Wednesday, April 23, 2014

இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் சூர்யா சிறப்பிதழ்




இந்தியா டுடே நடிகர் சூர்யாவைப் பற்றிய சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதி. இன்றைய தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி, கமலஹாசன் இவர்களுக்கு அடுத்து ஒரு நடிகரின் நடிப்பாற்றலுக்கு சிறப்பிதழ் வெளியிட்டுப் பேச முடியும் என்றால் அது 
சூர்யாவுக்கு மட்டுமே முடியும்.

காரணம், அதற்கான ‘சரக்கு’ சூர்யாவிடம் மட்டும்தான் உள்ளது. இதையே அகில இந்திய ரீதியில் வெளியிட முடியுமானால் ஆமீர்கானுக்கு       மட்டும்தான் வெளியிடமுடியும் என்று நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம் இப்போது தமிழில் இயங்கிவரும் வார மாத இதழ்களில் இத்தனை உயர்தரத்தில் பளபளவென்று ஆர்ட் காகிதத்தில் இவ்வளவு பெரிய வடிவமைப்பில் சிறப்பிதழ் வெளியிடுவதென்பதும் இந்தியா டுடேக்கு மட்டும்தான் சாத்தியம் என்றே நினைக்கிறேன்.

மலரை ஒரு புரட்டுப் புரட்டுவோம்.

முதலாவது கட்டுரையே ராஜன் குறை என்பவரின் கட்டுரை. ‘அசத்தல் நாயகன்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கொஞ்சம் மலையாள நெடி அடித்தாலும், ‘கேரளாவில் மம்முட்டியும் மோகன்லாலும் ஏற்று நடிக்கக்கூடிய பாத்திரங்களைப் பரிசீலித்தாலேயே சூர்யா போன்ற திறன்மிகு நடிகர்களுக்குப் பல வாய்ப்புகள் புலப்படலாம்’ என்று கருத்து கந்தசாமியாய் அதிகப்பிரசங்கித்தனம் காட்டியபோதும் அது ஒரு நல்ல கட்டுரை.

குறிப்பாக ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை சூர்யா ஆரம்பித்து மிக மிகப் பரபரப்புடன் வெற்றிகரமாகநடத்திச் சென்று முடித்தபின்னர் அதன் அடுத்த தொடர்ச்சியை நடிகர் பிரகாஷ்ராஜ் ஏற்று நடத்துகிறார். அதில் ஒரு நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யா கலந்துகொள்ள வருகிறார். அப்போது பிரகாஷ்ராஜ் சூர்யாவைச் சீண்டும் விதமாக ஒரு கேள்வி கேட்கிறார். “சிங்கம் படத்தில் ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று ஒரு வசனம் பேசுவீர்களே…சிங்கம்-2 படத்தில் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார்.

அதில் ஒரு சிறிய எள்ளல் இருந்தது. சூர்யாவைத் தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்யவில்லை. அத்தகைய வசனங்களைப் பேசும் கதாநாயகப் பாத்திரம் குறித்த கிண்டல் லேசாக இருந்தது.
சூர்யா பதிலுக்கு முகத்தை மிகவும் சீரியசாக வைத்துக்கொண்டு “பாஞ்சு அடிச்சா பத்து டன் எடைடா” என்பது போல ஏதோ ஒரு பஞ்ச் டயலாக்கை பதிலாகச் சொன்னார். அவர் சொன்ன விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதைக் கொஞ்சம் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.
பஞ்ச் டயலாக் பற்றிய பிரகாஷ்ராஜின் கிண்டலுக்கு மிகவும் சீரியசாகவும் பணிவாகவும் பதில் சொன்னார் சூர்யா. அவர் கிண்டலைப் புரிந்துகொண்ட தொனியும் அதில் இருந்தது. இருந்தாலும் இது என்னுடைய தொழில் என்று உணர்த்தும் தொனியும் இருந்தது. அதைப் பார்த்தபோது மிகவும் குறிப்பிடத்தகுந்த தருணம் இது என்று தோன்றியது.


இரா நரசிம்மனின் ‘சூர்யா எனும் மனிதன்’ கட்டுரை ‘சிவகுமாரின் மகன் என்றாலும் சூர்யா வாரிசு நடிகராக வளர்ந்திருக்கவில்லை. முதல் வாய்ப்பும் சரி, அதன்பின் கிடைத்த வெற்றிகளும் சரி அவரது முயற்சியால் கிடைத்தவைதாம். ஆனால் தந்தை சிவகுமாரிடம் இருந்து அவர் அருங்குணங்களை வரித்துக் கொண்டுள்ளார்’- என்பது சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல அழகான கச்சிதமான படப்பிடிப்பு.

இயக்குனர் பாலாவின் ‘என் தம்பி’ கட்டுரை மிகச்சிறியதே என்றபோதிலும் அருமையான கட்டுரை. முடிந்தவரை அவர் ‘எல்லாவற்றையுமே’ சொல்லிவிட்டார் எனலாம். கொஞ்சம் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் போகும் பாலா ‘நான் விரும்பிய பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைத்தவர் சிவகுமார் சார். அதனால் அண்ணனாக சூர்யா விரும்பிய பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நானும் என்னளவில் முன் நின்றேன். வாழ்க்கையில் அவனுக்குக் கிடைத்த பெரிய வரம் அந்தப் பெண்தான் என்று சொல்வேன். அவ்வளவு அன்பான அக்கறையான மனுஷி’ என்று சொல்லும் பாலா கூடவே இன்னொன்றையும் குறிப்பிடுகிறார்.

‘நான் யார் முன்னாலும் தயங்காமல் சிகரெட் பிடிப்பவன். ஆனால் சூர்யா முன்னால் ஒரு சிகரெட் முடித்துவிட்டு அடுத்த சிகரெட்டை எடுத்தாலே அவன் முகம் வாடிவிடும்’ என்று சொல்லி சூர்யா முன்னால் சிகரெட் பிடிக்கத் தயங்குவதாகக் கூறும் இடத்தில் நிச்சயம் சூர்யா அடைந்திருக்கும் மரியாதைகள் வரையறுக்கப்படுகின்றன.

‘சூர்யா எனும் வளர்பிறை’- என்ற ஆர்.எஸ். அந்தணன் கட்டுரை நல்ல அலசல். முக்கியமான ஒவ்வொரு திருப்பம் ஏற்படுத்திய படங்களையும் அலசிக்கொண்டே வருகிறார் அந்தணன். அவரது முத்திரை இந்த இடத்தில் அழகாக விழுந்திருக்கிறது. ‘ஒவ்வொரு படத்தின் வெற்றிக்குப் பின்னாலும் சூர்யாவின் நடிப்பு மட்டுமல்ல; அதைத் தாண்டிய உழைப்பும் இருந்தது’

இயக்குனர் ஹரியின் கட்டுரையும் ‘நான் உதவி இயக்குனராக இருந்தபோதே சூர்யாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்ற பாசக் குறிப்புடனேயே ஆரம்பிக்கிறது. ‘ஒரு நடிகர் என்பதைத் தாண்டி படப்பிடிப்புத் தளத்தில் எல்லாருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்’ என்று ஹரி சொல்லும் தகவல் முக்கியமானது.

எத்தனைச் சிறப்பான நடிப்பாலும் ஏற்படுத்த முடியாத உயர்வை மக்கள் மனதில் சடாரென்று ஏற்படுத்திவிடக்கூடிய வார்த்தை இது.

இம்மாதிரியான வார்த்தைகள்தாமே எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் அத்தனை உயர்ந்த சிம்மாசனத்தை ஏற்படுத்தித் தந்தது………….

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பார்க்கறியா?” என்ற வசனத்தை வெறியுடன் அவர் பேசிய விதத்தாலேயே அந்த வசனம் பெரும் புகழ் பெற்றது’ – என்பது ஹரியின் வார்த்தைகள். அது எவ்வளவு உண்மை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்தப் படம் வேறொரு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது அதில் நடித்த கதாநாயகர் அதே வசனத்தின் மொழிபெயர்ப்பை ஒரு விழாவில் சொல்லிக்காட்டியபோது அது கொஞ்சம்கூட எடுபடாமல் தொய்ந்து துவண்டு போனதையும் சேர்த்துப் பார்த்திருந்தால்தான் ஹரியின் இந்தக்கூற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

சிறப்பிதழ் என்று கொண்டுவந்துவிட்டு அதில் அந்தக் கதாநாயகனின் நேர்காணல் இல்லாவிட்டால் எப்படி?

சூர்யாவின் நேர்காணல் சூர்யா தன்னை முழுவதும் உணர்ந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்ற, மனம் திறந்து ஆத்மார்த்தமாகப் பேசும் நேர்காணலாகவே உள்ளது.

‘ஹீரோவாக இருப்பவர்கள் அர்னால்டாக இருந்தாலும் ஜாக்கிசானாக இருந்தாலும் அதைத் தேர்வு செய்கிறவர்கள்தான் முழுமையான நடிகனாக இருக்க முடிகிறது’ என்பதில் ஆரம்பித்து-

‘நீ உன்னை விரும்பத் தொடங்கினால் எல்லாரும் உன்னை விரும்புவார்கள்’ என்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்………’என்று தொடர்ந்து-

மணவாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது ‘நான் என் குடும்பத்தை விட்டோ ஊரை விட்டோ அங்கு போகவில்லை; எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஜோ தான் இங்கே வந்திருக்கிறார்’- என்ற வார்த்தைகளில் மணவாழ்க்கைப் பற்றிய ஈகோக்களைச் சிதறடிக்கும் புரிதல் தனக்கு இருப்பதை வெளிப்படுத்தி-

‘இன்றைக்கும்  விஜய் சாருக்கும்  அஜீத் சாருக்கும் பெரிய வியாபாரம், பெரிய ஓபனிங் இருக்கின்றன’ என்பதை மரியாதையுடன் சொல்லி ‘எனக்கான ஆசீர்வாதம் எனக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் கிடைத்திருக்கிறார்கள்’- என்கிற முத்தாய்ப்பில் முடித்திருப்பது அருமை!

சி.முருகேஷ்பாபுவின் கட்டுரை மற்றவர்கள் பேசினதையே பேசினாலும் ‘மற்ற நாயகர்களின் படங்களில் ஒரு காட்சியில் தோன்றுவதற்கு எந்த ஹீரோ அழைக்கப்படுகிறாரோ அவருக்குத்தான் திரையுலகில் தனி மரியாதை இருப்பதாக அர்த்தம்’ என்று சொல்லி சூர்யாவுக்கான முக்கியமான பிம்பத்தை வெளிப்படுத்துகிறது.

சூர்யாவின் தம்பி கார்த்தியுடையது எப்போதுமே open talk வகையறாதான். எல்லாவற்றையுமே போட்டு உடைத்துவிடுவார். அந்தப் பாணி இதிலும் தொடர்கிறது.

‘அதன்பின் எல்லாவற்றையுமே கத்துக்க ஆரம்பிச்சார். இதனால் talent என்று எதுவுமே கிடையாது. எல்லாமே கற்றுக்கொள்ளக்கூடியவை என்பதற்கு அண்ணன்தான் சிறந்த உதாரணம்’ என்கிறார்.

‘எதுவும் தெரியாமல் உள்ளே வந்தாலும் வந்தபிறகு அயராத பயிற்சிகள் மூலம் பிறரைவிடச் சிறப்பாகச் செய்யமுடியும் என்று நிரூபித்தார்’………..

.’தொடர்ந்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாலும் போகப் போக அப்படியே எல்லாம் மாறி எனக்கு அவர் குட்டி அப்பாவாக மாறிவிட்டார்.’

‘தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவரை இன்றைக்கு எப்படி எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது’ என்று தொடர்கின்றன கார்த்தியின் கலக்கல்கள்.

அடுத்து கார்த்தி முக்கியமான ஒரு விஷயத்தைத் தொடுகிறார்.

ஒரே வீட்டில் இருக்கும் இருவருக்கும் ஈகோ வரும் வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அந்தக் கேள்வியை எழுப்பித் தெளிவான ஒரு பதிலைச் சொல்கிறார். “அப்பா அடிக்கடி சிவாஜிசார் குடும்பத்தை உதாரணமாகச் சொல்லி ‘அவர்களைப் போல நீங்களும் ஒன்றாக இருக்கவேண்டும்’ என்று சொல்லுவார். பொதுவாக அடுத்த தலைமுறைகள் வரும்போது இடைவெளிகள் வரும் என்பார்கள். ஆனால் எங்கள் அப்பா அடிக்கடி சொல்கிறமாதிரி எங்களுக்கும் குழந்தைகள் பிறந்த பிறகும் நாங்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்கத்தான் வீடு கட்டிக்கொண்டிருக்கிறோம். பொதுவாக அண்ணன் தம்பிகளுக்குள் ஒத்துப்போகாததற்குப் படிப்பு, வருமானம், மனைவி இப்படிப் பல காரணங்கள் இருக்கும். ஆனால் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை. ஒவ்வொரு சொந்தமும் வருகிறபோது நெருக்கம் அதிகரித்துக்கொண்டுதானிருக்கிறது.” என்பது கார்த்தியின் அசத்தலான பதில்.

ஷஷாங்கன் எழுதியிருக்கும் கட்டுரையும் சூர்யா ஏற்று நடித்த பாத்திரங்களைப் பற்றிய ஒரு ஆழமான அலசல்தான். ‘முழுமையான கலைஞன்’ என்பது கட்டுரையின் தலைப்பு. ‘இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை கதாநாயக நடிகர் என்றால் அவருக்கு நடனம் ஆடவும் சண்டைபோடவும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நாயக நடிகர்களுக்கான முக்கிய தகுதிப் பட்டியல் இதுதான். கூடவே நகைச்சுவையாக நடிக்கவும் தெரிந்திருந்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கலாம். இத்தனைத் தகுதிகளையும் ஒருங்கே பெற்ற தமிழ் நடிகர்கள் மிகக் குறைவு. அவர்களில் முக்கியமானவர் சூர்யா’ என்ற ஆலாபனையுடன் ஆரம்பமாகிறது அவர் கட்டுரை.

 நந்தா. பிதாமகன், காக்க காக்க, மாற்றான் என்று ஆரம்பித்து வாரணம் ஆயிரம், ஆறு, சிங்கம் என்று அவருடைய வெற்றிக்குக் காரணமான எல்லா பாத்திரங்களைப் பற்றியும் அலசுகிறார் கட்டுரையாசிரியர். 

சூர்யாவின் வெற்றிக்குக் காரணமாயிருக்கும் நுணுக்கமான விஷயம் எது என்பதை அவர் இப்படிச் சொல்கிறார். “கனமான பாத்திரப் படைப்புக்களுடன் காத்திரமான திரைக்கதையையும் உரவாக்குவதில் நிபுணரான ராம்கோபால் வர்மா இயக்கிய ரக்த சரித்ரா பாலிவுட்டுக்கு ஒரு திறமையான தென்னிந்திய நடிகனை அடையாளம் காட்டியது. சூர்யாவின் சக்திமிக்க ஒளிரும் கண்கள்தான் அவரைத் தனது படத்தில் நடிக்கவைக்க முக்கிய காரணம் என்று ராம் கோபால் வர்மா கூறியது சாதாரணமான வார்த்தைகள் அல்ல’- என்பவர்,

ஏழாம் அறிவு திரைப்படத்தைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார். ‘சூர்யாவின் நடிப்புக்குத் தீனி போடும் படமாக அமைந்தது ஏழாம் அறிவு. அதில் போதி தர்மராக சூர்யா நடித்த காட்சிகள் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்னர் யாருமே முயற்சி செய்யாதவை. உடலை வருத்திக்கொண்டு மிகச் சிறப்பான நடிப்பை ஒரு தவம் போல் வெளிப்படுத்தக்கூடிய மிகச்சில நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை இப்படத்தின் மூலம் பெற்றார் சூர்யா’ என்பவர் ‘காதல் காட்சி முதல் சண்டைக்காட்சி வரை முழு ஈடுபாட்டுடன் நடிப்பதில் சூர்யாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு’ என்று பொதுமைப் படுத்திவிட்டு கஜினிக்கு வருகிறார்.
“இவ்வளவு இருந்தாலும் மிகவும் ஸ்டைலான, இரக்கமுள்ள தொழிலதிபராக அவர் நடித்த கஜினிதான் சூர்யாவின் வணிக மதிப்பை உச்சத்துக்குக் கொண்டுசென்ற படம் என்று சொல்லலாம். வித்தியாசமான சிகையலங்காரம், உடலெங்கும் பச்சை குத்தப்பட்ட வார்த்தைகள், சிக்ஸ்பேக் உடல் என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் சூர்யா. ‘சுட்டும் விழிச்சுடரே’ பாடலில் அசினுடன் அவர் ஆடிய ஸ்டைல் நடனம், மிக நிதானமான, அழகான முகபாவனைகள் ஆகியவை ரசிக்கவைத்தன. சண்டைக் காட்சிகளில் நரம்பு புடைக்க அவர் காட்டிய வேகம் அசர வைத்தது. படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் இதழோரம் மிதந்த மென்சிரிப்புடன் ரசிகர்களைக் கவர்ந்தார் சூர்யா’ என்று அழகாக வர்ணிக்கிறார் ஷஷாங்கன்.

எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ள ‘நாயகிகளின் நாயகன்’ என்ற கட்டுரை சிவாஜிகணேசன் பத்மினி, எம்ஜிஆர் சரோஜாதேவி, ஜெமினிகணேசன் சாவித்திரி, கமல்ஹாசன் ஸ்ரீதேவி, ரஜனிகாந்த் ஸ்ரீப்ரியா, பிரபு குஷ்பு, விஜய் த்ரிஷா, அஜித் ஷாலினி என்று திரையுலகில் வெற்றிகரமாகப் பவனிவந்த திரையுலக ஜோடிகளைப் பற்றிப் பேசுகிறது. 

சூர்யா ஜோதிகா ஜோடியை வைத்து ஆரம்பிக்கும் கட்டுரை சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சிம்ரன், பிறகு வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா வேடத்தில் வரும் சூர்யாவுக்கு ஜோடியாக முதிர் கன்னி வேடத்தில் நடித்ததைக் குறிப்பிடுகிறது.  பின்னர் லைலா, ஸ்நேகா, த்ரிஷா, பூமிகா, அசின், சமீரா ரெட்டி, தமன்னா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, ஹன்சிகா, காஜல் அகர்வால் என்று ஒருவர் விடாமல் அத்தனைப் பேரையும் அலசும் கட்டுரையாசிரியர் கடைசியில் இப்படி நிறைவு செய்கிறார். “சூர்யாவுடன் இதுவரை பணியாற்றிய நாயகியர் அனைவரும் அவர் மீதும் அவரது நடிப்பாற்றல் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார்கள். சூர்யாவுடன் எப்படியாவது ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்புக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் நாயகிகளின் எண்ணிக்கையும் அதிகம். சூர்யா எனும் நட்சத்திர நாயகனின் படத்தின் வெற்றிச் சாத்தியங்களும் அதில் நடித்தால் சுய முன்னேற்றத்துக்கு உதவும் என்ற தொழில் காரணங்களும் மட்டுமே இதற்குக் காரணமல்ல. தொழிலில் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு, தொழில் பக்தி, கண்ணியமான நடத்தை, பெண்களை மதிக்கும் இயல்பு, சக பணியாளர்கள் மீதான அக்கறை ஆகியவற்றாலும் இந்த நாயகியரைக் கவர்ந்துள்ளார் சூர்யா.’ என்று முடிக்கிறார்.

நடிகைகள் லைலாவும் பூமிகாவும் சூர்யாவுடன் நடித்த அனுபவங்கள் பற்றிப் பேசுகிறார்கள். “சூர்யாகிட்ட பிடிச்ச விஷயம் என்னன்னு ஜோ கிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க டீசென்ஸின்னு பதில் சொன்னாங்க.” என்கிறார் லைலா.

குணச்சித்திர நடிகரான மோகன்ராம் சூர்யாவைப் பற்றிக் கணிக்கிறார். “அவருடைய தந்தையைப் போல் அவரிடமும் விரும்பத் தக்க பண்புகள் அதிகம் உள்ளன. கொங்குநாட்டுப் பாரம்பரியத்திலிருந்து வரும் மரியாதை, விருந்தோம்பல் என்று அனைத்தும் கலந்த கலவை சூர்யா என்று சொன்னால் அது மிகையல்ல. ஒரு நடிகரிடம் இருக்கவேண்டிய சுயவிமர்சனத்தை, தேடலை, நெருப்பை எப்போதும் அவர் கண்களில் நாம் காணமுடியும். என் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாகட்டும், வேறு ஏதாவது பொதுவிழாவாகட்டும் எங்கு என்னைப் பார்த்தாலும் தேடிவந்து வணக்கம் சொல்லுவது சூர்யா ஜோதிகா தம்பதியினரின் பழக்கம்.’ – என்பவர் நிறையப்பேரால் விமர்சிக்கப்படும் விஷயமான சூர்யா தொலைக்காட்சியில் தோன்றுவது பற்றியும் சொல்கிறார்.- 

“பாலிவுட்டின் நாயகர்களைப்போல் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இதைத் தன் சந்தை மதிப்பு அற்புதமாக இருக்கும்போது செய்தார் என்பது அவரது தொலைநோக்குச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டு. அவர் தொலைக்காட்சியை சினிமாவுக்குப் பயன்படும் கருவியாகக் கருதுகிறார், எதிரியாக அல்ல; இதில் ஷாருக்கான், ஆமீர்கான், அமிதாப் பச்சன் ஆகியோர் பட்டியலில் சூர்யாவின் பெயரும் இருப்பது தமிழர்களான நமக்கெல்லாம் பெருமை” என்கிறார் மோகன்ராம்.

அதிரடி வில்லனான நடிகர் ராதா ரவி சூர்யா பற்றிக் குறிப்பிடும்போது “காமெடியிலும் சூர்யா கலக்குகிறார். அவர் காமெடிக் காட்சிகளிலும் கொஞ்சம் சீரியஸாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அதுதான் நல்லது. ஒரு ஹீரோ அப்படித்தான் காமெடி பண்ணவேண்டும். சீரியஸாக, டிக்னிஃபைடாக இருக்கவேண்டும். பஃபூன்தனமான காமெடிகள் காமெடியன்களுக்குத்தான் பொருந்தும்” என்பவர்-

“முன்பெல்லாம் நான் சொல்வேன். பெற்றால் ஒரு பிள்ளை பெறவேண்டும். அதுவும் சூர்யாவைப் போல் பெறவேண்டும் என்று. இப்போது அப்படிச் சொல்லமுடியாது. சிவகுமார் பெற்ற இன்னொரு பிள்ளையும் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். புராணத்தில் அண்ணன் தம்பியான விநாயகரும் முருகனும் மாம்பழத்துக்காக சண்டைப் போட்டுக்கொண்டார்கள் என்று வருகிறது.இந்த அண்ணன்தம்பிகள் அந்த மாம்பழத்தைக்கூட அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளவேண்டும். கடைசிவரை ஒற்றுமையாக இருக்கவேண்டும்” என்று வாழ்த்திமுடிக்கிறார் ராதாரவி.

சூர்யாவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்திக்கொண்ட கா.வெற்றிவேல் அதுபற்றிய தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்காக சூர்யாவையும் ஜோதிகாவையும் ஒருங்கிணைத்து சூர்யா ஜோதிகாவைக் கேள்விகள் கேட்டுக் கலந்துரையாடல் செய்கிறமாதிரியான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு சூர்யாவை அணுகுகிறார்.

சூர்யா தயார்.

ஜோதிகா படப்பிடிப்பில் இருக்கிறார். 

“ஜோதிகா ஷூட்டிங்கில் இருந்து வர நேரமானதால் அவர் வீட்டிலேயே படப்பிடிப்பை வைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. நானும் சூர்யாவும் அவருடைய வீட்டிலிருந்தே காரில் ஜோதிகாவின் வீட்டிற்குச் சென்றோம்.
கொஞ்சம் தயக்கத்துடனேயே சூர்யா அந்த வீட்டிற்கு வந்தார்.

அவர் ஜோதிகா வீட்டிற்குச் செல்வது அதுதான் முதல்முறை என தெரிந்தது.

அப்போது பின்னாளில் அவர் அதே வீட்டிற்கு மாப்பிள்ளையாகப் போவார் என்று அவரும் நினைத்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்” என்று அந்த அபூர்வத் தருணத்தை நினைவுக்குக் கொண்டுவருகிறார் வெற்றிவேல்.

இத்தனை இருக்கும் அந்தச் சிறப்பிதழில் சூர்யாவின் தந்தை சிவகுமாரின் கட்டுரை இல்லாமல் இருக்குமா? இருக்கிறது.

முதல் வரியிலேயே தம்முடைய முத்திரையுடன் ஆரம்பிக்கிறார் சிவகுமார். “ இன்றைக்குக் காலையில் நாட்குறிப்பு எழுதும்போது சூர்யா மும்பை சென்று வந்தான் என்று எழுதுவதா வந்தார் என்று எழுதுவதா என்று ஒரு கணம் குழம்பினேன்” – தன்னைவிட அதிகமான உயரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு விஐபி மகனை, ஒரு விஐபி அப்பாவால் இதைவிடவும் சிறப்பாக அடையாளப்படுத்திவிட முடியாது.

இரண்டுபேரும் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தார்கள் என்பதைக் கோடி காட்டும்போது ‘அவர்கள் பிறந்ததிலிருந்தே சினிமாவுக்குள் வந்துவிடக்கூடாது என்று நினைத்துத்தான் வளர்த்தோம். இது தவறான துறை என்று அர்த்தமல்ல. இதில் போராடி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதில் வந்துவிடாது………..’ என்று குறிப்பிடுகிறார்.

‘இங்கு நூறுபேர் வந்தால் மூன்றுபேர் தாக்குப்பிடிக்க முடியும். அவ்வளவு ரிஸ்க்கான துறை இது’- என்கிறார்.

‘சிவகுமாரின் அடையாளத்தோடு வந்ததாக வெளியிலிருப்பவர்கள் சொல்லலாம். ஆனால் அவன் சுயம்பு. அவனாகவே உருவானான். சூர்யா என்கிற நடிகனின் வெற்றிக்கு ஒரு புள்ளியளவுகூட நாங்கள் உரிமை கொண்டாடமுடியாது’

‘மணிரத்தினம் எனக்கு இருநூறு சதவீதம் நம்பிக்கை இருக்கிறது கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். 

ஆனால் அவனிடம் அப்படி ஏதோ இருப்பதாக நான் நினைத்ததே இல்லை.  இன்னும் சொல்லப்போனால் இவனை நாங்கள் மைனஸில்தான் வைத்திருந்தோம். சின்னவன் நன்றாக வருவான். இவன் ஒரு பையனாக இருப்பான் என்றுதான் நினைத்தோம்.

அவங்கம்மாவுக்கு மட்டும் அவ்வப்போது கனவு வரும்.

ஒரு படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது  ஹீரோ வருகிற நேரத்தில் என் மகன் வர்ற மாதிரியே இருக்கு என்று சொல்லியிருக்கிறாள்’ என்று ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்றைத் தெரிவிக்கிறார்.

‘பட்டினிகிடந்து செத்தவர்களைவிட அதிகமாகச் சாப்பிட்டு அது செரிக்காமல் செத்துப் போனவர்கள் உண்டு’

‘உலகில் நிரந்தரம் என்பது எளிமை. அதனைச் சொல்லி வளர்த்தோம். எளிமை எல்லாரையும் அனுசரித்துப்போகும் பண்பு, போன்றவற்றை நாங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறோம்…..’

 ‘கொஞ்சம் பணம் உன்னைக் காப்பாற்றும். நிறையப் பணத்தை நீ காப்பாற்ற முடியாது’

‘ஒருவரை நீ துரத்தும்போது இருக்கிற சந்தோஷம் உன்னை ஒருவன் துரத்தும்போது இருக்காது. எங்கே நம்மைப் பிடித்துவிடுவானோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும்’

‘இப்போது சிவகுமார் இலட்சுமியின் மகன் என்கிற பகுதி குறைவாகவும், சூர்யா என்கிற நடிகனின் பகுதி அதைவிடப் பன்மடங்கு அதிகமாகவும் ஆகிவிட்டது.’

‘அவனுடைய வெற்றியைப் பார்த்து நான் புளகாங்கிதம் அடைந்து கொண்டாடுவதில்லை. காரணம்  இப்போது அவன் வாழ்க்கையை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறான். இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று நான் சொல்வேன்’

‘புகழ் எப்போது வேண்டுமானாலும் உன்னைத் தூக்கிப் போட்டுவிடும். அதனால் எப்போதுமே எளிமையாக இருக்கவேண்டும்’

‘புகழ் நிரந்தரமல்ல. பொருள் நிரந்தரமல்ல. இமயமலை உச்சியில் கொடி நாட்டலாம். அங்கு குடியிருக்கமுடியாது.’

-இவை சிவகுமாரின் கட்டுரையிலிருந்து தெறிக்கும் முத்துக்கள்.

எந்தவிஷயமாயிருந்தாலும் தமது கருத்தை சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு போகாமல் நடைபெற்ற சம்பவம் ஒன்றைத் தமது வாதங்களுக்கு சான்று காட்டி முடிப்பது சிவகுமார் வழக்கம்.
அவர் பாணியில் அழுத்தமான சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுக் கட்டுரையை நிறைவு செய்கிறார் சிவகுமார்……….

‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நடிகர்கள் நாடாளலாம் என்பதை நீரூபித்தவர் எம்ஜிஆர். அவருக்குப் பிறகு அம்மாதிரி இன்னும் யாரும் வரவில்லை. அவர் அமெரிக்கா சிகிச்சை முடிந்து வந்த நேரத்தில் அக்னிசாட்சி படவிழாவுக்கு அழைத்தோம். மருத்துவர்கள் வேண்டாம் என்கின்றனர். திரைத்துறையினரைப் பார்க்கலாம் என்ற ஆவலில் அவர் வர விரும்புகிறார். அரைமணி நேரத்துக்குமேல் இருக்கக்கூடாது என்கிற நிபந்தனையோடு அவரை அனுமதித்தார்கள்.

விழா தொடங்கி அரை மணி நேரத்தில் போகலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்போதும், இருங்கபோகலாம் என்று சொல்லி அமர்ந்திருக்கிறார் எம்ஜிஆர்.

அவர் பேசத் தொடங்கும்போது அந்த அரங்கத்துக்குள் ரஜினி நுழைகிறார்.
மொத்தக் கூட்டமும் அப்படியே திரும்பி ரஜினியைப் பார்க்கிறது.

தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை இதுதான் நிதர்சனம்’.- என்று முடிகிறது சிவகுமார் கட்டுரை.

இந்தியா டுடேயின் குறிப்பிடத்தக்க இதழாக இந்த இதழைச் சொல்லலாம்.

Wednesday, April 16, 2014

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர்?



இந்த வார்த்தை ஒன்றும் சாதாரண வார்த்தை அல்ல. சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு ஆட்சியையே கவிழ்த்து வீட்டுக்கு அனுப்பிவைத்த வார்த்தை இது. இப்படி ஒரு சிறிய புள்ளி கிடைத்ததும் அதனை அப்படியே திரித்து நூலாக்கி தமிழகத்தின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றுக்குக் காரணமாயிருந்த ஒரு கட்சியை மூட்டைக் கட்டி மூலையில் எறிந்த வார்த்தை.

இந்த வார்த்தையைக் கேட்டவர்கள் அப்படியே மலைத்துப் போனார்கள். ‘எத்தனைச் சாதாரணமானவர்கள், எவ்வளவு சாதாரண நிலையிலே இருந்து அரசியலுக்கு வந்தவர்கள், நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலித்தவர்கள், கீழ்த்தட்டு மக்களுக்காகக் கட்சி நடத்துபவர்கள் இவ்வளவு ஒரு மோசமான ஊழலையா, இப்படி ஒரு பிரமாண்டமான ஊழலையா செய்வார்கள்? ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்றால் எப்படி? இப்படி ஒரு தொகையைக் கணக்குப் பாடத்தில்கூட எழுதிப் பார்த்ததில்லையே. இவ்வளவு பணத்தையா கொள்ளை அடித்தார்கள்?’ என்று வியந்தார்கள். மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். இவ்வளவு பெரிய ஊழலைச் செய்தவராக ஆ.ராசா அடையாளப்படுத்தப்பட்டார்.

அத்தனைப் பணமும் ஆ.ராசாவுக்கும் அவரது தலைவர் கருணாநிதிக்கும் நேரடியாகக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டதாக ஒரு பிம்பம் புனையப்பட்டது.

மாபெரும் பொய்ச் சித்திரம் ஒன்று வானத்தைவிடப் பெரியதாக வரையப்பட்டு மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

இதனால் பலன் பெற நினைத்தவர்கள் திட்டமிட்டு இதனை பூதாகாரமாக்கினார்கள்.

ஊடகங்கள் தங்களின் அசுர பலத்தினால் இதனை எத்தனைப் பெரிதாகக் காட்டமுடியுமோ அத்தனைப் பெரிதாகக் காட்டின.

மக்களுக்கு மலைப்பு மட்டுமல்ல, கோபமும் தலைக்குமேலே கிளம்பியது.

‘இவ்வளவு பெரியதான ஒரு ஊழல், இத்தனைப் பெரிதான ஒரு திட்டம் இந்த நாட்டின் தலைமை அமைச்சரை மீறி, அந்தத் தலைமை அமைச்சரை ஆட்டுவித்துக்கொண்டிருப்பவர்களை மீறி, இந்த நாட்டின் நிதி அமைச்சரை மீறி, சம்பந்தப்பட்ட வலிமை வாய்ந்த அரசுத் துறைகளை மீறி ஒரு சாதாரண அமைச்சரால், அதுவும் ஆளும் கட்சியுடைய அமைச்சரால்கூட அல்ல, ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள அமைச்சரால்- சுயமாகத் தானே முடிவெடுத்துச் செய்யமுடியுமா?’ என்ற சாதாரணக் கேள்விகூட எந்த ஒரு குடிமகனுக்கும் வரவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் ‘வர’விடவில்லை.

திரும்பத் திரும்ப இந்த ஒற்றை வரியே நாடு முழுக்க பரப்பப்பட்டது. ‘ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியாமில்ல, ஆ.ராசா சுருட்டிட்டிராமில்ல’ என்ற வரிகளைத் திட்டமிட்டு நாடுமுழுக்கப் பரப்பினார்கள். 

பரப்பினவர்களின் நோக்கம் கலைஞர் கருணாநிதியைச் சிறுமைப் படுத்தி அவர்களுடைய கட்டுக்குள் வைத்துக்கொள்வதாகவும், தாங்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அவரை வரச்செய்வதாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் இதற்கான ஒட்டுமொத்தப் பலனை அறுவடை செய்தவர் ஜெயலலிதாதான்.

அவர் பாட்டுக்கு எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நீட்டப்பட்ட அறிக்கைகளில் கையெழுத்து மட்டும் போட்டுக்கொண்டிருந்தவர் அசால்ட்டாக சில நாட்கள் மட்டுமே தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார்.

அனைத்துக்கும் காரணம் இந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்  கோடிதான்.

இந்தத் திட்டத்தில் ஊழலே நடைபெறவில்லையா, நடைபெற்ற ஊழலில் ஆ.ராசாவுக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்விகளுக்குள்ளேயெல்லாம் நான் போக விரும்பவில்லை.

இன்றைக்கு இந்த நாட்டில் கேவலம் ரோடு போடுவதிலிருந்து நடைபெறும் எல்லா விஷயங்களிலும் ஊழல் விளையாடாத இடமே இல்லை. 

சாதாரணமாக நகரசபை விவகாரங்களிலேயே ஊழல் புகுந்துவிடுகிறது நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், டான்சி ஊழல், மணற்கொள்ளை ஊழல் என்று நிறைய ஊழல்களைக் கேள்விப் படுகிறோம். அப்படியிருக்க பல ஆயிரம் கோடிகள் புரளும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் இருக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை.

ஊழல்கள் மற்றும் நிதி பெறுவது ஆகியன பற்றி சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் எம்எல்ஏ திரு பலராமன் ஒரு கருத்தைச் சொன்னார். “இந்த நிதி வாங்கறது ஊழல் இதெல்லாம் எல்லாக் கட்சிகளும்தான் பண்ணுகின்றன. இதையெல்லாம் ஒண்ணுமே செய்யமுடியாது. யார்கிட்ட இருந்தும் பணம் வாங்கலைன்னா அரசியல் கட்சிகள் கட்சியே நடத்த முடியாது. அவை பணத்துக்கு எங்கே போகும்? யார் கொடுப்பார்கள்? பொதுமக்கள் கொடுப்பார்களா? ஒரு ரூபாய்க்கூட தரமாட்டார்கள். 

மக்களிடமிருந்து பணம் வாங்கி கட்சி நடத்தமுடியுமா என்ன? அதெல்லாம் சும்மா பேச்சு. ஒருத்தனும் ஒரு பைசாகூடத் தரமாட்டான். எதோ இங்கே பார்வையாளர்களா உட்கார்ந்திருக்கிற மக்களிடம் கேட்டுப் பாருங்களேன். யாராவது ஒரு பைசா தரத் தயாராண்ணு? யாரும் தரமாட்டாங்க………….ஆக இந்த மாதிரிப் பணமெல்லாம் வேற இடத்துல இருந்துதான் வந்தாகணும்” என்றார். இது மிகவும் சத்தியமான வார்த்தை.

ஆக ஊழல்கள் எல்லாக் கட்சிகளிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. மேலே சொன்ன  எம்எல்ஏவைப் போல அதனை நியாயப்படுத்துவதும் என் நோக்கமல்ல. ஆனால் ஒட்டுமொத்த ஊழலையும் ஒருத்தரின் மீது மட்டுமே சுமத்துவதும், அதற்கு ஒரு கட்சியை மட்டுமே ஆளாக்குவதும் மற்றவர்கள் எல்லாம் தப்பித்துக்கொண்டு பதுங்குவதும்,
சம்பந்தமேயில்லாத ஒருவர் அதற்கான பலனை அறுவடை செய்துகொண்டு உத்தம வேடம் போடுவதும் ஏற்புடையது அல்ல என்பதுதான் இங்கே சொல்லவருவது.

‘இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். இதெல்லாம் மக்களிடம் போய்ச்சேராது’ என்று ஆரம்பத்திலிருந்தே அசட்டையாக இருக்க ஆரம்பித்தது திமுக. இதுதான் திமுக செய்த மிகப்பெரிய தவறு.

முதலில் இருந்தே இதனை சரியான முறையில் கையாளத் தவறிய திமுக கத்தி தன்னுடைய கழுத்தை அறுக்க ஆரம்பித்தபிறகுதான் விழித்துக்கொண்டு தடுக்க நினைத்தது. ஆனால், அதற்குள் விபரீதம் திமுகவின் கையை மீறிப் போய்விட்டதையும் பார்த்தோம்.

தணிக்கைக் கணக்காளரின் அறிக்கை ‘இந்தத் திட்டத்தினால் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இழப்பு’ என்றுதான் இருந்தது.(பிறகு இந்த இழப்புத் தொகையே வெறும் முப்பதாயிரம் கோடிதான் என்று வந்தது வேறு விஷயம்)

ஆனால் இதனையே ‘ஆ. ராசா வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போன தொகை ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி’ என்று ‘கட்டமைத்தார்களே’ அந்த மகானுபாவர்களைத்தான் ஜெயலலிதா காலாகாலத்திற்கும் நினைத்து நினைத்துத் தொழ வேண்டும்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த விவகாரங்களெல்லாம் வெட்ட வெளிச்சமாகி எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பிறகும்கூட சில இணைய உலகப் புலிகள் தொடர்ந்து ‘ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி’ என்றே எழுதிக்கொண்டிருப்பது கடைந்தெடுத்த கயமையைத் தவிர வேறொன்றுமில்லை.

இந்த இழப்பீடு தொகையைப் பற்றி கல்வியாளர் ரமேஷ் பிரபா ஒரு உதாரணம் சொன்னார். சுருளிராஜன் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வந்தது. மகன் சிக்கனமாக இருக்க வேண்டியதுபற்றி அவனுடைய தந்தை அவனுக்கு நிறைய யோசனைகள் சொன்னாராம். அந்த யோசனைகளைப் பயன்படுத்திய அந்தப் பையன் அடுத்த மாதமே அதற்கான பலனைத் தந்தையிடம் தெரிவித்தானாம். “அப்பா நீ சொன்னபடியே சிக்கனமா இருக்க ஆரம்பிச்சுட்டேன்பா. தினசரி அஞ்சு ரூபாய் மிச்சம் பிடிச்சுட்டேன்பா” என்றானாம்.

அப்பா வியந்து “தினசரி அஞ்சு ரூபாயா எப்படிடா மிச்சம் பிடிச்சே?”
“அதுவந்து ஸ்கூல்லருந்து திரும்பறதுக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்தே இல்லையா? தினமும் அஞ்சு ரூபா டிக்கெட். நான் அஞ்சு ரூபா டிக்கெட் எடுக்காமல் பஸ் பின்னாடியே ஓடி வந்துருவேன். அப்ப அஞ்சு ரூபா மிச்சம்தானே” என்றானாம்.

கேட்ட அப்பா தலையில் கைவைத்துக்கொண்டாராம். “அட முட்டாப்பய மவனே, மோசம் போயிட்டியேடா. அஞ்சுரூவா டிக்கெட் எடுக்காம நீ பஸ் பின்னாடி ஓடி வந்ததுக்குப் பதிலா ஆட்டோ பின்னாடி ஓடி வந்திருந்தா நாளொன்னுக்கு ஐம்பது ரூபாய் மிச்சம் புடிச்சிருக்கலாமே”டான்னாராம்!
கணக்காயரின் கணக்கு இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

சரி விஷயத்துக்கு வருவோம். இதில் திமுகவுக்குச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டது இருநூறு கோடிகள்.

இந்த இருநூறு கோடிகளை வைத்துத்தான் கலைஞர் டிவி துவங்கப்பட்டது என்றுதான் வழக்குப் பயணிக்கிறது.

இந்த இருநூறு கோடிகள் ஸ்பெக்ட்ரம் மூலம் திமுகவுக்கு வழங்கப்பட்டதா என்ற விவகாரத்திற்குள்ளெல்லாம் நுழைய விரும்பவில்லை.

ஆனால் எனக்கு இங்கே உதிக்கும் வேறொரு சந்தேகத்திற்கு விடை தேட வேண்டியிருக்கிறது.

அதாவது கலைஞர் டிவி என்ற ஒரு புதிய சேனல் துவங்க இருநூறு கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்கிற செய்தி நமக்கு இங்கே கிடைக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஒரு புதிய சேனல் துவங்க இருநூறு கோடி ரூபாய் தேவை.

சரியா?

அந்தக் கணக்குப்படி கலைஞர் டிவி துவங்கத் தேவைப்பட்ட அந்த இருநூறுகோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் மூலம், ஆ.ராசா மூலம் வந்து சேர்ந்தது. இதுதானே குற்றச்சாட்டு?

ரொம்பவும் சரி………………அப்படியானால் ஜெயா டிவி துவங்க ஒரு ‘இருநூறு கோடி’ எங்கிருந்து வந்து சேர்ந்தது?

மெகா டிவி துவங்க எங்கிருந்து வந்தது?

கேப்டன் டிவி துவங்க எங்கிருந்து வந்தது?

மக்கள் டிவி துவங்க எங்கிருந்து பணம் வந்தது?

இன்னமும் நிறைய அரசியல் கட்சிகள் அவரவரும் தனித்தனி சேனல்கள் வைத்திருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் இந்த ‘இருநூறு கோடிகள்’ எங்கிருந்து வந்தன?

எப்படியோ அவதூறுகளும் முடிந்துவிட்டன; அறுவடையும் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலும் இதோ வந்துவிட்டது.

இதே ராசா திரும்பவும் தைரியமாய் மக்களைச் சந்திக்கிறார். அதைவிட தைரியமாய் கோர்ட்டுக்குப் போகிறார். பார்லிமெண்ட் விவகாரக் குழுவில் தாம் நேரடியாக சாட்சியமளிக்கத் தயார் என்கிறார். எங்கே 
 வரவேண்டுமோ சொல் வருகிறேன் என்கிறார். எந்த ஊடகவியலாளரையும் அச்சமின்றி எதிர்கொள்கிறார்.

தேர்தலில் நின்றிருக்கிறார். 


அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் வழக்கை அவர் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் விதம் அவர் மீதான வியப்பை அதிகப்படுத்துகிறது.

ராசா மீது சுமத்தப்பட்ட இந்த ஊழல், ஈழ விவகாரம், இரண்டு மணிநேர மின்வெட்டு இன்னோரன்ன விவகாரங்களால் ஜாக்பாட் அடித்த ஜெயலலிதா நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வந்ததும் பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் உற்சாகமாக எல்லாரையும் முந்திக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.

இவர் இறங்கிய வேகத்தைப் பார்த்த ஊடகங்கள் ‘நாற்பது தொகுதிகளிலும் அம்மாவே வெற்றி பெறுவார்’ என்றே எழுதின. அடுத்த பிரதமர் இவர்தான் என்றும் எழுதின. தமிழகத்துப் போஸ்டர்கள் எல்லாம் அடுத்த பிரதமர் என்றுகூட அல்ல, பிரதமரே ஜெயலலிதாதான் என்றும் உலக நாட்டுத் தலைவர்கள் எல்லாரும் இவர் முன்பு கைகட்டிக்கொண்டு இருப்பது மாதிரியெல்லாம் சென்னை முழுக்க தூள் கொட்டின.

நம்முடைய ஊடகங்களுக்குப் பெரிய பிரச்சினை.

ஊடகங்கள் ஒரு பக்கம் மோடியைப் பிரதமர் ஆக்குவதாக உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நானும் பிரதமராவேன் என்று ஜெயலலிதாவும் களத்தில் இறங்கிவிட்டார்.
இப்போது என்ன செய்வது?

சிக்கல் என்னவென்றால் இருப்பது ஒரேயொரு இந்தியாதான்.

இரண்டு இந்தியா இருந்திருந்தால் ஊடகங்களுக்கு சுலபமாகப் போயிருக்கும். மோடிக்கு ஒரு இந்தியா, ஜெயலலிதாவுக்கு ஒரு இந்தியா என்று பிரித்துக் கொடுத்துவிட்டிருப்பார்கள்.

முடியவில்லை. இதுதான் ஊடகங்களின் பிரச்சினை.

ஏனென்றால் இந்தத் தேர்தலை நடத்துவதே ஊடகங்கள்தாம்.
மோடி, ஜெயலலிதா, மோடி, ஜெயலலிதா என்று எத்தனை ரவுண்டு வரமுடியுமோ அத்தனையும் வந்தாகிவிட்டது.

எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் உள்ளூர் விவகாரத்துக்குத்தான்  முக்கியத்துவம் தருவது என்ற கொள்கையில் விடாப்பிடியாய் இருக்கும் தினத்தந்திகூட ஒரு நாளைக்குப் பதினேழு பதினெட்டுச் செய்திகள் மோடியைப் பற்றியது என்று போட்டாகிவிட்டது. மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் பேசுகிறார்(அவர் மத்திய பிரதேசத்தில் பேசுவதற்கு தமிழ்நாட்டுக்காரன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை) என்பதுவரை தினத்தந்தி செய்தியாகிவிட்டது.

ஜெயலலிதா பற்றிய செய்திகளைக் கேட்கவே வேண்டாம். பக்கம் பூராவும் ஜெயலலிதா பேச்சுக்கள்தாம்) மிச்சமீதிக் கூட்டங்களிலாவது ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு அம்புலிமாமா கதையை எழுதிக் கொடுப்பார்கள். 
அவரும் அந்தக் கதையைப் படித்துவிட்டு கருணாநிதியை ஆசை தீர நான்கு வார்த்தைத் திட்டிவிட்டுப் போவார். சுவாரஸ்யமாய் இருக்கிறதோ இல்லையோ வித்தியாசமாகவாவது இருக்கும். தேர்தல் கூட்டங்களில் அம்புலிமாமா கதையும் இல்லை. வித்தியாசமும் இல்லை.

தேர்தல் கூட்டங்களிலேயே இத்தனை போரடிக்கும் உரை இவருடையதாகத்தான் இருக்கவேண்டும்.

தவிர, அந்த உரை படிக்கப்படுவதற்கு ஆகும் செலவு ஒவ்வொரு உரைக்கும் சுமார் ஒரு கோடி என்பது யோசிக்கவேண்டிய விஷயம். ஒவ்வொரு ஊரிலும் ஹெலிபேட் அமைக்க ஆகும் செலவே முப்பது முப்பத்தைந்து லட்சம் என்கிறார்கள். மற்றபடி ஹெலிகாப்டர் வாடகை, மேடைச் செலவுகள், மக்களைக் கூட்டிவர ஆகும் செலவு என்றெல்லாம் பார்த்தால் ஒவ்வொரு கூட்டத்திற்குமான செலவு ஒரு கோடி ரூபாய் என்கிறார்கள். இந்தச் செலவுகளுக்கான பணமெல்லாம் எங்கிருந்து வருகிறது என்பதை காங் பிரமுகர் பலராமனைத்தான் கேட்க வேண்டும்.

தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள். மக்களுக்கும் தனக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாத ஒரு முதலமைச்சரை அவர்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறார்கள்.

அவர் மக்களைச் சந்திப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளைச் சந்திப்பதில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. ஆனாலும் ஊடகங்கள் அவரை எந்தவகையிலும் விட்டுக்கொடுப்பதே இல்லை.

இந்த அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்?

இந்தத் தேர்தலில் பார்த்தால் அம்மையாரின் ஆரம்ப சுருதி மட்டுமல்ல பத்திரிகைகளின் ஆரம்ப சுருதியும் மிகவே சுருங்கிவிட்டது.

சுருதி சுணங்கிப்போனதற்கு கூட்டமின்மை மட்டுமே காரணமில்லை. பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கும் ஒரு காரணம்.

வேறு ஏதோ காரணங்களுக்காக எப்போதோ நடந்திருக்க வேண்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதத்தை என்னென்னவோ செய்து தள்ளிப்போட்டுக் கொண்டே வர, கோக்குமாக்கான நேரம் பார்த்து குரங்கு குதித்த கதையாக தேர்தல் நேரம் பார்த்து பவானி சிங் “கொடநாட்டிலே எண்ணூத்து முப்பத்து நான்கு ஏக்கர், சிறுதாவூரிலே……………” என்று பட்டியல் வாசிக்க ஆரம்பிக்க ஜெயலலிதா அதிர்ந்தாரோ இல்லையோ அதிர்ந்து போனவை நம் ஊடகங்கள்தாம்.

அட இது என்ன பெரிய விஷயம், எத்தனையோ விஷயங்களை இரும்புத்திரைப் போட்டு மூடியிருக்கிறோம். இதை மூட மாட்டோமா என்று ஊடகங்கள் நினைத்து இந்தச் செய்திகளை மூட ஆரம்பிக்க இது தேர்தல் நேரமென்பதால் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு கலைஞரும் ஸ்டாலினும் திரும்பத் திரும்ப இதே செய்திகளைப் படிக்க…………….மற்ற திமுககாரர்கள் எல்லாரும் கூவித்தீர்க்க….வீட்டுக்கு வீடு கச்சிதமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டன திமுக ஆதரவு சேனல்கள்.

முதலில் அதிமுக சுலபமாக அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றவர்கள், அடுத்து முப்பத்தைந்து என்றார்கள், இருபத்தைந்து என்றார்கள், இப்போது இருபத்தி இரண்டு தொகுதிகளில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும், திமுக பதினாலு இடங்களைப் பெறும் பாஜக கூட்டணி மூன்று இடங்களைப்  பெறும் என்று இறங்கிவந்து நிற்கிறார்கள்.

யார் யார் எத்தனை இடங்களைப் பெறுவார்கள் என்பதைப் பிறகு பார்க்கலாம். ஊடகங்களாலும் இணையப் புலிகளாலும் ஒன்றுமேயில்லை என்று ஊதித்தள்ளப்பட்ட திமுகவுக்கு, அதிலும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கிடைத்திருக்கும் வரவேற்பும் கூடும் மக்கள் கூட்டமும் தமிழக அரசியலில் நிச்சயம் வேறு கணக்குகளைப் போட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அரசியல் தலைவர்களில் யாருக்குமே கூடாத கூட்டம் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் ஸ்டாலினுக்குக் கூடியது என்பதுதான் இந்தத் தேர்தல் உணர்த்தும் பாடம்.
 
இந்த முக்கிய மாறுதலைப் புறக்கணிப்பதற்கில்லை.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பேயே ஸ்டாலின் குறிப்பிடத்தகுந்த தலைவராகிவிட்டார் என்பதுதான் இங்கே உணர்த்தப்படும் செய்தி.

உடனடியாக, ‘கூட்டம் கூடினால் ஓட்டுப் போட்டுருவாங்களா? போன தடவை வடிவேலுக்குக்கூடத்தான் கூட்டம் கூடியது. ஓட்டுக் கிடைத்ததா’ என்று அனானிமஸ் பெயரில் தட்டச்சு செய்ய முனைவோர் ஒரு நிமிடம் நில்லுங்கள்.

ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் கூடவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போது இந்த ஊடகங்களும் இணையப் புலிகளும் என்ன எழுதியிருப்பார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

ஸ்டாலினையும் திமுகவையும் எத்தனைக் கேவலப்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்திருப்பார்களா இல்லையா?

தவிர, கூட்டத்துக்கு மக்கள் வருகை தராவிட்டால்தான் ஓட்டு விழும் என்பது என்ன லாஜிக் என்பதும் புரியவில்லை.

ஊடகங்கள் எல்லாவற்றையும் கட்டமைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஊடகங்களின் கட்டமைப்புகள் எப்போதுமே வெற்றி பெறுவதில்லை என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.

இதுபோலவே முன்பொரு தேர்தலில் மொத்த ஊடகங்களும் சேர்ந்து சொன்ன அத்தனைக் கணிப்புகளும் பொய்யாகிப் போனபோது முரசொலியில் கட்டம் கட்டி எழுதியிருந்த ஒரு பெட்டிச் செய்திதான் நினைவு வருகிறது.

ஹிண்டுவின் சிண்டு பறந்தது.

துக்ளக்கின் டோப்பி எகிறியது.

எக்ஸ்பிரஸ் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது………………என்பதுபோல் கேலி செய்திருந்தார்கள்.
  
இந்தத் தேர்தல் முடிவுகள் எதை உணர்த்தப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.