Saturday, July 22, 2017

சிவாஜியும் கண்ணதாசனும் தமிழ்ச் சமூகமும்......

நாகேஷ் மிகச்சிறந்த நடிகர். தேர்ந்த திறமை மிக்கவர். நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு குணச்சித்திர நடிப்பிலும், நடனக் காட்சிகளிலும்கூட வெகு நேர்த்தியாகத் தம்மை நிரூபிக்கக் கூடியவர். அவருக்கென்று சில லிமிட்டேஷன்கள் உண்டு. அந்த வரையறைக்குள் அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை மிகச்சிறப்பாகச் செய்து எவரையும் அசத்திவிடக்கூடிய அளவு ஆற்றல் மிக்கவர். ஒரு தருமியாகவும், மாதுவாகவும், சுந்தரமாகவும், வைத்தியாகவும், ஒரு ஜோசப்பாகவும் அவரை உச்சத்தில் வைத்துப் பார்க்கமுடியுமே தவிர -
குணசேகரனாகவோ, பிரஸ்டிஜ் பத்மனாபனாகவோ, சிவனாகவோ, திருமாலாகவோ, கர்ணனாகவோ, பாலும் பழமும், பாசமலர், உயர்ந்த மனிதன், அந்த நாள், பலேபாண்டியா, தெய்வமகன், உத்தம புத்திரன், புதிய பறவை, திரும்பிப் பார், மனோகரா, நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், ஞான ஒளி, தங்கப்பதக்கம், வ.உ.சி, கட்டபொம்மன், என்ற பாத்திரங்களிலோ வைத்துப் பார்க்க முடியாது, கூடாது.
சிவாஜி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிம்பம் என்பது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தாலோ, சில பாத்திரங்களாலோ கட்டமைக்கப்பட்ட ஒன்று அல்ல. தோற்றம், அழகு, திறன், உடலிலுள்ள கம்பீரம், குரலில் உள்ள கம்பீரம், உடல் மொழியிலுள்ள நேர்த்தி, நடையிலுள்ள நுணுக்கம், பேசும் திறனிலுள்ள நுணுக்கம், உதட்டசைவு, கண்ணசைவு இவை எல்லாவற்றையும் தாண்டிய தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்ட பிம்பம்தான் சிவாஜியே தவிர குறிப்பிட்ட சில பாத்திரங்களில் நன்றாக நடித்திருப்பவர் என்ற பெருமை மட்டுமே அவருக்கு உரித்தானது இல்லை...............!
இப்போது எதற்காக இவற்றையெல்லாம் சொல்ல நேர்கிறது எனில் நம்மில் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேலையே எங்காவது நாகேஷ் பற்றிய பதிவுகள் வருகிறதா என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருப்பதுதான். நாகேஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்ற பதிவைப் பார்த்துவிட்டால் சர்வாங்கமும் மகிழ்ச்சிப் பொங்கிப் பூரித்துவிடும் இவர்களுக்கு. உடனடியாக ஒரு 'கருத்து' எழுதுவார்கள். என்னவென்று தெரியுமா?

'நாகேஷ் ஒரு அற்புதமான நடிகர். பிறவி நடிகர். அவரை விட்டால் சிவாஜியையே 'தூக்கிச் சாப்பிட்டுவிட்டு'ப் போய்விடுவார்' என்ற பாணியில் அந்தக் 'கருத்து' இருக்கும். (இம்மாதிரியான கருத்துக்களை எல்லாம் நாகேஷே எப்படிப் புறம் தள்ளுவார் என்பது இந்த மூடர்களுக்குத் தெரியாது. 'சிவாஜியெல்லாம் நாம் அன்னாந்து பார்க்கக்கூடிய இமயம். அவரெல்லாம் மனிதரே கிடையாது. இறைவன் அனுப்பிய வரம்' என்பது நாகேஷின் கூற்று.) நாகேஷுக்கு மட்டுமல்ல, இதே 'கருத்தை' நாகேஷ் என்ற பெயரை மட்டும் எடுத்துவிட்டு வேறு சிலர் பற்றிய 'கமெண்டுகளிலும்' வைப்பார்கள். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்கராவ் என்று யாரைப்பற்றி 'சிறப்பித்து'ச் சொல்ல வேண்டுமென்றாலும் இவர்களுக்கு இந்த ஒரே Pattern தான்.
ஆக, இவர்களுடைய நோக்கமெல்லாம் நாகேஷை, எம்.ஆர்.ராதாவை, எஸ்.வி.சுப்பையாவை, ரங்கராவைப் புகழ்வதோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல. மாறாக -
சிவாஜியை 'சிறுமைப் படுத்துவது'.
இப்படிக் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் சிவாஜி மீது மண்ணை, கல்லை, சேற்றை வாரி இறைத்துவிட்டதாக இவர்களுக்குள் ஒரு சிறிய சந்தோஷம் கிளம்புமே.................. அதுதான் முக்கியம். அது போதும் இவர்களுக்கு.
இம்மாதிரியான விவாதங்கள் வரும்போது சிவாஜியைப் பற்றி, அவரது பல்வேறு சிறப்பான தகுதிகள் பற்றிக் கூறுகிறோம் இல்லையா? கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் இவர்களுக்குக் கையில் கிடைக்கும் இன்னொரு அஸ்திரம் - சிவாஜியின் வசன உச்சரிப்பு............. தமிழ் உச்சரிப்பு.
உடனடியாக 'இவர்களுடைய' தலையில் பதில் வந்து துருத்திக்கொண்டு நின்றுவிடும். "ஏன், எஸ்.எஸ் ராஜேந்திரன் தமிழை அழகாக உச்சரிப்பவர் இல்லையா?"என்று கேட்டுவிட்டு வேலை முடிந்ததென்று கிளம்பிவிடுவார்கள். (பாருங்கள்..... ஒரு மனிதரின் சிறப்புக்களைக் 'குறைக்க' இவர்கள் கையெலெடுக்கும் நபர்கள் எத்தனைப் பேர் என்று. நாகேஷ், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவ், இன்றைக்குக் கமலஹாசன், அப்புறம் கடைசியாக எஸ்.எஸ்.ராஜேந்திரன்)
அட, புத்திக் கொழுத்த சுப்பன்களே உங்களுக்கு அறிவே கிடையாதா? (இதில் மனோரமாவைப் 'பொம்பளை சிவாஜி' என்று ஒரு பாராட்டுக் கூட்டத்தில் சோ சொல்லிவைக்க, அதைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். -அப்படியானால் நடிகையர் திலகம் என்றழைக்கப்பட்ட சாவித்திரி என்ன ஆனார்? என்பதற்கு சோ தான் பதில் சொல்ல வேண்டும்.)
ஆயிற்றா?
விஷயம் இத்தோடு முடியவில்லை. இன்னமும் இருக்கிறது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தமிழ்த் திரை இசைக்குக் கிடைத்த மகத்தான கவிஞர்களில் ஒருவர். அவருக்கான பாராட்டுக் கட்டுரை எங்காவது வருகிறதா? மூக்கு வேர்த்துவிடும் சிலருக்கு. உடனே தயாராகிவிடுவார்கள். எதற்கு...................?
கொஞ்சம் பொறுங்கள்.
மெட்டுக்கு ஏற்பப் பாடல் புனைவதிலும், வெகுஜன ரசனைக்கேற்ப விருந்து வைப்பதிலும் தம்மைப் பட்டைத் தீட்டிக்கொண்டு ஜொலித்தவர் வாலி. வாலி பற்றிய சிறப்புக் கட்டுரைகள் எங்காவது வருகின்றனவா? அது போதும் இவர்களுக்கு. ஆனந்தமாய்க் கிளம்பிவிடுவார்கள். எதற்கு?.............
கொஞ்சம் பொறுங்கள்.
மாயவநாதன் தண்ணிலவு தேனிறைக்க போன்ற அழகிய தமிழ் வரிகள் மூலம் பாடல்களைச் செழுமைப் படுத்தியவரா?
புதுக்கவிதைப் பாணியைத் திரை இசையில் விதைக்க வந்தவரா வைரமுத்து? அது போதும். மூக்கு வேர்த்த பட்டாளங்கள் கிளம்பிவிடும். '
பட்டுக்கோட்டை பிரமாதமான பாட்டுக்கோட்டை. மாயவநாதன் சொல்லாற்றல் முகிந்த கவிஞன்' என்ற பாணியில் `கருத்துரைப்பார்கள் என்றா கருதுகிறீர்கள்?
அவர்களின் நோக்கம் பட்டுக்கோட்டையாரையோ, வாலியையோ, மாயவநாதனையோ, வைரமுத்துவையோ, புகழ்வதோ தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல.
பின் என்ன? 'அவர்களுடைய கருத்துக்கள்' எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான் ....................
'ஒரே பாடலில் கண்ணதாசனையே மிஞ்சிவிட்டார் பட்டுக்கோட்டையார்'
'வாலி ஒன்றும் குறைந்தவர் அல்ல; கண்ணதாசனுக்கு சமமானவர்தான் வாலி. என்னவொன்று, கண்ணதாசன் முன்னரே வந்துவிட்டார். வாலி சற்று பின்னால் வந்தார் அவ்வளவுதான்.'
'மாயவநாதனுக்குப் போதுமான வாய்ப்புகள் மட்டும் கிடைத்திருந்தால் கண்ணதாசன் ஒன்றுமே இல்லாமல் போயிருப்பார்.'
'முதல் மரியாதை படப்பாடல்களை கண்ணதாசனுக்கு சமமாக எழுதி இருக்கிறார் வைரமுத்து.'
இப்படித்தான். இதுதான் அவர்கள் போடக்கூடிய 'கருத்துக்கள்'. இங்கேயும் பாருங்கள், கண்ணதாசன் என்ற ஒரு மனிதருக்காக இவர்கள் நான்கைந்து பேர்களைத் தோளில் தூக்கிச் சுமந்து வந்து இறக்க வேண்டியிருக்கிறது.
இப்படிக் 'கருத்து'க் கூறும் இந்தக் கூட்டத்தை நாம் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தோமானால் இவர்கள் அத்தனைப் பேரும் - ஆமாம் அத்தனைப் பேரும் - ஒரே புள்ளியிலிருந்து கிளம்பி வந்திருப்பார்கள் என்பதை நம்மால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்.
ஆம்.
எம்ஜிஆர் என்பதுதான் அந்த ஒரு புள்ளி.
இது கொஞ்சம் கசக்கும் செய்தி என்றாலும் உண்மை இதுதான்.
'இப்படியெல்லாம்' எழுதுபவர்களின், பேசுபவர்களின் அடிப்படைக்குச் சென்று பாருங்கள். அவர்கள் நேசிக்கும், சுவாசிக்கும் ஒரே கலைஞர் எம்ஜிஆராகத்தான் இருப்பார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தெய்வமாக எம்ஜிஆரை 'வைத்திருப்பவர்கள்' சிவாஜியையும், கண்ணதாசனையும் விலக்கப்பட்ட பட்டியலில்தான் வைக்க விரும்புவார்கள்.
அதன் வெளிப்பாடுகள்தாம் இவ்வளவும்.(சிவாஜியும் எம்ஜிஆரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டும்,
கண்ணதாசனுக்கு கடைசிக் காலத்தில் அரசவைக் கவிஞர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர் - என்ற பதில்களையெல்லாம் தூக்கிக்கொண்டு யாரும் ஓடிவர வேண்டாம். அவையெல்லாம் வேறு விவாதங்கள்)
மேற்கண்ட எண்ணம் கொண்டவர்களால்தான் தமிழ்ச்சமூகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் கலையின் அடையாளமாக சிவாஜி சொல்லப்படுகிறாரா? அங்கே வந்து நின்று சிவாஜி மீது சேற்றை இறைத்து அவரை சிறுமைப் படுத்து. ஒன்றுமில்லாமல் ஆக்கு. அல்லது அந்த 'உயரத்தைக்' குறை.
தமிழ்த் திரைப்பாடல்களின் அடையாளமாக கண்ணதாசன் சொல்லப்படுகிறாரா? அந்த அடையாளத்தை நொறுக்கு. ஏதாவது செய்து அழி. 'இளிச்சவாய்த் தமிழன்' அத்தனையையும் கேட்டுக்கொண்டு அடையாளங்கள் இல்லாமல் இருக்க சம்மதிப்பான்.
காலகாலமாய் இங்கே நடந்துகொண்டிருப்பது இதுதான்.
பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் ராஜ்குமாரை பொதுவெளியில் விமர்சித்துவிட்டு அவன் உயிருடன் வீடு போய்ச் சேர்ந்துவிட முடியாது. காரணம் கலையின் அடையாளமாக ராஜ்குமார் இங்கே கொண்டாடப் படுகிறார்.
தமிழன் சிவாஜியைச் சொல்கிறானா?
சிவாஜியா விமர்சித்து கிழித்துத் தூக்கி எறி.
காமராஜரை ஒரு அரசியல் அடையாளமாக மாற்றுவதைத் தமிழன் தொலைத்தான். தொடர்ந்து பாரதியை, பாரதிதாசனை, கண்ணதாசனை இங்கே கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு அடையாளங்களை ஏற்படுத்த விடாமல் தமிழனே தடுத்தான்.
கேட்பதற்கு நாதி இல்லை. இதுதான் தமிழ் இனம்.

Thursday, February 23, 2017

ஜெயலலிதாவைச் சந்தித்தபோது……………..




அது 1975ம் ஆண்டு. பல பத்திரிகைகளில் சிறுகதைகளும் சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகளும் எழுதிவந்த சமயம் அது. அப்போதெல்லாம் பிலிமாலயா என்றொரு சினிமாப் பத்திரிகை மிகப் பரபரப்பூட்டும் வகையில் வெளிவந்துகொண்டிருந்தது. கண்ணதாசன் குடும்பத்தைச் சேர்ந்த கண. இலக்குவன் என்ற லட்சுமணன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திக்கொண்டிருந்தார். 

அவருடைய பெயரில் பத்திரிகை வந்துகொண்டிருந்ததே தவிர எம்.ஜி.வல்லபன்தான் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தவர்.

பொதுவாக சினிமாப் பத்திரிகை என்றாலேயே ‘பேசும் படம்’ மற்றும் ‘பொம்மை’ ஆகிய இரு இதழ்கள்தாம் திரைப்படங்களைப் பற்றிய பத்திரிகைகள். இந்தப் பத்திரிகைகளிலெல்லாம் எந்தவித பரபரப்பிற்கும் இடம் இல்லை.ஆனால் இவற்றைத் தாண்டிவந்து முன்நிற்கவேண்டிய கட்டாயம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிலிமாலயாவுக்கு இருந்தது.

பிலிமாலயா வெளியானவுடனேயே ஒரு பெரிய அதிர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்திற்று. அதற்குக் காரணம் அந்தப் பத்திரிகையில் எம்ஜிஆரைப்பற்றிய பரபரப்பான கட்டுரைத் தொடர் ஒன்று வர ஆரம்பித்திருந்தது.

எம்ஜிஆரை வைத்துப் படமெடுக்க ஆரம்பித்து நஷ்டமடைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு ‘ஒரு மாடிவீட்டு ஏழையின் கண்ணீர்க்கதை’ என்ற தொடரை ஆரம்பித்திருந்தார். அந்தத் தொடரில் எம்ஜிஆரால் தான் எப்படியெல்லாம் ஏமாந்தோம் என்ற விஷயத்தை தைரியமாக வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார். அந்தக் காலத்தில் எம்ஜிஆரைப் பற்றிய எதிர்மறையான விஷயங்கள் எந்தப் பத்திரிகையிலும் வராது. எந்தப் பத்திரிகைக்கும் எம்ஜிஆரைப் பற்றிய நெகடிவ் விஷயங்களைப் போடும் தைரியம் இருந்ததில்லை. இதனை முதன் முதலாக உடைத்தது பிலிமாலயாதான். 

இதனால் விற்பனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அந்தப் பத்திரிகையில் வித்தியாசமான கட்டுரைகளும் வர ஆரம்பித்திருந்தன.

அப்போதுதான் கன்னடப்படமான ‘சம்ஸ்காரா’விற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. 

மலையாளத்தில் ‘செம்மீனு’க்கு அடுத்து ஒரு தென்னிந்திய மொழிப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது ஒரு அபூர்வமான விஷயம்.

அதனால் கன்னடப்பட உலகமே தன்னைப் புரட்டிப்போட்டுக்கொண்ட சூழலில் இருந்தது. 

சம்ஸ்காராவைத் தொடர்ந்து வம்சவிருக்ஷா, காடு, பனியம்மா போன்ற படங்கள் வித்தியாசமான கோணங்களிலும் வித்தியாசமான கதைக்களன்களிலும் வர ஆரம்பித்திருந்தன. அந்தப் படங்களைப் பற்றிய கட்டுரைகளையும், செய்திகளையும் படத்தில் ஈடுபட்டவர்களின் பேட்டிகளையும் நான் பிலிமாலயாவில் எழுத ஆரம்பித்திருந்தேன். இது மட்டுமின்றி பல பொதுவான கட்டுரைகளையும் பிலிமாலயாவில் எழுதி வந்தேன்.

திரைப்பட ஈடுபாடு வர ஆரம்பித்திருந்ததால் ஒரு படம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை முழுவதுமாக அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகமிருந்தது. அதனால் நிறைய படங்களின் படப்பிடிப்புகளுக்குச் சென்றுவர ஆரம்பித்தேன்.

என்னதான் கன்னடப்படங்களின் படப்பிடிப்புகளுக்குச் சென்றுவந்தாலும் தமிழில் படம் தயாராவதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்தான் ஆர்வம் அதிகமிருந்தது.

பெங்களூரில் வசித்துவந்ததாலும், தவிர ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்ததாலும் இதற்கான வாய்ப்பு இந்த ஊரில் அவ்வளவாக இருக்கவில்லை.

இந்த நாளில் திடீரென்று ஒரு செய்தி கிடைத்தது. அதாவது ‘யாருக்கும் வெட்கமில்லை’ என்ற படத்தை நடிகரும் டைரக்டருமான திரு சோ பெங்களூரிலேயே எடுத்து முடிக்கப்போகிறார் என்ற செய்திதான் அது.

இந்தச் செய்தி கிடைத்ததும் எப்படியாவது முழுப்படத்தையும் உடனிருந்து கவனிப்பது என்ற எண்ணம் தோன்றியது.

இதற்கும் ஒரு வழி கிடைத்தது. அப்போது ஆர்ட் டைரக்டர் ராமசாமி மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார். முக்தா பிலிம்ஸ், பாலச்சந்தர் படங்கள் இவற்றுக்கெல்லாம் திரு ராமசாமிதான் கலை இயக்குநர். சோ படங்களுக்கும் ராமசாமிதான் ஆர்ட் டைரக்டர். திரு ராமசாமியை அவரது மைத்துனர் தமிழரசன் மூலம் ஏற்கெனவே நல்ல பழக்கம். கடிதத் தொடர்புகளும் இருந்தன. இந்தப் படம் பெங்களூரில் எடுக்கப்போகிறார்கள் என்ற விஷயத்தையே திரு ராமசாமி அவர்கள்தான் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

ஆகவே என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து ராமசாமிக்குக் கடிதம் எழுதினேன். ‘அதற்கென்ன தாராளமாக வாருங்கள். நீங்கள் தினசரி வந்து படம் எடுக்கப்படுவதை கவனிக்கலாம்’ என்று பதில் எழுதியிருந்தார்.

அதன்படி முதல்நாளன்று சென்றிருந்தேன். பெங்களூரின் சிவாஜி நகர் பகுதியில் இருந்த சாமுண்டேஸ்வரி ஸ்டுடியோவில்தான் மொத்தப் படப்பிடிப்பும் நடைபெறுவதாக இருந்தது. ஸ்டுடியோ சென்று ராமசாமியைச் சந்தித்தேன். “இருங்க………… டைரக்டரை ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாம். அவர் சம்மதித்தால் நீங்கள் தினசரி வந்து போகலாம்” என்று சொன்ன ராமசாமி என்னை சோவிடம் அழைத்துப்போய் அறிமுகம் செய்துவைத்தார். கூடவே எனது விருப்பத்தையும் சொன்னார்.

என்னை அவர் அறிமுகம் செய்ததும் “இவரைத் தெரியுமே பார்த்திருக்கேனே” என்று சொன்ன சோ என்னுடைய விருப்பத்தைச் சொல்லியதும் என்னை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தார். அவரது முட்டைக் கண்கள் கண்ணாடி வழியே என்னை வெறித்தன. “ம்ம்ம்? நான் டைரக்ட் பண்ணப் போறதைப் பார்த்து டைரக்ஷன் கத்துக்கப்போறீங்களா நீங்க?” என்றார்.

“இல்லை படம் எடுக்கப்படுவதை கவனிக்கப்போகிறேன்” என்றேன்.

“எல்லாம் ஒண்ணுதான்” என்றவர் -

“நீங்க ரொம்ப தப்பான முடிவுக்கு வந்திருக்கீங்க. ரொம்பத் தப்பான ஆளைத் தேர்வு செய்திருக்கீங்க. படம் எப்படி எடுக்கப்படணும்ன்றதை கவனிக்கணும்னா நீங்க ஸ்ரீதர் படப்பிடிப்பையோ, பாலச்சந்தர் படப்பிடிப்பையோ கவனிக்கப்போயிருக்கணும். என்னைப் பார்த்து என்ன செய்யப்போறீங்க? எனக்கு டைரக்ஷனெல்லாம் தெரியாது. ஏதோ ஸ்கிரிப்ட் பண்ணுவேன். டிராமா வருது. எழுதினதை ஜனங்க ரசிச்சதால, வெற்றி பெறச் செய்ததால அதைப் படமாக்கறேன்னு ஏமாந்த புரொடியூசர் முன்வந்திருக்கார். அவருக்காக இந்தப் படமெடுக்கிறேனே தவிர ‘எனக்கு டைரக்ஷன் தெரியும்’ என்பதால் அல்ல. இப்பதான் நானே டைரக்ஷன் கத்துக்கிட்டு வர்றேன்….முகமது பின் துக்ளக் படத்தில்கூட டைரக்ஷன் கற்றுக்கொள்ள முயற்சி என்றுதான் டைட்டிலில் போட்டிருப்பேனே கவனிச்சுருப்பீங்களே….. .ம்ம்ம்?” என்றவர் சிறிதுநேரம் பேசாமல் இருந்தார்.

எங்கே வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்று தவிப்பாக இருந்தது.

“சரி……. தினசரி வந்து கவனிக்கத்தானே போறீங்க? ஓகே. உங்க தலைவிதி அதுன்னா நான் என்ன செய்யமுடியும்? ஒண்ணுமட்டும் கத்துக்கலாம். ஒரு படத்தை எப்படி டைரக்ட் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு வேணும்னா என்னுடைய டைரக்ஷனையும் படமெடுக்கற முறையையும் நீங்க பார்த்துக் கத்துக்கலாம்” என்று அவருக்கேயுரிய பாணியில் முடித்தார்.

இந்த சம்மதம் ஒன்றே போதுமானதாக இருந்தது.

நடிகர் ஸ்ரீகாந்த் (அன்றைக்கு வில்லன் கதாநாயகன் இரண்டு வேடங்களிலும் பிரதானமாக நடித்துக்கொண்டிருந்தவர்) அசோசியேட் இயக்குநர் கௌசிக் என்று தெரிந்த முகங்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தனர். சோவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த எழுத்தாளர் பரந்தாமனும் செட்டில் இருந்ததால் ஒரு அணுக்கச் சூழல் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தது.

படத்தின் கதாநாயகர் சிவகுமார் என்றும் கதாநாயகி ஜெயலலிதா என்றும் சொல்லப்பட்டிருந்தது. இருவரும் அன்றைய தினம் படப்பிடிப்பில் இல்லை. ஜெயலலிதா நாளை முதல் படப்பிடிப்பிற்கு வருவார் என்றும் சிவகுமார் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் சொன்னார்கள். முதல்நாள் டைரக்டர் விஜயன், ஸ்ரீகாந்த் என்று என்னமோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். சவ சவ என்றிருந்ததால் பெரிதான ஈர்ப்பு ஒன்றும் இருக்கவில்லை.
மறுநாளும் அப்படியேதான் போயிற்று.

“ஜெயலலிதா வரவில்லையா?” என்று கேட்டதற்கு “இன்றைக்கு வந்திருக்க வேண்டும். என்னமோ தெரியலை. வரலை. நாளைக்குத்தான் வருவாங்க போலிருக்கு” என்றார்கள்.

அடுத்த நாள் போயிருந்தபோது படப்பிடிப்பில் சிறிது கெடுபிடி அதிகம் இருந்தது. ஜெயலலிதா வந்திருப்பது அப்போதே புரிந்தது. செட்டுக்குள் போக முற்பட்டபோது “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். ஷூட்டிங் போயிட்டிருக்கு. சீன் முடிஞ்சதும் நீங்க உள்ள போகலாம்” என்றார்கள். ஆகவே ஒரு பத்து நிமிடம் காத்திருந்தேன். உள்ளே ஏதோ பாட்டுச் சத்தமும் “ஸ்டார்ட் காமிரா ரெடி ஆக்ஷன்” என்ற குரல்களும் கேட்டவாறு இருந்தன.

சில விஷயங்களையெல்லாம் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும்.

என்னதான் ஜெயலலிதா பற்றி அன்றுமுதலே பெரிதான நல்ல அபிப்பிராயமெல்லாம் இல்லை என்றபோதும் அவரை முதன் முதலாக பார்க்க நேர்ந்த அந்த சந்தர்ப்பம் மறக்க  முடியாதது. 

முதன் முதலில் ஜெயலலிதாவைப் பார்த்த அந்தக் காட்சி இன்னமும் அப்படியே கண் முன்னால் நிற்கிறது.

செட்டுக்குள் நுழைந்த இரண்டாவது நிமிடம் மறுபடியும் விளக்குகள் அணைக்கப்பட்டன. எங்கும் இருட்டு. இப்போது கும்மிருட்டில் மாடிப்பட செட்டின் வாசலுக்கு மட்டும் விளக்கு வெளிச்சம் பாய்ச்சப்பட்டது.

பாடல் ஆரம்பித்தது.

திரைச்சீலையை விலக்கிக்கொண்டு வெளிவந்தார் ஜெயலலிதா.

அவர் கைகளில் ஒரு மெழுகுத் திரி.

இப்போது அவரது முகத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்கிறது.

பாடல் ஓடுகிறது.

‘அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ?’

இருள் சூழ்ந்த மொத்த செட்டில் ஜெயலலிதாவின் உருவத்திற்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சப்பட கையில் மெழுகுத் திரியை ஏந்தியபடி பாடிக்கொண்டே இறங்கி வருகிறார். ஜி.கே.வெங்கடேஷின் இசையில் பாடல் வரிகள் மனதில் ஆழமாக இறங்குகின்றன.

‘பாவங்கள் சில செய்து நான் பாவியானேன் பரிகாரம் எங்கே தேவா?’ என்றொரு வரி வருகிறது. இன்னமும் கவனித்ததில் ‘சிந்தாத கண்ணீர் நான் சிந்துகின்றேன். சித்தார்த்தன் இங்கே யாரேனும் உளரோ?’ என்றெல்லாம் பாடல் வரிகள் போகின்றன.

தனது இன்னொரு கையில் வைத்திருக்கும் மூன்று மெழுகுத்திரிகளையும் மாடிப்படியின் கைப்பிடிச் சுவர்களில் பொருத்தி அதனைக் கையிலிருக்கும் மெழுகுத்திரியால் கொளுத்தியபடி இறங்கி வருகிறார். அதுதான் காட்சி.

இரண்டு மூன்றுதரம் சோவுக்கும், ஒளிப்பதிவாளருக்கும், ஜெயலலிதாவுக்கும் திருப்தி ஏற்படும்வரை இதையே மறுபடி மறுபடி படமாக்குகிறார்கள். அடுத்தடுத்த காட்சிகளும் அந்தப் பாடலின் வரிகளுக்கு ஏற்பவே படமாக்கப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கான படப்பிடிப்பு முடிகிறது.

ஒரு மணி நேரத்திற்கப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸாக தனக்கான நாற்காலியில் வந்து அமர்கிறார் ஜெயலலிதா. பக்கத்திலுள்ள விஜயன், ஸ்ரீகாந்த் போன்றவர்களிடம் சகஜமாக உரையாட ஆரம்பிக்கிறார்.

ஸ்ரீகாந்த் பக்கத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். ஸ்ரீகாந்திடம் எனக்கு நல்ல பழக்கமிருக்கிறது. இருந்தும் ஏனோ அவர் என்னை ஜெயலலிதாவிடம் அறிமுகப் படுத்தவில்லை. அங்கிருந்த மற்றவர்களும் அறிமுகப்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் ஆர்ட் ராமசாமி வந்து அங்கே அமர்ந்து பேச்சில் கலந்துகொள்கிறார்.

யாரிடமும் வலியச் சென்று அறிமுகம் செய்துகொள்ளும் பழக்கம் இல்லையென்பதனால் நான் பாட்டுக்கு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.

தவிர, அன்றைய தினத்தில் ஜெயலலிதா என்பவர் ஒரு படத்தின் கதாநாயகி. அவ்வளவுதான். வேறெந்த லேபிளும் அவருக்கு அப்போது ஒட்டப்பட்டிருக்கவில்லை.

சாதாரணமாக எத்தனையோ படப்பிடிப்புகளுக்குச் சென்றிருந்தாலும் நடிகைகளிடம் வலியச் சென்று பேச்சுக் கொடுத்ததில்லை. மற்றவர்களிடம் வேண்டுமானால் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசலாமே தவிர நடிகைகளிடம் அப்படிச் சென்று பேசுவது உசிதமாக இருக்காது. மரியாதையான முறையில் அவர்கள் பழக மாட்டார்கள். அதற்கான சூழ்நிலையும் அவர்களுக்கு இல்லை  என்பதனால் நடிகைகளிடம் வலியச்சென்று பேசுவதை இன்றுவரை தவிர்த்தே வந்திருக்கிறேன்- அறிமுகம் செய்துவைக்கப்பட்டால் மட்டுமே அவர்களிடம் பேசுவது என்பது வழக்கம்.
அவர்களிடம் அறிமுகம் செய்து வையுங்களேன் என்றும் யாரிடமும் வேண்டுகோள் விடுத்தும் பழக்கமில்லை.

அதனால் ஜெயலலிதாவிடமும் பேசவில்லை.

இந்த நடைமுறை ஒருநாள் இரண்டு நாட்கள் என்றால் சரியாக இருக்கலாம். தொடர்ந்து இதே நடைமுறை என்பது சங்கடமாக இருந்தது.

ஏனெனில் செட்டில் பேசுவதற்கு சில சமயங்களில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு மட்டுமே காட்சிகள் இருக்கும். படப்பிடிப்பில் அவரைத்தவிர மற்ற எல்லாரும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என்பதனால் பேச்சுத் துணைக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள். சோவும் படத்தை டைரக்ட் பண்ணிக்கொண்டே நடிக்கவும் வேண்டி இருப்பதால் முக்கால்வாசி ராவுத்தர் வேடத்தில் இருப்பாரே தவிர அவரும் செட்டின் உள் வட்டத்தில்தான் இருப்பார்.
ஒற்றை நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்திருக்க பக்கத்தில் போய் உட்கார வழியில்லாமல் வேறு எந்தப்பக்கமாகவாவது நின்றுகொண்டோ அமர்ந்துகொண்டோ இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

பல நாட்கள் இப்படியே இருந்தன.

ஏழெட்டு நாட்கள் இப்படியே சென்ற பின்னர் ஒரே ஒரு நாள் அவரிடமிருந்து ஒரு சின்ன அறிமுகப் புன்னகைக் கிடைத்தது. அவ்வளவுதான். உடனடியாகக் கையிலிருந்த ஆங்கில நாவலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். நானும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இன்னொரு நாள் படப்பிடிப்புக்குச் சென்றபோது படப்பிடிப்புத் தளம் வெறிச்சோடிக் கிடந்தது. யாரும் இருக்கவில்லை.

திடீரென்று எங்கிருந்தோ வந்தார் ஆர்ட் ராமசாமி. “என்ன பார்க்கறீங்க? இன்னைக்கு அவுட்டோர் ஷூட்டிங். சிவகுமார் வந்திருக்கார். அவருடன் இந்த சங்கராபரணம் நடிகை மஞ்சுபார்கவி இருக்கு பாருங்க அவங்களோடெய தங்கச்சி சுனந்தி பார்கவின்னு ஒரு பொண்ணு. அதுதான் சிவகுமாருக்கு காதல் ஜோடி. அந்தப் பொண்ணுடன் பாடல் காட்சி…… அல்சூர் ஏரி, லால்பாக் இம்மாதிரி இடங்கள்ள ஷூட்டிங். நமக்கு ஒண்ணும் வேலை இல்லை. உட்காருங்க சாவகாசமாப் பேசிட்டிருக்கலாம்” என்றார்.

“ஜெயலலிதாவுக்கு ஷூட்டிங் இல்லையா?” என்றேன்.

“இல்லை. அவங்களுக்கான வக்கீல் சிவகுமார். ஆனா ஜோடி கிடையாது. ஜெயலலிதா இன்னைக்கு ரெஸ்ட்லதான் இருக்காங்க. அசோகாவுலதான் இருக்காங்க. பார்க்கணுமா என்ன?” என்றார்.

“இல்லை. வேணாம்” என்று அவசரமாக மறுத்தேன். (பின்னர் இதனை பிலிமாலயா வல்லபனிடம் சொன்னபோது “அடாடா அவரையும் கூட்டிட்டுப் போய் பேட்டி எடுத்திருக்கலாமே சார், அவங்க இன்டெலிஜெண்ட் லேடியாச்சே. பிலிமாலயாவில் வித்தியாசமான ஒரு பேட்டியாகச் செய்திருக்கலாமே” என்றார்.)

இப்படிச் சில நாட்கள் ஓடின.

ஒரு ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்புக்குச் சென்றிருந்தபோது பக்கத்திலிருந்த இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடக்கிறது அங்கே செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். அசோகன் எல்லாம் பங்கேற்ற படப்பிடிப்பாக அது இருந்தது.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டும் இல்லையா?

அப்படி இந்தப் படப்பிடிப்பு விசிட்டுக்கும் ஒரு முடிவு வந்தது. “அனேகமாய் நாளையோட இங்கு படப்பிடிப்பு முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். நாளை மாலையே எல்லாரும் சென்னைக்குப் போறோம். உங்களுக்கு எதுவும் பலன் இருந்ததா?” என்று கரிசனத்தோடு வினவினார் ஆர்ட் ராமசாமி.

“நிச்சயம் பலன் இருந்தது. நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது” என்றேன். “நாளைக்கு வாங்க பேசுவோம்” என்று சொல்லி அவர் பணியைப் பார்க்கப்போனார்.

அடுத்த நாள் படப்பிடிப்புத் தளத்திற்குப் போனபோது வெளி கேட்டிலேயே கெடுபிடி இருந்தது. படப்பிடிப்புத் தளத்திற்கு வெளியே ஓடுபாதையில் சில மாறுதல்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஆகவே வெளியிலும் ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிந்தது.

அன்றைய தினம் என்னுடன் புகைப்பட நண்பர் ஆர்.எஸ்.கிருஷ்ண மூர்த்தியும் வந்திருந்தார். உள்ளே சில காட்சிகள் எடுத்து முடித்தார்கள். அவை முடித்தவுடன் “வெளில ரெடியா வெளில போலாமா?” என்று கேட்டார் சோ.

“எல்லாம் தயார்” என்றார்கள்.

“ம்ம்ம்.. இப்ப படப்பிடிப்பு தளத்துல இருக்கற எல்லாரையும் வெளில அனுப்பு. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒருத்தரும் இருக்கக்கூடாது. யூனிட்லகூட எல்லாரும் வேணாம். கிளைமாக்ஸ் எடுக்கப்போறோம். கேமிரா மேன், அசோசியேட், ஆர்ட்டிஸ்ட் தவிர வேடிக்கைப் பார்க்கறவங்க யாரும் வேணாம். எல்லாரையும் கிளியர் பண்ணு” என்றார் சோ.

இம்மாதிரியான நிலைமை படப்பிடிப்புகளில் சகஜம். பொதுவாக நெருக்கமான காதல் காட்சிகள், கதாநாயகிகள் குளிப்பது, மற்றும் படுக்கை அறைக் காட்சிகள் போன்ற காட்சிகளை எல்லாரையும் அனுப்பிவிட்டு நடிகர்கள் (பெரும்பாலும் நடிகைகள்தான்) ஒளிப்பதிவாளர் மற்றும் டைரக்டர்கள் மட்டுமே இருந்து ஷூட் பண்ணுவார்கள் என்பது தெரிந்த விஷயம். எதற்கு வம்பு நாமே வெளியேறி விடுவோமே என்று செட்டை விட்டு வெளியில் வந்து படப்பிடிப்பு இல்லாத இடம் என்பதாகப் பார்த்து ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து நானும் நண்பரும் நின்று கொண்டோம்.
வெளியில் வந்த சோ ஏற்பாடு செய்துவைத்திருந்த இடத்தைப் பார்த்துத் திருப்தி இல்லாதவராக இன்னமும் சற்று மேற்புறம் வந்து நின்று “கேமராவை இங்கே கொண்டு வாப்பா” என்றார்.

அந்த இடம் நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு மிகப்பக்கத்தில் இருந்தது.

உதவியாளர் வந்து எங்களை அப்புறப்படுத்த முயல “அவங்க இருந்துட்டுப் போகட்டும்” என்று சொல்லிவிட்டார் சோ.

எனவே நாங்கள் அங்கேயே நின்று கொண்டோம்.

அந்தக் கோணமும் சரிவராமல் ஒரு பத்தடி முன்னே போய் “இங்கே வை காமிராவை” என்றார் சோ. காமிரா இடம் மாற்றப்பட்டது. எதிரிலேயே ஜெயலலிதாவைப் படுத்துக்கொள்ளச் சொன்னார். 

மல்லாந்து படுத்துக்கொண்டார் ஜெயலலிதா. தரையில்தான்.

ஸ்ரீகாந்த் ஜெயலலிதாவைக் கத்தியால் குத்திக் கொல்வதாகக் காட்சி.

முதல் சில காட்சிகள் எடுத்து முடித்ததும் ஜெயலலிதாவின் வெள்ளைப் புடவையில் மார்பிலெல்லாம் சிகப்புச் சாயம் பூசி அடுத்த காட்சியை எடுத்தார்கள். கத்தியால் குத்துவது, ஜெயலலிதா திமிறுவது, ரத்தம் பெருகுவது, கடைசியில் இறந்து போவது  என்றெல்லாம் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.

எல்லாமே சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு டேக் தான். எந்தக் காட்சிக்கும் அடுத்த டேக்கே இல்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் முடிந்தன.

முடிந்ததும் “காமிராவை உள்ள ஷிப்ட் பண்ணு. ஸ்ரீகாந்துக்கு சில ஷாட்ஸ் எடுக்கணும்” என்றவர் ஜெயலலிதாவைப் பார்த்து “ஓகே. தாங்ஸ். நீ போகலாம்” என்றார்.

படப்பிடிப்புக் குழுவினர் ஒவ்வொருவரும் ஜெயலலிதாவிடம் வணக்கம் கூறி விடை பெற்று செட்டுக்குள்ளே சென்றவண்ணம் இருந்தனர்.

நாங்களும் முறைப்படி செட்டுக்குள்ளே போகவேண்டும். சரி, அதுதான் ஜெயலலிதா புறப்படுகிறாரே அவர் சென்றபின்னர் செல்லலாம் என்று அதே இடத்தில் அப்படியே நின்றிருந்தோம். 

இரண்டொருவர் மட்டும் ஜெயலலிதாவிடம் பேசியபடி நின்றிருந்தனர். புரடக்ஷன் மேனேஜர் எனப்படுபவர் அழைக்கப்பட்டார். அவரிடம் பேசிய ஜெயலலிதா “எல்லா workersஐயும் கூப்பிடுங்க” என்றார்.


அந்த படத்தில் பணிபுரிந்த அத்தனைத் தொழிலாளர்களும் வரவழைக்கப்பட்டனர். வந்தவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக நின்றனர். ஒரு முப்பது முப்பத்தைந்து பேர் இருந்திருக்கலாம்.

இப்போது அவரது உதவியாளர் (மேக்கப் டச்அப் உமனாகப் பணிபுரிந்தவர்) தன்னிடம் இருந்த கைப்பையைத் திறந்து புத்தம் புதிய நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்து ஜெயலலிதாவிடம் நீட்டினார். நாங்கள் பேசாமல் எங்களுடைய இடத்தில் நின்று கவனித்துக்கொண்டிருந்தோம்.

அதனைப் பெற்றுக்கொண்ட ஜெயலலிதா அதிலிருந்து மூன்று மூன்று தாள்கள் உருவி ஒவ்வொருவரிடமும் தந்து மானசிகமாக கைகூப்பி வணங்கினார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் மறுபடி வணக்கம் செலுத்திவிட்டு தங்கள் பணியை கவனிக்க செட்டுக்குள்ளே சென்று கொண்டே இருந்தனர்.

இப்படி அத்தனைப் பேருக்கும் நடந்தது.

ஒவ்வொருவருக்கும் மூன்று ரூபாய் நோட்டுக்கள்.

இந்த முன்னூறு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை.

நானும் நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் வியப்புடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம்.

ஆயிற்று.

எல்லாரிடமும் பணம் தந்து வணங்கிவிட்டு எல்லாரும் உள்ளே செல்வதைப் பார்த்தபடி நின்றிருந்த ஜெயலலிதா தம்மைச் சுற்றி நின்றிருந்த ஒரு சில ஆட்களிடமும் விடை பெற்றுக்கொண்டார்.
இந்தச் சமயத்தில் அவரை ஏற்றிச்செல்ல பளபளவென்ற அம்பாசிடர் காரும் அவரது பக்கத்தில் வந்து நின்றது.

காரில் ஏறிக்கொண்டு போகப்போகிறார் என்று நாங்கள் நினைத்தபடி நின்றிருந்தபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஆமாம்……………… காரில் ஏறிச்செல்லாமல் –

ஒரு சின்னப் புன்னகையுடன் –

எங்களை நோக்கி வந்தார் ஜெயலலிதா.

எங்கள் அருகில் வந்தவர் எங்களைப் பார்த்துக் கையெடுத்து வணக்கம் சொல்லி “வருகிறேன்”  என்றார்.

இதனைச் சற்றும் எதிர்பாராமல் நின்றிருந்தோம் என்பதால் எனக்கு உடம்பு சிலிர்த்தது. 

சுதாரித்துக்கொண்டு நானும் கைகூப்பி வணங்கி “போய் வாங்க” என்றோம்.

நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் வணங்கி “போய் வாங்க” என்றார்.

அவ்வளவுதான்.

சற்று தூரத்தில் நின்றிருந்த காரில் ஏறிக்கொண்டு கிளம்பிப் போனார் அவர்.
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

அதன்பிறகு ஜெயலலிதாவை நேரில் ‘பார்க்க’ முடிந்தது சிவகுமாரின் மகள் பிருந்தா திருமணத்திலும், சூர்யா திருமணத்திலும்தான். ‘பார்க்கத்தான்’ முடிந்ததே தவிர அருகில் சென்று பேசவோ அறிமுகப்படுத்திக்கொள்ளவோ முடியவில்லை. அதற்கான முயற்சிகளையும் செய்யவில்லை.

ஆனால் இப்போது அவருடன் நிறைய லேபிள்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.

பிருந்தா திருமணத்தின்போது ‘புரட்சித்தலைவி, மாண்புமிகு முதல்வர், அதிமுகவின் பொதுச்செயலாளர்’ என்ற லேபிள்களுடன் யாராலும் அணுக முடியாதவர், யாரையும் நெருங்கவிடாதவர்  என்பன போன்ற லேபிள்களும் இருந்தன.

பிருந்தா திருமணத்திற்கு விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிட்டார் அவர். அத்தனைக் கெடுபிடிகளும் இருக்கவில்லை. அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஒரு நான்கு நாற்காலிகள் தள்ளித்தான் அமர்ந்திருந்தேனே தவிர அவரைச் சந்திக்கவோ, பேசவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

அதற்கான விருப்பமும் இருக்கவில்லை.

ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்து தனக்கான இரும்பு வேலிகளைத் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்டதும், அதை இந்த சமூகம் அனுமதித்துக் கொண்டாடியதும், எப்பேர்ப்பட்ட  கொம்பனாக இருந்தாலும் ‘அம்மாவை’ப் பார்க்கமுடியாது என்ற நிலைமை உருவாகப்பட்டதும், மந்திரிகளும் மிகப்பெரிய மனிதர்களும் அவர் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி எழுந்ததும், அவர் பறந்துவரும் ஹெலிகாப்டர் திசை நோக்கிக் கும்பிட்டதும், கீழே காரில் பயணம் செய்யும்போது கார் டயரைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்ட அமைச்சர் பெருமக்களையும் பார்த்தபோது எனக்கு பெங்களூர் சாமுண்டேஸ்வரி ஸ்டுடியோவில் அன்றைக்கு நிகழ்ந்த இந்த கண்ணியம் மிக்க காட்சிகள்தாம் ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வரும்.
இங்கே இன்னொன்றையும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் என்னை மட்டும்தான் கைகூப்பி வணங்கினார் என்று சொல்லவில்லை. அந்த செட்டில் பணிபுரிந்த அத்தனைத் தொழிலாளர்களையும் கையெடுத்துக் கும்பிட்டுத்தான் விடைபெற்றுக்கொண்டார்
தமிழ்ப் பண்பாட்டுப் பாணியில், அதனுடைய தொடர்ச்சியோ நீட்சியோதான் எனக்குக் கிடைத்த அனுபவமும்.

ஆனால் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஒரே செட்டில் இருந்தும் ‘பேசாமல் கண்டுகொள்ளாமல்’ இருந்த ஒருத்தனையும் மதித்து அருகில் வந்து புன்னகையுடன் அவர் விடைபெற்றுச் சென்ற காட்சிதான் என்னிடம் இன்னமும் பதிந்திருக்கிறது. அவரது பண்பு நலன் குறித்து ‘இந்தப் பார்வையில்’ எனக்கு அவர் மீது மரியாதையும் உண்டு. அதற்கான குற்ற உணர்ச்சியும் என்னிடம் உண்டு.

ஆனால் அதற்குப் பின்னான அவரது அரசியல் செயல்பாடுகளையும் அவரது அரசியல் அணுகுமுறைகளையும், அவர் கடைப்பிடித்த அதிகார மமதைகளையும் என்னால் ஏற்கமுடியவில்லை. அவற்றிலிருந்து மாறுபட்ட கண்ணோட்டம்தான் எனக்கு.

ஒன்று மட்டும் புரிகிறது;

இப்போது மக்கள் அறிந்த ஜெயலலிதா என்பவரின் பிம்பம் புரட்சித் தலைவிக்கும் தமிழக முதல்வருக்கும் ஆனது.

நான் அன்றைக்கு சந்தித்த ஜெயலலிதாவின் பிம்பம் ஒரு எளிய பெண்மணிக்கானது.

Sunday, February 5, 2017

சசிகலாவும் எதிர்கால அரசியலும்



சசிகலாவைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு பல நண்பர்களைக் கோபப்படவும் குழப்பமடையவும் வைத்திருக்கிறது. ஒரு விஷயம் தெளிவு படுத்தி விடுகிறேன். தமிழகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற வேண்டும், யார் பதவிக்கு வர வேண்டும் என்று கேட்டால் என்னுடைய பதில் வேறு மாதிரியானது. ஆனால் இன்றைய ‘சிஸ்டத்தில்’ இன்னமும் நான்கரை ஆண்டுக்காலம் இதே கட்சிதான் ஆட்சி செய்யப்போகிறது. இங்கே என்ன மாதிரியான தலைமை வேண்டும், யாருடைய தலைமை வேண்டும் என்பதையும், தற்போதைய அரசியல் சூழல் என்ன என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது என்னுடைய எண்ணம் என்ன என்பதையும்தான் நான் இப்போது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய இந்த நிலைமைக்குக் காரணம் வெறும் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும், ஊடகங்களும் , பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று பரவிய இணையமும், எந்தவித அரசியல் புரிதல்களும் இல்லாமல் அதனைக் கைப்பற்றி அதில் கருத்துக்கள் பதிந்து பரப்பிய ‘அறிவாளிகளும்’ அதற்கேற்ப ‘அரசியல் முடிவுகள்’ எடுத்துச் செயல்பட்ட பொதுமக்களும்தாம் முழுக்க முழுக்கக் காரணம். இவர்கள் மட்டும் கலைஞருக்கு எதிராக இப்படியொரு முடிவை எடுத்திருக்கவில்லையென்றால் தமிழகத்தில் பல பேராபத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பல அரசியல் பெரும்பள்ளங்கள் விழாமல் போயிருக்கும்.

ஆனால் கலைஞருக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு என்பது ஜெயலலிதாவுக்கு ஆதரவு என்பதையும் தாண்டி அவரை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அவருக்கு ‘அடி பணிந்து சேவகம் செய்து கிடப்பது’ என்ற அரிய வகை அடிமைத்தனத்தை ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என்று ஆரம்பித்து ஒரு மாநிலம்  நடைபெற வேண்டுமென்றால் எத்தனை இயக்கம் (move) நடைபெறவேண்டுமோ அத்தனை இயக்கங்களிலும் செலுத்தி கைகட்டி வாய்பொத்தி அழகு பார்த்துக்கொண்டிருந்ததுதான் இத்தனை பேராபத்துகளுக்கும், மாநிலத்தின் அவமானங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

இன்றைய அரசியல் உலகில் 100 சதம் சரியானவர்களை எதிர்பார்ப்பது விவேகம் அல்ல.

இது காமராஜர் காலமும் அல்ல.

ஒருவரை எப்படி சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வருவது என்பதற்கு திருக்குறள் அருமையான வழியைக் காட்டுகிறது. குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகை நாடி மிக்கதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வா என்கிறது குறள்.

அதன்படி பார்த்தால் கலைஞரை தமிழகம் கைவிட்டிருக்க வேண்டிய தேவை கிடையாது.

நாடு, இனம், மொழி, தமிழ், பண்பாடு, கலாச்சாரம் போன்ற எல்லாவற்றிலும் ஈடுபாடும் உணர்வுகளும் கொண்டவர்களுமே தமிழகத்தை வழிநடத்திச் செல்ல தகுதி வாய்ந்தவர்கள். இவற்றில் எதிலுமே எந்தவிதமான ஈர்ப்பும் ஈடுபாடும் அக்கறையும் இல்லாத ஜெயலலிதா போன்ற ஒரு சுயமோகியை இத்தனை ஆண்டுக்காலம் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அவருடைய ஆடம்பரங்களுக்கு மட்டுமே சாமரம் வீசிக்கொண்டிருக்க வேண்டிய தேவையும் தமிழக மக்களுக்குக் கிடையாது.

குறைந்த பட்சம், மனிதர்களை மனிதர்களாகப் பாவிக்கும் இயற்கையான இயல்பான குணம்கூட அவரிடம் இருந்ததில்லை.

அதனால்தான் எதிர்க்கட்சிகளைக்கூட அவர் கால்தூசுக்கும் மதித்ததில்லை.

நான் பக்கத்து மாதிலத்தில் வசிக்கிறவன். இங்கே இந்த மாநிலத்தில் நடைபெறும் அரசியலையும் பார்த்துவருகிறேன். இங்குள்ள முதல்வர் மற்றவர்களை எப்படி நடத்துகின்றார் என்பதைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வரையும் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

யாரையும் பக்கத்தில்கூட நெருங்க விடாமல் ஆண்டாண்டுக் காலமும் ஒரு மாநில முதல்வர் இருக்கமுடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயலலிதா இருந்திருக்கிறார்.

பத்திரிகையாளர்களையே சந்திக்காமல் ஒரு முதல்வரால் ஐந்தாண்டுக் காலம் தள்ள முடிகிறது என்பது ஆச்சரியம் மட்டுமல்ல அவலமாக இருக்கிறது. ஜெயலலிதா செய்திருக்கிறார்.

‘பொதுமக்களைப் பக்கத்திலேயே சேர்க்காமல் அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் மனுக்களைக்கூட வாங்காமல் எப்படி ஒரு மாநில முதல்வர் செயல்படுகிறார்?’ என்று இங்குள்ள நண்பர்கள் கேட்கும் கேள்விக் கணைகளுக்கு என்னிடம் பதில் இல்லை. (இங்குள்ள முதல்வர்கள் எல்லாம் அவர்கள் யாராயிருந்தாலும் சரி; வாரத்திற்கு ஒரு நாளாவது மக்களைச் சந்திக்கிறார்கள்)

‘தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரஸ்ஸைக்கூட சந்திக்கிறதில்லையாமே? அப்புறம் எப்படிச் செயல்படுகிறார்?’ என்று கேட்கிறார்கள்.

பதில் இல்லை.

‘எதிர்க்கட்சித் தலைவர்களை எந்தப் பிரச்சினைக்கும் அழைத்துப் பேசுவதில்லையாமே…… டெல்லிக்குப் போகும்போதுகூட எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரையும் அழைத்துப் போவதில்லையாமே என்ன மாதிரியான அரசாட்சி அது?’ என்று கேட்கிறார்கள்.

யாரும் இதுவரை பதில் சொன்னதில்லை.

பதில் சொல்லாதது மட்டுமல்ல, பல ‘அறிவாளிகள்’ இதுதான் சரி என்பதுபோல பதில் சொல்லவும் பழகிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் அசிங்கத்திலும் அசிங்கம்.

கலைஞர் தவறு செய்யவில்லை என்று சொல்லவரவில்லை.
அவருடைய தவறுகள் என்பது இலங்கை விவகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

இலங்கை விவகாரத்தை எடுத்துக்கொண்டால் இங்கிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவனும் புனிதன் கிடையாது.

உணர்வு கொண்ட மக்கள் மட்டுமே நல்ல எண்ணத்துடனும் சிந்தனையுடனும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தனர்.

மற்றபடி விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த எல்லா அரசியல் தலைவர்களுக்குப் பின்னாலும் ஒரு மூட்டை அழுக்கு இருக்கிறது.

ஆனால் கலைஞர் மட்டுமே குற்றவாளி ஆக்கப்பட்டார்.

எல்லாப் பழியையும் அவர் ஒருவர் மீது மட்டுமே போட்டுவிட்டு அத்தனைப் பெரிய மனிதர்களும் ‘தமிழர்களுக்கு ஆதரவாக’ இருப்பவர்களாக வலம் வந்தார்கள்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் அந்த சமயத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தவர் அவர் என்பதுதான்.

அவரும் அந்தச் சமயத்தில் பல்வேறு அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து போகாமல் ஆட்சியை உதறிவிட்டு வெளியில் வந்திருந்தாரானால் அவர் மீது எந்தவிதமான களங்கமும் இல்லாமல் போயிருக்கும்.

புகழும் கொடிகட்டிப் பறந்திருக்கும்.

இலங்கையிலிருந்து திரும்பி வந்த ‘அமைதிப் படையை’ தமிழனைக் கொன்றுவிட்டு வருகின்ற ராணுவத்தை வரவேற்க நான் போகமாட்டேன்- என்று அறிவித்துப் புறக்கணித்த கலைஞரின் வீரம்-

தமிழ்ச் செல்வன் மறைவுக்கு இரங்கற்பா பாடிய கலைஞரின் உணர்வுகள்-

பிரபாகரனின் அம்மாவை சிகிச்சைக்கு அனுமதிக்காததன் செய்கையில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

(இந்த இடத்தில் பாலசிங்கத்தை சிகிச்சைக்கு அனுமதிக்க மாட்டேன் என்று சொன்ன ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை எல்லாம் எவனும் கேள்விகேட்டது கிடையாது. தவிர எல்டிடிஈ தன்னைக் கொன்றுவிடும் அபாயம் இருக்கிறது என்ற பொய்யைச் சொல்லித்தான் கடைசிவரை இசட் பிரிவு பாதுகாப்பை ஜெயலலிதா தேவையே இல்லாமல் தன்னுடைய படோடப அரசியலுக்குப் பயன்படுத்தி வந்தார் என்பதையும் மறந்துவிடுவதற்கில்லை. )

இதற்கெல்லாம் காரணம், தமிழன் கலைஞரிடம் ‘நல்ல’ விஷயங்களை எதிர்பார்த்தான். மற்றவர்களிடம் ‘நல்ல’ விஷயங்களை எதிர்பார்க்கவில்லை என்பதுதான்.

தமிழ் ஈழம் விஷயத்தில் வெறும் கலைஞரை மட்டுமே குற்றம் சொல்லிப் பிரயோசனமில்லை.

கலைஞரை முற்று முழுதாகப் ‘புறக்கணித்த’ ஈழ வீரர்களுக்கும், தலைவர்களுக்கும் இதில் பங்குண்டு.

எம்ஜிஆர் உதவினார் என்ற ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறக்கூடிய கலைஞரை-

ஐந்து தடவை முதல்வராகப் பதவி வகித்த ஒருவரை-

முற்று முழுதாகப் ‘புறக்கணிப்பது’ ஒரு போராட்டத் தலைவனின் சரியான செயல்திட்டமாக இருக்கமுடியாது.

‘நாங்கள் போராட்டக் களத்தில் நிற்பவர்கள்; தமிழக ஆட்சியாளர்கள் மூலம் வருகின்ற உதவிகளை ஏற்றுக்கொண்டு எங்கள் லட்சியம் நிறைவேறுவதற்கான வழிவகைகளைத்தான் நாங்கள் பார்ப்போம். அதிமுக திமுக என்பதை நீங்கள் தமிழ் நாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்குக் கட்சி பேதங்கள் கிடையாது. எங்களுக்கு இருவரும் ஒன்றுதான். இருவரிடமுமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை நாங்கள் ஒன்றுபோலவே பார்ப்போம்’- என்ற நிலைப்பாட்டினை ஈழத்தலைவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு இங்கிருக்கும் குட்டிக் கட்சிகள்போல அரசியல் நிலைப்பாடுகளை அவர்கள் மேற்கொண்டிருக்கக் கூடாது.

வழக்கமான அரசியல் அணுகுமுறைகளைத் தாண்டி என்றென்றும் நிரந்தரமாக நின்று நிலைக்கப்போகும் நினைவுச் சின்னங்களை எழுப்பும் சிந்தனைகளும் கலைஞருக்கு மட்டுமே உரியவை.

வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலை, அண்ணா நூலகம், பூம்புகார்…….. இப்படிப்பட்ட  நினைவகங்களும் சரி, இந்த நினைவகங்கள் எழுப்ப நினைத்த கலைஞரின் சிந்தனைகளும் சரி எந்தக் கொம்பனாலும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாத அளவுக்குத் தமிழோடும் தமிழக வாழ்வோடும் பின்னிப் பிணைந்துபோய்விட்ட தமிழகத்தின் அழியாச் சொத்துக்கள்.

இந்த எண்ணங்களெல்லாம் கலைஞரை எப்போதுமே எதிர்த்துக்கொண்டிருக்கும் ‘அறிவியலாளர்களுக்குத்’ தெரியுமா என்பதே சந்தேகம்தான்.

கலைஞர் வாழ்க்கையில் அவரது அரசியல் பயணத்தில் ஈழப்பிரச்சினை, காமராஜர், சிவாஜிகணேசன், கவிஞர் கண்ணதாசன் என்று அவர் தவறிழைத்த விவகாரங்கள் சில உண்டு.

ஆனால் அவையெல்லாம் வெறும் ஏழு சதவிகிதங்களுக்குள் அடங்கிவிடும்.

மீதி தொண்ணூற்று மூன்று சதவிகிதம் அவர் மேன்மையானவர், ஒப்பிலாதவர், ஈடு இணை இல்லாதவர், மாபெரும் திறமையாளர் என்ற வரிசைக்குள்தாம் வரும்.

ஆனால் அவருக்குப் போட்டியாளர்களாக மக்கள் தேர்ந்தெடுத்து ஆதரித்தவர்களைப் பார்த்தால் இந்த சதவீதக் கணக்கு அப்படியே மாறுபடும்.

இங்கே தொண்ணூற்று மூன்று – ஏழு.

அந்தப் பக்கம் பார்த்தோமானால் ஏழு – தொண்ணூற்று மூன்று என்றுதான் வரும்.

ஆனாலும் மக்கள் அந்தக் ‘கலைஞர் எதிர்ப்பாளர்களைத்தான்’ ஆதரித்தார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

இன்றைய அரசியல் நிலைமையை எடுத்துக்கொண்டோமானால் இன்றைக்கு இருப்பது அதிமுக ஆட்சி.

என்னைப் பொறுத்தவரை தேர்தலுக்குச் சில நாட்களே இருந்த பொழுதில் வெளிவந்த கலைஞரின் ஒரு கருத்து மொத்தத் தேர்தல் முடிவையும் மாற்றி அமைக்கப் போதுமானதாகவே இருந்தது.

‘தேர்தலில் வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர். எனக்கு இயற்கையாகவே ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலொழிய ஸ்டாலின் தலைமைக்கு வருவது என்பது முடியாது’ என்ற தொனியில் அவரிடமிருந்து வெளிவந்த ஒரு அறிக்கையோ அல்லது பேச்சோ ஏற்படுத்திய தாக்கம்தான் தேர்தல் முடிவுகள்.

கலைஞரிடமிருந்து ‘ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி அமைய மக்களே வாக்களித்திடுங்கள்’ என்ற ஒரேயொரு வார்த்தை மட்டும் வந்திருக்குமானால் தேர்தல் தலைவிதி மட்டுமல்ல, தமிழகத்தின் தலைவிதியே மாறியிருக்கும் என்பது என்னுடைய கருத்து.

அவர் உடல்நலம் குன்றியிருக்கும் இந்தச் சூழலில் இதுபற்றி இதற்குமேல் பேசவும் விரும்பவில்லை.

ஆக, எப்படியோ அதிமுக திரும்பவும் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட்டது.

செப்டம்பர் மாதத்தில் உடல்நலம் குன்றிய ஜெயலலிதாவும் மரணமடைந்து போய்விட்டார்.

அதிமுகவின் அசாதாரண காலங்களில் எல்லாம் தொடர்ந்து முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர் செல்வம் இந்த தடவையும் முதல்வராகப் பணியேற்றுக்கொண்டுவிட்டார்.

ஆக, நெருக்கடியான காலத்தில் சிறிது நாட்களுக்குப் பன்னீர் செல்வம் முதல் அமைச்சர்… நிலைமை கொஞ்சம் சரியானபிறகு அவரிடமிருந்து அந்தப் பணி மாற்றிக்கொள்ளப்படும் என்பதுதான் அதிமுகவின் வழக்கமாக இருந்து வருகிறது.

இது தெரியாமல் சில குயுக்திகள் “அம்மாவாலேயே அம்மா காலத்திலேயே அடையாளம் காணப்பட்டவர் பன்னீர் செல்வம். அதனால் அவர்தான் தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும்” என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்.

முதலில் இவர்களுக்கு ‘அடையாளம் காட்டப்பட்ட’ என்ற பதத்திற்கு அர்த்தம் தெரிகிறதா என்பது தெரியவில்லை.

அஇஅதிமுக தேர்தலில் அபரிமிதமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்ற செய்தி வந்ததும் ‘அப்படியா மக்களே உங்களுக்கு நன்றி. நீங்கள் அமோகமாய் ஆதரித்து எங்களை வெற்றி பெறச் செய்திருப்பதால் சிறந்த ஆட்சியைக் கொடுக்கும் பொருட்டு நான் பன்னீர் செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கிறேன்’- என்று ஜெயலலிதா அறிவித்து பன்னீர் செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்து தான் எப்போதும்போல் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வந்திருந்தாரானால் ‘அடையாளம் காட்டப்பட்ட’ என்பது சரியானதாக இருந்திருக்கும்.

நடந்து முடிந்த தேர்தலில் ‘அதிமுகவைத் தேர்ந்தெடுங்கள்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பன்னீர் செல்வம் தலைமையில் சிறந்த ஆட்சியை மக்களுக்கு வழங்குவோம்’ என்று அறிவித்து தேர்தலைச் சந்தித்து அதன்படி அதிமுக வென்றதும் பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முதல்வராக்கியிருந்தால் ‘அடையாளம் காட்டப்பட்ட’ என்பது சரியாயிருந்திருக்கும்.

அப்படியெல்லாம் இல்லை.

ஒருமுறை டான்சி வழக்கில் கோர்ட் தீர்ப்பால் பதவியிலிருந்து இறங்குகிறார் ஜெயலலிதா. முதல்வர் நாற்காலி காலியாகிறது. தன்மீதுள்ள சட்ட விலங்குகளை அகற்றுவதற்கு அவருக்கு சில வாரங்கள் தேவை. அந்த சமயத்தில் யாரிடம் பதவியை விட்டுவைத்தால் (ஏனெனில் அந்தப் பதவியின் ‘பவர்’ அவருக்குத் தெரியும். உட்கார்ந்த பிறகு இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்து அவருக்கே எதிராய்த் திரும்பிவிட்டால் என்ன செய்வது?) நமக்குப் பாதகமாக இல்லாமல் நாம் விரும்பும்போது ‘இறக்கிவிட்டு’ நாம் அந்த இடத்தில் உட்காரலாம் என்ற கணக்கில் பன்னீர் செல்வத்தை உட்கார வைக்கிறார்.

இரண்டாவது முறை – மேலும் அதிக சிக்கலான நேரம்.

குன்ஹா என்ற ஜட்ஜ் ‘சிறைவாசமும் நூறு கோடி அபராதமும்’ என்ற கடுமைக் காட்டி சிறையில் தள்ளுகிறார். 

மீண்டும் அதே நிலைமை. இந்த முறையும் வாய்ப்பு பன்னீருக்கே தரப்படுகிறது.

இதில் ‘அடையாளம் காட்டுவது’ என்பது எங்கே இருக்கிறது?

‘தான் சொல்வதைக் கேட்கக்  கூடிய ஆள்’ என்று ஒருவரை மற்றவர் கருதுவதுதான் ‘அடையாளம் காட்டுவதா?’

ஒரு மாநிலத்தை ‘ஆள்பவருக்கு’ சரியான ‘இலக்கணம்’ என்பது இதுதானா?

என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை.

இந்த இடத்தில்தான் சசிகலா வருகிறார்.

சசிகலாவைப் பற்றி வெளியுலகம் அறிந்தது மிகவும் சொற்பமே. போயஸ் தோட்டத்திற்குப் போய் வந்தவர்களுக்குத்தான் அவருடைய ‘பவர்’ பற்றித் தெரியுமே தவிர வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு அவர் ஒரு புரியாத புதிர் மட்டுமே.

அதனால்தான் அவரவர்களுக்குத் தெரிந்ததை அவரவரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

உதவியாளர் என்கிறார்கள்; வேலைக்காரி என்கிறார்கள்; ஆயா என்கிறார்கள்…

அவரவர்களுக்கு என்னென்ன தெரியுமோ அப்படித் தெரிந்ததெல்லாம் சொல்லி எவ்வளவு கொச்சைப் படுத்தமுடியுமோ அவ்வளவு கொச்சைப் படுத்தி மகிழ்கிறார்கள்.

பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா அடையாளம் காட்டியதாகச் சொல்பவர்கள், என் ‘உடன்பிறவா சகோதரி’ என்றும் ‘தாயைப் போன்றவர் என்றும்’ சசிகலாவைச் சொல்லிவந்ததை சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர்.

ஜெயலலிதாவை இத்தனை வருடங்களும் தாங்கிப் பிடித்திருந்ததும் தூக்கிப் பிடித்திருந்ததும் சசிகலாதான் என்பதை எப்படி மறக்கிறார்கள் என்பதே புரியவில்லை.

ஜெயலலிதாவின் திறமைகளுக்கு அச்சாரமாக இவர்கள்  சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அவர் ஒரு இரும்புப் பெண்மணி என்பதும், அவர் பிரமாதமாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதும்தான்.

மிக வலுவான இரும்புக் கோட்டைக்குள்ளே ஜெயலலிதாவை யாருமே அணுக முடியாத படி உட்கார்த்தி வைத்திருந்தார்களே தவிர இரும்புப் பெண்மணி என்பதற்கேற்ப செய்திகளில் நிலைத்து நிற்குமாறு எந்த ஒரு அனுபவப் பகிர்வையும் ஜெயலலிதாவைப் பற்றி இதுவரை யாருமே சொன்னதில்லை.

திரைப்படங்களில் பிரமாதமாக நடனம் ஆடுபவர் கமலஹாசன் என்ற பேச்சு எல்லா திசைகளிலும் அடிபட்டது ஒரு காலத்தில். ஆனால் பிரபு தேவாவின் புயலான வருகைக்குப் பின்னர் யாருமே கமலஹாசனின் நடனம் குறித்துப் பேசியதில்லை. அந்த வார்த்தை அதுவாகவே மக்கி மறைந்துவிட்டது.
.
அதுபோலவே, ஜெயலலிதா அழகாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பது உண்மைதான். தொண்ணூறு ஆரம்பங்களில் இந்த வார்த்தைக்கு ஒரு வசீகரம் இருந்ததும் உண்மைதான். போகப்போக நம்முடைய வீட்டுக் குழந்தைகளே கான்வென்ட் சென்றுவந்து ஆங்கிலம் பேச ஆரம்பித்ததும் இந்த வசீகரமும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக ஆரம்பித்தது.

பின்னர், ‘பொதுவாழ்க்கைக்கு வந்த பெண்மணிகளில் அழகாக ஆங்கிலம் பேசுகிறவர்’ என்று சொல்லிப் பார்த்தார்கள். இந்த வார்த்தையிலும் உண்மை இருந்ததுதான்- ஜெயந்தி நடராஜனின் ஆங்கிலப் பேச்சைக் கேட்கும்வரை. உச்சரிப்பிலும் பேச்சின் தொனியிலும் அத்தனை அழகு இருந்தது ஜெயந்தி நடராஜனின் ஆங்கிலத்தில்.

போயஸ் கார்டனில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து ஜெயலலிதாவையும் சரி, ஜெயலலிதா வீட்டையும் சரி  இத்தனைக் காலமும் நிர்வகித்து வந்தவர் சசிகலாதான். மற்றவர்கள் எண்ணுவதுபோல் அவர் வேலைக்காரரோ உதவியாளரோ கிடையாது.

ஒரு சசிகலா மூன்று ஜெயலலிதாக்களுக்கு சமம் என்று சொன்னார் ஒருவர்.


அது உண்மைதானா என்பதை இன்றைய நிஜமான அரசியல் களத்தில் பார்ப்போம்.