சென்னை நுங்கம்பாக்கத்தில்
உள்ள பிரிவியூ தியேட்டரான ஃபோர் ஃபிரேம்ஸ் வழக்கமாய் தயாரான படங்களைத் திரையிட்டுப்
பார்க்கும் திரையுலகப் பிரமுகர்களால் மட்டுமே நிரம்பிவழியும். இப்போதெல்லாம் வருடத்திற்கு
ஒருமுறை அந்தத் தியேட்டருக்கு இந்தியாவை வழிநடத்திச் செல்லும் முக்கியமான தமிழர்கள்
வருகிறார்கள். சமூகத்தின் பலதுறைகளைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஐஏஎஸ்
அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்,
பத்திரிகையாளர்கள், ஓவியர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்று வந்து குழுமுகிறார்கள்.
இவர்கள் அத்தனைப் பேரும் ஒரு மனிதரின் அழைப்பின்பேரில் வருகிறவர்கள்………………
அடுத்து சில நாட்களில்
ஏதோ ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த மனிதரின் ஒன்றரை மணி நேர பேச்சைப்
பெரிய ஸ்கிரீனில் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். அந்தப் பேச்சால் கவரப்பட்டு வியந்துபோய்
அந்த மனிதரின் கைகளைப் பற்றிக் குலுக்குகிறார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு அந்த
மனிதரின் செல்போன் பிரமுகர்களின் தொடர்ச்சியான அழைப்புகளில் திக்குமுக்காடுகிறது. அவ்வளவு
பேரும் தங்களின் கருத்துக்களைப் பாராட்டுக்களைக் குவிக்கிறார்கள். தங்கள் மனதிலுள்ளதை
பேச்சின் மூலம் சொல்வதை விடவும் எழுத்துக்களாய் சொல்வதில் உள்ள சுதந்திரத்தை விரும்பும்
பெரிய மனிதர்கள் தங்கள் கருத்துக்களைக் குறுஞ்செய்திகளாய் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
குறுஞ்செய்திகளால் அவருடைய செல்போன் நிரம்பிவழிகிறது.
அந்த மனிதர் நடிகர் சிவகுமார்!
யார் யாரெல்லாம் வருகிறார்கள்
என்று பார்த்தோமானால் ஆச்சரியமாயிருக்கிறது. அப்துல்கலாமின் செயலர் பொன்ராஜ் இதற்கென்றே
டெல்லியிலிருந்து வருகிறார். ‘மேடம் இன்னைக்கு சீக்கிரமாகவே விட்டுட்டாங்க’ என்று சொல்லி
தமிழக முதல்வரின் செயலாளர் சுடலைக்கண்ணன் ஐஏஎஸ் தமது துணைவியாருடன் வருகிறார். மரியாதைக்குரிய
நீதியரசர் சந்துரு தமது குடும்பத்தாருடன் வருகிறார். இந்தியாவின் முன்னாள் தலைமைத்
தேர்தல் கமிஷனர்கள் வருகிறார்கள். ராஜாராம் ஐஏஎஸ் வருகிறார், உலகின் பல்வேறு பல்கலைக்
கழகங்களில் விசிட்டிங் பேராசிரியராக இருப்பவரும், உலகெங்கும் பல்வேறு ஆடிட்டர்களை உருவாக்கியவருமான
பத்மஸ்ரீ மனோகர் சௌத்ரி வருகிறார். ஜவஹர்லால் நேருவிடம் பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரியான
பி.எஸ்.ராகவன் வருகிறார்………………
தமிழகத்தின் புகழ்பெற்ற
டாக்டர்களான டாக்டர் ராஜேந்திரன், டாக்டர் செங்கோட்டுவேல், டாக்டர் ஜே.வி ஆகியோர் வருகின்றனர்.
டாக்டர் கமலா செல்வராஜ் வழக்கமாய் வருபவர்.
தொழிலதிபர்கள் பழனி.ஜி.பெரியசாமி,
தொழிலதிபரும் இலக்கியவாதியுமான இயகோவா சுப்பிரமணியம், சுமங்கலி சந்துரு, கோயம்புத்தூர்
ராமலிங்கம், கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் ஆகியோர் கண்களில் படுகின்றனர்.
ஏவிஎம் சரவணன், இறையன்பு,
தமிழருவி மணியன் ஆகியோர் ஏற்கெனவே இந்தப் படக்காட்சியைப் பார்த்துவிட்டார்கள் என்ற
தகவலும் கசிகிறது.
அடுத்து ஒரு சின்ன பரபரப்பு.
வெள்ளை நிறத்துக்கு அடையாளமான ராம்ராஜ் காட்டன் நாகராஜ் வருகிறார். சிவகுமாரின் எல்லா
முக்கிய பேச்சுக்களையும் பிரபல சேனல்களில் ஒளிபரப்பும் உரிமையைப் பெறுவதுடன் அவற்றை
சிடிக்களாக்கி பல லட்சம் மக்களிடம் கொண்டுசேர்க்கும் அரிய பணியையும் செய்துவருபவர்
நாகராஜ்.
இத்தனை பிரமுகர்களுடன்
ஃபோர்ஃபிரேம்ஸ் தியேட்டர் நிரம்பி வழிகிறது. முன்னைக்கும் இப்போதைக்கும் ஒரு பெரிய
வித்தியாசம். முன்பெல்லாம் பிரமுகர்கள் தனியராய்த்தான் வந்து செல்வார்கள். இப்போதெல்லாம்
திருமதிகளுடனும் பிள்ளைகளுடனும் வருகிறார்கள். உட்கார இடமில்லாமல் எக்ஸ்ட்ரா நாற்காலிகள்
போடப்படுகின்றன. எவ்வித முணுமுணுப்புமில்லாமல் அமர்ந்து கொள்கின்றனர் பிரமுகர்கள்.
படக்காட்சி ஆரம்பிக்கிறது.
வழக்கமாய் இல்லாத சம்பிரதாயமாக இந்த முறை சிவகுமார் மைக் பிடித்தார். இரண்டொரு வார்த்தைகள்
பேசினார். “நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஆனால் கோவிலுக்குப் போகமாட்டேன். புராண
இதிகாசங்கள் அறநெறி நூல்கள் சொல்லும் நல்ல கருத்துக்களில் ஈடுபாடு உள்ளவன். விவேகானந்தர்
போன்ற மகான்கள் சொல்லியவற்றை மதிப்பவன். அந்த வகையில்தான் வேதாத்ரி மகரிஷி அவர்களையும்
நான் பார்க்கிறேன். தவிர, எந்த சாமியாரையும் நான் பின்பற்றுகிறவன் அல்ல” என்று சுருக்கமாக
முடித்துக்கொண்டார். ‘எந்த சாமியாரையும் நான் பின்பற்றுகிறவன் அல்ல’ என்ற வார்த்தைக்கு
மட்டும் அழுத்தம் கொடுத்ததுபோல் தோன்றியது.
அவருடைய இந்த முன்னுரை
இந்தப் பேச்சிற்கு வேண்டியிருந்தது என்பது புரிகிறது. தமது நீண்ட நெடிய நடிப்புலக வாழ்க்கைக்குப்
பின்னர் அவராகவே தேர்ந்தெடுத்துக் கொண்டது இந்தப் ‘பேச்சாளர்’ என்ற முகம்.
தமிழ்ச் சமுதாயம் பேச்சுகளுக்கும்
பேச்சாளர்களுக்கும் பெயர்போனது. அரசியல் பேச்சாளர், ஆன்மிகப் பேச்சாளர், இலக்கியப்
பேச்சாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என்று நிறைய பேச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில்
எந்த வகையினரிலும் வராமல் தமக்கென்று ஒரு தனி அடையாளத்தை அவர் ஏற்படுத்த நினைக்கிறார்.
தமக்கென்று ஒரு பாதையை அவராகவே போட்டுக்கொள்கிறார்.
எந்த மேடைப் பேச்சுக்கும் சில கிளிஷேக்கள்
உள்ளன. அவற்றில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். சொல்ல நினைத்த
விஷயங்களை புராணங்கள் இதிகாசங்கள் கலந்து சொல்கிறார். உதாரணங்களுக்கு அவர் வெளியில்
அதிகமாகச் செல்ல வேண்டியதில்லை. அவருடைய வாழ்க்கை அனுபவங்களிலேயே அவருக்கு நிறைய சம்பவங்கள்
இருக்கின்றன. நிறைய பெரிய மனிதர்களிடம் ஏற்பட்ட நெருங்கிய நட்பு அவருக்குப் பல கதைகளைச்
சொல்லியிருக்கிறது. அந்தக் கதைகளை ரத்தமும் சதையுமாகத் தோண்டி எடுக்கிறார் -
தேவைப் பட்ட இடங்களில்
அவற்றைத் தொகுத்துத் தருகிறார்!
போலித்தனங்களைக் களைந்த
வாழ்க்கை எது, வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய பண்பாட்டுக் கூறுகள் என்ன, குடும்பம்
என்றால் என்ன, சமூகம் சார்ந்த விழுமியங்கள் யாவை, கலாச்சாரம் கற்றுக்கொடுப்பது எதை,
ஒரு தனி மனிதனின் கடமைகள் என்ன, குடும்பப் பொறுப்புகள் எவை, தாயை போற்றுவது எப்படி,
பெண்களை மதிப்பது எப்படி, மனைவியை நேசிப்பது எப்படி, பெற்றோரை மதிக்கவேண்டிய குழந்தைகளின்
கடப்பாடு என்ன என்று குடும்பத்தில் ஆரம்பித்து சமூகம், நாடு, உலகம் என்று பயணிக்கிறவிதமாகத்
தம் பேச்சுக்களை வடிவமைத்துக் கொள்கிறார்.
முக்கியமான விஷயம் என்னவெனில்
இம்மாதிரிப் பேச்சுக்களை யாராவது பேச ஆரம்பித்தால் இன்றைய சூழ்நிலையில் இந்த சமூகம்
நின்று காதுகொடுத்துக் கேட்காது. ஆல்இந்தியா ரேடியோவைச் சேர்ந்த குமரிஎஸ். நீலகண்டன்
சொல்வதுபோல் ‘நல்ல கருத்துக்களுக்கு எந்தக் கூட்டமும் இருப்பதில்லை. நல்ல அறிவுரைகள்
எந்தக் காதுகளுக்கும் பிடிப்பதில்லை. இலக்கியங்கள் எவரையும் கவர்வதில்லை.’
ஆனால் சிவகுமாரின் பேச்சுக்களுக்கு
இந்த சமூகம் காதுகளைக் கொடுக்கிறது.
பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில்
கூட்டம் சேர்கிறது.
அதைத் தொடர்ந்து முக்கியமான
பேச்சுக்கள் பிரபல சேனல்களில் திருவிழா ஸ்பெஷலாக ஒளிபரப்பப்படுகின்றன. கோடிக்கணக்கான
மக்கள் காத்திருந்து பார்க்கிறார்கள். அந்தப் பேச்சுக்கள் அடங்கிய
சிடிக்கள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. பல பெரிய மனிதர்களின் வீட்டுத் திருமணங்களில்
இவருடைய சிடிக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கப்பட்டு வருகிறவர்களுக்கு தேங்காய்ப் பையுடன்
இலவசமாக விநியோகிக்கப் படுகின்றன.
சமீபத்தில் கோயம்புத்தூரில்
நடைபெற்ற கூட்டத்தில் சிவகுமார் பேச்சைக் கேட்பதற்காக உட்கார்ந்திருந்தபோது பக்கத்தில்
இருந்த ஒரு பெரியவர் சொன்னார். “இரண்டு விஷயங்கள்……….. ஒண்ணு இம்மாதிரியான பேச்சுக்களை
இன்னைக்கிப் பேசறதுக்கு ஆட்கள் கிடையாது. இரண்டாவது, அப்படியே யாராச்சும் பேசினாலும்
யார் கேட்கப் போறாங்க? யாரும் கேட்கப் போறதில்லை. அது அப்படியே காத்தோடப் போயிரும்.
இவரு பேசறாருன்னா ஒவ்வொரு பேச்சும் எத்தனை மக்களைச் சென்றடையுது இல்லையா? அதிலும் இந்தப்
பிள்ளைகளுக்கு இவர் சொல்ற அட்வைஸ் இருக்கு பாருங்க அதை மட்டும் கேட்டு நடந்தாங்கன்னா
எதிர்காலத்தை சிறப்பா அமைச்சுக்கலாம். எத்தனைப் பெரிய கலைஞர் ஆனா தன்னை எத்தனை சிம்பிளா
வெளிப்படுத்தறார் பாருங்க…… அதான் கரூரிலிருந்து புறப்பட்டு வந்திருக்கேன்”
சிவகுமாரின் வெற்றிக்குக்
காரணம் சமூகத்தின் முக்கியமான விஷயங்களைப் பேசுபொருளாக எடுத்துக்கொள்கிறார்.
அதன் உயிர்நாடியைப் பிடிக்கிறார்.
மக்களுக்கு எந்தத் தொனியில்
சொன்னால் போய்ச்சேருமோ அந்தத் தொனியில் அதனை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் இதைவிடவும் முக்கியமான
விஷயம் வேறொன்று இருக்கிறது.
எந்த விஷயமாக இருந்தாலும்
அதைச் சொல்கிறவர் யார், அவர் எப்படிப்பட்டவர், அதைச் சொல்கிற தகுதி அவருக்கு இருக்கிறதா
என்பதைத்தான் முக்கியமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம்.
அவர் என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப
தமது வாழ்வை அமைத்துக்கொண்டிருப்பவர்தானா என்பதைத்தான் மக்கள் முக்கியமாக கவனிக்கிறார்கள்.
ஒழுக்கம் பற்றிப் பேசுபவன்
தன்னளவில் ஒழுக்கசீலனா என்பதைத்தான் அளவுகோலாக வைக்கிறார்கள்.
ஒழுக்கக்குறைவிற்கும்,
சீர்கேட்டிற்கும், தவறுகளுக்கும், மதுபானங்களுக்கும், காமக்களியாட்டங்களுக்கும் பேர்போன திரைத்துறையில், நாற்பது வருடங்களுக்கும்
மேல் பவனிவந்தும் தம்மைப் புடம்போட்டு எடுத்த தங்கமாக வைத்துக்கொண்டிருப்பவர் என்ற
இவரது பிம்பம் இவர் சொல்வதை மக்கள் காதுகொடுத்துக் கேட்க வைக்கிறது.
சத்திய ஆவேசம் பொங்க இவர்
சில கருத்துக்களை வெளிப்படுத்தும்போது இவரது மனதிலிருந்து வரும் கனல் கேட்பவர்களையும்
அதே ஆவேசத்துடன் சுடுகிறது.
சிவாஜியின் புகழ்பெற்ற
வசனங்களை, கலைஞர் எழுதிய காலத்தால் அழியாத வசனங்களை வீரியம் குறையாமல் மேடைகளில் பேசுபவர்
என்றுதான் சிவகுமாரை முதலில் கவனிக்க ஆரம்பித்தது தமிழகம். பிறகு தம்முடன் பழகிய சக
கலைஞர்களைப் பற்றிய அரிய தகவல்களை, மக்கள் அவ்வளவாக அறியாத தகவல்களை அழகாக எடுத்துரைப்பவர்
என்பதாகவும் பார்க்க ஆரம்பித்தது. ஆனால் ‘பெண்’ என்ற தலைப்பில் எப்போது திருப்பூரில்
பேசினாரோ அன்றையிலிருந்து இவரது பேச்சின் வடிவம் மாறியது. ஈரோடு புத்தகச் சந்தையில்
இவரது பேச்சுக்கள் புதிய தளத்திற்கு வித்திட்டன. கம்பராமாயணத்தை நூறு பாடல்களில் சொல்லுவது
என்று இவர் வடிவமைத்துச் சொன்ன ராமாயணக்கதை தமிழ்கூறு நல்லுலகம் இவரை வியப்புடன் பார்க்க
வழிவகுத்தது.
இப்போதெல்லாம் தமிழகம்
தாண்டி கடல்கடந்த தமிழர்களும் அடுத்து இவர் என்ன பேசப்போகிறார் என்பதற்காகக் காத்திருக்க
ஆரம்பித்துவிட்டார்கள்.
மகாபாரதக் கதையை இரண்டுமணி
நேரத்தில் சொல்லப்போவதாக அறிவித்து அதற்கான தயாரிப்பிலும் தற்போது ஈடுபட்டிருக்கிறார்
என்பதனால் அந்த நிகழ்வு எப்போது என்பதற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது தமிழகத்தில்.
இரண்டுமணி நேரம் என்பது
இரண்டரை மணி நேரமாகவும் ஆகலாம். ஆனால் அத்தனைக் குறுகிய நேரத்தில் மகாபாரதக்கதையைச்
சொல்வது என்பதற்காக இவர் தேர்வு செய்திருக்கும் வடிவம் ரொம்பவும் புதுசு.
தொழிலதிபரும் வேதாத்ரி
மகரிஷியின் அறிவுத்திருக்கோவில் நிர்வாகங்களுக்குத் தலைவரும் சமூக சேவகருமான மயிலானந்தத்திற்கு
அவர் செய்துவரும் சேவைகளைப் பாராட்டி பத்மஸ்ரீ பட்டம் கிடைத்ததை கௌரவிக்கும் முகமாக
கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வேதாத்ரி மகரிஷியின் போதனைகளை சாரமாகக்
கொண்டு உரையாற்றினார் சிவகுமார்.
தலைப்பு; ‘அறம்செய விரும்பு’
முழு அளவுக்கும் வேதாத்ரி
மகரிஷியின் அன்பர்களும் சீடர்களும் நிறைந்திருந்த அரங்கம் அது.
‘சாமான்யன் ஒருவன் சந்நியாசியான
அதிசயம்’ என்ற வார்த்தைகளுடன் தமது உரையைத் துவங்கினார் சிவகுமார். இறைவனுக்கு வடிவமில்லை
என்று வள்ளலார் போன்றே உரைத்தவர் வேதாத்ரி. ‘கடவுள் உணரக்கூடிய விஷயம்; விவாதம் பண்ண
வேண்டிய விஷயம் அல்ல’ என்றுதான் காந்தியடிகளும் சொல்லியிருக்கிறார் என்று தொட்டுக்காட்டியவர்
‘மனைவியைக் கொண்டாடுங்கள்’ என்கிறார் வேதாத்ரி மகரிஷி. நாம என்ன செய்யறோமென்றால் பொம்பள
சாமிகளைக் கும்பிடுவோம். பொம்பள சாமி கோவிலுக்குப் போவோம். வீட்டுக்கு வந்ததும் பொண்டாட்டியைத்
தோப்புக்கரணம் போடவைப்போம்’ என்று ஆரம்பத்திலேயே சூடானார்.
பேச்சின் மையத்திற்குப்
போவதற்கு முன்பு வேதாத்ரி மகரிஷி பற்றி சிவகுமார் சொல்லிய பல தகவல்கள் வேதாத்ரி மகரிஷியின்
பக்தர்களுக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வேதாத்ரிக்குத் திருமணமானது,
முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாததால் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக இன்னொரு
பெண்ணை மணமுடித்தது இரண்டு மனைவிகளையும் வைத்துக்கொண்டு உணவுக்குக்கூட வழியில்லாமல்
சிரமப்பட்டது, குடியிருந்த வீட்டையும் இழந்து மனைவிகளுடன் நடுத்தெருவுக்கு வந்து நின்றது
என்று ஆரம்பித்து அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைத்து உலக அமைதிக்கும் மேம்பாட்டிற்குமான
சிந்தனைகளை இன்றைய வாழ்க்கைக்கான நடைமுறை அனுபவங்களுடன் அவர் சொல்லியிருப்பது பற்றி விரிவாகப் பேசிவிட்டு
நல்ல வாழ்க்கைக்கு எதெதை விட்டொழிக்க வேண்டும் என்று மகரிஷி சொல்லியிருக்கிறார் என்ற
விஷயத்துக்கு வந்தார்.
பேராசை, சினம், கடும்பற்று,
முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த ஆறையும் விட்டொழிக்கவேண்டும்
என்று வேதாத்ரி மகரிஷி கூறுகிறார் என்று சொன்னவர் அந்த ஆறு விஷயங்களுக்கும் சொன்ன உதாரணங்களும்
சின்னச் சின்ன வாழ்க்கை சம்பவங்களும்தாம் பேச்சை எங்கோ உயரத்திற்குக் கொண்டுசென்று
நிறுத்தின.
‘ஆசை வேறு தேவை வேறு பேராசை
வேறு’ என்பதற்கு ஒரு பெரும் பணக்காரரின் பேராசைகள் அவரை எந்த நிலைக்குக் கொண்டு சென்று
நிறுத்தின என்ற விவரங்களை இவர் சொல்லியவிதம் எவரையுமே யோசிக்கத் தூண்டும்.
அடுத்து சினம் பற்றிப்
பேசவந்தவர் ஓவியர் மனோகர் தேவதாஸின், உண்மைக்கதையைச் சொன்னார். ஓவியர் மனோகர் தேவதாஸும்
அவரது இளம் மனைவியும் காரில் போய்க்கொண்டிருக்கின்றனர். மனைவி காரை ஓட்டிச் செல்கிறார்.
இளம்பெண்கள் வாகனங்கள் ஓட்டிச் சென்றால் அதைப் பொறுக்காமல் பின்னாலேயே வந்து வம்பு
செய்யும் பொறுக்கிக்கூட்டம் இவரையும் அப்படியே செய்கிறது. பயங்கரமாக விசில் அடித்து
கேலிசெய்து காரைத் தொடர்ந்து விரட்டியபடியே தொல்லை தருகிறது. என்ன செய்தும் சேஸிங்கை
விடமாட்டேனென்கிறார்கள் அந்த இளைஞர்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த இளம்பெண்
காரை 160 மைல் வேகத்துக்கு விரட்டுகிறார். சிறிது தூரம்தான். அந்த சிறிது தூரத்திலேயே
அபாயம் காத்திருப்பது தெரியவில்லை. கொஞ்ச தூரத்திலேயே ஒரு பயங்கரத் திருப்பம். பிரேக்
பிடிக்கமுடியாமல் தலைகீழாகப் புரள்கிறது கார்.
விளைவு, தம்பதியர் இருவரும்
மோசமான விபத்தில் சிக்குகிறார்கள்.
கணவருக்கு பலத்த அடி. மனைவிக்கோ
கழுத்துக்குக் கீழே எல்லா உறுப்புக்களும் செயலிழந்துபோய் படுத்த படுக்கைக்கு ஆளாகிறார்.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல. அடுத்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு இதே நிலையில் படுக்கையில்
கிடந்த மனைவிக்கு சிரம பரிகாரம் பண்ணுகிறார் கணவர். இதில் கணவருக்குக் கண்பார்வை வேறு
படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து கடைசியில் முழுப்பார்வையும் பறிபோய்விடுகிறது.
அந்த நிலையிலும் மனைவியை கவனித்து அந்த அம்மாளின் இறுதி மூச்சுவரை உடனிருந்து கவனிக்கிறார்.
இன்னமும் நடைப்பிணமாய் இன்றைக்கும் வாழ்ந்துவரும் தேவதாஸின் கதையைச் சொல்லிவிட்டு
“ஒரு கணம் ஒரேயொரு கணம் அந்த அம்மாள் மட்டும் சினத்துக்கு ஆளாகாமல் ‘என்ன தம்பிகளா
என்னை சேஸிங் பண்றதுதான் உங்க விருப்பமா? நான் காரை நிறுத்திக்கறேன். நீங்க வேணா போய்க்கங்க”
என்று விட்டுக்கொடுத்திருந்தால் முப்பத்தைந்து வருடம் இப்படி வாழவேண்டி வந்திருக்குமா?’
என்று சோகத்துடன் கேட்டு நிறுத்தும்போது கேட்கிறவர்களின் நெஞ்சம் விம்மித் தணிவதை தவிர்க்கமுடிவதில்லை.
படக்காட்சி முடிந்ததும்
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த திரு சுடலைக்கண்ணன் ஐஏஎஸ் அவர்களின் திருமதி “ஒரு பெண்
கார் ஓட்டிச் சென்றாலேயே சில இளைஞர்களுக்குப் பிடிப்பதில்லை. தொடர்ந்து வந்து வம்பிழுப்பது,
கார் ஓட்டுகிறவர்களின் கவனம் கலையுமாறு நடந்துகொள்வது, கூச்சலிடுவது ஊளையிடுவது போன்றதெல்லாம்
செய்கிறார்கள். ஒருமுறை நான் கார் ஓட்டிச் செல்லும்போது எதிரில் ஒரு சவ ஊர்வலம் வந்தது.
ஓரத்தில் காரை ஒதுக்கினேன். உடனே சில இளைஞர்கள் சவப்பெட்டியில் இருந்த பூக்களை எடுத்து
என் காரின்மீது இறைத்தார்கள். இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள், என்ன செய்வது?” என்று
தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.
முறையற்ற பால்கவர்ச்சி
பற்றிப் பேசும்போது வி.எஸ்.காண்டேகரின் யயாதி கதையைச் சொல்லும் சிவகுமார், ‘செக்ஸ்
என்பது அனுபவித்துத் தீர்ப்பதற்கு அல்ல; அடக்கி ஆள்வதற்கு’ என்கிறார். ‘வங்காள விரிகுடாக்கடலை
நீச்சலடித்துக் கடக்க முடியுமா என்ன? நீந்திக் கடந்தவன் யாருமில்லை. அடக்கி ஆள்பவன்தான்
இருக்கிறான்’ என்கிறார்.
காரல் மார்க்ஸ் – ஜென்னி
இருவரின் வாழ்க்கை, ஜெயப்பிரகாஷ் நாராயண் பிரபாவதி ஆகியோரின் வாழ்க்கை அனுபவம், பாஞ்சாலி
பற்றிய பாரதியின் வரிகள், சீதை, கண்ணகி என்று சிவகுமார் பயணிக்கும் தளம் ஆச்சரியப்படுத்துகிறது.
அறம்செய விரும்பு, ஆறுவது
சினம், இயல்வது கரவேல், ஏற்பது இகழ்ச்சி……………என்று ஆத்திச்சூடியில் சொல்லிச் செல்வதுபோல்
வேதாத்ரி மகரிஷியின் கடைப்பிடிக்கவேண்டிய சொற்றொடர்களை எடுத்துக்கொண்ட சிவகுமார் ஒவ்வொரு
வார்த்தைக்கும் ஒவ்வொரு விளக்கம் தந்துசெல்வது என்று பேச்சின் பாதையை வகுத்துக்கொள்கிறார்.
அதிலும் இரண்டு பிரிவுகள்.
முதலில் பேராசை, சினம்
என்று தொடங்கி வஞ்சத்தில் முடித்தவர் அடுத்த பகுதியை ஏழ்மையிலும் நேர்மை, கோபத்திலும்
பொறுமை, தோல்வியிலும் விடாமுயற்சி, வறுமையிலும் பரோபகாரம், துன்பத்திலும் தைரியம்,
செல்வத்திலும் எளிமை, பதவியிலும் பணிவு என்று ஏழு பகுதிகளாக எடுத்துக்கொள்கிறார்.
ஏழு சொற்றொடருக்கும் ஒவ்வொரு
கதை. அல்லது ஒவ்வொரு உதாரணம்.
அத்தனை உதாரணங்களும் அதுபாட்டுக்கு
செவியைக் கடந்து மனதிற்குள் ஊடுருவி தனக்கென்று ஒரு பத்திரமான இடத்தைத் தேடிப்பிடித்து
நாற்காலி போட்டு உட்கார்ந்துகொள்கிறது. அந்த அளவு வலிமை, அந்த அளவு எதார்த்தம்.
மக்களின் கையைப் பிடித்து
உண்மைக்கு மிக நெருக்கமாகவே பயணிக்கச் செய்வதால் உதாரணங்களும் அதற்கான குறியீடுகளும்
அது உணர்த்தும் செய்தியும் மிகச் சுலபமாக உள்ளே நுழைந்து மனதில் உட்கார்ந்து பிறகு
மனதைவிட்டு அகல மறுக்கின்றன.
ஏழ்மையிலும் நேர்மை – ஒரு
ஆட்டோக்காரரின் நேர்மை,
கோபத்திலும் பொறுமை – காரில்
அடிபட்டு விழும் பேப்பர் போடும் சிறுவன்,
தோல்வியிலும் விடாமுயற்சி
– அக்னிசாட்சி தோல்விக்குப்பின் வீறு கொண்டு எழுந்து சிந்துபைரவி என்ற படத்தை வெற்றிப்படமாக்கும்
கே.பாலச்சந்தர்,
வறுமையிலும் பரோபகாரம்
– அகரம் பவுண்டேஷன் சார்பில் ஐந்தாயிரம் ரூபாய் பண உதவி பெறும் கிழிந்த ட்ரவுசர் போட்டுவரும்
சிறுவன், ‘இந்தப் பணம் தனக்கு மிக அதிகம் என்றும் ‘நேற்றுதான் நடிகர் விஜய் எனக்கு
ஐந்தாயிரம் தந்தார்; எனக்கு அதுவே போதும். ஆகவே இந்தப் பணத்தை கிழிந்த பாவாடை சட்டை
போட்டுவரும் சிறுமிகளுக்கு நல்ல பாவாடை சட்டை வாங்குவதற்குத் தந்துவிடுகிறேன்’ என்று
அறிவிப்பது,
துன்பத்திலும் தைரியம்
– டிபி ஹாஸ்பிடலில் நோயாளிகள் சாப்பிட்டுவிட்டுப் போடும் ரொட்டித்துண்டை எடுத்து வயிறுவளர்க்கும்
தாய் ஒருவர் தன்னுடைய மகன் விபத்தில் திடீர் என்று இறந்துவிட அவனது உறுப்புக்களை மற்றவர்களுக்கு
தானம் செய்ய முன்வருவது,
செல்வத்திலும் எளிமை –
இந்த வார்த்தைக்கு அருட்செல்வர் நா.மகாலிங்கம் உதாரணம் காட்டப்படுகிறார்,
பதவியிலும் பணிவு –இந்த
வார்த்தைக்கு சிவகுமார் சொல்லும் விளக்கம் இன்றைய அரசியல் தலைவர்களை பலத்த சர்ச்சைக்குள்
தள்ளி அவர்களின் மனோபாவத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
57-ல் காமராஜர் முதல்வர்.
அப்போது அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கிறதாம். அதாவது அரசாங்கத்தில் பியூன் வேலையில்
இருப்பவன் எல்லாம் எட்டாவது படிப்பை முடித்தவனாக
இருக்கவேண்டும். இந்த அறிவிப்பு வந்தவுடன் எம்எல்ஏ ஹாஸ்டலில் வேலையில் இருந்த ஒரு பியூன்
மிகவும் வருத்தத்தில் ஆழ்கிறார். ஏனெனில் இந்த அறிவிப்பு நடைமுறைப் படுத்தினால் தன்னுடைய
வேலை போய்விடும். தன்னுடைய வேதனையை எம்எல்ஏ ஹாஸ்டலில் வைத்துப் புலம்புகிறார். ‘வெறும்
ஐந்தாங்கிளாஸ் படித்தவர் முதலமைச்சராக வரலாம். ஆனால் எட்டாவது படிக்கவில்லையென்றால்
பியூன் வேலைக்குக்கூட லாயக்கில்லை என்றால் என்ன அர்த்தம்?’
இவரது புலம்பலைக் கேட்ட
அப்போதைய எம்எல்ஏவான திரு மூக்கையாதேவர் “இதை நீ காமராஜர் வீட்டிற்கு போன் போட்டு அவரது
உதவியாளரிடம் சொல்லு. அவர் காமராஜரிடம் சொல்லி உனக்கு ஏதாவது வழி செய்வார்” என்று சொல்லி
காமராஜர் வீட்டிற்கு போன் போட்டுத் தருகிறார்.
அந்த முனையில் போன் எடுக்கப்படுகிறது.
இங்கிருந்து இந்தப் பியூன்
தன்னுடைய ஆதங்கத்தைச் சொல்கிறார். “இந்தப் புதிய உத்தரவால் என்னுடைய வேலை பறிபோகப்
போகிறது. ஏங்க, அஞ்சாவது படிச்சவர் முதலமைச்சரா வரலாம் என்றால் ஒரு பியூன் எட்டாவது
படிச்சவனாத்தான் இருக்கணும்ங்கறது என்ன நியாயம்?”
“உண்மைதான் நிச்சயமா நியாயம்
கிடையாது. நீ சொல்றது உண்மைதான்” என்று பதில் வருகிறது.
“இதைக் கொஞ்சம் காமராஜர்கிட்டே
சொல்லிடறீங்களா?”
“நான் காமராஜர்தான் பேசுகிறேன்”
என்று பதில் வருகிறது.
இந்தப் பியூன் ஆடிப்போகிறார்.
உடம்பெல்லாம் வெலவெலத்துப் போகிறது.”ஐயா ஐயா தெரியாமப் பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்கய்யா’
என்று இவர் பதற-
“அதெல்லாம் ஒண்ணுமில்லை.
நீ சரியாய்த்தான் பேசியிருக்கே. நாளைக்குக் காலையில நீ என்னை வந்து பார்” என்று சொல்லி
போனை வைக்கிறார் காமராஜர்.
மறுநாள் பயந்துகொண்டே போக
அருகில் அழைத்து அரவணைத்து சோபாவில் தம் பக்கத்தில் அமர வைக்கிறார். எல்லா விஷயங்களையும்
கேட்டுக்கொண்டவர் “உன்னுடைய உத்தியோகத்துக்கு ஒண்ணும் தொந்தரவு வராது. இப்ப இருக்கறவங்க
இருந்துட்டுப் போகட்டும். இனிமே புதுசா வர்றவங்க எட்டாவது படிச்சிருக்கணும் என்று உத்தரவு
போடுகிறேன் போதுமா?” என்று கேட்டு அனுப்பிவைக்கிறார்.
இந்த சம்பவத்தை சிவகுமார்
விவரிக்கும்போது ‘அடாடா எத்தனைப் பெரிய தலைவர் அவர்’ என்று நெஞ்சம் விம்முவதை அடக்கமுடியவில்லை.
இந்தச் செய்திகளை எல்லாம்
எந்த மாடுலேஷனில் எப்படித் தரவேண்டும் என்பது சிவகுமார் என்ற பண்பட்ட திரைக்கலைஞருக்கே
உரித்தான பிரசன்டேஷன் என்றுதான் சொல்லவேண்டும். நிச்சயம் அவர் திரையில் நடிக்காமல்
நேரடியாக மேடைகளுக்கு வந்திருந்தால் இந்த வகை presentation
சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இந்த உரையைக் கேட்டுவிட்டுச்
சென்ற ராஜாராம் ஐஏஎஸ் ‘நாங்கள் உங்கள் வடிவில் விவேகானந்தரைப் பார்க்கிறோம். எந்திரத்தனமாகிவிட்ட
இன்றைய நாகரிக உலகில் மனித இனம் இழந்துவிட்ட நல்ல தன்மைகளை மீட்டெடுக்க மனதை விழித்தெழவைக்கும்
பணியை உங்கள் உரை செய்கிறது” – என்று செய்தி அனுப்புகிறார்.
What a wonderful
presentation…..Every story starts and ends with values. To days youth have to
get exposed to these value system. I hope your wisdom spreads to every home by
air DVD and also in you tube – என்று செய்தி தருகிறார் முன்னாள் குடியரசுத்தலைவர்
அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ்.
“In my view the
message can be taken to younger generation of today only in this form” என்று குறிப்பிடும்
சுடலைக்கண்ணன் ஐஏஎஸ், “very informative well structured and aptly presented. As
usual it is one of your great service to the younger generation” என்கிறார்.
“மகரிஷியே உங்கள் வடிவத்தில்
வந்து பேசியது போல் உணர்ந்தேன்” என்கிறார் எம்.மோகன்.
முன்னாள் பேராசிரியரும்
தற்போதைய தொழிலதிபருமான பழனி ஜி பெரியசாமி “உங்கள் உரை தந்த இந்த வித்தியாசமான அனுபவத்தை
என்னால் என்றும் மறக்கமுடியாது” என்று ஆரம்பிக்கிறார். “The way you have
interpreted and explained the real life situation was so overwhelming and
impressive that everybody was touched with your deep sense of scholastic,
intellectual and moral explanation. Every aspect of the speech, you have
addressed us to how we should live a happy and purposeful life based on some
fundamental values. It is a great guide for leading a noble life. I know those
who had attended the event were emotionally touched by your eloquence and
intrinsic and deep knowledge of Maharishi. I feel proud of you. You are an
extraordinary man. You are not only a great actor, a noble painter, an artist,
a speaker but also a great human being trying to live by example. I am indebted
to you for having invited me to participate in this most unique intellectual
and moral experience…என்று தமது கருத்தைப் பிரதிபலிக்கிறார் அவர்.
இந்த உரையில் சிவகுமார்
பேசியதிலேயே ஹைலைட்டான விஷயம் ஒன்றுண்டு. அது ‘உயர்வு தாழ்வு மனப்பான்மை’ என்ற தலைப்பில்
வருகிறது. உண்மையில் இந்த விஷயத்தை ஒரு பொதுமேடையில், அதுவும் இத்தனை ஆயிரம் பேர் குழுமியிருக்கும்
ஒரு மேடையில் சிவகுமார் போன்ற ஒரு பிரபலம் பேசுவதற்கே முதலில் தயங்குவார்கள். அப்படியே
பேச நேர்கிறது என்றாலும் மேலோட்டமாகவோ பூடகமாகவோ பேசிவிட்டுக் கூடுமானவரை அவசரமாகக்
கடந்துசெல்லத்தான் பார்ப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தை சிவகுமார் நின்று நிதானித்து,
அழுத்தம் கொடுத்து, கேட்கிற அத்தனைப் பேரின் மனதிலும் சென்று ஈட்டி போல் இறங்குகிற
தொனியில் பேசுகிறார். இந்த சமூகத்தையும் அரசாங்கத்தையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திக்
கேள்வி கேட்கிறார். ஏற்கெனவே லேசுபாசாக செம்மொழி மாநாட்டில் இதுபற்றிப் பேசியிருந்தபோதிலும்
இன்னமும் அழுத்தம் கொடுத்து இங்கேயும் அதுபற்றிப் பேசினார் அவர்.
அவர் பேசியது கையால் மலம்
அள்ளும் தொழிலாளர்களைப் பற்றி.
“தொழில் முறையிலே பிறந்தவர்களை
பிறப்பின் அடிப்படையில் பிரித்து பத்து சதவிகித மக்கள் தொண்ணூறு சதவிகித மக்களை ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக சுரண்டிக்கொண்டிருந்தார்கள்.” என்று ஆரம்பிக்கிறவர் நேரடியாகவே விஷயத்துக்கு
வருகிறார். “இந்த நாட்டில் இன்னமும் எட்டு லட்சம் சகோதரர்கள் கையால் மலம் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் இருபத்தி ஏழாயிரம்பேர் கையால் மலம் அள்ளுகிறார்கள். நம்முடைய
மலத்தையே நாம் பார்ப்பதற்குக்கூட எத்தனைக் கூச்சப்படுகிறோம். எவ்வளவு அருவெறுப்பு அடைகிறோம்.
எப்போதாவது ஒருமுறை டாக்டர் மோஷன் டெஸ்ட் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டால் நம்முடைய
மலத்தை அதுவும் ஒரு ஸ்பூன் மலத்தை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு எடுத்துப்போவதற்குள்
எத்தனை அருவெறுப்பு கொள்கிறோம். யோசித்துப் பாருங்கள்.
கோடிக்கணக்கான மக்களின் மலத்தை
தினசரி கைகளால் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதனை இந்த நாட்டில் உடனடியாகத் தடுத்து
நிறுத்த வேண்டும். மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இதெல்லாம் செய்யாமல் சும்மா ஆன்மிக
பூமி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. செவ்வாய்க் கிரகத்துக்கு
ராக்கெட் அனுப்புவதில் பிரயோசனம் இல்லை. முதலில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்”
என்று சிவகுமார் முழங்கியபோது கேட்கிறவர்கள்
ஒருகணம் ஆடித்தான் போனார்கள்.
கொடிசியா அரங்கில் சிவகுமார்
பேசியதைக் கேட்டுவிட்டு இந்தப் பிரிவியூவில் படக்காட்சியாகப் பார்த்தபோது நிறைய வித்தியாசம்
இருந்தது. அங்கே வெறும் பேச்சு மட்டும்தான். இப்போது பேச்சுக்களுக்கான படங்களும் இணைத்திருந்தது. அதிலும் சில புகைப்படங்கள் எடுப்பதற்காக
அவரே புகைப்படக்காரருடன் சிந்தாதிரிப்பேட்டை போன்ற ஏரியாக்களுக்குச் சென்றிருந்தார்
என்பதை அறிந்தபோது அந்த மனிதரின் அர்ப்பணிப்பு வியக்கவைத்தது.
நிஜமாகவே ஒரு மாறுபட்ட
அனுபவம்தான், என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் முக்கியம்.