Friday, June 25, 2010

தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு என்ன இடம்?

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடக்கிறது. ஏகப்பட்ட தமிழறிஞர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். தமிழ் மொழியின் தனித்தன்மை, சிந்துவெளி எழுத்துக்கள், திராவிடம் பற்றிய ஆய்வுகள், சங்க காலம் பற்றிய இன்றைய ஆய்வு நோக்கங்கள், இன்றைய நோக்கில் தொல்காப்பியம், தொல்லியல்,பொருளியல், நாணயவியல், வரலாற்றியல், ஆகிய பொருட்களில் பல்வேறு மொழியறிஞர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் தங்களின் ஆய்வுகளை வழங்க இருக்கிறார்கள். இவை மட்டுமின்றி இன்னமும் பல்வேறு பொருட்களும் ஆய்வுக்களமாக அமைந்திருக்கின்றன. உலக நாடுகளின் தமிழும் தமிழரும், உலக மயமாதல் சூழலில் தமிழ், தத்துவ உலகில் தமிழ், வேளாண்மையில் விண்வெளியில் ஆழ்கடல் சூழலில் கணிணியில் மருத்துவத்துறையில் என்று உலகம் இயங்கும் எல்லாச் சூழலிலும் தமிழின் தமிழனின் இயல் குறித்த ஆய்வுகள் படைக்கப்பட இருக்கின்றன. தமிழகத்தின் பண்டைய பெருமைகளை வண்ணக்கோலத்தில் விளக்கும் அலங்கார ஊர்திகளின் பவனியும் ஆர்ப்பாட்டமாய் நடந்து முடிந்துவிட்டது. பொதுமக்களின் கண்ணோட்டத்தில் இப்படிப்பட்ட காட்சிகளும் கேளிக்கைகளும் தேவைதான். ஏனெனில் மனிதமனம் எப்போதுமே கொண்டாட்டத்தை விரும்பும். அதுவும் ஊர்கூடி ஒரே நோக்கில் கொண்டாடப்படும் எந்த ஒரு திருவிழாவிலும் மக்கள் மனமுவந்து கலந்துகொள்வதும் அதனை மிகுதியாக ரசிப்பதும் இயற்கையான ஒன்றுதான். ஆனால் வெறும் ரசனைகளோடு முடிந்துவிடும் மாநாடு அல்ல இது. மாநாட்டின் விளைவுகள் காலாகாலத்திற்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும். கல்வெட்டுக்களாய்ச் சில பதிவுகளை வரலாற்றில் விட்டுச்செல்ல வேண்டும்.

ஏற்கெனவே சில மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும் கலைஞரே அறிவித்தபடி இந்த மாநாடு அவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டது என்பதாக அமைய வேண்டும். தமிழுக்குச் செம்மொழி தகுதியை அதிகாரபூர்வமாகப் பெறுவதற்கு நூறு ஆண்டுகள் போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கும் கன்னடமும் ஒரேயொரு சாதாரணக் கடிதம்மூலம் செம்மொழி தகுதியைப் பெற்ற செய்தியையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். காரணம் இந்த நாட்டின் அரசியல். அரசியல்தான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம். மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு மாதிரியான அரசியல். தமிழகத்தைப் பொறுத்தவரை வேறுமாதிரியான அரசியல்.
இந்த அரசியல், மொழியிலும் ஊடுருவி கோலோச்சுவதுதான்இங்கே காலம்பூராவும் நடந்துவருகிறது. இலக்கியங்கள் எல்லாமே இங்கு இரண்டுவிதமாகத்தான் பிரிக்கப்படுகின்றன. ஒன்று திராவிட இலக்கியம். இன்னொன்று திராவிட வட்டத்துக்குள் வராத இலக்கியம்.இந்த இரு பிரிவுகளிலும் கச்சைக் கட்டிக்கொண்டு மோதிக்கொண்டிருப்பதிலேயே பெரும்பாலான இலக்கியவாதிகளின் பொன்னான நேரம் ஒரு பயனுமின்றி வீணடிக்கப்படுவதுதான் மிகப்பெரிய சோகம்.எல்லாமே தமிழுக்குக் கிடைத்த வரம்தான் என்று வரவு வைத்து நமக்கு வேண்டியதை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவதுதான் மொழிக்குச் செய்யும் தொண்டே தவிர இது எழுத்தே இல்லை, இது இலக்கியமே இல்லை என்று குழு அமைத்துக்கொண்டு அடித்துக்கொண்டிருப்பதில் என்ன பயன் என்று ஒன்றும் புரியவில்லை.

இது ஒருபுறமிருக்க தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள், மற்றும் பல்வேறு அமைப்புக்களும் சரி; இன்னொரு பெரிய தவறையும் செய்து வருகின்றன. தமிழ் வளர்ப்பது என்பதற்கு இவர்கள் எல்லாரும் எடுத்துக்கொண்டிருக்கும் அல்லது செயல்பட்டுக்கொண்டிருக்கும் தளம் எது தெரியுமா? சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக் கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான். இது பற்றி ஆய்வுகள், இது பற்றி நூல்கள், இது பற்றி கருத்தரங்கங்கள், இது பற்றி கலந்தாய்வுகள், இதுபற்றி இலக்கியக் கூட்டங்கள்.....இவைதாம். திரும்பத் திரும்ப இவை மட்டுமேதான். தொல்காப்பியத்தில் ஆரம்பித்து புறநானூறு அகநானூறு சிலப்பதிகாரம் கம்பராமாயணம், பதிற்றுப்பத்து, பன்னிரு திருமுறை நளவெண்பா முத்தொள்ளாயிரம் என்று வருவார்கள். அதையும் தாண்டி வருவதற்குள் மூச்சு வாங்கிவிடும். இன்னும் கொஞ்சம் தம் பிடித்து பாரதியார்வரைக்கும் வருவார்கள். அங்கேயே ஆணி அடித்தார்போல் நின்றுவிடுவார்கள். இவர்கள் ஒருவகை. இன்னொருவகையினரோ தொல்காப்பியம் புறநானூறு சிலப்பதிகாரம் என்றெல்லாம் பயணப்பட்டு கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியங்களையும் கண்டுகொள்ளாமல் மிக கவனமாக பாரதியாரையும் தவிர்த்துவிட்டு பாரதிதாசனை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். தமிழுணர்வு பாடிய பாரதிதாசனின் ஒரு பத்துப்பாடல்களை மட்டும் மனப்பாடம் செய்துவைத்திருந்து ஒப்பிப்பார்கள். அவ்வளவுதான்; அவ்வளவேதான். பாரதிதாசனிலிருந்து ஒரு அங்குலம்கூட கீழே வரமாட்டார்கள். அங்கேயே நின்றுவிடுவார்கள். இவர்களைப்பொறுத்தவரை தமிழ் இலக்கியம் பாரதிதாசனுடன் நின்றுவிடுகிறது.அதன்பிறகு தமிழுக்கு இலக்கியம் இல்லை; இல்லவே இல்லை.

இந்தக் கண்ணோட்டம்தான் திராவிட அரசுகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் இலக்கிய நிறுவனங்களுக்கும் இருந்துவருகிறது. தொண்ணூற்றைந்து சத இலக்கிய அமைப்புக்களுக்கும் இதே கண்ணோட்டம்தான் இருக்கிறது.இருபது இருபத்தோராம் நூற்றாண்டைப் பற்றியோ இதற்குப்பிறகு வரவிருக்கும் நூற்றாண்டுகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு தமிழின் இலக்கிய வளர்ச்சியை நிறுத்திவிடலாம் என்று இவர்களாகவே முடிவு செய்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. கண்ணதாசன் பற்றிய இலக்கிய அமர்வு ஒன்றில் பேசினேன். பேசிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அந்த அமைப்பின் தலைவர் தொலைபேசியில் வந்தார். "கண்ணதாசன் இப்படியெல்லாம் பாடி இருக்காரா? நான் பாரதிதாசனோடு படிக்கிறதை விட்டுட்டேன். அதனால எனக்குத் தெரியலை" என்றார். கண்ணதாசனுக்கே இந்த நிலைமை.

தமிழ் படித்த மக்கள் என்னவோ தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் படித்துமுடித்து வெளியேவரும் மக்கள் பாடப்புத்தகத்துக்கு வெளியே என்ன இருக்கிறது என்றுதான் தேட ஆரம்பிக்கிறார்களே தவிர, பாடப்புத்திகத்தின் தொடர்ச்சியையும் நீட்சியையும் மட்டுமே வைத்துக்கொண்டு அல்லாடுவதில்லை. அப்படியிருந்தால் இத்தனை வார ,மாத, நாளிதழ்களும் இலட்சக்கணக்கான நூல்களும் தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்ன! இத்தனை நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் தமிழில் இருக்குமா என்ன!

தமிழை தமிழின் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய முயற்சிகளை விட்டுவிட்டு வெறும் பழைய இலக்கியங்களை மட்டுமா பரிமாறிக்கொண்டிருப்பது? வெறும் பழங்கதைகள் பேசிக்கொண்டிருப்பதிலே ஒரு பயனுமில்லை என்று இவர்களுக்காகத்தான் பாரதி பாடி வைத்திருக்கிறான். திரும்பத் திரும்ப சங்ககால இலக்கியங்களும் பழைய நூல்களும்தானா? என்ற கேள்விக்கு இவர்களிடம் தயாரான பதில் ஒன்று இருக்கிறது. “சங்க இலக்கியத்தில் இல்லாத எதனைப் புதிதாகச் சொல்லிவிடப்போகிறார்கள்?” என்பார்கள். உலகம் புதிது. தினமும் புதிது. தினசரி தன்னைப் புதிப்பித்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பூவுலகம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று மனிதர்களைச் சொல்லுவதும் அதற்குத்தான். இன்று புதிதாய்ப் பிறந்த சிந்தனை வேண்டும்.எண்ணம் வேண்டும். அதற்குரிய செயல்பாடு வேண்டும். இந்தச் செயல்பாடு இலக்கியத்திலும் வேண்டும். இதை நோக்கித்தான் எல்லா மொழிகளும் செயல்படுகின்றன.
கன்னடத்திற்காக நடைபெறும் மாநாடுகளிலும் சரி சாதாரண கருத்தரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் சரி போய்ப்பார்த்தோமானால் வரிசையாகப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பேரும் படைப்பாளிகள். அதுவும் இந்த நூற்றாண்டின் படைப்பாளிகள், இன்றைய படைப்பாளிகள். இன்றைய படைப்பாளிகளைக் கொண்டாடும் மொழிகள்தாம் இலக்கியச் செழுமையில் முன்நிற்கும். மலையாளத்திலும் இந்தப் போக்கு இருக்கிறது. தமிழில்தான் அரசியல்வாதிகளுக்குத் தரப்படும் மரியாதையில் கால்தூசு அளவுக்குக்கூட இன்றைய படைப்பாளிக்குத் தரப்படுவதில்லை.' இன்றைய படைப்பாளி ஏதோ அவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போகட்டும் நாம் எதற்கு கண்டு கொள்வது?' என்ற மனப்பான்மைதான் இங்கு நிலவுகிறது.

பிரச்சினை என்னவென்றால் 1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.
2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.
3)ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது இந்தக் குப்பையான கலவைதான் அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது.

உலகத்தமிழ் மாநாடாக இருந்தாலும் சரி; செம்மொழி மாநாடாக இருந்தாலும் சரி தமிழ் இலக்கியத்தை நேற்று- இன்று- நாளை என்ற கண்ணோட்டத்தில் அணுகி அதற்கான செயல்பாடுகளையும் மேம்பாடுகளையும் ஆராய்ந்து செயல்திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர வெறும் பழம்பெருமைகளைப் பேச கூடிக்கலையும் ஒன்றாக இருக்கக்கூடாது. வெறும் சங்க கால இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளாகவும் கருத்தரங்கங்களாகவும் மட்டுமே இருத்தல்கூடாது. இந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் பேராசிரியப் பெருமக்களும் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இப்போதைய வார மாத நாளிதழ்களும் மற்ற நூல்களும் சங்க இலக்கியப்பாடல்களுக்கான விளக்கங்களையும் பொழிப்புரைகளையும் ஆய்வுகளையும் குறிப்புகளையும் தினசரி கொடுத்துக்கொண்டே வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இன்றைய கதைகளோ கவிதைகளோ கட்டுரைகளோ செய்திகளோ எதுவும் வேண்டாம். என்ன நடக்கும்? அவனவன் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆப்பிரிக்காவுக்கோ உகாண்டாவுக்கோ ஓடிவிட மாட்டானா?

பழந்தமிழ்ச் செய்யுள்கள் என்பவை என்ன? அந்தக்கால புலவர் பெருமக்கள் அவர்களின் உணர்வுகளை அனுபவங்களை அவர்களின் மனதில் உதித்த காட்சிப்படிவங்களை அன்று வழங்கிவந்த தமிழில் அந்தக்கால மொழிநடையில் பாடி வைத்த படைப்புக்கள்தானே? அவை சிறப்பாயிருப்பதில் மிக மிகச் சிறப்பாயிருப்பதில் நமக்கெல்லாம் பெருமை. அவற்றை நாம் பொக்கிஷம் போல் என்றென்றும் கொண்டாடலாம். அதே போல இந்தக்கால படைப்பாளி தன்னுடைய உணர்வுகளை அனுபவங்களை தன்னுடைய மனதில் உதித்த காட்சிப்படிவங்களை இந்தக்கால மொழிநடையில் இந்தக்காலத் தமிழில் இயற்றுவதுதானே இன்றைய இலக்கியம்? இந்த எளிய உண்மையை நீங்கள் உணர்ந்ததே இல்லையா?' காரொடு நிறைமரு திறமிசை விரியொரு ஞாலம் புகவொண்ணும் ஆதிரைக்கால்' என்று இருந்தால் நீங்கள் கொண்டாடுவீர்கள். 'மலை உச்சியைத் தொட்டுத் தழுவிய மேகங்களின் ஊடாக' என்று புரிகிறமாதிரி இருந்துவிட்டால் சாதாரணம் என்று விட்டுவிடுவீர்கள் என்றால் எப்படி?
தமிழை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டங்களில் தோன்றிய படைப்பாளிகள்தாம் வாழவைத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டும் விஷயங்கள் மட்டுமே அல்ல என்கிற புரிதல் வேண்டும். அதற்காக கல்வெட்டுக்களையும் இன்னபிற ஆய்வுகளையும் புறக்கணிக்கவேண்டும் என்று அர்த்தமல்ல; அவற்றுக்குத் தரப்படும் அதே முக்கியத்துவம் அல்லது அதைவிட அதிக முக்கியத்துவம் வாழும் படைப்பாளிகளுக்கும் தரப்பட வேண்டும்.
இந்த இருபதாம் நூற்றாண்டை எடுத்துக்கொள்வோம். பாரதிக்குப் பிறகு பள்ளிகள் கல்லூரிகளைத் தாண்டி தமிழை வீட்டுக்குள்ளே எடுத்துச்சென்று வாழ வைத்தவர்கள் யார்? கல்கியும் அகிலனும் புதுமைப்பித்தனும் அல்லவா? புதிய நூல்களும் புதிய இதழ்களும் புதிய புதினங்களும் அல்லவா தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.

அந்திகீரனார், பரணர், பெருந்தலைச்சாத்தனார் பெயரில் அரங்கங்கங்கள் அமைக்கும்பொழுது கல்கியின் பெயரிலும் அகிலன் பெயரிலும் புதுமைப்பித்தன் பெயரிலும் ஜெயகாந்தன் பெயரிலும் கண்ணதாசனின் பெயரிலும் அரங்கங்கங்கள் வேண்டாமா?

தமிழ் இலக்கியம் தொடர்பாக 73 பேர் ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர். மொழியியலில் 51 பேர், இலக்கணத்தில் 46 பேர், ஒப்பிலக்கியத்தில் 39 பேர், ஆவணப்படம் தொடர்பாக ஒருவர், தமிழும் பிற இந்திய மொழிகளும் தலைப்புகளில் இருவர், மொழிசார் இயக்கங்கள், சொற்பிறப்பியல், சிற்றிதழ்கள் ஆகிய தலைப்புகளில் ஒவ்வொருவர், படைப்பிலக்கியம் தொடர்பாக மூன்றுபேர் - இதுதான் இந்த மாநாட்டின் ஆய்வரங்க கட்டுரைகளின் பட்டியல். அதாவது இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் தமிழை யார் கொண்டுபோகப்போகிறார்களோ அவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் இதுதான். படைப்பிலக்கியம் பற்றி வெறும் மூன்றே மூன்று கட்டுரைகள். விளங்குமா படைப்பிலக்கியம்?

இதிலும் அண்ணா பற்றி நான்கைந்து கட்டுரைகள்; கலைஞரின் படைப்புக்கள் பற்றி பதினைந்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்; மெத்தச்சரி, தமிழின் வரலாற்றை,சோழர்குல வரலாற்றை, மாமல்லபுர வரலாற்றை தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் செதுக்கி வைத்திருக்கும் கல்கியின் எழுத்துக்கள் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?
யவனர்களின் சரித்திரத்தைத் தமிழர்களின் நினைவுகளில் பதியவிட்ட சாண்டில்யனின் படைப்பிலக்கியம் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

வரலாறு மட்டுமின்றி குடும்ப உறவுகளையும் காதல் மனப்போராட்டங்களையும் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் ஆக்கித்தந்த அகிலனின் படைப்புக்கள் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

சமூக அவலங்களை முகத்தில் அறைவதுபோல் ஆக்கிவைத்திருக்கிறாரே ஜெயகாந்தன் .. அவரைப்பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

கதை மாந்தர்களைப் பார்த்து நாமும் இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்கள் வாழ்க்கையையே மாற்றியமைத்துக்கொண்டார்களே எத்தனையோ இளைஞர்கள்.. அவர்களை அப்படித் தூண்டிய படைப்புக்களைப் படைத்த நா.பார்த்தசாரதிக்கும் டாக்டர் மு.வ.வுக்கும் எத்தனைக் கட்டுரைகள்?

கவிஞர் கனிமொழியின் படைப்புக்களைப் பற்றி மூன்றுபேர் கட்டுரை . மிகவும் சந்தோஷம். கண்ணதாசனின் படைப்புக்களைப் பற்றி எத்தனைக் கட்டுரைகள்? அப்துல் ரகுமான், மேத்தா, மீரா, நா. காமராசன் கவிதைகளைப் பற்றி எத்தனைக் கட்டுரைகள்?

சுந்தர ராமசாமியின் படைப்புக்களைப் பற்றியும் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரின் படைப்பாக்கங்கள் குறித்தும் எத்தனைக் கட்டுரைகள்?

கணிணித்தமிழ் என்று பேசுகிறார்களே அந்தக் கணிணியில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் சங்கத்தமிழைப் பதிவேற்றுவது தவிர எந்த திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.ஆனால் யாரைப்பற்றியும் கவலையே படாமல் அவரவர்களும் தனித்தனி தளங்களை அமைத்துக்கொண்டு எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் ஆபாச வார்த்தைப் பரிமாற்றமும் இருக்கிறதுதான். ஆனால் நாளடைவில் அவை யாவும் ஒழுங்கிற்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் முறைப்படுத்தினாலே போதும். புதிய புதிய எண்ணங்களும் புதிய சிந்தனைகளும் வலைத்தளங்களில் தாமாகவே வரத்துவங்கி விட்டன.

பெரிய பொருட்காட்சிகளில் ஒரு ஓரத்தில் போடப்படும் அப்பளக்கடையைப் போல் தற்காலப் படைப்புக்களுக்கு இத்தனூண்டு இடம் கொடுத்துவிட்டு பழம்பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது எந்த மொழியையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோகாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் மட்டுமே தமிழ் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் சிறக்கும். மற்ற மொழிக்காரர்களைப் பார்த்தாவது சில விஷயங்களைக் கற்றுக்கொள்வோம்.

6 comments :

Robin said...

முற்கால இலக்கியங்களுக்குக் கொடுக்க்கப்பட்டுவரும் முக்கியத்துவம் இக்காலப் படைப்புகளுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்ற உங்கள் கருத்து நியாயமானதுதான்.

M.G.ரவிக்குமார்™..., said...

உங்களின் எழுத்து நடை நன்றாய் இருக்கிறது ஆனால் பெரிய பெரிய பாராவாய் எழுதுவதால் தொடர்ந்து வாசிப்பது கடினமாய் இருக்கிறது.
என்னைப் போன்ற அதிகம் படிக்காதவர்களை மனதில் கொண்டு சிறிய பாராக்களாய் எழுதினால் படிக்கக் கொஞ்சம் சுலபமாய் இருக்குமே!.நன்றி!...

Chittoor Murugesan said...

//இது ஒருபுறமிருக்க தமிழுக்கு ஆக்கம் புரிகிறோம் என்ற பெயரில் அரசும் சரி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள், மற்றும் பல்வேறு அமைப்புக்களும் சரி; இன்னொரு பெரிய தவறையும் செய்து வருகின்றன//

//சங்க இலக்கியங்கள் மற்றும் அவை தொடர்பான பாடங்களையும் பகுதிகளையும் எடுத்துவைத்துக் கொண்டு இவர்கள் பாட்டுக்குப் புகழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான்.//

நேர்மையான கருத்து. தங்கள் எழுத்துக்களில் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. லெசா டைல்யூட் பண்ணா புதிய தலைமுறைகூட உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்படும்

Amudhavan said...

1)நன்றி ராபின். இதற்கென எல்லார் கருத்தும் ஈர்க்கப்படவேண்டும்.
2)நேசனுக்கு நன்றி. தங்கள் கோரிக்கை ஏற்கப்படுகிறது.
3)நன்றி முருகேசன். பதிவுலகில் 'அடித்து விளையாடும்' வெற்றிகரமான ஆட்டக்காரர்களில் ஒருவரான உங்கள் யோசனைக்கு நன்றி.

Unknown said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.
2)ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.
3)ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது இந்தக் குப்பையான கலவைதான் அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது.


ஆச்சரியமாக உள்ளது. நேற்று வினவு தளத்தில் பவா செல்லத்துரை குறித்து வந்துள்ள கட்டுரை வாசித்து விட்டு நீங்கள் இங்கே எழுதியுள்ள விசயத்தைத்தான் இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டே இருக்கின்றேன்.

இன்று எதார்த்தமாக உள்ளே வந்து பழைய கட்டுரைகளை படித்துக் கொண்டு வரும் போது நான் நினைத்துள்ள விசயத்தை அப்படியே எழுதியிருக்கீங்க.

ஆச்சரியமாக உள்ளது.

Post a Comment