Friday, January 28, 2011

சாருவும் மிஷ்கினும்


ஒரு நல்ல வாசகனிடம் “இன்றைய பிரபல தமிழ் எழுத்தாளர்கள் யார் யார்? என்ற கேள்வியை முன்வைத்தோமானால் உடனடியாக அவன் தயங்காமல் சொல்லும் பெயர்கள் மூன்று. 1) சாரு நிவேதிதா 2) ஜெயமோகன் 3) எஸ்.ராமகிருஷ்ணன்.

“சரி சாருவின் எந்தெந்த நூல்கள் பிடிக்கும்? ஜெயமோகனின் படைப்புக்களில் பிடித்தது எது? எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்களில் சிறப்பானது எது? என்ற கேள்வியைக் கேட்டோமானால் அவனிடம் பதில் இருக்காது.

“இவர்களுடையதை எல்லாம் நான் படித்திருக்கிறேன் என்றா சொன்னேன்? தமிழில் பிரபலமான எழுத்தாளர்கள் யார்? என்று கேட்டீர்கள். அந்தக் கேள்விக்கான பதிலைத்தானே சொன்னேன் என்பார்கள்.

சாரு நிவேதிதாவையோ ஜெயமோகனையோ எஸ்.ராமகிருஷ்ணனையோ படிக்காமலேயே,அவர்களுடைய படைப்புக்கள் பற்றிய பரிச்சயம் இல்லாமலேயே அவர்களைத் தமிழின் முன்னணி எழுத்தாளர்களாக ஒரு வாசகன் சொல்லும் நிலைமை இருப்பதை இந்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகத்தான் சொல்லவேண்டும்.

சுஜாதாவுக்கும் முன்பிருந்த காலகட்டத்தில் இருந்ததைப்போல அகிலனைப் படித்தவர்கள், கல்கியைப்படித்தவர்கள், நாபாவைப்படித்தவர்கள், சாண்டில்யனைப் படித்தவர்கள்,ஜெயகாந்தனைப் படித்தவர்கள், ராகி ரங்கராஜனைப் படித்தவர்கள்,சாவியைப் படித்தவர்கள், மணியனைப் படித்தவர்கள் எல்லாம் மாதக்கணக்கிலும் வாரக்கணக்கிலும் படிப்பதோடு நில்லாமல் பத்திரிகைகளில் வருகின்ற அவர்களுடைய தொடர்களைத் தனியே பைண்ட் செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மீண்டும் மீண்டும் படிப்பவர்களாகவும் தனியே அவர்களுடைய நூல்கள் வரும்போது அதனை வாங்கிச் சேகரித்து வைப்பவர்களாகவும் இருந்தனர்.

கதைப் படிப்பது என்பது ஒரு ரசனை சார்ந்த படிப்பனுபவமாக மட்டுமின்றி சில கதைகளின் நாயகர்களைத் தமது வாழ்க்கையின் வழிகாட்டிகளாகவும் பலர் கொண்டிருந்தனர். கல்கியின் கதை மாந்தர்களின் பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியிருப்பவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர். அகிலனுடைய கதை மாந்தர்களின் பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளவர்கள் எத்தனையோ பேர். நாபாவின் குறிஞ்சிமலர் நாவலின் கதைமாந்தர்களான அரவிந்தன், பூரணி பெயர்களைத் தமது குழந்தைகளுக்குச் சூட்டியவர்கள் கணக்கிலடங்காதவர்கள். இந்த வரிசையில் டாக்டர் மு.வரதராசனுக்கும் கணிசமான வாசகர்கள் உண்டு.

சுஜாதாவுக்கு வாசகர்களாக இருந்தவர்கள்கூட அவருடைய அத்தனை எழுத்துக்களையும் தேடித்தேடி வாசித்தவர்களாகவே இருந்தனர். ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் மாறிப்போய் விட்டது. இப்போதைய பிரபல பத்திரிகைகள் எதுவும் தொடர்கதைகளையோ சிறுகதைகளையோ முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிப்பது இல்லை. அந்தக் காலத்தில் குமுதத்தில் ஐந்து சிறுகதைகளும் ஐந்து தொடர்கதைகளும் வரும். அதில் நிச்சயமாக ஒன்று சரித்திரத் தொடர்கதை. விகடனும் மூன்று நான்கு தொடர்கதைகளையும் மூன்று நான்கு சிறுகதைகளையும் வெளியிடும். கல்கி தினமணிகதிர் எல்லாமே இந்த வரிசையில்தான் வந்துகொண்டிருந்தன. தொலைக்காட்சி வந்து அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டது. மக்களின் ரசனையும் மாறிப்போக படிக்கிற மோகம் ‘பார்க்கிற மோகமாக திரிந்துபோனது. பிரபல வாரப்பத்திரிகைகளெல்லாம் சினிமாப்பத்திரிகைகளாக மாறிப்போயின. விளைவு, சினிமாவுக்கென்றே வந்துகொண்டிருந்த பொம்மை, பேசும்படம், பிலிமாலயா எல்லாமே மூடுவிழா நடத்தின.

வாழ்க்கை அனுபவங்களை கலை நேர்த்தியுடன் கலந்து நாவலாகவும் சிறுகதைகளாகவும் படைத்துக்கொண்டிருந்த பாரம்பர்ய எழுத்தாளர்கள் எல்லாரும் நடப்பது என்னவென்றே புரியாமல் திகைத்துப்போய் நின்றுவிட, சாலையைத் திறந்துவிட்டவுடன் ஓடிவரும் சிறுவர்களைப்போல சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ‘ஓ வென்ற கூச்சலுடன் ஓடிவர ஆரம்பித்தார்கள். சிறுபத்திரிகைகளும் இதுதான் நம்ம நேரம் என்று டவலை வீசி நாற்காலியில் இடத்தைப் பிடித்துக்கொண்டன. அவசர அவசரமாகத் தங்களின் கச்சேரியையும் ஆரம்பித்துவிட்டன. இதில் ரொம்பவும் முந்திக்கொண்டது காலச்சுவடு மாத இதழ்.

இவர்களைப் பொறுத்தவரை தற்காலத்தமிழ் இலக்கியம் என்பது பாரதியில் ஆரம்பிக்கிறது. பாரதிக்குப் பிறகு தமிழில் எழுதிய ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்கு யாருமே எழுதவில்லை. அதற்குப்பின் தமிழ் எழுத்தாளராக அவதாரம் எடுத்த ஒரேயொருவர் சுந்தர ராமசாமி. பாரதி-புதுமைப்பித்தன்-சுந்தர ராமசாமி என்று தமிழ் வளர்ந்த விதம் பற்றியெல்லாம் அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக இருந்தபோதே அழைத்து பெரிய கருத்தரங்கமெல்லாம் நடத்தித் தீர்த்துவிட்டார்கள். ஒப்புக்காக சில எழுத்தாளர்கள் பெயர்களைச் சொல்வார்களே தவிர, காலச்சுவடு இதழைப்பொறுத்தவரை சுந்தர ராமசாமிதான் தமிழின் ஒரே ஆகப்பெரும் எழுத்தாளர். அவரைப்போற்றும்-ஆராதிக்கும் வேறு சில எழுத்தாளர்கள் மட்டுமே தமிழில் இருக்கும் மற்ற ‘எழுத்தாளர்கள்.

காலச்சுவட்டிலிருந்து வெளியேறி வந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடத்தும் உயிர்மை வேறு ஒரு எழுத்தாளர் குழுவைத் தன்வசம் வைத்துள்ளது. அவர்களும் குழு மனப்பான்மையுடனேயே செயல்படவேண்டியுள்ளது. இந்த இரண்டு பத்திரிகைகளிலும் எழுதும் ஒரு சிலர் மட்டுமே இன்றைய பிரபல எழுத்தாளர்களாக வலம்வரும் வித்தையைச் செய்துவருகிறார்கள். ஊடகங்களும் வேறுவழியில்லாமல் இவர்களை மட்டுமே மிகப்பெரும் எழுத்தாளர்களாக முன்நிறுத்தும் காரியத்தைச் செய்துவருகின்றன. இவர்களில் சாருவுக்கும் ஜெயமோகனுக்கும் இணையத்தில் அதிகம் உழலுகின்ற அதிகம் புழங்குகின்ற கணிப்பொறி இளைஞர்களின் தேவை என்னவென்பது தெரிந்திருக்கிறது. அவர்களுடைய ரசனை என்னவென்பது தெரிந்திருக்கிறது. என்ன சொல்லி அவர்களை இழுக்கமுடியும் என்பது தெரிந்திருக்கிறது. அதைத் தமிழில் வழங்கவந்த இலக்கிய வள்ளல்களாகத் தங்களைக் காட்டும் கலை தெரிந்திருக்கிறது. ஆகவே, வெற்றிகரமாகத் தங்கள் வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் வரும் எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசிப்பவன் என்ற முறையில் எனக்கு சுந்தர ராமசாமியை மிகவும் பிடிக்கும். ஆனால் காலச்சுவட்டின் அரசியல் பிடிக்காது. ஜெயமோகன் எழுதிய நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. ஒரேயொரு கதை ‘ஊமைச்செந்நாய் மட்டும் படித்திருக்கிறேன். உண்மையில் மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை அது. என்னுடைய நண்பர் அகிலன் கண்ணன் தாகம் என்றொரு பிரசுரம் ஆரம்பித்தபோது அவரது தந்தையார் அகிலன் அவர்களின் பெயரால் ஒரு நாவல் போட்டி நடத்தினார். அதில் வெற்றி பெற்ற நாவல் என்று ஒரு நாவலைத் தந்தார். வெற்றி பெற்றவர் ஜெயமோகன். எழுதிய நாவல் ‘ரப்பர்.

ரப்பரைக்கூட சில பக்கங்கள் படித்து வைத்துவிட்டேன். பின்னர் ஏதோ ஒரு இணைய தளத்தில் நையாண்டியாகச் சில புனைவுகளை ஜெயமோகன் எழுதினார். படித்ததில் அப்படியொன்றும் பிடிபடவில்லை. விட்டுவிட்டேன். அவர் எழுதிய வேறுசில கட்டுரைகளைப் படித்தபோது ஒரு படைப்பாளிக்குரிய எழுத்துத்திறமை வேண்டுமானால் அவருக்கு இருக்கலாம் ஆனால் அவரது சிந்தனைகளில் தார்மீக நெறிமுறைகள் இல்லை என்ற முடிவுக்குத்தான் வர நேர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துப் போராடும் அருந்ததிராய் இவரது கண்ணோட்டத்தில் ‘அடிப்படையான வரலாற்று உணர்வோ, சமநிலையோ இல்லாத அருந்ததிராய் போன்ற குருவி மண்டை என்று விளிக்கப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டு மொத்த தமிழ் நிலமே ரத்தச்சேறாக மாற்றப்பட்டது பற்றி இவர் திருவாய் மலர்ந்தருளுகிறார் இப்படி; ‘ நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதே போன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்து கொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் எனப்பேசுவதில்லை. அந்தப் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுத வெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டி வளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒரு சாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கு அறியப்படுகிறார்கள். என்று தமது மேதாவிலாசத்தைக் காட்டுகிறார். அதாவது, இவர் கூற்றுப்படி நம் தெருவில் ஒரு அப்பாவியை நான்கு காடையர்கள் சேர்ந்து அடிக்கிறார்கள் என்றால்கூட நாம் துடிக்கக் கூடாது. கூப்பாடு போடக்கூடாது. காவல்துறையை அணுகக் கூடாது. வடநாட்டில் இப்படியெல்லாம் நடப்பதில்லையா என்ன என்று இருந்துவிட வேண்டும்.

ஒரு அப்பாவிப் பெண்ணை நான்கைந்து ரௌடிகள் சேர்ந்துகொண்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள் அது நமது கவனத்துக்கு வருகிறது என்றால்கூட நாம் பதட்டப்படக்கூடாது. இப்படியெல்லாம் மெக்ஸிகோவில் நடக்கவில்லையா என்று கேட்டுக்கொண்டு சும்மா இருந்துவிட வேண்டும். அவ்வளவு ஏன் இதே சித்தாந்தப்படி நம்முடைய தெருவில் சாக்கடை உடைத்துக்கொண்டு ஓடிற்றென்றால்கூட செயல்படக்கூடாது. கூவத்தில் ஓடாத சாக்கடையா என்று கேட்டுவிட்டுச் சும்மா இருந்துவிடவேண்டும். -இப்படியொரு மனநெறியைப் பரப்புகிறவர் எப்படி படைப்புக்கலை இலக்கியத்தில் நல்ல சிந்தனைகளை வித்தூன்றுவார் என்ற கணிப்பில் இவரது எழுத்துக்களைப் படிக்கத்தோன்றவில்லை.

இவர்களிலிருந்து விலகி நிற்கும் ஒரு எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணனை மட்டுமே குறிப்பிட வேண்டும்.

அடுத்தது சாருநிவேதிதா.!

ஒரு விஷயத்தை இப்போதே சொல்லிவிட வேண்டும். இவர் என்ன எழுதுகிறார் என்பது ஒருபக்கம் இருந்தபோதிலும் இவரது எழுத்து நடை சுவாரஸ்யமானது. பொதுவாகவே சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் எல்லாரும் போரடிக்கும் நடைக்குச் சொந்தக்காரர்கள். வேண்டுமென்றேதான் அப்படி எழுதுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயாரில்லை. ஒரு வித்தியாசம் வேண்டுமென்று யாரோ ஒருவர் இப்படி எழுத ஆரம்பிக்க இவர்களுக்கெல்லாம் அதுவே தொற்றிக்கொண்டுவிட்டது. எழுதுவதிலேயே மிகவும் சிரமமான காரியம் இலகுவாக எழுதுவதுதான். இலகுவான எழுத்து நடை நிறையப் பேருக்கு வருவதில்லை. அவர்களில் சாரு நிவேதிதா முற்றிலும் வேறுபட்டவர். இலகுவாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் எழுத வருகிறது அவருக்கு. அந்த நடையை வைத்துக்கொண்டு என்ன எழுதுகிறார் என்று பார்த்தோமானால் வேதனையும் கோபமும்தான் மிஞ்சுகிறது.

தற்புகழ்ச்சி என்பது தலைக்குமேல் போய்விட்ட ஒரு பிறவியாகத்தான் தம்மைக் காட்டிக்கொள்கிறார் சாருநிவேதிதா. அவரே எழுதியிருப்பதைப் பார்த்தோமானால் நோபல் பரிசெல்லாம் இவருக்கு மிகவும் சாதாரணம் என்ற மனநிலைக்கு அவர் இந்நேரம் வந்திருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. காலம் காலமாகப் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் கலாச்சாரம் பண்பாடு மண்ணாங்கட்டி ஆப்பச்சட்டி எல்லாவற்றையும் எல்லாத் தளைகளையும் உடைத்துக்காட்டுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அவர் செய்யும் அலப்பறைகளும்,அழிச்சாட்டியங்களும் தாங்க முடியாததாக இருக்கிறது. மனித உடம்பில் மூன்று நான்கு அங்கங்கள் தவிர வேறு எந்த அங்கங்களுமே அவருடைய சிந்தனைத்தளத்திலேயே இல்லை என்பது பரிதாபத்துக்குரிய விஷயமாகவே படுகிறது.

இவர் எழுதிய தேகம் நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் இவரது நாவலை சரோஜாதேவி புத்தகம் போல இருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். அதற்காக இவர் மிஷ்கினைத் தம்முடைய நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டாராம். நீக்கியவர் சும்மா இருக்கவேண்டியதுதானே, மிஷ்கினுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார். தமிழில் கடித இலக்கியம் என்ற வகை ஒன்று இருக்கிறது. ரசிகமணி டிகேசியின் கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. வ.உ.சியின் கடிதங்கள் புகழ்பெற்றவை. கி.ரா வின் கடிதங்கள் புகழ்பெற்றவை. அரசியலில் எடுத்துக்கொண்டாலும் அண்ணாவின் கடிதங்கள், கலைஞரின் கடிதங்கள், கண்ணதாசனின் கடிதங்கள் ஆகியவை புகழ்பெற்றவை. அகில இந்திய அளவிலும் நேரு தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களும் மிகவும் புகழ்பெற்றவை.

இப்போது தமிழர்கள் செய்த பூர்வ ஜென்ம பலனாகக் கிடைத்திருப்பவை சாரு நிவேதிதா மிஷ்கினுக்கு எழுதிய கடிதங்கள். நாகரிக எல்லைகள் என்பவையெல்லாவற்றையும் தாண்டி அருவெறுப்பு ஆபாசம் மஞ்சள் எழுத்துக்கள் இவற்றின் உச்சம் நீளம் அகலம் ஆழம் எல்லாவற்றையும் கடந்த குப்பையைத் தமிழில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார் சாருநிவேதிதா. அத்தனைக் கடிதங்களையும் படித்தவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் இருந்தாலேயே பெரிய விஷயம்.

இதுபற்றி இணையத்தில் நிறையப்பேர் கொதித்துப்போய் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சில பேர் ‘சாரு ஒரு காமெடி பீஸ் என்றெழுதுகிறார்கள். எனக்கென்னமோ இதனை அப்படியே விட்டுவிடுவதுதான் சரியானதாகப்படுகிறது. ஏனெனில் இது ஒன்றும் நிஜமான சண்டையாகத் தெரியவில்லை. இருவருமே பேசி வைத்துக்கொண்டு செய்யும் நிழல் சண்டைபோல்தான் தெரிகிறது. மிஷ்கினும் சாருவும் சேர்ந்துகொண்டு எல்லாரையும் முட்டாள்காளாக்க விரித்த வலை என்றுதான் படுகிறது. மாட்டிக்கொள்ளாதவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே.

இந்த உண்மை தெரியவரும்போது இந்த இருவரையுமே தமிழர்கள் எப்படிப் புறக்கணிக்கப் போகிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

Monday, January 17, 2011

கடவுள் நம்பிக்கை-சிவகுமாரின் மேலும் சில கருத்துக்கள்....!


கடவுள் பற்றித் தமது கருத்துக்களைத் தெரிவித்த சிவகுமாரிடம் “நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா..இல்லையா? நேரடியான பதில் தேவை என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவருடைய பதில்;-

நான் சிறுவயது முதலே கடவுள் நம்பிக்கை ஊட்டப்பட்டவன். நினைவு தெரிந்த நாளிலிருந்து மொட்டை ஆண்டி முருகன் படத்தை வணங்கி வருபவன். பழக்கமாக இருந்த பக்தி உணர்வு, வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும்போது, நாம் வேண்டியது நடக்கும்போது-இறுக்கமான நம்பிக்கையாகி விடுகிறது.

ஓவியக்கல்லூரியில் சென்னையில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது-‘Mother serious start immediately’ என்று தந்தி வந்தது. எந்த விநாடியிலும் தாயின் உயிர் போகலாம். சென்னையிலிருந்து கோவை பத்து மணிநேர பயணத்தின் போதும் உயிர் போகலாம். உலகில் எனக்குள்ள ஒரே பற்றுக்கோடு என் தாய். அவரை இம்முறை உயிரோடு நான் பார்த்துவிட்டால் சாகும்வரை கடவுள் நம்பிக்கையோடு இருப்பேன் என்று விடிய விடிய ரயில் படிக்கட்டில் அமர்ந்து அழுதுகொண்டே சென்றேன்.

மறுநாள் தாயை உயிரோடு பார்த்தேன்!

ஓவியக் கலையில் ஒரு கட்டத்தை அடைந்தபோது ‘நவீன ஓவியர்கள் உன் ஓவியங்களை ஏற்க மாட்டார்கள். உன்னுடையவை பதினாறாம் நூற்றாண்டு பாணி ஓவியங்கள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது-திரையுலகை நோக்கி என் வாழ்வை திசை திருப்பி விட்டவன் இறைவன் என்று கருதுகிறேன்.

நான் மட்டும் சினிமாவில் இருந்தால் போதும். என் பிள்ளைகள் இதில் இறங்கிச் சீரழிய வேண்டாம். நித்ய கண்டம் பூரண ஆயுசு உள்ள தொழிலில் அவர்கள் அகப்பட்டுக்கொள்ள வேண்டாம் என்று ஸ்டுடியோ பக்கமே பிள்ளைகளை அழைத்துப் போகாமல் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.

‘உன்னைவிட உன் பிள்ளைகள் பேர் வாங்க வேண்டாமா? உன்னைவிட சமுதாயத்திற்கு அவர்கள் தொண்டு செய்ய வேண்டாமா? அவர்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்ய நீ யார்? என்று கேள்வி கேட்டு- அவர்களை நான் பயந்த சினிமா உலகிலேயே, நம்பிக்கை நட்சத்திரங்களாக வாழ வைப்பது இறைவன் செயலாகவே நான் நினைக்கிறேன்.

என் மகளுக்குச் சென்னையிலேயே மாப்பிள்ளை கிடைத்தது, தங்கமான பையன் மருமகனாக வந்ததும் இறைவன் செயலே.

சூர்யாவுக்கு, ஜோதிகா என்ற குணவதியை மனைவியாக்கியதும் இறைவன் செயலே.

எந்தச் சூழ்நிலையிலும், புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, சூதாடக்கூடாது, பிற மாதர் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது-என்பதில் நான் வைராக்கியமாக இருந்து சென்னை வந்து இந்த ஐம்பத்திரண்டு வருடங்களும் வாழ்ந்துவிட்டேன். இன்று என் குடும்பம், குழந்தைகள்-இந்த அளவுக்குப் புகழ் பெறுவார்கள், மக்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

மனித முயற்சியால் மட்டுமே இவை அனைத்தும் நடந்துவிட்டதாக நான் கருதவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி பின்னால் இருந்து வழி நடத்துவதாகவே நான் கருதுகிறேன்.

Monday, January 10, 2011

கடவுள் பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியும் நடிகர் சிவகுமார்


தமிழ்ச்சமூகம் கூர்ந்து கவனிக்கும் இன்றைய பிரபலங்களில் அப்துல் கலாமுக்கடுத்து பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து சிந்தனையாளராகவும் இலக்கியவாதியாகவும் தம்மை உருமாற்றிக்கொண்ட அவருடைய உரைகளும் எழுத்துக்களும் இன்று தமிழுலகில் மிகப்பிரசித்தமாக உலா வருகின்றன. அவர் பேச்சுக்களின் சிடிக்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் சிவகுமாரை மிகுந்த நம்பிக்கையுடன் கவனிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ‘கடவுள் இருக்கிறாரா? அவரை வணங்கினால் அருள் பாலிப்பாரா? என்ற கேள்விக்கு நடிகர் சிவகுமாரின் பதில் இங்கே;

கடவுள் மனிதனைப் படைத்தான். மனிதன் கடவுளைப் படைத்தான்-என்று இதை அழகாகச் சொல்லலாம். இங்கே, முதலில் கடவுள் என்பது இயற்கை என்று வைத்துக்கொண்டால், இயற்கை மனிதனை உருவாக்கியது. பின்னர் அந்த மனிதன் கடவுள் என்ற கற்பனை வடிவத்தை, அந்த இயற்கைக்குக் கொடுத்து-பல கடவுள் கதைகளை எழுதி, மக்களை நல்வழியில், நேர்வழியில், ஒழுக்க நெறியில் வாழ, வழிவகுத்தான்.

‘நன்று புராணங்கள் செய்தார்-அதில்

நல்ல கவிதை பலபல தந்தார்

கவிதை மிகநல்லதேனும்-அந்தக்

கதைகள் பொய்எனத் தெளிவுறக் கண்டோம்.

புவிதனில் வாழ்நெறிக்காட்டி-நன்மை

போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்-என்று பாரதி, கடவுள் கதைகள் உண்மையல்ல எனினும்-அந்தக் கதைவழி வாழ்வின் உயர் நெறியை, நாம் பெறுகிறோம் என்கிறான்.

· கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன் இரக்கமுள்ளவன் என்பது உண்மையானால், சுனாமி என்கிற ஆழிப்பேரலையை எழுப்பி, குஞ்சும் குளுவானுமாக குழந்தைகளிலிருந்து குடும்பத் தலைவன், தலைவி,ஆடு மாடு கோழி குஞ்சுகள் என்று பல்லாயிரக்கணக்கான உயிர்களை, ஒரே சுழற்றில் கடலுக்குள் அள்ளிப்போய் அவர்கள் கதையை முடித்திருப்பானா?

· குஜராத் பூகம்பத்தில் பல மாடிக்கட்டிடங்களில் பெரிசும் சிறிசுமாகப் பல அப்பாவி உயிர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிர்நீத்த கொடுமையை- இரக்கமுள்ள இறைவன் செய்வானா?

· இரண்டாம் உலகப்போரில் ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்களை ஒரே மனிதன்-இட்லர்- கொன்று குவிக்க, இறைவன் பார்த்துக்கொண்டிருந்தது ஏன்?

· முப்பதாயிரத்துக்கும் மேலான ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்து, லட்சக்கணக்கானோர் சாவின் விளிம்பில் தவிக்கும் நிலையை உருவாக்கிய ராஜபக்சே போன்ற கொடியவனை, இறைவன் படைத்தது ஏன்?

-இப்படி, பல்லாயிரக்கணக்கான கேள்விகளுக்கு எளிதில் பதில் சொல்லிவிட முடியாது.

‘கடவுள் என்று ஒருவன் இல்லையென்றாலும் அப்படி ஒருவனைக் கற்பித்து அவனிடத்தில் உன் வலியையும் வேதனையையும் சொல்லி அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர்.

தனக்கு வேண்டியவர்களுக்கு கடவுள் அருள் பாலிப்பது உண்மையென்றால் அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை ஆறுகால பூஜை செய்கிற அர்ச்சகர்தானே டாடா பிர்லா ஆகியிருக்க வேண்டும்......

பூஜை முடித்து தீபாராதனைத் தட்டை ஏந்தி நம்மிடம் வந்து “பார்த்துப் போடுங்கோ என்று ஏன் கேட்க வேண்டும்?

திருப்பதி மலை சென்று குடும்பமே மொட்டையடித்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில், திருமலை உச்சியிலிருந்து கார் கர்ணம் அடித்து பூண்டோடு அந்தக் குடும்பமே ஏன் அழிய வேண்டும்?

இதுபோன்ற கேள்விகளுக்கு யாரும் எளிதில் பதில் சொல்லிவிட முடியாது.

‘உடைத்த கல்லில் ஒரு பாதி சிலை-மறுபாதி படிக்கட்டு என்றால் இதில் எது கடவுள் என்று சித்தர்கள் கேட்கிறார்கள்.

சராசரி மனிதனால் கடவுளைக் கற்பனை செய்து வணங்கமுடியாது. அவனுக்குக் கதை வடிவில் ஒன்றைச்சொல்லி கற்சிலை வடிவில் கடவுளைக் காட்டினால் எளிதில் புரிந்துகொள்வான் என்பதற்காகவே புராணக்கதைகளையும், கோயில் கட்டி உள்ளே விக்கிரகத்தையும் நம் பெரியவர்கள் நிறுவினார்கள்.

கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்னுள்ளும் இருக்கிறான் உன்னுள்ளும் இருக்கிறான் என்பதை உணர்வதற்கு ஒரு வயதும் பக்குவமும் வேண்டும். எல்லாராலும் அதை எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியாது.

‘குடியிருக்க வீடு கும்பிட ஒரு கோயில் என்று எல்லாவற்றிலும் நம் முன்னோர் ஒரு ஒழுங்கு கடைப்பிடித்தனர்.

‘கடவுளிடத்திலே வேண்டுகோள் வைக்காதே என்கிறார் ஓஷோ.

உன்னைக் கேட்டுக்கொண்டு காலையில் சூரியன் உதிப்பதில்லை. உன்னைக் கேட்டுக்கொண்டு தென்றல் வீசுவதில்லை. உன்னைக் கேட்டுக்கொண்டு மரம் கனியும் நிழல் கொடுப்பதில்லை. உன்னைக் கேட்டுவிட்டு அவன் உன்னைப் படைக்கவில்லை. எப்போது உன்னைக் கேட்காமல் உன்னைப் படைத்தானோ, நீ சொல்லாமலே உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வான்........

உனக்கு விலையுயர்ந்த ஆடி(Audi)கார், ஒரு கோடி மதிப்புள்ள கார் தர- இறைவன் நினைத்திருப்பான். நீ அல்பத்தனமாக “அம்பாசிடர் கார் கொடு இறைவா என்று வேண்டாதே.

உனக்கு எஸ்டேட் ஒன்று பரிசாகத்தர அவன் முடிவு செய்திருப்பான். நீ “இருபது செண்ட் இடம் வீடு கட்ட வேண்டும் என்று கேட்காதே.

அப்படியென்றால் இறைவனிடத்தில் என்னதான் கேட்பது?

ஒன்றும் கேட்காதே. “அரிதான, அற்புதமான, பிறவிகளுள் உயர்ந்த மானுடப் பிறவி கொடுத்ததற்காக நன்றி நன்றி நன்றி இறைவா என்று மட்டும் சொல்.

கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள். கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன பெரியார் கடவுளைக் கும்பிடாமலேயே தொண்ணூற்றாறு வயதுவரை வாழ்ந்தாரே என்று கேட்கலாம்.

அவரையும் படைத்தது கடவுள்தானே..தன் குழந்தையைத் தானே எப்படி வெறுக்க முடியும்! பக்திமானைவிட பாமர மக்களைக் கடைத்தேற்ற வாழ்நாளை அர்ப்பணித்த தன் பிள்ளையை கடவுள் எப்படி வெறுக்க முடியும்?

அந்தப் பெரியாரே, “பக்தி தனிமனிதப் பிரச்சினை, ஒழுக்கம் சமுதாயப் பிரச்சினை. ஒரு மனிதன் ஒழுக்கசீலனாக வாழ்ந்தால் அவன் பக்திமானாக இருக்கத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்.

உயர்ந்த ஒழுக்கநெறியிலேயே ஆன்மிகம் சொல்லும் எல்லா விஷயங்களும் அடங்கிவிட்டன.

கடவுள் இருப்பதும் இல்லையென்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அன்றே பாடிவிட்டார்.

கடவுள் ஆன்மா என்று எதுவுமில்லை என்று புத்தர் கூறுகிறார். மாற்றமே உண்மை, நிலையானது என்று எதுவுமில்லை என்று சொல்லும்போது ஆன்மா மட்டும் நிலையானதாக எப்படி இருக்கமுடியும் என்று புத்தர் கேட்கிறார்.

சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நம் பெரியவர்கள், மனிதர்கள் ஒழுக்கசீலர்களாக உயர்ந்த நெறியைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கியவைதான். இறந்த பின் இதே உடலோடு எங்கும் போகமுடியாது. இதே நினைவுகளோடு எங்கும் போக முடியாது.

பிறப்புக்கு முன்னால் நாம் என்னவாக இருந்தோம் இறந்தபின் எங்கு போகப்போகிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கவோ நிரூபிக்கவோ முடியாது.

‘பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன

உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே நடப்பது என்ன

எனக்கும் தெரியாது என்று கண்ணதாசனும் சொல்கிறான்.

எனவே, மனித நேயத்துடன், ஒழுக்கத்துடன் இம்மண்ணில் வாழும் வாழ்க்கையே சொர்க்க வாழ்வு. அன்பு, அகிம்சை, அறவழியில் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்து அனைத்து உயிரையும் சமமாக மதித்து, இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியைச் செய்வதே உயர்ந்த பக்தியின் அடையாளம்.

ஆயிரம் பகுத்தறிவு வாதம் செய்தாலும் ,ஆகாயவிமானம் வங்கக் கடலின் மேலே இருபதாயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது “எஞ்சினில் தீப்பற்றிக் கொண்டது இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் சிதறிக் கடலில் மூழ்கப் போகிறதுஎன்று விமானி சொன்னால், அந்த நேரத்தில் “இறைவா! எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று-என்று ஒருவன் வேண்டவில்லையென்றால் அவனே உண்மையான நாத்திகன்.

நெஞ்சில் வாங்கிய கத்திக்குத்து இதயத்தைத் துளைத்துவிட்டதா, நுரையீரலைத் துளைத்துவிட்டதா? என்று தெரியாத புரியாத நிலையில் ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழலில், மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடம்பில் கத்திவைக்கும் முன் “இறைவா! எப்படியாவது என்னைக் காப்பாற்று என்று குத்துப்பட்ட மனிதன் கும்பிடவில்லை என்றால் அந்த நாத்திகனை நாமும் கும்பிடலாம்.

நன்றி; ராணி வார இதழ்.