்பாக 73 பேர் ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர். மொழியியலில் 51 பேர், இலக்கணத்தில் 46 பேர், ஒப்பிலக்கியத்தில் 39 பேர், ஆவணப்படம் தொடர்பாக ஒருவர், தமிழும் பிற இந்திய மொழிகளும் தலைப்புகளில் இருவர், மொழிசார் இயக்கங்கள், சொற்பிறப்பியல், சிற்றிதழ்கள் ஆகிய தலைப்புகளில் ஒவ்வொருவர், படைப்பிலக்கியம் தொடர்பாக மூன்றுபேர் - இதுதான் இந்த மாநாட்டின் ஆய்வரங்க கட்டுரைகளின் பட்டியல். அதாவது இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் தமிழை யார் கொண்டுபோகப்போகிறார்களோ அவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதான். படைப்பிலக்கியம் பற்றி வெறும் மூன்றே மூன்று கட்டுரைகள். விளங்குமா படைப்பிலக்கியம்?

இதிலும் அண்ணா பற்றி நான்கைந்து கட்டுரைகள்; கலைஞரின் படைப்புக்கள் பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்; மெத்தச்சரி, தமிழின் வரலாற்றை,சோழர்குல வரலாற்றை, மாமல்லபுர வரலாற்றை தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் செதுக்கி வைத்திருக்கும் கல்கியின் எழுத்துக்கள் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?
யவனர்களின் சரித்திரத்தைத் தமிழர்களின் நினைவுகளில் பதியவிட்ட சாண்டில்யனின் படைப்பிலக்கியம் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

வரலாறு மட்டுமின்றி குடும்ப உறவுகளையும் காதல் மனப்போராட்டங்களையும் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் ஆக்கித்தந்த அகிலனின் படைப்புக்கள் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

சமூக அவலங்களை முகத்தில் அறைவதுபோல் ஆக்கிவைத்திருக்கிறாரே ஜெயகாந்தன் .. அவரைப்பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

கதை மாந்தர்களைப் பார்த்து நாமும் இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்கள் வாழ்க்கையையே மாற்றியமைத்துக்கொண்டார்களே எத்தனையோ இளைஞர்கள்.. அவர்களை அப்படித் தூண்டிய படைப்புக்களைப் படைத்த நா.பார்த்தசாரதிக்கும் டாக்டர் மு.வ.வுக்கும் எத்தனைக் கட்டுரைகள்?

கவிஞர் கனிமொழியின் படைப்புக்களைப் பற்றி மூன்றுபேர் கட்டுரை . மிகவும் சந்தோஷம். கண்ணதாசனின் படைப்புக்களைப் பற்றி எத்தனைக் கட்டுரைகள்? அப்துல் ரகுமான், மேத்தா, மீரா, நா. காமராசன் கவிதைகளைப் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

சுந்தர ராமசாமியின் படைப்புக்களைப் பற்றியும் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரின் படைப்பாக்கங்கள் குறித்தும் எத்தனைக் கட்டுரைகள்?

கணிணித்தமிழ் என்று பேசுகிறார்களே அந்தக் கணிணியில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் சங்கத்தமிழைப் பதிவேற்றுவது தவிர எந்த திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் யாரைப்பற்றியும் கவலையே படாமல் அவரவர்களும் தனித்தனி தளங்களை அமைத்துக்கொண்டு எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் ஆபாச வார்த்தைப் பரிமாற்றமும் இருக்கிறதுதான். ஆனால் நாளடைவில் அவை யாவும் ஒழுங்கிற்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே போதும். புதிய புதிய எண்ணங்களும் புதிய சிந்தனைகளும் வலைத்தளங்களில் தாமாகவே வரத்துவங்கி விட்டன.

பெரிய பொருட்காட்சிகளில் ஒரு ஓரத்தில் போடப்படும் அப்பளக்கடையைப் போல் தற்காலப் படைப்புக்களுக்கு இத்தனூண்டு இடம் கொடுத்துவிட்டு பழம்பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது எந்த மொழியையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோகாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் மட்டுமே தமிழ் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சிறக்கும். மற்ற மொழிக்காரர்களைப் பார்த்தாவது சில விஷயங்களைக் கற்றுக்கொள்வோம்.

Sunday, June 20, 2010

உலகத்தமிழ் மாநாட்டை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடாக மாற்றிய கலைஞரின் டெக்னிக்


தம்முடைய ஆட்சிக்காலத்தில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றைப் பிரமாதமாக நடத்தி முடித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்த கலைஞர் உலகத்தமிழ் மாநாடு நடத்தும் நிறுவனத் தலைவருக்கு கடிதம் எழுதுகிறார். தம்மைக் கலந்து ஆலோசிக்காமல் இவர் பாட்டுக்கு முடிவு செய்துவிட்டு மாதத்தையும் தேதியையும்கூட அறிவித்துவிட்டு ஒப்புக்காகத் தம்மை அணுகுகிறார்களே என்று அவருக்கு ஈகோ பிரச்சினை. முள்ளிவாய்க்கால் மரணங்களெல்லாம் இவர் மறுப்புச்சொல்ல காரணங்களாக இருந்ததா என்பது தெரியவில்லை. “குறுகியகால அவகாசத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது சாத்தியமில்லை" என்று நாலுவரி கடிதம் எழுதிவிட்டார். பாவம், அவருக்கு கலைஞரின் சித்துவிளையாட்டுக்களெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்துடன் சேப்டர் குளோஸ் என்பது அவர் கணக்கு. ஈழ ஆதரவாளர்கள்கூட கலைஞருக்கு சரியான மூக்குடைப்பு என்று மகிழ்வடைந்திருப்பார்கள். அடுத்த நாளே 'கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு' என்று அறிவிப்பு வர எல்லாரும் மிரண்டு அதிர்ந்ததுதான் மிச்சம். தாம் என்ன நினைக்கிறாரோ அதனை நடத்திமுடித்து விடுவதுதான் கலைஞரது அரசியல் பாணி. அதற்கென சதுரங்க காய்களை அவர்போல் நகர்த்தும் அரசியல் ராஜதந்திரம் அவர் தலைமுறை அரசியல் தலைவர்களில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

அந்த நாட்களில் எம்.ஆர். ராதாவைப் பற்றிச் சொல்வார்கள். குறிப்பிட்ட நாடகத்திற்குப் போலீஸ் தடை போட்டதும் பெயரை மட்டும் மாற்றிவைத்து விட்டு அதே நாடகத்தை நடத்திமுடிப்பார் என்று.கிட்டத்தட்ட அதே கதைதான் என்றாலும் கலைஞர் இதுபோன்ற 'நாடகத்தை' ஏற்கெனவே நடத்திமுடித்திருக்கிறார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
கவிஞர் வைரமுத்துவைப் பாராட்ட நினைத்த கலைஞர் அவருக்கு திடீரென்று 'கவியரசு' என்ற பட்டத்தைச் சூட்டுகிறார். இலக்கிய உலகம் திடுக்கிடுகிறது. ஏனெனில் கவியரசு என்பது கவிஞர் கண்ணதாசனுடைய பட்டம். தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர் என்றாலும் கவியரசு அல்லது கவியரசர் என்றாலும் அது கண்ணதாசனை மட்டுமே சுட்டும் பெயர் என்பதுதான் தமிழ் நிலம் ஏற்றுக்கொண்ட ஒரு பாடம். கம்பனுக்குப் பிறகு எத்தனையோ கவிஞர்கள் பவனிவந்த போதிலும் கவியரசர் என்ற பெயரைக் கண்ணதாசனுக்குத்தான் சூட்டி மகிழ்ந்தது தமிழுலகம்.கண்ணதாசன் தமிழின் ஆளுமைகளில் ஒருவர். காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர்,நடிகர் திலகம் என்று தமிழின் நிரந்தர அடையாளங்களாக எப்படிச் சிலர் மாறினார்களோ அந்தவகை அடையாளங்களில் ஒருவராக மாறியிருப்பவர் கண்ணதாசன். கோடிக்கணக்கான மக்களின் நாக்குகளில் இன்றைக்கும் புழங்கும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் கண்ணதாசன். 'உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருபத்துநான்கு மணிநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்கள் இரண்டு பேருடையவை. ஒருவர் லதா மங்கேஷ்கர், அடுத்தவர் கண்ணதாசன்' என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. மற்ற கவிஞர்களின் பாடல்களை மனப்பாடம் செய்தால்தான் மனதில் நிற்கும். ஆனால் கண்ணதாசனின் பாடல்கள் கவனத்துடன் கேட்கவில்லையென்றாலும் எப்படியோ காதில்விழுந்து மனதில் அல்ல உதிரத்துடன் கலந்து நிற்கும் தன்மை கொண்டவை. அவர் மறைந்து இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனபிறகும்கூட அவருடைய அருகில் வருவதற்குக்கூட இன்னமும் யாரும் பிறக்கவில்லை என்ற நிலைமைதான் இருக்கிறது.இது ஒருபுறமிருக்க கவிஞருக்கும் கலைஞருக்கும் ஏதோ மனத்தாங்கல், ஏதோ பகை. இருவரும் நீண்ட நாட்கள் பேசிக்கொள்ளவில்லை என்றெல்லாம்கூடச் செய்திகள். ஆனாலும் இடையில் சில காலம் தவிர எப்போதுமே நிரந்தர முதல்வராக இருக்கும் கலைஞருக்கு தமிழின் இன்னொரு மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கண்ணதாசனை சமூக அளவில் புறக்கணிப்பதென்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. கண்ணதாசன் பற்றிய நிகழ்வுகளில் பங்கேற்பது தவிர்க்க முடியாத ஒன்றாகப்போகும் பொழுது கலைஞர் தமக்கேயுரிய நுண்ணறிவுடன் ஒரு உத்தியைக் கையாள்வார். 'கண்ணதாசா என் ஆருயிர் நண்பா' என்று ஆரம்பிப்பார். அவரும் இவரும் முதன்முதலாக சந்தித்தது, நட்பு கொண்டது, ஒன்றாகப் பயணித்தது, ஒன்றாக சாப்பிட்டது என்று எல்லாச்சம்பவங்களையும் மெலிதான நகைச்சுவையுடன் சொல்வார். கண்ணதாசனின் குழந்தைத்தனமான செய்கைகளை இவருக்கேயுரிய அங்கதச்சுவையுடன் சொல்லி கைத்தட்டலை அள்ளிக்கொள்வார். கேட்பவர்கள் கிறுகிறுத்துப் போயிருப்பார்கள். கூட்டம் முடிந்துவிடும். இந்தப் பேச்சிலுள்ள hidden agendaவைப் பார்த்தோமானால் கண்ணதாசனை உலகம் எதற்காகக் கொண்டாடுகிறதோ அதைப்பற்றி- அவரது படைப்பாக்கம் பற்றி ஒரேயொரு வரிகூட கலைஞர் பேசியிருக்கமாட்டார். ஆயிரக்கணக்கான கவிஞரின் பாடல்கள் பற்றியோ அவற்றின் தாக்கம் பற்றியோ அவரது எழுத்துக்கள் பற்றியோ ஒருவரிகூடப் பேசாமல் கலைஞரின் உரை கடந்து போயிருக்கும்.இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொண்டு இப்போது விவகாரத்திற்கு வருவோம்.
கண்ணதாசனை என்ன செய்யலாம் என்று கலைஞர் நினைத்தாரோ தெரியவில்லை.

திடீரென்று வைரமுத்துவுக்கு 'கவியரசர்' என்று பட்டம் சூட்டுகிறார். இலக்கிய உலகம் கொந்தளிக்கிறது. நாலாபுறமிருந்தும் எதிர்ப்புகள் வருகின்றன. எப்படி இப்படி? என்று அதிர்கிறது தமிழுலகம்.எல்லாத்திசைகளில் இருந்தும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுகின்றன. கண்டனக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. தீப்பிழம்புகளாய் எதிர்ப்பு அறிக்கைகள் சீறுகின்றன. சரி கலைஞர்தான் கொடுத்தார், வைரமுத்து எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? என்று கேள்விகள் வைரமுத்துவை நோக்கி வீசப்படுகின்றன. எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த வைரமுத்து நிலைமை கைமீறி போவதறிந்து மவுனம் கலைகிறார். "கவியரசு' பட்டத்தைக் கைவிடுகிறேன். நான் அதனைப் பயன்படுத்தப் போவதில்லை. அது கண்ணதாசனுக்கே உரியதாக இருக்கட்டும்" என்று அறிவிக்கிறார். விவகாரம் சுமுகமாய் முடிந்துவிட்டதறிந்து கண்ணதாசன் ரசிகர்களும் நிம்மதியடைகின்றனர். இந்த மொத்த விவகாரத்திற்கும் காரணகர்த்தாவாக இருந்த கலைஞர் கடைசிவரை மவுனமாகவே இருக்கிறார். அந்த மவுனத்தில் எத்தனைப் பெரிய ரகசியம் இருக்கிறது என்பது பாவப்பட்ட எந்த இலக்கிய ரசிகனுக்கும் புரியவில்லை. சில மாதங்கள் செல்கின்றன. இன்னொரு இலக்கிய விழா வருகிறது.வைரமுத்து கலந்துகொள்கிறார்.மறைத்து வைத்திருந்த அணுகுண்டை தம்முடைய வசீகரக்குரல் மூலம் வீசுகிறார் கலைஞர்.”தம்பி வைரமுத்துவுக்கு கவியரசர் என்ற பட்டத்தைத் தந்தேன். எதற்காகவோ அந்தப் பட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது. வைரமுத்துவும் எதிர்ப்பு காரணமாக அந்தப் பட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்து விட்டார்.எனவே இப்போது அவருக்கு வேறொரு பட்டம் தருகிறேன். கவியரசு இன்னொருவருடையதாகவே இருக்கட்டும்.இவரை இனிமேல் 'கவிப்பேரரசு' என்றழைப்போம்" அவனவனும் மூர்ச்சையடித்து விழாத குறை.அதிரடித் தாக்குதல் என்பார்களே அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தாக்குதல் இது. “கண்ணதாசனையா கவியரசு என்கிறீர்கள்? வாங்கிக்கங்கடா இதை" என்கிற மாதிரியான அட்டாக். இதன் 'உள்குத்து' புரியாத இலக்கிய உலகம் வைரமுத்துவைக் கவிப்பேரரசு என்று கூவிக்கொண்டிருக்கிறது.கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கலைஞர் என்றாலேயே அது முதல்வரைத்தான் குறிக்கும். அதுபோல் அறிஞர் என்றாலோ பேரறிஞர் என்றாலோ அது அண்ணாவைத்தான் குறிக்கும்.மக்கள் திலகம் என்றால் அது எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் என்றால் சிவாஜி என்பதுபோல் கவியரசர் என்றால் கண்ணதாசன் என்று தமிழ் சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டபிறகு அதனை மாற்ற நினைத்ததே கலைஞர் போன்ற ஒரு மாபெரும் மனிதர் செய்யக்கூடாத செயல். மீறிச்செய்கிறார். எதிர்ப்பு கிளம்புகிறது. இவ்வளவு எதிர்ப்பு கிளம்பி அந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் இடப்படுகிறது. அத்தோடு அதனைக் கைகழுவியிருக்கலாம். அதை வைத்துக்கொண்டே இன்னொரு பெரிய தவறுக்கு அடிகோலிவிட்டார் கலைஞர்.

அண்ணாவைப் பேரறிஞர் என்கிறோம். இப்போது வேறொரு அறிஞருக்கு அதே பேரறிஞர் பட்டத்தைக் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். எதிர்ப்பு கிளம்பும். உடனே "பேரறிஞர் என்று சொன்னதால்தானே எதிர்ப்பு வந்தது?இப்போது பெரும்பேரறிஞர் என்று அழைக்கிறேன்.” என்று ஒருவர் அறிவித்தால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? அது நியாயமாக இருக்குமா? அல்லது இன்னொருவருக்குக்'கலைஞர்'என்ற பட்டத்தை ஒருவர் வழங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். யாராவது சும்மா இருப்பார்களா? பயங்கர எதிர்ப்பு கிளம்பும். உடனே அப்படி அறிவித்தவர் 'கலைஞர் என்று சொன்னதால்தானே எதிர்ப்பு? இனிமேல் 'பெருங்கலைஞர்' என்று அழைக்கிறேன்" என்று பிரச்சினையை 'முடிவுக்குக் கொண்டுவருவதாக' அறிவித்தால் அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? கலைஞர் ஏற்றுக்கொள்வாரா? யாரால்தான் ஏற்க இயலும்? ஆனால் வைரமுத்து விவகாரத்தில் இதுதான் நடந்திருக்கிறது. கலைஞர் ஆட்சியிலிருப்பதாலும் வைரமுத்து கலைஞரின் அதிகார எல்லைக்குள்ளேயே வளைய வருவதாலும் பங்கமில்லாமல் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.ஆனால் ஒரு செம்மையான மரபு படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் களத்தில் தமது நுண்ணாற்றலால், ராஜதந்திர காய் நகர்த்துதல்களால் தாம் நினைத்ததை சாதித்து வரும் கலைஞரின் அதிரடி காய் நகர்த்தல்தான் இந்தச் செம்மொழி மாநாடும். கவியரசை உபயோகிக்கக் கூடாதா அப்படியென்றால் கவிப்பேரரசை உபயோகிக்கலாம்தானே என்று கண்ணதாசன் ஆதரவாளர்களுக்குக் கடுக்காய் கொடுத்த அதே பாணிதான் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த முடியாதா அப்படியானால் இதோ உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்திக் காட்டும் கலைஞரின் கைவண்ணம். இம்மாதிரி விஷயங்களில் கலைஞரின் சித்துவிளையாட்டுக்களை அடித்துக்கொள்ள ஆளில்லை.