Tuesday, July 22, 2014

சிவாஜிகணேசன் யார்?




சிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம். ஆனால் சிவாஜியைப் பொறுத்தவரை அவருடைய துரதிர்ஷ்டம் அது. அவர் வெளிநாட்டிலோ, குறைந்தபட்சம் இந்தியாவின் வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் சிவாஜி எந்த இடத்திலோ வைத்துக் கொண்டாடப்பட்டிருப்பார். அது சிவாஜிக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருந்திருக்கும் என்று.

சிவாஜி தமிழ்நாட்டிற்கு எதற்குத் தேவைப்பட்டார் என்றால், எம்ஜிஆருக்கு parallel ஆக ஒரு நடிகர் தேவைப்படுகிறார்.

அது சிவாஜி.

இப்போது சிவாஜியா எம்ஜிஆரா என்ற கேள்வி வருகிறது.

“எம்ஜிஆர்” என்று பதிலளிக்கிறது தமிழ்நாடு.

மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு சிவாஜி விஷயத்தை மட்டும் பார்க்கும்போது சிவாஜி கணேசன் யார் என்பதையே இன்னமும் பெரும்பாலான தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது. எத்தனையோ நடிகர்களில் இவரையும் ஒருவராக மக்கள் எண்ணிவிட்டார்களோ என்றே படுகிறது.

எங்கேயோ தொலைதூரத்தில் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பிவந்து எம்ஜிஆரின் சமாதியில் இன்னமும் அவர் கட்டியிருந்த கடிகாரத்தின் டிக்டிக்டிக் ஒலி கேட்கிறதா என்று காதுகளை வைத்து கேட்டுச்செல்லும் கூட்டத்திற்கு சிவாஜிகணேசன் தேவையில்லை என்பது புரிந்துகொள்ளமுடிந்ததுதான்.

ஆனால் அவர்களை விடவும் மேம்பட்டு சமூகத்தின் சில விதிகளை நிர்ணயிக்கப் பிறந்தவர்கள்-
நம்முடைய பாரம்பர்யத்தையும் கலைகளையும் நமக்குத் தேவையான விழுமியங்களையும் அடையாளப்படுத்த இருப்பவர்கள்-

வரலாற்றைப் பேணிக்காத்து தொகுத்தளிப்பவர்கள்………………….. போன்ற மேல்நிலை மக்களுக்கும் சிவாஜி என்பவர் ‘மேலும் ஒரு நடிகர்’ மட்டும்தானா, திரையுலகில் வந்து போட்ட வேடத்தை நடித்துக்கொடுத்துவிட்டு சம்பாத்தியம் வாங்கிக்கொண்டு சென்றவர்தானா –

இப்படித்தான் சிவாஜியைப் பற்றி நினைக்கிறார்களா? என்பது உண்மையிலேயே புரியவில்லை.


சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், 

சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம், 

சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன், 

சிவாஜி நடிப்புலகின் டிக்ஷனரி, 

தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக இங்கே ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை. 

‘அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை. அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.

பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல.

கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள். (எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி).

 மற்ற மாநிலங்களில் முத்துராமன், ஜெய்சங்கர் அளவு நடிகர்கள் எல்லாரும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என்றெல்லாம் முன்னேறிக்கொண்டிருக்க சாதாரண பத்மஸ்ரீக்கே பல ஆண்டுக்காலம் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது சிவாஜிகணேசனால்.

தமிழகத்தைப் பல ஆண்டுக்காலம் ஆட்சி செய்யும் வாய்ப்புப் பெற்ற கலைஞர், சிவாஜி என்ற மகா கலைஞனுக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிக அரிய கலைஞர்கள் என்ற வகையில் எவ்வித அரசு மரியாதைகளையும் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை.


சிவாஜியும் கண்ணதாசனும் எவ்வளவு பெரிய கலைஞர்கள்………….”கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர்…………………………! 
பெரிய கவிஞர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் மக்கள் அபிமானம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. உங்கள் கண்ணதாசன் மக்களிடையே மிகப்பெரும் செல்வாக்கு பெற்றவர். 

அவருக்கு ஏன் உங்கள் அரசுகள் சரியான மரியாதை தரவில்லை?” என்று ஒரு சில கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் விசாரித்திருக்கிறார்கள். எம்ஜிஆரால் தரப்பட்ட அரசவைக் கவிஞர் என்ற ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் அவருக்கு எந்தவித அரசாங்கச் சிறப்பும் கிடைத்திருக்காது.
 கலைஞரைப் பொறுத்தவரை, தேவைப்பட்டபோதெல்லாம் ‘என்னுடைய ஆருயிர் நண்பன் சிவாஜி நாங்கள் இருவரும் ஒரே இலையில் உணவு உண்டவர்கள்; என்னுடைய ஆருயிர் நண்பன் கண்ணதாசன். நாங்கள் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள்’ என்கிறமாதிரி சென்டிமெண்ட் டச் கொடுத்துப் பேசிவிட்டுப் போய்விடுவாரே தவிர அந்த இரண்டு பேருக்குமே அங்கீகாரமோ அரசு மரியாதையோ அளித்ததே இல்லை.

சிவாஜிக்கு கடற்கரைச் சாலையில் சிலை அமைத்தது என்பது தவிர்க்கமுடியாத காலச்சூழலின் கட்டாயத்தினால் நிகழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

சிவாஜிக்கு அந்த சிலையாவது அமைத்தார். கண்ணதாசனுக்கு எதையுமே அவர் செய்யவில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.


சிவாஜி என்பவர் திரைப்பட உலகிற்குக் கிடைத்த எத்தனையோ நடிகர்களில் ஒருவர் அல்ல.

சில கலைஞர்கள் உருவாகிறார்கள்.

சில கலைஞர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

சிலர் மட்டுமே தோன்றுகிறார்கள்.

சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல;  திரைப்படக் கலைக்காகவே ‘தோன்றியவர்களில்’ ஒருவர் சிவாஜிகணேசன்.


சிவாஜிக்கு அடுத்து சிறந்த நடிகராகப் போற்றப்படும் கமலஹாசனை வைத்தே இதற்கான உதாரணத்தைச் சொல்லலாம்.

ஏனெனில் இன்றைய இளையதலைமுறை முற்று முழுதாக அறிந்த ஒரு நடிகர் கமலஹாசன்.

கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்றுவரை நடித்துவருபவர். ஒரு ஐம்பது அறுபது படங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகச்சிறந்த இயக்குநர்களின் கைகளுக்குச் சென்ற பின்னர்தான்-

பாலச்சந்தரால் பலமுறை புடம் போடப்பட்டு,

பாரதிராஜாவால் மிக அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டு,

மணிரத்தினத்தினால் சிறந்த தொழில்நுட்பமும் அழகிய திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டு திரும்பத் திரும்ப செதுக்கப்பட்ட பின்னரே அவரால் தம்மை ஒரு ‘சிறந்த நடிகராக’ நிலைநிறுத்திக்கொள்ளவும், மற்றவர்களைத் தம்மைப் பற்றிப் பேச வைக்கவும் முடிகிறது. அதற்கு முன்னால் கமல் நடித்த பல படங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.

 பெரிய நடிகராகவும், குறிப்பிட்ட நடிகராகவும் கமல் வந்தபிறகு தன்னை மிகுதியான அளவிலே செதுக்கிக்கொண்டார் என்பதும் புடம் போட்டுக்கொண்டார் என்பதும் உண்மைதான்.

 ஆனால் படங்களில் ஒரு புதுமையைச் செய்யவேண்டும் என்று நினைத்தாலோ, புதுமையான பாத்திரத்தில் தோன்ற வேண்டும் என்று நினைத்தாலோ அவருக்கு இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன.

முற்றிலும் புதுமையான ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கவேண்டும் என்று கமல் 
விரும்பினாரென்றால் உடனடியாக ஒரு ஐம்பது, ஏன்? இருநூறு டிவிடிக்களைப் பார்த்து ஒவ்வொரு காட்சியும் இப்படித்தான் இருக்கவேண்டும் இந்தக் காட்சியையே இப்படி வைத்துக்கொள்ளலாம். அல்லது, இந்தக் காட்சியில் இப்படி வைத்துக்கொள்ளலாம், இந்தக் காட்சியை இப்படிச் மாற்றிக் கொள்ளலாம், இந்த சீனை இப்படி வைத்துக்கொள்ளலாம் என்றெல்லாம் செப்பனிட்டு அழகுபடுத்தி முடிவெடுக்கும் வசதிகள் பெருகிவிட்டன.

மேக்கப் முதற்கொண்டு அத்தனை சினிமா உபகரணங்களையும் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் வசதி வந்துவிட்டது.

அதற்கான தொழில் நுட்பக்கலைஞர்களையும் அங்கிருந்தே கூட்டிவந்து எத்தனைச் செலவானாலும் ஏற்றுக்கொண்டு கமலால் அல்லது இன்னொரு நடிகரால் இந்த இடத்தை மிகமிகப் பிரமாதமாய் பூர்த்திசெய்துவிட முடிகிறது.

அதுமட்டுமல்ல, அப்படிச் செய்து ‘எடுக்கப்பட்ட’ படத்தை உடனடியாக அந்த இடத்திலேயே அப்போதேயே ரிகர்சல் பார்த்து சரியாக வரவில்லையென்றால் உடனே மறுபடியும் தான் நினைத்தமாதிரி உருவாக்கிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதனால் பார்க்கிறவர்களை ‘வியக்கவைக்கும்’ அளவுக்கு திரும்பத் திரும்ப வரும்வரைக்கும் அவர்களால் அதனைப் படமாக்கமுடியும்.

ஆனால் சிவாஜியின் காலம் அதுவல்ல.


நாடக மேடை………….. நாடக மேடையிலிருந்து நேரடியாக திரைப்பட உலகம் என்றிருந்த காலம்.


நாடக மேடையின் கருத்துருவாக்கம் என்பது தாங்கள் கேட்ட நாடோடிக் கதைகளிலிருந்தும் புராண இதிகாசங்களிலிருந்தும் ராஜா ராணி கதைகளிலிருந்தும் பாத்திரங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொண்டு அதற்கேற்ப படைப்புக்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலம்.


சமூக நாடகங்களுக்கான காட்சிகளும் கருப்பொருள்களும் அந்தந்த வட்டத்துக்குள்ளேயே உருவாகிக்கொண்டிருந்த காலம்தான் அது.


அந்தக் காலத்தின் சொற்ப நீட்சியிலேயே வந்து நடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது தலைமுறையில் வருகிறவர் சிவாஜி.

சிவாஜியின் காலத்தில் சினிமா என்பது ஏறக்குறைய ஒரு முழு வடிவத்தை அடைந்துவிடுகிறது என்பது உண்மைதான். ஆனால் அதனை மேலும் மேலும் மெருகேற்றி மக்கள் வியப்புறும் கலையாக கொண்டுசெல்லும்  பெரும் பொறுப்புக்களைச் சுமக்க வேண்டிய தோள்களாக சிவாஜியின் தோள்களும் இருக்கின்றன.

சிவாஜிக்கு சமமாக இந்திப் படவுலகில் திலீப்குமார், ராஜ்கபூர், குருதத் போன்றவர்களும், தெற்கில் நாகேஸ்வரராவ், சத்யன், ராஜ்குமார் போன்றவர்களும் இருந்தார்கள் என்றாலும் இவருடைய நடிப்பின் ‘வீச்சுக்களுக்கு’ அவர்கள் என்றைக்குமே மிகப்பெரும் ரசிகர்களாகவும், 
வியப்பெய்தியவர்களாகவும் பல சமயங்களில் இவரைப் புகழ்ந்துரைத்தவர்களாகவும் இவரை அண்ணாந்து பார்த்தவர்களாகவும்தான்  இருந்திருக்கிறார்கள். 

பல சமயங்களில் ‘இவர் நடித்த வேடங்களை ஏற்க முடியாது; அந்த அளவு எங்களால் நடிக்கமுடியாது’ என்று பத்திரிகைகளிலேயே அந்த மிகப்பெரும் நடிகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததும் உண்டு. தவிர-

சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.

புராண இதிகாசப் பாத்திரங்கள், ராஜா ராணி பாத்திரங்களுக்கு அன்றைக்கு சிவாஜிக்கு முன்னோடியாக அவருக்கு முன்பிருந்த நாடக நடிகர்கள் இருந்தார்கள் என்பதை ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் அந்த நாடக நடிகர்கள் அவர்கள் நாடகங்களில் செய்ததெல்லாம் அந்த வேடத்தைப் போட்டுக்கொண்டு தோன்றுவதும், பாடல்கள் பாடிவிட்டுப் போவதும்தான்.

இவைமட்டுமே அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.

பாட்டுப்பாடும் பாகவதர்கள் மட்டும்தான் சினிமாவில் நடிக்கமுடியும் என்றிருந்த நிலைமை லேசுபாசாக அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைபட ஆரம்பித்த காலத்தில் சிவாஜியின் வருகைதான் அதை முற்றிலுமாக ஒரேயடியாக உடைத்துப்போட்டு இனிமேல் ‘நடிகர்கள்தாம்’ சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்கமுடியும் என்ற இலக்கணம் உறுதியாக வகுக்கப்படுகிறது. 

சிவாஜி வருகிறார்.

முகபாவனைகளைக் கொண்டு வருகிறார்.

‘பாடி லாங்க்வேஜ்’ என்று சொல்லப்படும் ‘உடல் மொழியை’ எல்லாப் பாத்திரங்களிலும் கொண்டுவருகிறார்.

பேசும் வார்த்தைகளில் ஏற்றத் தாழ்வுகளையும், உச்சரிப்பில் வேறு வேறு உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வித்தியாசங்களைக் கொண்டுவருகிறார்.

நடை உடை பாவனைகளில் உயிர்ப்பைக் கொண்டுவருகிறார்.

 நவரச பாவங்கள் எத்தனை உண்டோ அத்தனையையும் கண்களில் மட்டுமே காட்டமுடியும் என்ற சினிமாவுக்கான சேதியையும் கொண்டுவருகிறார்.

அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய்-

ஒரு பரிபூரணக் கலைஞராய்த் தம்மை நிலைநிறுத்திக்கொண்டுவிடுகிறார்.

எல்லாவித உணர்வுகளையும்….. அது சோகமாய் இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாய் இருந்தாலும் சரி, 

வலியாய் இருந்தாலும், வேதனையாய் இருந்தாலும் சரி-

அதனை உணர்ந்து உள்வாங்கி உள்வாங்கியதை நுட்பமாக வெளிப்படுத்தும் திறமையும் கலையும் 
அவரிடம் இருந்தது.

படைப்பாற்றலின் வலியோடு அவர் எப்போதும் வாழ்ந்துவந்தவர் என்பதை அவர் நடிக்கும் சோகக் காட்சிகளிலிருந்து அறிய முடியும்.


அவலத்தின் அத்தனை வலிகளையும் தன்னுள் ஏற்று நடித்த நடிகர் அவர்.


அதனால்தான் உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜிகணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அழுத மனிதர்கள் மிகமிக அதிகம்.

மக்களை சுலபமாக வசீகரிக்கும் சூத்திரங்களையும், முட்டாளாய் அடிக்கும் தந்திரங்களையும் கற்றுக்கொண்டு அதனை மக்களிடம் பிரயோகித்து வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தவரல்ல அவர்.

படைப்பின் வலிகளை எப்போதுமே சுமந்துகொண்டிருக்கத்  தயாராய் இருந்தவர். 

அதனால்தான் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறான பாத்திரங்கள்,

வெவ்வேறான கதைக்களன்கள்,

வெவ்வேறான சூழல்கள் என்று தேடித் தேடி நடித்துக்கொண்டே இருக்க முடிந்தது அவரால்.
வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது.


வசன உச்சரிப்பு என்பது வாயைத் திறந்து வெறுமனே சேதி சொல்லுவது அல்ல என்பதை முதன் முதலாக தமிழர்கள் மூலம் இந்தியத் திரைக்கு அழுத்தம் திருத்தமாக அறிவித்தவர் சிவாஜிதான்.


தாய்மொழியை அதன் சரியான அர்த்தபாவங்களோடு, சரியான உச்சரிப்பு வேறுபாடுகளோடு அதன் கம்பீரம், அழகு இவையெல்லாம் கெடாமல் திரைக்குக் கொண்டுவந்திருக்கும் நடிப்புக்கலைஞர்கள்-

சிவாஜியைத் தவிர எத்தனைப்பேர் இருக்கக்கூடும்?

பாத்திரங்களைத் தத்ரூபமாகப் படைத்துக்காட்டும் எத்தனையோ நடிகர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் போலவே அவர்களால் வாழ்ந்துகாட்ட முடியும். 

ஆனால் தாய்மொழியைக்கூட சரிவர உச்சரிக்க முடியாது அவர்களால்.

நடிப்பை மறைத்துவிட்டு அவர்கள் பேசும் மொழியை மட்டும் கேட்டால் அவர்கள் பேசுகிறார்களா அழுகிறார்களா என்பது தெரியாது.

ஒன்று, குரலில் எந்தவித பாவங்களும் இருக்காது.

அல்லது வேண்டிய அளவில் அந்த பாவங்கள் அங்கே வெளிப்பட்டிருக்காது.

ஆனால்

நவரசத்தில் எத்தனை பாவங்கள் உள்ளனவோ அவை அத்தனையையும் பேச்சிலும் அதன் உச்சரிப்பிலும் கொண்டுவந்தவர் சிவாஜி.

அழுகையின் ஜீவனாகட்டும், 

உறவுகளின் நெகிழ்ச்சியாகட்டும், 

வலியின் வேதனையாகட்டும்,

ஆனந்தத்தின் சிதறலாகட்டும், 

பாசத்தின் துடிப்பாகட்டும், 

வீரத்தின் கூர்மையாகட்டும், 

வெற்றியின் ஓங்காரமாகட்டும், 

எஜமானின் மிரட்டலாகட்டும், 

அடிமைகளின் குழைவாகட்டும், 

நகைச்சுவையின் மதுரமாகட்டும், 

அரசனுக்கேயுரிய ராஜ கம்பீரமாகட்டும்-


அத்தனையையும் குரலிலேயே  கொண்டுவந்த மகா கலைஞன் உலகத் திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.


எத்தனை எத்தனை உணர்ச்சிகள் உள்ளனவோ அத்தனை உணர்ச்சிகளையும் அந்த 

உணர்ச்சிகளுக்கேயுரிய ஒலிக்குறிப்புகளுடன்,


ஏற்ற இறக்கங்களுடன்,


நேர வித்தியாசங்களுடன்,


சிறப்புத் தொனிகளுடன் வெளிப்படுத்தும் நுணுக்கம் அந்த மகா கலைஞனுக்கு மட்டுமே சொந்தம்.

அதனால்தான் பராசக்தி, திரும்பிப்பார், மனோகரா, ராஜாராணி, மக்களைப் பெற்ற மகராசி, தெனாலிராமன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, பலே பாண்டியா, சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர், பாலும்பழமும், கர்ணன், கைகொடுத்த தெய்வம், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ராஜபார்ட் ரங்கதுரை, நவராத்திரி, வசந்த மாளிகை, வியட்நாம் வீடு, என்று தங்கப்பதக்கம் வரையிலும் வசன ராஜாங்கத்தை விதவிதமாக நடத்த அவரால் முடிந்தது.

இந்தப் படங்களின் வசன உச்சரிப்புகளைக் கேட்கும்போதுதான் ஒரு மனிதனால், ஒரு கலைஞனால் இப்படியெல்லாம் ஒரு மொழியை உச்சரிக்க முடியுமா என்ற வியப்பு மேலிடுகிறது.

இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர 

யாருமே இல்லை.


எங்குமே இல்லை.


எந்த மொழியிலும் இல்லை.


இதற்காக சிவாஜிக்கு இத்தகைய வசனங்களை எழுதித்தந்தவர்களையும் நாம் இங்கு நன்றியுடன் நினைவு கூரவேண்டியவர்களாக இருக்கிறோம்.

கலைஞர் கருணாநிதி, சக்திகிருஷ்ணசாமி, ஏஎஸ்ஏ சாமி, ஏபிநாகராஜன், ஸ்ரீதர், கேஎஸ்கோபாலகிருஷ்ணன், எம்எஸ்சோலைமலை, ஆரூர் தாஸ், பாலமுருகன், மல்லியம் ராஜகோபால், வியட்நாம்வீடு சுந்தரம், என்று தங்கப்பதக்கம் மகேந்திரன்வரை இந்தப் பட்டியல் நீள்கிறது.

வசன உச்சரிப்புக்கு அடுத்து பாடலுக்கு வாயசைப்பு.

நடித்தவர்களே பாடிக்கொண்டிருந்த காலம்போய் பின்னணிக்குரல் ஆரம்பித்தபிறகு பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப வாயசைத்தவர்கள் சிவாஜிக்கு இணையாக யாருமே இல்லை.
ஆரம்பத்தில் சில பாடல்களுக்கு சிதம்பரம் ஜெயராமன் குரலுக்கு வாயசைத்ததும், மிகவும் பிற்காலத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கும், யேசுதாஸ் மலேசியா வாசுதேவன் குரல்களுக்கும் வாயசைத்ததையும் நீக்கிவிட்டுப் பார்த்தோமானால் டிஎம்சௌந்தரராஜனின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும்.

அத்தனைத் துல்லியம், அத்தனைப் பொருத்தம், அத்தனை கனகச்சிதம், அத்தனை உணர்வுபூர்வம்.
இதனை வெறும் வாயசைப்பு என்று மட்டும் பார்க்கமுடியாது.

பாடலின் வரிகள் உணர்த்தும் உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நிறுத்தித்தான் வாயசைப்பார். அதற்கேற்ப உடல் அசைவுகளில் உடல்மொழி வெளிப்படும்.,

கண்கள் பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயாராகிவிடும்.

பாடலின் வரியில் உச்சகட்ட சோகத்தை வெளிப்படுத்தும் வரிகள் வரும்போது வெளியேறுவதற்காக அவர் கண்களில் சில சொட்டுக் கண்ணீர் தயாராகக் காத்திருக்கும். கண்ணதாசனின் எந்த வரிக்கு அந்தக் கண்ணீர் கண்களிலிருந்து இறங்கி கன்னத்தில் வழிய வேண்டுமென்பது அந்தக் கலைஞனுக்குத் தெரியும்.


பாடலில் அந்த வார்த்தை வரும்போது அந்தக் கண்ணீர் சட்டென்று கண்களிலிருந்து இறங்கி கன்னத்தின் வழியே சரசரவென்று வழியும்.


இம்மாதிரியான பல நுணுக்கங்கள் வெகுஜன பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை.


ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு அந்தப் பாத்திரமாகவே மாறி அந்தப் பாத்திரத்தின் வாழ்க்கையில் வரும் திருப்பங்கள், உணர்வுகள், சின்னச்சின்ன அசைவுகள், நினைத்த மாத்திரத்தில் கோபம், அழுகை, சிரிப்பு, பாசம், மகிழ்ச்சி என்று மட்டுமல்லாது அந்தப் பாத்திரத்திற்கான பண்புகள் எத்தனை உள்ளனவோ அவை அத்தனையையும் கொண்டுவந்த நடிகன் இவருக்கு முன்பு தமிழ்த்திரையுலகில் யாரும் இல்லை.

தில்லானா மோகனாம்பாளில் ஒரு நாதஸ்வரக்கலைஞனின் வேடமாகட்டும்,

காவல் தெய்வத்தில் மரமேறி வேடமாகட்டும்,

மிருதங்கக் கலைஞனுடைய வேடமாகட்டும்,

டாக்டர் வேடமாகட்டும்,

அரசன் வேடமாகட்டும்,

சரித்திர வீரர்களின் வேடமாகட்டும்,

பிச்சைக்காரன்- பைத்தியக்காரன் வேடமாகட்டும்,

அந்த வேடங்களுக்குரிய துல்லியமான பண்புகளை உடல் மொழியிலும் முகத்திலும் பேச்சிலும் கொண்டுவந்தவன் அந்தக் கலைஞன்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அதற்கான விளக்கத்தை இந்தக் கலைஞனின் ஒரு படத்திலிருந்து பார்க்கமுடியும்.

புதிய பறவை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல். சௌகார் ஜானகி மேடையில் ஆடிக்கொண்டு பாடலைப் பாடிக்கொண்டிருக்க இவர் ஒரு டைனிங் டேபிளில் அமர்ந்து கையில் சிகரெட் புகைய பாடலைப் பார்த்தபடி இருப்பார். அவ்வளவுதான்.

கவனியுங்கள்…………..வேறு எந்த நடிப்பும் இல்லை.

ஆனால் இவர் அந்த சிகரெட்டை இழுத்து இழுத்து வெளியேற்றும் ‘புகை வளையங்கள்தாம்’ அந்தக் காட்சி மொத்தத்துக்கும் ‘நடிக்கும்’.

ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு விதமான ‘நடையை’ நடந்துகாட்டிய நடிகனும் இவரைப்போல யாருமே இல்லை.


பாகப்பிரிவினையில் ஒரு நடை,

திருவிளையாடலில் ஒரு நடை,

ஆலயமணியில் ஒரு நடை,

பாலும் பழமும் படத்தில் ஒரு நடை,

பாபு படத்தில் ஒரு நடை,

உயர்ந்த மனிதனில் ஒரு நடை,

பார்த்தால் பசிதீரும் படத்தில் ஒரு நடை, என்று நடக்கும் நடையில் இத்தனை வித்தியாசங்களைக் காட்டியிருக்கக்கூடிய நடிகர்கள் நமக்குத் தெரிந்து எங்குமே யாருமே இல்லை.

கர்ணன் படத்தில் தேவிகாவின் ‘கண்ணுக்குக் குலமேது’ பாடல் ஆரம்பத்தின் போது, அங்கிருந்து அப்படியே வந்து அரியாசனத்தில் அமர்வதற்காக ஒரு நடை நடந்துவருவார் பாருங்கள்…………அப்படியே அள்ளும்.

அந்தக் கம்பீரத்திற்கு ஈடு இணையே கிடையாது.

நமக்கு முன்னே வாழ்ந்து காட்டிய மனிதர்களை அப்படியே தத்ரூபமாக கொண்டுவருவதற்கு அசாத்திய திறமை வேண்டும்.

அலெக்சாண்டர், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று வரலாற்று மனிதர்களைக்கூடக் கொஞ்சம் கூட்டிக் குறைத்து செய்துகொள்ளலாம்.
ஆனால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் போன்ற பாத்திரங்களை அப்படியே திரையில் கொண்டுவருதல் எளிதல்ல. நமக்கு சற்று முன்னால் வாழ்ந்த மனிதர்களின் வேடங்களையும் ஏற்றுச் செய்யும் தைரியம் அவருக்கு இருந்தது. அந்தப் படம் வெளிவந்ததும் படத்தைப் பார்த்த வ.உ.சி குடும்பத்தினர் “அப்படியே அப்பாவைப் பார்த்தோம்” என்று தியேட்டரிலேயே அழுததுதான் சிவாஜியின் முத்திரை.

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தின் போது உணர்வுபூர்வமான நீண்ட வசனங்களை மூச்சுவிடாமல் பேசிவிட்டு கிரீன் ரூமுக்கு வரும் அவர், வந்ததும்  தொண்டை பாதிக்கப்பட்டு இருமி ரத்தம் கக்குவார் என்றும்-


வெந்நீரில் வாய் கொப்பளித்துக்கொண்டு அடுத்த காட்சிக்குச் செல்ல தயாராகிவிடுவார் என்றும் சொல்வார்கள்.


இந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் சிவாஜியை உச்சத்தில் நிறுத்தியிருந்தன.


ஒரு நடிப்புக் கலைஞன் என்பவன் எப்போதும் புதிய புதிய சோதனைகள் செய்துபார்க்கத் தயாராக இருக்கவேண்டும் என்ற சித்தாந்தத்தைத் திரையுலகில் கொண்டுவந்தவர் சிவாஜிதான்.

எத்தனை எத்தனைப் பாத்திரங்கள்….. அத்தனைக்குள்ளும் சர்வசாதாரணமாகப் புகுந்து வெவ்வேறு பரிமாணங்களை அந்தப் பாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்துவதன் மூலம் பாத்திரங்களை வடிவமைக்கும்  சாமர்த்தியத்தை-

ஒரு கலை வடிவமாகவே ஆக்கிக்காட்டியவர் அவர்தான்.

எத்தனை உச்சத்தில் இருந்தபோதும் பாத்திரத்தின் தன்மையைத் தன்னுடைய இமேஜூடன் பொருத்திப் பார்த்து போலிப் பகட்டுகள் செய்துகொள்ள அவர் என்றுமே தயாராக இருந்ததில்லை.

எத்தனை அவலட்சண மேக்கப்பும் போட்டுக்கொண்டு நடிப்பார். இமேஜ் பற்றிய கவலை அவருக்கு இருந்ததில்லை. அதனால்தான் சிவகுமார் காலில் இருக்கும் கணையாழியை இவர் தரையில் படுத்து வாயால் கழற்ற வேண்டும் என்ற காட்சியை ‘மாற்றி எடுக்கலாம்’ என்று சொன்னபோது சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை. தரையில் படுத்து நடித்தார். சிவகுமார் கால்விரல்களிலிருந்த கணையாழியைத் தமது வாயால் கழற்றினார்…..

எத்தனை மகத்தான மனிதர் இவர்!

சபாஷ் மீனா படத்தில் சந்திரபாபு சிவாஜியின் கன்னத்தில் அறைய வேண்டிய காட்சி. “அப்படியே எடுங்க” என்று சொல்லிவிட்டார். கன்னத்தில் அறைவது என்று காட்சி இருந்தால் ‘அறைவதுபோல் நடிப்பது’ என்ற வரையறையெல்லாம் சந்திரபாபுவிடம் இருக்காது என்பதையும் நிஜமாகவே அறைவார் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் நாம்.

இதேபோன்று பத்மினியிடம் அடி வாங்குவதுபோல் அமைந்த ஒரு காட்சியிலும் எந்தவித இமேஜையும் பார்க்காமல் நடித்தவர் சிவாஜி என்பதைப் புரிந்துகொண்டால்தான் எந்த நிலையிலும் திரைக்கு வெளியே தமக்கு ஏற்பட்டிருந்த புகழையும் செல்வாக்கையும் அவர் நடிப்புக்குள்ளே கொண்டுவந்து அலட்டிக்கொண்டதில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

தன்னுடைய திறமை என்னவோ அதனை இந்த சமூகம் பயன்பெறுகிற முறையில் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும் கடமைதான் ஒரு கலைஞனுடையது. இதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததோடு மட்டுமின்றி இதற்கு அப்பாற்பட்டுத் தன்னைக் கொண்டாடும்  சமூகத்திற்குத் தன்னுடைய கடமைகள் என்ற அளவில் நிறைய பொருளுதவிகளையும் செய்துகொண்டிருந்தவர் சிவாஜி.

கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலை சிவாஜியால் அமைக்கப்பட்டதுதான். பெங்களூரில் நாடகங்களுக்காகவென்று கட்டப்பட்ட ரவீந்திர கலாக்ஷேத்திரம் சிவாஜி நாடகம் நடத்திக்கொடுத்த பணத்தில் கட்டப்பட்டதுதான்.

சீனப்போரின்போது மிகப்பெரிய தொகையை நிதியாக வழங்கியதுடன் எல்லையோரத்தில் இருக்கும் ஜவான்களை மகிழ்விப்பதற்காக இவர் திரட்டிச்சென்ற கலைக்குழுவும் இன்றைக்கும் பேசப்படும் ஒரு விஷயம்..

சிவாஜியை தமிழின் சிறந்த நடிகராக, அல்லது நடிகர்களின் ‘முன்னோடியாக’ மட்டுமே பார்ப்பது சரியான பார்வையோ முறையான பார்வையோ அல்ல.


தமிழர்களின் கலை அடையாளமாக,


கலாச்சாரத்தின் அடையாளமாக அவரைப் பார்க்கவேண்டும்.


தமிழுக்குக் கலை அடையாளம் யார்? என்பது மிகமிக சாதாரணமான ஒரு கேள்வி.


இதற்கு சிவாஜியைத் தவிர யார் பெயரைச் சொல்லமுடியும்?


வங்கத்தில் அவர்களின் கலைக்கும் கலாச்சாரத்துக்கும் அடையாளமாக சத்யஜித்ரேயைச் சொல்கிறார்கள்.

கர்நாடகத்தில் கலைக்கும் கலாச்சாரத்துக்கும் அடையாளமாக ராஜ்குமாரைச் சொல்கிறார்கள்.
சொல்வதோடு மட்டுமல்ல, ராஜ்குமாரைக் கர்நாடகத்தில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரிந்தால் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

ராஜ்குமாரைப் பற்றி கர்நாடகத்தில் எவனும் எந்த மூலையிலும் ஒரு வார்த்தைத் தவறாகப் பேசிவிட முடியாது.


அப்படிப் பேசினால் அவன் உயிரோடு வீட்டுக்குப் போகமுடியாது.

மகாத்மா காந்திக்கு இந்தியாவின் எல்லாப் பெரிய நகரங்களிலும் அவர் பெயரில் சாலைகள் இருப்பதுபோல கர்நாடகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் ராஜ்குமார் பெயரில் சாலைகள் உள்ளன.

பல இடங்களில் அவர் பெயரில் நகர்கள் உள்ளன. அவர் சிலைகள் இல்லாத மாவட்டங்கள் இல்லை.

குறைந்தபட்சம் மார்பளவு சிலைகள் எல்லா மாவட்டங்களில் மட்டுமல்ல வட்டங்களில்கூட உண்டு.
இப்படியெல்லாம் கொண்டாடுகிறோமா சிவாஜியை?

யோசிக்கவேண்டும்.

நடிகர் திலகம் சிவாஜிக்கு சென்னை கடற்கரை சாலையில் வைக்கப்பட்ட சிலை கூட பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது.

அந்த மகா நடிகனின் புகழ் இன்று கோர்ட்டுகளில் புரளும் சட்ட விதிகளுக்கும், சட்டங்களை அவிழ்த்தெடுத்துவந்து சாலைகளில் பதிய வைத்து மக்களிடையே நடைமுறைப்படுத்தும் காக்கிச் சட்டை மகான்களுக்கும், கோட்டையிலே உட்கார்ந்துகொண்டு மாநிலத்தின் எல்லா இயக்கங்களையும் விருப்பம்போல் அசைப்பதற்காக  பொம்மலாட்டக் கயிறுகளாய்த் தன் விரல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தற்கால ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்ப ஊசலாடுவதாக அமைந்து போயிருப்பதுதான் தமிழ்ச்சமூகத்தின் சோகங்களில் ஒன்று.

இம்மாதிரியான சிக்கல்கள் தமிழனுக்கு மட்டுமேயான சிக்கல்கள். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்துக்காரர்கள், மற்ற இனத்தவர்கள் இம்மாதிரியான பிரச்சினைகளிலெல்லாம் அல்லாடிக்கொண்டிருப்பவர்களாக இல்லை.

மற்றவர்களுக்கெல்லாம் மொழி சார்ந்த, இனம் சார்ந்த, பண்பாடு சார்ந்த, கலை விழுமியங்கள், இலக்கியப் பரிவர்த்தனைகள் சார்ந்த அடிப்படையான எந்த  விஷயங்களிலும்  சிக்கல்கள் வருவதில்லை.

மற்றவர்கள் இதற்காகவெல்லாம் போராடும் தேவை இருப்பதில்லை.
இங்கேதான் தமிழ் நாட்டில்தான், தமிழ் இனத்தில்தான் இம்மாதிரியான பிரச்சினைகளெல்லாம் எழுகின்றன.

காரணம் தமிழனை, தமிழர்களை வழிநடத்துபவர்களாகத் தம்மை வரித்துக்கொண்டு விட்டவர்கள் ஆடும் அழுகுணி ஆட்டங்கள்…

தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள, நினைத்தபடியெல்லாம் ஆட, எவருக்குமே இல்லாத ஏகபோக உரிமை தங்களுக்கு மாத்திரமே- தங்களிடம் மாத்திரமே இருப்பதாகவும், தமிழையும் தமிழனையும் தமிழ்நாட்டையும் எப்படி வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கிறவரை நம் விருப்பம்போல் ஆட்டிவைக்கலாம்; அடித்துத் துவைக்கலாம், எதை வேண்டுமானாலும் உடைக்கலாம், அகற்றலாம், துடைத்தெடுத்துத் தூக்கி எறியலாம், வேண்டும்போது நட்டு நிறுவலாம் என்றெல்லாம்……………………………………..

இவர்களுக்குள் தோன்றும் தான்தோன்றித்தனமான எண்ணங்கள், தவறான சிந்தனைகள், மனமாச்சரியங்கள், உள்ளுக்குள் கெட்டித்து இறுகிப்போயிருக்கும் அடிமனதின் வெறுப்புக் கசடுகள்தாம் இவற்றுக்கெல்லாம் காரணம்.

கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால் மேலும் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, தாறுமாறாக மனதில் கிளைபதித்து ஊடுருவிப் போயிருக்கும் ‘தான்’ என்ற ஈகோ. அடுத்தது, 

தன்னுடைய செயல்களால் கோபப்பட்டு தன்னை மக்கள் தோற்கடிக்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அடுத்த முறை நிச்சயமாக அதே இடத்தில் வந்து அமர்ந்து தான் நினைத்ததை முன்னைவிட வேகமாகச் செயல்படுத்தி மகிழலாம் என்ற அசைக்கமுடியாத யதார்த்தம்.

ஒரு ஈடு இணையற்ற கலைஞனைக்கூட ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடாமல் பல்வேறு பேதங்கள் சொல்லி மாய்மாலம் காட்டிப் புறக்கணிக்கும்  ஒரு சமூகத்தை மற்றவன் எப்படி மதிப்பான்?

மத்திய அரசாங்கம் எப்படி மதிக்கும்?

கர்நாடகத்திற்கு ‘பயப்படும்’ டெல்லி தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதன்  ‘மர்மம்’ புரிகிறதா?

தமிழனை எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் பிளவுபடுத்தி அரசியல் குளிர் காயலாம் என்ற ரகசியம் இந்த ஒரு விஷயத்திலேயே அம்பலமாகிறதா இல்லையா?

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாலங்கள்கள் கட்டுவதும், ரேஷன் வழங்குவதும், போக்குவரத்துகளை சரி செய்வதும் மட்டுமே ஒரு அரசாங்கத்தின் கடமை அல்ல.


ஒரு இனத்தின், சமூகத்தின், கலையும் கலாச்சாரத்தையும் இலக்கியங்களையும் காப்பாற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான்.

இந்த விழுமியங்களுக்குப் பங்களிப்பவர்களைச் சிறப்பித்து கௌரவிப்பதும் அரசாங்கத்தின் கடமைதான்.

அண்ணாவுக்கு ஆயிரக்கணக்கில் சிலைகள் இருக்கின்றன; பெரியாருக்கு, எம்ஜிஆருக்கு, மற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கில் சிலைகள் உள்ளன.

கலையின் உச்சம் தொட்ட சிவாஜிக்கு திருச்சியில் ஒரு சிலை பல வருடங்களாகத் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறதாம்.

சென்னையில் வைத்த சிலையைப் போக்குவரத்துக் காரணம் காட்டி அகற்றப்போகிறார்களாம்.

தமிழ்நாடு ஒரு மகா கலைஞனைக் கொண்டாடும் லட்சணம் இது.

அந்தக் கலைஞனுக்கு மென்மேலும் சிறப்புக்கள் செய்து கொண்டாடாவிட்டாலும் போகிறது. 

அவமானப்படுத்தாமலாவது இருங்கள்.

சிவாஜியைப் பற்றி நடிகர் சிவகுமார் எழுதிய ஒரு புதுக்கவிதை நினைவு வருகிறது. சிவாஜி யார் என்பதை அறிந்துகொள்ள அந்தக் கவிதை உதவும்.

பள்ளிப் படிப்பில்லை
பரம்பரைப் பெருமையில்லை
இளமையில் வறுமையை
இறுகத் தழுவியவன்……………
ஆயினும்-
கலையுலகின் நாயகியை
கலைவாணி ஆசியினை
வரமாய்ப் பெற்றுத் திரையுலகில்
வரலாறு படைத்திட்டான்.
ஒரு சாண் முகத்தில்
ஓராயிரம் பாவங்காட்டி
சிங்கக் குரலில்
தீந்தமிழ் வசனம் பேசி
அவன் படைத்த பாத்திரங்கள்
திரையில் –
அசைகின்ற ஓவியங்கள்……………….
கர்ணனாக கட்டபொம்மனாக
சிவாஜியாக செங்குட்டுவனாக
அரிச்சந்திரனாக அசோகனாக
அப்பராக ஐந்தாம் ஜார்ஜாக
பாரதியாக பொற்கைப் பாண்டியனாக
வ உ சியாக வாஞ்சியாக
அவன் ஏற்ற வேடங்கள்
எங்களுக்குப் பாடங்கள்.
நடக்கும் நடையில்
நானூறு வகைக் காட்டினான்.
மரமேறிக்கு ஒரு நடை-
மனோகரனுக்கு ஒரு நடை-
சட்டிசுட்டதடா பாடலுக்கு ஒரு நடை-
போனால் போகட்டும் போடாவுக்கு ஒரு நடை-
மொத்தத்தில் நவரசங்களையும் நமக்கு
நவராத்திரியில் காட்டிவிட்டான்
கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின் - என்று
மானிட வரலாறு தொடர,
சிவாஜிக்கு முன்-
சிவாஜிக்குப் பின் - என்று
தமிழ்த்திரையுலக வரலாறு தொடரும்
வாழ்க சிவாஜி.

Wednesday, July 16, 2014

உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம்- ஜெர்மனியின் வெற்றியும் சில சிந்தனைகளும்………………………….



 
கால் பந்தாட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

ஜெர்மனிக்காரர்கள் கோப்பையைக் கையிலேந்திக் குதூகலித்துக் கொண்டாடிவிட்டார்கள். அர்ஜெண்டினாக்காரர்கள் அழுதார்களோ இல்லையோ பிரேசில் மக்கள் அழுதுத் தீர்த்துவிட்டார்கள். நெய்மார் இல்லாத பிரேசில் அணி ஏழு கோல் வாங்கித் தோற்ற அவலத்தை பிரேசில் எத்தனைக் கார்னிவல்கள் நடத்தினாலும் மறப்பதற்கில்லை.

பிரேசில் மட்டுமல்ல வேறு சில நாடுகளும் தங்களுடைய ஒற்றை நட்சத்திர வீரர்களை மட்டுமே நம்பி ஆடுகிறது என்பது ஒரு சோகம் என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஏதோ காரணத்தினால் அணியில் விளையாடவில்லை என்றால் அந்த அணி நம்முடைய உயர்நிலைப் பள்ளி ஃபுட்பால் டீமை விடவும் மோசமான நிலைமைக்கு வந்துவிடுகிறது என்பது பரிதாபமாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் பல ஆட்டங்கள் நம்முடைய உள்ளூர் அணிகள் மோதும் ஆட்டங்களை விடவும் சுமாராகத்தான் இருந்தன என்பதும் கசப்பான உண்மையே.

ஜெர்மனி உலகக் கோப்பையை வெல்லும் அணியாக இருந்தது என்பது ஒரு புறமிருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட கால்பந்து விளையாட்டு என்பது பார்ப்பதற்கு ஒன்றும் பரவசம் தரும் ஒரு உற்சாகமான அனுபவம் என்று சொல்வதற்கில்லை. இன்னமும் சொல்லப்போனால் அவர்கள் ‘விளையாடுவதே’ இல்லை. மொத்த ஆட்டமும் வெறும் பாஸ்கள்தாம். யார் காலிலும் பந்து தங்குவதே இல்லை. ஃபுட் ஒர்க் என்பது அவர்களிடம் இல்லவே இல்லை. இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று எந்நேரமும் பந்தையும் எதிரணியினரையும் அலைக்கழித்துக் கொண்டே இருப்பதுதான் அவர்களது ஆடும் பாணி. ஆனால் எப்படி ஒவ்வொருவரிடமும் பந்தைக் கடத்துகிறார்கள், அடுத்து யாரிடம் கடத்தப்போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது அவர்களுடைய ஆட்டத்தின் சூட்சுமம். கூடவே குளோஸ் போன்ற ஒரு ஸ்ட்ரைக்கரை வைத்திருப்பதும் அவர்களுடைய அதிர்ஷ்டம். குளோஸ் ‘ஆடுகின்ற’ ஆட்டக்காரர் அல்ல; ‘அடிக்கின்ற’ ஸ்ட்ரைக்கர். அதனால்தான் குளோஸ் ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் என்ற இடத்தைப் பிடிக்கமுடியவில்லை. எங்கே இருப்பார் என்ன செய்துகொண்டிருப்பார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பந்து கோல் போஸ்ட் அருகில் போனவுடன் எங்கிருந்தோ எப்படியோ வந்து கோல் அடித்திருப்பார். அந்தவகையில் எதிரணியினருக்கு அவர் சிம்ம சொப்பனம். எப்படியோ கோல் அடித்து விடுவார் என்பது தெரிந்ததனால் இந்த ஆட்டங்களில் குளோஸையும் குறிவைத்து அடித்துத் துவைத்தார்கள்.
 
போட்டிகள் ஆரம்பித்த சமயத்தில் எப்போது ஆரம்பிக்கும்? தூக்கம் போனாலும் பரவாயில்லை. விடிய விடியக் கண்விழித்து எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றெல்லாம் காத்திருந்த நாட்கள் போய் ‘எப்படா முடியும்?’ என்று அலுப்புத் தர ஆரம்பித்துவிட்டது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும் கால்பந்தாட்டத்தின் விறுவிறுப்புக்கும் பரபரப்பிற்குமான உற்சாகமும் ஆர்வமும் உள்ளக்கிளர்ச்சியும் ஆரம்பத்து இரண்டொரு போட்டிகளிலேயே விடை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.

காரணம் கால்பந்தாட்டத்திற்கேயுரிய ‘உன்னதங்கள்’ எல்லாம் விடுபட்டுப்போய் விளையாட்டு என்றாலேயே அதிகபட்ச வன்முறைகள்……………….அடி, உதை, தலையை முட்டி மோதுவது, ஓடுகின்றபோது கால் கொடுத்து விழ வைப்பது, விழுந்தவன் மேலேயே விழுவது, மர்ம இடத்தைப் பார்த்து உதைப்பது….. என்பது போன்றே எல்லா ஆட்டங்களும் அமைந்திருந்தன.

கால்பந்தாட்டம் என்றாலேயே இம்மாதிரியான மெல்லிய வன்முறைகள் இயல்பானவைதாம். ஆனால் இவையெல்லாம் இவ்வளவு நாட்களும் இத்தனை ஆக்ரோஷமாகவும் இத்தனை மூர்க்கத்தனத்துடனும் இருந்ததில்லை. மனதிற்குள் ஏதோ வன்மம் கொண்டு எதிரியின் மீது மோதுவதுபோல் மோதுகிறார்கள். குழு அமைத்துக்கொண்டு ‘போட்டுத்தள்ளும்’ கூலிப்படையினர்போல் நட்சத்திர வீரர் மீது மோதி அவரை உண்டு இல்லையென்று ஆக்குகிறார்கள். கீழே போட்டு புரட்டித்தள்ளி துவம்சம் செய்கிறார்கள். இரண்டு எட்டுக்கு மேல் ஓடவிடாமல் கால் கொடுத்து விழவைத்து பந்தைக் கவர்ந்துகொண்டு ஓடுகிறார்கள்.

இவையெல்லாம் இத்தனை நாட்களும் இலை மறைவு காய் மறைவாக இருந்தன. இப்போதோ இதுதான் ஃபுட்பால். ஃபுட்பால் என்ற விளையாட்டே இப்படித்தான் என்று நினைக்குமளவுக்கு எல்லா ஆட்டங்களிலும் வன்முறை நீக்கமற நிறைந்து இருந்தது. முன்பெல்லாம் நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்களின் ஆட்டத்தைப் பார்ப்பதே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

அவர்கள் திறமையினாலும் தங்களுக்கேயுரிய தனிப்பட்ட நுணுக்கங்களாலும் பலபேருடைய கால்களுக்கிடையில் பந்தைக் கட் செய்து கொண்டு எதிர்க்க வருகிறவர்களையெல்லாம் சமாளித்து ஒற்றை ஆளாக பலரையும் தாண்டிச்சென்று கோலடிக்கும் காட்சி பார்க்கிறவர்களுக்கு ஒரு அற்புத அனுபவமாக இருக்கும். பார்ப்பவர்களை பரவசத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அந்த தனிப்பட்ட வீரரின் சாகசம் கண்களுக்குள்ளேயே நிற்கும். இப்போதைய மேட்சுகளில் அதற்கெல்லாம் இடமே இல்லாமல் போய்விட்டது.
 
ஒருத்தனைக் கட் செய்து பந்தை எடுப்பதற்குள் இரண்டு பேர் மேலே வந்து விழுகிறார்கள். அதையும் தாண்டி பந்தைத் தள்ளினால் மூன்றாமவன் இந்த வீரரின் கால்களுக்கிடையில் காலைக்கொடுத்துப் பின்னி விழவைக்கிறான். மஞ்சள் கார்டாவது, ரெட் கார்டாவது……….ஆட்டம் அதுபாட்டுக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறது.

இம்மாதிரியான வன்முறைகளெல்லாம் இல்லாத சமயத்தில் ‘வெறும் ஃபுட்பால் மட்டும்’ ஆடித் தன் திறமையை நிரூபித்தவர்தான் பீலே. அவர் அதிர்ஷ்டக்காரர். அவருக்கு ‘நீட்டான’ ஃபுட்பால் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் மலை போல இருந்தன.

அதற்கடுத்த பெரிய ஃபுட்பால் ஜாம்பவானாக மாரடோனா பெயரெடுத்த காலத்தில்தான் இம்மாதிரி வன்முறைகள் எல்லாம் வெளிப்படையாக ஆட்டங்களில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.

அதுவும்கூட நமக்கெல்லாம் டிவி வந்து உலக கால்பந்தாட்டப் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்த முதல் வருடமான 1994-ல் மாரடோனா ஆடியபோது அவருடைய அற்புத ஆட்டத்தை வியந்துபோய் பார்க்கமுடிந்தது.

அடுத்த 98-ம் ஆண்டிலிருந்துதான் வன்முறை இறக்குமதி செய்யப்பட்டது. பந்தை விட்டுவிட்டு ஆளை அடிப்பது என்கிற ரீதியில் ‘அடித்து ஆட’ ஆரம்பித்த உலகக்கோப்பையை 98-ம் ஆண்டின் போட்டிகள் உறுதி செய்தன.
 
அதே மாரடோனாவைச் சுற்றி எதிரணியைச் சேர்ந்த தடியர்கள் இரண்டுக்கு மூன்று பேர் இருப்பார்கள். மாரடோனாவிடம் பந்து வந்ததுதான் தாமதம். அவரை ஓடவிடாமல் அடிப்பது, கால்களுக்கிடையில் காலை நுழைத்து விழவைப்பது, பந்தை விட்டுவிட்டுக் கால்களின் மீது உதைப்பது என்ற அடாவடி ஆட்டம் இந்த ஆண்டிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது.

எத்தனைப்பேர் சேர்ந்து அடித்தாலும், காலை இடறவிட்டு விழவைத்தாலும் அப்படியே கரணம் அடித்து சுருண்டு கீழே விழுந்து அதே வேகத்தில் எழுந்து – அத்தனை அடிவாங்கி உருண்டையாக சுருண்டு விழுந்தபோதும் எக்காரணத்தைக்கொண்டும் பந்தை மட்டும் விடாமல் தன்னுடைய கால்களுக்கிடையிலேயே வைத்திருந்து உடனடியாக எழுந்து பந்தைத் தொடர்ந்து தள்ளிக்கொண்டு ஓடிய மாரடோனாவின் திறைமையைப் பார்த்து உலகம் வியந்தது.

மக்கள் கூட்டம் கைத்தட்டி ஆர்ப்பரித்தது.

டிவியில் பார்த்தவர்கள் அந்தக் குள்ள மனிதனின் திறமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒரு மூன்று உலகப்போட்டிகள் மாரடோனாவை மட்டுமே மையம் கொண்டிருந்தன.

எங்கோ ஒரு சாதாரண சேரியில் பிறந்த மாரடோனா என்ற கால்பந்தாட்ட வீரன் உலகின் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கடவுளாகப் போற்றப்பட்டது இப்படித்தான்.

ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு என்றில்லாமல் அவன் தோன்றிய விளம்பரங்கள் ஒளிபரப்பாவதன் மூலம் (உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் 

மாரடோனாவின் ஏதாவது ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள்) ஒரு வினாடிக்கு இவ்வளவு என்று விலைபேசி அவனைக் கொண்டாடியது வர்த்தக உலகம்.

மாரடோனாவைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பெக்காம், ரொனால்டோ, கிறிஸ்டியானா ரொனால்டோ, மெஸ்ஸி என்று சாகச வீரர்களைக் கொண்டாட ஆரம்பித்தது உலகம்.

இந்த உலகக் கோப்பையிலும் மெஸ்ஸி, கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் புதிய வீரரான நெய்மார் ஆகியோரை நட்சத்திர அந்தஸ்துள்ள வீரர்களாகக் களம் இறக்கிற்று ஃபிபா.

நட்சத்திர வீரராக பெரிதும் பேசப்படும் ரொனால்டோ ஆடிய போர்ச்சுகல் அணி பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருடைய ஆட்டத்தை மேற்கொண்டு பார்க்கமுடியாமல் போய்விட்டது.

நெய்மாரை அடித்துத் துவைத்து படுக்கப்போட்டு ஸ்டிரெச்சரில் தூக்கிக்கொண்டுபோக வைத்துவிட்டார்கள். மேலே பறந்து எகிறி முதுகில் ஒருத்தன் விழுந்ததில் நெய்மாரின் முதுகெலும்பு முறிந்துபோய்விட்டது.
 
நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஓரளவுக்காவது மக்களுக்குப் பார்க்கக் கிடைத்தது மெஸ்ஸியின் ஆட்டத்தை மட்டும்தான். அதிலும் இதே பாணிதான். மெஸ்ஸியைச் சுற்றிலும் எந்நேரமும் மூன்று நான்கு பேர். மெஸ்ஸியிடம் பந்து வந்தாலேயே அடி உதை ஆரம்பிக்கப்பட்டு காலை விட்டு இடறி மெஸ்ஸியை விழவைக்கும்வரை விடுவதில்லை. (ஆனாலும் ஓரளவுக்காவது தன்னுடைய ஆட்டத் திறமைகளையும் நுணுக்கங்களையும் மெஸ்ஸி வெளிப்படுத்திய காட்சிகள் காணக் கிடைத்தது ஒரு சந்தோஷ அனுபவம் என்றுதான்  சொல்லவேண்டும்). இதே போக்கு எல்லா நட்சத்திர வீரரிடமும் காட்டப்பட, எந்தப் ‘பயபுள்ளையையும்’ ஆடவிடாமல் பார்த்துக்கொண்டார்கள் படுபாவிகள்.

இன்னொன்று- எல்லா நட்சத்திர வீரர்களுக்கும் எதிராகவே அத்தனை ரெஃபரிகளும் இருந்தார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களும் தெரியவில்லை.

இதனையும் மீறி உலகம் முழுக்கவும் இருநூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கால்பந்தாட்டக் கொண்டாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால் அது இந்த ஆட்டத்தின் மீது இருக்கும் அதீதக் கவர்ச்சியால்தான். களமிறங்கியிருக்கும் அத்தனை வீரர்களுமே அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாமல் கண்கொத்திப் பாம்பாக இருந்து கவனித்துக்கொண்டிருக்கவும் செயல்படவும் செய்யும் கவர்ச்சி அது.

எந்த நேரத்தில் பந்து எப்படி வரும், யாரிடம் போகும், தலையால் முட்ட வேண்டுமா, காலால் தள்ள வேண்டுமா, கட் செய்வதா?, பாஸ் கொடுப்பதா? யாரிடம் கொடுப்பது? மார்பால் தடுக்க வேண்டுமா? தொலைதூரத்துக்கு உதைக்க வேண்டுமா? என்று எல்லாவற்றையும் அந்தந்த நொடிக்கு ஏற்பத் தீர்மானிக்க வேண்டிய விளையாட்டு இது. கொஞ்சம் ஏமாந்தாலும் தீர்ந்தது. எதிரி கோல் போட்டுவிட்டு இரண்டு கைகளையும் விரித்துப் பறவை மாதிரியான போஸில் மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பான்.

விளையாட்டு நடைபெறும் ஒன்றரை மணி நேரத்திலும் ஒரு வினாடி தவறாமல் சுவாரஸ்யம், விறுவிறுப்பு இரண்டிற்கும் பஞ்சம் வைக்காத ஒரே விளையாட்டு இதுதான்.

இந்த விளையாட்டை முற்றிலும் புறந்தள்ளி கிரிக்கெட்டுக்கு ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கிறதே இந்த தேசம் என்பது கவலைக்குரிய ஒன்றுதான். தொண்ணூறுக்கு முந்தைய நாட்களில் வெளியூர்ப் பயணங்களின்போது கண்களில் தென்படும் மைதானங்களில் எல்லாம் இரண்டு புறமும் ‘ப’வைக் கவிழ்த்து வைத்தமாதிரி கோல் போஸ்ட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.

பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது காலியாகக் கிடக்கும் அத்தனை மைதானங்களிலும் இத்தகைய கோல் போஸ்ட்டுகள் இருக்கும் அந்தக் காட்சியே பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும்.

 சிறுவர்களும் இளைஞர்களும் அணி சேர்ந்துகொண்டு ஓடியாடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். விளையாடும் அணி ஒன்பது, ஒன்பது என்று பதினெட்டுப் பேரோ, அல்லது பதினொன்று, பதினொன்று என்று இருபத்தியிரண்டு பேரோ- விளையாடும் அத்தனைப் பேருக்கும் நொடி தவறாமல் வேலை வைக்கும் விளையாட்டு இது. உடம்பையும் மனதையும் சுறுசுறுப்பாகவும் துடிதுடிப்பாகவும் வைத்திருப்பவன் மட்டுமே கால்பந்து ஆட முடியும்.

பெங்களூரில் முன்பெல்லாம் நிறைய கால்பந்து வீரர்கள் இருந்தார்கள். ஆஸ்டின் டவுன், டேனரி ரோடு, கன்ட்ரூப் போன்ற தமிழ்ப் பகுதிகளில் நிறைய இளைஞர்கள் அணிஅணியாக உருவாகிவந்தார்கள். நிறைய தொழிற்சாலைகள் இவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு கூடவே தங்களுக்கென்று கால்பந்தாட்ட அணிகளையும் வைத்திருந்தன. இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் சென்று ஆடி புகழ் சேர்த்து வருவார்கள் இந்த ஆட்ட வீரர்கள். எதிர்காலத்தில் எப்படியெல்லாமோ வந்திருக்கக்கூடும்……………………….

இதையெல்லாம் இல்லாமல் செய்துவிட்ட, கவிழ்த்துப் போட்ட பெருமை டிவிக்கே உண்டு. இந்தியாவில் டிவி வருவதற்கு முன்னால் கிரிக்கெட் இத்தனைப் ‘பாப்புலரான’ விளையாட்டாக இருக்கவில்லை. வர்த்தக பணமுதலைகளால் எந்தவிதமான மோசடி மாற்றங்களையும் ‘அங்கீகரிக்கப்பட்ட இலட்சிய மாற்றங்கள் போன்ற தோற்றத்தில்’ உருவாக்கிவிட முடியும் என்பதற்கு கிரிக்கெட்டும் ஒரு சான்று.

மேற்கத்திய நாடுகளிலிருந்து தேவையற்ற எதை எதையெல்லாமோ இறக்குமதி செய்யும் இந்தியன் விளையாட்டு விஷயத்தில் அந்த நாடுகளிலிருக்கும் ஃபுட்பால் வசீகரத்தை இறக்குமதி செய்யாததோடு, தன்னிடம் அதுவரை  இருந்த கொஞ்ச நஞ்ச ஈடுபாட்டையும் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தொலைத்துவிட்டு உட்கார்ந்தாலும் பரவாயில்லை. தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்துவிட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கிறான். உலக அளவில் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் இவன் பாட்டுக்கு ‘உலகக் கோப்பைக் கிரிக்கெட்’ என்று நாமகரணம் வேறு செய்துகொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.

அந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் மூன்று நான்கு நாடுகள்தாம் ‘சொல்லிக்கொள்ளும்படியான’ நாடுகள். மற்றவையெல்லாம் சுண்டைக்காய் நாடுகள் அல்லது தீவுகள்…...

சரி கிரிக்கெட் எப்படி ஆடப்படுகிறது?

இரண்டு பேர் ஆடுகிறார்கள் ஒருவர் பந்து போடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆறு பந்துகளில் இரண்டோ மூன்றோதான் அடிக்கப்படுகிறது. அதுவும் ஒன்றோ இரண்டோ மட்டும்தான் ஓங்கி அடிக்கப்படும் பந்து. மற்றதெல்லாம் தடுப்புக்கள்தாம்.

பந்தை ஒருவர் அடித்துவிட்டால் அந்த அணியைச் சேர்ந்த இரண்டுபேர் ‘மட்டுமே’ ஓடுவார்கள். மற்றவர்களெல்லாம் மைதானத்திலேயே இல்லையே, கேலரி ஓரமாக அல்லவா உட்கார்ந்திருப்பார்கள்…………..? பந்து தடுக்கப்பட்டாலோ அல்லது அடிக்கப்பட்டாலோ எதிரணியிலிருந்து ஒரே ஒருவர் மட்டும்தான் அந்தப் பந்தைப் பிடிப்பார். அல்லது பிடிக்க ஓடுவார். எடுத்து வீசும்போது பௌலிங் போட்டவர் அந்தப் பந்தைப் பிடித்து கிரீஸில் ஓடிக்கொண்டிருப்பவர்களை அவுட்டாக்க முடியுமா என்று பார்ப்பார்.

ஆக இருபத்திரண்டு பேர் ஆடும் ஆட்டத்தில் ஒரு சமயத்துக்கு மூன்று பேர் அல்லது நான்குபேர் மட்டுமே ‘செயல்படுகின்ற’ சோம்பேறி ஆட்டம் அது.

அந்த ஆட்டம் துடிப்பான இளைஞர்கள் ‘விளையாடுவதற்காக’ ஏற்பட்ட ஆட்டம் அல்ல; பொழுதுபோகாதவர்கள் ‘பார்த்துக்கொண்டிருப்பதற்காக’ உருவாக்கப்பட்ட ஆட்டம்.

அதனை- பல வகையிலும் இன்னமும் முன்னேறாத, தன்னுடைய அடிப்படைத் தேவைகளில் முப்பது சதவிகிதத்தைக்கூடப் பூர்த்தி செய்துகொள்ளாத, வறுமைக் கோட்டிற்குக் கீழே இருபத்தைந்து சதவிகிதம் மக்களைக் கொண்ட நூற்றுப்பனிரெண்டு கோடி மக்கள் கொண்ட இந்த தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்டமாக ஆக்கிய பெருமை வர்த்தக உலகத்தையே சேரும்.

இன்றைய இளைஞர்களின், பணக்கார மேல்தட்டு இளைஞர்களின் நவீன மோஸ்தரில் செலவழிக்கும் பணமும் நேரமும் கணிசமான பங்கு கிரிக்கெட்டிற்கும் போகிறது.

தன்னுடைய பாட்டிக்கோ தாத்தாவிற்கோ தெரு முனையிலிருக்கும் மருந்துக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று மாத்திரைக்கூட வாங்கிவர நேரமில்லாதவன், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிக்கெட் வாங்க விடியற்காலையிலேயே சென்று மூன்று நான்கு மணி நேரம் கியூவில் நிற்பதையும், அரை நிக்கரும் கோக் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுமாக ஐந்து மணி நேரம் டிவி முன்னால் பழி கிடப்பதையும் சர்வ சாதாரணமாக வீட்டுக்கு வீடு பார்க்கமுடியும்.

இம்மாதிரியான இளைஞர்கள் மத்தியில் சின்னதொரு சலசலப்பையாவது இந்த உலகக் கோப்பைக் கால்பந்து ஏற்படுத்தியதா என்பது தெரியவில்லை.

இந்தக் கால்பந்து போட்டிகளின் இன்னொரு சுவாரஸ்யம் முன்கூட்டிய கணிப்புகள்.

யார் ஜெயிப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லும் கணிப்புகளைச் சென்ற கால்பந்தாட்டப் போட்டிகளின் போதேயே கணித்துச் சொல்லியிருந்தார் ஒரு ஜோசியர்.
 
இங்கே ஜோசியர் என்பது மனிதரில்லை. ஒரு ஆக்டோபஸ். பால் என்று அதற்குப் பெயர் வேறு சூட்டியிருந்தார்கள். ஒவ்வொரு பந்தயத்திற்கு முன்னாலும் ஆடப்போகின்ற அணிகளில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை ஓரளவிற்குக்கூட அல்ல; மிகத் துல்லியமாக கணித்துச் சொன்னது அந்த ஆக்டோபஸ். இறுதி ஆட்டம்வரை அந்தக் கணிப்பு பொய்க்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம்தான்.

கொஞ்ச நாட்களில் பால் என்ற அந்த ஆக்டோபஸ் செத்துப்போய்விட்டது. இந்தமுறை என்ன செய்வார்கள் என்று பார்த்தால் அந்த ஏமாற்றத்திற்கு இடமே வைக்காமல் எங்கிருந்தோ ஒரு யானையப் பிடித்து வந்திருந்தார்கள். அதற்கு நெல்லி என்று பெயராம். அந்த யானை கணிக்கிறது என்றார்கள். இதுவரை முப்பத்தேழு கணிப்புகளில் முப்பத்து மூன்று கணிப்புகள் அட்சர சுத்தம் என்றார்கள். பந்தயங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பேயே இறுதிக்கோப்பையை வெல்லப்போவது ஜெர்மனிதான் என்பதைச் சொல்லிவிட்டது நெல்லி.
 
நெல்லி போதாதென்று எங்கிருந்தோ ஒரு கரடியைப் பிடித்து வந்திருந்தார்கள்.  இரண்டு அல்லது மூன்று கோல் போஸ்ட்டுகளை அமைத்து அதில் விளையாடப்போகும் அணிகளைச் சார்ந்த நாடுகளின் கொடிகளைப் போர்த்தி எந்த அணி வெல்லப்போகிறது காட்டு என்று சொல்லும்போது அந்தக் கரடி, எந்த அணி வெல்லப்போகிறதோ அந்த அணியின் கொடி போர்த்தப்பட்ட கோல்போஸ்ட்டைப் போய் தாங்கிப்பிடித்துத் தொங்கியது ஒரு ஆச்சரியம்தான்.
 
 மூன்று நான்கு கோல் போஸ்ட்டுகளை அமைத்து அதில் ஆடுகின்ற நாட்டின் கொடிகளைப் போட்டுவைத்து எந்த நாடு வெற்றிபெறும் என்று குட்டியானையைக் கேட்டபோது ஒவ்வொரு முறையும் வெற்றிபெறும் அணி இதுதான் என்பதைச் சொல்லும்விதமாக தன்னுடைய காலின் அருகில் வைக்கப்படும் பந்தை அந்தக் கொடி போட்ட கோல் போஸ்ட்டுக்குக் கொண்டு சென்று தள்ளிய நெல்லியின் செய்கையும் ஒரு அதிசயம்தான்.

நான் கூட ஆரம்பத்தில் இதென்ன கூத்து, இதென்ன முட்டாள்தனம் என்றுதான் நினைத்தேன். இறுதி விளையாட்டு நடைபெற்றபோதுகூட நெல்லியும், கரடியும் சொல்லியதற்கேற்ப ஜெர்மனி வெற்றிபெறக்கூடாது. இந்த ஜோசியங்கள் பொய்க்கவேண்டும் என்பதற்காகவாவது அர்ஜெண்டினா வெற்றிபெற வேண்டும் என்றுகூட எதிர்பார்த்தேன்.

ஒன்றும் நடக்கவில்லை.

பகுத்தறிவுக்கெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.

அறிவுலகத்திற்கும் விஞ்ஞான உலகத்திற்கும் பதிலளிக்க முடியாதவாறு சில ஆச்சரியங்கள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உலகை சுவாரஸ்யமாக வைத்திருப்பது இத்தகைய ஆச்சரியங்கள் என்றே தோன்றுகிறது.