Showing posts with label புலிக்குட்டிகள். Show all posts
Showing posts with label புலிக்குட்டிகள். Show all posts

Monday, March 18, 2013

ஜெயலலிதாவும் சமஸ்கிருதப் புலிக்குட்டிகளும்.



தமிழக முதல்வர் ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று அங்குள்ள ஏழு புலிக்குட்டிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார்.

அர்ஜூனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று அவர் பாணியில் எல்லாப் புலிக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டியிருக்கிறார் அவர். தப்பித்தவறி ஒரேயொரு புலிக்குட்டிக்காவது தமிழில் பெயர் சூட்டியிருக்கவேண்டாமா? இத்தனைக்கும் அந்தப் புலிகள் அத்தனையும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கிடையில்தானே வாழப்போகின்றன…..! அதைப் பராமரிக்கப்போவதும் தமிழ் ஊழியர்கள்தானே? பின்னே எதற்காக அத்தனைப் புலிகளுக்கும் சமஸ்கிருதப்பெயர்கள்?

வேறொன்றுமில்லை அவர் மனதிலே என்ன இருக்கிறதோ அது வெளியில் வந்திருக்கிறது. உடனே “வீடுகளில் இம்மாதிரி பெயர்கள் வைப்பதில்லையா? நீரஜா என்றும் சதீஷ் என்றும் ஷைலஜா என்றும் பெயர்கள் வைப்பதில்லையா? நீ என்ன தூய தமிழ் ஆதரவாளனா நீ எழுதும் பதிவுகளில் தூய தமிழ்தான் எழுதுகிறாயா, வடமொழி கலந்து எழுதுவதில்லையா?’  என்றெல்லாம் மொக்கை கமெண்டுகளுடன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். தூய தமிழ் எனக்குப் பிடிக்குமே தவிர நான் தூய தமிழில் “மட்டுமே” எழுதுகிறவன் அல்ல. ஆனால் தனிப்பட்ட எனக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் வித்தியாசம் உண்டு. நான் செய்யும் தனிப்பட்ட செய்கைக்கும் ஒரு மாநில முதல்வரின் செயல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரு மாநிலத்தின் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழியைக் காப்பாற்றுகின்ற, மேலெடுத்துச் செல்லுகின்ற பொறுப்பும் கடமையும் ஒரு முதல்வருக்கு உண்டு.

இந்த விஷயத்தில் இதே இடத்தில் கலைஞர் கருணாநிதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்கிற எண்ணத்தைப் புறந்தள்ள இயலவில்லை. ஒரு புலிக்குட்டிக்கு நிச்சயம் பழக்கதோஷத்தில் ‘உதயசூரியன்’ என்றோ அல்லது சூரியன் என்றோ பெயர் வைத்திருப்பார். மற்ற புலிகளுக்கு எல்லாம் மாதவி, பரிதி, எழில், பாண்டியன், செங்குட்டுவன்…என்று இப்படி நிச்சயம் தமிழ்ப்பெயர்களாகத்தான் வைத்திருப்பார். – இந்த எண்ணம் இந்த சிந்தனை அலைகள் நிச்சயம் கலைஞரிடம் இருக்கின்றன. இதுபோன்ற உணர்வுகளோ ‘தமிழ்ச்சிந்தனைகளோ’ ஜெயலலிதாவிடம் இல்லை.

இந்தக் கருத்துக்களைப் பொதுத்தளத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று பார்த்தோமானால் வைக்கக்கூடாது என்றுதான் நிறையப்பேர் அல்லது ஒரு சாரார் விரும்புகிறார்கள்.  ஜெயலலிதா என்றால் எதுவும் விமரிசனமே செய்யக்கூடாது. கருணாநிதி என்றால் எந்த விதத்திலும் அவரை ஏற்றுக்கொண்டதாகவே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய கொள்கை.

கருணாநிதி என்னென்ன தவறுகள் செய்திருக்கிறார் என்பதைச் சொல்லிவிட்டு இப்போது சில சரியான முடிவுகளை எடுத்துச் செயல்பட ஆரம்பித்திருக்கிறார் இது சரியான பாதையாகத்தான் இருக்கிறது என்று எழுதினாலும் அதனை மிக நிர்தாட்சண்யமாக மறுக்கிறார்கள். முரட்டுத்தனமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

‘வைகோவும் சீமானும் இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்?’ என்கிற என்னுடைய முந்தைய பதிவில் கருணாநிதி செய்த தவறுகளை வரிசையாகச் சொல்லியிருந்தேன். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் இறுதி நாட்களில் அவர் நடந்துகொண்ட முறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதைச் சொல்லிவிட்டு –

நடந்து முடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடு செய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இதையே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.
நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவதென்பது தவிர்க்க முடியாத ஒன்று –

என்பதைச் சொல்லி மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்ட இயக்கங்கள் இந்த விஷயங்களை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே சில நிகழ்வுகளை நிகழ்த்த முடியும். கருணாநிதி அன்றைக்குத் தவறு செய்துவிட்டார் என்பதை மட்டுமே சொல்லி அந்தப் பெரிய இயக்கத்தைப் புறக்கணிக்கவேண்டாம். என்று என்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தேன்.
அதில் இப்படியும் எழுதியிருந்தேன்-

‘அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத்தமிழர்களிடம் அவர் சேர்த்து வைத்திருந்த புகழ் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்கமுடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்.’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.
இவ்வளவும் சொல்லிவிட்டு  அவர் தற்சமயம் மேற்கொண்டுள்ள இப்போதைய செயல்கள் பற்றிக்குறிப்பிட்டு ‘இந்த முறை இவ்வளவு தீவிரமான நிலைப்பாட்டை எடுத்த பின்னர் வேறு காரணங்களுக்காக அவர் மாறுவார் என்று சொல்வதற்கில்லை. அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது’ என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனாலும் இணைய நண்பர்களுக்கு ஒப்புதல் இல்லை. பெயரில்லாமல் வந்த ஒரு நண்பர் ‘You are a complete DMK supporter. I can”t expect neutral views from your writing. Good luck and Good bye” என்று எழுதியிருந்தார்.

திரு அழகர் ராஜா கோவிந்த் என்ற நண்பர் You are a good writer but its not enough for this generation என்றிருக்கிறார்.

ஆரம்பத்தில் அந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களில் வந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லிவந்த நான் ஒரு கட்டத்தில் பதில் சொல்வதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் என்னுடைய கருத்துக்களுக்கு வேண்டுமானால் நான் அரண் அமைத்துக்கொள்ள முடியுமே தவிர கலைஞரைக் காப்பாற்றுவது என்னுடைய வேலை அல்ல; ஒவ்வொருவரும் வண்டி வண்டியாய் அவர் மீது குரோதம் வைத்துக்கொண்டு அதனை வந்து இங்கே கருத்துக்களாகக் கொட்டும்போது  அவருடைய ஆதரவாளர்கள்தாம் அவர்களுடைய தலைவரை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும். நான் என்னுடைய கருத்துக்களை எழுதிவிட்டேனே தவிர அவரை defend பண்ணுவது என்னுடைய வேலை அல்ல.

சில நண்பர்கள் மிக ஆபாசமாகவே கருத்துச் சொல்லியிருந்தார்கள். ஆபாசங்களுக்காக அவற்றை வெளியிடவில்லை.

ஆனால் நான் என்ன சொல்லவந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு நிறையப்பேர் பாராட்டி எழுதியிருந்தார்கள். திரு ராஜநடராஜன், திரு வவ்வால் உட்பட பலர் சரியான தீர்வுகளைச் சொல்லியிருந்தார்கள்.

குறிப்பாக பதிவர் செந்தழல் ரவி சரியான கருத்துக்களை முன்வைத்திருந்தார். ‘திடீர் குபீர் தமிழ் இன உணர்வாளர்களுக்கும் அவர்களின் உணர்ச்சிமயமான வார்த்தை மாய்மாலங்களுக்கு மயங்கி அரை மயக்கத்தில் இருந்து கருத்திடுபவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இதைத்தான்……………’ என்று ஆரம்பித்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சிந்தனைக்கு மட்டுமல்ல அதைத்தொடர்ந்த செயல்பாட்டுக்கும் உரியன.

மற்றொரு பெயரில்லாத நண்பர் பிரபாரனின் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய கருணாநிதியின் செயலைக் குறிப்பிட்டு மிகக் கோபமான வார்த்தைகளில் கருத்து தெரிவித்திருந்தார். பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பியனுப்பிய சம்பவத்தைப்பற்றியெல்லாம் ஏற்கேனவே வேறு பதிவுகளில் எழுதிவிட்டதனால் இங்கே குறிப்பிடவில்லை. அவ்வளவுதான்.

ஒன்றுமட்டும் புரிகிறது.

இணையத்தில் ‘நியாய அநியாயங்களுக்கென்று’ தனியான டிக்ஷனரி இருக்கிறது. நடுநிலை என்பதற்கும் தனியான அளவுகோல்கள் உள்ளன.

இங்கே நியாயம் என்பது பிரபலத்துக்குப் பிரபலம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிரபலத்துக்கும் குழுக்கள் இருக்கின்றன. சிலபேருக்கு நிறைய இருக்கிறார்கள். சிலருக்கு மிகக் குறைவாக இருக்கிறார்கள்.

ரஜினியைப் பற்றி இங்கே பேசக்கூடாது. விமரிசிக்கக்கூடாது.

இசையமைப்பில் ஏ.ஆர்.ரகுமான் உலகமெலாம் புகழ்பெற்று ஆஸ்கார் வாங்கினபோதிலும் இசை என்றால் இளையராஜாதான் என்பதற்கு மாற்றாக இங்கே பேசக்கூடாது.

தமிழ்ப்பட இயக்குநர்கள் என்றால் ‘கணக்கு’ மணிரத்தினத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஸ்ரீதர் பீம்சிங் பாலச்சந்தர் எல்லாம் இயக்குநர்களே இல்லை. வேண்டுமானால் ரொம்ப யோசனைக்குப் பின்னர் பாரதிராஜாவை ஒரு ஓரத்தில் சேர்த்துக்கொள்வோம்.

அதேபோல ஒளிப்பதிவாளர்கள் என்றால் ‘கணக்கு’ ஸ்ரீராமிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. வின்சென்ட்டெல்லாம் இங்கே பட்டியலிலேயே இல்லை. (வின்சென்ட் என்பது யார்? கடலை வியாபாரம் செய்துகொண்டிருந்தாரா?)

தமிழ் எழுத்தாளர்கள் மூன்றுபேர்தான். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன். வேண்டுமானால் ஒரு ஓரத்தில் சுந்தர ராமசாமியைச் சேர்த்துக்கொள்ளலாம்.(அதுகூட காலச்சுவடு பத்திரிகை வந்துகொண்டிருப்பதால்தான். இதில் இன்னொரு வேடிக்கை, காலச்சுவடுக்கென்று ஒரு ‘கணக்கு’ இருக்கிறது. அதன்படி தமிழின் படைப்பாளிகள் மூன்று பேர்தாம். 1) பாரதி, 2)புதுமைப்பித்தன், 3)சுந்தர ராமசாமி)

இதுபோல ஒவ்வொரு துறையிலும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தாண்டித்தான் இங்கே கருத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது வெளிவரும் பத்திரிகைகளும் இதுபோல்தான் இருக்கின்றன. காரணம் என்னவென்றால் இன்றைய இளைஞன் தான்எங்கிருந்து பயணம் தொடங்குகிறானோ அங்கிருந்து மட்டுமே எல்லாவற்றிலும் தன்னுடைய கணக்கைத் தொடங்குகிறான். அதற்கு முந்தைய சாதனையாளர்களை அவன் கணக்கிலேயே வைத்துக்கொள்வதில்லை. இது அவனுடைய ரசனைக்கு வேண்டுமானால் சரியானதாய் இருக்கலாம். ஆனால் வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் இது என்பது அவனுக்குப் புரிவதே இல்லை.

சாதாரணமாகத் தெரிந்திருக்கவேண்டிய குறைந்தபட்ச (அறிவு என்பது பெரிய வார்த்தை) குறிப்புகள்கூட அவனுக்குத் தெரிவதில்லை என்பதை இன்றைய இளைஞர்களிடம் நான்கைந்து பொதுவான கேள்விகள் கேட்டாலேயே தெரிந்துவிடுகிறது. டிவியில் வரும் சில நிகழ்ச்சிகள் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன. பியூசி படித்த ஒரு மாணவனுக்கு அண்ணா உட்பட நான்கு தலைவர்களின் பெயரைப்போட்டு அதில் காஞ்சிபுரம் யார் பிறந்த ஊர்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்த இளைஞனுக்கு பதில் தெரியவில்லை. கடைசியில் அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம் என்ற விவரத்தைச் சொல்லி அண்ணா யார் தெரியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டபோது “அவர் பேரைக் கேட்டிருக்கேன். யார்னு தெரியாது” என்று அந்த இளைஞன் சொன்னதை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நிறையப்பேர் பார்த்திருக்கக்கூடும்.

 இப்போது வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலும் சரி, இமான் அண்ணாச்சி(அந்த நிகழ்ச்சியின் தரம் எப்படி என்பது வேறு விஷயம்) நடத்தும் நிகழ்ச்சிகளிலும் சரி நம்முடைய தமிழ் இளைஞர்களின் பொது அறிவுக்குறிப்புக்கள் மெய்சிலிர்க்கச் செய்கிறது. பொதுவாக இத்தகைய இளைஞர்கள்தாம் இணையங்களில் வலம்வரப்போகிறார்கள். முந்தைய தலைமுறைக்கு இணையத்துடன் தொடர்பு கிடையாது. அப்படியே இருந்தாலும் ‘படிப்பதோடு’ நின்றுவிடுகிறார்கள். இணையத்தில் ‘எழுதும்’ ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு சதவிகிதம் இருந்தாலேயே அதிகம். இதனால்தான் இணையம் பயன்படுத்தும் நிறையப்பேருக்கு சிவாஜிகணேசன் என்றால் அவர் வெறும் ஓவர் ஆக்டிங் செய்த ஒரு நடிகர்; கத்திக்கத்திப் பேசிய ஒரு நடிகர் என்பதற்கு மேல் ஒன்றும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை.

இவர்கள் என்ன கருத்து வைத்திருக்கிறார்களோ அதனை ஒட்டியே எல்லாரும் எழுதவேண்டும். அதனை ஒட்டியே பேச வேண்டும் அதனை ஒட்டியே செயல்பட வேண்டும் என்ற கருத்து மட்டும்தான் இவர்களிடம் இருக்கிறது.

தமிழ் வலைப்பூக்களில் திரும்பத்திரும்ப எழுதப்படும் ஒரு கருத்து ‘இசை என்றால் இளையராஜா’ என்பது. தமிழ்த்திரை இசை என்பதே இளையராஜாவிலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது என்றே இவர்களில் இன்னமும் பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. நான் ஒரேயொரு கேள்வியைத்தான் முன்வைத்தேன். அந்தக் கேள்விக்கு இதுவரையிலும் இளையராஜாவின் ரசிகர்கள் யாருமே உரிய பதிலைச் சொல்லவேயில்லை என்பதுதான் பரிதாபம்

நான் வைத்த கேள்வி இதுதான்.
1) 
  தமிழில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள்
2)   பி.சுசீலாவின் பாடல்கள்
3)   கண்ணதாசன் பாடல்கள்
4)   சிவாஜிகணேசன் பாடல்கள்
5)   எம்ஜிஆர் பாடல்கள்
6)   சந்திரபாபு பாடல்கள்
7)   பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள்
8)   எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள்
9)   சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
10)  டி.ஆர்.மகாலிங்கம் பாடல்கள்
11)  வாலி பாடல்கள் ……………………இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் ………இப்படியெல்லாம் வகைப் பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியே’ இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா?

என்ன பேசுகிறீர்கள்?

இவர்களிலெல்லாம் எங்கிருந்து இளையராஜாவையும் ரகுமானையும் தேடுவது?
இவைதாம் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழன் நேசித்தும் சுவாசித்தும்வரும் பாடல்கள். சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசன், டிஎம்எஸ், பி.சுசீலா இல்லாமல் எந்தப் பாடல் தமிழ்ப்பாடல்?

பேசுவதற்கு வாய்கூச வேண்டாமா?

இளைஞர்களுக்கு இந்தப் பாடல்களில் பரிச்சயம் இல்லாவிட்டால் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது எங்களுக்கு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுங்கள். தவறான கருத்துக்களைப் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருக்க முனையாதீர்கள்’
-  
  இதுதான் நான் வைத்த கருத்து, கேள்வி. 
-     
-    இதுவரையிலும் யாரிடமிருந்தும் முறையான பதில் வரவில்லை.

கருத்து எழுதும் பெரும்பாலான இளைஞர்கள் எந்த சிந்தனையோட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவேண்டித்தான் இந்த உதாரணத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.

நண்பர் மணிசேகர் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘உலகத்திலே ஒற்றுமைப் படுத்த முடியாத இனம் தமிழினம்தானா? எத்தனை வேறுபாடுகள் தலைவர்களிடையில்……….?’என்று தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார் அவர்.

தலைவர்களை விடுங்கள். இங்கே கருத்துத் தெரிவிப்பவர்களில்தாம் எத்தனை வகை தெரியுமா?

கருணாநிதியை எதிர்ப்பவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள், அவரை ஆதரிக்கிறவர்கள், வைகோவை ஆதரிக்கிறவர்கள், சீமானை ஆதரிக்கிறவர்கள், இருவரையும் எதிர்ப்பவர்கள், பிரபாகரனை ஆதரிப்பவர்கள், பிரபாகரனை எதிர்ப்பவர்கள் மேதகு தேசியத்தலைவர் என்று சொல்கிறவர்கள், பிரபாகரனால்தான் இத்தனைப் பெரிய அழிவு பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று சொல்கிறவர்கள்………………எங்கிருந்துவரும் கருத்தொற்றுமை? 


ஒரு விஷயம் தெரியுமா?

ஒரு ஓட்டலுக்கு ஐந்தாறு நண்பர்கள் செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். காபியும் டிபனும் தேவை. ஆறு பிளேட் இட்லி. ஆறு காபி. என்று சொல்லிவிடமுடிகிறதா?

ஒருத்தருக்குப் பொங்கல், இன்னொருத்தருக்கு இட்லி வடை, ஒருத்தருக்கு தோசை, மற்றவருக்குப் பூரி கிழங்கு, வேறொருவருக்கு மசால் தோசை, இன்னொருத்தருக்கு வெறும் இட்லி. இதாவது போகட்டும். அவரவருக்கு வேண்டியதை தேர்வு செய்துகொள்ளலாம்.

இப்போது காபி முறை. வெறுமனே ஆறு காபி என்று சொல்லமுடிகிறதா என்று பாருங்கள்.

ஒருத்தருக்கு சர்க்கரை இல்லாமல். இன்னொருத்தருக்கு பாதி சர்க்கரை. ஒருத்தருக்கு டிகாக்ஷன் அதிகமாய். மற்றவருக்கு கொஞ்சம் லைட்டாய். இன்னொருத்தருக்கு ஒன் பை டூ. அடுத்தவருக்கு பாலே சேர்க்காமல்……….. ஒரு சாதாரண காபியிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை எங்கிருந்து வரப்போகிறது?

காபிக்கும் மசால்தோசைக்கும் வராவிட்டால் போகிறது. இனப்படுகொலை நடக்கிறது என்னும்போது அதனைத் தடுத்துநிறுத்த எல்லாரும் ஒன்று சேரும் விஷயத்தில்கூடவா கருத்தொற்றுமை ஏற்படக்கூடாது? என்பதுதான் நமது ஆதங்கம்.

நான் ஏற்கெனவே சொல்லியிருப்பதுபோல் இலங்கை விவகாரத்தில் தவறுசெய்யாத தலைவர்கள் கிடையாது. ஒரு பிரபல கவிஞர் சொன்னதுபோல் “ஈழ விவகாரத்தில் எல்லாருடைய கைகளிலும் கறை படிந்துதான் இருக்கிறது”

ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதுபோல் ‘பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என்று சொல்லி பிரபாகரனை தவறாக வழிநடத்தியது வைகோவின் மிக தவறான சொதப்பல் என்பதை யாரும் பேசினாதாகத் தெரியவில்லையே. இதனை எரிக் சோல்கம்மே சொல்லியிருக்கிறார்’

இவற்றுக்கெல்லாம் பதிலே தேடாமல் வெறும் கருணாநிதியைப் போட்டுத் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டுமே அடையப்போகும்  பலன் என்ன என்பது தெரியவில்லை.
அதே சமயம் ஜெயலலிதாவைப் பாராட்டியும் புகழ்ந்தும் நான் ஏற்கெனவே எழுதியிருக்கும் சில பதிவுகளை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதாகவே தெரியவில்லை. ‘தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா’ என்ற பதிவிலும் இன்னும் சில இடங்களிலும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து எழுதவேண்டும் என்று தோன்றியபோதெல்லாம் புகழ்ந்தும் பாராட்டியும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கவியரசர் கண்ணதாசன் விஷயத்திலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் விஷயத்திலும் கலைஞர் நடந்துகொண்ட விஷயங்களை, தற்காலத் தமிழ் இலக்கியவாதிகள் விஷயத்தில் அவர் நடந்துகொண்ட விஷயங்களை எப்போதுமே எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது?

ஈழ மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய தலைவர்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. டெல்லித் தலைவர்களை விட்டுவிட்டுத் தமிழகத் தலைவர்களை எடுத்துக்கொண்டாலும் அனைவருமே கலைஞருக்கு எதிராகக் கொந்தளிக்கும் ஒற்றைத் தீர்மானத்தில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர அங்கு நடக்கும் அவலத்தைத் தடுக்க எதுவும் சிந்திப்பதுபோல் தெரியவில்லை.

மாணவர்களின் போராட்டம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. இதனை யார் எப்போது எப்படி ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வி.

மாநில அரசும் மத்திய அரசும் இதனை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிப்பார்கள். அதனையும் தாண்டி போராட்டம் தீவிரமானால் இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் முனைவார்கள்.

பாவம் பத்திரிகையாளர்களும் பதிவர்களும்! 


இரு அரசுகளின் இந்தச் செயல்களுக்கு கருணாநிதியைக் குறைசொல்லத்தான் இவர்களால் முடியாது.