Thursday, February 18, 2010

கேள்வி - பதில்

கே : ஆனந்த விகடன் இப்போதைய வடிவம் எப்படி இருக்கிறது?
: நன்றாக இருக்கிறது. அவர்கள் புதிதாய் அறிமுகப்படுத்தியிருக்கும் பகுதிகளும் , பெரிய அளவிலான வடிவமும் வண்ணமயமாய்க் காட்சியளிக்கும் படங்களும் , பளபள காகிதமும் , புதிய லே-அவுட்டும் ஒரு புதிய இதழைப் படிக்கிறோம் என்ற உணர்வையே ஏற்படுத்துகின் றன. இந்த வடிவம் வெற்றியும் பெற்றுவிட்டது. அதனால் அவர்கள் இந்த ஆல்நியூ விகடனை அப்படியே வைத்துக்கொண்டு பழையபடி பழைய விகடனை ஆரம்பிக்கலாம். அதே பழைய பொருளடக்கத்துடன் அதே பழைய சைஸில்!
கே: கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்தீர்களா ?
: இல்லை. அவரது முந்தைய படமான தசாவதாரத்தில் பெற்ற அதிர்ச்சியிலிருந்தே இன்னமும் வெளியே வர முடியவில்லை. தான் ஈடுபடும் திரைப்படத்திற்கென கமலின் ஈடுபாடு அளவுக்கு வேறு யாரும் செய்வதில்லை என்பது வேறு விஷயம். ஒரு கலைஞனின் ஈடுபாடு மற்றும் திறமையை மட்டும் அளவுகோலாக வைத்துப் பலன்களோ தாக்கங்களோ கிடைப்பதில்லை. படத்தின் ஒட்டுமொத்த விளைவாகத்தான் வெற்றிகளும் அதற்கான தாக்கங்களும் கிடைக்கின்றன. தசாவதாரத்தைப் பொறுத்தவரை முதல் வேடமான ரங்கராஜநம்பியைத்தவிர, பல்ராம் நாயுடு வேடத்தை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். அது கூட அவர் ஏற்கெனவே வேறுசில படங்களில் செய்த வேடங்களின் நீட்சிதான். மற்ற வேடங்களெல்லாம் வேடங்களே அல்ல. இந்த வேடங்களைப் போட்டுவிடுவதற்கு மேக்கப் கலைஞர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்களாம். நம்ம ஊர் ஒப்பனைக் கலைஞர்களே இதைவிடவும் அருமையான ஒப்பனையைப் போட்டிருப்பார்கள். NDTV-யில் மன்மோகன் சிங், அத்வானி,வாஜ்பாய், லாலு பிரசாத் போன்ற தலைவர்களை மாஸ்க் போட்ட பொம்மை களாகச் சித்தரித்து ஒரு நிகழ்ச்சி வரும். ஏறக்குறைய அதில் வரும் கேரக்டர்கள் மாதிரியே தான் இருந்தன கமலுக்குப் போடப்பட்டிருந்த வேடங்கள். மூன்றங்குல வேடத்திற்கு முகத்தில் மாஸ்க் அளவுக்குப் பூசிவிட்ட பிறகு உணர்ச்சிகளை எங்கிருந்து வெளிப்படுத்து
வது? கமலுடைய நோக்கம் -நவராத்திரியில் சிவாஜி போட்ட வேடங்களை விடவும் அதிகமாகப் போடுவது என்பது.... கமல் மீண்டும் ஒரு முயற்சி செய்யலாம். ஏனெனில், சிவாஜியின் அந்தச் சாதனை 'தொடப்படாமல்' அப்படியேதான் உள்ளது.

கே: சமீபத்து அதிசயமாக எதைக் கருதுகிறீர்கள்?
: பரபரப்பாக இருக்கும் மனிதர்களைப் பற்றித்தான் பிரபலமான வார இதழ்களில் அடிக்கடி எழுதுவார்கள். சமீபத்திய ஆறு மாதங்களின் குமுதம் அல்லது ஆனந்த விகடன் இதழ்களை எடுத்துப் பாருங்கள். ஒரு இதழ் விட்டு இன்னொரு இதழ், அல்லது சில வாரங்களில் ஒவ்வொரு இதழிலும் என்று தவறாமல் ஒரு மனிதரைப் பற்றின தகவலோ, புகைப்படமோ, துணுக்கோ, கட்டுரையோ, கேள்விபதிலோ, அனுபவமோ ஏதோ ஒரு பதிவு என்று தவறாமல் வந்திருக்கிறது. அந்த மனிதர் ; கண்ணதாசன்! அவர் 1981-ல் மறைந்தார். ஏறக்குறைய முப்பது வருடங்களுக்குப் பிறகும் அவரை நாள்தோறும் ரேடியோவும் டி. வி. சேனல்களும் காசெட்டுகளும் சிடிக்களுமாய்த் தமிழ்ச் சமூகம் இடைவெளியே இல்லாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்றால் அந்த மகத்தான மனிதன் எல்லாருடைய இல்லங் களிலும் இதயங்களிலுமாய் எவ்வளவு வலுவாய்க் குடிபுகுந்திருக்க வேண்டும் பாருங்கள். எங்கேயோ படித்த ஒரு புள்ளிவிவரம் நினைவுக்கு வருகிறது. “ இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பேரின் குரல்கள்தாம் இருபத்திநான்கு மணிநேரமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒருவர் - லதா மங்கேஷ்கர் , இன்னொருவர் -கண்ணதாசன்!”

கே: தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கு ரகுமான்இசையில் கலைஞர் பாடல் எழுதியிருக்கிறாரே ?
: ஏ.ஆர். ரகுமான்இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் என்று கலைஞர் ஆசைப்பட்டது தவறா என்ன?
கே: நீங்களும் கேள்வி பதில் ஆரம்பித்துவிட்டீர்களே.........?
: இந்தியாவில் கேள்விபதில்களை முதன்முதலில் பிரபலமாக்கியவர் பாபுராவ் படேல். அவருடைய மதர்இந்தியா பத்திரிகை கேள்வி பதில்களுக்காகவே பரபரப்பாக ஓடியது. எதையும் துணிச்சலாக எழுதுவார். இந்திராகாந்தியைக் கூட 'திஸ் கேர்ள்', 'தட் கேர்ள்' என்றெல்லாம் எழுதுவார். சோ கூட பாபுராவ் படேல் அளவுக்கு வரலாம் என்று நினைத்துத் தான் எழுத ஆரம்பித்தார். தமிழில் கேள்வி பதில்களைப் பிரபலமாக்கியவர் தமிழ்வாணன். ஆனால் கேள்விபதில்களை மிகவும் சுவாரஸ்யமாக்கியவர் என்று எஸ்.ஏ.பியைத்தான் சொல்ல வேண்டும். அரசு என்ற புனைப்பெயரில் ஒளிந்துகொண்டு உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் மிகமிக சுவாரஸ்யமாக்கியவர் அரசுதான். பின்னர் அதே குமுதம் இதழில் 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்றொரு பகுதி ஆரம்பித்து பிரபலமான
வர்களைக் கொண்டு கேள்வி பதில்களை எழுத வைத்தார்கள். மிகுந்த வரவேற்பைப் பெற்ற பகுதி அது. ஆனால் சில இதழ்களோடு நிறுத்திவிட்டார்கள். அந்த வடிவம் பிடித்துப்போகவே அதே பாணியில் அப்போது பரபரப்பாக வந்து கொண்டிருந்த 'பிலிமாலயா' இதழில் கேள்வியும் நானே பதிலும்நானே என்று ஒரு இதழில் எழுதினேன். பல்வேறு தரப்பிலிருந்தும் அந்தப் பகுதிக்கு வரவேற்பு இருக்கவே திரைப்பட பிரபலங்களை வைத்து அந்தப் பகுதியைத் தொடர நினைத்தார்கள். ஒரேயொரு பிரபலம் மட்டுமே பங்குபெற்றார். தொடர்ந்து சரியாக வரவில்லை என்பதனால் பிலிமாலயா ஆசிரியராக இருந்த எம்.ஜி.வல்லபன் மேலும் சில இதழ்களுக்கு அதனைத் தொடர்ந்து எழுதச் சொன்னார். நானும் சில இதழ்களுக்கு எழுதினேன். அவருடைய 'ஜீனியஸ்' பதில்களும் அதே இதழில் வந்துகொண்டிருந்ததனால் ஒரே இதழில் இரண்டு கேள்வி பதில் பகுதிகள் வேண்டாமே என்பதற்காக என்னுடைய பகுதி நிறுத்தப்பட்டது.
கேள்வியும் நானே பதிலும்நானே என்ற வடிவம் ரொம்பவும் சௌரியமான ஒன்று. ஆனால் தொடர்ச்சியான சுவாரஸ்யம் மிகவும் அவசியம். இந்த வடிவத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு 'ரவுண்டு கட்டி' ஆடிக்கொண்டிருப்பவர் கலைஞர். பல வருடங்களாக கேள்வியும் நானே பதிலும்நானே எழுதிக்கொண்டிருக்கிறார் அவர். இப்போது வலைத்தளத்திலும் நிறையப்பேர் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். நானும் மறுபடி ஆரம்பித்து விட்டேன்.

கே: இப்போதைய நடிகர்களில் யாருடைய நடிப்பு பிடித்திருக்கிறது?
: 'கார்த்தி... '! விக்ரம் தன்னை நிரூபிக்க 'சேது' வரவேண்டியிருந்தது. சூர்யா, பாலாவின் 'நந்தா'விலிருந்துதான் தம்முடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். இதற்குள் மேற்படி இருவரும் பல படங்களைக் கடந்து வந்திருந்தார்கள். ஆனால் முதல் படமான 'பருத்தி வீர'னி
லேயே மிக அனாயாசமான நடிப்புத் திறமையை நிரூபித்திருந்தார் கார்த்தி. இரண்டாவது படமான ஆயிரத்தில் ஒருவனில், 'நடிக்க ஆரம்பித்த ஒரு நடிகனின் இரண்டாவது படம்' போலவா நடித்திருக்கிறார்? பல படங்கள் நடித்த ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்புக்கு இணையான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கும் கார்த்தி வியக்கவே வைத்திருக்கிறார். தமிழில் இதற்குமுன் முதல் படத்திலிருந்தே அனாயாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஒரேயொருவர்தானே.

Wednesday, February 10, 2010

இளைய ராஜாவா.....? ரகுமானா......?

இளைய ராஜாவுக்கும் ரகுமானுக்கும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, சில காலமாகவே இளையராஜாவா ரகுமானா என்ற வாக்குவாதங்களும், பட்டிமன்றங்களும் இணையதளம் உட்பட பல்வேறு தளங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி சில வருடங்களின் முன்புவரையிலும் -குறிப்பாகச் சொல்லப்போனால் ரோஜாவின் வருகை வரையிலும் இளையராஜாவின் ஆதிக்கமும் தாக்கமும் மிகுதியாகவே இருந்தன. இளையராஜாவின் அன்னக்கிளி எப்படி ஒரு மாறுதலைக் கொண்டுவந்ததோ அதே போன்ற ஒரு மாறுதலை, அல்லது அதைவிடவும் அதிகமான ஒரு மாறுதலை ஏ.ஆர்.ரகுமானின் ரோஜாவும் கொண்டு வந்தது. இரண்டு படங்களின் பாடல்களும் பெருவாரியான அளவில் மக்களைப்போய்ச் சேர்ந்தன. இளையராஜாவின் பாடல்கள் எந்த அளவுக்குச் சேர்ந்ததோ அதைவிடவும் அதிகமான அளவில் ரகுமானின் பாடல்கள் மக்களிடம் சேர்ந்தன. இந்த அதிகப்படியான சென்றடைதலுக்கு ரகுமானின் பாடல்களில் இருந்த இனிமையை விடவும்,அவர் பாடல்களில் செய்திருந்த மாற்றங்களை விடவும், முக்கியமான காரணம் -அந்தந்த காலகட்டங்களில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும். அன்றைய தினம் இளையராஜாவின் பாடல்கள் திடீரென்று அத்தனைப் பரவலான வளர்ச்சியைப் பெற்றதற்கும் இதே தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த அடிப்படையான இயற்கை விதியினைக் கருத்தில் கொள்ளாமல் எந்த ஒரு கலைஞனின் படைப்பையும் அந்த படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும் இதுதான் அளவில் பெரியது ,இதுதான் சிறந்தது என்றெல்லாம் கச்சைக் கட்டிக்கொண்டிருப்பது சரியான முறைமையாக இருக்காது. இந்த ஒரு விதியைக் காரணம் காட்டியே அந்தந்த படைப்புக்களில் ஒன்றுமே இல்லை எல்லாவற்றுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்று சுட்டுவதும் அறிவுடைமை அல்ல. சில படைப்பாளர்களின் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றிப் பேசும்போது வர்த்தகரீதியான விஷயங்களுக்கு அப்பால் அவை சமூகரீதியாக மக்கள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதும் முக்கியம். இசைப்பாடல்களைப் பொறுத்தவரையில் தாக்கங்கள் என்பதனை அவை எந்த அளவுக்கு மனதில் ஊடுருவிப் பதிந்திருக்கின்றன , எவ்வளவு காலங்கள் நீடித்திருக்கின்றன மனதிலே தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கையிலே எந்த அளவுக்கு தொடர்ந்திருக்கின்றன,எத்தகைய அனுபவங்களை அவர்களுக்குத் தந்திருக்கின்றன என்பதையெல்லாம் அளவுகோல்களாகக் கொள்ளலாம்.
இந்தக் கோணத்திலிருந்து திரைஇசைப்பாடல்களை அணுகும்போதுதான் காலத்தைத்தாண்டி அவை நிற்கின்றனவா என்பதும் , காலத்தைத்தாண்டி நிற்கின்ற பாடல்களை இசையமைப்பாளர்கள் தந்திருக்கின்றார்களா என்பதையும் கணிக்க முடியும். இந்த அளவுகோல்களெல்லாம் இல்லாமல் அவர்களின் வணிகரீதியான வெற்றிகளை மட்டும் கணக்கிட்டு இவர்தான் எல்லாமே என்பதும்,அவரை இவர் வென்றுவிட்டார் என்பதும் இவரை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறக்கவில்லை என்றெல்லாம் புகழ் மாலைகள் சூட்டுவதும் சரியான ஒப்பீடுகள் ஆகாது.
இதுபோன்ற விஷயங்களில் விடுபட்டுப் போகின்ற இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் ஒருவரைப் பற்றிச்சொல்லும்போது அதே துறையில் இவ்வளவு காலமும் கொடிகட்டிப் பறந்த, அல்லது கோலோச்சிக் கொண்டிருந்த இன்னொரு முக்கிய மேதையை மிகச்சௌகரியமாக மறந்துவிடுவது ,அல்லது வேண்டுமென்றே விடுபட்டுப் போய்விட்டதான பாவனைக் காட்டுவது. இந்தச் செயலும் வர்த்தகரீதியான நடைமுறைக்கு
மிகவும் உதவுகிறது என்பதனால் இத்தகு செயல்பாடுகளும் சர்வசாதாரணமாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த முந்தைய மேதை இப்போதைய 'ஒளி வட்டத்து' மேதை நினைத்தே பார்க்க முடியாத சாதனைகளை இத்தனைக் காலமும் உயிரைக் கொடுத்துச் சாதித்து முடித்திருப்பார். அவர் சிரமப்பட்டுப் போட்ட ரோட்டில் இந்தச் சாதனையாளர் சர்வசாதாரணமாக சாரட்டு வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிப்பார். எல்லாவிதமான சாதனைகளுக்கும் தான்தான் சொந்தக்காரன் என்பதாக இவரது பாவனைகளும் நடவடிக்கைகளும் இருக்கும். இவரை ரசிக்கின்ற கூட்டமும் இதற்குத் தோதாக நடந்துகொள்ளும். அந்தக் கூட்டத்திற்கு அதனைத் தாண்டிய எந்த நோக்கமும் இருக்காது. தொடந்து ஒரே செய்திகளைச் சொல்லிக்கொண்டு ,ஒரே விதமான புகழுரைகளை முழங்கிக்கொண்டு சலிப்பு ஏற்படுகின்றவரைக்கும் இவர் பின்னாலேயே பயணம் போய்க் கொண்டிருக்கும். அடுத்த ரசனைக்குரிய சாதனையாளர் கிடைக்கிறவரை இந்தக் காட்சிகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.. இதில் பரிதாபம் என்னவென்றால் சில நாட்களுக்குப்பின் நடைபெறுகின்ற அத்தனையையும் அதுதான் உண்மை என்பதுபோலவும் ,அதுதான் நிதர்சனம் என்பதுபோலவும் குறிப்பிட்ட அந்தச் சாதனையாளரே நினைக்க ஆரம்பித்துவிடுவார் என்பதுதான். இன்றைய பொதுவான நிலைப்பாடு இதுதான். இதே பாதையில்தான் இன்றைய பல்வேறு ஒளிவட்ட ஊர்வலங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ரகுமானுக்கு இன்றைய நிலையில் கிடைத்திருக்கும் பரிசுகளும் சரி; அங்கீகா
ரங்களும் சரி; புகழ் வெளிச்சங்களும் சரி அவருடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரங்களாக அவை கருதப்பட்டாலும் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு வகையான முணுமுணுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவை இசையின் கடவுளாகக் கொண்டாடுகிறவர்களின் சார்பாக வரும் முணுமுணுப்பு அது. இந்த முணுமுணுப்பு நியாயமானதுதானா, ரகுமானுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நியாயமானதுதானா என்பதையெல்லாம் அலசுவதற்கு முன்னால் இந்தியாவில் எந்தவொரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அங்கீகாரமும் ,அதைச்சார்ந்த பரிசுகளும் அதற்கேற்ற புகழ் வெளிச்சமும், கோடானுகோடி பணமும் ரகுமானுக்குக் கிடைத்திருப்பதை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். அதைவிடவும் முக்கியம் இத்தனைப் புகழ் வெளிச்சம் தம்மீது விழுந்திருக்கும் நிலையிலும் துளிக்கூட ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ, கர்வமோ,ஆணவமோ இல்லாமல் அதனை ஒரு சின்னச்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் ரகுமானின் பெருந்தன்மை.அவ்வளவு சாதாரணமாக எந்தவொரு மனிதரிடத்தும் அல்லது எந்தவொரு கலைஞரிடத்தும் காணமுடியாத மிக அரிய பண்பு இது. அற்புதமானதொரு குணம் இது. இந்த ஒன்றிற்காகவே ரகுமானுக்கு இன்னமும் நூறு ஆஸ்கார்களும், நூறு கிராம்மிகளும் தாராளமாகத் தரலாம்.
பரிசுகளும் அதனைத் தொடர்ந்த அங்கீகாரங்களும் எப்படிக் கிடைக்கின்றன அவை நியாயமானவர்களுக்கு நியாயமான நேரங்களில் கிடைக்கின்றனவா என்பவையெல்லாம் விவாதத்திற்குரிய விஷயங்கள். அவை எப்படிக்கிடைக்கின்றன என்பது இங்கே பேசுபொருள் இல்லை. இந்த இருவரில் யார் வித்தகர்? இந்த இருவரில் யார் விற்பன்னர்? என்பதாக இங்கே முன்வைக்கப்படுகின்ற வாதங்களுக்குள்ளே இருக்கின்ற நியாய அநியா
யங்களுக்குள்ளே சென்று பார்ப்பதுதான் நமது நோக்கமே.
இன்றைக்கு ஏ.ஆர்.ரகுமான் எட்டியிருக்கும் உயரம் என்பது சாதாரணமானது அல்ல.இசைத்துறையில் என்றில்லை, திரைப்படத்துறையில் இருக்கும் பல்வேறு துறைகளையும் சார்ந்த எந்தக் கலைஞனாலும் இத்தனை உயரத்தையும் இனிமேலும் தொடரந்து ரகுமான் எட்டப்போகும் உயரங்களையும் தொடமுடியுமா என்பதுவும் சந்தேகம்தான். இது ஒருபுறமிருக்க, இந்தக் காரணங்களாலேயே ரகுமான் யாரை விடவும் மிகப்பெரிய இசை மேதை ஆகிவிடமுடியுமா என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி. ரகுமான் காலத்தைக் கடந்த இசைமேதையா என்பது நம்முன்னுள்ள மிக முக்கியமான கேள்வி.
இந்த இடத்தில் வேண்டுமானால் நாம் ரகுமானையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர இயலும். 'காலத்தைக் கடந்த இசை ' என்ற ஒற்றை வரி விதியொன்றை அளவுகோலாக வைத்துக்கொண்டு ரகுமானையும் , இளையராஜாவையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் நிச்சயம் இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. மாறுபட்ட இசை , புதுமையான இசை, மேல்நாட்டுப் பாணியிலான இசை, நவீன உத்திகளில் கோர்க்கப்பட்ட நவநாகரிக இசை, இதுவரை நாம் கேள்விபட்டேயிராத வாத்தியக்கருவிகளின் லயம் சேர்ந்த இசை, என்று இன்னும் என்னென்னவோ சொல்லி வகைப்படுத்தலாம். அத்தனையும் உண்மைதான், ஆனால் காலத்தைக்கடந்து நிற்கவும், மனதை ஊடுருவிச்சென்று மனதைக் கரைக்கவும் உயிருள்ள வரை உங்களுடனேயே தொடர்ந்து வரவும் ,இத்தனைப் பக்கத்துணைகள் ஒரு நல்ல இசைக்கோர்வைக்கு அவசியமே இல்லை. ஒரு நல்ல இசை என்பது ஒரேயொரு ஒற்றைப் புல்லாங்குழலிலிருந்துகூட வெளிப்படக்கூடும். அந்த இசையில் தோய்ந்துள்ள சுகமான இனிமைதான் அடிப்படை.
அத்தகைய இனிமைச்சொட்டும் பாடல்களைத் தந்திருப்பவர் என்று பார்த்தால் இளையராஜாவுக்குச் சற்று பின்னேதான் நிற்கிறார் ரகுமான். இளையராஜா தந்திருக்கும் இனிமையான பாடல்களின் எண்ணிக்கை அதிகம். ரகுமான் பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும் அனுபவம் வித்தியாசமானது. இனிமையான சுகானுபாவம் என்பது மிகவும் குறைவானது. ஆகவே, இந்த வகையில் ரகுமானைப் பின்னே தள்ளிவிட்டு நிற்பவர் இளையராஜாதான். எனவே ரகுமானை மிஞ்சி நிற்பவர் இளையராஜாவே என்று சொல்லி விலகிக்கொள்ள முடியுமா என்று பார்த்தால் 'முடியாது'என்பதுதான் பதில்.காரணம் இளையராஜா பெயரைச் சொல்வதற்கு முன்னாலேயே சொல்லவேண்டிய பெயர்கள் சில இருக்கின்றன என்பதுதான்.
இளையராஜா தமிழில் சில சாதனைகள் புரிந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இதற்காக ,சாதனைகள் புரிந்த ஒரேயொருவர் இளையராஜாதான் என்பதுபோலவும், அல்லது சாதனைகள் புரிந்த முதலாமவர் இளையராஜாதான் என்பதுபோலவும் ஒரு கற்பிதம் ஏற்படுத்த முயல்வதையும் ஏற்பதற்கில்லை. தமிழ் இசையை முதன்முதலில் தமிழுக்குக் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்றெல்லாம் சிலபேர் எழுதிவருவதைப் பார்க்கும்போது அவர்கள்மீது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னொருவர் எழுதுகிறார் 'இளையராஜா அளவுக்குச் சாதனைகள் புரிந்தவர்கள் அவருக்கு முன்னும் இல்லை. பின்னாலும் வரப்போவதில்லை.' இம்மாதிரியான கருத்துக்களெல்லாம் ஒன்று அறியாமையால் வருவது- அல்லது அவர்மீது கொண்ட அதீத ரசிப்புக்கொண்ட்டாட்டத்தால் வருவது. உலகில் எம்.ஜி.ஆர் படத்துக்கு இணையான இன்னொரு படம் வரவே வராது என்றும் வேறு யாருடைய படத்தையும் பார்க்கவே மாட்டேன் என்றும் இலட்சக் கணக்கான ரசிகர்கள் கருத்துக் கொண்டிருந்ததற்கு ஒப்பாகும் இது. இத்தகைய கருத்துக் கொண்டிருக்கும் சில ரசிகர்கள் இருப்பதுபற்றி இளையராஜா வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர, அந்த வாதங்களுக்கு எவ்விதமான முக்கியத்துவமோ அங்கீகாரமோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
ஒருவர் மிகவும் புகழ்பெற்றவராக இருக்கிறார் என்பதாலோ, முந்தையவரை விடவும் வசூல் சாதனைகள் செய்தார் என்பதனாலோ அவருக்கு முன்பு இதே சாதனைகளை செய்த அவரது அப்பன் பாட்டனையெல்லாம் தூக்கிக் குப்பைக்கூடையிலே போடுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரமில்லை. சொல்லப்போனால் இது அதிகாரம் பற்றிய பிரச்சினைக்கூட இல்லை, அறியாமை சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். தனக்கு இந்திரா காந்தியை மிகவும் பிடிக்கும் என்பதற்காக, "இந்தியா என்றாலேயே இந்திராதான் .இவருக்கு முன்பு இவர் போன்ற ஒரு தலைவர் இந்தியாவில் தோன்றியதே இல்லை. காந்தி, நேரு போன்றவர்களுக்கெல்லாம் மக்கள் செல்வாக்கு இருந்ததே இல்லை" என்றெல்லாம் அறியாமையால் சொல்வதற்கு ஒப்பாகும்.
இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் நிற்கிறார் என்பது போலவே இளையராஜா யாருக்குப் பின்னால் நிற்கிறார் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் சரியான அணுகுமுறை. அப்படிப் பார்க்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பின்னால்தான் இளையராஜா நிற்கிறார் என்பது சாதாரண குழந்தைக்குக் கூடத்தெரியும் . தமிழ் இசை உலகில் , இன்னமும் சொல்லப்போனால் திரைஇசை உலகில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. விஸ்வநாதனின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் இளையராஜாவின் சாதனைகள் முழங்காலுக்குக்கூடக் காணாது. விஸ்வநாதன் இசையமைத்து வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கையும் சரி; விஸ்வநாதன் இசையமைப்பில் வந்த பாடல்களின் எண்ணிக்கையும் சரி; இளையராஜாவின் இசையமைப்பில் வந்த பாடல்களுடனெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புகள் கூறுவது விஸ்வநாதனின் மேதைமைக்கு இழுக்காகவே இருக்கும். இந்த ஒப்பீடுகூட தனிப்பட்ட விஸ்வநாதனின் சாதனைகளை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதானே தவிர, அவரது முந்தைய அடையாளமான 'விஸ்வநாதன்-ராமமூர்த்தி ' என்ற இருவர் கட்டியமைத்துச் சாதித்த பிம்பத்தை முன்வைத்துச் சொல்லப்பட்டது அல்ல.
விஸ்வநாதன் -ராமமூர்த்திக்கு முன்புவரையிலும் தமிழ்த்திரையை ஆதிக்கம் செலுத்திவந்த இசையமைப்பாளர்களாக எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன். ஆதிநாராயணராவ், சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையாநாயுடு ஆகிய விற்பன்னர்கள் பலர் இருந்தார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களின் தனிப்பாடல்களுக்கெல்லாம் கூட இசையமைத்துத் தந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். எஸ்.வி.வெங்கட்ராமனைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் கால் பணிந்து வணங்குவார் எம்.எஸ் .என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. ஜி.ராமனாதன் அந்தக்கால இசையமைப்பில் செய்யாத புதுமைகள் இல்லை.ஒரு பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் ஜி.ராமனாதன். இவர்கள் அத்தனைப் பேரும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் வருகை நிகழ்கிறது. ஒரு புதிய பிரளயம் பாய்ந்ததுபோல் அத்தனை நாட்களும் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்த பாடல்களின் போக்கு சத்தமில்லாமல் மாற்றியமைக்கப்படுகிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாணியிலான மெல்லிசை புதிய பாணி திரைஇசையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அன்றைக்குப் பிரவாகமெடுக்கத்தொடங்கிய அந்த இசை சின்னச் சின்ன மாறுதல்களுடன் இன்றைக்கும் பிரவாகமாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
ஒவ்வொரு மாற்றங்களுக்கும் அந்த மாறுதல்களை நிகழ்த்தும் சாதனையாளர்
களையும் மீறியதொரு புறக்காரணம் இருக்கும். அந்தக் காரணத்தோடு ஒன்றிணைந்துதான் சாதனையாளர்களுக்கும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். திரையுலகில் அப்படியொரு மாற்றம் நிகழ்வதற்கான ஆண்டாக 1952-ஐக் குறிப்பிட வேண்டும். திரையுலகில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான மாபெரும் கலைஞனின் வருகை நிகழ்ந்த வருடம் அது. அந்த வருடத்திலிருந்துதான் நடிப்பு, கதை, வசனம், இசை, இயக்கம், என்று ஆரம்பித்து திரையின் அத்தனைத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்த அற்புதம் நடந்தேறியது. 52-க்கு முந்தைய படங்களையும், அதற்குப் பிந்தைய படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள முடியும். கலைஞர் கருணாநிதிகூட அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்தே திரைக்கதை வசனங்கள் எழுதி வந்தபோதிலும் 52-ன் பராசக்தி படத்திற்குப் பிறகுதான் ஒரு புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை அவராலும் போட முடிந்தது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவரையிலும் தயாரிக்கப்பட்டு வந்த பழைய பாணிப்படங்களுக்கு விடை கொடுக்கப்பட்டு புதிய பாணியில் படங்கள் வர ஆரம்பித்தது அந்த ஆண்டிலிருந்துதான். ஆக, அந்த ஆண்டிலிருந்து ஒரு புதிய திருப்பம் நிகழ ஆரம்பித்தது.
இந்தத் திருப்பம் திரையுலகில் மட்டுமல்ல. ஊடகத்துறையிலும் நிகழ ஆரம்பித்தது. தமிழில் வெவ்வேறு புதிய பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாகச் சொல்லப்போனால் திராவிட இயக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு இதழ்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அதுவரையிலும் இதழ்களில் ஆதிக்கம் செலுத்திவந்த 'ஐயராத்துத் தமிழும்', பண்டிதர்களின் தமிழும் விடைபெற்று ,புதிய -எளிய-இயல்பான -இலக்கியத்தமிழ் அரியாசனம் ஏறியது.அதிகக் கல்விக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதிகமான பொதுக்கூட்ளும் அதிகமான இலக்கியக் கூட்டங்களும் மக்களிடையே நிகழ்கின்றன. ஆக மொத்தத்தில் சமூகச் சூழலுக்கான ஒரு மாறுதல் பெரிய அளவில் நிகழ்கிறது.
'பணம்' என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் இசைப்பயணம் ஆரம்பிக்கிறது.ஆரம்பம் சாதாரணமானதாக இருந்தபோதிலும் மொத்த ஊரையும் போர்த்தும் பனிபோர்வையைப்போல தமிழக மக்களைச் சுற்றிக் கவிகிறது அந்த இசை மழை. பொழுது போக்கிற்காக ஏதோ இரண்டு பாடல்களைக் கேட்டோம் அடுத்த வேலையைப் பார்க்கப் போனோம் என்றில்லாமல் ஊனில்,உணர்வில், உயிரில் கலந்து மக்களுடன் நிலைத்து நிற்க ஆரம்பிக்கிறது அவர்களின் பாடல்கள். படுத்தால் எழுந்தால் நிமிர்ந்தால் உட்கார்ந்தால் நடந் தால் அவர்களின் இசையோடுதான் என்கிற அளவுக்கு அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிக் கலக்கிறது. அந்த நாளை முடித்து இரவு படுக்கைக்குச் செல்வதற்குக்கூட அவர்களுடைய பாடல்களை ஒருமுறைக் கேட்டுவிட்டே நித்திரையின் வசப்படுவது என்ற பழக்கத்தை ஏற்படுத்துகிறது அவர்களின் இசை.
அவர்களின் இந்தச் சாதனைக்கு ஆணிவேராய், அஸ்திவாரமாய், உயிராய் இருந்தது இன்னொரு மகாகலைஞன். அந்தக் கலைஞனின் பெயர்; 'கண்ணதாசன்!' ஆம் நண்பர்களே, இந்த மூன்றுபேரும் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் இசை சாம்ராஜ்ஜியம் மிகப்பெரியது. அளவிட முடியாதது. இன்னொருவராலோ அல்லது இன்னும் சிலர் சேர்ந்துகொண்டோ இதனை மிஞ்சும் ஒரு இசை சாதனையை இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்த்திவிட முடியாது. இந்தக் கூட்டணி உடைந்த பின்னால் அதில் இருந்த இரண்டுபேர் சேர்ந்து அவர்களின் முந்தைய சாதனைகளுக்கு நிகரான இன்னொரு சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்தாகவேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பிரிந்த பின்னால் விஸ்வநாதன் -கண்ணதாசன் இணைந்தோ, அல்லது ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் இணைந்தோ முந்தைய அளவுக்கு ,அந்த உயரத்திற்கு அவர்களால் மீண்டும் வரமுடியவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்ததற்குப்பின் அந்த இரட்டையர் ஏற்படுத்தியிந்த தாக்கத்தின் பலன் இசையமைப்பாளர் என்ற முறையில் விஸ்வநாதன் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் அமைந்துவிட்டது. வணிகப்போட்டியில் விஸ்வநாதனுக்கு ஈடுகொடுத்து ஓடி வரமுடியாமல் மிகவே பின்தங்கிப் பின்னர் ஒதுக்கப்பட்டவராகவே மாறிப்போனார் ராமமூர்த்தி. திரைப்பட வணிகச் சூழல்களுக்கு அப்பாற்பட்டு தம்முடைய இசைஞானத் திறமையால் தனியரசராய் அதற்குப் பின்னரும் இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத சக்தியாய் ஆட்சி செலுத்தினார் விஸ்வநாதன். பல ஆயிரம் பாடல்கள் அவரது இசைப்பிரவாகத்திலிருந்து புறப்பட்டு இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தியாய் இருந்து எழுப்பிய இசைக்கோயிலுக்கு இணையான இன்னொன்று கிடையாது.
அவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த இசைக்கோர்வைகளில் யாருடைய பங்கு அதிகம் என்பதான ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் அந்த இருவருமாகச் சேர்ந்திருந்து உருவாக்கியபோது கிடைத்த அந்த ஒருங்கிணைப்பு, அந்தப் பக்குவம், அவர்களில் இருந்த அந்தப் புரிந்துணர்வின் பலன், அந்த ஒருங்கிசையின் வெளிப்பாடு, இரண்டுபேரின் திறமையும் எந்த அளவுக்குச் சேர வேண்டுமோ அந்தக் கலவையின் சரியான சதவிகிதம் இவையாவும் ஒரு அற்புதப் படைப்பின் ரகசியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த இருவரின் பங்களிப்பில் உருவான பாடல்கள்தாம் இன்றைக்கும் தமிழ்ப்பாடல்களின் அடையாளமாக இருந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்படங்களின் உன்னத அடையாளங்களாகவும் மிகப்பெரும் சிகரங்களாகவும் இருந்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இவர்களின் மிகப்பிரபலமான பாடல்கள் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இந்த மண்ணில் நிலைத்து நிற்கப்போகும் சாகாவரம் பெற்றவை. அந்தப் பாடல்களில் பெரும்பாலானவற்றை உருவாக்கிய படைப்பாளிகள் இவர்கள்தாம்.
இவர்களின் காலத்திய பாடல்கள்தாம் தமிழில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள் என்பதற்கான அடையாளங்கள் ஆரம்பமுதலே கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு படத்தில் வரும் பாடல்களில் ஏதாவது ஒரு பாடல் பிரபலமாவதற்கே என்னென்னமோ பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு பாடல் பிரபலமாகிவிட்டால் வேறு என்னென்னமோ செய்து அதனைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களையும் இனிமையாகவும் பிரபலமாகவும் உருவாக்கும் அதிசயம் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் இவர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு படம் இரண்டு படத்தில் அல்ல; சுமார் நூறு படங்களிலாவது அவர்களின் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த அபூர்வ சாதனை அந்தக் காலத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமல்ல ; சில இந்திப் படங்களிலும் அன்றைக்கு இருந்த சில இந்தி இசையமைப்பாளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களும் இனிமையாகவும் பிரபலமாகவும் இருக்கும் இந்தச் சாதனைகளை இன்றைய இசையமைப்பாளர்களுக்குப் பொருத்திப் பார்த்தோமானால் அவர்கள் இசையமைத்த படங்களில் ஒரு பத்துப் படங்களோ அல்லது இன்னும் இரண்டொன்றோ தேறலாம். நூற்றுக் கணக்கான படங்கள் விஸ்வநாதனுக்குப் பின்னர் யாருக்குமே தேறாது.
இவர்களின் இசைவெற்றிகளுக்கு கண்ணதாசன் பெருமளவு காரணமாக இருந்ததுபோலவே பின்னணிப் பாடகர்கள் சிலரும் காரணமாக இருந்தனர். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, சீர்காழிகோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி ஆகியோரின் பல்வேறுபட்ட திறமைகள் பட்டைத் தீட்டப்பட்டுப் பிரகாசப்படுத்தப்பட்டன. வேறு பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கத்தை 'செந்தமிழ்த் தேன் மொழியாள்' மூலமும் 'எங்கள் திராவிடப்பொன்னாடே' மூலமும் வேறொரு தளத்திற்குக் கொண்டுவந்தனர். என்றைக்கும் மறக்கமுடியாத இன்னொரு பாடல்தளம் சந்திரபாபுவுடை யது. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு இன்னொரு மாற்றுக்குரல் இதுவரையிலும் வரவில்லை. பின்னணிப் பாடகர்களைப் பொறுத்தவரையில் யாரை எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களெல்லாம் இன்றைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் சேர்த்தே இவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சினிமாவின் பொதுவான நியதியே பெரிய படங்களுக்குச் சிறப்பாகச் செயல்படுவது என்பதுதான்.அந்தக் கணக்குப்படி பார்த்தால் சிவாஜி படங்கள், எம்.ஜி.ஆர். படங்கள் மற்றும் வேறுசில பெரிய படங்களுக்கு மட்டும்தான் சிறப்பான இசைக்கோர்வை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரட்டையரின் பட்டியலைப் பார்த்தோமானால் இவர்கள் ஈடுபடும் எல்லாப்படங்களுக்குமே தங்களின் திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான இசையையே வெளிப்படுத்தும் தொழில் நேர்மை இவர்களுக்கு இருந்திருக்கிறது.அதனால்தான் அவ்வளவு வெற்றிபெறாத பல படங்களின் பாடல்கள்கூட இன்றைக்கும் மக்கள் மத்தியில் புழங்கும் பாடல்களாக இருந்துவருகின்றன.
இவர்களின் அன்றைய பாடல்களைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், ஜெமினிகணேசன் பாடல்கள் , பீம்சிங் பாடல்கள், ஸ்ரீதர் பாடல்கள் என்று தனித்தனியாகப் பிரித்து இனம் காணக்கூடிய பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவையல்லாமல் கண்ணதாசனின் படைப்புக்கள் எல்லாருக்கும் பொதுவானவை. அவற்றில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தெய்வப் பாடல்கள் உறவு பற்றிய பாடல்கள்,குடும்பம் பற்றிய பாடல்கள், பாசத்தைச் சொல்லும் பாடல்கள் என்று வாழ்க்கையின் அத்தனைக் கட்டங்களுக்குமான பாடல்கள் அற்புதச் சித்திரங்களாகச் செதுக்கப்பட்டு என்றென்றைக்குமான பாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைத் தவிர்த்து இவர்களின் இசையில் மிகப்பிரபலமான பாடல்களாகவும் ,அதே சமயத்தில் மிகப் பிரமாதமான பாடல்களாகவும் அமைந்த சில படங்களின் பட்டியலைப் பார்ப்போம். மாலையிட்ட மங்கை, அமுதவல்லி, ஆளுக்கொரு வீடு, கவலையில்லாத மனிதன், பாக்கியலக்ஷ்மி, மணப்பந்தல், காத்திருந்த கண்கள், சுமைதாங்கி, வீரத்திருமகன், இது சத்தியம், கற்பகம், இதயத்தில்நீ, மணிஓசை, கலைக்கோயில், கறுப்புப் பணம், சர்வர் சுந்தரம், வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக்கிளி, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்று பட்டியல் நீள்கிறது.இவற்றில் ஸ்ரீதரின் மற்ற படங்களையும் சேர்த்தால் பட்டியல் எங்கேயோ போய் நிற்கும்.
1952-ல் பணம் படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களின் பயணம் பதின்மூன்று ஆண்டுகள் 1965-ல் வெளிவந்த ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் வரையிலும் கொடிகட்டிப் பறந்து முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு குழந்தையும் தெய்வமும் படத்தின் மூலம் தமது தனிப்பட்ட பயணத்தை ஆரம்பிக்கிறார் எம். எஸ்.விஸ்வநாதன். அவருடைய நீண்ட பயணம் இன்னொரு இருபது ஆண்டுகளுக்கான சாதனையாக விரிகிறது.
இத்தனை ஆண்டுகளின் சாதனையில் மக்கள் மனதில் என்றென்றைக்கும் பசுமையாய் நிற்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர்கள் அளித்திருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் யாவும் வெறும் பட்டியல் போடுவதற்குப் பயன்படுபவையோ அல்லது புள்ளிவிவரம் காட்டுவதற்குப் பயன்படுபவையோ அல்ல. மாறாக மக்களிடையே இத்தனை ஆண்டுக் காலமும் புழக்கத்தில் இருந்து, இன்னமும் பல நூறு ஆண்டுக்காலமும் புழக்கத்தில் இருக்கப்போகும் பாடல்கள். செந்தமிழ்த் தேன்மொழியாள், அச்சம் என்பது மடமையடா, காலங்களில் அவள் வசந்தம், அத்தான் என்னத்தான், அத்தைமடி மெத்தையடி, போனால் போகட்டும் போடா, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மலர்ந்தும் மலராத பாதிமலர்போல, சட்டி சுட்டதடா கைவிட்டதடா, ஆறுமனமே ஆறு, வீடுவரை உறவு வீதிவரை மனைவி, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, பார்த்த ஞாபகம் இல்லையோ,பாலிருக்கும் பழமிருக்கும், கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், மயக்கமா கலக்கமா, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள், கட்டோடு குழலாட ஆட, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், நானொரு குழந்தை நீயொரு குழந்தை, உள்ளத்தில் நல்ல உள்ளம்....என்றிப்படி எத்தனைப் பாடல்களை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஒரு பட்டியலை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் போடமுடியாது. இவர்களுடைய காலத்திலேயே கே.வி.மகாதேவன் உட்பட இன்னமும் சில இசையமைப்பாளர்களின் சிரஞ்சீவித் தன்மைப் பெற்ற பாடல்கள் உள்ளன, ஆனால் அவை யாவும் எண்ணிக்கையில் குறைவே.' தொட்டதெல்லாம் பொன்னாகும்' என்பார்களே, அதுபோல விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கண்ணதாசன் மூவரும் தொட்டதெல்லாம் பொன்னான காலம் அது. இப்படிப்பட்ட பொற்காலங்கள் ஏதாவது ஒருமுறைதான் வரும்.தமிழுக்கு வந்து முடிந்துவிட்டது. தமிழ்ப்படங்களைப் பற்றிய கிராஃப் ஒன்று போட்டோமானால் அம்புக்குறி உச்சத்தைத் தொட்டு நிற்கும் காலகட்டம் அது. நல்ல படங்கள், நல்ல இயக்குநர்கள், நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல இசை, நல்ல பாடல்கள் என்று காலத்தைக்கடந்து நெஞ்சில் நிறைந்திருக்கும் திரைப்படங்கள் வந்த காலம் அது. அதனால்தான் அந்தக் காலத்தில் திரையில் பரிணமித்த எல்லாக் கலைஞர்களுமே - சிவாஜி எம்.ஜி.ஆர் முதல் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் துவங்கி பீம்சிங், ஸ்ரீதர் என்று தொடர்ந்து கலைஞர் கருணாநிதி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி , டி.எம்.சௌந்தர ராஜன் ,பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி ,சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா,நாகேஷ்,மனோரமா என்று இன்றைக்கும் வரலாறு படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைக்குத் திறமைசாலிகள் இல்லையா, இன்றைய சாதனையாளர்கள் இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளிலும் வரும் திறமையாளர்கள் காலத்துக்கு ஏற்றாற்போல் வெற்றிக் கொடிகளை நாட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் காலத்தைக்கடந்து நிற்பார்களா என்பதைச் சொல்வதற்கில்லை. நாட்டில் எத்தனையோ மகால்கள் வந்திருக்கலாம். ஆனால் தாஜ்மஹாலுக்கு இன்னொன்று வரவில்லை. வரவும்போவதில்லை. எத்தனையோ சோழ மன்னர்கள் இருந்திருக்கலாம். ஆனால் ராஜராஜ சோழனுக்கு இன்னொருவன் ஈடாக முடியாது. அதுபோன்றதொரு காலகட்டம்தான் ஐம்பதுகளில் துவங்கி எழுபதுகளில் முடிந்த காலகட்டம். அது திரும்பி வராது.
இளையராஜாவின் திறமைகளையும், ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளையும் மனமுவந்து ஒப்புக்கொள்வோம். ஆனால் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் இடங்களை அவரவர்களுக்கு விட்டுவிடுவோம். இன்றைய இளைஞர்களுக்கு இர்விங் வாலசைப் பிடித்திருக்கலாம். ஹாரிபாட்டரின் புத்தக விற்பனை உலகின் எல்லா எழுத்தாளர்களையும் மிஞ்சினதாக இருக்கலாம். அதற்காக யாரும் இவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரை மிஞ்சிவிட்டார்கள் என்று எந்தப் பைத்தியமும் சொல்லிக்கொண்டு அலைவதில்லை. தமிழில் திரைஇசையில் சாதித்தவர்களுக்கான இடங்களை வணக்கத்துடன் அவர்களுக்குத் தந்துவிடு
வோம். இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் எந்த இடம் உள்ளதோ அதனை இவர்களுக்குத் தந்து இவர்களைக் கொண்டாடுவோம் . இந்த இடத்தில் இளையராஜாவைப் பற்றி இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழில் நாட்டுப்புற இசையை முதன்முதலில் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்று பலபேர் தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயா, உங்களின் தவறான கருத்துக்களை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் நாட்டுப்புற இசையை குளங்களாக ஏரிகளாகக்கூட அல்ல; பெரிய பெரிய அணைக்கட்டுக்களாகவே கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் கே.வி. மகாதேவன். மதகுகளைத் திறந்து உங்கள் கவனத்தை அங்கே கொஞ்சம் திருப்புங்கள். இளையராஜாவே அடிக்கடி 'வாழையடி வாழையாக வந்த ' என்ற சொற்பிரயோகத்தை உபயோகிப்பார். அந்த அடிப்படையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, அதைத் தொடர்ந்த விஸ்வநாதனின் தனி ராஜாங்கம் , அதே சமயத்தில் இன்னொரு ராஜபாட்டையில் வந்துகொண்டிருந்த கே.வி.மகாதேவன் இவர்களை ஒட்டி , இவர்கள் வந்த பாதையில் வந்து வெற்றிபெற்றவர்தான் இளையராஜாவே தவிர, தமிழ் திரைப்பட இசையே இளையராஜாவிலிருந்துதான் துவங்குகிறது என்று தவறான கற்பி தங்களை யாரும் கற்பித்துக்கொள்ள வேண்டாம். அப்புறம் எல்லாக்கணக்குகளையுமே தப்பும் தவறுமாகவே போடவேண்டியிருக்கும். தமிழின் முதல் பிரம்மாண்டப் படத்தைத் தயாரித்தவரே செல்வராகவன்தான் என்று சொல்ல வேண்டியிருக்கும. எஸ்.எஸ்.வாசனை யெல்லாம் சௌகரியமாக விட்டுவிடலாம். மூன்று நான்கு வருடங்களாகவே மிகவும் பிரபலமான பாடல்களை எழுதுபவர் நா.முத்துக்குமார். எனவே, நா. முத்துக்குமாரிலிருந்து
தான் தமிழ்ப்பாடல்களின் வரலாறு ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை , வாலி ஆகியோரையெல்லாம் விட்டுவிடலாம். விக்ரமும் சூர்யாவும் சமீப காலத்தில் மிகுதியான திறமையை நடிப்பின் மூலம் நிரூபித்தவர்கள். எனவே இப்படிப்பட்ட நடிகர்கள் தமிழுக்கு இதுதான் முதல் என்று கூறிவிடலாம். சிவாஜி, கமலையெல்லாம் கண்டுகொள்ளவே வேண்டாம்........எப்படி சௌகரியம்? இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வாய்ப்பு அவரது வருகையின் சமயத்தில் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட டேப் ரிகார்டர்களின் வளர்ச்சி. வீடுகளிலும் கார்களிலும் டேப்ரிகார்டர்கள் புற்றீசல்போல் அதிகரிக்கத்தொடங்க , காசெட்டுகளாகப் புதிய பாடல்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். பழைய பாடல்களில் இருந்த இனிமையை விடவும் புதிய பாடல்களின் ரிகார்டிங்கில் இருந்துவந்த புதிய ஒலிகள் வசீகரிப்பவையாய் இருந்தன. மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு ஒலிகள் மாறியபோது ஸ்டீரியோ ரிகார்டிங்குகளில் வெளிவந்த பாடல்கள் இளையராஜாவுடையவை. இந்த தொழிற்புரட்சியும் இளையராஜா அதிகமாகப் பரவ ஒரு காரணம்.
இதே காரணத்தை நாம் ரகுமானுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. இளையராஜா பாடல்கள் மிக வேகமாய்ப் பரவியதற்கு காசெட்டுகளும் ஸ்டீரியோவும் பெருமளவு காரணம் என்பதுபோலவே ரகுமானின் பாடல்கள் அதைவிட அசுர வேகத்தில் பரவியதற்கு இன்றைக்கிருக்கும் விஞ்ஞானத் தொழிற்புரட்சிதான் மிகப்பெரிய காரணம். அன்றைக்கு டேப்ரிகார்டர்களும் காசெட்டுகளும் என்றால் இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜிட்டல் பதிவுகள் இன்டர்நெட் , செல்போனில் மியூசிக் என்று விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய் நிற்கிறது. இன்னமும் வாஷிங்டனில் பாடல் பதிவு முடிந்தது என்றதும் நம் காதோரம் இருக்கும் ஏதாவதொரு தலைமுடியில் பொருத்தப்பட்டிருக்கும் மயிரிழையைவிட மெல்லிய ரிகார்டரில் பாடல் பதிந்து நம் காதுகளில் அதுவாகவே ஒலிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த அசுர விஞ்ஞான யுகத்துக்கு இசைமூலம் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் இசையமைப்பாளராகத்தான் ரகுமானைப் பார்க்க வேண்டும்.
இந்த தொழிற்புரட்சிகளைப் பற்றிக் கவலையே படாமல் அந்த இரட்டையர் போட்ட நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாடல்கள் நாள்தோறும் உலகம் பூராவும் தினமும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன என்பதுதான் எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய ஒரு விஷயம்! இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னம் எத்தனை லட்சக்கணக்கான பேர் அந்தக் காலத்துப் பழைய பாடல்களைக் கேட்கிறார்கள் தெரியுமா? அத்தனைச் சேனல்களும் அமுதகானம் என்றும் தேனருவி என்றும் தேன்கிண்ணம் என்றும் தேனும் பாலும் என்றும் விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பழைய பாடல்களைத்தானே ஒலியும் ஒளியுமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்........

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிக்குப் பிறகு இளையராஜாதான் என்று சொல்வதும் வேண்டாம். இளையராஜா ஒன்றுமே இல்லை, ரகுமானுக்கு இணை இங்கே யாருமில்லை என்று சொல்வதும் வேண்டாம். நடந்து முடிந்த கால்பந்தாட்டத்தில் கோல் போட்டு உலக மக்களைக் கவர்ந்தவர் ரொனால்டோவாக இருக்கலாம். அவருக்கு முன்னேயே பீலேக்களும் மாரடோனாக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

************************