Friday, November 6, 2015

தொலைக்காட்சி விவாதங்களின் அட்டூழியங்கள்

    
அவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும்.  தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளாக அரசியல் விவாதங்களைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் அவை இரண்டு விதமாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒன்று செய்திகள் தருவது………… அடுத்து அந்தச் செய்திகளுக்கான விவாதங்களை முன்னெடுப்பது…. (News and views)

இந்த விவாதங்களில் டைம்ஸ் நவ் சேனலில் வரும் அர்னாப்கோஸ்வாமி இந்திய டெலிவிஷன்களின் தாதாவாகத் தம்மையே வரித்துக்கொண்டவர். இன்றைய நாள்வரை அர்னாப்தான் இந்திய டெலிவிஷனின் மிகப்பெரிய சண்டியர் என்று கருதப்படுகிறார். அரசியலிலும், சமுகத்திலும் புகழ்பெற்ற பெரிய பெரிய ஆட்களையும் ஆளுமைகளையும் கூட்டிவைத்துக்கொண்டு ‘எல்லாருமே தமக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்ற பெயரில் அவர் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சநஞ்சமல்ல.

“இதுதான் உண்மையான டாக்குமெண்ட்” என்று ஏதோ ஒரு பேப்பரைக் கையில்  வைத்துக்கொண்டு கத்திக் கூச்சல்போட்டு விவாதத்திற்கு வந்திருக்கும் ஆளுமைகளை  மிரளவைத்து கதிகலங்க வைக்கும் கலையை மேலைநாட்டு ஆங்கிலச் சேனல்களிலிருந்து எப்படியோ கடத்திக்கொண்டு வந்து விட்டார். “Shut your mouth, Close your mouth, ok ok stop talking” என்றெல்லாம் இவர் மிகப்பெரிய ஆளுமைகளை மிரட்டுவதும் அவர்களும் அதற்கு அடிபணிவதும் கண்கொள்ளாக் காட்சிகள்………….

சமீபத்தில்கூட அவர் சுஷ்மா ஸ்வராஜுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். “அவ்வளவுதான் வேறு வழியில்லை. இன்றைக்கு சாயந்திரம் சுஷ்மா இங்கே வந்தாக வேண்டும். என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்”

இந்த வரிசையில் அவர் யாரையும் விடுவதில்லை. ‘ஆளும் கட்சித்தலைவராக இருந்தாலும் சரி; எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி. இந்த நிகழ்ச்சிக்கு நான்தான் எஜமான். எல்லாரும் எனக்குக் கட்டுப்பட்டவர்களே’ என்ற பாணியில்தான் அவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதே அடாவடிப் பாணியைக் கடைப்பிடித்து ஈழ விவகாரத்தையும் சுப்பிரமணிய சாமி, சோ போன்ற தமிழ் எதிரிகளை வைத்துக்கொண்டு நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்த அர்னாபின் கனவு பல சமயங்களில் பல்லிளித்திருக்கிறது.. ஒருமுறை எழிலனும் சரி, திருமுருகனும் சரி அர்னாபின் வாயை அடைத்து மூக்கை உடைத்தார்கள். அந்தச் சமயங்களின் அர்னாபின் முகம் சுருங்கிய காட்சியைப் பார்க்கவேண்டுமே………………..!

சரி, அர்னாபை விட்டுவிட்டுத் தமிழ்ச் சேனல்களுக்கு வருவோம்.

இப்போதைய தமிழ் சேனல்களின் பிரதான போட்டியே தமிழில் ‘யார் அர்னாப்?’ என்பதுதான்.

தமிழில் நிறைய நியூஸ் சேனல்கள் வந்துவிட்ட நிலையில் எல்லா சேனல்களுமே அரசியல் விவாதங்களைக் கையிலெடுத்துவிட்டன. அந்தக் காலத்தில் சன் டிவி மட்டுமே இருந்த நாட்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு ‘நேருக்கு நேர்’ என்ற பெயரில் சன் டிவியில் ரபிபெர்னாட் நடத்திய அரசியல் விவாதங்கள் மிகவும் புகழ் பெற்றவை..

மலர்ந்த முகமும், அழகிய தமிழும், திருத்தமான உச்சரிப்புடனும் அவர் பிரபலங்களைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு மடக்கியது ரசிக்கத்தக்கதாயிருந்தது. எத்தனைச் சிக்கலான விஷயங்கள் என்றாலும் மிகவும் கவனமாகக் கத்திமேல் நடப்பது போன்ற பாவனையில் விஷயங்களைக் கொண்டு செல்வதில் வல்லவர் அவர். (தமக்கு இதன்மூலம் கிடைத்த புகழைத் தக்கவைத்துக்கொண்டு அதற்கான பலனை அனுபவிக்கிறவராக இவரைத்தான் சொல்லவேண்டும். 

அந்தப் ‘புகழையும் திறமையையும்’ அப்படியே ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சமர்ப்பித்து அதிமுகவின் நியமிக்கப்பட்ட ராஜ்யசபை எம்பியாகிவிட்டார் லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்)

ரபி பெர்னாடின் விலகலுக்கடுத்து அந்த இடத்திற்கு வந்த வீரபாண்டியன் பிரபலங்களைப் பேட்டி காணும்போது ஏகப்பட்ட புள்ளிவிவரங்களைத் தயாராகக் கையில் வைத்துக்கொண்டு அவர்களை மடக்கியபோது அந்தப் பிரபலத்திற்கும் பார்க்கிறவர்களுக்குமே வியப்பு மேலிட்டது. பல ஆண்டுகளுக்கு மக்கள் நினைவில் இருந்த ‘விவாதக்களம்’ என்பது இதுமட்டும்தான்.

தற்போது செய்திச்சேனல்கள் அதிகமாகிப்போய்விட, அரசியல் விவாதங்களுக்கான தேவை பெருகிவிட்டது. தவிர அத்தகைய விவாதங்களுக்கான பார்வையாளர்களும் பெருகிவிட்டனர்.. எக்கச்சக்கப் பார்வையாளர்கள் இருப்பதனால்தான் ஏறக்குறைய எல்லா செய்திச்சேனல்களுமே இரவு எட்டு மணிக்குத் துவங்கும் விவாத நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரையும் அதனைத் தாண்டியும் மறுஒளிபரப்பும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அத்தனை தூரத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த நிகழ்ச்சிகளுக்கு இருக்கிறது.

சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா டிவி, தந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் செவன் என்று எல்லா சேனல்களுமே விவாத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணம் தந்து புகழ்பெற வைத்தவர்களாக புதிய தலைமுறை சேனலைத்தான் குறிப்பிட வேண்டும். அதைத் தொடர்ந்து தந்தி டிவியும் இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களைப் பெருக்கிக்கொண்டது.

சன் டிவி மூலம் ரபி பெர்னாடும், வீரபாண்டியனும் புகழ் பெற்றதுபோல் தற்போது இந்த விவாதங்களின் மூலம் ரங்கராஜ் பாண்டே, மு.குணசேகரன், ஹரிஹரன், தம்பிராஜா, நெல்சன் சேவியர், சண்முக சுந்தரம், வெங்கட், தியாகச் செம்மல், ஜெனிபர் வில்சன், நிகிதா, கார்த்திகைச் செல்வன், செந்தில் என்று பலபேர் புகழ்பெற்ற முகங்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். 

                           

இவர்கள் நடத்தும் விவாதங்கள்தாம் இன்றைய தேதியில் அரசியலில் ‘ஹாட் டாபிக்’.
இவர்களில் மிகுந்த நிதானத்தோடு விஷயஞானத்துடன் விவாதங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக தம்பிராஜா, குணசேகரன், ஜெனிபர், செந்தில், மற்றும் நிகிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

தான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் விவாதிப்பவர்கள் சொல்லவேண்டும் என்று வார்த்தைகளைப் போட்டு நிரப்பி அதனை எதிராளியின் வாயில் திணித்து அவர்களிடமிருந்து அந்த வார்த்தைகளைப்  பிடுங்குவது என்ற பாணியைக் கைக்கொள்கிறவர்களாக ரங்கராஜ் பாண்டே மற்றும் ஹரிஹரன் ஆகியோரைச் சொல்லலாம். இருவருமே தந்தி டிவியைச் சேர்ந்தவர்கள். 

(இதில் ரங்கராஜ் பாண்டேயின் நினைவாற்றலையும், பேசும் வேகத்தையும், கேள்விகேட்டு மடக்கும் தனிப்பட்ட பாணியையும் பாராட்டியே ஆகவேண்டும்.)

இவர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்த தியாகச் செம்மல் என்பவரும் அடக்கம். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு உள்வாங்கி அதற்கேற்ப விவாதங்களைக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணமெல்லாம் இவர்களிடம் கிடையாது. இவர்கள் ‘ஹோம் ஒர்க்’ செய்து ஒரு முடிவுடன் வந்திருப்பார்கள். அதற்கேற்ப பேசுகிறவர்கள் பேசிவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை. அதற்கு மாறாகப் பேசுகிறார்கள் என்றால் அதற்கும் தயாராகவே இவர்கள் வந்திருப்பார்கள். ஏனெனில் மாற்றுக்கருத்துடன் வருகிறவர்கள் என்னென்ன பாயிண்டுகளைக் கையிலெடுப்பார்கள் என்பது தெரியும் இவர்களுக்கு. அந்தப் பாயிண்டுகளை அவர்கள் கையிலெடுத்ததுதான் தாமதம், அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்கள்போல் வேறொரு விஷயத்தைச் சொல்லி அவர்கள் மேல் விழுந்துப் படுத்துப் பிறாண்டி அவர்களை மேற்கொண்டு ஒரு வார்த்தையும் பேசவிடாமல் செய்துவிட்டு அடுத்தவரிடம் போய்விடுவதுதான் அத்தனைப் பேருடைய பாணியும்.

இந்தப் போங்குத்தனத்திற்கு இவர்கள் பெரிதாக ஒன்றும் மெனக்கெடுவதில்லை. இவர்களின் நோக்கம், கொள்கை, எதிர்பார்ப்பு எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஆதரவு;

 திமுக மீதும் கருணாநிதி மீதும் எதிர்ப்பு. அதுவும் சாதாரண எதிர்ப்பல்ல, கண்மூடித்தனமான எதிர்ப்பு.


இந்த விஷயத்தில் தந்தியின் பாண்டேயும், ஹரிஹரனும் வேண்டுமானால் சில இடங்களில் விட்டுக்கொடுத்துவிடுவார்களே தவிர, புதிய தலைமுறையின் தியாகச்செம்மல் என்ற நபரிடம் அதெல்லாம் நடக்காது.

அவர் நேர்மை, நடுநிலை, சரியான பார்வை இவற்றையெல்லாம் தியாகம் பண்ணிவிட்டு வந்து உட்கார்ந்திருக்கும் செம்மல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. ‘கருணாநிதி தவறு செய்தவர்; அதைத்தான் இப்போது ஜெயலலிதாவும் செய்கிறார். அதனால் கருணாநிதியை ஆதரிப்பவர்களுக்கு ஜெயலலிதா செய்த தவறுகளைப் பற்றிப் பேச யோக்கியதை இல்லை. ஆகவே நீங்கள் அதுபற்றிப் பேசக்கூடாது. 

ஜெயலலிதா செய்யும் தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருங்கள்.’ – இந்த ஒரு விஷயத்தைத்தான் நாள்தவறாமல் எல்லா ‘நெறியாளர்களும்’ மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் அத்தனைப் பேருமே ஒரே ஒரு ஆயுதத்தைத்தான் கையாள்கிறார்கள். அதாவது நிறையப்பேருக்கு, நிறையப்பேருக்கென்ன நிறையப்பேருக்கு – தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லாருக்குமே ஒரே விதமான பார்வைதான் இருக்கிறது. இவர்களுடைய அரசியல் பார்வை என்பதே இதுமட்டும்தான்.

அதிமுக அரசியல் ரீதியாக ஏதாவது தவறுகளைச் செய்கிறதா?

உடனே, திமுக அதுபோன்ற தவறுகளைச் செய்ததில்லையா என்று தேடுகிறார்கள். (ஒரு இருபது வருடங்களுக்கு ஆட்சிக்கட்டிலில் இருந்த ஒரு கட்சிக்கு இப்படி எல்லாவிதமான தவறுகளுக்கும் முன்மாதிரிகள் நிச்சயம் இருக்கும்) உடனே “இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். திமுகவும் தவறு செய்தது அதே தவறை இப்போது அதிமுக செய்கிறது. அவ்வளவுதான் முடிந்தது விஷயம்” என்பதுபோன்று பேசுவார்கள்.

திமுக தவறு செய்கிறதா? கிடைத்தது கழுத்து.

மறந்துபோய்க்கூட அதிமுகவையோ ஜெயலலிதாவையோ அல்லது எம்ஜிஆரையோ நினைவுபடுத்தவோ, சம்பந்தப்படுத்தவோ மாட்டார்கள். பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள். ‘இந்தக் கருணாநிதியே இப்படித்தான். ரொம்ப மோசம். நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதுதான் அவருடைய – அவர் குடும்பத்தாருடைய வேலை’ என்பதாகப் பேசுவார்கள்.

கவனியுங்கள்.

‘இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். அதிமுகவும் இதைத்தான் செய்தது திமுகவும் இப்போது அதே தவறைச் செய்கிறது’ என்ற வாதம் இங்கே கிடையாது.

அதிமுக தவறு செய்தால் மட்டும் திமுகவையும் கருணாநிதியையும் சேர்த்து இழுத்துவந்து குற்றம் சாட்டி அதிமுகவைக் காப்பாற்றுகிறவர்கள், திமுக செய்யும் தவறுகளுக்கு திமுகவை மட்டுமே பொறுப்பாக்குவார்கள்.

இங்கே அதிமுகவையும் இழுத்து வந்து இந்த அதிமுக திமுக இரண்டுமே இப்படித்தான் என்று பேசுவது கிடையாது.

இந்த அயோக்கியத்தனமான பாணியை ஆரம்பித்துவைத்தவர் சோ என்று நினைக்கிறேன். இந்தப் பாணி இப்போது வளர்ந்து செழித்து நீக்கமற எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி வளர்ந்து கோரமான அரசியல் குப்பையாய்க் கிடக்கிறது.

திரும்பத் திரும்ப ஒரே கருத்தைச் சொல்வதன் மூலம் அதனை எவர் மண்டையில் வேண்டுமானாலும் சிரமமில்லாமல் நுழைத்துவிட முடியும் என்பதற்கு இந்தப் பாணி ஒரு அருமையான உதாரணம். ஏனெனில் மக்களே இப்போது இப்படிப் பேச பழகிவிட்டார்கள்.
திமுக சாராமல் அரசியல் பேசும் எல்லா அயோக்கிய சிகாமணிகளும் இந்தப் பார்வை கொண்ட ‘அரசியல் நேர்மையாளர்கள்’தாம்.

உதாரணத்திற்கு மதுவிலக்கு.

தமிழ்நாட்டில் பக்தவச்சலம் ஆட்சி முடிகிறவரைக்கும் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ‘ஒரு படி அரிசி ஒரு ரூபாய்’ என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார். (ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் அண்ணா. சென்னையிலும் கோயம்புத்தூரிலும் மட்டும் படி அரிசி ஒரு ரூபாய் என்ற அளவில் போட்டார். கேட்டதற்கு ‘மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்றுதான் சொன்னேன் என்று சொல்லிச் சமாளித்தார்) இந்தப் படி அரிசி திட்டத்திற்கு ஏகப்பட்ட செலவு பிடித்தது. சமாளிக்கமுடியாமல் போகுமோ என்ற கவலை வந்தது அண்ணாவுக்கு. அரசுக்கு அதிக வருமானம் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார் அவர்.

அதன்படி அதிக வருமானம் வேண்டும் என்பதற்காக அண்ணா கொண்டுவந்த திட்டம்தான் லாட்டரிச்சீட்டு.

லாட்டரிச்சீட்டைக் கொண்டுவந்து சூதாட்ட மனப்பான்மை எதுவுமே தெரியாமல் இருந்த தமிழர்களை முதன்முதலில் சூதாட வைத்தவர் அண்ணாதான்.

இன்றுவரைக்கும் இந்த சூதாட்ட மனப்பான்மையிலிருந்து விடுபட முடியாமல் சூதாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தமிழர்களைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் லாட்டரி மறுபடியும் ஒழித்துவிட்டபோதும் பெங்களூருக்கும் ஆந்திராவுக்கும் சென்று லாட்டரி சீட்டுக்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்களும், பெங்களூரில் இருக்கும் நண்பர்களுக்கு பணம் அனுப்பி அவர்கள் மூலம் கட்டுக்கட்டாக லாட்டரிச்சீட்டு வாங்கிக்கொண்டிருந்தவர்களும் ஏராளம்.

லாட்டரி மனப்பான்மையே இல்லாமல் இருந்த தமிழர்களை லாட்டரிச்சீட்டிற்கு பழக்கப்படுத்தியவர் அண்ணா என்பதை யாரும்- ஆமாம் யாருமே- இதுவரை எந்த விவாதங்களிலும் சொன்னதே கிடையாது.

காரணம், கருணாநிதியைத் தவிர வேறு யார் மீதும் எந்தவிதமான அரசியல் குற்றங்களையும் யாருமே சொல்லக்கூடாது என்பது தமிழகத்தின் எழுதப்படாத விதி.

அண்ணா செய்த தவறுகளையோ எம்ஜிஆர் செய்த தவறுகளையோ யாருமே சொல்வதில்லை. சொல்வதில்லை. சொல்வதில்லை.

போகட்டும். மதுவிலக்கிற்கு வருவோம்.

மதுவிலக்கு அமலில் இருந்த தமிழகத்தில் 1967 க்குப் பிறகு மதுவைக்கொண்டு வந்தவர் கருணாநிதிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அண்ணா லாட்டிரிச்சீட்டைக் கொண்டுவந்தார். கலைஞர் மதுவைக் கொண்டுவந்தார்.
ஆனால் மதுவினால் நடைபெறும் சீரழிவுகளைப் பார்த்த கலைஞர் மறுபடியும் அவர் ஆட்சியிலேயே மதுவுக்கு மூடுவிழா நடத்திவிட்டார். ஆம், அவர் கையாலேயே மதுவை ஒழித்துக்கட்டினார் கருணாநிதி.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது எம்ஜிஆருடைய கட்சியிலே போய்ச் சேர்ந்தவர்கள் கலைஞர் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று “மறுபடியும் மதுவைக் கொண்டுவந்துவிட்டார்” என்பதுதான்.

அந்தச் சமயத்தில் பெங்களூரில் வசித்த அண்ணாவின் மகன் கௌதமன் அதிமுகவில் சேருவதற்கு இந்தக் காரணத்தைத்தான் சொன்னார்.

ஏனெனில் அவருடைய பரபரப்பான பேட்டியை அப்போது குமுதத்தில் எழுதியவனே நான்தான்.

அதிமுகவில் சேர்கிறவர்கள் மட்டுமல்ல எம்ஜிஆரே கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளில் கடுமையான குற்றச்சாட்டாக இதனைத்தான் வைத்தார். “ஒரு தலைமுறையையே கெடுத்துவிட்டவர் கருணாநிதி. மதுவை அறிமுகப்படுத்தி இளைஞர்களைக் கெடுத்துவிட்டார். 

தாய்மார்களின் சாபம் கருணாநிதியைச் சும்மாவிடாது” என்று சீறினார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தாம் நடிக்கும் படங்களில் மதுவையே தொடாதவராகத்தான் நடிப்பார். மது அருந்தவேண்டும் என்ற கட்டாயம் அவருடைய கதாபாத்திரத்திற்கு வந்தபோதும் அவருக்கு வழங்கப்படும் மதுவை வாங்கி அங்கிருக்கும் பூத்தொட்டியிலோ வேறெந்த பாத்திரத்திலோ ஊற்றிவிட்டு மது அருந்துவதுபோல் ‘நடிப்பவராகத்தான்’ தம்மை முன்னிறுத்திக்கொண்டார் எம்ஜிஆர்.

ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு, அத்தைமகள் ரத்தினத்தைப்……… போன்ற பல பாடல்கள் அவர் மது அருந்திவிட்டுப் பாடுவதாகப் படத்தில் அமைந்திருக்கும். ஆனால் எம்ஜிஆர் குடிக்கவில்லை. எம்ஜிஆர் மது அருந்த மாட்டார். சும்மா அப்படிக் குடித்ததாக நடிக்கிறார் என்ற செய்தி பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

இப்படியெல்லாம் தம்மீது புனிதப் பிம்பம் வைத்திருந்த எம்ஜிஆர்தான் மீண்டும் மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்.

அதாவது கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு, மறுபடியும் அவராலேயே மூடப்பட்டுவிட்ட மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர்தான்.

எம்ஜிஆர் ஆட்சியில்தான் முதன்முதல் சாராய ஆலை தமிழகத்திலே தொடங்கப்பட்டது.
இந்தத் தகவல்களை தொலைக்காட்சி விவாதங்களில் சொல்வதும் இல்லை. 

சொல்லவருகிறவர்களை விவாதங்கள் நடத்தும் ‘நெறியாளர்கள்’ சொல்லவிடுவதும் இல்லை.

ஆக சூதாட்ட மனப்பான்மையை ஏற்படுத்திவிட்ட அண்ணா இங்கே புனித வளையத்தில். கருணாநிதி ஒழித்துக்கட்டிய மதுவை மறுபடியும் ஆறாக நாட்டில் ஓடவிட்ட எம்ஜிஆரும்  புனித வளையத்தில்……………..

ஆனால் கருணாநிதி மட்டும் குற்றவாளிக்கூண்டில்!

எந்த ஊர் நியாயமய்யா இது?

திமுகவை முற்று முழுதாக ஆதரித்து எழுதப்படும் பதிவு அல்ல இது. ஆனால் ஊடகத்துறை எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக சிலவற்றைக் கூறுபோட்டுக் காட்டவேண்டியிருக்கிறது.

சரி, தொலைக்காட்சி விவாதங்களுக்கு வருவோம்.

                                        


இந்தத் தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் பயனடைந்தவர்களாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒரு சிலரைத்தான் சொல்லவேண்டும். பக்கத்து வீட்டுக்காரனுக்குக்கூட யாரென்று தெரியாத நபர்கள் எல்லாம் இன்றைக்கு பாஜகவின் ‘பிரமுகர்கள்’. படு கெத்தாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு உலக அரசியல் பேசுவதும், பல முதிர்ந்த அரசியல் தலைவர்களை – குறிப்பாக கருணாநிதியை கேலி பேசுவதும், கேள்வி கேட்பதும், புத்திமதி சொல்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்…

இந்தத் தொலைக்காட்சி விவாதங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. எல்லா விவாதங்களுமே ஒரே நோக்கத்தோடுதான் நடத்தப்படுகின்றன.

தினசரி அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தும் ஏதாவதொரு பொருளை எடுத்துக்கொள்கிறார்கள். அதனைப் பற்றி ‘விவாதிக்கிறார்கள்’ என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் விவாதிக்கப்படும் அத்தனை விவாதங்களுக்குமான நோக்கம் ஒன்றே ஒன்றுதான்   
-திமுகவைக் குறைகூறுவது!

தமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமே திமுகவும் கருணாநிதியும், அவர் குடும்பமும்தாம் என்று கூறுவது; கருணாநிதியாலோ திமுகவாலோ தமிழ்நாட்டிற்குத் துளியளவும் நன்மை நடந்துவிடவில்லை என்று சாதிப்பது, இந்தியாவில் ஊழல் புரிந்த ஒரே கட்சி திமுகதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டுவது, இத்தகு காரணங்களால் வேறு எங்கு எவ்வளவு பெரிய ஊழல்கள் நடைபெற்றாலும் அதனைப் பற்றிப் பேசவோ கேட்கவோ திமுகவினருக்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்று ஒரேயடியாக திமுகவின் கதையை முடித்து வைப்பது.,,,,,,

பெரிய பெரிய ஜாம்பவான்களிலிருந்து விவாதங்களில் பங்குபெறும் குஞ்சுகுளுவான்கள்வரைக்கும் இது ஒன்றுதான் நோக்கம்; இது மட்டுமேதான் தாரகமந்திரம்.

இந்த விவாதங்களில் பங்குபெறுவோரின் எண்ணிக்கை நான்கு பேர் என்பதான பொதுவான வழக்கம் ஒன்றுண்டு. ஒரு கட்சிக்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் விவாதம் நடைபெறும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

இந்த எண்ணிக்கையிலேயே குயுக்தியாய் தங்கள் கைவரிசையைக் காட்டி முடித்திருப்பார்கள் டெலிவிஷன் நிலையத்தினர். அதாவது அதிமுக சார்பாக இரண்டுபேர் பேசுவதற்குத் தயார் செய்திருப்பார்கள். ஒருவர் திமுக. அப்படியானால் திமுக சார்பாக இன்னொருவரும் வேண்டும்தானே? இங்கேதான் டெலிவிஷன்காரர்களின் குயுக்தி வேலை செய்யும். மூன்றுபேர் போக நீங்கலாக அந்த ‘மற்றொருவர்’ பத்திரிகையாளராக இருப்பார். அவர் பெரும்பாலும் நடுநிலையாளராக கருத்துத் தெரிவிப்பார். ஆக அதிமுகவுக்கு ஆதரவாக இரண்டுபேர். ஒருவர் திமுக, அடுத்தவர் நடுநிலையாளர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் நெறியாளராய் அந்தந்த டெஷவிஷன்காரர்கள் இருப்பார்கள் இல்லையா? இங்கேதான் பிரதான குத்து காத்திருக்கிறது. அந்த டெலிவிஷன்காரர்கள் ‘அறிவிக்கப்படாத’ அதிமுககாரர்………………..! இதுதான் தினசரி நடைபெறும் கூத்து.

‘அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவினரிடம்’கூட இல்லாத உச்சபட்ச வெறுப்பும் தீப்பந்தங்களும் இவர்களிடம்தாம் இருக்கின்றன. கருணாநிதி எந்தெந்த சமயத்தில் என்னென்ன விதமாய்ப் பேசினார், எந்தெந்த தவறுகள் செய்தார், யார்யாரை என்னென்ன மொழியில் ஏசினார் என்பதுபோன்ற விஷயங்கள் தவிர, திருக்குவளையில் சின்னப்பையனாக இருந்தபோது சாப்பாட்டுப் பந்தியில் எத்தனைப் பருக்கைச் சோற்றைக் கீழே சிந்தியிருக்கிறார் எங்கெங்கே எச்சில் துப்பியிருக்கிறார், எந்தெந்த சுவர்களில் ஒண்ணுக்கடித்தார் என்பதுவரையிலான பட்டியல் இந்த ‘நெறியாளர்களிடம்’ உண்டு.

நாவலர் நெடுஞ்செழியனை ஜெயலலிதா எந்த மொழியால் வசை பாடினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.

ஆனால் அனந்தநாயகிக்கு கருணாநிதி சட்டமன்றத்தில் என்ன பதில் சொன்னார் என்பது இவர்கள் கைகளில் தயாராக இருக்கும்.

ஒரு மாநிலத்தின் கவர்னர் மீது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன ஆபாசமாய்க் குற்றம் சாட்டினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.

ஆனால் இந்திராகாந்தியைக் கருணாநிதி என்ன விமர்சித்தார் என்பதுமட்டும் இவர்களுக்கு மூக்குக்குமேல் விடைத்துக்கொண்டு நிற்கும்.

டான்சி வழக்கோ, வருமான வரி கட்டாத வழக்கோ, வெளிநாட்டிலிருந்து வந்த டிடி வழக்கோ, சொத்து குவிப்பு வழக்கோ (இந்த வழக்கிற்கு தந்திடிவி சூட்டிய செல்லப்பெயர் ‘சொத்துவழக்கு’. சொத்துக் குவிப்பு வழக்கு அல்ல என்று குமாரசாமி தீர்ப்பிற்கு முன்பேயே இவர்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள்.) எந்த வழக்குபற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் 2ஜி வழக்கு தெரியும்; ஆ.ராசா வழக்கு தெரியும், கனிமொழி வழக்கு தெரியும்.

குன்ஹா கொடுத்த தீர்ப்பு பற்றித் தெரியாது. ஆனால் குமாரசாமி ‘விடுவித்தது’ பற்றி மட்டும் தெரியும். இவர்கள்தாம் நெறியாளர்கள்.

பாரதிய ஜனதா சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் பேச வரும் பிரமுகர்கள் பெரும்பாலும் வாதத்திறம் மிக்கவர்களாகவும், பேச வேண்டிய விஷயத்தை ஒட்டிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவர்களுடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ அவர்கள் விஷயஞானத்துடன் வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸைச் சேர்ந்த கோபண்ணா, அமெரிக்கை நாராயணன், விஜயதாரணி, திருச்சி வேலுச்சாமி, இதயத்துல்லா, ஜோதிமணி எல்லாருமே திறமையாக விவாதம் புரிகிறவர்களாகவும் புள்ளிவிவரங்களுடன் வருகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அதேபோன்று பாரதிய ஜனதா சார்பில் வரும் ராகவன், நாராயணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோரும் வாதத்திறனும், அதிகபட்ச தகவல்களும் கொண்டவர்களாகவே உள்ளனர்.

அதிமுகவுக்கு வருகிறவர்களில் யாரையும் அப்படிச் சொல்வதற்கு இல்லை. சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், காசிநாத பாரதி என்ற மூன்றுபேர் அதிமுகவுக்கு நிரந்தரமாய் வருபவர்கள். 

இவர்களில் தீரன் ஒருவரைத்தான் விஷயஞானம் உள்ளவராகச் சொல்லமுடியும். அதிலும் 
பல்வேறு கட்சிகளுக்கும் பயணப்பட்ட தீரன் விஷயத்தையும் ஞானத்தையும் இறக்கிவைத்துவிட்டுத்தான் அதிமுகவுக்கு வந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் தீரன் வாதிடும்போது என்ன சப்ஜெக்ட் பேச வருகிறாரோ அதைப்பற்றிய கவலையை விடவும் ஜெயை விளிக்கும்போது ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’ என்ற சொல்லாடலை சரியாகச் சொல்கிறோமா என்பதிலேயே அவர் கவனம் முழுவதும் இருக்கிறது என்பதை விவாதங்களைப் பார்க்கிறவர்கள் சுலபமாகவே புரிந்துகொள்ள முடியும்.

சி.ஆர்.சரஸ்வதியைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. உலகின் எந்த விஷயம் பற்றியும் சி.ஆர்.எஸ்ஸை வைத்துக்கொண்டு எந்தமாதிரியான கொம்பனும் விவாத மேடையை நடத்தலாம் என்பதுதான் இவரிடமிருந்து நாம் பெறும் செய்தி. அவருக்கு என்ன தெரியுமோ அதை வைத்துக்கொண்டு எந்தவிதமான மேடையாக இருந்தாலும் சமாளித்துவிடுகிறார் அவர். ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவுக்கு இணையானவர்கள் எவரும் இல்லை. அவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. அவருக்கு இருக்கும் செல்வாக்கு இங்கே யாருக்கும் இல்லை. நாற்பத்தைந்து சதவித ஓட்டுவங்கி அம்மாவுக்கு உண்டு. ஆகவே தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.’ இதுதான் சி.ஆர்.சரஸ்வதியிடம் இருக்கும் சரக்கு. இதனை உலகின் எந்த விஷயமாயிருந்தாலும், அதனை வெளிப்படுத்தும் தளம் எதுவாக இருந்தாலும் அமெரிக்க செனட் சபையாயிருந்தாலும், நாசா விண்வெளி மையமாக இருந்தாலும் எதிர்கொள்வதற்கும் சொல்வதற்கும் சி.ஆர்.சரஸ்வதி தயார்.

சாதாரணமாய் கலைஞர் என்றும் தளபதி என்றும் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் கடந்துவிடும் திமுகவினர் மையக்கருத்து எதுவோ அதைப்பற்றிப் பேசுவதில் அக்கறை காட்ட ஆரம்பிப்பர். அதிமுகவினரின் நிலைமைதான் பரிதாபம். மாண்புமிகு தமிழக முதல்வர் என்று ஆரம்பித்து அரை நிமிடத்திற்கு மூச்சுவிடாமல் அவர்கள் தலைவியின் பெயரைப் புகழ் மாலைகளுடன்  சொல்லியாக வேண்டும் அவர்கள்.

பாமகவின் பாலு, மதிமுகவின் அந்திரி தாஸ்,  அதிமுகவின் காசிநாதபாரதி மற்றும் செ.கு.தமிழரசன். இவர்கள் நான்கு பேரையும் ஒரே லிஸ்டில்தான் சேர்க்கவேண்டும். வேறு யாரையும் எதுவுமே பேச இவர்கள் விடுவதில்லை. இவர்களின் வாதத்திற்கு முன்பு ‘மற்றவர்களின் வாதங்களெல்லாம் கால்தூசு’ என்பதான நினைப்பு இவர்களுக்கு உண்டு என்பதை இவர்கள் பேசும் விதத்தை வைத்தே அறிந்துகொள்ளலாம். இவர்கள் ஒன்றைச் சொல்லிவிட்டார்களென்றால் மற்றவர்கள் அடிபணிந்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். மீறி யாராவது பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் சம்பந்தப்பட்டவருடன் சேர்ந்து கடைசிவரைக்கும் கத்திக்கொண்டே இருப்பதுதான் இவர்களின் பாணி. அதிலும் செ.கு.தமிழரசன் தனிரகம். பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் நிறுத்தவே மாட்டார். மற்ற எல்லாரும் பேசும்போதும் குறுக்கிட்டு பதில் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பேசிக்கொண்டே இருப்பார். அதையும் தாண்டி அவரை நிறுத்திவிட்டு மற்றவர்களைப் பேசச்சொல்லும்போது “என்னைப் பேசவே விடமாட்டேன்றாங்க, என்னைப் பேசவே விடமாட்டேன்றாங்க” என்று இவர் புலம்புவது உச்சபட்ச காமெடி.

அதிமுக வரிசையில் சமரசம் என்று ஒருவர் வருவார். முன்னாள் எம்எல்ஏ.

என்னுடைய நண்பர் ஒருவர் “சமரசம் வருகிற எந்த நிகழ்ச்சியையும் மிஸ் பண்ணுவதில்லை” என்று சொல்வார். காரணம் பழமொழிகள்… சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் எந்த விஷயம் வந்தாலும் ஒரு பழமொழியுடன்தான் தமது வித்தியாசக் குரலில் பேசவே ஆரம்பிப்பார். “சமரசம் இருந்தால் சிரிப்புக்குப் பஞ்சமேயில்லை” என்பார் நண்பர்.

“மக்கள் நலக்கூட்டணியைப் பற்றிக் கலைஞர் இன்றைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்” என்று ஆரம்பித்து நெறியாளர் ஏதோ சொல்லப்போக சமரசம், “ஐயா பருப்பு சாம்பாருக்கு கருப்புக்கோட்டு போடக்கூடாது. அருப்புக் கோட்டையிலபோய் நெருப்புக் கோழி தேடக்கூடாது” என்று எதையோ எடுத்துவிடுவார். ஒருத்தருக்கும் ஒரு எழவும் புரியாது.

“மோடி தம்முடைய வெளிநாட்டுப் பயணத்தில்…” என்று நெறியாளர் எதையோ கேட்கப்போக-
“புளியங்கொட்டை வளைஞ்சிருந்தா கொடுக்காப்புளி ஆகாது. கொடுக்காப்புளியை வண்டியேற்றினா வாழைக்காய் வேகாது” என்பார்.

“ஸ்டாலின் நடைப்பயணத்தில் மக்கள் கூட்டம் அதிகமாய் சேர்கிறதே……” என்பதுபோல் யாரோ சொல்லப்போக ஒரு விசித்திரமான குரலில் சமரசத்தின் பதில் பாய்ந்து வரும் – “ஐயா காத்து வீசினா காஞ்சிபுரம் பாடும். களரி வீசினா சிலையெழுந்து ஆடும்” என்பார். கேட்பவர்களுக்குச் சிரித்துச் சிரித்து மாளாது.  

ரெகுலர் பேச்சாளர்கள் வரிசையில் இவர்களுக்குச் சற்றும் சளைக்காத இன்னொரு அப்பாடக்கர் சுமந்த் சி.ராமன்.

பல் டாக்டரான இவர் பொதிகை டிவியில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்தியபோது  பார்க்கிறவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். விளையாட்டில் இவருக்கிருந்த அபரிமிதமான விருப்பமும், அர்ப்பணிப்பும், விஷயஞானமும் பார்க்கிறவர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த நிகழ்ச்சி மூலம் தாம் ஏற்படுத்திவைத்திருந்த இமேஜைக் குறைத்துக்கொள்ள இவருக்கு ‘அரசியல் களம்’ தேவைப்பட்டிருக்கிறது. நடுநிலையாளர், நடுநிலைச் சிந்தனையாளர் என்ற பெயர்களில் வரும் இவர் அதிதீவிர அதிமுக தொண்டனைவிடவும் மோசமாக அதிமுக பாட்டுப் பாடுகிறார். ‘வேறு யாரையுமே பேச விடாமல் நிகழ்ச்சி முழுவதற்கும் தாம் ஒருவரே பேசிக்கொண்டிருக்கவேண்டும்’ என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த இவர் முயலும் விதம் இவர் மீதான மரியாதையை வெகுவாகக் குறைக்கிறது.

அதிமுகவுக்கு இவர்கள் இல்லாமல் பேசக்கிடைக்கிறவர்கள் செ.கு.தமிழரசன், தனியரசு, மற்றும் மாபா பாண்டியராஜன். இவர்கள் மூவருமே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

மா.பா.பாண்டியராஜன் தேமுதிகவிலிருந்து வெளியேறியவர். அதிமுக தொண்டரைப்போல சரணம் சர்வகதி என்று சரணடையவும் முடியாமல், பெரிய மனிதத்தோரணையைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாமல் இவர் தவிக்கும் தவிப்புதான் இவரது ஹைலைட். அதனால் “இத பாருங்க,,,, இதபாருங்க” என்று டிஸ்கஷன் முடிகிறவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் இவரது பாணி.

திமுக சார்பாகப் பேச அப்பாவு, பரந்தாமன், சிவஜெயராஜ், கண்ணதாசன் என்று சிலர் வருகிறார்கள். இவர்களில் அப்பாவு ஒருவரைத்தவிர மற்றவர்கள் புதுமுகம். அப்பாவு காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு வந்தவர். தமது தொகுதியில் கட்சி அடையாளங்களை உதறி சுயேச்சையாக நின்று வெற்றிபெறுமளவுக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்தவர். அரசியலில் ஏகப்பட்ட அனுபவங்கள் மிக்கவர். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எந்த விஷயமாயிருந்தாலும் விவாதிப்பதில் வல்லவர்.

எத்தனை இருந்து என்ன? அப்பாவுவை இந்த ‘நெறியாளர்கள்’ பேச விட்டால்தானே?

“கலைஞர் தம்முடைய ஆட்சியில்” என்று அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “எம்ஜிஆர் மதுவிலக்கை மீண்டும் அமல் படுத்தியிருக்கலாம். திரும்பவும் கலைஞர் இருபதாண்டுக்காலம் ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் அமல் படுத்தவில்லை?” என்று மேற்கொண்டு பேசவிடாமல் கேள்வி கேட்பார்கள்.

“தளபதி ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தில்” என்று அப்பாவு துவங்கும்போது “ஸ்டாலினுக்கு எந்தக் கட்சித் துணையும் இல்லாமல் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதென்றால் எந்தக் கட்சித்துணையும் இல்லாமல் நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். எந்தக் கூட்டணியும் வேண்டாம் என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா?” என்று அடுத்த கேள்வியை வீசுவார்கள்.

“அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. ஜெயலலிதா கொடநாட்டில்…” என்று ஏதோ சொல்ல அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “2ஜி வழக்கில் உச்சநீதி மன்றத்தில் கனிமொழியின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவர் வழக்கைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இத்தனை வழக்குகளை வைத்துக்கொண்டு திமுக எந்த தைரியத்தில் தேர்தலைச் சந்திக்கப்போகிறது?” என்று குறுக்குசால் ஓட்டுவார்கள்.
து அப்பாவு ஒருத்தருக்கு மட்டும் ஏற்படும் நிலைமை அல்ல. திமுக சார்பாக யார்யார் பேச வருகிறார்களோ அவர்கள் அத்தனைப் பேருக்கும் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்படும் கதி இதுதான். எந்த வகையிலும் திமுகவின் ‘வாய்ஸ்’ ஒலித்துவிடக்கூடாது என்பதுதான் ஊடகங்கள் எடுத்திருக்கும் கொள்கை சார்ந்த முடிவு.

அதாவது திமுகவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவின் பதில்கள் வந்துவிடக்கூடாது. அதேபோல் திமுக மற்றவர்கள் மீது - குறிப்பாக அதிமுகவின் மீதும், ஜெயலலிதாவின் மீதும் - எந்தவித குற்றச்சாட்டையோ விமரிசனத்தையோ வைத்துவிட அனுமதிக்கவும் கூடாது. இதில் மிகவும் கவனமாக இருப்பவர்களாக ரங்கராஜ் பாண்டே, ஹரிஹரன், தியாகச்செம்மல், கார்த்திகைச் செல்வன் ஆகியோரைச் சொல்லலாம். ஓரளவு பதில் சொல்ல அனுமதிக்கிறவர்களாக குணசேகரன், செந்தில் ஆகியோரைச் சொல்லலாம்.

நான்குபேர் கொண்ட குழு விவாதத்தைத் துவங்கும் என்பதாகப் பார்த்தோம். ஒரு விவாதப் பொருளைப் பேச ஆரம்பிக்கிறவர்களை வரிசையாகப் பேசச் சொல்வார்கள். திமுகவினரை நான்காவதாகத்தான் பேச அழைப்பார்கள். இதில் ஒரு பெரிய சூட்சுமம் இருக்கிறது.

அதாவது மூன்று பேரும் பேசி முடித்துவிட்டு நான்காவதாக இவர்களிடம் வருகிறார்கள் இல்லையா? இவர்கள் ஏதாவது சொல்லப்போக முதல் வார்த்தையிலேயை இடைமறித்து வேறொரு கேள்வி கேட்பது, அதற்கு திமுக பிரமுகர் பதில் சொல்ல ஆரம்பித்து முதல் வார்த்தைச் சொன்னதுமே மற்றொரு கேள்வி எழுப்புவது, அதற்கும் பதில் சொல்லமுனைந்தால் மறுபடி வேறொரு கேள்வி போடுவது என்று இருக்கிறார்கள் இல்லையா? அதையும் தாண்டி திமுகவினர் சமாளித்துக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருக்கவே இருக்கிறது அடுத்த பிரம்மாஸ்திரம். “ஒருநிமிஷம். நீங்க உங்க பதில்களை ஒரு பிரேக்குக்கு அப்புறம் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு இடைவேளை விட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

இடையிலேயே “என்னை பதில் சொல்லவே விடமாட்டேன்றீங்க. இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்” என்று திமுக பிரமுகர் சொன்னால் இவர்களிடம் ஸ்டாக் இருக்கும் ஒரே பதில். 

“நான் உங்க கிட்டேதான் வர்றேன். உங்களைத்தான் கேட்கறேன்”

இவர்களின் இந்த பாச்சாவை பலிக்காமல் செய்த பிரபலங்கள் சிலரும் உண்டு. குறிப்பாக வசந்தி ஸ்டான்லி. “இருங்க தம்பி. நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவே ஆரம்பிக்கலை. என்னைப் பேசவே விடாம நீங்க பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருந்தா என்ன அர்த்தம்? என்னை வைச்சுக்கிட்டு நீங்க பேசறதுன்னா என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்று ஒரு அதட்டல் போட்டு பதில் சொன்னவர் அவர். ஆனால் எல்லாப் பிரபலங்களும் இதனைச் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

அந்தக் காலத்திலெல்லாம் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஆங்கிலச் சேனல்களில் வெறும் சோ மட்டுமே வந்துகொண்டிருப்பார். தமிழில் ஞாநியை மட்டும்தான் வரவழைப்பார்கள். இப்போதுதான் எல்லாப் பத்திரிகையைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். இவர்களில் துக்ளக் ரமேஷ் என்ற ஒருவரைத்தவிர (இவர் மட்டுமே அதிமுக சார்பு) மற்ற எல்லாப் பத்திரிகையாளர்களும் நடுநிலையாளர்களாத்தான் இருக்கிறார்கள். அதுவும் திரு.மணியின் அலசல்கள் கவனத்துக்குரியவை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இம்மாதிரியான தடங்கல்களும், தடைக்கற்களும் எத்தனைப் போடப்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்துக்கொண்டு சுலபமாக ஸ்கோர் செய்துவிட்டுப் போகும் ஒரு சிலர் இருப்பார்கள் இல்லையா? அம்மாதிரியான ஒருவர்-
தமிழன் பிரசன்னா!

திமுகவைச் சேர்ந்த இளம் வக்கீலான இவரிடம் இந்த நெறியாளர்கள், வெறியாளர்கள் யாருடைய குயுக்தியும் செல்லுபடி ஆவதில்லை. எப்படிப் போட்டு வளைத்தாலும் அத்தனை வியூகங்களையும் உடைத்துக்கொண்டு வந்து தம்முடைய கருத்தை நிலைநாட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார் இந்த இளைஞர். அரசியல் விவாதங்களில் ஒரு நட்சத்திரம் போல் பவனி வருகிறார் இவர். இந்த இளைஞர் பங்குபெறும் விவாதங்களைப் பார்க்கும் நேயர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.

Monday, October 12, 2015

மனோரமாவின் இறுதி அஞ்சலி!

                             

நடிகை மனோரமாவின் இறுதி அஞ்சலிக்கூட்டம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பெரிதாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் கொடிகட்டிப் பறந்த மிகப்பெரிய நடிகைகளான சாவித்திரி, பத்மினி, தேவிகா போன்றோர் இறந்தபோதுகூட இந்த அளவு பிரமாண்டமான அஞ்சலி ஊர்வலங்கள் நடைபெற்றதில்லை. ஏன்? நடிகர் நாகேஷுக்குக்கூட இந்த அளவு பிரமாண்டம் காட்டப்படவில்லை.

இதற்குக் காரணம் இப்போது பெருகிவிட்ட ஊடகங்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். தமிழில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் எந்தப் பிரபலம் மண்டையைப் போடுவார் என்று சில சேனல்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலைமையை இன்று பார்க்கிறோம். முன்பு சன் டிவி மட்டுமே களத்தில் இருந்தபோது இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றுவிட்டால் அவர்களின் தேர்வு எப்படி என்பதற்குக் காத்திருக்கவேண்டும். சன்டிவிக்கென்று சில கணக்குகள் இருந்தன.

இப்போதைய சேனல்களுக்கு அதெல்லாம் இல்லை.

யாராவது இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும்போதேயே அடியைப் படியைப் போட்டுக்கொண்டு பல செய்திச்சேனல்கள் முந்தி ஓடிப்போய் லைவ் டெலிகாஸ்ட் என்று கடையை விரித்துவிடுகின்றன. பதினைந்து இருபது மணி நேரங்களுக்கு நேரடி ஒளிபரப்பு என்று வரும்போது அதற்கேற்ப அந்தப் பிரபலத்துடன் சம்பந்தப்பட்ட ஓரிரு பிரபலங்களைத் தங்கள் தளத்திற்கு வரவழைத்து அவர்களிடம் ‘கடலைப் போடுவதையும்’ ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால் மனோரமாவிற்கு இத்தகையதொரு பிரமாண்ட இறுதி அஞ்சலி தேவைதானா என்பதைப் பார்க்கும்போது அவரது திறமைக்கு இது நியாயம்தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

மனோரமா இறந்த சந்தர்ப்பமும் அப்படிப்பட்டது.

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த நேரம் என்பதால் இரண்டு கோஷ்டிகளும் தங்களின் கோபம், தாபம், வீராப்பு, ஆக்ரோஷம், சவால்கள், கோர்ட் சம்மன்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு வீடு தொடங்கி மயிலாப்பூர் சுடுகாடுவரை மனோரமாவின் உடலுக்கு அருகே பச்சைத் தண்ணீர்கூடப் பல்லில் படாமல் விடியற்காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழரை மணிவரை இருந்ததையும் சாவைத் தூக்கிச் சுமந்ததையும் பார்த்தோம்.

சரத்குமார் கோஷ்டியாகட்டும் விஷாலின் கோஷ்டியாகட்டும் உடம்புக்கு அருகில் யார் இடம்பிடிப்பது, இறுதிக்கடனுக்கு வேண்டிய சடங்குகளுக்கு யார் அதிக உதவி செய்வது என்பதில் மிகவும் குறியாக இருந்தார்கள்.

சரத்குமார் கோஷ்டி தங்களின் சாதனைகளாகவும் பிரதாபங்களாகவும் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருந்ததே இதுபோன்ற விஷயங்களைத்தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அவர் சாவுக்குக் கூட இருந்தது யார்? இவர் சாவுக்கு உடனடியாய்ப் போய் உடன் இருந்தது யார்?’ என்று சரத்குமார் கோஷ்டி கேட்க,

“சாவுகளுக்குக் கூட இருந்தேன், கூட இருந்தேன் என்று சொல்கிறார்கள். சாவுகளுக்குக் கூட இருப்பது யார்? வெட்டியான்தானே? அப்ப இவங்க என்ன வெட்டியான்களா?’ என்று சிறுபிள்ளைத்தனமாக விஷால் பதில் சொல்லியிருந்தார். (உடனே பக்கத்திலிருந்தவர்கள் ஏதோ சொல்ல “நான் ஒண்ணும் வெட்டியான்களைத் தவறாகச் சொல்லவில்லை. அவர்கள் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை. சாவுகளைப் புதைப்பது என்பது உத்தமமான பணி என்பது எனக்குத் தெரியும்” என்று சொல்லி உடனே மன்னிப்புக் கேட்டார்.) அப்படித் தான் பேசிய அடுத்த இருபத்துநான்கு மணி நேரத்தில் தானே ஒரு சாவுக்குத் துணையாகப் பக்கத்தில் நிற்கப்போகிறோம் என்பது பாவம் விஷாலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மனோரமாவின் இறுதி அஞ்சலியை சமூக அந்தஸ்து வாய்ந்த ஒரு நிகழ்வாக மாற்றியது அனேகமாக கம்யூனிஸ்டுகளாகத்தான் இருக்கவேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் நேரில் வந்திருந்து அஞ்சலி செலுத்தியது அவர்கள் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இருவரிடமும் மனோரமா நெருங்கிய நட்பு பூண்டிருந்தார் என்பதும், இருவர் உடனேயும் சேர்ந்து நடித்திருக்கிறார் என்ற தகவல்களும் அதற்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இவர்கள் இருவரும் வருவார்கள் அதனால் நாம் போகாவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, முதலில் ஆஜரானது இ. கம்யூனிஸ்டைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன்தான். அவரைத் தொடர்ந்து வீரமணி, திருமாவளவன், தா.பாண்டியன், நல்லகண்ணு, இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், குமரிஅனந்தன் என்று ஆரம்பித்து ஜிகேவாசன் வரைக்கும் வந்து தீர்த்துவிட்டார்கள்.

கலைஞர் உட்பட எல்லாருமே திரண்டிருந்த கூட்டத்தைத் தொந்தரவு செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு வந்து இறுதிமரியாதை செலுத்திவிட்டுப் போய்க்கொண்டிருக்க திடீரென்று மொத்தக்கூட்டத்தையும் காலி செய்து ஈ காக்கை எறும்பு போன்ற ஜந்துக்கள் ஊர்வதற்குக்கூட போலீசார் தடைவிதிக்க ஆரம்பித்ததுமே ஜெயலலிதா வரப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது. 

(மெயின் சாலையிலிருந்து வீடு வரைக்குமான இடத்தைப் பெருக்கிக் கழுவி சுத்தம் செய்தார்களா என்பது பற்றிய தகவல் இல்லை) ஜெயலலிதா வந்தார். வருத்தத்துடன் மனோரமா முகத்தைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றார். அவர் பின்னால் கம்பீரமாக சசிகலா. முதல்வரின் பேச்சில் எந்தவிதமான பாசாங்குகளோ, செயற்கைத் தன்மையோ அறவே இல்லை என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

மனோரமாவைப் பற்றி இங்கே தனிப்பட்ட அளவில் பதிவு எழுதும் அளவிற்கு நட்போ அனுபவங்களோ இல்லை.

நான்கைந்துமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன்.

சிவகுமார் நடித்த ‘சிட்டுக்குருவி’ படத்தின் படப்பிடிப்பு மைசூரை அடுத்த தலக்காடு பகுதியில் நடைபெற்றபோது ஊருக்கு வெளியே வெகு தூரத்தில் இருந்த ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடைபெற்றது. சிவகுமாரும் சுமித்ராவும் நடித்துக்கொண்டிருக்க கோவிலுக்கு வெளிப்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி கீழே சப்பணமிட்டு அமர்ந்து அங்கிருந்த செடிகளிலிருந்து பூப்பறித்துக்கொண்டு வந்து அதைச் சிரத்தையுடன் கட்டிக்கொண்டிருந்தார் மனோரமா. பக்கத்தில் எஸ்.என்.லட்சுமி அமர்ந்து பேசிக்கொண்டிருக்க இவரது கைகள் பாட்டுக்கு அசுரவேகத்தில் பூத்தொடுப்பதிலேயே கவனமாக இருந்தது. . எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் எவ்வளவு புகழுக்குரியவர் இப்படி சர்வ சாதாரணமாய்……………….?

இந்தக் காட்சி வித்தியாசமாய் இருக்க நானும் நண்பரும் அருகில் போய் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டோம். அவர் பதறிப்போய் “எதுக்குத் தரையில உட்கார்றீங்க? அதோ பாருங்க சேர்கள் இருக்கே. அதில் உட்காரலாமே” என்றார்.

“நீங்களே தரையில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும்போது நாங்க நாற்காலியில் உட்காரணுமா என்ன?” என்றதற்கு “கோயில் பிரகாரத்துல எதுக்குத்தம்பி சேர்ல உட்காரணும்? இப்படி உட்கார்றதே சௌகரியமா இருக்கு இல்லையா?” என்று சிரித்தார்.

அதன்பிறகு ‘கண்ணாமூச்சி’ என்றொரு படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிருந்தாவனம் தோட்டத்தில் நடைபெற்றது.

அந்தப் படப்பிடிப்பிலும் மனோரமாவைச் சந்திக்க நேர்ந்தது. நினைவு இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகத்துடன் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள முனைந்தபோது “தெரியுமே. நீங்க சிவா தம்பியோட கெஸ்ட் தானே? அதான் எல்லா ஷூட்டிங்கிற்கும் வந்துடுறீங்களே” என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தார்.

அந்தப் படப்பிடிப்பில் மனோரமாவை வேறொரு கோணத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்தப் படப்பிடிப்பிற்குத் தன் உறவு நபர் ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தார் அவர். அந்த நபருக்குச் சின்ன வயசு. கோட் சூட்டெல்லாம் போட்டு டையெல்லாம் கட்டி ஜம்மென்று வந்திருந்தார். அவரது கோட் சூட்டிற்கும் அவர் செய்த செயல்களுக்கும் தாம் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாமல் இருந்தன அவரது நடவடிக்கைகள்.

சிவகுமாருக்கும் லதாவுக்குமான பாடல் காட்சி சிறிது தூரத்தில் படமாகிக்கொண்டு இருந்தது. வேறொரு புறத்தில் எல்லாரும் அமர்ந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட ஆரம்பித்த சமயத்தில் “எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லி எழுந்துகொண்டார் மனோரமாவுடன் வந்திருந்த அந்த நபர்.

எழுந்தவர் பக்கத்திலிருந்த மரத்தின் கிளையிலிருந்து ஒரு நீண்ட கிளையை உடைத்து எடுத்துக்கொண்டார்.

அவ்வளவுதான். 

ஆரம்பித்தது சூரத்தனம்.

சுற்றிலும் அழகழகாய்ப் பூத்துக்குலுங்கிச் செழித்து வளர்ந்திருந்த பூக்களின் தலையைப் பார்த்து ஒரே அடி.

பூக்கள் சிதறித் தெறித்து விழுந்தன. அந்த நபரும் அவருடன் இருந்த அவர் வயதையொத்த ஒரு இளம் நண்பரும் அதனைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்தனர்.

“டேடேடே என்னடா காரியம் பண்றே?” என்று பதறி எழுந்தார் மனோரமா.

அதட்டி மிரட்டிப் பணிய வைப்பார் என்று பார்த்தால் அவரது செய்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. “வேணாம் ராஜா வேணாம் கண்ணு. அப்படியெல்லாம் செய்யாதேய்யா. வாட்ச்மேன் பார்த்தா திட்டுவாண்டா சாமி. அந்தக் குச்சியை முதல்ல கீழே போட்டுரு” என்று கெஞ்சி மன்றாட ஆரம்பித்தார்.

அந்தப் பையன் எதையும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை.

அவர் பாட்டுக்குத் தன் செய்கையில் தீவிரமாக இருந்தார். அழகாகப் பூத்திருக்கும் பூக்களையும் இலைகளையும் பார்த்து ஒரே வீச்சு. சடசடவென்று விழுந்துகொண்டிருந்தன பூக்கள். சிறிது நேரத்திற்குள் பிருந்தாவனத்திலிருந்த பல பூக்கள் துவம்சம் ஆகியிருந்தன.

ஏதோ வாள் கொண்டு வீசுவதாகவும், தலைகள் கொய்யப்பட்டு வீழ்வதுபோலவும் அவருக்குள் நினைப்பு இருந்திருக்கவேண்டும். படர்ந்து நீண்டிருந்த பூங்காவில் இவர் ஓடி ஓடிப்போய் பூக்கள் பூத்திருக்கும் இடங்களை எல்லாம் விளாசித் தள்ளிக் கொண்டிருந்தார்.

“ஐயா அவம்பாருங்க…….. என்ன செய்யறான்னு? போய்யா நீங்களாச்சும் போய் அவனுக்கு ஏதாவது செய்து அவனை நிறுத்தவையுங்கய்யா. நான் சொன்னால் கேட்க மாட்டான்யா அவன்” என்று எதிரிலிருந்த சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் மற்றும் என்னைப் பார்த்துக் கேட்க நாங்கள் மூவரும் அந்த இளைஞரைத் தேடி ஓடினோம்.

சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் என்னென்னவோ பேசி அந்த நபரின் கவனத்தை திசை திருப்பினார்கள். அதற்குள் தோட்டக்காரனும் பார்த்துவிட்டுக் கத்திக்கொண்டே ஓடிவர சமாதானம் பேசி தோட்டக்காரனை அனுப்பிவைத்தனர் தேங்காயும் சுருளியும்.

இதற்குள் பிருந்தாவனத்துக்குள்ளேயே நீண்ட தூரத்திற்குப் போய்விட்டிருந்தார் அந்த நபர்.

“இதுக்குமேல இவனை நம்மால துரத்த முடியாது. தோட்டக்காரன் பிடிச்சு கன்னத்துல ரெண்டு அப்பு அப்பினான்னா சரியாயிரும். விட்ருவோம்” என்று சொல்லிவிட்டார் சுருளி.

அந்தப் பையன் பிறகு கண்காணாத தூரத்திற்குப் போய் மதியம் சாப்பிடுகின்ற நேரத்திற்குத்தான் வந்து சேர்ந்தார்.

அந்தப் படப்பிடிப்பின் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மனோரமாவை மறுபடி சந்தித்துப் பேசும் வாய்ப்பு வந்ததில்லை.

இரண்டொரு முறை சில நிகழ்ச்சிகளில் சந்தித்ததுதான். வணக்கம் வைத்தால் சிரித்துக்கொண்டே 
“எப்ப வந்தீங்க தம்பி? நால்லாருக்கீங்களா?” என்று கேட்பார்.

சிவகுமார் சம்பந்தப்பட்ட நூல் ஒன்றிற்காக அவரைச் சந்திக்கவேண்டும் என்று முயற்சி மேற்கொண்டபோது “அவர் முன்பைப்போல் நினைவு படுத்திப் பேசும் நிலையில் இல்லை” என்று சொல்லப்பட்டது.

எம்மாதிரியான வேடமாயிருந்தாலும் உடன் நடிப்பவர் யாராக இருந்தாலும், அத்தனைப் பேருக்கும் ஈடு கொடுத்து நடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. ஆனால் அதனை சர்வசாதாரணமாக செய்துவிட்டுப் போயிருக்கும் ஒருவராகத்தான் மனோரமா இருக்கிறார்.

சிவாஜியிலிருந்து தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் எம்ஆர் ராதா என்று பல ஜாம்பவான்களுடன் இணைந்தும் ஈடுகொடுத்தும் நடித்தவர் பின் நாளில் வந்தவர்களான தேங்காய், சுருளிராஜன், கவுண்டமணி ஆரம்பித்து கமல்ஹாசன், ரஜினி, பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், பிரசாந்த், சூர்யா, அஜீத், விஜய்,  வடிவேலு என்று இன்றைய விஷால்வரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் அம்மாவாகவும், பாட்டியாகவும் அத்தையாகவும் எத்தனை வேடங்கள் உண்டோ அத்தனை வேடங்களிலும் தோன்றி அமர்க்களம் செய்திருக்கிறார்.

நடிப்பு அமர்க்களங்கள் ஒருபுறம் இருக்க, வசன உச்சரிப்பிலும் உச்சம் தொட்டவர் அவர். எந்த மாதிரியான வட்டார பாஷையும் அவருக்குக் கைவந்த கலை. சென்னைத் தமிழை அசால்ட்டாகப் பேசி அமர்க்களம் செய்த ஒரே நடிகை மனோரமாதான்.

‘வா வாத்யாரே வூட்டாண்ட. நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன். ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டைக் கொக்கு’……….. தமிழில் அதிர்வலைகளை ஏற்படுத்திய முதல் குத்துப் பாடல். 

அதையும் ஒரு பெண் பாடியிருக்கிறார் என்பதுதான் பாடலில் உள்ள விசேஷம்.

வேடிக்கைக்குச் சொன்னாரோ, மனதில் எந்த கர்நாடக சங்கீதப் பாடகியையாவது வைத்துக்கொண்டு அவருக்கு எதிராகச் சொன்னாரோ அல்லது உண்மையாகவே சொன்னாரோ பிரபல சங்கீத மேதையான பாலமுரளி கிருஷ்ணா இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் தம்மை மிகவும் கவர்ந்த பாடல் இதுதானென்றும், தன்னை மிகவும் கவர்ந்த பாடகி மனோரமாதான் என்றும் ஒரு பேட்டியில் சொல்லித் தம் பங்கிற்குப் பரபரப்பைக் கிளப்பினார்.

எது எப்படியோ, அசாத்தியத் திறமை இல்லையெனில் திரையுலகிலும் திரைப்படங்களிலும் ஐம்பது வருடங்கள் எல்லாம் ஒருவரால் தாக்குப்பிடிக்க முடியாது.

இத்தனை வருடங்கள் இருந்தபோதும் புகழையும் வெற்றியையும் தம்முடைய தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் அவரால் இருக்கமுடிந்திருக்கிறது என்பதுதான் சிறப்பு.



ஆச்சி மனோரமா நம்முடைய மன ஓரமா நீண்ட காலத்திற்கு வாழ்க்கைப் பூராவும் நம்முடன் நடந்து வந்துகொண்டே இருப்பார் என்பது மட்டும் உறுதி. 

Sunday, September 6, 2015

எம்எஸ்வி – ஒரு நிறைவுற்ற சகாப்தம் – பகுதி-2


பாக்கியலட்சுமிக்கு வருவோம். ‘கண்ணே ராஜா’ பாடலில் ஒரு விசேஷம். அந்தப் பாடல் முதலில் சந்தோஷப் பாடலாகவும் பிறகு சோகப்பாடலாகவும் படத்தில் ஒலிக்கும். அந்தக் காலத்தில் பல படங்களில் இந்தப் பாணி இருந்தது. ஒரே மெட்டு மகிழ்வாகவும் பின்னர் கதையின் போக்குக்கேற்ப அதே மெட்டு சோகமாகவும் ஒலிக்கும். ஒரு இசையமைப்பாளரின் அற்புதத் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்தப் பாணியும் நிறையவே உதவிற்று.
இந்தவகையில் புகழ்பெற்ற பாடல்கள் நிறைய உண்டு.
  1.        வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே..
  2.         கண்ணே ராஜா கவலைவேண்டாம்……
  3.       மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்..
  4.    நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்……….
  5.     இந்த மன்றத்தில் ஓடிவரும்…………
  6.     அன்றுவந்ததும் அதே நிலா………….
  7.      உன்னை ஒன்று கேட்பேன்………….
  8.      ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி……………
  9.     அன்றொருநாள் இதே நிலவில்….
  10.          அம்மாடி பொண்ணுக்குத் தங்கமனசு…….. என்று பட்டியல் பெரியது. 

இம்மாதிரியான சோகப்பாட்டுக்களை மட்டுமே, அதுவும் அன்றைக்கிருந்த ஒலித்தட்டு ரிகார்டுகளையே தேடித் தேடி சேகரித்து வைத்திருந்த ரசிகர்கள் நிறையவே உண்டு.
பாக்கியலட்சுமி’ படத்திற்குப் பின்னர் ‘பாசமலர்’ வருகிறது. பாசமலரில் ஏழு பாடல்கள் ஹிட். பாசமலருக்கு அடுத்து ‘பாலும் பழமும்’. பாலும் பழமும் படத்தில் ஏழு பாடல்கள். அதற்கடுத்து ‘பாவமன்னிப்பு’. பாவமன்னிப்பில் ஆறு பாடல்கள் ஹிட்.(புகழ்பெற்ற பாடலான ‘அத்தான் என் அத்தான்’ இந்தப் படத்தில்தான். இந்தியாவின் புகழ்பெற்ற இசைமேதைகளில் ஒருவரான நௌஷத் “ஒரு பாடலை இப்படியெல்லாம் கம்போஸ் பண்ணமுடியுமா என்ன?” என்று ஆச்சிரியத்தில் வியந்த பாடல் அது. தனக்கு மிகவும் பிடித்த பாடலாக லதா மங்கேஷ்கர் இன்றும் சொல்லிவரும் பாடல் அது) இப்படி….. தமிழ் நெஞ்சங்களில் தொடர்ச்சியாகத் தேன்மழையைப் பொழியும் காரியத்தை மெல்லிசை மன்னர்கள் செய்கிறார்கள்.

அதற்கடுத்து டி.ஆர்.ராமண்ணாவின் ‘மணப்பந்தல்’ வருகிறது. இந்தப் படத்திலும் பி.சுசீலாவை வைத்து வர்ணஜாலம் புரிகிறார்கள். அவர் பாடிய ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்’, ‘ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல்’ இரண்டு மட்டுமில்லாமல் பிபிஸ்ரீனிவாஸின் ‘உடலுக்கு உயிர் காவல்’ தத்துவப் பாடலும் தாறுமாறாக ஹிட் அடிக்கின்றன.

அடுத்து வருகிறது ‘ஆலயமணி’. சிவாஜியின் இந்தப் படத்தில் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘சட்டி சுட்டதடா’ மூன்றும் சிவாஜிக்கானவை. இந்த இடத்தில் ஒரு சின்னக் குறுக்கீடு. என்னுடைய நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பெரிய அளவுக்குப் படித்தவர். திருச்சியைச் சேர்ந்த அவருக்கு அவருடைய சொந்தத்திலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பெண் வீட்டாரோ பெரும் செல்வந்தர்கள். என்னதான் மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும் அந்தஸ்துக்கு ஏற்ப இல்லை. அதனால் பெண்ணைத் தரமுடியாது என்று கடிவாளம் போட்டார் மாமனார். அந்தப் பெண் பிடிவாதமாக இருந்து இவரைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று இவரையே மணமுடித்தாராம். அந்தச் சமயத்தில் வந்த படம் ஆலயமணி. ‘பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே –புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே’ என்று “எனக்காகவே கண்ணதாசன் எழுதி சிவாஜி பாடிய மாதிரிதான் அன்றைக்கு இந்தப் பாடல் அமைந்திருந்தது. என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மனைவி வாழ்க்கையிலும் மறக்கமுடியாத பாடல் இது. நாங்கள் இறக்கும்வரை இந்தப் பாடலை மறக்கமாட்டோம்” என்று மனம் உருகிச் சொல்வார் ராமனாதன் என்ற என்னுடைய நண்பர். என்று இப்படி தனிப்பட்டவர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்களாகத்தான் அந்தக் கால பாடல்கள் அமைந்திருந்தன.

‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, சுசீலா பாடுகிறார். ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா?’ பாடல் சீர்காழி சுசீலா டூயட்டாக மலர்கிறது. இந்தப் படத்தில் வரும் இன்னொரு புகழ்பெற்ற பாடல் எஸ்.ஜானகி பாடும் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’.

இந்தப் பாடல் பற்றிய முக்கியமானதொரு செய்தியை இங்கே சொல்லியாக வேண்டும்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவருக்கே மிகவும் பிடித்த பாடலாகச் சொல்லியிருக்கும் வெகுசில பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவல்ல விஷயம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி; விஸ்வநாதன் தனித்திருந்தபோதும் சரி எஸ். ஜானகியை அவ்வளவாகப் பாடவைத்தவர்கள் கிடையாது.

மிகமிக அரிதாகத்தான் வாய்ப்புகள் வழங்குவார்கள். அவ்வப்போது ஏதோ ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பைத்தான் ஜானகிக்கு வழங்குவார்கள். அந்தக் காலத்தில் பெண் குரல் என்றாலேயே பி.சுசீலாதான். அதற்கடுத்த இடமும் ஜானகிக்கு அல்ல, எல்.ஆர்.ஈஸ்வரிக்குத்தான். அதனால் ஜானகி புத்திசாலித்தனமாக (அல்லது அப்படித்தான் அமைந்ததோ என்னவோ) கன்னடத்தின் பக்கம் போய்விட்டார். கன்னடத்தில் பிபிஎஸ்ஸூம் ஜானகியும்தாம் பெரிய முன்னணிப் பாடகர்கள். ஜி.கே.வெங்கடேஷ் கன்னடத்தில் நிறையப் படங்கள் பணியாற்றி வந்தமையால் அவருடைய உதவியாளராக இருந்த இளையராஜாவுக்கு பி.சுசீலாவை விடவும் ஜானகியிடம்தான் பணிபுரிந்த அனுபவம் அதிகம். எனவே இளையராஜா தமிழில் முன்னணிக்கு வந்ததும் அவருடைய ‘சாய்ஸ்’ இயல்பாகவே சுசீலாவாக இல்லாமல் ஜானகியாக இருந்தது. இந்தப் பின்னணியிலேயேகூட இந்தச் செய்தியை அணுகலாம்.

                                            

சில வருடங்களுக்கு முன்னர் விகடனிலோ குமுதத்திலோ எஸ்.ஜானகியின் பேட்டி வந்திருந்தது. அதில் அவர் ஒரு நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமான ரசிகர்கள் கூட்டம். ஏதோ காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் கலாட்டா ஆரம்பமாகிறது. மேடையிலிருப்பவர்கள் என்ன சொல்லியும் ரகளை குறைவதாகத் தெரியவில்லை. அந்த நாட்களின் புகழ்பெற்ற பாடல்களைப் பாடத்துவங்குகிறார் ஜானகி. கூட்டம் கட்டுப்படவில்லை. சட்டென்று பாடலை நிறுத்தும் ஜானகி உடனடியாக ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ என்ற ஆலயமணி பாடலை ஆரம்பிக்கிறார்.

மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் சட்டென்று கூச்சல் குழப்பம் அடங்கி கட்டுக்குள் வருகிறது கூட்டம்.

இந்த வித்தை எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாது.. “இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. அந்தப் பாடலுக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது” – என்று சொல்லியிருந்தார் ஜானகி.
இதே போன்ற அனுபவத்தை நேரடியாக சந்திக்க நேர்ந்தது பெங்களூரில். மிகப் பிரபலமான பாடகர்கள் வருவார்கள் என்று சொல்லி ஏகப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு ஒரு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னணியினர் யாரும் வரவில்லை என்றதும் ரகளையில் இறங்கியது கூட்டம். மேடைக்கு வந்த ஜானகி பாடிய முதல் பாடல் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’. மொத்தக் கூட்டமும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல் அடங்கியதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பும் பெங்களூர் சிவாஜிநகர் ஸ்டேடியத்தில் கிடைத்தது.

ஜானகியின் பேட்டி வெளிவந்தது 2000 ஆண்டுகளில். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ வந்தது 1962 ம் ஆண்டில். இதற்குள் ஜானகி வெவ்வேறு தளங்களில் பயணித்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடி ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். அதில் பிரபலமான பாடல்களும் நிறைய இருக்கும். ஆனாலும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு இருக்கும் மெஸ்மரிசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆலயமணிக்கு அடுத்து இன்னொரு புகழ்பெற்ற படமான ‘காத்திருந்த கண்கள்’. ஜெமினி, சாவித்திரி நடித்த படம். இதில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆறு பாடல்களும் அடித்துக்கொள்ள முடியாதவை. ‘கண்படுமே பிறர் கண்படுமே’ (இதை கண் badume என்றே பிபிஎஸ் பாடினார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதிலும் இன்றுவரையிலும் அடித்துக்கொள்ள முடியாத பாடல் அது)  பாடலும் ‘துள்ளித் திரிந்த பெண் ஒன்று’ பாடலும் பிபிஎஸ்ஸின் ஹிட் லிஸ்டில் அடக்கம். அவர் சுசீலாவுடன் பாடிய ‘காற்றுவந்தால் தலைசாயும் நாணல்’ பாடலும், ‘வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலும் தமிழின் நிரந்தர இனிமையான பாடல்களில் அடக்கம்.
            
                                            


பி.சுசீலா தனியாகப் பாடிய ‘வா என்றது உருவம்’ ஒரு தேன் வழியும் பாடல் என்றால் சீர்காழியின் வெண்கலக்குரலில் வந்த ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ பாடல் நிலைத்து நின்றுவிட்ட சீர்காழியின் பாடல்களில் ஒன்று. இயக்குநராக இருந்து நடிகராக மாறிவிட்ட மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்தார். “டைவர்ஸுக்கு விண்ணப்பித்திருக்கும் தம்பதியர் எல்லாரையும் வரவழைத்து அவர்களை ஒரு அறையில் உட்காரவைத்து ஒரேயொருமுறை ‘வளர்ந்தகலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலைக் கேட்கும்படிச் செய்தால் போதும். நிச்சயம் பாதிப்பேர் டைவர்ஸ் நோட்டீஸைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தம்பதி சமேதராய் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள் என்று குடும்ப கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கும் ஒருவர் சொன்னார்” என்று.

ஒரு பாடலின் தாக்கம் என்பது இதுதான். சமூகத்தில் இறங்கி அந்தப் பாடல் ஒரு மாறுதலைச் செய்வதாக இருக்கவேண்டுமே தவிர ‘பேங்கோஸ் முடிந்து கிட்டாரின் தீற்றலுக்குப் பின் ஒலிக்கும் ட்ரம்ஸைத் தொடர்ந்து’ என்று எழுதப்படும் தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் எல்லாம் ஒரு பாடலைச் சிறந்த பாடலாக தனிப்பட்ட அவர்கள் அளவுக்குக் கருதிக்கொள்ளலாமே தவிர சமூகத்தின் முன் நிறுத்திவிடாது.

இந்தப் பெரிய பட்டியல்களுக்கு மத்தியில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி அன்றைக்கு நம்பர் ஒன் லிஸ்டில் இருந்தவர்கள். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ஏவிஎம், ஸ்ரீதர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு இவர்கள்தாம் இசை. ஆனால் இவர்களுக்குப் பெரிய படம் சிறிய படம் என்ற பேதமெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களாக அன்றைக்குக் கருதப்பட்ட பல படங்களில்- குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் பாதகாணிக்கை, மணப்பந்தல், மணியோசை, வீரத்திருமகன், வாழ்க்கை வாழ்வதற்கே போன்ற படங்களில் அற்புதமான, மிக அற்புதமான பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். அதுவும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பத்து சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் போடப்படுமேயானால் (உலகிலேயே மிகவும் சிரமமான பட்டியல் இதுவாகத்தான் இருக்கமுடியும்) அதில் மூன்றாவதற்குள் வந்துவிடக்கூடிய படம் பாதகாணிக்கை. 

இந்தப் படங்களில் எல்லாம் உயிரை உருக்கும் பாடல்கள் உள்ளன.

அதுவும் வீரத்திருமகனில் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை ஆனந்தன் இதில் கதாநாயகன். கதாநாயகி சச்சு.) வரும் ‘பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்’ பாடலும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலும் தமிழ்நாடு முழுக்கச் சுழன்றடித்த பாடல்கள். பிபிஎஸ்ஸின் மகுடத்தில் என்றைக்கும் இருக்கும் பாடல்கள். கடைசியாக சந்தித்தபோது பிபிஎஸ் சொன்னார் “ஐயோ அந்த ரெண்டு பாடல் பத்தியும் ஏன் கேக்கறீங்க? பிரபலம் என்றால் இப்படி அப்படிப் பிரபலம் இல்லை. நான் கலந்துகொள்ளும் தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளில்கூட இந்த இரு பாடல்களையும் தவறாமல் இன்றளவும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்”

அடுத்து சுமைதாங்கி, நிச்சய தாம்பூலம், நெஞ்சில் ஓர் ஆலயம், படித்தால் மட்டும் போதுமா, பலேபாண்டியா, பாசம், பாதகாணிக்கை, பார்த்தால் பசிதீரும், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், ஆனந்த ஜோதி, இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், பெரிய இடத்துப் பெண், மணியோசை, ஆண்டவன் கட்டளை, என் கடமை, கர்ணன், கலைக்கோயில், கறுப்புப் பணம், காதலிக்க நேரமில்லை, கை கொடுத்த தெய்வம், சர்வர் சுந்தரம், தெய்வத்தாய், பச்சை விளக்கு, படகோட்டி, பணக்காரக் குடும்பம், புதிய பறவை, வாழ்க்கை வாழ்வதற்கே, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, சாந்தி, பஞ்சவர்ணக்கிளி, பணம் படைத்தவன், பழனி, பூஜைக்கு வந்த மலர், வாழ்க்கைப் படகு, வெண்ணிற ஆடை, ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் - என்று விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொன்னெழுத்துப் பட்டியல் நீண்டு 1965 டன் ஒரு முடிவுக்கு வருகிறது.

நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இங்கே குறிப்பிட்டிருக்கும் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களின் பாடல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. 

இந்தப் படங்களில் வரும் ஓரிரண்டு பாடல்களைத் தவிர பாக்கி அத்தனைப் பாடல்களும் – ஆமாம் அத்தனைப் பாடல்களும், சதவிகிதக் கணக்குப் போட்டால் தொண்ணுற்று ஒன்பது சதம் வரக்கூடிய அத்தனைப் பாடல்களும்- அதனை இயற்றியவரின் பெயர் சொல்லும், அதனைப் பாடியவரின் பெயர் சொல்லும், அதில் நடித்தவர்களின் பெயர் சொல்லும் தமிழின் நிரந்தர இனிமைப் பட்டியலில் இருக்கப்போகும் என்றென்றும் இனிக்கும் இறவாப் பாடல்களே.

இத்தனை இனிமையாய், இத்தனை சுவைகளில், இவ்வளவு அமுதத் தமிழில், இத்தனை விதவிதமான குரல்களில், இத்தனை விதவிதமான உணர்வுகளில், இத்தனை வித வாத்தியங்களின் இனிமையில் இதுவரை யாரும், ஆமாம் யாரும்- இத்தனைப் பாடல்களைத் தமிழுக்குக் கொடுத்ததில்லை.

இனிமேல் கொடுக்கப்போகிறவர்களும் யாரும் இல்லை.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி, தனியாக விஸ்வநாதன் பிரிந்து இசையமைத்துக்கொண்டிருந்தபோதும் சரி இவர்களின் தாரகமந்திரம் ஒன்றேஒன்றுதான். அதாவது இனிமை, இனிமை, இனிமை!

பாடல்களில், அது எப்பேர்ப்பட்ட பாடல்களாக இருந்தபோதிலும் இனிமையைக் குழைத்துக்கொடுப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். இனிமை அடிப்படை. அதன்பிறகு புதுமை, காலமாற்றம், அதற்கேற்ற மாறுதல்கள், விதவிதமான வாத்தியக்கருவிகள், பல்வேறு நாட்டு இசைகளின் கோர்வைகள் லொட்டு லொசுக்கெல்லாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சமே. முதல் அடிப்படை இனிமை. இனிமை இல்லையெனில் அது எப்பேர்ப்பட்ட புதுமையாக இருந்தபோதிலும் இவர்களின் கவனம் அங்கே செல்லாது. அவர்களின் தாரக மந்திரம் இது ஒன்றுதான் இனிமை, இனிமை, இனிமை!

அந்த ஒரே காரணத்தினால்தான் எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் இவர்களின் பாடல்களுக்கு மட்டும் வயதாவதும் இல்லை, தேய்ந்து போவதும் இல்லை, மறைந்துபோவதும் இல்லை, ஓரத்தில் ஒதுக்கப்படுவதும் இல்லை. யாரும் இந்தப் பாடல்களை மறப்பதும் இல்லை.

ஒரு பாட்டுக்கு இசை முக்கியமா? பாடல் வரிகள் முக்கியமா? என்ற சர்ச்சை எந்தக் காலத்திலும் உண்டு. இதற்கு எம்எஸ்வியே நிறைய நேரங்களில் பதில் சொல்லியிருக்கிறார். “மெட்டுக்குப் பாட்டும் உண்டு; பாட்டுக்கு மெட்டும் உண்டு” என்பது அவரது நிரந்தர பதில். இந்த பதிலில் உள்ள புரிதல் என்னவென்றால் மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பதுதான்.

இதையும் தாண்டி தோண்டித் துருவும் வித்தகர்கள் காலந்தோறும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘பாட்டுக்கு இசை மட்டும்தான் முக்கியம். பாட்டுவரிகள் என்பன ஒரு பொருட்டேயில்லை’ என்ற ஒரு வாதமும் சிலர் மூலம் இங்கே பரப்பப்பட்டு வருகிறது. இந்த வாதத்தை ஒரு இசையமைப்பாளரே முன்நின்று பரப்புவதையும் பார்த்துத்தான் வருகிறோம். அவருக்கு மார்க்கெட் இருக்கும்வரை அந்த வாதத்திற்கும் ஒரு மவுசு இருந்தது. அவருக்கு மார்க்கெட் போனபின்பு அந்த வாதத்திற்கான நிழல் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரேயொரு வார்த்தை. பாட்டு வரிகளை, எழுத்தின் சக்தியை உணராதவர்கள் எத்தனை பெரிய வித்தகர்களாக இருந்தபோதும் பிரயோசனமில்லை. கம்பராமாயணம் காலத்தில் எத்தனையோ இசை வடிவங்கள் இருந்திருக்கலாம். அந்த இசையெல்லாம் இப்போது எங்கே?

ஆனால் கம்பராமாயணம் மட்டும் இன்னமும் இருக்கிறது.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி 1965-ம் ஆண்டுடன் பிரிகிறார்கள். அவர்கள் பிரிவுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் பிரிவுக்கடுத்து விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் விஸ்வநாதன் மட்டும் நிலைத்து நின்று தனியாகவே அறுநூறு படங்களுக்கும் மேல் இசையமைத்ததையும், ராமமூர்த்தி இருபது படங்களுடன் நின்றுவிட்டதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இருவரும் சேர்ந்து இசையமைத்தபோது இருந்த அந்த ‘ரசவாத வித்தை’ விஸ்வநாதனிடம் தொடர்ந்து பல படங்களில் பயணித்ததையும், ராம மூர்த்தியிடம் பிரதானமாக ஒரு படத்தில்கூட முழுமையாகப் பயணிக்கவில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான படங்களை, பாடல்களைத் தன்னந்தனியராக விஸ்வநாதன் இசையமைத்து சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது படங்களைத் தவிர மற்ற படங்களில் அவரும் குறிப்பிட்ட ஒரு பாடல், அல்லது இரண்டு பாடல்கள்தாம் ஹிட் என்ற அளவுக்குத் தம்மைச் சுருக்கிக்கொண்டார். இது மற்ற இசையமைப்பாளர்களைப் போன்றே அவரும் தம்மை வடிவமைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இருவரும் இணைந்து இருக்கும்போது இந்த நிலைமை இல்லை.

ஒரு படம் என்றால் அதில் வரும் அத்தனைப் பாடல்களும் பிரசித்தம்.

அத்தனைப் பாடல்களையும் ரசிகர்கள் கூடிக்களித்துக் கொண்டாடி காலம்பூராவும் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தனர் இருவரும்.

இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனை முறியடிக்கக்கூடியது அல்ல என்பது மட்டுமல்ல, யாராலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று.

தமிழ் இசையின் பொற்காலம் அது என்றுதான் சொல்லவேண்டும். 

‘குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், கொடிமலர், ராமு, நாடோடி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்களின் ஒரு சில பாடல்களில் அல்லது பல பாடல்களில் விஸ்வநாதனுடையது மட்டுமல்ல, ராமமூர்த்தியின் ‘டச்’சும் இருக்கிறது என்று சொல்லும் இசை ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்ததால் நிறையப் படங்கள் ஏற்கெனவே புக் ஆகியிருக்கும். ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள், மூன்று பாடல்கள், இரு பாடல்கள், ஒரு பாடல் என்று ஏற்கெனவே இருவராலும் இசையமைக்கப்பட்டு முடிந்திருக்கும். திடீரென்று பிரிந்தவுடன் இசையமைக்க ஒப்புக்கொண்ட எல்லாப் படங்களையும் முடித்துக்கொடுக்கும் பொறுப்பு எம்எஸ்வியிடம் வந்துவிட்டதால் ஏற்கெனவே இருவருமாகச் சேர்ந்து இசையமைத்த சில பாடல்களையும் சேர்த்தே தரவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்திருக்கும்.

இரட்டையரின் அந்த ‘மேஜிக் டச்’ விஸ்வநாதனின் பல படங்களிலும் பாடல்களிலும் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இருக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
அதேபோல் ராமமூர்த்தியின் கதையும் இதே தான். அப்படி அவர்கள் இருவரிடமும் இருந்த அந்த ‘மேஜிக் டச்’ எது? என்ன? என்பதற்கான பதில் இதுவரையிலும் நமக்கு கிடைத்தபாடில்லை. அந்த இருவருக்குமே கூட அதற்கான விடைதெரிந்திருக்கவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்.

"இருவரும் இருந்தபோது இருந்த அந்த டச் இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறதே அது ஏன்?" என்ற கேள்விக்கு எம்எஸ்வியும் சரி, ராமமூர்த்தியும் சரி ஒரே விதமான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “அது என்ன என்பது தெரியவில்லை. ஏதோ கடவுள் கொடுத்த வரம் போல் இருக்கிறது. அப்போது என்னமாதிரியான சிரத்தையுடன் உழைத்தோமோ அதே போன்ற சிரத்தையுடனும் அக்கறையுடனும்தான் இப்போதும் உழைக்கிறோம். அந்த டச் ஏன் வரவில்லை என்று சொல்கிறீர்கள் என்பது தெரியவில்லை” என்பதுபோல்தான் சற்றேறக்குறைய இருவருமே கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.

மன்னர்களும் சரி, தனியே விஸ்வநாதனும் சரி ஒரு பாடலுக்கு அடிப்படையான மாறுதல்கள், புதுமைகள் எவ்வளவோ அவ்வளவையும் தங்கள் படைப்புக்களிலேயே செய்துமுடித்துவிட்டார்கள். அதற்குப் பின் வந்தவர்கள் செய்வதெல்லாம் அவர்கள் செய்ததிலிருந்து அங்கே ஒரு மாற்றம், இங்கே ஒரு மாற்றம் இந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை, அந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை என்பது மாதிரியான மாறுதல்கள்தாம். 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ ‘மவுண்ட்ரோட்டில்’ என்ன பெரிய மாறுதல்களைச் செய்துவிட முடியும்?

சுத்தமான கர்நாடக இசையில் மெட்டை மட்டும் உருவி, கமகங்கள் ஆலாபனைகள் வாய்ப்பாடுகளை நீக்கி எளிமைப்படுத்தி அத்தோடு லேசான அளவுக்கு மேல்நாட்டு இசைக் கலவையையும் கலந்து தந்ததுதான் மெல்லிசை மன்னர்களின் பாணி. பிற்பாடு காலத்தின் தேவைக்கேற்ப உலக இசையைத் தமிழில் புகுத்தவும் அவர்கள் தவறியதில்லை. எகிப்து இசையைப் ‘பட்டத்து ராணியின்’ மூலமும், பெர்சியன் இசையை ‘நினைத்தேன் வந்தாய்’ மூலமும், ஜப்பான் இசையை ‘பன்சாயி’ மூலமும், லத்தீன் இசையை ‘யார் அந்த நிலவு’ மூலமும், ரஷ்ய இசையை ‘கண்போன போக்கிலே’ மூலமும், மெக்சிகன் இசையை ‘முத்தமிடும் நேரமெப்போ’ மூலமும் எம்எஸ்வி புகுத்தினார் என்று சொல்வார்கள்.

இவையில்லாமல் பொம்மைகளை வைத்துக்கொண்டு ‘மகராஜா ஒரு மகராணி’, ‘ஜூனியர் ஜூனியர்’ பாடல்களிலும், கிளியை வைத்துக்கொண்டு ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே’ பாடலும் மிமிக்ரி கலைஞர் ஒருவரை வைத்துக்கொண்டு அவள்ஒரு தொடர்கதை படத்திலும் அவர் கட்டமைத்த பாடல்களுக்கு ஈடு இணை கிடையாது. (இப்படியொரு பாடலை மேஜர் சந்திரகாந்த் படத்தில் முயன்றவர் வி.குமார். ‘ஒருநாள் யாரோ’ பாடலை அற்புதமாகப் போட்டிருப்பார் அவர்) விசில் அடிப்பதைப் பின்னணியாக வைத்து மட்டும் ஒரு இருபது பாடல்களையாவது அமைத்திருப்பார் விஸ்வநாதன். விசில் மட்டுமல்லாமல் கூடவே ரயில் புறப்படுவது, வேகமாக ஓடுவது, நிற்பது என்ற சத்தங்களில் ‘பச்சைவிளக்கு’ படத்தில் ‘கேள்விபிறந்தது அன்று’ பாடலை அமைத்திருப்பார் அவர். பின்னாட்களில் கே.பாலச்சந்தர் படங்களில் இம்மாதிரியான ஏகப்பட்ட புதுமைகளை நிகழ்த்தியிருப்பார் எம்எஸ்வி.

இன்றைய படங்களின் பாடல்களுக்கு வழியமைத்தவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னோடிகளும் இவர்கள்தாம். முதன்முதலாக இந்தியாவிலேயே மேடை நிகழ்ச்சியாக திரைஇசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர்களும் இவர்கள்தாம். இதற்குப் பின்னால்தான் பம்பாயில்கூட இசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார்கள்.

இவர்கள் இணைந்திருந்தபோதும் சரி, விஸ்வநாதன் தனியே இயங்கியபோதும் சரி இனிமைக்கு அடுத்தபடி இவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது குரல்களுக்கு. ஆரம்பத்தில் டிஎம்எஸ், சுசீலா, பிபிஸ்ரீனிவாஸ், எல்ஆர்ஈஸ்வரி, சீர்காழி ஆகியோரின் குரல்களை வைத்து விந்தை புரிந்த விஸ்வநாதன் அடுத்து ஏசுதாஸ், எஸ்பிபாலசுப்ரமணியம், வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகியோரை வைத்து விந்தை புரிய ஆரம்பித்தார். ஒரு ஆண்குரல் ஒரு பெண்குரல் என்பதோடு இவரது பரிசோதனை முயற்சிகள் முற்றுப்பெற்றவை அல்ல. மாறாக இரண்டு ஆண்குரல்கள், அல்லது மூன்று நான்கு ஆண் குரல்கள், இரு பெண் குரல்கள் என்று வைத்துக்கொண்டு இவர்கள் புரிந்த ஜாலங்கள் எல்லாம் வேறு எந்த இசையமைப்பாளர்களாலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை. 

டிஎம்எஸ்- சீர்காழி, டிஎம்எஸ்-பிபிஎஸ் என்று ஆண்களை வைத்துக்கொண்டு பத்துப் பாடல்களுக்கு மேல் இவர்கள் போட்டிருக்கிறார்கள். எல்லாமே ஹிட்டடித்தவை என்பதுதான் இங்கே முக்கியம். படித்தால் மட்டும் போதுமா படத்தில் ‘பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை’ என்று காலத்தால் அழிய முடியாத ஒரு பாடல். டிஎம்எஸ்ஸும் பிபிஎஸ்ஸும் பாடியிருப்பார்கள். இதுபோன்ற ஒரு இனிமையான பாடலை இதுவரை எந்த ஒரு இசையமைப்பாளரும் இரு ஆண்குரல்களை வைத்து யோசித்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். 

இரண்டு ஆண்குரல்கள்….. அதுவும் சிவாஜியையும் பாலாஜியையும் நீச்சல் குளத்தில் குளிக்கவைத்துப் பாட்டுப்பாடவைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்களை நீச்சல்குளத்தில் குளிக்கவைத்துப் படமாக்கும் தைரியம் பீம்சிங்கைத்தவிர உலகில் யாருக்குமே வராது- என்று விமரிசனம் எழுதியது குமுதம். 

கர்ணன் படத்தில் ஆயிரம் கரங்கள் நீட்டி’ பாடலை டிஎம்எஸ், சீர்காழி, திருச்சிலோகநாதன், பிபிஎஸ் ஆகிய நான்குபேரை வைத்துப் பாடவைத்திருந்தார்கள்.
(விஸ்வநாதனுக்குப் பின் வந்த சில இசையமைப்பாளர்கள் இரண்டு ஆண்குரல்களை வைத்து சில பாடல்களை முயன்றிருப்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். ராகமே இல்லாமல் வசனம் ஒப்பிப்பதுபோல் ரொம்பவும் பரிதாபமாக இருக்கும் அவை.)

                                         

இதுஒரு புறமிருக்க பி.சுசீலாவையும், எல்ஆர்ஈஸ்வரியையும் இணைத்து இரு பெண் குரல்களைப் பாடவைத்து இவர்கள் செய்திருக்கும் இசை ஜாலத்திற்கு இணையே கிடையாது. இருவருக்கும் ஒரு போட்டியே ஏற்படுத்தும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இருக்கும். இந்தவகைப் பாடல்களின் எண்ணிக்கையும் பதினைந்து இருபதைத் தாண்டும் என்று நினைக்கிறேன்.

மன்னர்கள்  வாத்தியக்கருவிகளைக் காட்டிலும் குரல்களைத்தாம் முக்கியமென்று நினைத்தனர். அதனால்தான் பாடும் குரல்களோடு இயைந்துவரக்கூடிய ராகத்திற்குத் துணையாக ஹம்மிங் என்ற குரல்களையே பல பாடல்களில் பயன்படுத்தினர். எம்எஸ்வியே நிறைய ஹம்மிங் தந்திருக்கிறார். அவருக்கடுத்து சீர்காழி, சுசீலா, ஜானகி எல்லாருமே ஹம்மிங் தந்திருக்கின்றனர். இதற்காகவே இவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திய இன்னொரு ஹம்மிங்கிற்கு சொந்தக்காரர் எல்.ஆர்.ஈஸ்வரி. இவருடைய பல பாடல்களுக்கான ஹம்மிங் விசேஷமானது. இவர்கள் அளவுக்கு அல்லது எம்எஸ்வி அளவுக்கு இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பது தெரிந்த எந்த இசையமைப்பாளர்களும் இந்த ஏரியாவுக்குள் எல்லாம் நுழையவே இல்லை என்பதையும் நுழையவே பயந்து தவிர்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எம்எஸ்வி முக்கியத்துவம் கொடுத்த இன்னொன்று விசில். விசிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாதமான பல பாடல்களைப் போட்டிருக்கிறார் அவர். நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், கேள்விபிறந்தது அன்று.......... என்று பல பாடல்கள். வாசிப்புக் குழுவினில் இருந்து எம்எஸ் ராஜூ என்ற ஒருவர் மிகப் பிரமாதமாக விசிலடிப்பார் என்பதை அறிந்து அவரை உபயோகித்துப் பல படங்களில் விசில் பாடல்கள் போட்டார் என்று சொல்வார்கள். 

நல்ல வேளையாய் இதிலும் கைவைக்கும் 'தைரியம்' எந்த இசையமைப்பாளருக்கும் இருந்ததில்லை.

எம்எஸ்வி பாடுவதைப் பற்றியும் நடிப்பதைப் பற்றியும் டிவி நிகழ்ச்சிகளில் எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். அவர்கள் சொல்லாத ஒரு தகவல்……. அந்தக் காலத்திலிருந்து எம்ஜிஆர், சிவாஜி. ஸ்ரீதர் மற்றும் சில படங்களில் பியானோ வாசிக்கும் குளோஸப் விரல்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான். பாசமலர் படத்தின் ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’ பாடலில் சிவாஜிக்கான விரல்களாகவும், வெண்ணிற ஆடை படத்தின் ‘என்ன என்ன வார்த்தைகளோ’ பாடலில் ஸ்ரீகாந்தின் விரல்களாகவும் காட்டப்படும் மந்திர விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான்.

எம்எஸ்வி மறைந்த சோகம் ஒருபுறமிருக்க, அச்சு ஊடகங்களும் சரி, மின் ஊடகங்களும் சரி அவருடைய மறைவுக்கு அளித்த முக்கியத்துவமும், அவரைப் பற்றி மக்களுக்கு என்னென்ன சேரவேண்டுமோ, எப்படி எப்படிச் சேரவேண்டுமோ அத்தனையையும் சரிவர வகைப்படுத்தி, முறைப்படுத்தி, தோண்டித் துருவியெடுத்து மக்கள் முன் வைத்த விதமும் சரி, அந்தப் பெருங்கலைஞர் நினைவுகூறப்பட்ட விதமும் சரி பாராட்டுக்குரியவை.

கடைக்கோடித் தமிழனுக்கும் அவர் யார் அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் ஐயம் திரிபற சொல்லப்பட்டுவிட்டன. 

இனிமேல் இணைய பிஸ்கோத்துகளின் தகிடுதத்தங்கள் எல்லாம் எங்கேயும் எடுபடப்போவதில்லை. இவர்கள் பாட்டுக்கு இணையச்சுவர்களைப் பிறாண்டிக் கொண்டிருக்கவேண்டியதுதான்.

எல்ஆர்ஈஸ்வரி மனதில் பட்டதை அங்கேயே அப்படியே கொட்டிவிடும் சுபாவம், நாசுக்கெல்லாம் தெரியாது. எம்எஸ்வியின் இறுதி ஊர்வல நேரலையின்போது புதிய தலைமுறை டிவியில் எம்எஸ்வி போட்ட ஒரு வித்தியாசமான பாடலைச் சொல்லும்போது ‘இளையராஜாவும் அப்படிப் பின்னால் போட்டார்’ என்று மற்றவர் சொல்லப்போக “எம்எஸ்வியைப் பற்றிப்பேசும்போது எம்எஸ்வியைப் பற்றிப் பேசுங்கள். இங்கே எதற்காக இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று சீறினார் பாருங்கள் ஒரு சீறல்………. முறையான கோபத்தின் வெளிப்பாடு அது.

ஜெயா டிவியில் சுதாங்கன் நடத்திய ‘என்றும் நம்முடன் எம்எஸ்வி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோபாலா ஒரு கேள்வி எழுப்பினார். 


“எல்லாம் சரி; எம்எஸ்வி வாசித்த ஆர்மோனியம் இப்போது எங்கிருக்கிறது? அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்? அதனை எங்கே வைக்கப்போகிறார்கள்? அதனை உபயோகிக்கும் அருகதையோ தகுதியோ இங்கே யாருக்குமே இல்லையே, அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்?” என்றார்.


மில்லியன் டாலர் கேள்வி இது.