Monday, February 28, 2011

‘குழந்தைகளை எப்படி வளர்ப்பது?’ என்பது பற்றி நடிகர் சிவகுமார்.


உயர்ந்த பண்புகளுடனும் நெறிசார்ந்த செயற்பாடுகளுடனும் தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகர் சிவகுமார். அவரது வாழ்வியல் முறைகளால் மட்டுமின்றி தமது பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் செயற்பாடுகளாலும் கவனிக்கத் தகுந்த மனிதராகவும், நல்லதொரு தந்தையாகவும் விளங்கிவருகிறார் அவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ; “கண்டித்தாலும் தவறு..கண்டுக்காமல் விட்டாலும் தவறு. எப்படி ஐயா குழந்தைகளை வளர்ப்பது?”

அவரது பதில் இங்கே;

“ இனவிருத்தி செய்வதோடு பூச்சிகள், பறவைகள், விலங்குகள் கடமை முடிந்துவிடுகிறது. ஆடு மாடு போன்றவை கொஞ்ச நாட்கள்தாம் குட்டிக்கு-கன்றுக்கு பால் கொடுக்கும். பறவைகள் இரை தேடி எடுத்துவந்து குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும்வரை ஊட்டிவிடும். அதன் பிறகு அதது தன் வாழ்வை வாழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

ஆறறிவு படைத்த மனிதன் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு ஓடிவிட முடியாது. உடல் இன்பத்தின் நீட்சியாக குழந்தைப் பிறந்தது என்ற மனோபாவத்திலிருந்து உயர்ந்து நம் வம்சத்தை விருத்தி செய்ய, தன் பாரம்பரியப் பெருமைகளைத் தூக்கி நிறுத்த, தான் பெறாத சுகத்தை, தான் கற்க முடியாத கல்வியை, தான் அடைய முடியாத புகழை-செல்வத்தைத் தன் வாரிசுகள் பெற்று, பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகளாக அவை வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் குழந்தைப் பெற்றுக்கொள்வது நல்லது.

நூற்றுக்குப் பத்துப்பேர்கூட அப்படிப்பட்ட சிந்தனையுடன் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பது சந்தேகமே!

கல்யாணம் நடந்தது, முதல் இரவு முடிந்தது, உடல் சேர்க்கை நிகழ்ந்தது-அதன் விளைவாக ஒரு ஜீவன் பிறந்துவிட்டது. என்ன செய்வது, பெற்றுத் தொலைத்துவிட்டோம். பிறகு வளர்த்துத்தானே ஆகவேண்டும் என்ற அலுப்பு, சலிப்பு பெற்றோர்களுக்கு-குறிப்பாகப் பெற்றவளுக்கு ஏற்பட்டுவிட்டால், அந்தப் பிள்ளை பிறவியிலேயே சபிக்கப்பட்ட பிள்ளைதான்.

ஆறு மாதம்கூட முழுசாகத் தாய்ப்பால் தராமல், தனக்குத் தூக்கம் கெடுகிறது; அழகு குலைகிறது; உடல் சோர்ந்து விடுகிறது; பிரமோஷன் தாமதப்படுகிறது என்பதற்காக அந்தப் பச்சைக்குழந்தையை அள்ளி எடுத்துப்போய் ‘க்ரீச்’ என்ற குழந்தைக் காப்பகத்தில் ஆயாக்களிடம் ஒப்படைத்து, ‘செரிலாக்’ என்கிற பால்பவுடர், அல்லது புட்டிப்பால் தந்துவிட்டு அலுவலகம் ஓடுகின்ற பெருமைக்குரிய தாய்மார்கள் நிறையப்பேரைப் பார்க்கிறோம்.

அடுத்த ஆறுமாதத்தில் ஆயாக்கள் புஷ்டியாக உடம்பு தேறி வர, குழந்தைகள் சோமாலியா நாட்டு ஊட்டச்சத்தற்ற, எலும்பின்மீது தோல் போர்த்தப்பட்ட குழந்தைகளாக இளைத்துப்போகும் கொடுமைகள் நடக்கின்றது.

ஓராண்டுகூட அந்தப் பச்சைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டுக் கொஞ்சி பாலூட்டி வளர்க்க முடியாதவர்கள் அந்தக் குழந்தையின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களாகிறார்கள்.

குழந்தை பசிக்கு அழுகிறதா, தொடையில் எறும்பு கடித்ததால் அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, காது வலி எடுத்து அழுகிறதா, மூக்கடைப்பால் அழுகிறதா, எதற்கு அழுகிறது என்பது பெற்ற தாய்க்கும்-அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்குத்தான் எளிதாகப் புரியுமே தவிர, நாற்பது குழந்தைகளுக்கு நடுவில் நாதியற்று, வெயிலில் காய்ந்து, வாய் வறண்டு ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ‘டயாஃபர்’ என்ற கோவணம் போன்ற உள்ளாடையில் போய், அது வறண்டு சீந்துவாரற்றுக் கிடக்கும் சூழலில் அக்குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களுக்குப் புரியாது.

தாயின் மடியில் படுத்துக்கொண்டு அவள் இடது கை முழங்கை மடிப்பில் தலை வைத்து இடது மார்பில் குழந்தைக்குப் பாலூட்டும்போது உச்சி முகர்ந்து முத்தமிட்டு தாய் கொஞ்சும்போது- உலகில் அதற்கிணையான பரவசத்தை, பாதுகாப்பு உணர்வை, குழந்தை எங்கும் எப்போதும் பெறமுடியாது.

தேவதை ஒருத்தி பூமிக்குவந்து குழந்தையைத் தூக்கி எடுத்துக் கொஞ்சினாலும், தாய் கைப்பட்ட அடுத்த விநாடிதான் குழந்தையின் அழுகை நிற்கும். ஒருமாத குழந்தைக்கூட தாயின் கரங்களில் உள்ள உஷ்ணத்தை இனம் கண்டு பாதுகாப்பை உணர்ந்துகொள்ளும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் குழந்தையின் உடம்பு மட்டுமல்ல மூளையும், அறிவும், அறிதலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தவறான நிகழ்வுகளோ கண்டிப்பான வார்த்தைகளோ எதுவாயினும் மனத்திரையில் எளிதாகப் பதிவாகிவிடும்.

கணவன் மனைவி தங்களின் குழந்தை முன்பு வாக்குவாதம் செய்வது, வேலைக்காரர்களை குழந்தை முன்பு கடுஞ்சொல்லால் திட்டுவது-எல்லாம் அழிக்கமுடியாத பதிவுகளாகிவிடும்.
குடும்பத்தலைவன் நான், நான் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் ஆனால் குழந்தைகள் அதைக் கண்டுகொள்ளக்கூடாது என்று வறட்டுவாதம் பிடிக்கக் கூடாது. திருமணத்திற்கு முன்பு எல்லைதாண்டி பல தவறுகள் செய்திருந்தாலும் குழந்தைகள் வளரும்போது பெற்றோர் அவர்களுக்கு ‘ரோல்மாடல்களாக’ இருக்கவேண்டும்.
அப்பாவுடைய குணமும் ஆற்றலும், அம்மாவுடைய பொறுமையும் கனிவும், குழந்தைகளை ரொம்பவே கவரும்.

அப்பா தவறு செய்திருந்தாலும், அம்மா தவறுசெய்திருந்தாலும் குழந்தைகளிடம் ‘சாரி’ சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதைப்பார்க்கும் குழந்தைகள், தவறு செய்தால் மறைக்கவேண்டிய அவசியமில்லை-அதை உணர்ந்து மன்னிப்புக்கேட்பது நல்லது என்று புரிந்துகொள்ளும்.

குழந்தகள் ரொம்பவும் ‘பொஸஸிவ்’ ஆக, அனைத்தும் தனக்கே சொந்தமானதாக இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள்.

‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற படத்தில் என் மகளாக மீனா நடிப்பார். உடல்நலமின்றி தாய் மருத்துவமனையில் இருக்க அந்தக் குழந்தைக்கு டைனிங்டேபிளின் அடியில் அமர்ந்து நான் சோறு ஊட்டிவிடுவேன். முதுகில் சுமந்தவாறு மாடிக்குத் தூக்கிச் செல்வேன். மார்புமேல் படுக்கவைத்து தட்டிக்கொடுத்து தூங்கவைப்பேன்.

என் மகள் பிருந்தாவுக்கு அப்போது மூன்றுவயது. படத்தைப் பார்த்த குழந்தை வீட்டுக்குவந்ததும் ஒரு கேள்வி கேட்டாள். “அப்பா, நீங்க என்அப்பாவா? மீனாவோட அப்பாவா? அவளுக்கு மட்டும் சோறு ஊட்டிவிட்டீங்க. உப்புமூட்டைச் சுமந்தீங்க, நெஞ்சுமேலே படுக்கவச்சு தூங்கவச்சீங்க, நான்தானே உங்கபொண்ணு..அதெல்லாம் இப்ப எனக்கும் பண்ணுங்க” என்றாள்.

வாயே திறக்காமல் டைனிங்டேபிள் அடியில் நுழைந்து அவளுக்கு சாதம் ஊட்டிவிட்டேன். மாடியிலுள்ள படுக்கை அறைக்கு முதுகில் தூக்கிப்போனேன். படுக்கையில் மல்லாந்து படுத்து மார்மீது அவளைப் படுக்கவைத்துக்கொண்டேன். போதாததற்கு, ஜெயச்சந்திரன் அப்படத்தில் எனக்காகப் பாடிய பாடலை என் கட்டைக்குரலில் பாடி தூங்கவைத்தேன்.

ஆங்கிலேயர் கலாச்சாரம் வேறு; தமிழ் மக்களின் கலாச்சாரம் வேறு. அவர்கள் குழந்தைப்பெற்றவுடனேயே ஆயாக்களிடம் கொடுத்து பக்கத்து அறையில் பச்சைக்குழந்தையைத் தூங்கப் பழக்கிவிடுவார்கள். பசியில், நடுநிசியில் குழந்தை அழுதாலும் பால்தர தாய் போகமாட்டாள்.

மருத்துவரிடம் கேட்டால் அந்த மேதை, “அதை அப்படியே விட்டுவிடுங்கள். பசியில் அழுது ஓய்ந்து பழகிக்கொள்ளும். நீங்கள் போய்ப் பால்கொடுத்தால் இரண்டு மணிக்கு ஒருதரம் அது எழுந்து அழும். இரவில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு மூன்றுமுறை போய் பால்தர வேண்டும். வேண்டாம். விட்டுவிடுங்கள். பசியில் அழுது சோர்ந்து தூங்கிவிடும். ஒன்றும் ஆகாது” என்று கூறுவார்.

இங்கு நம் மண்ணில் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரையிலாவது குழந்தை இரவில் பசியால் அழும்போது தாய் எழுந்து பால்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. ஆரோக்கியமான பழக்கம்.

தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் குழந்தை ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போர்டிங் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள்.

குழந்தைகளுக்குத் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளவும், சுயமாக முடிவெடுக்கவும் ஹாஸ்டல் வாழ்க்கை-அந்தக் கான்வெண்ட் பள்ளிவாழ்க்கை கற்றுத்தருகிறது என்பது உண்மைதான். அதற்கு நீங்கள் குறைந்தது குழந்தைக்கு பத்துவயது தாண்டியதும்தான் அனுப்பவேண்டும்.

மூன்றுவயது, நான்குவயது சிறுவர்களை-சிறுமிகளை, பிளேட்டில் போட்ட சாதத்தைக் கையால் எடுத்துச் சாப்பிடத் தெரியாத வயதில், ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போய்விட்டுக் கழுவத்தெரியாத வயதில், தன் டிராயர் பட்டனைத் தானே போடத்தெரியாத- கழுத்துவழி சட்டை மாட்டிக்கொள்ளத் தெரியாத வயதில், போர்டிங் ஸ்கூலில் போடும் கொடுமையைச் செய்யாதீர்கள்.

நடுங்கி உடல் விறைக்கும் 5 டிகிரி குளிரில் ரத்த ஓட்டமே குறைந்துவிடும். மட்டன் சிக்கன் 2 மணிநேரம் அடுப்பில் வைத்தாலும் வேகாது. அடிப்பக்கம் உஷ்ணம், மேல்பகுதியில் கடும்குளிர் படுவதால் குழம்பு சீக்கிரம் கொதிக்காது.

மாலை 6 மணிக்கெல்லாம் இரவு சப்பாத்தி-குருமா குழந்தைகளுக்கு பரிமாறப்படும். ஆயிரம் குழந்தைகளுக்கு சப்பாத்தி தயாரிக்க பிற்பகல் 2 மணிக்கே சமையல் அறை பரபரப்பாகிவிடும். 4000 சப்பாத்திகள் சுட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பிளேட்டிலே அவை விழும்போது விறைத்து குளிர்ந்து நாய்த்தோலைவிட கெட்டியாக இருக்கும். விவரம் தெரிந்த குழந்தைகள் குருமாவில் சப்பாத்தியை ஊறப்போட்டு பிய்த்துச் சாப்பிடும். அப்பாவிக் குழந்தைகள் அந்தச் சப்பாத்தியைப் பிய்க்க நாய் படாத பாடுபடும்.

ஒருவழியாக சாப்பிட்டு பிளேட் அலம்பிவைத்து 50, 100 பேர் படுக்கும் நீண்ட ஹாலில் கருங்கம்பளிக்குள் நுழைந்து சுருண்டு படுத்துக்கொள்ளும்.
இரவு 9.30மணிக்கு குழந்தைக்குப் பசி எடுக்கும். யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. பொதுவாக ஒரு வகுப்பில் 25, 30 குழந்தைகள் படிக்கும்போது பாடங்களில் ஏற்படும் சந்தேகத்தைத் தீர்க்கவே ஆசிரியருக்கு நேரம் போதாது. இந்த அழகில் இரவு பசி எடுத்ததையோ, வயிற்றுவலி வந்ததையோ, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையோ ஆசிரியரிடம் சொல்ல குழந்தை அஞ்சும், அவமானப்படும். இரவும் பகலும் ஊமை அழுகையாக அழுது ஆறுமாதப் படிப்பு முடியும்.

அம்மா வந்து ஆறுவயது மகனை அள்ளி எடுத்து வீட்டுக்கு அழைத்துப்போவாள். அந்த ஒரு மாத விடுமுறையில் அக்குழந்தைக்கு ராஜ உபசாரம். வடை பாயாசமென்ன, புத்தாடைகள் என்ன, கார் ரெயில் பொம்மைகள் என்ன, பிளாக் தண்டர் ரிசார்ட்டில் ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் ரயில் சவாரி, துப்பாக்கிச் சுடுதல், குதிரை சவாரி- என்று பூலோக சொர்க்கத்தைக் காட்டுவாள் அம்மா.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிசென்று அந்த சிறைக்கம்பிகளுக்கு ஒப்பான இரும்புக்கதவைத் திறந்து உள்ளே மகனை அல்லது மகளை அனுப்பி அம்மா ‘டாட்டா’ சொல்லும்போது நெஞ்சமெல்லாம் குமுறி கோபத்தின் உச்சத்தில் ‘உன்னைக் கொலை செய்யப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அந்த ஆறு வயதுச் சிறுவன்/சிறுமி செல்வான்.....என்ன வலி இருக்கவேண்டும்-எப்படிப்பட்ட வேதனை அக்குழந்தைக்கு இருந்தால் அந்த வார்த்தையை அம்மாவைப் பார்த்துச் சொல்வான்..........! இந்தப் பாவத்தை 10 வயதாகும்வரை குழந்தைகளுக்குச் செய்யாதீர்கள்.

எங்கள் வீட்டில் உறவுக்காரக்குழந்தைகள், வீட்டுக்குழந்தைகள் என்று விடுமுறை நாட்களில் வீடே அல்லோலகல்லோலப்படும். ஒரு நாள் பிள்ளைகளின் அறையில் ஒரு பீரோ டிராயரை துணைவி திறந்து பார்த்தபோது பிளேபாய் பத்திரிகையில் வெளியாகும் அழகிய பெண்களின் நிர்வாணப்படங்கள் சில கிடந்தன. பதறிப்போனவர் என்னிடம் வந்து ‘இது யார் வேலை தெரியவில்லை’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். “அவர்கள் ஒன்றிரண்டுதான் வைத்திருக்கிறார்கள். நான் பதினாறு வயதிலேயே வாத்சாயனம் கொக்கோக சாஸ்திரம் எல்லாம் படித்திருக்கிறேன். இதை நான் பார்த்துக்கொள்கிறேன் போ” என்றேன்.

ஐந்தாறு பிள்ளைகள். எல்லோருக்கும் 14 வயது முதல் 18-க்குள் இருக்கும். என் மகனிடம் “ஓவிய அலமாரிக்குச் சென்று இரண்டு ஸ்கெட்ச் நோட்டுக்கள் எடுத்து வா” என்றேன். குறிப்பிட்ட அந்த நோட்டில் ஓவியக் கல்லூரியில் பெண்களை- பெண்களின் உடலமைப்புகளை- பல கோணங்களில் நிர்வாணமாக வரைந்த ஸ்கெட்ச்கள் தீட்டப்பட்டு இருந்தன.
பிள்ளைகளை அழைத்து ஒவ்வொரு உறுப்பாகக் குறிப்பிட்டுக்காட்டி “இது மார்பகம் குழந்தைகள் பிறந்ததும் பால்சுரக்கும் பகுதி. இதில்தான் நீங்கள் பால் ஊட்டப்பட்டீர்கள். வயிற்றின் கீழ்ப்பகுதியில் தொப்புளுக்குக் கீழே சுருக்கங்கள் தெரிகிறதா? இது குழந்தைகள் அம்மா வயிற்றுக்குள் வளரும்போது வயிறு பெரிதாவதால் ஏற்படுபவை.

குழந்தை பிறந்துவிட்டபின் ஊதிய வயிறு சுருங்கும்போது- காற்றடைத்த பலூனிலிருந்து காற்று வெளியேறிவிட்டால் பலூன் எப்படிச் சுருங்கிவிடுகிறதோ அப்படி வயிறு சுருங்கியுள்ளது.

அதற்குக் கீழே உள்ளது பிறப்புறுப்பு. இதன் வழியாகத்தான் நீங்கள் பிறந்தீர்கள். காக்கா கொண்டாந்து போட்டுட்டுப்போச்சு, தவிட்டுக்கு உன்னை வாங்கிட்டு வந்தேன்-என்று அம்மாக்கள் சிறுவயதில் சொல்வதெல்லாம் உண்மையில்லை” என்று தெளிவுபடுத்தினேன்.
மறுநாள் அந்த டிராயருக்குள் இருந்த பிளேபாய் படங்கள் காணாமல் போய்விட்டன.
பிள்ளைகளுக்கு சிலிர்ப்பூட்டுகிற, கிரக்கத்தை ஏற்படுத்துகிற, மர்மமாகத்தோன்றுகிற, விடைகாண முடியாமல் தவிக்கிற டீன்ஏஜ் பிரச்சினைகளை வெளிப்படையாக நீங்கள் பேசி சந்தேகத்தைத் தீர்த்துவிட வேண்டும்.

தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை உன் தோழன்தான். எதையும் மறைக்காமல், மறுக்காமல் பிள்ளைகளோடு விவாதியுங்கள்.

தனித்தனியே என் பிள்ளைகளுக்கு அறைகள் இருந்தபோதிலும் கல்லூரி செல்லும் வரையில்கூட ஒரே படுக்கை அறையில்தான் குழந்தைகள் எங்களோடு தூங்கினார்கள்.
கணவன் மனைவிக்கு ‘பிரைவஸி’ வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் பெரிதாகக் கருதாமல் குழந்தைகளின் விருப்பப்படியே உடன் தூங்கினோம்.
குறிப்பாகப் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபின் தனி அறையில் தூங்கவிடாதீர்கள். பாட்டியுடனோ ஆயாவுடனோ அம்மாவுடனோ குழந்தை தூங்குவது வேண்டாத சிந்தனைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

பள்ளிக்கூடத்தில் பல் இளித்தவன், பஸ் ஸ்டேண்டில் டாட்டா சொன்னவன், ஆண்டு விழா மேடைகளில் ஆடிப்பாடியவன் இப்படி எவனாவது ஒருவன் பட்டாம்பூச்சியாய் அந்தப் பெண் மனதில் சிறகடித்து தூக்கத்தைக் கெடுப்பான். இப்போது எஸ்எம்எஸ் என்று ஒரு எமன். இப்படி ரகசியமாக அந்தரங்கமாக பட்டாம்பூச்சி பையனை நினைத்து கனவு காண்பதைத் தடுக்க ஒரே வழி அம்மாவுடனோ பாட்டியுடனோ குழந்தை தூங்குவதுதான்.
திருமணத்துக்கு ஆறுமாதம்வரை எங்கள் மகள் எங்களோடுதான் தூங்கினாள்.
இணைய தளம் என்கிற இன்டர்நெட் வலைத்தளம் இன்னொரு போதையான சமாச்சாரம். நல்லது கெட்டது எல்லாம் வெட்டவெளிச்சமாக, மூஞ்சியில் அடித்தாற்போல மனதைப் பாதிக்கின்றன.

கம்ப்யூட்டரை வீட்டு நடு ஹாலில் வைத்துவிடுவது ஒன்றுதான் சிறந்த வழி. தவறான எண்ணத்துடன் தப்பான காட்சிகளை ஹாலில் உட்கார்ந்து எந்தப் பிள்ளையும் பார்க்கமுடியாது.
‘நான்தான் டாக்டருக்குப் படிக்கலே. நீயாவது படி. நம்ம வீட்ல எஞ்சினியர் இருக்கார்,வக்கீல் இருக்கார். எப்படியும் நீ டாக்டராக வேண்டும்’ என்று உங்கள் விருப்பங்களை- அபிலாஷைகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ அந்தத் துறையில் படிக்க அனுமதியுங்கள்.

சூலூர் பள்ளியில் ஐந்தாவது ஆறாவது ரேங்க் படிப்பில் வாங்கிய நான் சென்னைக்கு ஓவியக்கலை படிக்க புறப்பட்டபோது படிப்பறிவில்லாத என் தாய் ‘உன் விருப்பம் எதுவோ அதைச் செய். என்னால் முடிஞ்சவரைக்கும் பாடுபட்டு பணம் அனுப்புகிறேன்’ என்று தைரியமூட்டி அனுப்பினார்
இன்று நான் வரைந்த காந்திஜி, நேரில் சென்று எட்டுமணி நேரம் வரைந்த தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை கோபுரங்கள், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற எண்ணற்ற ஓவியங்களை ‘அந்தளவுக்கு உயர்தரத்தில் இருபத்து நான்கு வயதில் வரைந்தவர்கள் இந்திய அளவில் இருபது பேர் கூட இருக்கமாட்டார்கள்’ என்றார் என் ஓவிய ஆசிரியர்.

லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கும்போது மூன்று பாடங்களில் அரியர்ஸ் வைத்து தடுமாறி பின்னர் தேர்ச்சி பெற்ற சூர்யா, திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக முத்திரை பதிக்க முடிந்திருக்கிறது.

பிள்ளைகளின் தனித்திறமை பார்த்து அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவியுங்கள்.
பணம் சம்பாதிக்கும் மெஷினாக உங்கள் பிள்ளையை உருவாக்கி பெருமைப் படாதீர்கள். அதிகாலைச் சூரியன், தேன் உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சிகள், குழந்தைகளின் மழலைகள், கோபுரங்களின் அழகு, நதியின் பிரவாகம், நண்பர்களின் அரட்டை, பெற்றோரின் பாசம், இசையின் அருமை, ஏழைக்கு உதவுதல், உள்ளிட்ட வாழ்க்கையின் உன்னதங்களை உங்கள் பிள்ளைகள் அனுபவிக்க கற்றுக்கொடுங்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் நல்வாழ்வு, அவர்கள் பெறும் வெற்றி- இவைதாம் பெற்றோரை கடைசி மூச்சுவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கும்.

Thursday, February 17, 2011

கலைஞரும் ஜெயகாந்தனும்



எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கிப் பேசிய விழாவில் நன்றி தெரிவித்துப்பேசிய ஜெயகாந்தன் கலைஞரின் ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று புகழப்போக, இந்தப் பேச்சு நிறைய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஜெயகாந்தன் எப்படி இம்மாதிரிப் பேசலாம். அதே நிகழ்ச்சியில் வைரமுத்து என்னென்னவோ பேசினார். அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் ஜெயகாந்தன் இப்படிப்பேசலாமா? என்கிற ரீதியில் நிறைய கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

ஜெயகாந்தன் பேசியது சரியா தவறா என்கிற வாதத்திற்குள் இங்கே நுழைய விரும்பவில்லை. ஆனால் ஜெயகாந்தன் பேசிய பேச்சிற்கு பதிலளித்து கலைஞர் பேசியிருக்கிறாரே அதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தனை வருட காலத்தில் கலைஞருக்கு வராத சிந்தனை இது. இதோ கலைஞரின் பேச்சைப் பார்ப்போம்.

“பாரதி விருதைப் பெற்ற அன்புக்குரிய நண்பரும் புரட்சி எழுத்தாளருமான அன்புக்குரிய ஜெயகாந்தன் பேசும்போது, ‘இது ஒரு பொற்காலம்’ என்று குறிப்பிட்டார். பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ-என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ அதுதான் பொற்காலம்.

இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் ‘நீ அப்படித்தான் சொல்லிக்கொள்வாய். ஏனென்றால் ஆட்சிப்பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை’ என்று நீங்கள் எண்ணக்கூடும். அல்லது சொல்லக்கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன், எதையும் விமர்சிக்கக் கூடியவர்-நாணயமாக விமர்சிக்கக் கூடியவர். நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர். அச்சத்திற்கு ஆட்படாமல் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

அப்படிப்பட்டவர் இந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று சொன்னதை, தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னாலான பதக்கத்தைவிட, அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களைவிட, சிறந்த பரிசாக எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக்கொள்கிறேன். நல்லவர்களுடைய வாழ்த்து, ஜெயகாந்தனைப் போன்ற வல்லுநர்களுடைய வாழ்த்து, இந்த ஆட்சிக்கு, எங்களுக்கு என்றென்றும் தேவை.ஒரு காலத்தில் எங்களைப்போன்றவர்கள் எழுதத் தொடங்கி, அவை எல்லாம் எங்கள் இயக்கத்தோழர்களால் படிக்கப்பெற்றபோது ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல; எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்.

எங்களுடைய எழுத்தை அன்றைய தினம் பாராட்டாதவர், இன்றைக்குப் பாராட்டுகிறார் என்றால் நாங்கள் அப்படிப்பட்ட பாராட்டைப் பெறுவதற்கு குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்கின்ற அளவிற்கு, அவர் எங்களைத் தாக்கி மறுத்து எழுதிய போதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.

ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது. உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால் நான் கொடுத்து வைத்தவன். நான் என்னையே பாராட்டிக்கொள்ளக்கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்கவேண்டுமென்று கருதுகின்ற சிலபேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்துப் பயன்படுமேயானால் இது பொற்காலமாகவும் இருக்கவேண்டாம்; கற்காலமாகவும் இருக்கவேண்டாம். தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்தனுடைய தமிழ்ப்பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பேசியிருக்கிறார் கலைஞர்.

ஜெயகாந்தனுக்குக் கொடுக்கப்பட்ட விருதைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதல்வரின் இந்தப்பேச்சு இருக்கிறது. ஏனெனில் தமிழில் படைப்பிலக்கியவாதிகளை அரசு மதிக்கும் வழக்கம் பல வருடங்களாகவே தமிழகத்தில் இல்லை. நான் பல இடங்களிலும், இந்த வலைப்பூவில் பல பதிவுகளிலும் குறிப்பிட்டுவருவதைப்போல், தற்கால இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அரசு கண்டுகொள்வதே இல்லை. தமிழ் மொழி என்றாலேயே இவர்களுக்கு சங்க இலக்கியம் மட்டும்தான்.

இலக்கியவாதிகள் என்றால் திருக்குறளில் ஆரம்பித்து சங்க இலக்கியம் வந்து பாரதிதாசனோடு நின்றுவிடுபவர்கள் மட்டும்தாம். இலக்கியக்கூட்டங்களில்கூட இவ்வளவு மட்டும்தாம் பேசுவார்கள். இதுவே போதும் என்கிற ஒரு மனோபாவம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த எல்லா உலகத்தமிழ் மாநாட்டிலும் இதுதான் நடந்தது. செம்மொழி மாநாட்டிலும் இதே கதைதான். இருபதாம் நூற்றாண்டு படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது மிகச்சிறிய மூலை. பொருட்காட்சிகளில் ஒரேயொரு அப்பளக்கடை போட்டுக்கொடுத்த மாதிரி!

தமிழில் படைப்பிலக்கியம் என்றால் திருக்குறளில் இல்லாததா? சிலப்பதிகாரத்தில் இல்லாததா? அகநானூறு சொல்லாத காதலா? புறநானூற்றில் இல்லாத வீரமா? நற்றிணையில் இல்லையா, குறுந்தொகையில் இல்லையா என்று கேட்டு பாரதிதாசன் பாடிய இரண்டு பாடல்களைச் சொல்லி முடித்துவிடுவார்கள்.

தமிழைத் தாண்டிய இலக்கிய உலகின் அங்கீகாரங்களுக்கு இது போதுமானதல்ல என்பது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்றே தெரியவில்லை.

ஞானபீடம் முதலான இலக்கிய அங்கீகாரங்கள் தற்கால படைப்புக்களுக்குத்தான் கொடுக்கப்படுமேயல்லாமல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் இலக்கியம் இருந்தது என்று சொல்லி அங்கேயே தீபாராதனைக் காட்டிக்கொண்டு இருந்தால் அந்த மொழிக்குக் கிடைக்காது. பழமையைப் போற்றவேண்டும், பாதுகாக்க வேண்டும், பெருமை கொள்ளவேண்டும். அதே நேரத்தில் புதுமையை உயர்த்திப் பிடிக்கவும் செய்ய வேண்டும். தமிழக அரசும், அரசு நிறுவனங்களும் இதனைச் செய்யவே இல்லை.

ஒரு மொழி என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கியம் படைத்ததோடு நின்றுவிடக்கூடாது. காலந்தோறும் அந்த மொழியில் படைப்பிலக்கியம் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். நாள்தோறும் அந்த மொழி தனக்கான பதிவுகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அப்படித்தான் தமிழும் நாள்தோறும் தனது இலக்கியங்களைத் தனது படைப்பிலக்கியக் குழந்தைகள் மூலம் அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த படைப்பிலக்கியவாதிகளை உலகிற்கு அடையாளம் காட்டுவதுதான் ஒரு அரசின் கடமை. அந்தக் கடமையைத் தமிழர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதற்கு பதில்கூற கடமைப்பட்டவர்கள் நாம்.

மலையாளத்திலும் வங்கத்திலும் கன்னடத்திலும் படைப்பிலக்கியவாதிகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் மரியாதைகளும் என்ன? அவர்களை ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் முன்னிலைப் படுத்துவதும் சிறப்பிப்பதும், அவர்கள் பெயர்களை நகரங்களுக்கும் கட்டடங்களுக்கும் சாலைகளுக்கும் சூட்டுவதும் எத்தனை?
எத்தனை எழுத்தாளர்களின், கவிஞர்களின் பெயர்களில் நகர்களும் சாலைகளும் இருக்கின்றன தெரியுமா கர்நாடகத்தில்?

ஒருமுறை தகழியுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “நான் பலமுறை சென்னை வரும்போது அகிலன் வீட்டில் தங்குவேன். அப்போதெல்லாம் அவரும் நானும் கடற்கரையில் வாக்கிங் போவோம். வீட்டிலிருந்து கிளம்பி திரும்ப வருகிறவரைக்கும் ஒரு இரண்டுபேர் அல்லது மூன்று பேர் மட்டும்தான் அகிலனைப் பார்த்து விஷ் பண்ணுவாங்க. கேரளத்துல எல்லாம் இம்மாதிரி நாங்கள் ஃப்ரீயா போய்வர முடியாது. அகிலனுக்கே இந்தக் கதி என்றால் மற்ற எழுத்தாளர்களுக்கு எப்படி? இங்கேயெல்லாம் வெறும் சினிமாக்காரனுக்கும் அரசியல்காரனுக்கும் மட்டும்தான் மதிப்பு. இதுக்கு உங்க அரசியலும் பெருமளவு காரணம்”
உண்மைதான். கர்நாடகத்தில் சிதானந்த மூர்த்திக்கு டாக்டர் பட்டம் வழங்கி அரசு சார்பிலே கொண்டாடுகிறார்கள். யு.ஆர்.அனந்தமூர்த்தியைத் தேடி மாநில முதல்வர் வீட்டிற்கே ஓடுகிறார். பல முக்கிய அரசு விழாக்களைக்கூட எழுத்தாளர்கள்தாம் தலைமைத் தாங்கி நடத்துகிறார்கள். எப்படியெல்லாம் சிறப்பிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடி சிறப்பிக்கிறது அரசு.

யோசித்துப் பாருங்கள் புதுமைப் பித்தனுக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் என்ன? பி.எஸ்.ராமையா எப்படியெல்லாம் போற்றப்பட்டிருக்கிறார்? கு.ப.ராவையும், கு.அழகிரிசாமியையும் இந்த அரசு எப்படி நினைவுகூர்கிறது?கல்கியையும் தி.ஜானகிராமனையும் சாண்டில்யனையும் எப்படிச் சிறப்பித்திருக்கிறார்கள்? அகிலனுடைய பெயரை எதற்குச் சூட்டியிருக்கிறார்கள்?நா.பாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?....அதிகம் போனால் இவர்களின் நூற்றாண்டு விழாக்கள் வந்தால் அவர்கள் குடும்பத்திற்கு சில லட்சங்கள் வழங்கி இவர்களின் நூல்கள் தேசியமயமாக்கிவிட்டதாக அறிவிப்பார்கள். அத்தோடு முடிந்தது இவர்களின் கதை.

இந்த நிலைமை தொடர்வதால்தான் இத்தனை ஆண்டுகளில் தமிழுக்கு இரண்டே இரண்டு ஞானபீடம்.

இத்தனூண்டு மொழிகளெல்லாம்கூட நோபல் பரிசு பெற்றுவருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான தமிழ்மொழி குறிப்பிட்ட எல்லையைக்கூட தாண்டமாட்டேனென்கிறது. காரணம்- தூக்கிப்பிடித்து உயர்த்த வேண்டியவர்கள் கண்டுகொள்வதேயில்லை. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதற்கு இங்கே திராவிடச் சிந்தனைகளும் திராவிட எழுத்துக்களின் தாக்கங்களும் ஏற்பட்டதே காரணம்.

இந்தத் திராவிடச் சிந்தனை நிரம்பியவர்கள் எல்லாம் மற்ற எழுத்துக்களை எழுத்துக்களாகவோ அதை எழுதும் எழுத்தாளர்களை படைப்பிலக்கியவாதிகளாகவோ ஏற்றுக்கொள்ளவே இல்லை. திராவிடச் சிந்தனையைப் பரப்பிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் எழுத்தின் வீர்யத்தை எல்லாம் கட்சியின் கொள்கையை ஒட்டியே பரப்பிக்கொண்டிருந்தார்களே தவிர, வாழ்க்கைக்கும் அதற்குமான தொலைவு மிக அதிகமாகவே இருந்தது. அதனால்தான் உலக இலக்கியங்களை ஒட்டி சமூகத்தையும் நிதர்சன வாழ்க்கையையும் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் திராவிட எழுத்தாளர்களை ஒப்புக்கொள்ளாமலும் அங்கீகரிக்காமலும் இருந்தார்கள். திராவிட எழுத்தாளர்கள், மற்ற எழுத்தாளர்களை ஒப்புக்கொண்டால் தங்களின் இருப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்பதற்காக இவர்களைத் திட்டமிட்டு அங்கீகரிக்காமலேயே இருந்தார்கள்.
அறுபத்தேழில் ஆரம்பித்த திராவிடக் கழகங்களின் ஆட்சி தமிழை இல்லந்தோறும் கொண்டுசென்று வளர்த்துக்கொண்டிருந்த எந்தவொரு தமிழ்ப் படைப்பாளியையும் அங்கீகரிக்கவே இல்லை. இவர்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்ததெல்லாம் வார, மாத, இதழ்கள்தானே தவிர, அரசோ அரசின் நிறுவனங்களோ அல்ல.

அதனால்தான் மற்ற மொழிகளிலெல்லாம் ஓரிரு நூல்கள் எழுதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் கூட பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையெல்லாம் மாநில அரசுகள் மத்திய அரசிடம் சிபாரிசு செய்து வாங்கித்தந்து அழகு பார்த்திருக்கும்போது இதுவரைக்கும் ஒரு தமிழ் எழுத்தாளருக்குக்கூட இப்படிப்பட்ட விருதுகளையெல்லாம் வாங்கித்தரும் முயற்சிகளை இந்தத் திராவிட அரசுகள் செய்யவே இல்லை என்பது எத்தனைக் கொடுமை என்பதை எண்ணப்பார்க்க வேண்டியுள்ளது. இதுபற்றிய குறைந்த பட்ச சிந்தனைக்கூட சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கும் சரி, அவர்களை மதிக்கும் வாசகவட்டத்திற்கும் சரி, வரவே இல்லை என்பது இன்னொரு வியப்பான விஷயம்.

கல்கி, அகிலன், ஜெயகாந்தன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களை மட்டுமல்லாது இவர்களை விடவும் பல மடங்கு பிரபலமான கவிஞர் கண்ணதாசனைக்கூட இவர்கள் இதே பட்டியலில் அடைத்து புறக்கணித்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களுக்குக்கூட இந்த விருதுகள் இல்லையென்றால் வேறு யாருக்காக? என்ற கேள்வி இத்தனை நாட்களும் ஊடகங்களால்கூட எழுப்பப்படவில்லை என்பது எத்தனை சோகமான விஷயம்?
எழுத்தாளர்கள் மட்டுமல்ல கௌரவிக்கப்பட வேண்டிய எந்தவொரு கலைஞரும் இந்த திராவிட அரசுகளால் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதற்கு மிக எளிய உதாரணம் மகாகலைஞன் சிவாஜி கணேசன். உலகின் மிகச்சிறந்த கலைஞனாகக் கொண்டாடப்படவேண்டிய சிவாஜி கணேசனுக்குக் கடற்கரையில் ஒரேயொரு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது.

கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ராஜ்குமாரை இந்த மாநிலம் எப்படிக் கொண்டாடுகின்றது என்பதை யார் வேண்டுமானாலும் கர்நாடகம் வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பெங்களூரில் மட்டுமல்ல கர்நாடகம் பூராவிலுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் பெயரில் நகர்கள்; சாலைகள், பல்வேறு இடங்களில் நினைவுச்சின்னங்கள், விருதுகள்...அவர் படங்கள் இல்லாத தெருக்கள்கூட கிடையாது என்கிற அளவுக்கு அவரைக் கொண்டாடுகிறது கர்நாடகம்.

ஆனால் திட்டம் போட்டே இங்கே சிவாஜி புறக்கணிக்கப்பட்டார். ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் தமது திறமையால் மட்டும்தான் நின்றாரே தவிர அவரை உயர்த்திப்பிடிக்க அரசு எதையுமே செய்யவில்லை. அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்படுத்தப்பட்டு அந்தப் போட்டியில் சிவாஜி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு எம்ஜிஆர் முன்னிலைப் படுத்தப்பட்டார். இது வெறும் வணிகப்போட்டி மட்டுமல்ல.இதையும் தாண்டிய அரசியல் வன்மம் அதில் இருந்தது. அரசியலைப் புறந்தள்ளி ஒரு கலைஞனாக சிவாஜி கொண்டாடப்பட்டிருந்தால் இன்றைய அரசியல் சீர்கேடே தமிழகத்திற்கு வந்திருக்காது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார்.

சிவாஜி எந்தளவு எம்ஜிஆரை வைத்துப் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஒரு படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகராக மத்திய அரசினால் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அப்போது அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடனடியாக டெல்லி அனுப்பப்பட்டு சிவாஜி பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரிக்ஷாக்காரன் என்ற படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி. இதனை நெடுஞ்செழியனே சொல்லப்போக “அப்படியானால் அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம்” என்று ‘ஒன்றும் தெரியாத’ எம்ஜிஆர் அந்தப் பட்டத்தைத் துறந்த கூத்தெல்லாம் நடந்தது.
சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் அரசு என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெரியாதவரா கலைஞர்? ஆனாலும் அவர்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களை அவர் இன்னமும் மறக்கவில்லை என்பதைத்தான் அவரது மவுனம் காட்டுகிறது. இந்த இரண்டு பேரைப்பற்றிப் பேச வரும்போதெல்லாம் “என் ஆருயிர் நண்பர் சிவாஜி” என்றும் “என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன்” என்றும் சொல்லி அவர்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு தமது கடமை முடிந்தது என்று கலைஞர் கடந்து செல்லக்கூடாது.
தம்மைப் பற்றி மிக மோசமாக, மிகக் கேவலமாகப் பேசிய எத்தனையோ பேரை மன்னித்து மீண்டும் தமது பக்கத்தில் சேர்த்துக்கொண்டு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று எத்தனையோ பேரை உதாரணங்களாகச் சொல்லலாம். சிவாஜி விஷயத்திலும் கண்ணதாசன் விஷயத்திலும் கலைஞர் தமது கோபத்தை உதறித்தள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் பின்னர் வரும் அரசுகள் நிச்சயம் காலத்தால் அழியாத இந்த மகா கலைஞர்களைக் கொண்டாடும்பொழுது எத்தனையோ செய்த கலைஞர் ஏன் இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் எழுப்பப்படும்.

கலைஞரால் ‘என் ஆருயிர் நண்பர்’ என்று புகழப்பட்ட கவியரசருக்கு கலைஞர் ஆட்சியிலிருந்தபோது ஒன்றும் செய்யவில்லை.எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரைத் தேடிச்சென்று அரசவைக்கவிஞராக நியமித்தார். இத்தனைக்கும் அன்றைக்கு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் நல்ல நட்பு இல்லை. நீண்ட காலமாக திரைப்படங்களில் கூட கண்ணதாசனைத் தவிர்த்து வாலியையும் புலமைப்பித்தனையும்தாம் பாடல்கள் எழுதவைத்திருந்தார். ஆனாலும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் சந்தர்ப்பங்களை எம்ஜிஆர் என்றைக்கும் எந்த விஷயத்திலும் கோட்டை விடுவதில்லை. கண்ணதாசனை அரசவைக்கவிஞராக ஆக்கியதில் மட்டுமல்ல, ஈழ விவகாரத்தில் எத்தனையோ குழுக்கள் இருக்க பிரபாகரனைத் தேர்ந்தெடுத்து ஆதரித்ததிலும் எம்ஜிஆர் பாராட்டப்படவேண்டிய முடிவுகளையே மேற்கொண்டார். இதற்குக் காரணம் மக்களின் மதிப்பீடு என்னவோ அதனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அவர் செயல்பட்டார் என்பதுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜெயகாந்தனைப்பற்றிய கலைஞரின் பேச்சு அவர் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன். படைப்பிலக்கியவாதிகளையும் மாபெரும் கலைஞர்களையும் மற்ற மாநில அரசுகள் போல் உயர்த்திப்பிடியுங்கள். அவர்களுக்கு வேண்டிய அங்கீகாரங்களை மாநில அரசு வழங்குவதோடு மத்திய அரசிலிருந்து வரவேண்டிய சிறப்புக்களையும் வாங்கித்தருபவர்களாக இருங்கள். இலக்கியத்திலும் கலைத்துறையிலும் கட்சி அரசியல் வேண்டாம்.

இனிமேல் படிப்பகங்களுக்கும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களுக்கும் தற்காலப்படைப்பாளர்களின் பெயர்களைச் சூட்டுங்கள். கல்கி,அகிலன், ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,கண்ணதாசன்,சுரதா,புதுமைப்பித்தன் என்றெல்லாம் பெயர்களைச் சூட்டுங்கள்.

சுஜாதாவின் பெயரை நீங்கள் ஏதாவதொரு இலக்கிய நிறுவனத்துக்குச் சூட்டினால் உங்களை இளைஞர் சமூகம் எப்படிக் கொண்டாடும் தெரியுமா!

ஜெயகாந்தனைப்பற்றி நீங்கள் பேசியிருக்கும் பேச்சுக்கள் சாதாரணமானவை அல்ல. படைப்பிலக்கியம் மீது நீங்கள் கொண்டிருந்த பார்வை அடியோடு மாறியிருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.

அரசு முறையில் இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்