Wednesday, September 1, 2010

செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்-ஒரு விமர்சனம்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரை முழுவதுமாகப் படித்துவிட்டேன். அறுநூறு ரூபாய் விலைக்கு நல்ல கனமான புத்தகம்.கன்னியாகுமரியில் கடலில் நிற்கும் வள்ளுவர் இங்கே அட்டையில் நிற்கிறார். மலரைத் திறந்ததும்....வேறு யார்? கலைஞர்தான். எழுதுகின்ற போஸில்..உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மையநோக்க விளக்கப் பாடல்..அதுவேதான். “தமிள் மொளி தமிள் மொளி ...........தமிள் மொளியாஆஆஆஆஆஆஆம்ம்ம்ம்” என்று கமலஹாசன் மகள் கத்துகின்ற ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தொடங்குகின்ற பாடல். தமிழின் இலக்கிய மேடைகளில் சொல்லப்படும் எல்லா வரிகளும் வருகின்றன. “கலாஜ் என்று அழைக்கப்படும் ஓவியம் பார்த்திருக்கிறோமே, அழகழகான வண்ணப்படங்களையெல்லாம் வெட்டியெடுத்து ஒரே இடத்தில் ஒட்டி வேறொரு உருவ ஓவியமாகச் செய்வது.. அதுபோல் இது கலாஜ் கவிதை. கலைஞர் கவிதையிலும் புதுமை செய்திருக்கிறார்” என்று சுபவீ இதற்கு விளக்கமளித்தார். ஆனால் தமிழ்ப்படங்களைக் கிண்டலடித்து ‘தமிழ்ப்படம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் “ஓ மஹ ஸீயா ஓ மஹ ஸீயா நாக்குமுக்க நாக்கா ஓ ஷகலாகா ஓ ரண்டகா” என்றொரு பாட்டு வரும்.
இன்றைய தமிழ்ப்பாடல்களில் வரும் இம்மாதிரியான இலக்கிய நயம் ததும்பும் செந்தமிழ் வரிகளையெல்லாம் தொகுத்து ஒரு பாடல் செய்திருப்பார்கள். அந்தப் பாடல் எதற்காகவோ நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
இளமையான தமிழ்த்தாயை ஓவியர் மணியம் செல்வன் அழகாக வரைந்திருக்கிறார். அரசு சம்பிரதாயப்படி குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா காந்தி, கவர்னர், முதல்வர் எல்லாரும் வாழ்த்துச் செய்தி சொல்கிறார்கள். செம்மொழி அங்கீகாரம் கிடைத்த வரலாற்றைக் கலைஞர் சொல்லியிருக்கிறார்.
கலைஞரின் ஓ மஹ ஸீயா பாடலுக்கு – மன்னிக்கவும்-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பாடலுக்கு , கனிமொழி விளக்கம் தந்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து செம்மொழித் தமிழ் பற்றிய சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. பரிதிமாற் கலைஞர், கால்டுவெல், ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டு, வா.செ. குழந்தைசாமி, ஜி.ஜான் சாமுவேல், இரா.குமரவேலன், ம.ர.பொ.குருசாமி, ப.மருதநாயகம், ஆகியோரின் கட்டுரைகள் ஒரு மொழிக்குச் செம்மொழி தகுதி கிடைப்பதற்கான தகுதிகளையும் அந்தத் தகுதி தமிழுக்கு இருப்பதையும் சொல்லியிருக்கிறார்கள். செம்மொழி மாநாடு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமானதிலிருந்து பெரிதும் பேசப்பட்ட தமிழறிஞர் கா.சிவத்தம்பியின் ‘செம்மொழி வரையறைகளும் தமிழும்’ என்ற கட்டுரையும் இருக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் கட்டுரையை வாசிக்கும்போதுதான் இவருக்குத் தேவைக்கும் அதிகமான விளம்பரம் கொடுக்கப்பட்டதோ என்ற ஐயம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
இதற்கடுத்து கவிதைகளின் அணிவகுப்பு துவங்குகிறது. அப்துல் ரகுமான், வாலி, வைரமுத்து துவங்கி முப்பத்து நான்கு கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறார்கள். இன்றைய தமிழின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான அறிவுமதி தவிர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தவிர்க்கப்பட்டதற்கு ஒருவேளை செம்மொழி பற்றிய அவருடைய இந்தக் கவிதை காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
சென்ற இடமெல்லாம்
செருப்படி வாங்கி
உதடுகளில் குருதி கசிய
பேசப்படுவதால்
எம்மொழி
செம்மொழியாயிற்று.
மற்றபடி, இந்தக் கவிதைத் தொகுப்பில் சிறப்பான கவிதையாக எதையும் குறிப்பிட முடியவில்லை.
அடுத்தது கலையும் பண்பாடும் என்ற தலைப்பில் சில அரிய கட்டுரைகள் உள்ளன. கொங்குக் கலைவளம், நாடக உத்திகள், கொங்குநாட்டுச் செப்புத்திருமேனிகள், நாட்டுப்புறக் கலைகள், சங்க இலக்கியங்களில் விளையாட்டுக்கலை, நாடகக் கலையும் நிகழ்த்துகலையும் சிலப்பதிகாரமும், பழந்தமிழிசையும் இன்றைய இசையும், தமிழக ஆடற்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை என்று முயன்று அரிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட கட்டுரைகளாக இவற்றைச் சொல்லலாம்.
அடுத்தது தமிழும் சமயங்களும் பற்றிய கட்டுரைகள்... இதிலும் சில கட்டுரைகளில் முயன்று நல்ல தகவல்கள் தந்திருக்கிறார்கள். சைவம், வைணவம்.....இவற்றைத்தாண்டி, மடங்கள் வளர்த்த தமிழ் ,பௌத்தம், கிறிஸ்துவம், இசுலாமியம், சமணம் என்று வரிசையாக நிறைய கருத்தாக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. எஸ்.ஜெகத்ரட்சகன், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தவத்திரு ஊரன் அடிகளார் ஆகியோரின் கட்டுரைகள் நல்ல செறிவுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. தமிழுக்கு சமணத்தின் பங்குபற்றி முன்னாள் காவல்துறை அதிகாரி சு.ஸ்ரீபால் எழுதியுள்ள கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. கிறிஸ்தவத்தின் தமிழ்க்கொடை என்ற கட்டுரையில் முனைவர். சூ.இன்னாசி ஆச்சரியப்படும் அளவு தகவல்களைத் தந்திருக்கிறார். கட்டுரையை முடிக்கும்போது, “இவையெல்லாவற்றுக்கும் மேலாகக் கிறிஸ்தவர்களின் தமிழ்க்கொடை ஒன்று உள்ளது. அது வேறு எச்சமயத்திலும் காணப்படாத கொடையாகும். கிறிஸ்துவச் சமய வழிபாடுகளில் மட்டும்தான், தமிழகத்தில் எவ்விடத்தும், எக்கிறிஸ்துவப் பிரிவிடத்தும், எவ்வகை வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் , தாய்மொழியாம் தமிழிலேயே நடைபெறுவது என்பதாகும் எனலாம்” என்று முடிக்கிறார். முனைவர் க. நெடுஞ்செழியனின் ‘தமிழர் மெய்யியலில் இன்மை’ கட்டுரையும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ‘ஆரியர் வருகைக்கு முற்பட்டதும் வேதங்களுக்கு மாறானதுமான சிந்தனை மரபு ஒன்று உண்டு’ என்று கூறி மெய்யியல் தென்னக மரபிற்கு மட்டுமே உரிய அதிலும் தமிழர்களுக்கு மட்டுமே உரிய கோட்பாடு’ என்று குறிக்கிறார்.
‘பாட்டும் படமும்’ என்ற தலைப்பில் சங்கத்தமிழ் வரிகளுக்குப் பிரபல ஓவியர்கள் படங்கள் வரைந்திருக்கிறார்கள். எல்லாருமே பிரபல வாரப்பத்திரிகைகளில் படங்கள் வரைகிற ஓவியர்கள். எம்மாதிரி பாத்திரங்கள் என்றாலும் ஒரேமாதிரி படம் வரையும் ராமு இதில் கொஞ்சம் வித்தியாசமாக வரைந்திருக்கிறார்.
அடுத்தது இலக்கியக் கட்டுரைகள். வெ. இறையன்புவின் ‘கம்பரும் உடலசைவு மொழிகளும்’ கட்டுரை நிறைய தகவல்களைத் தருகிறது. தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசனோடு நின்றுவிடுவது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் கோட்பாடு.

இவர்கள் கண்ணோட்டத்தில் தமிழின் இலக்கிய வளர்ச்சி என்பது பாரதிதாசனோடு முடிந்து போய்விடுகிறது. அதனால் கண்ணதாசனின் பெயர் தவறிப்போய்க்கூட வந்துவிடக்கூடாது என்பதில் திராவிடக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதிகள் மிகுந்த கவனமாயிருப்பது இந்த நூலிலும் தெரிகிறது. ஆனாலும் அவர்களால் தவிர்க்க முடியவில்லை. கவிஞர் சக்திக்கனல், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், க.திருநாவுக்கரசு ஆகியோர் கண்ணதாசனைக் குறிப்பிடுகின்றனர். ‘கவிஞரின் திரைப்பாடல் ஒவ்வொன்றும் காவியம்’ என்கிறார் சிற்பி.

பிரபல பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு ஓரத்தில் கட்டம் கட்டி இடம் ஒதுக்குவதுபோல ஒரு ஓரத்தில் ‘வாழ்க’ என்று தலைப்பில் கவிஞரின் ‘தமிழனெங்கிருந்தானேனும் தமிழனே பிறப்பால் நெஞ்சால் அமிழ்தெனும் மொழியின் பிள்ளை’ என்ற கவிதையின் ஒரு அடியை மட்டும் போட்டு வைத்திருக்கின்றனர். இதனை இங்கே இவ்வளவு விரிவாக குறிக்கக் காரணம் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணர்வில் கலந்துவிட்ட ஒரு கவிஞனைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
‘இலக்கணமும் மொழியியலும்’, ‘தொல்லியல்’, ‘ஆட்சித்தமிழ்’, ‘அறிவியல் தமிழ்’ ஆகிய தலைப்புக்களில் சில நல்ல கட்டுரைகள் உள்ளன.

சிந்துவெளித் தமிழ் எழுத்துக்கள், தமிழர்களின் பழங்காசுகள், தமிழ் மாந்தர் தோற்றம், தமிழக நில ஆய்வுகள், அரிக்கமேடு அகழாய்வு, கடல் ஆய்வுகள், அயல்நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள், பழம்பானைக் குறியீடுகளும் தமிழர் பண்பாடுகளும் என்ற வசீகரமான தலைப்புகளில் நிறைய ஏக்கப்பெருமூச்சுக்கள்தாம் உள்ளன.
அறிவியல் தமிழ்- தலைப்பிலான கட்டுரைகளும் மேலோட்டமான உணர்வில் மாநாட்டு மலருக்கு சீக்கிரம் எழுதித்தரவேண்டுமே என்ற அவசரத்துக்கு எழுதப்பட்டன போன்றே தெரிகின்றன.
முனைவர்கள் கே.பி.அறவாணன், ஏ.ராமசாமி, டி.என். ராமச்சந்திரன், என்.அருள், ஏ.தட்சணாமூர்த்தி, எம்.சோலயன், அமுத பாண்டியன் மற்றும் திரு எம்.எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இப்படியான கட்டுரைகளை இம்மாதிரி மலர்களில் எழுதுவதில் பெரிய அளவில் பயன்கள் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆங்கில ஊடகங்களில் இவர்களுடைய கட்டுரைகள் தமிழைப் பற்றியவை-திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கவேண்டும். கன்னடத்தைச் சேர்ந்த மொழி அறிஞர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் எப்படியேனும் அங்குள்ள ஆங்கிலப்பத்திரிகைகளில் ஊடுருவி கர்நாடகத்தைப் பற்றியும் கன்னடத்தைப் பற்றியும் எழுதிக்குவிக்கிறார்கள். சரக்கு கொஞ்சமாயிருந்தாலும் அடுத்தவனிடம் சென்று சத்தம்போடுவதைத் தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்த நம்ம ஆள் என்ன செய்கிறான் என்றால் இவனும் ஒரு ஆங்கிலேயனைப்போல் வேடம் போட ஆரம்பித்துவிடுகிறான். தமிழாவது, மண்ணாங்கட்டியாவது.......நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான் கன்னடத்துக்கு ஏழு ஞானபீடப் பரிசுகள். தமிழுக்கு இரண்டே இரண்டு.
தமிழனுக்கு யாரைக்கொண்டாடுவது என்பதில் இடியாப்பச் சிக்கல். இந்த மலரையே எடுத்துக்கொண்டோமென்றால் இக்காலத்தமிழ் இலக்கியத்துக்கு என்ன இடம் என்று பார்த்தோமானால் ஒன்றுமே இல்லை. ‘படைப்பிலக்கியம்’ என்பது இவர்களுக்கு பராசக்தி, மனோகரா, ஓர் இரவு என்பதோடு நின்று விடுகிறது. கவிதைகளுக்கு வெறும் பாரதிதாசன். ஆயிற்றா? அச்சு ஊடகங்கள் வர ஆரம்பித்ததிலிருந்து தமிழை வீடுவீடாகக் கொண்டுசென்று வளர்த்தார்களே கல்கி, புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,நா.பா., ராகி.ரங்கராஜன், சாண்டில்யன், கோவி.மணிசேகரன் .........இவர்களுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விஞ்ஞானமும் ஆங்கிலமும் படித்த தலைமுறையைத் தன்னுடைய தமிழைப் படிக்கும் அடிமைகளாக மாற்றி வைத்திருந்தாரே சுஜாதா அந்த வித்தக எழுத்தாளனுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..........கோடிக்கணக்கான மக்களைத் தன்னுடைய தமிழைப் பாடவைத்துக்கொண்டிருக்கும் கண்ணதாசனுக்கும் தமிழுக்கும்கூட எந்த சம்பந்தமும் இல்லை.
இவர்களைப் பற்றிய தனித்தனியான கட்டுரைகள் மலரில் அணிவகுத்திருக்க வேண்டாமா?
தமிழ் என்றால் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆரம்பித்து அண்ணா, கலைஞர், பாரதிதாசனோடு முடிந்துவிடுகிறது என்று இலக்கியக்கூட்டங்களும் இலக்கிய மலர்களும் தயாரித்துக்கொண்டிருந்தால் தற்கால இலக்கியத்துக்குக் கொடுக்கப்படும் எந்தப் பரிசும் எந்த அங்கீகாரமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ன?
இப்போது புரிகிறதா வங்காளத்துக்கு ஐந்து ஞானபீடம், கன்னடத்துக்கு ஏழு, மற்ற பல மொழிகளுக்கு நான்கிற்கும் மேல்.

தமிழுக்கு மட்டும் இரண்டே இரண்டு. மாநாட்டைப்போலவே மலரையும் தற்காலப்படைப்பிலக்கியம் பற்றிய ஏதோ ஒரு கட்டுரையைப் பெயருக்குப்போட்டு மற்றபடி எந்த விவரமும் வந்துவிடாதபடிக்கு பத்திரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் சிவகுமாரும் சூர்யாவும் கபிலர் குறிப்பிட்ட நூறு மலர்களைக் கூட்டங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அந்த நூறு மலர்களின் அரிய புகைப்படங்களும் இந்த மலரில் இருக்கின்றன. நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
மொத்தத்தில் மலர் கனக்கிறது. கூடவே இதயமும்....................

2 comments :

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மலர் கனக்கிறது. கூடவே இதயமும்....................

Mathiseelan said...

தமிழுக்கு ஞானபீடம் கிடைக்கவேண்டிய அளவு ஏன் கிடைக்கவில்லை என்று எனக்கும் நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்தது. நீங்கள் சொல்லியிருக்கும் காரணம்தான் சரியானதாக இருக்கிறது. தமிழின் பழங்காலப்பெருமைகளை மட்டுமே பேசும் நாம் நிகழ்கால இலக்கியவாதிகளை சரியானமுறையில் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் செய்வதில்லை. சங்க இலக்கியம்-டு-பாரதிதாசன்வரை என்ற தளையிலிருந்து வெளிவந்தால்தான் படைப்பிலக்கியங்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் மற்றவரகள்முன் நிலைநிறுத்தச்செய்யும் செயலைச் செய்ய முடியும். மற்ற எழுத்தாளர்கள் சொல்லாத கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Post a Comment