Sunday, September 22, 2013

வாலி என்றொரு மெல்லிய வசந்தம் - 1




உண்மையைச் சொல்லப்போனால் ஆரம்ப நாட்களில் வாலியை சுத்தமாகப் பிடிக்காது. நானெல்லாம் சிறு வயதிலிருந்தே எப்படி நடிகர் திலகத்தின் ரசிகனோ அதே போல அதே அளவுக்குக் கவிஞர் கண்ணதாசனுக்கும் ரசிகன். பொதுவாகவே இம்மாதிரி பிரபலங்களுக்கு எப்போதுமே இருக்கும் அதி தீவிர ரசிக மனப்பான்மையுடன் கூடிய கூட்டத்திற்கு இருக்கும் வெறித்தனமான என்னவென்றே தெரியாத ஒரு உணர்வு எனக்குள்ளும் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் சிவாஜியின் எல்லாப் படங்களையும் பார்ப்பது, சிவாஜியின் படங்கள்வரும் பத்திரிகைகளையெல்லாம் சேர்த்துவைத்துக்கொள்வது, படம் ஓடும் தியேட்டர்கள் முன்னால் சென்று கூடுவது இப்படிப்பட்ட ரசிகத்தன்மை எல்லாம் கிடையாது. அவருடைய அற்புதமான நடிப்பாற்றல், ஏற்ற இறக்கங்களுடன்கூடிய உணர்ச்சிமயமான வசன உச்சரிப்பு, பாடல்களுக்கு அவர் காட்டும் முகபாவங்கள் என்று இப்படிப்பட்ட விஷயங்கள் சிறுவயதிலேயே அவர்பால் ஒருவித மரியாதையை ஏற்படுத்தியிருந்தன. ஆகவே இது மரியாதையுடன் கூடிய ரசிகமனப்பான்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதுபோலவே கண்ணதாசனின் பாடல்கள். அந்த நாட்களில் தெருவெல்லாம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடலும் சரி; ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலும் சரி, அந்த நாட்களில் அந்தப் பாடலின் தமிழ் வரிகள் எழுப்பிய இனிமையான உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பதற்கில்லை. அதே ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் வரும் ‘திங்கள்முடி சூடும் மலை; தென்றல் விளையாடும் மலை’ பாடலும் பாடல் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உணர்வையே தோற்றுவித்திருந்தன. 

இதற்கடுத்து எனக்கு சற்றே விவரம் தெரிந்து நான் பார்த்த படமாக ‘பாவமன்னிப்பு’ படத்தைச் சொல்லலாம். அந்தப் படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் அத்தான் என்அத்தான், காலங்களில் அவள் வசந்தம், சிலர்சிரிப்பார் சிலர் அழுவார், வந்தநாள்முதல் இந்தநாள் வரை, பாலிருக்கும் பழமிருக்கும் போன்ற பாடல்கள் அப்படியே மனதைக் கொள்ளைகொண்டு போயின. அந்த நாட்களில் இந்தப் பாடல்கள் குறித்து ஏதோ போட்டி வேறு வைத்திருந்தார்கள் என்று நினைவு. 

தினத்தந்தியில் போட்டி பற்றி தினசரி விளம்பரங்கள் வந்தபடி இருக்கும். அந்தப் போட்டியைப் பற்றியும் அந்தப் பாடல்கள் குறித்தும் என்னுடைய அப்பாவும் அவரது நண்பர்களும் என்னென்னவோ விவாதித்துக்கொண்டிருப்பார்கள். என்ன விவாதம் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அந்த சமயத்தில் நாள்தோறும் வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த இந்தப் பாடல்களின் வரிகளில் உள்ள செறிவும் பாடல்களின் இனிமையும் சந்தேகத்துக்கிடமில்லாமல் நாம் ரசிக்க வேண்டிய கவிஞர் யார், ரசிக்க வேண்டிய இசையமைப்பாளர் யார் என்பதை இனம் காட்டிவிட்டன என்பதில் சந்தேகமில்லை.

அப்போது என்னுடைய இரண்டாவது சகோதரர் ஒருநாள் ஏதோ ஒரு படத்திற்குப் போய்விட்டு வரும்போது வீட்டில் மாட்டுவதற்கென்று இரண்டு பிரேம் போட்ட போட்டோக்களை வாங்கிவந்திருந்தார். ஒன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் இருந்த சிவாஜிகணேசன், இன்னொரு போட்டோ கவிஞர் கண்ணதாசன். தலையைப் படிய வாரி மஞ்சள் சட்டை போட்டு சைடில் பார்த்தபடி இருந்த போட்டோ.

“எங்கே கிடைத்தது?” என்று கேட்டதற்கு “ஸ்ரீ தியேட்டர் வாசலில் விற்றுக்கொண்டிருந்தார்கள்” என்று சொன்னார்.

“எதுக்குப்பா சினிமாக்காரங்க படமெல்லாம் வாங்கிவந்து வீட்ல மாட்டுறீங்க?” என்றார் அப்பா.

“இருக்கட்டும்பா…..எத்தனையோ படம் மாட்டியிருக்கு. இதுவும் இருந்துட்டுப் போகட்டுமே” என்றார் அண்ணன். அப்போதெல்லாம் எல்லார் வீடுகளிலும் நிறையப் போட்டோக்கள் மாட்டிவைத்திருப்பார்கள்.

“சிவாஜி சரி; கண்ணதாசன் போட்டோ எதுக்கு?” என்றார் அப்பா.

“போப்பா என்னமா பாட்டு எழுதறார்”

“நல்லா எழுதறாருப்பா. ஆனா கடவுள் இல்லைன்றாரே” அப்பா தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்.

“அந்தப் பாட்டெல்லாம் விட்டுருப்பா. நீ வேற பாட்டைப் பாரு” சொல்லியபடியே ஆணியும் சுத்தியலும் கையிலெடுத்துக்கொண்டு இரண்டு படங்களையும் மாட்டத்தொடங்கிவிட்டார் அண்ணன். இரண்டு படங்களும் ஒரு பத்து வருடங்களுக்காவது எங்கள் வீட்டுச் சுவரில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாயிருக்கிறது. ஒரு கவிஞன். அவன் நுழைந்து பத்துவருடங்கள்கூட ஆகியிருக்காது. ஓவர்நைட்டில் முன்னணிக்கு வருகிறான். தொடர்ந்து தன் நிலையைத் தக்கவைத்துக்கொள்கிறான். அவனுடைய படங்கள் அச்சடித்து பிரேம் போட்டு விற்கிறார்கள். அவை வாங்கப்பட்டு வீடுகளில் மாட்டிவைக்கப்படுகின்றன. உலகில் வேறு எந்தக் கவிஞனுக்காவது இப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

அடுத்து கொஞ்ச நாட்களுக்குள் ஒரு புத்தகம் வந்தது. பளபளவென்று பயங்கர கருப்பில் ஒரு அட்டை. அதன் நடுவே அதே அளவு சிவப்பில் ஒரு ரோஜா. கருப்பும் சிவப்பும் திமுகவைக் குறிக்கும் வண்ணங்கள் என்றாலும் எங்கள் வீட்டில் யாருக்கும் திமுக உணர்வெல்லாம் கிடையாது. 

எல்லாருக்கும் பிடித்த தலைவர் காமராஜர்தான். ஆகவே இது கட்சி ரீதியாக இல்லாமல் அந்த அட்டைப்படமே பார்த்தவுடன் கவர்கிறமாதிரியான அழகுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது என்றே சொல்லலாம். அட்டையில் கண்ணதாசன் கவிதைகள் என்றிருந்தது. உள்ளே ஆயில் பேப்பர் வைத்து முழுப்பக்க அளவுக்கு கண்ணதாசனின் வண்ணப்படம். அந்த நாட்களில் அந்தப் புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்தபோது ரொம்பவும் அதிக அளவில் காதல் என்பதாக ஒரு முகச்சுளிப்புதான் வந்தது. ஆனால் உள்ளே நுழைந்தபோது நமக்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன என்பது புரிந்தது. பழைய இலக்கியப் பாடல்களை எடுத்து வைத்து அந்தப் பாடல்களுக்கு விளக்கமாக இவருடைய பாணியில் புதிய வார்த்தைகளில் கவிதை, மாதவி காவியம் என்றொரு நீண்ட கவிதை, தலைவர்களைப் பற்றிய கவிதைகள், இரங்கற்பாக்கள், தாலாட்டு, திரைப்படப் பாடல்கள் என்று நிறைய இருந்தன. கலைவாணர் மறைவைப் பற்றி கலையாவாணர் என்று ஆரம்பித்து எழுதியிருந்த வரிகள் படித்ததும் அழுகையைக் கொண்டுவருமளவுக்கு இருந்தது. சில கவிதைகளின் அழகு மறுபடி மறுபடி படித்து மனப்பாடம் செய்துகொள்ளுமளவுக்கு இருந்தது. 

அவருடைய மாதவி நெடுங்கவிதையை அர்த்தம் தெரிந்ததோ இல்லையோ அந்த நாட்களிலேயே மனப்பாடம் செய்துவிட்டேன். தமிழ் மொழிபற்றி அவர் எழுதியிருந்த ‘முப்பாலுக்கப்பாலோர் பொருளே இல்லை. மூவாதச் சிலம்பின்றி கூத்தே இல்லை’ கவிதை தமிழ் பற்றி வெளிவந்திருந்த மற்ற கவிதைகளை விடவும் பிரமாதமாக இருப்பதாகத் தோன்றிற்று.

இதற்குப்பின் அவருடைய எழுத்துக்களைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். தேடுவதற்கு அவசியமில்லாமலேயே தினந்தோறும் அவரது பாடல்களோ பேச்சுக்களோ வானொலியிலும் பத்திரிகைகளிலும் வந்துகொண்டே இருந்தன. அவரது கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேனோ இல்லையோ அவருடைய தமிழும் எழுத்து நடையும் மிகப்பெரிய ஈர்ப்பை அவர்பால் ஏற்படுத்தின.

இந்தப் பின்னணியில் அந்த நாட்களில் கண்ணதாசனை நேசிக்கவும் வாசிக்கவும் ஆரம்பித்திருந்ததால் மற்ற கவிஞர்களின் பங்களிப்பையும் அங்கீகரிக்கத் தவறவில்லை. திரைப்படங்களில் பாபநாசம் சிவன், கம்பதாசன் ஆரம்பித்து தஞ்சை ராமய்யதாஸ், மருதகாசி, பட்டுக்கோட்டை, சுரதா என்று எல்லாக் கவிஞர்களையும் அடையாளங்கண்டு ரசிக்க ஆரம்பித்த பொழுது மாயவநாதன் பாடல்களும் கவர ஆரம்பித்தன.

‘தண்ணிலவு தேனிறைக்க தாழைமரம் நீர்தெளிக்க’ என்ற படித்தால் மட்டும் போதுமா பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அற்புத இசையில் லாகிரிபோல கிறங்கவைத்தது. யார் எழுதியது என்று பார்த்தால் மாயவநாதன். அடுத்தது பந்தபாசம் படத்தில் ‘இதழ் மொட்டுவிரிந்திட முத்துவிளைத்திடும் சித்திரப்பூம்பாவை’ என்றொரு பாடல்….. ‘இதயத்தில் நீ’ படத்தில் ‘சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ’ என்றொரு பாடல். எல்லாம் மாயவநாதன். ஆகவே கண்ணதாசனுக்குப் பிறகு அடுத்து கவர்ந்தவராக மாயவநாதன்தான் இருந்தார். கூடவே ‘கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு’, ‘எப்போ வச்சுக்கலாம் அதை எப்படி வச்சுக்கலாம்’, ‘நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ’ என்று தொடர்ச்சியாக ஸ்கோர் செய்துகொண்டே இருந்தார் மாயவநாதன். 

இந்தப் பாடல்களின் பட்டியலெல்லாம் எதற்காக இங்கே சொல்லப்படுகின்றன என்றால் கண்ணதாசனைப் போன்றே பாடல்கள் எழுதியவர் வாலி என்று சொல்லப்படுவதுண்டு. மேற்கண்ட பாடல்களை எத்தனைப்பேர் மாயவநாதன் எழுதியவை என்று நினைத்திருக்கப்போகிறீர்கள்? அவையெல்லாம் கண்ணதாசன் பாடல்கள் என்றுதானே நிறையப்பேர் நினைத்திருக்கக்கூடும்! அதனால், அந்தக் காலத்தில் கண்ணதாசன் மாதிரியே பாடல் எழுதிய முதல் கவிஞர் மாயவநாதன்தான். அதற்குப் பின்னர்தான் வாலி. எதற்கும் சமரசம் செய்துகொள்ளாதவர் என்று மாயவநாதனைச் சொல்லுவார்கள். அவருடைய அந்த இயல்புதான் அவருக்கான வாய்ப்புக்களைக் குறைத்துவிட்டன என்று சொல்லலாம்.

இதற்கிடையே கண்ணதாசனின் திமுக விலகல், அதற்காக அவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, ஈவிகே சம்பத்துடன் சேர்ந்து புதிய கட்சி தொடக்கம், பிறகு காங்கிரஸுடன் இணைப்பு என்ற இத்தனை மாறுபாடுகளிலும் வீழ்ந்துவிடாமல் நின்ற கண்ணதாசனின் பாடல்களின் கம்பீரம் அவர்பால் மேலும் ஈர்ப்பையே ஏற்படுத்தின. ஏனெனில் அந்த நாட்களில் இருந்த மொழி உணர்வை வைத்துப்  பார்க்கும்போது திமுகவில் இருந்து, அதற்கு எதிராகத் திரும்பிய ஒருவன் ‘தமிழ்மொழியின் மூலம்’ நிற்கமுடியும் என்பதே யோசித்துப்பார்க்கமுடியாத ஒரு விஷயம். அத்தனை எதிர்ப்பு, அத்தனைப் புறக்கணிப்பு………….

ஆனாலும் வெற்றிகரமாகப் பவனிவந்த கண்ணதாசன் ஒரு ஆச்சரிய மனிதராகவே தென்பட்டார்.

தொடர்ந்து கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்குமான சண்டை, தகராறு என்று என்னென்னமோ செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு காலகட்டத்தில் கண்ணதாசன் இரண்டு பேருக்கு- அதாவது கலைஞர், எம்ஜிஆர் என்ற இருவருக்குமே வேண்டாதவராக இருந்தார். இருவராலும் வெறுக்கப்படுகின்ற மனிதராக இருந்தார். யோசித்துப் பாருங்கள் இப்படி இருபெரும் துருவங்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டு ஒருவரால் தமிழ் நாட்டில் எந்தத் துறையிலாவது நிலைக்கவும் 
நீடிக்கவும் முடியுமா?

நீடித்தார். அதுதான் கண்ணதாசன்!

இந்த சமயத்தில் வாலியின் வருகை நிகழ்ந்தது. வாலி ஏற்கெனவே எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்றாலும் எம்ஜிஆருடன் அவரை முற்றுமுழுதாக இணைத்த படமாக தெய்வத்தாய் படத்தைத்தான் சொல்லவேண்டும். தெய்வத்தாய் படம் 1964-ல் வருகிறது. அதற்கு முன்பேயே முக்தா பிலிம்ஸ் ‘இதயத்தில் நீ’ படத்தில் குறிப்பிடத்தகுந்த நான்கு பாடல்களை எழுதுகிறார் வாலி. ‘பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா’ என்பது ஒரு பாடல். ‘ஒடிவதுபோல் இடை இருக்கும், இருக்கட்டுமே’ என்று கேள்விபதில் பாணியில் ஒரு பாடல், ‘யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன?’ என்று ஒரு பாடல். அதற்கு அடுத்து இன்னொரு பாடல் ‘உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்’ என்ற பி.சுசீலாவின் தேன்குரலில் மிதந்துவந்த இந்தப் பாடல் கண்ணதாசனின் இன்னொரு புகழ்பெற்ற பாடலாகவே பேசப்பட்டது. ஆனால் இந்தப் பாடலை எழுதியவர் வாலி.

சிறிது இலக்கியம் கற்றவர்களால் முதன்முதலாக கவனிக்கப்பட்டவராக வாலி மாறியது இந்தப் பாடலின் மூலம்தான்.

இதற்கடுத்து வந்த படம் கற்பகம். 1963-ல் வந்த கற்பகம் வாலியைத் தனித்தன்மையுள்ள கவிஞராக நிறுத்தியது என்றே சொல்லலாம். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் வியத்தகு இசையும் சுசீலாவின் தேன்குரலும் வாலியின் சொற்களை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன.

படத்தில் மொத்தம் நான்கே பாடல்கள். நான்கு பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. படத்தில் ஆண்குரலே இல்லை. வெறும் பெண்குரலில் நான்கே நான்கு பாடல்களைப்போட்டு அந்த நான்கு பாடல்களையுமே சூப்பர் ஹிட்டாக்கிக் காட்டும்

வித்தையெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கடுத்து எந்த இசையமைப்பாளருக்கும்-ஆமாம் எந்த இசையமைப்பாளருக்கும், இதுவரை வாய்த்ததில்லை

‘அத்தைமடி மெத்தையடி’ பாடல் தமிழகத்தையே குலுக்கிப்போட்டது. அதற்கடுத்த பாடல் ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ மூன்றாவது பாடல் ‘பக்கத்துவீட்டு பருவமச்சான்’, நான்காவது பாடல் ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’ வாலி தமிழக மக்களின் நாக்கில் நிரந்தரமாக வந்து உட்கார்ந்தது இந்தப் படத்தில் இருந்துதான்.

இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அந்தக் காலத்துப் படங்களின் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களில் இவரும் ஒருவர். இவரது வசனங்கள் புகழ்பெற்றவை. நடிகை கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். கற்பகம் படத்தை கே.எஸ்.ஜி ஆரம்பித்தபோது அந்தப் படத்தில் வெறும் சுசீலாவை மட்டும் பாடவைத்து பாடல்கள் போடுவது என்றெல்லாம் திட்டம் இருக்கவில்லை. அதேபோல வெறும் வாலியை மட்டும் வைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதவைப்பது என்பதும் திட்டமில்லை. கண்ணதாசன் இல்லாமல் அந்தக் காலத்தில் பெரிய படங்கள் வராது. அவர்  இல்லாமல் மற்றவர்கள் பாடல்கள் எழுதுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தாம் இருக்கவேண்டும். ஒன்று அவர் கிடைத்திருக்கமாட்டார். அரசியலில் மிகவும் பரபரப்பாக அவர் இருந்த காலகட்டம் அது. இன்று ஒரு ஊர் நாளை இன்னொரு ஊர் என்று அலைந்துகொண்டிருந்த நாட்களில் மற்றவர்களைப் பயன்படுத்திப் பாடல்கள் எழுத வைப்பார்கள். இது ஒரு காரணம். அடுத்த காரணம், குறைவான பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

கற்பகம் படத்துக்கு என்ன காரணத்தினால் வாலியை மட்டும் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பாடல்கள் இப்போதைய வார்த்தையில் சொல்லவேண்டுமானால் சூப்பர் டூப்பர் ஹிட். படமும் பிரமாத ஹிட். இந்தச் சமயத்தில் படத்தின் நூறாவது நாள் விழாவோ வெள்ளிவிழாவோ கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்குத் தலைமைத் தாங்க கண்ணதாசனைக் கூட்டிவருகிறார் கேஎஸ்ஜி. நம்மைப் பாடல் எழுதவைக்காத படவிழாவுக்கு நாம் வருவதா என்பதுபோன்ற ஆதங்கம் எல்லாம் எந்தக் காலத்திலும் வைத்துக்கொள்ளாதவர் கண்ணதாசன். மகிழ்ச்சியோடு வருகிறார். மேடையில் வாலியும் இருக்கிறார்.

அந்த விழாவில் சின்ன அண்ணாமலை பேசுகிறார். “இந்தப் படத்தில் கவிஞர் பாடல் எழுதவில்லை. வேறொருவர் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லாப் பாடல்களுமே பிரபலமாகியிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாய் இருக்கும். ஆச்சரியம்தான். பல ரேக்ளா ரேஸ்களில் ஒன்றுக்கும் ஆகாத சில சோப்ளாங்கி மாடுகள் அதுபாட்டுக்கு ஓடி முன்னால் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இது” என்று பேசிவிட்டார்.

பதறி எழுந்தார் கண்ணதாசன். “நண்பர் சின்ன அண்ணாமலை தவறாகப் பேசிவிட்டார். கற்பகத்தில் வாலி எழுதியிருக்கும் பாடல்களை நான் கேட்டேன். இதோ இப்போது வெளியூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணம் செய்தபோது வழியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டு அத்தைமடி மெத்தையடிதான். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லாமல் சும்மாவெல்லாம் ஒரு பாட்டு இந்த அளவுக்குப் பிரபலமாகிவிடாது. இதே படத்தில் இன்னொரு பாட்டு..பக்கத்து வீட்டு பருவமச்சான் என்று. அந்தப் பாட்டில் ‘பார்வையிலே வடம் புடிச்சான்’ என்றொரு வரி வருகிறது. இப்படி ஒரு வரியை சாதாரணமானவர்கள் எழுதமுடியாது. ஒரு கவிஞனால்தான் எழுதமுடியும்” என்று பேசினார். கவிஞரிடமிருந்து வாலிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுதான்.

அடுத்து வருகிறது தெய்வத்தாய். தெய்வத்தாய்க்கு சற்றே முன்னால் சர்வர் சுந்தரம் படத்தில் வாலி எழுதிய ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ பாடலும் பெரிய அளவில் ஹிட்டடிக்கிறது. 

தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம். இந்தப் படத்தில் மற்ற பாடல்களும் பெரிதாக ஹிட் ஆனவைதாம் என்றபோதிலும் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் எம்ஜிஆர் பிராண்ட் பாடலாக பெரிதும் விரும்பப்பட்டு ரசிக்கப்பட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அதற்கு முன்னரேகூட எம்ஜிஆருக்காக அவருடைய பிராண்ட் பாடலை வாலி எழுதியிருந்தபோதும் மிக மிக அதிகமாக சிலாகிக்கப்பட்ட பாடலாக இதைத்தான் சொல்லவேண்டும். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றால் அந்த மூன்றெழுத்து என்ன என்ற விவாதம் சாமான்ய மக்களிடையே எல்லாம் நடந்தது. ‘கடமை அது கடமை’ என்றே பாடல் பதில் சொன்னபோதும், கொள்கை என்று சிலர் அர்த்தம் கற்பித்தனர். இல்லை, திமுக என்பதைத்தான் எம்ஜிஆர் இப்படிப் பாடியிருக்கிறார் என்றனர் சிலர். எம்ஜிஆர் அண்ணாவைத்தான் சொல்கிறார் என்றனர் சிலர். ‘தமிழ்’ என்றனர் சிலர். எம்ஜிஆரைக் கொண்டாடிய ரசிகர்கள் அந்த மூன்றெழுத்து எம்ஜிஆர் என்றனர். இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க அந்த மூன்றெழுத்து என்ன என்பதற்குத் தன்னுடைய பாணியில் விளக்கம் சொன்னார் சோ.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடுகிறாரே எம்ஜிஆர் அந்த மூன்றெழுத்து என்ன? என்பது சோவிடம் கேட்கப்பட்ட கேள்வி.

அந்த மூன்றெழுத்து மூக்கு’- என்பது சோ சொன்ன பதில்.

ஆக, சில பாடல்கள் மக்களிடையே சமூகத்தில் எவ்விதமாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்காகத்தான் இதையெல்லாம் இவ்வளவு விரிவாகச் சொல்லவேண்டியிருக்கிறது. புகழ்பெற்ற பாடல்கள் என்றால் இப்படியெல்லாம் தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும். அப்படியில்லாமல் ஒரு சிலருக்கு மட்டும் பிடித்துப்போய் அவர்கள் தங்களின் ரசனைக்கேற்ப அந்தப் பாடலைத் தங்களின் ஐபாடிலோ அல்லது கார் ஸ்டீரியோவிலோ மட்டும் போட்டுக்கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ‘ஆஹா என்ன அருமையான பாடல்… இந்தப் பாடலுக்கு இணை எதுவுமே இல்லை. இதனை இசையமைத்தவருக்கு இணை யாருமே இல்லை’ என்றெல்லாம் இணையம் உட்பட பல இடங்களிலும் உளறிக்கொட்டிக்கொண்டிருப்பதையெல்லாம் காண நேர்கிறது. ‘சமூகத்தில் இறங்கி மக்களிடையே சென்று புழங்கியதா?’ என்பதுதான் கேள்வி. மக்களின் நாவில் பத்து ஆண்டுகள் இருபது ஆண்டுகள் தாண்டி உட்கார்ந்திருக்கிறதா என்பது கேள்வி. அந்தப் பாடலைச் சட்டென்று மக்களால் அடையாளப்படுத்த முடிகிறதா என்பது கேள்வி. இப்படிப்பட்ட அடையாளங்களை வாலியின் பாடல்களால் ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அவரது சாதனை.

மீண்டும் தெய்வத்தாய் படத்திற்கு வருவோம். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் பாடலுக்கு அடுத்து ‘இந்தப் புன்னகை என்ன விலை? என் இதயம் சொன்ன விலை’ என்ற பாடல் ஹிட். அதற்கடுத்து ‘வண்ணக்கிளி நீ சொன்ன மொழியே என்ன மொழியோ? வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ’ என்ற பாடல் மெல்லிய மேற்கத்திய இசைக் கலப்புடன் சேர்ந்து மென்மையாக இதயத்தை வருடும் பாணியில் மெல்லிசை மன்னர்களால் இசையமைக்கப்பட்டு பிரபலமானது. ‘காதலிக்காதே கவலைப்படாதே’ உட்பட ஐந்து பாடல்கள் வாலிக்கு. ஒரு பாடலை மட்டும் ஆலங்குடி சோமு எழுதியிருந்தார். இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு பாடல் ‘பருவம்போன பாதையிலே என் பார்வையை ஓடவிட்டேன்’ வாலி எழுதியதுதான்.

மெல்லிசைக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் மெல்லிசை மன்னர்கள் படைத்து, குறிப்பாக சுசீலாவைப் பாடவைத்திருக்கும் சில பாடல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது மனம் லேசாகி மிதந்து கரையும். அந்தப் பாடல் சோகரசம் ததும்பியது இல்லையென்றாலும் மனதில் இனம்புரியாத ஒரு சோகம் படர்ந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். மெல்ல மெல்ல தாலாட்டியது போன்று தோன்றும். அந்தப் பாடலின் இசையும் வரிகளும் ஆண்டாண்டு காலமும் மனதில் தங்கிவிடும். அப்படிப்பட்ட அனுபவங்களையெல்லாம் மெல்லிசை மன்னர்களின் அற்புதப் பாடல்கள் ஏற்படுத்திவிடும். 



பி.சுசீலாவின் குரலில் வந்த பாடல்களின் ஒரு சிறிய பட்டியலைப் பார்ப்போமா? நினைக்கத் தெரிந்த மனமே பாடல் அப்படிப்பட்டதுதான். (இதில் நிஜமாகவே சோகரசம் உண்டு) தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், காதலெனும் வடிவம் கண்டேன், மாலைப்பொழுதின் மயக்கத்திலே, காணவந்த காட்சியென்ன வெள்ளிநிலவே, மயங்குகிறாள் ஒரு மாது, ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், காதல் சிறகை காற்றினில் விரித்து, அத்தான் என் அத்தான், ஒரே ராகம் ஒரே தாளம், வா என்றது உருவம், மாலை சூடும் மணநாள், சொன்னது நீ தானா, தண்ணிலவு தேனிறைக்க, உனது மலர்க் கொடியிலே எனது மலர் மடியிலே(இதில் எல்ஆர் ஈஸ்வரியின் குரலும் உண்டு), அத்தை மகனே போய்வரவா, எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என்தலைவன், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, கற்பகம் படத்தின் நான்கு பாடல்கள், ஒருநாள் இரவில் கண்உறக்கம் பிடிக்கவில்லை, அழகேவா அருகே வா, என்னுயிர்த்தோழி கேளொரு சேதி, கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே, கண்ணுக்குக் குலமேது, தூதுசெல்ல ஒரு தோழியில்லையென(இதிலும் எல்ஆர் ஈஸ்வரியின் குரலும் உண்டு), அவள் மெல்லச்சிரித்தாள், என்னை எடுத்து தன்னைக்கொடுத்து, அத்தைமகள் ரத்தினத்தை, உன்னை ஒன்று கேட்பேன், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, நெஞ்சத்திலே நீ நேற்றுவந்தாய், தமிழுக்கும் அமுதென்று பேர்…………………………………………….

இந்தப் பட்டியல் மிகப்பெரியது. சொல்லிக்கொண்டே போகலாம். இதுவெறும் மெல்லிசை மன்னர்களின் முதல்பாதிப் படங்களிலிருந்து சொல்லப்பட்டவைதாம். அதிலும் குறிப்பாக வெறும் பி.சுசீலாவை வைத்து அவர்கள் தமிழுக்குத் தந்திருக்கும் பாடல்கள். பாடல்கள் அல்ல இவை; கொடைகள்!

மேற்கண்ட பாடல்களில் தண்ணிலவு தேனிறைக்க மாயவநாதன் எழுதியது. கற்பகம், தெய்வத்தாய் படகோட்டி பாடல்கள் வாலி எழுதியவை, மற்ற எல்லாப் பாடல்களுமே கவியரசர் எழுதியவை என்பதையும் சேர்த்தே நாம் இந்தப் பட்டியலைப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அந்த மூவரின் மகத்துவம் புரியும். இந்தப் பாடல்களையெல்லாம் கேட்கும்போதுதான் இன்னிசை என்றால் என்னவென்று தெரியவரும். இசையை வைத்து மனதை எப்படியெல்லாம் நெகிழவைக்க, உருகவைக்க முடியும் என்பதும் புரியவரும்.

ஆக, விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் வந்து சேர்ந்தது வாலியின் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். தெய்வத்தாய்க்கு அடுத்து அதே 1964-ல் வாலி தம்மை ஒரு முழுமையான கவிஞராக நிரூபித்த படம் படகோட்டி. படகோட்டியின் அத்தனைப் பாடல்களுக்கும் சொந்தக்காரர் வாலிதான். வாலியின் மிகவும் சிறந்த பாடலாகப் பேசப்படும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ பாடலும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலும் படகோட்டியில்தான் வந்தன. அதிலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தனித்து நின்றது. இது வெறுமனே சினிமாவுக்கான ஒரு பாடல் என்பதைத்தாண்டி தினமும் கடலில் மீன்பிடிக்கச் சென்றுவரும் ஒரு மீனவனின் உடலுக்குள் புகுந்து அவனுடைய உதிரமாய் உணர்வுகளாய் வெளிவந்த ஒரு பாடலாகத்தான் இந்தப் பாடலைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும் வாலியை இன்னமும் பல படிகளுக்கு மேலே உயர்த்தின. பி.சுசீலாவின் குரலில் ‘என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி’ பாடல், மனதின் ஏக்கங்களைக் கடல் அலைகள் போல் வாரி வாரி அடித்தது. ‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ பாடலும் சற்றே கொண்டாட்ட லாகிரியுடன் இசைக்கப்பட்டிருந்தது.
ஆனால் படகோட்டி படத்தின் பாடல்கள் டிஎம்சௌந்தரராஜனுக்கானவை. ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தொடங்கி ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ மற்றும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ ஆகிய பாடல்கள் கிறங்கடித்தன (இப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை வரிசைப்படுத்தினால் தவறாமல் இடம்பெறும் பாடல், ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’). ‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்’ பாடலில் கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் தம்முடைய அற்புதக் குரலில் அனாயாசமாகக் கொண்டுவந்திருப்பார் டிஎம்எஸ். ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’ ஆகிய இரண்டு பாடல்கள் டிஎம்எஸ்ஸூம் பி.சுசீலாவும் சேர்ந்து மறக்கமுடியாத பாடல்களாகச் செய்திருந்தனர்.
படகோட்டிக்கு அடுத்து வாலி ஸ்கோர் செய்தது ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில்தான். அதற்கும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கண்ணதாசன் மற்ற பாடல்களை எழுதியிருக்க வாலியின் “பருவம் எனது பாடல்” பாடலும், “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை” பாடலும் புகழ்பெற்றன. அடுத்து வந்த படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை. 1965-ல் வந்த இந்தப் படம்தான் வாலியை இன்றுவரை நினைக்கும் அளவுக்குத் தூக்கி நிறுத்தியது.  

அதுவரை வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய

எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.



இந்தப் பாடலைத்தவிர ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’, பாடலும் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடலும் வாலிக்குப் புகழ் சேர்த்தன. (வாலி அடிக்கடி ஒரு கிளிஷே போல இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். தெய்வத்தாயில் வாடகை, விலை, இதயம் என்ற கான்செப்டை ஆரம்பித்தவர் நிறையப் பாடல்களில் திரும்பத் திரும்ப இதையே சொல்லியிருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை’……….’.என் இதயம் சொன்ன விலை’, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்……………வாடகை என்ன தரவேண்டும்?)
அடுத்துவந்த பஞ்சவர்ணக்கிளியில் புரட்சிக் கவிஞரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலுக்கு அடுத்து (இங்கே இசை ரசிகர்கள் கொஞ்சம் கவனிக்கவேண்டும். ‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு அடுத்து பாரதிதாசனின் இந்தப் பாடலுக்கு இணையாக இனிமையாக இசையமைக்கப்பட்ட புரட்சிக்கவிஞரின் பாடல் வேறு ஏதாவது இருக்கிறதா? பாரதிதாசனின் பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன. மற்ற எந்த இசையமைப்பாளரையாவது பாரதிதாசனின் ஏதாவது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்பதை விடவும் இனிமையாக இசையமைத்து புழக்கத்தில் விடச்சொல்லுங்களேன். அந்த இசையமைப்பாளரைத் தமிழுலகம் உலகம் உள்ளவரைக்கும் கொண்டாடும்) புகழ்பெற்ற பாடல் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’, மற்றும் ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’……………..

எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு அடுத்து எம்ஜிஆர் படங்களுக்கு வாலிதான் என்று அமைந்துவிடுகிறது.

அடுத்து வருகிறது ‘பணம் படைத்தவன்.’ இதில் மொத்தம் ஏழு பாடல்கள். ஏழு பாடல்களில் ஆறு பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன. முக்கியமானவை இரண்டு பாடல்கள். ஒன்று – ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’, இரண்டாவது ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’. இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும் லட்சக்கணக்கானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி.

அதிலும் ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்’ என்ற ஒற்றை வரியில் காதலனின் பிரிவு நுட்பத்தைச் சொல்லும் இடத்தில் வாலி மிக உயரத்தில் நிற்கிறார் என்பதை உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

கண்போனபோக்கிலே கால்போகலாமா என்பதும் வாலியின் பெயர் சொல்லும் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தின் மற்ற பாடல்கள்…………’அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்’, ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்’, ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க’, அடுத்தது ‘எனக்கொரு மகன் பிறப்பான்’……………….இதில் எனக்கொரு மகன் பிறப்பான் பாடல் எம்ஜிஆரின் எதிர்ப்பாளர்களால் பரிகாசத்துக்கும் கேலிக்கும் ஆளான பாடல் என்பதையும் குறிப்பிடவேண்டும். எம்ஜிஆருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை வைத்து அவருக்கு எதிரணியில் இருந்தவர்கள் இந்தப் பாடலைச் சொல்லி எம்ஜிஆரின் ரசிகர்களைச் சீண்டுவதும் பதிலுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் ஆவேசமாகச் சீறுவதும், அங்கங்கே சண்டைகளும் கைகலப்புகளும் நிகழவும் காரணமாயிருந்திருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், பாடல்களின் ‘தாக்கம்’ அப்போதெல்லாம் எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது.

கவியரசர் பாடல்கள் எழுதும் படங்களிலும் ஓரிரு பாடல்களை வாலி எழுதுகின்ற சந்தர்ப்பம் நிறையவே வாய்க்கிறது. தம்மை நாடிவரும் சில பட அதிபர்களிடமும் இயக்குநர்களிடமும் “வாலி நல்லா எழுதறான் அவனிடம் எழுதிக்கங்க. எனக்காக காத்திருக்க வேணாம்” என்று கவிஞரே சொன்னதாகவும் கூறியிருக்கிறார் வாலி. குழந்தையும் தெய்வமும் படத்தில் ‘அன்புள்ள மான்விழியே’ பாடலும், ‘நான் நன்றிசொல்வேன் என் கண்களுக்கு’ என்ற இரு பாடல்களை எழுதுகிறார் வாலி. இவை கவியரசரின் மற்ற பாடல்களுடன் சேர்ந்து (குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, பழமுதிர்ச் சோலையிலே, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே பாடல்கள் கண்ணதாசனுடையவை) செம ஹிட்டடிக்கின்றன.

எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம் படத்தில் ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் பஞ்சு அருணாசலம் இயற்றியவை. வாலி எழுதிய ‘நான் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘என்ன உறவோ என்ன பிரிவோ’, ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ மூன்று பாடல்களும் இசை ரசிகர்களைக் கொண்டாடவைத்த பாடல்கள். இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லவேண்டும். விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்ததாகச் சொல்லப்பட்ட ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ படத்திற்கு அடுத்து உடனடியாய் வந்த படங்கள் குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், நீலவானம், நீ………………. ஆகியன. அதனால் இந்தப் படங்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்து வெளியாகாமல் இருந்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதனால் விஸ்வநாதன் பெயரில் வந்தன என்றும் சொல்லப்படுவதுண்டு. அதுபற்றிய விளக்கத்தை எம்எஸ்வியோ அல்லது ராமமூர்த்தியோ இதுவரை சொன்னதில்லை. ஆனால் கலங்கரை விளக்கம், குழந்தையும் தெய்வமும் பாடல்களை வைத்துப் பார்க்கும்போது இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்களே என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
எது எப்படியோ, எம்எஸ்வி முழுக்க முழுக்க ‘தனியாக’ இசையமைத்து வெளிவந்த படம் ‘அன்பே வா’தான் என்று சிலர் சொல்வார்கள். (தொடரும்)

38 comments :

Yaathoramani.blogspot.com said...

கவிஞர் வாலி குறித்த முழுமையான
அருமையான விரிவான பதிவு
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
(வாலி அவர்கள் முதலில்
நல்லவன் வாழ்வான் என்கிற படத்தில்
சிரிக்கின்றோம் நாம் சிரிக்கின்றோம் என்ற
பாடலை எழுதியிருகிறார் என நினைக்கிறேன் )

Amudhavan said...

தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி. இதன் அடுத்த பகுதியை அடுத்த வாரத்திற்குள் எழுதிவிடுவேன் என்று நினைக்கிறேன்.

Jayadev Das said...

\\அவருடைய அற்புதமான நடிப்பாற்றல், ஏற்ற இறக்கங்களுடன்கூடிய உணர்ச்சிமயமான வசன உச்சரிப்பு, பாடல்களுக்கு அவர் காட்டும் முகபாவங்கள் என்று இப்படிப்பட்ட விஷயங்கள் சிறுவயதிலேயே அவர்பால் ஒருவித மரியாதையை ஏற்படுத்தியிருந்தன. ஆகவே இது மரியாதையுடன் கூடிய ரசிகமனப்பான்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.\\ குடுத்த காசுக்கும் அதிகமாவே நடிப்பாரு.............!! ஹா......ஹா....ஹா....

கண்ணதாசன் தமிழ் இலக்கியங்களில் இருந்து வரிகளை அப்படியே எடுத்து போடுவாராமே?

உதாரணம்: கந்தன் கருணை படத்தில் "மனம் படித்தேன் உன்னை நினைப்பதற்கு......" பாடலில்,

கைத்தளம் நான் பற்ற கனவு கண்டேன்
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய்...............

என்ற வரிகள். [எங்கேயிருந்து சுட்டது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்!!]
தனது படங்களுக்கு பட்டுக் கோட்டையாரை பாடல் எழுதச் சொன்னதும் உண்டு..........!!

Amudhavan said...

வாங்க ஜெயதேவ், சிவாஜியைப் பற்றிய தங்களின் ஒற்றைவரி விமர்சனத்தில் அலட்சியத்துடன் கூடிய எள்ளல் தொனி இருக்கிறது. சிவாஜி ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மிகையாக நடித்தார் என்பது உண்மைதான். அந்த மிகையான நடிப்பை மட்டுமே 'எடுத்துவைத்துக்கொண்டு' அவரை ஏதோ ஒரு காமெடி பீஸ் போல எள்ளி நகையாடிவிட்டுப் போகும் தவறை நிறையப் பேர் செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை.

கலையுலக சரித்திரத்தின் மாபெரும் தவப்புருஷர்களில் ஒருவர் சிவாஜி. நடிப்பில் அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. அதையெல்லாம் இங்கு, இப்போது பேசப்போவதில்லை. பல்வேறு அரசியல் காரணங்களால் தமிழர்களின் ஒரு பகுதியினரின் 'சர்வசாதாரண' விமரிசனங்களுக்கு அந்தப் பெருமகனும் ஆட்பட்டுவிட்டார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் தமிழனும் தமிழ்நாடும் இந்தியாவின் பிற மாநிலங்களாலும் குறிப்பாக மத்திய அரசாலும் மதிக்கப்படுவதே இல்லை என்ற உண்மையெல்லாம் இங்கே எத்தனைப் பேருக்கு விளங்கும் என்று தெரியவில்லை.
நீங்கள் பெங்களூரில் இருக்கிறீர்கள். இதுபோல ஒரு விமரிசனத்தை நீங்கள் இந்த ஊர் நடிகர் ராஜ்குமார் மீது எந்த ஊடகத்தின் மூலமோ அல்லது தெருவிலோ வைத்துவிட முடியுமா என்பதை யோசித்துப் பார்த்தீர்களானால் சிவாஜி பற்றி நான் சொல்லியிருப்பதில் உள்ள 'நுண்ணரசியல்' உங்களுக்கு விளங்கும்.

கண்ணதாசன் இலக்கியத்தில் உள்ள வரிகளை எடுத்து ஆண்டிருக்கிறார் என்பது உண்மையே. ('கைத்தளம் நான் பற்றக் கனாக்கண்டேன் தோழி'- என்பதுதானே ஒரிஜினல்?)இந்தப் பாடல் மட்டுமல்ல இன்னமும் நிறையப் பாடல்களில் சில வரிகளைக் காணலாம். ஏன், பாரதியின் வரிகளைப் பல்லவியாகவே போட்டு பாடல் எழுதவில்லையா 'வியட்நாம் வீடு' படத்தில்........

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையாக உள்ளது.

//மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடுகிறாரே எம்ஜிஆர் அந்த மூன்றெழுத்து என்ன? என்பது சோவிடம் கேட்கப்பட்ட கேள்வி.

‘அந்த மூன்றெழுத்து மூக்கு’- என்பது சோ சொன்ன பதில்.//
அவர் பாணிப் பதில். நன்கு ரசித்தேன்.
நான் சோவின் ரசிகன்.

ஜெயதேவுக்கு பொருத்தமான பதில்.
சிவாஜி போகுற போக்கில் விமர்சிக்கக் கூடிய நடிகர் அல்ல!

Jayadev Das said...

இந்தப் புகைப் படத்தை பார்த்தீங்களா?

https://www.facebook.com/photo.php?fbid=332611853549567&set=a.224087264402027.1073741828.223374171140003&type=1&theater

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜெயதேவ்!அரிய படத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி!

Amudhavan said...

வாங்க யோகன், ஜெயதேவும் ஒன்றும் அறியாதவரோ புரியாதவரோ அல்ல; ஆனால் சீண்டிப்பார்க்கலாம் என்பது போன்ற லேசான குறும்பு உள்ளவர் என்றே நினைக்கிறேன்.

Amudhavan said...

Jayadev Das said...

\\இந்தப் புகைப் படத்தை பார்த்தீங்களா?\\

பார்த்திருக்கிறேன். அவர் பற்றிய மிக அரிய புகைப்படங்கள் எல்லாம் உள்ளன. ராஜ்குமாருக்கு ஒரு கர்நாடக அரசு கிடைத்தது போன்ற ஒரு 'அரசாங்கம்' சிவாஜிக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் பெரிய குறை. அந்தக் கலைஞனை அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுகி எம்ஜிஆரை முன்னிறுத்தி இவரை இருட்டடிப்பு செய்யும் அரசியல்தான் ஐம்பதாண்டு காலமாகவும், இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதோ நேற்றைக்கு சினிமா -100 வது ஆண்டுவிழாவில்கூட 'மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத ஒரே நடிகர் எம்ஜிஆர்தான்' என்று தமிழக முதல்வர் பேசுகிறார். அவர் மறந்தும்கூட அந்த நிறைவு விழாவில் சிவாஜி பெயரை உச்சரிக்கவில்லை. நல்லவேளை, நாட்டின் குடியரசுத் தலைவர் உச்சரித்தார்.
ஓட்டுக்காக வேண்டுமானால் எம்ஜிஆர் பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்கலாம். தமிழகம் கடந்துபோய் 'நடிப்புக்காக' எம்ஜிஆர் பெயரை உச்சரித்தோமென்றால் ஒரு பயல் நம்மை மதிக்கமாட்டான். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
ஒரே மூச்சில் படித்தேன். எத்தனை நுணுக்கமாக எழுதியிருகிறீர்கள்!பாராட்டுக்கள். வாலியை மட்டும் கொண்டாடும் பதிவாக இல்லாமல் நல் கவிதை நம்மிடம் இருந்த காலத்தை கொண்டாடும் பதிவாகவே இதை நான் காண்கிறேன். கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல பாடல்கள் பலவற்றை வழங்கியிருப்பது கண்கூடு.

"மெல்லிசைக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் மெல்லிசை மன்னர்கள் படைத்து, குறிப்பாக சுசீலாவைப் பாடவைத்திருக்கும் சில பாடல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும்."

இந்தக் கருத்தோடு நான் நூறு சதவிகிதம் ஒத்துப்போகிறேன். எனக்கு தோன்றுவதுகூட இதுவேதான், மிகச் சரியான வாக்கியம். சும்மாவா சொல்கிறார்கள் அறுபதுகளை தமிழ் திரையின் பொற்காலம் என்று?

சிவாஜியை பலர் கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கு குறித்து சொல்லியிருக்கிறீர்கள். நான் கூட என் பள்ளிநாட்களில் சிவாஜியை கேலி செய்து பேசியதுண்டு. அதற்கு காரணம் 70 களின் பிற்பகுதியில் அவர் நடித்த படங்களே. ஆனால் அவரின் முதல் நூறு அல்லது நூற்றைன்பது படங்களில் அவர் எல்லாவற்றையும் நடித்து முடித்துவிட்டார் என்பதே உண்மை. குறிப்பாக அந்த நாள் படம் ஒரு மகா ஆச்சர்யம்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

ஒரு புத்தகம் வாங்கினால் கூட இலவச இணைப்பு என கொடுப்பதுண்டு, சில சமயம் மெயின் புத்தகம் விட இலவச இணைப்புகள் கனஜோராக இருக்கும் :-))

அது போல ,வாலி அவர்களைப்பற்றி சொன்னாலும் கூடவே மாயவநாதன்,கண்ணதாசன்,எம்ஜிஆர்,எம்.எஸ்.வி என மற்றவர்களைப்பற்றி தகவலும் சரிக்கு சமமாக கொடுத்திருக்கீங்க எனலாம்!

(மாயநாதன் - கலைஞர் லடாய்- என ஒரு சம்பவம் படிச்சது நினைவுக்கு வருது, டியூனுக்கு பாட்டெழுத முடியாமல், மாயவநாதன் ..மாயவநாதன் என பாட்டெழுத சொல்லிக்க சொல்லி கலைஞருக்கே டாட்டா காட்டினாராம் மாயவநாதன்,,கலைஞர் யாரு முத்தமிழ் வித்தைக்காரர் ஆச்சே," காகித ஓடம் கடலலை மீது" என எழுதினாராம், இந்த சம்பவத்தில் ,மாயவநாதனுக்கு டியூனுக்கு பாட்டெழுத முடியாமல் கடுப்பில் அப்படி சொல்லிவிட்டு போனார்னு நெஞ்சுக்கு நீதியில் கதை சொல்கிறார் "கலைஞர்",ஆனால் உண்மையில் பாட்டெழுதும் போது ,கதாசிரியர்,மற்றும் தயாரிப்பாளர் கலைஞர் வரவில்லை, வரும் வரை காத்திருங்கள் என சொன்னதால், காத்திருக்காமல் ,மாயவநாதன் ,மாயவநாதன்னு எழுதிக்க சொல்லுனு சொல்லிட்டு ,மாயவநாதன் கிளம்பிட்டாராம், எங்கோ படிச்சது)

வாலி பல நல்ல பாடல்களும் ,பல குப்பையோ குப்பை பாடல்களும் என கலந்துக்கட்டி எழுதிய ஒரு "காக்டெயில்" கவிஞன் :-))

வாலியின் பல நல்லப்பாடல்களை ரசித்துக்கேட்டதுண்டு ,பல நேரம் அது கண்ணதாசன் அல்லது வைரமுத்து எனக்கூட நினைத்துக்கொண்டிருந்து , கடைசியில் வாலி எனத்தெரிந்து "அட" போட வைத்ததுண்டு ,அது தான் வாலி!

ராமாயண வாலி எதிரில் இருப்பவர்களின் பலத்தில் பாதி எடுத்துக்கொள்வது போல ,கவிஞர் வாலியும் அவரது சமகாலக்கவிஞர்களின் "பாணியில் "பாதியை கவ்வி , "இவர் அவரோ "என நினைக்கும் வகையில் பாட்டெழுதிவிடுவார் என நினைக்கிறேன்.

ஹி...ஹி காரிகன் இன்னும் வரவில்லை வந்தால்,ராசா, ரோசா ,லேசா கீசானு வாலி தமிழ்த்திரைப்பாடலை "எளிமையாக்கியதை" போட்டுத்தாக்கி இருப்பார் :-))
---------------------------------------


பாகவதரே,

சிவாசி அவர்களுடன் ஆலிவுட்(ஹி...ஹி ..தமிழு) நடிகர்கள் இருக்கும் இந்த படம் முன்னர் எப்போதோ ஆனந்தவிகடனில் வந்தது என நினைக்கிறேன், இந்தப்படம் சிவாசியின் சுயசரிதை புத்தகத்தில் இருப்பது. ஆமாம் படத்தில மார்லன் பிரான்டோவே இல்லை, ஆனால் அவரும் சூழ்ந்துக்கொண்டதாக போட்டு வச்சிருக்காங்க ,அவ்வ்!

இந்தப்படம் ஏன் நியாபகம் இருக்குனா, அமெரிக்கா போனப்போ கூட வேட்டி சட்டையில் இருக்காரேனு தான். இப்போ விக்கியில் தேடிப்படிச்சப்போ , அப்போ அமெரிக்க, இந்தியா இடையே இருந்த கலைபரிவர்த்தணை திட்டத்தின் கீழ் இந்திய நடிகர்களை ஜான் .எஃப்.கென்னடி அழைச்சிருந்தாராம்(இதே போல அப்போதைய ஆலிவுட் நடிகர்கள் இந்தியாவுக்கு வருவாங்க) அப்போது நடந்த விருந்தில் இப்படம் எடுக்கப்பட்டதாம்.

இதே போல கலைப்பரிவர்த்தனை திட்டம் ரொம்ப நாளா ,சோவியத் ரஷ்யா ,இந்தியா இடையே உண்டு சொவியத் சிதைந்த பின் தொடரவில்லை(பல நாடுகளுடனும் உண்டு) ,ஆனால் அமெரிக்கா இப்பவும் அப்படி தொடருதா எனத்தெரியவில்லை.

காரிகன் said...

வாங்க வவ்வால்,

நீங்க சொல்றதும் சரிதான். வாலி நல்ல பாடல்களுக்கு நிகரா பல சொத்தை பாடல்களும் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பான்மை இ ராஜாவுக்காக எழுதியது. அங்கேதான் இந்த ராசா ரோசா பூவு நீவு உண்டு. இவரும் அவரும் சேர்ந்த போது இவன்களுக்கு இது போதும் என்று நினைத்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இந்தப் பதிவில் அமுதவன் வாலியின் ஆரம்பகால நல்ல பாடல்களையே குறிப்பிட்டிருக்கிறார். எம் ஜி ஆர் என்ற ஆளுமைக்கு வார்த்தைகள் மூலம் உரமூட்டியவர் வாலி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

Amudhavan said...

வாங்க காரிகன் இசைபற்றிய உங்கள் பதிவுக்கான பின்னூட்டங்கள் உங்கள் வலைப்பூவில் இருநூறைத் தொடப்போகிறது என்று நினைக்கிறேன். இத்தனைப் பின்னூட்டங்கள் வந்திருப்பது ஆச்சரியமே. வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

சிவாஜி படங்கள் பற்றிய கணிப்பில் அவருடைய ஆட்சிக்காலம் கறுப்பு வெள்ளைப் படங்களிலேயே முடிந்துவிட்டது என்ற கருத்துடையவன் நான். சில ஏபிஎன் படங்கள், சில ஸ்ரீதர் படங்கள், மற்றும் புதியபறவை, தங்கப்பதக்கம் ஆகிய படங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் அவருடைய பிளாக் அண்ட் ஒயிட் படங்கள்தாம் சிவாஜி படங்கள். நீங்கள் சொல்லும் நாட்களில் வந்த படங்களையெல்லாம் நான் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் வந்தாலும் பார்க்கமாட்டேன். அவருடைய நடிப்பை விடுங்கள், ஒரு மொழிக்கு அந்த மனிதர் கொடுத்த மாடுலேஷன் போல் இன்னொரு மனிதரால் இன்னொரு மொழிக்கு மாடுலேஷன் தரப்பட்டிருக்குமா என்பது ஆய்வுக்குரியது.
பத்துப்பக்க வசனங்கள் என்றாலும் படிக்கச்சொல்லி கண்களை மூடிக்கேட்டுக்கொண்டிருந்துவிட்டு "ம் டேக் போகலாம்" என்று சொல்லித் தயாரான அற்புதங்களையெல்லாம் நாம் கொண்டாடாமல் விட்டிருக்கிறோம்.

Amudhavan said...

வவ்வாலின் வரவு நல்வரவாகுக. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி. நல்லா ஞாபகம் வைச்சு மாயவநாதன் பற்றியெல்லாம் சொல்லியிருக்கீங்க. ஆனால் ஒரு சின்னத் திருத்தம். தகராறு மாயவநாதனுக்கும் கலைஞருக்கும் அல்ல. மாறாக இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்திக்கும் மாயவநாதனுக்கும்தான்.
மறக்கமுடியுமா படத்திற்கு சிச்சுவேஷன் சொல்லி 'நான் ஊருக்குப் போய் வர்றதுக்குள்ள பாட்டு ரெடிபண்ணி வச்சிருங்க'ன்னு சொல்லிட்டு கலைஞர் வெளியூர் போயிடறாரு. இங்கே பாட்டு கம்போசிங்கிற்கு ராமமூர்த்தியிடம் வந்து உட்கார்றாரு மாயவநாதன். ராமமூர்த்தி டியூனைச் சொல்லாமல் நேரம் கடத்திக்கொண்டே போக பொறுமையிழந்த மாயவநாதன் 'அண்ணே தத்தகாரம் சொல்லிருங்க நான் பாட்டு எழுதிக்கிட்டிருக்கேன்' என்று கேட்க,
"என்னய்யா தத்தகாரம்? மாயவநாதன், மாயவநாதன், மாயவநாதன்...இதான் தத்தகாரம் எழுதுய்யா" என்று டிகேஆர் சொல்லவும் தன்னை அவமானப்படுத்துகிறார் என்ற கோபத்தில் மாயவநாதன் எழுந்து போய்விட்டாராம். பாடல் தயாராகாமல் அப்படியே நின்றுவிட்டது. மறுநாள் கலைஞர் வருகிறார். பாட்டு தயாராகிவிட்டதா என்று விசாரிக்கிறார். நடந்ததைச் சொல்கிறார் டிகேஆர்.
'அவரை எதுக்கு அப்படிச்சொல்லி அனுப்பிச்சிட்டீங்க?' என்று சொல்லும் கலைஞர் 'நிஜமாகவே மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் என்பதுதான் தத்தகாரமா?' என்று கேட்க, 'ஆமாம்' என்கிறார் ராமமூர்த்தி.
"சரி அப்படின்னா 'காகிதஓடம் கடல்அலைமீது போவதுபோலே மூவரும் போவோம்....இதான் பல்லவி. சரியா இருக்கா?" என்று கேட்டு அந்தப் பாடலை எழுதியதாகச் சொல்வார்கள்.
மெல்லிசை மன்னர் ராமமூர்த்தியிடம் இதுபோன்ற பல 'கிறுக்குத்தனங்கள்' உண்டு. அவரது அபரிமிதமான திறமையைத் தாண்டி இம்மாதிரியான அவருடைய நடத்தைகள்தாம் அவரைப் பெரிய அளவுக்கு வரமுடியாமல் செய்துவிட்டன என்றே படுகிறது.
கவியரசரிடமும் இப்படி நடந்துகொண்ட செய்தி ஒன்றும் உண்டு. இந்தச் சம்பவம் எம்எஸ்வியும் அவரும் ஒன்றாயிருந்தபோதே நடைபெற்ற சம்பவம்தான். அவருடைய மெட்டுக்கு கவியரசர் பாடல் எழுதவேண்டிய சந்தர்ப்பம். ரயிலையோ விமானத்தையோ பிடிக்கவேண்டிய அவசரம் கவிஞருக்கு. "எனக்கு ரொம்ப அவசரம். வேணும்னா நான் ஊருக்குப் போய் வந்தபிறகு பாடல் கம்போசிங் வச்சுக்கலாம்" என்கிறார் கவிஞர். "இல்லை எழுதிக்கொடுத்துட்டுப் போயிருங்க. காத்திருக்கமுடியாது" என்று கவிஞரை அவசரப்படுத்துகிறது இசையமைப்பாளர் தரப்பு. ராமமூர்த்தியின் மெட்டுக்குப் பாடல் எழுத உட்காருகிறார் கண்ணதாசன்.
இதோ அதோ என்று நேரம் ஆகிக்கொண்டேயிருக்கிறது. மெட்டைச் சொல்ல மாட்டேனென்கிறார் ராமமூர்த்தி.
வயிலினில் சுருதி சரிபார்க்கிறார். வெற்றிலைப் பாக்குப் போடுகிறார். தபலாக்காரரிடம் விவாதிக்கிறார். வில்லைக் கீய்ங் என்று ஒரு இழுப்பு இழுக்கிறார். அடுத்தவரிடம் திரும்ப என்னமோ விவாதிக்கிறார். கண்ணதாசன் எழுந்துகொள்கிறார் "சரி நீங்க அப்புறமா முடிவு பண்ணிட்டு என்னைக் கூப்பிடுங்க பார்க்கலாம்".கவிஞர் எழப்போக பதறுகிறார் இவர்.
"இதோ இதோ கவிஞரே இதான் டியூன்" என்று அந்த டியூனை வாசிக்கிறார் ராமமூர்த்தி. அந்த டியூனைக் கேட்ட அதே மாத்திரத்தில் அதற்கு ஏற்றாற்போல் பாடல் வரியைச் சொல்கிறார் கண்ணதாசன். ராமமூர்த்தி உட்பட சுற்றியிருந்த அத்தனைப் பேரும் அதிர்ந்து போகிறார்கள். கோபத்தில் வந்து விழுந்தவை கெட்ட வார்த்தைகள்.....................
அடுத்த வரியை வாசிக்க..............அதற்கேற்றாற்போல் திரும்பவும் அதைத் தொடர்ந்த கெட்ட வார்த்தகைள்.
வயலினைக் கீழே வைத்துவிடும் ராமமூர்த்தி "என்ன கவிஞரே இப்படிப் பண்றீங்க? இது நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு போட்டிருக்கும் மெட்டு. ரொம்பப் பிரமாதமாக வரவேண்டிய பாடல் இது. உங்ககிட்டயிருந்து அற்புதமான வரிகளை நான் எதிர்பார்த்திருக்க நீங்க இப்படிப் பண்றீங்களே" என்று சொல்ல, சமாதானமடைந்த கண்ணதாசன் அடுத்து பிரமாதமான வரிகளை எழுதித்தந்தார் என்று சொல்வார்கள்.
அந்தப் பாடலும் காலத்தை வென்ற பாடல்களில் ஒன்றுதான்.
என்ன பிரச்சினை என்றால்கண்ணதாசன் முதலில் சொன்னதாகச் சொல்லப்பட்ட அந்தக் கெட்ட வார்த்தை வரிகளை இங்கே சொல்லமுடியாது. எனக்கு அந்தத் துணிச்சலோ தைரியமோ கிடையாது. அம்மாதிரியான துணிச்சல், தைரியம், சாமர்த்தியம் எல்லாம் பதிவர்களில் டாக்டர் நம்பள்கி அவர்களிடம்தான் உண்டு.
சிமியும் சஷிகபூரும் நடித்த சித்தார்த்தா படத்தைப் பற்றிச் சொல்லவந்த நம்பள்கி, அந்தப் படத்திற்குத் தமிழில் என்ன பெயர் என்பதைச் சொல்ல வந்தவர் எம்ஜிஆர் நடித்த நீதிக்குத் தலைவணங்கு போஸ்டரைக் குறிப்பிட்டு சித்தார்த்தாவுக்குத் தமிழ்ப் பெயரை ஊகிக்கச் சொல்கிறார். இம்மாதிரியான சாமர்த்தியம் எல்லாம் கிடையாது என்பதால் நான் எஸ்கேப்.

ராம்ராஜ் said...

அருமையான தகவல்கள்.வாழ்த்துக்கள்.

படத்தில் மொத்தம் நான்கே பாடல்கள். நான்கு பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. படத்தில் ஆண்குரலே இல்லை. வெறும் பெண்குரலில் நான்கே நான்கு பாடல்களைப்போட்டு அந்த நான்கு பாடல்களையுமே சூப்பர் ஹிட்டாக்கிக் காட்டும்
வித்தையெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கடுத்து எந்த இசையமைப்பாளருக்கும்-ஆமாம் எந்த இசையமைப்பாளருக்கும், இதுவரை வாய்த்ததில்லை. " -

மேகமே ,மேகமே பால் நிலா தேயுதே என்ற
ஒரே ஒரு பாடலால் படத்தையே ஓட வைத்த சங்கர் கணேஷ் இரட்டையரை மறந்து விட்டீர்களே?

அவர்கள் மட்டுமா ஜானி படத்தில் இளையராஜா பெண் பாடகிகளை வைத்து 4 சூப்பர் ஹிட் கொடுக்கவில்லியா ?

Unknown said...

amudavan, even TKR in his interview in The Hindu acknowledged that it was MSV who did the tunes for their songs.Then how come you are telling that TKR did the tune for Kannadasan/////?
Suri

நம்பள்கி said...

நண்பர் அமுதவன், நன்றி! என்னைக் கண்டு கொண்டதற்கு!

நன்றாக கவனித்தால் என் பதில் ரொம்ப சிம்பிள்; பதி-பக்திக்கு தலைவணங்கு தான் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? என் நண்பர்கள் சொன்னர்கள்," இதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கு" என்று..

தமிழ் படத்தில் அசிங்கமான ஜோக் சொல்லாத இயக்குனர் நடிகர் யாரும் இல்லை. விலாவரியா நான் சொல்லமுடியும். ஏன் எழுத முடியும்.எடுத்துக்காட்டுடன்.

எனக்கு தெரிந்து அசிங்கமான ஜோக் சொல்லாத நடிகர் சோ மட்டுமே..

நான் வளர்ந்தது மந்தவெளி மயிலாப்பூர்.. அதானால், இந்த ஜோக் விஷயத்தில் நான் மூர்த்தியையே மிஞ்சுவேன்.

நாகேஷ்...ராமசாமி...ஜக ஜகா எப்படி சென்சார் கிட்டே இருந்து வசந்தமாளிகை படத்தில் தப்பித்தது; அதுவும், ரமாப் பிரபா-ஜாடிக்கு ஏத்த மூடி!; Made for each other.


மலரன்பன் said...

Great work. உங்கள் வாழ்க்கையையே சினிமா பாடல்கள், சினிமா கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், சிவாஜி கணேசன் என்று அர்ப்பணித்து இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் உணர்ச்சிகரமாக எழதுகிறீர்கள். அனைத்தையும் ஒரு நூல் வடிவில் கொண்டுவந்து ஒரு பிர்பல பதிப்பகம் போட்டால் நல்ல விற்பனையாகும். உங்கள் நினைவலைகளும் நிரந்தரமாகி தமிழ் சினிமா உலகத்துக்கு ஒரு பெருந்தொண்டாகும்.

வாழ்த்துக்கள்.

Amudhavan said...


ராம்ராஜ் said...
\\மேகமே ,மேகமே பால் நிலா தேயுதே என்ற
ஒரே ஒரு பாடலால் படத்தையே ஓட வைத்த சங்கர் கணேஷ் இரட்டையரை மறந்து விட்டீர்களே?

அவர்கள் மட்டுமா ஜானி படத்தில் இளையராஜா பெண் பாடகிகளை வைத்து 4 சூப்பர் ஹிட் கொடுக்கவில்லியா ? \\

வாருங்கள் ராம்ராஜ் தங்கள் வருகைக்கு நன்றி. நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பது உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். படத்தில் ஆண்குரலே இல்லை. வெறும் பெண்குரல் ஒன்றுதான். அதுவும் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த எல்.ஆர்.ஈஸ்வரி, ஜானகி போன்ற குரல்களைக்கூட உபயோகிக்காமல் வெறும் பி. சுசீலாவை மட்டுமே உபயோகித்து(இத்தனைக்கும் படத்தில் ஜெமினிகணேசன் கதாநாயகன்- அவருக்குக்கூட பாட்டு வைக்காமல்) நான்கு பாடல்களைப் படத்தில் போட்டு அந்த நான்கு பாடல்களையும் ஹிட்டாக்கிக் காட்டிய சாமர்த்தியமும் திறமையும் விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் மட்டும்தான் இருந்தது. அந்தத் துணிச்சல் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இருந்ததில்லை இருக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதனைச் சொல்கிறேன். பதில் சொல்லவந்த நீங்கள் பாலைவனச்சோலை படத்தில் மேகமே மேகமே ஒரு பாட்டின் மூலம் படத்தை ஓடவைக்கவில்லையா என்று கேட்கிறீர்கள். ஜானி படத்தையும் குறிப்பிடுகிறீர்கள்.
பாலைவனச்சோலை படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்பிபி எல்லாரும் பாடியிருக்கிறார்கள்.ஆளானாலும் ஆளு பாடலும், பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி பாடலும் ஆண்குரல்களில்தாம் உள்ளன. மேகமே மேகமே பாடல் மிகவும் சிறப்பான பாடல். சங்கர் கணேஷ் இவ்வளவு அருமையாகப் பாடல் போட்டிருக்கிறார்களே என்றுதான் வியந்துகொண்டிருந்தேன் பாகிஸ்தான் இசைமேதை படேகுலாம் அவர்களின் பாடலைக் கேட்கும்வரை.......

அடுத்து நீங்கள் சொல்லியிருக்கும் ஜானி படத்திலும் செனோரிடா என்ற எஸ்பிபி பாடல் உண்டு. ஐ லவ் யூ, யூலவ் மீ என்று என்னென்னமோ வரும். தவிர ஜென்சி, ஜானகி, எஸ்பி ஷைலஜா என்று மூன்று பெண்குரல்களும் உண்டு. அவற்றில் 'என் வானிலே', மற்றும் 'ஒரு இனிய மனது' ஆகியவை ஹிட்டான பாடல்கள். 'ஆசைய காத்துல தூதுவிட்டு' என்பது ஓரளவு பிரபலமான பாடல். செனோரிடா ரஜனிக்கு வைத்திருந்தும் அவ்வளவாகப் பிரபலமாகாத பாடல். ஒரு படத்தில் பாடல்கள் 'போடப்பட்டு விட்டதாலேயே' ஹிட்டாகிவிட்டது என்று சொல்வதற்கில்லை. குறிப்பிட்ட ரசிகர்களையும் தாண்டி, படம் பார்க்காதவர்களையும் தேடிவந்து பரிச்சயம் கொள்ளவேண்டும் அதுதான் ஹிட்டுக்கான இலக்கணம்.

Amudhavan said...

Suri Athikesavan said...

\\ amudavan, even TKR in his interview in The Hindu acknowledged that it was MSV who did the tunes for their songs.Then how come you are telling that TKR did the tune for Kannadasan/////?

வாருங்கள் சூரி.... ராமமூர்த்தி சமீபத்தில் மறைந்தபோது பத்திரிகைகளில் 'எங்கே நிம்மதி, என்வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்' போன்ற பாடல்கள் அவருடைய மெட்டுக்களில் உருவானவை என்பதுபோன்று வந்திருந்த செய்திகளையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன். அவர் ஒரு படைப்பாளி. விஸ்வநாதனுடன் சேர்ந்து இசையமைத்துக் கொண்டிருந்தபோது ராமமூர்த்திக்கு எத்தனையோ மெட்டுக்கள் 'தோன்றியிருக்கும்' இல்லையா அவற்றையெல்லாம் அவர் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?என்னுடைய நண்பர் ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(இப்போதெல்லாம் இவர் அதிகமான பதிவுகள் எழுதுவதில்லை) டிகேஆருடன் தொடர்பு கொண்டிருந்தவர். நேரில் சந்தித்து சில மெட்டுக்களைப் பற்றிக் கேட்கும்போதுகூட "அதெல்லாம் ரெண்டுபேர் பேர்லதானே வந்துச்சி? அப்படித்தான் எடுத்துக்கங்களேன்" என்று நழுவிவிடுவாராம். இது டிகேராம மூர்த்தியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவர் எப்போதும் தமக்கென 'தனித்த அடையாளத்தைத்' தேடிக்கொண்டவர் அல்ல. பிரிந்துவந்தபிறகும் அவர் இப்படி இருந்ததுதான் அவர் தனித்து நிற்கமுடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று.
ஆனால் சில டியூன்களுக்கு அவரைக்கொண்டும் இசைக்கோர்ப்பு நடந்திருக்கிறது என்பது உள்வட்டத்திலிருந்தவர்களுக்குத் தெரியும்.

Amudhavan said...

நம்பள்கி said...
\\நான் வளர்ந்தது மந்தவெளி மயிலாப்பூர்.. அதானால், இந்த ஜோக் விஷயத்தில் நான் மூர்த்தியையே மிஞ்சுவேன்.\\

தவிர இப்போது இருப்பது அமெரிக்கா. அதனால் பதிவுலகில் எல்லோரையும் மிஞ்சுவீர்கள்.........

Amudhavan said...

மலரன்பன் said...

\\Great work. உங்கள் வாழ்க்கையையே சினிமா பாடல்கள், சினிமா கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், சிவாஜி கணேசன் என்று அர்ப்பணித்து இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் உணர்ச்சிகரமாக எழதுகிறீர்கள். அனைத்தையும் ஒரு நூல் வடிவில் கொண்டுவந்து ஒரு பிர்பல பதிப்பகம் போட்டால் நல்ல விற்பனையாகும். உங்கள் நினைவலைகளும் நிரந்தரமாகி தமிழ் சினிமா உலகத்துக்கு ஒரு பெருந்தொண்டாகும்.\\
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மலரன்பன். பெரிய நதியின் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு ஓரத்தில் இருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை என்னுடைய பாணியில் எழுதிக்கொண்டுவருகிறேன். இது உங்களைப் போன்றவர்களைக் கவர்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. தற்போது எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய நினைவலைகளை என்றென்றும் சுஜாதா என்ற பெயரில் எழுதியிருக்கிறேன். விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லா நிகழ்வுகளையும் திரட்டி ஒரு நூல் எழுதும் எண்ணம் இருக்கிறது. பார்ப்போம். நன்றி.

Unknown said...

Amudavan, kindly read this. TKR clearly said that MSV did the compositions--

http://www.thehindu.com/features/friday-review/music/ninety-and-bowing-away/article4077596.ece

Any way, great going!

suri

வவ்வால் said...

அமுதவன் சார்,

பழைய சமாச்சாரங்களை சொல்லும் போது ஆளுக்கு ஒரு வெர்ஷன் சொல்லிடுராங்க, கலைஞர் ,மாயவநாதனுக்கே பாட்டெழுத முடியாத டியுனூக்கு நான் எழுதினேனாக்கும் போல சொல்லிக்கிட்டார் போல :-))

# //எம்ஜிஆர் நடித்த நீதிக்குத் தலைவணங்கு போஸ்டரைக் குறிப்பிட்டு சித்தார்த்தாவுக்குத் தமிழ்ப் பெயரை ஊகிக்கச் சொல்கிறார். இம்மாதிரியான சாமர்த்தியம் எல்லாம் கிடையாது என்பதால் நான் எஸ்கேப்.//

ஹி...ஹி கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி சுயசரிதையை கூட "ர.ரக்கள் "கு.கூ"னு போட்டு கலாய்ப்பதை கேட்டு இருக்கேன் :-))
-------------

காரிகன்,

சும்மா உங்களை இழுத்துவிட்டேன், நீன்க சொன்னது போலத்தான் நான்னும் வாலிப்பற்றி நினைப்பதுண்டு, சில சமயம் நேர்த்தியாகவும்,பல சமயம் ரொம்ப சிம்பிளா சர்க்கரை வள்ளிகிழங்கை சமைக்கவும் போயிடுவார் :-))
--------------------

சூரி,

//Amudavan, kindly read this. TKR clearly said that MSV did the compositions--//

பொதுவாக ஒரு பாடலுக்கு டியூன் போடுவது என்பது "பல்லவிக்கு" தத்தகரம் சொல்லி எழுத வைப்பது, ரெண்டுப்பேரில் யர் வேண்டுமானாலும் செய்திருக்கலாம், கம்போசிங் என்பது பல்லவிக்கு பிறகு வரும் இடையிசைக்கும் சேர்த்து இசைக்கோர்வை செய்வதை செய்தால் சொல்ல வேண்டும்.

பல இசையமைப்பாளர்கள் "பல்லவி"யில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு இடையிசையை உதவியாளர்கள் செய்ய சொல்லிவிடுவது உண்டு. இப்போ எல்லாம் இடையிசையை கணினி மூலம் முடித்துவிடுவதாக ஒரு குற்றச்சாட்டும் சொல்கிறார்கள்.
எனவே எம்.எஸ்வி கம்போசிங்கில் நான் விளையாடிவிடுவேன் என பேட்டியில் சொல்லி இருப்பதை வைத்து டி.கே.ஆர் ட்யூனே போட்டிருக்க ஆட்டார் என பிடித்து தொங்குவது சரியல்ல.

பொதுவாக ஒரு இசைக்கோப்பின் போது , டியூன், இடையிசை கம்போசிஷன், பின்னர் ஆர்க்கெஸ்ட்ரேஷன் ,அப்புறம் கண்டக்டிங்க் என வேலைகள் இருக்கும், எல்லாவற்ரையும் ஒருத்தரே செய்வதும் உண்டு, தனி தனியாக செய்வதும் உண்டு.மேலை நாட்டில் எல்லாம் "மியுசிக் டிசைனர்" என ஒரு வேலையும் பார்க்கிறார்கள். அவங்க தான் என்ன இன்ஸ்ட்ருமெண்ட், எத்தினி எண்ணிக்கைனு முடிவெடுப்பாங்க. இது இல்லாமல்ல் புரொடெக்‌ஷன் டிசைனர், வாய்ஸ் எக்ஸ்பெர்ட்னு எல்லாம் பயன்ப்படுத்தும் பழக்கமும் உண்டு,நம்ம ஊரில இப்படி தனியா பிரிச்சி செய்யுற வழக்கம் பெரும்பாலும் இல்லை.

நம்ம ஊரில சினிமா தயாரிப்புக்கே இன்னும் புரொடெக்‌ஷன் டிசைனர் பயன்ப்படுத்தும் பழக்கம் வரவில்லை அவ்வ்!

Amudhavan said...

வாங்க வவ்வால், உங்களை எதிர்பார்க்கும் நேரத்துக்கு நீங்க வர்றீங்களோ இல்லையோ சரியான நேரத்துக்கு எப்படியும் வந்துர்றீங்க.
மெல்லிசை மன்னர்கள் இருவரும் சேர்ந்திருக்கும்போது யாருடைய மெட்டாக இருந்தாலும் பெரும்பாலும் இருவரும் ஒன்றாக விவாதித்து ஒரு முடிவுக்குவந்து பிறகு விஸ்வநாதன்தான் பாடலாசிரியருடன் அமர்ந்து பாடலை எழுதி வாங்குவார். (அப்போது டிகேஆரும் நிச்சயம் உடனிருப்பார்) கொஞ்சம் நீக்குபோக்காக நடந்துகொள்ளும் சுபாவம் விஸ்வநாதனிடம் உண்டு. கவிஞர்களுக்கு ஏற்றமாதிரி பழகுவார். டிகேஆர் மெட்டு விஷயங்கள் மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் கொஞ்சம் கறார் என்று கேள்வி. சில நேரங்களில் டிகேஆரே பாடலை எழுதவைப்பார். பாடல் விஷயத்தில் இயக்குநர் ஸ்ரீதர் ராமமூர்த்தியிடம் பணியாற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்தாம் பெரிதாகி மெல்லிசை மன்னர்கள் பிரிவதற்கும் காரணமாயிற்று என்றும் ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. இவையெல்லாமே கேள்விப்பட்டதுதான். சரி இதைச் சொல்லலாம் என்று பார்த்தால் திரு சூரி அவர்கள் மீண்டும் இந்து படிக்கச்சொன்னால் என்ன செய்வது என்று பயந்துகொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். நல்லவேளை விளக்கமாகச் சொன்னீர்கள்.
வெறும் பல்லவிக்கு மட்டும் டியூன் போடுவது என்பது இளையராஜாவின் பிற்பகுதிக் காலத்தில் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். ஆரம்பத்திலெல்லாம் பல்லவி முடிந்து முழுப்பாடலையும் எழுத வைப்பார்கள். இளையராஜா ஆரம்பகாலத்தில் இப்படித்தான் செய்வார். மூன்று பாடல்கள் கம்போசிங்கின்போது உடனிருந்து பார்த்திருக்கிறேன். மூன்றும் வெவ்வேறு கவிஞர்கள் எழுதிய பாடல்கள். இரண்டு பாடல்களுக்கு இசை இளையராஜா. மூன்றாவது பாடல் சிற்பியின் இசையில்.
முழுப்பாடல் முடிந்ததும் அடுத்த நகர்விற்குப் போய்விடும். அதுவரை ஒரேயொரு ஆர்மோனியமும் தபலாவும் மட்டும்தான் இருக்கும். இம்மாதிரி தகவல்களில் இன்றைய நிலைமை மற்றும் வெளிநாட்டு நிலைமை என்றெல்லாம் போட்டுப் பின்னியெடுக்கிறீர்கள். தொடருங்கள்.

Unknown said...

Even Vali in his nanum entha nootrandum-l , he wrote that for his poovarayum (edaithil nee; first assn with the famous duo), MSV has done the tune.

Suri

நம்பள்கி said...

[[சிமியும் சஷிகபூரும் நடித்த சித்தார்த்தா படத்தைப் பற்றிச் சொல்லவந்த நம்பள்கி, அந்தப் படத்திற்குத் தமிழில் என்ன பெயர் என்பதைச் சொல்ல வந்தவர் எம்ஜிஆர் நடித்த நீதிக்குத் தலைவணங்கு போஸ்டரைக் குறிப்பிட்டு சித்தார்த்தாவுக்குத் தமிழ்ப் பெயரை ஊகிக்கச் சொல்கிறார். இம்மாதிரியான சாமர்த்தியம் எல்லாம் கிடையாது என்பதால் நான் எஸ்கேப். ]]

[[தவிர இப்போது இருப்பது அமெரிக்கா. அதனால் பதிவுலகில் எல்லோரையும் மிஞ்சுவீர்கள்.]]

அமுதவன்:
நீங்கள் எழுதியதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. இலை மறைவு காய் மறைவாய் ஜோக் சொல்வது தமிழ் படத்தில் எப்பவும் தான் இருக்கு.

நாகேஷ், மூர்த்தி, தேங்காய்..இப்படி இன்று வரை சந்தானம்---இது மாதிரி ஜோக் சொல்லாத நடிகர்கள் ஏது? அவர்கள் சொலும் போது நீங்களும் சொல்லலாம்--விருப்பபட்டால்; மற்றபடி, இதை சொல்வதற்கு எதற்கு தைரியம் வேண்டும்?

மேலும், நான் வசிக்கும் அமெரிக்கவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். மூர்த்தி வசிப்பது இந்தியா தானே! அவர் சொல்லவில்லையா?

மேலும், அந்த என் சர்ஜன் வாத்தியார் சொன்ன ஜோக் யாரையும் அசிங்கம் செய்யவில்லையே? நீதிக்கு தலைவணங்கு படத்தை கிண்டல் கூட செய்யவில்லையே? அந்த பட தலைப்பைப் பார்த்தது யூகிக்க தானே சொல்கிறார்? அதுவும் சித்தரத்தாதா படத்திற்கு தானே பேர் சொல்ல சொல்லுகிறார்! இதற்கு எதற்கு தைரியம் வேண்டும்? அதுவும் அவர் சொன்ன பெயர் பதி-பக்திக்கு தலை வணங்கு!

காரிகன் said...

வவ்வால்,
சிலரை உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பது வழக்கம். உங்களிடம் உங்களுக்கு என்ன தெரியாது என்றுதான் கேட்கமுடியும் என்று தோன்றுகிறது.எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாக (எழுத்துப் பிழை இருக்க சாத்தியம் உண்டு)அலசும் அழகுக்கு ஒரு சபாஷ்.

காரிகன் said...

திரு அமுதவன் அவர்களே,

சிவாஜியின் நடிப்பை விமர்சிக்கும் ஒருவரின் முகநூல் இது. வந்த பின்னூட்டங்கள் அபாரமாக இருக்கின்றன. இது உங்களின் பார்வைக்கு.

https://www.facebook.com/thamizhstudio/posts/716608985029461?comment_id=105005278&offset=0&total_comments=34&notif_t=feed_comment_reply

Amudhavan said...

Suri Athikesavan said...

Even Vali in his nanum entha nootrandum-l , he wrote that for his poovarayum (edaithil nee; first assn with the famous duo), MSV has done the tune.

திரு சூரி அவர்களே, திரு ராமமூர்த்தி மெட்டுக்கள் போட்டதில்லை. மெட்டுக்கள் சொன்னதில்லை. அவருக்கு மெட்டுக்களைப் பற்றித் தெரியாது. எம்எஸ்வி ஐயாதான் மெட்டுக்கள் போட்டார் என்று சொல்லச்சொல்கிறீர்களா? சொல்லிவிடுகிறேன். விவகாரம் முடிந்தது.
என்னதான் பிரச்சினை உங்களுடையது?

Amudhavan said...

நம்பள்கி said...
\\அவர் சொன்ன பெயர் பதி-பக்திக்கு தலை வணங்கு!\\

சரி, இதையும் ஒப்புக்கொண்டாயிற்று நம்பள்கி. ஆனால் ஒரு சந்தேகம், பதி என்பது கணவனைத்தானே குறிக்கும்? இங்கு வேறு மாதிரி அர்த்தம் வருகிறதோ!

Amudhavan said...

நண்பர் காரிகன் அவர்களே, நீங்கள் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கம் பார்த்தேன். நான் திரும்பத் திரும்ப சொல்லும் பதில்தான். சிவாஜியை தமிழ்த்திரைக் கலையின் symbol ஆக உருவாக்குவதில் தவறிழைத்துவிட்டோம். இதற்கான பழி முழுவதும் திராவிடக் கட்சிகளையும் கலாச்சாரத்தையும்தான் சேரும். கர்நாடகக்காரன் அவன் கொண்டாடும் ராஜ்குமாருக்கு அதனைச் செய்திருக்கிறான்.

இங்கே ராஜ்குமாரை சாதாரணமாக விமர்சித்துவிட்டு எவனும் உயிருடன் இருந்துவிட முடியாது.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பிரதிமைகள் அதிகம். அதே அளவுக்கு அவற்றை எதிர்ப்பவர்களும் அதிகம்.

நம்பள்கி said...

[[[Amudhavan said...
நம்பள்கி said...\\அவர் சொன்ன பெயர் பதி-பக்திக்கு தலை வணங்கு!\\

சரி, இதையும் ஒப்புக்கொண்டாயிற்று நம்பள்கி. ஆனால் ஒரு சந்தேகம், பதி என்பது கணவனைத்தானே குறிக்கும்? இங்கு வேறு மாதிரி அர்த்தம் வருகிறதோ!]]]

அமுதவன்:
எங்கள் தமிழ் அறிவு...P.U.C. தமிழ் மொழிப்பாடம் வரை மட்டுமே. தமிழே அறியாத தற்குறி நாங்கள்

முதலில், நீங்கள் பேசிக்கொண்டிருப்பது முத்தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவரிடம் அல்ல என்பதை நினைவில் கொள்க! அதானால், நாங்கள் தமிழில் தவறு செய்வது சகஜம் தானே/

கணவன் என்று ஒரு அர்த்தம் தவிர பதிக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு!

உங்களுக்காக..
பதி : (1) நுழைத்தல் penetrating and setting; (2) உறைவிடம் abode; (3) கோயில் temple; (4) ஊர் village or town; (5) பூமி the Earth; (6) குதிரை horse; (7) தலைவன் master; (8) கணவன் husband; (9) அரசன் king; (10) கடவுள் God.

இங்கு தலைவன் என்றும் அர்த்தம் உண்டு; அதே மாதிரி தலைவி, டீச்சர், உறைவிடம், கடவுள் என்றும் அர்த்தம் கொள்ளலாம.

பேரின்பத்தை யார் காட்டினாலும்...கடவுள் தானே! பெண் experts-ஐ இப்போ [மானாட மயிலாடவில்] மாஸ்டர் என்று தானே சொல்கிரர்கள்.

ஓகேவா!

தமிழ் என்னே ஒரு அழகான மொழி...!

வவ்வால் said...

அமுதவன் சார்,

ஹி...ஹி நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ,ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வந்துடுவேன் ...இதெல்லாம் கொஞ்சம் ஓவர்ராயிருக்கேனு நினைக்கலாம், ஆமாம் ரொம்ப ஓவரு தான் :-))

# நீங்க சொன்னது போல தான் இசைக்கோர்வை வேலை நடக்கும்னு ஓரளவு விடயம் தெரிந்தவர்களுக்கு தெரியும் ,ஆனாலும் நம்ம சூரி இன்னும் புக்கெல்லாம் படிச்சு பார்க்க சொல்லிக்கிட்டே இருக்காரு அவ்வ்!

இளையராஜாவுக்கு பிற்பாடு வந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பல்லவிக்கு தான் டியூன் போடுகிறார்கள் என்பது பரவலான கருத்து. மேலும் ராசாக்கூட பாடலாசிரியர்களுக்கு "பல்லவி" வரைக்கும் டியூன் சொல்லிட்டு முழுப்பாட்டும் வாங்கிக்கிட்டு ,பின்னர் அவரே இடையிசைக்கு ஸ்கோர் எழுதிடுவார்னும் கேள்வி.
இதனால் தான் தற்போதைய பாடல்களில் பல்லவிக்கு அப்புறம் மனசில் ஒட்டமாட்டேங்குது(ஃபெவிகால் தடவி ஒட்டிப்பார்க்கணுமோ)

# அப்போ டிராக் ரெக்கார்டிங் இல்லாத நிலையில்,சிங்கிள் டேக்கில் லைவாக இசையும் ,பாடல் பதிவும் நடக்கும், அப்படி பாடுவதும் கடினம், இசைப்பதிவு செய்வதும் கடினம். அந்த முறையிலேயே எத்தனையோ பாடல்களை இனிமையாக பிசிறில்லாமல் வழங்கியவர்கள் மெல்லிசை மன்னர்கள் மற்றும் பழைய இசை அமைப்பாளர்கள் என நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கு.

இப்போ மல்டி டிராக் ரெக்கார்டிங் என வந்த பின்னர் பாடகர்கள் இசை வாசிப்பையே கேட்காமல் தான் பாடுகிறார்கள், அவர்கள் ஹெட்போனில் கேட்பதெல்லாம் ஒரு "guiding beats" மட்டுமே "டிக் ..டிக் என தாளக்கட்டில் ஓடும். சரியாகப்பாடத்தெரியாதவங்களை கூட வரி வரியாக பிரித்துப்பாடி பதிவு செய்து "பாடலை சிறப்பாக காட்டவும் முடியும்" இந்த வசதிலாம் அப்போ ஏது?

# கடைசில உங்க பொறுமையை ரொம்ப சோதிச்சுட்டார் போல சூரி,ஆமாம்யா ஆமாம்னு சொல்லிட்டிங்களே அவ்வ்!
-----------------

காரிகன்,

உங்க பாராட்டுக்கு நன்றி!

ஆனாலும் அந்த அளவுக்கு எல்லாம் நாம ஒர்த் இல்லையே அவ்வ்!

கற்றது கையளவு! கல்லாதது உலகளவு!

அவ்வையார் சொன்னதாம், அமெரிக்காவில இருக்க நாசாவின் வரவேற்பு அலுவலகத்தில் இதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பை எழுதி வச்சி,அவ்வையாருக்கு கிரெடிட்டும் கொடுத்திருக்காங்கலாம்!

# ரொம்ப முன்னெச்சரிக்கையாக எழுத்துப்பிழையும் இருக்கலாம்னு சொல்லிட்டிங்க, எனக்கும் எழுத்துப்பிழையெல்லாம் சகஜம் தான் அவ்வ்!

ஆனாலும் சொல்ல வந்ததை சொல்லாம இருக்க முடியலை...ஹி...ஹி

"அக்கு வேர், ஆணி வேராக பிரித்து" என்பது தான் சரியான பதம், இது ஏதோ சித்த வைத்திய நிபுணர் உருவாக்கிய சொல்லாடலாக இருக்கணும்.

அக்கு வேர் என்றால் துணை வேர்- branch root(ஆய்த எழுத்து ஃ ஐ சார்பெழுத்து - துணையெழுத்து என்பார்கள்),அதுக்கு அப்புறம் பொடியான மெல்லிய வேர்களை "சல்லி வேர்"(grass root)என்பார்கள், ஆணி வேர் (tap root)தான் நடுவில் வரும் முக்கியமான வேர். சித்த மருந்துக்கு வேர்களை அரைக்கும் போது ,அக்கு வேர் ,ஆணி வேராக பிரிச்சு அரைக்கனும் என சொல்லிக்கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் :-))
--------------------

Gujaal said...

//அவ்வையார் சொன்னதாம், அமெரிக்காவில இருக்க நாசாவின் வரவேற்பு அலுவலகத்தில் இதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பை எழுதி வச்சி,அவ்வையாருக்கு கிரெடிட்டும் கொடுத்திருக்காங்கலாம்!//

சுட்டி ப்ளீஸ்.

காரிகன் said...

வவ்வால்,
தகவலுக்கு நன்றி. வேர் என்று சரியாக யூகித்தாலும் வழக்கம்போல வார்த்தைக் குழப்பம் வந்து விட்டது. நீங்கள் பாட்டுக்கு அவ்வையார் பற்றி எதோ சொல்லபோக அதற்கும் சுட்டி கேட்கிறார்கள். இனிமே கல்வெட்டோடதான் பின்னூட்டம் எழுதணும் போல.

தி.தமிழ் இளங்கோ said...

// அப்போதெல்லாம் எல்லார் வீடுகளிலும் நிறையப் போட்டோக்கள் மாட்டிவைத்திருப்பார்கள். //

ஆமாம் அய்யா! அந்தநாள் ஞாபகம்! எல்லோருடைய வீடுகளிலும் கறுப்பு-வெள்ளை குடும்பப் படங்கள் மாட்டப்பட்டு இருக்கும். இப்போது போட்டோ அல்பம் அல்லது சிடி என்று மாறிவிட்டது.

// இதற்குப்பின் அவருடைய எழுத்துக்களைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். தேடுவதற்கு அவசியமில்லாமலேயே தினந்தோறும் அவரது பாடல்களோ பேச்சுக்களோ வானொலியிலும் பத்திரிகைகளிலும் வந்துகொண்டே இருந்தன. அவரது கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேனோ இல்லையோ அவருடைய தமிழும் எழுத்து நடையும் மிகப்பெரிய ஈர்ப்பை அவர்பால் ஏற்படுத்தின.//

கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய உங்களின் இந்த அனுபவம் எனக்கும் உண்டு.

// யோசித்துப் பாருங்கள் இப்படி இருபெரும் துருவங்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டு ஒருவரால் தமிழ் நாட்டில் எந்தத் துறையிலாவது நிலைக்கவும்
நீடிக்கவும் முடியுமா? நீடித்தார். அதுதான் கண்ணதாசன்! //

கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய சரியான பார்வை.


// கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது மனம் லேசாகி மிதந்து கரையும். அந்தப் பாடல் சோகரசம் ததும்பியது இல்லையென்றாலும் மனதில் இனம்புரியாத ஒரு சோகம் படர்ந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். மெல்ல மெல்ல தாலாட்டியது போன்று தோன்றும். அந்தப் பாடலின் இசையும் வரிகளும் ஆண்டாண்டு காலமும் மனதில் தங்கிவிடும். அப்படிப்பட்ட அனுபவங்களையெல்லாம் மெல்லிசை மன்னர்களின் அற்புதப் பாடல்கள் ஏற்படுத்திவிடும். //
இப்படி கண்களை மூடிக்கொண்டு ரசிப்பதே ஒரு சுகம் அய்யா! அதிலும் பழைய திரைப்படப் பாடல்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை!


// எம்ஜிஆருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை வைத்து அவருக்கு எதிரணியில் இருந்தவர்கள் இந்தப் பாடலைச் சொல்லி எம்ஜிஆரின் ரசிகர்களைச் சீண்டுவதும் பதிலுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் ஆவேசமாகச் சீறுவதும், அங்கங்கே சண்டைகளும் கைகலப்புகளும் நிகழவும் காரணமாயிருந்திருக்கின்றன.//

எம்ஜிஆர் திமுகவை விட்டுப் பிரிந்ததும், திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் இந்த பாடலைத்தான் சொல்லி எம்ஜிஆரை கிண்டலடித்தார்.

கண்ணதாசன், வாலி, மெல்லிசை மன்னர்கள் – ஆகியோரைப் பற்றிய நினைவலைகள்
அந்த காலத்திற்கே இட்டுச் சென்றன. ஆசிரியர் அமுதவன் அவர்களுக்கு நன்றி! இதன் அடுத்த பாகத்தை ஆவலுன் எதிர்பார்க்கிறேன்!



Amudhavan said...

நீண்டநாள் கழித்து.....என்றாலும் தமிழ் இளங்கோ அனுபவித்து எழுதியிருக்கும் இந்தப் பின்னூட்டங்கள் மகிழ்வைத் தருகின்றன. மகிழ்ச்சி. நன்றி.

Post a Comment