டி.எம்.எஸ் மறைந்துவிட்டார்.
‘பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே’ என்று கணீரென்ற குரலில் பாடிக்கொண்டு பட்டிதொட்டியெங்கும்
பிரபலமான குரல் காலதேவனின் கணக்கு முடிந்துபோனவுடன் தன்னுடைய உலக இருப்பை முடித்துக்கொண்டு
பயணம் புறப்பட்டுவிட்டது. அவர் அதற்கு முன்னாலேயே பின்னணி பாடிவிட்டார். ‘ராதே நீ என்னைவிட்டுப்
போகாதேடி’ என்று பாடியதுதான் அவருடைய முதல் பாடல் என்றெல்லாம் கணக்கு சொல்லப்பட்டாலும்
அவர் மக்களிடம் அறிமுகமானதும் திரை ரசிகனின் வியப்புக்களுக்கு ஆளானதும் இன்னமும் ஒரு
ஐம்பது ஆண்டுகளுக்கு மிகவும் நெருக்கமாகவும், ஒரு நான்கைந்து தலைமுறை ரசிகர்களின் முதன்மையான
குரலாக விளங்கப்போவதற்கான அங்கீகாரம் பெற்றதுவும் நடிகர் திலகத்தின் தூக்குத் தூக்கி
படத்தின் மூலம்தான்.
சென்ற வருடத்தில் நானும்
கவிஞர் அறிவுமதியும் திண்டுக்கல் மலைப்பிரதேசங்களில் ஊடுருவிச்செல்லும் கோடைக்கானல்
மலைப்பகுதிகளின் பின்புறமிருந்த மலைத்தோட்டங்களின் ஊடாக நிறைய கிராமங்களுக்குச் சென்றிருந்தோம்.
அழகும் இயற்கையும் பின்னிப்பிணைந்து நாகரிகத்தின் வெளிப்பூச்சுக்களும் அலங்காரங்களும்
ஆடம்பரங்களும் அவ்வளவாய் குடிபுகாமல் இன்னமும் பளிங்கு போன்ற பரிசுத்தத்துடனேயே மக்கள்
தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துசெல்லும் பகுதிகள் அவை. ஆடலூர், பன்றியூர், பித்தளைப்பட்டி
என்றெல்லாம் நீண்ட பயணங்கள் முடித்துக்கொண்டு திண்டுக்கல்லுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது
அறிவுமதி கேட்டார்.
“அமுதவன் ஒண்ணு கவனிச்சீங்களா? காலையிலிருந்து நாம எத்தனையோ மலைக்கிராமங்களுக்குப்
போனோமே எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு ஒலிபெருக்கியில் ஏதோ ஒரு பாடல் கேட்டுக்கொண்டே
இருந்தது. எல்லாமே எம்ஜிஆர் சிவாஜி காலத்துப் பாடல். எல்லாமே டிஎம்எஸ் சுசீலா பாடல்.
எல்லாமே விஸ்வநாதன் ராமமூர்த்தி, விஸ்வநாதன் காலத்துப் பாடல். இன்னும் இதையெல்லாம்
விட்டே இவங்க வரவில்லையே. இவங்க எப்போ இளையராஜா காலத்துக்கு வந்து எப்போ ரகுமான் ஹாரிஸ்
காலத்துக்கெல்லாம் வரப்போறாங்க தெரியலையே. இவங்க இன்னும் கண்ணதாசனில்தான் இருக்காங்க.
எப்போ வைரமுத்து காலத்துக்கு வந்து எப்போ அறிவுமதியையும் நா.முத்துக்குமாரையும் கேட்கப்போறாங்க?”
அவர் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்கூட டிஎம்எஸ் ‘உள்ளம் என்பது ஆமை’ பாடிக்கொண்டிருந்தார்.
இதனை ஒரு குறையாகவோ ஆதங்கமாகவோ ஆற்றாமையிலோ அறிவுமதி
சொல்லவில்லை. அந்தக் காலத்துப் பாடல்களுக்கிருந்த வலிமை…அவை உருவான விதம், காலத்தைக்
கடந்து நிற்கும் அவற்றின் தொன்மை….. இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், அந்தப் படத்தின்
கதை, அந்தப் பாடலுக்கு நடித்த நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள் என்று இத்தனைப்பேரின்
கூட்டுமுயற்சியும் ஒரே புள்ளியில் இணைந்த அற்புதங்கள் அவை. இன்றைய பாடல்கள் இவற்றில்
ஏதாவது ஒன்றில் முடமாக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரு இடம் பழுது பட்டிருக்கும். ஏதோ
ஒரு புள்ளி குறைந்திருக்கும். எங்கோ ஒரு கண்ணி விடுபட்டிருக்கும். இந்தக் காரணங்களால்தான்
இன்றைய பாடல்களின் வாழ்நாள் அற்பமாகப் போய்விடுகிறது. பிறக்கும்போதே பல்வேறு குறைகளுடன்,
அற்ப ஆயுளுடன்தான் பல பாடல்கள் இங்கே பிரசவிக்கப்படுகின்றன.
சாஸ்திர ரீதியான சம்பிரதாயமான
பாடல்கள் இடம்பெற்ற பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் காலத்திலிருந்து
திரையிசை மக்கள் இசையாக மாற ஆரம்பித்த காலகட்டத்தில் திருச்சி லோகநாதன், சிதம்பரம்
ஜெயராமன், கண்டசாலா என்றிருந்த வரிசையில் டிஎம்எஸ் வருகிறார். சிவாஜி எம்ஜிஆர் என்ற
இரு பெரும் இமயங்களின் ஆட்சிதான் அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு என்ற விதி ஏற்படுத்தப்பட்டவுடன்
இருவரின் குரலாகவும் அவதாரம் எடுக்கிறார் டிஎம்எஸ். இவருக்கு முன் யார் யாரோ சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும்
பின்னணி பாடியிருந்தபோதிலும் “அட, இவருக்காகத்தானே தமிழ்த்திரையுலகம் காத்திருந்தது”
என்பதைப்போல் வாரி அணைத்துக்கொண்டது இவரை. இவருடைய ஆட்சிக்காலம் ஆரம்பித்த அன்றிலிருந்து
இன்றுவரை இவருக்கு இணையான- முழுமையான- இன்னொரு ஆண் பாடகர் தமிழில் வரவில்லை. வரவில்லை.
வரப்போவதுமில்லை.
முகமது ரஃபியைப் பார்த்துத்தான்
தமது பாடும் பாணியை இவர் வடிவமைத்துக்கொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு. ‘பாகவதரின்
பாடும் பாணிதான் ஆரம்பத்தில் என்னுடையது’ என்று இவரே சொல்லியிருப்பதும் உண்டு. இங்கிருந்து
கொஞ்சம் அங்கிருந்து கொஞ்சம் என்பதாக சிறந்த விஷயங்களை சில இடங்களிலிருந்து பெற்றிருக்கலாம்.
ஆனால் பிற்பாடு அதே முகமதுரஃபி பின்னாளில் இவரைப் பார்த்து வியந்திருக்கிறார். இவரது
சில பாடல்கள் இந்தியில் படமாக்கப்பட்டபோது அவற்றைப் பாட நேர்ந்த சமயங்களில் “அடேயப்பா
இந்த மாதிரி பாட என்னால் முடியாது. இந்த ஆலாபனையெல்லாம் பாடினால் நான் செத்தே போய்விடுவேன்”
என்று முகமது ரஃபி சொன்ன சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.
தூக்குத்தூக்கி படத்திற்காக
டிஎம்எஸ்ஸை அழைத்துப் பாடவைக்க முயன்றபோது மிக அதிகமான கோபத்துடன் அதனை எதிர்த்தவர்
சிவாஜி கணேசன். “எதுக்கு? சிதம்பரம் ஜெயராமன் குரல் நல்லாத்தானே போய்கிட்டிருக்கு….எதுக்காக
இப்ப புது ஆளைக் கொண்டுவந்து போட்டு குழப்பம் பண்றீங்க? அதெல்லாம் வேண்டாம். சிதம்பரம்
ஜெயராமனே பாடட்டும்” என்றிருக்கிறார்.
“இல்லை இந்தப் பாடல் பாடியிருக்கார்.
கேட்டுப்பாருங்க. திருப்தியில்லைன்னா நீங்க சொன்னபடியே செய்துறலாம்” என்று சொல்லி டிஎம்எஸ்
சிவாஜிக்காகப் பாடிய பாடலைப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். கேட்டிருக்கிறார். கேட்டவர்
வியந்துபோய் “யார் இவர்? என்னுடைய குரலிலியே பாடின மாதிரி இருக்கு….எல்லாப்பாட்டுமே
இவரை வச்சே ரிகார்ட் பண்ணிருங்க” என்று சொல்லிவிட்டாராம்.
பின்னர் லதா மங்கேஷ்கரிடம்
பேசிக்கொண்டிருந்தபோது “என்னுடைய குரலுக்கு பின்னணிப் பாட டிஎம்எஸ் கிடைச்சது எனக்குக்
கிடைச்ச வரம்” என்றிருக்கிறார்.
அன்றைய தினத்திலிருந்து
No looking back…..சிவாஜி என்றால் டிஎம்எஸ்தான் என்றுதான் போய்க்கொண்டிருந்தது. எம்ஜிஆருக்கும்
இவர்தான் என்றபோதும் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் “டிஎம்எஸ் வேண்டாம், புதிய பாடகரை உருவாக்குங்க”
என்று விஸ்வநாதனிடம் சொல்லிவிட்டார். எம்ஜிஆரைப் பற்றி டிஎம்எஸ் இலங்கை வானொலியில்
அளித்த பேட்டியின் விளைவு அது என்று சொல்லப்படுகிறது.
எம்ஜிஆர் குணம் அதுதான்.
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து
வெற்றிபெற்று விட்டதாலும், மக்கள் மத்தியில் ஈடு இணையற்ற பெரியதொரு பிம்பம் அவருக்கு
ஏற்பட்டுவிட்டதாலும் அவருடைய இம்மாதிரியான குணங்கள் யாவும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு
வருகின்றன. பல உண்மைகளை மக்கள் மத்தியில் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதில்லை.
தேவையற்ற புனித பிம்பம் எம்ஜிஆரைச் சுற்றி நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கிறது.
இலங்கை வானொலிப் பேட்டியில்
அவர் சிவாஜியைப் பற்றியும் அதனைத்தான் சொன்னார். அந்தப் பேட்டி மட்டுமல்ல வெளியூர்களுக்குச்
சென்று நடத்தும் இன்னிசைக் கச்சேரிகளிலும் அப்படித்தான் பேசுவார் டிஎம்எஸ். “எம்ஜிஆரையும்
சிவாஜியையும் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பவன் இந்த டிஎம்எஸ்தான். இந்த டிஎம்எஸ்ஸின்
குரலால்தான் அவர்கள் அறியப்படுகிறார்கள். அவர்களின் முகவரியே என்னுடைய குரல்தான்.”
என்பார். இன்னும் ஒருபடி மேலே சென்று “எம்ஜிஆரும் சிவாஜியும் என்னால்தான் புகழ் பெற்றார்கள்”
என்பார். இந்தத் தொனியில்தான் பேசுவார். அவருக்கு
வாய் நீளம் அதிகம்தான். தம்மைப்பற்றி மிக அதிகமாக அவரே பேசிக்கொள்வார் என்பதுதான் அவரிடமிருந்த
ஒரே குறை. அவர் பேச்சில் எப்போதுமே இம்மாதிரியான செருக்கு தென்படும். என்னுடைய நண்பர்
சொல்லுவார் “அவர் பேசுவதைக் கேட்கக்கூடாது. பாடுவதை மட்டும் கேட்கவேண்டும்”
இப்படிப்பட்ட பேச்சுக்கள் சிவாஜியை அசைத்துப் பார்ப்பதில்லை.
அவர் என்றைக்கோ அதனையெல்லாம் கடந்துவிட்டிருந்தார். சில சம்பவங்கள் சொல்லுவார்கள். சிவாஜி அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவருடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர் அசோகனும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனும் திமுகவைச் சேர்ந்த பேச்சாளர்கள். இவர்கள் அவ்வப்போது நிறைய கூட்டங்களில் பேசுவார்கள். எல்லாக் கூட்டங்களிலும் சகட்டுமேனிக்கு சிவாஜியைப் போட்டுத் தாக்குவார்கள். அவரை நாராச நடையில் கிழிகிழியென்று கிழிப்பார்கள். மறுநாள் காலையில் படப்பிடிப்புக்கு வந்து சிவாஜியின் படத்தில் அவருடன் நடிப்பார்கள். ஒருமுறை அப்படித்தான். இவர்களில் யாரோ ஒருவர் மிகவும் தரம்தாழ்ந்து சிவாஜியைப் பற்றிப் பேசிய பேச்சு அன்றைய தினசரியில் வந்துவிட்டது. நிச்சயம் இந்தப் பேச்சைப் பார்த்தால் சிவாஜி கொதித்தெழுவார் படத்திலிருந்தே அவரைத் தூக்கிவிடுவார். எப்படியும் ரீ ஷூட்தான் செய்யவேண்டியிருக்கும், என்ற பதட்டத்துடன் இருந்திருக்கிறார்கள். சிவாஜி வந்தவுடன்
கையைப் பிசைந்துகொண்டே
“அவரை வேண்டுமானால் நீக்கிவிடலாம். வேண்டுமானால் ரீ ஷூட் பண்ணிக்கலாம்” என்றிருக்கின்றனர்.
“ஏம்ப்பா என்ன ஆச்சு?” என்றாராம் சிவாஜி.
“இல்லை உங்களைப் பற்றி
இப்படிப் பேசி அது பத்திரிகையிலும் வந்திருக்கு”
மவுனமாக அந்தப் பத்திரிகையை
வாங்கிப் பார்த்த சிவாஜி ஒரு சின்னப் புன்முறுவலுடன் “அவன் நம்மளைப் பத்தி இப்படிப்
பேசியிருக்கான்னா அரசியல்ல அவனுடைய வயித்துப் பொழைப்பு நடக்கணும்ன்றதுக்காகப் பேசியிருக்கான்.
நம்மைப் பத்தி இப்படிப் பேசிப் பொழைக்கிறான்னா பொழைச்சிட்டுப் போறான். அதுக்காக அவனுடைய
மெயின் வருமானத்துல எதுக்குக் கையை வைக்கணும்? அவன் வயித்துல எதுக்கு அடிக்கணும்? அவனே
இருந்துட்டுப் போறான் விட்ருங்க” என்று சொல்லிவிட்டாராம்.
எம்ஜிஆரிடம் இதெல்லாம்
நடக்காது. அவரைப் பற்றிச் சின்னதாக கமெண்ட் அடித்தவன்கூட அதற்கான விலையைக் கொடுத்தாகவேண்டும்.
அவர் படத்திலிருந்து நீக்குவது என்பது மட்டுமல்ல; திரைப்படத்துறையிலிருந்தே காலிசெய்துவிட்டுத்தான்
மறுவேலைப் பார்ப்பார்.
கண்ணதாசனுக்கும் அவருக்குமான
கருத்துவேறுபாடுகள் வந்தபோது கண்ணதாசனை ஒழித்துக்கட்ட அவர் செய்த வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல.
கடைசிவரையில் அவரால் அது முடியாமலேயே போய்விட்டது. கண்ணதாசன் இல்லாமல்தான் எம்ஜிஆரின்
பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. இவர்கள் கருத்துவேறுபாட்டினால் முழுமையாக லாபம்
பார்த்தவர் வாலிதான்.
எம்ஜிஆரின் அரசியல், திரைப்படம்,
மற்றும் பொதுவாழ்க்கையில் அவர் முழுமையாகத் தோல்வியடைந்தது ‘கண்ணதாசனை ஒழித்துக்கட்டும்’
விஷயத்தில் மட்டும்தான். கடைசியில் அவரை “வேறுவழியாக சமாதானப்படுத்தி’ தம்முடன் சேர்த்துக்கொள்ளும்
விதமாகத்தான் அவரைத் தேடிச்சென்று அவருக்கு அரசவைக்கவிஞர் பதவி வழங்கி சமாதான உடன்படிக்கை
போடப்பட்டது.
இதே கண்ணதாசனுடன் சிவாஜிக்கும்
பலமுறை கருத்துவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் மட்டும் ஒருசில படங்களுக்கு
கண்ணதாசன் வேண்டாம் என்றிருந்தார் சிவாஜி.
ஒருமுறை சமாதானம் ஆனபிறகு அவ்வளவுதான்.
‘கவிஞர்தான், கண்ணதாசன்தான், செட்டியார்தான்’! “எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு
இருப்பது நிசம்தான். ஆனா அது வேறு; தொழில் வேறு. இந்தத் தொழில்ல அவருக்கு இணையா இங்கே
யாருமே கிடையாது. நான் பேசலைன்னா என்ன? என்னுடைய படத்துக்குக் கவிஞர்தான் பாட்டு எழுதணும்.
வேறு ஏதேதோ காரணங்களால் அவர் இல்லைன்னாலோ கிடைக்கலைன்னாலோ வேணும்னா நீங்க வேற யாரையாவது
வெச்சு பாட்டு எழுதிக்கங்க” என்பார் சிவாஜி.
சிவாஜி எம்ஜிஆர் பற்றிய
இந்த மனப்பான்மை டிஎம்எஸ் பற்றிப் பேசுவதற்கும் இன்றியமையாததாய் இருக்கிறது. ஏனெனில்
சிவாஜிக்குக் கடைசிவரை டிஎம்எஸ்தான்.
டிஎம்எஸ்ஸூக்கு பதிலாக ஒரு மாற்றைக் கொண்டுவருவது
என்பதில் திரைப்படத்துறையும் ஒரு கட்டத்தில் எம்எஸ்வியும்கூட உறுதியாய் இருக்கிறார்கள்.
எம்ஜிஆர் இனி டிஎம்எஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சிவாஜியை நாம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம்
என்று முதன்முதலாக வேறொருவரைப் பாடவைத்து ஒரு பாடலைப் பதிவுசெய்து விட்டார்கள்.
சிவாஜியிடம் பாடல் போட்டுக்
காட்டப்படுகிறது.
பாடலைக் கேட்ட சிவாஜி முகம்
சிவக்கிறார். “யாரைக்கேட்டு இப்படிச் செய்தீங்க?” என்கிறார். டிஎம்எஸ் ஏன் இல்லை என்பதற்கான
காரணங்கள் வண்டிவண்டியாக அவரிடம் சொல்லப்படுகின்றன. ‘இனிமேல் இப்படித்தான் இவர்தான்…அல்லது
வேறு புதுப்புதுப் பாடகர்கள்தாம்’ என்று அவரிடம் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் சமாதானமடைவதில்லை.
“என்னமோ பண்ணிகிட்டு நாசமாப்போங்க. ஆனா நான் முடிவெடுத்தது எடுத்ததுதான். அடுத்த பாடலுக்கு
எப்படின்றதை அப்புறமாப் பார்த்துக்கலாம். இந்தப் பாட்டுக்கு டிஎம்எஸ் இல்லாத குரலுக்கு
நான் வாயசைக்கப்போவதில்லை. அந்தப் பாடல் அதுபாட்டுக்கு ஒலிக்கட்டும். நான் நடித்துக்கொடுக்கிறேன்.
வாயசைக்கமாட்டேன். அப்படியே எடுத்துக்கங்க” என்று தீர்மானமாய்ச் சொல்லிவிடுகிறார்.
கடைசியில், பாடலின் குரலுக்கு வாயசைக்காமலேயே புதிய பாடகரின் குரல் படமாக்கப்படுகிறது.
அந்த அளவுக்கு டிஎம்எஸ்ஸின் குரலை நேசித்தவர் சிவாஜி.
ஒரு சிலரை இங்கே மிகவும்
உயர்த்திச் சொல்வதால் மற்ற கலைஞர்களின் ரசிகர்கள் கோபித்துக்கொள்ள நேரலாம். அது இங்கே
முக்கியமில்லை. சில உண்மைகள் சொல்லுவாரின்றி தனியே அனாதையாய்க் கிடக்கின்றன. சிலவற்றைச்
சொல்லுவதற்கு ஆட்கள் இருப்பதில்லை.
அதானாலேயே அவரவர்களுக்குத்
தெரிந்ததை வைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்ததுதான் முழுமுதல்
உண்மையானது என்று தவறாக நினைத்துக்கொண்டு விடுகிறார்கள். இணையத்தில் அவர்களுக்கு என்னென்ன
படிக்கக்கிடைக்கிறதோ அவை மட்டும்தான் உண்மை என்றே நினைக்கிறார்கள். இணையத்தின் பதிவுகளுக்கு
வராமல் இன்னமும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன என்பது பாவம் அவர்களுக்குத்
தெரிவதில்லை.
இவர்களுடைய வட்டத்துக்கு
உட்பட்ட விஷயங்களை வைத்துக்கொண்டுதான் இவர்களுக்குள் அபிப்பிராயங்கள் உருவாகின்றன.
பரிதாபம் என்னவென்றால் இவர்களுடைய ‘வட்டங்கள்’ மிகமிகச் சிறியவையாக இருக்கின்றன.
திரைப்படத்தில் சிறந்த
நடனம் என்றால் இவர்களுக்கு அனுஷ்காவையும் அசினையும்தான் தெரிந்திருக்கிறது. பத்மினியையும்
வைஜயந்திமாலாவையும் தெரியுமா என்று கேட்டால் கோபம் வருகிறது.
இயக்குநர் என்றால் இவர்களுக்குத்
தெரிந்தது மணிரத்தினத்திலிருந்துதான். ஸ்ரீதரையும் பீம்சிங்கையும் கேபியையும் தெரியவில்லை
என்பதை இவர்கள் ஒரு இழப்பாகவே கருதுவதில்லை.
ஒளிப்பதிவாளர் என்றால்
இவர்கள் அறிந்தது பிசிஸ்ரீராம்தான். அங்கிருந்துதான் கணக்கைத் துவக்குகிறார்கள். வின்சென்டையும்,
மார்கஸ் பார்ட்லேயையும் மஸ்தானையும் கர்ணனையும் இவர்களுக்குத் தெரிவதில்லை.
இசை என்றால் இளையராஜாவிலிருந்துதான்
கணக்கு ஆரம்பிக்கிறது (வேடிக்கை என்னவென்றால் இந்தக் கணக்கு மட்டும் அத்துடனேயே நின்றும்
விடுகிறது). ஜி.ராமனாதனையோ, சிஆர்சுப்பராமனையோ,எஸ்எம்சுப்பையா நாயுடுவையோ, விஸ்வநாதன்
ராமமூர்த்தியையோ, கேவிமகாதேவனையோ இவர்கள் கண்டுகொள்வதே இல்லை.
அதே போல பின்னணிப் பாடகர்
என்றால் ‘இவர்களைப்’ பொறுத்தவரை வெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மட்டும்தான். பாடகி
என்றால் எஸ்.ஜானகி மட்டும்தான். நடிகர் என்றால் கமலஹாசன் மட்டும்தான்.
இந்தச் ‘சின்ன வட்டக்காரர்கள்’
மொத்த மக்கள் தொகையில் ஒரு பத்து சதவிகிதம் கூட இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் சொல்வதுமட்டும்
ஏன் அல்லது எப்படி பிரதானமாகத் தெரிகிறது என்றால் இந்தச் சின்ன வட்டத்தின் கையில்தான்
இணையங்கள் இருக்கின்றன. இன்றைய பத்திரிகைகளும் இவர்களுடைய வட்டத்திலிருந்துதான் வெளிவருகின்றன.
நல்ல வேளையாக விகடன் குமுதம் கல்கி போன்ற பத்திரிகைகள் இன்னமும் பெரும்பாலான வாசகர்களைக்
கொண்டவையாக இருப்பதாலும் சில தொலைக்காட்சிகளில் விஷயம் தெரிந்தவர்கள் இருப்பதாலும்
‘கருத்துப் பேரழிவு’ பெருமளவில் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சரி விஷயத்துக்கு
வருவோம்.
தமிழில் எத்தனைப் பாடகர்கள்
வந்தாலும் சரி அவர்களால் டிஎம்எஸ்ஸூக்கு மாற்றாக ஒருநாளும் வரமுடியாது. இளையராஜா சொல்லியிருப்பதுபோல்
‘தமிழின் ஒரே ஆண்குரலுக்குச் சொந்தக்காரர்’ அவர்தான். அவருக்குப்பின் ஏ.எம்.ராஜாவின்-
பிபிஎஸ்ஸின் குரலுக்கு மாற்றானவர்களாகத்தான் கேஜேஏசுதாஸூம் எஸ்பிபியும் அவர்களைத் தொடர்ந்து
ஹரிஹரன், கார்த்திக் போன்றவர்களும் வந்தனரே அன்றி டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக ஒருவரும்
இல்லை. ஒரு ஓரத்தில் மலேசியா வாசுதேவனும், இன்னொரு புறத்தில் சங்கர் மகாதேவனும் சிறிது தூரம் ஓடிவந்தனர். பெரிய சாதனைகள் என்பதுபோல்
இவர்களிடம் சொல்ல எதுவுமில்லை.
தொல்காப்பியன் காலம் தொடங்கி
வள்ளுவன் சங்க காலம் என்று இந்த நாள்வரைக்கும் சீரிளமைக்குன்றாத தமிழ் என்றெல்லாம்
பேசுகிறோம். அந்தத் தமிழை சரியாக எழுதவும் பேசவும், சரியாக உச்சரிக்கவும் நாதியற்றுப்
போய் இருக்கிறோம். எட்டுக்கோடித் தமிழரில் தமிழைச் சரியாக உச்சரிக்க பிரபலமானவர்களில்
மொத்தமே ஒரு நூறுபேர் இருந்தார்களென்றாலேயே அதிகம்.
கவனம் வைத்துக்கொள்ளுங்கள்
திரைபடத்துறையில் தமிழைச் சரியாக உச்சரித்தவர்கள்; வசனத்தில் சிவாஜிகணேசன், பாடலில்
டிஎம்சௌந்தரராஜன். இரண்டுபேர் மட்டுமே!
உடனே எஸ்எஸ்ஆர் உச்சரிக்கவில்லையா, பாடல்களில் சீர்காழி சரியாக உச்சரிக்கவில்லையா என்றெல்லாம் கேட்டு சண்டைக்குக் கிளம்பவேண்டாம். இவர்களுடைய உச்சரிப்பிலெல்லாம் தவறு கண்டுபிடிக்கமுடியாது
அவ்வளவுதான். தவறுகள் இல்லை
என்பது மட்டுமல்ல, தரம் என்பதும், தரசுத்தம் எவ்வளவு என்பதும்கூட இங்கே முக்கியம்.
அதனால் உச்சரிப்பு என்பது எப்படி இருக்கவேண்டும், எதுமாதிரி இருக்கவேண்டும் என்பதற்கெல்லாம்
சான்று வேண்டும், சாட்சி பகரவேண்டும் பாடம் நடத்தவேண்டும் பெருமைப் படவேண்டும் என்றெல்லாம்
பார்த்தால்-
சிவாஜிதான், டிஎம்எஸ்தான்.
இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை!
சிவாஜி அளவுக்கும் டிஎம்எஸ்
அளவுக்கும் உச்சரிப்புடன் கூடவே பாவமும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் நடிகரும் சரி,
பாடகரும் சரி இன்னமும் யாரும் வரவில்லை. வரப்போவதுமில்லை.
சிவாஜியையும் இன்னும் சிலரையும்
இங்கே திரும்பத் திரும்ப பேசுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இவர்களுக்குப் பின்னர்
வந்த பலபேரை இதே அளவுக்கு உயர்த்திச் சொல்லுவதில்லையே என்பது ஒரு சிலரின் ஆதங்கமாகவும்
இருக்கிறது. எழுபதுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அத்தனைக் கலைஞர்களுமே சுயமாக வந்தவர்கள்.
அவர்கள் அத்தனைப்பேருமே மூலத்தை எடுத்துக்கொண்டு தொழில் புரிந்தவர்கள். மூலத்திலிருந்து
பிரிந்துவரும் இழைகளைக் கொண்டுதான் அவர்கள் தங்கள் கலையம்சங்களை வெளிப்படுத்தினார்கள்.
எழுபதுக்குப் பிறகு காலம் மாறிவிட்டது. விஞ்ஞானத்துடன் கூடிய மாபெரும் தொழில் புரட்சி
திரைபடத்துறையைப் புரட்டிப் போட்டுவிட்டது.
ஆயிரக்கணக்கான ‘மாதிரிகள்’
ஒவ்வொன்றிலும் இங்கே வந்து குவிய ஆரம்பித்துவிட்டன. ஆயிரக்கணக்கான ஆடல்கள், பாடல்கள்,
நடனங்கள், காட்சி அமைப்புக்கள், சண்டைக்காட்சிகள் எல்லாமே கிடைக்க ஆரம்பித்துவிட்டன.
இசைத்துறையை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் குறிப்பிட்ட ஆங்கிலப் படங்கள், குறிப்பிட்ட
ஆங்கிலப் பாடல்கள் என்று மட்டுமே வந்துகொண்டிருந்த நிலைமை மாறி எப்போது டேப் ரிகார்டர்
நுழைந்ததோ லட்சக்கணக்கான பாடல்கள் இசைத்துறையை நிரப்ப ஆரம்பித்தன. யோசித்து யோசித்து
மண்டையை உடைத்துக்கொண்டு வருடத்திற்கு ஒருமுறையோ
இரண்டு முறையோ மட்டுமே பாடல்களிலும் இசைக்கோர்ப்புகளிலும் மாறுதல்கள் செய்துகொண்டிருந்த
இசையமைப்பாளர்களுக்கு அடித்தது யோகம். காலையில் ஒரு காசெட், மாலையில் ஒரு காசெட் என்று
வந்து புதிது புதிதாய் ‘இசை அமைக்க’ யோசனை தந்தது. புதிய புதிய வாத்தியங்கள் சிங்கப்பூர்
மார்க்கெட்டிலேயே கடை விரிக்கப்பட்டன. இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர் சிலர்.
அந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு எல்லாமே புதிது. இவரல்லவோ நம் ஆதர்சம், இவரல்லவோ நம்
மீட்பர் என்று கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.
சிவாஜியை எடுத்துக்கொண்டால்
அந்தக் கலைஞன் புதிது புதிதாய் யோசித்து குறைந்த பட்சம் ஒரு அறுபது எழுபது பாத்திரங்களையாவது
புதிதாகச் செய்திருப்பார். வ.உ.சியாக நடிக்க அவருக்கு அதற்கு முன்பு ‘மாதிரி பார்த்துக்கொள்ள’
எந்தப் படமும் கிடையாது. கட்டபொம்மனாக நடிக்க ‘மாதிரி பார்க்க’ படம் கிடையாது. சிவபெருமானும்
தருமியும் பேசிக்கொள்ளும் காட்சியை எந்தப் படத்தைப் பார்த்து நடித்திருப்பார்? பராசக்தி,
மனோகரா, திரும்பிப்பார் வசனங்கள் பேச எந்தப் படம் பார்த்துக் கற்றுக்கொண்டிருப்பார்?
கணவனாக, அண்ணனாக, தம்பியாக, வேலைக்காரனாக, மேனேஜராக, நண்பனாக இன்னும் என்னென்னவோ வேடங்கள்
முதன்முதலாக அவர் செய்துவைத்துவிட்டுப் போனவையாக இருக்கின்றன. இவை அத்தனையும் இயக்குநர்,
கதாசிரியர், நடிகர் என்ற கூட்டு முயற்சியில் வெளிப்பட்ட கலைவடிவங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது..
ஆனால் இவருக்குப் பின்
வந்தவர்களுடைய படங்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு ‘மாதிரி பார்த்துக்கொள்ள’
(reference-க்கு)சிவாஜியின் படங்களேகூட வேண்டிய அளவு இருக்கின்றன. அது மட்டுமல்லாமல்
ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சிடிக்கள் கிடைக்கின்றன.. அதைப் பார்த்து பண்ணவேண்டியதுதான்.
அல்லது அவற்றைப் பார்த்துவிட்டு அதிலிருந்து எந்தெந்த வகையில் மாறுதல் செய்துகொள்ளலாம்
என்று பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
அதிலும் சிவாஜி காலத்திலெல்லாம்
ஒரு காட்சி நன்றாக வந்திருக்கிறதா அதனை அப்படியே விட்டுவிடலாமா இல்லை மாற்றிச் செய்யலாமா
என்றெல்லாம் சரிபார்த்துக்கொண்டு செய்வதற்கான வசதியெல்லாம் இருக்கவில்லை. மூவியாலாவில்
போட்டுப் பார்த்தபிறகுதான் தெரியவரும். இப்போது அப்படியல்ல. ஒரு காட்சி எடுத்தவுடன்
அப்போதே ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டியது. சரியாக வரவில்லையா திருப்பி எடுக்கவேண்டியது.
இம்மாதிரி எத்தனைதடவை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டே இருக்கலாம்.
அதனால் இன்றைய நடிகர்களை சிவாஜியோடெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பதே அயோக்கியத்தனம்.
ஒன்றை நினைத்துப் பாருங்கள்.
ஒரு சாதாரண தோசையோ இட்லியோ
வீட்டில் செய்யவேண்டுமென்றால்கூட அரிசியைப் புடைத்து, கல்பொறுக்கி, களைந்து, ஊறவைத்து,
மாவாட்டி இரவு பூராவும் புளிக்கவைத்து காலை எழுந்து தோசையோ இட்லியோ செய்து கொடுத்தவர்களின்
உழைப்பையும் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் யோசித்துப் பாருங்கள். தற்சமயம் இன்ஸ்டண்ட்
மாவு கிடைக்கிறதே அதை அப்படியே தோசைக்கல்லில் ஊற்றி எடுப்பவரையும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.
அன்றைய கலைஞர்களின் உழைப்பும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் நிச்சயம் புரியும்.
டிஎம்எஸ் குரலிலுள்ள அருமை
பெருமைகளை இங்கே விவரித்துச் சொல்லிக் கொண்டிருப்பது வீண்வேலை. இவரது குரலைக் கேட்டவுடன்
எம்ஜிஆரையும் சிவாஜியையும் நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதக்கலையை அவர்
மட்டுமே செய்தார் இல்லையா? அதுவே போதும். இனி எந்தவொரு பாடகரும் யாருக்கும் இதனைச்
செய்யப்போவதுமில்லை. செய்யவும் முடியாது.
எந்தக் கலைஞனாயிருந்தாலும்
புகழ் சரிவு ஏற்படவில்லையெனினும் ஆடிக்கொண்டிருக்கும் அரங்கத்தைவிட்டு இறங்கவேண்டிய
தருணம் வந்தே தீரும்.
அது இந்த மகா கலைஞனுக்கும்
வந்தது. நிறையப்பேர் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இளையராஜாவின் வருகைக்குப் பின்னர்
டிஎம்எஸ் ஒதுக்கப்பட்டார் என்று சொல்லுவது தவறு.
அதற்கு முன்னாலேயே எம்எஸ்வி
காலத்திலேயே அவரது சரிவு ஆரம்பமாகிவிட்டது.
எம்எஸ்விக்கும் டிஎம்எஸ்ஸூக்கும் என்ன மனத்தாங்கலோ
தெரியவில்லை. எம்எஸ்வியே இவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பித்தார். பி.சுசீலா
இவருடன் டூயட் பாடுவதை விரும்பவில்லை, இவருடன் சேர்ந்து பாட மறுக்கிறார் என்று கூடச்
சொல்லப்பட்டது. அதற்காகவே எஸ்பிபிக்கும் யேசுதாஸூக்குமான வாய்ப்புகள் அதிகமாயின. இதற்கெல்லாம்
காரணம் என்னவென்பது தெரியவில்லை. ஆன்மிக பக்தரான டிஎம்எஸ் இதற்கு வேறு காரணங்கள் சொல்ல
ஆரம்பித்தார். “நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு ஒரு தலை ராகம் படத்தில் பாடியதுதான்.
‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று பாடினேன். அன்றுமுதல் என்னுடைய ராசி என்னைவிட்டு
அகன்று போனது. அதாவது பரவாயில்லை. அதே படத்தில் ‘என் கதை முடியும் நேரமிது’ என்று நானே
எனக்கு அறம் பாடிக்கொண்டேன். இந்தப் பாடல்தான் என்னுடைய திரை
வாழ்க்கையையே முடித்துவிட்டது”
என்றார். அப்படியே நம்பவும் செய்தார் அவர்.
பெங்களூரில் எழுபதுகளில்
அப்போது இருந்த சுபாஷ்நகர் மைதானத்தில் நடந்த எக்ஸிபிஷனில் முதன்முதலாக அவருடைய இன்னிசைக்
கச்சேரி நடைபெற்றது. அப்போது ஒரு ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டுபோய் ஆயிரக்கணக்கான
மக்களிடையே நின்றபடியே அவருடைய கச்சேரியைக் கேட்டது நினைவிருக்கிறது. நான் ஆணையிட்டால்
பாடலையும், உள்ளம் என்பது ஆமை பாடலையும் வழக்கம்போல் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் முகவரி
நான்தான் என்பதுபோல் என்னென்னவோ சொல்லிவிட்டு அவர் பாடினார். ரேடியோவில் கேட்பதுபோல்,
அல்லது லவுட்ஸ்பீக்கரில் கேட்பதுபோல் இல்லையே என்ற எண்ணமும் ஏமாற்றமும்தான் அப்போது
தோன்றியது.
அடுத்து லால்பாக்கில் நடைபெற்ற
எம்எஸ்வியின் இசை நிகழ்ச்சியில் அவரை நேரில் பார்த்துப்பேசும் சந்தர்ப்பம் முதல்முறையாகக்
கிடைத்தது. “நான் எங்க தம்பி பாடறேன்? என்னைப் பாட வைக்கிறதே அவன் முருகன்தானே” என்று
மேலே கைகாட்டி ஜவ்வாது வாசனை மணக்கப்பேசினார் அவர்.
சிவகுமார் வீட்டுத் திருமணங்கள்
அத்தனையிலும் நீண்ட நேரத்துக்கு வந்திருந்து செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தார் என்பதால்
சூர்யா கார்த்தி அவர்களது தங்கை என மூன்று திருமணங்களிலுமே அவரிடம் பேசுவதற்கான வாய்ப்புகள்
கிடைத்தன. கடைசியாய் கார்த்தி திருமண வரவேற்புக்கு வந்திருந்தவரிடம் பேசுவதற்குக் கை
கொடுத்தபோது அவர் கைகளிலிருந்த நடுக்கமும் குச்சிக் குச்சியாய் இருந்த விரல்களின் மெலிவும்
மனதை நீண்ட நாட்களுக்கு என்னவோ செய்துகொண்டே இருந்தன………………………
இதோ பாடல்களின் அரசன் புறப்பட்டுவிட்டான்.
ஆயிரக்கணக்கான திரைஇசைப் பாடல்களை மட்டுமல்ல என்றைக்குமே மறக்கமுடியாத சில முருகனின்
பாடல்களையும் விட்டுவிட்டு! அந்த வசீகரமும் கம்பீரமும் கலந்த குரலில் ஒட்டப்பட்டுள்ள
வெள்ளிச்சரிகையின் பளீரென்ற ஒளிமட்டும் என்றைக்குமே மங்கப்போவதில்லை.