Friday, May 7, 2010

தங்கள் மொழியைக் காப்பதில் கலைஞரும் எடியூரப்பாவும்


சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் எல்லையாரமுள்ள சில கன்னடப்பள்ளிகளை மூடிவிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக அறிய வருவதாகவும் இது இரு மாநிலங்களின் நல்லுறவைப் பாதிக்கும் என்றும் கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப் பட்டு நல்லுறவு பேணப்படும் நிலையில் இந்தச் செய்தி வருத்தத்திற்குரியது என்றும் இதுபற்றித் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சரிசெய்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக அமைச்சர்கள் சிலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு எல்லையோரங்களில் போராட்டமே தொடங்கியது. கன்னட நாளிதழ்கள் இதுபற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
உடனடியாக இந்தப் பிரச்சினை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இந்தத் தகவலே தவறு என்றும் எந்தக் கன்னடப்பள்ளிகளும் மூடப்டவில்லையென்றும் விளக்கமளித்துள்ளார். மேலும் "தமிழ் நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, மற்றும் நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கன்னடத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட 53 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 3,946 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 185 கன்னட இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. செயல்வழிக் கற்றல் முறையில் மாணவர்கள் எளிதாகக் கற்க கன்னட மொழியில் கற்பித்தல் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள கன்னட மொழிப் பள்ளிகள் உட்பட எந்த சிறுபான்மை பள்ளிகளையும் மூடுவதற்கு தமிழக அரசு எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை,அத்தகைய கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. இப்பள்ளிகள் திறம்பட செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது"என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் கலைஞர், “பத்திரிகைக்காரர்களைச் சந்திக்கின்றபோது, ஆராய்ந்து அல்லது ஏற்கெனவே இருப்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டு பேசுவது பெரிய கலை. இதிலே எடியூரப்பா எப்படியோ ஏமாந்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகின்றேன். கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலே உள்ள கலாச்சார உறவு, நட்புறவு- இவற்றை ஊனப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அல்லது தெரிந்தோ தெரியாமலோ சில நிருபர்கள் கர்நாடக முதல்வரிடத்திலே ஒரு தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் "அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர்சொன்ன சொல்லானாலும் அதை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்ப்பாய்" என்ற பெரியாரின் மொழிகள்தான்-சர்வக்ஞர் என்கின்ற கன்னடத்திலே உள்ள அந்த மகானினுடைய கொள்கையாகவும் போற்றப்படுகிறது. ….........இதற்கான விளக்கத்தை நம்முடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இங்கே எடுத்துச்சொல்லி தெளிவுபடுத்தியிருக்கிறார். இதற்குப் பிறகும் எடியூரப்பா இதை உணராவிட்டால், நாம் வருத்தம்தான் படவேண்டும். ஆனால் நம்முடைய நிலை தமிழ்மொழியைக் காப்பதிலும், பிற மொழி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதிலும், தமிழ் மொழியைக் காக்கின்ற அந்த உணர்வில், பிற மொழிகளுக்கு எந்த ஊனமும் வராமல் பாதுகாப்பதும்தான் என்ற தெளிவான கொள்கை உடையது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த விளக்கத்தின் மூலமாக நான் கர்நாடக முதல் அமைச்சருக்கு- கர்நாடகத்திலே இருக்கின்ற மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்.” என்று விரிவான விளக்கமொன்றை அளித்திருக்கிறார்.
கலைஞருடைய விளக்கத்தில் ஒரு விஷயம்தான் பிரதானமாயிருக்கிறது. இப்படியொரு விஷயம் கேள்விப்பட்டவுடன் கர்நாடக முதல்வர் அதனைச் சரிபார்த்துக்கொள்ளாமல் தமது எதிர்ப்பினை எதற்காக அவ்வளவு சீக்கிரமாக வெளியிட்டார் என்பதுதான் அது. இங்குதான் தமிழகத் தலைவர்களுக்கும் மற்ற மாநிலத் தலைவர்களுக்குமான வித்தியாசம் புலப்படுகிறது. எடியூரப்பா மட்டுமல்ல எல்லா மாநிலத்தலைவர்களுமே தங்கள் தாய்மொழி பாதிக்கப்படுகிறது எனும்போது இப்படித்தான் உடனடியாகச் செயல்படுகிறார்கள்- தமிழகத்தலைவர்களைத் தவிர.
அதிலும் குறிப்பாகக் கலைஞரைப் பொறுத்தவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆபத்து என்றுவரும்போது இவர்களைவிடவும் வேகமாகச் செயல்பட்டு அதனைத் தடுத்து நிறுத்துவார் என்றும், தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இன்னமும் சொல்லப்போனால் மற்ற எந்த மாநிலத்திலும் அந்தத் தலைவர்கள் மொழியை அடித்தளமாக வைத்து வளர்ந்தவர்களோ மொழி உணர்வை ஊட்டி தொண்டர்களை வளர்த்தவர்களோ அல்ல. ஆனால் திராவிட இயக்கத் தலைவர்கள் அதிலும் குறிப்பாகக் கலைஞர் தமிழால் வளர்ந்தவர், தமிழை வளர்த்தவர், தமிழர்களை உணர்வால் உயர்த்தியவர்.
உலகில் எந்த இடத்தில் தமிழுக்கோ தமிழர்களுக்கோ ஆபத்து என்றாலும் கலைஞர் காப்பாற்றுவார் என்ற பிம்பம்தான் தமிழர்களிடம் இருக்கிறது. ஈழ விவகாரத்துக்குப் பின்னர் இந்த பிம்பம் பெரிதாக அடி
வாங்கியிருந்தபோதிலும் இன்னமும் நிறைய தமிழர்களிடம் கலைஞர் மீதான இந்த நம்பிக்கை தொடரவே செய்கிறது. 'ஈழ விவகாரத்தில் மத்திய அரசை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் தமிழ் என்று வரும்போது அவரை விட்டால் வேறு கதியில்லை' என்ற கருத்துத்தான் பலரிடமும் குடிகொண்டிருக்கிறது. ஆனால் உண்மைகள் கொஞ்சம் கசப்பானவை.
கர்நாடகத்திலே தமிழுக்கும் தமிழர்களுக்கும் இத்தனை ஆண்டுகளாக எத்தனை இடையூறுகள். எவ்வளவு தமிழர்கள் தாக்கதலுக்குள்ளாகியிருக்கிறார்கள்., எத்தனைக் கூட்டங்கள் எத்தனை அமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன, எத்தனைத் திரையரங்குகள் தாக்கப்பட்டிருக்கின்றன, படிப்படியாக இதுவரைக்கும் எத்தனைப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன....யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா? எத்தனைத் தமிழர்த் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்? எந்தத் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள்? அல்லது குறிப்பாகக் கலைஞர் இதுபற்றிக் குரல் கொடுத்திருக்கிறார? நடவடிக்கை ஏதும் எடுத்திருக்கிறாரா? கர்நாடக அரசைக் கண்டித்திருக்கிறாரா? மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறாரா? என்றெல்லாம் பார்த்தால் ஒன்றுமேயில்லை என்பதுதான் பதில்.
அதுவும் கர்நாடகத்தில் தமிழ்ப்பள்ளிகள் எப்போதுமே எந்த அரசு ஆணைகளின் மூலமும் மூடப்பட்டது கிடையாது. மிகவும் சாமர்த்தியமாகவே அந்தச் சாதனைகள் இங்கே நிகழ்த்தப் படுகின்றன. ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்; சேர்க்கைக் கிடையாது; பள்ளிகளில் தமிழ்ப்படித்தால் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லை என்பதான புறச்சூழல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படும். எல்லாப் பக்கங்களிலும் எல்லாவிதமான எதிர்ப்புச் சூழல்களும் திட்டமிட்டு பரப்பப்படும். தமிழ்ப்படித்தால் எதிர்காலமில்லை என்ற அரசாங்கக் கத்தி தலைக்கு மேலே தொங்கவிடப்படும். தமிழ் வகுப்புகளில் யாரும் சேரவில்லை என்ற நிலைமையைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கிவிட்டுச் சட்டென்று வகுப்புக்களை நீக்கி விடுவார்கள். இம்மாதிரி இருநூறு பள்ளிகளுக்கும் மேலே தமிழ் பாடவகுப்புகள் நீக்கப்பட்டு விட்டன. தனியார்ப்பள்ளிகளுக்கு ஒருமாதிரியான நெருக்குதல்; அரசாங்கப் பள்ளிகளுக்கு வேறு மாதிரியான நெருக்குதல்; மாநகராட்சிப்பள்ளிகளுக்கு வேறுமாதிரியான நெருக்குதல் என்று மொத்தமாக ஊற்றி மூடிவிட்டார்கள். ஏழாவது வகுப்புவரை இந்த நிலைமை. இருநூறு பள்ளிகளுக்கும் மேல் தமிழ்ப் பயிற்றுவித்துக்கொண்டிருந்த நிலைமைபோய் இன்று வெறும் இருபது பள்ளிகளில்தாம் தமிழ் வகுப்புகள் உள்ளன. ஏழாவது வகுப்பிற்கும் மேல் கற்பிக்கும் பள்ளிகள் இரண்டோ மூன்றோதான் தேறும். இதுதான் கர்நாடகத்தின், பெங்களூருவின் நிலைமை.
கலைஞருக்கு இந்த விவரங்கள் தெரியுமா-தெரியாதா ? கலைஞர் இதுபற்றி நடவடிக்கை ஏதும் எடுத்திருக்கிறாரா? அல்லது குரலாவது கொடுத்திருக்கிறாரா? அடுத்த மாநிலத்தில் தன்னுடைய மொழிக்கு ஏதோ ஆபத்து என்பதுபோல் செய்தி வந்தவுடன் எடியூரப்பா துடித்த துடிப்புக்கும் தமிழுக்கு எத்தகைய ஆபத்து வந்தபோதும் ஒன்றுமே நடக்காத மாதிரி இருக்கும் கலைஞரின் அமைதிக்கும் இருக்கும் வேறுபாடு இதுதான்.
வள்ளுவர் சிலையைத் திறந்து வைத்துவிட்டது ஒன்றுமட்டுமே எல்லாத் தமிழ்ப்பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டதாகாது என்பது கலைஞரே ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.