Friday, July 1, 2011

சாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு!


சாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்கிலீக்ஸ் முதலிய டேப்கள் எவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டனவோ அதைவிடவும் பரபரப்பான விஷயமாக இந்த சாட் பேச்சுக்கள் தமிழ் இணையதளங்களில் இன்றைக்கு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. நீரா ராடியா மற்றும் விக்கிலீக்ஸ் விவகாரங்களைப் படிக்கிறவர்களுக்கு வெறும் அதிர்ச்சி மட்டுமே பிரதானமாக இருந்தது. இந்த ஆபாச உரையாடல்களில் அதிர்ச்சியுடன் குற்றமனப்பான்மையும் சேர்ந்துகொண்டு வதைப்பதுதான் முக்கியம். இதில் ஈடுபட்டவர்களுக்கு இத்தகைய குற்றமனப்பான்மை ஏற்பட்டதோ இல்லையோ படிக்கிற நமக்கு ஏற்படுகிறது. காரணம் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் இருவரில் ஒருவர் நம்முடைய வீடுகளில் இருக்கநேரும் இளம்பெண்களில் ஒருவர். மற்றவர் சமுதாயத்தில் மதிக்கப்படும் இடத்தில் வைக்கப்படவேண்டிய எழுத்தாளர்களில் ஒருவர்.

இது புறக்கணிக்கப்படவேண்டிய விஷயமா அல்லது விவாதிக்கபடவேண்டிய விஷயமா என்பதிலேயே நிறைய கருத்துமோதல்கள் இருக்கின்றன. நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது இந்த அருவெறுப்பான விஷயத்திற்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் இன்றைக்கு இணையத்தில் நடைபெறும் இம்மாதிரியான வாதங்கள் தமிழுலகம் இதுவரையிலும் காணாத ஒன்று. இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுவெளியில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. எந்தப் பத்திரிகைகளும் இம்மாதிரியான விவாதக்களங்களை ஏற்படுத்தப்போவதில்லை. அப்படியே ஏற்படுத்தினாலும் இவற்றில் வருகிறமாதிரியான சொல்லாடல்கள் நிச்சயம் பத்திரிகைகளில் சாத்தியமில்லை. அதிலும் இணையத்தில் புழங்கும் அளவு கெட்டவார்த்தைகளுக்கு இடமில்லை.இணையத்தில் யாரும் யாருக்கும் தடைவிதிக்க முடியாது. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்பது எதற்கான சுதந்திரம் என்பதே புரிபடாத அளவுக்கு இணையம் உபயோகிப்பவர்கள் தங்கள் பாட்டுக்கு புகுந்துவிளையாடுகிறார்கள். எத்தனை ஆபாசமான வக்கிரமான சொற்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் உபயோகித்து சமர் புரிகிறார்கள்.

எதற்குத் தெரியுமா? ஒன்றுமில்லாத விஷயத்திற்கு!

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரிடம் பேஸ்புக் தொடர்பில் சாட் செய்வதற்கு ஒரு பெண் முயற்சி செய்கிறார். இத்தனைக்கும் அந்தப்பெண் சாருநிவேதிதா எழுதிய எந்த ஒரு நூலையும் படித்தவரில்லை. ஆக, ஒரு வாசகியாகவோ ஒரு ரசிகையாகவோ அந்தப்பெண் சாருவை அணுகவில்லை. வெறும் முகநூலில் தொடர்புகொண்டு இன்றைக்குத் தம் காலத்தையும் வாழ்வையும் தொலைத்துக்கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர்களில் ஒருத்தியாகத்தான் அந்தப்பெண்ணும் சாருவை அணுகுகிறார். அப்படி தாம்அணுகுபவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இருப்பதில் அந்தப்பெண்ணுக்கு ஒரு பெருமை அவ்வளவுதான்.
இங்கே இதனைத் தவறென்றுகூடச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் இன்றைக்கு தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அகிலன் ஜெயகாந்தன் நாபா முவ திஜா இவர்கள் காலத்திற்குப்பின்பு சுஜாதாதான் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். அவருக்குப்பின் யாருக்கும் அந்த இடம் வாய்க்கவில்லை.

ஏனெனில் புகழ்பெற்ற வெகுஜனப்பத்திரிகைகளுக்கு இன்றைக்கு ‘படைப்பு எழுத்தாளர்கள்’ என்ற ஒரு இனமே தேவையில்லாமல் போய்விட்டது.

பேருக்குச் சில சிறுகதைகளை எப்போதாவது வெளியிடுகிறார்களே தவிர, படைப்பிலக்கியத்துக்கான எந்த ஒரு சிரத்தையையும் வெகுஜன இதழ்கள் காட்டுவதில்லை. குழந்தை இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளிவிளையாடினானாம் என்பதுமாதிரி இடையில் புகுந்தன சிற்றிதழ்கள் என்ற வரிசையில் சில இதழ்கள். இவற்றில் காலச்சுவடும் உயிர்மையும் முன்னணியில் இருக்கின்றன. சந்தடி சாக்கில் கடையை விரித்த இந்த இதழ்கள் கருத்துருவாக்கத்தில் அதகளம் பண்ண ஆரம்பித்தன.

காலச்சுவட்டைப் பொறுத்தவரை தமிழில் எழுத்தாளர் என்றாலேயே இரண்டுபேர்தாம்.

கவிஞர் என்றாலும் இரண்டுபேர். ஒருவர் பாரதியார், இன்னொருவர் பசுவய்யா.

அதாவது சுந்தர ராமசாமி. எழுதாளர்கள் என்றால் இரண்டுபேர். அதாவது, போனால் போகிறதென்று புதுமைப்பித்தன். அவருக்குப்பிறகு தமிழில் தோன்றிய ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி மட்டும்தான் தமிழுக்கு இலக்கிய அந்தஸ்து தேடித்தந்தவர். தமிழில் சிறுகதைகள் எழுத வழிவகுத்தவர். தமிழில் ‘முதல் நாவல்’ எழுதியவர். தமிழில் கட்டுரைகள் எழுதுவது எப்படி என்று சொல்லித்தந்தவர். அவருடைய சிஷ்யப்பரம்பரை ஒன்றை உருவாக்கி தமிழுக்கு விட்டுச்சென்றிருப்பவர்............இதுதான் காலச்சுவடு கட்டமைத்துகொண்டிருக்கிற பிம்பம்.

அதற்கடுத்து உயிர்மை..... உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் காலச்சுவட்டிலிருந்து வெளியில் வந்தவர். உண்மையில் தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். இவர் கட்டமைத்திருக்கும் எழுத்தாளர்களில் சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உண்டு. மற்ற இருவரையும்விட சாருநிவேதிதாவை விளம்பரத்திற்காகவும் வியாபார உத்திக்காகவும் இவர் பயன்படுத்துவதும் உயிர்மையை சாருநிவேதிதா பயன்படுத்துவதும் என இரண்டுமே மாறிமாறி நடைபெறும் நிகழ்வுகளாக அமைந்திருக்கின்றன.
இவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனைத் தவிர்த்து ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் இணையத்தையும் இளைஞர்களையும் மிகச்சரியாகப்புரிந்துவைத்துக்கொண்டு செயல்படுபவர்கள் எனலாம். இணைய வீச்சு எத்தகையது, அதன் வாசகத்தளம் எத்தகையது அவர்களுக்கு என்னமாதிரியான stuff ஐ வழங்கினால் எடுபடும், தம்முடைய எழுத்துவியாபாரம் பிரமாதமாக நடக்கும் என்பதையெல்லாம் கணக்குப்போட்டு இணையத்தை வளைத்துப்போட்ட புத்திசாலிகள்.

சென்ற தலைமுறை வாசகத்தளம் என்பது, எது படிக்கக் கிடைக்கிறதோ அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கு முந்தைய தலைமுறை எழுத்து எப்படி இருந்தது அதற்கும் முந்தைய தலைமுறை எப்படி இருந்தது என்றெல்லாம் தேடிப்போகும் தேடல் கொண்டிருந்தது. அதனால்தான் கிடைத்ததைப் படித்ததோடு நின்றுவிடாமல் பைண்ட் செய்து வைக்கப்பட்ட பழைய இதழ்களையெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கும்போக்கு இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு அதெல்லாம் குப்பை. இவர்களுக்கு எல்லாமே நெட்டில் வேண்டும். தினசரி செய்தியும் சரி விமர்சனமும் சரி படைப்பாக்கங்களும் சரி எல்லாம் நெட்தான். நெட்டிலே பிறந்து, நெட்டிலே வளர்ந்து, நெட்டிலேயே முடிந்துபோகும் பரிதாபநிலைக்கு வந்துவிட்டது இன்றைய இளையதலைமுறை.

இந்தவகையில் இன்றைக்குப் ‘படுபிரபலமாக இருக்கும்’ முன்னணி எழுத்தாளர் சாருநிவேதிதா பற்றிய சர்ச்சை இது. ஒரு சாதாரணப்பெண்ணிடம் இன்றைக்குத் தமிழின் பிரபல எழுத்தாளர் என்று சொல்லப்படும் ஒருவர்- அல்லது சொல்லிக்கொள்ளும் ஒருவர்- அதாவது அவர் தம்முடைய பெருமை இந்தத் தமிழ்நாட்டிற்கு இன்னமும் தெரியவில்லை என்கிறார். தமக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையும் விருதுகளும் அங்கீகாரங்களும் இன்னமும் தரப்படவில்லை என்கிறார். தமிழுக்கு நோபல் பரிசு பெற்றுத்தரக்கூடிய ஒரே எழுத்தாளர் தாம்தான் என்றும் சொல்லிக்கொள்கிறார்- அப்படிப்பட்ட ஒருவர் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்கான சம்பவமே இது. என்ன நடந்திருக்கிறது என்பதும் அவர் எப்படியெல்லாம் அந்தப் பெண்ணிடம் உரையாடியிருக்கிறார் என்பதையும் வினவு தளம் விரிவாகவே வெளியிட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை முதலில் தமிழச்சி வெளிப்படுத்துகிறார். பின்னர் ராஜன் தம் பதிவில் எழுதுகிறார். அதனைத்தொடர்ந்து சர்ச்சைகள் உருவாகின்றன. கடுமையான கண்டனங்களுடன் சாருவை எதிர்ப்பவர்களும், இது அவருடைய இமேஜைக் குலைக்க நடைபெறும் சதி என்பதான எதிர்வினைகளும் வரிசைக்கட்டுகின்றன. இது ஏதோ சதி, மர்மம் என்பதுபோன்ற பாவனைகளுடன் பல்வேறு பதிவுகளும் கருத்துரைகளும் வருகின்றன. அந்தப்பெண் முதலில் ஒரு பெண்ணே அல்ல; அவர் ஒரு ஆண்...வேண்டுமென்றே சாருவை மாட்டிவைப்பதற்காகச் செய்யப்பட்ட சதி என்று சீறலுடன் கருத்திடுகிறார்கள் சிலர். ‘அந்தப்பெண் வேறுயாருமல்ல; பாரீஸிலிருக்கும் தமிழச்சிதான் வேறொரு பெயரில் இப்படியெல்லாம் பேசி சாருவை வம்பில் மாட்டிவைத்திருக்கிறார். ஹிட்ஸுக்காக இப்படிச் செய்யக்கூடியவர்தான் அந்தத் தமிழச்சி’ என்று பேசுகிறார்கள் சிலர்.

‘இல்லை அந்தப்பெண் எனக்குத்தெரிந்தவர்தான். நான் நடத்திய பதிவர் சந்திப்பிற்குக்கூட தமது தாயாருடன் வந்து கலந்துகொண்டவர். அவருடைய தாய்மொழிகூடத் தமிழ்அல்ல; தெலுங்கு’ என்று விவரம் தெரிவிக்கிறார் பிரபல பதிவர்களில் ஒருவரான வால்பையன்.

அப்போதும் சர்ச்சைகள் அடங்காதுபோகவே “இல்லை இல்லை அந்தப்பெண் ஏற்கெனவே என்னிடம் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர். நான்தான் இதனை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் வாளாவிருந்துவிட்டேன்” என்று மனநல மருத்துவர் ஐயாருத்ரன் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டிவந்தது.

அதற்குப்பின்னரும் வேறு வகையில் சர்ச்சைகளைத் தொடர்ந்தனர் சாருவை ஆதரித்தவர்கள். அவர்களுடைய வாதமெல்லாம் ஒன்றை நோக்கியே இருந்தது. அதாவது சாரு எப்படிப்பட்டவர் என்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே, அவர் கொஞ்சம் ஆபாசமாகப் பேச ஆரம்பித்ததுமே தொடர்பைத்துண்டித்துவிட்டு இந்தப்பெண் வேறு வேலையைப் பார்க்கப் போகவேண்டியதுதானே, தொடர்ச்சியாக ஏன் அவரிடம் பேசவேண்டும்? தப்பு இந்தப்பெண்ணிடமும் இருக்கிறது என்று ஒருசிலரும், இல்லைஇல்லை தப்பு இந்தப் பெண்ணிடம் மட்டும்தான் இருக்கிறது என்று சிலருமாக கச்சை கட்ட ஆரம்பித்தார்கள். வாதங்களில் பெண்ணாதிக்கம் ஆணாதிக்கம் என்ற வார்த்தைகளெல்லாம்கூடப் புழங்க ஆரம்பித்தன. அந்தப்பெண் மீது குற்றம் சுமத்தின யாருமே சாரு போன்ற ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசலாமா என்பதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

சாருநிவேதிதாவின் உரையாடல்களைப் படிக்கும்போது மனப்பிறழ்ச்சி கொண்ட காமாந்தகன் ஒருவன் பிதற்றிய பிதற்றல்களாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. நாகரிக வரம்புகள் எதற்குமே அவர் உட்பட்டவராகத் தெரியவில்லை. சாதாரணமாக ஒரு காரிலோ அல்லது சைக்கிளிலோ செல்ல வேண்டிவந்தால்கூட சாலைகளில் நாம் இஷ்டத்துக்கு ஓட்டிக்கொண்டு போகமுடியாது. சில கட்டுப்பாடுகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டாக வேண்டும். உடனே, காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி? எழுத்தாளனுக்குப்போய் கட்டுப்பாடா? வரம்புகளா? என்ற வாதங்களையெல்லாம் இங்கே கொண்டுவரக்கூடாது. ஒரு எழுத்தாளன் என்றால் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு கவுரவம் இருக்கிறது. அவனுக்கென்று சில கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் சில வரையறைகளும் உள்ளன. ஒரு சாதாரணக் குடிமகனைவிட, ஒரு சாதாரண வாசகனைவிட ஒரு எழுத்தாளன் பொறுப்புணர்வோடும், கவுரவத்தோடும் மரியாதையோடும் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கும் சமூகம் இது. அவற்றில் எதையுமே கருத்தில்கொள்ளாமல் எப்படி வேண்டுமானாலும் நான் நடந்துகொள்வேன் என்று யாரும் நடந்துகொள்ள முற்பட்டால் சாரு படுவதுபோன்ற அவமானங்களைப் பட்டுத்தான் ஆகவேண்டும்.

சாருவைக் கட்டிக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒருசில அன்பர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அவர்கள் எடுத்துவைத்த வாதங்களும் சாருவின் செயல்களைவிட மோசமானதாக இருந்தன. ராஜனின் தளத்தில் சிம்மக்கல் என்ற ஒருவர் படு காத்திரத்துடன் உரையாற்றிக்கொண்டிருந்தார். மாறிமாறி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார். வினவு தளத்திலும் ஜோஅமலன் என்ற ஒருவர் அங்கே சிம்மக்கல் சொன்னதையே இங்கே தம் பங்குக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அல்லது இரண்டுபேருமே ஒருவராகவேகூட இருக்கக்கூடும்.

சாருவை நீங்கள் எப்படிக் குறை சொல்லலாம்? யாரும் செய்யாததையா சாரு செய்துவிட்டார்? எம்ஜிஆர் ஜானகி அம்மாளை கணபதிபட்டிடமிருந்து பிரித்து கூட்டிவைத்துக் கொள்ளவில்லையா? சிவாஜி தேவிகாவுடன் என்ன செய்தார்? ஜெமினிகணேசன் புஷ்பவல்லியை வைத்துக்கொள்ளவில்லையா, அதற்குப்பின்னும் வேறொரு பெண்ணை வைத்துக் கொள்ளவில்லையா? கருணாநிதியின் கதை என்ன, எம்ஆர்ராதா ராதிகாவின் அம்மாவை எப்படி வைத்துக்கொண்டார்.....ஆகவே கலைஞர்கள் எல்லாரும் அயோக்கியர்களே..இதில் சாருவை மாத்திரம் எப்படிக்குறை சொல்லலாம்? என்ற பாணியில் இவர் பாட்டுக்கு தமிழகத்தின் அத்தனைப் பிரபலங்களையும் இழுத்துவைத்து சகட்டுமேனிக்கு அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்.

இந்த அன்பருடைய பிரதான கோபம் கண்ணதாசன்மீது. கண்ணதாசன் கடைசிக்காலத்தில் ரசிகையாய் வந்த கல்லூரி மாணவியைக் கூத்தியாராக வைத்துக்கொள்ளவில்லையா? பாரதி என்ன நார்மலாக நடந்துகொண்ட மனிதனா அவனை ஏன் கொண்டாடுகிறீர்கள்? சாருவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்பது அவர் கேள்வியாக இருந்தது. கூடவே பெண்கள் விஷயத்தில் மற்ற பிரபலங்கள் எல்லாரும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களையெல்லாம் கொண்டாடுவீர்கள்; கேள்விகேட்க மாட்டீர்கள். காரணம், தமிழர்கள் ஹீரோ ஒர்ஷிப் ஆசாமிகள். பாரதி, கண்ணதாசன் என்று எல்லா எழுத்தாளர்களையும் தெய்வமாக்கிவிடுகிறீர்கள் என்று குறைபாடியிருந்தார் அவர்.

நல்லவேளை இந்த மனிதரிடம் திருவிக, ராயசொ, முவ, ஆறுமுக நாவலர் கவிமணி, நாமக்கல் கவிஞர் இவர்களெல்லாம் சிக்கவில்லை. இன்னமும் ரோமன் போலன்ஸ்கி, பில்கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கி, கென்னடி-மர்லின்மன்றோ என்ற சில பெயர்களும் நினைவுக்குவரவில்லை போலிருக்கிறது. அதிலும் பெரிய தமாஷ் என்னவென்றால் இவர்கூறுவதைக் கேட்கவோ ஆமோதிக்கவோ உடன்சேர்ந்துகொள்ளவோ யாரும் ஆள் இல்லை என்றபோதும் சொன்ன ஒரே வாதத்தை, அதுவும் ஒரேவகையான வாதத்தை மீண்டும் மீண்டும் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். தாம் எடுத்த வாந்தியை தாமே வழித்துத் தின்றுவிட்டு மறுபடியும் மறுபடியும் அதே வாந்தியை எடுத்துக்கொண்டிருந்தது போன்ற பரிதாபத்தையே தோற்றுவித்தது அவரது வாதங்கள்.

ஹீரோ ஒர்ஷிப் என்பது எப்படி வருகிறது? சராசரி மனிதனால் செய்யமுடியாததை அது அறிவோ கலையோ விளையாட்டோ படிப்போ எவனொருவன் செய்கிறானோ அவனை வியந்து பாராட்டுவது இயற்கைப் பண்பு. அந்த செயற்பாடு ஒரே சமயத்துடனோ அல்லது ஒரேயொரு வித்தையுடனோ முடிந்துபோய்விட்டால் சின்ன ஆச்சரியத்துடன் அவனைக் கடந்துவிடும் மனிதசமுதாயம் அதே காரியத்தை அவன் தொடர்ந்தாற்போல்- அதுவும் மக்களுக்குப் பிடித்தவகையில் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும்போது- வியப்பு ஈர்ப்பாக மாறிப்போய் அவனைக் கொண்டாடவும் ஆரம்பித்துவிடுகிறான். வியப்பாக இருந்தது ஈர்ப்பாக மாறி ஈர்ப்பு பிரியமாகவும் வடிவெடுத்துவிடுகிறது. கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டுவீரர்கள், நடிகர்கள் இவர்களுக்கெல்லாம் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற ஹீரோ ஒர்ஷிப் என்பது இந்த வகையினதுதான். இவற்றில் சில போலிகளும் உள்ளன என்பது வேறுவிஷயம்.

இப்படி மக்களின் வியப்பிற்கு உரியவராக மாறிய ஒருவரை நான் வியப்பாகப் பார்ப்பதற்கில்லை, எனக்கு அவர்களெல்லாம் சாதாரணம் ஏனெனில் நான் மேதாவி- என்று எவனொருவன் சொல்கிறானோ அவனிடம் சாதாரணமாக எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டியவற்றுள் ஏதோ ஒன்று குறைந்திருக்கிறது என்று பொருள். அவனுக்காக நாம் பரிதாபப்படலாமே தவிர அவன் கருத்துக்களை சிலாகிப்பதற்கில்லை.
பிரபலங்களிடம் அதுவும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரபலங்களிடம் பெண்கள் தாங்களாகவே போய்விழுவதென்பது எம்கேடி காலத்திலிருந்து நடைபெற்றுவரும் ஒன்றுதான். திரைப்படத்துறையில் யார்யாருக்கு யார்யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதெல்லாம் எப்போதுமே பத்திரிகைகளில் அடிபடுகின்ற மக்களுக்கும் தெரிந்த ரகசியங்கள்தாம். திரைப்படத்துறை அப்படித்தான் இருக்கும் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டுதான் அவர்களுக்கு ஆதரவும் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் மக்கள் மதிக்கும் வேறுசில துறைகளில் உள்ள பிரபலங்கள் இப்படிப் பாலியல் குற்றங்களைச் செய்கிறார்கள் எனும்போது மக்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. மனைவியைத் தவிர இன்னொருவருடன் தொடர்பு என்பதை ஒருவாறாக ஏற்றுக்கொண்டாலும் எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் முன் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது.

இன்னொரு பெண் தொடர்பு என்பது எத்தனையோ பிரபலங்களின் வாழ்க்கையில் இருப்பதுதான். அதனைப் பெரும்பாலோர் ஒரு நாகரிக வரம்புக்கு உட்பட்டு அந்தரங்கம் என்ற அளவில் காப்பாற்றிக்கொள்கிறார்கள். இந்த நண்பர் சொன்ன பலரும்கூட இந்தவகையான அந்தரங்கத்தைக் கடைப்பிடித்தவர்களே. அதனால் அவையெல்லாம் ஒரு ரகசியக்கிசுகிசு என்ற அளவுக்குத்தான் ஒரு ரசிகனை அடைந்த விஷயங்கள். இம்மாதிரியான விஷயத்தைத்தொட்டு ஜெயகாந்தன் ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ‘அந்தரங்கம் புனிதமானது’ என்பது கதையின் பெயர். சம்பந்தப்பட்ட நண்பர்கள் அதனை ஒருமுறை படித்துப்பார்ப்பது நல்லது.

மனைவியைத்தவிர வேறொரு பெண்ணுடன் சாருவுக்குத் தொடர்பு இருக்கிறது என்றுமட்டும் ஒரு செய்தி இங்கே பரவியிருந்தால் யாரும் அதுபற்றிக் கவலைப்பட்டிருக்கப்போவதில்லை. சாரு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் என்று வந்திருந்தால் யாரும் அதுபற்றி விவாதம் செய்தோ பதிவு எழுதியோ தங்கள் கோபத்தைக் காட்டியிருக்கப்போவதில்லை. இது அப்படிப்பட்ட விஷயம் அல்ல; சாட் செய்யவந்த ஒரு பெண்ணிடம் எவ்வளவு அசிங்கமாய் எவ்வளவு கேவலமாய் எவ்வளவு ஈனத்தனமாய் ஒரு தமிழ் எழுத்தாளர் நடந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கே விஷயம். அதுவும் அந்த மனிதர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளும் அவரது நோக்கங்களும்...................

ஒருவனுடைய சுதந்திரம் எந்த அளவுக்கு என்பதுபற்றி ஆங்கிலத்தில் சொல்வார்களே, நீ உன்னுடைய கையில் இருக்கும் தடியை எப்படிவேண்டுமானாலும் சுழற்றலாம் ஆனால் அது அடுத்தவன் மூக்கில் படாமல் இருக்கவேண்டும் என்று. மூக்கை அல்ல முகரையையே பேர்க்கின்ற காரியத்தை சாரு செய்யும்போது கண்டுக்காமல் போகவேண்டும் என்பதும் குப்பன் செய்யவில்லையா குட்டையன் செய்யவில்லையா என்று கேட்பதும் என்ன நியாயம்?
சரி..சாருவுக்காக வாதாட வருகிறார்களே அவர்கள், ‘நானே அப்படித்தான். அப்படியிருக்க சாருநிவேதிதா ஏன் அப்படியிருக்கக்கூடாது?’ என்று தங்கள் வாதத்தை வைத்திருந்தாலாவது பரவாயில்லை. பாரதியார் யோக்கியமா, சிவாஜிகணேசன் யோக்கியமா, எம்ஜிஆர் யோக்கியமா,எம்ஆர்ராதா யோக்கியமா,கண்ணதாசன் யோக்கியமா என்று கேட்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

அதிலும் குறிப்பாக கண்ணதாசனைத்தான் சுழற்றிச் சுழற்றிச் சாடுகிறார் இந்த அன்பர். வள்ளியம்மையுடனான அவரது திருமணம் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்தேதான் நடைபெற்றது. அதுபற்றிய புகைப்படத்துடனான கட்டுரைகள் அப்போதே குமுதம் முதல் பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. காமராஜர் கண்டித்தார் என்பதுபோல்கூட ஒரு செய்தியைப் படித்ததாக நினைவு. வேறுமாதிரியான சமூக நிர்ப்பந்தங்களும் தார்மிக நெறிமுறைகளும் ஒருபுறம் இருக்க அந்தப் பெண்மணியும் கண்ணதாசனும் இசைந்தே இந்த ஒப்பந்தம் நடைபெற்றது என்பதில் சந்தேகமில்லை. கண்ணதாசனைப் பற்றி மிகக் கேவலமான கேள்விகளை முன்வைக்கும் அந்த நபர் ‘அவனுக்கு மட்டும் மவுண்ட் ரோட்டில் வெண்கலச்சிலை வைத்துக் கொண்டாடுகிறீர்களே ஏன்?’ என்ற கேள்வியை நான்கைந்துமுறை கேட்கிறார்.

ரொம்ப நல்லது. அந்த மகாகவிஞனுக்கு இந்த நண்பரின் வாய்முகூர்த்தப்படி மவுண்ட் ரோட்டிலும் ஒரு சிலை வைத்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து கவிஞருக்கு மவுண்ட் ரோட்டில் சிலை இல்லை. சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டித்தெருவில்தான் வாணிமகாலுக்கு அருகில் கவிஞரின் சிலை உள்ளது. இன்னொரு சிலை காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்து வாசலில் உள்ளது. அதுதவிர மேலும் சிலைகள் ஜெயலலிதா ஆட்சியில் வைத்தால்தான் உண்டு. ஏனெனில் கலைஞர் அவருக்கு சிலையோ அல்லது வேறு எந்தச் சிறப்புக்களுமோ செய்யமாட்டார். சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த ஒரு பிரச்சினையை வைத்துக்கொண்டு கண்ணதாசனைப் படுகேவலமாக விமர்சிக்கும் அந்த நண்பருக்கு கவிஞர் என்பதற்கு அப்பாற்பட்டு கண்ணதாசன் எத்தனை அற்புதமான மனிதர் என்பது தெரியுமா? மற்றவர்களுக்கு உதவுவதிலும் பழகுவதிலும் எந்தளவு மனிதாபிமானம் கொண்டவர் என்பது தெரியுமா? எத்தனை மனித நேயம் கொண்டவராக எவ்வளவுபேருக்கு உதவியிருக்கிறார் என்பது தெரியுமா? அவரது நல்ல சுபாவத்தைப் பயன்படுத்திக்கொண்டு எத்தனைப்பேர் அவரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியுமா? இது ஒரு பக்கம்- மறுபுறம் அவரது துறையை எடுத்துக்கொண்டால் அவர் ஈடுபட்டிருந்த துறையில் எத்தனை விற்பன்னர் தெரியுமா அவர்? எவ்வளவு வேகத்துடன் இலக்கியநயம் சார்ந்த வார்த்தைகள் வந்துவிழும் தெரியுமா அவருக்கு? மெட்டுக்கான பாடலாகட்டும், கவிதைகளாகட்டும் நயாகரா அருவியைப்போல் கொட்டும் மகத்துவம்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா அவர்? தம்முடைய மூன்றாவது திருமணம் பற்றி “இப்படி நடந்திருக்கக்கூடாது. ஆனால் விதிவசத்தால் நடந்துவிட்டது. என்னுடைய சில பலவீனங்களே இதற்குக் காரணம்” என்று கருத்துத் தெரிவித்திருந்த கவிஞர், அந்த அம்மையாரை எப்படியெல்லாம் வைத்துப் பாராட்டினார் சீராட்டினார் என்பது தெரியுமா? அவருக்கு எந்தக் காலத்திலும் பொருளாதாரச்சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வானதி திருநாவுக்கரசு மூலமாக என்னவிதமான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்பது தெரியுமா?

இந்தத் ‘தமிழ்ப்பொண்ணு’ விவகாரத்தில்(தெலுங்குப்பொண்ணு என்று சொல்லவேண்டுமா வால்பையன்?) சாருநிவேதிதா இப்படித்தான் நடந்துகொண்டாரா, அல்லது நடந்துகொள்ளத் தயாரா? இந்தப் பெண் சம்மதித்தால் கண்ணதாசனைப்போல் திருமணம் செய்துகொள்வாரா இந்தப் பின்நவீனத்துவம்? அறுபதுகளிலிருந்தே இன்றைக்குவரை ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நூல்கள் விற்றுத்தீர்ந்து போயிருக்கும் கண்ணதாசன் எங்கே, ஒரு வருடத்திற்கு எண்பது பிரதிதான் விற்றிருக்கிறது என்று புலம்பும் சாரு எங்கே? ஒப்பீடு செய்வதற்குக் கொஞ்சமாவது சமச்சீர் வேண்டாமா? வார்டு கவுன்சிலருடன் பிரதமரையை ஒப்பிட்டுப்பேசுவது?

போகட்டும்....கண்ணதாசனோ அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கும் மற்றவர்களோ பெண்பித்தர்கள் இல்லையா அவர்களை ஏன் கொண்டாடவேண்டும்? என்பது வெளிப்படையாகப் பார்க்கும்போது நியாயமான கேள்விதான். இந்த அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டால் எந்தத் துறையிலும் எந்தப் பிரபலமும் தேறமாட்டார்கள். நாம் பாட்டுக்கு வறட்டுத்தனமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு மோட்டுவளையைப் பார்த்துப் பாயைப் பிறாண்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டியதுதான். அப்புறம் என்னதான் தீர்வு? புத்திசாலிகளுக்கு வள்ளுவன் வழி சொல்லுகிறான்.

ஒருவன் பற்றிய நல்ல தன்மைகளை-குணங்கள் மற்றும் திறமைகளை- ஒரு பக்கம் வை; அவனுடைய தீய தன்மைகளை- தீய குணங்கள் மற்றும் பலவீனங்களை- இன்னொரு பக்கம் வை. எது அதிகமாக இருக்கிறதென்று பார். எது அதிகமோ அதுதான் அவன் என்று தீர்மானித்துக்கொள் என்பதுதான் வள்ளுவர் காட்டும் வழி.

குறள் இதுதான் – ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்’ இந்த பார்முலாவை வைத்துக்கொண்டு நாம் யாரை வேண்டுமானாலும் மிகச்சரியாகவே எடைபோட்டுவிட முடியும். இப்படிப் போடப்படும் எடையில் கவிஞரின் பலவீனங்கள் சிறிதுதான். அவருடைய பெருமைகளும் உயர்வுகளும் மிகமிகப் பெரிது. இதே பார்முலாதான் சிவாஜிக்கும் இதே பார்முலாதான் எம்ஜிஆருக்கும்.,மற்றவர்களுக்கும். இந்த பார்முலாபடி பார்த்தால்கூட சாரு தேறமாட்டாரே. அவருடைய பாலியல் அசிங்கங்கள்தானே அவரது ‘நல்ல’ எழுத்துக்களை விடவும் அதிகமாக உள்ளன.....

சாருநிவேதிதா முன்பிருந்த எழுத்தாளர்களை விடவும் இணைய வாசகர்களிடம் பாப்புலராக இருப்பதற்கு ஒரே காரணம் மற்ற எழுத்தாளர்கள் எழுதத் தயங்கிய பாலியல் பற்றிய விஷயங்களை அப்பட்டமாகவும் வக்கிரமாகவும் தயக்கமின்றி எழுதினார் என்பதால்தான். இதற்காக அவரைத் தமிழ் சமூகம் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாட முடியாது. எழுத்து என்பது பாலியலைத் தாண்டி இன்னமும் பல்வேறு தளங்களைக் கொண்டது. எழுத்தில் செக்ஸ்எழுதுவது என்பதும்கூட ஒரு பரிணாம வளர்ச்சியாக வருவதுதான்.

பாலியல் எழுத்துக்களை அந்தக்காலத்தில் முதன்முதல் படைப்பிலக்கியத்தில் எழுதத் தொடங்கியவர் குபரா தான்.அவரது படைப்புக்களில் ஊடாக பாலுறவு இருக்கும். சொற்களில் வக்கிரம் இருக்காது. இதேபோல் அடிநாதமாக உளவியல் கண்ணோட்டத்துடன் பாலியலைத் தொட்டவர் தி.ஜானகிராமன். திஜா இந்த விஷயத்தில் பெரிய சிரக்கம்பமே செய்திருப்பார். ஜெயகாந்தன்தான் முதன்முதலாக சில வசவுச்சொற்களை தைரியமாகப் பயன்படுத்தியவர். அடுத்து ஜி.நாகராஜன் இன்னமும் கொஞ்சம் முன்னேறினார். கி.ராஜநாராயணன் கிராமியம் கலந்து பலபடி முன்னேறினார். இன்றைக்கு சாருவுடன் சேர்ந்து நிறையப்பேர் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு எழுதுகிறார்கள். இதுவும் ஒருவகையில் சினிமா மாதிரிதான். எம்கேடி பியூசின்னப்பா காலத்தில் சினிமாக்காதலர்கள் பத்தடி தூரத்தில் நின்று காதலித்தார்கள். சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக் கட்டியணைத்து காதல் புரிந்தார்கள். கமலஹாசன் காலத்தில்தான் பட்டும் படாமலுமாக உதடு உரசிய முத்தம் வந்தது. இப்போது சிம்பு தனுஷ் போன்றவர்களெல்லாம் உதட்டோடு உதடு பொருந்திய முத்தமெல்லாம் மிகவும் சாதாரணம் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். அவ்வளவு இயல்பு ஆகிவிட்டது. இதற்காக புரட்சி செய்தவர்கள் என்று தனுஷையும் சிம்புவையும் ஒரு சமூகம்
தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாட முடியுமா என்ன?

தன்னுடைய கதைகளில் செக்ஸ் எழுதும் ஒரு எழுத்தாளன் முகநூல் போன்ற ஒரு பொதுத்தளத்தில் ஒரு பெண்ணிடம் மிகமிக வக்கிரமாகவும் ஆபாசமாகவும் நடந்துகொள்வதை தமிழுலகின் எல்லா பிரபலங்களையும் சான்றுகாட்டி நியாயப்படுத்துவதுபோன்ற செய்கைகளை அங்கீகரிக்கலாகுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

இந்த ஆள் தவறாகப்போகிறார் என்று தெரிந்தபின்னாலும் அந்தப்பெண் அவருடன் ஏன் தொடர்ச்சியாகப் பேசவேண்டும்? என்று கேட்கப்படும் கேள்வி நியாயமானதுதான். ஆனால், இது ஒருவகையில் சாருநிவேதிதாவின் அலப்பரையான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கருதிய சிலரின் கைங்கரியமாகக்கூட இருக்கலாம். ஒரு சில பதிவர்கள் இதற்கான சரியான சந்தர்ப்பம் கருதி காத்திருந்திருக்கூடும் என்றே படுகிறது.
அதாவது இவரது பிராபல்யம் கருதி தொடர்பில் பேசுவதை பெருமையாகக் கருதிய அந்தப்பெண் இவர் வழிதவறுகிறார் என்று தெரிந்ததும் திடுக்கிட்டுப்போய் தனக்குத் தெரிந்த சில பதிவர்களிடம் முறையிட்டிருக்கலாம். அவர்களும் மொத்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சரி அந்த ஆள் எதுவரை போகிறார் பார்த்துவிடலாம் என்று அந்தப்பெண்ணை இப்படியெல்லாம் நடந்துகொள் என்று வழிநடத்தியிருக்கலாம். யாரையாவது கடத்திப்போய் வைத்துக்கொண்டு போன் செய்து மிரட்டுகிறவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களை கடத்தல்காரர்கள் போக்கின்படியே நடக்கச்சொல்லி வழிநடத்தி கடைசியில் கடத்தல்காரர்களைச் சுற்றிவளைத்துப் பிடிக்கிறதே காவல்துறை அதுபோல் தமிழச்சி, ராஜன், வால்பையன் ஆகியோர் அந்தப்பெண்ணை வழிநடத்தி இந்த ஆசாமி முழுக்க மாட்டும்வரையிலும் காத்திருந்து இப்போது கையும் களவுமாய்ப் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

உண்மையில் அப்படி நடந்திருந்தால் தமிழச்சி, ராஜன், வால்பையன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்களே. மொத்த விவகாரத்தையும் இணையத்தின் முன்வைத்து சந்திசிரிக்கவைத்த வினவு தளமும் பாராட்டிற்குரியதே.

சாருநிவேதிதாவின் இந்த முகநூல் உரையாடலில் ஆபாசம் அசிங்கம் வக்கிரம் என்பதையெல்லாம் தாண்டி திருமதி கனிமொழி போன்றோரின் பெயர்களும் இழுக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டியது திமுக இயக்கம் மற்றும் கனிமொழி குடும்பத்தினரின் பொறுப்பு. ஆனால் விவஸ்தை தெரியாமல் நவீன இலக்கியவாதிகள் என்று தவறாக நம்பிக்கொண்டு இம்மாதிரியான ஆட்களையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்துக்கொண்டிருந்ததற்கு கனிமொழிக்குக் கிடைத்த வெகுமதி இது என்றுதான் பரிதாபப்படவேண்டியிருக்கிறது.

எதற்காக இந்த விஷயத்திற்கு இவ்வளவு பெரிய பதிவு என்று கேட்கலாம். எல்லாவற்றையுமே நாம் கவனம் செலுத்தாமல் தவிர்த்துவிடுவோம் என்று கடந்துபோய்விட முடியாது. சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியே ஆகவேண்டியிருக்கிறது.

இல்லாவிட்டால் பார்த்தீனியச்செடிகள் மிக வேகமாய் எல்லா இடங்களிலும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது.

52 comments :

Unknown said...

saaru-ve paaraavaayilla.avarathu sishya kodikal enthentha site-kalil ennenna aabaasam irukkirathu enpathai(vizha vithaiyai)valaithalaththil vithaikkiraarkal.neengal oruvaraavathu niyaayamaaka kural koduththeerkale!nalla pathivu,romba nalaikku piraku.

Thamil said...

Wonderful article.

சிந்திப்பவன் said...

இப்போதான் படிச்சு முடித்தேன் அமுதவன் அவர்களே!
அடேங்கப்பா என்ன ஒரு வீச்சு,நேர்மை,உழைப்பு உங்கள் எழுத்தில்!!இவ்வளவு பொருள் பொதிந்த எழுத்து எவ்வளவு அபூர்வம் ஆகி விட்டது இன்று,குறிப்பாக இணைய தளத்தில்!!
நான் ஒரு பேரரசனாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு சிறிய நாட்டையே உங்களுக்கு பரிசாக அளித்திருப்பேன்.அத்தகைய சிறப்பான சொல்லோவியம், நீங்கள் தீட்டியுள்ளது!
சற்று அசைபோட்டுவிட்டு மீண்டும் என் பின்நூட்டத்தை தொடர்கிறேன்.
நன்றி;வணக்கம்

A.R.ராஜகோபாலன் said...

அறுபதுகளிலிருந்தே இன்றைக்குவரை ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நூல்கள் விற்றுத்தீர்ந்து போயிருக்கும் கண்ணதாசன் எங்கே, ஒரு வருடத்திற்கு எண்பது பிரதிதான் விற்றிருக்கிறது என்று புலம்பும் சாரு எங்கே? ஒப்பீடு செய்வதற்குக் கொஞ்சமாவது சமச்சீர் வேண்டாமா? வார்டு கவுன்சிலருடன் பிரதமரையை ஒப்பிட்டுப்பேசுவது?



சாட்டையடி வார்த்தைகள்
சரளமாய் வந்து விழ
சகலரையும்
சகட்டுமேனிக்கு
சரித்திரத்தின் வாயிலாக
விளாசித்தள்ளிய
வலிமையான
கம்பீரமான
அமர்க்கள அலசல் பதிவு
பல புதிய தகவல்களை
அறிந்து கொள்ள
ஏதுவாக அமைந்தது
நன்றி சார்

Amudhavan said...

வருகைக்கும் தங்களின் அழகிய விமர்சனத்திற்கும் நன்றி தமிழன்

Amudhavan said...

தமிழ், தங்களின் பாராட்டிற்கு நன்றி.

Amudhavan said...

அடடே சிந்திப்பவன் அவர்களே என்ன இப்படி வஞ்சனையில்லாமல் பாராட்டியிருக்கிறீர்கள். ஒரு நாடு கிடைப்பதைவிட தங்களைப்போன்ற நண்பர்களின் மனமார்ந்த பாராட்டுக்கள் கிடைப்பதே போதும். மிக்க நன்றி. தங்களின் கருத்துக்களையும் கூறவும்

Amudhavan said...

வனப்பான வார்த்தைகளுடன் வந்து வளமான பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கும் ஏஆர்ஆர் அவர்களுக்கு நன்றி

saarvaakan said...

அருமை,
கண்ணதாசன் தன் வாழ்வின் நடந்த அனைத்து சம்பவங்களையும் மறைத்தது இல்லை.இந்த விஷயம் பர்றி இதுவரை சாரு எதுவும் மறுத்து கூறிய மாதிரியே தெரியவில்லை.
நன்றி

ராஜ நடராஜன் said...

//இன்றைக்கு இணையத்தில் நடைபெறும் இம்மாதிரியான வாதங்கள் தமிழுலகம் இதுவரையிலும் காணாத ஒன்று. இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுவெளியில் நடப்பதற்கு வாய்ப்பில்லை.//

இதனைத் தொடர்ந்த வரிகளும் பதிவின் மொத்த கருத்தைப் பிரதிபலிக்கின்றன.

அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

நீங்கள் சொன்ன எழுத்தாளர்களின் காலத்திற்குப் பிறகு சுஜாதா ஆழ்ந்த உலகஞான விபரிப்பு அனுபவங்கள் கொண்டவராக இருந்தாலும் அவரது எழுத்துக்களை இலக்கியவாதி என்பதை விட வியாபார நோக்கு எழுத்தாளர் என்றே மொத்த மதிப்பீடு செய்யப்படுகிறது.அவரை அடுத்து இலக்கியம் வளர்ந்ததோ இல்லையோ இலக்கியச் சண்டைகள் பெருகிவிட்டன என்பதையே இணைய தேடல் காட்டுகிறது.

ராஜ நடராஜன் said...

//வினவு தளத்திலும் ஜோஅமலன் என்ற ஒருவர் அங்கே சிம்மக்கல் சொன்னதையே இங்கே தம் பங்குக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். //

ஜோ அமலன் தனது தகவல் பரிமாற்றங்கள் பரிபோய்விட்டதால் சிம்மக்கல் என்ற பெயரில் வருவதாக அவரே சொன்னதாக நினைவு.

அவரது கருத்துக்கள் பல திசைகளில் பயணம் செய்து தனது வாதத்திற்கு பலம் சேர்க்க முயற்சி செய்தாலும் தவறான ஒரு காரணத்துக்காக பக்க வாத்திய வாதங்களுடன் விவாதம் செய்த மாதிரியே தோன்றியது.

நீங்களும் நானும் பாரதியாருக்கு சமூகம் சார்ந்த பார்வையிருந்தது என்று சொன்னால் சிம்மக்கல்லின் வாதமோ பாரதியாருக்கும்,சாருவுக்கும்,கண்ணதாசனுக்கும் இருந்த பலவீனங்களை முன் வைக்கிறார்.

இறுதியில் இவர்களின் சமூக பங்களிப்பு என்ன என்பதை எடை போட தவறுகிறார்.

அதே நேரத்தில் ராஜன் சார்ந்து விவாதம் செய்த ராஜப்ரியன் என்பவரின் சொல்லாடல்கள் தனது சரியான சார்பு நிலைக்கு பலவீனத்தையே கொண்டு வந்து சேர்த்தது.

சாரு அவரது நட்பு சார்ந்த வெகுளியாகவும்,திறந்த மனப்பான்மையுடன் இருந்தாலும் உடல்சார்ந்த உணர்வுகளில் மனம் பிறழ்ந்தவரே என்பது அவரது எழுத்தும்,நட்பு வட்டாரமும்,பெண் குறித்த நட்பும் உணர்த்துகிறது.

மனுஷ்யபுத்திரன் கனிமொழி என் நண்பர் என்று இந்த இக்கட்டான சூழலில் சொல்லும் நாகரீகம் இருந்தும் சாருவின் வெளிப்பாடுகள் கனிமொழி மீதான எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக உண்மையான அலசல்!
//சாருநிவேதிதாவின் உரையாடல்களைப் படிக்கும்போது மனப்பிறழ்ச்சி கொண்ட காமாந்தகன் ஒருவன் பிதற்றிய பிதற்றல்களாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.//
சரியாக நாடி பிடித்துள்ளீர்கள்...
அப்பழுகற்ற உண்மை. மனநல மருத்துவரை அவர் நாடுவது நன்று.
//சாட் செய்யவந்த ஒரு பெண்ணிடம் எவ்வளவு அசிங்கமாய் எவ்வளவு கேவலமாய் எவ்வளவு ஈனத்தனமாய் ஒரு தமிழ் எழுத்தாளர் நடந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கே விஷயம். அதுவும் அந்த மனிதர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளும் அவரது நோக்கங்களும்...................//

இதை அவர் ரசிகர்கர் பலர் புரிய மறுக்கிறார்கள்.

//சாருநிவேதிதாவின் அலப்பரையான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கருதிய சிலரின் கைங்கரியமாகக்கூட இருக்கலாம்//

அப்படியான முயற்சியாயினும், அவர்கள் பாராட்டுக்குரியோரே!
தமிழச்சி, ராஜன், வால்பையன் ,வினவு- பாராட்டுக்குரியோரே!

//வார்டு கவுன்சிலருடன் பிரதமரையை ஒப்பிட்டுப்பேசுவது?//
அருமை!!!

//இம்மாதிரியான ஆட்களையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்துக்கொண்டிருந்ததற்கு கனிமொழிக்குக் கிடைத்த வெகுமதி இது என்றுதான் பரிதாபப்படவேண்டியிருக்கிறது.//
உண்மையில் கனிமொழியை எண்ணிப் பரிதாபப்பட்டேன்.

யாரு என்ன ? எழுதியும் துடைத்து விட்டு, நாயைக் கூட்டிக் கொண்டு மெரினா வருகிறாராம், பார்க்க வரட்டாம்.
இவர் நித்திக்குத் துள்ளின துள்ளு மறக்கமுடியுமா?

இப்போ, முதல்வர் சுயநலமற்றவர் எனக் குளுமைப்படுத்தத் தொடங்கிவிட்டார்.
இந்த விவகாரத்தை முதல்வர் பார்வைக்குக் கொண்டு செல்ல முடியாதா?
சங்கராச்சரிக்கு ஒட்ட நறுக்கியது போல், ஏதாவது செய்யலாம்.
மிக ஆழமான ஆய்வு!

பாரதசாரி said...

very very true words//இவர்கள் காலத்திற்குப்பின்பு சுஜாதாதான் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். அவருக்குப்பின் யாருக்கும் அந்த இடம் வாய்க்கவில்லை. //

எண்ணங்கள் 13189034291840215795 said...

அருமையான அலசல்..

நன்று

பாராட்டுகள்..

ஜீவன்சிவம் said...

ஒரு வகையில் பார்க்கபோனால் இந்த முழுபதிவுமே வெட்டி வேலை தான்.
வேறு எதயாவது உருப்படியா செய்திருக்கலாம் இதை எழுதிய நேரத்தில்

Robin said...

நீங்கள் ஒரு கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள், சிம்மக்கல் இன்னொரு கோணத்தில் அணுகியிருக்கிறார். இரண்டு பேர் சொல்வதிலும் பாதி உண்மை இருக்கிறது. இரண்டு பாதியையும் சேர்த்தால் முழு உண்மை கிடைத்துவிடும் :)

//தமிழச்சி, ராஜன், வால்பையன்// இவர்கள் பதிவுகளையும் கமெண்டுகளையும் படித்திருக்கிறீர்களா?

சிந்திப்பவன் said...

அன்புள்ள அமுதவன்,

உங்கள் நிலையிலிருந்து வேறுபடும் என் எண்ணங்கள் முதலில்....

தயவு செய்து,பாரதி,கண்ணதாசன்,ஜெயகாந்தன் சிவாஜி கணேசன் போன்ற மேதைகளை சாரு போன்ற ஜன்மங்களுடன் விளையாடிற்குக்கூட ஒப்பிடாதீர்கள்.
இனி நாம் இசையும் கருத்துக்கள் ...

நான்கு அல்லது ஐந்து "ழ" போட்டு ஒரு பெயர்ச்சொல் உருவாக்கினால் அந்த பெயரில் ஒரு பிரெஞ்சு எழுத்தாளரோ,கவிஞரோ இருப்பார்.
சாரு படு ஆபாசமான கதை ஒன்றை எழுதிவிட்டு,அதை மற்றவர்கள் குற்றம் சொன்னால் ,"இதே போல பிரெஞ்சு எழுத்தாளன் "ழகழோழி" எழுதினால் அது புலிட்சர் பரிசிற்கு பரிந்துரை செய்யப்படுகிறது ஆனால் அதை தமிழ்நாட்டில் ஒருவன் எழுதினால் வசைபாடப்படுகிறது" என உளறுவார்.இது எப்படி இருக்கிறது என்றால் "அமெரிக்க மயாமி கடற்கரையில் நிர்வாணமாக படுத்திருந்தால் ஒருவன் கூட லட்சியம் செய்ய மாட்டான். அதையே நேற்று நான் சென்னை மெரினா கடற்கரையில் செய்ய போலீஸ் கைது செய்துவிட்டனர்"என ஒரு 35 வயது பெண் புலம்புவதுபோல!
இதில் நான் வியப்படைவது என்னவென்றால் இவ்வளவு குற்றசாட்டுக்களுக்கும் சாருவிடமிருந்து எந்த பதிலும் இதுவரை இல்லை.பெரிய கல்லுளி மங்கன்!
என்னைப்பொறுத்தவரை சாரு ஒரு போலி (fake),மனம் பிறழ்ந்தவர்(Pervert) மனநோயாளி (schizophrenic)
சுஜாதா சொன்னது போல "கங்கை நதியில் மிதந்து செல்லும் பழுப்பு நிற கழிவுப்பொருள்"எந்த பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களும் இவரைக்கண்டால்
காததூரம் ஓடி ஒளிவர்.
சாருவையும் கொண்டாட ஒரு இளைஞர் கூட்டம் அலைவது கவலைக்குரியது.ஜோகன் பாரிஸ் சொன்னது போல இவரை முளையிலேயே நறுக்கிவிடுவது நல்லது.மேலும் துக்ளக் போன்ற பத்திரிகைகள் இவரை விட்டு விலகுவதும் நல்லது.
ஒரு நல்ல விவரமான உபயோகமான உங்கள் பதிவிற்கு மீண்டும் என் நன்றி;சிரந்தாழ்ந்த வணக்கம்.

Anonymous said...

கூகுள் அக்கவுண்டு இங்கே திறக்கவில்லை. எனவே அனானிமஸ்.

இவண்

ஜோ. அமலன்

Unknown said...

அண்ணே, அவன் காமப்பிசாசுன்னு இல்லைன்னு நிரூபிக்க எந்த அடிபொடியாவது வர்றானுலா
இல்லையே!

அவனுக்கு கொடி பிடிச்சிட்டு வர்றவன் எல்லாம் அந்த பொண்ணு ஏன் பேச்சை கண்டினுயூ பண்ணிச்சு அதனாலே அந்த பெண் கெட்ட பெண்.

தமிழச்சி கெட்ட பேச்சி பேசுரதாலே அவர் தலையிட்ட இந்த விவாகரத்தால் இந்த இரண்டு பெண்ணும் கெட்ட பெண்.

தட்டி கேட்டதனாலே வினவு இணைய நாட்டாமை.

என்ற ரீதியில் தான் பின்னூட்டுறானுங்க.

இவனுங்க வீட்டு பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு நிகிழ்ச்சி நடந்தா இப்படித்தான் பம்முவானுங்களா?

ஆனா வினவும் தமிழச்சியும் வால்பையனும் ராஜனும் இப்ப நீங்களும்அப்பயும் இப்படித்தான் கண்டிப்பீங்கனு இந்த மரமண்டைகளுக்கு புரியலையே!!!!!

July 2, 2011 12:29 PM

அண்ணே, அவன் காமப்பிசாசுன்னு இல்லைன்னு நிரூபிக்க எந்த அடிபொடியாவது வர்றானுலா
இல்லையே!

அவனுக்கு கொடி பிடிச்சிட்டு வர்றவன் எல்லாம் அந்த பொண்ணு ஏன் பேச்சை கண்டினுயூ பண்ணிச்சு அதனாலே அந்த பெண் கெட்ட பெண்.
தமிழச்சி தலையிட்டதாலே கெட்ட பேச்சி பேசுர அந்த பெண்ணும் கெட்ட பெண்.
தட்டி கேட்டதனாலே வினவு இணைய நாட்டாமை என்ற ரீதியில் தான் பின்னூட்டுறானுங்க.

இவனுங்க வீட்டு பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு நிகிழ்ச்சி நடந்தா இப்படித்தான் பம்முவானுங்களா
ஆனா வினவும் தமிழச்சியும் வால்பையனும் ராஜனும் இப்ப நீங்களும் இப்படித்தான் கண்டிப்பீங்கனு இந்த மரமண்டைகளுக்கு புரியலையே

Anonymous said...

Ok amudhavan

U r not willing to allow me here. I shall post my views in my blog. U can find there how many of ur points r not correct.

After writing I will invite u.

தற்போது தொப்பிதொப்பி என்பவரின் பதிவில் யான் போட்ட கருத்துக்களைப்படித்தால் நலம்.

Jo.Amalan

Amudhavan said...

தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி சார்வாகன்.

Amudhavan said...

சுஜாதா பத்திரிகைகளின் தேவைக்கேற்ப எழுதவைக்கப்பட்டார். நட்பு கருதி பலபேருக்கு எழுதினார்.பத்திரிகைகளின் நிர்ப்பந்தத்திற்கேற்ப அவரை எழுதவைத்துவிட்டனர். அவர் போக்கில் இயல்பானமுறையில் அவர் எழுதியிருந்தாரேயானால் இன்னமும் ஆழமான எழுத்துக்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அவர் எழுதிய வேகத்திலும் பரபரப்பிலும்கூட அவருக்கேயுரிய 'சுஜாதா டச்' அவரது எழுத்துக்களில் தென்பட்டது ஆச்சரியமான ஒன்று.
ஜோ அமலன் பற்றிய தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரி; அவரது பார்வையையும் அதிலுள்ள குறைபாடுகளையும் கனகச்சிதமாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். சாருவைப்பற்றிய தங்களின் கண்ணோட்டமும் சரியானதே.
ராஜப்பிரியனின் சொல்லாடல்கள் ரொம்பவும் வரம்பு மீறியவைதான். அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்றபோதிலும் நாகரிக எல்லைகளைத் தாண்டியிருக்கவேண்டாம்.
தங்களின் அழகிய அலசலுக்கு பாராட்டுக்களும் நன்றியும் நடராஜன்.

Amudhavan said...

ஜோகனின் அலசலும் விரிவானதே. சரியான கணிப்புக்களை வெளியிடும் தங்கள் கருத்துரைகளுக்கு பாராட்டுக்கள்.

Amudhavan said...

ஆமாம் பாரதசாரி, சுஜாதாவின் அந்த இடத்தை இன்னொருவர் இனிமேல்தான் பிடிக்கவேண்டும்.

Amudhavan said...

நன்றி - எண்ணங்கள்!

Amudhavan said...

சரி ஜீவன்சிவம், வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்தே எப்போதும் உருப்படியான காரியங்களையே செய்யத்தொடங்கலாம்.

Amudhavan said...

இரண்டு 'பாதிகளும்' சேர்ந்த முழு உண்மையைக் கண்டுபிடித்துவிட்டீர்களா ராபின்?
தமிழச்சி, ராஜன், வால்பையன் ஆகியோர் 'இந்த' விவகாரத்தில் செயல்பட்ட விதத்தை மட்டும்தான் நான் பேசியிருக்கிறேன்.

Amudhavan said...

ஆமாம் சிந்திப்பவன், தங்களின் மியாமி கடற்கரை உதாரணம் ரசிக்கவைத்தது. அப்படியே பட்டவர்த்தனமான எழுத்துக்களுக்கு மிகப்பெரிய விருதுகள் கொடுக்கப்படவேண்டுமென்றால் சரோஜாதேவி புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும். அவர்களெல்லாம் யார் யார் என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும்.
சோ இவரது மற்ற எழுத்துக்களையெல்லாம் படித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் சோவை ஒரு பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சில தடவை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் கல்கி அகிலன் ஜேகே கண்ணதாசன் போன்றோரின் எழுத்துக்களைத்தவிர தற்போது எழுதும் யாருடைய எழுத்துக்களையும் படிப்பதில்லை என்றுதான் சொல்வார். சுஜாதா கதைகளில்கூட சிலவற்றை மட்டுமே படித்திருப்பதாக சொன்ன ஞாபகம். அதனால் சாருவைப்பற்றித் தெரிந்து எழுதவைக்கிறாரா என்பது தெரியவில்லை.
தங்கள் பாராட்டுக்களுக்கு மீண்டும் என் நன்றி.

Amudhavan said...

சிந்திக்கவேண்டிய கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள் கரிகாலன், சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா என்பது தெரியவில்லை. தங்களின் பாராட்டிற்கு நன்றி.

Amudhavan said...

ஜோஅமலன் தங்கள் கருத்துக்களைத் தடைசெய்யவேண்டும் என்பதெல்லாம் எண்ணமில்லை. கார்த்தி திருமணத்திற்காக கோவை சென்றிருந்ததால் இரண்டு நாட்களாக இணையம் பக்கம் வர இயலவில்லை. தங்கள் கருத்துக்களை எழுதிவிட்டுச் சொல்லுங்கள்.
தொப்பி தொப்பியும் முதலில் தாம் தெரிவித்த கருத்துக்கள் ஒருபுறமிருக்க தற்சமயம் தமது எண்ணங்களைத் தெரிவித்துவிட்டார்.நீங்கள் எழுதியபிறகு சொல்லுங்கள்,நன்றி.

R.S.KRISHNAMURTHY said...

நெஞ்சுக்கு நீதி செய்பவர்களின் எழுத்தை அலசலாம், விமரிசிக்கலாம்.இவருக்கு எதற்கு? எனக்கென்னவோ, சாரு இப்போது நடப்பதை எல்லாம் ரசித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. விரைவிலேயே மீண்டும் அடுத்த (தன்னைப்பற்றிய) ஒரு சர்ச்சைக்கு வித்திடுவார் பாருங்கள்! உங்கள் தார்மீகக் கோபம் உண்மையானது, பாராட்டத்தக்கது!

Amudhavan said...

என்ன செய்து விளம்பரம் தேடிக்கொள்ளலாம், எப்படிப்பேசி பரபரப்பை உருவாக்கி அதிலிருந்து தமது வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துச் செயல்படும் சிலர் எல்லாத்துறைகளிலுமே வெற்றியாளர்களாக வலம் வருவது எப்போதுமே நடைபெறுகிற ஒன்றுதான். நமது நோக்கம் அவர்களல்ல. அத்தகையவர்களை ஒன்றும் செய்யமுடியாது.அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நமது நோக்கமெல்லாம் அத்தகையவர்களை உணர்ந்துகொள்ளாமல் அவர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ளும் சில விட்டில்பூச்சிகளைப்பற்றி மட்டும்தான்.
இரண்டாவது, அத்தகையவர்களுக்கு கைத்தாளம் போட்டு ஏதோ செயற்கரிய செய்தவர்கள் இவர்கள் என்று கருத்துச்சொல்கிறார்களே அந்த மகானுபாவர்களை நோக்கியும்தான் நமது கவலையைத் திருப்பவேண்டியிருக்கிறது.தங்கள் கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி ஆர்எஸ்கே.

சிந்திப்பவன் said...

அன்புள்ள அமுதவன்,

சென்ற ஐந்து ஆண்டு கயவர்கள் ஆட்சியில் ஒவ்வொருத்தனும் அடித்த கொள்ளை,நிலஅபகரிப்பு,அத்து மீறல் என ஒவ்வொரு நாளும்
புகார்கள் வந்து குவிகின்றன.தயாநிதி சிறை செல்லும் நாள் அருகாமையில்.அழகிரி இருக்குமிடம் தெரியவில்லை.
இத்தனை ஊழலுக்கும் காரணமான நம் தமிழினத்தலைவர்,வாழும் வள்ளுவரை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?இந்த வயதில் இப்படி ஒரு ஈனப்பிழைப்பு இவர்க்குத்தேவையா?அல்லது அவர் குற்றமற்றவரா? இவ்வளவு புகார்களும் பொய்யானவையா?
உங்கள் நடுநிலைமை மாறாத விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

Anonymous said...

இதெல்லாம் என்ன கூத்து?

எஸ் சக்திவேல் said...

/சாருநிவேதிதாவின் உரையாடல்களைப் படிக்கும்போது மனப்பிறழ்ச்சி கொண்ட காமாந்தகன் ஒருவன் பிதற்றிய பிதற்றல்களாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.//
சரியாக நாடி பிடித்துள்ளீர்கள்...
அப்பழுகற்ற உண்மை. மனநல மருத்துவரை அவர் நாடுவது நன்று.
//சாட் செய்யவந்த ஒரு பெண்ணிடம் எவ்வளவு அசிங்கமாய் எவ்வளவு கேவலமாய் எவ்வளவு ஈனத்தனமாய் ஒரு தமிழ் எழுத்தாளர் நடந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கே விஷயம். அதுவும் அந்த மனிதர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளும் அவரது நோக்கங்களும்...................//

100 % ஒத்துப்போகிறேன்.

Amudhavan said...

சிந்திப்பவன், கலைஞர் மீதான தங்கள் கோபம் புரிகிறது. பல நடுநிலையாளர்களும் கோபம்கொள்ளும் விதமாகத்தான் அவரது சமீபத்து நடவடிக்கைகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. தக்க சமயங்களில் அவரைப்பற்றியும் நாம் இந்தத் தளத்தில் பேசுவோம். தங்கள் அன்பிற்கு நன்றி.

Amudhavan said...

ஆமாம் அனானிமஸ் இதெல்லாம் என்ன கூத்து?

Amudhavan said...

எஸ்.சக்திவேலின் வருகைக்கு நன்றி. கட்டுரையின் நோக்கத்தை மிகச்சரியாக உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் இந்த விவகாரம் பற்றியும் குறிப்பாக சாருநிவேதிதா பற்றியும் எதற்காக எழுதுகிறீர்கள் என்றெல்லாம் நண்பர்கள் என்னிடம் குறைபட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த இரண்டு விஷயங்கள்தாம் இந்தப் பதிவை இங்கே எழுதக் காரணம்.தங்களின் சரியான பார்வைக்குப் பாராட்டுக்கள்.

குறுக்காலபோவான் said...

இதெல்லாம் ஒரு பொழப்பு?!

குறுக்காலபோவான் said...

நடுநிலையான பதிவு! தொடரட்டும் பயணம்...

Amudhavan said...

குறுக்காலபோவானின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. எதற்காக உங்களுக்கு இப்படியொரு பெயர்? நீங்கள் சரியாக வருபவராகத்தானே இருக்கிறீர்கள்!

Unknown said...

சமீபமாக சில வாரங்களாகத்தான் வலையுலகை வாசித்து, கவனித்து வருகிறேன்.இக்கட்டுரை தெளிவாக,நிதர்சனமாக,நன்கு புரிந்துகொண்டு எழுதப்பட்டுள்ளது.பாராட்டுகள்.இப்படிபட்ட எழுத்துக்குரிய பதிவாளர்களாக நான் இது வரை அடையாளம்,கண்டுள்ளது திரு.ஜோதிஜி,திரு.ராஜ.நடராஜன்,தாங்கள்,இன்னும் பலர் இருக்கலாம்.தொடரட்டும் கருத்தாழமான பதிவுகள்

Amudhavan said...

வாருங்கள் இளஞ்செழியன் தங்கள் வருகைக்கு நன்றி.பொதுவாக பதிவுலகில் நல்ல பதிவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ நல்ல கருத்திடுபவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். பதிவுலகமும் ஒரு மிகப்பெரிய வெட்டி அரட்டை அரங்கமாகத்தான் மாறிக்கொண்டு வருகிறது.'இரு, ஒரு ஆஃப் அடிச்சுட்டுவந்து பேசறேன்' என்றெல்லாம் ரொம்ப சாவகாசமான ஃபீல் காட்டுபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்னும்போது வருத்தமாகவும் பயமாகவும்கூட இருக்கிறது. அப்படியிருக்கையில் உங்களைப்போல் ஆழ்ந்து படித்து சரியானபடி கருத்திடுபவர்கள் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி. வருக.

வால்பையன் said...

salute...........

Amudhavan said...

நன்றி வால்பையன்.

சந்துரு said...

பேரும் புகழும் சேரும் பொழுது கண்ணியமும் கவனமும் அதிகம் கொள்ள வேண்டும் என சில நாதாரிகளுக்கு தெரியவில்லை. இதனால் மானங் கெட்டு கேவலப்படடு ஒழிகிறார்கள்.
இப்படித்தான் ஒரு நாதாரி வரைவதற்கு உலகில் ஒன்றுமே இல்லாததது போல் சர்ச்சைக்குரிய விஷயங்களை வரைந்து சொந்த நாட்டில் ஒண்டுவதற்கு கூட இடமில்லாமல் செத்தொழிந்தான். இதில் அவனுக்கு வக்காலத்து வாங்கும் கழிசடைகள் போன்றவர்கள்தான் சாருவுக்கும் வக்காலத்து வாங்குவார்கள்.

Amudhavan said...

வருகைக்கு நன்றி சந்துரு, படைப்பாளிகள் தங்களின் இயல்பான கற்பனையில் தோன்றுவதை வெளிப்படுத்தும்போது பெரும்பாலும் அவை சர்ச்சைக்குரியதாக அமைவதில்லை. வேண்டுமென்றே பரபரப்பு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் சர்ச்சைகளில் சிக்கினால்தான் நமக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும் வியாபாரம் ஆகும் என்றும் திட்டமிட்டு செயல்படுகிறார்களே அப்போதுதான் விரும்பத்தகாத வில்லங்கங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

Anonymous said...

தனது தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஒரு
அசாத்தியமான மனோ தைரியம் வேண்டும். அது கண்ணதாசனுக்கு தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

அவருடன் இந்த களிசடைகளை ஒப்பிடுவது எவ்வளவு பெரிய தவறென்பது விலங்குகளுக்கு புரியாமலிருக்கலாம்.

ஆனால் மனிதர்களுக்கு...........?

ஐயோ பாவம்..............

ஜோதிஜி said...

ஏனெனில் கலைஞர் அவருக்கு சிலையோ அல்லது வேறு எந்தச் சிறப்புக்களுமோ செய்யமாட்டார்.

ஜோதிஜி said...

உங்கள் நடை எப்பொழுதுமே சர் சர் என்று நகர்கின்றது. படித்துக் கொண்டே வந்த போது கலைஞர் குறித்து சொல்லியதை படித்த போது வாய்விட்டு சிரித்து விட்டேன்.

ஜோதிஜி said...

தொடக்கத்தில் சிந்திப்பவன் எழுதிய கருத்து தான் என் கருத்துமே. நிச்சயம் பரிசளிக்க வேண்டும்.

Post a Comment