Tuesday, May 15, 2012

கண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு?

கண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அத்தனைப் பேருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய பாடல்களில் ஒன்று இது. இந்தப் பாடல்கூட முழுவதும் கண்ணதாசனால் எழுதப்பட்டது அல்ல. முக்கால்வாசிப் பாடலுக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதியார். கால்வாசிப் பாடல் மட்டும்தான் நம்முடைய கவிஞருடையது. பாரதியின் பாடலுக்குக் கவிஞரின் விளக்கம் இது என்றும் சொல்லலாம், பாரதியின் பாடலுக்கு இவர் செய்த பகடி என்றும் சொல்லலாம்.

பாரதியின் செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடலைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் சிறப்புக்களைப் புகழ்ந்து போற்றி பாரதி பாடிய பாடல் அது. இன்னமும் பாரதியின் அந்தப் பாடல் வரிகளைச் சொல்லிச்சொல்லித்தான் நாம் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறோம். 

பல்வேறு இலக்கியக்கூட்டங்களில் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும் பேசுவதற்கு அந்தப் பாடலிலிருந்துதான் வரிகளைப் பெறுகிறோம். அந்தப் பாடலைக் கேட்ட கண்ணதாசனுக்கு ‘என்னடா இது பாரதி இப்படிப் பண்ணிவிட்டாரே என்று தோன்றியிருக்கலாம். எது எதையோ பெருமைகளாகச் சொல்கிறாரே நிஜ வாழ்க்கையில், நடைமுறையில் இவையெல்லாம் வேறாக இருக்கின்றனவே என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதனால் இவர் என்ன செய்கிறாரென்றால் பாரதி பாடிய அந்த வரிகளை அப்படியே வைத்துக்கொண்டு இரண்டாவது வரியில், மூன்றாவது வரியில் அல்லது ஈற்றடியில் தமது கருத்தைப் பாடலிலே பொதிந்து வைக்கிறார்.

செந்தமிழ் நாடு என்ற பாரதியார் பாடலுக்குப் புதுவுரைச் சொல்லவந்த கண்ணதாசன் தமது பாடலுக்குப் ‘புதிய தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டியிருக்கிறார். கேலியும் கிண்டலும் பரிகாசமும் எள்ளலும் கண்ணதாசனின் வரிகளில் விரவுகின்றன. அதைவிடவும் ‘நடைமுறை இதுவே என்பதுதான் கவிஞர் சொல்லவரும் சேதி.

பாடலைப் பார்ப்போம்.

முதலாவதாக பாரதியின் பாடல் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே....... என்று ஆரம்பிக்கிறது. இந்த வரியையே ஆட்சேபிக்கிறார் கண்ணதாசன்.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு தேள்வந்து கொட்டுது காதினிலே.....என்று ஒரே போடாகப் போடுகிறார்.


அடுத்தது பாரதியின் வரி -‘எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே.... என்று வீரத்தைப் பறை சாற்றுகிறது.
இங்கே அப்படியே ஒரு யூ டர்ன் அடிக்கிறார் கண்ணதாசன்.
தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்பதை விட்டுவிட்டு
‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே என்று நேரடியாக அரசியலுக்கு வருகிறார்....வந்தவர், ‘கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
இந்த ஒரு வரி விமரிசனத்தில் இங்கே நிறைய தலைகள் உருளக் காத்திருக்கின்றன. அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டோமானால்கூட பிரபலமான அமைச்சரவை என்று காமராஜருடைய அமைச்சரவையை மட்டும்தான் சொல்லமுடியும். 
அந்த அமைச்சரவையில் காமராஜர், கக்கன், மஜீத் போன்ற ஓரிருவரை மட்டுமே சிறப்பானவர்களாக உயர்த்திப் பிடிக்கமுடியும்.  
அதற்கு அடுத்த அமைச்சரவையில் அண்ணாவையும் சாதிக்பாட்சாவையும் மட்டுமே நல்ல அமைச்சர்களாகச் சொல்லமுடியும். 
கலைஞர் அமைச்சரவையிலும் மறுபடி சாதிக் பாட்சா மட்டுமே தனித்து நிற்கிறார்.


அடுத்து எம்ஜிஆர் அமைச்சரவை. இந்த அமைச்சரவையிலும் எந்த அமைச்சரையும் –கவனியுங்கள், எம்ஜிஆர் உட்பட எந்த அமைச்சரையும்- சிறப்பானவர்கள் பட்டியலில் வைக்கமுடியாது.


பிறகு ஜெயலலிதா அமைச்சரவை. எம்ஜிஆர் அமைச்சரவையிலேயே யாரும் தேறவில்லை என்னும்போது ஜெயலலிதா அமைச்சரவையில் சிறப்பானவர்களை எங்கே போய்த்தேடுவது? 


அதனால் கண்ணதாசன் சொல்வதுபோல ‘எங்கள் மந்திரிமார் என்ற பேச்சினிலே- கடல் மண்ணும் சிரிக்குது பீச்சினிலே என்ற விமரிசனம் அத்தனை அமைச்சர்களுக்கும் பொருந்தும். இதனை அப்படியே ஒப்புக்கொண்டு அடுத்த அடிக்குச் செல்வோம்.

காவிரி தென்பெண்ணைப் பாலாறு- தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பல ஓடத் –திரு
மேனி செழித்த தமிழ்நாடு..... என்பது பாரதியின் வரிகள்.


இதனைக் கண்ணதாசன் எப்படிச் சொல்கிறார் பார்ப்போம்.
‘காவிரி தென்பெண்ணைப் பாலாறு –தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி –என
மேவிய ஆறு பலவினிலும் –உயர்
வெள்ளை மணல்கொண்ட தமிழ்நாடு – எப்படி கவிஞர்?


அடுத்து பாரதியின் வரிகள்;
நீலத்திரைக்கட லோரத்திலே –நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.......


இந்த வரிகளை எப்படி எடுத்துக்கொள்கிறார் தெரியுமா கண்ணதாசன்?
‘நீலத் திரைக்கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு
அட, அட.. என்று பாராட்டத் தோன்றுகிறதா இல்லையா?


கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ் நாடு......இது பாரதியின் பாடல்.


இதனை மாற்றி எழுதவந்த கண்ணதாசன்,
‘கல்வி சிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். அவருடைய கோடரி அடுத்த வரியில்தான் இறங்குகிறது.
‘நல்ல பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு........ என்பது கண்ணதாசன்.


வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு –நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் –மணி
ஆரம்படைத்த  தமிழ்நாடு என்பது பாரதியின் பெருமிதம்.


இதனையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார் கண்ணதாசன்.
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளையெனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு....என்கிறார்.


‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு..... என்பது பாரதியின் பெருமை.


கண்ணதாசனின் பார்வையில் நடைமுறையில் இதுவும் நிஜமில்லையே என்கிற வருத்தம்.
‘சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவினும் சென்றேறி –அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு – என்று நடைமுறையைக் காட்சிப்படுத்துகிறார்.

‘விண்ணை யிடிக்கும் தலையிமயம் –எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் –சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு...என்கிறார் பாரதியார்.


அது கண்ணதாசனின் பார்வையில் இப்படி வருகிறது.
விண்ணை இடிக்கும் தலைஇமயம்-எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னை பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!

சரி இப்போது கவிஞரின் முழுப்பாடலையும் ஒருமுறைப் பார்த்துவிடலாமா?

செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!

காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!

நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்று
நித்தம் தவம்செயும் குமரிகளே – வட
மாலவன் குன்றம் தனில்ஏறி – தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!

கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலை
கொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!

சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!

விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்
தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்ல
சோற்றுக் கலையும் தமிழ்நாடு!


இன்னமும் எத்தனை வருடங்களானாலும் அன்றன்றைய நிலைமைகளை அப்படியே கண்முன்பு நிறுத்தும்விதமாக பாடிச்சென்றிருக்கும் கண்ணதாசனின் தீர்க்கதரிசனத்தை என்னென்று சொல்லுவது!