Friday, June 28, 2013

சாருநிவேதிதாவும் இளையராஜாவும்






சாருநிவேதிதா அவ்வப்போது இளையராஜா பற்றி எழுதுவது வாடிக்கைதான். இந்த இணைய உலகில் அதாவது தமிழ் இணைய உலகில், ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கிறது. இந்த நாட்டின் பிரபலங்களில் யாரைப்பற்றி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். உங்களைப் பேச அனுமதிப்பார்கள். யாரை வேண்டுமானாலும் திட்டலாம். எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம். எந்தவித எதிர்ப்பும் வராது. அப்படியே வந்தாலும் அது வாதத்திற்கு வாதம் என்ற அளவில்தான் இருக்கும்.

மகாத்மாவைப் பற்றி விமர்சிக்கலாம். பண்டித நேருவைப்பற்றி விமர்சிக்கலாம். லால்பகதூர் சாஸ்திரியை, வல்லபபாய் பட்டேலை, மொரார்ஜி தேசாயை, பால் தாக்கரேயை, மோடியை, அத்வானியை, இந்திரா காந்தியை.......ஏன், தமிழகத்திற்கு வந்தால் பெரியாரை, ராஜாஜியை, காமராஜரை, அண்ணாவை, கலைஞரை ஜெயலலிதாவை இன்னமும் சிவாஜியை எம்ஜிஆரை, விஜயகாந்தை, விஜய்யை, அஜித்தை, சூர்யாவை........ யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். கூடவே தாளம் போட இன்னும் இருபது பேர் கிடைப்பார்கள்.

ஆனால் தப்பித் தவறிக்கூட இளையராஜாவை மட்டும் விமர்சிக்கக்கூடாது. இது இணையம் பூராவும் பரவியிருக்கும் ஒரு விதமான மௌடீக கொள்கையாக இருக்கிறது. இது ஏனென்று தெரியவில்லை.

இதற்கு சமீபத்திய உதாரணம் பாரதிராஜா.

பாரதிராஜா விகடனில் இளையராஜாபற்றிக் கருத்து தெரிவித்திருந்தார். உடனே பாரதிராஜாவை உண்டு இல்லையென்று ஆக்கி எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவருடைய துரதிர்ஷ்டம் இரண்டு நாட்கள் கழித்து அவர் விமர்சித்திருந்த மணிவண்ணன் திடீரென்று இறந்துவிடவே மொத்த இளையராஜா எதிர்ப்பு விமரிசனங்களையும் மடைமாற்றி பாரதிராஜா விமர்சித்ததால்தான் மணிவண்ணன் இறந்துவிட்டார் என்று பெயிண்ட் அடித்த விமரிசனமாகப் பண்ணிவிட்டார்கள்.

இதோ இப்போதுகூட அடுத்த விகடன் இதழில் இளையராஜா பற்றி பாரதிராஜா பதில் சொல்லப்போகிறாராம். கேள்வி மட்டுமே விகடனில் வந்திருக்கிறது. பாரதிராஜா என்ன சொல்லப்போகிறார் என்பது தெரியாது.ஆனால் இப்போதே பாரதிராஜாவை எதிர்த்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த ரசிகர்களாவது பரவாயில்லை. வினவுக்கு என்ன வந்தது?

வியப்பு என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைப்பேரையும் அல்லது அத்தனை விஷயங்களையும் கன்னாபின்னாவென்று பிரித்துக்கட்டி பிய்த்து உதறும் வினவு தளம் கூட இளையராஜாவை மட்டுமே உயர்த்திப்பிடித்து எழுதுகிறது. வினவு பாராட்டியிருந்த இன்னொரு பிரபலம்- இரண்டாவது பிரபலம்- ஷ்ரேயா கோஷல்.

அது கிடக்கட்டும். சாரு சில விஷயங்களில் மட்டும் எப்போதும் தமது கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை.அதில் ஒன்று இளையராஜா பற்றிய விஷயம்.

நான் இணையத்தில் அடிக்கடி சொல்லிவரும் அதே கருத்துக்களைத்தான் அவரும் சொல்லிவருகிறார். இளையராஜாவை விடவும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் ஏற்கெனவே தமிழில் இருக்கிறார்கள்.

இன்னொரு மிகப்பெரிய கோமாளித்தனம், இளையராஜாதான் பாடல்களில் இன்டர்லூட் எனப்படும் பின்னிசையைக் கொண்டுவந்தார்- என்பது. இப்படி எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது என்பதே வேஸ்ட். இவர்களாகத் தேடி பாடம் கற்றால்தான் உண்டு.

இரண்டாவது- படங்களில் வரும் பின்னணி இசை. பின்னணி இசை கோர்ப்பில், பின்னாட்களில் இளையராஜாவின் பங்கு பாராட்டுக்குரியதுதான். நல்ல பின்னணி இசை சேர்ப்பவர் இளையராஜா என்ற அளவில்தான் இது அடங்கும். ஆனால் இதையே உலக மகா இசையமைப்பாளர் ஆகா ஓகோ என்று இவர்கள் ஆடும் ஆட்டம் பரிதாபத்திற்குரியது. இதுபற்றிப் பிற்பாடு நிறைய எழுத இருப்பதால் இப்போதைக்கு இது போதும்.

ஒளிப்பதிவிலும், எடிட்டிங்கிலும் சினிமாவிலுள்ள பல்வேறு தொழில்நுணுக்கங்களிலும் நாள்தோறும் ஏற்பட்டுவரும் மாறுதல்களில் ஒன்றுதான் பின்னணி இசையில் இளையராஜா பின்னாட்களில் ஏற்படுத்திய மாறுதல். அதுவும் நிறைய இசையமைப்பாளர்கள் செய்த ஒன்றுதான். இந்த ஒன்றுக்காகவே உலகில் இவருக்கு இணையாக யாருமே இல்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் அலைவதுதான் கேவலமாக இருக்கிறது. சரி, விஷயத்துக்கு வருவோம்.
இளையராஜா பற்றிய சாருவின் கருத்து இது.

ஒருநாள் மாலை முன்னறிவிப்பு இல்லாமல் பத்துப் பதினைந்து பேர் வந்து விட்டனர்.  நான் விருந்தாளியாகவே இருந்தாலும் என்னைச் சந்திக்க புதிய நண்பர்களை அனுமதிப்பதில்லை.  அதிலும் ஒரு நண்பர் இளையராஜா விஷயத்தை வைத்து என்னை மடக்க வேண்டும்என்ற திட்டத்தில் நூறு கேள்விகளோடு வந்திருக்கிறார்.
வந்தவுடனேயே அவரை நாக்-அவுட் செய்து விட்டேன்.  இளையராஜாவை விமர்சித்தேனாநானாஎனக்கு அவரை ரெம்ப ரெம்பப் பிடிக்குமேகுணாவிலும் ஹே ராமிலும் அவர் மாதிரி வேறு யாரால் அப்படிப் போட முடியும்ஏ. ஆர். ரஹ்மானாஅவர் பாடல்கள் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது.  கடல் மட்டுமே விதிவிலக்கு.
இப்படி ஐந்து நிமிடம் பேசியதுதான் நாக்-அவுட்.  நான் மேலே எழுதியதெல்லாம் பொய் அல்ல.  நிஜம்தான்.  ஆனாலும் எனக்கு இளையராஜாவைப் பிடிக்காது.  ஏனென்றால், அவரை விட ஜாம்பவான்களெல்லாம் இங்கே இருந்திருக்கிறார்கள்.  அவர் பொன்மலை என்றால் இங்கே பல இமயங்கள் இருந்திருக்கின்றன.  விஸ்வநாதன் ராமமூர்த்தி duo-வை என்னவென்று சொல்வதுஒரு படம் என்றால் அதில் வரும் ஐந்து பாடல்களையும் சூப்பர் ஹிட் பண்ணுவார்கள் அவர்கஆனந்த ஜோதி ஒரு உதாரணம். கே.வி.மகாதேவனும் அப்படியே. கர்ணன் உதாரணம்.  இது போக, தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா போன்றவர்களின் படங்களுக்கெல்லாம் இசை அமைத்தவர்கள் யார்இன்றைக்கு யாருக்காவது பெயர் ஞாபகம் இருக்கிறதா?
என்னைப் பலருக்கும் பிடிக்காமல் போனதற்குக் காரணம், நான் இளையராஜாவை விமர்சித்ததுதான் என்று தெரிகிறது.  அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.  ஏனென்றால் உங்களுக்கு இளையராஜாவை மட்டுமே தெரியும்.  எனக்கோ உலக இசை உள்ளங்கையில். உதாரணமாக, மெட்டாலிகாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள்.  இதைக் கேட்பதால்தான் என்னால் இன்னமும் 15 வயது இளைஞர்களோடு உரையாடிக் கொண்டிருக்க முடிகிறது.  பனிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என் விசிறிகள்.  புத்தகம் அல்ல; இசை தான் எங்களை இணைப்பது.
ஓகே. இளையராஜா பற்றிக் கூட என்னோடு விவாதிக்கலாம்.  ஆனால் அதற்கு எனக்கு நீங்கள் கட்டணம் கொடுக்க வேண்டும்.  என் நேரத்தை என்னால் ஓசியில் தர முடியாது.  அதிலும் முன் அனுமதி இல்லாமல், எனக்குத் தெரிந்த உங்கள் நண்பர்களின் துணை கொண்டு என்னை சந்திப்பதை அத்துமீறல் என்றே நான் கருதுகிறேன்.  திபுதிபுவென்று இருபது பேர் புதிதாக வந்ததும் நான் மிரண்டே போனேன்.  எங்கள் வாசகர் வட்டக் கூட்டங்களில் அப்படி ஒருவர் கூட புதிய நபராக அனுமதி இல்லாமல் வருவதில்லை.  வருவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை.

மேற்கண்ட சாருவின் எழுத்தில் ஒரு சிறு திருத்தம். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த படங்களில் ஐந்து பாடல்கள் என்றால் ஐந்து பாடல்களும் ஹிட் என்கிறார். அவர்கள் இசையமைத்த படங்களில் ஐந்து பாடல்கள் அல்ல. ஆறு, ஏழு, எட்டு பாடல்கள் என்றுதான் பெரும்பாலும் இருக்கும். அத்தனைப் பாடல்களையும் தேனாமிர்தமாக ஆக்கிய கலைக்கு அவர்கள் மட்டுமே சொந்தக்காரர்கள். அவர்கள் இசையில் மிகக் குறைவான பாடல்கள் கொண்ட படம் கற்பகம். அந்தப் படத்தில் வெறும் நான்கே பாடல்கள். நான்கு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

1)     அத்தைமடி மெத்தையடி 2) பக்கத்துவீட்டு பருவமச்சான் 3)ஆயிரம் இரவுகள் வருவதுண்டு 4)மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா........கவிஞர் வாலியைக் கடைக்கோடிவரைக் கொண்டுசேர்த்தவை இந்தப் பாடல்கள்தாம். இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம்....நான்கு பாடல்களையும் பாடியவர் ஒரே ஒருவர். பி.சுசீலா. வேறு குரல்களோ, ஆண் குரலோ படத்தில் கிடையாது. அந்தக் காலத்திலேயே இம்மாதிரியான சாதனைகளையெல்லாம் சத்தமில்லாமல் செய்துவிட்டுப் போனவர்கள் அவர்கள். இன்றுவரை யாராலும் இந்தச் சாதனைகளையெல்லாம் தொடக்கூட முடிந்ததில்லை.

இன்னொன்று கே.வி.மகாதேவனும் மிகப்பெரிய அற்புதங்களையெல்லாம் நிகழ்த்திக்காட்டிய இசையமைப்பாளர். அவருடைய சாதனைக்கு உதாரணம் கர்ணன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

சாரு, கர்ணனும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த படமே. நீங்கள் தில்லானா மோகனாம்பாளையோ, திருவிளையாடலையோ சொல்ல வந்தீர்களோ? இருக்கக்கூடும்.

சாருநிவேதிதா  எங்கோ ஒரு இடத்திற்குப் போனாராம். அங்கே அவருடைய ரசிகர்களைச் சந்தித்துப் பேசலாம் என்று உட்கார்ந்த இடத்தில் இளையராஜா பற்றி எப்படி எழுதலாம் என்று கேட்பதற்காகவே ஒரு கூட்டம் வந்ததாம். நல்ல கூட்டம்தான் போ.

சாருவிற்குப் புகழ் மாலையோ பாமாலையோ பாடும் பதிவல்ல இது. அவர் சொன்ன ஒரு கருத்திற்கு எதிர்வினையாற்றவந்த பதிவு மட்டுமே இது.

Saturday, June 15, 2013

மணிவண்ணன் – சில நினைவுகள்!



எப்படி யோசித்தாலும் மணிவண்ணன் இத்தனை விரைவாக மறைந்துவிடுவார் என்பதை மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இயக்குநராக, கதை வசனகர்த்தாவாக, நடிகராக. தமிழ்ப்போராளியாக அவர் அழுத்தமான தடயங்களைப் பதித்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்த திரைக்கலைஞர்களில் தமக்கென்று தனியிடம் பிடித்துக்கொண்ட கலைஞர் அவர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தெட்டு அல்லது எழுபத்தொன்பது என்று நினைக்கிறேன். நண்பர் மனோபாலாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இப்போது போல் அன்றைக்கு டெலிபோன்களோ செல்போன்களோ இல்லாதிருந்த சமயம். எந்தவொரு விஷயமும் பெரும்பாலும் கடிதங்கள் மூலம் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்த சமயம் அது. கடிதங்களும் இன்றைக்குப் போட்டால் மறுநாளே சென்று சேர்ந்துவிடும் என்றிருந்த நாட்கள் அவை. ‘டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் பெங்களூர் வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு அங்கே தங்கியிருப்பார்கள். நான் வரவில்லை. டைரக்டர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உட்லாண்ட்ஸ் ஓட்டலில் தங்குகிறார்கள். சென்று சந்தியுங்கள். நான் உங்களிடம் சொன்ன நண்பர் மணிவண்ணனும் டைரக்டருடன் வருகிறார். அவரைச் சந்தியுங்கள் மிகவும் சுவாரஸ்யமான நண்பர் அவர்’ என்றது கடிதம்.

பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்தபிறகு அங்கு நடைபெற்ற ஒவ்வொரு சம்பவத்தையும் மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் மனோபாலா. அதே விறுவிறுப்புடன் கடிதங்களும் எழுதுவார். பாரதிராஜா பற்றிய தகவல்கள் எல்லாமே மனோபாலா மூலம்தான் வரும். பாரதிராஜாவையும் இளையராஜாவையும் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன். மணிவண்ணனைச் சந்திப்பதுதான் புதிது.

மனோபாலா தற்போது படங்களில் நடிப்பது மிகவும் சாதாரணமான ஒன்று. அவருடன் பேசிக்கொண்டிருப்பதே ஒரு தனியான சுகமான அனுபவம். ஒருமுறை அவர் பேசியதைக் கேட்டாலேயே ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. கண்ணதாசனுடைய ஒரு பாடல் கம்போசிங்கை மனோபாலா விவரித்து எழுதியிருந்த ஒரு கடிதம் இப்போதும் வரி விடாமல் நினைவில் இருக்கிறது. அத்தனை வித்தியாசமாக சுவாரஸ்யமாகப் பேசுபவர், எழுதுபவர் அவர். இப்போது அவர் ‘நடிகராகிவிட்ட’ பிறகு எப்படியென்று தெரியவில்லை. ஒரே ஒருமுறை சம்பிரதாயமாக போனில் பேசியதுடன் சரி. திரைப்படத்துறை அந்த வித்தியாசமான மனிதரை அப்படியே வைத்திருக்கிறதா? அல்லது போட்டுப் புரட்டி மொக்கையாக்கிவிட்டதா என்பது தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க, மனோபாலாவே அந்தக் காலத்தில் ஒருவரைப் புகழ்ந்து பேசுகிறார் என்றால் அவரைச் சந்திப்பதில் ஒரு ஆர்வம் இருக்கவே செய்தது. நேரில் சந்தித்தபோதுதான் அவரும் என்னைச் சந்திப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது. இதற்கும் காரணம் மனோபாலாதான். “நீங்க எழுதினது எல்லாம் படிச்சிருக்கேன். தவிர மனோபாலா உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்காரு” என்றபடிதான் அறிமுகமானார் மணிவண்ணன். அப்போது தாடியெல்லாம் கிடையாது. கறுப்பாக, ஒல்லியாக, கெச்சலாக இருந்தார். ஒரு விதமான பயத்துடன் இருப்பவர்போல் இருந்தார். பயமா பணிவா என்பது தெரியவில்லை.

கமலஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான கதை டிஸ்கஷனுக்காகவும், பாடல்கள் கம்போசிங்கிற்காகவும் பெங்களூர் பயணத்தை மேற்கொண்டிருந்தார் பாரதிராஜா. பாரதிராஜாவுடன் இளையராஜா, இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர், சித்ரா லட்சுமணன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் வந்திருந்தினர். வந்திருந்தது என்னமோ சிகப்பு ரோஜாக்களுக்காகத்தான். ஆனால் சிகப்பு ரோஜாக்களுடன் அலைகள் ஓய்வதில்லைக்கான அடித்தளமும் அங்கேதான் போடப்பட்டது என்பது தனிக்கதை.

கதை டிஸ்கஷன், இசைக்கோர்ப்பு, சுஜாதாவுடன் சந்திப்பு, ஷாப்பிங் இவற்றோடு சேர்ந்து புது கதாநாயகி தேடுவதிலும் மும்முரமாக இருந்தார் பாரதிராஜா. இசை கோர்ப்போ அல்லது கதை டிஸ்கஷனோ நடந்து கொண்டிருக்கும். புயல்போல உள்ளே நுழைவார் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். “சார் வர்றீங்களா மவுண்ட் கார்மல் காலேஜ் கிளாஸஸ் துவங்கப்போகுது. அங்கே போயிருவோம். கார்லயே உக்காந்து நீங்க அப்சர்வ் பண்ணுங்க. எந்தப் பொண்ணு வேணுமோ நீங்க தேர்ந்தெடுங்க. நீங்க டிக் பண்ற பொண்ணை நான் சாயந்திரம் உங்க முன்னாடி கொண்டுவந்து நிறுத்துறேன்” என்று சொல்லி பாரதிராஜாவை அழைத்துச் சென்றுவிடுவார்.

அவர்கள் அங்கே இருந்த ஆறேழு நாட்களில் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பாரதிராஜாவை இப்படி ஒவ்வொரு இடமாகக் கூட்டிப் போய்விடுவார் தியாகராஜன். பாரதிராஜாவுடன் பெரும்பாலும் இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரும் போய்விடுவார். மணிவண்ணனும் நானும் அறையில் உட்கார்ந்து அவர்கள் திரும்பிவரும்வரைக்கும் சினிமா, அரசியல், இலக்கியம் என்று சகலமும் பேசிக்கொண்டிருப்போம். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகைகள் என்று ஒன்றுவிடாமல் படிக்கும் அவருடைய இலக்கிய ஆர்வம் அளப்பரியதாய் இருக்கும். கையில் கிடைத்த எல்லாவற்றையும் படிப்பது மட்டும் அல்லாமல் அவற்றை நினைவு வைத்துக்கொள்வதும் அது பற்றி விவாதிப்பதும் அவருக்குக் கைவந்த கலையாயிருந்தது. “நாமெல்லாம் கொஞ்சம் கம்யூனிஸ்டுதாங்க. கம்யூனிஸ்ட் சித்தாந்தம்தான் எதிர்காலத்துல இந்த தேசத்தை வழிநடத்தும்” என்பார்.

“ஒரு தீவிர கம்யூனிஸ்ட் மனோபாவத்தை வைத்துக்கொண்டு எப்படி திரைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்தீங்க? அந்தச் சிந்தனைகளுடன் உங்களால் இங்கே செயல்பட முடியுமா?” என்பேன்.

“கம்யூனிசம் என்பது ஒரு சிறந்த தத்துவம்தானே? எந்தத் துறையா இருந்தா என்ன? நல்ல தத்துவத்தை நாம சார்ந்திருக்கற துறையிலே செயல்படுத்த முடியாதா என்ன” என்பார்.

“மலையாளத்திலும் வங்காளத்திலும் எத்தனையோ வித்தியாசமான கதைக்களன்களுடன் படங்கள் வருகின்றன. நாம்தான் அங்கெல்லாம் போகாமல் இன்னமும் குடும்ப உறவு முறைகளையே சுற்றிக்கொண்டு படமெடுத்துக்கொண்டிருக்கிறோம். மலையாளப் படங்கள் போல் தமிழில் படங்கள் வரணும்” என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.

அவரது கருத்துக்கள் என்னவாக இருந்தன? அவை கம்யூனிசம் சார்ந்து இருந்தனவா? அவரது இலக்கிற்கு ஏற்ப அவர் செயற்பட்டாரா? ஒரு கதாசிரியராய், ஒரு இயக்குநராய் அவர் சமூகத்தின் முன்வைத்த இலக்குகள் எப்படிப்பட்டவை? கம்யூனிசத்திலிருந்து தடம் புரண்டு வேறு பாதைகளில் பயணித்தாரா?

அவர் கருத்தியல் கொண்ட படங்களைத் தந்தவரா? அல்லது சில இயக்குநர்கள் போல வெறும் அழகின் உபாசகனாக இருந்தவரா? அல்லது வெறும் கமர்ஷியல் இயக்குநராக இருந்து தமது நிலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக விற்பனையாகும் பண்டம் என்னவோ அதனை மட்டும் உருவாக்கி உலவ விட்டவரா? போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் போக விரும்பவில்லை.

திரைப்படத்துறையில் அதன் சகல சௌகரியங்களையும் அனுபவிக்கிறவனாய் இருக்கவேண்டும்; அதே சமயம் நமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு போராளி என்ற பிம்பத்தையும் நம்மைச்சுற்றிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற இலக்குகளுடன் செயல்படும் கலைஞர்கள் திரைபடத்துறையில் கணிசமாக இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் உண்டு. அவர்களில் ஒருவராய் தம்மை வரித்துக்கொண்டவர் என்றுதான் மணிவண்ணனைச் சொல்ல வேண்டும்.

மறுநாள் சுஜாதா அங்கு வந்தபோது பாரதிராஜா, இளையராஜாவைத் தாண்டி அங்கே பேசுவதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கவில்லை. ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டராக அங்கே இருந்ததால் சற்று தூரத்திலேயே அமர்ந்து கையைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருந்ததுடன் சரி. “சுஜாதா சாரைத் தனியா சந்திக்கணும். டைரக்டர் எதிர்ல ஒண்ணும் பேச முடியாது. நானும் மனோபாலாவும் தனியாக ஒருமுறை இதற்காகவே வருகிறோம். அப்ப சந்திப்போம்” என்றார்.


அன்று பகல் அப்போது பெரிதாக ஓடிக்கொண்டிருந்த ஒரு இந்திப் படத்தைப் பார்க்க விருப்பப்பட்டார் பாரதிராஜா. சிடி மார்க்கெட் எதிரில் இருக்கும் அப்சரா தியேட்டரில் அந்தப் படம் ஓடுகிறது என்பதனால் போனில் டிக்கெட் சொல்லிவிட்டு அந்தத் தியேட்டருக்குப் போனோம். அங்கு போனபிறகுதான் படம் துவங்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லிவிட்டார்கள் என்பதும் படம் துவங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருக்கிறது என்பது புரிந்தது. பாரதிராஜாவும் இளையராஜாவும் ரசிகர்கள் முன்பு தலைகாட்ட முடியாது என்பதால் தியேட்டர் மேனேஜர் அவரது அறையில் அமர்ந்து கொள்ளச் செய்தார். எல்லாரும் உட்கார்ந்து சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். என்னை ரகசியமாய்ச் சீண்டிவிட்டு எழுந்தார் மணிவண்ணன். “சார் எதிர்லதான் சிடி மார்க்கெட் இருக்கு. நாங்க போய் உங்களுக்குப் பழம் வாங்கி வர்றோம். அப்படியே சிடி மார்க்கெட் பிற்பாடு நமக்கு ஷூட்டிங்கிற்கு உதவுமா என்பதையும் லொகேஷன் பார்த்துவிட்டு வந்துர்றோம்” என்று ‘பர்மிஷன்’ வாங்கிக்கொண்டார்.

வெளியில் வந்ததும் “அவங்களோட அடைஞ்சுபோய் இன்னும் ஒருமணி நேரம் உள்ளே உக்காந்திருக்க முடியாது. பாரதி சாரும், ராஜா சாரும் பேசுவதை இன்னும் எவ்வளவு நேரத்துக்குக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்க முடியும்? சுதந்திரமா சுத்திப் பார்க்கணும்ன்றதுக்காகத்தான் வந்தேன். வாங்க மார்க்கெட்டுக்குள்ள போவோம்” என்று சிடி மார்க்கெட்டிற்குள் நுழைந்தார்.

“அடேயப்பா எவ்வளவு பெரிசா இருக்கு” என்பதும் “என்ன சார் இது வியாபாரிங்க அத்தனைப் பேரும் தமிழர்களாகவே இருக்காங்க” என்பதும் அவர் ரசித்து வியந்த விஷயங்கள். அவரை மிகவும் கவர்ந்தவை அங்கிருந்த பழக்கடைகள். விதவிதமான பழங்கள். “இந்தப் பழங்களையெல்லாம் நான் தமிழ்நாட்டில்கூடப் பார்த்ததில்லை” என்று ரசித்து ரசித்துப் பார்த்தார். “இது என்ன இது ஊட்டி ஆப்பிள்? ஊட்டியில் பார்த்திருக்கேன். சாப்பிட்டுப் பார்த்ததில்லை. எப்படியிருக்குன்னு ருசி பார்த்ததில்லை. சாப்பிட்டுருவோம். ஆமா இதுக்குத் தமிழில் பேர் கிடையாதா?” என்று பெங்களூரில் நிறையக் கிடைக்கும் ஊட்டி ஆப்பிளை வாங்கி எனக்கும் தந்து சாப்பிட்டார். பாரதிராஜா மற்றும் இளையராஜாவுக்காகவும் வாழைப்பழம் மற்றும் ஊட்டி ஆப்பிள்களை வாங்கிக்கொண்டு தியேட்டருக்கு வந்தோம்.

மணிவண்ணனுக்கு ஆங்கிலத்தின் மீது ஒரு காம்ப்ளெக்ஸ் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். சின்னச்சின்ன ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தங்கள் கேட்பார். அதனை எப்படி உச்சரிப்பது என்று இரண்டு மூன்று முறை சொல்லிப்பார்த்துக்கொள்வார்.

அதற்கு மறுநாள் காலையில் முறைப்படியான கதை டிஸ்கஷன் ஆரம்பமான பொழுதுதான் மணிவண்ணனின் திறமையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு கதையோ அல்லது காட்சியையோ சொல்லும்போது “இது வேணா நல்லால்லை” என்பார் பாரதிராஜா. அடுத்த கணம், கணம்தான் நிமிடம்கூட இல்லை. “சார் இதை இப்படி வைச்சுக்கலாம். இங்கே ஒரு கூண்டு. அந்தக் கூண்டுல ஒரு கிளி” என்று இன்னொரு காட்சியை ஆரம்பிப்பார். “யோவ், அதெல்லாம் வேணாய்யா. கொஞ்சம் மாடர்னாச் சொல்லு”. அடுத்த கணமே இன்னொரு காட்சி. இன்னொரு சம்பவம்…. என்று இப்படிப் போய்க்கொண்டே இருந்தது அவரது கதை சொல்லும் மற்றும் காட்சிகள் சொல்லும் திறன். என்னுடைய ஆச்சரியத்தைப் பார்த்துவிட்டு “கதை சொல்றதிலும் சரி; காட்சிகள் பிடிப்பதிலும் சரி. இந்தத் தலைமுறையில செல்வராஜ்தான் பெஸ்ட். அதுக்கு அடுத்து மணிவண்ணன் சொல்லுவான். எத்தனைமுறை ரிஜக்ட் செய்தாலும் அவன்பாட்டுக்கு சலிக்காமல் அடுத்தடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பான். அதுல எத்தனைத் தேறும்னு சொல்லமுடியாது. ஆனா அதுக்காக உட்கார்ந்தெல்லாம் யோசிக்காம, gap எடுக்காம, அவன் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருப்பான்” என்றார்.

ஆற அமர யோசித்து அதற்குப் பின்னர்தான் பேனாவைக் கையிலெடுத்துப் பழக்கப்பட்ட எனக்கெல்லாம் மணிவண்ணனின் கதை சொல்லும் வேகமும் காட்சிகளை ஜோடனைப் படுத்தும் வேகமும் ஆச்சரியம் ஊட்டுவதாகவே இருந்தது. கே.எஸ்.கோபால கிருஷ்ணன், ஆரூர் தாஸ், தூயவன் போன்றவர்களெல்லாம் கதை சொல்லும் அழகு பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. மணிவண்ணனின் வேகம் ஆச்சரியப்படுத்தியது.

சில வருடங்களுக்குப் பிறகு………..

பாரதி ராஜாவின் சிஷ்யர்கள் பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, ரங்கராஜ் எல்லாரும் ஒவ்வொருவராக வெளியே வந்து தனிப்பட்ட முறையில் டைரக்ஷன் செய்ய ஆரம்பிக்கிறார்கள். வெற்றிகளையும் ருசிக்கிறார்கள். இவர்களில் பாக்கியராஜூக்கு அடுத்து மணிவண்ணன்தான் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறுகிறவராக இருக்கிறார். முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். நான்கைந்து படங்கள் எடுத்து பேசப்படும் இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார் மணிவண்ணன்.

அவ்வப்போது மனோபாலாவை சந்திக்கிற வாய்ப்பு இருந்ததே தவிர மணிவண்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.

ஒருநாள்……………தொழிற்சாலை முடிந்து  வீட்டுக்குத் திரும்பினால் “ஏம்ப்பா உன்னைத் தேடிட்டு அந்தத் தம்பி மனோபாலா வந்திருந்துச்சி. கூடவே இன்னும் இரண்டு பேரும் வந்திருந்தாங்க. அவங்க யாருன்னு தெரியலை. உடனே போன் பண்ணனுமாம். நம்பரும் தங்கியிருக்கும் இடத்தையும் ஒரு பேப்பர்ல எழுதித் தந்துட்டு போச்சு. மூணு பேரையும் ஒரு காப்பி சாப்பிட்டுப் போங்கன்னு எத்தனையோ சொல்லிப் பார்த்தேன். ‘இல்லைம்மா இன்னொரு முறை வர்றோம்’னு கிளம்பிட்டாங்க” என்றார் அம்மா.

பேப்பரில் ‘உட்லண்ட்ஸில் இந்த நம்பரில் தங்கியிருக்கிறோம். உடனே போன் பண்ணவும். அவசரம். இப்படிக்கு மனோபாலா’ என்றிருந்தது.

மனோபாலா சரி; உடன் வந்திருந்த அந்த இன்னும் ரெண்டு பேர் யார்?

குழப்பத்துடன் சென்று போன் செய்தேன். மறு முனையில் எடுத்த மனோபாலா “ஏனுங்க நாங்க வேலை மெனக்கிட்டு அத்தனை தூரத்திலிருந்து உங்க வீடு தேடி வருவோம். நீங்க பாட்டுக்கு ஆபீசு, பாக்டெரின்னு போயிருவீங்க. நாங்க வந்து அலைஞ்சிட்டுப் போகணுமாக்கும். உங்க வீட்டுக்கு என்னோட யாரு வந்தாங்கன்னு நினைக்கறீங்க? இன்னைக்கு பரபரப்பா முன்னணியில  இருக்கிற நடிகர் மோகன், அதே அளவு முன்னணியில இருக்கிற மணிவண்ணன்… மூணுபேரும் வந்தோம். முக்கியமான விஷயம். நீங்க என்ன பண்றீங்க, ஆட்டோ பிடிச்சு உடனடியாக இங்கே வர்றீங்க”

நடிகர் மோகன் மிகமிகப் பரபரப்பாக இருந்த நேரம் அது. மணிவண்ணனும் முன்னணியில் இருந்தார். எங்க அம்மாவைப் பொறுத்தவரை மனோபாலா என்னுடைய நண்பர் என்பதாலும் வீட்டிற்கு ஏற்கெனவே வந்திருப்பவர் என்பதாலும் அவரை மட்டும் தெரியும். நடிகர் மோகனையெல்லாம் அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்த நடிகர்கள் என்றால் சிவாஜி, எம்ஜிஆர், சந்திரபாபு, சிவகுமார் ஆகியோர் மட்டும்தான்.

ஆட்டோ பிடித்து உட்லண்ட்ஸ் சென்றேன். மனோபாலாவும் நடிகர் மோகனும் மட்டுமே இருந்தார்கள். மணிவண்ணன் இருக்கவில்லை. மனோபாலாவும் சரி, நடிகர் மோகனும் சரி ஏதோ ஒரு பதட்டத்தில் இருப்பதுபோல் இருந்தார்கள். மணிவண்ணன் விஷயத்தில் ஏதோ ஒரு சிக்கல். அதனைச் சரி செய்யவே பெங்களூர் வந்திருக்கிறார்கள். ஒரு மூன்று நாட்களுக்குத் தங்கியிருந்து அந்தச் சிக்கலைச் சரிசெய்த பின்னரே பெங்களூரை விட்டுக் கிளம்பப் போகிறார்கள்………………..

“பிரச்சினையை நாங்க பார்த்துக்கறோம். நீங்க கூட இருக்கணும்” என்றார் மனோபாலா.

“சரி” என்றேன்.

அடுத்த நாள் ஜெயநகர் சென்று மணிவண்ணனைப் பார்த்தபோது “சாரி அமுதவன் சார். உங்களோடெல்லாம் ஃப்ரீயாப் பேச, பழக முடியலை. அடுத்த முறை பெங்களூர் வரும்போது நாம வழக்கம்போல் சந்திக்கலாம்” என்றார்.

மறுபடி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மணிவண்ணனைச் சந்தித்தது சிவகுமார் நடித்த ‘இனி ஒரு சுதந்திரம்’ படப்பிடிப்பில்,  குன்னூரில்! அந்தப் படத்தை ஒரு லட்சிய வெறியுடனும், சாதித்து விடுவோம் என்ற தீவிரத்துடனும், உத்வேகத்துடனும் எடுத்துக்கொண்டிருந்தார் மணிவண்ணன்.

சிவகுமாருக்கும் மிகப்பெரிய ஈடுபாடும் நம்பிக்கையும் அந்தப் படித்தின் மீது இருந்தது. ‘ஐய, இந்தப் படத்துக்குப் போயி உத்வேகமும்,தீவிரமும், நம்பிக்கையுமா?’ என்று இன்றைய ‘கருத்துவாலாக்கள்’ அலட்சியமாக ஒப்பீனியனை விசிவிட்டுப் போகலாம். ஆனால் அந்தப் படைப்பு உருவாகும் வேளையில் ஒருவித அர்ப்பணிப்புடன் அந்தப் படைப்பில் பங்கு கொள்ளும் கலைஞனின் ஈடுபாட்டையும் உழைப்பையும் சாதாரணமாகக் கருதுவதற்கு இல்லை. வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டுப் போகிறவர்களுக்குப் படைப்பின் வலி தெரியாது.

கருத்துச் சொல்கிறவர்களுக்கு பிரமாத அறிவு தேவை என்பதுகூட அல்ல ; வெற்றி பெற்றுவிட்டால் ‘ஆகா எப்பேர்ப்பட்ட சாதனை’, தோல்வியடைந்து விட்டால் ‘அட இதுக்குப் போயி……’ இதைத் தவிர அவர்களிடம் என்ன இருக்கிறது?

ஆனால் ‘இனி ஒரு சுதந்திரம்’ மிகப்பெரும் தோல்வியைத் தந்த படம். இந்தப் படத்தின் தோல்விக்கு மணிவண்ணனின் சொதப்பலான திரைக்கதை அமைப்புதான் காரணம் என்பது படத்தைப் பார்த்தபோதுதான் புரிந்தது. அத்தனை பலவீனமாக திரைக்கதையை அமைத்திருந்தார் அவர். அரசியல், அதிகார வர்க்கம், ஆளுகின்றவர்களின் போக்கு என்றெல்லாம் தமது கருத்துக்களையும் சிந்தனைகளையும் அந்தப் படத்தில் கொட்டியிருந்தார். குன்னூரில் அவரைச் சந்தித்தபோது “உங்களைப் போன்றவங்க எல்லாம் பேசற அளவுக்கு, பாராட்டற அளவுக்கு இந்தப் படம் இருக்கும். நான் எந்த மாதிரி படங்களை எடுக்க இருக்கிறேன்றதுக்கு இந்தப் படம் ஒரு மாதிரியாய் இருக்கும். மலையாளத்துல மட்டும்தான் இப்படியெல்லாம் கதை சொல்ல முடியுமா நம்மாலும் சொல்ல முடியும்னு காட்டறேன்” என்றார்.

ஏகமாய்க் குழம்பிப்போய் படத்தையும் குழப்பி வைத்திருந்ததைத்தான் பார்க்க முடிந்தது.

‘இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் எதிரொலித்த கருத்துக்கள்தான், அந்த இலக்குதான் நையாண்டியாய் மாறி வேறொரு வடிவம் எடுத்து அமைதிப்படையாக சத்யராஜ் காம்பினேஷனில் வெளிவந்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே பி.வாசுவின் படப்பிடிப்பில் இருந்த நண்பர் சத்யராஜ் அமைதிப்படையின் காட்சிகளையும் வசனங்களையும் சிலாகித்துச் சொல்லும்போதேயே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டிருந்தது. “நிச்சயமா இந்தப் படத்துல நானும் மணியும் சொல்லி அடிக்கிறோம்” என்றே மிக நம்பிக்கையுடன் சொன்னார் சத்யராஜ். சொன்னமாதிரியே வெற்றி பெற்றதுடன் ‘மணிவண்ணனின் பாணி இதுதான்’ என்பதையும் கோடிட்டுக் காட்டியது அந்தப் படம்.

இதோ இப்போது இரண்டாவது பாகமும் வெளிவந்து வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

மணிவண்ணன் ஒரு நடிகராக மாறி வில்லன் வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்த நேரம். ஏதோ ஒரு திருமண விழாவில் சந்தித்தபோது “என்ன தளத்தையே மாத்திட்டீங்களே?” என்றேன்.


“இண்டஸ்ட்ரியில நம்மைத் தக்க வச்சுக்கணும்னா அது போற போக்கில போக வேண்டியிருக்கே. நான் பாட்டுக்கு போயி நிக்கிறேன். என்னமோ பேசச்சொல்லித் தர்றாங்க. அதை அப்படியே ஒப்பிச்சிட்டு வராம எம்.ஆர்.ராதா பாணியைச் சேர்த்து அடிக்கிறேன். இதான் நம்ம கான்ட்ரிபியூஷன். நல்லா கிளிக் ஆயிருச்சு. ஓடறவரைக்கும் ஓடட்டுமே. சுலபமா பணம் வருது. அதே சமயம் ஃபீல்டுலேயும் சக்சஸ்ஃபுல்லா இருக்க முடியுது. டைரக்ஷன் மாதிரி எல்லாத்தையும் நம்ம தலையிலேயே தூக்கிப்போட்டுக்கொண்டு டென்ஷன் ஆக வேண்டியதில்லை. நம்ம நடிப்பையும் ஒத்துக்கறாங்கன்னா நமக்கு சந்தோஷம்தானே” என்றார். “ஆனா அதுக்காக டைரக்ஷனை எல்லாம் விடப்போறதில்லை. சரியான நேரம் பார்த்து திருப்பி வந்துருவோம் இல்லை” என்றார்.

மறுபடியும் இயக்குகிறார் என்று தெரியவந்தபோது அந்தப் படைப்பாளியின் நெஞ்சில் உள்ள தீ அவ்வளவு சீக்கிரமாய் அணைந்துவிடாது என்பது நிரூபமானது. ஆனால் ஐந்தாறு வருடங்களாகவே உடம்பு சரியாக இல்லை என்ற தகவலும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தது.
உடம்பை சரியாக வைத்துக்கொள்வதில் ஒரு சிலர் எடுக்கும் அக்கறையை நிச்சயம் அனைவரும் எடுப்பதில்லை. திரைப்படத்துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு இங்கேயே ஒரு அதிசய சொர்க்கம் திறந்து வைக்கப்பட்டுவிடுகிறது. இதில் எல்லாருக்கும் நுழைய வாய்ப்புக் கிடைத்துவிடுவதில்லை. வாய்ப்புக் கிடைத்தவர்கள் ‘ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்’ என்று நம்ம தலைவரே சொல்லியிருக்காருப்பா’ (இந்த இடத்தில் இவர்களின் தலைவர் கண்ணதாசன்) என்று சொல்லி அனுபவிக்கின்றனர். அதிகபட்ச ‘கொண்டாட்டம்’ உடலிலுள்ள உயிர்சக்தியைப் பறித்து விடுகிறது. இப்படி ‘உயிர்சக்தி’ பறிபோய் ஐம்பத்தைந்து வயதிலேயே போய்விட்டவர் இவர்களின் தலைவரான கண்ணதாசனும்தான். இந்தக் கூட்டத்தில் விலகியிருப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே.

அந்த சந்திப்புக்குப்பின் மணிவண்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவரது அரசியல் அரங்கேற்றங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதானிருந்தன. வைகோ ஆரம்பித்த கட்சியில் சேர்ந்தார் ; விலகினார். ஈழ ஆதரவுப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். சீமான் ஆரம்பித்த கட்சியில் தம்மை வெகு தீவிரமாக இணைத்துக்கொண்டார் என்பதெல்லாம் மணிவண்ணனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இயல்பான விஷயங்களாகவே இருக்கும்.
 
ஒன்று மட்டும் உறுதி.

அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது அரசியலிலா திரைபடத்துறையிலா என்ற கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்வதில் குழப்பமிருக்கலாம்.

எதில் நமக்கு விருப்பம் அதிகம் என்பதில் அவருக்கே கூட குழப்பம் இருக்கலாம்.

ஆனால், திரைப்படத்துறையில் கிடைத்த பிராபல்யத்தையும் புகழையும்  வைத்துக்கொண்டு அரசியலில் இறங்கும் ஒரு சிலரைப் போல இறங்கியவர் அல்ல அவர். தம்மை ஒரு போராளியாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்ப காலம்தொட்டே முனைப்புடன் இருந்தவர்தான் மணிவண்ணன்.

அதனால்தான் “நான் இறந்தால் என் உடல்மீது புலிக்கொடிதான் போர்த்தவேண்டும்; நாம்தமிழர் கட்சிக்கொடி போர்த்தவேண்டும்’ என்றெல்லாம் அவர் பேசியதில் எந்தவிதக் கள்ளமும் கபடமும் இல்லை. அவையெல்லாம் நேரடியாக உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.

திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்போராளி அவர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

சிடி மார்க்கெட்டைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நினைவு வராமல் போகாது மணிவண்ணன்.





Monday, June 3, 2013

இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் அவருக்குப்பின் வந்த இளம் இசையமைப்பாளர்களும்………………….



-   
(பதிவைப் படிக்க ஆரம்பிக்குமுன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதற்காக இங்கே செரினா வில்லியம்ஸின் படம்? என்ற கேள்வி வரும். காரணமிருக்கிறது. பதிவின் கடைசியில் இதற்கான பதில் இருக்கிறது.)

தமிழின் இரு பெரிய பத்திரிகைகளான குமுதத்திலும் ஆனந்தவிகடனிலும் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களின் பேட்டிகள் வந்துள்ளன. இளையராஜாவுடையது பேட்டி அல்ல; வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் சொல்லும் விடைகள். ஏஆர் ரகுமானுடையது விகடன் நிருபருக்கு அளித்த பேட்டி. இரண்டிற்கும் ‘வேறுபாடு’ இருந்தாலும் விடை ஒன்றுதான். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொல்லியுள்ள பதில்கள்.

‘உங்களுக்குப்பின் வந்த இசையமைப்பாளர்கள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்பதுதான் கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வி இருவரிடமும் வெவ்வேறு வடிவத்தில் வைக்கப்படுகிறது. ‘இளைய இசையமைப்பாளர்களைப் பாராட்டாதது ஏன்?’ என்பது இளையராஜாவிடம் வைக்கப்படும் கேள்வி.






அவர் சொல்லியுள்ள பதில் இது; ‘அவர்கள் ஒரு படத்திற்கு இசை அமைத்துவிட்டார்கள் என்பது ஒரு தகுதி அல்ல. அதை நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்பதும் ஒரு தகுதி அல்ல. அதற்காக நான் பாராட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சரி அல்ல. நீங்கள் ஒரு பாடலைக் கேட்பதைப்போல நான் கேட்பதில்லை. அதில் எவ்வளவோ விஷயங்களும் உள்அர்த்தங்களும் உள்ளன. உண்மையிலேயே விஷயங்களை உள்ளடக்கிய பாடலை ஒரு உண்மைக்கலைஞனால் பாராட்டாமல் இருக்கமுடியாது. நீங்கள் பாராட்டிய விஷயங்கள் எல்லாம் ஒரு மாதத்திற்குமேல் தாங்கமாட்டேனென்கிறது என்றால் அதை நான் எப்படிப் பாராட்டுவது?ஏன் பாராட்டவேண்டும்?

ஒன்று……….அந்த இசையில் எனக்குத் தெரியாத ஒன்றை அடடா இதை நான் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே என்றும் இந்த ஐடியா எனக்கு வராமல் போய்விட்டதே என்றும் என்னை எண்ணவைக்கவோ கற்றுக்கொள்ள வைக்கவோ வேண்டும். இதுவரை இசைமேதைகள் தொடாதவற்றைத் தொட்டிருக்கவேண்டும்.

நான் இந்த ஜன்மம் முழுதும் கற்க வேண்டிய விஷயங்கள் நம் முன்னோர்களின் இசையில்தான் இருக்கிறது. அவர்களை வணங்கி வழிபடுவதே எனக்குப் புண்ணியம். அது இந்தத் தலைமுறைக்கு ஆகிற காரியமா என்ன?’-

-இதுதான் பல இசை விரும்பிகளால் இசைஞானி, ராகதேவன், இசைக்கடவுள் என்று கொண்டாடப்படுகிறவரின் பதில்.

கேள்வி ரொம்பவும் எளிமையானது. ‘உங்களுக்குப்பின் வந்த இளைய இசையமைப்பாளர்களை நீங்கள் ஏன் பாராட்டுவதில்லை? என்ற கேள்வியிலேயே –

“தம்பி நீ நல்லா வருவே. இன்னமும் நீ தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சுக்கணும். முயற்சி பண்ணு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு” என்று இளையவர்களை முதுகில் தட்டிக்கொடுத்தலோ ஊக்கப்படுத்துதலோ உற்சாகப்படுத்துததலோ அடங்கியிருக்கிறது.

இளையராஜா போன்ற மூத்த இசையமைப்பாளர்கள் இளைய இசையமைப்பாளர்களுக்கும் இளைய கலைஞர்களுக்கும் செய்யவேண்டிய மிக மிக சாதாரண கைங்கர்யம் இது என்பது மட்டுமல்ல, அதற்கான கடமையும் இளையராஜா போன்றவர்களுக்கு இருக்கிறது.
  
புகழ்பெற்ற மூத்த கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதும், பணம் சம்பாதிப்பதும், எந்நேரமும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டே இருக்கவேண்டுமென நினைப்பதுவும் மட்டுமே அவர்களின் சமூகப் பங்களிப்பு ஆகிவிடமுடியாது.
தங்களுக்குப் பின்னே தங்கள் துறையில் தங்களைத் தொடர்ந்துவரும் இளையவர்களை முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் தட்டிக்கொடுத்து அவர்களை ஊக்குவிப்பதும்கூட அவர்களுடைய சமூகப் பங்களிப்புகளில் ஒன்றுதான்.

சமூகப் பங்களிப்பு மட்டுமல்ல, கடமையும்கூட. இதற்காக யாரும்  ‘நீங்கள் பள்ளிகளை ஆரம்பித்து இளைய கலைஞர்களை உருவாக்குங்கள்’ என்று சொல்லவில்லை.

வளரத் துடிக்கும் கலைஞர்களைக் குறைந்தபட்சம் வசைபாடுவதும் கேலி பேசுவதும் புறம் சொல்வதும், என்னைப்போல முடியுமா என்று சவால் விடுவதும், ‘உன்னிடம் என்ன இருக்கிறது?’ என்று நையாண்டி செய்வதும், எனக்குத் தெரியாத ஒன்றை நீ தந்துவிட்டாயா? என்று அகம்பாவத்துடன் வினவுவதும் ‘இந்த ஐடியா எனக்கு வராமல் போய்விட்டது என்று நான் ஒன்றும் நினைக்கவில்லையே’ என்று ஏகடியம் செய்வதும் எந்தவகையில் சேர்த்தி என்பதே புரியவில்லை.

இத்தகைய ஆணவப்போக்கு நல்லதொரு கலைஞருக்குத் தகுமா என்பதுதான் கேள்வி.

விஸ்வநாதனுக்குப் பிறகு திரைப்படத்துறைக்கு வந்து விஸ்வநாதனின் இடத்தைப் பிடித்தவர் என்று கருதப்படும் இளையராஜாவைப் போலவே இளையராஜாவுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தவர் என்று கருதப்படும் ஏ.ஆர். ரகுமானிடம் இதே கேள்வி அல்லது இதே தொனியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

 

ரகுமான் சொல்கிறார்….”இப்ப வர்ற இளைஞர்களுக்கு நிறையத் திறமை தொழில்நுட்ப அறிவு இருக்கு. எதையும் தேடிப் பிடிக்கறதுக்கு அவங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. ………….இப்ப ஒருத்தர் ஒரு விஷயத்தை நோக்கி கடுமையா உழைச்சா அதில் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம்.”- இது ரகுமான்!

இன்னொரு சிக்கலான, அவரது ஈகோவைத் தூண்டிவிடுகிறமாதிரியான அடுத்த கேள்வி வைக்கப்படுகிறது. “உங்க இடத்தை யார் பிடிக்கமுடியும்னு நினைக்கறீங்க?”

ரகுமான் சொல்கிறார்; “யார் நினைச்சாலும் பிடிக்கமுடியும். என் இடத்தைப் பிடிப்பது சுலபமான விஷயம். இசைக்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஒவ்வொருத்தரோட இசையும் ஒரு தனித்தன்மையோட இருக்கும். உங்க தனித்தன்மையும் மக்களுடைய அலைவரிசையும் ஒண்ணா சிங்க் ஆச்சுன்னா நாளைக்கு என் இடத்தில் நீங்க இருப்பீங்க. 

மக்கள் கேட்டா அது நல்ல பாட்டு. அவங்க கேக்கலைன்னா அது சுமாரான பாட்டு. அவ்வளவுதான். இதை மனசுல வச்சுட்டுத்தான் வேலைப் பார்க்கறேன்”

கேள்வி கேட்டவர் அவ்வளவு சுலபமாக ரகுமானை விடுவதாக இல்லை.

அவரது அகங்காரத்தை எப்படியாவது சிறிய அளவிலாவது சீண்டிப் பார்த்துவிட முடியுமா என்பதற்கேற்பவே அடுத்த கேள்வியையும் வீசுகிறார். “இவ்வளவு உயரம் வளர்ந்த பின்னாடி கர்வம் வர்றதைத் தடுக்கறது கஷ்டமாச்சே?”

“நானும் மனுஷன்தான். எனக்கும் தடுமாற்றங்கள் வரும். ஒரு விநாடிதான். கடவுளோட படைப்புக்களைப் பத்தி யோசிக்கும்போது நாமெல்லாம் ஒண்ணுமே கிடையாதுன்னு தோணும். அதோட தூக்கிப்போட்டுட்டு வேலைப் பார்க்கக் கிளம்பிடுவேன்” என்கிறார் ரகுமான்.

ஆக, எத்தனைக் கேட்டும் அங்கே கர்வத்துக்கோ அகங்காரத்திற்கோ ஆணவத்திற்கோ இடமில்லை. துளியும் இடமில்லை.

உலக அரங்கில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு இசைக்கலைஞன், ரசிக வட்டம் மட்டுமின்றி உலகின் வணிக எல்லைகளிலும் இளவரசனாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு கலைஞன்- எத்தனை இலகுவாகத் தன்னுடைய இயல்பை பாசாங்கற்று வெளிப்படுத்துகிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாயிருக்கிறது.

‘நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்’ என்ற கண்ணதாசனின் வரி நினைவுக்கு வந்து செல்கிறது. Hats off Rahman!

இருவருடைய மனோநிலைகளையும் இங்கே பேசும்போது சிலருக்குக் கோபம் வரும். மிக அதிகமான கோபமே வரும். பலருக்கு இளையராஜாவுடன் ரகுமானைச் சேர்த்துப் பேசுவதே பிடிப்பதில்லை. இளையராஜா எத்தனைப் பெரியவர்? அவருக்குப் பக்கத்தில்போய் இந்தப் பையனை நிற்கவைப்பதா? என்று பொருமுகிறார்கள்.

அவர்கள் ஒரு விஷயத்தை சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள். இளையாராஜாவுக்கு முன்னால்  ஒரு மிகப்பெரிய முன்னோர்கள் வரிசையே இருக்கிறது- இளையராஜாவுக்கு முன்னால் எம்எஸ்வியே இருக்கிறார். அவருக்கும் முன்னால் கே.வி.மகாதேவன் இருக்கிறார். அந்த முன்னோர்கள் வரிசையில் கொஞ்சமும் ஆசூயை இல்லாமல் இளையராஜாவை நிறுத்துகிறார்கள். சிலர் அப்படி. இன்னும் சிலரோ இதைவிடவும் மோசம். இளையராஜாவை ஒரு சுயம்பு என்று எண்ணுகிறார்கள். தமிழ்த்திரை இசையைக் கண்டுபிடித்தவரே இளையராஜாதான். தமிழகத்திற்கும் உலகிற்கும் இசையை அறிமுகப்படுத்தியவரே இளையராஜாதான் என்று கண்மூடித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இசை என்பது இளையராஜா உலகிற்கு அளித்த கொடை என்பதாக இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் ரசிகர் ஒருவரின் ஞாபகம் வருகிறது. தொலைபேசித் தொழிற்சாலையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அது. எம்ஜிஆருக்கு உடல்நிலை மோசமாகி குணப்படுத்துவதற்காக அமெரிக்கா கொண்டுசெல்வதாகப் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்த எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் சொன்னார். “இவனுங்க எதுக்காக எங்க தலைவரை இப்படியெல்லாம் பண்றானுங்கன்னு தெரியலை. அவருக்கு என்ன ஆயிடப்போகுது? சாவா வந்துரும்? சாதாரண மனுசப்பிறவியா இருந்தா ஏதாவது ஆகும். எங்க எம்ஜிஆர் தெய்வம். அவருக்குப்போய் என்ன ஆயிடும்?”

கிட்டத்தட்ட இந்த ரசிகரின் மனநிலையில்தான் இணையத்தில் உலா வரும் பல இளையராஜா ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் சோகம். அந்த எம்ஜிஆர் ரசிகராவது பரவாயில்லை. அவருடைய படிப்பறிவு குறைவு. இணையத்தில் உலா வரும் பெரும்பாலான இளைஞர்கள் நன்கு படித்தவர்கள். படிப்பிற்கும் வேறு பல விஷயங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது இவர்களாலும் உறுதிப்படுகிறது. இவர்களின் அசைக்கமுடியாத சித்தாந்தம் இதுதான். ‘இசை என்றாலேயே இளையராஜாதான். அதற்கு முன்னும் யாருமில்லை; பின்னும் யாருமில்லை’.

பாவம் இவர்கள்.

காலம் இவர்களுக்காகவெல்லாம் காத்துக்கொண்டும் இருப்பதில்லை. இரக்கப்படுவதும் இல்லை. அதுபாட்டுக்குத் தேவையான சமயத்தில் ஒவ்வொருவரையும் தேவையான இடத்தில் தேவையான உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்துக்கொண்டே இருக்கிறது. அது பாட்டுக்கு நடைபோட்டுக்கொண்டே இருக்கிறது.

விஸ்வநாதனுக்குப் பிறகு இளையராஜா வந்தார். இளையராஜாவுக்குப் பிறகு ரகுமான் வந்தார். ரகுமானுக்குப் பிறகு இன்னொருவர் வருவார். இப்படித்தான் நடைபோடும் காலம். இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்கவும் கூடாது. நின்ற இடத்திலேயே நின்று ‘குதித்துக்கொண்டிருக்கவும்’ கூடாது.

இளையராஜா குமுதத்தில் தெரிவித்திருந்த கூற்றுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் வந்ததாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இணையத்தில் எந்தவிதமான எதிர்ப்பும் வரவில்லை. மற்ற எல்லா விஷயங்களுக்கும் வீடுகட்டி சதிராடி கும்மியடித்து கூறுகட்டும் பதிவர்கள் இளையராஜாவின் இத்தகைய அடாவடித்தன பேச்சுக்கு வாயையே திறக்கவில்லை. இதையே ரகுமானோ அல்லது ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு புறம்போக்கோ சொல்லியிருந்தாலோ இந்நேரம் நாடு கடத்தும் அளவு படுத்தி எடுத்துவிட்டிருப்பார்கள்.

விகடனில் ரகுமானின் பேட்டி வருகிறது. அதே பேட்டி விகடனின் இணையத்திலும் வருகிறது. விகடன் இணைய இதழ் பின்னூட்டத்தில் இதற்கான கருத்துக்கள் நூற்றுக்கும் மேல் வந்துள்ளன. அவர்களில் யாரோ ஒருவர் ரகுமானையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் போலும். அவ்வளவுதான். கிளர்ந்து எழுந்துவிட்டார்கள் இளையராஜாவின் ரசிகர்கள்.

‘நான் இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்தவனில்லை, வாழ்ந்தவன். என் இனிய பொன் இரவுகளை அவரது இசை மட்டுமே உருவாக்கமுடியுமென நான் நம்புகின்றேன். ஒரு இசை மேதையைப் புகழ இன்னொரு இசைமேதையைக் கேவலப்படுத்துவது என்ன நியாயம்?’ – என்று குமுறுகிறார் ஒருவர். இவருக்கு எந்த பதிலும் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் இவரே சொல்லிவிட்டார். நான் இளையராஜா இசையைக் கேட்டு வளர்ந்தவனில்லை- ‘வாழ்ந்தவன்.’ ஆக இளையராஜா இசையை மட்டுமே கேட்டுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த ஒரு காரணத்தினாலேயே இவர் இன்னமும் வளரவே இல்லை.

அவருக்கான பொன் இரவுகளை எப்படி இளையராஜா மட்டுமே உருவாக்கமுடியுமென அவர் நம்புகிறாரோ அப்படியே இன்னொருத்தருக்கான பொன் இரவுகளை லதா மங்கேஷ்கர் மட்டுமே உருவாக்கமுடியும். கிஷோர்குமார் மட்டுமே உருவாக்கமுடியும். முகமதுரபி உருவாக்கமுடியும். பி.சுசீலா உருவாக்கமுடியும். டிஎம்எஸ் உருவாக்கமுடியும். கேவிமகாதேவன் உருவாக்கமுடியும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி உருவாக்கமுடியும். வெறும் விஸ்வநாதனே உருவாக்கமுடியும். பிபிஎஸ் உருவாக்கமுடியும். கேஜே யேசுதாஸ் உருவாக்கமுடியும். ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கமுடியும். ஏன் இன்றைய ஹாரிசும் ஜிவிபிரகாஷ்குமாரும்கூட உருவாக்கமுடியும்.

அட அதெல்லாமில்லை என்றாலும் யாரோ ஒரு சரளாவோ கோமளாவோ கூட உருவாக்கமுடியும். ஆக, இது ஒன்றும் பிரச்சினை இல்லை.

இன்னொருவர் சொல்கிறார்; ‘அடக்கம் தனிமனித குணம். அதற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. 1976-ல் வந்த இளையராஜாவின் பெருமையை இன்றும் கேட்டு ரசிக்கமுடியும். அவரது இசையமைப்பை வெல்ல இன்னொருவன் இன்றுவரை தமிழகத்தில் இல்லை. இனி ஒரு காலத்தில் வரலாம்.’

அடக் கஷ்டகாலமே, இன்றைய புதிய பாடல்களுக்கான நிகழ்ச்சிகளைத் தவிர பழைய பாடல்களை ஒளிபரப்புவதற்கென்றே ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் பொதிகை, ஜெயாடிவி, ஜெயாபிளஸ், ராஜ்டிவி, கேப்டன், வசந்த், மெகாடிவி, கலைஞர், விஜய் என்று ஏகப்பட்ட சேனல்களில் போதும் போதும் என்னுமளவுக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறார்களே.

போதாததற்கு வெறும் பழைய பாடல்களை போடுவதற்கென்றே ஏறக்குறைய நான்கோ ஐந்தோ தனிச்சேனல்களே உள்ளனவே. முரசு, ஜெயா மியூசிக் என்று. ஏதேதோ பெயர்களில்… இவற்றில் போடப்படும் பாடல்களை கவனித்திருக்கிறீர்களா?

எல்லாமே இளையராஜா காலத்துக்கு முற்பட்டவை.
 
அந்தப் பாடல்களுக்கு இருக்கும் மவுசையும் புகழையும் யாரால் சீர்குலைக்க முடியும்? அதனால்தானே உங்களைப் போன்றவர்களுக்குப் புரியட்டும் என்று கங்கை அமரனும் இளையராஜாவும் வாய்ப்புக்கிடைக்கும் இடத்திலெல்லாம் “நாங்கள் இன்றைக்கு 
வாழும் வாழ்க்கை இந்த பங்களா இந்தக் கார் இந்த வசதி இவையெல்லாம் விஸ்வநாதன் போட்ட பிச்சை” என்றல்லவா சொல்கிறார்கள்?



இளையராஜா இன்னமும் ஒருபடி மேலே போய் “விஸ்வநாதன் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எங்களின் இன்றைய சாப்பாடு” என்றல்லவா சொல்கிறார்!

இவற்றையெல்லாம் கேட்டபிறகுகூட இவற்றிலுள்ள தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் சவடால் பேச்சுப் பேச உங்களால் எப்படி முடிகிறது?
அதுவும் நீங்கள் ‘பதில்’ சொல்லும் ஏ.ஆர்.ரகுமான் என்ன அனாமத்து ஆசாமியா?

உலக அரங்கின் உச்சியிலே நிற்கும் ஒரு இந்தியன் – இசைத் தமிழன்!

ஏ.ஆர்.ரகுமானின் ஒரு இசை ஆல்பம் வருகிறது என்றால் உலகின் பல பகுதிகளிலே மக்கள் முதல்நாளே கியூவில் நின்று அதனை வாங்குகிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் ஒரு படம் ஒப்புக்கொள்கிறார் என்றால் எத்தனைக் கோடிகள் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

திரைப்படத் துறையிலிருந்து ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

அது இரவு நேரம்…. ரகுமானைப் பார்ப்பதற்காக ஒரு நண்பர் போயிருக்கிறார். அங்கு சென்ற நண்பர் அங்கே பார்த்த காட்சியைப் பார்த்ததும் திகைத்துப் போயிருக்கிறார். காரணம் அந்த இரவு நேரத்தில் கையில் தலையணையுடன் இரண்டொருவர் காத்திருக்க……..சிலபேர் அங்கிருந்த சோபாக்களில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்களாம். இவ்வாறு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்தனைப் பேருமே இந்தியாவின், தமிழின், தெலுங்கின் மிகப்பெரும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்!

அடுத்து நம்மைக் கூப்பிடமாட்டாரா, அடுத்து நம்முடைய பாடல் இசை வடிவம் பெறாதா…அடுத்த ஒப்புதல் நமக்குக் கிடைக்காதா என்று காத்துக்கிடக்கும் கூட்டம் அப்படிப்பட்டது!

-இப்படி ஒரு கமர்ஷியல் டிமாண்டும், நேரமின்மையும், உச்சகட்ட புகழும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை பவ்வியத்துடன் எவ்வளவு பணிவுடன் பேசுகிறார் என்பதைப் பாருங்கள்.

இளையராஜாவின் பணிவும் பவ்வியமும் வெறும் விஸ்வநாதன்-கண்ணதாசனுடன் முடிந்துவிடுகிறது. இவர்கள் இருவரைத்தவிர அவர் யாரையுமே மதிப்பதுமில்லை. மரியாதையுடன் பார்ப்பதுமில்லை.

வேறொரு வாசகர் விகடன் தளத்தில் இன்னொரு கருத்தை நினைவு கூர்ந்திருந்தார். ‘ஒரு பொங்கல் சன்டிவி நிகழ்ச்சியில் இளையராஜா சொன்னார். “எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று கியூவில் நிற்கிறார்கள். வேறு கதியே இல்லை. இன்றைக்கு இசைத்துறையில் கிடையாது. அப்படி ஒன்றும் வரவும் போவதில்லை. அதனால் நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி. வேறு நாதியே இல்லை” அன்றிலிருந்து அவர் மீதிருந்த மரியாதையே போய்விட்டது’ என்று சொல்லியிருந்தார் அந்த வாசகர்.

உடனே அடக்கம் தனிமனித குணம் அதற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்று ‘அடக்கமின்மைக்கு’ ஆதரவாய்க் களம் இறங்க சிலர் ஓடி வருகிறார்கள்.

அடக்கமில்லாத ‘திறமையை’ இந்த உலகம் நிச்சயம் கொண்டாடும்.

எப்போது தெரியுமா?

தொடர்ச்சியான வணிகவெற்றிகள் இருந்துகொண்டே இருக்கும் சமயம்வரை.

வணிக வெற்றிகளின் பரபரப்பு என்றைக்கு ஓய்கிறதோ அன்றைக்கு அடக்கமின்மை, ஆணவம், கர்வம், தலைக்கனம், அகங்காரம் இம்மாதிரியான கல்யாண குணங்கள் கொண்ட ஆசாமி எத்தனைத் திறமையானவராக இருந்தாலும், எத்தனை சாதனைகள் செய்தவராக இருந்தாலும், எத்தனைக் காலம் ஆட்சி புரிந்தவராக இருந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலை இல்லாமல் காலச்சுழற்சியின் கடைசி முனைக்குத் தூக்கிக்  கடாசிவிட்டுப் போய்க்கொண்டேயிருக்கும்.

இன்னொரு அதிபுத்திசாலி ‘மன்மோகன் சிங்கிற்குக்கூடத்தான் அடக்கமும் பொறுமையும் இருக்கிறது. அதற்காக அவரை இந்தியாவின் சிறந்த பிரதமர் என்று சொல்லமுடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்.

இவர்களுக்கெல்லாம் பணிவு பண்பு இவை பற்றியெல்லாம் கவலைக் கிடையாது. கவலைக்கிடையாது என்பது மட்டுமல்ல; அவையெல்லாம் தேவையுமில்லை என்று நினைக்கிற கூட்டம்தான் இவர்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. ‘திறமை’ இருக்கிறவன் என்றால் டெல்லியில் ஐந்துபேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழித்துக்கொன்றார்களே அவர்களில் ஒருவனுக்கு ஏதோ ஒரு ‘திறமை’ இருக்கிறது என்றால் அவனை விட்டுக்கொடுக்காமல் கொண்டாடவேண்டும் என்பது இவர் கட்சி போலும்..

நாம் இளையராஜாவுக்கு வருவோம்.

இளையராஜாவைப் பற்றி நினைக்கும்போது செரினா வில்லியம்ஸ் பற்றிப் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. செரினா உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் சாம்பியன். பதினைந்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்குச் சொந்தக்காரர். அவரை ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதியில் தோற்கடித்தவர் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் என்ற இருபது வயதான அமெரிக்க வீராங்கனை. அவர் செரினாவைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரினாவை நான் தோற்கடித்த பிறகு அவர் என்னுடன் பேசியது கிடையாது. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்.

சக வீராங்கனைகளுடன் அவர் நன்கு பழகக்கூடியவர் என்று மக்கள் நினைக்கலாம். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அவர் கர்வம் பிடித்தவர். ஆஸ்திரேலிய போட்டியில் தோற்றபிறகு அவர் ஒரு வார்த்தைகூட என்னிடம் பேசவில்லை. சக வீராங்கனை என்ற முறையில் ஹாய் என்றுகூட சொல்லவில்லை. என்னை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. அதன் பின்னர் நாங்கள் இருவரும் அறையைக்கூட ஒன்றாகப் பகிர்ந்துகொள்ளவில்லை. சமூக வலைத்தளத்தில்கூட என்னைப் பின்பற்றுவதைத் தவிர்த்துவிட்டார். தோல்விக்குப் பின்னர் சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த அவர் என்னை உருவாக்கியதாக தெரிவித்திருந்தார். அதற்கு ‘என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்’ என்று நான் பதிலளித்திருந்தேன். ஆட்டோகிராபுக்காக நாள் முழுக்க நான் காத்திருந்தேன். நான் காத்திருந்த இடத்தை மூன்று முறை கடந்து சென்ற அவர் போஸ்டரில் கையெழுத்துப் போடவில்லை” என்றிருக்கிறார்.

செரினா வில்லியம்ஸின் இந்த குணங்கள் இளையராஜாவிடமும் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.