Friday, July 16, 2010

ஆக்டோபஸூக்கு ஒரு வேண்டுகோள்

நடந்துமுடிந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளின்போது நட்சத்திர வீரர்களை விடவும் ஜெர்மனியின் ஆக்டோபஸ் அதிகமான புகழையும் கவனத்தையும் ஈர்த்ததை சாதாரண விஷயமாகச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு போட்டியின் போதும் எந்த அணி வெற்றிபெறும் என்பதை மிகச்சரியாக கணித்தது அந்தக் கடல்வாழ் உயிரினம்.
இதற்கெல்லாம் அறிவியல் ரீதியான எந்தக் காரணத்தையும் சொல்வதற்கில்லை. பகுத்தறிவு இங்கே பயன்படாது. அதிகபட்சமாக இது தற்செயல் என்று சொல்லலாம்.ஆனால் இந்த விஷயத்தில் தற்செயல் என்ற சமாதானமும் எடுபடாது. ஏனெனில் தற்செயல்கள் ஏழுமுறை எட்டுமுறையெல்லாம் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ஆக்டோபஸ்ஸைப் பொறுத்தவரை இம்மாதிரியான கணிப்புக்கள் இது முதல்முறை அல்லவென்றும் ஏற்கெனவே ஈரோ2008 போட்டிகளின்போதும் இதே போல அத்தனைப் போட்டிகளிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை மிகச்சரியாக அந்த ஆக்டோபஸ் கணித்ததாகவும் அந்தக் காரணத்தினால்தான் இப்போதும் அதன் கணிப்புகளை இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்தார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஆக, இது நிச்சயம் தற்செயல் நிகழ்வல்ல என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
இப்படிச்சொல்வதால் அந்த ஆக்டோபஸ் ஏதோ தெய்வத்தன்மை வாய்ந்தது அது ஒரு அபூர்வப் பிறவி என்றெல்லாம் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. அதே சமயம் அதெல்லாம் ஏமாற்றுவேலை எல்லாமே வெறும் புருடா என்கிறமாதிரியும் பிதற்றத் தேவையில்லை. அப்படிச்சொல்லவும் முடியாது. ஏனென்றால் அத்தனை நிகழ்வுகளும் ஏராளமான பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்கள் டி .வி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில்தான் எவ்வித ஒளிவுமறைவுமின்றி நடந்தது.
அப்படியானால் இந்த நிகழ்வை எந்த வகையில் சேர்க்கலாம்?
அறிவியல்ரீதியாக இதற்கு பதில் சொல்லமுடியாது. பகுத்தறிவு ரீதியிலும் இதற்கு நியாயமான பதில் இல்லை. சிலர் இதனை மதரீதியாக அணுகி தீவிரமான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். எல்லா விஷயங்களையும் எதற்காக மதரீதியாக அணுக வேண்டும் என்று புரியவில்லை. எல்லாவற்றையும் மதரீதியாக அணுகியதால்தான் மீளவே முடியாத சிக்கல்களில் மாட்டிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.
உலகில் நடக்கும் சில ஆச்சரியங்களுக்கு பதில் இல்லை. ஆச்சரியங்களை ஆச்சரியங்களாகவே பார்க்கவேண்டும். அதைவிட்டுவிட்டு தெய்வீகம் அது இதுவென்று கிளம்பினால் மூடநம்பிக்கைகள் வந்து புகுந்துகொண்டு முடைநாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். அல்லது பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் பிய்த்துப்போட்டு பிராண்டிக்கொண்டிருந்தால் இருக்கிற ரசனையும்போய் வாழ்க்கையே வறட்டுத்தனமாகிவிடும்.
அதனால் உலகில் பல்வேறு விஷயங்களுக்கும் இடமிருப்பதைப்போல் ஆச்சரியங்களுக்கும் இடமிருக்கின்றன. ஆச்சரியங்களையும் ரசிப்போம்-சில சமயங்களில் கேள்விகளே கேட்காமல். சர்க்கஸையும் மேஜிக்கையும் ரசிப்பதில்லையா அதுபோல் ரசிப்போம்.
இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

சில கணிப்புகளை அந்த ஆக்டோபஸ் மிகச்சரியாக கணித்திருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த ஆக்டோபஸ்ஸிடம் ஒரேயொரு கேள்வி. ஆக்டோபஸ் இனிமேல் ஜோசியம் சொல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்.
உலகத்தமிழர்கள் அத்தனைப்பேரிடமும் தொக்கிநிற்கும் அந்தக் கேள்விக்கான பதிலை யாராவது வாங்கித்தருவார்களா?

இதுதான் அந்தக் கேள்வி.
'பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?”

2 comments :

Anonymous said...

தெரியாதது, புரியாதது என பலவகை விசயங்கள் முடிவில் அனைத்தும் கடவுள் செயல் என கைவிடப்படுகின்றன! :)

ம.தி.சுதா said...

அருமையான ஆக்கம் சகோதரா.. ஒக்டொபஸ் சாத்திரம் எப்படி வாய்த்தது என்று அறிய இந்தப் பதிவை பாருங்கள்...
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_27.html

Post a Comment