Friday, December 31, 2010

தமிழ் மணம் தேர்வில் ‘அமுதவன் பக்கங்கள்!’

தமிழ் மணம் போட்டியின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுக்கு என்னுடைய இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. இரண்டு பதிவுகளுக்கும் ஓட்டுப்போட்டவர்களுக்கும் மறுபடி ஓட்டுப்போட இருக்கின்றவர்களுக்கும் எனது நன்றி. உண்மையில் இந்தப்போட்டியில் நான் எழுதிய வேறு சில பதிவுகளைத்தான் சிபாரிசு செய்யவிருந்தேன். ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் டெம்ப்ளேட்டை மாற்றப்போக தமிழ்மணம் இணைப்பிற்கான சுட்டியும் அத்துடன் போய்விட்டது. பின்னர் என்ன செய்தும் பதிவுகளைத் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. உங்கள் பதிவு ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வருகிறதேயல்லாமல் இணைக்க முடியவில்லை.அதனால் திரைப்படம் பற்றியவை அல்லாத வேறு பதிவுகளைக்கூட திரைமணத்தில் இணைத்துப் பின்னர்தான் தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தது. இந்தக் காரணத்தால் ரெய்கி பற்றிய என்னுடைய ஒரு பதிவும், தற்காலத்தமிழ் இலக்கியம் பற்றிய இன்னொரு பதிவையும் தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கப்படாததால் அவர்கள் அனுப்பிய பட்டியலில் இந்த இரண்டு கட்டுரைகளும் சேர்க்கப்படவில்லை.

உண்மையில் மாற்று மருத்துவம் பற்றிய ரெய்கி கலைக்கான கட்டுரை போட்டியில் இடம்பெற வேண்டும் என்று நிறைய விரும்பினேன். பரிசு பெற வேண்டும் என்பதற்காக அல்ல; நிறையப்பேரைச் சென்றடையுமே என்பதால்.

போட்டியில் சேர்க்க நினைத்த மூன்று கட்டுரைகளில் இரண்டு கட்டுரைகளைச் சேர்க்க முடியாததால் வேறு இரண்டு கட்டுரைகளை அனுப்பியிருந்தேன். அவற்றில் இரண்டு கட்டுரைகள் இரண்டாவது கட்டத்துக்கு வந்துள்ளன.
ஒன்று; உலகத்தமிழ் மாநாட்டை உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக மாற்றிய கலைஞரின் டெக்னிக்.

இரண்டு; இளைய ராஜாவா, ரகுமானா...?
இந்த இரண்டு கட்டுரைகளுமே அவசியம் நிறையப்பேரைச் சென்றடைய வேண்டிய விஷயங்கள் கொண்டவை என்றே கருதுகின்றேன்.

குறிப்பாக கலைஞர் தமது நுண்ணிய அறிவாற்றலால் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுகுகிறார் என்பதும், எவ்வாறு தாம் விரும்புவதற்கேற்ப குயுக்தியாக காய்களை நகர்த்தி தந்திரமாகத் தம்முடைய விருப்பத்திற்கேற்ப அவற்றை மாற்றியமைத்து மற்றவர்களையும் அதனை ஒப்புக்கொள்ள வைக்கிறார் என்பதையும் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன். கலைஞரைப் பற்றித் துல்லியமாக அறிந்துகொள்ள இந்தப் பதிவு உதவும்.

அடுத்ததாக, ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ என்ற கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்துகொண்டிருந்த ‘பிலிமாலயா’ இதழில் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான கட்டுரைகளை எம்.ஜி.வல்லபனும் நானும் எழுதிவந்தோம். அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களைப்பற்றி சற்றே வித்தியாசமான கட்டுரைகளை மிகச்சிலர்தான் எழுதிவந்தோம். இன்றைய நிலை போல் நிறையப்பேர்கள் எழுதிக்கொண்டிருக்கவில்லை. இன்றைய இணையத்திலும் சில சிறு பத்திரிகைகளிலும் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான பார்வைகளை நிறையப்பேர் முன்வைக்கிறார்கள். ஆனாலும் சில அடிப்படையான விவரங்களில் அவர்கள் மேலோட்டமாக மட்டுமே கருத்துச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாக கடந்து சென்றுவிடுவதைத்தான் பார்க்க முடிகிறது. இவற்றில் ஒன்று திரை இசைத்துறை. திரை இசையைப் பற்றி ஷாஜி என்பவர் நிறைய எழுதுகிறார். அதுகூட அவர் மலையாளத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி தமிழில் மொழி பெயர்க்கப்படும் எழுத்துக்களாகத்தான் இருக்கின்றன. இசையைப் பற்றியும் திரை இசையைப் பற்றியும் அவருக்கு நிறையத் தெரிந்திருக்கிறதே தவிர, அவர் எடுக்கும் சார்பு நிலைகளை அவரால் தவிர்க்க முடிவதில்லை. அதனால்தான் சீர்காழி கோவிந்தராஜன் போன்ற மகத்தான ஒரு பாடகரையெல்லாம் மிக மோசமாக அவரால் கேவலப்படுத்திவிட முடிகிறது. இது ஒருபுறமிருக்க, இசை என்றதும் அதுவும் திரைப்பட இசை என்றதும் இது ஏதோ இளையராஜாவிலிருந்துதான் தொடங்கியது என்பது போன்ற ஒரு பிரமை, அல்லது தவறான ஒரு கற்பிதம்-இன்றைய பெரும்பாலானோருக்கு இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு யார் மார்க்கெட்டில் இருக்கிறார்களோ அவர்களையும், அவருக்கு முன்னால் வரிசையில் யார் இருந்தார்களோ அவர்களையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது என்ற நோய் பெரும்பாலானவர்களைப் பீடித்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த நோய் தமிழர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேகமான நோய்தான். மிகச்சிறந்த பாடகர் என்றால் அது எஸ்பிபி மட்டும்தான். டி.எம்.சௌந்தரராஜனை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். மிகச்சிறந்த பாடகி என்றால் அது சித்ராவும் எஸ்.ஜானகியும்தான். பி.சுசீலாவை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சி செய்யவும் மாட்டார்கள். தங்கள் எதிரில் என்ன இருக்கிறதோ அது மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும். அதுதான் வரலாறு; அதுதான் சாதனை; அதுதான் உலகம். இந்தக் கண்ணோட்டம் சராசரி ரசிகனுக்கு சரியாயிருக்கலாம். பொதுவில் வந்து நின்று பேசவோ எழுதவோ செய்கிறவன் கொஞ்சமாவது அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். செயற்பட வேண்டும்.

இந்தப் புரிதல் எல்லாம் இல்லாமல் இருப்பதால்தான் இயக்குநர் என்றால் மணிரத்தினம் மட்டுமே என்ற கண்ணோட்டத்திலேயே இவனால் இருக்க முடிகிறது. பாலச்சந்தரையோ ஸ்ரீதரையோ அவர்களுக்கும் முன்னால் இங்கே சரித்திரம் படைத்தவர்களையோ திரும்பிப் பார்க்கும் பக்குவமோ பட்டறிவோ இவனுக்கு இல்லை. அதனைத் தேடிக்கொள்ளவும் விரும்புவதில்லை. தன் முன் இருக்கும் கலைஞர்களில் மட்டுமே ஆரம்பித்து மொத்த விவகாரத்துக்கும் சேர்த்து ஜட்ஜ்மெண்ட் கொடுத்துவிடும் தகுதி தனக்கு இருப்பதாகவே பல விற்பன்னர்களும் நினைக்கிறார்கள். கருத்து மன்னர்களாக உலா வந்து இதனையொட்டியே தங்கள் கருத்துக்களைக் கொட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அதாவது, காங்கிரஸ் என்றால் சோனியா காந்தியும் ராஜிவ் காந்தியும்தான். இந்திரா காந்தியையோ,நேருவையோ கணக்கில் எடுத்துக்கொள்ளும் பக்குவமோ புரிதலோ இவர்களுக்கு இல்லை; அது தேவையும் இல்லை.

இந்த மனப்பிரமையைப் போக்கும் கட்டுரைதான் ‘இளையராஜாவா...ரகுமானா?’ தேவை கருதி கொஞ்சம் பெரிய கட்டுரையாகவே அது நீண்டிருக்கிறது. தயவு செய்து அதனைப் படித்துப் பாருங்கள். தமிழ் மணம் போட்டியினால் நிறையப்பேரின் கவனம் கவரும் கட்டுரையாக அது அமையும் என்று நம்புகின்றேன். அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

போட்டியின் 20-ம் பிரிவான ‘உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான பதிவுகள்’ என்ற பட்டியலில் ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ கட்டுரையை நீங்கள் பார்க்கலாம்.

Tuesday, December 14, 2010

தற்காலத் தமிழ் இலக்கியம்- தேவை புதிய பார்வை!




தமிழுக்கு நிறைய செய்து வருவதாக கலைஞர் சொல்லிவருகிறார். இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸின் போக்கிற்குத் தம்மை ஒடுக்கிக் கொண்டுவிட்டார் என்பதைத் தவிர தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் தொண்டுகள் எந்த ஆட்சியாளரும் செய்யாதவை என்பதை மறுப்பதற்கில்லை. வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை, பெங்களூரில் வள்ளுவர் சிலை திறப்பிற்கான முயற்சி, தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம், செம்மொழி உலகத்தமிழ் மாநாடு, தஞ்சைக் கோவிலின் ஆயிரமாவது விழா, அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று என்றென்றைக்கும் நிலைத்து நிற்கின்ற அணிகலன்கள் தமிழன்னைக்குக் கலைஞரால் அணிவிக்கப்பட்டுள்ளன
ஆனால் –
இது ஒரு பெரிய ‘ஆனால்’-

இவை அனைத்துமே – நூலகம் ஒன்றைத் தவிர – தமிழனது பழம்பெருமைகளைப் பேசும் முயற்சிகளுக்கான அடையாளங்கள்தாமே தவிர இந்த நூற்றாண்டின் - இனிவரப்போகும் நூற்றாண்டுகளுக்கான தமிழை அடையாளப்படுத்தும் , பிரதிநிதித்துவப் படுத்தும் சான்றுகளோ அடையாளங்களோ அல்ல .

கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

தமிழுக்குச் செந்தமிழ்த் தகுதியை அதிகாரபூர்வமாகப் பெறுவதற்கு நூறு ஆண்டுகள் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கன்னடமும் தெலுங்கும் ஒரேயொரு ‘சாதாரணக் கடிதம்’ மூலம் செம்மொழித் தகுதியைப் பெற்றுவிட்ட காட்சியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். காரணம், இந்த நாட்டின் அரசியல்.
அரசியல்தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு மாதிரியான அரசியல்.......தமிழகத்தைப் பொறுத்தவரை வேறு மாதிரியான அரசியல். இந்த அரசியல் மொழி விவகாரங்களிலும் ஊடுருவி கோலோச்சுவதுதான் இங்கே காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இலக்கியங்கள் எல்லாமே இங்கு இரண்டுவிதமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று – திராவிட இலக்கியம், மற்றொன்று திராவிட வட்டத்துக்குள் வராத இலக்கியம்.
தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி ; அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் , தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் , தமிழ்ச்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சரி , இன்னொரு பெரிய தவறையும் செய்துவருகின்றன.
தமிழை வளர்ப்பதற்கு இவர்கள் எல்லாரும் எடுத்துக்கொண்டிருக்கும் – அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கும் தளம் எது தெரியுமா?

சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக்கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான். இது பற்றிய ஆய்வுகள் , இது பற்றிய நூல்கள், இது பற்றிய கருத்தரங்குகள் , இது பற்றிய கலந்தாய்வுகள் , இது பற்றிய இலக்கியக் கூட்டங்கள் – இவைதாம். திரும்பத் திரும்ப இவை மட்டுமேதாம். இவற்றைக்கூட நமக்குள் பழம்பெருமைப் பேசும் நடவடிக்கைகளைத்தாம் செய்கிறார்களே தவிர இவற்றை மற்ற மொழிகளுக்கோ , உலகுக்கோ , குறைந்த பட்சம் ஆங்கிலம் மூலம் அனைத்துத் தரப்பினர்க்கோ கொண்டு சென்று சேர்க்கும் எவ்விதமான முயற்சிகளும் செய்யப்படுவதாகத் தகவல் இல்லை.

இவை ஒருபுறமிருக்க ,தொல்காப்பியத்தில்ஆரம்பித்துபுறநானூறு,அகநானூறு,சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பதிற்றுப்பத்து, பன்னிருதிருமுறை, நளவெண்பா, முத்தொள்ளாயிரம் ,என்று வருவார்கள். இன்னும் கொஞ்சம் ‘தம்’ பிடித்து பாரதியாரைத் தொடுவார்கள். அங்கேயே ஆணி அடித்தாற்போல் நின்றுவிடுவார்கள் – இலக்கிய வாதிகளில் இவர்கள் ஒருவகை.

இன்னொருவகையினரோ தமிழரின் பெருமை, சங்க இலக்கியம், திருக்குறள் என்று ஆரம்பிப்பார்கள். கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியத்தையும் கண்டுகொள்ளாமல் மிக கவனமாக பாரதியாரையும் தவிர்த்துவிட்டு பாரதிதாசனை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். தமிழுணர்வு பாடிய பாரதிதாசனின் ஒரு பத்துப்பாடல்களை மனப்பாடமாகச் சொல்லிவிட்டு பாரதிதாசனிலிருந்து ஒரேயொரு அங்குலம்கூடக் கீழே இறங்கிவர மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியம் என்பது பாரதிதாசனுடன் நின்றுவிடுகிறது. பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு இலக்கியம் இல்லை; இல்லவே இல்லை!

இந்த இரண்டாவது கண்ணோட்டம்தான் திராவிட அரசுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் இலக்கிய நிறுவனங்களுக்கும் இருந்துவருகிறது. இருபது இருபத்தோறாம் நூற்றாண்டைப் பற்றியோ தற்காலத்தமிழுலகம் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது-

தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று இவர்களே முடிவு செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.
தமிழ் படித்த மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பாடப்புத்தகங்களை விட்டு வெளியே வந்துதான் தமிழைத் தேடுகிறார்கள். இல்லாவிட்டால், இத்தனை வார, மாத, நாளிதழ்களும் இலட்சக்கணக்கான நூல்களும் தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்ன? இத்தனை நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும் கட்டுரைகளும் தமிழில் இருக்குமா என்ன...?
தமிழை – தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய முயற்சிகளை விட்டுவிட்டு வெறும் பழைய இலக்கியங்களை மட்டுமா எல்லாக் காலத்துக்கும் பரிமாறிக்கொண்டிருப்பது? “சங்க இலக்கியத்தில் என்ன இல்லை?” என்பார்கள்.
உலகம் புதிது; ஒவ்வொரு நாளும் புதிது ; தினசரி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பூவுலகம். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்‘ என்று மனிதர்களைச் சொல்வதும் அதற்காகத்தான். எல்லாமே புதியதாய் வந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழில் மட்டும் வெறும் பழையதுதான் என்று சொல்லிக்கொண்டிருப்பது எந்தளவு புத்திசாலித்தனம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

கன்னடத்திற்காக நடைபெறும் மாநாடுகளிலும் சரி; சாதாரணக் கருத்தரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் சரி, வரிசையாகப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பேரும் படைப்பாளிகள்...! அதுவும் ‘இன்றைய’ படைப்பாளிகள். இன்றைய படைப்பாளிகளையும் முந்தைய படைப்பாளிகளையும் சேர்த்துத்தான் எல்லா மொழிகளும் கொண்டாகின்றன – தமிழைத் தவிர!

மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில், வங்காளத்தில் இந்த நிலைமைதான் இருக்கிறது. தமிழில் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் தரப்படும் மரியாதையில் கால்தூசு அளவுக்குக்கூட ‘இன்றைய’ படைப்பாளிகளுக்குத் தரப்படுவதில்லை.

1)ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்க வேண்டியுள்ளது.

2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்க வேண்டியுள்ளது.

3)ஒரு இலக்கியவாதி புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்க வேண்டியுள்ளது.

தமிழை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தக் காலக் கட்டத்தில் தோன்றிய படைப்பாளிகள்தாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருபதாம் நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு தமிழைப் பள்ளி கல்லூரிகளைத் தாண்டி வீட்டுக்குள்ளே கொண்டுசென்று வாழவைத்தவர்கள் யார்?

கல்கியும் அகிலனும் புதுமைப்பித்தனும் அல்லவா?

செம்மொழி மாநாட்டில் அந்திகீரனார்,பரணர், பெருந்தலைச்சாத்தனார் பெயரில் அரங்கங்கள் அமைத்தபோது, கல்கி, அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயர்களில் அரங்கங்கள் வேண்டாமா ?

செம்மொழி மாநாட்டில் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட இடம் என்ன? சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்-73, மொழியியல்- 51, இலக்கணம்- 46, ஒப்பிலக்கியம்-39, ஆவணப்படம்-1, என்ற வரிசையில் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிப் படிக்கப்பட்ட கட்டுரைகள் வெறும் மூன்று . மூன்று மட்டுமே!..விளங்குமா படைப்பிலக்கியம்..?

அண்ணா பற்றி நான்கைந்து கட்டுரைகள்; கலைஞரின் படைப்பிலக்கியம் பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்; கனிமொழி படைப்புக்கள் பற்றி மூன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்; அகிலன் கல்கி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கண்ணதாசன் பற்றியெல்லாம் மருந்துக்குக்கூட ஒரேயொரு கட்டுரைக்கூட இல்லையே...!

இவர்களையெல்லாம் படைப்பிலக்கியவாதிகளாகவே ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது தற்காலப் படைப்பிலக்கியம் பற்றிய சிந்தனேயே அரசுக்கு இல்லையா?
வேறொரு கோணமும் இருக்கிறது. வங்காள மொழிக்கு கலையின் அடையாளமாய் அவர்கள் உலகிற்குக் காட்டுவது சத்யஜித்ரேயை ! கன்னடத்தில் கலையின் அடையாளமாகக்கூட இல்லை, கர்நாடகத்தின் அடையாளமாகவே அவர்கள் காட்டுவது நடிகர் ராஜ்குமாரை ! ஆனால் உலகப்பெரு நடிகர்களுள் ஒருவராக நாம் கொண்டாடவேண்டிய நடிகர் திலகத்தை நாம் நமது கலையின் அடையாளமாகவேனும் சொல்கிறோமா? நேற்று மரித்த நடிகர் விஷ்ணுவர்த்தனுக்கெல்லாம் சிலையும் நினைவு மண்டபமும் அமைத்து உத்தரவிடுகிறது கர்நாடக அரசு. இங்கே என்ன நடக்கிறது? சிவாஜியை ‘ஆருயிர் நண்பர்’ என்று கூட்டங்களில் உருகுவதுடன் நிறுத்திக்கொள்கிறார் கலைஞர்.

‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ என்று புறப்பட்டுத் தென்றலாய் கோடிக்கணக்கான தமிழர்களின் காதுகளுக்குள் நுழைந்து உணர்வாய் உதிரமாய்ப் படிந்து போனவர் கவியரசர் கண்ணதாசன். கண்ணதாசனையும் ‘ஆருயிர் நண்பர்’ லிஸ்டில் சேர்த்துவிட்டு கண்ணதாசனுக்குத் தரவேண்டிய எந்தவித அங்கீகாரத்தையும் கொடுக்காமல்தானே இருக்கிறார் கலைஞர்...!
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஆங்கிலமும் விஞ்ஞானமும் படித்த இளைய தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா, அந்த வித்தக எழுத்தாளருக்கு அரசு தந்திருக்கும் அங்கீகாரம் என்ன?

தமிழ் என்றால் தொல்காப்பியத்தில் தொடங்கி திருக்குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்துக்கு வந்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்கள் நிகழ்த்துவதும், இலக்கிய மலர்கள் தயாரிப்பதுவும், கருத்தரங்குகள், கலந்தாய்வுகள் நிகழ்த்துவதும் இந்தக் கோணத்திலேயே இலக்கியச் சேவையை முடித்துக்கொள்வதுவும் முறையான தற்கால இலக்கியத்தைப் பற்றிய புரிதலே இன்றி நடந்துகொள்வதுவும்தான் அரசின் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பணியாகவும் இருந்து வருகிறது.

தற்கால இலக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் தற்கால இலக்கியப் படைப்பாளர்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதும் இந்த நூற்றாண்டு படைப்பாளர்களுக்கு எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் விடுவதும் ஒரு மொழியைப் பாதுகாப்பதாகவோ வளர்ப்பதாகவோ ஆகாது.

இத்தகு மோசமான நிலைமைக்கு சில இலக்கிய நாட்டாண்மைகள் சொல்லும் பதில் என்னவென்றால் மற்ற மொழியினருக்கு பழமையான இலக்கியங்கள் கிடையாது. அதனால் அவர்கள் தற்கால படைப்புக்களைத் தூக்கிவைத்துக்கொண்டு பெருமையடைகிறார்கள். ஆனால் நமக்கு சங்க கால இலக்கியங்கள் இருக்கின்றன. அதனால் நாம் பழம்பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். இது ஒரு கவைக்குதவாத சொத்தையான வாதம். உலகம் இந்த வாதங்களை எல்லாம் ஏற்பதில்லை. உங்கள் மொழியில் இந்த வருடம் என்ன படைப்பிலக்கியம் வந்தது..சென்ற வருடம் எது வந்தது என்றுதான் பார்த்து பரிசு தந்து கொண்டாடுகிறதேயல்லாமல் உங்களிடம் நானூறு வருடங்களுக்கு முந்தைய கவிதை இருக்கிறதா, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாவல் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு பரிசு தந்து கொண்டாடுவதில்லை. பழைய இலக்கியங்கள் நம்மிடம் உள்ள பூர்விகச் செல்வங்கள். அவற்றை நாம் கொண்டாடுவோம். அதே சமயம் புதிய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் உயர்த்திப் பிடிக்கவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
தங்களின் மொழிகளில் வரும் தற்கால இலக்கியங்களை வெவ்வேறு மொழிகளுக்குக் கொண்டுசென்று அதன் மூலம் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளையெல்லாம் ஐரிஷ், ஸ்பானிஷ் போன்ற சின்னச்சின்ன மொழிகளெல்லாம் பெற்று அந்த மொழிகளின் படைப்பாக்கங்கள் உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பயணித்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் “எங்கள் மொழியில் எல்லாம் இருக்கிறது. அதனால் எங்கள் இலக்கியம் பாரதிதாசனோடு நின்றுவிடுகிறது. இதற்குமேல் நாங்கள் பயணிப்பதாக இல்லை” என்று அறிவித்துவிடலாமா?

பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் ஆயிரக்கணக்கான சிலைகளும்,மணிமண்டபங்களும், நூலகங்களும், நகர்களும், வரவேற்பு வளையங்களும் உள்ளன. இனிமேலாவது இலக்கிய சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நூலகங்களுக்கும் விருதுகளுக்கும் கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்ற படைப்பிலக்கியவாதிகளின் பெயர்களைச் சூட்டுங்கள். படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரித்து கௌரவியுங்கள். கர்நாடகத்தில் இதைத்தான் செய்கிறார்கள். தற்கால படைப்பிலக்கியவாதிகளை அங்கீகரிக்கிறார்கள். வெறுமனே அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதில்லை. கர்நாடகத்திற்கும் பெங்களூருக்கும் வந்திருப்பவர்கள் நிஜலிங்கப்பா, ஹெக்டே என்ற பெயர்களையும் சிலைகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மாபெரும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும் பண்பு இங்கே இருக்கிறது.
அதனால்தான் கன்னடமொழிக்கு ஏழு ஞானபீடம், வங்காள மொழிக்கு ஐந்து ஞானபீடம், மற்ற மொழிகளுக்கு நான்கு ஞானபீடம் தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு என்ற நிலைமை நீடித்து வருகிறது.
சூப்பர் அரசியல் வாதிகளையும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் வெறும் நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனநிலையிலிருந்து என்றைக்கு நாம் மாறப்போகிறோம் ?

Friday, December 10, 2010

மைனா- அபத்தங்களின் குவியல் !


சில படங்களுக்கு இப்படி அமைந்துவிடும். அப்படி அமைந்துவிட்ட ஒரு படம் மைனா. கண் மண் தெரியாமல் புகழுகிறார்கள். இப்படியொரு படமே வந்ததில்லை என்ற அளவுக்குப் பாராட்டு மழையால் குளிப்பாட்டுகிறார்கள். பத்திரிகைகள்தாம் என்றில்லை, பதிவுகளிலும் உச்சத்துக்குத் தூக்கிவைக்கிறார்கள். அதற்கென வரும் பின்மொழிகளிலும் ஆஹா ஓஹோ என்கிறார்கள். மொத்தத்தில் படம் நல்ல வசூலைக் குவித்துவிட்டது.... மகிழ்ச்சி.! ஆனால் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னணியில் அத்தனைச் சிறப்புக்கு இந்தப் படம் தகுதியுடையதுதானா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு படம் மிகப்பெரிய பாராட்டுக்களோடு மிகப்பெரிய வசூல் சாதனையையும் பெறவேண்டுமெனில் முற்றிலும் புதிதானதொரு அனுபவத்தைத் தரவேண்டும். நாமெல்லாம் ஆயிரம் படம் பார்த்துவிட்டுத்தான் இன்னொரு படத்தையும் பார்க்க உட்காருகிறோம். களம் புதிது, கதை புதிது , அது சொல்லப்பட்ட பாதை புதிது என்றிருந்தால்தான் நல்ல அனுபவமோ புதிய அனுபவமோ வாய்க்கும் . மிகப்பெரும் வெற்றியடைந்த எல்லாப்படங்களும் இந்தப் பட்டியலில்தாம் வரும். அந்தக் காலகட்டத்தில் பராசக்தி படம் இந்த அனுபவத்தைத்தான் தந்தது. திருவிளையாடல், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆரம்பித்து அதற்கடுத்துவந்த ஸ்ரீதர் படங்கள், பாலச்சந்தர் படங்கள், பின்னர் வந்த அன்னக்கிளி, அதற்கடுத்து வந்த பாரதிராஜா படங்கள், ஏன் எம் ஜி ஆரின் உலகம் சுற்றிய வாலிபன் என்ற எல்லாப்படங்களுமே இந்த அடிப்படையில்தாம் இருந்தன.

மற்ற படங்களிலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக வந்த இன்னொரு படம் ‘ஒரு தலை ராகம்.’ அதனால்தான் இன்னமும்கூட டி.ராஜேந்தர் புகழுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். பின்னர் மணிரத்தினம் மிகமிக வித்தியாசமான கோணங்களில் கலைநயத்துடன் படங்கள் தந்து இந்தியாவையும் தாண்டி புகழ் பரப்பினார். சமீப காலமாக அப்படி முற்றிலும் வேறு கோணத்தில் படம் தந்த இயக்குநராக பாலாவைத்தான் சொல்ல முடியும். சேது , நந்தா, பிதா மகன், நான் கடவுள் என்று தமது ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசமான அனுபவங்களைச் சொன்னவர் அவர். பாலாவைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் பருத்திவீரன் மூலம் கவனம் கவர்ந்தார். அவரைத்தொடர்ந்து சசிகுமார், வசந்த பாலன், ஜனனாதன் ,பாண்டிராஜ், சுசீந்திரன், சற்குணம் என்றெல்லாம் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே வித்தியாசமான கதைக்களன்களை வித்தியாசமான சினிமா நடையில் சொல்லியிருக்கிறார்கள். நல்ல வெற்றிகளையும் ஈட்டியிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாருடைய படங்களை விடவும் அதிகமான பாராட்டு மழைகள் மைனாவுக்குப் பொழியப்படுவதன் காரணம்தான் விளங்கவில்லை. ஒரு பிரபல பெண்கள் பத்திரிக்கை தலையங்கமே எழுதியிருக்கிறது. உண்மையில் மைனா அந்த அளவுக்குத் தகுதிகள் படைத்த படமா என்பதுதான் புரியவில்லை. ஏதோ காரணங்களால் ஓடட்டும். வெற்றி பெறட்டும். அதுபற்றி நமக்கு ஆட்சேபம் கிடையாது. உண்மையில் பார்க்கப்போனால் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் வணிகரீதியாகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறதாம். அது நல்ல அறிகுறிதான். ஆனால் அது நல்ல படமா என்பதுதான் கேள்வி.

படம் தொடங்கி கடைசி வரையிலும் ஏதாவது ஒரு படத்தின் நினைவு வந்துகொண்டேயிருப்பது ஒரு நல்ல படத்திற்கு இலக்கணம் அல்ல. மைனாவில் இதுதான் நடக்கிறது. படம் தொடங்கி இடைவேளை வருவதற்குள் பூ, பருத்தி வீரன், பசங்க என்று நான்கைந்து படங்களின் நினைவைப் படம் எழுப்பிவிடுகிறது. காரணம் ஒரே மாதிரியான காட்சியமைப்புகள்....!கடைசியில் நடைபெறும் வன்முறையான பெண்ணின் கொலையும் பல படங்களில் பார்த்த காட்சியமைப்புத்தான். அந்த பஸ் மலைச்சரிவில் பாதியில் துருத்திக்கொண்டு நிற்பதுவும் பல ஆங்கிலப்படங்களில் ஏற்கெனவே பார்த்த காட்சிதான்.
இப்போதெல்லாம் சினிமா என்பதே ஆங்கிலப்படமோ, தழுவல் படமோ எவ்வளவு நன்றாகக் காப்பி அடிக்கிறார்கள் என்பதைக்கொண்டுதான் இயக்குநர்களின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால் அதிலும் தங்களின் கற்பனையோட்டத்தை எவ்வளவு கலந்து தருகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் இயக்குநர்களின் திறமைகள் சிறக்கின்றன.

கவுதம் மேனன் , முருகதாஸ், லிங்குசாமி , செல்வராகவன், போன்று பெரிய அளவில் படம் செய்யும் இயக்குநர்களின் படங்களெல்லாம் பெரும்பாலும் தழுவல் படங்கள்தாம். ஆனாலும் தங்களின் கைவண்ணமும் சேர்த்தே கொடுக்கும் கலை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

மைனா இயக்குநரைப் பொறுத்தவரை அவருக்கு சினிமா மொழி மிகச்சிறப்பாகக் கைவருவதை நிச்சயம் குறிப்பிடவேண்டும். அதனால்தான் எந்த இடத்திலும் கொஞ்சம்கூடத் தொய்வு ஏற்படாமல் படத்தை மிகவும் விறுவிறுப்புடன் கொண்டு செல்வதற்கும் சின்னப்பையனிலிருந்து அந்தப் படத்தில் நடித்த அத்தனைப் பேரிடமும் தமக்கு என்ன வேண்டுமோ அந்த நடிப்பைத் துல்லியமாகக் கொண்டுவரும் வித்தையும் அவருக்கு அநாயாசமாகக் கை வந்திருக்கிறது. எடிட்டிங் நாலெட்ஜும் அவரிடம் அபாரமாக இருக்கிறது.
ஆனால் படத்தின் மூலம் அவர் சொல்லவருகின்ற மெசேஜ்தான் நம்மை உறுத்துகிறது. பெண்களின் மீதும் பெண்மையின் மீதும் அவருக்குக் கொஞ்சம்கூட மதிப்போ மரியாதையோ இல்லையென்பதைத்தான் அவர் படத்தில் வைத்திருக்கும் காட்சிகள் மூலம் மறைமுகமாகச் சொல்லுகிறார். பெண்கள் படத்தில் ஒரு இடத்தில்கூட நல்லமுறையில் காட்டப்படவில்லை, நாயகி ஒருத்தியைத் தவிர.! நாயகியைக்கூட வெறும் சினிமா நாயகிக்குரிய வழக்கமான பாணியில்தான் காட்டியிருக்கிறார்கள். படத்தில் வரும் தாய்மார்கள் எல்லாருமே ஏதோ வில்லன்கள் அளவுக்குப் பந்தாடப்படுகிறார்கள்- அதுவும் கதாநாயகனாலேயே!
அப்பாவையும் அம்மாவையும் போட்டுத் துவைத்து எடுக்கிறான் கதாநாயகன். இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர் சொல்லவருகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு பாவமோ பச்சாத்தாபமோ அல்லது அவன் தவறு செய்கிறானே என்ற தாக்கத்தைப் பார்க்கிறவர்களுக்கு எழுப்பும் எந்தவித புரிதலும் இல்லாமல் ஏதோ அவன் மிகச் சரியான ஒன்றைத்தான் செய்கிறான் என்ற பாவனையிலேயே கதை நகர்த்தப்படுகிறது.

அநாதையாய் வந்த குடும்பத்திற்கு இடம் கொடுத்து , அவர்கள் பிழைக்க வழி செய்து கொடுத்து, அந்தப் பெண்ணை தினந்தோறும் பள்ளிக்குக் கூட்டிச்சென்று கூட்டிவந்து பார்த்துக்கொள்ளும் கதாநாயகன் போல ஒரு பையன் கிடைக்கும்போது அந்தப் பையனுக்கே கட்டிக்கொடுத்து பெண்ணை வாழவைக்கலாம் என்றுதான் ஒரு ஏழைத்தாயின் மனம் விரும்பும். அதுவும் ஒரு கிராமத்து ஏழைத்தாய் அப்படித்தான் எண்ணுவாள். அதுவும் மைனாவில் காட்டப்படும் காடு போன்ற எவ்வித நாகரிகமும் எட்டிப்பார்க்காத – காட்டுக்குள்ளே மிகமிக தூரத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய குக்கிராமத்தில் இருக்கும் ஏழைத்தாய்க்கு- வேறுமாதிரி சிந்தனை வரவே வாய்ப்பில்லை. என்னுடைய பெண்ணை பட்டணத்தில் படித்த பெரிய நாகரிக மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என்று சொல்கிறாளாம். உடனே தன்னுடைய காதலியின் தாயாரை சினிமாப்பட வில்லன் அளவுக்குப் புரட்டிப்போட்டு துவைத்து எடுக்கிறானாம் கதாநாயகன். லாஜிக் என்பதெல்லாம் படத்தில் சுத்தமாகக் கிடையாது என்பதற்கு இது மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளுமே இம்மாதிரிதான் உள்ளன.

ஒரு காட்சியில் கதாநாயகி ருதுவாகிறாள். வீட்டில் சடங்கு செய்யப்படுகிறது. அங்கு வாழ்த்த வந்த ஒரு பெண்மணி அந்தப் பெண்ணை “இவ்வள அழகா இருக்கற உன்னை எந்த மகாராஜன் வந்து கல்யாணம் செய்துக்கப்போறானோ” என்று வாழ்த்துகிறாள். எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு இயல்பான நிகழ்வு இது. ஆஹா நம்ம இயக்குநர் இங்கே பிடித்திருக்கிறார் பாருங்கள் ஒரு காட்சியை... அந்தப் பெண்மணி வாழ்த்திவிட்டு வெளியில் வந்ததும் வழிமறித்துத் தடுத்து நிறுத்துகிறான் நம்ம கதாநாயகன். “என்னடி சொன்னே? என்னடி சொன்னே?” என்று கேட்டு அவளைக் குட்டுகிறான் பாருங்கள்..(நினைவு வருகிறதா பருத்தி வீரனில் பொணந்தின்னியை ஒரு சிறுவனை வைத்து கார்த்தி குட்டச்சொல்லும் காட்சி) அதே காட்சியின் ரிப்பீட்டுதான் . அந்த கிராமத்துத் தாயின் கபாலம் நொறுங்கும் அளவுக்குக் குட்டிக்கொண்டே இருக்கிறான் கதாநாயகன். இயக்குநர் சொல்ல வருவது என்னவென்றால் அவன் உயிருக்குயிராக நேசிக்கும் அவளை இன்னொருவருக்கு என்று அந்த அம்மையார் சொல்லிவிட்டாராம். அவளைப் பற்றிக் குறைவாக யார் என்ன சொன்னாலும் நம் கதாநாயகன் சும்மா விடமாட்டானாம். அவ்வ்வளவு காதல் உள்ளவனாக அவனைக் காட்ட வேண்டுமாம். இதுமாதிரியேதான் நிறையக் காட்சிகள் காணக்கிடைக்கின்றன. இன்னமும் ஒரேயொரு காட்சியைத்தான் இயக்குநர் தவற விட்டிருக்கிறார். எல்லாப் பள்ளிப்பிள்ளைகளும் விளையாடிக்கொண்டிருக்கின்றன.... ஆளாளுக்குத் தங்களுக்குப் பிடித்த பறவைகளைச் சொல்லி விளையாடுகிறார்கள். ஒரு பையன் தனக்குப் பிடித்தது கிளி என்கிறான். இன்னொருவன் சிட்டுக்குருவி என்கிறான். ஒரு பையன் மைனா என்கிறான். உடனே ஒரு சின்னப்பெண் “ஐயே எனக்கு மைனா பிடிக்காது” என்கிறாள். அவ்வளவுதான். அதைக்கேட்டு விடுகிறான் நம் கதாநாயகன். உடனே அந்தப் பெண்ணைத் துரத்திச்சென்று அப்படியே காலைப்பிடித்துத் தூக்கித் தரையில் அடித்துத் துவைத்து அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுகிறான் என்ற ஒரு காட்சியை மட்டும்தான் இயக்குநர் போனால் போகிறதென்று சேர்க்காமல் விட்டிருக்கிறார். மற்றபடி இதே பாணியில் ஏகப்பட்ட அபத்தக் காட்சிகள்.
ஒரு காவல்துறை அதிகாரி தலைதீபாவளிக்கு வருவதில்லை என்பதற்காக அவருடைய மாமனார் வீடும் அவருடைய சுற்றங்களும் இப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பிரபு சாலமோன் மட்டும் ஒரு நாவலாக எழுதியிருப்பாரேயானால் அவருக்கு நிச்சயம் நோபல் பரிசே கிடைத்திருக்கும். இந்த வருடத்தின் மிகச்சிறந்த அபத்தமாக இதனை தாராளமாகச் சொல்லலாம். இன்னொரு மிகப்பெரிய அபத்தம் காவல்துறை அதிகாரியின் மனைவியாக வருகிறவரின் பாத்திரப்படைப்பு. பெண்மைக்கான இலக்கணங்கள் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்த எல்லா ஒழுங்கு நியதிகளையும் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பெண்ணை முன்னிறுத்தியே தான் கிளைமாக்ஸும் எடுக்கப்பட்டிருக்கிறது. அபத்தமும் அநியாயமுமாக எத்தனை ரத்தம் கொட்டமுடியுமோ அத்தனை ரத்தம் கொட்டப்பட்டிருக்கிறது.
கதாநாயகனின் பாத்திரப்படைப்பு பருத்திவீரன் கார்த்திதான். பேசுவது தலையாட்டுவது எல்லாமே அப்படியே சுவீகரித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. கடைசியில் தன்னைக் கைது செய்துகொண்டு போகிற காவல்துறை அதிகாரியை அவன் காப்பாற்றுகிறான் என்பது மட்டுமே இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சொல்லும் தார்மிக தர்மம்.

ஒரு பாவமும் அறியாத அந்தப் பெண் மைனா அவ்வளவு கோரமாகவும் கொடூரமாகவும் கொல்லப்படுவதற்கு என்ன லாஜிக் என்ற கேள்விகளும் கேட்கப்படக்கூடாது.
இந்தப் படத்தை இவ்வளவு விரிவாக எதற்காக ஆராய்வது என்ற கேள்வியும் எழுப்பலாம். கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி மிக அதிகமாக வியந்துரைத்திருக்கிறார்கள். மற்ற பெரியவர்களும் இதே பாணிக்கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் இப்படியெல்லாம் சொல்லும்போது நாம் எப்படி சரியான கருத்தைச் சொல்வது என்று நிறையப்பேர் தயங்கி பேசாமலிருந்திருக்கலாம். அப்படி இருக்கவேண்டாமே என்பதற்காகத்தான் இங்கே இதனை எழுதியிருக்கிறேன்.

நிச்சயம் பிரபு சாலமோனிடம் நல்ல திறமை இருக்கிறது. சினிமா மேக்கிங் அவருக்குப் பிரமாதமாக வருகிறது. நல்ல கதைகளுடன் நல்ல படங்களை அவர் உருவாக்கட்டும்.

மைனா நன்றாக எடுக்கப்பட்ட படமே தவிர, நல்ல படம் அல்ல!

Tuesday, December 7, 2010

ரெய்கியைத் தெரியுமா ?


ஆன்மிகத்தின் பெயரால் அகில உலகிலும் புகழ்பெற்றிருந்த ஒரு சாமியார் பெண் விவகாரத்தால் மிகப்பெரிய அளவில் பெயர் கெட்டுப்போனதையும் அவரை நம்பியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளானதையும் சமீபத்திய நிகழ்வுகளாகப் பார்த்தோம். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் மிகக் குறுகிய காலத்தில் அவருக்கு ஏற்பட்ட புகழும் செல்வாக்கும் இத்தனை லட்சம் பக்தர்களும், இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல இடங்களிலும் ஏற்படுத்தப்பட்ட ஆசிரமங்களும் குவிந்த கோடிக்கணக்கான பணமும் அதனையும் தாண்டி பக்தர்கள் என்ற பெயரில் அவரிடம் வந்து விழுந்த அப்பாவிப் பொதுமக்களும்தாம்................

இத்தனை பக்தர்கள் கூட்டம் இவ்வளவு குறுகிய கால அளவில் மற்ற எந்தவொரு ஆன்மிக குருவுக்கும் ஏற்பட்டதில்லையே இவருக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது என்பதற்கு அந்த பக்தர்களில் பலரது பதிலே விடையாகக் கிடைக்கிறது. “நீங்கள் எப்படி இவருக்கு பக்தரானீர்கள்?” என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட எல்லாருமே ஒரே மாதிரியான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “உடம்புக்கு வியாதி வந்ததுன்னு அவரிடம் போனோம். கையை வைச்சார். உடனே குணமானது. எங்களுக்கு ஒரே ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது. எப்படி ஒரு மனிதரால் இப்படிச்செய்ய முடியும். இவர் நிச்சயம் கடவுளின் அவதாரமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தோம். தொடர்ந்து அவரிடம் போக ஆரம்பித்து அவருடைய பக்தர்களாகவே ஆகிவிட்டோம்.”

ஆக.....முக்கால்வாசிப்பேரின் வாக்குமூலம் இதுவாகவே இருக்கிறது. உடம்புக்குப் பிரச்சினை என்று போயிருக்கிறார்கள். பிரச்சினைக்குரிய இடத்தில் அவர் கையை வைத்திருக்கிறார். குணம் கிடைத்திருக்கிறது. உடனடியாக அவர் கடவுளின் அவதாரம் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்.தலைவலி என்று ஒருவர் வருகிறார். அவர் தலைமீது மற்றவர் சிறிதுநேரம் கையை வைக்கிறார். உடனடியாகத் தலைவலி குணமாகிறது. தலைவலியுடன் வந்தவருக்கு கையை வைத்தவர் மீது ஒரு ஆச்சரியமும் அதிசயமும் உண்டாகுமா இல்லையா?

சம்பந்தப்பட்ட அந்த சாமியாரின் விவகாரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதே இந்த நோய் தீர்க்கும் அதிசய சிகிச்சை முறைதான். இதெல்லாம் உண்மையா இப்படியெல்லாம் நடப்பது சாத்தியமா...? இல்லை ஏதாவது செப்படி வித்தையா என்பது நியாயமான கேள்வி.
அந்தச் சாமியாரை நாம் மறந்துவிடுவோம். கையை வைப்பதன் மூலம் நோய்கள் குணமாகுமா அப்படியொரு சிகிச்சை முறை இருக்கிறதா என்பது நாம் விவாதிக்கப்போகிற விஷயம்.

உலகம் தோன்றியது முதல் இன்றுவரை மனிதன் பல்வேறு விதங்களில் போராடிக்கொண்டே இருக்கிறான். சுகமான, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக அவனது போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது அவ்வளவு சிரமமான காரியமும் இல்லை. பார்க்கப்போனால் அது மிகவும் எளிதான செயல்தான். சில நல்ல பழக்கவழக்கங்கள், சில ஒழுங்கு நியதிகள், சுகாதாரம், நல்வழிச்சிந்தனைகள், சரியான உணவுமுறை, கட்டுக்கோப்பான நெறிகள் என்று கடைப்பிடித்தாலே போதும். ஆரோக்கியமான வாழ்வு கைவசமாகிவிடும். இது பொதுவானது.
அதே நேரத்தில் சுற்றுச்சூழல்களாலும், இயற்கைப் பாதிப்புகளாலும், பரம்பரைத் தொடர்களாலும் ஆரோக்கியம் கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவற்றால் ஏற்படக்கூடிய ஆரோக்கியக் குறைவின் சதவீதம் மிகவும் குறைவுதான்.
நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய கையில்தான் உள்ளது. நம்முடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கைமுறைதான ஆரோக்கியக் குறைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஆரோக்கியக்குறைவு வரக்கூடாது என்பதற்காகவும் , அப்படி வந்துவிட்டால் அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காகவும் பல்வேறு மருத்துவமுறைகளையும் .பல்வேறு சிகிச்சை முறைகளையும் மனித இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது.
வீட்டுவைத்தியம், நாட்டுவைத்தியம், பாட்டி வைத்தியம் முதல் இன்றைய நவீன ‘அலோபதி’ என்று சொல்லக்கூடிய ஆங்கில மருத்துவமும் , பரம்பரை வைத்தியம் என்று சொல்லப்படும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி. ஹோமியோபதி போன்றவையும் மனித குலத்துக்கு நல்லதே செய்திருக்கின்றன; செய்தும் வருகின்றன.....இந்த மருத்துவ முறைகள் எல்லாம் மருந்து, மாத்திரைகளின் உதவியோடு செயல்படக்கூடிய மருத்துவ முறைகள்.
மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே நோய்களை குணமாக்கும் எத்தனையோ சிகிச்சை முறைகள் அன்றுமுதல் இன்றுவரை உலகின் பல திசைகளிலும் மிக வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ரெய்கி, பிராண சிகிச்சை(pranic healing) அக்குபங்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, மலர் மருத்துவம், உளவியல் சிகிச்சை, ஹிப்னாடிசம், பிரமிட் சிகிச்சை, கிரிஸ்டல் சிகிச்சை, சுஜோக் என்றழைக்கப்படும் தானிய சிகிச்சை(seed therapy) போன்ற மருந்து மாத்திரைகள் இல்லாமல் செய்யப்படும் மருத்துவ முறைகளும் மனித குலத்துக்கு மிகமிக நல்லதை மட்டுமே செய்துவருகின்றன.
இவற்றில் எந்த மருத்துவமுறை சிறந்தது என்பதும், எது மிக உறுதியாக நல்ல முறையில் பயனளிக்கும் என்பதும் எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் நம்பிக்கைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி மாறுபடலாம்......ஆகவே குறிப்பிட்ட இந்த மருத்துவமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்பது எந்த வகையிலும் பலன் தராது.

இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமான வாழ்க்கையைத் ‘தேடி அலையும்’ மேலை நாட்டினர் அறிவியல் முன்னேற்றத்தால் பல நவீன மருத்துவக்கருவிகளையும் மருந்து மாத்திரைகளையும் கொண்டுள்ள அலோபதி மருத்துவ முறையை விட்டு ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் யோகாசனம், தியானம், இயற்கை மருத்துவம் போன்றவற்றை நாடி நம்நாட்டுக்குப் படை எடுத்து வருகின்றனர்.
மேலைநாடுகளில் மட்டுமின்றி கீழை நாடுகளில் கூட குறிப்பிட்ட மருத்துவமுறை என்றில்லாமல் Holistic treatment என்ற பெயரில் செய்யப்படும் கூட்டுமருத்துவ சிகிச்சைகளும் இன்று பிரபலமடைந்து வருகின்றன.

அலோபதி மருந்துகள் அந்தந்த நேரத்துக்குப் பலன் தருகின்றன என்பதுடன் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்ற வாதத்தை அலோபதி மருத்துவம் இன்றுவரை மறுத்ததே இல்லை. அதே சமயம் , நாளுக்குநாள் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் வளர்ந்துவரும் அலோபதி மருத்துவத்தின் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அவசரக்கால சிகிச்சை தேவைப்படும் போதும், திடீர் இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களின்போதும் , மகப்பேறு சமயங்களிலும், மாரடைப்பு போன்ற அசாதாரண நிலைகளிலும், விபத்துக்களின் போதும் மேலும் சில நவீன ரக அறுவை சிகிச்சைகளின் போதும் அலோபதி மருத்துவம் பிரமிப்பைத் தருவதை மறுப்பதற்கில்லை.

ஆனால் எல்லா மருத்துவ முறைகளுக்கும் ஒரு limitation (எல்லைக்கோடு) இருப்பதுபோலவே அலோபதி மருத்துவத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. பல நோய்களையும் பிரச்சினைகளையும் குணமாக்குவது போலவே பல நோய்களையும் பிரச்சினைகளையும் குணமாக்க முடியாமலும் இருக்கிறது. அலோபதி மருத்துவத்தில் குணமாகாமல் இருக்கும் பல நோய்கள் ஹோமியோபதியில் குணமாகிவிடுகின்றன. பல நோய்கள் சித்தமருத்துவத்தில் குணமாகிவிடுகின்றன. பல நோய்கள் ஆயுர்வேதத்தில் குணமாகிவிடுகின்றன. இன்னமும் பல நோய்கள் அக்குபங்சர், அல்லது அக்குபிரஷர் சிகிச்சையில் குணமாகிவிடுகின்றன. இதுபோலவே ரெய்கியிலும் பல நோய்கள் மிக நல்ல முறையில் பரிபூரணமாகவே குணமாகிவிடுகின்றன.

ரெய்கியில் குணமாவது இருக்கட்டும் ரெய்கி என்பது என்ன.. ரெய்கியால் குணப்படுத்த முடியுமா என்பது கேள்வி.

பிரபஞ்சம் எங்கும் COSMIC ENERGY நிறைந்திருக்கிறது. இதனைத் தமிழில் உயிர்சக்தி என்றழைக்கலாம். அல்லது ஜீவ சக்தி என்றும் அழைக்கலாம். அந்தக் காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து அதனை அடுத்தவர் உடலில் செலுத்துவதே ரெய்கி கலை.
நமது உடல் மொத்தம் ஏழு சக்கரங்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்கிறது. தியானம் பயின்றவர்களுக்கு இந்தத் தகவல் தெரியும். சக்கரங்கள் என்றால் என்னவோ ஏதோவென்றெல்லாம் கலவரப்பட வேண்டாம். சக்தி மையங்களைத்தான் சக்கரம் என்றழைக்கிறார்கள். இந்தச் சக்கரங்கள் சரிவர இயங்குவதற்கு அவற்றில் சரியான அளவு உயிர்சக்தி இருக்கவேண்டும். பல்பு எரிய இத்தனை வால்ட் மின்சாரம் தேவை; மோட்டார் ஓட இத்தனை வால்ட் மின்சாரம் தேவை என்பதுபோல.....! அந்த சக்தி மையங்களில் பல்வேறு காரணங்களால் சக்தி குறைபாடு ஏற்படும்பொழுது அந்த மையத்துக்கு உட்பட்ட அங்கங்களில் பாதிப்பு நேர்கிறது என்பதுதான் ரெய்கியின் தத்துவம்.

காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து குறிப்பிட்ட அந்தச் சக்கரத்தை வலுவூட்டுவதன்மூலம் இழந்த சக்தியை அந்தச் சக்கரம் பெற்றுவிடுகிறது. சக்தி சமன் செய்யப்பட்டவுடன் பிரச்சினை தீர்ந்து உடல் பழைய நிலைமைக்கு வந்துவிடுகிறது. அதாவது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் நோய் தீர்ந்துவிடுகிறது.

இது எப்படி சாத்தியம்? பிரபஞ்சம் எங்கும் இருக்கும் ஜீவசக்தியை எப்படிக் கிரகிப்பது.... அதனை எப்படி அடுத்தவர் உடலில் செலுத்துவது....? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதுதானே? எல்லாவற்றிற்கும் வழிமுறைகள் இருப்பதுபோலவே இதற்கும் வழிமுறைகள் உள்ளன. தீட்சையும் சில வகை தியானங்களும் இதற்கான பாதையை அமைத்துத் தருகின்றன. தியானத்தைத் தொடர்ந்து சில பயிற்சிகளை மேற்கொண்டால் ரெய்கி வழங்குவதற்கான ஆற்றலைப் பெறமுடியும். அப்படி ஆற்றல் வரப்பெற்றவர்கள் பிறருக்கு ரெய்கி வழங்க முடியும்.

ரெய்கி வியாதிகளை குணப்படுத்துவது என்பதெல்லாம் உடான்ஸ், மக்களை ஏமாற்றுவது என்பதுபோல் சிலர் சொல்லலாம். ரெய்கி வியாதியை குணப்படுத்தும் என்பதற்கு விஞ்ஞானபூர்வ ஆதாரம் ஏதேனும் உண்டா என்றெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்படலாம். மருத்துவ விஞ்ஞானிகள் முன்வந்தால் விஞ்ஞான பூர்வ ஆதாரங்களை நிச்சயம் கொண்டுவர முடியும். எதுஎதையோ படம்பிடித்து நிரூபிக்க விஞ்ஞானபூர்வ கருவிகள் வந்துவிட்டன. ரெய்கி செய்யப்படும்பொழுது மனித உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? ஆனால் விஞ்ஞான மருத்துவம் ஏதேதோ போலிக்காரணங்களைச் சொல்லி மறுத்துவிடுகிறது. தியானம் செய்யும்பொழுது மனித உடலில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்கின்றனவோ அதைப்போன்று அபரிமிதமான மாறுதல்கள் ரெய்கி செய்யும்போதும் நிகழ்கின்றன.

என்னென்னவோ சொல்லி மக்களை மடையர்களாக்கி அவர்களை ஏமாற்றி ஒரு மௌடீக நிலைக்கு அவர்களைக்கொண்டு வந்துவிடுவதால் ஏதோ ஒரு உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தோன்றுகிறது. அது ரெய்கியால் ஏற்பட்டது என்று சொல்லமுடியாது என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது உண்மையல்ல; ஏனெனில் ஒன்றுமே பேசாமல் எதையும் உணர்த்தாமல் ஒரு சின்னக்குழந்தைக்கு வந்திருக்கும் உடல் பிரச்னைகளையும் ரெய்கியால் சரிசெய்துவிட முடியும். இன்னமும் சொல்லப்போனால் பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கு ரெய்கி செய்யும்பொழுது அது மிக விரைவாகச் செயல்பட்டு விரைவான குணம் கிடைக்கிறது.

எல்லாம் சரிதான், பிரபஞ்ச சக்தி அந்த சக்தி இந்த சக்தி என்றெல்லாம் சொல்லுவதைத்தான் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்கிறீர்களா? மனிதர்களின் சாகசங்களை கின்னஸ் வழியாகப்பார்க்கிறோம். சராசரி மனிதனால் செய்யமுடியாத, ஏன் யோசித்தே பார்க்க முடியாத பல்வேறு சாகசங்களைப் பல்வேறு பயிற்சிகளின் மூலம் பெற்ற அவர்கள் நம்மால் நினைத்தே பார்த்திராத அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள். அது வெறும் உடற்பயிற்சியாலும் சில வகை உத்திகளாலும் சாத்தியமாகிறது. உடலால் செய்யப்பட்ட பயிற்சிகளுக்கே அத்தனை அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்னும்போது மனதால் எண்ணத்தால் ஞானத்தால் செய்யப்படும் பயிற்சிகள் எத்தனை வலுவானதாக இருக்கமுடியும் என்பதையும் அதன் வலிமை எத்தகையதாய் இருக்கும் என்பதையும் கற்பனை செய்து பார்த்தீர்கள் என்றால் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப முடிகிறது; சாட்டிலைட் மூலம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது. நியூசிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சை இங்கிருந்தே தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது; அமெரிக்காவில் இருக்கும் உறவினரிடம் இங்கிருந்தே அளவளாவ முடிகிறது. செல்போன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிமும் நினைத்த நேரத்தில் பேச முடிகிறது. ஒரு இடத்தில் இருந்தபடியே நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தைக்கூட இலக்கு வைத்து குண்டெறிந்து தாக்க முடிகிறது. எங்கெங்கும் வியாபித்திருக்கும் காஸ்மிக் எனர்ஜியைக் கிரகிக்க முடியாதா என்ன.....! அப்படிக் கிரகித்துத்தான் வியாதிகளை குணமாக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘பராலிஸிஸ் ஸ்ட்ரோக்’ எனப்படும் பாரிச வாதத்தினால் தாக்கப்பட்டவர்கள் உடனடியாக அலோபதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதம் அளவுக்கு அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அல்லது எண்பதாயிரம் அளவுக்கு மருத்துவச்செலவு செய்து ‘சரியாகிவிட்டதாக’ டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் நோயாளிகளைப் பார்த்திருப்போம். வாய் இன்னமும் கோணியபடி, ஒரு கை மார்போடு மடங்கிக்கொண்டிருக்க , விரல்களெல்லாம் இறுக்கமாக மடிந்து கிடக்க, காலும் இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்க.. எழ முடியாமலும் நடக்க முடியாமலும் பேச முடியாமலும் இன்னமும் முக்கால்வாசி நோயாளியாகவே அவர் ‘சிகிச்சை முடிந்து’ திரும்பியிருப்பதை நாம் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும்......ஆக, பக்க வாதத்தால் தாக்கப்பட்ட நோயாளியின் ‘உயிரைக்காக்கின்ற’ ஒரு விஷயத்தை மட்டுமே அலோபதி செய்து அனுப்பிவைத்திருப்பதை உணரலாம். அதைத் தொடர்ந்து எத்தனைத்தான் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் எவ்வளவு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டாலும் அந்த நிலையைத்தாண்டி பெரிதான முன்னேற்றம் எதுவும் கிடைத்துவிடுவதில்லை.

ஆனால் இதே நோயாளிக்கு ஆயுர்வேத மருந்தும், தொடர்ச்சியான மசாஜூம் நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துவிடும். அக்குபங்சரில் அல்லது அக்குபிரஷரில் சில புள்ளிகளைத் தூண்டிவிடுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர் மிக வேகமாக குணமடைவதைப்பார்க்க முடியும். இவை எல்லாவற்றையும் விட ரெய்கி சிகிச்சையின் மூலம் மிகமிக வேகமான முன்னேற்றத்தை இந்த நோயாளிகள் அடைந்ததை என்னால் வலியுறுத்திச்சொல்ல முடியும்.
ஆறு மாதங்கள் அல்லது ஆறு வருடங்கள் வரைக்கும் கையையும் காலையும் அசைக்க முடியாமல் மடங்கிய நிலையிலேயே வைத்திருந்தவர்களுக்கு ஒரு வார ரெய்கி சிகிச்சையிலேயே மிக நல்ல பலன்கள் கிடைத்திருகின்றன. ’இழுத்துப்பிடித்திருந்த அந்தப் பிடிப்பு’ ஒரு வாரத்திலேயே ‘விட்டுவிடும்’ அதிசயம் ரெய்கியில் சாத்தியமாகிறது.

மன உளைச்சல், மனப்பிறழ்வு , மன இறுக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ரெய்கி சிகிச்சையினால் பிரமாதமான பலன்களைக் காண்கின்றன. மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளில் ரெய்கிக்கு ஒரு பிராதானமான இடம் உண்டு. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று இதனை ஒரு மாற்றுமருத்துவக் கலை என்ற அளவில் சொல்லாமல் இதற்கு ஆன்மிக வண்ணம் பூசி அதன் மூலம் தங்களைக் கடவுள் அவதாரம் என்பதுபோல் சிலர் பிழைப்பு நடத்துவதால் இதன் மீது நம்பிக்கை வராமற்போவது ஒரு வகை; எதுவாக இருந்தாலும் விஞ்ஞான ஆதாரம் இல்லாமல் நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள் இன்னொரு வகை. எல்லாவற்றுக்குமே விஞ்ஞான ஆதாரம் கொடுத்துக்கொண்டிருக்கத் தேவை இல்லை. இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது. கேட்டு உடல் உருகிப்போனேன் என்று நான் சொல்லும்போது அதற்கு விஞ்ஞான ஆதாரம் கொடுக்கத் தேவை இல்லை. எங்க அம்மா என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்று சொல்வதற்கு எதற்காக விஞ்ஞான ஆதாரம்?
விஞ்ஞான மருத்துவம் அலோபதியைத் தவிர வேறு எந்த மருத்துவ முறையையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறதா இல்லையா என்பது பற்றிய கவலை வேண்டாம். உடல் பிரச்சினை தீர்ந்ததா இல்லையா என்பதை மட்டும் பார்த்தாலேயே போதும்.

ரெய்கியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை. எந்த வயதினரும் செய்து கொள்ளலாம். என்னுடைய அனுபவத்திலேயே இஸ்ரோவில் பணியாற்றும் தொழில் நுட்ப நிபுணர்கள், அலோபதி மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மென்பொருள் நிபுணர்கள் என்று பல துறையினருக்கும் ரெய்கி சிகிச்சை அளித்துள்ளேன். தொண்ணூற்றைந்து சதம் முழு அளவில் குணம் கிடைத்திருக்கிறது என்பதுவே ரெய்கியின் நம்பகத்தன்மையைச் சொல்லப்போதுமானதாக இருக்கிறது.

மாற்று மருத்துவ முறைகளில் ரெய்கியை Mother treatment என்றழைக்கிறார்கள். பெயருக்கேற்றது போலவே கனிவும் அரவணைப்பும் கொண்ட சிகிச்சை முறை இது.

Friday, November 5, 2010

பட்டாசு வெடிச்சாச்சா?

தோ இன்னுமொரு தீபாவளி வந்துவிட்டது. முன்னெல்லாம் தீபாவளி என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் ஆரம்பித்துவிடும். விடியற்காலையிலேயே பட்டாசு வெடிக்கத் துவங்கிவிடுவார்கள். அதிகாலை ஐந்துமணி ஆவதற்குள்ளாகவே யாராவது ஒருவர் பட்டாசு வெடிக்க வேண்டியதுதான் பாக்கி. உடனடியாக அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் காதைப்பிளந்துவிடும். யாராலும் தூங்கமுடியாது. இந்தக் களேபரங்கள் அந்த மூன்று நாட்களும் தொடரும். தீபாவளியன்று உச்சக்கட்டத்தில் இருக்கும். பெரிதான சத்தத்துடன் வெடிக்கும் வெடிக்கு லட்சுமி வெடி என்று பெயர். பாவம் லட்சுமி! காதுகளைச் செவிடாக்கும்....இதய நோயாளிகளைத் தூக்கிவாரிப்போடச்செய்யும்......குழந்தைகளைத் திடுக்கிடச்செய்யும் பயங்கர வெடிக்கு லட்சுமி வெடியென்று அந்தம்மாவின் பெயரை எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. முதன்முதலாக யாரோ ஒரு கம்பெனிக்காரன் லட்சுமி படத்தைச்சுற்றி அந்த பிராண்டில் இந்த வெடியைக்கொண்டு வந்திருப்பான். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
கொண்டாட்டங்களுக்கு மக்கள் வெடிச்சத்தங்களை எதிர்பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சத்தங்களை விரும்புகிறார்கள். திருமண ஊர்வலங்களில் பட்டாசு கொளுத்துகிறார்கள். திருவிழாக்களில் பட்டாசு வெடிக்கிறார்கள். அரசியல் கூட்டங்களுக்கு சரம்சரமாய்ப் பட்டாசு கொளுத்துகிறார்கள். படங்கள் ரிலீசாகும்போதும் பட்டாசு.....சாவு ஊர்வலங்களுக்கும் பட்டாசு..............


நடுத்தரவர்க்கத்துத் தந்தைமார்களின் நிலைமைதான் பரிதாபம். போனஸ் வாங்கி கடன் வாங்கி தீபாவளிச்செலவை எப்படியோ ஒப்பேற்றுகிறார்கள். துணிமணிகள் பலகாரங்களுக்கு ஈடான ஒரு பெரிய தொகை பட்டாசுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. முன்பெல்லாம் நூற்றுக்கணக்கில் ஆன செலவு இப்போதெல்லாம் ஆயிரக்கணக்கில் ஆகிறது. எத்தனை ஆயிரமாக இருந்தால் என்ன எல்லாமே அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் கரியாகப் புகையாகப் போய்விடுகிறது. இதிலுள்ள பொருளாதார ரீதியிலான சிந்தனை நிறையப் பேருக்கு வந்துவிட்டது. ‘கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஒரு மணி நேரத்துல எதுக்குக் கரியாக்கணும்? இனிமேல் பட்டாசுக்குச் செலவழிக்க மாட்டோம்’ என்று முடிவெடுத்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஆனால் அத்தனைப்பேராலும் இந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடிக்க முடிவதில்லை. தாய்க்குலங்கள் இம்மாதிரியான உறுதிகளுக்கெல்லாம் கணவர்களை அனுமதிப்பதில்லை. “ஊர்பூராவும் பட்டாசு வெடிச்சுக்கொண்டாடும்போது நம்ம பிள்ளைங்க மட்டும் வெடிக்காம இருக்கமுடியுமா? உங்க கஞ்சத்தனத்துக்கு எதுக்காக வெட்டியாய் என்னென்னமோ சால்ஜாப்பெல்லாம் பேசறீங்க?” என்று சொல்லி உறுதியைக் கலைத்துவிடுவார்கள்.
ஆனாலும் ஒன்று நிச்சயம். முந்தைய வருடங்களை ஒப்பிடும்போது இப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. பொருளாதாரக் கணக்குகளுக்கு அடுத்து பெரியார் போன்றவர்களின் பகுத்தறிவு வாதங்கள்.....நரகாசுரனை எரித்த கதையெல்லாம் ஆரியத்தரப்பின் பித்தலாட்டங்கள். தீபாவளி நம் பண்டிகையல்ல.. அதனைப் புறக்கணிக்க வேண்டும்.” என்பதுபோன்ற தீவிரப்பிரச்சாரங்களின் மூலம் தீபாவளி கொண்டாடுவது அறவே நிற்கவில்லையாயினும் பட்டாசு கொளுத்துவது கணிசமாகக் குறைந்திருக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பட்டாசு மோகம் குறைய நல்லாசிரியர்கள் காரணம். காசு கரியாவது ஒருபுறம், சுற்றுச்சூழல் மாசடைவது ஒருபுறம், குழந்தைத் தொழிலாளர்களையே பெருமளவில் உபயோகித்து வேலை வாங்கப்படுவதால் பட்டாசுகளைப் புறக்கணியுங்கள் என்று சில ஆசிரியர்களின் அறிவுறுத்தல் நல்ல பலன்களைத் தந்துள்ளது
என்னுடைய நண்பர் ஒருவர் செலவில்லாமல் தீபாவளி கொண்டாடுவது பற்றிச் சொல்லுவார். “தீபாவளியன்றைக்குச் சாயந்திரம் ஆறுமணி அளவில் எங்கள் வீட்டு மொட்டைமாடி மீது நானும் என் குடும்பத்தினரும் நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுவோம். எங்களைச் சுற்றிலும் எல்லா வீடுகளிலும் பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் பல்வேறு வாணவேடிக்கைகளையும் கொளுத்துவார்கள். ஒரே கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். பட்டாசு கொளுத்துகிறவனைத்தவிர மற்றவர்களெல்லாம் வேடிக்கைப் பார்க்கிறவர்கள்தானே! நாங்கள் மொத்தப்பேரின் சந்தோஷத்திலும் பங்கேற்ற திருப்தியுடன் தீபாவளியைக் கழிப்போம்” என்பார்.
இந்தியாவின் எல்லாக் கமிஷனர்களும் தீபாவளி தவறாமல் நிருபர்களிடம் பேசுகிறார்கள்...சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகளும் சட்டதிட்டங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் எந்தக்குடிமகனும் எதையும் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடுகிறான். எங்கேயாவது தப்பிதம் நிகழ்ந்துபோக தினத்தந்தியிலும் சன்டிவியிலும் கரிக்கட்டையாகக் காட்சியளித்து அனுதாபம் பெற்று மறைந்துபோகிறான்.

கல்வி வளர வளர பட்டாசு வெடிக்கும் பழக்கம் குறையும் என்று மகிழ சந்தர்ப்பம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் இடம்பெயர்ந்திருக்கிறதே தவிர மாறவோ குறையவோ இல்லை என்பதைத்தான் இன்னொரு கோணம் காட்டுகிறது. ஏனெனில் இப்போதெல்லாம் படித்த இளைஞர்கள் பட்டாசுகளை தீபாவளிக்குக் கொளுத்துவதில்லை. அப்படியே பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள். எப்போதெல்லாம் கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா பூராவுக்கும் கொளுத்துகிறார்கள். அது விடியற்காலையா நள்ளிரவா என்பதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. இவர்களுக்கு ஆண்டெல்லாம் தீபாவளிதான். கிரிக்கெட்டிற்காக பட்டாசு கொளுத்துவது பற்றியெல்லாம் சுப்ரீம் கோர்ட் ஒன்றும் சொல்லவில்லை போலிருக்கிறது. அல்லது சொல்லியும் இவர்கள் கேட்பதில்லையா என்பதும் தெரியவில்லை.
பட்டாசுகளுக்கு அடுத்து நமக்கெல்லாம் தீபாவளியென்றாலேயே நினைவுக்கு வருவது தீபாவளி மலர்கள்தாம். அந்தக்காலத்தில் விகடன் கல்கி தீபாவளி மலர்கள் பார்ப்பதற்கே அவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தும். கலைமகளும் அமுதசுரபியும்கூட நல்ல கனமான மலர்களைத் தருவார்கள். கல்கி, விகடன் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஏராளம். இத்தனைக்கும் ஐந்து ரூபாய்தான் விலை. அந்த மலர்களை எல்லாராலும் வாங்க முடியாது. அந்தக்கால பொருளாதார நிலை அப்படி. அதனால் தீபாவளியன்று பத்திரிகைக் கடைகளில் அந்த மலர்களை வாங்கிப்போகிறவர்களை ஒரு ஹீரோ அளவுக்குப் பார்ப்பார்கள் சாமானியர்கள். இப்போதும் கல்கி விகடன் இரண்டு பத்திரிகைகளுமே தீபாவளி மலர்களை வெளியிடுகின்றன. ஆனாலும் அந்தக்கால மலர்களிலிருந்த ‘கனம்’ இப்போதைய மலர்களில் நிச்சயமாக இல்லை. ஏனோ அன்றையிலிருந்தே குமுதம் பெரிய சைஸ் தீபாவளி மலர்களை வெளியிடுவதே இல்லை. ஆனால் ஒருமுறையோ இரண்டு முறையோ கல்கண்டு இதழ் ஒரு ரூபாய் விலைக்கு பெரிய அளவில் தீபாவளி மலர் வெளியிட்டிருந்தார்கள். தமிழ்வாணன் அந்த தீபாவளி மலரை மிக அழகாகவும் சுவாரஸ்யமாகவும் வெளியிட்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.
அப்போதெல்லாம் தீபாவளி மலர்களில் பெரும்பாலும் தீபாவளி சம்பந்தமான சிறுகதைகள் இருக்கும். ஒரு முறை நா.பார்த்தசாரதிதான் “தீபாவளி மலர் என்றால் தீபாவளியன்று வெளியிடப்படும் மலர் என்றுதான் அர்த்தமே தவிர அதில் தீபாவளியைப் பற்றிதான் இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் நினைக்கத் தேவையில்லை”என்று சொன்னார். அதன்பிறகுதான் அந்தப்பாணி குறையத்தொடங்கியது.

தீபாவளி மலர்களுக்கு அடுத்து திரைப்படங்கள்தாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. ஒரு கன்னட இலக்கிய நண்பர் ஒருமுறை “தமிழர்களுக்கு தீபாவளியென்றால் பூஜை பண்டிகை பட்டாசு என்பதற்கடுத்து அன்றைக்கு கட்டாயம் ஒரு புதிய சினிமா பார்த்தாகவேண்டும் என்பதாக ஒரு சடங்கு இருக்கிறதாமே” என்று கேட்டார். “சடங்கு சம்பிரதாயம் என்றெல்லாம் கிடையாது. சிவாஜி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அப்படியொரு பழக்கத்துக்கு தமிழர்கள் அடிமையாகி விட்டார்கள் என்பதென்னமோ உண்மைதான்” என்கிறமாதிரி நான் சொன்ன பதிலை அவர் கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை.”இல்லை சார் அப்படி ஒரு சாஸ்திரமே இருக்கிறதாமே” என்று அந்த நண்பர் பிடிவாதமாக இருந்தார். யோசித்துப்பார்த்தால் இதையும் தமிழர்கள் ஒரு சாஸ்திரமாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பாதித்தமிழர்கள் தியேட்டர்களில் புதுப்படங்களையும் மீதித்தமிழர்கள் தொலைக்காட்சிகளில் நடிக நடிகையர்களின் ஞானோபதேசத்தையும் கேட்டுத்தான் தீபாவளியன்று தங்களை உயிர்ப்பித்துக்கொள்கிறார்கள்.

இதோ இன்னுமொரு தீபாவளியும் வழக்கம்போல் கடந்துவிட்டது.

Tuesday, October 26, 2010

வாருங்கள் அறிவுமதி


மந்திரப் புன்னகைப் படத்தின் அந்தப் பாடல் இதமாய் ஒலிக்கிறது. ‘சட்டச்சட சடவென’ என கார்த்திக்கின் குரலிலும் ஸ்வேதாவின் குரலிலும் ஆரம்பிக்கிற பாடல் காதில் நுழைந்து இதயத்தை வருடுகிறது.
இந்தக் காதலை நான் அடைய
எத்தனைக் காமம் கடந்து வந்தேன்
இந்த உயிரினை நான் அடைய
எத்தனை உடல்களைக் கடந்து வந்தேன்
.........................................................
.........................................................
இருவரே நெரிசலாய் முதன்முறை உணர்கிறேன்
ஒருவரிக் கவிதையாய் ஆனவனாலே...... என்று மனதுக்குள் ரகசியம் பேசியபடி தொடர்hshsகிறது பாடல். இந்தப் பாடல் மட்டுமல்ல, மற்ற பாடல்களும் அப்படியே..இதயத்தை மயிலிறகு கொண்டு வருடும் அழகுச் சொற்களால் பாடல்கள் கோர்க்கப்பட்டு மெல்லிய இனிமையைக் குழைத்து இசைச் சேர்க்கப்பட்டு மிதந்து வருகிறது.
இன்னொரு பாடலைப் பாருங்களேன்.
மேகம் வந்து போகும்
தாகம் வந்து போகும்
மோகம் வந்து போகும்
காதல் வந்தால் ..........போகாது..
அட, அட..யார் இந்தக் கவிஞர் என்று யோசிப்பதற்குள் விடை கிடைக்கிறது.......அறிவுமதி!
ஆமாம் அறிவுமதியேதான். சேது படத்தில் ‘எங்கே செல்லும் இந்தப் பாதை?’ எழுதியவர். சிறைச்சாலை படத்தின் அத்தனைப் பாடல்களும்..குறிப்பாக ‘செம்பூவே’. ஜெயம் படத்தில் ‘கவிதையே தெரியுமா’, திருமலை படத்தில் ‘அழகூரில் பூத்தவளே’, ரன் படத்தில் ‘பொய் சொல்லக்கூடாது காதலி’, பிரியாத வரம் வேண்டும் படத்தில் ‘பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று’,ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உதயா படத்தில் ‘உதயா உதயா உளறுகிறேன்’,தில் படத்தில் ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி’, தூள் படத்தில் ‘மதுரவீரன்தானே’ போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதிய அதே அறிவுமதி...
திடீரென்று ஒருநாள் ‘இனிமேல் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதப்போவதில்லை’ என அவர் அறிவித்தபோது அதிர்ந்தவர்களில் நானும் ஒருவன். அறிவுமதியை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் உலகம் பூராவும் உண்டு. திரைப்படத்துறையில் கொள்கை கோட்பாடு என்றெல்லாம் வைத்துக்கொண்டு செயல்படுவது கடினம். ஆனால் அப்படிச்சில கோட்பாடுகளுடன் செயல்படுபவர் இவர். “ஆங்கிலச் சொற்கள் கலவாமல்தான் பாட்டெழுதுவேன்” என்று அறிவித்துவிட்டு அதன்படியே ஏறக்குறைய நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி வெற்றிகரமாக உலா வந்துகொண்டு இருப்பவர். திடீரென்று எதற்காக இப்படியொரு முடிவு?
நான் உட்பட எத்தனையோ நண்பர்கள் எடுத்துச்சொல்லியும் தம்முடைய முடிவில் உறுதியாக இருந்தவரை எப்படியோ மனம் மாற்றி மறுபடியும் பாடல்கள் எழுத அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன் தாம் இயக்கி நடிக்கும் மந்திரப்புன்னகை படத்திற்காக.
இளைய தலைமுறை இயக்குநர்களில் மிகச்சிறப்பாக ஒரு படத்தைத் தந்துவிட்டு அடுத்த படத்திலேயே முகவரி தொலைத்துவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில் அடுத்தடுத்துத் தம்மை நிரூபிக்கிறவர்களே சாதனையாளர்கள். அந்த வரிசையில் நிற்பவர் கரு.பழனியப்பன். ‘பார்த்திபன் கனவு’ படத்திற்குப்பின் ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ என்று தமது இருப்பை நீரூபித்தவர் அவர். கதை சொல்லும் விதமும், காட்சி அமைப்புக்களும், செறிவான வசனங்களும் அவரது பலங்கள்
. இவையில்லாமல் முன்னாள் பத்திரிகையாளர், உணர்வுள்ள தமிழ் ஆர்வலர், தெளிவான சொல், தெளிவான செயல் என்று உழல்பவர் என்பதும் அவரை வெற்றியாளர்கள் வரிசையில் என்றைக்கும் நிறுத்தப்போதுமானவை. மந்திரப் புன்னகைப் படமே ஒரு வித்தியாசமான கதைக்களம்தான். அறிவுமதியை “நீங்கதான் எல்லாப் பாடல்களும் எழுதணும். வித்யா சாகரும் நீங்கதான் வேணும் என்கிறார்” என்று சொல்லி வலுக்கட்டாயமாக மறுபடியும் பாடலெழுத கூட்டிவந்திருப்பதற்காகவே கரு.பழனியப்பனை தாராளமாக வாழ்த்தலாம்.
மந்திரப்புன்னகையின் இசை வித்யா சாகர்! ‘மொழி’ படத்தின் ‘காற்றின் மொழி ஒலியா இசையா’,உயிரோடு உயிராக படத்தின் ‘பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களின் மூலம் காதுகளில் தேன் தடவும் வசீகரம் தெரிந்த வித்தைக்காரர் அவர்.
இவர்கள் இருவரின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப மணிமணியாக நான்கு பாடல்களை எழுதியிருக்கிறார் அறிவுமதி.....’மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பி வைத்தேன்
கூச்சம் அவிழ்கையிலே
உடல்மாற்றி நுழைந்துவிட்டேன்’ என்று அற்புதக்காதல் பேசுகிறது பாடல்.
சுதா ரகுநாதனின் மயக்கும் குரலில் வந்திருக்கும் கண்ணன் பாட்டு உலகெங்கிலுமுள்ள தமிழ் உணர்வாளர்களுக்கு ஆயிரம் செய்திகளைச் சொல்லக்கூடும். குறிப்பாக ‘உண்டு எனலாம் இல்லை எனலாம்- இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்’ என்ற வரிகளில் புதைந்திருக்கும் ரகசியம் என்னவென்பதை அறிவுமதியே ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்தார்.”கண்ணன் என்ற சொல் வரும் இடத்தில் எல்லாம் அண்ணன் என்று போட்டுப்பாருங்கள். பொருள் புரியும்”.
அறிவுமதியை ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக நான் அறிவேன். அன்பைப் பொழிவதில் இவரைப்போல் இன்னொருவரைப் பார்க்க முடியாது. குழந்தையைப் போலப் பழகுவார். தாயைப்போல அன்பு காட்டுவார். பிலிமாலயா ஆசிரியரும் கவிஞருமான எம்.ஜி.வல்லபன் ‘தைப்பொங்கல்’ படத்தை இயக்க ஆரம்பித்து படப்பிடிப்பிற்காக பெங்களூர் வந்தபோது அவருடன் உதவி இயக்குநராக வந்தவர் அறிவுமதி. அதன்பிறகு அந்தப் படம் முடியும்வரை அடிக்கடி மண்டியாவில் சந்தித்துக்கொள்வோம்.
பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றினை நடத்தினார்கள். அதில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தேன். ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்தபோது முதுகில் கொஞ்சம் பலமான அடி விழுந்தது. அதிர்ந்து திரும்புவதற்கு முன்னால் அப்படியே வந்து கட்டிக்கொண்டார் அறிவுமதி. “என்ன எங்க ஊருக்கு வந்துட்டு என்னை இன்னும் பார்க்காம இருக்கீங்களா?” என்றபடி. அன்று மாலை நானும் அறிவுமதியும் கவிஞர் சுரதாவுடன் பூம்புகார் கலைக்கூடம் சென்றுவந்தோம்.
தமிழ்க்கவிஞர்களிலேயே அதிகமான உலக நாடுகளுக்குச் சென்று வந்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கவேண்டும். தமிழர் வசிக்கும் நாடுகளுக்கெல்லாம் சென்று தமிழ் மணத்தையும் தமிழ் உணர்வையும் பரப்பி வந்திருக்கிறார் இவர். அந்தவகையில் இவரை உலகத்தமிழர்கள் தங்களின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடுகிறார்கள். எத்தனை நாடுகள் சுற்றி வந்தபோதும் இவரது பேச்சும் பழக்க வழக்கங்களும் மண் சார்ந்தவை; மரபு சார்ந்தவை. தன்னுடைய வேர்களைத் தமிழ்நாட்டு கிராமங்களில் பதித்து கிளைக்கரங்களால் உலகு தழுவும் கவிஞனாகவே விளங்குவதுதான் இவரின் தனிச்சிறப்பு.
முப்பத்திரண்டு பக்கங்களுக்கும் குறைவான மிக ஒல்லியான ஒரு புத்தகம்
என் பிரிய வசந்தமே’. அந்தப் புத்தகத்தின் மூலம்தான் தமிழ் இலக்கிய உலகில் நுழைகிறார் அறிவுமதி. அதிலுள்ள காதல் கவிதைகளை அப்போது நான் சாவியில் எழுதிக்கொண்டிருந்த ‘கங்கையெல்லாம் கோலமிட்டு.......’ நாவலில் பயன்படுத்துகிறேன். கையெழுத்துப் பிரதியில் அதைப் படித்துப் பார்த்த ஆசிரியர் சாவி எனக்கு போன் செய்து”யார் அது அறிவுமதி? அவர் எழுதிய கவிதைகளை முழுவதும் படித்துப்பார்க்காமல் பிரசுரிக்க முடியாது” என்கிறார். உடனடியாக அவருக்கு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். படித்துப் பார்த்த சாவி,”அருமையா எழுதி இருக்கார் சார். பின்னாடி பெரிய ஆளா வருவார்” என்று சொல்லிப் பிரசுரம் செய்கிறார்.
அப்போது பெங்களூரில் இருந்த சுஜாதாவுக்கு அந்த நூலைக்கொடுத்தேன். “யோவ் பிரமாதமா எழுதறாருய்யா. ரொம்ப நல்லாருக்கு” என்கிறார்.
பாரதிராஜாவிடமும் பாலுமகேந்திராவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டே கவிதை உலகில் நடை போடுகிறார் அறிவுமதி. ஒரு கட்டத்தில் இவரை உச்சிமுகர்ந்து தம் சொந்தப் பிள்ளைப் போலவே தூக்கிவைத்துக்கொண்டாடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். அப்துல் ரகுமானின் பயிற்சி அறிவுமதியை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது. அவரே பாராட்டும் வண்ணம் ஹைக்கூ கவிதைகளை எழுத ஆரம்பிக்கிறார். ஹைக்கூவுக்குப் புதிய முகவரி கிடைக்கிறது.
இவரது ‘நட்புக் காலம்’ என்ற கவிதை நூல் தமிழின் இளைய தலைமுறையினரின் தேசிய நூலாக அறியப்படுகிறது. இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று பிரதிகள் விற்றுத்தீர்கின்றன.
இப்படியிருந்த நிலையில் திடீரென்று திரைக்கு எழுதுவதை நிறுத்துகிறேன் என்று அறிவிப்பதா?.................................................
போட்டி, பொறாமை, சூழ்ச்சி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் வஞ்சகம் என்றெல்லாம் அறியப்பட்ட
திரையுலகில் ஒரு அபூர்வ மனிதர் இந்த அறிவுமதி. 73, அபிபுல்லா சாலை அலுவலகம்(புதிய எண்;189) திரைத்துறையில் நுழைவதற்கென வரும் இளங்கவிஞர்களுக்கு ஒரு அடைக்கல ஆலமரம். அங்கு அடைக்கலம் தந்ததோடு நில்லாமல் பல தம்பிமார்களைக் கவிஞர்களாகத் திரையுலகில் பவனிவர ஏற்பாடு செய்தவர் அறிவுமதி. இன்றைய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவரும் தமிழர்கள் பெருமையை தேசிய அளவில் தூக்கி நிறுத்தியவருமான இயக்குநர் பாலாவைத் திரையுலகிற்குக் கூட்டி வந்தவரும் அறிவுமதிதான். அறிவுமதியின் இத்தகைய வெள்ளந்தியான உள்ளம்தான் நடிகர் சிவகுமார் போன்ற பெரிய மனிதர்களின் அன்பை அறிவுமதி பெறவும் காரணமாக இருந்திருக்கிறது.
மந்திரப்புன்னகை நல்ல செய்தியைக் கொண்டுவந்திருக்கிறது. மீண்டும் வந்திருக்கிறார் அறிவுமதி.

Sunday, September 19, 2010

வைரமுத்துவின் சர்ச்சையைத் தூண்டும் பேச்சுக்கள்.


ந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கிறிஸ்தவர்களின் மனதைப் புண் படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கிறது. ரஜினியை வானளாவப் புகழும் உரிமை வைரமுத்துவுக்கு நிச்சயம் உண்டு. அதற்கான தேவைகள் அவருக்கு இருக்கலாம். அதற்காக அவர் வரம்பு தாண்டிய நிலையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் மனம்போன போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப்போகலாம் என்று நினைத்துப் பேசியிருப்பது இங்கிதமற்றதாகவே இருக்கிறது.
பிரச்சினையே, தன்னுடைய வழக்கமான விஜயகாந்த் பாணியில் புள்ளிவிவரங்களைச் சொல்லிப் பேச்சைத்தொடராமல் ரஜினிகாந்த் பாணியில் குட்டிக்கதை சொல்லிப்பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்று வைரமுத்து நினைத்ததுதான் ஏடாகூடமாகப் போய்விட்டது. ரஜினி பிரபலமானவர், மிகமிகப் பிரபலமானவர் என்று சொல்லவந்த வைரமுத்து இதற்காக அமிதாப் பச்சன், ஒபாமா என்று ஆரம்பித்து போப் ஆண்டவர்வரை அத்தனைப் பேரையும் இழுத்து அவர்களின் தலைகளையெல்லாம் உருட்டி அவர்களை ஒன்றுமில்லாமல் சாய்த்துவிட்டு இவர்கள் அத்தனைப்பேரையும் விட ரஜினி பிரபலமானவர் என்று முடிக்கிறார். இதற்கென அவர் தேர்ந்தெடுத்தது ஒரு குட்டிக்கதை. இந்தக் குட்டிக்கதையும் கூட இவரது சொந்தச் சரக்கு கிடையாது. ஏற்கெனவே வழங்கி வருகிற ஒன்றுதான். யாருக்காகச் சொல்கிறோமோ அவருடைய பெயரைச் செருகி மற்ற கதாபாத்திரங்களையெல்லாம் அப்படியே வைத்துக்கொள்ளலாம் என்ற வகை கதைதான் அது.
அமிதாப் பச்சனும் ரஜினியும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தார்களாம். அமிதாப்பை யாரென்று தெரியாததால் ரஜினியை மட்டும் தேநீருக்கு அழைத்தாராம் ஒபாமா. அமிதாப் ஆச்சரியத்தில் அதிர்ந்து போய்விட்டாராம். இதுவாவது பரவாயில்லை. அடுத்து அமிதாப்பும் ரஜினியும் வாடிகன் நகருக்குச் சென்றார்களாம். அங்கிருந்த போப் ஆண்டவர் ரஜினியை மட்டும் அடையாளம் கண்டுகொண்டு அவரை மட்டும் வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றாராம். அமிதாப் மயங்கிக் கீழே சரிந்துவிட்டாராம். அவர் மயங்கியதற்குக் காரணம் போப் ஆண்டவர் ரஜினியைத் தெரிந்து வைத்திருந்தது அல்ல, மாறாக அமிதாப் பக்கத்திலிருந்த ஒருவர் அமிதாப்பிடம் “மேடையில் நின்றிருப்பவர்களில் ஒருவர் ரஜினி. வெள்ளை ஆடையுடன் நிற்கிறாரே அவர் யார்?” என்று வினவியதுதானாம்.
இதுதான் வைரமுத்துவின் குட்டிக்கதை. போப் ஆண்டவரை இதைவிடவும் மோசமாக அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
ரஜினி என்ற தான் பாட்டெழுதும் படத்துக் கதாநாயகனைப் புகழ வேண்டும் என்பதற்காக உலகத்தலைவர்களெல்லாம் அனுமதி பெற்றுச்சென்று வணங்கும் ஒரு பெரியவரை –ஒரு மிகப்பெரிய மதத்தின் தலைவரை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா?
வைரமுத்துவுக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை மட்டும்தானா?
இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுபோல் பதில் சொல்வாரெனில் வைரமுத்துவுக்கு ஒரு பணிவான கேள்வி.
இதே கதையை அமிதாப் என்ற கதாபாத்திரத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் கலைஞரைக் கதாபாத்திரமாக வைத்து இதே கதையைச் சொல்ல வைரமுத்து தயார்தானா?
அப்படி உருவாகும் இந்தக் கதையில் கலைஞர் பிரபலமானவரா, ரஜினி பிரபலமானவரா?
என்ன பைத்தியக்கார ஒப்புமைக் கதை இது?
இப்படியெல்லாம் அபத்தக்கதைகள் சொல்லக்கூடாது என்பதுகூடவா வைரமுத்துவுக்குத் தெரியாது?
போப் ஆண்டவரை வெவ்வேறு வகைகளில் அவமானப்படுத்திய பிரிட்னி ஸ்பியர்சும், மடோன்னாவும் பிற்பாடு மன்னிப்புக் கேட்ட கதைகளையெல்லாம் வைரமுத்து தெரிந்து வைத்திருக்கக் கூடும். தெரிந்தும் இம்மாதிரிக் கதையைச் சொன்னாரா என்பது தெரியவில்லை.
ஆனால் வைரமுத்து இம்மாதிரி சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசுவது இது முதல் முறை அல்ல. கண்ணதாசனுக்கு அடுத்து இலக்கியச் சாரத்துடன் பாடல் எழுத வந்தவர் புலமைப்பித்தன். அவருக்கு அடுத்து புதுக்கவிதைப் பாசறையிலிருந்து கவனத்துக்குள்ளானவர் வைரமுத்து. கொஞ்சம் பிரபலமானதுமே “ நான் கண்ணதாசனைவிட உயரமானவன். ஏனெனில் நான் கண்ணதாசனின் தோள்மீது உட்கார்ந்திருக்கிறேன்” என்று பேசினார்.
“வைரமுத்து இப்படியெல்லாம் அபத்தமாக உளறக்கூடாது. அப்படியானால் பழனிபாரதி உன்னைவிட உயரமானவன். ஏனெனில் அவன் உன் தோள் மீது உட்கார்ந்திருக்கிறான்” என்று பதில் சொன்னார் ஒரு கவிஞர்.
சில நாட்கள் சென்றதும் “ இவ்வளவு நாட்கள் தமிழ் எனக்குச் சோறு போட்டது; இனிமேல் தமிழுக்கு நான் சோறு போடுவேன்” என்று பேசினார். தமிழ் அறிஞர்களெல்லாம் கொதித்து எழுந்தனர். பிறகு வருத்தம் தெரிவித்தார்.
பிறகு திடீரென்று, “ என்னை என்னுடைய மகன் கபிலன் மட்டும்தான் வெல்லமுடியும்” என்று பேசினார்.
பேசி முடிப்பதற்கு முன்பேயே கபிலன் என்ற வேறொரு கவிஞன் புறப்பட்டுவந்து “உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா?” என்ற பாட்டெழுதி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பினான். இன்றைக்கும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்து வைரமுத்துவை விடவும் அதிகமான நல்ல பாடல்களை எழுதிவருகிறான் அந்தக் கவிஞன்.
இதோ இப்போது போப் ஆண்டவர் பற்றிய பேச்சு. இன்னொரு சர்ச்சைக்கான திரியை வைரமுத்து கொளுத்திப் போட்டிருக்கிறார். என்ன சொல்லப்போகிறார் பார்ப்போம்.

Wednesday, September 1, 2010

செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்-ஒரு விமர்சனம்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரை முழுவதுமாகப் படித்துவிட்டேன். அறுநூறு ரூபாய் விலைக்கு நல்ல கனமான புத்தகம்.கன்னியாகுமரியில் கடலில் நிற்கும் வள்ளுவர் இங்கே அட்டையில் நிற்கிறார். மலரைத் திறந்ததும்....வேறு யார்? கலைஞர்தான். எழுதுகின்ற போஸில்..உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மையநோக்க விளக்கப் பாடல்..அதுவேதான். “தமிள் மொளி தமிள் மொளி ...........தமிள் மொளியாஆஆஆஆஆஆஆம்ம்ம்ம்” என்று கமலஹாசன் மகள் கத்துகின்ற ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தொடங்குகின்ற பாடல். தமிழின் இலக்கிய மேடைகளில் சொல்லப்படும் எல்லா வரிகளும் வருகின்றன. “கலாஜ் என்று அழைக்கப்படும் ஓவியம் பார்த்திருக்கிறோமே, அழகழகான வண்ணப்படங்களையெல்லாம் வெட்டியெடுத்து ஒரே இடத்தில் ஒட்டி வேறொரு உருவ ஓவியமாகச் செய்வது.. அதுபோல் இது கலாஜ் கவிதை. கலைஞர் கவிதையிலும் புதுமை செய்திருக்கிறார்” என்று சுபவீ இதற்கு விளக்கமளித்தார். ஆனால் தமிழ்ப்படங்களைக் கிண்டலடித்து ‘தமிழ்ப்படம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் “ஓ மஹ ஸீயா ஓ மஹ ஸீயா நாக்குமுக்க நாக்கா ஓ ஷகலாகா ஓ ரண்டகா” என்றொரு பாட்டு வரும்.
இன்றைய தமிழ்ப்பாடல்களில் வரும் இம்மாதிரியான இலக்கிய நயம் ததும்பும் செந்தமிழ் வரிகளையெல்லாம் தொகுத்து ஒரு பாடல் செய்திருப்பார்கள். அந்தப் பாடல் எதற்காகவோ நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இளமையான தமிழ்த்தாயை ஓவியர் மணியம் செல்வன் அழகாக வரைந்திருக்கிறார். அரசு சம்பிரதாயப்படி குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா காந்தி, கவர்னர், முதல்வர் எல்லாரும் வாழ்த்துச் செய்தி சொல்கிறார்கள். செம்மொழி அங்கீகாரம் கிடைத்த வரலாற்றைக் கலைஞர் சொல்லியிருக்கிறார்.
கலைஞரின் ஓ மஹ ஸீயா பாடலுக்கு – மன்னிக்கவும்-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பாடலுக்கு , கனிமொழி விளக்கம் தந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து செம்மொழித் தமிழ் பற்றிய சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. பரிதிமாற் கலைஞர், கால்டுவெல், ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டு, வா.செ. குழந்தைசாமி, ஜி.ஜான் சாமுவேல், இரா.குமரவேலன், ம.ர.பொ.குருசாமி, ப.மருதநாயகம், ஆகியோரின் கட்டுரைகள் ஒரு மொழிக்குச் செம்மொழி தகுதி கிடைப்பதற்கான தகுதிகளையும் அந்தத் தகுதி தமிழுக்கு இருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள். செம்மொழி மாநாடு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமானதிலிருந்து பெரிதும் பேசப்பட்ட தமிழறிஞர் கா.சிவத்தம்பியின் ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற கட்டுரையும் இருக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் கட்டுரையை வாசிக்கும்போதுதான் இவருக்குத் தேவைக்கும் அதிகமான விளம்பரம் கொடுக்கப்பட்டதோ என்ற ஐயம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
இதற்கடுத்து கவிதைகளின் அணிவகுப்பு துவங்குகிறது. அப்துல் ரகுமான், வாலி, வைரமுத்து துவங்கி முப்பத்து நான்கு கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். இன்றைய தமிழின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான அறிவுமதி தவிர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தவிர்க்கப்பட்டதற்கு ஒருவேளை செம்மொழி பற்றிய அவருடைய இந்தக் கவிதை காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
சென்ற இடமெல்லாம்
செருப்படி வாங்கி
உதடுகளில் குருதி கசிய
பேசப்படுவதால்
எம்மொழி
செம்மொழியாயிற்று.
மற்றபடி, இந்தக் கவிதைத் தொகுப்பில் சிறப்பான கவிதையாக எதையும் குறிப்பிட முடியவில்லை.
அடுத்தது கலையும் பண்பாடும் என்ற தலைப்பில் சில அரிய கட்டுரைகள் உள்ளன. கொங்குக் கலைவளம், நாடக உத்திகள், கொங்குநாட்டுச் செப்புத்திருமேனிகள், நாட்டுப்புறக் கலைகள், சங்க இலக்கியங்களில் விளையாட்டுக்கலை, நாடகக் கலையும் நிகழ்த்துகலையும் சிலப்பதிகாரமும், பழந்தமிழிசையும் இன்றைய இசையும், தமிழக ஆடற்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை என்று முயன்று அரிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட கட்டுரைகளாக இவற்றைச் சொல்லலாம்.
அடுத்தது தமிழும் சமயங்களும் பற்றிய கட்டுரைகள்... இதிலும் சில கட்டுரைகளில் முயன்று நல்ல தகவல்கள் தந்திருக்கிறார்கள். சைவம், வைணவம்.....இவற்றைத்தாண்டி, மடங்கள் வளர்த்த தமிழ் ,பௌத்தம், கிறிஸ்துவம், இசுலாமியம், சமணம் என்று வரிசையாக நிறைய கருத்தாக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. எஸ்.ஜெகத்ரட்சகன், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தவத்திரு ஊரன் அடிகளார் ஆகியோரின் கட்டுரைகள் நல்ல செறிவுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. தமிழுக்கு சமணத்தின் பங்குபற்றி முன்னாள் காவல்துறை அதிகாரி சு.ஸ்ரீபால் எழுதியுள்ள கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. கிறிஸ்தவத்தின் தமிழ்க்கொடை என்ற கட்டுரையில் முனைவர். சூ.இன்னாசி ஆச்சரியப்படும் அளவு தகவல்களைத் தந்திருக்கிறார். கட்டுரையை முடிக்கும்போது, “இவையெல்லாவற்றுக்கும் மேலாகக் கிறிஸ்தவர்களின் தமிழ்க்கொடை ஒன்று உள்ளது. அது வேறு எச்சமயத்திலும் காணப்படாத கொடையாகும். கிறிஸ்துவச் சமய வழிபாடுகளில் மட்டும்தான், தமிழகத்தில் எவ்விடத்தும், எக்கிறிஸ்துவப் பிரிவிடத்தும், எவ்வகை வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் , தாய்மொழியாம் தமிழிலேயே நடைபெறுவது என்பதாகும் எனலாம்” என்று முடிக்கிறார். முனைவர் க. நெடுஞ்செழியனின் ‘தமிழர் மெய்யியலில் இன்மை’ கட்டுரையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ‘ஆரியர் வருகைக்கு முற்பட்டதும் வேதங்களுக்கு மாறானதுமான சிந்தனை மரபு ஒன்று உண்டு’ என்று கூறி மெய்யியல் தென்னக மரபிற்கு மட்டுமே உரிய அதிலும் தமிழர்களுக்கு மட்டுமே உரிய கோட்பாடு’ என்று குறிக்கிறார்.
‘பாட்டும் படமும்’ என்ற தலைப்பில் சங்கத்தமிழ் வரிகளுக்குப் பிரபல ஓவியர்கள் படங்கள் வரைந்திருக்கிறார்கள். எல்லாருமே பிரபல வாரப்பத்திரிகைகளில் படங்கள் வரைகிற ஓவியர்கள். எம்மாதிரி பாத்திரங்கள் என்றாலும் ஒரேமாதிரி படம் வரையும் ராமு இதில் கொஞ்சம் வித்தியாசமாக வரைந்திருக்கிறார்.
அடுத்தது இலக்கியக் கட்டுரைகள். வெ. இறையன்புவின் ‘கம்பரும் உடலசைவு மொழிகளும்’ கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு நின்றுவிடுவது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் கோட்பாடு.

இவர்கள் கண்ணோட்டத்தில் தமிழின் இலக்கிய வளர்ச்சி என்பது பாரதிதாசனோடு முடிந்து போய்விடுகிறது. அதனால் கண்ணதாசனின் பெயர் தவறிப்போய்க்கூட வந்துவிடக்கூடாது என்பதில் திராவிடக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதிகள் மிகுந்த கவனமாயிருப்பது இந்த நூலிலும் தெரிகிறது. ஆனாலும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை. கவிஞர் சக்திக்கனல், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், க.திருநாவுக்கரசு ஆகியோர் கண்ணதாசனைக் குறிப்பிடுகின்றனர். ‘கவிஞரின் திரைப்பாடல் ஒவ்வொன்றும் காவியம்’ என்கிறார் சிற்பி.

பிரபல பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு ஓரத்தில் கட்டம் கட்டி இடம் ஒதுக்குவதுபோல ஒரு ஓரத்தில் ‘வாழ்க’ என்று தலைப்பில் கவிஞரின் ‘தமிழனெங்கிருந்தானேனும் தமிழனே பிறப்பால் நெஞ்சால் அமிழ்தெனும் மொழியின் பிள்ளை’ என்ற கவிதையின் ஒரு அடியை மட்டும் போட்டு வைத்திருக்கின்றனர். இதனை இங்கே இவ்வளவு விரிவாக குறிக்கக் காரணம் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணர்வில் கலந்துவிட்ட ஒரு கவிஞனைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
‘இலக்கணமும் மொழியியலும்’, ‘தொல்லியல்’, ‘ஆட்சித்தமிழ்’, ‘அறிவியல் தமிழ்’ ஆகிய தலைப்புக்களில் சில நல்ல கட்டுரைகள் உள்ளன.

சிந்துவெளித் தமிழ் எழுத்துக்கள், தமிழர்களின் பழங்காசுகள், தமிழ் மாந்தர் தோற்றம், தமிழக நில ஆய்வுகள், அரிக்கமேடு அகழாய்வு, கடல் ஆய்வுகள், அயல்நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள், பழம்பானைக் குறியீடுகளும் தமிழர் பண்பாடுகளும் என்ற வசீகரமான தலைப்புகளில் நிறைய ஏக்கப்பெருமூச்சுக்கள்தாம் உள்ளன.
அறிவியல் தமிழ்- தலைப்பிலான கட்டுரைகளும் மேலோட்டமான உணர்வில் மாநாட்டு மலருக்கு சீக்கிரம் எழுதித்தரவேண்டுமே என்ற அவசரத்துக்கு எழுதப்பட்டன போன்றே தெரிகின்றன.
முனைவர்கள் கே.பி.அறவாணன், ஏ.ராமசாமி, டி.என். ராமச்சந்திரன், என்.அருள், ஏ.தட்சணாமூர்த்தி, எம்.சோலயன், அமுத பாண்டியன் மற்றும் திரு எம்.எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இப்படியான கட்டுரைகளை இம்மாதிரி மலர்களில் எழுதுவதில் பெரிய அளவில் பயன்கள் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆங்கில ஊடகங்களில் இவர்களுடைய கட்டுரைகள் தமிழைப் பற்றியவை-திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கவேண்டும். கன்னடத்தைச் சேர்ந்த மொழி அறிஞர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் எப்படியேனும் அங்குள்ள ஆங்கிலப்பத்திரிகைகளில் ஊடுருவி கர்நாடகத்தைப் பற்றியும் கன்னடத்தைப் பற்றியும் எழுதிக்குவிக்கிறார்கள். சரக்கு கொஞ்சமாயிருந்தாலும் அடுத்தவனிடம் சென்று சத்தம்போடுவதைத் தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்த நம்ம ஆள் என்ன செய்கிறான் என்றால் இவனும் ஒரு ஆங்கிலேயனைப்போல் வேடம் போட ஆரம்பித்துவிடுகிறான். தமிழாவது, மண்ணாங்கட்டியாவது.......நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் கன்னடத்துக்கு ஏழு ஞானபீடப் பரிசுகள். தமிழுக்கு இரண்டே இரண்டு.
தமிழனுக்கு யாரைக்கொண்டாடுவது என்பதில் இடியாப்பச் சிக்கல். இந்த மலரையே எடுத்துக்கொண்டோமென்றால் இக்காலத்தமிழ் இலக்கியத்துக்கு என்ன இடம் என்று பார்த்தோமானால் ஒன்றுமே இல்லை. ‘படைப்பிலக்கியம்’ என்பது இவர்களுக்கு பராசக்தி, மனோகரா, ஓர் இரவு என்பதோடு நின்று விடுகிறது. கவிதைகளுக்கு வெறும் பாரதிதாசன். ஆயிற்றா? அச்சு ஊடகங்கள் வர ஆரம்பித்ததிலிருந்து தமிழை வீடுவீடாகக் கொண்டுசென்று வளர்த்தார்களே கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,நா.பா., ராகி.ரங்கராஜன், சாண்டில்யன், கோவி.மணிசேகரன் .........இவர்களுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விஞ்ஞானமும் ஆங்கிலமும் படித்த தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா அந்த வித்தக எழுத்தாளனுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..........கோடிக்கணக்கான மக்களைத் தன்னுடைய தமிழைப் பாடவைத்துக்கொண்டிருக்கும் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும்கூட எந்த சம்பந்தமும் இல்லை.
இவர்களைப் பற்றிய தனித்தனியான கட்டுரைகள் மலரில் அணிவகுத்திருக்க வேண்டாமா?
தமிழ் என்றால் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆரம்பித்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்களும் இலக்கிய மலர்களும் தயாரித்துக்கொண்டிருந்தால் தற்கால இலக்கியத்துக்குக் கொடுக்கப்படும் எந்தப் பரிசும் எந்த அங்கீகாரமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ன?
இப்போது புரிகிறதா வங்காளத்துக்கு ஐந்து ஞானபீடம், கன்னடத்துக்கு ஏழு, மற்ற பல மொழிகளுக்கு நான்கிற்கும் மேல்.

தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு. மாநாட்டைப்போலவே மலரையும் தற்காலப்படைப்பிலக்கியம் பற்றிய ஏதோ ஒரு கட்டுரையைப் பெயருக்குப்போட்டு மற்றபடி எந்த விவரமும் வந்துவிடாதபடிக்கு பத்திரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் சிவகுமாரும் சூர்யாவும் கபிலர் குறிப்பிட்ட நூறு மலர்களைக் கூட்டங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அந்த நூறு மலர்களின் அரிய புகைப்படங்களும் இந்த மலரில் இருக்கின்றன. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
மொத்தத்தில் மலர் கனக்கிறது. கூடவே இதயமும்....................

Tuesday, August 17, 2010

பத்திரிகையாளர் ஞாநியின் விலகலும் அதுபற்றிய பரபரப்புக்களும்.........


ஞாநி குமுதத்திலிருந்து கழற்றிவிடப்பட்டோ, அல்லது அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு அவராகவே வேறு பத்திரிகைக்குப் போய்விட்டதைப் பற்றியோ வலைத்தளங்களில் பெரிய அளவில் பரபரப்பான பகிர்வுகள் வந்துகொண்டிருக்கின்றன.உண்மையில் அவ்வளவு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் இருந்தனவா என்பதே கேள்விக்குரியது.
ஞாநி பிரபலமாக இருந்ததற்குக் காரணம் அந்தப் பத்திரிகைகள்தாமே தவிர அவரது எழுத்துக்கள் அல்ல. ஆங்கிலத்தில் குல்தீப் நய்யார், எம்.ஜே.அக்பர் போன்ற எழுத்தாளர்கள் அளவுக்குத் தமிழில் பிரபலமான அரசியல் விமர்சகர்கள் இல்லை. சோலை, சின்னக்குத்தூசி, ஜென்ராம் போன்றவர்களைத்தான் பிரபலமானவர்களாகச் சொல்ல முடியும். இவர்களைவிடப் பிரபலமான ஒருவராகச் சோவைச் சொல்லலாம். ஆனால் சோவுடைய கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் அல்ல. அவருடைய அபரிமிதமான நகைச்சுவை உணர்வினாலும் அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பதனாலும் அவரது எழுத்துக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரை நிறையப்பேர் படிப்பார்களே தவிர அவரது கருத்துக்களை யாரும் சீரியஸாகக் கருதுவதில்லை.
சின்னக்குத்தூசி சளைக்காத புள்ளிவிவரங்களுக்குச் சொந்தக்காரர். தாம் எடுத்துக்கொண்ட கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி வாதங்களை அடுக்குவதில் கைதேர்ந்தவர். ஆனால் அவர் குறிப்பிட்ட இயக்கத்துக்கு மட்டுமே வார்க்கப்பட்டுவிட்ட எழுத்தாளர்.
சுதாங்கன் இந்த வரிசையில் நன்றாக வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் வேறுபக்கம் போய்விட்டார்.
அந்தக்காலத்தில் டி.ஆர்.ஆர் என்றொரு எழுத்தாளர் இருந்தார். மக்கள் குரலில் எழுதுவார்.மகா போரடிக்கும் விதத்தில் அரசியல் கட்டுரைகள் எழுதியவர் அவராகத்தான் இருக்கும்.
சோலை, ஜென்ராம் போன்றவர்களின் ஆழ்ந்த விவரங்களுக்கும் இயல்பான மொழிநடைக்கும் இணையானதல்ல ஞாநியின் எழுத்துக்கள். ஒரு மொழிபெயர்ப்பைப் படிப்பது போன்ற சோர்வைத் தோற்றுவிக்கும் எழுத்து நடை இவருடையது. இருந்தும் ஏன் பிரபலாமானார் என்றால் அவருக்கு இடம் தந்த பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.
குமுதத்திலும் விகடனிலும் பிரபலமானவர்கள் எழுதினால்தான் பரபரப்படையும் என்பதில்லை. கோனநாயக்கன்பட்டி குரங்குசாமி என்று யாரோ ஒருவர் எழுதினாலும் உடனடியாகப் பிரபலமாகிவிடும். வெகுஜன ஊடகத்தன்மை அத்தகையது. ரஜினி படத்துப் பாடல்கள் பிரபலாக 'செய்யுள்பேரரசுவோ', 'பெரும்பேரரசு'வோ பாடல்கள் எழுதவேண்டுமென்பதில்லை. 'டிக்கி டுக்கி டோக்கா டிம்மா டும்மா மோக்கா' என்று யாரோ ஒரு புறம்போக்கு கிறுக்கி அதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துத் தள்ளிவிட்டால் மறுநாளே இதற்கு இணையான குத்துப்பாட்டு இதுவரை வந்ததில்லை என்று பதினெட்டு உலகமும் கொண்டாடத் துவங்கிவிடும். ஊடக வளர்ச்சி அப்படி.
அப்படியொரு ஊடக வளர்ச்சியின் அபத்தமான தாக்கம்தான் இந்த அங்கலாய்ப்புகள் என்று தோன்றுகிறது.
ஞாநிக்கு ஏதோ மிகப்பெரிய வாசகர்வட்டம் இருப்பதாகவும் இவர் தலையைச் சுற்றி அறிவு வட்டம் ஒளிவீசிக் கொண்டிருப்பதாகவும் இவரும் இவரது நண்பர்கள் வட்டமும் நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தாம் எழுத்துலகின் ஏகபோக சக்கரவர்த்தி என்பது போலவும் இவர் நினைப்பதுபோல்தான் பிரதமரிலிருந்து மாநில முதல்வர்வரை நடந்து கொள்ள வேண்டும் என்பதுபோலவும் நினைத்துக்கொண்டு எழுதும் மனமயக்கம் இவருக்கு எப்போதுமே இருக்கிறது.
எல்லாவற்றையும் விமர்சிப்பதும் குறைகாண்பதும் வேறு; எல்லாவற்றிலும் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று சட்டாம்பிள்ளைத்தனமாகக் கட்டளை இடுவதென்பது வேறு. இரண்டாவதைத்தான் இவர் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தார். அதில் சின்னப்பிள்ளைகள் கணக்காய் சொப்பு விளையாட்டு வேறு.' இந்த வாரம் இவருக்குக் குட்டு; இந்த வாரம் இவருக்குப் பூச்செண்டு' என்று வாராவாரம் இவர் உளறிக்கொட்டிக்கொண்டிருந்தது கிறுக்குத்தனங்களின் உச்சம். "இவர் இதனை இப்படிச் செய்தாரென்றால் இவருக்கு அடுத்த வாரம் பூச்செண்டு கொடுக்கத் தயங்கமாட்டேன்" என்ற பூச்சாண்டி அறிவிப்புக்கள் வேறு;
சமூகத் தளத்தின் எல்லாக் கூடாரங்களிலும் எப்படியாவது நுழைந்துவிடுவது...... அவர்கள் விரும்புகிறமாதிரியே கொஞ்ச நாட்களுக்குப் பேசிச் செயல்படுவது, அல்லது எழுதிக்கொண்டிருப்பது....சில நாட்களுக்குள்ளாகவே இவரது சுயரூபம் கலையத்துவங்கியதும் அந்த முகாமிலிருந்து இவராகவே வெளியேறிவிடுவது, அல்லது அவர்கள் வெளியேற்றுவது.........அப்படி வெளியே வந்ததும் இவர் தன்னுடைய தனித்தன்மைப் பற்றிப் பேசுவது - என்ற இந்தக் கதை அவ்வப்போது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சங்கிலியின் ஒரு தொடர்தான் இப்போதும் நடந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
விகடனில் எதையெதையோ எழுதிக்கொண்டிருந்து அப்படியும் தாம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போனவுடன் , பதிவுலகில் சிலர் செய்வது மாதிரி (பதிவுலக நண்பர்களுக்காவது ஒரு நேர்மை இருக்கிறது.18+ என்று போட்டுவிட்டுத்தான் அவர்கள் ஜோக்குகளும் பிறவும் எழுதுவார்கள்)இவர் விகடன் பக்கங்களில் கொக்கோக புத்தகங்களை விடவும் கேவலமாக எழுத ஆரம்பிக்க , விகடனின் பாரம்பரிய வாசகர்களின் அதிர்ச்சி அலைகள் விகடன் இவரது எழுத்துக்களுக்குக் கடிவாளங்கள் போடுவதற்குக் காரணமாக அமைந்தது.
பரபரப்பாய் இருக்கிற எதையும் அல்லது பரபரப்பாய் இருக்கிற யாரையும் பயன்படுத்திக்கொள்வது வெகுஜனப் பத்திரிகைகளின் இயல்பு. ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருப்பதை விடவும் எதிர்த்து எழுதுகிற எழுத்துக்களுக்கு மவுசு அதிகம். ஆனால், இங்கேயும் சூட்சுமமான ஒரு இறுதிக்கோடு உண்டு. ஆட்சியாளர்களைச் சீண்டலாம். அவர்களின் கவனம் கவர்ந்து அவர்களிடமிருந்து ரியாக்ஷன் வருவதுமாதிரி சீண்டலாம். மறுப்பு அறிக்கை வருகிற அளவுக்குச் சீண்டலாம். அத்துடன் நிற்க வேண்டும்.
அவர்களுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் வாங்கிக் கட்டிக்கொள்ளக் கூடாது. இந்த சூட்சுமம் தெரிந்து இயங்குகிற நிறைய விமர்சகர்கள் இருக்கிறார்கள். இந்த சூட்சுமங்களெல்லாம் ஞாநிக்குத் தெரியாது என்பதில்லை. அவரது கணக்குகளும் சூட்சுமங்களும் வேறு; இந்தக் கூடாரத்தில் இரை கிடைக்காவிட்டால் அடுத்த கூடாரம் என்பதுதான் அவர் கணக்கு.
இவர் கிடந்து என்னத்தையோ எழுதி வைக்க, ஆட்சியாளர்களின் கோபம் பத்திரிகைகளின் மீது திரும்ப நிர்வாகம் இவரைக் கழற்றி விட்டுவிடும். எப்போதும் இதுதான் நடக்கும் . இப்போதும் இதுதான் நடந்திருக்கிறது.
சுயமரியாதைக் கருத்துக்களுடன் பெரியார் கூடாரத்துக்குள் ஊடுருவி , அங்கிருந்து கழகக் கூடாரத்திற்கு வந்து , பிறகு அங்கிருந்தும் வெளியேறி கழக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, தமிழ் இன எதிர்ப்பு, ஈழ எதிர்ப்பு, பிரபாகரன் எதிர்ப்பு என்பதாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஞாநி.இதற்கு 'அச்சமறியா சமூக நீதிக் காவலர்' என்ற முகமூடி வேறு.
தமிழில் ஞானி என்ற பெயரில் கோவையில் அறிஞர் ஞானி இருக்கிறார். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் தமிழ்ச்சமூகத்துக்கானவை. அவரது ஆழ்ந்த அறிவும் அழகான சொல்லோட்டமும் படித்துக்கொண்டே இருக்கலாம், கேட்டுக்கொண்டே இருக்கலாம் வகையைச் சார்ந்தவை.
ஆனால் ஞாநியின் சிந்தனையும் கண்ணோட்டமும் பொதுவான விஷயங்களில்கூட பல சமயங்களில் நாகரிக நெறிகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.
ஒரு சமயம் ஒரு பிரபல எழுத்தாளரைக் குமுதம் இணையதளத்துக்காக பேட்டி காண்கிறார் ஞாநி. அந்த எழுத்தாளர் இரு மணம் புரிந்தவர். “நீங்கள் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இரண்டாவது திருமணம் புரிந்துகொண்டது போலவே இப்போது உங்கள் இரண்டு மனைவியரில் ஒருவர் யாராவது உங்களை வைத்துக்கொண்டே இன்னொரு கணவரைத் தேடிக்கொள்ள முன்வந்தால் அதற்கு ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டு அவரை அதிர வைக்கிறார்.அந்த எழுத்தாளரும் எவ்வளவோ நாகரிகமாக பதில் சொல்லி அடுத்த கேள்விக்குள் நுழையப் பார்த்தால் இவர் பிடிவாதமாக அந்தக்கேள்வியையே மடக்கி மடக்கிக் கேட்டு நாகரிக எல்லைகளைக் கடக்கப்பார்க்கிறார். ஆண் பெண் சமத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமாம் இது. தவறு செய்த ஆண் இனத்தின் முகத்தில் அறைந்ததுபோல் கேள்வி கேட்டு நிலைகுலைய வைத்தார் ஞாநி என்று நேயர்கள் புரிந்துகொள்ள வேண்டுமாம்.
நியாயம் பேசுகிறேன் என்று கிளம்பிவிட்டு கலைஞரை எதிர்க்காவிட்டால் எப்படி? ஞாநியும் எதிர்ப்பார்.எம்.ஜி.ஆரின் ஆதரவாளராகவோ, ஜெயலலிதாவின் ஆதரவாளராகவோ இருந்துகொண்டு கலைஞரை விமர்சிப்பவர்களை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நடுநிலை முகமூடி மாட்டிக்கொண்டு கலைஞரை எதிர்க்கிறேன் என்று கிளம்புகிறவர்கள் தங்களின் சட்டைக்கு உள்ளே நாற்றமெடுத்த அழுக்கு பனியன் போட்டிருப்பதை மறைக்கமுடியாது. ஞாநியும் அழுக்குபனியன்காரர்தான்.
இவர்கள் எல்லாருமே ஒரேமாதிரியான தந்திரவாதங்களையே எப்போதும் முன்வைப்பார்கள். கருணாநிதி தவறு செய்தாரா- கன்னாபின்னாவென்று குடும்ப உறுப்பினர்களிலிருந்து எல்லாரையும் இழுத்துப்போட்டுத் தாக்குவது-
அதே போன்ற தவறை எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ செய்திருக்கிறார்களா அதனை அப்படியே போட்டுக்கவிழ்த்து 'இந்தக் கழகங்களே இப்படித்தான்' என்று ஆரம்பித்து மறுபடியும் கருணாநிதியையே இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டியது..இந்த மாய்மாலத் தந்திரத்தை இன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த அழுக்குபனியன்காரர்கள் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.
இந்த விஷயத்தில் நெஞ்சுறுதியும் நேர்மைத்திறமும் கொண்டவராக தமிழருவி மணியன் ஒருவரைத்தான் சொல்ல வேண்டும். அவர் மட்டும்தான் கருணாநிதி செய்த தவறுகளைப் பெயர் சொல்லி விமர்சிப்பார். அதே போல ஜெயலலிதாவின் தவறுகளையும் பெயர் சொல்லியே விமர்சிப்பார்.
கலைஞரை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ஞாநி அவருடைய முதிர்ந்த வயதுக்குரிய மரியாதையைக்கூட தராமல் அவரது உடல் நலிவைக் குறிப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருந்தது ஆபாசத்தின் அநாரிக அடையாளம் என்றே சொல்லவேண்டும்.தமிழக முதல்வரை எப்படியெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்யும் ஞாநியை முதல்வர் எந்த அளவு பாதித்திருக்கிறார் என்பதற்கான நிகழ்வு ஒன்றை நண்பர் சொன்னது வேடிக்கையாக இருந்தது.
ஒருசமயம் ஞாநியின் மனைவியை நண்பரிடம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய மகளின் பெயரைச்சொல்லி 'எனது மகளின் தாயார் இவர்" என்று அறிமுகப்படுத்தினாராம். " என்னுடைய மகள் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்" என்பது கலைஞரின் புகழ்பெற்ற சர்க்காரியா பதில்களில் ஒன்று .
ஞாநி தமது கடையைக் கல்கியில் திறக்கப்போகிறாராம். கல்கிக்கு என்ன தொந்தரவு கொண்டுவருகிறார் பார்ப்போம்.

Saturday, July 17, 2010

தமிழுக்குக் கிடைத்த முதல் ஞானபீடம்

தமிழைச் செம்மொழி என்றெல்லாம் நாம் மட்டும்தான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மற்றவர்களும் பார்த்து வியக்கும் அங்கீகாரங்கள் மிகவும் குறைந்த அளவில்தான் நம்முடைய மொழிக்குக் கிடைத்திருக்கிறது. தமிழில் ஞானபீடம் இரண்டே இரண்டுமுறைதான் கிடைத்திருக்கிறது. ஒன்று அகிலனுக்கு; இன்னொன்று ஜெயகாந்தனுக்கு. கன்னடம் போன்ற மொழிகளெல்லாம்கூட ஏழுதடவை எட்டுத்தடவையெல்லாம் ஞானபீடப்பரிசை வென்றிருக்கின்றன. இம்மாதிரியான சிறப்புக்களையெல்லாம் கோட்டைவிட்டுவிட்டு நமக்குள்ளே பெருமை பேசிக் கைதட்டிக்கொண்டிருப்பதிலேயே நாம் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறோம்.

அகிலன் தமிழுக்கு முதன்முதலாக ஞானபீடம் பெற்ற அந்த அற்புதமான நாளில் அவருடன் இருந்தவர்களில் நானும் ஒருவன். அகிலனுடைய மகன் அகிலன் கண்ணனும் நானும் அவருடன் டெல்லி சென்றிருந்தோம், ஞானபீடம் பரிசு நிகழ்ச்சியை ஆனந்த விகடனில் கட்டுரையாக எழுதியிருந்தேன். அதனை 14.7.2010 விடகன் பொக்கிஷம் பகுதியில் மீண்டும் மறுபிரசுரம் செய்திருக்கிறார்கள். அந்தக் கட்டுரை இது;

ஞானபீடத்தில் தமிழ்
அகிலன் எழுதிய சித்திரப்பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்.” நாலரைக்கோடித் தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது. தமிழர்களிடமும் ஞானபீடம் அங்கீகாரம் பெற்று வானபீடம் அளவுக்குல்லவா உயர்ந்துவிட்டது!”


அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப்பரிசு தமிழுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக்குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். “பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூல் மிகச்சிறந்தது என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற்காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக்களையும் சீர்தூக்கிப்பார்த்து அவருடைய மொத்தப் படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்" என்று குறிப்பிட்டார். “ பாரதத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றவர். 1975-ல் 'எங்கே போகிறோம்?' நாவலுக்கென ராஜாசர் அண்ணாமலைச் செட்டியாரின் பரிசைப் பெற்றவர்" என்றும் குறிப்பிட்டார்.

ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பரிசளிப்புவிழா நடைபெற்றது. ஒரு பேழையில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும்(இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய் அகிலனுக்கு வழங்கினார். "இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை" என்று 'ஞானபீடம் அகிலன்' குறிப்பிட்டார். அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு,”தமிழ் மிகவும் வளமான மொழி. இலக்கியச்செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளைவிடச் சிறந்த மொழி . இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால் இந்தியாவில் 60 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள்" என்று பிரதமர் ரொம்பவும் நாசுக்காக இந்திப் பிரச்சினையை நினைவுபடுத்தினார்.
"சித்திரப்பாவை இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்" என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்
இப்போது நினைத்துப்பார்க்கும்போது இன்னொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த பத்து நிமிடம் கழித்து கலைந்த தலையும் சவரம் செய்யப்படாத முகமுமாக வியர்த்து விறுவிறுக்க தோளில் ஒரு ஜோல்னாப்பையை மாட்டிக்கொண்டு அவசரம் அவசரமாக ஓடிவந்து என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்தார் ஒருவர்.”நிகழ்ச்சி ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார் இந்தியில்.
"இல்லை. இப்போதுதான் ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும்" என்றேன்.
"இன்னும் பிரதமர் பேசவில்லைதானே" என்றார்.
"இன்னும் இல்லை" என்றேன். 'ஸ்ஸ் அப்பாடா' என்று நிம்மதியாகி உட்கார்ந்தார். அதற்குள் அதிகாரிகள் ஓடிவந்து இரண்டாவது வரிசையிலிருந்த அவரை அதிக பட்ச மரியாதையுடன் முதல் வரிசைக்குக் கூட்டிச்சென்றார்கள்........அவர் அப்போதைய பீகார் முதல்வர் கர்பூரி தாகூர். அகிலனின் விழாவில் பங்கேற்பதற்காகவே தனி விமானம் மூலம் டெல்லிக்கு வந்திருந்தாராம் அவர். அகிலனின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படித்தே அந்த அளவு ரசிகராயிருந்திருக்கிறார் தாகூர்.
நம்முடைய ஆட்சியாளர்கள் இன்றைய எழுத்தாளர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதைப் பார்த்தோமானால் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறுவழியில்லை.

Friday, July 16, 2010

ஆக்டோபஸூக்கு ஒரு வேண்டுகோள்

நடந்துமுடிந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளின்போது நட்சத்திர வீரர்களை விடவும் ஜெர்மனியின் ஆக்டோபஸ் அதிகமான புகழையும் கவனத்தையும் ஈர்த்ததை சாதாரண விஷயமாகச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு போட்டியின் போதும் எந்த அணி வெற்றிபெறும் என்பதை மிகச்சரியாக கணித்தது அந்தக் கடல்வாழ் உயிரினம்.
இதற்கெல்லாம் அறிவியல் ரீதியான எந்தக் காரணத்தையும் சொல்வதற்கில்லை. பகுத்தறிவு இங்கே பயன்படாது. அதிகபட்சமாக இது தற்செயல் என்று சொல்லலாம்.ஆனால் இந்த விஷயத்தில் தற்செயல் என்ற சமாதானமும் எடுபடாது. ஏனெனில் தற்செயல்கள் ஏழுமுறை எட்டுமுறையெல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ஆக்டோபஸ்ஸைப் பொறுத்தவரை இம்மாதிரியான கணிப்புக்கள் இது முதல்முறை அல்லவென்றும் ஏற்கெனவே ஈரோ2008 போட்டிகளின்போதும் இதே போல அத்தனைப் போட்டிகளிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை மிகச்சரியாக அந்த ஆக்டோபஸ் கணித்ததாகவும் அந்தக் காரணத்தினால்தான் இப்போதும் அதன் கணிப்புகளை இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்தார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஆக, இது நிச்சயம் தற்செயல் நிகழ்வல்ல என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
இப்படிச்சொல்வதால் அந்த ஆக்டோபஸ் ஏதோ தெய்வத்தன்மை வாய்ந்தது அது ஒரு அபூர்வப் பிறவி என்றெல்லாம் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. அதே சமயம் அதெல்லாம் ஏமாற்றுவேலை எல்லாமே வெறும் புருடா என்கிறமாதிரியும் பிதற்றத் தேவையில்லை. அப்படிச்சொல்லவும் முடியாது. ஏனென்றால் அத்தனை நிகழ்வுகளும் ஏராளமான பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்கள் டி .வி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில்தான் எவ்வித ஒளிவுமறைவுமின்றி நடந்தது.
அப்படியானால் இந்த நிகழ்வை எந்த வகையில் சேர்க்கலாம்?
அறிவியல்ரீதியாக இதற்கு பதில் சொல்லமுடியாது. பகுத்தறிவு ரீதியிலும் இதற்கு நியாயமான பதில் இல்லை. சிலர் இதனை மதரீதியாக அணுகி தீவிரமான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். எல்லா விஷயங்களையும் எதற்காக மதரீதியாக அணுக வேண்டும் என்று புரியவில்லை. எல்லாவற்றையும் மதரீதியாக அணுகியதால்தான் மீளவே முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.
உலகில் நடக்கும் சில ஆச்சரியங்களுக்கு பதில் இல்லை. ஆச்சரியங்களை ஆச்சரியங்களாகவே பார்க்கவேண்டும். அதைவிட்டுவிட்டு தெய்வீகம் அது இதுவென்று கிளம்பினால் மூடநம்பிக்கைகள் வந்து புகுந்துகொண்டு முடைநாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். அல்லது பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் பிய்த்துப்போட்டு பிராண்டிக்கொண்டிருந்தால் இருக்கிற ரசனையும்போய் வாழ்க்கையே வறட்டுத்தனமாகிவிடும்.
அதனால் உலகில் பல்வேறு விஷயங்களுக்கும் இடமிருப்பதைப்போல் ஆச்சரியங்களுக்கும் இடமிருக்கின்றன. ஆச்சரியங்களையும் ரசிப்போம்-சில சமயங்களில் கேள்விகளே கேட்காமல். சர்க்கஸையும் மேஜிக்கையும் ரசிப்பதில்லையா அதுபோல் ரசிப்போம்.
இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

சில கணிப்புகளை அந்த ஆக்டோபஸ் மிகச்சரியாக கணித்திருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த ஆக்டோபஸ்ஸிடம் ஒரேயொரு கேள்வி. ஆக்டோபஸ் இனிமேல் ஜோசியம் சொல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்.
உலகத்தமிழர்கள் அத்தனைப்பேரிடமும் தொக்கிநிற்கும் அந்தக் கேள்விக்கான பதிலை யாராவது வாங்கித்தருவார்களா?

இதுதான் அந்தக் கேள்வி.
'பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?”

Friday, June 25, 2010

தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு என்ன இடம்?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடக்கிறது. ஏகப்பட்ட தமிழறிஞர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். தமிழ் மொழியின் தனித்தன்மை, சிந்துவெளி எழுத்துக்கள், திராவிடம் பற்றிய ஆய்வுகள், சங்க காலம் பற்றிய இன்றைய ஆய்வு நோக்கங்கள், இன்றைய நோக்கில் தொல்காப்பியம், தொல்லியல்,பொருளியல், நாணயவியல், வரலாற்றியல், ஆகிய பொருட்களில் பல்வேறு மொழியறிஞர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் தங்களின் ஆய்வுகளை வழங்க இருக்கிறார்கள். இவை மட்டுமின்றி இன்னமும் பல்வேறு பொருட்களும் ஆய்வுக்களமாக அமைந்திருக்கின்றன. உலக நாடுகளின் தமிழும் தமிழரும், உலக மயமாதல் சூழலில் தமிழ், தத்துவ உலகில் தமிழ், வேளாண்மையில் விண்வெளியில் ஆழ்கடல் சூழலில் கணிணியில் மருத்துவத்துறையில் என்று உலகம் இயங்கும் எல்லாச் சூழலிலும் தமிழின் தமிழனின் இயல் குறித்த ஆய்வுகள் படைக்கப்பட இருக்கின்றன. தமிழகத்தின் பண்டைய பெருமைகளை வண்ணக்கோலத்தில் விளக்கும் அலங்கார ஊர்திகளின் பவனியும் ஆர்ப்பாட்டமாய் நடந்து முடிந்துவிட்டது. பொதுமக்களின் கண்ணோட்டத்தில் இப்படிப்பட்ட காட்சிகளும் கேளிக்கைகளும் தேவைதான். ஏனெனில் மனிதமனம் எப்போதுமே கொண்டாட்டத்தை விரும்பும். அதுவும் ஊர்கூடி ஒரே நோக்கில் கொண்டாடப்படும் எந்த ஒரு திருவிழாவிலும் மக்கள் மனமுவந்து கலந்துகொள்வதும் அதனை மிகுதியாக ரசிப்பதும் இயற்கையான ஒன்றுதான். ஆனால் வெறும் ரசனைகளோடு முடிந்துவிடும் மாநாடு அல்ல இது. மாநாட்டின் விளைவுகள் காலாகாலத்திற்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும். கல்வெட்டுக்களாய்ச் சில பதிவுகளை வரலாற்றில் விட்டுச்செல்ல வேண்டும்.

ஏற்கெனவே சில மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும் கலைஞரே அறிவித்தபடி இந்த மாநாடு அவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டது என்பதாக அமைய வேண்டும். தமிழுக்குச் செம்மொழி தகுதியை அதிகாரபூர்வமாகப் பெறுவதற்கு நூறு ஆண்டுகள் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கும் கன்னடமும் ஒரேயொரு சாதாரணக் கடிதம்மூலம் செம்மொழி தகுதியைப் பெற்ற செய்தியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். காரணம் இந்த நாட்டின் அரசியல். அரசியல்தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம். மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு மாதிரியான அரசியல். தமிழகத்தைப் பொறுத்தவரை வேறுமாதிரியான அரசியல்.
இந்த அரசியல், மொழியிலும் ஊடுருவி கோலோச்சுவதுதான்இங்கே காலம்பூராவும் நடந்துவருகிறது. இலக்கியங்கள் எல்லாமே இங்கு இரண்டுவிதமாகத்தான் பிரிக்கப்படுகின்றன. ஒன்று திராவிட இலக்கியம். இன்னொன்று திராவிட வட்டத்துக்குள் வராத இலக்கியம்.இந்த இரு பிரிவுகளிலும் கச்சைக் கட்டிக்கொண்டு மோதிக்கொண்டிருப்பதிலேயே பெரும்பாலான இலக்கியவாதிகளின் பொன்னான நேரம் ஒரு பயனுமின்றி வீணடிக்கப்படுவதுதான் மிகப்பெரிய சோகம்.எல்லாமே தமிழுக்குக் கிடைத்த வரம்தான் என்று வரவு வைத்து நமக்கு வேண்டியதை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவதுதான் மொழிக்குச் செய்யும் தொண்டே தவிர இது எழுத்தே இல்லை, இது இலக்கியமே இல்லை என்று குழு அமைத்துக்கொண்டு அடித்துக்கொண்டிருப்பதில் என்ன பயன் என்று ஒன்றும் புரியவில்லை.

இது ஒருபுறமிருக்க தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள், மற்றும் பல்வேறு அமைப்புக்களும் சரி; இன்னொரு பெரிய தவறையும் செய்து வருகின்றன. தமிழ் வளர்ப்பது என்பதற்கு இவர்கள் எல்லாரும் எடுத்துக்கொண்டிருக்கும் அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கும் தளம் எது தெரியுமா? சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக் கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான். இது பற்றி ஆய்வுகள், இது பற்றி நூல்கள், இது பற்றி கருத்தரங்கங்கள், இது பற்றி கலந்தாய்வுகள், இதுபற்றி இலக்கியக் கூட்டங்கள்.....இவைதாம். திரும்பத் திரும்ப இவை மட்டுமேதான். தொல்காப்பியத்தில் ஆரம்பித்து புறநானூறு அகநானூறு சிலப்பதிகாரம் கம்பராமாயணம், பதிற்றுப்பத்து, பன்னிரு திருமுறை நளவெண்பா முத்தொள்ளாயிரம் என்று வருவார்கள். அதையும் தாண்டி வருவதற்குள் மூச்சு வாங்கிவிடும். இன்னும் கொஞ்சம் தம் பிடித்து பாரதியார்வரைக்கும் வருவார்கள். அங்கேயே ஆணி அடித்தார்போல் நின்றுவிடுவார்கள். இவர்கள் ஒருவகை. இன்னொருவகையினரோ தொல்காப்பியம் புறநானூறு சிலப்பதிகாரம் என்றெல்லாம் பயணப்பட்டு கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியங்களையும் கண்டுகொள்ளாமல் மிக கவனமாக பாரதியாரையும் தவிர்த்துவிட்டு பாரதிதாசனை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். தமிழுணர்வு பாடிய பாரதிதாசனின் ஒரு பத்துப்பாடல்களை மட்டும் மனப்பாடம் செய்துவைத்திருந்து ஒப்பிப்பார்கள். அவ்வளவுதான்; அவ்வளவேதான். பாரதிதாசனிலிருந்து ஒரு அங்குலம்கூட கீழே வரமாட்டார்கள். அங்கேயே நின்றுவிடுவார்கள். இவர்களைப்பொறுத்தவரை தமிழ் இலக்கியம் பாரதிதாசனுடன் நின்றுவிடுகிறது.அதன்பிறகு தமிழுக்கு இலக்கியம் இல்லை; இல்லவே இல்லை.

இந்தக் கண்ணோட்டம்தான் திராவிட அரசுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் இலக்கிய நிறுவனங்களுக்கும் இருந்துவருகிறது. தொண்ணூற்றைந்து சத இலக்கிய அமைப்புக்களுக்கும் இதே கண்ணோட்டம்தான் இருக்கிறது.இருபது இருபத்தோராம் நூற்றாண்டைப் பற்றியோ இதற்குப்பிறகு வரவிருக்கும் நூற்றாண்டுகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று இவர்களாகவே முடிவு செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. கண்ணதாசன் பற்றிய இலக்கிய அமர்வு ஒன்றில் பேசினேன். பேசிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அந்த அமைப்பின் தலைவர் தொலைபேசியில் வந்தார். "கண்ணதாசன் இப்படியெல்லாம் பாடி இருக்காரா? நான் பாரதிதாசனோடு படிக்கிறதை விட்டுட்டேன். அதனால எனக்குத் தெரியலை" என்றார். கண்ணதாசனுக்கே இந்த நிலைமை.

தமிழ் படித்த மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் படித்துமுடித்து வெளியேவரும் மக்கள் பாடப்புத்தகத்துக்கு வெளியே என்ன இருக்கிறது என்றுதான் தேட ஆரம்பிக்கிறார்களே தவிர, பாடப்புத்திகத்தின் தொடர்ச்சியையும் நீட்சியையும் மட்டுமே வைத்துக்கொண்டு அல்லாடுவதில்லை. அப்படியிருந்தால் இத்தனை வார ,மாத, நாளிதழ்களும் இலட்சக்கணக்கான நூல்களும் தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்ன! இத்தனை நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் தமிழில் இருக்குமா என்ன!

தமிழை தமிழின் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய முயற்சிகளை விட்டுவிட்டு வெறும் பழைய இலக்கியங்களை மட்டுமா பரிமாறிக்கொண்டிருப்பது? வெறும் பழங்கதைகள் பேசிக்கொண்டிருப்பதிலே ஒரு பயனுமில்லை என்று இவர்களுக்காகத்தான் பாரதி பாடி வைத்திருக்கிறான். திரும்பத் திரும்ப சங்ககால இலக்கியங்களும் பழைய நூல்களும்தானா? என்ற கேள்விக்கு இவர்களிடம் தயாரான பதில் ஒன்று இருக்கிறது. “சங்க இலக்கியத்தில் இல்லாத எதனைப் புதிதாகச் சொல்லிவிடப்போகிறார்கள்?” என்பார்கள். உலகம் புதிது. தினமும் புதிது. தினசரி தன்னைப் புதிப்பித்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பூவுலகம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று மனிதர்களைச் சொல்லுவதும் அதற்குத்தான். இன்று புதிதாய்ப் பிறந்த சிந்தனை வேண்டும்.எண்ணம் வேண்டும். அதற்குரிய செயல்பாடு வேண்டும். இந்தச் செயல்பாடு இலக்கியத்திலும் வேண்டும். இதை நோக்கித்தான் எல்லா மொழிகளும் செயல்படுகின்றன.
கன்னடத்திற்காக நடைபெறும் மாநாடுகளிலும் சரி சாதாரண கருத்தரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் சரி போய்ப்பார்த்தோமானால் வரிசையாகப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பேரும் படைப்பாளிகள். அதுவும் இந்த நூற்றாண்டின் படைப்பாளிகள், இன்றைய படைப்பாளிகள். இன்றைய படைப்பாளிகளைக் கொண்டாடும் மொழிகள்தாம் இலக்கியச் செழுமையில் முன்நிற்கும். மலையாளத்திலும் இந்தப் போக்கு இருக்கிறது. தமிழில்தான் அரசியல்வாதிகளுக்குத் தரப்படும் மரியாதையில் கால்தூசு அளவுக்குக்கூட இன்றைய படைப்பாளிக்குத் தரப்படுவதில்லை.' இன்றைய படைப்பாளி ஏதோ அவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போகட்டும் நாம் எதற்கு கண்டு கொள்வது?' என்ற மனப்பான்மைதான் இங்கு நிலவுகிறது.

பிரச்சினை என்னவென்றால் 1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.
2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.
3)ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது இந்தக் குப்பையான கலவைதான் அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது.

உலகத்தமிழ் மாநாடாக இருந்தாலும் சரி; செம்மொழி மாநாடாக இருந்தாலும் சரி தமிழ் இலக்கியத்தை நேற்று- இன்று- நாளை என்ற கண்ணோட்டத்தில் அணுகி அதற்கான செயல்பாடுகளையும் மேம்பாடுகளையும் ஆராய்ந்து செயல்திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர வெறும் பழம்பெருமைகளைப் பேச கூடிக்கலையும் ஒன்றாக இருக்கக்கூடாது. வெறும் சங்க கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளாகவும் கருத்தரங்கங்களாகவும் மட்டுமே இருத்தல்கூடாது. இந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் பேராசிரியப் பெருமக்களும் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இப்போதைய வார மாத நாளிதழ்களும் மற்ற நூல்களும் சங்க இலக்கியப்பாடல்களுக்கான விளக்கங்களையும் பொழிப்புரைகளையும் ஆய்வுகளையும் குறிப்புகளையும் தினசரி கொடுத்துக்கொண்டே வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இன்றைய கதைகளோ கவிதைகளோ கட்டுரைகளோ செய்திகளோ எதுவும் வேண்டாம். என்ன நடக்கும்? அவனவன் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆப்பிரிக்காவுக்கோ உகாண்டாவுக்கோ ஓடிவிட மாட்டானா?

பழந்தமிழ்ச் செய்யுள்கள் என்பவை என்ன? அந்தக்கால புலவர் பெருமக்கள் அவர்களின் உணர்வுகளை அனுபவங்களை அவர்களின் மனதில் உதித்த காட்சிப்படிவங்களை அன்று வழங்கிவந்த தமிழில் அந்தக்கால மொழிநடையில் பாடி வைத்த படைப்புக்கள்தானே? அவை சிறப்பாயிருப்பதில் மிக மிகச் சிறப்பாயிருப்பதில் நமக்கெல்லாம் பெருமை. அவற்றை நாம் பொக்கிஷம் போல் என்றென்றும் கொண்டாடலாம். அதே போல இந்தக்கால படைப்பாளி தன்னுடைய உணர்வுகளை அனுபவங்களை தன்னுடைய மனதில் உதித்த காட்சிப்படிவங்களை இந்தக்கால மொழிநடையில் இந்தக்காலத் தமிழில் இயற்றுவதுதானே இன்றைய இலக்கியம்? இந்த எளிய உண்மையை நீங்கள் உணர்ந்ததே இல்லையா?' காரொடு நிறைமரு திறமிசை விரியொரு ஞாலம் புகவொண்ணும் ஆதிரைக்கால்' என்று இருந்தால் நீங்கள் கொண்டாடுவீர்கள். 'மலை உச்சியைத் தொட்டுத் தழுவிய மேகங்களின் ஊடாக' என்று புரிகிறமாதிரி இருந்துவிட்டால் சாதாரணம் என்று விட்டுவிடுவீர்கள் என்றால் எப்படி?
தமிழை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டங்களில் தோன்றிய படைப்பாளிகள்தாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டும் விஷயங்கள் மட்டுமே அல்ல என்கிற புரிதல் வேண்டும். அதற்காக கல்வெட்டுக்களையும் இன்னபிற ஆய்வுகளையும் புறக்கணிக்கவேண்டும் என்று அர்த்தமல்ல; அவற்றுக்குத் தரப்படும் அதே முக்கியத்துவம் அல்லது அதைவிட அதிக முக்கியத்துவம் வாழும் படைப்பாளிகளுக்கும் தரப்பட வேண்டும்.
இந்த இருபதாம் நூற்றாண்டை எடுத்துக்கொள்வோம். பாரதிக்குப் பிறகு பள்ளிகள் கல்லூரிகளைத் தாண்டி தமிழை வீட்டுக்குள்ளே எடுத்துச்சென்று வாழ வைத்தவர்கள் யார்? கல்கியும் அகிலனும் புதுமைப்பித்தனும் அல்லவா? புதிய நூல்களும் புதிய இதழ்களும் புதிய புதினங்களும் அல்லவா தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.

அந்திகீரனார், பரணர், பெருந்தலைச்சாத்தனார் பெயரில் அரங்கங்கங்கள் அமைக்கும்பொழுது கல்கியின் பெயரிலும் அகிலன் பெயரிலும் புதுமைப்பித்தன் பெயரிலும் ஜெயகாந்தன் பெயரிலும் கண்ணதாசனின் பெயரிலும் அரங்கங்கங்கள் வேண்டாமா?

தமிழ் இலக்கியம் தொடர்பாக 73 பேர் ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர். மொழியியலில் 51 பேர், இலக்கணத்தில் 46 பேர், ஒப்பிலக்கியத்தில் 39 பேர், ஆவணப்படம் தொடர்பாக ஒருவர், தமிழும் பிற இந்திய மொழிகளும் தலைப்புகளில் இருவர், மொழிசார் இயக்கங்கள், சொற்பிறப்பியல், சிற்றிதழ்கள் ஆகிய தலைப்புகளில் ஒவ்வொருவர், படைப்பிலக்கியம் தொடர்பாக மூன்றுபேர் - இதுதான் இந்த மாநாட்டின் ஆய்வரங்க கட்டுரைகளின் பட்டியல். அதாவது இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் தமிழை யார் கொண்டுபோகப்போகிறார்களோ அவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதான். படைப்பிலக்கியம் பற்றி வெறும் மூன்றே மூன்று கட்டுரைகள். விளங்குமா படைப்பிலக்கியம்?

இதிலும் அண்ணா பற்றி நான்கைந்து கட்டுரைகள்; கலைஞரின் படைப்புக்கள் பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்; மெத்தச்சரி, தமிழின் வரலாற்றை,சோழர்குல வரலாற்றை, மாமல்லபுர வரலாற்றை தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் செதுக்கி வைத்திருக்கும் கல்கியின் எழுத்துக்கள் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?
யவனர்களின் சரித்திரத்தைத் தமிழர்களின் நினைவுகளில் பதியவிட்ட சாண்டில்யனின் படைப்பிலக்கியம் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

வரலாறு மட்டுமின்றி குடும்ப உறவுகளையும் காதல் மனப்போராட்டங்களையும் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் ஆக்கித்தந்த அகிலனின் படைப்புக்கள் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

சமூக அவலங்களை முகத்தில் அறைவதுபோல் ஆக்கிவைத்திருக்கிறாரே ஜெயகாந்தன் .. அவரைப்பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

கதை மாந்தர்களைப் பார்த்து நாமும் இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்கள் வாழ்க்கையையே மாற்றியமைத்துக்கொண்டார்களே எத்தனையோ இளைஞர்கள்.. அவர்களை அப்படித் தூண்டிய படைப்புக்களைப் படைத்த நா.பார்த்தசாரதிக்கும் டாக்டர் மு.வ.வுக்கும் எத்தனைக் கட்டுரைகள்?

கவிஞர் கனிமொழியின் படைப்புக்களைப் பற்றி மூன்றுபேர் கட்டுரை . மிகவும் சந்தோஷம். கண்ணதாசனின் படைப்புக்களைப் பற்றி எத்தனைக் கட்டுரைகள்? அப்துல் ரகுமான், மேத்தா, மீரா, நா. காமராசன் கவிதைகளைப் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

சுந்தர ராமசாமியின் படைப்புக்களைப் பற்றியும் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரின் படைப்பாக்கங்கள் குறித்தும் எத்தனைக் கட்டுரைகள்?

கணிணித்தமிழ் என்று பேசுகிறார்களே அந்தக் கணிணியில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் சங்கத்தமிழைப் பதிவேற்றுவது தவிர எந்த திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் யாரைப்பற்றியும் கவலையே படாமல் அவரவர்களும் தனித்தனி தளங்களை அமைத்துக்கொண்டு எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் ஆபாச வார்த்தைப் பரிமாற்றமும் இருக்கிறதுதான். ஆனால் நாளடைவில் அவை யாவும் ஒழுங்கிற்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே போதும். புதிய புதிய எண்ணங்களும் புதிய சிந்தனைகளும் வலைத்தளங்களில் தாமாகவே வரத்துவங்கி விட்டன.

பெரிய பொருட்காட்சிகளில் ஒரு ஓரத்தில் போடப்படும் அப்பளக்கடையைப் போல் தற்காலப் படைப்புக்களுக்கு இத்தனூண்டு இடம் கொடுத்துவிட்டு பழம்பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது எந்த மொழியையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோகாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் மட்டுமே தமிழ் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சிறக்கும். மற்ற மொழிக்காரர்களைப் பார்த்தாவது சில விஷயங்களைக் கற்றுக்கொள்வோம்.