Friday, March 5, 2010

சடுதியில் விழுந்த நித்யானந்த பிடுதி!

நித்தியானந்தாவை இந்தக் கோலத்தில் வீடியோவில் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியை விடவும் ,பாலும் பழமும் படத்தில் சிவாஜி சரோஜாதேவிக்கு 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்று பாடிக்கொண்டே பணிவிடை புரிந்து பேணிப்பாதுகாப்பதுபோல் அவ்வளவு சாவதானமாகக் கண்ணின் மணிபோல் பாவித்து பால் கொடுத்து, உணவு கொடுத்து, மாத்திரைக் கொடுத்து, கால் அமுக்கிவிட்டு அப்புறம் காதல் வயப்பட்டவளாய் மேலே விழுந்து பற்றிப் படர்ந்து சேவை செய்கிறார் என்பதுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அந்த நடிகை " சாமி,கடவுள் இதுமேலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.நான் சாமியெல்லாம் கும்பிடமாட்டேன்" என்று எப்போதோ பெரிய பகுத்தறிவுவாதிபோல பேட்டி கொடுத்திருந்ததாக ஞாபகம்.

நித்தியானந்தா பெங்களூரில் வந்து காலூன்ற பெருமளவு உதவி புரிந்தவர் மறைந்த சண்முக சுந்தரம். பெங்களூர்த் தமிழர்களாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் அன்புடன் 'அண்ணாச்சி' என்று அழைக்கப்பட்டவர். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டுவரக் காரணமாயிருந்தவர். பெங்களூர்த்தமிழ்ச்சங்கத் தலைவராகவும் இருந்தவர். அவருக்கு உடல்நிலையில் பாதிப்புவர கைகளால் சக்தி பாய்ச்சுவதன் மூலம் குணப்படுத்தியிருக்கிறார் நித்தியானந்தா. அந்த வகையில் அவரால் கவரப்பட்ட அண்ணாச்சி நித்தியானந்தாவுக்கு பெங்களூரில் ஆசிரமம் அமைத்துத் தர பெருமளவில் உதவிகரமாக இருந்தார். தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தேவே கௌடாவிடமும் ,எஸ். எம். கிருஷ்ணாவிடமும் பேசி பெங்களூர் - மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் (கன்னடத்தில் பிடுதி என்றால் விடுதி என்று பொருள்) இடம் அமைத்துத் தந்தார். ஆரம்பத்தில் நித்தியானந்தாவும் அண்ணாச்சிக்கு மிகவும் விசுவாசமானவராகவே இருந்தார். அண்ணாச்சியின் உதவிகள் பல்வேறுவகையிலும் அன்றைக்கு நித்தியானந்தாவுக்கு அவசியமானதாக இருந்தன.

"உங்களை அவரிடம் கூட்டிப்போகிறேன் அவரைச் சந்தியுங்கள். பக்தி இலக்கியத்தில் நித்தியானந்தாவுக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாடும் சரி, நோய்களை குணமாக்குவதில் அவருக்கு இருக்கும் ஆற்றலும் சரி உங்களுக்குப் பெருமளவு உதவும்" என்று சொல்வார் அண்ணாச்சி.
"சரி போகலாம்" என்று சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் நித்தியானந்தாவின் பெயரோ புகழோ அந்த அளவுக்குப் பரவியிருக்கவில்லை. மேலும் எனக்கு இம்மாதிரி சாமியார்களிடமெல்லாம் பெரிய அளவில் மதிப்போ நம்பிக்கையோ இருந்ததுமில்லை. ஆனால் அவருக்கு இவர் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.அவரது நம்பிகையைச் சிதைக்க வேண்டாமென்று பேசாமல் இருந்துவிடுவேன்.சந்திக்க நேரும்போதெல்லாம் நித்தியானந்தரின் நோய்களை குணமாக்கும் ஆற்றல் பற்றிப் பெரிதாக சிலாகித்துச் சொல்வார் சண்முக சுந்தரம்.
ஒருமுறை அவரிடம் "கையை வைப்பதன் மூலம் நோய்களை குணமாக்கும் கலையைத்தான் நானும் செய்துவருகிறேன். 'ரெய்கி' என்ற பெயரில் மிக்காவோ உசூயி என்ற ஜப்பானியர் வடிவமைத்த கலை இது. இன்றைக்கு உலகம் பூராவும் பரவியிருக்கிறது. சாதாரண மனிதர்களால் இருநூறு கிலோ எடையைத் தூக்க முடியாது. ஆனால் அதற்கென்று விசேஷப் பயிற்சி பெற்ற பளு தூக்குபவர்கள் இருநூறு கிலோ எடையைத் தூக்கிவிட முடியும். சாதாரண ஒரு ஆளால் ஒரு விமானத்தை ஓட்ட முடியாது. ஆனால் அதற்கான பயிற்சியும் யுக்திகளும் கற்றால் விமானத்தை ஓட்ட முடியும். ரெய்கியும் அப்படித்தான். அதற்குரிய தீட்சைப்பெற்று சில விசேஷப் பயிற்சிகள் பெற்றால் கைகளை வைத்து ஒருவருடைய நோய் களை குணமாக்கும் கலையைச்செய்ய முடியும். இதனை ஆன்மிகத்துடன் சம்பந்தப்படுத்தி தெய்வ வரம் பெற்றதால்தான் செய்கிறார் என்று சொல்ல வேண்டியதில்லை. இயற்கையோடு நம்மைப் பிணைத்துக் கொண்டாலேயே இது சாத்தியம்தான் " என்ற என்னுடைய விளக்கம் அன்றைய நிலையில் அண்ணாச்சிக்கு உவப்பானதாக இருக்கவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு அண்ணாச்சியிடமிருந்து போன் வந்தது "உங்களுக்கு வலம்புரி ஜானிடம் பழக்கம் உண்டா? உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் நித்தியானந்தரிடம் வந்து மிக வேகமாகத் தேறிவருகிறார். பெங்களூரிலேயே தங்கியிருந்து சாமிகளிடம் சிகிச்சைப் பெற்று வருகிறார். முடிந்தால் வலம்புரிஜானைச் சந்தியுங்கள். நாம் மூணுபேரும் சேர்ந்தே நித்தியானந்தரைச் சந்திப்போம்" என்றார்.

"சரி" என்றேன். ஆனால் அண்ணாச்சியின் தொடர் பணிகளினால் அது இயலாமல் போய்விட்டது. இந்த நிலையில் பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தில் திருவாசகம் சம்பந்தமாக நித்தியானந்தரும் வலம்புரிஜானும் பேசும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாகவே வந்துவிட்ட வலம்புரிஜானைத் தனிமையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். “ நான் இப்போது உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குக் காரணமே சாமிகள்தாம். அவரால்தான உயிர்பிழைச்சிருக்கேன். நடமாடும் தெய்வம்னா இவர்தான்" என்றார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தது தெரிந்தது. கூட்டத்தில் பேசும் நிலையில் ஜான் இருக்கவில்லை. நடக்கவே இயலாமல் இருந்தார். “உடம்புக்கு முடியாத நிலையில் எதுக்காக கூட்டத்தில் பேசுறீங்க?” என்றேன்.

"கூட்டத்தில் பேச முடியலைன்னா உடம்பு இருந்து -உயிர் இருந்து என்ன பயன்?” என்றார்.
சற்று நேரத்தில் நித்தியானந்தர் வர கூட்டம் ஆரம்பித்தது. வலம்புரிஜானும் நித்தியானந்தரும் பேசினார்கள். கூட்டம் முடிந்ததும் "சாமி பேசினதை கவனிச்சீங்களா" என்றார் வலம்புரிஜான். “கவனிச்சேன். நல்லா இருந்தது" என்றேன்.
"திருவாசகம் பற்றிப் பேசினார். ஆனால் ஒரேயொரு செய்யுளாவது சொன்னாரா? ஒரு சாதாரணப்பேச்சாளனோ இலக்கியப் பேச்சாளனோ எத்தனை செய்யுளைச் சொல்லியிருப்பான். அதுதான் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம். இவர் ஞானிகூட இல்லை. கடவுளின் அவதாரம்" என்றார்.சொல்லிக்கொண்டே காரில் ஏறி உட்கார்ந்தவர் "நான் சென்னை சென்று திரும்பியதும் உங்களுக்கு போன் செய்கிறேன் அப்போது சந்திப்போம்"என்று சொல்லிச் சென்றார்.

ஒரு இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். அன்றைக்கு வந்த ஜூனியர் விகடன் இதழில் நித்தியானந்தரைப் பற்றிய கடுமையான அட்டைப்படக் கட்டுரை ஒன்று வந்திருந்தது. அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் அந்தப் பேட்டியைத் தந்திருந்தவரே வலம்புரிஜான்தான்.நித்தியானந்தாவைப் பற்றியும் அவருடைய ஆசிரமத்தைப் பற்றியும் பல நிழலான விஷயங்களைப் பூடகமாகத் தெரிவித்திருந்தார் வலம்புரிஜான்.
மேலும் ஒரு மாதம் சென்றிருக்கும். சிவாஜி நகர் கன்னிங்காம் சாலைக்கருகில் நித்தியானந்தரின் ஆசிரமக் கிளையில் சிகிச்சைகள் பிரபலமாகி வருகிறது என்றும் "நீங்கள் வேண்டுமானால் அங்கே சென்றுசிகிச்சை அளிக்கிறீர்களா நான் அவரிடம் சொல்கிறேன்" என்றும் கேட்டார் சண்முகசுந்தரம். “ரெய்கி சிகிச்சை என்றால் நான் அளிக்கத் தயார்" என்றேன். சில நாட்கள் கழித்து "அவர்கள் முறைப்படியான சிகிச்சைதான் அங்கே ஒப்புக் கொள்வார்களாம். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் தீட்சைப்பெற்றுக் கொண்டு அங்கே சிகிச்சை அளிக்கலாம். யோசிச்சுப் பாருங்க" என்றார். “இருக்கட்டும் ஐயா. அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லித் தவிர்த்துவிட்டேன்.

மேலும் சில நாட்கள் சென்றன. வேறொரு நிகழ்ச்சியில் அண்ணாச்சி சண்முகசுந்தரத்தைச் சந்திக்க நேர்ந்தது. “பிடுதிக்குப் போகலாம் நித்தியானந்தாவைச் சந்திக்கலாம்னு அடிக்கடி சொல்லிட்டே இருந்தேன் இல்லையா? இப்ப நானே அங்க போறதை நிறுத்திட்டேன். அங்க நடக்கறது ஒண்ணும் சரியாயில்லை. முதல்ல காதுக்கு வந்தப்ப நானும் நம்பலை.அப்புறமா தெரிஞ்ச விஷயம் ரம்ப மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சி.எதுக்காக இத்தனைச் சிரமப்பட்டு தேவேகௌடாவையெல்லாம் சந்திச்சு அந்த இடம் கிடைக்க பாடுபட்டேனோன்னு ரம்ப வருத்தமா இருக்கு..ம்ம்ம் இப்ப நாமெல்லாம் ஒண்ணும் செய்யறதுக்கில்லை.அவங்க எங்கேயோ போயிட்டாங்க. இண்டர்நேஷனல் லெவலுக்குப் போயிட்டாங்க, அந்த ஆளை நான் ரம்பப் பெரிய ஆன்மிகத் தலைவரா வருவார்னு எதிர்பார்த்தேன். ப்ச்ச் எல்லாம் போயிருச்சி" என்றார். என்ன ஏதென்ற உள் விவகாரத்துக்கெல்லாம் நான் போகவில்லை. எதையும் கிளறிப்பார்க்கவும் விரும்பவில்லை. தவிர, அண்ணாச்சி சண்முகசுந்தரம் அப்படியெல்லாம் எதையும் சொல்லி விடுகிறவரும் இல்லை. அதனால் பேசாமல் இருந்துவிட்டேன்.
இன்றைக்கு அவரும் உயிருடன் இல்லை. பிடுதி ஆசிரம விவகாரங்கள் இன்றைக்கு தூள் பறந்து கொண்டிருக்கின்றன. மொத்த விவகாரத்தையும் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெரிகிறது. எல்லாமே சட்சட்டென்று மாறும் நாடகக் காட்சிபோல் வந்தார்,ஆசிரமம் தொடங்கினார், புகழ் பெற்றார் புகழின் உச்சத்துக்குச் சென்றார்,அகில உலகிலும் கிளைகள் பரப்பினார், எங்கேயோ போயிருக்கவேண்டியவர் தொபுகடீர் என்று விழுந்தார் என்று இவ்வளவு வேகமான காட்சிகள் எந்த திரைப்படத்திலும் நாவலிலும்கூட வந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

3 comments :

Anonymous said...

read your blog post...

Today i read one more blog - like to share with you
http://idhayampesukirathu.blogspot.com/2010/03/blog-post_07.html

R.S.KRISHNAMURTHY said...

வெகுஜனப் பத்திரிகைகளில் (புயலுக்குப்பின்!) வெளிவராத ஆசிரமத்தின் ஜாதகம் வியப்பளிக்கிறது. ஒரு வாயை வைத்துக் கொண்டு ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்கிறான்! ஹிட்லரின் நினைவுதான் வருகிறது! வழக்கம் போல, நல்ல ஆய்வு, தொடருங்கள்...

Indian said...

Post controversy, it seems business as usual.

Post a Comment