Sunday, February 24, 2013

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்






பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்திகள் எல்லாரையும் உலுக்கி எடுத்திருக்கிறது. ஈழம் உட்பட எல்லா விஷயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு சிங்கள அரசாங்கத்தையும் அவர்களுக்கு எல்லா விதங்களிலும் உதவி புரிந்த இந்திய அரசாங்கத்தையும் ஆதரித்துவந்தவர்கள் கூட இந்தப் பச்சைபடுகொலையைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கின்றனர். சில பேர் நமக்கேன் வம்பு கொஞ்ச நாட்களுக்கு வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவோமே என்று கள்ள மவுனம் சாதித்துவருகின்றனர்.

நம்முடைய அரசியல் தலைவர்கள் எல்லாரும் கொதித்துக் குமுறியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்’ என்றிருக்கிறார். ‘பாலச்சந்திரனுக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. அவன் ஒரு குழந்தை. அந்தக் குழந்தை எந்தவிதக் குற்றமும் புரியவில்லை. பிரபாகரனின்  மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அந்தக் குழந்தையைச் சுட்டுத்தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்த ஆதாரங்களையும் இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மையும் மனப்பான்மையும் எண்ணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் பார்க்கும்போது முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி ஞாபகம்தான் வருகிறது.’ என்பவர், இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை வாங்கித்தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி “பாலச்சந்திரன் என்ற இளம்தளிரை துப்பாக்கிக் குண்டுகளால் கருகச்செய்த கோர நிகழ்ச்சியைக் காணும்போது கொடுமை கொடுமை இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காணமுடியாது. உலகத்திலே உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. மணல் சாக்குகளின் மத்தியிலே பிணைக்கைதியாக அந்தச் சிறுவனை அடைப்பதற்கே கல் நெஞ்சம் வேண்டும். அந்தப் பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்? அந்த இளைஞனை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவதற்கு எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்? பாலச்சந்திரனின் மூத்த சகோதரனைப் போர்க்களத்திலே கொன்றழித்த மாபாவிகள் பாலச்சந்திரனை நிராயுதபாணியாக நிற்கவைத்து மூன்றடி தூரத்தில் இருந்தவாறு சுட்டுக்கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்?’ என்று குமுறித்தள்ளியிருக்கிறார்.

வைகோ இப்படிக் கொதிக்கிறார். “நம் போற்றுதலுக்குரிய தேசியத்தலைவர் பிரபாகரினின் இளையபுதல்வன் 12 வயதான பாலகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் அச்சின்னஞ்சிறு பாலகனையும் 5 குண்டுகளைச் சுட்டுக் கொலைசெய்த கொடுமை கோடானுகோடித் தமிழர்களை மனம் பதறச் செய்து உலகில் தமிழனுக்கு நாதி இல்லையா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது” என்றிருக்கிறார்.

தொல்.திருமாவளவன் “12 வயது பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் சிறைபடுத்தப்பட்டு பிஸ்கெட் போன்ற பொருட்களைக் கொடுத்து பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை மூலம் தெரிய வருகிறது. இது ஒன்றே சிங்கள இனவெறி அரசாங்கத்தின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு போதுமான ஆதாரமாகும். எனவே போர்க்குற்றம் குறித்து சர்வதேச சுயேச்சையான விசாரணை வேண்டும்” என்று கொதித்திருக்கிறார்.

விஜயகாந்த் “12 வயதே நிரம்பிய பால்வடியும் முகம் மாறாத பாலச்சந்திரன் சிங்களராணுவத்தால் கொல்லப்படுவதற்கு சில வினாடிகள் முன்பு எடுக்கப்பட்டு இருக்கின்ற புகைப்படத்தையும் சடலமாக இருக்கின்ற புகைப்படத்தையும் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். உலகம் தெரியாத அப்பாவி குழந்தையாக சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிலவறையில் பசிக்கு ருசி அறியாது என்பதுபோல் கைக்கு கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு நல்ல நிலையில் இருக்கும் குழந்தை சற்று நேரத்தில் ஐந்து குண்டுகள் பாய்ந்து சடலமாக கிடக்கின்ற காட்சி காண்போரைக் கண்கலங்க வைக்கிறது. ……இலங்கை மண்ணிலே பிறந்த சிறுவனை அந்நாட்டு அரசே கொடூரமாக படுகொலை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசு எப்பொழுதும் போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது செயல்பட வேண்டும்” என்றிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் “பன்னிரண்டே வயதான அந்தச் சிறுவனை நேருக்குநேர் நிறுத்தி மிக அருகில் நின்று துப்பாக்கியால் சுட்டு அவன் நெஞ்சைத் துளைத்துக்கொன்றுள்ளது சிங்கள இனவெறி ராணுவம். இது போர்க்குற்றம் அல்ல இந்தப் போரே குற்றம் என்பதை சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றிருக்கிறார்.

மருத்துவர் ராமதாசும் இதே போன்று தமது வருத்தத்தையும் குமுறலையும் தெரிவித்திருக்கிறார்.

கவிதை நெஞ்சம் குமுறுவதை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார், “பாலச்சந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும்போது இருதயம் ஒருகணம் நின்றுவிட்டது. 
 என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது. பால்வடியும் முகம், பளபளக்கும் மேனி, கனவுகளின் ஈரம் காயாத கண்கள் மிருகம்கூட அவனைக்கண்டு ஒதுங்கிப்போயிருக்குமே. எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை ராணுவத்திற்கு? மரணம் நிகழும்போது என்னதான் நினைத்திருக்குமோ அந்த கொலைக்களத்துக் குலக்கொழுந்து? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக்கிறான்.

வாழைத்தண்டு மார்பில் வடுக்களாகப் பதிந்திருக்கின்றன துளைத்துப்போன தோட்டாக்கள். கண்கள் என்ற உறுப்பைக் கொண்டதற்காக நான் முதன்முதலில் துக்கப்பட்டேன். ஒரு பிள்ளையைக் கொல்லவா பீரங்கி? ஓர் அரும்பை உடைக்கவா அணுகுண்டு?......................ராஜபட்சே கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப்போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப்போகிறார்கள்? பால்முகம் மாறாத பாலகனே! பாலச்சந்திரனே! அபிமன்யுபோல அஞ்சாமல் களப்பலி ஆனவனே! அழுகிறோம். சாவை மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து சிந்திய ரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து” என்று கண்ணீரைக் கொட்டியிருக்கிறார் அவர்.

இந்த அளவுக்குத் தாக்கத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்று பார்த்தோமானால் நேற்றைக்கு அல்ல, முந்தாநாளோ அதற்கு முந்தின நாளோ நடைபெற்றது அல்ல; போன வாரம் நடைபெறவில்லை. நடைபெற்று ஏறக்குறைய நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. 2009-ம் வருடம் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெற்று உலகையே குலுக்கிப்போட்டிருக்கவேண்டிய சம்பவம் இது. அப்படி எதுவும் அப்போது நடைபெறாமல் இப்போது ‘லேசான குலுக்கல்களுக்காக’ எப்படியோ யாராலோ பந்தி வைக்கப்பட்டிருக்கும் சம்பவமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

பிரபாகரனின் பச்சிளம் பாலகனான இந்தக் குழந்தை பரிதாபமாக செத்துக்கிடக்கும் இந்தப் படங்களும் புதியவை அல்ல; இணையதளங்களில் வலம் வருகிறவர்களுக்கு இந்தப் படம் மிகப்பழைய ஒரு படமே. சில பத்திரிகைகளில் குறிப்பாகச் சொல்லப்போனால் நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட படங்கள்தாம் இவை.

அப்போதெல்லாம் ஏற்படுத்தாத தாக்கத்தை நம்முடைய தலைவர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் இந்தப் படங்கள் இப்போது ஏன் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் கேள்விக்குரியது. 

அந்தப் படங்களுடைய பின்னணி பற்றியும் உண்மைத்தன்மை பற்றியும் சாதாரணர்களான நமக்குத் தெரியாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. குப்பனுக்கும் சுப்பனுக்கும், ராமசாமிக்கும் நாகசாமிக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். கருத்துத் தெரிவித்திருக்கிற ஆட்சியாளர்கள், பெரியவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்குக் கூடவா அந்தப் படங்களைப் பற்றிய தகவல்களும் பின்னணிகளும் உண்மைத்தன்மைகளும் தெரியாமல் போய்விட்டன? அப்போதெல்லாம் ஒரு சிறிய முனகலைக்கூடத் தெரிவிக்காதவர்கள் இப்போது புரண்டு புரண்டு அழுவதும் புலம்புவதும் கங்கையையும் காவிரியையும் இணைத்த அளவுக்குக் கண்ணீர் வடிப்பதும் ஓலமிடுவதும் ஒப்பாரி வைப்பதும் புதிராக இருக்கிறது.

அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் பார்வைக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய செய்திகளும் அப்போதே வரவில்லையா? ஸ்டாலினுக்கு, பேராசிரியர் அன்பழகனுக்கு அப்போதே தெரியாதா?


ஹிட்லர் ஆட்சியை நினைவு படுத்துவதாக’ இப்போது குமுறும் ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்போதே இந்தப் படங்கள் தென்படவில்லையா?

நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் ராமதாஸுக்கும் தொல்.திருமாவுக்கும் சீமானுக்கும் புத்தம் புதிய செய்திகளா இந்தப் படங்களும் இவைபற்றிய தகவல்களும்?

தன்னுடைய சமூகத் தொடர்புகளை ஈழ விடுதலைப் போராளிகளுடன் ஆரம்பித்த விஜயகாந்துக்கு இந்த விஷயம் வரவே இல்லையா?

‘காலையில் தினமும் கண்விழித்தெழுவதற்கு முன்பேயே தொலைபேசியில் என்னை அழைக்கும் கரகரக் குரல் கலைஞருடையது’ என்றெல்லாம் சொந்தம் கொண்டாடி எந்நேரமும் ஆட்சியாளர்கள் வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த கவிஞர் வைரமுத்துவுக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய தகவல்களும் இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கக் கிடைத்தனவா?

என்ன சொல்லுகிறார்கள் இவர்கள். என்ன செய்ய முயலுகிறார்கள்?

ஒன்றும் புரியவில்லை.

அப்போதே இந்தப் படங்கள் பார்க்கக் கிடைத்திருந்தபோதிலும் அவைபற்றிய உண்மைத்தகவல்கள் தெரியாமல் இருந்து இப்போது சேனல்4 தொலைக்காட்சி ‘உறுதிசெய்தபிற்பாடுதான்’ இவர்களுக்கு உணர்வுவந்து கொதித்து எழுந்திருக்கிறார்களா?

அல்லது இந்து பத்திரிகை தெரிவித்திருப்பதனால்தான் இவர்களின் ‘சந்தேகம்’ போக்கப்பட்டதா?

ஏற்கெனவே மூன்றுமுறையோ நான்கு முறையோ பிரபாகரனைக் கொன்றுவிட்டு ஒருமுறை Funeral today என்று வெளியிட்ட பத்திரிகைதானே இந்து? அப்புறம் ‘இந்தமுறை மட்டும்’ எப்படி இந்துவின் மீது நம்பிக்கை வந்தது?

இந்து பத்திரிகையை விடுவோம். நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் எல்லாம் இத்தனை நாட்களும் என்ன செய்துகொண்டிருந்தன? தமிழில் வரும் புலனாய்வு பத்திரிகைகள் என்ன அவ்வளவு சாதாரணமானவையா?

மதுரையிலிருந்து கோபத்துடன் கோபாலபுரம் வீட்டிற்கு வரும் அழகிரி வீட்டுக்குள்போய் தனியறையில் தயாளுஅம்மாளிடம் என்ன பேசினார் எப்படிக் குமுறினார் என்பதையெல்லாம் அடுத்தவாரமே வெளிக்கொண்டுவந்துவிடுவதில்லையா நம் பத்திரிகைகள்?

கோபித்துக் கொண்டிருந்த நாட்களில் ஜெயலலிதா சசிகலாவை போயஸ்கார்டனுக்கு வரவழைத்து தனியறைக்குக் கூட்டிச்சென்று எப்படியெல்லாம் பேசினார் இருவரும் என்னென்ன பேசிக்கொண்டார்கள் ஜெயலலிதா எங்கெங்கே குரலை உயர்த்தினார் சசிகலா எங்கெல்லாம் அழுதார் அப்புறம் எப்படி சமாதானத்துக்கு வந்தார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாகப் புட்டுப்புட்டு வைப்பதில்லையா நம் பத்திரிகைகள்?

தினத்தந்தி என்ன அவ்வளவு சாதாரணப் பத்திரிகையா? தமிழகத்தின் எங்கேயோ மூலையில் முட்டுச்சந்தில் நடைபெறும் கள்ளக்காதல் விவகாரங்களையெல்லாம் ஒன்றுவிடாமல், ஒருவரி விடாமல் பிடித்துக்கொண்டு வருவதில்லையா?

இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு இவ்வளவு பெரிய அரசியல் நிகழ்வுகளில் நடப்பது என்ன என்பதை வெளிக்கொண்டுவருவது அவ்வளவு சிரமமா என்ன?

பின்னே எதற்காக எல்லாரும் சேனல்4 என்ன சொல்கிறது என்பதற்காகக் காத்திருக்கிறார்கள்?
இனிமேல் சேனல்4 என்ன சொல்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் இங்கே அரசியல் நிகழ்வுகள் தீர்மானிக்கப்படவிருக்கின்றதா?

எங்கேயோ கண்காணாத தேசத்தில் இருக்கும் ஒரு புலனாய்வு ஊடகத்துக்கு இருக்கும் பொறுப்பும் திறமையும் நம்முடைய ஊடகங்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லையா?

புரியவில்லை!

இந்தப் பதிவைப் படிக்கும் சில நண்பர்கள் உடனடியாக வந்து கருணாநிதி மீது மட்டும் சொல்லக்கூசும் வார்த்தைகளைப் போட்டுத் திட்டித்தீர்த்துவிட்டு விலகிவிடுவார்கள்.

கருணாநிதி தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. நடைபெற்ற அவ்வளவு தவறுகளுக்கும் அவரை மட்டுமே குற்றம் சாட்டிவிட்டு மற்றவர்களெல்லாம் தப்பித்துவிடும் கைங்கரியத்துக்குத் துணை போய்விடாதீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அவர் ஆட்சியில் இருந்தார் என்பதனாலும் தமிழர்களின் ஒரே இனமானத் தலைவராக அவரை மட்டுமே இந்தத் தமிழ் சமூகம் நினைத்தது என்பதாலும் அவர் எப்படியாவது இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்திவிடுவார் என்ற நினைப்பு கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இருந்தது என்பதாலும் அவ்வளவு நம்பிக்கையிலும் மண்ணைக்கொட்டிச் சிதறடித்துவிட்டார் என்பதாலும் அவர் மீது ஆற்றமுடியாத கோபம் இருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈழப்படுகொலைகள் நடந்த காலகட்டங்களில் கருணாநிதியைத்தவிர நாட்டில் இருந்த – குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் இருந்த மற்ற தலைவர்களின் பங்கு என்ன பொறுப்பு என்ன அவர்கள் ஆற்றிய கடமைகள் என்ன என்பதையெல்லாம் பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கருணாநிதி ஒரு தலைவனே இல்லை என்றெல்லாம் கூப்பாடு போடுவதெல்லாம் சரிதான். அவர் குடும்பத்தை மட்டுமே கவனிக்கிறார், மற்ற எல்லா விஷயங்களிலும் கபட நாடகங்கள் மட்டுமே ஆடுகிறார் என்று சொல்வதெல்லாம் சரிதான்………

அவர் இல்லையென்றால் உடனடியாக அவருக்கு மாற்றாக இன்னொருவரைத் தேர்வு செய்கிறோமல்லவா அந்த ‘இன்னொருவர்’ அல்லது அதற்கு ‘மாற்றானவர்கள்’ ஆற்றிய கடமை என்ன என்பது முக்கியமில்லையா? அவர்கள் என்ன பங்கு பெற்றார்கள், எப்படியெல்லாம் காய் நகர்த்தினார்கள் எப்படியெல்லாம் ஈழப்போராட்டங்களைக் கொண்டு சென்றார்கள் என்பதெல்லாம் விவாதத்திற்கு வரவேண்டாமா?

இந்த நாட்டின் அரசியல் அமைப்பு என்பது எப்படி இருக்கிறது? ஆட்சி அதிகாரம் எல்லாம் ஒருபுறம் இருக்க அந்த ஆட்சி அதிகாரத்தைத் தட்டிக்கேட்கும் மற்ற எதிர்கட்சிகளின்- எதிர்க்கட்சித்தலைவர்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன, என்பதெல்லாம் கணக்கில் வரவேண்டுமா வேண்டாமா?

ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் எதிர்ப்பரசியலும் மக்களைத்திரட்டி அரசுக்கெதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராடுவதும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின்- தலைவர்களின் பொறுப்பா இல்லையா?

அதனைத் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைப்பேரும் செய்திருக்கிறார்களா?
இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பதற்காக எல்லா எம்பிக்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்று கருணாநிதி அறிவித்ததற்கேற்ப ராஜினாமா செய்ய எல்லாக்கட்சி எம்பிக்களும் முன்வந்தார்களா?

திமுக எம்பிக்கள் வெறும் ‘அவரிடம்’ மட்டுமே ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து நாடகமாட மற்ற எல்லாக்கட்சி எம்பிக்களும் அதுமாதிரியான நாடகத்தைக்கூட ஆடாமல் எங்கேயோ போய்ப் பதுங்கிக்கொண்டார்களா இல்லையா?

கருணாநிதி இலங்கை விவகாரத்தில் இன்னின்ன மாதிரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அவருக்கு அரசியல்ரீதியான அழுத்தம் என்னென்ன கொடுக்கப்பட்டது?

எப்படியெல்லாம் கொடுக்கப்பட்டது?

வேறுமாதிரியான சிந்தனையே அவருக்கு எழாதவண்ணம் அவரைத் தங்கள் போக்கிலேயே இழுத்துக்கொண்டு செல்லலாம் என்ற அளவிற்கு எதிர்க்கட்சிகளோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர்களோ அவருக்கு என்ன அழுத்தத்தைக் கொடுத்தனர்?

என்ன மாதிரியான போராட்டத்தை அவருக்கு எதிராக நடத்தினர்?

எல்லாருமே வாய்மூடி கள்ள மவுனம் சாதித்துக்கொண்டிருந்துவிட்டு அங்கே ஒரு பேரழிவு நடைபெற்று முடிந்தபின்னர் எல்லாரும் சேர்ந்து அவருக்கெதிராக மட்டுமே குற்றச்சாட்டு வீசிக்கொண்டிருந்தால் எப்படி?

மற்ற மாநிலங்களில் எல்லாம் இதுவா நடைபெறுகிறது? பொதுவான விஷயங்கள் என்று வரும்போது எல்லாக்கட்சிகளும் ஒருமித்த குரலில்தாம் போராடுகின்றன. எல்லா விஷயங்களிலும் ‘ஒற்றைமுடிவுகள்தாம்’ மேற்கொள்ளப்படுகின்றன. எல்லா விஷயங்களிலும் எல்லாக்கட்சிகளும் ஒரே அணியில் நின்றுதான் போராடுகின்றன.

அதெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?

இருக்கவேண்டுமா இல்லையா?

வெறும் கருணாநிதியை மட்டும் திட்டித்தீர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு உட்கார்ந்துகொண்டிருந்தால் எப்படி?

மற்ற விஷயங்கள் போகட்டும். ஈழ விவகாரம் என்பது மக்கள்இனம் நேரடியாக கொத்துக்கொத்தாக செத்துப்போகின்ற விளிம்பில் நின்றுகொண்டிருந்த விவகாரம். இதில்கூட அத்தனைக்கட்சிகளும் – அழுத்தம் கொடுத்துப் படியுங்கள், அத்தனைக் கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் நின்றுகொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்துபோனதும் ‘ஒரேயொருவர்மீது’ மட்டும் அத்தனைப் பழியையும் போட்டுவிட்டுத் தாங்கள் தப்பிக்க நினைத்தால் எப்படி?

இதையே வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம். அங்கே யார் புண்ணியத்திலோ அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இனப்படுகொலை எதுவும் நடைபெறாமல் நின்று போயிருந்தது என்று வைத்துக்கொள்வோம். ‘என்னால்தான் நின்றது’ ‘நான்தான் பிரதமரிடம் பேசி நிற்கவைத்தேன்’ ‘எங்கள் கட்சிதான் இதற்கான தீர்வை முன்வைத்தது’ என்று எத்தனைப்பேர் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள் தெரியுமா?


இன்னமும் எத்தனைப்பேர் வேறுமாதிரியான பாட்டுப் பாடியிருப்பார்கள் தெரியுமா? ‘தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வாய்ப்பை கருணாநிதிதான் கெடுத்துவிட்டார். ராஜிவ் கொலையாளிகளைத் தப்பிக்கவைத்தது கருணாநிதிதான். அந்தக் கொலையாளிகளைப் பிடித்துவந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அதற்கான தண்டனையை அவர்களுக்கு மட்டுமில்ல கருணாநிதிக்கும் கொடுக்கப்படவேண்டும்’ – சொல்லியிருப்பார்களா இல்லையா?

அதனால் இம்மாதிரியான விவகாரங்களில் எல்லாம் நாம் நம்முடைய சிந்தனைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியவர்களாக இருக்கிறோம். தங்களுக்கான கடமைகளில் தவறிவிட்டு அதனை வேறொருவர் மீது மட்டுமே போட்டுவிட்டுத் தப்பிக்க நினைக்கும் தலைவர்களையும் கொஞ்சம் அடையாளம் கண்டுகொள்வோம்.
இது தொடர்பாக ஒரு பிரபல கவிஞர் சொன்னதை மறந்துவிடக்கூடாது. “ஈழ விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அத்தனைத் தலைவர்களின் கரங்களிலும் ரத்தக்கறை படிந்துதான் இருக்கிறது!”
எல்லாத் தலைவர்களுமே தங்கள் கரங்களை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இப்போது இந்தப் பாலகனின் படுகொலை விஷயத்திற்கு வருவோம்!

தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் இப்போதுதான் தகவல் கேள்விப்பட்டதுபோல் இப்படிக் கூப்பாடு போடுகிறார்களே என்ன நடந்துவிடப்போகிறது?

எல்லா இடங்களிலும் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி எந்த இடத்தில் தேவையான விளைவுகளையும் மாறுதல்களையும் ஏற்படுத்தவேண்டுமோ அந்த இடத்தில் துளியேனும் மாறுதலையோ சின்னஞ்சிறு அசைவையோகூட ஏற்படுத்தவில்லை என்பதுதான் கொடுமையான விஷயம்.

இந்திய அரசாங்கத்தின் கண்களைத் திறந்து வெளியுறவுக் கொள்கைகளில் சிறிய அளவிலேனும் தங்கள் பார்வையை இந்த அரசாங்கம் மாற்றிக்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான அவசியம் எதுவும் இல்லை என்பது போன்ற அவர்களுடைய அறிவிப்புதான் தமிழ் இனத்தை மீண்டும் மீண்டும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திப் பழிவாங்கும் போக்காகவே இருந்துவருகிறது.

இதோ, “இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல; பாதிதான் உண்மை. மீதி சித்தரிக்கப்பட்டவை. உலக அரங்கில் ஸ்ரீலங்காவைக் குற்றவாளியாகக் காட்டவேண்டும் என்பதற்காக எதிரிகள் சித்தரித்திருப்பவை” என்று எவனோ ஒரு ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அமைச்சர் சொல்லிவிட்டான்.

உடனே அதனை அப்படியே அடிபணிந்து நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் “அந்தப் படங்களின் உண்மைத்தன்மை பற்றி விசாரிக்கவேண்டியிருக்கிறது. அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

அப்புறம் என்ன? தூக்கிக் கடாசிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதானே!

நம்முடைய அரசியல்தலைவர்கள் வாய்ப்பந்தல் போடுவதற்கு இன்னொரு ஈழத்தமிழரின் துயரம் தோய்ந்த இன்னொரு விவகாரம் வெளிச்சத்திற்கு வராமலா போய்விடும்?

கண்ணதாசன் எத்தனைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறான்-
‘ஒண்ணுமே புரியலே உலகத்துலே
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்துலே!’







17 comments :

Anonymous said...

அன்பரே,
ஆரம்பத்தில் பாலச்சந்திரன் இறந்து கிடந்த படம் மட்டும் தான் வெளி வந்திருந்தது. அதை ஸ்ரீலங்கா அரசு தங்கள் செய்யவில்லை என்று சுலபமாக நிராகரித்து விட்டது. அவனை புலிகள் தான் கொன்றிருக்க வேண்டும் அல்லது மோதலில் இருந்திருக்க வேண்டும் என்று காரணங்கள் கூறியது.

ஆனால் தற்போதுதான் அவன் உயிருடன் இருந்த படமும் வெளியானது. அதன் பிறகுதான் அவன் பிடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்ட சம்பவம் உறுதியாக்கப்பட்டது. அதனால் இந்த சம்பவம் சற்று கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நன்றி

Anonymous said...

சுப்ரமணிய சுவாமி கூறிய கருத்துதான் மிக கொடுமையானது

வவ்வால் said...

அமுதவன் சார்,

என்ன இது நான் நினைச்சத அப்படியே எழுதிட்டிங்க, முன்னரே பாலச்சந்திரன் சுடப்பட்டு இறந்தது ,புகைப்படம் எல்லாம் வந்த பின்னும், இப்போ ஒரு அயல்நாட்டு ஊடகம் வெளியிட்டுவிட்டது சும்மா இருந்தா நல்லா இருக்காதுனு நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்க, ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அம்மையார் முதல்கொண்டு கலிஞர் வரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டிப்போட்டு பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கிறாங்க :-))

சீமான் மாதிரி ஆளுங்களை நினைச்சா எனக்கு உண்மையிலே செம கடுப்பாகுது ,திடீர் போராளியாக்கிளம்பிட்டு , எல்லாரையும் குத்தம் சொல்லிக்கிட்டு,ஆனால் அதே வேலையை தான் அவரும் செஞ்சுகிட்டு இருக்கார், மத்தவங்களாவது பொதுவா அரசியல் இயக்கம் நடத்திக்கிட்டு ,கூட ஈழம்னும் பேசிக்கிறாங்க, ஆனால் சீமான் அரசியல் இயக்கமே ஈழப்பிரச்சினைக்காக ஆரம்பிச்சாப்போல காட்டிக்கிட்டார், ஆனால் நடைமுறையில் எதுவுமே செய்யாமல் ,அறிக்கை புலியாக இருக்கார்.

தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் ,நாமும் கருத்து சொல்லவில்லை என்றால் ,பேசவில்லை என்றால் தப்பாகிடும்னு சும்மா பெயரளவுக்கு பேசுறவங்க தான்,உண்மையில் ஒரு துறும்பையும் கிள்ளி போட முடியாத கூமுட்டைகள்.

அட ஒன்னும் வேணாம் தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் முகாமில் அடிப்படை வசதி கூடவா செய்து தரமுடியாது, அய்யா,அம்மானு ரெண்டு பேரும் தான் மாத்தி மாத்தி வராங்க,அப்படி இருந்தும் ஏன் அங்கே நாறிக்கிடக்கு, இதை எந்த தமிழக பத்திரிக்கையும் பேசாது.

தமிழன் ,தமிழன்னு கூவுகிறோம்,அடிப்படையில் தமிழனை ,தமிழனே சுரண்டுகிறான் என்பதே உண்மை, முகாமில் இருந்து வேலைக்கு வருபவர் எனில் உள்ளூர் காரனை விட சம்பளம் குறைவு, இதான் நம்ம தமிழ் உணர்வு, அட தமிழ் உணர்வு கூட வேண்டாம்,அடிப்படையா ஒரு தொழிலாளி என்றாவது உரிய சம்பளம் கொடுத்தால் என்ன?

நம்ம அரசியல்வியாதிகள் கடல் கடந்து இருக்கு அதான் ஒன்னும் செய்யலைனு சொல்லக்கூடும்,உள்நாட்டில் இருக்கும் நம்மளை போல தமிழக தமிழனை ஏய்த்தார்கள் போகட்டும்,இங்கே அடைக்கலம் தேடி வந்த ஈழத்தமிழனுக்கு என்ன செய்தார்கள்?

ஏன் அதுக்கும் ராசபக்சே தடைப்போட்டாரா?

Anonymous said...

தவறு நான்கு வருடங்கள் அல்ல. இருபது வருடங்கள் முன்பே ஆரம்பித்து விட்டது. தமிழினத்தின் ஒரே போராளியாய் தான் மட்டுமே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஆரம்பித்தது. தமிழினத்தையும் தன்னையும் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பிம்பத்தை உருவாக்கிய போது தொடர்ந்தது. ஒவ்வொரு போரையும் பேச்சுவார்த்தை என்ற பேரில் தங்களுக்கு பாதகமான கட்டத்தில் முடித்துக்கொண்டு ஆயுதங்கள் சேர்ந்ததும் ஆரம்பித்த போது நம்பிக்கை தகர்ந்ததில் உள்ளது.தமிழர்கள் தமிழ் இனம் என்றாலும் இந்தியன் என்ற உணர்வு கொண்டவர்கள். அவர்களிடம் இந்திய உணர்வுகெதிராக பேசி தங்களால் முடிந்தளவுக்கு அவர்களை ஒரு எதிர்மறை உணர்வை காட்ட விடாத தலைவர்களிடம் உள்ளது. எல்லாம் சேர்ந்து ஒரு இனத்தையே அழித்த பின் இன்று போங்க வைத்துள்ளது. இந்த பாலகனை கொன்றவன் வெறியன். ஆனால் அந்த வெறியை வளர்த்ததில் பங்கே இல்லை என்று புலிகள் நழுவ முடியுமா? நம் மண்ணில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை நாம் எவ்வளவு வீறு கொண்டு கண்டிக்கிறோம். தலைவர்களை கொல்கிறேன் என்று நம் இனத்தவர்கள் கொன்ற போது எங்கே சென்றது நம் கண்டிப்பு. வெறியூட்டி வெறியூட்டி இரு இனங்களை பிரித்து விட்டோம். என்று சாமானியன் கோபம் கொள்கிறானோ அன்று எந்த போராட்டமும் வலுவிலக்கிறது. இந்த புகைபடத்தை பார்க்கும் போதெல்லாம் மனம் வலிக்கிறது. எல்லோர் மேலும் கோபம் வருகிறது. எத்தனை எத்தனை அப்பாவிகளை புதைத்து விட்டோம். போதும். இன்றும் போர் செய்வோம் என்று பேசி அவர்கள் மேல் வரக்கூடிய கொஞ்ச நஞ்ச பரிதாபத்தை கூட கெடுக்காதீர்கள். இன்றைய தேவை அவர்களுக்கு பெருமை அல்ல. நாளை வாழ்வோம் என்ற நம்பிக்கை. அதை போர் தராது. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் கோபம் தராது. கூடவே வாழப்போகும் சாதாரண சிங்கள குடிமகன்களின் மன மாற்றமே தரும். தயவுசெய்து உணருங்கள்.

Amudhavan said...

இங்கே நிறையப்பேர் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டுவந்துதான் கருத்துச் சொல்கிறார்கள்.கருத்துச் சொல்கிறவர்கள் பெரியமனிதர்களாகவும் இருக்கக்கூடும். இருக்கட்டும்,முதலாவது நண்பரின் விளக்கம் எப்போதும் அரசுகளிடமிருந்துவரும், அல்லது ஆட்சிபுரியும் அதிகாரிகளிடமிருந்து வரும் official version. அது அப்படித்தான் இருக்கும். அம்மாதிரியான 'ஆட்சியாளர்களின் விளக்கங்கள்'சாதாரணக் குடிமகன்களின் வாயை அடைக்கப் போதுமானவையாக இருக்கலாம். அல்லது கோர்ட்டுகளில் இம்மாதிரியான 'அரசாங்க சால்ஜாப்புகள்' மட்டுமே ஒப்புக்கொள்ளப்படுபவை என்பதனால் நீதியரசர்களின் சட்டக் கொள்கைகளுக்கு ஏற்புடையனவாக இருக்கலாம்.இம்மாதிரி அரசாங்க அறிக்கைகளுக்கும் உண்மைகளுக்கும் எப்போதுமே தொடர்பு இருப்பதில்லை.அதனால்தான் பதிவிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.....'அந்தப் படங்களின் உண்மைத்தன்மை பற்றியும் பின்னணி பற்றியும் சாதாரணர்களான நமக்கு- குப்பனுக்கும் சுப்பனுக்கும் ராமசாமிக்கும் நாகசாமிக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆட்சியாளர்களுக்கும், தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாதா?' என்று.அப்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி அழுதுபுரள்கிறார்களே அல்லது புரள்வதுபோல் வேடம் போடுகிறார்களே...என்பதுதான் பதிவின் சாராம்சம்.
தங்கள் வருகைக்கு நன்றி.

Amudhavan said...

சுப்பிரமணியசாமியின் கருத்தைப் படிக்கவில்லை. ஆனால் ஒன்று.ஒரு மாநில மக்களின், பெரும்பாலான மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளுக்கு எதிராகவே பேசிக்கொண்டு அரசியல் செய்துகொண்டு பெரிய மனிதனாகவே வலம்வந்து கொண்டிருப்பதென்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியம்.வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான பேர்வழிகளையெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்கள்.

Amudhavan said...

வாருங்கள் வவ்வால் விஸ்வரூபம் களேபரங்களிலிருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டீர்களா? எந்த விஷயத்திலும் முழு அளவில் ஊடுருவிப்பார்த்துதானே கருத்துச் சொல்வீர்கள்? இந்த விஷயத்திலும் அப்படித்தானே சொல்லியிருக்கிறீர்கள். அதனால் தங்கள் கருத்துக்களை அப்படியே ஆமோதிக்கிறேன்.

Amudhavan said...

அனானிமஸ் இந்த ஒரு கோணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் குறை கூறிப் புறந்தள்ளப் பார்ப்பது ஏற்புடையதன்று.
தினசரி அறிக்கைகள் கொடுத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் சாதாரண சிறிய கட்சித்தலைவர்களே ஆயிரம் விஷயங்களில் முரண்படுகிறார்கள்.தவறான முடிவுகள் எடுக்கிறார்கள்.

ஒரு நாட்டின் கொடுங்கோலாண்மைக்கும் வெறியாட்டத்திற்கும் எதிராக ஆயுதம் தூக்கிய போராளிகளின் நெடிய வரலாற்றில் ஓரிரண்டு தவறுகள் இருக்கக்கூடுமே தவிர பாதையே தவறு; செய்ததெல்லாம் தவறு அவர்களின் தவறினால்தான் இத்தனைப் பெரிய பேரழிவு நடைபெற்றது என்றெல்லாம் சொல்ல நான் தயாரில்லை.

உலகின் பல நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிராகத் திரளவேண்டும் என்ற சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்த முடிவுகளுக்குப் பலியாகிப்போனது ஈழத்தமிழ் சமூகம்.

விடுதலைப்போரின் அத்தனை முயற்சிகளும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது காலத்தின் கோலம்தான். அதற்கான மொத்தப்பழியும் அவர்கள்மீது மட்டுமே போடப்படக்கூடாது.

இந்தப்போரில் பிரபாகரன் மட்டும் வெற்றிபெற்று விட்டிருந்தால் அப்போது இந்தப் பேச்சுக்களெல்லாம் வந்தே இருக்காது.

தரைப்படை, விமானப்படை,கப்பற்படை என்றெல்லாம் நிர்மாணித்துக்கொண்டு ஒரு விடுதலைப்போரைத் துவக்கிய இயக்கம் உலகிலேயே புலிகள் மட்டும்தான் என்றே நினைக்கிறேன். இப்படியொரு கட்டமைப்புடன் உலகின் பார்வையைத் தன்பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு எதிராகப் போரிடுவது என்பது ஒன்றும் சாதாரணமானது அல்ல. இப்படியொரு தலைமை வேறெந்த நாட்டிலாவது இருக்கமுடியுமா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான்.

(ஒரு நான்கு பேரைச் சேர்த்துக்கொண்டு சமூகநற்பணி மன்றம் என்பதுபோல் ஒரு மன்றத்தைத் துவக்கி நடத்திப்பாருங்கள்.அதில் வரும் பிரச்சினைகளையும் உடன் இருப்பவர்கள்தரும் தொந்தரவுகளையும் சுற்றுப்புறமுள்ளவர்கள் தரும் தொந்தரவுகளையும் சுலபமாக சமாளிக்கமுடிகிறதா என்று பாருங்கள்)
'உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்...உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவிட்டால் நிழலும்கூட மிதிக்கும்' என்ற கண்ணதாசன் வரி இங்கேயும் பொருந்துகிறது. பிரபாகரன் தோற்றுவிட்டார் என்பதற்காக போகிறவருகிறவர்களெல்லாம் அவர் மீது ஒரு கல்லை எடுத்து வீசிவிட்டுப்போவது என்பதைக் கலிகாலம் என்றுதான் சொல்லவேண்டும்.

baleno said...

இலங்கையில் தமிழ் பாலகன்கள், முஸ்லிம் பாலகன்கள், சிங்கள பாலகன்கள் பிரபாகரனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பிரபாகரன் கொன்றாலும் கொலை தான். உங்களது பிரச்சனை பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுவிட்டார் என்பது.

Amudhavan said...

இல்லை பாலெனோ, என்னுடைய மையப்பிரச்சினை என்பது ஒரு கொடுங்கோல் அரசு நீண்ட நெடிய காலமாக ஒரு இனத்துக்கு உரிய உரிமைகளைக் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அழித்துக்கொண்டு வந்து பிறகு அவர்களை ஒரே இடத்தில் சேர்த்துவைத்து கொத்துக்குண்டுகளையும், நச்சுக்குண்டுகளையும் போட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கொன்று அழித்தது என்பதுதான்.
இந்தக் கொடுங்கோலர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியவர்தானே பிரபாகரன்?
அவருடைய நீண்ட நெடிய போராட்டத்தில் சில தவறுகள் நடைபெற்றிருக்கலாம். அந்தத் தவறுகள் ஒரு பாரிய இன அழிப்பை நியாயப்படுத்திவிட முடியாது.

Unknown said...

Amuthavan sir it is clear statement about tamilnadu politicians

Amudhavan said...

ஆமாம் அருண். இந்த நிலைமைக் கொஞ்சமாவது மாறக்கூடாதா என்ற ஆதங்கமும்கூட.

ராஜ நடராஜன் said...

நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சில தீர்மானங்களை துணிந்து எடுத்தாக வேண்டுமென்ற சூழலில் தள்ளப்படுகிறோம்.எடுக்கும் முடிவுகளுக்கேற்ப வாழ்க்கையின் தொடர்ச்சி நிகழும்.

கலைஞரின் முந்தைய ஆட்சிகாலத்தின் ஈழ நிலைப்பாடு பற்றி ஏகமாய் விமர்சித்தாகி விட்டது.உங்கள் பதிவில் கலைஞர் குறித்த சாரம் பழைய காயங்களை மீண்டும் ரணமாக்கவே செய்கிறது.

துவக்கத்தில் சொன்ன சில முடிவுகளை ஒட்டி எதிர்கால விளைவுகள் என்பதற்கு சமீப உதாரணமாக சல்மான் குர்ஷித் சொல்லும் தமிழக உணர்வுகள் ஒரு பக்கமும்,இலங்கை நட்பு நாடு என்ற இருதலைக்கொள்ளி நிலைப்பாடு மாதிரி கலைஞரின் ஆட்சிக்காலத்தில் சட்டம்,ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பதவி பொறுப்பு ஒரு புறமும்,ஈழப்போரை மழுங்க செய்வது எப்படியென்ற நிலையில் முத்துக்குமார் மரணம்,நீதிமன்ற வழக்கறிஞர்கள்,காவல்துறை கைகலப்புக்கள் எப்படி கையாளப்பட்டன என்பதோடு இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக நிலைப்பாடும் என்று வாக்குமூலம் தந்தார்.எதிர்கட்சிகள் குரல் எழுப்புவதற்கும்,ஆளும் கட்சி குரல் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதிய உணர்வுக்கு ஈழப்போரின் முழு வடிவமும் தெரியாமல் போனதற்கு ஜாபர் சேட் போன்றவர்களும் கூட காரணமாக இருந்திருக்கலாம் அல்லது தமிழக ஆட்சி பரிபாலனம்,குடும்பம்,பாராட்டு விழா மயக்கம்,வைரமுத்து போன்ற ஜால்ராக்களின் சங்கொலி போன்றவைகளும் கூட காரணமாக இருக்கலாம்.

எதிர்க்கட்சியினர் ராஜினாமா செய்கிறார்களோ இல்லையோ இந்திய பாரளுமன்ற நிகழ்வுகளை திருப்பி போடும் சக்தி தி.மு.கவுக்கு இருந்தது.ஆனால் அதற்கு குறுக்கே 2ஜி நின்றது பின்புதானே வெளிச்சமானது.

இவ்வளவுக்கும் பிறகும் டேசோ ஏதாவது மாற்றங்களை கொண்டு வருமா என்ற நினைப்பும் இன்னும் ஊர்,உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.டெசோ தும்பை விட்டு வாலைப்பிடித்த கதைக்கு சிறந்த உதாரணம்.

தமிழகத்தில் தி.மு.க,அ.தி.மு.க விற்கு மாற்றாக யாராவது வருவார்களா என்ற நினைப்பில் சீமான் குரல் கொடுக்கிறாரே என்ற நினைப்பில் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போன்றது மாதிரிதான் அறிக்கைகள் வெளியிடுகிறார்.வை.கோ தேர்தல் நேரத்து சமரசங்களால் தோற்றுப்போனார்.நெடுமாறனுக்கு மாஸ் அப்பீல் போதாது.திருமா தி.மு.க அகதியாகி விட்டார்.ராமதாஸ் லட்சணம்தான் தமிழகத்திலே நடமாட முடியாத படி இருக்கிறதே.ஈழப்பிரச்சினை தமிழகத்தில் அரசியல் சுயநலங்களாகப் போய் விட்டது ஒரு சோகம்.

ராஜ நடராஜன் said...

இலங்கை மிக சாதுர்யமாக காய் நகர்த்துகிறது.அதற்கு உலக நாடுகளின் இரட்டை வேடங்களும் துணை புரிகின்றன.

கெலம் மெக்ராவின் காணொளி தொகுப்புக்கள் சேனல் 4ல் வெளிவருவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே இணைய தளங்களில் இங்குமங்குமாக போர்க்குற்ற சாட்சிகளாக சிதறிக்கிடந்தன.பல விவாதங்களும் நிகழ்ந்தன. ஆனால் அவற்றிற்கெல்லாம் இல்லாத தாக்கம் கெலம் மெக்ராவிற்கு கிடைத்ததற்கு முக்கிய காரணங்கள் ஒளிப்படங்களாகவும்,புகைப்படங்களாகவும் இருந்ததோடு சாட்சி சொல்ல சிலர் முன்வந்ததும் ஆவணப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியதும்தான்.ஆனால் இவற்றையெல்லாம் மார்பிங்க் என இலங்கைக்கான இந்திய தூதர் கரியவம்சம் மூலமூம்,சுப்ரமணியன் சுவாமி என்ற மீடியா அடியாளிடமும் இதனை விட மனித உரிமைக் குழுவில் இலங்கை ராணுவம் குற்றமே செய்யவில்லையென்பதோடு சேனல் 4 காணொளியை அனுமதித்தற்காக நவீன் பிள்ளை மீது சேற்றை வாரி இறைக்கும் உரிமையை state actors என்று சொல்லப்படும் ஆட்சியாளர்களின் அல்லக்கைகளால் உரக்க சத்தம் போட முடிகின்றது.

இலங்கைப் பிரச்சினை உலகமயமாக்கப் பட்டும்,போர்க்கால குற்றங்கள் தெளிவாகப் புரிந்தாலும் கூட நாடுகளின் சுயநலப் போட்டிகளில் ஈழப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்கள் இன்னும் கிடப்பில்தான் இருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்பான ராணுவம் சார்ந்த குண்டுவெடிப்புக்கள் இப்பொழுது இல்லாமை இலங்கை அரசுக்கு ஒரு சாதகமான நிலை.போர்க்கால பிரச்சினைகளை சமாளிப்பதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளுமென்று கருதினாலும் கூட இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள்,தமிழர்களுக்கு எதிரான சூழலகள்,மொழி,கோயில்கள் அழிப்பு,ஜனநாயகத்தின் பெயரில் ராணுவமயமாக்கல் போன்றவை மகிந்த சிந்தனையை நன்கு தெளிவு படுத்துகிறது.ஈழத்தமிழர்கள் இன்னும் சில காலம் பாரம் சுமக்க வேண்டி வரலாம்.

ராஜ நடராஜன் said...

மூணாவது அனானி!விடுதலைப்புலிகள் மீதான விமர்சனம் முள்ளிவாய்க்காலோடு மரணித்து விட்டது.கடந்த நான்கு ஆண்டுகளில் ராஜபக்சே அரசின் செயல்பாட்டை நோக்கும் போது சிங்கள ஆட்சிமுறையை சரியாக புரிந்து கொண்டவன் பிரபாகரன் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்குமான இடைவெளி அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பதை இலங்கை மட்டுமல்ல ஏனைய உலக நிகழ்வுகளும் தெரிவிக்கின்றன.தமிழக உணர்வே மத்திய அரசால் நிராகரிக்கப்படுகிறது.இலங்கை விசயத்தில் விடுதலைப்புலிகளை ஊட்டி வளர்த்ததே இந்தியாதான்.பின் நாரயணன்,சிவசங்கர மேனன்,நிருபமா,நம்பியார் ,பிரணாப் கூட்டணியால் இலங்கையோடு சேர்ந்த போர்க்குற்றவாளியும் இந்தியாதான்.

வெற்றியே வரலாற்றை எழுதினாலும்,விடுதலைப்புலிகளின் கடல்,வான்,நிலம் சார்ந்த ராணுவ கட்டமைப்பும்,கட்டுக்கோப்பும் வரலாற்றில் எழுதப்படும்.

Amudhavan said...

வாருங்கள் நடராஜன் தங்கள் கருத்து - ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் 'அருமை!'

வவ்வால் said...

அமுதவன் சார்,

விஷ்வரூப களேபரமெல்லாம் அவ்வப்போது தலையெடுப்பது தான் ,அதெல்லாம் போயே போச்சு :-))

தமிழக அகதிகள் முகாமில் நிலைமை மிகவும் மோசமாகவேயுள்ளது, வெளிநாட்டில் உறவினர்கள் இருந்து பணம் அனுப்பும் நிலையில் உள்ளவர்கள் பாடு பரவாயில்லை, அப்படியான வசதி இல்லாதவர்கள், அருகில் உள்ள ஊரில் சொற்ப சம்பளத்தில் தினக்கூலியாக வேலை செய்கிறார்கள் அப்படி வேலை செய்த ஒருவரிடம் பேசினேன், அதை வைத்தே சொன்னேன்.

அவர்களிடம் பேசினால் நம்ம அரசியல்வாதிகள், தமிழக மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் என அனைவர் மீதுமே கடுப்பு வரும்.


வெளிநாட்டில் அடைக்கலமானவர்களுக்கு வேலை,குடியுரிமை எல்லாம் அளிக்கப்படுவது போல ஏன் இந்தியாவில் செய்யவில்லை, அதுக்குறித்து ஏன் அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதில்லை?
---------

ஹி...ஹி தப்பா நினைக்கப்படாது, உங்கள் அனுமதிக்கேட்காமலே ,உங்கள் பதிவில் இருந்து சிறுவன் பாலச்சந்திரன் படத்தினை எடுத்து எனது பதிவில் பயன்ப்படுத்தியுள்ளேன்,நன்றி!

உங்களது இவ்விடுகைக்கும் சுட்டி அளித்துள்ளேன்.

Post a Comment