Sunday, September 6, 2015

எம்எஸ்வி – ஒரு நிறைவுற்ற சகாப்தம் – பகுதி-2


பாக்கியலட்சுமிக்கு வருவோம். ‘கண்ணே ராஜா’ பாடலில் ஒரு விசேஷம். அந்தப் பாடல் முதலில் சந்தோஷப் பாடலாகவும் பிறகு சோகப்பாடலாகவும் படத்தில் ஒலிக்கும். அந்தக் காலத்தில் பல படங்களில் இந்தப் பாணி இருந்தது. ஒரே மெட்டு மகிழ்வாகவும் பின்னர் கதையின் போக்குக்கேற்ப அதே மெட்டு சோகமாகவும் ஒலிக்கும். ஒரு இசையமைப்பாளரின் அற்புதத் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்தப் பாணியும் நிறையவே உதவிற்று.
இந்தவகையில் புகழ்பெற்ற பாடல்கள் நிறைய உண்டு.
  1.        வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே..
  2.         கண்ணே ராஜா கவலைவேண்டாம்……
  3.       மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்..
  4.    நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்……….
  5.     இந்த மன்றத்தில் ஓடிவரும்…………
  6.     அன்றுவந்ததும் அதே நிலா………….
  7.      உன்னை ஒன்று கேட்பேன்………….
  8.      ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி……………
  9.     அன்றொருநாள் இதே நிலவில்….
  10.          அம்மாடி பொண்ணுக்குத் தங்கமனசு…….. என்று பட்டியல் பெரியது. 

இம்மாதிரியான சோகப்பாட்டுக்களை மட்டுமே, அதுவும் அன்றைக்கிருந்த ஒலித்தட்டு ரிகார்டுகளையே தேடித் தேடி சேகரித்து வைத்திருந்த ரசிகர்கள் நிறையவே உண்டு.
பாக்கியலட்சுமி’ படத்திற்குப் பின்னர் ‘பாசமலர்’ வருகிறது. பாசமலரில் ஏழு பாடல்கள் ஹிட். பாசமலருக்கு அடுத்து ‘பாலும் பழமும்’. பாலும் பழமும் படத்தில் ஏழு பாடல்கள். அதற்கடுத்து ‘பாவமன்னிப்பு’. பாவமன்னிப்பில் ஆறு பாடல்கள் ஹிட்.(புகழ்பெற்ற பாடலான ‘அத்தான் என் அத்தான்’ இந்தப் படத்தில்தான். இந்தியாவின் புகழ்பெற்ற இசைமேதைகளில் ஒருவரான நௌஷத் “ஒரு பாடலை இப்படியெல்லாம் கம்போஸ் பண்ணமுடியுமா என்ன?” என்று ஆச்சிரியத்தில் வியந்த பாடல் அது. தனக்கு மிகவும் பிடித்த பாடலாக லதா மங்கேஷ்கர் இன்றும் சொல்லிவரும் பாடல் அது) இப்படி….. தமிழ் நெஞ்சங்களில் தொடர்ச்சியாகத் தேன்மழையைப் பொழியும் காரியத்தை மெல்லிசை மன்னர்கள் செய்கிறார்கள்.

அதற்கடுத்து டி.ஆர்.ராமண்ணாவின் ‘மணப்பந்தல்’ வருகிறது. இந்தப் படத்திலும் பி.சுசீலாவை வைத்து வர்ணஜாலம் புரிகிறார்கள். அவர் பாடிய ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்’, ‘ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல்’ இரண்டு மட்டுமில்லாமல் பிபிஸ்ரீனிவாஸின் ‘உடலுக்கு உயிர் காவல்’ தத்துவப் பாடலும் தாறுமாறாக ஹிட் அடிக்கின்றன.

அடுத்து வருகிறது ‘ஆலயமணி’. சிவாஜியின் இந்தப் படத்தில் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘சட்டி சுட்டதடா’ மூன்றும் சிவாஜிக்கானவை. இந்த இடத்தில் ஒரு சின்னக் குறுக்கீடு. என்னுடைய நண்பர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பெரிய அளவுக்குப் படித்தவர். திருச்சியைச் சேர்ந்த அவருக்கு அவருடைய சொந்தத்திலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பெண் வீட்டாரோ பெரும் செல்வந்தர்கள். என்னதான் மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும் அந்தஸ்துக்கு ஏற்ப இல்லை. அதனால் பெண்ணைத் தரமுடியாது என்று கடிவாளம் போட்டார் மாமனார். அந்தப் பெண் பிடிவாதமாக இருந்து இவரைத்தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று இவரையே மணமுடித்தாராம். அந்தச் சமயத்தில் வந்த படம் ஆலயமணி. ‘பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே –புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே’ என்று “எனக்காகவே கண்ணதாசன் எழுதி சிவாஜி பாடிய மாதிரிதான் அன்றைக்கு இந்தப் பாடல் அமைந்திருந்தது. என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மனைவி வாழ்க்கையிலும் மறக்கமுடியாத பாடல் இது. நாங்கள் இறக்கும்வரை இந்தப் பாடலை மறக்கமாட்டோம்” என்று மனம் உருகிச் சொல்வார் ராமனாதன் என்ற என்னுடைய நண்பர். என்று இப்படி தனிப்பட்டவர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்களாகத்தான் அந்தக் கால பாடல்கள் அமைந்திருந்தன.

‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, சுசீலா பாடுகிறார். ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா?’ பாடல் சீர்காழி சுசீலா டூயட்டாக மலர்கிறது. இந்தப் படத்தில் வரும் இன்னொரு புகழ்பெற்ற பாடல் எஸ்.ஜானகி பாடும் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’.

இந்தப் பாடல் பற்றிய முக்கியமானதொரு செய்தியை இங்கே சொல்லியாக வேண்டும்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவருக்கே மிகவும் பிடித்த பாடலாகச் சொல்லியிருக்கும் வெகுசில பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவல்ல விஷயம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி; விஸ்வநாதன் தனித்திருந்தபோதும் சரி எஸ். ஜானகியை அவ்வளவாகப் பாடவைத்தவர்கள் கிடையாது.

மிகமிக அரிதாகத்தான் வாய்ப்புகள் வழங்குவார்கள். அவ்வப்போது ஏதோ ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பைத்தான் ஜானகிக்கு வழங்குவார்கள். அந்தக் காலத்தில் பெண் குரல் என்றாலேயே பி.சுசீலாதான். அதற்கடுத்த இடமும் ஜானகிக்கு அல்ல, எல்.ஆர்.ஈஸ்வரிக்குத்தான். அதனால் ஜானகி புத்திசாலித்தனமாக (அல்லது அப்படித்தான் அமைந்ததோ என்னவோ) கன்னடத்தின் பக்கம் போய்விட்டார். கன்னடத்தில் பிபிஎஸ்ஸூம் ஜானகியும்தாம் பெரிய முன்னணிப் பாடகர்கள். ஜி.கே.வெங்கடேஷ் கன்னடத்தில் நிறையப் படங்கள் பணியாற்றி வந்தமையால் அவருடைய உதவியாளராக இருந்த இளையராஜாவுக்கு பி.சுசீலாவை விடவும் ஜானகியிடம்தான் பணிபுரிந்த அனுபவம் அதிகம். எனவே இளையராஜா தமிழில் முன்னணிக்கு வந்ததும் அவருடைய ‘சாய்ஸ்’ இயல்பாகவே சுசீலாவாக இல்லாமல் ஜானகியாக இருந்தது. இந்தப் பின்னணியிலேயேகூட இந்தச் செய்தியை அணுகலாம்.

                                            

சில வருடங்களுக்கு முன்னர் விகடனிலோ குமுதத்திலோ எஸ்.ஜானகியின் பேட்டி வந்திருந்தது. அதில் அவர் ஒரு நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமான ரசிகர்கள் கூட்டம். ஏதோ காரணத்தால் ரசிகர்கள் மத்தியில் கலாட்டா ஆரம்பமாகிறது. மேடையிலிருப்பவர்கள் என்ன சொல்லியும் ரகளை குறைவதாகத் தெரியவில்லை. அந்த நாட்களின் புகழ்பெற்ற பாடல்களைப் பாடத்துவங்குகிறார் ஜானகி. கூட்டம் கட்டுப்படவில்லை. சட்டென்று பாடலை நிறுத்தும் ஜானகி உடனடியாக ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ என்ற ஆலயமணி பாடலை ஆரம்பிக்கிறார்.

மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் சட்டென்று கூச்சல் குழப்பம் அடங்கி கட்டுக்குள் வருகிறது கூட்டம்.

இந்த வித்தை எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாது.. “இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. அந்தப் பாடலுக்கு அப்படியொரு சக்தி இருக்கிறது” – என்று சொல்லியிருந்தார் ஜானகி.
இதே போன்ற அனுபவத்தை நேரடியாக சந்திக்க நேர்ந்தது பெங்களூரில். மிகப் பிரபலமான பாடகர்கள் வருவார்கள் என்று சொல்லி ஏகப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு ஒரு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னணியினர் யாரும் வரவில்லை என்றதும் ரகளையில் இறங்கியது கூட்டம். மேடைக்கு வந்த ஜானகி பாடிய முதல் பாடல் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’. மொத்தக் கூட்டமும் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல் அடங்கியதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பும் பெங்களூர் சிவாஜிநகர் ஸ்டேடியத்தில் கிடைத்தது.

ஜானகியின் பேட்டி வெளிவந்தது 2000 ஆண்டுகளில். ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’ வந்தது 1962 ம் ஆண்டில். இதற்குள் ஜானகி வெவ்வேறு தளங்களில் பயணித்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடி ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். அதில் பிரபலமான பாடல்களும் நிறைய இருக்கும். ஆனாலும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு இருக்கும் மெஸ்மரிசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆலயமணிக்கு அடுத்து இன்னொரு புகழ்பெற்ற படமான ‘காத்திருந்த கண்கள்’. ஜெமினி, சாவித்திரி நடித்த படம். இதில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆறு பாடல்களும் அடித்துக்கொள்ள முடியாதவை. ‘கண்படுமே பிறர் கண்படுமே’ (இதை கண் badume என்றே பிபிஎஸ் பாடினார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதிலும் இன்றுவரையிலும் அடித்துக்கொள்ள முடியாத பாடல் அது)  பாடலும் ‘துள்ளித் திரிந்த பெண் ஒன்று’ பாடலும் பிபிஎஸ்ஸின் ஹிட் லிஸ்டில் அடக்கம். அவர் சுசீலாவுடன் பாடிய ‘காற்றுவந்தால் தலைசாயும் நாணல்’ பாடலும், ‘வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலும் தமிழின் நிரந்தர இனிமையான பாடல்களில் அடக்கம்.
            
                                            


பி.சுசீலா தனியாகப் பாடிய ‘வா என்றது உருவம்’ ஒரு தேன் வழியும் பாடல் என்றால் சீர்காழியின் வெண்கலக்குரலில் வந்த ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ பாடல் நிலைத்து நின்றுவிட்ட சீர்காழியின் பாடல்களில் ஒன்று. இயக்குநராக இருந்து நடிகராக மாறிவிட்ட மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்தார். “டைவர்ஸுக்கு விண்ணப்பித்திருக்கும் தம்பதியர் எல்லாரையும் வரவழைத்து அவர்களை ஒரு அறையில் உட்காரவைத்து ஒரேயொருமுறை ‘வளர்ந்தகலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ பாடலைக் கேட்கும்படிச் செய்தால் போதும். நிச்சயம் பாதிப்பேர் டைவர்ஸ் நோட்டீஸைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தம்பதி சமேதராய் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள் என்று குடும்ப கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கும் ஒருவர் சொன்னார்” என்று.

ஒரு பாடலின் தாக்கம் என்பது இதுதான். சமூகத்தில் இறங்கி அந்தப் பாடல் ஒரு மாறுதலைச் செய்வதாக இருக்கவேண்டுமே தவிர ‘பேங்கோஸ் முடிந்து கிட்டாரின் தீற்றலுக்குப் பின் ஒலிக்கும் ட்ரம்ஸைத் தொடர்ந்து’ என்று எழுதப்படும் தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் எல்லாம் ஒரு பாடலைச் சிறந்த பாடலாக தனிப்பட்ட அவர்கள் அளவுக்குக் கருதிக்கொள்ளலாமே தவிர சமூகத்தின் முன் நிறுத்திவிடாது.

இந்தப் பெரிய பட்டியல்களுக்கு மத்தியில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி அன்றைக்கு நம்பர் ஒன் லிஸ்டில் இருந்தவர்கள். எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ஏவிஎம், ஸ்ரீதர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு இவர்கள்தாம் இசை. ஆனால் இவர்களுக்குப் பெரிய படம் சிறிய படம் என்ற பேதமெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களாக அன்றைக்குக் கருதப்பட்ட பல படங்களில்- குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் பாதகாணிக்கை, மணப்பந்தல், மணியோசை, வீரத்திருமகன், வாழ்க்கை வாழ்வதற்கே போன்ற படங்களில் அற்புதமான, மிக அற்புதமான பாடல்களைப் போட்டிருக்கிறார்கள். அதுவும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பத்து சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் போடப்படுமேயானால் (உலகிலேயே மிகவும் சிரமமான பட்டியல் இதுவாகத்தான் இருக்கமுடியும்) அதில் மூன்றாவதற்குள் வந்துவிடக்கூடிய படம் பாதகாணிக்கை. 

இந்தப் படங்களில் எல்லாம் உயிரை உருக்கும் பாடல்கள் உள்ளன.

அதுவும் வீரத்திருமகனில் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை ஆனந்தன் இதில் கதாநாயகன். கதாநாயகி சச்சு.) வரும் ‘பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்’ பாடலும், ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலும் தமிழ்நாடு முழுக்கச் சுழன்றடித்த பாடல்கள். பிபிஎஸ்ஸின் மகுடத்தில் என்றைக்கும் இருக்கும் பாடல்கள். கடைசியாக சந்தித்தபோது பிபிஎஸ் சொன்னார் “ஐயோ அந்த ரெண்டு பாடல் பத்தியும் ஏன் கேக்கறீங்க? பிரபலம் என்றால் இப்படி அப்படிப் பிரபலம் இல்லை. நான் கலந்துகொள்ளும் தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளில்கூட இந்த இரு பாடல்களையும் தவறாமல் இன்றளவும் பாடிக்கொண்டிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்”

அடுத்து சுமைதாங்கி, நிச்சய தாம்பூலம், நெஞ்சில் ஓர் ஆலயம், படித்தால் மட்டும் போதுமா, பலேபாண்டியா, பாசம், பாதகாணிக்கை, பார்த்தால் பசிதீரும், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், ஆனந்த ஜோதி, இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், பெரிய இடத்துப் பெண், மணியோசை, ஆண்டவன் கட்டளை, என் கடமை, கர்ணன், கலைக்கோயில், கறுப்புப் பணம், காதலிக்க நேரமில்லை, கை கொடுத்த தெய்வம், சர்வர் சுந்தரம், தெய்வத்தாய், பச்சை விளக்கு, படகோட்டி, பணக்காரக் குடும்பம், புதிய பறவை, வாழ்க்கை வாழ்வதற்கே, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, சாந்தி, பஞ்சவர்ணக்கிளி, பணம் படைத்தவன், பழனி, பூஜைக்கு வந்த மலர், வாழ்க்கைப் படகு, வெண்ணிற ஆடை, ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் - என்று விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொன்னெழுத்துப் பட்டியல் நீண்டு 1965 டன் ஒரு முடிவுக்கு வருகிறது.

நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இங்கே குறிப்பிட்டிருக்கும் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களின் பாடல்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. 

இந்தப் படங்களில் வரும் ஓரிரண்டு பாடல்களைத் தவிர பாக்கி அத்தனைப் பாடல்களும் – ஆமாம் அத்தனைப் பாடல்களும், சதவிகிதக் கணக்குப் போட்டால் தொண்ணுற்று ஒன்பது சதம் வரக்கூடிய அத்தனைப் பாடல்களும்- அதனை இயற்றியவரின் பெயர் சொல்லும், அதனைப் பாடியவரின் பெயர் சொல்லும், அதில் நடித்தவர்களின் பெயர் சொல்லும் தமிழின் நிரந்தர இனிமைப் பட்டியலில் இருக்கப்போகும் என்றென்றும் இனிக்கும் இறவாப் பாடல்களே.

இத்தனை இனிமையாய், இத்தனை சுவைகளில், இவ்வளவு அமுதத் தமிழில், இத்தனை விதவிதமான குரல்களில், இத்தனை விதவிதமான உணர்வுகளில், இத்தனை வித வாத்தியங்களின் இனிமையில் இதுவரை யாரும், ஆமாம் யாரும்- இத்தனைப் பாடல்களைத் தமிழுக்குக் கொடுத்ததில்லை.

இனிமேல் கொடுக்கப்போகிறவர்களும் யாரும் இல்லை.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்திருந்தபோதும் சரி, தனியாக விஸ்வநாதன் பிரிந்து இசையமைத்துக்கொண்டிருந்தபோதும் சரி இவர்களின் தாரகமந்திரம் ஒன்றேஒன்றுதான். அதாவது இனிமை, இனிமை, இனிமை!

பாடல்களில், அது எப்பேர்ப்பட்ட பாடல்களாக இருந்தபோதிலும் இனிமையைக் குழைத்துக்கொடுப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். இனிமை அடிப்படை. அதன்பிறகு புதுமை, காலமாற்றம், அதற்கேற்ற மாறுதல்கள், விதவிதமான வாத்தியக்கருவிகள், பல்வேறு நாட்டு இசைகளின் கோர்வைகள் லொட்டு லொசுக்கெல்லாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சமே. முதல் அடிப்படை இனிமை. இனிமை இல்லையெனில் அது எப்பேர்ப்பட்ட புதுமையாக இருந்தபோதிலும் இவர்களின் கவனம் அங்கே செல்லாது. அவர்களின் தாரக மந்திரம் இது ஒன்றுதான் இனிமை, இனிமை, இனிமை!

அந்த ஒரே காரணத்தினால்தான் எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் இவர்களின் பாடல்களுக்கு மட்டும் வயதாவதும் இல்லை, தேய்ந்து போவதும் இல்லை, மறைந்துபோவதும் இல்லை, ஓரத்தில் ஒதுக்கப்படுவதும் இல்லை. யாரும் இந்தப் பாடல்களை மறப்பதும் இல்லை.

ஒரு பாட்டுக்கு இசை முக்கியமா? பாடல் வரிகள் முக்கியமா? என்ற சர்ச்சை எந்தக் காலத்திலும் உண்டு. இதற்கு எம்எஸ்வியே நிறைய நேரங்களில் பதில் சொல்லியிருக்கிறார். “மெட்டுக்குப் பாட்டும் உண்டு; பாட்டுக்கு மெட்டும் உண்டு” என்பது அவரது நிரந்தர பதில். இந்த பதிலில் உள்ள புரிதல் என்னவென்றால் மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பதுதான்.

இதையும் தாண்டி தோண்டித் துருவும் வித்தகர்கள் காலந்தோறும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘பாட்டுக்கு இசை மட்டும்தான் முக்கியம். பாட்டுவரிகள் என்பன ஒரு பொருட்டேயில்லை’ என்ற ஒரு வாதமும் சிலர் மூலம் இங்கே பரப்பப்பட்டு வருகிறது. இந்த வாதத்தை ஒரு இசையமைப்பாளரே முன்நின்று பரப்புவதையும் பார்த்துத்தான் வருகிறோம். அவருக்கு மார்க்கெட் இருக்கும்வரை அந்த வாதத்திற்கும் ஒரு மவுசு இருந்தது. அவருக்கு மார்க்கெட் போனபின்பு அந்த வாதத்திற்கான நிழல் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரேயொரு வார்த்தை. பாட்டு வரிகளை, எழுத்தின் சக்தியை உணராதவர்கள் எத்தனை பெரிய வித்தகர்களாக இருந்தபோதும் பிரயோசனமில்லை. கம்பராமாயணம் காலத்தில் எத்தனையோ இசை வடிவங்கள் இருந்திருக்கலாம். அந்த இசையெல்லாம் இப்போது எங்கே?

ஆனால் கம்பராமாயணம் மட்டும் இன்னமும் இருக்கிறது.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி 1965-ம் ஆண்டுடன் பிரிகிறார்கள். அவர்கள் பிரிவுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவர்களின் பிரிவுக்கடுத்து விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் விஸ்வநாதன் மட்டும் நிலைத்து நின்று தனியாகவே அறுநூறு படங்களுக்கும் மேல் இசையமைத்ததையும், ராமமூர்த்தி இருபது படங்களுடன் நின்றுவிட்டதையும் குறிப்பிடத்தான் வேண்டும். இருவரும் சேர்ந்து இசையமைத்தபோது இருந்த அந்த ‘ரசவாத வித்தை’ விஸ்வநாதனிடம் தொடர்ந்து பல படங்களில் பயணித்ததையும், ராம மூர்த்தியிடம் பிரதானமாக ஒரு படத்தில்கூட முழுமையாகப் பயணிக்கவில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான படங்களை, பாடல்களைத் தன்னந்தனியராக விஸ்வநாதன் இசையமைத்து சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது படங்களைத் தவிர மற்ற படங்களில் அவரும் குறிப்பிட்ட ஒரு பாடல், அல்லது இரண்டு பாடல்கள்தாம் ஹிட் என்ற அளவுக்குத் தம்மைச் சுருக்கிக்கொண்டார். இது மற்ற இசையமைப்பாளர்களைப் போன்றே அவரும் தம்மை வடிவமைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இருவரும் இணைந்து இருக்கும்போது இந்த நிலைமை இல்லை.

ஒரு படம் என்றால் அதில் வரும் அத்தனைப் பாடல்களும் பிரசித்தம்.

அத்தனைப் பாடல்களையும் ரசிகர்கள் கூடிக்களித்துக் கொண்டாடி காலம்பூராவும் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தனர் இருவரும்.

இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சாதனை முறியடிக்கக்கூடியது அல்ல என்பது மட்டுமல்ல, யாராலும் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒன்று.

தமிழ் இசையின் பொற்காலம் அது என்றுதான் சொல்லவேண்டும். 

‘குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், கொடிமலர், ராமு, நாடோடி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்களின் ஒரு சில பாடல்களில் அல்லது பல பாடல்களில் விஸ்வநாதனுடையது மட்டுமல்ல, ராமமூர்த்தியின் ‘டச்’சும் இருக்கிறது என்று சொல்லும் இசை ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்ததால் நிறையப் படங்கள் ஏற்கெனவே புக் ஆகியிருக்கும். ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள், மூன்று பாடல்கள், இரு பாடல்கள், ஒரு பாடல் என்று ஏற்கெனவே இருவராலும் இசையமைக்கப்பட்டு முடிந்திருக்கும். திடீரென்று பிரிந்தவுடன் இசையமைக்க ஒப்புக்கொண்ட எல்லாப் படங்களையும் முடித்துக்கொடுக்கும் பொறுப்பு எம்எஸ்வியிடம் வந்துவிட்டதால் ஏற்கெனவே இருவருமாகச் சேர்ந்து இசையமைத்த சில பாடல்களையும் சேர்த்தே தரவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்திருக்கும்.

இரட்டையரின் அந்த ‘மேஜிக் டச்’ விஸ்வநாதனின் பல படங்களிலும் பாடல்களிலும் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இருக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
அதேபோல் ராமமூர்த்தியின் கதையும் இதே தான். அப்படி அவர்கள் இருவரிடமும் இருந்த அந்த ‘மேஜிக் டச்’ எது? என்ன? என்பதற்கான பதில் இதுவரையிலும் நமக்கு கிடைத்தபாடில்லை. அந்த இருவருக்குமே கூட அதற்கான விடைதெரிந்திருக்கவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்.

"இருவரும் இருந்தபோது இருந்த அந்த டச் இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறதே அது ஏன்?" என்ற கேள்விக்கு எம்எஸ்வியும் சரி, ராமமூர்த்தியும் சரி ஒரே விதமான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். “அது என்ன என்பது தெரியவில்லை. ஏதோ கடவுள் கொடுத்த வரம் போல் இருக்கிறது. அப்போது என்னமாதிரியான சிரத்தையுடன் உழைத்தோமோ அதே போன்ற சிரத்தையுடனும் அக்கறையுடனும்தான் இப்போதும் உழைக்கிறோம். அந்த டச் ஏன் வரவில்லை என்று சொல்கிறீர்கள் என்பது தெரியவில்லை” என்பதுபோல்தான் சற்றேறக்குறைய இருவருமே கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.

மன்னர்களும் சரி, தனியே விஸ்வநாதனும் சரி ஒரு பாடலுக்கு அடிப்படையான மாறுதல்கள், புதுமைகள் எவ்வளவோ அவ்வளவையும் தங்கள் படைப்புக்களிலேயே செய்துமுடித்துவிட்டார்கள். அதற்குப் பின் வந்தவர்கள் செய்வதெல்லாம் அவர்கள் செய்ததிலிருந்து அங்கே ஒரு மாற்றம், இங்கே ஒரு மாற்றம் இந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை, அந்த இடத்தில் ஒரு சின்ன நகாசு வேலை என்பது மாதிரியான மாறுதல்கள்தாம். 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ ‘மவுண்ட்ரோட்டில்’ என்ன பெரிய மாறுதல்களைச் செய்துவிட முடியும்?

சுத்தமான கர்நாடக இசையில் மெட்டை மட்டும் உருவி, கமகங்கள் ஆலாபனைகள் வாய்ப்பாடுகளை நீக்கி எளிமைப்படுத்தி அத்தோடு லேசான அளவுக்கு மேல்நாட்டு இசைக் கலவையையும் கலந்து தந்ததுதான் மெல்லிசை மன்னர்களின் பாணி. பிற்பாடு காலத்தின் தேவைக்கேற்ப உலக இசையைத் தமிழில் புகுத்தவும் அவர்கள் தவறியதில்லை. எகிப்து இசையைப் ‘பட்டத்து ராணியின்’ மூலமும், பெர்சியன் இசையை ‘நினைத்தேன் வந்தாய்’ மூலமும், ஜப்பான் இசையை ‘பன்சாயி’ மூலமும், லத்தீன் இசையை ‘யார் அந்த நிலவு’ மூலமும், ரஷ்ய இசையை ‘கண்போன போக்கிலே’ மூலமும், மெக்சிகன் இசையை ‘முத்தமிடும் நேரமெப்போ’ மூலமும் எம்எஸ்வி புகுத்தினார் என்று சொல்வார்கள்.

இவையில்லாமல் பொம்மைகளை வைத்துக்கொண்டு ‘மகராஜா ஒரு மகராணி’, ‘ஜூனியர் ஜூனியர்’ பாடல்களிலும், கிளியை வைத்துக்கொண்டு ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே’ பாடலும் மிமிக்ரி கலைஞர் ஒருவரை வைத்துக்கொண்டு அவள்ஒரு தொடர்கதை படத்திலும் அவர் கட்டமைத்த பாடல்களுக்கு ஈடு இணை கிடையாது. (இப்படியொரு பாடலை மேஜர் சந்திரகாந்த் படத்தில் முயன்றவர் வி.குமார். ‘ஒருநாள் யாரோ’ பாடலை அற்புதமாகப் போட்டிருப்பார் அவர்) விசில் அடிப்பதைப் பின்னணியாக வைத்து மட்டும் ஒரு இருபது பாடல்களையாவது அமைத்திருப்பார் விஸ்வநாதன். விசில் மட்டுமல்லாமல் கூடவே ரயில் புறப்படுவது, வேகமாக ஓடுவது, நிற்பது என்ற சத்தங்களில் ‘பச்சைவிளக்கு’ படத்தில் ‘கேள்விபிறந்தது அன்று’ பாடலை அமைத்திருப்பார் அவர். பின்னாட்களில் கே.பாலச்சந்தர் படங்களில் இம்மாதிரியான ஏகப்பட்ட புதுமைகளை நிகழ்த்தியிருப்பார் எம்எஸ்வி.

இன்றைய படங்களின் பாடல்களுக்கு வழியமைத்தவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னோடிகளும் இவர்கள்தாம். முதன்முதலாக இந்தியாவிலேயே மேடை நிகழ்ச்சியாக திரைஇசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர்களும் இவர்கள்தாம். இதற்குப் பின்னால்தான் பம்பாயில்கூட இசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார்கள்.

இவர்கள் இணைந்திருந்தபோதும் சரி, விஸ்வநாதன் தனியே இயங்கியபோதும் சரி இனிமைக்கு அடுத்தபடி இவர்கள் முக்கியத்துவம் கொடுத்தது குரல்களுக்கு. ஆரம்பத்தில் டிஎம்எஸ், சுசீலா, பிபிஸ்ரீனிவாஸ், எல்ஆர்ஈஸ்வரி, சீர்காழி ஆகியோரின் குரல்களை வைத்து விந்தை புரிந்த விஸ்வநாதன் அடுத்து ஏசுதாஸ், எஸ்பிபாலசுப்ரமணியம், வாணிஜெயராம், ஜெயச்சந்திரன் ஆகியோரை வைத்து விந்தை புரிய ஆரம்பித்தார். ஒரு ஆண்குரல் ஒரு பெண்குரல் என்பதோடு இவரது பரிசோதனை முயற்சிகள் முற்றுப்பெற்றவை அல்ல. மாறாக இரண்டு ஆண்குரல்கள், அல்லது மூன்று நான்கு ஆண் குரல்கள், இரு பெண் குரல்கள் என்று வைத்துக்கொண்டு இவர்கள் புரிந்த ஜாலங்கள் எல்லாம் வேறு எந்த இசையமைப்பாளர்களாலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதவை. 

டிஎம்எஸ்- சீர்காழி, டிஎம்எஸ்-பிபிஎஸ் என்று ஆண்களை வைத்துக்கொண்டு பத்துப் பாடல்களுக்கு மேல் இவர்கள் போட்டிருக்கிறார்கள். எல்லாமே ஹிட்டடித்தவை என்பதுதான் இங்கே முக்கியம். படித்தால் மட்டும் போதுமா படத்தில் ‘பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை’ என்று காலத்தால் அழிய முடியாத ஒரு பாடல். டிஎம்எஸ்ஸும் பிபிஎஸ்ஸும் பாடியிருப்பார்கள். இதுபோன்ற ஒரு இனிமையான பாடலை இதுவரை எந்த ஒரு இசையமைப்பாளரும் இரு ஆண்குரல்களை வைத்து யோசித்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். 

இரண்டு ஆண்குரல்கள்….. அதுவும் சிவாஜியையும் பாலாஜியையும் நீச்சல் குளத்தில் குளிக்கவைத்துப் பாட்டுப்பாடவைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். இரண்டு ஆண்களை நீச்சல்குளத்தில் குளிக்கவைத்துப் படமாக்கும் தைரியம் பீம்சிங்கைத்தவிர உலகில் யாருக்குமே வராது- என்று விமரிசனம் எழுதியது குமுதம். 

கர்ணன் படத்தில் ஆயிரம் கரங்கள் நீட்டி’ பாடலை டிஎம்எஸ், சீர்காழி, திருச்சிலோகநாதன், பிபிஎஸ் ஆகிய நான்குபேரை வைத்துப் பாடவைத்திருந்தார்கள்.
(விஸ்வநாதனுக்குப் பின் வந்த சில இசையமைப்பாளர்கள் இரண்டு ஆண்குரல்களை வைத்து சில பாடல்களை முயன்றிருப்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். ராகமே இல்லாமல் வசனம் ஒப்பிப்பதுபோல் ரொம்பவும் பரிதாபமாக இருக்கும் அவை.)

                                         

இதுஒரு புறமிருக்க பி.சுசீலாவையும், எல்ஆர்ஈஸ்வரியையும் இணைத்து இரு பெண் குரல்களைப் பாடவைத்து இவர்கள் செய்திருக்கும் இசை ஜாலத்திற்கு இணையே கிடையாது. இருவருக்கும் ஒரு போட்டியே ஏற்படுத்தும் அளவுக்கு அந்தப் பாடல்கள் இருக்கும். இந்தவகைப் பாடல்களின் எண்ணிக்கையும் பதினைந்து இருபதைத் தாண்டும் என்று நினைக்கிறேன்.

மன்னர்கள்  வாத்தியக்கருவிகளைக் காட்டிலும் குரல்களைத்தாம் முக்கியமென்று நினைத்தனர். அதனால்தான் பாடும் குரல்களோடு இயைந்துவரக்கூடிய ராகத்திற்குத் துணையாக ஹம்மிங் என்ற குரல்களையே பல பாடல்களில் பயன்படுத்தினர். எம்எஸ்வியே நிறைய ஹம்மிங் தந்திருக்கிறார். அவருக்கடுத்து சீர்காழி, சுசீலா, ஜானகி எல்லாருமே ஹம்மிங் தந்திருக்கின்றனர். இதற்காகவே இவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திய இன்னொரு ஹம்மிங்கிற்கு சொந்தக்காரர் எல்.ஆர்.ஈஸ்வரி. இவருடைய பல பாடல்களுக்கான ஹம்மிங் விசேஷமானது. இவர்கள் அளவுக்கு அல்லது எம்எஸ்வி அளவுக்கு இதையெல்லாம் பயன்படுத்த முடியாது என்பது தெரிந்த எந்த இசையமைப்பாளர்களும் இந்த ஏரியாவுக்குள் எல்லாம் நுழையவே இல்லை என்பதையும் நுழையவே பயந்து தவிர்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எம்எஸ்வி முக்கியத்துவம் கொடுத்த இன்னொன்று விசில். விசிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாதமான பல பாடல்களைப் போட்டிருக்கிறார் அவர். நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், கேள்விபிறந்தது அன்று.......... என்று பல பாடல்கள். வாசிப்புக் குழுவினில் இருந்து எம்எஸ் ராஜூ என்ற ஒருவர் மிகப் பிரமாதமாக விசிலடிப்பார் என்பதை அறிந்து அவரை உபயோகித்துப் பல படங்களில் விசில் பாடல்கள் போட்டார் என்று சொல்வார்கள். 

நல்ல வேளையாய் இதிலும் கைவைக்கும் 'தைரியம்' எந்த இசையமைப்பாளருக்கும் இருந்ததில்லை.

எம்எஸ்வி பாடுவதைப் பற்றியும் நடிப்பதைப் பற்றியும் டிவி நிகழ்ச்சிகளில் எல்லாம் நிறைய பேசிவிட்டார்கள். அவர்கள் சொல்லாத ஒரு தகவல்……. அந்தக் காலத்திலிருந்து எம்ஜிஆர், சிவாஜி. ஸ்ரீதர் மற்றும் சில படங்களில் பியானோ வாசிக்கும் குளோஸப் விரல்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான். பாசமலர் படத்தின் ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’ பாடலில் சிவாஜிக்கான விரல்களாகவும், வெண்ணிற ஆடை படத்தின் ‘என்ன என்ன வார்த்தைகளோ’ பாடலில் ஸ்ரீகாந்தின் விரல்களாகவும் காட்டப்படும் மந்திர விரல்களுக்குச் சொந்தக்காரர் எம்எஸ்விதான்.

எம்எஸ்வி மறைந்த சோகம் ஒருபுறமிருக்க, அச்சு ஊடகங்களும் சரி, மின் ஊடகங்களும் சரி அவருடைய மறைவுக்கு அளித்த முக்கியத்துவமும், அவரைப் பற்றி மக்களுக்கு என்னென்ன சேரவேண்டுமோ, எப்படி எப்படிச் சேரவேண்டுமோ அத்தனையையும் சரிவர வகைப்படுத்தி, முறைப்படுத்தி, தோண்டித் துருவியெடுத்து மக்கள் முன் வைத்த விதமும் சரி, அந்தப் பெருங்கலைஞர் நினைவுகூறப்பட்ட விதமும் சரி பாராட்டுக்குரியவை.

கடைக்கோடித் தமிழனுக்கும் அவர் யார் அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் ஐயம் திரிபற சொல்லப்பட்டுவிட்டன. 

இனிமேல் இணைய பிஸ்கோத்துகளின் தகிடுதத்தங்கள் எல்லாம் எங்கேயும் எடுபடப்போவதில்லை. இவர்கள் பாட்டுக்கு இணையச்சுவர்களைப் பிறாண்டிக் கொண்டிருக்கவேண்டியதுதான்.

எல்ஆர்ஈஸ்வரி மனதில் பட்டதை அங்கேயே அப்படியே கொட்டிவிடும் சுபாவம், நாசுக்கெல்லாம் தெரியாது. எம்எஸ்வியின் இறுதி ஊர்வல நேரலையின்போது புதிய தலைமுறை டிவியில் எம்எஸ்வி போட்ட ஒரு வித்தியாசமான பாடலைச் சொல்லும்போது ‘இளையராஜாவும் அப்படிப் பின்னால் போட்டார்’ என்று மற்றவர் சொல்லப்போக “எம்எஸ்வியைப் பற்றிப்பேசும்போது எம்எஸ்வியைப் பற்றிப் பேசுங்கள். இங்கே எதற்காக இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று சீறினார் பாருங்கள் ஒரு சீறல்………. முறையான கோபத்தின் வெளிப்பாடு அது.

ஜெயா டிவியில் சுதாங்கன் நடத்திய ‘என்றும் நம்முடன் எம்எஸ்வி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோபாலா ஒரு கேள்வி எழுப்பினார். 


“எல்லாம் சரி; எம்எஸ்வி வாசித்த ஆர்மோனியம் இப்போது எங்கிருக்கிறது? அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்? அதனை எங்கே வைக்கப்போகிறார்கள்? அதனை உபயோகிக்கும் அருகதையோ தகுதியோ இங்கே யாருக்குமே இல்லையே, அந்த ஆர்மோனியத்தை என்ன செய்யப்போகிறார்கள்?” என்றார்.


மில்லியன் டாலர் கேள்வி இது.

39 comments :

துரை செல்வராஜூ said...

என்றென்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும் திரு. MSV., அவர்களைப் பற்றிய சிறப்பான செய்திகள்.. நன்றி..

நம்பள்கி said...

நல்ல உழைப்பு! ஏகப்பட்ட விஷயங்கள்.
ஒரு முறைக்கு இரு முறை படிக்கவேன்டும். மீண்டும் வருகிறேன்.
நன்றி!

S.P.SENTHIL KUMAR said...

எம்.எஸ்.வி.யின் இசைப் போலவே உங்கள் பதிவும் மிக இனிமை!

தி.தமிழ் இளங்கோ said...

பல பழைய தமிழ் சினிமாப் பாடல்களின் வரிகளை ஒருங்கே ரசிக்க முடிந்தது. இரண்டு கட்டுரைகளிலும் உங்கள் உழைப்பு நன்றாகத் தெரிகிறது. மீண்டும் இந்த இரண்டு பதிவுகளையும் படிப்பேன்.

Amudhavan said...

துரை செல்வராஜூ said...
\\என்றென்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும் திரு. MSV., அவர்களைப் பற்றிய சிறப்பான செய்திகள்\\

தங்களின் வருகைக்கு நன்றி துரைசெல்வராஜ்.

Amudhavan said...

நம்பள்கி said...
\\ நல்ல உழைப்பு! ஏகப்பட்ட விஷயங்கள். ஒரு முறைக்கு இரு முறை படிக்கவேன்டும்\\

நன்றி நம்பள்கி, படித்துவிட்டு எழுதுங்கள்.

Amudhavan said...

S.P. Senthil Kumar said...

\\ எம்.எஸ்.வி.யின் இசைப் போலவே உங்கள் பதிவும் மிக இனிமை\\
சுருக்கமான தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி செந்தில்குமார்.

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\பல பழைய தமிழ் சினிமாப் பாடல்களின் வரிகளை ஒருங்கே ரசிக்க முடிந்தது. இரண்டு கட்டுரைகளிலும் உங்கள் உழைப்பு நன்றாகத் தெரிகிறது. மீண்டும் இந்த இரண்டு பதிவுகளையும் படிப்பேன்.\\

நீண்ட நாட்களுக்குப் பின் இப்போதுதான் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.(தங்கள் காலின் காயம் குணமாகிவிட்டதுதானே?) இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டுத் தங்கள் கருத்தை எழுதுங்கள்.

ஜோதிஜி said...

பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல்களின் தொகுப்பாக உள்ளது. அற்புதமான உழைப்பு. கொஞ்சம் சிரமப்பட்டு யூ டியுப் இணைப்பு கொடுத்து இருந்தால் நூறு சதவிகிதம் உழைப்பும் முழுமை அடைந்து இருக்குமே?

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல்களின் தொகுப்பாக உள்ளது. அற்புதமான உழைப்பு. கொஞ்சம் சிரமப்பட்டு யூ டியுப் இணைப்பு கொடுத்து இருந்தால் நூறு சதவிகிதம் உழைப்பும் முழுமை அடைந்து இருக்குமே?\\

வாங்க ஜோதிஜி, உங்கள் கருத்திற்கு நன்றி. பள்ளிப் பருவத்தில் கேட்ட பாடல்களின் தொகுப்பு என்று சொல்லும்போதே நீங்கள் முரசு, சன்லைஃப், ஜெயா மேக்ஸ் என்று இன்னமும் பற்பல சேனல்களைப் பார்ப்பதில்லை என்பது தெரிகிறது. இந்தச் சேனல்களிலெல்லாம் தொடர்ந்து இன்னமும் நான் குறிப்பிட்ட பல பாடல்களை தினசரி ஒளிபரப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
யூ டியூப் தொடர்புகள் எத்தனைப் பாடல்களுக்கென்று தருவது? கொஞ்சம் சிரமப்பட்டு தேடியெடுத்துக் கேளுங்களேன். அல்லது தேடுவதற்கு பதில் அந்தப் பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு நாள்தோறும் கேட்டுக்கொண்டிருங்களேன்.

chemical engineers vaccancys said...

Ulagin ethavathu moolaiyil,Lathavin kural,Kannadasan padalkalum Olithukonnudu Irukkum .
Ippothu" ISAI CHEMMAL"MSV.TAMIL THIRRAI ISAI VARALARU AZHIYATHHU VAAZHUM

Amudhavan said...

chemical engineers vaccancys said...

\\Ulagin ethavathu moolaiyil,Lathavin kural,Kannadasan padalkalum Olithukonnudu Irukkum . Ippothu" ISAI CHEMMAL"MSV.TAMIL THIRRAI ISAI VARALARU AZHIYATHHU VAAZHUM\\

உலகின் ஏதோ ஒரு மூலையில் லதாமங்கேஷ்கர் குரலும், கண்ணதாசன் பாடலும் இருபத்து நாலு மணிநேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கும் - என்பதை நானும் படித்திருக்கிறேன். நீங்களும் அதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

Anonymous said...

\\எம்எஸ்வியைப் பற்றிப்பேசும்போது எம்எஸ்வியைப் பற்றிப் பேசுங்கள். இங்கே எதற்காக இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று சீறினார் பாருங்கள் ஒரு சீறல்………. முறையான கோபத்தின் வெளிப்பாடு அது\\
அருமை. நெத்தியடி.
\\பேங்கோஸ் முடிந்து கிட்டாரின் தீற்றலுக்குப் பின் ஒலிக்கும் ட்ரம்ஸைத் தொடர்ந்து’\\
\\காரிகன் said...
இந்த 2;34 ஆம் செகண்டில் ஒரு பேஸ் கிட்டார் உறுமல், இரண்டாவது சரணத்தின் முடிவில் வரும் புல்லாங்குழல் போன்ற சக்கையான இசை ரசனைகள் கொஞ்சம் தள்ளி நின்றுகொள்ளவும்.\\
அப்புறம் இது என்ன? அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. உங்களுக்கு வந்தா ரத்தமா?
நான் இளையராஜா பற்றி சொல்லவே இல்லையே எனலாம். ஒருவரைப் பற்றி பற்றி பேசும்போது, அவரைப் பற்றி மட்டுமே பேசலாமே, ஏன் மற்றவர்களையோ, அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் பற்றி சொல்ல வேண்டும்?
சத்தியமாக இதற்கு ஒழுங்கான பதில் வராது. இருந்தாலும், எனது ஆதங்கம்.

Arul Jeeva said...

எம் .எஸ் .வி ஒரு சாகா வரம்பெற்ற சகாப்தம் .அவரது இசை என்றுமே அழியாத அழிக்க முடியாத தமிழிசையின் வரப்பிரசாதம் .இதை என்றும் மறுப்பதற்கில்லை .சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வதாக தோன்றினாலும் சொல்ல வேண்டிய சூழலை தாங்களே ஏற்படுத்துகிறீர்கள் . #எம் .எஸ் .வி பற்றி பேசும் போது எம் .எஸ் .வி பற்றி மட்டுமே பேசுங்கள் .எதற்காக இளையராஜாவைப் பற்றி பேசுகிறீர்கள் .#என்று எல் .ஆர் .ஈஸ்வரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டதைப் பதிவு செய்துள்ள தாங்கள் அதனைப் பின்பற்றாமல் இருப்பதேனோ ? அவரவர் விருப்பங்கள் இணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன.எல்லாவற்றையும் படித்தேயாக வேண்டுமென்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்தவுமில்லை. நான் படித்தவரை தாங்களும் தங்கள் நண்பர் காரிகனும் தான் எதைப் பற்றிய பதிவாயினும் அங்கே இளையராஜாவை இழுத்து (செய்தித்தாளில் விற்பனைக்கென தலைப்பு செய்திகள் வைப்பதுபோல )பதிவினை மெருகூட்டிக் கொள்கிறீர்கள் போலும் .

ஜோதிஜி said...

இந்தப் பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது என்றாலும் உங்கள் பார்வைக்காக

சமீபத்தில் படித்தது.

“ நேசிப்பவர்கள் நம்மை நிராகரிக்கும்போதே
நாம் விலகி விட வேண்டும்...
அவர்களின் வெறுப்பை நமக்கு உணர்த்தி விட்டால்
தாங்க முடியாத வலி நமக்குத்தான்....” [ப.பி. ]
எல்லோருக்கும் இந்த நிராகரிப்பும் , புறக்கணிப்பும் எப்போதாவது நேர்ந்திருக்கும்...

தனக்கு நேர்ந்த நிராகரிப்பை , இளையராஜா ஒரு பழைய பேட்டியில் இப்படிச் சொல்லி இருக்கிறார்...

"ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார்...
யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை `தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு....

ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார்.... ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு , ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே... இதுதான் சினிமா உலகமா ? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா ? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது...”

# ஆம்.. உண்மைதானே....! இளையராஜா எண்ணியது போலவே நடந்தது...

ஒரு கட்டத்தில் கமல்..ரஜினி கூட இளையராஜாவை நிராகரித்து விலகிச் செல்ல...
வார இதழ் ஒன்றில் இளையராஜாவிடம் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி :

"விருமாண்டி"க்கு பின் அவரும் , "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே ?”

இதற்கு இளையராஜா பதில்: “ என்னை வைத்துத்தான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது...அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.

காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும் ?

எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம். ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது.

என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே.

ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும் , நிலைத்திருக்கும் என் இசை...”

# இளையராஜாவின் இந்த பதிலில் கர்வம் கொஞ்சம் எட்டிப் பார்ப்பது போலத் தோன்றினாலும்...
நேசித்தவர்கள் புறக்கணித்த காயம் , அதைவிட வெளிப்படையாகவே தெரிகிறது....

# ஆம்.. மரண தண்டனை கொடுக்கும் வலியும் ,
மனதுக்குப் பிடித்தவர்களின் புறக்கணிப்பும் ஒன்றுதான்...!

Amudhavan said...

Anonymous said...
\\எம்எஸ்வியைப் பற்றிப்பேசும்போது எம்எஸ்வியைப் பற்றிப் பேசுங்கள். இங்கே எதற்காக இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று சீறினார் பாருங்கள் ஒரு சீறல்………. முறையான கோபத்தின் வெளிப்பாடு அது\\ அருமை. நெத்தியடி. \\பேங்கோஸ் முடிந்து கிட்டாரின் தீற்றலுக்குப் பின் ஒலிக்கும் ட்ரம்ஸைத் தொடர்ந்து’\\ \\காரிகன் said... இந்த 2;34 ஆம் செகண்டில் ஒரு பேஸ் கிட்டார் உறுமல், இரண்டாவது சரணத்தின் முடிவில் வரும் புல்லாங்குழல் போன்ற சக்கையான இசை ரசனைகள் கொஞ்சம் தள்ளி நின்றுகொள்ளவும்.\\ அப்புறம் இது என்ன? அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி. உங்களுக்கு வந்தா ரத்தமா? நான் இளையராஜா பற்றி சொல்லவே இல்லையே எனலாம். ஒருவரைப் பற்றி பற்றி பேசும்போது, அவரைப் பற்றி மட்டுமே பேசலாமே, ஏன் மற்றவர்களையோ, அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் பற்றி சொல்ல வேண்டும்? சத்தியமாக இதற்கு ஒழுங்கான பதில் வராது. இருந்தாலும், எனது ஆதங்கம்.\\
முகம் காட்ட மறுத்து வந்திருக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி; மேலே நானும் காரிகனும் சொல்லியிருக்கும் நபர்கள் இ.ரா அல்ல, இ.ரா ரசிகர்கள்.... இணையம் பூராவும் பரவிக்கிடக்கும் இவர்கள் செய்கின்ற அட்டூழியங்கள் ஒன்று இரண்டு அல்ல கணக்கிலடங்காதவை. இந்த 'ரசிகர்கள்' மூலம் சாதாரணமாக வரும் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பார்வையாளர்கள் தவறான செய்திகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.அவர்கள் தவறான தகவல்களில் நிரம்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பல இடங்களில் இம்மாதிரியான சுட்டிக்காட்டல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இங்கே பெரும்பாலும் ஒலிக்கும் எச்சரிக்கை மணிகள் அவர்களை மனதில் நிறுத்தித்தான். நானும் காரிகனும் எழுத ஆரம்பித்தபிறகுதான் பல்வேறு பொய்கள் பரப்பப்படுவது நின்று போயிருக்கிறது. குறிப்பாக அந்த சிம்பொனி..................
அது மட்டுமல்லாமல் ஒரு இசையமைப்பாளரைப் போற்றியோ புகழ்ந்தோ துதித்தோ சொல்கிறீர்கள் என்றால் இதுவரை அவர் துறையிலோ அல்லது மற்ற யாரைவிடவும் சிறப்பாக என்ன செய்திருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர, புல்லாங்குழலுக்குப்பின் மோர்சிங் வரும், அதற்குப்பின் பேஸ்கிட்டார் வரும் என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.
எல்ஆர்ஈஸ்வரி கோபப்பட்டார் என்றால் அவர் பேச்சில் இப்படி யாரைப் பற்றிப் பேசுகிறாரோ அவரல்லாமல் மற்றவர்களைப் பற்றியும் பேசியிருக்கிறார் என்றால் நீங்கள் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம்.
அந்த நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தபோது என்னுடைய வீட்டில் பார்த்துக்கொண்டிருந்த நண்பரும் "ஈஸ்வரியின் கோபம் மிகவும் நியாயமானது" என்றார். அவர் தொடர்ந்து சொன்னார். "இளையராஜா இசை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று வையுங்கள். அப்போது "இதுபோலவே ஏ.ஆர்.ரகுமானும் ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார்" என்று அடுத்தவர் இடைபுகுந்து சொன்னால் இ.ரா ரசிகர் இப்படித்தானே கோபப்படுவார்?" என்று கேட்டார் அவர்.
தவிர, எனக்கும் அந்தவகை செயற்பாடுகளில் கேள்வி இருந்தது. இப்போது கண்ணதாசனைப் பற்றிப் பேசுகிறோம். அவருடன் சமகாலத்தில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் மருதகாசியையோ, ஆலங்குடி சோமுவையோ, தஞ்சை ராமையா தாஸையோ குறிப்பிடலாம். அல்லது படங்கள் போடலாம். இவர்கள் பாட்டுக்கு என்னதான் இரண்டு மூன்றுமுறை இந்திய அளவில் பரிசு பெற்றவர் என்பதற்காக நா.முத்துக்குமாரை இணைத்து இணைத்து சொல்லிக்கொண்டிருந்தார்களானால் கேள்வி வரத்தான் செய்யும்.

Amudhavan said...

Arul Jeeva said...

\\நான் படித்தவரை தாங்களும் தங்கள் நண்பர் காரிகனும் தான் எதைப் பற்றிய பதிவாயினும் அங்கே இளையராஜாவை இழுத்து (செய்தித்தாளில் விற்பனைக்கென தலைப்பு செய்திகள் வைப்பதுபோல )பதிவினை மெருகூட்டிக் கொள்கிறீர்கள் போலும் .\\
வாங்க அருள்ஜீவா தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மேலே அனானிக்கு உள்ள பதிலிலேயே தங்கள் கருத்துக்களுக்கான பதிலும் உள்ளது. 'இளையராஜா பெயரை இழுத்துக்கொள்வதாலேயே' ஒரு பதிவுக்கு 'மெருகூட்டிக்கொள்ள முடியும்' என்பது அருமையான கண்டுபிடிப்பு.
பரபரப்பிற்காகப் போடப்படும் போஸ்டர் செய்திகளில் இல்லாத ஒன்றைப் போட்டால்தான் தவறு. இருக்கும் ஒன்றையே 'உறைக்கிற' மாதிரி போடுவதில் ஒரு தவறும் காணமுடியாது.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\“ நேசிப்பவர்கள் நம்மை நிராகரிக்கும்போதே நாம் விலகி விட வேண்டும்... அவர்களின் வெறுப்பை நமக்கு உணர்த்தி விட்டால் தாங்க முடியாத வலி நமக்குத்தான்....” [ப.பி. ] எல்லோருக்கும் இந்த நிராகரிப்பும் , புறக்கணிப்பும் எப்போதாவது நேர்ந்திருக்கும்... தனக்கு நேர்ந்த நிராகரிப்பை , இளையராஜா ஒரு பழைய பேட்டியில் இப்படிச் சொல்லி இருக்கிறார்...\\

\\மரண தண்டனை கொடுக்கும் வலியும் , மனதுக்குப் பிடித்தவர்களின் புறக்கணிப்பும் ஒன்றுதான்...!\\
உண்மைதான் ஜோதிஜி, நேசித்தவர்களின் புறக்கணிப்பு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றுதான். ஆனால் இ.ராவுக்கு நேர்ந்த இதே புறக்கணிப்பு, இளையராஜாவால் மற்றவர்களுக்கும் நேர்ந்திருக்கிறது என்பதுதான் கொடுமை. அதில் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கோவைத்தம்பி. என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடி புறக்கணிப்பின் காயம் கோபமாக உருமாறி பம்பாய்க்குப் பறந்துசென்று லக்ஷ்மிகாந்த் பியாரிலாலை புக் பண்ணிக்கொண்டு வந்தவரைக்கும் நீண்டது. இ.ராவின் புறக்கணிப்புக்கு உள்ளானவர்கள் ஒருவர் இருவர் அல்ல, பல பிரமுகர்கள் அவர் உச்சத்தில் இருந்தபோது அவரின் புறக்கணிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒரு படைப்பாளியின் படைப்பைத்தான் பார்க்கவேண்டுமே தவிர அவரின் குணாதிசயிங்களையோ அவரின் பெர்சனல் நடவடிக்கைகளையோ பார்ப்பது தேவையற்றது என்ற வாதத்தையெல்லாம் நான் ஒப்புக்கொள்கிறவன் அல்ல. கேள்விப்படும் மொத்தத் தகவல்களையும் சேர்த்துக் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் ஒருவரைப் பற்றிய மதிப்பீட்டிற்கு வருவேன். நீங்கள் எப்படியோ?

காரிகன் said...

அமுதவன் சார்,

அசத்தலாக தொடர்ந்திருக்கிறீர்கள். சாரம் கட்டி அடிப்பது என்பார்களே அதுபோல. இத்தனை தெளிவாக எம் எஸ் வி யின் சிறப்புக்களை தொகுத்துக் கொடுத்தால் சிலருக்கு மண்டை காயும் என்பது வந்திருக்கும் இரண்டு பின்னூட்டங்களிலேயே தெரிகிறது. என்னையும் உங்களையும் குறிப்பிட்டு தாக்காமல் அந்த சிலருக்கு பொழுது போகாது போல. ஒரு மாதிரியான கங்கணம் கட்டிக்கொண்டு இவன் என்னத்தை சொல்வான் என்று காத்துக்கொண்டிருப்பது போல ஒரு வித அவஸ்தையுடன் அலைபாய்கிறார்கள்.

அதை விடுங்கள். மகிழ்ச்சி, துயரம் இரண்டையும் ஒரே மெட்டில் சற்று பெய்தாஸ் (pathos) ஏற்றி இறக்கி விருந்து படைப்பது எம் எஸ் வியின் பாணிகளில் ஒன்று.

--------சுமைதாங்கி, நிச்சய தாம்பூலம், நெஞ்சில் ஓர் ஆலயம், படித்தால் மட்டும் போதுமா, பலேபாண்டியா, பாசம், பாதகாணிக்கை, பார்த்தால் பசிதீரும், போலீஸ்காரன் மகள், வீரத்திருமகன், ஆனந்த ஜோதி, இதயத்தில் நீ, இது சத்தியம், கற்பகம், நெஞ்சம் மறப்பதில்லை, பணத்தோட்டம், பார் மகளே பார், பெரிய இடத்துப் பெண், மணியோசை, ஆண்டவன் கட்டளை, என் கடமை, கர்ணன், கலைக்கோயில், கறுப்புப் பணம், காதலிக்க நேரமில்லை, கை கொடுத்த தெய்வம், சர்வர் சுந்தரம், தெய்வத்தாய், பச்சை விளக்கு, படகோட்டி, பணக்காரக் குடும்பம், புதிய பறவை, வாழ்க்கை வாழ்வதற்கே, ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, சாந்தி, பஞ்சவர்ணக்கிளி, பணம் படைத்தவன், பழனி, பூஜைக்கு வந்த மலர், வாழ்க்கைப் படகு, வெண்ணிற ஆடை, ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் ---

இவைகள் வெறும் சினிமா படங்கள் என்ற ரீதியில் நமது மக்களால் பார்க்கப்படுவதில்லை. அவற்றின் இசையும் பாடல்களும் இன்றைக்கும் என்றைக்கும் புதிய புதிய ரசனை விதைகளை நம் மனதில் விதைத்துக்கொண்டே இருக்கும். எத்தனைப் படங்கள்! தொடர்ந்து வரிசையாக ஒரு இசையமைப்பாளரால் அனைத்துப் படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் சிறப்பாக கொடுக்க முடியும் என்ற நாம் கண்ட நிஜமே நம்மை மூர்ச்சையடைய வைக்கிறது. மேலும் இந்த லிஸ்ட் ஒரு சாம்பிள்தான் என்ற அடுத்த நிஜம் ஆயிரம் டன் ஆச்சர்யத்தையும் அதை மீறிய அதிர்ச்சியையும் , இவை இரண்டையும் வென்ற மகா வியப்பையும் தருகிறது. எம் எஸ் வி - டி கே ஆர் இரட்டையர்கள் இசையின் மீது தங்கள் பாதச் சுவடுகளை பதித்துச் சென்றிருப்பது இனி இதுபோன்ற நிகழ்வு சாத்தியமா என்ற கேள்விக்குறி.

எம் எஸ் வி விசில் பாடல்கள் என்றே ஒரு தனி பதிவு எழுதலாம். அத்தனை அற்புதமான விசில் பாடல்கள் அவரிடமுண்டு.எனக்குத் தெரிந்து எம் எஸ் வி அளவுக்கு வேறு எந்த இசைஞரும் விசில் பாடல்கள் கொடுத்ததில்லை. (எல் வைத்தியநாதனின் காக்கை சிறகினிலே நந்தலாலாவை மறக்கவே முடியாது.) அது அவருடைய பாணி. அதன் பிறகு யாரும் இதை வெற்றிகரமாக கையாண்டதாக நினைவில்லை.நீரோடும் வைகையிலே பாடலை எம் எஸ் வி - டி கே ஆர் வெறும் விசில் ஓசை கொண்டு முதலில் அமைத்ததாகவும் அந்த தேனமிர்த மெட்டுக்கு கண்ணதாசன் பாடல் எழுதியே தீருவேன் என்று கவிதை எழுதியதாகவும் தகவல் உண்டு.

உங்களின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது. எம் எஸ் வி என்று வரும்போது சிலரே மனதிலிருந்து எழுதுகிறார்கள். உங்கள் ஆழ்மனதின் ஓசைகள் உங்கள் எழுத்தில் படர்ந்திருக்கிறது. அது கொஞ்சம் சிரிக்கிறது . கொஞ்சம் அழுகிறது. நிறைய மகிழ்கிறது. அதை விட பெரியதாக வியக்கிறது- எம் எஸ் வி என்ற அந்த இசை அனுபவத்தை. எம் எஸ் வி யின் இசை ஒரு மழலையின் சிரிப்பு போன்றது. அதற்கு வயதே ஆவதில்லை.

நிறையவே பேசலாம்தான். மீண்டும் வருகிறேன். அற்புதமான கட்டுரைக்காக பாராட்டுக்கள்.

Amudhavan said...

காரிகன் said...
\\இவைகள் வெறும் சினிமா படங்கள் என்ற ரீதியில் நமது மக்களால் பார்க்கப்படுவதில்லை. அவற்றின் இசையும் பாடல்களும் இன்றைக்கும் என்றைக்கும் புதிய புதிய ரசனை விதைகளை நம் மனதில் விதைத்துக்கொண்டே இருக்கும். எத்தனைப் படங்கள்! தொடர்ந்து வரிசையாக ஒரு இசையமைப்பாளரால் அனைத்துப் படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் சிறப்பாக கொடுக்க முடியும் என்ற நாம் கண்ட நிஜமே நம்மை மூர்ச்சையடைய வைக்கிறது. மேலும் இந்த லிஸ்ட் ஒரு சாம்பிள்தான் என்ற அடுத்த நிஜம் ஆயிரம் டன் ஆச்சர்யத்தையும் அதை மீறிய அதிர்ச்சியையும் , இவை இரண்டையும் வென்ற மகா வியப்பையும் தருகிறது.\\
காரிகன், தங்களின் இந்தப் படப்பிடிப்பு அச்சு அசலான விமரிசனம். மெல்லிசை மன்னர்களின்- மற்றும் எம்எஸ்வியின் புகழ் இந்த வரிகளின் உண்மையில்தான் என்றென்றும் நின்று நிலைத்திருக்கப்போகிறது.

\\நீரோடும் வைகையிலே பாடலை எம் எஸ் வி - டி கே ஆர் வெறும் விசில் ஓசை கொண்டு முதலில் அமைத்ததாகவும் அந்த தேனமிர்த மெட்டுக்கு கண்ணதாசன் பாடல் எழுதியே
தீருவேன் என்று கவிதை எழுதியதாகவும் தகவல் உண்டு.\\

இந்தப் பாடல்பற்றி வேறு இரண்டுமாதிரியான கதைகள் உண்டு. இந்தப் பாடலுக்கு மெட்டுப் போட்டவர் டி.கே.ராமமூர்த்தி. "கவிஞரிடம் நானே பாடல் எழுதி வாங்கிவிடுகிறேன்" என்று ராமமூர்த்தி சொல்ல, எம்எஸ்வி வேறு பணியைப் பார்க்கப்போய்விட்டார். கவிஞரோ தாம் 'அவசரமாக வெளியூர் புறப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் போய் வந்தபிறகு நிதானமாக எழுதிக்கொள்ளலாம்' என்றும் சொல்லியிருக்கிறார்.
"இல்லை எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. ரிகார்டிங்கிற்குப் போகவேண்டியதுதான் பாக்கி. நீங்க ஒரு அரைமணி நேரம் வந்து எழுதிக்கொடுத்துட்டுப் போயிருங்க"என்று அழைத்திருக்கிறார் ராமமூர்த்தி. "நான் ரொம்ப அவசரத்தில் இருக்கேன். சீக்கிரம் என்னை அனுப்பிடணும்" என்ற கோரிக்கையுடன் வந்திருக்கிறார் கண்ணதாசன்.
வந்து அமர்ந்தவருக்கு அவ்வளவு எளிதில் டியூன் சொல்லப்படவில்லை. வெவ்வேறு காரணங்களால் நேரம் ஓடிக்கொண்டே இருக்க கவிஞருக்கு இருப்புக்கொள்ளவில்லை. "நான் போறேன். வந்து எழுதிக்கொள்ளலாம்" என்று கவிஞர் புறப்பட, "இல்லை இதோ இதுதான் டியூன். நீங்க எழுதத்தொடங்கலாம்" என்கிறார் ராம மூர்த்தி.
"சரி சொல்லுங்க"
ராம மூர்த்தி அவ்வளவு எளிதில் சொல்லவில்லை. வயலினைக் கீழே வைத்துவிட்டு வெற்றிலைப் பாக்கை எடுத்துப் போட்டுக்கொள்கிறார். 'கீய்ங் கீய்ங்' என்று இரண்டுதரம் வயலினை வாசித்து சுருதி கூட்டிக்கொள்கிறார். மறுபடி கண்ணதாசன் அவசரப்படுத்த பல்லவிக்கான டியூனை ராம மூர்த்தி நிதானமாக வாசித்துக்காட்ட .......... உச்சகட்டக் கோபத்தில் இருந்த கண்ணதாசன் வில்லங்கமான வரிகளை மெட்டுக்கேற்பச் சொல்கிறார்.
ராம மூர்த்தி அடுத்த வரிக்கான மெட்டை வாசிக்க அதன் தொடர்ச்சியாக மறுபடியும் மெட்டுக்கேற்ற வில்லங்கமான வரிகள்......
அதிர்ச்சியடையும் ராம மூர்த்தி(அவர் மட்டுமா? மொத்த யூனிட்டே அதிர்ச்சியடைந்துபோய் இருக்கிறது) "என்ன கவிஞரே இப்படிப் பண்றீங்க? நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போட்டிருக்கும் டியூன் இது. கர்நாடக சங்கீத மெட்டு. நிச்சயம் காலாகாலத்துக்கும் நிற்கப்போகும் மெட்டு. அற்புதமான பாட்டு எழுதுவீங்கன்னு பார்த்தா இப்படிப் பண்ணிட்டிங்களே" என்று அழாக்குறையாகச் சொல்ல "பின்னே என்ன என்னுடைய அவசரத்தைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாமல் நீங்க பாட்டுக்கு இத்தனை லேட் பண்ணினா எப்படி?" என்று கோபித்தவர், "இப்ப என்ன உங்களுக்கு அந்த மெட்டுக்கு ஏற்ற வரிகள்தானே வேணும்? எழுதிக்கங்க" என்று சொல்லிவிட்டு 'நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே, தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே, தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே' என்று மறு நொடியே கோபம் தணிந்து ஃபாண்டசி கற்பனையுடன் இலக்கியத்தரமான வரிகளைச் சொல்ல மறுபடியும் வயலினைக் கீழே வைத்துவிட்ட ராம மூர்த்தி கண்ணதாசன் கையை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார் என்று சொல்வார்கள்.
அந்த நிகழ்வில் அன்றைக்கு சிவாஜியும் இருந்தார் என்பதும் கூடுதல் தகவல்.


Amudhavan said...

(மேலேயுள்ளதன் தொடர்ச்சி.............) இரண்டொருநாட்கள் கழித்து அதே படத்திற்கு வேறொரு பாடல் எழுதுவதற்காகப் போய் உட்காருகிறார் கண்ணதாசன். இப்போது இசையமைப்பாளராய் இருப்பவர் எம்எஸ்வி. "கவிஞரே புதுப்பாட்டு இல்லை. நீங்க ஏற்கெனவே எழுதின நீரோடும் வைகையிலே பாடலுக்கு வேறொரு டியூன் போடப்போகிறேன். அதற்கு ஏற்றா மாதிரி கொஞ்சம் பாடலை மாற்றிக்கொடுக்கணும்" என்கிறார் எம்எஸ்வி.
"ஏன்? அந்த மெட்டு நல்லாத்தானே இருந்தது? அந்தப் பாடலும் மெட்டும் நல்லாவே வந்திருக்கு. அதையே வைத்துக்கொள்ளலாம். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு"என்கிறார் கவிஞர்.
"எனக்குப் பிடிக்கலை" என்கிறார் விஸ்வநாதன்.
கண்ணதாசன் ஒரு பதிலும் சொல்லாமல் எழுந்துகொள்கிறார். அங்கே அமர்ந்திருக்கும் டைரக்டர் பீம்சிங்கைப் பார்த்து "ஒரு நிமிஷம் வாங்க" என்கிறார். இருவரும் வெளியே வருகிறார்கள். வெளியில் வந்ததும் "இன்றைக்கு சிவாஜிக்கு எங்கே ஷீட்டிங்?" என்று கேட்கிறார் கவிஞர். "வாகினியில்" என்கிறார் பீம்சிங்.
கார் வாகினிக்குப் போகிறது. அங்கே படப்பிடிப்பு கேன்சலாகி சிவாஜி வீட்டிற்குப் போய்விட்டார் என்று சொல்கிறார்கள். சிவாஜியின் வீட்டிற்குப் போகிறார்கள் பீம்சிங்கும் கண்ணதாசனும்.
இவர்களைப் பார்த்ததும் சிவாஜிக்கு ஒரே வியப்பு." என்ன என்றைக்கும் இல்லாத அதிசயமா இரண்டுபேருமாக வந்திருக்கிறீர்கள்?" என்கிறார்.
"சட்டையைப் போட்டுக்கொண்டு உடனே கிளம்புங்க" என்கிறார் கண்ணதாசன். சிவாஜியையும் கூட்டிக்கொண்டு மறுபடியும் ரிகார்டிங் ஸ்டுடியோவுக்கு வருகிறார்கள். வருகிற வழியில் எம்எஸ்வியின் பிடிவாதம் குறித்தும் அந்தப் பாடலும் மெட்டும் நன்றாக இருப்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்றும் கண்ணதாசன் சொல்கிறார். (வில்லங்கமும் கலாட்டாவாகவும் எழுதிய பாட்டில்லையா அது?) பீம்சிங்கிற்கும் சிவாஜிக்கும்கூட அதே கருத்துத்தான்.
மூவரும் விஸ்வநாதனிடம் வந்து உட்கார்ந்து அந்த டியூனையும் பாடலையும் பாடிக்காட்டச் சொல்கிறார்கள். பாடிக்காட்டப் படுகிறது.
"இந்தப் படத்தில் இந்தப் பாட்டுதான் இடம்பெறுகிறது. நான் இந்தப் பாடலுக்குத்தான் நடிக்கப்போகிறேன். இதை மாற்றவேண்டாம் " என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டிற்குக் கிளம்புகிறார் சிவாஜி.
"சரி அப்படின்னா ஒண்ணு செய்யலாம். இதை முழுக்க விசிலில் அமைக்கலாம்" என்று சொல்லும் விஸ்வநாதன் அந்தப் பாடலை விசிலில் அமைத்து ரிகார்டிங்கிற்குப் போனார் என்றும் சொல்வார்கள்.
இந்த இரண்டாவது தகவலை, விஸ்வநாதனிடம் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகிய கவிஞர் காமகோடியன் சமீபத்தில் ஜெயா டிவி பேட்டியில் எம்எஸ்வியே தன்னிடம் சொன்னதாக விவரித்தார்.
நல்ல பாடல்கள் மட்டுமல்ல; நாம் அசைபோட இம்மாதிரியான பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட கதைகளும்கூட அன்றோடு மறைந்துவிட்டன என்பதுதான் சோகம்.

Anonymous said...

அருமையான அடுத்த பதிவு. ரசித்தேன்.

ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன். பொதுவாக எம்.எஸ்.வி வெறுப்பாளர்கள் எழுதும் பதிவுகளில் ஒரு மாயை உருவாக்கப்படும். அதன் சாயல் இந்தப் பதிவிலும் லேசாக விழுந்துவிட்டது. உங்கள் தவறல்ல அது. பொதுவாகவே இருக்கும் ஒரு மாயை. அதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த எல்லாப் பாடல்களும் அருமை. விஸ்வநாதன் தனியாக வந்த பிறகு நிறைய வெற்றிப் படங்கள் இருந்தாலும் எல்லாப் படங்களும் வெற்றிப்பாடல்களோடு வரவில்லை என்பது ஒரு மாயையான எண்ணம். அந்த மாயையை விலக்க விரும்புகிறேன்.

நீங்களும் சரி.. எம்.எஸ்.வி வெறுப்பாளர்களும் சரி.. விஸ்வநாதன் - இராமமூர்த்தி மேஜிக் என்று குறிப்பிடும் படங்கள் அனைத்தும் 1960-65க்குக்குள் வந்த படங்கள். 1952லிருந்து இருவரும் இணைந்துதானே பணியாற்றினார்கள். அப்படியிருக்க 1952-60வரையிலான படங்களைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் படங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. சில பாடல்களை மட்டும் சிலாகிப்பார்கள்.

ஆக... விஸ்வநாதன் - இராமமூர்த்தி மேஜிக் என்று பொதுவாகச் சிலாகிக்கப்படும் படங்கள் பெரும்பாலும் இந்த நான்கு ஆண்டுகளில் அடங்கிவிடும்.

அந்த ஐந்து ஆண்டுகளில் அப்படியான பாடல்கள் வருவதற்கு என்ன காரணம்? தமிழ்த் திரைப்படங்களில் கதையின் போக்கு மாறத் தொடங்கியதுதான் காரணம். பணம் சமூகப் படமாக இருந்தாலும் பக்த மார்க்கண்டேயா, தங்கப்பதுமை, இரத்தினபுரி இளவரசி, அமுதவல்லி, பாசவலை மாதிரியான படங்களே அதிகம். அந்த நிலை மாறியது 50களின் இறுதியில்தான். அந்தப் படங்களுக்கு என்ன தேவையோ அந்த இசை கொடுக்கப்பட்டது. அறுபதுக்குப் பிறகு எழுபதுகளில் அது போன்ற அழுத்தமான படங்கள் வருவதும் குறைந்து விட்டது. அதற்கு ஏற்றவாறு இசையமைக்கப்பட்டது. எழுபதுகளிலோ எண்பதுகளிலோ அழுத்தமான கதைக்களனோடு படங்கள் வரும் போது விஸ்வநாதன் - இராமமூர்த்தி மேஜிக் எம்.எஸ்.வியாலும் காட்டப்பட்டது. 65லிருந்து 79வரைக்கும் நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்க.. எண்பதுகளிலிருந்தே எடுத்துக்காட்டு தருகிறேன். வறுமையின் நிறம் சிகப்பு, அந்த ஏழு நாட்கள், குடும்பம் ஒரு கதம்பம், தண்ணீர் தண்ணீர், அக்னி சாட்சி, மிருதங்கச் சக்கரவர்த்தி, சரணாலயம், கண்ணே கனியமுதே, நிலவே மலரே, வசந்தராகம், சிறை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தெலுங்கிலும் இப்படியான பட்டியலிடலாம். இவை போக எல்லாப் பாடல்களும் சிறப்பான மசாலாப் படங்களும் உண்டு. அது கிடக்கட்டும்.. 90களின் தொடக்கத்தில் வெளியான ஐயர் தி கிரேட் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் உலக ரகம்.

அது மட்டுமல்ல.. மற்றொரு உண்மையும் உணரப்பட வேண்டும். வி-ரா கூட்டணியில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை. அப்போதெல்லாம் ஒராண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதிகபட்சமாக வி-ரா இசையமைத்தது 1965ல். அதாவது 16 படங்கள். ஆனால் அதற்குப் பிறகு எம்.எஸ்.வி தனியாகவே தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஓராண்டிலேயே 39 படங்கள் வரை இசையமைத்த சிறப்பையும் வரலாறு கண்டது.

வடக்கில் எஸ்.டி.பர்மன் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை 112தான். அவர் மகன் ஆர்.டி.பர்மன் இசையமைத்த படங்களின் எண்ணிக்கையோ 331 தான். இந்தித் திரைப்படங்களில் ஒரு திரைப்படத்துக்கு அவ்வளவு கால அவகாசம் கிடைத்தது. ஆனால் தமிழில் மட்டும் எம்.எஸ்.வி 540 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் நேரடியாகவும் டப்பிங் படங்களாகவும் 175 படங்கள். மலையாளத்தில் 80 படங்கள். கன்னடத்தில் பத்து படங்கள். இந்தியில் சில படங்கள் + டப்பிங் படங்கள். கிட்டத்தட்ட 800 படங்கள். இது எனக்குத் தெரிந்த பட்டியல். விடுபட்டவை எவையும் இருக்கின்றனவோ எனக்குத் தெரியாது.

இப்படியெல்லாம் நிலமை இருக்க.. வி-ரா பாடல்களை 1960-65க்குள் அடைத்துவிட்டு அதை வைத்து எம்.எஸ்.வியை மட்டம் தட்டும் மாயையில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதே என் ஆவல்.

இன்னொரு தகவல். கோவர்த்தனம் ஷியாம் ஜோசப் தொடர்பானது. வி-ரா பிரிவு என்பது ஆயிரத்தில் ஒருவனுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆயிரத்தில் ஒருவன் சட்டப்படியான பிரிவு. கலைக்கோயில் கர்ணன் போன்ற படங்களில் இராமமூர்த்தியின் வயலின் இல்லாமையால் வயலின் வாசிக்க வைக்கப்பட்டவர் ஷாம் ஜோசப். ஆனால் அவர் வெஸ்ட்டர் வயலின்ஸ். அவருக்குக் கலைக்கோயிலின் கர்நாடக சங்கீத சுரங்களும் கர்ணனின் இந்துஸ்தானி சுரங்களும் வாசிக்கக் கடினமாக இருந்திருக்கிறது. அப்போது எம்.எஸ்.வி சொன்ன சுரங்களை வெஸ்டர்ன் நொட்டேஷனில் ஷியாம் சுந்தருக்கு எழுதிக் கொடுத்தவர் கோவர்த்தனம். இது தகவலுக்காக மட்டுமே.

Jayadev Das said...

வெறும் பாடல்கள் தொகுப்பாக போயிருந்தால் பதிவே வரட்சியாகியிருக்கும், ஊடே தகவல்களும் கலந்து சுவையூட்டியுள்ளீர்கள், நன்று.

\\இதற்கு எம்எஸ்வியே நிறைய நேரங்களில் பதில் சொல்லியிருக்கிறார். “மெட்டுக்குப் பாட்டும் உண்டு; பாட்டுக்கு மெட்டும் உண்டு” என்பது அவரது நிரந்தர பதில். இந்த பதிலில் உள்ள புரிதல் என்னவென்றால் மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பதுதான். \\
தங்களது புரிதலில் இருந்து நான் சற்றே மாறுபடுகிறேன். "மெட்டுக்குப் பாட்டும் உண்டு" இங்கு இசையமைப்பாளர் மெட்டை தருகிறார், கவிஞர் வார்த்தைகளைப் போட வேண்டும். "பாட்டுக்கு மெட்டும் உண்டு" இங்கு கவிஞர் பாடலை தருகிறார், அதற்கு இசையமைப்பாளர் மெட்டமைக்க வேண்டும். இந்த வகையில் பாரதியார் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்களைச் சொல்லலாம். இந்தப் பாடல்களின் வார்த்தைகளை மாற்றவே முடியாது, ஏனென்றால் அந்த கவிஞர்கள் இப்போது உயிரோடு இல்லையே!!
மெட்டுக்குப் பாட்டு கண்ணதாசன் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது என்பது முன்பு எனக்கு வியப்பாகத் தோன்றியது. தற்போதைய பாடல்கள் எல்லாம் இதே ரகம் என்பதால் தேவையில்லாத வார்த்தைகள் இலக்கணப் பிழைகள் எல்லாம் பாடல்களில் சேர்ந்து விட்டன. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..., இப்பவே கிடைச்சத லவ் பண்ணா.........[சிக்கு புக்கு இரயிலே]. என்று ஊருபட்ட உதாரணங்களைக் கொடுக்கலாம்!!
மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பது எப்போது வரும் என்றால் கவிஞரோ, இசையமைப்பளரோ அல்லது இருவருமோ வளைந்து கொடுக்க வேண்டும்!! இது எனது புரிதல், தவறாகவும் இருக்கலாம்.

Anonymous said...

Neeodum Vaigiyile...Shivaji Song?

Which film?

Amudhavan said...

gragavanblog said............
\\இன்னொரு தகவல். கோவர்த்தனம் ஷியாம் ஜோசப் தொடர்பானது. வி-ரா பிரிவு என்பது ஆயிரத்தில் ஒருவனுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆயிரத்தில் ஒருவன் சட்டப்படியான பிரிவு. கலைக்கோயில் கர்ணன் போன்ற படங்களில் இராமமூர்த்தியின் வயலின் இல்லாமையால் வயலின் வாசிக்க வைக்கப்பட்டவர் ஷாம் ஜோசப். ஆனால் அவர் வெஸ்ட்டர் வயலின்ஸ். அவருக்குக் கலைக்கோயிலின் கர்நாடக சங்கீத சுரங்களும் கர்ணனின் இந்துஸ்தானி சுரங்களும் வாசிக்கக் கடினமாக இருந்திருக்கிறது. அப்போது எம்.எஸ்.வி சொன்ன சுரங்களை வெஸ்டர்ன் நொட்டேஷனில் ஷியாம் சுந்தருக்கு எழுதிக் கொடுத்தவர் கோவர்த்தனம்.\\
வாருங்கள் ராகவன், தங்களின் விரிவான அலசலுக்கும் கருத்திற்கும் நன்றி. விஸ்வநாதன்- ராமமூர்த்தி என்றில்லை, திரையுலகில் அல்லது சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு துறையில் நுழைந்த எல்லாருமே நுழைந்தபிறகு காலூன்றிக்கொள்ள ஆகும் சில வருடங்களில் அவர்களுக்கென்று ஒரு தனிப்பாணி அமைய, அதுவும் வெற்றிகரமாய் அமைய - அதையே பற்றிக்கொண்டு அவர்கள் தங்கள் இருப்பை அங்கே நின்று ஸ்தாபித்துக்கொள்வார்கள். இது வி-ராவுக்கும் நடைபெற்றது. அப்படி ஸ்தாபித்துக்கொண்ட பிற்பாடு அவர்கள் என்ன சாதனை புரிந்தார்கள் என்பதைத்தான் நாம் இங்கே கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இரட்டையரில் ஒருவர் தனியே பிரிந்துவந்தபிறகு சாதித்தவைதாம் ஏராளம். அதுவும் எழுநூறு படங்களுக்குமேல் இசையமைப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதனால் எம்எஸ்வியைக் குறைத்துச் சொல்வதாக எந்த இடத்திலும் கருதுவதற்கில்லை.
இரண்டாவது, அந்த அசாதாரணமான இசையமைப்பிற்கு வெறும் குறைந்த படங்கள், மற்றும் நேரம் மட்டுமே காரணமாயிருக்க வாய்ப்பில்லை. அசாத்திய திறமையும் இருவருக்குமான புரிந்துணர்வும்தாம் முக்கியமான காரணங்கள்.
மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் கர்ணன் படம் பற்றியது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஏதோ ஒன்றோ அல்லது இரண்டொரு சமயங்களில் ஏற்பட்ட சம்பவமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ராம மூர்த்திக்கு வேண்டிய நண்பர்கள் அவர் கர்ணன் படத்தை எந்த அளவு சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் என்பதைப் பற்றியெல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். தாம் பங்கேற்காத படம் பற்றி ராம மூர்த்தி பேசியிருப்பதற்கு வாய்ப்பில்லை. இருவரும் பங்களித்த படங்களில் சில வெளியாவதற்குத் தாமதமாகி பிற்பாடு அவர்களின் பிரிவுக்குப் பின்னர் வந்த படங்களில் ஒருவர் பெயரில் வந்த படங்கள் இருக்கின்றனவே தவிர, ஒரேயொருவர் பங்களித்து அந்தப் படம் இரண்டுபேரின் பெயர்களில் வந்ததாக எந்த சம்பவமும் இல்லை.



Amudhavan said...


Jayadev Das said...
\\மெட்டில்லாமல் பாட்டு இல்லை; பாட்டில்லாமல் மெட்டு இல்லை என்பது எப்போது வரும் என்றால் கவிஞரோ, இசையமைப்பளரோ அல்லது இருவருமோ வளைந்து கொடுக்க வேண்டும்!!\\
வாருங்கள் ஜெயதேவ், நீங்கள் சொல்வது உண்மைதான். எவ்வளவு உண்மை என்றால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் பார்த்துக்கொள்வதே இல்லை என்னுமளவுக்கு உண்மை. மெட்டுக்கேற்ப எழுதிக்கொடுத்த பாடல் எந்த இடத்திலாவது முட்டுமா என்றால் அதனைச் சரிப்படுத்திக்கொள்வதற்கு மட்டுமே பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் சந்திக்கிறார்கள். உபயம் ; 1) இளையராஜா, 2) காசெட்டுகளின் வருகை......... இளையராஜா மற்றும் காசெட்டுகளின் வருகை காரணமாக எப்படி மாறிற்றென்றால் இவர்கள் ஒரு மெட்டை அமைத்து அதனைக் காசெட்டில் ஏற்றி பாடலாசிரியருக்கு அனுப்பிவிடுவார்கள். அவர் மெட்டுக்கு ஏற்ப பாடலை எழுதிக்கொண்டு வந்து தரவேண்டும். அவற்றில் சிற்சில மாறுதல்கள் தேவைப்பட்டால் அதனையும் செய்துதர வேண்டும். இப்படித்தான் தொண்ணூற்று ஒன்பது சதம் பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் இ.ராவின் வருகைக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள்.
மெட்டுக்குப் பாட்டு, பாட்டுக்கு மெட்டு எல்லாம் கண்ணதாசன் காலத்தோடு போய்விட்டது.
இரண்டாவது, இசையமைப்பாளர் தரும் மெட்டை "என்னய்யா இது மெட்டு? கண்றாவியாய் இருக்கு. வேறு மெட்டு போடு" என்று சொல்லும் 'ஆளுமையுள்ள' பாடலாசிரியரும் கவிஞருக்கு அடுத்து யாரும் வரவில்லை. இசையமைப்பாளர்தான் தெய்வம். அவர் போட்டுத்தருவதுதான் மெட்டு. அதற்கேற்ப பாட்டு எழுதினால்தான் தனது வண்டி ஓடும் என்பதாகத்தான் பாடலாசிரியர்களின் நிலைமை அமைந்துவிட்டது.
தங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள் எதை மெட்டென்று போட்டாலும் அதனைக் கொண்டாட பெரியதொரு 'சமூகமும்' கிடைத்துவிட்ட பிற்பாடு எந்த இசையமைப்பாளர் மெனக்கெடப் போகிறார்?
மூச்சு விட்டால் ,ஏப்பம் விட்டால்கூட அது இந்த ரசிகர்களுக்கு இசைதான்.

Amudhavan said...

Anonymous said...
\\Neeodum Vaigiyile...Shivaji Song? Which film?\\

பார்மகளே பார் படத்தில் 'நீரோடும் வைகையிலே' என்று போட்டாலேயே சிவாஜியும் சௌகாரும் பாடும் பாடற்காட்சி யூடியூபிலேயே கிடைக்கிறதே.

சார்லஸ் said...

அமுதவன் சார்

எம்.எஸ்.வி பற்றிய இரண்டாவது பதிவும் பிரமாதமாக அமைந்துள்ளது. நிறைய தகவல்கள் கொடுத்துள்ளீர்கள் . பின்னூட்டங்களில் அதைவிட நிறைய தகவல்கள் . வாசிக்க இன்ட்ரஸ்டிங் ஆக இருந்தது. மெல்லிசை மன்னர்கள் இசையால் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் எவ்வளவோ எழுதிக் கொண்டே போகலாம். மெல்லிசை மன்னர்களின் சாதனைகளை மறுத்து சொல்லக் கூடியவர்களை பெரும்பாலும் நான் கண்டதில்லை. ஆனால் அவருக்குப் பின் வந்த இசை அமைப்பாளர்களின் சாதனைகளை எவரேனும் எடுத்துச் சொல்லுபோது சிலருக்கு வலிப்பது ஏன் என்பது தெரியவில்லை. எம்.எஸ்.வி யின் இசைச் சாதனைகளை யாரும் இழிவாக பேசியதாக நான் வாசித்ததுமில்லை.

ஆனால் அவருக்குப் பின்னர் வந்தவர்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாத மனிதர்களை பக்குவமில்லாதவர்கள் என்றுதானே எடுத்துக் கொள்ள முடியும் . எம்.எஸ்.வி இசைத்ததை இன்னொருவர் இசைக்க முடியாது. போலவே அடுத்தவர் இசைத்ததை எம்.எஸ் வி யும் இசைத்திருக்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

'எனக்குப் பிடிக்கும் ' என்ற மனோபாவம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே! ' எனக்கு இவரைப் பிடிப்பதால் அடுத்தவரை பிடிக்காது ' என்ற மனோபாவம் எப்படி சரியாகும் ?

எனவே இசையில் சாதனைகள் , இசையில் சோதனைகள் எம்.எஸ்.வி - டி.கே.ஆர் செய்ததைப் போலவே அடுத்து வந்தவர்களும் செய்திருக்கிறார்கள் என்பதை ஏற்கும் மனம் இருந்தால் போதும் .

Unknown said...

நேத்திக்கு இந்த பதிவை உட்கார்ந்து படிச்சு முடிச்சேன் சார். போகுது......போகுது.......போய்கிட்டே இருக்கு!! எப்படி சார் உங்களால இவ்வளவு பெரிய கட்டுரையை பொறுமையா எழுத முடியுது?!!

Amudhavan said...

சார்லஸ் said...
\\அவருக்குப் பின் வந்த இசை அமைப்பாளர்களின் சாதனைகளை எவரேனும் எடுத்துச் சொல்லுபோது சிலருக்கு வலிப்பது ஏன் என்பது தெரியவில்லை. எம்.எஸ்.வி யின் இசைச் சாதனைகளை யாரும் இழிவாக பேசியதாக நான் வாசித்ததுமில்லை. \\
\\எனக்குப் பிடிக்கும் ' என்ற மனோபாவம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே! ' எனக்கு இவரைப் பிடிப்பதால் அடுத்தவரை பிடிக்காது ' என்ற மனோபாவம் எப்படி சரியாகும் ? எனவே இசையில் சாதனைகள் , இசையில் சோதனைகள் எம்.எஸ்.வி - டி.கே.ஆர் செய்ததைப் போலவே அடுத்து வந்தவர்களும் செய்திருக்கிறார்கள் என்பதை ஏற்கும் மனம் இருந்தால் போதும் .\\

சார்லஸ், 'உங்களுக்கு ஒரு காந்தித் தாத்தா என்றால் எங்களுக்கு ஒரு பூந்தித் தாத்தா. நீங்கள் காந்தித் தாத்தாவைப் புகழ்கிறீர்கள் என்றால் நாங்கள் பூந்தித் தாத்தாவைப் புகழ்வோம். அவரைப் போலவே இவரும் சிறந்தவர். அவர் என்னென்ன செய்தாரோ அதையேதான் பூந்தித் தாத்தாவும் செய்தார்' என்று நினைத்துக்கொள்ளும் - கருதும் மனப்பான்மையிலிருந்து, அந்த சின்னப்பிள்ளை விளையாட்டிலிருந்து நீங்கள் இன்னமும் விடுபடவில்லை. அப்படி நினைக்க உங்களுக்குப் பூரண அதிகாரம் உண்டு. உங்கள் கையறு நிலையும் புலம்பலும் அதைத்தான் உணர்த்துகின்றன.
"நீங்கள் பிடித்த பத்திரிகையாக குமுதத்தையும்,விகடனையும் சொன்னால், நாங்கள் நடத்தும் கையெழுத்துப் பத்திரிகைதான் எங்களுக்கு உலகிலேயே சிறந்த பத்திரிகை" என்ற உணர்வுடன் செயல்பட்ட நண்பர்களையெல்லாம் எனக்குத் தெரியும்.
அவர்கள் உணர்வைத் தவறென்று சொல்லவும் முடியாது.

உங்களுக்கு எதற்கு ஒப்பீடுகள்? பேசாமல் உங்களுக்குப் பிடித்தவரை உலகிலேயே சிறந்தவர் என்று நம்பிக்கொண்டு புலம்பிக்கொண்டிருங்கள். ஆட்சேபணையே கிடையாது.

Amudhavan said...

இந்திரா ஜெயதேவ் said...
\\நேத்திக்கு இந்த பதிவை உட்கார்ந்து படிச்சு முடிச்சேன் சார். போகுது......போகுது.......போய்கிட்டே இருக்கு!! எப்படி சார் உங்களால இவ்வளவு பெரிய கட்டுரையை பொறுமையா எழுத முடியுது?!!\\

நீங்கள் சலித்துக்கொள்கிறீர்களா, வியக்கிறீர்களா என்பது புரியவில்லை. சலித்துக்கொள்கிறீர்கள் என்றால் ஒன்றும் செய்வதற்கில்லை.
வியக்கிறீர்கள் என்றால் - ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தொடர்கதைகள், மாதநாவல்கள் எல்லாம் எழுதியிருக்கிறேன். அதனால் நீளம் என்பது ஒரு பொருட்டேயல்ல. முழு புத்தகமே எழுதுகிறவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.
உள்ளே நிறைய சரக்கு இருக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டேயிருக்கலாம். என்னவொன்று, எழுதுவதை சுவாரஸ்யமாக எழுதத் தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவுதான்!

வருண் said...

நல்ல கட்டுரை சார். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் கொஞ்சம் தாமதம்.

நான் ஒரு பழமை விரும்பி என்பதாலோ என்னவோ, எம் எஸ் வி ஒரு லெஜெண்ட் ஆகத்தான் தோன்றுகிறார்.

மற்றபடி இளையராஜா விசிறிகள் எல்லாம் நீங்க எம் எஸ் வி யைப் புகழந்தால், இளையராஜாவை இறக்கவே அப்படி செய்வதாக குற்றம் சாட்டுவார்கள். இது எனக்கு இப்போப் பழகிப் போய்விட்டது. :)

என்னைக்கேட்டால், இனிமையாக இருக்கும் இசையை இளையராஜா இயற்றியிருந்தாலும் சரி, அல்லது எம் எஸ் வி இயற்றி இருந்தாலும், நீங்களும், "அவர்களும்" பாகுபாடில்லாமல் தனிமையில் ரசிக்கத்தான் செய்வீர்கள், ரசித்துக்கொண்டிருப்பீர்கள்! :-)

சார்லஸ் said...

அமுதவன் சார்

நான் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாதபோதே நீங்கள் இளையராஜா குறித்து நான் சொல்வதாக கேலி பேசுகிறீர்கள். ஆனால் இளையராஜாவே எம்.எஸ்.வி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர் மறைவிற்குப் பிறகு அவரின் பெருமை பேசும் விழா ஒன்றை முன்னின்று நடத்தி அவருடைய பாடல்களையும் இசைத்திருக்கிறார்.

ஏ.வி எம் . பாலசுப்ரமணியன் அவர்கள் இளையராஜாவின் அந்த முயற்சிக்கு எப்படி பாராட்டியிருக்கிறார் பாருங்கள் .

இளையராஜாவுக்கு ஏவி,.எம் பாராட்டு
சமீபத்தில் மறைந்த திரையிசை சாதனையாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இசைஞானி இளையராஜா எம்.எஸ்.வி அவர்கள் இசையமைத்த பாடல்களை தன்னுடைய இசைக்குழுவை வைத்து பாடினார். இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதை பாராட்டி ஏவி.எம். நிறுவனத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் இளையராஜாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ”தமிழ் சினிமாவின் 84 ஆண்டுகால வரலாற்றில் எங்கள் நிறுவனம் 80 ஆண்டுகள் இருந்தது என்பது எங்களுக்குக்கிடைத்த பெருமை. இந்த நிகழ்ச்சியில் பல அறிய தகவல்களைச் சொல்லி எங்களை எங்கள் தந்தையார் காலத்திற்கே அழைச்சென்று மெய் மறக்க செய்து விட்டீர்கள். ‘பாலிருக்கும் பழம் இருக்கும்’ என்று நீங்கள் பாடியவுடன் நான் சிறு வயதில் சாந்தி தியேட்டரில் எங்கள் நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பான பாவ மன்னிப்பு படம் பார்த்த நினைவு வந்தது. அற்புதமான தகவல்களை ஆனந்தமான இசை மாலையில் கோர்த்து எங்களுக்கு அளித்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தவித்துக்கொண்டு இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் சொன்னது போலவே இசைக்கடவுளின் அருமையை உங்களைப்போன்ற ஞானிகளால்தான் உணர்த்த முடியும். இது போன்ற நல்ல பணிகளுக்கு என்னால் என்ன உறுதுணை செய்ய முடியுமோ அதனை செய்ய கடமைபட்டு இருக்கிறேன்.
அண்ணன் எம்.எஸ்.விஸ்நாதனின் புகழ் மங்காது அதற்கு அவரது இசைமட்டும் அல்ல, உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களும் தான் காரணம் எம்.எஸ்.வி. என்ற கடலில் இருந்து சில முத்துக்களை கொடுத்ததற்கு நன்றி.” என்று நெகிழ்ந்து போய் கூறியிருந்தார் ஏவி.எம்மின் பாலசுப்ரமணியன்.

இசைக்கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பவர் எம்.எஸ்.வி அவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட நினைக்கின்றேன். அதனால் நீங்கள் சொன்னது போல் காந்தித் தாத்தா , பூந்தித் தாத்தா எல்லோரையும் இசைக் கடவுளாக பார்ப்பதற்கு கூட்டம் இருக்கிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

Anonymous said...

\\இ.ரா ரசிகர்கள்.... இணையம் பூராவும் பரவிக்கிடக்கும் இவர்கள் செய்கின்ற அட்டூழியங்கள் ஒன்று இரண்டு அல்ல கணக்கிலடங்காதவை. இந்த 'ரசிகர்கள்' மூலம் சாதாரணமாக வரும் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பார்வையாளர்கள் தவறான செய்திகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.அவர்கள் தவறான தகவல்களில் நிரம்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பல இடங்களில் இம்மாதிரியான சுட்டிக்காட்டல்கள் நிகழ்த்தப்படுகின்றன.\\

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை. அப்படி இருக்க, சும்மா ஓரமாக இருக்கும் அகல் விளக்கு 'நான் சூரியனை விட பெரியவன், அதிகமாக ஒளி தருவேன்' என்று சொல்வதையோ, அல்லது அதை சுற்றி வரும் பூச்சிகள் சொல்வதையோ நீங்கள் ஏன் கண்டு கொள்ள வேண்டும்?

காரிகன் said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

\\நீங்கள் சலித்துக்கொள்கிறீர்களா, வியக்கிறீர்களா என்பது புரியவில்லை. \\

படிச்சு முடிச்சேன்னு சொல்லியிருக்கக் கூடாதோ!! ஹா.........ஹா......

\\நீங்கள் சலித்துக்கொள்கிறீர்களா, வியக்கிறீர்களா என்பது புரியவில்லை.\\

இதில் இரண்டாவதே சரி. இண்டரெஸ்டிங்கான நாவலை படிக்கும் போது அடுத்து என்ன.....அடுத்து என்ன.....என்று ஆவலைத் தூண்டுவதைப் போலவே நீங்களும் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

Thanks...........

சார்லஸ் said...
This comment has been removed by a blog administrator.
subramaniyam said...

ஹிந்தி இசையமைப்பாளர்களை வகை தொகையில்லாமல் காப்பியடித்தவர் தான் எம் எஸ் வீ.

Amudhavan said...

subramaniyam said...
\\ஹிந்தி இசையமைப்பாளர்களை வகை தொகையில்லாமல் காப்பியடித்தவர் தான் எம் எஸ் வீ.\\

போகட்டும் விடுங்க சுப்பிரமணியன், ஒரு சில இசையமைப்பாளர்கள் அவங்க போட்ட ஒரு டியூனையே காப்பியடிச்சு நானூறு பாட்டுக்களைப் போடுவதும், எம்எஸ்வியின் பாணியையும் டியூனையும் காப்பியடிச்சு கொஞ்சம் கொஞ்சம் மாற்றி வெவ்வேறு வகைகளில் பாட்டுப்போட்டு மக்களை ஏமாற்றினதுமான வேளையில் இவர் நல்ல இந்தி டியூன்களைக் காப்பியடிச்சு மக்களுக்கு சுவாரஸ்யமாய்க் கொடுத்தார் என்பதும் பாராட்டுக்கு உரியதுதானே.

Post a Comment