Friday, May 24, 2019

அமேசானில் என்னுடைய நூல்கள்


இது கணிணி யுகம். அச்சு யுகத்தில் எல்லா இதழ்களிலும் எழுதிப் புகழ் பெற்றவர்களாக இருந்தவர்கள் கூட , கணிணி யுகத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். ஏனெனில் 'தொழில்நுட்ப மாற்றத்தால்' கணிணியிலும் கையிலுள்ள செல்பேசியிலும் 'மட்டும்தான்' - 'படிப்பது' என்ற மனநிலைக்கு இன்றைய இளைஞர்கள் வந்துவிட்டதே காரணம்.
கணிணியிலோ செல்போனிலோ படிக்கக் கிடைக்கவில்லையானால் அந்த எழுத்துக்களை அவர்கள் புறக்கணித்துவிடுகிறார்களே தவிர, புத்தகங்களைத் தேடிப்போய் படிக்கின்ற அனாவசிய வேலைகளையெல்லாம் வைத்துக் கொள்வதில்லை.
இது ஒரு பக்கம்.
அடுத்து இதழ்கள், புத்தகங்கள் என்றே தம் வாழ்நாளைக் கழித்து ஓய்வு பெற்றவர்கள்கூட தங்கள் பிள்ளைகள் இருக்கும் வெளிநாடுகளில் உட்கார்ந்துகொண்டு 'தமிழ் இதழ்களும், தமிழ் புத்தகங்களும் இந்த நாடுகளில் கிடைப்பதில்லையே என்ன செய்யலாம்?' என்று கைகளைப் பிசைந்துகொண்டு வெறுமனே உட்கார்ந்து விடுகிறார்கள்.
இவர்களின் கேள்வி என்னை நோக்கிப் பல இடங்களில் வீசப்பட்டிருக்கிறது.
"நீங்கள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?"
என்னதான் நான் கணிணியில், வலைப்பூவில்,
டுவிட்டரில் எழுதினாலும் அவை குறிப்பிட்டவர்களுக்குதான் சென்று சேருகின்றன.
இதனால் நாம் எழுதுவதையெல்லாம் நூலாகக் கொண்டு வந்துவிடலாமே என்ற எண்ணத்தில்தான் அமேசானிலிருக்கும் கிண்டிலில் எழுத ஆரம்பித்தேன்.
கேள்வி கேட்டவர்கள் உட்பட எல்லாரும் அங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.
அமேசான் கிண்டிலில் சமீபத்தில் நான் மூன்று நூல்களைப் பதிவேற்றியிருக்கிறேன்.

1) 'கங்கையெல்லாம் கோலமிட்டு...........................' இந்தியாவில் பெண்கள் பரவலாக வேலைக்குப் போக ஆரம்பித்த காலகட்டத்தில் எழுதப் பட்ட நாவல் இது. யதார்த்த குடும்பங்களின் வாழ்நிலையை, வேலைக்குப் போகிற பெண்களின் நிலைமையையும் பேசுகின்ற நாவல். எழுத்தாளர் சுஜாதா முன்னுரை எழுதியிருக்கிறார்.









2) 'லிலிபுட் மனிதர்கள்' ................................................நீங்கள் அதிகம் சந்தித்திருக்காத களங்கள். பிறவியிலேயே சித்திரக்குள்ளர்காகப் பிறந்துவிட்டவர்களைப் பற்றிய நாவல். சர்க்கஸ் வாழ்க்கையும் இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒருமுறை படித்துவிட்டால் இந்த நாவலில் வரும் பாருக்குட்டியை ஆயுசுக்கும் மறக்க முடியாது.






3) 'திரை இசையும் சில பிரபலங்களும் ......................' விஸ்வநாதன், ராமமூர்த்தி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று சகலரையும் பேசும் கட்டுரைகள் அடங்கிய நூல் இது. இதன் சில பாகங்களை வலைப்பூவில் எழுதியபோதே அவை மிகுந்த பேசுபொருளாகியிருக்கின்றன. சிலரைப் பற்றி திரைத்துறையில் இருப்பவர்களே பேச மறுக்கும் பல விஷயங்களையும் நான் இதில் பேசியிருக்கிறேன். பல சாதனைகள் செய்து விட்டுப் போயிருக்கும் நம் முன்னோர்களை நாம் அவமானப் படுத்தலாமா என்பதுதான் இந்த நூலில் நான் அடிநாதமாக எழுப்பியிருக்கும் கேள்வி.
கணிணியில் எழுதத் துவங்கிவிட்டேன். நான் ஏற்கெனவே பிரபல பத்திரிகைகளில் எழுதிய புகழ் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் மட்டுமின்றி இப்போது முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் 'ஆரோக்கிய வாழ்வு' பற்றிய நூல்களையும் இந்தப் பட்டியலில் கொண்டுவர விருப்பம்.





Sunday, May 12, 2019

போய் வாருங்கள் தோப்பில் சார்………………………………………!


‘தோப்பில் முகமது மீரான் மரணம்’- என்ற செய்தியைப் பார்த்ததும் முதலில் நண்பர் பிரபாகருக்குத்தான் தொலைபேசி செய்தேன். ஏனெனில் பெங்களூர் ராமமூர்த்தி நகரில் அவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவியின் சகோதரியார் வீட்டில் சாஃப்ட் வேரில் பணிபுரியும் நண்பர் மிர்ஸாத் என்பவர் வாடகைக்கு வந்திருக்கிறார் என்று சொன்னார். 
அது நண்பர் பிரபாகரின் வீட்டிற்குப் பக்கத்து வீடு. மிர்ஸாத் வந்திருக்கிறார் என்பதில் விசேஷமாக எந்தச் செய்தியும் இல்லைதான். ஆனால் அவர் அடுத்துச் சொன்ன செய்தியில் விசேஷம் இருந்தது. “உங்களுக்கு எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தெரியுமா? அவருடைய மகனாம் இவர். அவரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்றார்.

தோப்பில் முகமது மீரானை நான் நிறையப் படித்திருக்கிறேன். குறிப்பாக முகமதியர்களின் தமிழக கடலோர வாழ்க்கையின் ஆழத்தினை மிக அருமையாகச் சொல்லியிருப்பவர் தோப்பில். அவருடைய மலையாளம் கலந்து மணக்கும்  தமிழ் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னமும் சொல்ல வேண்டுமெனில் முகமதியர்களின் வாழ்க்கையை நிறையப்பேர் படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் தோப்பிலின் எழுத்துக்களில் இருந்த ஆழம் மற்ற எழுத்துக்களில் இல்லை. அதனால்தான் தோப்பிலுக்கு சாகித்ய அகாதமியிலிருந்து அத்தனை விருதுகளும் கிடைத்திருக்கின்றன. தமிழக அரசு விருது, தமிழ்நாடு முற்போக்கு சங்க எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, லில்லி தெய்வ சிகாமணி விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது என்று எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் பிறந்தவராதலால் கடலோர கிராமங்களை மிக யதார்த்தமாய் அவரது கதைகளில் வார்த்திருக்கிறார்.. ஆகவே அத்தனைப் பெரிய எழுத்தாளரைச் சென்று சந்திக்கும் பேற்றினைப் பெற்றிருக்கிறோம் என்ற எண்ணத்தில் “அவரும் வந்திருக்கிறாரா?” என்று கேட்டதற்கு “இல்லை. அவர் வரவில்லை. ஆனால் வருவாராம். தற்சமயம் மிர்ஸாதும் அவரது குடும்பமும் மட்டும்தான் வந்திருக்கிறார்கள்” என்றார்.

“சரி, அவருடைய அப்பா வந்தால் சொல்லுங்கள். நான் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லியிருந்தேன்.

சில மாதங்கள் சென்றன. திடீரென்று ஒரு நாள் “தோப்பில் வந்திருக்கிறார். அப்பா வந்திருப்பதாக மிர்ஸாத் உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்றார். சென்று பார்ப்பதற்காக இரண்டொரு நாட்கள் குறித்தேன். ஏனோ அவை அத்தனையும் சரியாக அமையவில்லை. 

திடீரென்று ஒருநாள் மிர்ஸாத் போன் பண்ணினார். “அப்பாவும் நானும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். இன்றைக்கு சாயந்திரம் வரட்டுமா?” என்று கேட்டார்.

வரச்சொன்னேன்.

சரியாக ஏழு மணி அளவில் மிர்ஸாதுடன் டூ வீலரில் வந்து இறங்கினார் தோப்பில்.

பளீரென்ற முகம். செக்கச் சிவந்த நிறம். ஆனால் சராசரியை விடவும் சற்றே குள்ளம்………………….

வந்து உட்கார்ந்தவர் ஏதோ பல காலம் நட்பிலிருந்தவர்போல பேச ஆரம்பித்துவிட்டார். இத்தனைப் புகழ் பெற்ற பெரிய மனிதரிடம் கொஞ்சம் கூட அலட்டல் இல்லை. அத்தனை எழுதியிருக்கிறோமே, சாகித்ய அகாதமியெல்லாம் வாங்கியிருக்கிறோமே என்ற கர்வமெல்லாம் இல்லை. சர்வ சாதாரண மனிதரைப் போல களங்கமில்லாமல் பழகினார் தோப்பில்.

அவரது எழுத்துக்கள், அவர் எழுதிய சூழ்நிலைகள், அவர் பெற்ற விருதுகள் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தபோது அவர் என்னைப் பற்றியும், என்னுடைய குடும்பம் பற்றியும், நான் எழுத ஆரம்பித்த காலம் பற்றியும், எழுத்தாளர் சாவி பற்றியும் தெரிந்து கொள்வதில்தான் மிகவும் ஆர்வம் காட்டினார்.

நான் எழுத்தாளர் அகிலன் அவர்களுடன் நெருங்கிப் பழகியவன். அகிலனுடைய சித்தரப்பாவை நாவலுக்காக ஞானபீடம் பெற்றபோது அவருடைய மகன் கண்ணனுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். அந்த விஷயங்களையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். “முகம் மட்டும்தான் வேறு. மற்றபடி உங்களுடைய தோற்றம், நடவடிக்கை, பேசுகின்ற பாணி எல்லாமே அகிலன்தான். நீங்கள் அகிலனை மிக அதிகமாக நினைவு படுத்துகிறீர்கள்” என்றேன்.

“நானும் அகிலன் ஐயாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன கோணத்தில் பார்த்ததில்லை” என்று சிரித்தார்.

சிப்ஸையும் மிக்சரையும் தவிர்த்துவிட்டு காப்பி மட்டுமே பருகினார். “நான் நாளைக்கு ஊருக்குக் கிளம்புகிறேன். என்னைப் பார்க்க நீங்கள் வருகிறேன் என்று சொன்னீர்களாம். அதில் ஒரு தடவை என்னால்தான் முடியாமல் போய்விட்டது. நாளை மறுநாள் நான் ஊருக்குக் கிளம்புகிறேன். அதனால்தான் நானே உங்களை வந்து பார்த்துவிடலாம் என்பதற்காக வந்தேன்” என்றார். அவரது பண்பு என்னை வியக்க வைத்தது.

ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, துறைமுகம், அஞ்சுவண்ணம், அனந்த சயனம் காலனி ஆகிய நூல்கள் நேரடியாக இவரது பேனாவிலிருந்து வந்தவை. மலையாளத்திலிருந்து நிறைய படைப்புக்களை மொழி பெயர்த்திருக்கிறார். பல பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனைச் சிறப்புகளைக் கொண்டவர் இத்தனை எளிமையாக நடந்துகொண்டது வியப்பாக இருந்தது.

அதன்பிறகு ஒருமுறை கன்னியாகுமரி செல்ல நேர்ந்தது. அப்போது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்த திரு கோ. தாமோதரனும் நானும் கன்னியாகுமரி சென்றிருந்தோம். அங்கிருந்த காப்பிக்காடு என்ற இடத்தில் தொல்காப்பியம் தந்த தொல்காப்பியருக்கு சிலை எடுக்கவும் மணிமண்டபம் கட்டவும் சில தமிழறிஞர்கள் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். (உண்மையில் இந்தக் காரியத்தைத் தமிழ்நாடு அரசுதான் செய்திருக்க வேண்டும்.) அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அப்படியே தோப்பில் முகமது மீரானைச் சென்று சந்தித்துவிட்டு வரலாமா என்று யோசித்தேன். ஏனெனில் காப்பிக்காட்டைத் தொடர்ந்துதான் தேங்காய்ப் பட்டினம் இருந்தது. அங்கிருந்த ஒரு தமிழறிஞரிடம் விசாரித்ததற்கு “உண்மைதான். ஆனால் தோப்பில் இப்போது அங்கே இல்லை. அவர் நாகர் கோவிலிலோ திருநெல்வேலியிலோ மகன் வீட்டிலோ மகள் வீட்டிலோ தங்கியிருப்பதாக அறிகிறேன்” என்றார்.

அதன்பிறகு மிர்ஸாதிடமும் சரியான தொடர்பு இல்லாமல் போய்விட்டது.  மிர்ஸாதும் அரபு நாடுகளில் வேலை பார்த்துக்கொண்டு பெங்களூரைக் காலி பண்ணிக்கொண்டு சென்றுவிட்டார். அவரைப் போலவே பண்புள்ளம் கொண்ட மிர்ஸாதின் நண்பர் சித்தார்த்துடனும் எப்போதாவதுதான் தொடர்பு கொள்ள முடிந்தது.

இப்போது தோப்பிலின் மறைவை ஒட்டித்தான் மிர்ஸாதைத் தொடர்பு கொண்டேன். தமது அப்பாவின் பண்பு நலன்களில் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை மிர்ஸாத். மிக மிக அருமையான மனிதர்.

தற்சமயம் அவரது மூத்த மகன் வீட்டில் நெல்லையில் உள்ள வீரபாகு நகரில் வசித்துவந்தார் தோப்பில் என்ற செய்தியை அறிய முடிகிறது. அவர் இறந்த செய்தி கேட்டவுடன் வைகோ உடனடியாக வீட்டிற்கு வந்தார் என்ற தகவலையும் வைகோவும் தோப்பிலும் முப்பது நாற்பது வருட நண்பர்கள் என்றும் சொன்னார் மிர்ஸாத். ஸ்டாலின் கனிமொழி தொடங்கி அத்தனைப் பெரிய தலைவர்களும் தோப்பில் மீரான் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளும் மிக விரிவான செய்தி வெளியிட்டிருந்தார்கள். ‘தமிழ் இந்து’ ஞாயிறன்று ஒரு முழுப்பக்கத்தையே தோப்பிலுக்கு ஒதுக்கியிருந்தது.

எத்தனைப் பெரிய அஞ்சலிகளுக்கும் உரியவர்தான் தோப்பில் முகமது மீரான்.


Wednesday, March 21, 2018

போய்வாருங்கள் நடராஜன்சார்............!


ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்குமத்தின் ஆசிரியர் ‘பராசக்தி என்று வரும். பராசக்தி என்பது முரசொலி மாறனின் புனைப்பெயர். முரசொலி மாறன் முரசொலி ஆசிரியராக இருந்தபடியே எம்பியாகவும், கலைஞருக்கு மனசாட்சியாகவும் இருந்தபடியால் துணை ஆசிரியராக இருந்த பாவைசந்திரன்தான் குங்குமம் பத்திரிகைப் பூராவையும் கவனித்துவந்தார்.

இந்த நிலையில் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக பாவைசந்திரன் குங்குமத்தைவிட்டு வெளியேறும் நிலைமை வந்தது. அது பாவைசந்திரனுக்கு ஒரு சோதனையான காலம். அப்போதுதான் இளம் மனைவியை வேறு பறிகொடுத்திருந்தார். அந்த சமயம்பார்த்து வேலையும் பறிபோய்விட்டதால் கையறுநிலை. என்ன செய்வாரோ என்றிருந்த நிலைமையில் ம.நடராஜன் கைகொடுக்கிறார் என்ற தகவல் வந்தது.

அதாவது ‘புதிய பார்வை என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதற்குத் துணை ஆசிரியராக பாவையை நியமிக்கிறார் என்பது செய்தி.

அந்தச் செய்தி உறுதியானதும் பாவை செய்த முதல்வேலை பெங்களூர் வந்து சுஜாதாவைச் சந்தித்து புதிய பார்வையில் ஒரு தொடர்கதை எழுதுவதற்கான உத்திரவாதத்தைப் பெற்றுப்போனது. ‘சின்னக்குயிலி என்ற தொடர்கதையை புதிய பார்வையில் எழுதினார் சுஜாதா. அப்போது சுஜாதா சொல்லியது ஞாபகம் இருக்கிறது. “பாவை கொஞ்சம் வித்தியாசம் பண்ணுவோம். வழக்கமாக ஜெயராஜைப் படம் போடச் சொல்வீர்கள். இந்தக் கதைக்கு ஷ்யாமைப் படம் போடச் சொல்லுங்கள். ஷ்யாம் படத்துடன் கதை வருவது வித்தியாசமாக இருக்கும்

ஷ்யாம் படத்துடன் வந்த முதல் தொடர்கதை இதுதான் எனலாம்.

இது நடைபெற்று சில காலம் சென்றபின்னர் பாவைசந்திரன் மறுபடியும் பெங்களூர் வந்தார்.

இந்தச் சமயம் புதிய பார்வையின் ஒரு இதழை ‘பெங்களூர் மலர் என்று கொண்டுவரப்போவதாகவும் அதற்காக தகவல்கள் திரட்டிப்போக வந்திருப்பதாகவும் சொன்னார்.

பாவைசந்திரன், அ.குமார், நான் மூவருமாக ஒரு மூன்றுநான்கு நாட்கள் பெங்களூரின் பல பகுதிகளுக்கும் சென்று நிறைய தகவல்கள், பேட்டிகள் எனச் செய்தோம். குழந்தை இயேசு ஆலயம், வாணிகணபதி பேட்டி, அப்போது விளையாட்டுச் சாம்பியனாக இருந்த அஸ்வினி பேட்டி என்று நிறைய செய்தோம்.

பாவை இன்னொரு அஸ்திரத்தையும் வைத்திருந்தார்.

அது கர்நாடகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த வீரப்ப மொய்லியின் பேட்டி.

அதாவது கர்நாடக முதல்வரை சுஜாதா பேட்டி காண்பது என்பது திட்டம். ‘எனக்கு அரசியல் கேள்விகள் எல்லாம் வராதுய்யா என்று சுஜாதா சற்றே பின்வாங்க, கடைசியில் நானும் சுஜாதாவும் பேட்டி காண்பது என்பதாக முடிவாகி அந்தப் பேட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

பெங்களூர் வேலைகள் அனைத்தும் நினைத்தபடி முடிந்துவிட, உடனிருந்து உதவி செய்த எனக்கும் அ.குமாருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பாவை நினைத்திருக்கக்கூடும். பாவைசந்திரன் வழக்கமாக பெங்களூருக்கு வந்தால் ஒரு நண்பரின் வீட்டில் தங்குவார். அவர் புகைப்படக் கலைஞர் யோகாவின் உறவினர். அவருக்கு பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் ஒரு பெரிய நகைக்கடை இருந்தது. மாலை எல்லா வேலைகளும் முடிந்தபின்னர் காரை அந்த நகைக்கடைக்கு விடச்சொன்னார் பாவைசந்திரன்.

அங்கே போனதும் கேட்லாக்கை எடுத்து என்னிடம் நீட்டி “இதில் எந்த டிசைன் என்பதை செலக்ட் செய்யுங்கஎன்றார். இதே போன்று அ.குமாரிடமும் நடந்தது. நாங்கள் செலக்ட் செய்து கொடுப்பதற்கு இடையில் சென்னைக்கு போன்போட்டு திரு நடராஜனிடம் அனுமதி வாங்கிக்கொண்டார். பாவையின் இந்தச் செய்கை எனக்குப் புதுமையாக இருந்தது. பத்திரிகை ஒன்றிற்காக பணியாற்றினால் தங்கநகை வாங்கித் தருவார்களா?

நான் தயங்கியபோது பாவைசந்திரன் சொன்னார். “நடராஜன்சார் அனுமதியுடன்தான் தர்றேன் வாங்கிக்கங்க

அதன்பிறகு சென்னைக்குப் போனதும் ‘பெங்களூரில் செய்த உதவிகளுக்காக நன்றி தெரிவித்து நடராஜனின் கையெழுத்திட்டு ஒரு நன்றிக் கடிதம் வந்தது. பச்சை மசியில் கையெழுத்திட்டிருந்தார் நடராஜன். குறிப்பிட்ட அந்த இதழ் வெளிவந்த பின்னர் நல்ல தொகைக்கான செக் ஒன்றும் அனுப்பிவைத்திருந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான துவந்த யுத்தம் பற்றிய செய்திகள் புலனாய்வுப் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன.

ஒரு நாள் நடராஜன் திடீரென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பத்திரிகையில் வந்திருந்தது. என்ன செய்வது என்ற குழப்பம் ஒருபுறமிருக்க வருத்தம் தெரிவித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைப்போம் என்று தோன்ற ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினேன்.

ஒரு பதினைந்து நாட்கள் சென்றிருக்கும். சிறையின் ஏகப்பட்ட முத்திரைகள் குத்தப்பட்டு ஒரு பதில் கடிதம் வந்திருந்தது. ‘தங்களின் கடிதம் பார்த்தேன். உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதனால் சிறையின் தொல்லைகள் எதுவும் தெரியாமல் நாட்களைக் கழிக்கமுடிகிறது. நிறையப் படிக்கிறேன். விரைவில் சந்திப்போம் என்பது போன்ற வரிகளில் எழுதியிருந்தார்.

அதைவிட ஆச்சரியம், கடிதம் பளபளவென்று அச்சிடப்பட்ட ஆர்ட் தாளில் முகப்பில் ஏதோ ஒரு இயற்கைப் படம்போட்ட வெளிநாட்டுக் கார்டாக அமைந்திருந்ததுதான்.

இதற்கிடையில் குமுதம் பால்யூ ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தார்.

நடராஜன் சசிகலா பற்றிய பேச்சு வந்தபோது நடராஜனைப் பற்றி மிகப்பெருமையாகப் பேசினார் பால்யூ. ‘அந்தப் பெண்ணும் சாதாரணமில்லை. ரொம்பவும் நல்ல குணம். வீட்டிற்குப் போனால் காப்பியும் சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு கர்ட்டனில் தன்னைப் பாதி மறைத்துக்கொண்டுதான் நின்று பேசும். அப்படிப்பட்ட பெண் இன்றைக்கு கமிஷனர், டிஜிபி இவங்களையெல்லாம் வீட்டிற்கே அழைத்து உத்தரவு போடுவதாக எல்லாம் கேள்விப்பட்டேன். ஆச்சரியமாக இருக்கிறது என்று சசிகலாவைப் பற்றிய தமது ஆச்சரியங்களைப் பகிர்ந்து கொண்டார்.

புதிய பார்வை பற்றிய பேச்சு வந்தது. அப்போதுதான் அந்த விஷயத்தைச் சொன்னார் பால்யூ. ‘புதிய பார்வை ஆரம்பித்து பாவையை நியமித்தது பெரிய விஷயமில்லை. கூடவே ‘தமிழரசிஎன்றொரு பத்திரிகை ஆரம்பித்து அதில் விக்கிரமனை ஆசிரியராகப் போட்டிருக்கிறார் பாருங்கள் அதுதான் பெரிய விஷயம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. நடராஜனுக்கும் சசிகலாவுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் திடீரென்று சென்னை வந்தபோது உடனடியாக அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. சில நாட்கள் தங்கியிருக்க தம்முடைய அமுதசுரபி அலுவலகத்திலேயே இடம் கொடுத்துத் தங்க வைத்தார் விக்கிரமன். புதிய பார்வை ஆரம்பிக்கும்போதே கூடவே தமிழரசி என்றொரு பத்திரிகையையும் ஆரம்பிக்கிறார். நேரே விக்கிரமனிடம்போய் தமிழரசியின் ஆசிரியராக வருமாறு கேட்கிறார் நடராஜன்.

மறுக்கிறார் விக்கிரமன். “நான் பல வருடங்களாக அமுதசுரபி ஆசிரியராக இருந்துவருகிறேன். உலகிலேயே இத்தனை வருடங்களுக்கு யாரும் ஒரே பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்ததில்லை. அதனால் இதனை விட்டுவிட்டு நான் வரமாட்டேன் என்கிறார்.

“உங்களை யார் அமுதசுரபியை விட்டுவிட்டு வரச்சொன்னது? என்கிறார் நடராஜன். “நீங்கள் பாட்டுக்கு அமுதசுரபியில் ஆசிரியராகத் தொடருங்கள். கூடவே தமிழரசியிலும் ஆசிரியராக இருங்கள். அமுதசுரபி மாதப் பத்திரிகைதானே? தமிழரசி வேலையை முடித்துவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அமுதசுரபிக்கு வேலைப் பார்த்தால் ஆயிற்று. உங்களின் ஒரே பிரச்சினை அமுதசுரபி நிர்வாகத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதுதானே? விடுங்கள்.... நான் அவர்களிடம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லுகிறேன்.

அன்றைய நிலையில் நடராஜன் கூப்பிட்டுப் பேசினால் யார் மாட்டேன் என்று சொல்லப்போகிறார்கள்?

அமுதசுரபி நிர்வாகமும் ஒப்புக்கொள்கிறது. விக்கிரமனும் ஒப்புக்கொள்கிறார். புதியபார்வை, தமிழரசி இரு பத்திரிகைகள் என்று முடிவாகிறது.

டிடிகே சாலையில் பூஜை போடப்பட்டு இரு பத்திரிகைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன.

இப்போதுதான் அந்த டுவிஸ்ட்.

பூஜை போட்டு முடிந்தவுடன் புத்தம்புதிய காரின் சாவி ஒன்றை விக்கிரமனுக்குப் பரிசளிக்கிறார் நடராஜன்.

இன்றைக்குக் கார் என்பது சகஜமாகிவிட்ட ஒன்று. மாதத்தவணை முறையில் நல்ல கம்பெனியில் வேலைப் பார்க்கும் யார் வேண்டுமானாலும் கார் வாங்கிவிடலாம். இன்றைய முக்கால்வாசிக் கார்கள் மாதத் தவணைக் கார்கள்தாம்.

அன்றைய நிலைமை அது இல்லை.

கார் என்பதே அதிசயம் என்றிருந்த காலகட்டத்தில் ஆரம்பத்தில் தமக்குச் செய்த உதவியை மறவாமல் மனதில் வைத்துக்கொண்டிருந்து தமக்கு ஒரு பெரிய வாழ்வு வந்தவுடன் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்திய மனித நேயப் பண்பு அது.

என்னுடைய மனதிற்குள் நடராஜன் நாற்காலி போட்டு உட்கார்ந்த நேரம் அதுதான்.

புதியபார்வை சரி; அது என்ன ‘தமிழரசி?

இந்தக் கேள்வியை அவரிடம் யாரோ கேட்டிருக்கிறார்கள்.

“உண்மையான ‘தமிழரசி சசிதானே? அடுத்து ஆளப்போவது சசிதான். அதனால்தான் தமிழரசின்னு பேரு வச்சி பத்திரிகை ஆரம்பிச்சிருக்கேன் – என்றாராம் நடராஜன்.

“ஜெயலலிதாவின் கோபத்திற்கு இந்தக் கமெண்டும் காரணமாக இருந்திருக்கலாம்”- என்று சொல்லிச் சிரித்தார் பால்யூ.

இதன்பிறகு ஒருநாள்.... சென்னை போயிருந்தபோது புதியபார்வை அலுவலகத்தில் பாவைசந்திரன் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.

“பாவை என்று இரைந்து கூப்பிட்டபடியே யாரோ கதவைத் திறந்தார்கள்.

நடராஜன் நின்று கொண்டிருந்தார்.

அறையில் இன்னொருவராக நான் இருப்பதைப் பார்த்ததும் “ஓ.. சாரி.. பாவை அப்புறமாக ஒரு ஐந்துநிமிஷம் என்னுடைய கேபின் வந்துட்டுப் போங்க என்று சொல்லிக் கதவை மூடிக்கொண்டார்.

“இருங்க.. இப்பவே போய்ப் பேசிட்டு வந்துர்றேன் என்று சொல்லி எழுந்துபோன பாவை, ஒரு பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். அப்படியா? போகும்போது வந்து பார்த்துட்டுப் போகச்சொல்லுங்கன்னு சொன்னாரு. போய்ப் பார்த்திருங்க என்றார்.

“இல்லை பாவை. நான் ஒரு மணிக்கு இங்கிருந்து கிளம்பியாகணும். ஒன்றரை மணிக்கு ஓரிடத்தில் மதிய சாப்பாட்டுக்கு எனக்காக காத்திருப்பாங்க. இங்கே போனால் நேரமாகிடும். நான் இன்னொரு நாளைக்கு வந்து நடராஜன்சாரைப் பார்க்கிறேன் என்றேன்.

நான் சொன்னதில் பாவைக்கு அவ்வளவு உடன்பாடில்லைஎன்பதை அவரது முகம் காட்டிற்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே போனின் இண்டர்காம் ஒலித்தது. அந்த முனையில் நடராஜன்தான் பேசினார்.

அதாவது, அன்றைக்கு மதிய உணவிற்காக எத்தனைப் பேருக்கு உணவு அனுப்பிவைக்க வேண்டுமென்று சசிகலா வினவியதாகவும் தற்சமயம் மூன்றுபேர் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என இன்னும் இரண்டுபேருக்கு எக்ஸ்ட்ராவாக- அதாவது ஐந்து பேருக்குத் தாம் சொல்லிவிட்டதாகவும் இன்றைக்கு ஸீஃபுட்தான் அனுப்புகிறார்கள் என்றும் சொல்லிப் போனை வைத்தார்.

“அவரு மதிய உணவுக்கும் சொல்லிட்டாராம். இருந்து சாப்பிட்டுட்டுப் போயிருங்க என்றார் பாவை.

‘போயஸ் கார்டனிலிருந்து அனுப்பப்படும் உணவை ருசி பார்க்கும் ஆர்வம் ஒரு புறம் இருந்தது என்றாலும் ஏற்கெனவே ஒப்பந்தமான ஒன்றைக் கேன்சல் செய்தல் ஆகாது என்பதால் அன்றைய தினத்தில் அவர்களுடன் மதிய உணவு அருந்த முடியவில்லை என்றுகூறி -

விடைபெற்றேன்.

இங்கே கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைக்கு முதல்வராயிருந்தவர் ஜெயலலிதா.

நடராஜனுக்கும் போயஸ்கார்டனுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எல்லாப் பத்திரிகைகளும் அறைகூவிக் கொண்டிருந்த காலம் அது.

ஆனால் மதிய உணவு போயஸ்கார்டனிலிருந்துதான் போகிறது.

மக்களுடன் சரியான கண்ணாமூச்சிதான் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார் ஜெயலலிதா.

ஆயிற்றா?  

இதற்குப் பின்னர் பாவை சந்திரன் புதிய தலைமுறையிலிருந்து ‘நமது எம்ஜிஆருக்குப் போய், பின்னர் அங்கிருந்து தினமணிக்கும் போய்விட்டார்.

நாம் நடராஜனுக்கு வருவோம்.

பேராசிரியர் ராமமூர்த்தி பெங்களூரில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முதல்வர். இவர் தமது மூத்த மகள் வில்வினிக்கு சென்னையின் பெரிய ஹோட்டல் ஒன்றில் திருமணம் வைத்திருந்தார். அந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மணமேடையின் 
படிக்கட்டுக்களில் ஏறிக்கொண்டிருந்தபோது இறங்கிக் கொண்டிருந்தவர் நடராஜன்.

படிக்கட்டில் வைத்துக் கைகுலுக்கிப் பேசியபோது “போங்க. போய் மணமக்களை ப்ளெஸ் பண்ணிட்டு வந்துருங்க. நான் கீழே காத்திருக்கேன் என்று சொல்லி இறங்கிப் போனார்.

மேடையின் எதிரில் எனக்காக நின்றுகொண்டிருந்தார்.

மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு புகைப்படம் எடுத்து இறங்குவதற்குள் நடிகர் சிவகுமார், அறிவுமதி, இலக்கியச் சுடர் ராமலிங்கம் என்று மேடையில் முக்கியஸ்தர்கள் குவிந்துவிட்டதால் உடனடியாக இறங்குவதற்குத் தாமதம் ஆகிவிட்டது.
மேடைக்குக் கீழே நின்றுகொண்டிருந்த நடராஜன் அவரைச் சுற்றிக் கூட்டம் கூடியவுடன் அவர்களுடன் பேசிக்கொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்துவிட்டார்.

ஆக அப்போதும் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அடுத்து பெங்களூரில் அந்த வாய்ப்பு வந்தது. முள்ளிவாய்க்காலில் அவர் நினைவுச் சின்னம் எழுப்பி அது திறக்கப்படுவதற்குச் சிறிது நாட்கள் இருந்தபோது முள்ளிவாய்க்காலுக்காக நிதி திரட்டும் பொருட்டு பெங்களூரில் ம.நடராஜன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அழைப்பு வரவே நானும் போயிருந்தேன்.

பேசுபவர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லாவிட்டாலும் ‘ஓரிரு வார்த்தைகள் பேசுவார் என்று சொல்லி என்னை அழைத்தார்கள். மேடையில் இருப்பவர்களை விளித்து நான் பேசியபோது நான் சொன்ன ஒரு வாக்கியத்திற்கு கூட்டம் படபடவென்று கைத்தட்டிற்று.

மேடையில் பக்கத்திலிருந்தவரிடம் சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்த நடராஜன் நான் என்ன பேசினேன் என்று அடுத்த பக்கத்திலிருந்தவரைக் கேட்டார். 

நான் சொன்னது இதுதான்; “மற்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன்னர் ம.நடராஜனிடம் எனக்கொரு கேள்வி இருக்கிறது. நான் முதன் முதல் பார்த்த அன்றையிலிருந்து இன்றுவரைக்கும் ஒரே மாதிரியான தோற்றத்துடன்  இருக்கிறீர்களே...நடராஜன்சார் உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

ஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார் நடராஜன்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும் “நாம நேரா ஓட்டல் சாளுக்யாவிற்குப் போய்விடுவோம். பழ.நெடுமாறன், நடராஜன் இருவருமே அங்கேதான் தங்கியிருக்காங்க. இரண்டுபேரையும் கொண்டு விட்டுட்டு பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவோம் என்று சொன்னார் பேராசிரியர் ராமமூர்த்தி.

சாளுக்யாவுக்குச் சென்று ரிசப்ஷனிலேயே அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இங்கே இடைமறிப்பு வேறொரு வடிவில் வந்தது.

கார் டிரைவர் வந்து பின்புறம் நின்றார். “சார் உங்களைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு பிறகு வந்து புரொபசரை அவர் வீட்டில் விட்டுவிட்டுப் பிறகு நான் வீட்டிற்குப் போகவேண்டும். இப்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. உங்க வீட்டிற்குப் போவதற்கே நள்ளிரவு பன்னிரண்டு ஆகிவிடும். கொஞ்சம் இப்போதே வந்தீர்களென்றால் சௌகரியமாயிருக்கும் என்று கன்னடத்தில் சொன்னார்.
டிரைவர் சொல்வதன் நியாயம் கருதி அப்போதே நடராஜனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

சில நாட்களுக்கு முன்பு சசிகலா பரோலில் வந்து தமது கணவருடன் ஐந்து நாட்கள் தங்கியிருந்து திரும்பவும் பெங்களூர் திரும்பியிருந்த சில நாட்கள் கழித்து பேராசிரியர் ராமமூர்த்தி வீட்டிற்கு வந்திருந்தார். அவர் நடராஜனுடன் மிகவும் நெருக்கம் என்பது எனக்குத் தெரியும். நான் சொன்னேன். “சார் நடராஜன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கு. ஒரு நாள் சென்னை போய் அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பிறலாமே

ராமமூர்த்தி சொன்னார். “இல்லை அமுதவன், நான் சமீபத்தில் சென்னைக்குப் போயிருந்தேன். நடராஜனைப் போய்ப் பார்த்துவரலாமென்று வீட்டிற்குப் போனேன். வெளியாள் யாரையும் பார்க்கக் கூடாது நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும் என்று டாக்டர்களின் கடுமையான கண்டிஷன். அதனால் அவரைப் பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை. டாக்டர்கள் அனுமதி அளிக்கும்வரை இதுதான் நிலைமை. பெயர் எழுதிவைத்துவிட்டுப் போங்கள் என்றார்கள். ஸ்பீடி ரிக்கவரி எழுதிவிட்டு வந்துவிட்டேன். கண்டிஷன் தளர்ந்தவுடன் நாங்களே போன் செய்து கூப்பிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் கூப்பிடுவார்கள். அப்போது நாம் இருவரும் போகலாம் என்று சொன்னார்.

ராமமூர்த்தியிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. நடராஜன் கிளம்பிவிட்டார்.

போய்வாருங்கள் நடராஜன்சார்!









Monday, February 26, 2018

ஸ்ரீதேவி நினைவுகள்.........






கர்நாடக மாநிலம் சிக்மகளூருக்கு அது இரண்டாவது பயணம். முதலில் பாரதப் பிரதமராயிருந்த இந்திரா காந்தி சிக்மகளூரு இடைத்தேர்தலில் நின்றபோது குமுதம் பத்திரிகைக்காக பால்யூவுடன் போயிருந்தேன். இப்போது இரண்டாவது முறையாக சிக்மகளூர். இந்தமுறை சிவகுமார் நடித்த ‘கவிக்குயில் படம் சிக்மகளூருவில் வெளிப்புறப் படப்பிடிப்பும், பாடல் காட்சிகளும் படமாக்கப்படவேண்டும் என்பதற்காகப் போகவேண்டியிருந்தது. சிக்மகளூருவுக்கு சிவகுமாருடன் பயணம்.

அது டிசம்பரிலிருந்து பிப்ரவரிக்குள் இருக்கும் மாதமாக இருந்திருக்க வேண்டும். காரணம் மிகவும் கடுமையான குளிரும் பனியும் சேர்ந்த காலமாக இருந்தது. தவிர சிக்மகளூர் என்பது மலை வாசஸ்தலம் கொண்ட இடம்.

விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுவிடுவார் சிவகுமார். எம்மாதிரி குளிர் பனி இருந்தாலும் அந்த நேரத்தில் எழுந்துகொண்டால்தான் காலையில் சரியான சமயத்திற்குக் கிளம்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

அவரும் அதற்கேற்றமாதிரி எழுந்து குளித்து முடித்து யோகாவெல்லாம் செய்து முடித்துவிட்டு மேக்கப் போட உட்கார்ந்துவிடுவார். அன்றைக்கும் அப்படித்தான் யோகா செய்துமுடித்து ஷேவிங் செய்ய உட்கார்ந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது.

போய்க் கதவைத் திறந்தால்  சிரித்துக்கொண்டே நின்றிருந்தவர் ஸ்ரீதேவி.

“குட்மார்னிங்.... சிவாசார் எழுந்துட்டாங்களா?’ என்றார்.

“எழுந்துட்டேம்மா. வா......ஷேவிங் செய்துட்டிருக்கேன்”.... என்றார் சிவகுமார்.

அறைக்குள் வந்தவர் தாமே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டார்.
அவ்வளவு காலையில் அடுத்தவர் அறைக்கு வந்துவிட்டு அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது என்ற சங்கடம் ஸ்ரீதேவிக்கு இருந்திருக்க வேண்டும். “சார்... உங்களுக்கு டிஸ்டர்ப்டா இருக்கோ? இத்தனைக் காலையில் வந்துட்டேனே....நீங்கள்ளாம் இன்னமும் ரெடியாகிட்டு இருக்கீங்களே? என்றார்.

‘அதெல்லாம் பரவாயில்லை. உட்கார். நாங்களென்ன ஆம்பிளைங்கதானே? ஒரு சங்கடமும் இல்லை. ராத்திரி நல்லா தூங்கினாயா?

“தூக்கமெல்லாம் நல்லா வந்தது சார். ரூமுல அம்மாவோட ரொம்பவும் போரடிச்சது. தவிர நான் குளிச்சு முடிச்சுட்டேன். மேக்கப்பும் போட்டு ரெடியாயிட்டேன். அம்மா ரெடியாகணும். குளிக்கப்போயிட்டாங்க. ரூம் போரடிக்குது. அதான் அம்மாட்ட சொல்லிட்டு இங்க வந்துட்டேன். இங்க உங்களோட இருந்தாலாவது நீங்க பேசறதைக் கேட்டுட்டிருக்கலாம். ஏதாவது அட்வைஸ் செய்தீங்கன்னாலும் நல்லாருக்கும். அதான் வந்துட்டேன் என்றார்.

“சரி சேது... தேவிக்கும் சேர்த்து இங்கேயே டிபன் கொண்டுவர ஏற்பாடு பண்ணிடு என்று அங்கிருந்த சிவகுமாரின் மேக்கப் மேனிடம் சொல்வதற்குள் முந்திக்கொண்டு சொன்னார் ஸ்ரீதேவி. “சார் எனக்கும் சேர்த்து இந்த ரூமுக்கே டிபனை அனுப்பிருங்கன்னு நான் ஏற்கெனவே யூனிட்டிடம் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். அதனால் எனக்கும் சேர்த்து இங்கேயே டிபனும் வந்துரும் என்று சிரித்தார் ஸ்ரீதேவி.

“ஓ...பக்கா பிளானோடதான் வந்திருக்கியோ? என்று கேட்டுச் சிரித்த சிவகுமார் பொதுவாகப் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தார்.

அது ஸ்ரீதேவி கதாநாயகியாக உருவாகிக்கொண்டிருந்த சமயம். பாலச்சந்தரின் படத்தின் மூலம் பயங்கரமான புகழ் வெளிச்சம் அப்போதே கிடைத்திருந்தது. கவிக்குயில் என்பது ஸ்ரீதேவி கதாநாயகியாக ஒப்பந்தமான மூன்றாவதோ நான்காவதோ படம். (இயக்குநர்களான தேவராஜ் மோகன் இருவரும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அன்னக்கிளிக்கு அடுத்து ஏறக்குறைய முப்பது படங்களுக்கான ஒப்பந்தம் அவர்களைத் தேடி வந்திருந்தது. ‘ரொம்பவும் பார்த்துப் பார்த்துத்தான் ஒப்புக்கொள்வோம் என்ற அதிகபட்ச நம்பிக்கையிலேயே மார்க்கெட்டை கோட்டை விட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அன்னக்கிளி படம் ஹிட்டானதால் பறவைகள் பெயரைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துவிட்டு அழகியல் கலந்த சென்டிமெண்ட்டை அங்கங்கே தூவி இரண்டொரு பாடல்களை ‘தேவராஜ் ரசனைக்குப் பிடித்தமாதிரி தந்துவிட்டாலேயே படம் சூப்பர் ஹிட்டடித்துவிடும் என்பது இயக்குநர் தேவராஜின் அசாத்திய நம்பிக்கை. அதனாலேயே அன்னக்கிளிக்கடுத்து கவிக்குயில் சிட்டுக்குருவி என்கிற மாதிரியே படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.) சரி, நாம் கவிக்குயில் பற்றிப் பேசுவோம்.

வெளிப்புறப் படப்பிடிப்புகள் பற்றி, அங்கே சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றி, காலையில் எழுந்து தயாராவது பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தார் சிவகுமார். அத்தனையையும் மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டார் ஸ்ரீதேவி. 

டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். “சார் கீழே போங்க. அம்மா ரெடியாயிருப்பாங்க. நான் அவங்களைப் போய்க் கூட்டிவந்துர்றேன் என்று அவருடைய அறைக்குப் போனார் ஸ்ரீதேவி.

நாங்கள் கீழே வர இயக்குநர்கள் தேவராஜ் மோகன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் ஆகியோர் கிளம்பிய கார் புறப்பட்டுக்கொண்டிருந்தது. யூனிட் வாகனத்தில் ஓடிச்சென்று சிவகுமாரின் மேக்கப் மேன் சேது ஏறிக்கொண்டார்.

எங்களுக்கான அம்பாசிடர் கார் தயாராக இருந்தது.


இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இப்போது போகப்போவது ஸ்ரீதேவியுடனான இரண்டாவது கார்ப்பயணம். நேற்றைக்கே முதல் பயணம் முடிந்துவிட்டது. நேற்று பெங்களூரிலிருந்து வந்து இறங்கி பகல் சாப்பாடு முடிந்தவுடன் அறைக்கு வந்த இயக்குநர் தேவராஜ் “சிவா இன்றைக்கு மதியம்போய் ஒரு அரை நாள் ஷூட்டிங் முடிச்சிருவோமா? ஸ்ரீதேவிக்கான பாட்டு லொக்கேஷன் ஒண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீயும் இரண்டொரு ஷாட்ல வரணும். கிளைமேட் நல்லாருக்கு. பாதிப் பாடல் முடிச்சிட்டு வந்துருவோமா? என்று கேட்டார்.

வெளிப்புறப் படப்பிடிப்பு போகும் நட்சத்திரங்கள் பெரும்பாலும் எவ்வளவு விரைவாக படப்பிடிப்பு முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்துவிட எண்ணுவார்கள். அதனால் எந்த நேரம் கூப்பிட்டாலும் உடனடியாகப் போய் முடித்துவிட்டு வர ஆர்வமாக இருப்பார்கள். சிவகுமார் ‘டெடிகேட்டட் ரகம். அதனால் உடனடியாய் தயாராக இருந்தார்.

“தேவிகிட்ட சொல்லியாச்சா? அந்தப் பொண்ணு ரெடியா? என்றார்.

“ஓ, சொல்லிட்டேன். பத்து நிமிஷத்துல தயாராயிர்றேன் சார்னு சொல்லிருச்சி. தயாராயிருக்கும். தேவியைக் கூப்பிட்டுட்டு நீங்க வந்துருங்க. நான் முன்னாடி போறேன் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார்.

இயக்குநர் கிளம்பிச் சென்றவுடன் நாங்களும் கிளம்பத் தயாரானோம். கீழே அம்பாசிடர் காரும் ஸ்ரீதேவியும் அவர் அம்மாவும் இருந்தார்கள்.

இங்கேதான் ஒரு சின்னப் பிரச்சினை.

பட யூனிட் மொத்தமும் போய்விட்டிருந்தது. இன்னமும் புறப்பட வேண்டியவர்கள் கதாநாயகனும் கதாநாயகியும்தான். அவர்கள் இருவரும் இதோ தயாராக நிற்கிறார்கள்.

சிவகுமாரும் மேக்கப்மேன் சேதுவும் ஒரு பக்கம். அந்தப் பக்கம் ஸ்ரீதேவியும் அவரது தாயாரும். இவர்கள் நான்கு பேர். இப்போது நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்.

இருப்பது ஒரே ஒரு கார்தான்.

நாங்களே ஆறுபேர். டிரைவரைச் சேர்த்து ஏழுபேர் ஆகிறது. என்ன செய்யலாம்?

நான் சிவகுமாரிடம் சொன்னேன். “சார் நீங்க கிளம்புங்க. நாங்க ரூம்ல இருக்கோம். இல்லைன்னா ஊரைச் சுத்திப்பார்த்துகிட்டு இருக்கோம். நீங்க ஷூட்டிங் முடிச்சு வந்துருங்க

சிவகுமார் இன்னொரு யோசனை சொன்னார். “சேதுவும் கிருஷ்ணமூர்த்தியும் முன்பக்கம் டிரைவரோட உட்கார்ந்துக்கட்டும். நாம பின்னாடி நாலுபேர் அட்ஜஸ்ட் செய்துகிட்டுப் போயிருவோம்

இந்த இடத்தில்தான் நிறையக் கதாநாயகிகள் ‘எனக்குத் தனியாகக் கார் வேண்டும். அட்ஜஸ்டெல்லாம் பண்ணமாட்டேன் என்றெல்லாம் கேட்டு அடம் பிடிப்பார்கள். இதுபற்றிய நிறையக் கதைகள் திரைஉலகில் உள்ளன.

ஆனால் ஸ்ரீதேவியுடைய அம்மா சொன்னார்கள் பாருங்கள் ஒரு பாயிண்ட்..... எல்லாரும் அப்படியே அசந்து போனோம்.

சிவகுமாரைப் பார்த்து அவர் சொன்னார். “உங்களுக்கு ஒரு கவலையும் வேணாம். எனக்குக் கொஞ்சுண்டு இடம் கொடுத்தால் போதும். நான் உட்கார்ந்துக்குவேன். பாப்பா (ஸ்ரீதேவி) என் மடியிலதான் உட்கார்ந்துக்கும். அதுக்கு தனி சீட்டெல்லாம் கேட்காது.

பின்னர் அதே போல்தான் எங்கள் பயணம் அமைந்தது.

இறுக்கி அடித்துக்கொண்டு நாங்கள் அமர்ந்துவர அதேபோல ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டுதான் ஸ்ரீதேவியும் அவரது அம்மாவும் பயணித்தார்கள்.

மறுநாள் விஷயமும் இதேபோல்தான்.

ஸ்ரீதேவி அவரது அம்மாவின் மடியில் அமர்ந்துதான் பயணித்தார்.

முதல்நாள் ஒரு பாடல்......குயிலே கவிக்குயிலே யார்வரவைத் தேடுகிறாய்... மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா? என்ற பாடலை சுற்றிலும் மலைகள் இருக்கும் ஒரு ரம்மியமான இடத்தில் படமெடுத்தார்கள். சிவகுமாரையும் சேர்த்து எடுத்த காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன். முழங்கால் தெரியும் பாவாடை தாவணியுடன் ஸ்ரீதேவியை அங்கேயும் இங்கேயும் ஓடவிட்டு ‘இளமை சதிராடும் தோட்டம் காலம் கனியானதே என்ற அடியை முழுக்க முழுக்க அன்றைக்குப் படமாக்கினார்கள்.

மறுநாள் சிவகுமார் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே பாடும் பாடல். ஸ்ரீதேவி ஓடிவருவதுபோல் காட்சி. பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கும் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலின் படப்பிடிப்பு அந்தப் பகுதியில் நடைபெற்றது. பாலமுரளி  பாடியிருக்கும் பாடல் என்ற விவரமும், ரீதி கௌளை ராகத்தில் அமைந்திருக்கும் பாடல் என்ற தகவலும் அங்கே கசியவிடப் பட்டிருந்தன. பாதிப் படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்ரீதேவியை அனுப்பி ராதை வேடம் அணிந்துகொண்டு வரச்சொன்னார் இயக்குநர். அந்த வேடத்தில் அதே பாடலுக்காக நான்கைந்து காட்சிகள் படமாக்கப்பட்டன.

ஏறக்குறைய இந்த நாட்களில்தான் எனக்கு நடிகர் கமலஹாசனின் அறிமுகமும் ஏற்பட்டிருந்தது. பெங்களூர் மோதி மஹால் ஓட்டலில் முதன்முதலாக கமலைச் சந்தித்தேன். குடிசை படத்தின் இயக்குநர் ஜெயபாரதி தினமணி கதிரில் துணை ஆசிரியராக இருந்தார். பரீட்சார்த்த முறையில் தமிழில் படம் எடுக்கவேண்டும் அதுவும் முதல் படமாக குடிசை படத்தை எடுக்கவேண்டுமென்று அவருக்குத் தீராத ஆசை. அதற்காக என்னென்னவோ வழிகளில் முயன்றார். முதலாவதாக ஒரு குழுவை ஏற்படுத்தினார். அதில் மனோபாலா, ராபர்ட் ராஜசேகரன், பாலகுமாரன், மாலன் தொடங்கி நான்வரை இருந்தோம்.

படமெடுப்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை பெங்களூரிலிருந்து செய்வது என்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது.

அப்போது இந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் விதமாக கமலும் இணைந்திருந்தார்.

பெங்களூர் வரும் கமலைச் சந்தித்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார் ஜெயபாரதி. கமலிடமும் என்னைப் பற்றிச் சொல்லி அனுப்பியிருந்தார்.

மோதி மகாலில் கமலைச் சந்தித்து நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதிலும் கமல் பேரார்வத்துடன் இருந்த நேரம் அது.

நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் நடிப்பது குறித்தும் பேசினார் கமல். ரஜினியுடன் சேர்ந்து அவர் நடிக்கும் படத்தின் கதையைத் தமக்குத் தெரிந்த முறையில் சொன்னார். அந்தப் படப்பிடிப்பிற்காகத்தான் வந்திருப்பதாகவும் சிவசமுத்திரத்தில் ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னைப் பாடலின் படப்பிடிப்பு நடைபெறப்போவதாகவும் சொன்னார்.(கடைசியில் அந்தப் பாடல் ‘தொட்டத ஆலமரா என்றழைக்கப்படும் பெரிய ஆலமரம் பகுதியில்தான் படமாகியது)

இங்கே இந்தத் தகவல் எதற்கு எனில், கண்ணதாசன் எழுதி எம்எஸ்வி இசையமைத்திருந்த அந்தப் பாடலை மிக அழகாகப் பாடிக்காட்டினார் கமல்.

அதாவது, ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னை நான்அடைந்த நேரம்- கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம் என்பது கண்ணதாசனின் பாடல்.

அதனை ‘தேவி உன்னைத் தேடிவந்து நான் அடைந்த நேரம் என்பதுபோல் தொடங்கி இங்கே பகிர்ந்துகொள்ள முடியாத அளவு வார்த்தைகளில் விரசம் வடித்து அதே மெட்டில் கமல் எழுதிய பாடலைச் சொன்னார்.

அந்தப் பாடலை ஸ்ரீதேவியிடம் பாடிக்காட்டியதாகவும் ஸ்ரீதேவி அந்தப் பாடலைக் கேட்டு எத்தனைச் சிரித்தார் என்பதையும் சொன்னார்.

கமல் மூலம் கிடைத்த ஸ்ரீதேவியின் அறிமுகம் இது. (கமலிடம் இம்மாதிரியான சேட்டைகள் நிறைய இருந்தன. பிரபலமான பாடல்களில் வேறுவரிகளைப் போட்டு சக நண்பர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் பாடிக்காட்டுவார் கமல். அவரிடம் இருக்கும் பல்வேறு திறமைகளில் இதுவும் ஒன்றாக கிளை பரப்பி ‘கமல் பெரிய புத்திசாலிப்பாஎன்ற பேச்சுப் பரவ அவருடைய இம்மாதிரியான செய்கையும் அந்த நாட்களில் சிறப்பான ஒன்றாக இருந்தது.)

அதன்பிறகு ஸ்ரீதேவியை நினைவு படுத்தியவர் பாரதிராஜா.

சுஹாசினியை வைத்து ‘கொத்த ஜீவிதலு என்ற தெலுங்குப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் பாரதி ராஜா. புதிய வார்ப்புகளின் தெலுங்குத் தழுவல் இது. இதற்காக சிவசமுத்திரம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் மனோபாலா அப்போது பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்டாக இருந்தார். அவர் அழைப்பில் சிவசமுத்திரம் சென்றிருந்தேன். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் வழியில் அங்கங்கே காரை நிறுத்திவிடுவார் பாரதிராஜா.

அந்தப் பகுதியில்தான் பதினாறு வயதினிலே படத்தின் படப்பிடிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

அந்த நினைவுகளின் சுவடுகளை அவரால் மறக்க முடியவில்லை. ‘இங்க பாருங்க..... இங்கிருந்துதான் ஸ்ரீதேவி நடந்து வருவா.... இதோ இந்த இடத்துலதான் ஸ்ரீதேவியின் குடிசை இருந்தது. இதான் கமல் நடந்துவரும் ஒற்றையடிப் பாதை. இங்கிருந்துதான் ஸ்ரீதேவி பாடலைத் துவங்குவா..... என்று அந்தக் காலத்திற்கே மயிலுவுடன் நடந்து சென்று நினைவு கூர்வார் பாரதிராஜா. இது ஸ்ரீதேவியைப் பற்றிய மூன்றாவது நினைவு.

அடுத்ததாக ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் விதமாக வேறொரு தகவல் சொல்லப்பட்டது.

அது காதல் மன்னன் பாலுமகேந்திரா பற்றிய கதை.

அதாவது, ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பாலுமகேந்திரா நடிகை ஸ்ரீதேவியைத் தமது வலையில் வீழ்த்திவிடுவதற்குப் பெரிதும் முயன்றிருக்கிறார். அதற்கென அவர் கையெலெடுத்தது காமிராவை. படப்பிடிப்பின்போதும் சரி, படப்பிடிப்பு முடிந்துவிட்டபிறகும் சரி ஊட்டியில் பல இடங்களில் பல வெளிச்சங்களில், பல பின்னணிகளில், மலர்களுக்கிடையில், மரக்கிளைகளுக்கிடையில் என்று வைத்து அவர் பாட்டுக்கு தினசரி படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டே இருப்பாராம். மற்றவர்களை படப்பிடிப்பு முடிந்ததாகச் சொல்லி அறைகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஸ்ரீதேவியையும் இன்னும் சிலரையும் மட்டும் வைத்துக்கொண்டு இதனைச் செய்வாராம். “சார் போதும் விட்ருங்க சார் என்று ஸ்ரீதேவி கதறும்வரை இது நடைபெறுமாம்.

ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒரு அழகிய பெண்ணைத் தாம் கருதும் கோணங்களில் எல்லாம் புகைப்படம் எடுப்பதில் என்ன தவறு? இது அழகியல் உணர்வல்லவா.....? என்று கேட்கத் தோன்றும்.

உண்மைதான்.

ஆனால், விஷயம் இதற்கு மேலேதான் இருக்கிறது. அப்படி எடுத்த புகைப்படங்களில் சிறந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதனைப் பெரிதாக்கிப் புகைப்படமாகப் போட்டு அதனை பிரேம் செய்துகொண்டு வரவேண்டும் என்று தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்களை நெருக்குவாராம். அதுவும் அன்றைக்கு இரவே வரவேண்டுமாம்.

கூடவே ஒரு பெரிய பூச்செண்டையும் வாங்கி வரச் சொல்வாராம்.

மறுநாள் படப்பிடிப்பிற்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்று பயப்படும் தயாரிப்புத் தரப்பு இயக்குநர் சொல்வதைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றும்.

எப்படி?

இன்றைய காலகட்டம் வேறு.

மூன்றாம் பிறை எடுக்கப்பட்ட காலகட்டம் வேறு அல்லவா?

அன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்போதே பிரிண்ட் போடும் அளவிற்குத் தொழில் நுட்பவசதிகள் ஊட்டியில் கிடையாது. அதனால் அந்த இரவிலேயே அல்லது மாலையிலேயே புறப்பட்டு கோயம்புத்தூருக்கு வரவேண்டும். குறிப்பிட்ட ஸ்டுடியோவில் வந்து பிரிண்ட் போட்டு பிரேமும் பண்ணிக்கொள்ள வேண்டும். அதற்குள் எங்கோ சென்று பொக்கே வாங்கிக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் கொண்டுவந்து இயக்குநரிடம் தந்தால் அவர் காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனவரிகள் எழுதி அந்த நள்ளிரவு நேரத்திலேயே நடிகை ஸ்ரீதேவியை எழுப்பி அதனைப் பரிசாக வழங்குவாராம்.

இந்த  ஒரு செய்கையிலேயே அந்தப் பெண் மயங்கிவிடுவார் என்று காமிராக் கவிஞர் எதிர்பார்த்திருக்க ஸ்ரீதேவியோ இதனை ஒரு டார்ச்சராகத்தான் நினைத்தார் என்பதுதான் பரிதாபம்.

படம் அழகியலுக்காகவும் ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பிற்காகவும் பெரிதாகப் பேசப்பட்டது. வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து நடைபெற்றதுதான் சோகத்திலும் சோகம்.

சிறந்த நடிப்பிற்கான கதாநாயகி விருதுக்கு ஸ்ரீதேவி மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் கசிந்தன.

மிகச்சிறப்பான நடிப்பிற்கு மூன்றாம் பிறை நிச்சயம் பரிசு பெறும் என்று எல்லா தரப்பினராலும் நம்பப்பட்டு, எழுதப்பட்டு, பேசப்பட்ட ஒரு விஷயம் அது.

இரண்டொரு நாட்கள் கழித்து முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

சிறந்த நடிப்பிற்கான பரிசு மூன்றாம் பிறை படத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஸ்ரீதேவிக்கு அல்ல மாறாக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான பரிசு என 
அறிவிக்கப்பட்டது.

கமலஹாசனை நிருபர்கள் இதுபற்றிக் கேட்டபோது “எனக்கு சிறந்த நடிகருக்கான பரிசுதான் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர சிறந்த நடிகைக்கான பரிசு வழங்கப்படவில்லையே. ஆக, சிறந்த நடிகைக்கான பரிசை ஸ்ரீதேவியிடமிருந்து நான் எப்படித் தட்டிப் பறிக்க முடியும்? என்று சமத்காரமாக பதிலளித்தார்.

இதுபற்றிப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இப்படிச் சொன்னார். “இம்மாதிரியான அட்ஜஸ்ட்மெண்டுகள் எல்லாம் டெல்லியைப் பொறுத்தவரை சாதாரணம்தான். ஏன் ஒரு சமயம் சிந்துபைரவி படத்திலிருந்து சிறந்த நடிகருக்கான விருதுக்கு சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த விஷயம் கேள்விப்பட்ட ஒரு முக்கியஸ்தர் உடனடியாக டெல்லிக்குப் போனார். சிந்துபைரவிக்கு ஒரு விருது என்றால் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட வேண்டுமே தவிர சிவகுமாருக்கு அல்ல என்று லாபி செய்தார். பின்னர் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட்டது. இந்த விஷயம் சிவகுமாருக்கே தெரியுமா என்பது தெரியவில்லை என்றார் அந்தப் பத்திரிகையாள நண்பர்.

மூன்றாம் பிறை படத்திற்காகத் தமக்கு விருது இல்லை என்ற ஏமாற்றம் ஸ்ரீதேவியிடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது என்று சொல்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். “ஸ்ரீதேவியின் முகத்தில் ஒரு நிரந்தர சோகம் இருந்தது. இதனை நீங்கள் பல ஆண்டுகளாகவே பார்க்கலாம். அவர் திருமணமாகி பம்பாய்க்குப் புறப்படுவதற்கு முன்பேயே இந்த சோகம் இருந்தது.அதன் காரணம் ஒன்று அல்ல. நிறைய காரணங்கள் இருக்கலாம் என்பது அவரை அறிந்தவர்களின் கூற்று.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீதேவி பல விஷயங்களில் அதிர்ஷ்டம் வாய்ந்தவர். ஒரு கதாநாயகிக்கு எந்த அளவு புகழும் பெயரும் கிடைக்கவேண்டுமோ அதனைத் தாண்டி பன்மடங்கு பெயரும் புகழும் பெற்றவர் அவர்.

அதாவது 1976ம் வருடத்தை எடுத்துக்கொண்டால், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரிய மாற்றம் அந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது. உண்மையில் அதற்காக வித்திட்ட படங்களாக அன்னக்கிளியையும், ஒருதலை ராகத்தையும்தான் சொல்லவேண்டும். ஆனால் அன்னக்கிளி இளையராஜாவுக்கும், அதேபோல ஒருதலை ராகம் டி.ராஜேந்தருக்கும்தான் மிகப்பெரிய இடங்களைக் கொடுத்ததே தவிர, அதில் பணியாற்றிய மற்றவர்களுக்கெல்லாம் சாதாரண பலன்களையே தந்தது.

உதாரணத்திற்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான, மிக அரிய திறன் படைத்த சாவித்திரி, பத்மினி போன்றவர்களெல்லாம் ஒன்றுமே இல்லாமல் ஆக்கப்பட்டு, அல்லது அவர்களுடைய பெயர்கள் முழுவதுமாக மறக்கடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் பெயர் மட்டுமே ‘நடிகைகள் என்ற பட்டியலில் நிலைநிறுத்தப்பட்டது.

சிறந்த நடிகை யார்?

ஸ்ரீதேவி.

சிறந்த ஒளிப்பதிவாளர் யார்?

பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம்.

சிறந்த இசையமைப்பாளர் யார்?

சிறந்த இசையமைப்பாளரெல்லாம் கிடையாது. ஒரேயொரு இசையமைப்பாளர்தான். அவர் இளையராஜா. அவர்தான் இசைப்பிரம்மா, அவர்தான் இசைக்கடவுள், அவர்தான் ராகதேவன், அவர்தான் இசைஞானி

சிறந்த இயக்குநர் யார்?

சிறந்த இயக்குநர் இருவர். அவர்கள் பாரதிராஜா, மணிரத்தினம்.

பிரமாண்ட படங்களைத் தமிழில் எடுத்தவர் யார்?

சங்கர்.

-தமிழ்த்திரையுலகம் இந்த வரையறைக்குள் ‘யாராலோ கொண்டுவரப்பட்டுவிட்டது. அதன்பிறகு முளைத்த இணையம் இந்த வரையறையை அப்படியே ‘சுவீகரித்துக்கொண்டு பேசும் படக் காலத்திலிருந்து தமிழ்த்திரையுலகை இன்றுவரைக்கும் தங்கள் திறமையாலும், சாதனைகளாலும் யாரெல்லாம் வளர்த்தெடுத்து வந்தார்களோ அவர்களை எல்லாம் இரக்கமே இல்லாமல் இருட்டடிப்புச் செய்து மகிழ்ந்தது.

ஒன்றுமில்லை, உத்தம புத்திரன் படத்தில் கேஎஸ்கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே என்ற பாடலுக்கு ஒரு இடத்தில் மல்லாக்காக அப்படியே வளைந்து தரையைத் தொடுமளவுக்குப் போவார் பத்மினி. இம்மாதிரி வில்லைப்போல் வளைவது எல்லாம் இன்றைய நடிகைகளிடம் எதிர்பார்க்கமுடியாது. அதே பத்மினி சித்தி படத்தில் ‘பெண்ணாகப் பிறந்தவற்குஎன்ற கண்ணதாசன் பாடலில் காட்டும் முகபாவங்களும் உடல்மொழியும் வேறு ரகம்.

வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தி மாலாவுடன் ஆடும் போட்டி நடனம் ஆகட்டும், நாற்பதாவது வயதில் தில்லானா மோகனாம்பாளில் மோகனாம்பாளாக வடித்துக்காட்டியிருக்கும் பாத்திரப்படைப்புகளெல்லாம் கற்பனைக்கு எட்டாதவை.

சாவித்திரியின் ஒவ்வொரு படமும் நடிகைகளுக்கு ஒரு பாடம். நவராத்திரி, பாசமலர் போன்ற படங்களாகட்டும், பார்த்தால் பசிதீரும், கைகொடுத்த தெய்வம் போன்ற படங்களாகட்டும் சாவித்திரியின் நடிப்பிற்கு..... அந்தத் திறமைக்கெல்லாம் ஈடாக இன்னொருவரையெல்லாம் சொல்ல முடியாது.

ஆனால் இன்றைய சினிமா ரசிகனுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவன் நடிகையென்றால் ஸ்ரீதேவி மட்டுமே என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டான்.

அதேபோல தமிழ்திரை இசை என்பது எஸ்விவெங்கட்ராமன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமனாதன் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன்பிறகு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரால் இன்றைய நிலைமைவரைக்கும் வடிவமைக்கப்பட்டு பிறகு எம்எஸ்வியால் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு இன்றுவரைக்கும் வந்து நிற்கிறது.

ஆனால் இன்றைய திரைஇசை ரசிகனுக்கு இவர்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவனுக்குத் தெரிந்தது இளையராஜா, இளையராஜா, இளையராஜா மட்டுமே.

நல்லவேளை, ஏ.ஆர்.ரகுமான் வந்து இந்த ராஜா காய்ச்சலைக் கொஞ்சம் தடுத்து நிறுத்தினார். இல்லாவிட்டால் இது எங்கே போய் நின்றிருக்குமோ தெரியவில்லை.

ஜி.ராமனாதன் இசையமைத்த பாடல்களைக் கேட்டால் தெரியும்.... ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் பயணித்து மீண்டும் பழைய ராகத்துக்கே கொண்டுவந்து அந்தப் பாடலை முடிப்பார். ஐயா, குறைந்தது ஒரு இருநூறு பாடல்களிலாவது இந்த யுத்தியைக் கையாண்டிருப்பார் அவர்.

சில பாடல்களில் பயணிக்கும் ராகங்கள் நான்கைந்துகூட இருக்கும். இந்தவகைப் பாடல்களுக்கு ராகமாலிகா என்று பெயர்.

இந்த வகையிலான பாடல்களை ஒரு படத்திற்கு நான்கைந்தாவது போடுவார் ஜி.ராமனாதன். அந்தக் கால வழக்கமும் அப்படித்தான் இருந்தது.

அதையெல்லாம் ‘கவனிக்கஇன்றைய ரசிகனுக்குத் தெரியாது.

ஏதாவது ஒரு படத்தில் ஏதோ ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் இளையராஜா வந்து முடித்திருந்தாரென்றால் ஆயிற்று. தையா தக்கா என்று இவன் குதிக்கும் குதிப்புக்கு தாய்லாந்தே ஆடிப்போகணும். அந்தப் பாடலைத் தூக்கிக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்துக்கே போய்விடுகிறான். ‘இந்தப் பாட்டு மலயமாருதம் ராகத்தில் ஆரம்பிக்கிறது. பின்னர் அதனை அப்படியே பிலஹரிக்குக் கொண்டுபோகிறார் என்று இவனுக்குத் தெரிந்த புருடாவை இவன் அவிழ்க்கும்போதுதான் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது.

அடே மண்டூகங்களே.... இந்தச் செய்கையைத்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும் ‘தீவிரமான கர்நாடக சங்கீத மெட்டுக்கள் திரைப்படங்களுக்குத் தேவையில்லை. அவற்றின் அடிப்படை ராகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதிலிருந்து மெல்லிய தென்றல் தவழ்ந்துவருவதுபோல் மேலோட்டமான ராகங்களை மட்டும் தரலாம் என்று மாற்றியமைத்தார்கள் 

– அதனால்தான் அவர்கள் ‘மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன? (இந்தப் பணியில் இந்தி இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பங்குண்டு) அந்த ‘மெல்லிசையைத்தான் இளையராஜாவும் ஏனைய இசையமைப்பாளர்களும் இன்றைக்கும் திரையில் போட்டு வருகின்றனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன?

ஒரு ராகத்தை ஆரம்பித்து அதனை அப்படியே வேறொரு ராகத்திற்கு மாற்றும் முயற்சிகளை பல இசையமைப்பாளர்கள் அசால்டாகச் செய்திருக்கிறார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு இசைக்கோர்வையைக் கர்நாடக சங்கீதத்தில் ஆரம்பித்து ஆங்கில் நோட்ஸில் கொண்டுவந்து முடிப்பார் கேவிஎம்.

இதெல்லாம் ‘இசையமைப்பாளரின் கடமை என்பதாக அவதானித்த இன்றைய இசை ரசிகன், இளையராஜா இதையே சிந்துபைரவியில் கர்நாடக இசையில் ஆரம்பித்து நாட்டுப்புற மெட்டில் கொண்டுவந்து முடித்ததை இன்னமும் இசையுலகில் எவருமே முயன்று பார்க்காத, முடியவே முடியாத அசாத்திய திறமை என்பதாக மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான்.

தமிழ்த்தாத்தா யார்?

உ.வே.சா.

தமிழின் நீதி நூல்கள் எவை?

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் மற்றும் எத்தனையோ தனிப்பாடல்கள்...
கம்பராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள், சங்கப்பாடல்கள்... இந்த வரிசையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.

இலக்கியம், இலக்கணம் குறித்தெல்லாம் சரியான பார்வைதான் இருக்கிறது.

சினிமா என்று வரும்போதுதான் எக்குத்தப்பான கருத்துக்கள் புகுந்துகொண்டு சிரமப்படுத்துகின்றன.
எப்படியோ தப்பித்தவறி சிவாஜியை மாபெரும் நடிகரென்றும், எம்ஜிஆரைத் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் கண்ணதாசனை மிகப்பெரும் பாடலாசிரியர் என்றும் ஒப்புக்கொண்டுவிட்டான். இங்கெல்லாம் வரிசை சரியாகத்தான் இருக்கிறது. வேறு விஷயங்கள் என்று வரும்போதுதான் குபீரென்று ஒரு பல்டி.

‘முந்தா நாளிலிருந்து மட்டுமே கணக்கைத் தொடங்க வேண்டிய ஏதோ ஒரு நிர்ப்பந்தம்.

போகட்டும்.....

இந்த வகையான புகழும் பெயரும் பணமும் செல்வாக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு நான்கைந்து பேருக்குக் கிட்டியிருக்கிறது.

அவர்களில் ஸ்ரீதேவி முதன்மையானவர்.