Saturday, February 21, 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்




இலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி அவர்களால் அடிக்கடி சொல்லப்பட்ட ‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்’ அவர்கள் விருப்பப்படியே பிரமாண்டமாக நடைபெற்று முடிவுக்கும் வந்துவிட்டது.

இந்த நிகழ்ச்சியின் இத்தனை வரவேற்புக்கும் காரணம் இந்த நிகழ்ச்சியின் மூலம்  திரையிசையில் விரும்பிய பாடல்களை, அல்லது முக்கியமான பாடல்களை மீண்டும் கேட்கிறோம் என்பதையும் தாண்டி- எது சிறந்த பாடல், யார் சிறந்த பாடகர் என்பதை நிர்ணயம் செய்வதில் தாங்களும் ஒரு ஜட்ஜாக இருக்கிறோம் என்னும் மனோபாவமே என்பதுதான் முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.

அதனால்தான் ஓட்டுப்போடுவதற்குத் தாங்கள் பணம் இழக்கிறோம் என்பது தெரிந்தும் கோடிக்கணக்கான மக்கள் அதுகுறித்துக் கவலைப்படாமல் ஓட்டுக்களையும் போட்டு தங்கள் ஆர்வத்தையும் ஆதரவையும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்து வருகிறார்கள்.

“இந்த நிகழ்ச்சியில் ஓட்டுப்போடுவதற்குப் பணம்  தந்தாகவேண்டுமே இது சரிதானா?” என்று கேட்டதற்கு இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான நண்பர் ஒருவர் “அதிலென்ன தப்பு இருக்கிறது? 
படங்களைப் பார்க்கத் தியேட்டர்களுக்குப் போகும்போது காசு கொடுத்து டிக்கெட் வாங்குவதில்லையா? அதுபோல்தான் இது. அதுவும் ஒரு ஓட்டுக்கு வெறும் ஆறு ரூபாய்தானே? அதுவுமின்றி சின்னக்குழந்தைகளுக்காகத்தானே செலவு செய்கிறோம்? அந்தக் குழந்தைகளின் திறமைக்கு முன்னால் இதெல்லாம் வெறும் தூசு” என்றார்.

ஆக சரியாகத்தான் நூல் பிடித்திருக்கிறார்கள் விஜய் டிவிக்காரர்கள்……………!


ஸ்பூர்த்திக்கு முதல் பரிசைக் கொடுத்ததன் மூலம் முடிவுகளுக்குப் பின்னால் எழும்பப் போகும் சர்ச்சைகளை விஜய்டிவி வெகுவாகத் தவிர்த்திருக்கிறது என்று சொல்லலாம்.

யாராலும் குறை சொல்லமுடியாத ஒரு முடிவு இது.

அந்தச் சின்ன உடம்பிற்குள் அத்தனைத் திறமை. எவ்வளவு சிரமமான பாடல்களையும், ஓரளவு பயிற்சிபெற்ற பாடகர்களால் சுலபமாகப் பாடமுடியாத பாடல்களையும் நிகழ்ச்சி முழுவதும் சர்வசாதாரணமாகப் பாடி அசத்திக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.

அதுவும் ஏற்ற இறக்கங்கள், கமகங்கள், பிர்காக்கள் என்று கர்நாடக சங்கீதத்தில் வரக்கூடிய சங்கதிகளையும், ஸ்வரங்களையும் கலந்தடித்து அந்தக் குழந்தை பண்ணிக்கொண்டிருந்தது அதகளம், அட்டகாசம்.

நடுவர்களாக வந்த பிரபல பாடகர்களும் சரி, இசையமைப்பாளர்களும் சரி அந்தச் சிறுமியின் திறமையை வெளிப்படையாகவே புகழ்ந்தார்கள், பாராட்டினார்கள், வியந்தார்கள்.

இதென்ன குழந்தை மேதையா என்று அதிசயித்தார்கள்.

அவள் பாடிமுடித்ததும் நம்ப முடியாத பலபேர் அந்தக் குழந்தையிடம் “உனக்கு என்ன வயசாகுதம்மா?” என்று கேட்டுக்கொண்டார்கள். இத்தனைப் பாராட்டுக்களையும் நிகழ்ச்சிகளின் தொடரிலேயே வாங்கிக்குவித்த அந்தப் பெண்ணுக்கு முதல் பரிசு என்றதும் ‘சரியான தீர்ப்புத்தான்’ என்று நிம்மதியுடன் தூங்கச் சென்றவர்கள் ஏராளம்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். அந்தச் சிறுமி பெங்களூரைச் சேர்ந்தவள். 
தாய்மொழி கன்னடம். தமிழில் சரியாகப் பேசக்கூடத் தெரியாது. ஆனாலும் அட்சர சுத்தம் என்பார்களே அதுபோல் அத்தனைத் துல்லியமாய்த் தமிழை உச்சரித்தாள். அதுவும் கேவிமகாதேவனால் இசையமைப்பக்கப்பட்ட பல கவியரசரின் அழகிய தமிழ்ப் பாடல்கள் அவளுடைய கொஞ்சும் குரலில் அத்தனை வசீகரமாய் வெளிப்பட்டன.

மீதிப் பரிசுகளையும் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை.

ஆறு பேருக்குமே முதல் பரிசுகளைக் கொடுத்திருக்க வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

எப்படிப் பார்த்தாலும் மூன்று பேரை ஒதுக்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயம். நீக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம். வேறுவழியில்லாமல்தான் அதைச் செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரே ஆறுதல் அந்த மூன்று பேருக்கும்கூட ஆளுக்கு ஐந்துலட்சம் என்று பரிசுப்பொருள் தந்திருக்கிறார்கள்.

என்னவொன்று, சம்பிரதாயத்துக்காகவாவது இறுதி நிகழ்ச்சிவரை வந்த பரத் என்ற அந்தச் சிறுவனுக்கு ஏதாவது விசேஷப் பரிசு அறிவித்திருக்கலாம். ஏனென்றால் அந்தப் பையனை இரண்டு காம்பியர் பெண்களும் ஆரம்பத்திலிருந்தே என்னென்னவோ சொல்லி உசுப்பேற்றிக்கொண்டே இருந்தனர். ‘நீ தாண்டா இறுதிப் பரிசை வெல்லப்போறே’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லா வார்த்தைகளையும் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர். 

அந்தப் பையனும் அபாரத் திறமையுடன் எல்லாப் பாடல்களையும் பாடிக்கொண்டிருந்தான். இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் மற்றவர்களைவிட அந்தப் பையனின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய்த் தெரிந்தது.

இத்தனைப் பெரிய நிகழ்ச்சியின் இறுதிநாள் இன்னமும் பெரிய பிரம்மாண்டத்துடன் இருந்திருக்கலாம். நிகழ்ச்சியின் வீச்சை வைத்துப் பார்க்கும்போது நிறைவுநாள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.

இன்னொரு குறை பங்கேற்ற பிரபலங்கள்.

எல்லாப் பிரபலங்களையும் ஏற்கெனவே நடைபெற்ற வாராந்தர நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவிட்டு இறுதிநாள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்கள் கிடைக்காமல் அவஸ்தைப் பட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. எம்எஸ்வி, ஏ.ஆர்.ரகுமான், சுசீலா, ஜானகி, பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம், தேவா, டி.ராஜேந்தர், இமான் என்று எல்லாரையும் ஏற்கெனவே அழைத்துவிட்டுக் கடைசி நாளுக்குப் பிரபலங்கள் கிடைக்காமல் சங்கர் மகாதேவனையும், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் என்று மற்றவர்களையும் அழைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நிகழ்ச்சியின் பெரிய குறை மேக்கப் என்ற ஒரு கோரத்தைப் போட்டு பாடிய அத்தனைக் குழந்தைகளையும் ஏறக்குறைய குமரிப்பெண்கள் போலத் தோன்றச் செய்திருந்தது.

சிறுமிகள், குழந்தைகள் என்ற தோற்றமே தெரியாமல் அடித்திருந்தார்கள்.

இன்னொன்று ‘இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவில் ஆறுகோடி வாக்குகள் வந்திருக்கின்றன’ என்று அறிவித்தார்கள். வேண்டுமென்றே அப்படி அறிவித்துவிட்டுப் பிறகு ‘இல்லை இல்லை ஒரு கோடியே சொச்சம் வாக்குகள்தாம். ஆறு கோடி என்பது அந்தக் காம்பியர் ஆசைப்பட்ட வாக்குகள்’ என்று திருத்திக்கொண்டார்கள்.

காம்பியர் பத்து கோடிக்கு ஆசைப்பட மாட்டாரா என்ன?

இதிலிருந்த ‘அரசியல்’ என்னவென்பது புரியவில்லை.
.
 இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கும் முக்கியமான பாடம் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது.  இது இணைய ரசிகர்களுக்கு என்பதால் இதனை மறுபடியும் சொல்ல நேர்கிறது. சென்ற பதிவிலேயே லேசாகச் சுட்டிக்காட்டியிருந்த அந்த முக்கியமான விஷயம் இந்த இறுதி நாளிலும் உறுதிசெய்யப் பட்டிருக்கிறது.

அதாவது, ‘இளையராஜா இல்லாமல் இசை சம்பந்தப்பட்ட எதுவுமே இங்கே நகராது. இந்தக் காலகட்டத்தின் இசைக்கடவுள் இளையராஜாதான்’ என்ற நம்பிக்கை இங்கே பலபேருக்கு இருக்கிறது.



இளையராஜா தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் திறமையான இசையமைப்பாளர்தான். தமிழ்த்திரை இசையின் சகாப்தத்தில் அவருக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, அதற்குப் பின்னர் தனியாக எம்எஸ்வி, கே.வி.மகாதேவன், ஏ.எம்.ராஜா, சுதர்சனம் வரிசையில் வருகிறவர் இளையராஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை.

அதுபோலவே இளையராஜாவைத் தொடர்ந்து வருகிறவர்களாக ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

ஆனால் இம்மாதிரியான எந்தவித முக்கியத்துவமும் யாருக்குமே அளிக்கப்படாமல்,  இசை என்றாலேயே இளையராஜா மட்டும்தான் என்ற தவறான பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. 

அதற்கான முயற்சிகள் மிகப்பெரும் அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் இங்கே எழுதப்படுகின்றன.

‘நாங்கள் எங்களுக்குப் பிடித்தவரை எழுதுகிறோம்’ என்ற பெயரில் பொதுவெளியில் தவறான பிம்பத்தைக் கட்டுகிறார்கள். ‘நாங்கள் மற்ற யாரையும் குறை சொல்லுவதில்லையே’. என்று சமாதானம் வேறு சொல்கிறார்கள்.

குடிமக்கள் நிறைந்திருக்கும் தெருவில் ஒற்றை வீட்டில் மட்டும் ‘இங்கே இருக்கும் பெண்டிர் அனைவரும் பத்தினிகள்’ என்று போர்டு போட்டுவிட்டு, யாரும் தட்டிக்கேட்டால் ‘நாங்கள் வேறு யாரையும் குறை சொல்லவில்லையே. எங்கள் வீட்டில் உள்ளவரைத்தானே நாங்கள் சொல்லிக்கொள்ளுகிறோம்’ என்று அடாவடி பேசுகிற வாதம்தான் இது.

ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சி நெடுகிலும் அவ்வப்போதாவது சில இளையராஜா பாடல்கள் பாடப்பட்டன. ஆனால் இறுதி நிகழ்வில் ஆறுபேர்கள் கலந்துகொண்ட போட்டியில் ஆளுக்கு இரண்டு பாடல்கள் என்று பன்னிரண்டு பாடல்கள்.

அதில் ஒரேயொரு பாடல்தான் இளையராஜா இசையமைத்த பாடல்.

மற்ற அத்தனையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தவை.

இவையெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேண்டும்.

ஒரு இசையமைப்பாளரை மட்டுமே சுற்றிக்கொண்டு இந்த உலகம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படி இல்லை எனில் இத்தனைப் பெரிய, அதுவும் பல கோடி மக்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி எப்படி இத்தனை வெற்றிகரமாக சாத்தியப்படும்?

திரை இசை என்றால், அதிலும் தமிழ் இசை என்றால் நிறைய ஜாம்பவான்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்த்திரை இசை என்பதே பல முன்னோர்களால் வார்த்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு  இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிற ஒரு இசை வேள்வி என்பதே இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்ற பாடம் என்றே கருதவேண்டியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி இன்னொரு கற்பிதத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறது.

அதாவது ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் நிலைக்காதவை. அவற்றை ஒருமுறைக்குமேல் திரும்பத் திரும்ப கேட்க முடியாது என்ற வாதமும் இணையத்தில் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே அடிக்கடி சிலரால் அதுவும், இ.ரா ரசிகர்களால் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களே.

அதிலும் குறிப்பாக இறுதிநாளில் பாடப்பட்ட பல பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசைத்தவையே. 

கேட்கின்ற அத்தனைப்பேரையும் உணர்ச்சிவசப்பட வைக்கின்ற அளவிலான பாடல்கள் என்பதாலேயே அவை இறுதி நிகழ்ச்சியில் பாடப்பட்டன.

எந்த உணர்வை ஊட்ட வேண்டுமோ அதற்கு மேலேயே ஊட்டுவதாகத்தான் அந்தப் பாடல்கள் அமைந்திருந்தன. உணர்ச்சித் ததும்ப அமைந்திருந்த அந்தப் பாடல்கள் உணர்ச்சித் ததும்ப பாடப்பட்டன.

ஆக, சிலர் ‘ஆசைப்படும்’ இந்தக் கற்பிதம்- ‘ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் ஒருமுறைக்குமேல் கேட்க முடியாது’ என்பது- சிதறுத்தேங்காயாக உடைந்திருக்கிறது. தேங்காய்கூடப் பெரிய பெரியத் துண்டுகளாகத்தான் உடையும். இந்தக் கற்பிதமோ கண்ணாடித் துண்டுகள்போல் நொறுங்கிச் சிதறியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி வெறும் பிரமாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் இவற்றில் வேறு சில அம்சங்களும் பொதிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை.  சார்லஸ் என்ற ஒரு இசை ரசிகர் குறிப்பிடுவதுபோல ‘ குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி. இசையைப் பற்றி தவறான கண்ணோட்டம் மாற்றும் நிகழ்ச்சி. பாடுவது எளிதான காரியமல்ல என்று உணர்த்தும் நிகழ்ச்சி. திறமைக்கு சான்று பகரும் நிகழ்ச்சி. பாடல் உருவான விதம், பாடியவரின் பெருமை, இசையமைப்பாளரின் திறமை போன்ற பல விஷயங்கள் அங்கே பகிரப்படுகின்றன. ஒரு பாடல் என்றால் என்னென்ன விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற பாடம் அங்கு நடத்தப்படுகிறது’- என்கிறார்.

இது அவ்வளவும் உண்மைதான். ஆனால் இப்படிச் சொல்லும் அந்த அன்பர் இ.ராவின் ரசிகர். ஆனால் அவர்  சொன்ன அத்தனை விஷயங்களும் அவருடைய அபிமான இசையமைப்பாளரின் பாடலே இல்லாமல்கூட அங்கு உணர்த்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் இங்கே முக்கியம்.

காலம் என்பது கொஞ்சம் கொடுமையானதுதான். யாரைவேண்டுமானாலும் தொப்பென்று கீழே போட்டுவிட்டு அதுபாட்டுக்குத் தன் திசையில் பயணம் செய்துகொண்டே இருக்கும்.


இதனைப் புரிந்துகொண்டால் அதி தீவிர ரசிக மனப்பான்மையைப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டிருப்பதிலிருந்து வெளியேறிவிடலாம்.

76 comments :

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இந்த முறை ஒரு வாரம் கூட பார்க்கவில்லை! சென்ற நிகழ்ச்சிகளில் இருந்த செயற்கைத் தனமும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் வெற்றியாளருமே இதற்கு முக்கிய காரணம். சிறப்பான அலசல்! வெற்றிபெற்ற வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள். தமிழ் சினிமா பல திறமையான இசைக்கலைஞர்களை நாட்டுக்குத் தந்திருக்கிறது. இளையராஜாவும் அதில் ஒருவர் மற்றும் திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் இளையராஜாதான் இசை என்பதில் எனக்கும் உடன்பாடில்லை! சிறப்பான பகிர்வு! நன்றி!

ஜோதிஜி said...

அட நான் தான் மொத விருந்தாளியா? இருங்க படிச்சுட்டு வர்றேன்.

ஜோதிஜி said...

என்ன ஆச்ச? ஏதோ சொல்ல வந்த மாதிரி இருக்கு? வேற என்னமோ எழுதியிருக்கிற மாதிரி இருக்கே?

ஜோதிஜி said...

நான் இந்த நிகழ்ச்சியை கவனிக்கும் போது திரும்பத் திரும்ப யோசித்ததும் கவலைப்படுவதும் ஒன்றே ஒன்று மட்டும் தான். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடத் தொடங்கும் போது ஒரு பெண் அல்லது ஆண் குழந்தைகள் இயல்பாக தோற்றத்தில், பேச்சில், உடை அலங்காரத்தில், மற்ற நடவடிக்கைகளில் இருக்கும் அவர்கள் நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை ஒரு வணிகப் பொருளுக்கு மாடல் போல மாற்றி விட யுக்தியை நீங்கள் கவனித்தது உண்டா? அவர்கள் நிஜ வாழ்க்கையில் இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள்? என்பதை நீங்களாவது யோசித்தது உண்டா?

Amudhavan said...

தளிர்’ சுரேஷ் said...
\\தமிழ் சினிமா பல திறமையான இசைக்கலைஞர்களை நாட்டுக்குத் தந்திருக்கிறது. இளையராஜாவும் அதில் ஒருவர் மற்றும் திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் இளையராஜாதான் இசை என்பதில் எனக்கும் உடன்பாடில்லை!\\
வாங்க சுரேஷ், தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மகிழ்ச்சி. நான் என்ன சொல்லவந்திருக்கிறேனோ அதனையே நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\என்ன ஆச்ச? ஏதோ சொல்ல வந்த மாதிரி இருக்கு? வேற என்னமோ எழுதியிருக்கிற மாதிரி இருக்கே?\\

எதையோ சொல்லவந்து திசை மாறிப்போய் வேறு எதையோ சொல்லியிருக்கிறமாதிரியா இருக்கிறது? சரியாக எழுதியிருப்பதாகத்தான் நினைக்கிறேன்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\நான் இந்த நிகழ்ச்சியை கவனிக்கும் போது திரும்பத் திரும்ப யோசித்ததும் கவலைப்படுவதும் ஒன்றே ஒன்று மட்டும் தான். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடத் தொடங்கும் போது ஒரு பெண் அல்லது ஆண் குழந்தைகள் இயல்பாக தோற்றத்தில், பேச்சில், உடை அலங்காரத்தில், மற்ற நடவடிக்கைகளில் இருக்கும் அவர்கள் நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை ஒரு வணிகப் பொருளுக்கு மாடல் போல மாற்றி விட யுக்தியை நீங்கள் கவனித்தது உண்டா? அவர்கள் நிஜ வாழ்க்கையில் இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள்? என்பதை நீங்களாவது யோசித்தது உண்டா?\\

ஆமாம் ஜோதிஜி இந்த விஷயத்தைத்தான் நான் என்னுடைய முந்தைய பதிவில் தொட்டுக்காட்டி இந்தப் பதிவிலும் அந்த மேக்கப் விஷயத்தில் இதனையும் கோடி காட்டியிருக்கிறேன். அந்தச் சின்னக் குழந்தைகளுடைய மனோபாவம் எப்படியெல்லாம் உருமாறும் என்ற கவலை எனக்கிருக்கிறது.

Jayadev Das said...

\\
இன்னொன்று ‘இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவில் ஆறுகோடி வாக்குகள் வந்திருக்கின்றன’ என்று அறிவித்தார்கள். வேண்டுமென்றே அப்படி அறிவித்துவிட்டுப் பிறகு ‘இல்லை இல்லை ஒரு கோடியே சொச்சம் வாக்குகள்தாம். ஆறு கோடி என்பது அந்தக் காம்பியர் ஆசைப்பட்ட வாக்குகள்’ என்று திருத்திக்கொண்டார்கள்.
\\

எனக்கு தெளிவா புரிஞ்சிடுச்சி. அவன் sms மூலம் வந்த ஓட்டு ஒரு கோடி, ஓட்டுக்கு 6 ரூபாய் = பணம் 6 கோடின்னு சொல்லியிருக்கான், இவன் ஓட்டே ஆறு கோடின்னு நினச்சிட்டு சொல்லிட்டான். அப்புறம் தமிழ்நாட்டு ஓட்டு போடும் சனத்தொகையே அவ்வளவு இல்லையேன்னதும் சுதாரிச்சிகிட்டான்!!

Jayadev Das said...

\\
அதாவது, ‘இளையராஜா இல்லாமல் இசை சம்பந்தப்பட்ட எதுவுமே இங்கே நகராது. \\ இளையாராஜாவுக்கு உள்குத்து விடாம எந்த சினிமா பதிவும் இங்கே வராது!!

Jayadev Das said...

\\
அதாவது ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் நிலைக்காதவை. அவற்றை ஒருமுறைக்குமேல் திரும்பத் திரும்ப கேட்க முடியாது என்ற வாதமும் இணையத்தில் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே அடிக்கடி சிலரால் அதுவும், இ.ரா ரசிகர்களால் சொல்லப்படுகிறது.
\\

ரஹ்மான் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. ஆனால், பழைய திரைப்படப் பாடல்கள், இளையாராஜா பாடல்கள் போல முப்பது வருஷம் கடந்தும் இனிக்குமா என்ற சந்தேகம் ஒருபக்கம் இருக்கவே செய்கிறது. இந்த மாதிரி பாடல்கள் இளையராஜா வரை இருந்தது, அதன் பின்னர் இல்லை என்றே தோன்றுகிறது.

Amudhavan said...

Jayadev Das said...
\\இவன் ஓட்டே ஆறு கோடின்னு நினச்சிட்டு சொல்லிட்டான். அப்புறம் தமிழ்நாட்டு ஓட்டு போடும் சனத்தொகையே அவ்வளவு இல்லையேன்னதும் சுதாரிச்சிகிட்டான்!!\\

ஜெயதேவ், இரண்டு திருத்தங்கள். ஒன்று இவன் அவன் இல்லை. இவள் அவள்.....! அந்தக் காம்பியர் ஒரு பெண்.
இரண்டாவது, ஒருவர் ஒரு ஓட்டு என்பதெல்லாம் எந்த யுகம்? ஒருவரே எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலும் போடலாம் என்று அடிக்கொருதரம் சொல்லிக்கொண்டிருந்தார்களே.

Jayadev Das said...

@ஜோதிஜி திருப்பூர்

\\அட நான் தான் மொத விருந்தாளியா? \\

நீங்க வர்றதுக்கு ஒருமணி நேரம் முன்னாடியே தளிர் சுரேஷ் படிச்சு கமண்டு போட்டிருக்காரு, ஆனாலும் அப்படின்னு கேள்வி வேற. காமடி பண்றதுல விஜயகாந்தையே மிஞ்சிடுவீங்க போலிருக்கே.............!!

Amudhavan said...

Jayadev Das said...

\\இளையாராஜாவுக்கு உள்குத்து விடாம எந்த சினிமா பதிவும் இங்கே வராது!\\

அப்படியில்லை. இணைய உலகில் உள்ள அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்கே எம்ஜிஆரைப் பற்றி, சிவாஜியைப் பற்றி, ரஜனி, கமலைப்பற்றி, ஸ்ரீதர், பாரதிராஜா பற்றி, அல்லது மணிரத்தினம் பி.வாசு பற்றியெல்லாம் தினசரி மூன்று பதிவுகள் நான்கு பதிவுகள் என்றெல்லாம் வருவதில்லை. ஆனால் இ.ரா பற்றி பாருங்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து பதிவுகள். சும்மாவே ஆவியில் கலந்த இசை, உள்ளத்தை உருக்கி தார் ரோடு ஆக்கிய இசை என்பது மாதிரி. கொஞ்சம் திரைமணம் பக்கம் போய் அதிலுள்ள தலைப்புகளை மட்டும் வாசித்துப் பாருங்கள். எத்தனை வந்துகொண்டிருக்கின்றன என்று. இதிலெல்லாம் உள்ள நுண் அரசியல் என்ன? ஓயாமல் இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தால் அதையே மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதுதான்.
அவர்கள் நிறுத்தட்டும், நாமும் நிறுத்திவிடலாம்.

Arul Jeeva said...

#சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்ச்சியில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் ஏ ஆர் .ரஹ்மான் இசைத்தவையே .#கேட்போர் அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கும் பாடல்கள் என்பதாலேயே பாடப்பட்டது . ஐயா பரத் என்ற சிறுவன் பாடிய பாட்டும் நானே என்ற பாடல் அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கவில்லையா? தாங்கள் தானே கூறியுள்ளீர்கள் .விஜய் டிவி பெரிய ஜாம்பவான்களை விடுத்து தனுஷ் ,அனிரூத் ,சிவகார்த்திகேயன் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சியை ஒப்பேத்தியிருக்கிறதென்று .அப்படியிருக்கும் பட்சத்தில் இவர்கள் காட்டுக் கூச்சலைத் தானே ஆதரிக்க முடியும் .

Arul Jeeva said...
This comment has been removed by a blog administrator.
சார்லஸ் said...

அமுதவன் சார்

சூப்பர் சிங்கர் பற்றிய பதிவு நல்ல அலசல்.

ஸ்பூர்த்தி என்ற குழந்தை முதல் பரிசை தட்டிச் சென்றதில் எனக்கு உடன்பாடில்லை. முதல் பாடல் எல்லாம் இன்ப மயம் என்ற மிகவும் பழமையான பிரபல பாடல் . எல்லோரும் எழுந்து நின்று கரகோசமிட்டார்கள் . சரிதான் . இரண்டாம் பாடல் தாய் மண்ணே வணக்கம் என்ற ரகுமானின் தனிப் பாடல் . அவள் குரலுக்கு மீறிய சப்தத்தில் உச்சஸ்தாயில் கத்திப் பாடினாள். அவள் குரலுக்கு பொருத்தமில்லாமல் அழகான சுருதியோடு அதன் தரம் மாறாமல் பாட வேண்டிய பாடலை தரம் மீறி பாடியதை பாராட்டி எல்லா நடுவர்களும் ஏதோ சொல்லி வைத்தது போல மீண்டும் standing avetion கொடுத்தது செயற்கையாகப் பட்டது.

ஹரிபிரியா , ஸ்ரீஷா என்ற இரு குழந்தைகள் இரண்டாவது முறையாக உள் நுழைந்து சிறந்த பயிற்சி எடுத்து அழகாகவும் இனிமையாகவும் பாடினார்கள் . பத்து மாதங்கள் அவர்கள் இருவரையும் கவனித்த வகையில் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி தேர்ந்த பாடகருக்குரிய எல்லா அம்சங்களோடும் பாடி வந்தார்கள் . கடைசி நாளிலும் அழகாவே பாடினார்கள் . அவர்கள் இருவரில் ஒருவருக்கு இந்தப் பரிசு கிடைத்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன் . அதை விடுத்து மழலை மாறாத குழந்தையின் குரலுக்கு பரிசு கொடுத்திருப்பதில் ஏதும் அரசியல் உள்ளதோ என ஐயப்பட தோன்றுகிறது.

எஸ் பி.பி அவர்கள் ஒரு பேட்டியில் ' கடைசி வரை நடுவர்கள் முடிவெடுத்துவிட்டு இறுதியில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் பரிசு கொடுப்பது நியாயமானது அல்ல ' என்று வருத்தப்பட்டிருந்தார். ஓட்டெடுப்பில் இரண்டு லாபம் . ஒன்று வணிகம் . இன்னொன்று escapism . நாங்கள் மட்டும் முடிவு செய்யவில்லை ; மக்களும் சேர்ந்துதான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்று தப்பித்துக் கொள்ளும் உபாயம். எண்ணிக்கையைச் சொல்கிறார்கள் . நம்பகத்தன்மை கடவுள் மட்டுமே அறிவார்.

அரசியல் மட்டுமல்ல சாதியையும் இதில் கலக்கிறார்களோ என ஐயப்படத் தோன்றுகிறது. அமர்ந்து ரசித்த பாடகர்கள் பெரும்பான்மையோர் யார் என நாம் அறிவோம் . முதல் பரிசு பெற்ற குழந்தையும் தமிழர் அல்லாத கன்னடம் சேர்ந்த ........ எனவும் தெரிகிறது. என்ன சொல்ல?


Amudhavan said...

அருள் ஜீவா, பெரும்பாலான பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தவை என்று சொல்லும்போது அங்கே மற்றவர்களின் பாடல்களும் இருந்தன என்று அர்த்தம் வராதா? உலகின் பெரும்பாலானோரை உணர்ச்சிவசப்பட வைத்த 'தோல்வி நிலையென' பாடலை ஜெசிக்கா பாடினாரே அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மனோஜ்கியான் அல்லவா?.........இப்படி மற்ற இசையமைப்பாளர்கள் நிறைய சாதித்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிலருக்கு உணர்த்துவதற்காகத்தான் இதையெல்லாம் எழுத நேர்ந்தது.
கடைசிநாள் விழாவில் விஐபிக்களை 'அழைப்பதில்தான்' விஜய்டிவி ஒப்பேற்றியிருந்தார்களே தவிர, போட்டியை ஒப்பேற்றினார்கள் என்று எங்கும் சொல்லவில்லையே.
தவிர, நீங்கள் சொல்லியிருப்பதுபோல் காட்டுக்கூச்சலை ஆதரிப்பதை விடுத்து மெல்லிய பூங்காற்றுக்குப் போயிருக்க நேர்ந்தாலும் அறுபதுகளுக்குத்தான் சென்றிருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அந்த மெல்லிய பூங்காற்றுக்கு முன்னால் மற்றவை நிற்க முடியாதே.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நான் கவனித்ததில் எனக்கு தோன்றியதைக் கூறுகிறேன்.வழக்கம் போல இம்முறையும் பாட்டும் நானே பாடல் பாடப்பட்டது . காதல் ஓவியம் படத்தில் இருந்தும் பாடல் இடம் பெறும் பொதுவாக இந்தக் குழந்தைகள் எல்லாம் ரஹ்மான் பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். ரஹ்மானின் பாடல் எண்ணிக்கை எப்போதும் கூடுதலாகவேதான் இருக்கும்.இளைஞர்கள் மத்தியில் ரஹ்மானுக்கு வரவேற்பு உண்டு.வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே . டெக்னிக்கல் நுணுக்கங்கள் ரஹ்மானின் பாடல்களில் அதிகம் உண்டு. நேரடியாக பாடுவது மிகவும் கடினமானதாக இருக்கும் மேலும் ரஹ்மானிடம் பாடும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்பதும் ஒரு காரணம். அது ஒரு கனவு அல்லவா? நன்கு கவனித்தால் தெரியும் ரஹ்மானின் பாடல் பாடி முடித்ததும் நடுவர்கள் அனைவரும் கூடுதலாக புகழ்வதைக் காணமுடியும். இதற்கும் அதுவே காரணம்
ஸ்பூர்த்தி வெற்றி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றே நினைக்கிறேன். இந்தக் குழந்தை மேதை என்பதில் சந்தேகம் இல்லை. அதிகமாக ஷவர் பெற்றவரும் இவரே. ஆனாலும் சில மெல்லிசைப் பாடல்களுக்கு இவர் குரல் பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறேன்.சில சமயங்களில் இவர் சாதரணமாகப் பாடியதாக எனக்கு தோன்றி யபோது கூட இவருக்கு சாக்லேட் ஷவர் கிடைத்தது. மற்றவர்கள் தொடக்கத்தில் சுமாராகப் பாடி பின்னர் இதற்கென வழங்கப் பட்ட பயிற்சி காரணமாக தங்களை மேம்படுத்திக் கொண்டதாகவே நினைக்கிறேன். ஆனால் ஸ்பூர்த்தி ஆரம்பத்தில் இருந்தே அசத்தலாக பாடிவந்தார். ஆனால் நடுவர்களின் சாய்ஸ் ஸ்ரீஷா வாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.ஆனால் ஆறு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

Amudhavan said...

சார்லஸ் said...
\\ஸ்பூர்த்தி என்ற குழந்தை முதல் பரிசை தட்டிச் சென்றதில் எனக்கு உடன்பாடில்லை. முதல் பாடல் எல்லாம் இன்ப மயம் என்ற மிகவும் பழமையான பிரபல பாடல் . எல்லோரும் எழுந்து நின்று கரகோசமிட்டார்கள் . சரிதான் . இரண்டாம் பாடல் தாய் மண்ணே வணக்கம் என்ற ரகுமானின் தனிப் பாடல் . அவள் குரலுக்கு மீறிய சப்தத்தில் உச்சஸ்தாயில் கத்திப் பாடினாள். அவள் குரலுக்கு பொருத்தமில்லாமல் அழகான சுருதியோடு அதன் தரம் மாறாமல் பாட வேண்டிய பாடலை தரம் மீறி பாடியதை பாராட்டி எல்லா நடுவர்களும் ஏதோ சொல்லி வைத்தது போல மீண்டும் standing avetion கொடுத்தது செயற்கையாகப் பட்டது.\\

சார்லஸ், இங்கே மற்ற குழந்தைகளின் திறமைகள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இதையேதான் நானும் எழுதியிருக்கின்றேன். ஆறு குழந்தைகளுமே முதற் பரிசுக்குத் தகுதியுடையவர்களே என்று.
அதே சமயம் ஸ்பூர்த்தியை கடைசி நாளில் பாடிய இரண்டாவது பாடலை வைத்து மட்டும் மதிப்பிடுவதற்கில்லை. ஆரம்பத்திலிருந்தே அந்தக் குழந்தை மிக அபாரமாகப் பாடிக்கொண்டிருந்தாள்.
தாய் மண்ணே வணக்கம் பாடல் ஸ்பூர்த்தி போன்றவர்கள் பாடுவதற்கேற்ற பாடல் இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதனாலேயே பாடவேண்டிய ஸ்கேலை மாற்றிப் பாடவைத்திருந்தது அனந்தின் டெக்னிக் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
உங்கள் பதிலிலிருந்து நீங்கள் பதிவைப் படிக்காமல் எழுதியிருக்கிறீர்களோ என்ற லேசான ஐயமும் எனக்கு ஏற்படுகிறது. வருகைக்கு நன்றி.

Amudhavan said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
\\இந்தக் குழந்தைகள் எல்லாம் ரஹ்மான் பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். ரஹ்மானின் பாடல் எண்ணிக்கை எப்போதும் கூடுதலாகவேதான் இருக்கும்.இளைஞர்கள் மத்தியில் ரஹ்மானுக்கு வரவேற்பு உண்டு.வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே . டெக்னிக்கல் நுணுக்கங்கள் ரஹ்மானின் பாடல்களில் அதிகம் உண்டு. நேரடியாக பாடுவது மிகவும் கடினமானதாக இருக்கும் மேலும் ரஹ்மானிடம் பாடும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்பதும் ஒரு காரணம். அது ஒரு கனவு அல்லவா? நன்கு கவனித்தால் தெரியும் ரஹ்மானின் பாடல் பாடி முடித்ததும் நடுவர்கள் அனைவரும் கூடுதலாக புகழ்வதைக் காணமுடியும். இதற்கும் அதுவே காரணம் \\

வாருங்கள் முரளி, உங்களின் பெரும்பாலான கருத்துக்களை நானும் ஒப்புக்கொள்கிறேன். இம்மாதிரியான ஆய்வு கலந்த விமரிசனங்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு விஷயமும் சீர்தூக்கிப் பார்த்து அலசப்பட்டு பேசப்பட்டால் அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. இங்கே தொடர்ச்சியாக சிலபேர் ஒரே ஒருவரைப்பற்றி மட்டுமே தேவையில்லாத வாதங்களை வைத்துக்கொண்டு ஓயாமல் ஒரே விஷயத்தைப் பிளேட்டைக்கூட மாற்றாமல் பேசிக்கொண்டே இருக்கவிழைகிறார்களே........... அவர்களுக்காகத்தான் சிலவற்றைப் பிரித்துப் பிரித்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,

நான் இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு மணிநேரம் பார்த்தேன். எ ஆர் ரஹ்மானின் விடைகொடு எங்கள் நாடே பாட்டு வரை பார்த்தேன். யார் வெற்றி பெற்றது என்று தெரியாமலே இருந்தது. அது பற்றி கவலையுமில்லை. இதெல்லாம் ஒரு scripted play. ஆனால் ஒன்று உண்மை. இணையத்தில் உதார் விடும் சில குகை மனிதர்களின் காட்டுக் கூச்சல் நடைமுறை உலகில் எடுபடாமல் போய்விடுகிறது. இசை ஒருவரிடமிருந்துதான் பிறந்தது அவர் செய்வதெல்லாம் சாதனை என்ற அபத்தமெல்லாம் இணையத்திலேயே இப்போது ஒரு நகைச்சுவையாக மாறிவருகிறது. சரியாக சொன்னீர்கள். பாவம். உலகம் பெரியது என்பதை இது போன்ற சில நிகழ்ச்சிகளாவது அவர்களுக்கு சொல்லட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிலரின் பாடல்களை ரசிக்க முடியவில்லை... மறுபடியும் இன்று ஒளிபரப்பு செய்வார்கள் என்று நினைக்கிறேன்... பார்ப்போம்...!

இசை என்றும் சுகம் தான்... பாடல் வரிகளின் கருத்துகளை உள்வாங்கி வாழ்வில் செயல்படுத்தினால்...........(?)

திண்டுக்கல் தனபாலன் said...

Jayadev Das அவர்களே... தளம் Comment Moderation-ல் உள்ளது... அதனால் யார் முதலில் கருத்துரை இட்டார்கள் என்பது தெரியாது ஜி...

Amudhavan said...

காரிகன் said...
\\இசை ஒருவரிடமிருந்துதான் பிறந்தது அவர் செய்வதெல்லாம் சாதனை என்ற அபத்தமெல்லாம் இணையத்திலேயே இப்போது ஒரு நகைச்சுவையாக மாறிவருகிறது.\\

ஆமாம் காரிகன், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய இரு பதிவுகளை எழுதத் தூண்டியதே இந்த எண்ணமும் இதற்கான யதார்த்தமும்தாம். இந்தத் தலைமுறை ஏ.ஆர.ரகுமான் பாடல்களைத்தான் கேட்டு வளர்கிறது என்பது பற்றி மூங்கில் காற்று திரு முரளிதரன் சொல்லியிருக்கிறார். இதுதான் யதார்த்த நிலை என்றபோதும் சாமான்ய மனிதர்களைத் தாண்டி பாடல்களையெல்லாம் மேடைகளில், டிவிக்களில் பாட வருகின்றவர்கள் சற்று மேம்பட்ட ரசனைகளும் தகவல்களும் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ரகுமானுக்கு முந்தைய இ.ராவைப் பற்றியும், அவருக்கு முந்தையவர்களைப் பற்றிய தகவல்களையும் சாதனைகளையும் தெரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல; ஈடுபட்டிருக்கும் தொழிலுக்கான தர்மமும்கூட. இதே விதிகள் இ.ரா ரசிகர்களுக்கும் பொருந்தும். அதையெல்லாம் விட்டுவிட்டு தங்களை மிஞ்சி உலகமே இல்லை என்று இருப்பார்களேயானால் இம்மாதிரிதான் கோடிக்கணக்கானவர்கள் ஈடுபாடு கொண்ட ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் ஓரு ஓரத்தில் விடப்படுபவர்களாக மாறிப்போவார்கள்.

Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...
\\இசை என்றும் சுகம் தான்... பாடல் வரிகளின் கருத்துகளை உள்வாங்கி வாழ்வில் செயல்படுத்தினால்...........(?)\\
ஆமாம் தனபாலன் நீங்கள் சொல்லுவது நூறு சதவிதம் சரியானது. ஆனால் குறிப்பிட்ட ஒரு இசையமைப்பாளர்தானே பாடல் வரிகளே கேட்கக்கூடாது. பாடல் என்றால் தன்னுடைய மெட்டு என்று மட்டுமே பேசப்படவேண்டும் என்ற நிலையைக் கொண்டுவர எத்தனை அதிரிபுதிரி வேலைகள் எல்லாம் செய்தார்....

Anonymous said...

அமுதவன், இளையராஜா நடுநிலையுடன் அணுகப்படவேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருபவர். அதுசரிதான். ஆனாலும் பாட்டுப் போட்டிகளில் பொதுவாக குரலுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள், சிக்கலான வாத்திய இசைக் கோலங்களைக் கொண்டிருக்காத பாடல்கள் தேர்வு செய்யப்படுவதே இயல்பு. ஆகவே பழைய பாடல்கள் பாடப்படுவதில் வியப்பில்லை. இளையராஜாவின் பல பாடல்கள் ப்ரீலூட், இண்டர்லூட் இசைக்கோலங்களுக்காகச் சிலாகிக்கப்படுபவை. எனவே சூப்பர் சிங்கரை வைத்து இளையராஜா பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியாது, அல்லது ராஜா பற்றிய எந்த வாதத்துக்கும் (அது நேர்மறையோ எதிர்மறையோ) பாட்டுப் போட்டிகளில் பாடப்படும் பாடல்களை ஒரு தரவாக அல்லது சான்றாகக் கொள்ள முடியாது என்பதே நிஜம்.

(ஜி.ராமனாதன், எம்எஸ், ராமமூர்த்தி, கே.வி.எம்., எல்லாம் ஓகே. ஆனால் நீங்கள் குறிப்பிடும் சி.ஆர்.சுப்புராமன், சதர்சனம் எல்லாம் என்ன பாட்டுப் போட்டிருக்கிறார்கள் என்றே எனக்கெல்லாம் தெரியாது.. மேலும் நீங்களே வி.குமாரை மறந்துவிட்டீர்களே? எம்.ஜி.ஆருக்குப் பல நல்ல பாடல்கள் போட்டவர்!)

சரவணன்

சார்லஸ் said...

அமுதவன் சார்

உங்கள் பதிவை முழுக்கப் படித்துவிட்டுத்தான் நான் பின்னூட்டமிட்டேன். இன்னும் முடியவில்லை . நிறைய சொல்ல வேண்டியதிருக்கிறது.

ஸ்பூர்த்தி என்ற குழந்தையை நானும் அதிகம் ரசித்தவன். அவள் திறமையுள்ள குழந்தை . அதில் ஐயமில்லை. ஆனால் சில பாடல்களுக்கு அவள் குரல் பொருத்தமில்லாமல் இருக்கும் . கர்னாடக இசைப் பின்னணி கொண்ட பாடல்களையே அதிகம் தேர்வு செய்வாள் ; அல்லது செய்ய வைக்கப்பட்டிருப்பாள். மற்ற ஜானர்களில் பாடும்போது இனிமையைவிட மழலையே முன்னிலை வகிக்கும் . ஹரி,ஸ்ரீஷா என்ற இருவரும் எந்தப் பாடலைப் பாடினாலும் இனிமையும் பொருத்தமும் இருக்கும் . நான் ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருபவன் என்பதால்தான் இதைச் சொல்கிறேன். கடந்த 8 வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் . இறுதிப் போட்டியில் தேர்வு நமது எதிர்பார்ப்பை மீறியதாகவே இருக்கிறது.
ஸ்பூர்த்தி படிய இரண்டாம் பாடல் பொதுப் பாடல் . எல்லோரும் சினிமா பாடல் பாடிக் கொண்டிருக்கும்போது பொதுவான தேச பக்திப் பாடலை சேர்த்தது எப்படி இந்தப் போட்டிக்கு பொருத்தமாகும்? சென்ற முறை ஆஜித் என்ற சிறுவனும் அதே பாடலையே பாடி ரகுமான் கையால் முதல் பரிசு பெற்றான். நிறைய முரண் தெரிகிறது.


பிறகு இளையராஜா பற்றிய செய்தியைச் சொல்லியிருந்தீர்கள். இணையத்தில் இளையராஜா பற்றி அதிகம் செய்தி வருவதே தவறான நிகழ்வாக பார்க்கும் எண்ணம் உங்களிடத்தில் இன்னும் இருக்கிறது. எல்லா இசையமைப்பாளர்களையும் போலவே அவருக்கு என்று இசை உலகில் ஒரு இடம் உண்டு. அவர் இசையை ரசித்தவர்கள் ரசிப்பு அனுபவத்தை பகிர்கிறார்கள் . அதைப் பொதுவில் எழுதுவதே தவறு என்று வியாக்யானம் செய்வது சரியா? அவரை இழுக்காவிட்டால் உங்களுக்கும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது.

/// ‘இளையராஜா இல்லாமல் இசை சம்பந்தப்பட்ட எதுவுமே இங்கே நகராது. இந்தக் காலகட்டத்தின் இசைக்கடவுள் இளையராஜாதான்’ என்ற நம்பிக்கை இங்கே பலபேருக்கு இருக்கிறது.///

எந்த ஒரு இசை நிகழ்ச்சியும் இளையராஜாவின் பாடல் இல்லாமல் அது முடிவுறாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் 25 சதவீத பாடல்கள் இளையராஜாவினுடையது என்பது மறுப்பதற்கில்லை. வேண்டுமென்றால் ஆய்வு செய்து பாருங்கள். கடைசி சுற்றில் ஒரே ஒரு பாடல் மட்டும் இளையராஜாவின் பாடல் என்பதால் அவர் ஒன்றும் தரம் குறைந்தவர் ஆகிவிட மாட்டார். இளையராஜாவின் இசை காலத்தால் எழுதப்பட்ட அழியா ஓவியம் ; மாற்ற முடியா வரலாறு. இசை என்றால் இளையராஜாதான் என்று சொல்லவில்லை. இசையைப் பற்றி பேசினால் இளையராஜா அங்கு தென்படுவார்; அவரைத் தவிர்க்க முடியாது என்றே சொல்கிறேன்.


உங்கள் பதிவில் என் கருத்தையும் சேர்த்திருக்கிறீர்கள் . நன்றி . இந்த உலகில் எதையும் எளிதாக பெற்றுவிட முடியாது ; போராடித்தான் பெறமுடியும் என்ற நேர் மறை எண்ணங்கள் பார்க்கும் குழந்தைகளுக்கு உருவாக்கும் நிகழ்ச்சியாக நான் பார்க்கிறேன்.

Amudhavan said...


சரவணன்
\\(ஜி.ராமனாதன், எம்எஸ், ராமமூர்த்தி, கே.வி.எம்., எல்லாம் ஓகே. ஆனால் நீங்கள் குறிப்பிடும் சி.ஆர்.சுப்புராமன், சதர்சனம் எல்லாம் என்ன பாட்டுப் போட்டிருக்கிறார்கள் என்றே எனக்கெல்லாம் தெரியாது.. மேலும் நீங்களே வி.குமாரை மறந்துவிட்டீர்களே? எம்.ஜி.ஆருக்குப் பல நல்ல பாடல்கள் போட்டவர்!)\\

சரவணன், சி.ஆர்.சுப்பராமன், சுதர்சனம் இவர்களையெல்லாம் யாரென்றே தெரியாமலும், இவர்களெல்லாம் என்ன பாட்டு போட்டிருக்கிறார்கள் என்றே தெரியாமலும் இ.ராவுக்காக வாதாட வந்திருக்கிறீர்கள் பாருங்கள் இங்கேதான் உங்கள் அருமை புரிகிறது. இணையம் உங்களைப் போன்றவர்களைத்தான் பெரிதும் நம்பி இருக்கிறது.
தவிர, வி.குமார் எம்ஜிஆருக்குப் பல நல்ல பாடல்களைப் போட்டிருக்கிறார் என்பதே நீங்கள் சொல்லித்தான் நினைவுக்கே வருகிறது. அந்தப் பாடல்கள் எவை எவை என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றீர்கள் என்றால் தமிழ் கூறு நல்லுலகம் உங்களை என்றென்றும் நன்றியுடன் நினைத்துக்கொண்டிருக்கும்.

Amudhavan said...

சார்லஸ் said...
\\இந்த உலகில் எதையும் எளிதாக பெற்றுவிட முடியாது ; போராடித்தான் பெறமுடியும் என்ற நேர் மறை எண்ணங்கள் பார்க்கும் குழந்தைகளுக்கு உருவாக்கும் நிகழ்ச்சியாக நான் பார்க்கிறேன். \\
வாருங்கள் சார்லஸ் மேலே சொன்ன ஒரு கருத்தைத் தவிர மீதியெல்லாம் நீங்கள் ஏற்கெனவே சொல்லிச்சொல்லி நீர்த்துப்போன கருத்துக்கள்தாம். எனவே அதற்கு எதுவும் பதில் சொல்லப்போவதில்லை.

Anonymous said...

அமுதவன் சார், வி.குமாரைப் பற்றி எழுதியபோது எம்.ஜி.ஆருக்கு என்று நான் எழுதியிருக்கக் கூடாது. பாலசந்தருக்கு ஆரம்பகாலப் படங்களில் ஹிட்ஸ் கொடுத்தவர். பின்னால் அதே பாலசந்தர் வி.குமாரை எங்கும் குறிப்பிட்டதில்லை. தமிழ் திரையில் மறக்கடிக்கப்பட்ட இசை ஆளுமைகளில் குமார் ஒருவர். அவரது மறக்க முடியாத பாடல்கள் சில (உங்களுக்குத் தெரியாத து அல்ல, மற்றவர்கள் வசதிக்காகக் குறிப்பிடுகிறேன்)-
வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா, தாமரை கன்னங்கள், கன்னி நதியோரம்,
சிகப்புக் கல்லு மூக்குத்தி, உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன், புன்னகை மன்னன் பூவிழி கண்ணன், மதனோற்சவம், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வரவேண்டும், ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஒரு நாள் யாரோ, என்னதான் அவர் பேரோ, உன்னைத் தொட்ட காற்று வந்து என்னை, நேற்று நீ சின்ன பாப்பா, மூத்தவள் நீ இருக்க, ஸ்வப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன், அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா போன்றவை.

இதே போல டிஆர் பாப்பாவைக் கூடக் குறிப்பிடலாம் (எம்.ஜி.ஆர் படம் இவர் பட்டியலில் உண்டு). ஜெஸிக்கா பாடிய ஊமை விழிகள் பாட்டுக்கு இசை அமைத்த மனோஜ் கியான் தமிழில் ஒன்றோ இரண்டோ மட்டுமே செய்தவர்கள். அவர்களை மறந்துவிட முடியுமா?

இப்படிப் பல அருமையான இசையமைப்பாளர்கள் பல்வேறு கட்டங்களில். இருந்தாலும், 70-கள் என்றால் விஸ்வநாதன் (+ராம மூர்த்தி) யுகம், 80-கள் இளையராஜா யுகம், 90-கள் ரகுமான் யுகம், 2010-கள் அநிருத், இமான் யுகம் (!) எனலாம்.

ஒரே வரியில்- எல்லா இசையமைப்பாளர்களையும் மதிக்கிறேன், ஆனா இளையராஜாதான் என் ஃபேவரைட் என்கிறேன். எம்.எஸ்வி. மாதிரி மேதைகளின் பாட்டைக் கேட்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியில் சிலசமயம் கேட்கிறேன். அதோடு சரி! அனுபவித்துக் கேட்பது அதிகம் ராஜா, கொஞ்சம் ஆரம்பகால ரகுமான் இவர்கள்தான்.

சரவணன்

Anonymous said...

அமுதவன் சார், சி.ஆர்.எஸ். இளையராஜாவின் மானசீக குரு என்று, அவரது சிறப்புகளை இளையராஜா குறிப்பிட்டுப் புகழ்மாலை சூட்டிய கட்டுரையைப் படித்தேன். அவர் எவ்வளவு பெரிய மேதை என்று தெரிந்தது.

http://cinema.maalaimalar.com/2013/03/02180636/my-master-cr-suppuraman-ilayar.html

சுதர்சனம்தான் கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' புகழ் களத்தூர் கண்ணம்மாவுக்கு இசை அமைத்தவர் என்று தமிழ் விக்கிபீடியா முலம் தெரிந்தது.
http://ta.wikipedia.org/wiki/ஆர்._சுதர்சனம்

கிரேட்!

இருந்தாலும் எனக்குத் தனிப்பட்ட விருப்பமாக இருப்பவர் இளையராஜாதான்! இதற்கு என்ன செய்வது?!
'ராஜா ராஜாதான்!!'

சரவணன்

.

Amudhavan said...

நீங்கள் கருத்துச் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்; முந்தைய பின்னூட்டத்திற்கும் இந்தப் பின்னூட்டத்திற்கும் இடையே நடையில், சொல்லும் பொருள்களில், வைக்கும் விவாதங்களில் நிறைய மாறுபாடுகளும் வேறுபாடுகளும் காணக்கிடைக்கின்றனவே. இது நேரடியான தோற்றம்தானா? அல்லது சரவணன் என்பதும் இன்னொரு முகமூடியா? எதற்கும் மூக்கு வெளுக்காமல் இருந்தால் நல்லது.

சரவணன் said...

அமுதவன் சார், வேறு யாரும் என் பெயரில் வந்துவிடவில்லை... இரண்டு பின்னூட்டமும் நான் ஒருவன் எழுதியவையே. பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயம். முடிந்தால் உங்கள் சிறுகதைகள் சிலவற்றை சிறுகதைகள் டாட் காம் தளத்துக்குத் தாருங்களேன்! ஸ்கேன் செய்து அனுப்பினால்கூட அவர்களே தட்டச்சு செய்துகொள்வார்கள்.. அந்தக்கால ஜாம்பவான்களில் ஆரம்பித்து மாலன், சுஜாதா போன்ற இடைக்கால பிரபலங்கள் வழியாக நேற்று வந்தவர்கள் கதைகள் வரை அதில் இடம்பெற்றுள்ளன... உங்கள் பெயர் இல்லை. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் முயற்சி செய்யவில்லையா, நீங்கள் வெளியிட விரும்பவில்லையா என்று தெரியவில்லை.. முடிந்தால் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்களேன்..!

(இ.ராஜாவை திரை இசையின் சுஜாதா என்றால்--இருவரும் 70-களில் முன்னணிக்கு வந்தவர்கள், இன்றும் பெரிய ரசிகர் பட்டாளத்தால் கொண்டாடப்படுபவர்கள்; இருவரது ரசிகர்களும் மற்ற சாதனையாளர்களைக் கொஞ்சம் அசட்டை செய்வது உண்டு --உங்களை இலக்கியத்தின் சேகர் (ஏ.ஆர்.ஆர் தந்தை) எனலாமா :-) சமகாலத்தவர்கள், நண்பர்கள், ஒருவர் கலை மீது மற்றவர் மதிப்பு கொண்டவர்கள் என்ற அர்த்தத்தில்..!)

காரிகன் said...

திரு சரவணன்,

---(ஜி.ராமனாதன், எம்எஸ், ராமமூர்த்தி, கே.வி.எம்., எல்லாம் ஓகே. ஆனால் நீங்கள் குறிப்பிடும் சி.ஆர்.சுப்புராமன், சதர்சனம் எல்லாம் என்ன பாட்டுப் போட்டிருக்கிறார்கள் என்றே எனக்கெல்லாம் தெரியாது.. மேலும் நீங்களே வி.குமாரை மறந்துவிட்டீர்களே? எம்.ஜி.ஆருக்குப் பல நல்ல பாடல்கள் போட்டவர்!)--------

எம் ஜி ஆருக்கு வி குமார் பல நல்ல பாடல்களை போட்டிருப்பது ஒன்று எம் ஜி ஆருக்கோ அல்லது வி குமாருக்கோ தெரியுமா? இருவருமே இப்போது உயிருடன் இல்லை என்பதால் வேறு யாரைக் கேட்பது என்றும் தெரியவில்லை.

சி ஆர் சுப்புராமனைத்தான் இளையராஜா தன் ஆதர்ச குருவாக அடிக்கடி சொல்வார். சுதர்சனத்தை யார் என்றே தெரியாது என்று confession வேறு. பராசக்தி என்ற படமாவது தெரியுமா? அல்லது களத்தூர் கண்ணம்மா?

காரிகன் said...

அமுதவன் சார்,

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியே ஒரு நாடகம். இதை இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு சால்ஸ் பக்கம் பக்கமாக விளக்கம் வேறு கொடுக்கிறார். வெளங்கிரும்.

Amudhavan said...

சரவணன் said...
\\முடிந்தால் உங்கள் சிறுகதைகள் சிலவற்றை சிறுகதைகள் டாட் காம் தளத்துக்குத் தாருங்களேன்! ஸ்கேன் செய்து அனுப்பினால்கூட அவர்களே தட்டச்சு செய்துகொள்வார்கள்.. அந்தக்கால ஜாம்பவான்களில் ஆரம்பித்து மாலன், சுஜாதா போன்ற இடைக்கால பிரபலங்கள் வழியாக நேற்று வந்தவர்கள் கதைகள் வரை அதில் இடம்பெற்றுள்ளன... உங்கள் பெயர் இல்லை. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் முயற்சி செய்யவில்லையா, நீங்கள் வெளியிட விரும்பவில்லையா என்று தெரியவில்லை..\\

தங்கள் அன்பிற்கும் யோசனைக்கும் மிக்க நன்றி. பார்க்கலாம்.


\\இருந்தாலும் எனக்குத் தனிப்பட்ட விருப்பமாக இருப்பவர் இளையராஜாதான்! இதற்கு என்ன செய்வது?! 'ராஜா ராஜாதான்!!\\
இந்த 'தனிப்பட்ட விருப்பங்கள்' சமூகத்தின் நிலைப்பாடுகளாக ஆகிவிடுவதில்லை என்பதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் உணர்த்துவதும் இதைத்தான்.
எங்கள் வீட்டிற்குப் பின்புறத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டுகிறார்கள். அதற்குப் பணியாற்றுவதற்காக வந்திருக்கும் சில பணியாளர்கள் கர்நாடகத்தின் ஊப்ளி, தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர்கள். தினசரி விடியற்காலை ஐந்து மணி ஆகக்கூடாது. உடனே, ஏதோ சில சிடிக்களைப் போட்டுவிடுகிறார்கள். எல்லாமே 'ஜானபதே கீதெகளு' வகையிலமைந்த கர்நாடக நாட்டுப்புறப் பாடல்கள். "ஏம்ப்பா, காலையில் கேட்கும்படியான கன்னடப் பாடல்கள் எவ்வளவோ இருக்கின்றனவே - கோவில்களிலெல்லாம் போடுகிறார்களே. அவற்றின் சிடி ஏதாவது வாங்கி காலையில் போட்டுக்கொள்ளக்கூடாதா?" என்று ஒரு முறை கேட்டுவிட்டேன். "அதெல்லாம் யாரு கேட்பாங்க சார்? எங்களுக்குப் பிடிக்காது. இந்தவகைப் பாடல்கள்தான் எங்கள் உயிர்" என்றார் அந்த அன்பர். இது அந்தக் குறிப்பிட்ட மக்களின் கருத்துதானே தவிர ஒட்டுமொத்த கன்னட மக்களின் கருத்து என்றாகிவிடாது. இதே கதைதான் இங்கும். பொதுக்கருத்தைப் பேச வரும்போது தனிப்பட்ட ரசனையை முன்னிறுத்தி வாதங்களை வைப்பது சரியென்று ஆகிவிடாது.
'ராஜா ராஜாதான்' என்று சொல்லிவிட்டாலேயே தாங்கள் மிகப்பெரிய பதிலை எழுதி ஜெயித்துவிட்டதுபோல் கருதும் மனப்பிறழ்வும் நிறையப்பேரிடம் இருக்கிறதென்று நினைக்கிறேன். இந்த வார்த்தையை யாருக்குவேண்டுமானாலும் சொல்லிக்கொண்டிருக்கலாமே. எம்எஸ்வி எம்எஸ்விதான், மகாதேவன் மகாதேவன்தான், வேதா வேதாதான். நமச்சிவாயம் நமச்சிவாயம்தான் என்று. என்ன கோஷம் இது?
\\--உங்களை இலக்கியத்தின் சேகர் (ஏ.ஆர்.ஆர் தந்தை) எனலாமா :-) \\
நீங்கள் ஒன்றும் சொல்லவேண்டாம். ஆளைவிடுங்கள் போதும்.





ஜோதிஜி said...

அடுத்த முறை உங்கள் பதிவுக்கு வெறுமனே பின் தொடர உத்தேசம். பதிவை விட விமர்சனம் அளிக்கும் நண்பர்கள் அதிக சுவராசியத்தை தந்து கொண்டிருக்கின்றார்கள்.

சார்லஸ் said...

ஹலோ சரவணன்

///ஒரே வரியில்- எல்லா இசையமைப்பாளர்களையும் மதிக்கிறேன், ஆனா இளையராஜாதான் என் ஃபேவரைட் என்கிறேன். எம்.எஸ்வி. மாதிரி மேதைகளின் பாட்டைக் கேட்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியில் சிலசமயம் கேட்கிறேன். அதோடு சரி! அனுபவித்துக் கேட்பது அதிகம் ராஜா, கொஞ்சம் ஆரம்பகால ரகுமான் இவர்கள்தான். ///

மேலே சொல்லப்பட்ட உங்கள் வார்த்தைகள் என் எண்ணங்களோடும் பொருந்துவதாய் உள்ளது. மேலோட்டமாய் கேட்பது, போகிற போக்கில் கேட்பது , ஏதோ பாடுகிறதே என்று கேட்பது , வேறு வழியில்லாமல் கேட்பது என்று பலவிதமான பாடல்களை நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அனுபவித்து கேட்பதற்கென்று சில பாடல்கள், சிலரின் பாடல்கள் மட்டுமே நாம் சொல்ல முடியும். இளையராஜாவின் பாடல்கள் அத்தகையதே!


S.P.SENTHIL KUMAR said...

எம்.எஸ்.வி. காலம் முடிந்து இளையராஜா சினிமாவில் நுழைந்தபோதும் ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தது. இன்று ரஹ்மான் சந்திக்கும் எல்லா விமர்சனங்களையும் அன்று இளையராஜா எதிர்கொண்டதுதான். அப்போது ஒரு பேட்டியில் இளையராஜா பழைய பாடல்களைப் போல் புதிய பாடல்கள் நிலைக்குமா என்ற கேள்விக்கு இன்னும் 20 வருடங்கள் கடந்தபின் பாருங்கள் என்றார்.

ரஹ்மானிடமும் 10 வருடங்களுக்கு முன் இதே கேள்வியை கேட்டார்கள். அதற்கு ரஹ்மான் 30 வருடங்கள் கழித்து இன்றைய பாடல்களை கேட்டு பாருங்கள் அப்போதுதான் இந்த கேள்விக்கு பதில் புரியும் என்றார்.

சுருக்கமாகச் சொன்னால் மெலோடியாக வந்த பாடல்கள் காலங்களை கடந்து நிற்கின்றன. அதிரடி பாடல்கள் கொஞ்ச நாட்களில் காணமல் போய்விடுகின்றன. காலமும் அதிகரிக்கும் வயதும் ரசனையை கூட்டிக்கொண்டே போகிறது.

சந்தோஷ் நாராயணன், அனிருத், இமான், யுவன், ஹாரிஸ், ஏ.ஆர்.ஆர். போன்ற இன்றைய இசையமைப்பாளர்களை ரசிக்காமல் இன்னமும் இளையராஜா, எம்.எஸ்.வி. என்று இருந்தால் உங்கள் ரசனைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் வயதாகிவிட்டதாக அர்த்தம்.

Amudhavan said...

சார்லஸ் said...
\\அவர் இசையை ரசித்தவர்கள் ரசிப்பு அனுபவத்தை பகிர்கிறார்கள் . அதைப் பொதுவில் எழுதுவதே தவறு என்று வியாக்யானம் செய்வது சரியா? \\

பொதுவில் எழுதுவது தவறு என்று சொல்லவில்லை. உங்கள் தனிப்பட்ட ரசனையை மக்களின் ரசனையே இதுதான் என்பதுபோல் எழுதுவது தவறு என்று மட்டும்தான் சொல்கிறோம். அதையே பல்வேறு பெயர்களில் விடாப்பிடியாக எழுதிக்கொண்டிருப்பதால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை.

\\எந்த ஒரு இசை நிகழ்ச்சியும் இளையராஜாவின் பாடல் இல்லாமல் அது முடிவுறாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் 25 சதவீத பாடல்கள் இளையராஜாவினுடையது என்பது மறுப்பதற்கில்லை. \\

இசைக்கடவுள், எம்எஸ்வி முதற்கொண்டு எல்லாரின் காலமும் முடிந்துவிட்டது. எம்எஸ்வி இசை துருப்பிடித்துவிட்டது. யாரும் பழைய இசையைக் கேட்பதில்லை. என்றெல்லாம் கதறிக்கொண்டிருந்தவர்கள் இப்போது இவருடைய பாடல்களுக்கும் இருபத்தைந்து சதவிதம் இடமிருக்கிறது. மற்ற பாடல்களுடன் இவருடைய பாடல்களுக்கும் ஷேர் இருக்கிறது என்கிற அளவுக்கு இறங்கிவிட்டது வரவேற்கப்பட வேண்டியதே. இந்த வகையிலான சிந்தனை அப்படியே தொடரட்டும்.

Amudhavan said...

S.P. Senthil Kumar said...

\\சுருக்கமாகச் சொன்னால் மெலோடியாக வந்த பாடல்கள் காலங்களை கடந்து நிற்கின்றன. அதிரடி பாடல்கள் கொஞ்ச நாட்களில் காணமல் போய்விடுகின்றன. காலமும் அதிகரிக்கும் வயதும் ரசனையை கூட்டிக்கொண்டே போகிறது.

சந்தோஷ் நாராயணன், அனிருத், இமான், யுவன், ஹாரிஸ், ஏ.ஆர்.ஆர். போன்ற இன்றைய இசையமைப்பாளர்களை ரசிக்காமல் இன்னமும் இளையராஜா, எம்.எஸ்.வி. என்று இருந்தால் உங்கள் ரசனைக்கு மட்டுமல்ல உங்களுக்கும் வயதாகிவிட்டதாக அர்த்தம்.\\

வாருங்கள் செந்தில்குமார். உங்களின் கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றினாலும் இந்த கோட்பாடு எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்று தோன்றவில்லை. இப்போது பாரதி பாடல்களைப் படித்து விதந்தோதினால் அந்த நபருக்கு இருநூறு வயது இருக்கவேண்டும் என்று அர்த்தமா? சேக்ஸ்பியர், கம்பர், தாகூர் இவர்களின் பாடல்களையெல்லாம் வியக்கிறவர்கள், ரசிக்கிறவர்கள் நூற்றாண்டுகள் கடந்தவர்கள் ஆயிரக்கணக்கான வயதானவர்கள் என்று அர்த்தமா? தியாகய்யர், தியாகராஜர் கீர்த்தனைகளைக் கேட்பவர்கள் வயதாகிப்போனவர்கள், கிழடுக்கட்டைகள் என்று அர்த்தமா?

உங்கள் கோட்பாட்டின்படி கண்ணதாசன், பட்டுக்கோட்டைப் பாடல்களைக்கூட கேட்கவோ ரசிக்கவோ முடியாமல் போய்விடுமே. அதனால் -
கலைவடிவமும் சரி, இலக்கியமும் சரி காலத்தைக் கடந்து நிற்பவை எவையோ அவற்றையெல்லாம் ஏற்பதுதான் சரியான மனோதர்மமாகவும், நல்ல ரசனைக்குரிய அனுபவமாகவும் இருக்கமுடியும்.
புதியவர்களின் படைப்புக்கள் ரசிக்கப்படவேண்டும். அவை 'நல்ல தரத்துடன் இருந்தால்' என்பது மட்டுமே சரியான ரசனையின் அளவுகோலாக இருக்கமுடியுமே தவிர எல்லாவற்றுக்கும் காலண்டரை வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

Amudhavan said...

சார்லஸ் said...
\\அனுபவித்து கேட்பதற்கென்று சில பாடல்கள், சிலரின் பாடல்கள் மட்டுமே நாம் சொல்ல முடியும். இளையராஜாவின் பாடல்கள் அத்தகையதே!\\

அதுதான் உங்கள் இ.ராவே அறிவித்துவிட்டாரே. 'நான் இனிமேல் வாரத்துக்கு ஒரு புது ஆல்பம் வெளியிடத்தயார். நீங்கள் மட்டும் இணையத்திலிருந்து பாடல்களை டவுன்லோடு செய்யமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்தால்'- என்று. பேசாமல் அந்த உறுதிமொழியை அவருக்குக் கொடுத்துவிட்டு வாரத்துக்கு ஒரு புது ஆல்பம் என்று கேட்டுவாங்கி அனுபவித்துக்கொண்டிருங்கள். உங்களுக்கு இனிமேல் எந்நாளும் திருவிழாதான்.

காரிகன் said...

----மேலோட்டமாய் கேட்பது, போகிற போக்கில் கேட்பது , ஏதோ பாடுகிறதே என்று கேட்பது , வேறு வழியில்லாமல் கேட்பது என்று பலவிதமான பாடல்களை நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அனுபவித்து கேட்பதற்கென்று சில பாடல்கள், சிலரின் பாடல்கள் மட்டுமே நாம் சொல்ல முடியும். இளையராஜாவின் பாடல்கள் அத்தகையதே!---------

ஆமாம். ஒரு முறை மதுரை சிற்றுந்தில் பயணம் செய்ய நேர்ந்தால் சால்ஸ் சொல்வதின் அபத்தம் நன்றாகத் தெரியும். ஒரே இளையராஜா பாடல்களாக போட்டு நம்மை ஒரு வழி (வலி) செய்துவிடுவார்கள். பாதியிலேயே பஸ்ஸிலிருந்து குதித்து ஓடிவிடலாமா என்றிருக்கும். மேலோட்டமாய் கேட்பது, போகிற போக்கில் கேட்பது , ஏதோ பாடுகிறதே என்று கேட்பது , வேறு வழியில்லாமல் கேட்பது என்று சொல்கிறாரே அப்படித்தான் கேட்க முடியும். இதில் அனுபவிக்க வேண்டுமாம். கொடுமைடா சாமி.

Amudhavan said...

இன்னொன்று கவனித்தீர்களா காரிகன்? சிற்றுந்துகளில் - சிற்றுந்து என்று நீங்கள் மினிபஸ்ஸைச் சொல்கிறீர்களா, வாடகை டாக்சிகளைச் சொல்கிறீர்களா?
நாங்கள் ஒருமுறை மதுரைப் பக்கம் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வதற்கு என்று வாடகை டாக்சி அமர்த்திக்கொண்டோம். அந்த ஓட்டுநர்- இளைஞர்தான்.... வெறும் இ.ராவின் கலெக்ஷன் என்று போட்டுக்கொண்டு வந்தார் பாருங்கள், சகிக்கவும் முடியவில்லை, விரைவில் முடியவும் மாட்டேனென்கிறது. பத்துப் பாடல்களுக்கு அல்லது இருபது பாடல்களுக்கு ஒன்று- கேட்கும்படி இருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து முடியாமல்போகவே அந்த ஓட்டுநரிடம் "ஏம்ப்பா இளையராஜா என்றால் உனக்கு ரொம்பவும் பிடிக்குமா?" என்று கேட்டதற்கு அவர் சொன்னார் பாருங்கள் ஒரு பதில் "சார் இந்தப் பாட்டெல்லாம் எனக்குப் புடிக்கவே புடிக்காது சார். எனக்குப் புடிச்சதெல்லாம் இப்போதைய பாட்டுக்கள். வீட்ல எங்கப்பா கேட்பதெல்லாம் எம்ஜிஆர் சிவாஜி காலத்துப் பாட்டுக்கள். சும்மா பயணம் வர்றவங்களுக்குப் புடிக்குமேன்னு இந்தப் பாட்டைப் போடறது சார். உங்களுக்குப் புடிக்குமேன்னு போட்டேன்."
"சரிப்பா பயணம் வர்றவங்க இந்தப் பாட்டுதான் புடிக்கும்னு உங்கிட்ட கேட்பாங்களா?" என்றதற்கு "அதெல்லாம் இல்லை சார். ஆனா டாக்சி ஓட்டறவங்க எல்லாரும் இந்த சிடிக்களைத்தான் வெச்சிருப்பாங்க. அதனால நானும் வச்சிருக்கேன்" என்றார்.
டவுன் பக்கமாக ஒரு சிடி கடை வந்ததும் நிறுத்தச்சொல்லி வேறு இரண்டு சிடிக்கள் வாங்கிக்கொடுத்து போடச்சொல்லிவிட்டு இறங்கும்போது அந்த அன்பரிடமே சிடியை வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு வந்தோம்.

சார்லஸ் said...

அமுதவன் சார்

இளையராஜா இசைக்கடவுள் என்று யாரோ ஒரு ரசிகன் ஒரு முறை சொல்லியிருக்கலாம் . நீங்கள்தான் ஆயிரம் முறையாவது அந்த வார்த்தையை சொல்லியிருப்பீர்கள். மற்ற இசையமைப்பாளர்களின் பெயர்களை உச்சரிப்பதைவிட ராஜாவின் பெயரை அதிகமாய் உச்சரித்திருக்கிறீர்கள் .

பத்து மாதங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டன . அதில் 25 சதவீதம் ராஜாவின் பாடல்கள் என்பது அவர் இசைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை குறிக்கிறது. மற்றவர்களின் பாடல்கள் எல்லாம் சேர்த்து மீதி சதவீதம் . எண்ணிக்கை யாருக்கு அதிகம் என்பதே இங்கு பேச்சு. இதில் இறங்கி வந்துவிட்டோம் என்று பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?

///அதுதான் உங்கள் இ.ராவே அறிவித்துவிட்டாரே. 'நான் இனிமேல் வாரத்துக்கு ஒரு புது ஆல்பம் வெளியிடத்தயார். நீங்கள் மட்டும் இணையத்திலிருந்து பாடல்களை டவுன்லோடு செய்யமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்தால்'- என்று. பேசாமல் அந்த உறுதிமொழியை அவருக்குக் கொடுத்துவிட்டு வாரத்துக்கு ஒரு புது ஆல்பம் என்று கேட்டுவாங்கி அனுபவித்துக்கொண்டிருங்கள்.///


உங்கள் நையாண்டி புரிகிறது. இளையராஜா நவீன உலகின் யதார்த்தம் தெரியாதவரா என்ன ! அவர் படைப்புக்கென்று ஒரு விலை உண்டு. விலை இல்லாமலே இலவசமாக எல்லோரும் அதை நுகர்வதால் தயாரிப்பு செய்வோருக்கு வணிக ரீதியான இழப்பு ஏற்படுவதை தடுக்க வேறு வழி இல்லை . எனவே அவ்வாறு கூறியிருக்கலாம் . அது அவரின் வேண்டுகோள்; ஆனால் நிச்சயம் நடக்காது . இணையத்தில் எல்லாம் கிடைக்கும்போது யார் விலை கொடுத்து வாங்குவார்?

ஹலோ காரிகன்

அனுபவித்து கேட்பதற்கு நேரங்காலம் ஒன்று உண்டு . மனிதச் சந்தடியில், நாராசமாய் ஒலிக்கும் சப்தத்தில், சந்தையில், சுட்டெரிக்கும் வெயிலில் , கடுமையான உழைப்பு நேரத்தில் , வியர்வை கசகசக்கும் நெரிசலில் ராஜா பாட்டு மட்டுமல்ல , எம்.எஸ்.வி, கே. வி , குமார், ரகுமான் போன்றோரின் பாடல்களைக் கேட்டாலும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடத்தான் தோன்றும். மினி பஸ்ஸில் பாட்டு கேட்டு ரசிக்கும் ஆளா நீங்க? மட்டமான ரசனை போங்க.


வருண் said...

செந்தில்குமார்:

****சுருக்கமாகச் சொன்னால் மெலோடியாக வந்த பாடல்கள் காலங்களை கடந்து நிற்கின்றன. அதிரடி பாடல்கள் கொஞ்ச நாட்களில் காணமல் போய்விடுகின்றன. காலமும் அதிகரிக்கும் வயதும் ரசனையை கூட்டிக்கொண்டே போகிறது.***

சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்னிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருதித்தினு ஒரு பாட்டு இருக்கே.. அதெல்லாம் மெலடியா? இல்லை அதிரடியா? இல்லைனா இன்னும் வேறு வகையா?

இல்லைனா, மருதமலை மாமணியே முருகையா னு மதுரை சோமு பாடுவது மெலடியா??

இவைகள் எல்லாம் காலத்தால் அழிந்துவிட்டனவா? என்னவென்று எனக்கு விளக்கவும். நன்றி.

If there are exceptions, then please DO NOT GENERALIZE! Or at least say that there are exceptions to the "your rule"! Thanks!

-------------------
அமுதவன் சார்,

அதென்னவோ, கமலஹாசன் ரசிகர்களும், இளையராஜா ரசிகர்களும்தான் அவர்களை கீழே இறக்க ஊக்குவிக்கும் பாவிகளாக இருக்கிறார்கள். ஒரு பிரபலத்தை கீழே கொண்டு வருவது அவருடைய கண்மூடித்தனமான ரசிகர்கள்தாம் என்கிற பாடத்தை உங்க தளத்தில் வரும் விவாதங்களில் அடிக்கடிப் பார்க்கிறேன். :)

-------

ஸ்பூர்த்தியும் மற்ற சிறுவர் சிறுமியரும் "பாடும்" பச்சைக்குழந்தைகளாகத்தான் தோன்றுகிறார்கள் எனக்கு. போட்டியாளர்களாக அல்ல! இது என்னவோ எனக்குள்ள ஒரு வியாதி என்பதை சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றிப் பலரும் சிலாகித்து விவாதிக்கும்போதும் பேசும்போதும் உணருகிறேன். :)

சார்லஸ் said...

அமுதவன் சார்

நீங்களும் நானும் அல்லது நாங்களும் சூப்பர் சிங்கரைப் பற்றிய விவாதத்தை விட்டு விட்டு இளையராஜாவா மற்றவரா என்ற விவாதத்திற்குள் போய்விட்டோம். ஆனால் சூப்பர் சிங்கரில் நடந்த அரசியல் பற்றி பலரும் பலவிதமான கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . நாம் பார்க்காத ஒரு கோணத்தை ஒரு ஈழத் தமிழர் எடுத்துரைக்கிறார்.

http://tamilgun.com/video/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Anonymous said...

காரிகன், நீங்கள் 2001ல் மதுரையில் மினி பஸ்களில் பயணம் செய்திருக்க வேண்டும். அப்போது சலிக்காமல் எந்நேரமும் பரணி இசையமைப்பில் வெளிவந்த 'பார்வை ஒன்றே போதுமே' பாடல்களையே திரும்பத் திரும்பப் போடுவார்கள். (ஏ அசைந்தாடும் காற்றுக்கு, திரும்பத் திரும்பப் பார்த்து, துளி துளியாய் போன்றவை). அவர்களில் எத்தனை பேருக்கு பரணி பெயர் தெரிந்திருக்கும் எனபதே சந்தேகம்! பெரும்பாலான மக்களிடையே பிரபலமான பாடல்களைப் போடுகிறார்கள்... அவ்வளவே! இளையராஜா பாடல்களை அதிகம்பேர் விரும்புவது அவர்களுக்கு அனுபவத்தில் தெரிந்திருக்கிறது... (பை த வே தமிழ் திரை இசைப் பாரம்பரிய வரிசையில் இரண்டே படங்களின் பலத்தால் பரணிக்கும் தவிர்க்க முடியாத இடம் உண்டு.)

அமுதவன் சார், உங்கள் டாக்ஸிக்காரர் என்ன பாட்டுகளைப் போட்டாரோ. எனக்கே இ.ராவின் 5000+ பாடல்களில் 300 தான் பிடிக்கும். அந்த 300-ன் பலத்தால்தான் ராஜா இன்றைக்கும் நிற்கிறார். எம்.எஸ்.வி, சுதர்சனம், டி.ஆர்.பாப்பா என மற்ற பிரபல இசையமைப்பாளர்களுக்கு இந்த எண்ணிக்கை இன்னும் குறைவு. இதைப் புறவயமாகவே (மக்களிடம் சர்வே எடுத்தும், எஃப்.எம், மியூஸிக் சேனல்கள் உள்ளிட்டவற்றில் ஒலி-ஒளி பரப்பாகும் பாடல்களை கணக்கெடுத்தும்) நிறுவ முடியும். 'தனிப்பட்ட விருப்பங்கள்' மெஜாரிட்டியானவர்களிடம் இருக்கும்போது அதுவே 'சமூகத்தின் நிலைப்பாடாக' ஆகிவிடுகிறது :-)

சரவணன்

காரிகன் said...

அமுதவன் சார்,

மதுரை மினி பஸ்ஸைதான் குறிப்பிட்டேன். வாடகை டாக்ஸியிலும் இதே கொடுமைதானா? இது போன்ற நிகழ்சிகளை பட்டியலிட்டு குதூகலிக்க ஒரு கூட்டமே இருக்கிறது. முதலில் ஆற அமர அனுபவித்துக் கேட்க வேண்டிய இசை இ ரா இசை என்ற சால்ஸ் மினிபஸ் விவகாரம் வந்ததும் அடிக்கிறார் பாருங்கள் ஒரு யு டேர்ன். சாமர்த்தியம்தான்.

Amudhavan said...

வருண் said...
\\இல்லைனா, மருதமலை மாமணியே முருகையா னு மதுரை சோமு பாடுவது மெலடியா?? இவைகள் எல்லாம் காலத்தால் அழிந்துவிட்டனவா? என்னவென்று எனக்கு விளக்கவும்.\\

வருண் கேட்டீர்களே ஒரு கேள்வி. இன்னமும் எல்.ஆர். ஈஸ்வரியின் பல அதிரடிப் பாடல்களைக் கேட்டுக் கூட்டங்களிலேயே ஆடுகிறவர்களை, மொத்த ஆடியன்ஸூம் கைத்தாளம் போடுவதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கொஞ்சநாட்கள் முன்பு எல்.ஆர். ஈஸ்வரிக்கு பெங்களூரில் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு அவருடன் சென்றிருந்தேன். அந்தக் கன்னட விழாவில் அவரைப் பாடச்சொல்லிக் கேட்டார்கள். இரண்டு கன்னடப் பாடல்களைப் பாடினார். தமிழ்ப்பாட்டு, தமிழ்ப்பாட்டு என்று கூச்சல் எழுந்தது. எலந்தப்பயத்தையும் பட்டத்து ராணியையும் பாடினார். மொத்தக் கூட்டமும் அவருடன் ஆரவாரம் செய்து கைத்தாளம் போட்டு கொண்டாடியது மட்டுமின்றி, பலபேர் எழுந்து குத்தாட்டமும் போட்டனர். இந்தப் பாடல்களெல்லாம்கூட மெலடிதானா? என்றே கேட்கத்தோன்றுகிறது.

\அதென்னவோ, கமலஹாசன் ரசிகர்களும், இளையராஜா ரசிகர்களும்தான் அவர்களை கீழே இறக்க ஊக்குவிக்கும் பாவிகளாக இருக்கிறார்கள்.\\

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட இருவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது அந்தப் பிரபலங்களேகூட நீங்கள் சொன்ன காரியத்தை அவ்வப்போது செய்துகொள்கிறார்கள்.


Amudhavan said...

சரவணன்
\\இ.ராவின் 5000+ பாடல்களில் 300 தான் பிடிக்கும். அந்த 300-ன் பலத்தால்தான் ராஜா இன்றைக்கும் நிற்கிறார். எம்.எஸ்.வி, சுதர்சனம், டி.ஆர்.பாப்பா என மற்ற பிரபல இசையமைப்பாளர்களுக்கு இந்த எண்ணிக்கை இன்னும் குறைவு. இதைப் புறவயமாகவே (மக்களிடம் சர்வே எடுத்தும், எஃப்.எம், மியூஸிக் சேனல்கள் உள்ளிட்டவற்றில் ஒலி-ஒளி பரப்பாகும் பாடல்களை கணக்கெடுத்தும்) நிறுவ முடியும். 'தனிப்பட்ட விருப்பங்கள்' மெஜாரிட்டியானவர்களிடம் இருக்கும்போது அதுவே 'சமூகத்தின் நிலைப்பாடாக' ஆகிவிடுகிறது :-)\\

சரவணன், இதுபற்றியெல்லாம் நிறைய பேசியாகிவிட்டது. இவ்வளவு நாட்கள் கடந்து நீங்கள் சொல்லும் இந்தத் தகவலை இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களிலேயே அதிசிறந்த நகைச்சுவையாக எடுத்துக்கொள்வோம்.

Amudhavan said...

சார்லஸ் said...
\\சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடப்பட்டன . அதில் 25 சதவீதம் ராஜாவின் பாடல்கள் என்பது அவர் இசைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை குறிக்கிறது. மற்றவர்களின் பாடல்கள் எல்லாம் சேர்த்து மீதி சதவீதம் . எண்ணிக்கை யாருக்கு அதிகம் என்பதே இங்கு பேச்சு. \\
சார்லஸ் ஒன்று நீங்கள் வேண்டுமென்றே பேசிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது அறியாமையில் பேசிக்கொண்டிருக்க வேண்டும். திரும்பத் திரும்ப ஒன்றையே வலியுறுத்திச் சொல்வதாலேயே அது உண்மை போலாகிவிடும் என்ற இ.ரா ரசிகர்களின் இணைய வழக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கிறீர்கள். இதே பகுதியில் நம்முடை மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் எழுதியுள்ள இந்த நடுநிலையான பார்வையை இங்கு மறுபடியும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் கூறுகிறார்-
\\இந்தக் குழந்தைகள் எல்லாம் ரஹ்மான் பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். ரஹ்மானின் பாடல் எண்ணிக்கை எப்போதும் கூடுதலாகவேதான் இருக்கும்.இளைஞர்கள் மத்தியில் ரஹ்மானுக்கு வரவேற்பு உண்டு.வாக்களிப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே . டெக்னிக்கல் நுணுக்கங்கள் ரஹ்மானின் பாடல்களில் அதிகம் உண்டு. நேரடியாக பாடுவது மிகவும் கடினமானதாக இருக்கும் மேலும் ரஹ்மானிடம் பாடும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்பதும் ஒரு காரணம். அது ஒரு கனவு அல்லவா? நன்கு கவனித்தால் தெரியும் ரஹ்மானின் பாடல் பாடி முடித்ததும் நடுவர்கள் அனைவரும் கூடுதலாக புகழ்வதைக் காணமுடியும். இதற்கும் அதுவே காரணம் \\

முடிவுகள் பற்றிய வாதங்கள் மேலெழுந்தவாரியாக நிறைய நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதுபற்றி தற்சமயம் எதுவும் கூறுவதற்கில்லை.

Amudhavan said...


காரிகன் said...
\\மதுரை மினி பஸ்ஸைதான் குறிப்பிட்டேன். வாடகை டாக்ஸியிலும் இதே கொடுமைதானா? இது போன்ற நிகழ்சிகளை பட்டியலிட்டு குதூகலிக்க ஒரு கூட்டமே இருக்கிறது. \\

கரெக்ட். அதோ பாருங்கள் சரவணன் வந்தே விட்டார்.

Arul Jeeva said...

அமுதவன் அவர்களுக்கு , இணையத்தில் சிலர் இ.ராஜா.வின் இசையே மகத்தானது என்று பரப்புவதாகவும் ,பொதுவான தளத்தில் தனிப்பட்ட ஒருவரது விருப்பம் திணிக்கப்படக்கூடாது என்றும் அங்கலாய்க்கும் தாங்கள் எதற்கு தளம் தளமாக சென்று இ.ராஜா வின் இசையை குறைத்து மதிப்பிடுவதையே கொள்கையாக கொண்டுள்ளீர்கள்? தங்களது இப்பதிவு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து அலசி ஆராய்வதைக் காட்டிலும் இ.ராஜா.குறித்த செய்திகளே அதிகம் தெரிவதாய்ப் படுகிறது. இது கூட தனிப்பட்ட ஒருவரது வெறுப்பு தானே . எப

Arul Jeeva said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Amudhavan said...

Arul Jeeva said...
\\இணையத்தில் சிலர் இ.ராஜா.வின் இசையே மகத்தானது என்று பரப்புவதாகவும் ,பொதுவான தளத்தில் தனிப்பட்ட ஒருவரது விருப்பம் திணிக்கப்படக்கூடாது என்றும் அங்கலாய்க்கும் தாங்கள் எதற்கு தளம் தளமாக சென்று இ.ராஜா வின் இசையை குறைத்து மதிப்பிடுவதையே கொள்கையாக கொண்டுள்ளீர்கள்? தங்களது இப்பதிவு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து அலசி ஆராய்வதைக் காட்டிலும் இ.ராஜா.குறித்த செய்திகளே அதிகம் தெரிவதாய்ப் படுகிறது. இது கூட தனிப்பட்ட ஒருவரது வெறுப்பு தானே\\

அருள் ஜீவா, இந்த வாதத்திற்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கிறேன். காரிகன் தளத்தில் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். பேசிவருகிறேன். திரு தருமி அவர்கள் எழுதிய ஏதோ ஒரு பதிவுக்குச் சென்று பதில் எழுதினேன். காரிகன் சொன்னார் என்பதனாலும், இந்தத் தளத்தில் வந்து மிகவும் நாகரிகமான முறையில் கருத்துப் பதிவிடுபவர் என்ற முறையிலும் இரண்டொரு முறை திரு சார்லஸ் அவர்களின் தளத்தில் சென்று கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அது தவிர வேறு யாருடைய தளங்களுக்கும்- அதாவது இ.ராவை தினசரி ஒரு கடமைபோல் வெற்றுவார்த்தைகளால் கொண்டாடிக்கொண்டிருக்கும் யாருடைய தளத்திற்கும்- செல்வதுமில்லை, கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதுமில்லை.
அவற்றையெல்லாம் நான் படிப்பதே இல்லை. படித்தால்தானே கருத்துப்பரிமாற?
அப்புறம் எப்படி 'தளம் தளமாகச் சென்று இராவின் இசையைக் குறைத்து மதிப்பிடுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளதாக' நீங்கள் சொல்லலாம் என்பது புரியவில்லை.
ஒருவேளை நான் எழுதும் சில விஷயங்கள் மறுப்பதற்கில்லாமல் போகும்போது இப்படியான சில மனக்கற்பனைகள் உங்களுக்குள் எழலாம் என்று நினைக்கிறேன்.
அடாவடியாக இல்லாமல் ஆழமான முறையில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது அவை எல்லா இடங்களிலும் எதிரொலித்துக்கொண்டிருப்பதாக ஒரு மனத்தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இது அத்தகைய மனத்தோற்றம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் முன்புகூட ஒருவர் இதே வார்த்தகைளைத்தான் குற்றச்சாட்டு என்ற பெயரில் கூறியிருந்தார். அப்படி எங்காவது எழுதியிருப்பதாகக் கருதினால் ஒரு பத்துப்பனிரெண்டு தளங்களைக் காட்டுங்கள்.
முந்தைய பதிவிலேயே சொல்லியிருந்ததுபோல் நான் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்ப்பவன் கிடையாது. எம்எஸ்வியும், அவரைத் தொடர்ந்து ரகுமானும் அவர்களைத் தொடர்ந்து கர்நாடக சங்கீத விற்பன்னர்களும் அடுத்தடுத்து வந்தார்கள் என்பதால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகச் சில நாட்கள் பார்த்தேன்.
எல்லாரும் இதனை எந்தக் கோணத்தில் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று தெரியும். ஆனால் கோடிக்கணக்கானவர்கள் சம்பந்தப்படும் ஒரு இசை நிகழ்ச்சி - '76-க்குப் பிறகு இசையின் தலைவிதியே மாறிவிட்டது. ஒருத்தர் வந்து அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டார்' என்று இங்கே வாய் ஓயாமல் பேசப்பட்டு அதுதான் உண்மை என்பதுபோல் சித்தரிக்கப்படும் போலித்தோற்றம் இருக்கிறது. அதனை இந்த நிகழ்ச்சியே இல்லையென்று காட்டுகிறதே என்று நினைத்தேன். அதனை இங்கே சொல்லியிருக்கிறேன் அவ்வளவுதான்.
இது தனிப்பட்ட என்னுடைய வெறுப்பு அல்ல. மாறாக சில வரலாறுகள் திரிக்கப்படக்கூடாது என்பதற்காக எழுதப்படும் மறுப்பு.

Anonymous said...

அமுதவன் சார், என் பின்னூட்டத்தை அழித்துவிட்டீர்களே! சுருக்கமாக இதை மட்டும் பிரசுரியுங்கள் சார். அதாவது எது எப்படி இருந்தாலும் இ.ராஜா 1001-வது படத்தை எட்டியிருப்பது கண்டிப்பாக யாரும் செய்ய முடியாத சாதனையே. அவர் பாட்டுகள் ஒருவருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவர் இசை ஞானி எல்லாம் இல்லை, திறமைசாலிகளில் ஒருவர் மட்டுமே என்று வைத்துக்கொண்டால்கூட இதை யாருமே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்து அப்படி 1000 படங்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் என்னவோ ராஜாவை கின்னஸ் சாதனை பண்ண வைக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்திருக்க முடியாது. ஆகவே அவரிடம் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது...

சரவணன்

Anonymous said...

அமுதவன் சார், ஒரே ஒரு விளக்கம் நேற்றைய பின்னூட்டம் பற்றி- அதில் 'அக்கப்போர்' என்ன வார்த்தையை விளையாட்டாகவே குறிப்பிட்டிருந்தேன்! மற்றபடி நான் அக்கப்போர் பதிவுகளுக்காக அலைபவன் அல்ல; அப்படி இருந்தால் விஷய கணத்துடன் எழுதும் உங்கள் பதிவுக்கு எதற்கு வரப்போகிறேன்?! உங்கள் பதிவுகளின் தரம், பொறுப்புணர்வு எல்லாம் பதிவுலகில் அனைவரும் அறிந்தவையே. இருந்தாலும் அப்படி எழுதியிருக்கக் கூடாது என்று தோன்றியதால் இந்த விளக்கம். ஸாரி.

சரவணன்

Amudhavan said...

சரவணன்
\\அதாவது எது எப்படி இருந்தாலும் இ.ராஜா 1001-வது படத்தை எட்டியிருப்பது கண்டிப்பாக யாரும் செய்ய முடியாத சாதனையே. அவர் பாட்டுகள் ஒருவருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவர் இசை ஞானி எல்லாம் இல்லை, திறமைசாலிகளில் ஒருவர் மட்டுமே என்று வைத்துக்கொண்டால்கூட இதை யாருமே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்து அப்படி 1000 படங்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் என்னவோ ராஜாவை கின்னஸ் சாதனை பண்ண வைக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்திருக்க முடியாது. ஆகவே அவரிடம் ஏதோ ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது...\\

பெயர் எதுவும் இல்லாமல் அனானியாக வந்திருந்ததால் வேறு சில நண்பர்கள் அனானியாக வந்திருக்கிறார்களோ என்பதனால்தான் அதனை வெளியிடவில்லை. மற்றபடி கருத்துக்களை முன்வைத்து வாதாட இங்கு எந்தத் தடையும் இல்லை.
இ.ரா ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தவர் என்பதை அப்படியே பெருமையுடன் ஒப்புக்கொள்வதில் நமக்கு என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?
ஆயிரம் தடவைக்குமேல் மேடை நாடகங்களை அரங்கேற்றியவர் என்று எஸ்விசேகரைச் சொல்வார்கள்.
ஆயிரம் நாவல்கள் எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர் நம்முடைய ராஜேஷ்குமார்.
ஆயிரம் படங்களுக்குமேல் நடித்தவர் ஆச்சி மனோரமா.
இவர்கள் அத்தனைப்பேரின் சாதனைகளும் போற்றுதலுக்குரியதே.
இதெல்லாம்கூடப் பரவாயில்லை. ஆனால் ஐநூறு படங்களுக்கு மேல் டைரக்ட் செய்தவராக சமீபத்தில் மறைந்த ராம நாராயணனைச் சொல்வார்கள். அந்த சாதனைதான் மிகுந்த வியப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.

காரிகன் said...

அமுதவன் சார்,

ரவி பிரகாஷ் என்ற சாவி பத்திரிக்கையின் சப் எடிட்டர் எழுதிய பல கட்டுரைகள் காண நேர்ந்தது. உங்களுக்கும் தெரிந்த நிகழ்வுகளாக இருக்கலாம். இருந்தாலும் உங்கள் பார்வைக்கு

http://ungalrasigan.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF

Anonymous said...

காரிகன், ரவி பிரகாஷ் பதிவுகளை இப்போதுதான் பார்க்கிறீர்கள் என்பது கொஞ்சம் வியப்பாகவே இருக்கிறது (எனக்கு சுதர்சனத்தைத் தெரியாத மாதிரி?!) எனிவே அதில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவர்களில் ஒருவராக அழைக்கப்படிருந்த சுஜாதா, கடைசிச் சுற்றுக்குத் தேர்வான 11 கதைகளையும் படிக்கத் தரவேண்டும், வெறும் 4 கதைகளை மட்டும் தந்து விரிசைப்படுத்தச் சொன்னால் முடியாது என்று உறுதியாகச் சொல்ல, சாவிவும் படுபயங்கர டென்ஷன் ஆகி எகிறிய சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். இதுவரை படிக்கவில்லை என்றால் சர்ச் பாக்ஸில் தேடிப்படித்துவிடுங்கள். இதே மாதிரி சுஜாதா கல்கியில் விமலாதித்த மாமல்லனுக்கு மூன்றாம் பரிசாவது தரவேண்டும் என்று போராடி வாங்கிக் கொடுத்ததை முன்பு மாமல்லன் பதிவிலோ வேறு எங்குமோ படித்த நினைவு. சிறுகதைப் போட்டிக்கு நடுவராக அழைக்கப்டுவதை சுஜாதா ஏதோ சம்பிரதாயம் என்று எடுத்துக்கொள்ளாமல் எவ்வளவு தீவிரமாகத் தன் கருத்துகளுக்காகப் போராடி இருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. புதிய திறமையாளர்களை எப்பொழுதும் அடையாளம் காட்டுவதைக் கடமையாகவே கருதிச் செய்துகொண்டிருந்தவர் ஆயிற்றே.

சரவணன்

Amudhavan said...

நன்றி காரிகன், உண்மையில் அவருடைய பதிவை எப்போதோ ஒருமுறை படித்திருக்கிறேன். இப்போது நீங்கள் சொன்னபிறகுதான் அதிலும் சாவிசார் பற்றிய பல பதிவுகளைத் தேடியெடுத்துப் படித்தேன்- நெஞ்சில் ஈரக் கசிவுடன். இம்மாதிரிதான் சின்னதுக்கெல்லாம் கோபித்துக்கொள்வார் அவர். என்னுடைய விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. பிறகு அவராகவே நம்மைத் தொடர்பு கொள்வார். சுஜாதாவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட வருத்தம், பிறகு அவர்கள் இருவரையும் நான் சேர்த்து வைத்தது, அதுபற்றி சாவி என்னிடம் நெகிழ்ச்சியுடன் சொன்னது ஆகியவற்றை என்னுடைய 'என்றென்றும் சுஜாதா' புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். ரவி பிரகாஷ் பதிவுலகத்தைச் சுட்டிக்காட்டியதற்காக மீண்டும் என் நன்றி.

Anonymous said...

'என்றென்றும் சுஜாதா' புத்தகம் நீங்க எழுதியிருப்பது இப்பதான் தெரிந்தது! கிழக்கு பதிப்பகத்தின் ஒரு பிரிவான ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் உடனே ஆர்டர் பண்ணிவிட்டேன். காரிகன் ரவிபிரகாஷ் தளத்தைப் பற்றி இங்கு எழுதியிருந்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது, எனவே அவருக்கும் நன்றி! ஆன்லைன் விற்பனையில் காணப்பட்ட அந்தப் புத்தகம் பற்றி அறிமுகக் குறிப்பு வேறு ஆவலைக் கிளறிவிட்டது! புத்தகம் கிடைத்து, படிச்சப்புறம் எப்படி இருந்தது என்று பின்னூட்டமிடுகிறேன்.

சூப்பர் சிங்கர்ல ஆரம்பிச்சு எங்க போயிடுச்சு பாருங்க :-)

சாவியைப் பற்றி ஒன்று நினைவுக்கு வருகிறது. அவருக்கு இதயக் கோளாறு, பைபாஸ் சிகிச்சை பண்ண வேண்டும் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு ஹாயாக வெளிநாடு டூர் அடித்து அதைப் பற்றிப் பயணக் கட்டுரையும் எழுதினார்! பெரும்பாலோர் அந்த நிலைமையில் அடுத்த ஊருக்குப் போகவே யோசிப்போம். சாவி, சுஜாதா, ரா.கி.ரங்கராஜன் இவர்களெல்லாம் மறைந்தது ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

சரவணன்

Amudhavan said...

ஆமாம் சரவணன், நீங்க சொல்கிற மாதிரி எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது. சுஜாதாவே வியந்த, வார்த்தைக்கு வார்த்தைச் சுட்டிக்காட்டிய ஒரு எழுத்தாளர் ராகி.ரங்கராஜன். அதுபோன்ற பன்முகத்தன்மை ஒருவருக்கு வாய்ப்பது மிகவும் அரிது என்பார் சுஜாதா.
என்றென்றும் சுஜாதா நூல் படித்துவிட்டு எழுதுங்கள். பேசுவோம்.

Anonymous said...

ஸ்டாக் இல்லை என்று ஆர்டர்ரை கேன்சல் பண்ணி பணம் ஃரீபண்ட் பண்ணிவிட்டார்கள் :-( முதலில் டிஸ்கவரி புக் பேலஸில் ஸ்டாக் இல்லை போர்டு பார்த்துதான் என்.எச்.எம் போனேன். விகடன் புக்ஸ் தளத்திலும் அப்படியே! எப்படியோ ஒரு புத்தகம் விற்றுத் தீர்ந்தால் நல்ல விஷயம்தான்! மறு அச்சு விரைவில் வரும் என நம்புகிறேன். நீங்களும் பதிப்பாளரிடம் (விகடன் பிரசுரம்) காதில் போட்டு வையுங்க!

சரவணன்

Amudhavan said...

விகடன் பிரசுரத்தில் மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளேன். அவற்றில் இரண்டு புத்தகங்கள் தற்போதைய நிலைமைப்படி ஸ்டாக் இல்லை. விரைவில் கிடைக்கச்செய்வார்கள் என்று நம்புவோம்.

காரிகன் said...

சரவணன்,

நீங்கள்தான் என் தளத்தில் ஒரு முறை ரஷ்ய கதைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். நாம் அதைப் பற்றிகூட சற்று பேசியதாக நினைவு.

ரவி பிரகாஷ் சுஜாதா, சாவி சார் பற்றி எழுதிய எல்லாவற்றையும் படித்துவிட்டேன். படிக்கும்போதுதான் அமுதவனின் ஞாபகம் வந்து அவருக்கு லிங்க் அனுப்பினேன்.

நீங்கள் சொன்னதுபோலவே எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறது இந்தப் பாதை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ரவிப்ரகாஷ் அவர்களின் பதிவுகளை படித்திருக்கிறேன். .அவருடைய நிறைய பதிவுகள் சாவி மற்றும் சுஜாதா பற்றியதே.சுவாரசியமான எழுத்து நடை கொண்டவர் .
இப்போது எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

சார்லஸ் said...

சார்

இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முழுவதும் ஒவ்வொரு குழந்தைக்கும் என்னென்ன பாயிண்டுகள் கொடுக்கப்பட்டு எந்த இடத்தை பிடித்தார்கள் என்று ஒரு சமாளிக்கும் வேலையையும் ஞாயப்படுத்துதலையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . உங்களின் பதிவோ பல நண்பர்களின் கருத்தோ விஜய் டிவி குழுமத்தை சென்று சேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன் .

Amudhavan said...

ஆமாம் சார்லஸ், நண்பர்கள் சிலபேரும் இதனைச் சொன்னார்கள். இந்த 'ஞாயப்படுத்துதல்' தொடர்பாக அவர்கள் ஏதோ செய்கிறார்கள் போலிருக்கிறது.
ஆனால் நான் நிகழ்ச்சியைப் பார்த்த அன்றைக்கு ஒருவர் அமுதும் தேனும் எதற்கு என்ற பாடலைப் பாடினார். அதே ரயிலைப் பிடிக்க ஓடும் வேகம். அதாவது ஏதோ எம்பி3 சிடியில் பாடலைக் கேட்டு அதே வேகத்தில் அதே பாணியில் பாடிய விதம் ரொம்பவும் அருவெறுப்பாய் இருந்தது. ஆனால் அத்தனை so called ஜட்ஜ்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். அந்தப் பாடல்களெல்லாம் யூடியூப்பில் தன்மை மாறாமல் கிடைக்கின்றன. அதனைப் பதிவு செய்துகொண்டு நிகழ்ச்சியில் பாடவைக்கும் செயலையும் விஜய்டிவியும் அனந்தும் செய்தால் மகிழ்வேன்.

Unknown said...

இளைய ராஜாவின் இசையில் விழியில் விழுந்து இதையம் நுழைந்து, சங்கீத ஜாதி முல்லை, ஆனந்த ராகம், நானொரு சிந்து போன்ற வைரமுத்து பாடல்கள், அம்மா என்றழைக்காத, நல்லதோர் வீணை செய்தே (பாரதி - மகாகவி பாரதியார் + மறுபடியும் வாலி பாடல்கள்) எல்லாம் நெஞ்சில் நிற்பவை தான். அதே வேளையில் போறாளே பொன்னூதாயி, விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் சங்கர் கணேஷின் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம், மேகமே மேகமே போன்ற பாடல்கள் என்றும் நெஞ்சை விட்டு நீங்கதவை. இன்னும் வித்யா சாகரின் மலரே மௌனமா இமானின் எங்கிருந்து வந்தாயோ போன்ற ஏராளமான பாடல்கள் நெஞ்சை நெருட்பாக்கூடியவை.

Amudhavan said...

எல்லாரும் ஒப்புக்கொள்ளும், எல்லாருக்கும் பிடித்த சில பாடல்களையே நீங்களும் பட்டியலிட்டிருக்கிறீர்கள் கிறிஸ்டஸ் செல்வகுமார்- தங்கள் வருகைக்கு நன்றி.

பகுத்தறியாதவன் said...

இன்றுதான் நான் உங்கள் பதிவை படித்தேன், உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! இளையராஜாவின் இசை தமிழனின் இசை ( நீங்கள் சொன்னது போல அது தென் மாவட்டங்களில் வழக்கில் இருக்கிறதை மெருகேற்றி கொடிக்கப்பட்டுள்ளது ) அதனாலேயே அதற்க்கு இத்தனை ரசிகர்கள் . எம் எஸ் வி . ஏ ஆர் இசையும் ரசிக்க குடியதே அனால் அது கொஞ்சம் எங்களது ரசனைக்கு கொஞ்சம் மேலே.

Amudhavan said...

பகுத்தறியாதவன் said...
\\எம் எஸ் வி . ஏ ஆர் இசையும் ரசிக்க குடியதே அனால் அது கொஞ்சம் எங்களது ரசனைக்கு கொஞ்சம் மேலே.\\
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரியவில்லை. இருக்கட்டும். ஆனால் எம்எஸ்வி இசை 'எங்களது ரசனைக்குக் கொஞ்சம் மேலே' என்கிறீர்களே அதைத்தான் புரிந்துகொள்ளமுடியவில்லை. கண்ணதாசன் பாடல்கள், டிஎம்எஸ் , பி.சுசீலா பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் பரவிய பாடல்கள் இல்லையா? குறிப்பாக எம்ஜிஆரின் பாடல்கள் அடித்தளத்து மக்களாலும் கொண்டாடப்பட்ட பாடல்கள் இல்லையா? என்னமோ புதிதாக வேறொரு முத்திரைக் குத்தி அதனைத் தனிமைப்படுத்தப் பார்க்கும் முயற்சி தெரிகிறதே......... இவையெல்லாம் ஒப்புக்கொள்ளக்கூடிய அல்லது வெற்றிபெறக்கூடிய வாதங்கள் அல்ல.

Vaasi engira Sivakumar said...

ஆழ அகல விஷியத்தில் இளையராஜா தமிழிசைக்கு ஆற்றிய பங்கு அதிசயம் ஆச்சரியம் நுண்ணுய உணர்வுபூர்வ ஒன்று...தவிர்க்க இயலாது...கூடாது கூட

Post a Comment