Thursday, April 8, 2010

பி.எஸ். என்.எல்லின் பகல்கொள்ளை

தனியாரின் தொலைத்தொடர்புகளை விடவும் பி. எஸ்.என்.எல்லின் தொலைத்தொடர்புகளை பலபேர் உபயோகிக்கக் காரணம் இது அரசாங்க நிறுவனம் என்பதால் ஏமாற்றப்பட மாட்டோம் என்கின்ற நம்பிக்கைதான். தனியாரின் மற்ற மொபைல் தொடர்புகளைக் காட்டிலும் பல்வேறு வகையிலும் பல்வேறு விஷயங்களில் இது பின்தங்கியிருந்தபோதிலும் விடாப்பிடியாக பலபேர் பிஎஸ்என்எல்லை இந்த ஒரு காரணம் பற்றித்தான் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். 'அட்லீஸ்ட், தனியார் நிறுவனங்கள் ஏதேனும் முறைக்கேட்டில் ஈடுபட்டால் நம்மால் தட்டிக்கேட்க முடியாது. ஆனால் அரசாங்க நிறுவனம் என்பதால் நம்மால் கேள்விகேட்க முடியும்' என்ற இற்றுப்போன நம்பிக்கைதான் பிஎஸ்என்எல்லைப் பலபேர் இன்னமும் உபயோகிக்கக் காரணம். ஆனால் மக்களின் இந்த நம்பிக்கையில் கூடைக்கூடையாய் மண்ணைக் கொட்டிக் கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல்.
பிஎஸ்என்எல்லின் பிரீபெய்ட் திட்டத்தில் இருக்கும் எனக்கு மாதக்கணக்காய் அவ்வப்போது நிறுவனத்தின் புரமோஷனல் மெஸேஜஸ் வந்துகொண்டேயிருக்கும். மொபைல் போன் என்றால் பேசுவதற்கு மட்டுமே என்ற பழைய சித்தாந்த வகுப்பைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். மொபைலில் சந்திராயன் போகலாம் ஆடுபுலி ஆடலாம் பாத்திரம் வைத்து பாயசம் சமைக்கலாம் என்கின்ற அதிவேகத் தொழில் நுட்பம் எல்லாம் அறியாதவன். இந்த நிலையில் ஏதாவது செய்தி வந்தால் மொபைல் சத்தம் போடும் அதை எடுத்து அழுத்திப் பார்க்கும்போது அந்தச் செய்தியின் விரிவு வரும் இல்லையா? இங்கே அப்படி இல்லை. மொபைல் சத்தம் போடும். அதை எடுத்துப் பார்த்தால் திரை பூராவும் ஏதோ ஒரு செய்தி விழுந்து விரவியிருக்கும். என்னடா இது இழவு என்று பட்டனை அழுத்தினால் போதும். உடனே 'வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு மாதத்துக்கு எங்களுடைய மியூசிக் ஸ்டேஷனைக் கேட்கலாம். உங்கள் அக்கவுண்டிலிருந்து ரூ.இருபத்தொன்பது கழிக்கப்படுகிறது.நன்றி' என்று இருக்கும். போனால் போகிறது என்று விட்டுவிட்டால் இரண்டு நாட்கள் கழித்து இதே பாணியில் எப்போதோ வந்த ஒரு செய்தி திரையில் விழுந்து கிடக்கும். போனை எடுத்து ஆன் பண்ணியவுடன் இன்னொரு செய்தி 'வாழ்த்துக்கள். நடைபெற இருக்கும் கிரிக்கெட் ஸ்கோரை நீங்கள் கேட்கலாம்.உங்கள் அக்கவுண்டிலிருந்து ரூ.பத்தொன்பது கழிக்கப்படுகிறது நன்றி' என்று இப்படியே மூன்று அல்லது நான்கு பெயர்களில் மாதம் நூறு ரூபாய்க்காவது ஆட்டையைப் போட்டு முடித்துவிடுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த மெசேஜை அழிக்க எந்த பட்டனை அழுத்தினாலும் அது அழிபடாமல் மீண்டும் மீண்டும் அப்படியே வந்து பதிந்து அக்கவுண்டைக் காலி செய்துவிட்டுத்தான் ஓய்கிறார்போன்ற கொலைக்காரத் தொழில்நுட்பம் ஏதோவொன்றை அதில் புகுத்தியிருக்கிறார்கள். (ஒரேயொருமுறை கணிணி தொழில்நுட்ப விற்பன்ன இளைஞரொருவர் அந்த நேரத்தில் வீட்டிற்கு வர, அவர் என்னென்னமோ வித்தைகள் செய்து பணத்துக்கு சேதாரமின்றி அந்த மெசேஜை அழித்தார். ஒவ்வொரு முறையும் அவரைத்தேடி எங்கே போவது?)
சில மாதங்கள் சில நூறுரூபாய்கள் இழந்த பின்னர் கஸ்டமர் கேரில் கேட்டபோது "நீங்கள் இதுபற்றி எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் " என்றார்கள். கடிதம் எழுதிக்கொண்டு போனபோது இங்கே போங்கள் தலைமையகம் போங்கள் என்று இழுத்தடித்தார்கள். தலைமையகம் போனபோது சம்பந்தப்பட்ட செய்திகள் எங்கிருந்து வந்தன என்ற போன் நம்பர்கள் இருந்தால்தான் இதை நிறுத்த முடியும். போன் நம்பர்களைக் கொண்டு வாருங்கள் என்றார்கள். நிறுவனப்பெயர்களைச் சொல்லி இந்தப் பாவிகள்தாம் அதனைச் செய்தார்கள் என்று சொன்னபோது "அப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியாது சார்" என்ற பதில் வந்தது. "சரி, பணப்பிடித்தம் என்பது நம்முடைய ஒப்புதல் பெற்றபிறகுதானே செய்ய வேண்டும். அவர்களாகவே ஒரு செய்தி அனுப்பி அதைத் திறந்து பார்த்தாலேயே பணப்பிடித்தம் என்பதும், அந்தச் செய்தி வேறு வகையில் அழிக்க முடியாத மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் உரிமை மீறல் இல்லையா? ஒரு அரசாங்க நிறுவனம் இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறது?” என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. செல் நம்பரைக்குறித்துக்கொண்டு அனுப்பி வைத்தார்கள்.
ஒரு பதினைந்து நாட்களுக்குப்பிறகு மீண்டும் அதே கதை ஆரம்பித்தது.
இப்போது மறுபடியும் தொடர்பு கொண்டதற்கு கஸ்டமர் கேரின் ஏதோ ஒரு நம்பரைத் தந்து அதில் உங்கள் புகாரைப் பதிவு செய்யுங்கள் என்றார்கள். பதிவு செய்ததற்கு 1909 என்ற எண்ணிலிருந்து ஒரு தகவல் வந்தது. 'உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு எண் விரைவில் வழங்கப்படும்' என்று ஒரு தகவல் வந்தது. நாட்கள் ஓடினதுதான் மிச்சம். பதிவு எண்ணும் வரவில்லை. ஒரு மண்ணும் வரவில்லை. திரும்ப அதே பழைய, தொட்டவுடன் வாழ்த்துக்கள் சொல்லி பணத்தைப் பிடுங்கும் பழைய பாணிச்செய்தி. கேட்டால் சார் அம்மாதிரி செய்தி வந்தால் நீங்கள் ரிசீவிங் பட்டனை அழுத்தாதீர்கள். அதை அழித்து விடுங்கள்' என்று போகாத ஊருக்கு வழி சொல்கிறார்கள்.
நான் பெங்களூரில் இருக்கிறேன். கர்நாடகத்துக்குத்தான் இந்தக் கொடுமையா இல்லை எல்லா ஊரிலுமா என்று தெரியவில்லை.
என்ன செய்யலாம் என்பதை நண்பர்களும் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் சொன்னால் தேவலை.