Wednesday, March 19, 2014

ஜெயலலிதா என்ன செய்திருக்கவேண்டும்?

                       ஜெயலலிதா மத்திய அமைச்சரவைப் பட்டியலை அறிவிக்காததுதான் பாக்கி.
மற்ற அனைத்தையும் செய்துமுடித்துவிட்டார்.

தேர்தல் அறிக்கைகள், தேர்தல் பிரகடனங்கள், தேர்தல் பேச்சு எல்லாமே பிரதமர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் செய்வதுபோலவே செய்துகொண்டு வருகிறார். அவரது ஊழியர்கள் சென்னை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ‘பாரதப் பிரதமர் புரட்சித்தலைவி மாண்புமிகு முதல்வர்’ என்பதாகக் கலந்துகட்டி ஒரு வாசகத்தை எழுதி அத்துடன் அவருடைய பிரமாண்ட பிரமாண்ட முகங்களை வரைந்து தமிழ்நாடு முழுவதும் சுவர் ஓவியங்களாகவும் சுவரொட்டிகளாகவும், பிளெக்ஸ் பேனர்களாகவும் பரப்பி அதகளம் செய்துவருகின்றனர்.

மக்களை ஏமாற்றும் கம்பெனிகள் ஆயிரத்தெட்டு கவர்ச்சி வாசகங்களுடன் புதிய புதிய திட்டங்களை மக்கள் முன்பு வைக்கும். எங்கோ ஒரு ஓரத்தில் கண்ணுக்குத் தெரியாத பொடி எழுத்துக்களில் ‘யாவும் வரையறை செய்யப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது’ என்ற வாசகம் எங்காவது ஒளிந்துகொண்டிருக்கும். அம்மாதிரிக்கூட எந்த இடத்திலும் சின்னஞ்சிறியதாக ‘வருங்கால’ என்று ஒரு வார்த்தைக்கூட இல்லை. எடுத்த எடுப்பிலேயே ‘பிரதமர்’………………………… அவ்வளவுதான்!

‘தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சி  இப்படியெல்லாம் செய்வதற்கு உரிமை இல்லையா, அவர்கள் செய்யக்கூடாதா?’ என்று கேட்டால் –

‘இதுவும் செய்யலாம் இன்னமும் செய்யலாம், எதற்கும் ஒரு அளவு உண்டு  அந்த அளவுபடி செய்யலாம்’ என்பதுதான் பதில்.

‘எதுபற்றியும் கவலைப்படாமல் என்னுடைய பாணி இதுதான் நான் அப்படித்தான் பண்ணுவேன்’ என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தால் –

அவற்றுக்கான விமரிசனங்களையும், அவற்றுக்கான விளைவுகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.

வேறு வழியில்லை.

இத்தனைச் செய்தவர்கள் இன்னமும்கூட ஒன்று செய்யலாம்.

பேசாமல் ஓ.பன்னீர்செல்வத்தையோ பண்ருட்டி ராமச்சந்திரனையோ அழைத்து ‘எனக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவை’ என்றுசொல்லிப் பதவி கூட ஏற்றுக்கொண்டு விடலாம்.
எல்லாமே விருப்பம் போல் சரிவர நடந்துமுடிந்துவிட்டால் பிரச்சினை இல்லை. 

ஆசைப்பட்டதுபோல் எதுவும் நடைபெறவில்லையெனில் எல்லாமே காமெடிக் காட்சிகளாகப் போய்விடக்கூடிய ஆபத்து உண்டு.

அதுபற்றிப் பரவாயில்லை, அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றால் ‘இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய தொண்டர்கள் அவர்களாகவே ஆசைப்பட்டு என்னமோ செய்துவிட்டார்கள். நான் எப்போதும்போல் என்னுடைய வழியில் போய்க்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று ஏதோ சொல்லிச் சமாளித்துவிடலாம். ஆனால்-

ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுவடுகளின் கறைகள் அத்தனைச் சீக்கிரம் அழிந்துபோய்விடும் என்று சொல்வதற்கில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் நின்று நிதானித்துப் போவதுதான் அழகு.

வேகம் வேகம் வேகம் என்பது விளையாட்டுத் துறைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

மக்கள் நலன் சார்ந்த அரசுத்துறையிலும் ஆட்சித்துறையிலும் இத்தனை வேகத்துக்கு இடமில்லை.

எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி என்றைக்குக் கை கொடுத்திருக்கிறது? யாருக்குக் கை கொடுத்திருக்கிறது?

சில வேளைகளில் கை கொடுத்ததுபோல் தோன்றினாலும் இந்தப் பாணி எல்லாம் அரசு இயந்திரத்தை நடத்திச் செல்வதற்கு எப்போதும் துணை போய்விடாது.

சில உயர் அதிகாரிகளை மாற்றுவதற்கும், போர் நடக்கும் காலங்களில், சுனாமி போன்று மக்களை வருத்தும் இயற்கைப் பேரிடர் நிகழும் காலங்களிலும் மக்கள் விரும்பும் சில முடிவுகளை தடாலடியாக எடுத்துச் செயல்படுத்துவதிலும் வேண்டுமானால் கை கொடுக்கலாம். எல்லா சமயத்திற்கும் எல்லா விஷயங்களிலும் கை கொடுத்துவிடாது.

இன்னொரு ஆபத்தும் இருக்கிறது.

இம்மாதிரியான தடாலடி முடிவுகள் “வெற்றி பெற்றுவிட்டால் மட்டுமே” பெயரைப் பெற்றுத்தரக்கூடியவை.

தோல்வியில் முடிந்துவிட்டாலோ தீராப் பழியைத்தான் சுமத்திச்செல்லும்.

‘ஆய்ந்து தெளிந்து’ எடுக்கும் முடிவுகள்தாம் அரசு இயந்திரத்தைச் சிறப்பாக நடத்திச் செல்லுவதற்கான சீர்மிகு பாதை.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைதான ஏழு பேரை விடுவிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது. இப்படியொரு தீர்ப்பு ஒரு கோர்ட்டிலிருந்து அதுவும் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து வருகிறது எனில் அது எத்தனைப் பெரிய விஷயம்! அதனை எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கவேண்டும்?

என்ன செய்தார்?

அதே எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி!

மொத்தமே மூன்று நாட்கள்தாம் கெடு! அதற்குள் கிளியரன்ஸ் கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் நானே விடுதலை செய்துவிடுவேன் என்று எச்சரித்தார்.

என்ன ஆயிற்று?

ஈவு இரக்கம், தமிழகத்தின்பால் நல்லெண்ணம் இவையெல்லாம் கிஞ்சிற்றும் இல்லாத மத்திய அரசு வேண்டுமென்றே தடையுத்தரவுக்கு விண்ணப்பித்தது.

மறுபடியும் கோர்ட். வாதங்கள் பிரதி வாதங்கள் அப்புறம் நீதிபதிகளின் தீர்ப்பு என்று நாட்கள் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றன.

இடைப்பட்ட காலத்தில் இவரால் அவர்களை விடுதலை செய்ய முடிந்ததா என்றால் இல்லை.
அப்புறம் எங்கே போயிற்று அந்த மூன்று நாட்கள் கெடு?

என்ன ஆயிற்று வீராவேசம்?

யாரிடம் காட்டமுடிந்தது அந்த வெற்றுச்சவடாலை?

வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக்குதித்த ‘தெகிரியம்’ என்ன ஆயிற்று?

எதுவொன்றும்  வெற்றிகரமாக முடிந்தது என்றால்தான் வெற்றிக்கும் வீராவேசத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியும். அந்த வெற்றிக்கு “ஆப்பு” வைக்கப்பட்டுவிட்டது என்றால் என்ன பண்ணியும் பிரயோசனமில்லை.

“நான்  என்ன செய்யமுடியும்? நான் சரியாகத்தானே செய்தேன்? மத்திய அரசு குறுக்கே புகுந்து தடுத்துவிட்டது என்றால் மக்கள் கோபமெல்லாம் மத்திய அரசின் மீது தானே போகும்? மக்கள் மத்திய அரசைத்தான் கரித்துக் கொட்டுவார்கள். பழியையும் பாவத்தையும் ஏற்கவேண்டியது மத்திய அரசுதானே தவிர நான் அல்ல’- என்று நினைப்பாரேயானால் அந்த நினைப்பு தவறு என்று அர்த்தம்.

எந்த ஒன்றையும் சரிவரச் செய்து நல்ல ரிசல்ட்டைப் பெற்றுத்தருவதுதான் மாநில அரசின் கடமையே தவிர என்னத்தையோ செய்துவிட்டு வெற்றி பெற்றால் சொந்தம் கொண்டாட நினைப்பதுவும், தோல்வியடைந்துவிட்டால் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் தூக்கிப்போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்று நினைப்பதுவும் எப்போதுமே காரியத்துக்கு ஆகாது.

இம்மாதிரியான நேரங்களில் கர்நாடக அரசு என்ன செய்திருக்கும் என்பதை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

மக்களுடைய உணர்வுகளோடு நேரடித் தொடர்புள்ள எந்த விஷயமாயிருந்தாலும், நடைபெறுவது எந்த அரசாக இருந்தாலும் – அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, ஜனதாதள அரசாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா அரசாக இருந்தாலும் சரி பொதுப் பிரச்சினைகள் என்று வரும்போது உடனடியாக முதலமைச்சர் செய்யும் காரியம் சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதுதான்.

சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டி எல்லாரிடமும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைத்தான் அந்த அரசு செயல்படுத்தும்.

இப்படியொரு நிலைப்பாடு எடுக்கும்போது அந்த அரசாங்கத்தின் மீது எந்த ஒரு பழிச்சொல்லும் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, மத்திய அரசின் கைகளையே கட்டிப்போட்டுவிடும் உத்தியும் இதில் அடங்கியுள்ளது. எனவே, மாநில அரசு எடுத்த முடிவுக்கு மாறாக மத்திய அரசு எவ்வித காயையும் நகர்த்தாது. ‘இது சர்வகட்சி சார்பில் எடுக்கப்பட்ட முடிவு இந்த முடிவுக்கு எதிராக நாம் செயல்பட முடியாது. அப்படிச் செயல்பட்டால் மாநிலத்தில் நமக்கு ஆதரவு கிடைக்காது .நமக்கு ஆதரவு தர எவருமே இல்லை’ என்ற முடிவையும் அது மத்திய அரசின் மீது திணித்துவிடுகிறது.

காவிரி பிரச்சினை, கோகாக் பிரச்சினை, ராஜ்குமார் கடத்தல் விவகாரம் போன்ற பிரச்சினைகளில் எல்லாம் கர்நாடக அரசு நடந்துகொண்ட முறை இதுதான். உடனடியாக சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுவார்கள். எல்லாரும் கலந்துபேசி ஒரு முடிவு எடுப்பார்கள். அதனை நடைமுறைப்படுத்துவார்கள்.

ஏனெனில் எல்லாக் கட்சிகளுமே மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட கட்சிகள்தாம். எல்லாக் கட்சிகளுக்குமே மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தாம் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.

எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகம் என்பதால் நாம் ஆட்சியில் இருக்கிறோம் அவ்வளவுதானே தவிர, நாம் ஆட்சியில் இருப்பதால் மற்ற அனைத்துக்கட்சியினரையும் கிள்ளுக்கீரைகளாக நினைப்போம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர்கள் யாரையும் நாம் மனுஷப்பிறவிகளாகவே நினைக்கத் தேவையில்லை என்று ஒரு ஆளும்கட்சி நினைக்காது, நினைக்கக்கூடாது. 

மற்றவர்களையும் மதிக்கவேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்களால்தாம் சிறப்பான ஆட்சியை வழங்கமுடியும்.

இலங்கைப் பிரச்சினை, சேது சமுத்திரத்திட்டப் பிரச்சினை, கூடங்குளம் அணு உலைப் பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினைகள் தமிழகத்தில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளாகவே உள்ளன. இவையனைத்திலுமே இம்மாதிரியான ‘பாசிட்டிவ் அணுகுமுறையுடன்’ பிரச்சினைகளை அணுகி தீர்வுகளைக் கண்டறிந்தால் தமிழகத்தின் முன்னேற்றம் தங்குதடையின்றி இருக்கும்.

ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டிடத்தை நிராகரிப்பதுபோன்ற முடிவுகளைக்கூட தனியொரு நபர் எடுக்கிறார் எனும்போது ஜனநாயகம் என்ற சித்தாந்தத்திற்கே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.

மக்களின் கருத்து என்பது அவர்கள் சார்ந்துள்ள பிரதிநிதிகளிடமிருந்துதானே வரவேண்டும்? முக்கியமான விஷயங்களில் சட்டமன்றத்தில் நூற்றுப்பத்தின் கீழ் அறிக்கைப் படித்துவிட்டு உட்கார்ந்துவிடுவதன் மூலம் யாருமே தன்னுடைய முடிவுகளுக்கு எதிராக எந்தவிதமான கருத்தும் சொல்லக்கூடாது என்பதும், அப்படி எந்தவிதக் கருத்தையும் சொல்ல இடமளிப்பதில்லை என்பதும் நல்ல அரசின் இலக்கணமல்ல.


தனிப்பட்டவர்களின் அரசு என்பதைத்தாண்டி மக்களுக்கான அரசு என்ற நிலை வந்தால்தான் மற்ற மாநிலங்கள் பார்த்து வியக்கும்படியான மாநிலமாகத் தமிழகம் உருவாகும். தற்போதைய தமிழர்களின் கனவு இதுதான். 

26 comments :

Jayadev Das said...

அம்மா பிரதமராகலாம் என்ற ஆசை சோ தூண்டிவிட்ட ஒன்று!! இது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட கதைதான்.

தமிழகத்தில் சர்வ கட்சி கூட்டமா? அது சூர்யன் மேற்கில் உதித்தாலும் நடக்காது. அவர் கலந்தாலோசிப்பது எல்லாம் கூட இருக்கும் அம்மாவும், அவருக்குத் தெரிந்த ஜோசியர்களையும் மட்டுமே. அம்மா தலையில் உள்ள முடிக்கு தரும் மரியாதையைக் கூட பிற அரசியல் தலைவர்களுக்குத் தர மாட்டார். அவருடன் கூட்டணி வைக்கும்போதே ஈனம் மானத்தை பற்றி கவலைப் படக் கூடாது என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை.

தமிழகத்தில் இரண்டு அணு மின் நிலையங்கள், ஒரு நியூட்ரினோ ஆராய்ச்சி மையம், முல்லைப் பெரியாறு , பாலாறு மற்றும் காவிரி பிரச்சினைகளில் மறுக்கப் பட்ட நீதி, இலங்கையில் தமிழர் உயிரிழப்பு, தமிழகம் முழுவதும் ஓடும் சாராய ஆறால் மொத்த இளைஞர் சமுதாயமும்,வருங்கால சந்ததியும் நாசமாகப் போவது என தமிழர் சந்திக்கும் பிரச்சினை எல்லாவற்றிலும் கடைசியில் ஆப்பு தமிழனுக்குத்தான். இந்த பிரச்சினைகள் எழாமலேயே தடுத்திருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தும் தமிழனை பலிகடா ஆக்கிய போது தங்களது சுயநலத்துக்காக கை கட்டி வாய் பொத்தி வாழாதிருந்து வேடிக்கை பார்த்த பெருமை கழகங்களுக்கும் மத்திய அரசில் பங்கு வகித்த தமிழக பெருமான்களுக்கும் சேரும்.

Amudhavan said...

வாங்க ஜெயதேவ், இன்றைக்கும் மாநிலம் சார்ந்த ஒவ்வொரு முக்கிய விஷயத்திற்கும் கர்நாடக அரசு சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவு எடுப்பதால்தான் அது உடனடியாக செயலாக்கம் பெறுவதற்கான வடிவம் எடுக்கிறது. தமிழகத்தில்தான் குறிப்பிட்ட தலைவர்களின் ஈகோ விஷயமாகவே ஒவ்வொன்றும் அணுகப்படுகிறது....
உங்களின் கோபமான கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி.

குட்டிபிசாசு said...

அமுதவன் ஐயா,

நீங்கள் சொல்வதுபோல அந்த அம்மாவிற்கு ஓவர் ஆசை தான். ஏற்கனவே ஒருமுறை பாரதிய ஜனதா ஆட்சியை இழந்தபோது, இதேபோல பிரதமர் பதவிக்கு அப்ளிகேஷன் போட்டார். அப்போதாவது பரவாயில்லை, இப்போது தேர்தலுக்கு முன்பே.

அதிரடியாக எதையாவது ஜெ பாணி. அரசு ஊழியர்களை நீக்கியது, கலைஞரை உள்ளே தள்ளியது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

காவிரிப் பிரச்சனை, வீரப்பன் விவகாரத்துடன் ராஜிவ் கொலை வழக்கை ஒப்பிட முடியாது. சர்வகட்சிகூட்டத்தைக் கூட்டினாலும் வேறு என்ன செய்தாலும், ராஜீவ் கொலை விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற இயலாது. சோனியா அவ்வளவு லேசில் விடமாட்டார். தேர்தலை முன்னிட்டுகூட காங்கிரஸ் விட்டுத்தர முன்வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

bandhu said...

மூன்று நாட்களில் விடுதலை என்பது அரசியல் ரீதியாக திமுக / காங்கிரஸ் கூட்டணிக்கு வைக்கப்பட்ட செக்.. அது வெற்றி.. உண்மையிலேயே விடுதலை செய்ய அக்கறை எதுவும் யாருக்குமே கிடையாது. அந்த நேரத்தில், எந்த அணுகுமுறை அரசியல் ரீதியாக வெற்றியை தருமோ அதை செய்திருக்கிறார் ஜெ.

ஜெக்கு பிரதமர் கனவு இல்லை என்றே தோன்றுகிறது.. மற்றபடி.. தேவேகௌடா பிரதமர் ஆகலாம் என்றால் யாருமே பிரதமர் ஆகலாம்!

வருண் said...

The fact is..I dont think she cares about "Ezahth thamizharkaL" at all. Why should she? Especially when Cho ramamasamy is behind her "behind".

She used this opportunity to "become a Eazhath thaay" VERY WELL. Just like she used "Raviv assassination" in 1991. Yeah they went back to jail now. It does not matter what happened later. As for ezhath thamizharkaL and who support the ezha issue, she is the Ezhath thaay" now. Our brainy tamils will vote for her and she might win the election and she will move on to the "next level"!

தமிழர்கள், ஈழத்தமிழர்கள் தோல்வி அடைந்தாலும் பார்ப்பன அரசியல் வாதி வெற்றி பெற்றுள்ளார்.

***“நான் என்ன செய்யமுடியும்? நான் சரியாகத்தானே செய்தேன்? மத்திய அரசு குறுக்கே புகுந்து தடுத்துவிட்டது என்றால் மக்கள் கோபமெல்லாம் மத்திய அரசின் மீது தானே போகும்? மக்கள் மத்திய அரசைத்தான் கரித்துக் கொட்டுவார்கள். பழியையும் பாவத்தையும் ஏற்கவேண்டியது மத்திய அரசுதானே தவிர நான் அல்ல’- என்று நினைப்பாரேயானால் அந்த நினைப்பு தவறு என்று அர்த்தம்.***

Nobody is going to feel this way, Sir. She won the vote bank! Nobody can take that away from her!

Amudhavan said...

குட்டிபிசாசு said...

\\காவிரிப் பிரச்சனை, வீரப்பன் விவகாரத்துடன் ராஜிவ் கொலை வழக்கை ஒப்பிட முடியாது. சர்வகட்சிகூட்டத்தைக் கூட்டினாலும் வேறு என்ன செய்தாலும், ராஜீவ் கொலை விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற இயலாது. சோனியா அவ்வளவு லேசில் விடமாட்டார். தேர்தலை முன்னிட்டுகூட காங்கிரஸ் விட்டுத்தர முன்வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\\

கு.பி. நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மையென்றாலும் எந்தவித முக்கியப் பிரச்சினையென்றாலும் சர்வகட்சி கூட்டம் கூட்டுவது என்பது ஒரு மாநிலத்தின் ஒருமுகத் தன்மையை வெளிக்கொண்டுவருவது என்ற கருத்தாக்கத்தைத்தான் நான் இதன் மூலம் வலியுறுத்த நினைக்கிறேன். இந்தக் கருத்தாக்கம் சிலபேரின் மனதிலாவது பதிந்தது என்றால் இதையொட்டிய சிந்தனைகள் மலர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
அவலப்பட்டுப் போயிருக்கும் தமிழக அரசியல் நடைமுறையில் எதிர்காலத்திலாவது இம்மாதிரி சிந்தனைகள் வருவது சாத்தியமே.

Amudhavan said...

bandhu said...
\\அந்த நேரத்தில், எந்த அணுகுமுறை அரசியல் ரீதியாக வெற்றியை தருமோ அதை செய்திருக்கிறார் ஜெ.\\

ஜெ. செய்வதெல்லாம் வெற்றி என்று புரிந்துகொண்டால் இதுவும் வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாம். நடைமுறை சாத்தியமாகியிருக்கிறதா என்ற கோணத்தில் பிரச்சினையை அணுகுகிறவர்கள் ஒரு சிலராவது இருக்கத்தான் செய்வார்கள் இல்லையா? அவர்கள் கோணத்தில் பார்த்தால் அவர் அணுகுமுறை வெற்றிபெறவில்லையே.

Amudhavan said...

bandhu said...
\\தேவேகௌடா பிரதமர் ஆகலாம் என்றால் யாருமே பிரதமர் ஆகலாம்!\\
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டமன்றத்தைக் கலக்கியவர்தான் தேவேகௌடா. அந்தச் சமயத்தில் அப்போதைய முதல்வருக்குத் தூக்கமில்லாமல் செய்தவர் அவர். அதனால் அவர் வெறும் ஒரு டம்மிபீஸ் என்றெல்லாம் மதிப்பிட்டுவிடாதீர்கள். சட்டமன்ற உறுப்பினராகவும் மிகத்திறம்படச் செயலாற்றினார். முதல்வராகவும் அவர் செயல்பாடுகள் நன்றாகவே இருந்தன.

ஜாதி ரீதியாகவே ஓட்டுப்பெற்று பதவிக்கு வந்துவிடலாம் என்ற நிலைமை இருப்பதைப் புரிந்துகொண்ட பின்னர்
வெறும் ஜாதி அரசியல் நடத்திக்கொண்டு லாபமடைவது ஒன்றே குறிக்கோள் என்ற ரீதியில் தமது அரசியல் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டவர் அவர். பிரதமர் என்பதெல்லாம் அவருடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். பகுத்தறிவு வாதிகள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இந்த அதிர்ஷ்டமென்பது ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
அரசியல் என்றால் சற்று ஒதுங்கிக்கொள்வேன். அதுசரி உங்களின் ப்ரொபைல் அடையாளப் படத்தை மாற்றிவிட்டீர்களே?

Amudhavan said...

வருண் said...
\\The fact is..I dont think she cares about "Ezahth thamizharkaL" at all. Why should she?\\
ஆமாம் வருண். அவருக்கு எந்த அக்கறையும் கிடையாதுதான். அதிலும் உங்கள் why should she? என்ற கேள்வி பொருள் பொதிந்தது.
MGR VOTE BANK என்ற ஒன்று பெருவாரியாகவும் நிரந்தரமாகவும் இருக்கும்வரை தமிழக அரசியலில் விபரீதங்களுக்குக் குறைவிருக்கப்போவதில்லை.

Amudhavan said...

காரிகன் said...
\\உங்களின் ப்ரொபைல் அடையாளப் படத்தை மாற்றிவிட்டீர்களே?\\

இதெல்லாம் என்னுடைய சின்னப்பெண்ணின் டிபார்ட்மெண்ட். அவ்வப்போது இம்மாதிரி ஏதாவது செய்துகொண்டே இருப்பாள்.

Paramasivam said...

யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் தேவ கவுடா தான். அந்த பதவியின் மேன்மையை இறக்கியவரும் அவரே.

Amudhavan said...

நீங்கள் சொல்வது உண்மைதான். யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற எண்ணம் தேவேகௌடா காலத்திலிருந்துதான் தொடங்கியது. அந்தப் பதவியின் மேன்மையை மேலும் இறக்குவதற்குத்தான் இன்னொருவரும் முனைந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறாரே.

Umesh Srinivasan said...

தமிழகத்தில் சுயநலமிகள் மீண்டும் மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவது என்று ஒழிகிறதோ அன்றே இந்நாட்டுக்கு விமோசனம். வருமா? அதுவும் இந்தம்மையாரின் பிரதமர் கனவு போன்றதே.....

Amudhavan said...

தமிழகத்தில் திமுகவுக்கு நிரந்தர ஓட்டு வங்கி, அதிமுகவுக்கு எம்ஜிஆரின் நிரந்தர ஓட்டு வங்கி என்கின்ற நிலைமை இருக்கிறவரைக்கும் பெரிய மாறுதல்களை எதிர்பார்த்துப் பயனில்லை.

குறும்பன் said...

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைதான ஏழு பேரை விடுவிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டாளும் ஜெயலலிதாவுக்கு அந்த எண்ணமெணல்லாம் இல்லை. அவரது ஒரே எண்ணம் வாக்கு வங்கி. மூன்று நாட்களில் விடுவித்துவிடுவேன் என்று சொல்லி ஈழ ஆதரவாளர்களின் வாக்கை பெற்றுள்ளார். விடுதலைக்கு நாளாக ஆக அது பெருமளவில் அவருக்கு கைகொடுக்காது.
திமுகவும் அதிமுகவும் எதிர் எதிர் துருவங்கள் கட்சி தலைவர்களுக்கு எல்லா பேரும் தங்களுக்கு மட்டுமே வர வேண்டும் என்ற எண்ணம் எப்படி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவார்கள் அப்படியே கூட்டினாலும் இருவரும் இரு வேறு நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள்.
தமிழகத்தில் இருப்பது தனிப்பட்டவர்களின் ஆட்சி தான், மக்களின் ஆட்சி வேண்டும் என்பது இப்போதைக்கு நம் கனவு தான். கூடங்குளம் பற்றி இவர்கள் இப்போ அதிகம் பேசுவதில்லை, அதிகம் பேசினால் அப்பகுதி மக்களின் கோபத்திற்கு ஆளாகி வாக்குக்கு ஆப்பு ஆகி விடுமோ என்ற நிலை தான் இதற்கு காரணம்.

ஜோதிஜி said...

மூன்று நாட்களில் விடுதலை என்பது அரசியல் ரீதியாக திமுக / காங்கிரஸ் கூட்டணிக்கு வைக்கப்பட்ட செக்.. அது வெற்றி.. உண்மையிலேயே விடுதலை செய்ய அக்கறை எதுவும் யாருக்குமே கிடையாது. அந்த நேரத்தில், எந்த அணுகுமுறை அரசியல் ரீதியாக வெற்றியை தருமோ அதை செய்திருக்கிறார் ஜெ.

ஆசான் வயதில் உள்ள ஒருவர் என் எழுத்து பற்றி, என் நோக்கம் எப்படி இருக்க வேண்டும் என்ற முறையில் அறிவுரையாக ஒரு முறை சொன்னது இன்னமும் என் நினைவில் உள்ளது.

அரசியல் குறித்து எழுதும் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதல் நாள் மாலை நீ எழுதும் கருத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மாறி விடும். உன் உழைப்பு வீணாகி விடும். உன் மேல் கொண்ட நம்பகத்தன்மை போய்விடும் என்றார்.

ஜெ உருவாக்கிய பந்து சொன்னது போல மூவர் விடுதலை குறித்து நான் எழுதிய பதிவை படித்து விட்டு அன்று அழைத்தார். ( சென்னையில் உள்ள ஒரு பெரிய நபர்)

இதற்குப் பின்னால் உள்ள மாய்மாலங்கள் அப்போது தான் தெளிவாகப் புரிந்தது. ஏறக்குறைய பந்து சொன்னது போல.

அரசியல் பதிவில் கூட அதிக நாகரித்தை கடைபிடிப்பது நியாயமா? பாராட்டும் போது எந்த அளவுக்கு தெளிவான கொள்கையை கடைபிடிக்கின்றீர்களோ அதே போல ஒருவரின் கொள்ளை(கை)யைப் பற்றி எடுத்து வைக்கும் போது இன்னமும் கூட ஆணித்தரமாக சொல்லலாமே?

சில குப்பைகள் பல சமயம் காற்றில் பறந்து கோபுரத்தில் போய் உட்கார்ந்து விடும். மறுபடியும் காற்று அடிக்கும் போது மீண்டும் குப்பையோடு குப்பையாக மாறிவிடும்.

ஆனால் எப்போது காற்று திரும்ப அடிக்கும் என்று தான் தெரியவில்லை?

இரண்டு கழக ஆட்சிகளும் ஒழிந்து புதிய நபர்கள் உள்ளே வர வேண்டும் என்பதே என் நோக்கம்.

ஜோதிஜி said...

ஒவ்வொருவரும் மிக அழகாக தங்கள் விமர்சனத்தை எழுதி உள்ளனர். உங்கள் சார்பாக அவர்களுக்கு என் பாராட்டுரைகள்.

ஜோதிஜி said...

தங்களது சுயநலத்துக்காக கை கட்டி வாய் பொத்தி வாழாதிருந்து வேடிக்கை பார்த்த பெருமை கழகங்களுக்கும் மத்திய அரசில் பங்கு வகித்த திமுகவுக்கேச் சேரும்

இப்படித்தானே இந்த வரிகள் வர வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழகத்தில் ஓட்டுச் சாவடிக்கு வரும் , பெரும்பான்மை வாக்காளர்கள், இவை பற்றிச் சிந்திப்பதில்லை.
சிந்திப்போரில் பலருக்கு இராமனோ,இராவணனோ அவர்கள்
வாழ்வுக்கு இடைஞ்சலில்லை.
விடிவு இந்த ஜென்மத்தில் இல்லை.

Amudhavan said...

குறும்பன் said...
\\திமுகவும் அதிமுகவும் எதிர் எதிர் துருவங்கள் கட்சி தலைவர்களுக்கு எல்லா பேரும் தங்களுக்கு மட்டுமே வர வேண்டும் என்ற எண்ணம் எப்படி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவார்கள் அப்படியே கூட்டினாலும் இருவரும் இரு வேறு நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள்.
தமிழகத்தில் இருப்பது தனிப்பட்டவர்களின் ஆட்சி தான், மக்களின் ஆட்சி வேண்டும் என்பது இப்போதைக்கு நம் கனவு தான். \\

உங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுதான் குறும்பன். தமிழகத்தில் நடைபெறுவது தனிப்பட்டவர்களின் ஆட்சிதான். மக்கள் ஆட்சியோ ஜனநாயக ஆட்சியோ இல்லை என்பதையும் இந்த சர்வகட்சி கூட்டம் என்ற கான்செப்ட் எல்லாம் மற்ற மாநிலங்களில் எந்த அளவுக்கு வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் அது பரவலாக மக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் எந்த அளவுக்கு அவசியம் என்பதையும் சிலபேரின் மனதிலாவது பதியச் செய்துவிடலாம் என்பதன் நோக்கம்தான் என்னுடைய பதிவு. சில பத்திரிகையாளர்கள் இதனைப் படித்துவிட்டு 'சரியான கருத்தை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள்' என்றார்கள். இம்மாதிரியான சிந்தனைகள் இணையத்தில் புழங்குகிறவர்களுக்கும் தேவை என்பதாலேயே எழுதினேன். அதெல்லாம் தமிழகத்தில் நடக்காது என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பதில் பிரயோசனமில்லை.

\\கூடங்குளம் பற்றி இவர்கள் இப்போ அதிகம் பேசுவதில்லை, அதிகம் பேசினால் அப்பகுதி மக்களின் கோபத்திற்கு ஆளாகி வாக்குக்கு ஆப்பு ஆகி விடுமோ என்ற நிலை தான் இதற்கு காரணம். \\
கூடங்குளம் விஷயமாக கன்னியாகுமரியில் தேர்தலில் நிற்கும் உதயகுமாருக்கு எப்படி ஓட்டுக்கள் விழுகின்றன என்பதைப் பார்த்துக்கொண்டு- பிறகு இவர்கள் நிலைப்பாடுகள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.

Amudhavan said...

வாங்க ஜோதிஜி, தனுஷ்கோடி பயணமெல்லாம் முடித்து வந்துவிட்டீர்களா?
ஜெயதேவ் சொன்னதுபோல 'தங்களது சுயலாபத்துக்காக கைகட்டி வாய்பொத்தி வாளாவிருந்துவிட்ட திமுக'- என்ற கருத்தில் எனக்கும் ஒப்புதல்தான். திமுக இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதிலும், இப்படியொரு பரிதாபமான கதிக்கு அந்தக் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் வந்துவிட்டதற்கும் கலைஞரின் குடும்பப் பாசம், சுயநலம் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருப்பதையே நானும் சொல்வதிலிருந்து வேறுபடுகிறேன். இதற்கான காரணங்கள் மிகப்பெரிதாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். அதைப் பிறிதொரு சமயம் வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் அப்படியொரு நிலையிலிருந்து வெளிவந்திருக்கவேண்டிய நிலையையும் அவர்கள் எடுக்கவில்லை. அதற்கான துணிச்சலும் இல்லாமல் போய் எல்லாவற்றுக்குமே விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்துப்போனதில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதுவரைக்குமான பழிகளையும் பாவங்களையும் சுமக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள்.
அதற்காக இவர்களைத் தோற்கடித்து வந்தவர்கள் எது செய்தாலும் அது சரிதான் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாதே. அதனால் 'இதுமாதிரியான' இவர்களின் 'கொள்கை சார்ந்த' விஷயங்களை விட்டுவிட்டு இவர்களிடம் இருக்கும் வேறு குணநலன்களைப் பார்த்து ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யலாம் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

Amudhavan said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
\\தமிழகத்தில் ஓட்டுச் சாவடிக்கு வரும் , பெரும்பான்மை வாக்காளர்கள், இவை பற்றிச் சிந்திப்பதில்லை.
சிந்திப்போரில் பலருக்கு இராமனோ,இராவணனோ அவர்கள்
வாழ்வுக்கு இடைஞ்சலில்லை.
விடிவு இந்த ஜென்மத்தில் இல்லை. \\

யோகன், நான் வீடு கட்டிக்கொண்டிருந்த சமயத்தில்தான் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. பெங்களூரில் கட்டடத்தொழிலாளர்கள், தச்சுத்தொழிலாளர்கள் எல்லாரும் பெரும்பாலும் திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து வந்து வேலை செய்பவர்கள்தாம்.(போன ஆண்டிலிருந்து இவர்களின் எண்ணிக்கைப் பெருமளவு குறைந்திருக்கிறது. இந்த வேலைகள் எல்லாம் வடநாட்டு ஆசாமிகளுக்குப் போய்விட்டது) தேர்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் இங்கே வேலைகளை அப்படியே விட்டுவிட்டுத் தங்கள் கிராமங்களுக்குப் போய்விடுவார்கள். கலைஞர் கொடுத்த இலவசங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் பெற்றுக்கொண்டார்கள். டிவி பெட்டிகளையும் அரிசியையும் ஒசூருக்கு அடுத்து அத்திபெளேவிலும், சந்தாபுராவிலும், சில்க்போர்டிலும் கொண்டுவந்து விற்றார்கள். (இதனை வாங்கிக்கொள்ளவே பல ஏஜண்டுகள் உண்டு) 'இந்த முறை அம்மாவுக்குத்தான் ஓட்டு' என்றார்கள். "ஏன்?" என்றதற்கு "இவரே இந்தளவுக்குத் தந்திருக்காரே அப்ப அம்மா வந்தா இன்னும் நிறையத் தருமே" என்றார்கள்.
கொள்கை , கோட்பாடு, லஞ்சம் , ஊழல்......இதெல்லாமே ஊடகங்களுக்கும் சும்மா பத்திரிகைப் படித்துவிட்டு விவாதித்துக்கொண்டிருக்கும் நம்போன்றவர்களுக்கும்தாம். ஓட்டுக்கள் மூலம் 'களப்பணி ஆற்றுகின்றவர்களின்' கணக்குகளே வேறு.
தம்மை யார் ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றவர்கள் இந்த மக்கள்தாமே தவிர அறிவுஜீவிகள் அல்ல.
எனவே நீங்கள் சொன்னது உண்மைதான். விடிவுகாலம் என்பது இந்த ஜென்மத்தில் இல்லை.

வவ்வால் said...

அமுதவன் சார்,

கொஞ்ச நாளா ஒன்னும் நடவடிக்கையே காணோமேனு நினைச்சேன் , அடுத்தடுத்து ரெண்டுப்பதிவு இறக்கி "ஆக்‌ஷன் கிங்" ஆகிட்டிங்களே :-))

நாமளும் ஒரு அரசியல் பதிவு தான் தேத்திக்கிட்டிருக்கேன் , இம்முறை தேர்தல் "ரூட்டே" வேற மாதிரி இருக்கு, ஊரெல்லாம் சுத்தி ஆராயவே தேவையில்லை, இருக்க ஏரியாவில என்ன நடக்குதுனு வச்சு ஒரு கணிப்பு சொல்லலாம்னு பார்க்கிறேன்.

#//நான் என்ன செய்யமுடியும்? நான் சரியாகத்தானே செய்தேன்? மத்திய அரசு குறுக்கே புகுந்து தடுத்துவிட்டது என்றால் மக்கள் கோபமெல்லாம் மத்திய அரசின் மீது தானே போகும்? மக்கள் மத்திய அரசைத்தான் கரித்துக் கொட்டுவார்கள். பழியையும் பாவத்தையும் ஏற்கவேண்டியது மத்திய அரசுதானே தவிர நான் அல்ல’- என்று நினைப்பாரேயானால் அந்த நினைப்பு தவறு என்று அர்த்தம்.

எந்த ஒன்றையும் சரிவரச் செய்து நல்ல ரிசல்ட்டைப் பெற்றுத்தருவதுதான் மாநில அரசின் கடமையே தவிர என்னத்தையோ செய்துவிட்டு வெற்றி பெற்றால் சொந்தம் கொண்டாட நினைப்பதுவும், தோல்வியடைந்துவிட்டால் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் தூக்கிப்போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்று நினைப்பதுவும் எப்போதுமே காரியத்துக்கு ஆகாது.

இம்மாதிரியான நேரங்களில் கர்நாடக அரசு என்ன செய்திருக்கும் என்பதை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

மக்களுடைய உணர்வுகளோடு நேரடித் தொடர்புள்ள எந்த விஷயமாயிருந்தாலும், நடைபெறுவது எந்த அரசாக இருந்தாலும் – அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, ஜனதாதள அரசாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா அரசாக இருந்தாலும் சரி பொதுப் பிரச்சினைகள் என்று வரும்போது உடனடியாக முதலமைச்சர் செய்யும் காரியம் சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதுதான்.//

நீங்க இவ்வளவு அப்பாவியா அவ்வ்!

அம்மையார் எதுக்கு "இந்த பாய்ச்சல்" பாய்ஞ்சாங்கனு புரியாமல் " நல்ல அரசியல்வாதி" என்ன செய்திருக்க வேண்டும்னு சொல்லிட்டு இருக்கீங்களே அவ்வ்!

என்ன நினைத்து செய்தார்களோ அதை சரியாக செய்தார்கள்,

என்ன நடக்கும் என நினைத்தார்களோ அதுவும் சரியாக நடந்தது,

இனி என்ன நடக்கப்போகிறது என நினைக்கிறார்களோ அதுவும் சரியாக நடக்குமா?

யாரு கண்டா நடந்தாலும் நடக்கும் அவ்வ்!

உச்ச நீதி மன்றத்துல "தன்னிச்சையாக" கிடைத்த ஒரு தீர்ப்பின் பலனை "தனக்கு சாதகமாக" பயன்ப்படுத்திக்கொள்ள என்ன செய்வது என பார்த்தார்கள், வீராவேசமாக அறிவிப்பு விட்டு அள்ளிட்டாங்க, மற்றப்படி அம்மையாருக்கு "விடுதலை" செய்வதில் எல்லாம் ஆர்வமே இல்லை, ஏன் இத்தினி நாளா அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் தானே இருந்தாங்க?

விடுதலை ஆகலையே ,எனவே தேர்தலில் பலன் கொடுக்காதே என நினைப்பீர்களானால் ,அம்மையாரின் "உள்மன" கணக்கை புரிந்துக்கொள்ளவேயில்லை என்பேன்.

தேர்தலில் ஓட்டு வாங்கி தருமா ,தராதா என்ற கவலையே இல்லை, தேர்தலுக்கு முன்னால் "கூட்டணி" குழப்பத்தினை உருவாக்க உதவுச்சு,

காங்- தேமுதிக சேர முடியலை, மேலும் காங்க் - திமுக என மீண்டும் உறவாட கட்டைய போட்டாச்சு.

இத்தனை நாளா வக்கீல் வச்சு வாதாடிய வைக்கோவுக்கு கிடைக்க வேண்டிய "கிரெடிட்" ஐ இருட்டடிப்பு செய்தாயிற்று.

இத்தனை நாளாக "விடுதலை"க்கு எதுமே செய்யாம கடைசியில் "கோல்" அடிச்சு பேரு வாங்கியாச்சு, இனிமே , ஓட்டு கிடைச்சா "அது போனஸ்" இல்லைனா "மயிராப்போச்சுனு திட்டம் தெளிவாப்போட்டுத்தான் செயல்ப்படுறாங்க :-))

to be continued...

வவ்வால் said...

continue...

# அம்மையாரின் அரசியல் என்னவெனில் "தன்னை வலுவாக்கி" கொள்வதை விட எதிரியை பலவீனமாக்கி விடுவது :-))

இப்படி ஒரு அரசியலா என நினைக்காதிங்க , இப்படி செய்வது ரொம்ப பழைய டெக்னிக், லோக்கல் ரவுடிங்க கூட இதை செய்றாங்க. ஒருத்தனை போடனும்னு முடிவு செய்து விட்டு, அவனை நட்பா ,தண்ணியடிக்க கூப்பிட்டு போய் அவனுக்கு மட்டும் "ஃபுல்லா ஊத்திவிட்டு "கடைசில வெட்டுவாங்க ,ஏன் அதை சும்மாவே செய்யலாமே என்றால், நிதானமா இருக்கும் போது எப்படியும் வெட்டி சாய்க்க முடியும் என்றாலும், ஒரு வேளை அவன் பதிலுக்கு குறைந்த பட்சம் ஒருத்தனையாவது வெட்டிவிடும் வாய்ப்பு உண்டு, எனவே கொஞ்சம் கூட தன் பக்கம்ம் காயமில்லாமல் காரியம் முடிக்க ,தண்ணிய போட்டு விட்டு ,ஆளைப்போடுவாங்க :-))

ஒரே அறிக்கை மூலம் ,காங்கிரசை கிண்டி விட்டு எந்த தமிழக கட்சியுடனும் கூட்டு சேர முடியாமல் செய்தாச்சு, இதுல என்ன லாபம் எனலாம், தேமுதிக, மதிமுக போன்றவற்றை "திமுக" உடன் ஒட்ட வைக்கும் "பணப்பசை' காங்கிரசிடம் தானே இருக்கு :-))

தமிழகத்தில் பலவினமான பிஜேபியுடன் , வைக்கோ, வி.காந்த் போனதால் ஒட்டு முழுசா திரளாது.

காங், திமுக தனியாக நிற்பதால் அங்கும் திரளாது. போதாக்குறைக்கு கம்யூனிஸ்ட்களும் தனி ஆவர்த்தனம் என்பதால் எல்லாப்பக்கமும் ஓட்டு பிரியும் போது , தனக்கான ஓட்டு வங்கி சிதையாமல் வந்தாலே "வெற்றிக்கோட்டை" தொடலாம் என கணக்கு!

முடிவு வந்தால் கணக்கு சரியானு தெரியும் ,அப்படியே தப்பா போனாலும் , ஒன்னும் குடி முழுகிடாதுனு நினைக்கிறவங்களுக்கு என்ன கவலை?

இந்நாடாளுமன்றத்தேர்தல் மூலம் "அதிமுக"வின் உண்மையான பலம் என்னனு தெரிஞ்சிக்க "அம்மையார்" முடிவு செய்திருப்பாங்கனு நினைக்கிறேன். தோல்வி அடைந்தால் அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்கு " எப்படி கூட்டணி" உருவாக்கலாம்னு கணக்கு போட "அனுபவக்கொள்முதலாக" நாடாளுமன்ற இழப்பை எடுத்துக்கொள்ள கூடும்.

Amudhavan said...

எங்கே கொஞ்ச நாட்களாகப் பதிவுலகமெல்லாம் கலர்ஃபுல்லாக இல்லையே நம்ம வவ்வாலையும் அந்தப் பக்கம் இந்தப் பக்கமெல்லாம் காணோமேன்னு நினைச்சிருந்தேன். கரெக்டா வந்துட்டீங்க.
உங்க கணக்கெல்லாம் சொல்லியிருக்கீங்க. அதாவது அந்த அம்மையார் என்னென்ன தப்புக்கணக்கு போடும்னெல்லாம் அத்துப்படியா கரெக்டா சொல்லியிருக்கீங்க. இதுக்கு அடுத்த பதிவிலும் நான் 'என்னுடைய கணிப்புகளை'ச் சொல்லியிருக்கேன். அதுக்கும் சேர்த்து பதில் சொல்லும்போது பல விஷயங்கள் தெளிவாக வாய்ப்பிருக்கும்னு நினைக்கிறேன்.

Post a Comment