Tuesday, December 25, 2012

‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!



இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.

உலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும். 

அறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும்.

ஆரம்பத்தில் பல் துலக்க பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்? 

அப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும் வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர்? (இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்) 

இன்னமும்கூட நகரத்தில் இருக்கும் சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும் கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும்.

சிறிது நாட்களுக்கு முன்பு பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம் சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள்.

ஆல்டர்னேட் தெரபி என்று சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம் கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும் அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும்.

‘சரி டாக்டர் நான் வீட்டில் ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில் சில குணமடைவதில்லை என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று)

இப்படி ஆங்கில மருத்துவமுறையை விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.

இந்தக் காரணத்தினால்தான் மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும் மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு விஷயமாகவும் இருந்துவருகிறது.

மாற்றுமருத்துவ முறைகளான பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை.

ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது?

பல தனியார் மருத்துவ மனைகளில் ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.
பல மருத்துவமனைகளில் பிராணிக் ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள்.
சில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும் மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள்.

ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது. 

ஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள், நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலைமை.

அவ்வளவு கூட்டம்!

தினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு.

நடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.

சரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும்.

சமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும்.
மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.

அதுதான் எட்டு நடை!

எட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.

அதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.

மொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை.

இந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம்

மொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.  

அடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.
அரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும்.

இந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.

எட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

ரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும்.

இரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

உடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட 
பிரச்சினைகள் விலகும்.

ரத்த ஓட்டம் சீர்ப்படும்.

ஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும்.

தூக்கமின்மை சரியாகும்.

அப்புறமென்ன? இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.
ரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம்.

அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை.

இந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.

நம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

நேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது.
ட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம்.

இந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. 

இதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார்.
அவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். 

சேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார்.

இந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார்.

என்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர்.

தன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம்.

கால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்.

எல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
காசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா? 

எல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்!

Monday, December 10, 2012

இந்த நூற்றாண்டின் முதல் மகாகவி



இந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த முதல் மகாகவி பாரதிதான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனிப்பட்ட நடையில் உழன்று கொண்டிருந்த தமிழ்க்கவிதையைச் சட்டென்று திசைதிருப்பி இன்றைக்கு இருக்கின்ற - இனிமேல் இருக்கப்போகின்ற நவீன நடைக்கான ராஜபாட்டையை- மன்னிக்கவும் மக்களுக்கான பாட்டையைப் போட்டுக்கொடுத்த அற்புதன் அவன்தான். அவனுடைய காலம்வரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்ப்பாடல்கள் என்பதும் சங்க இலக்கியத்தின் நீட்சியாகத்தான் இருந்தது. அதன் மருட்சி நடை பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கித் திரும்பவில்லை. எந்தச் சாதாரணப் பாடலுக்கும் உரை சொல்வதற்கு ஒரு தமிழ் வித்துவானையோ தமிழ்ப்புலவரையோ தேடிப்போக வேண்டியிருந்தது. 

சில புலவர்களின் தமிழ் உரையை விளங்கிக்கொள்வதற்கு இன்னொரு உரை தேவையிருந்தது. இதே நிலைமை தொடர்ந்திருந்திருந்தால் தமிழ்க்கவிதைகள் அழிந்தே போயிருக்கும். வேகமாய் வந்துகொண்டிருந்த நவீனத்தின் காலம் ஒரு பாடலைப் புரிந்துகொள்ள யாரையோ தேடிப்போகவேண்டும் அவர்கள் விளக்கம் சொன்னார்களானால்தான் இலக்கியம் புரியும் என்ற 

நிலைமை தொடர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு உரை நடைக்கும் (அந்தக் காலத்திலே அதற்குப் பெயர் வியாசம்) ஒரு வித்துவானைத் தேடிக்கண்டுபிடித்து உரை சொல்லக்கேட்டு இலக்கியம் படித்திருக்கப் போகிறார்கள்? ‘குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்” என்று ஆரம்பித்தவுடன் “அண்ணே எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறமா வாரேன்” என்று எழுந்து போய்விட மாட்டார்களா? நம் காலத்து மொழிநடையில் கவிதை இருக்கவேண்டும் கரடு முரடான தமிழ் பேச்சுமொழிக்கும் சற்றே மேம்பட்ட ஒரு நடையில் இருக்கவேண்டும் ரொம்ப உயரத்தில் புரியாத மொழிநடையில் இருக்கக்கூடாது என்ற எண்ணம் பாரதி காலத்துக்குக் கொஞ்சம்  முன்னரே விதைக்கப்பட்டிருந்த போதிலும் அதனை வெற்றிகரமாகக் கையிலெடுத்து மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவன் பாரதிதான்.

இயல்பான மொழிநடை, உணர்ச்சிகரமான சொற்கள், தத்துவ விசாரம், ஆன்மிக ஞானம் பழையன சாடல் புதியன பேசல் புதுப்புது உத்திகள் அறநெறி பேணல் விடுதலை வேட்கை காதல், நாட்டுப்பற்று, மொழி உணர்வு, அழகியல், இயற்கையை நேசித்தல் என்று மக்களின் வெகு அருகில் வந்து நின்று இலக்கியம் பேசியவன் பாரதி. அதனால்தான் அவனை ஒரு மகாகவியாகவும் யுகபுருஷனாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

பாரதிக்கு அடுத்துவந்த பாரதிதாசன் பாரதி பாடாமல் விட்ட சில பகுதிகளையும் மாறிவரும் சமுதாயத்திற்குத் தேவையான உணர்வுகளையும் ஊட்டத்தொடங்கினான். தேசவிடுதலையை பாரதி பாடிச்சென்றுவிட ‘ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று தனக்கு முன்னோன் சொன்னதை 
தமிழ் இனப்புரட்சியாக கொண்டுவர பாடுபட்டவன் பாரதிதாசன்.

அடுத்துவந்த கண்ணதாசன் சங்க இலக்கியத்தின் மரபு சார்ந்த நீட்சியையே பாடுபொருள் ஆக்குகிறான். அவன் காலத்தில் இருந்த கவிஞர்களுக்கும் அவனுக்கு முன்பிருந்த கவிஞர்களுக்கும் கண்ணதாசனுக்கும் அதுதான் வித்தியாசம். சங்க இலக்கிய மரபு திரைஇசைப் பாடலாக உலா வர ஆரம்பிக்கிறது. அதற்கு அவனுக்கு அற்புதமாய் வாய்த்த இடம் திரைப்படத்துறை. ஏட்டில் படிப்பதுதான் இலக்கியம் என்றிருந்த காலகட்டம் மெதுவாக மாறுகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியால் மீடியா வானொலி இசைத்தட்டு டேப்ரிகார்டர், சி.டி, ஐபேட் என்று வகைவகையாக மாறி இசைவடிவத்தில் பாடல் வரப்போக ஏட்டில் படிக்காதவனையும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்று இதழில் தேன் தடவிப் பாடவைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் வெறும் சினிமாக்கவிஞன் தானே சினிமாப்பாட்டெல்லாம் இலக்கியமாகிவிடுமா? என்று இன்னமும் சிலபேர் முனகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட கவிஞன் அவன்.  மனித 
வாழ்க்கையின் அத்தனை நொடிகளையும் பாடிவைத்திருக்கும் ஒரே கவிஞன் அவன்தான்.
நாம் பாரதிக்கு வருவோம்.

ஒரு கவிஞன் எந்நாளும் நிலைத்து நிற்க அவன் வெறுமனே அழகியலைப் பாடிச்செல்லுபவனாகவோ தினசரி வாழ்க்கையைப் பதிவு செய்துவைத்துவிட்டுப் போகிறவனாகவோ மட்டும் இருந்தால் போதாது. அவன் ஒரு தத்துவ ஞானியாகவும் இருத்தல் வேண்டும். 

இப்போதெல்லாம் சில கவிஞர்கள் பாடல்களில் நிறைய புள்ளிவிவரம் சொல்லுகிறார்கள். இன்னும் சில கவிஞர்கள் என்சைக்ளோபீடியா விஷயங்களைச் சொல்லுகிறார்கள்.

“எறும்பு பற்றித் தெரியுமா நண்பர்களே உங்களுக்கு?

அதன் சின்னஞ்சிறு உருவத்துக்குப் பின்னே இருக்கும் மலைக்க வைக்கும் விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூச்சி இனத்தில் மிகுந்த அறிவு கொண்டது எறும்புதான் என்பது தெரியுமா?

எறும்புகளில் எட்டாயிரம் வகைகள் உண்டு

உடலை விடத் தலை பெரியதாக உள்ள உயிரினம் எறும்பு.

பிரிந்துபோன எறும்பு ஒன்று ஆறுமாதம் கழித்து வந்தாலும் மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டுகொள்ளும்.

எறும்புகள் வரிசையாக செல்லக் காரணம் அவை செல்லும்போது சுரக்கும் பியுமரோன் ப்யூமரிக் அமிலம்தான்

அவை மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும்……………”இப்படியெல்லாம் ‘கவிதை’ எழுதுகிறார்கள்.

இந்தக் கவிதை கவிதை அல்ல; தினமணியில் வந்த செய்தித் துணுக்குத்தான். இப்படி தினமணி தினத்தந்தி தினமலர் போன்ற பத்திரிகைகளின் சிறுவர் மலர்களிலும் பாப்பா மலர்களிலும் ஓராயிரம் தகவல்கள் வருகின்றன. அதனைத் தொகுத்து பாடல்களாகவும் கவிதைகளாகவும் சிறுபிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள். இந்த தகவல் துணுக்குகள் எல்லாம் தகவல் துணுக்குகளே. கவிதைகள் ஆகா.

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்றவன் பாரதி. தீ சுடும் என்பது தகவல். ‘தீ இனிது’ என்றானே அதுதான் கவிதை.

பாரதி பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் இவ்வார தினமணியின் தமிழ்மணி பகுதியில் வந்துள்ளது. அவற்றிலுள்ள சில பகுதிகளைப் பாருங்களேன்.

‘தம்பி- மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கின்றேன். 

நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலேயே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.

நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

தமிழ் – தமிழ் – தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை, புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்.

தம்பி – நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.

தமிழைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை!

தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி!

உள்ளமே உலகம்.

ஏறு! ஏறு! ஏறு!

மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணு.

பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி!

உனக்குச் சிறகுகள் தோன்றுக.

பறந்து போ! பற, பற!

மேலே மேலே மேலே!

தம்பி _ ‘தமிழ் நாடு வாழ்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக’ என்றெழுது. ‘அந்தப்  பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க’ என்றெழுது.

தமிழ் நாட்டிலே ஒரே ஜாதிதான் உண்டு!

அதன் பெயர் தமிழ் ஜாதி!

அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது!

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்வு செய்தோன் கண்ணைக் குத்திக்கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

தொழில்கள் தொழில்கள் தொழில்கள் என்று கூவு!

வியாபாரம் வளர்க, இயந்திரங்கள் பெருகுக, முயற்சிகள் ஓங்குக.

சங்கீதம், சிற்பம், இயந்திர நூல், பூமி நூல், வான நூல்…………இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் – 

இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி! சக்தி! சக்தி! – என்று பாடு!”

இவன்தான் பாரதி.

தினமணியில் ஞாயிறுதோறும் வரும் தமிழ்மணி இம்மாதிரியான முத்துக்களையெல்லாம் தேடியெடுத்து வாசகப்பரப்பில் வைக்கிறது. இப்படியொரு இலக்கியச்சேவையை இன்றைய நாளில் எந்தவொரு ஊடகமும் செய்வதில்லை என்பதைப் பார்க்கும்போதுதான் இதன் மேன்மை புரியவரும். கலாரசிகன் என்ற பெயரில் இந்தப் பகுதியைச் சிறப்பாகச் செய்துவரும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பாராட்டுக்குரியவர்.  

பாரதியை சரிவரப் படிக்காமலேயே அல்லது இனம்சார்ந்த விமர்சனத்தை அந்த மகாகவிஞன் மீது வைப்பதானாலேயே அவன்மீது சேற்றை வாரித்தூற்றும் சிலரை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அவன் ஆதங்கப்பட்டிருப்பதையெல்லாம் வசதியாகத் திரைப்போட்டு மறைத்த திராவிட சிந்தனையாளர்களையும் இந்த நேரத்தில் பரிதாபமாக நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இவர்களையெல்லாம் தாண்டிக்கொண்டுதான் மகாகவிகள் நிற்கிறார்கள்.

இமயத்தைவிடவும் அதைவிட உயரமாகவும் அவர்கள் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

Sunday, November 4, 2012

ரெயில்வேக்குச் சில கேள்விகள்



ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னால் சென்னை சென்றுவிட்டு பிருந்தாவன் ரெயிலில் பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன். ரயில் மிகச்சரியான நேரத்திற்கே சென்ட்ரலைவிட்டுப் புறப்பட்டது. வாணியம்பாடி வரும்வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது. ஒரு இரண்டு நிமிடம் கழித்துப் புறப்படும்போலும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போகவே சரி ஏதோ கிராஸிங்கிற்காக நிறுத்தியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டிருந்ததும் பொய்யானது. நீண்ட நேரமாகியும் ரயில் புறப்படவில்லை.

எல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கீழே இறங்கி நிற்பதுவும் கிராஸிங்கிற்காக சிக்னல் எதுவும் மாறுகிறதா என்று தூரத்தில் எட்டிப் பார்ப்பதுவுமாக இருந்தனர். இப்படியே இன்னமும் சிறிது நேரம் சென்றது. இதற்குள் அடுத்த மார்க்கத்திலிருந்த பாதையிலிருந்து நான்கைந்து ரயில்கள் சென்னை நோக்கிச் செல்லும் திசையில் போய்க்கொண்டே இருந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிப்போகவே கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாருக்கும் பொறுமை விடைபெற்றுக்கொண்டு இருக்க கூடைகளுடன் வண்டிக்குள் ஏறும் சிறு வியாபாரிகளுக்கான வியாபாரம் படு விமரிசையாக நடைபெற்றபடியே இருந்தது. என்ன ஆனது என்று ரயில்வே ஊழியரைப்போல் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது மனிதர் கேள்வியையே கண்டுகொள்ளாதவர்போல் அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.

இன்னமும் சிறிது நேரக் காத்திருப்பு..... சென்னை நோக்கிச் செல்லும் இன்னும் சில ரயில்களின் ஒரு வழிப்போக்குவரத்து என்று இன்னொரு அரைமணி நேரம் செல்ல ஒரு வழியாக பிருந்தாவன் ரயில் பெங்களூரை நோக்கிப் புறப்பட்டது. செல்போன் மகானுபாவர்கள் யாவரும் வீட்டிற்கு போன் போட்டு வண்டி ஒன்றரை மணி நேரம் லேட் என்ற செய்தியைச் சொன்னோம்.

வாணியம்பாடியிலிருந்து தடதடத்து ஓடிவந்த ரயில் ஜோலார்ப்பேட்டை ரயில்நிலையத்தில் நின்றது. ஜோலார்ப்பேட்டையில் வழக்கமாக இரண்டு நிமிடங்கள்தானே நிற்கவேண்டும்? இரண்டு நிமிடம் ஆயிற்று. அரைமணி நேரம் ஆயிற்று. ஒரு மணி நேரம் ஆயிற்று. வண்டி கிளம்புகிறபாடாகத் தெரியவில்லை. இதற்கிடையில் எதிர்ப்புறம் போகின்ற வண்டிகள் வருகின்ற செய்தியையும் நின்று புறப்பட்டுப் போகின்ற செய்தியையும் அறிவித்துக்கொண்டே இருக்க அதன்படி அந்த வண்டிகள் யாவும் போய்க்கொண்டே இருந்தன. பெங்களூரிலிருந்து வரும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இத்தனையாவது பிளாட்பாரத்துக்கு வருகிறது என்ற அறிவிப்பைக் கேட்டவுடன்தான் எல்லாருக்கும் சந்தேகம் முளைத்தது. ஏனெனில் அந்த ரயில் இத்தனை நேரம் சென்னை சென்ட்ரலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கப்போகிறது.  ஏதோ தவறு நடந்திருக்கிறது. சம்திங் ராங் என்ற எண்ணம் பயணிகள் எல்லாருக்கும் ஏற்பட்டது. இதற்குள் பெங்களூரில் இறங்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால் வண்டி எப்போது புறப்படும் எத்தனை மணிக்குப் போய்ச்சேரும் என்ற தகவலும் தெரியவில்லை. பசி எடுக்கிறது. ஏதாவது வாங்குங்களேன் என்ற ஒரு பெண்ணிற்கு இரும்மா இங்கிருந்து சரியாக இரண்டுமணி நேரம்தானே பெங்களூர்? வீட்டிற்கே போயிரலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு கணவர்.

நேரம் ஆகிக்கொண்டே இருக்க நாங்களிருந்த பெட்டிக்குள் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு டிக்கெட் பரிசோதகரை நிறுத்தி என்ன ஆச்சு சார்? எதுக்காக லேட்? என்றேன்.

வேறொரு வண்டி டீரெயிலாயிருக்கு

எங்கே சார்? எந்த வண்டி?

நின்று பதில் சொல்லிக்கொண்டிருக்க அவர் தயாரில்லை. எதிரே நடந்துகொண்டிருந்தவர்களைத் தள்ளாத குறையாக முட்டி மோதிக்கொண்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார். பெட்டிக்குள்ளிருந்தவர்கள் எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று விசாரிக்க ஆரம்பித்தனர். அவர் சொன்னதை மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. எங்கேயாம்? எந்த வண்டியாம்? இந்த வண்டி எப்போது புறப்படுமாம்? என்று சுற்றிலுமிருந்த பயணிகளின் எந்தவிதமான கேள்விக்கும் என்னிடம் எப்படி பதிலிருக்க முடியும்? ஆனால் எல்லாரும் அதைத்தான் என்னிடம் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

நான் ஒரு யோசனை செய்தேன். வீட்டிற்கு போன் போட்டு சன் நியூஸ் கலைஞர் செய்திகள் புதிய தலைமுறை என்று ஏதாவது செய்தி சேனல்களைப் பார்த்து ரயில் ஏதாவது எங்காவது தடம் புரண்ட செய்தி இருக்கிறதா பார்த்துச் சொல்லுஎன்று சொன்னேன். இரண்டாவது நிமிடத்தில் மகளிடமிருந்து போன் வந்தது. ஆமாம்ப்பா குப்பத்துக்கு அருகில் மைசூர்-சென்னை காவிரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டிருக்கிறதாம். மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சென்னை மார்க்கமாகச் செல்லும் எல்லா வண்டிகளும் தாமதாமாக் போவதாகவும் செய்தி போட்டிருக்கிறார்கள் இந்தச் செய்தியை நான் சொல்லவும்தான் அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் அதற்கு அடுத்த பெட்டியிலிருந்த பயணிகள் என்று இந்தச் செய்தி மளமளவென்று பரவத்தொடங்கிற்று.

இப்போது வண்டி நின்றிருப்பதற்குக் காரணம் தெரிந்துவிட்டது. வண்டி எப்போது கிளம்பும், பெங்களூர்ப் போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும் இதுபோன்ற தகவல்களெல்லாம் தெரியவேண்டாமா? என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு முஸ்லிம் நண்பர் தம்முடைய மனைவிக்கு போன்செய்ய காருடன் பெங்களூர் சிடி ரெயில்நிலையத்தில் காத்திருக்கும் அந்தப் பெண்மணி ஓரளவு சரியானத் தகவல்களைத் தெரிவித்தார். சென்னை மார்க்கத்திலிருந்து வந்துகொண்டிருக்கும் எல்லா ரயில்களும் தாமதமாக வந்துகொண்டிருப்பதாகவும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஐந்து மணிநேரம் தாமதமாக மாலை ஆறுமணிக்குத்தான் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சிடி ரெயில் நிலையத்தில் அறிவிக்கிறார்கள் என்ற செய்தியைப் பெற்று எல்லாருக்கும் தெரிவித்தார் அவர்.

ஆக, இரண்டு மணிநேரம் தாமதம் மூன்று மணி நேரம் தாமதம் என்பதையெல்லாம் கடந்து ஆறு மணிக்கோ ஏழு மணிக்கோ தான் இந்த வண்டி பெங்களூர்ப் போய்ச்சேரும் என்பது தெரிந்தவுடன் அவரவர்களுக்கும் முதலில் வயிற்றுப்பிரச்சினைக்கு வழி தேடுவது முதன்மையான காரியமாக மாறிப்போனது. சாப்பாடு ஏதாச்சும் இருக்காப்பா? என்று கேண்டின் சிப்பந்தியிடம் கேட்டபோது எல்லா சாப்பாடும் தீர்ந்துருச்சி. பஜ்ஜியும் மசால்தோசையும்தான் இருக்கு என்றார்.

கட்டையிலப் போறவனுங்க. வண்டி லேட்டாப் போகும்ன்றதை அறிவிச்சுத் தொலைச்சா என்ன? நாம் ஏதாவது வாங்கி சாப்பிட்டிருக்கலாமே என்று சாபமிட்டார் ஒரு பெரியம்மா.
அவரவர்களும் வண்டியிலிருந்து இறங்கி ஓடுவதும் பழங்களையும் பிஸ்கட்டுகளையும் வாங்கிவருவதுமாகவும் இருந்தனர். என்னதான் பிருந்தாவனில் பேன்ட்ரி கார் இணைக்கப்பட்டிருந்தாலும்   வீட்டிற்குப்போய்த்தான் சாப்பிடுவது என்று பிடிவாதமாக இருப்பவர்கள் ஒவ்வொரு ரயிலிலும் என்னைப்போல் நூறுபேராவது இருக்கக்கூடும். ஆனால் இம்மாதிரி சமயங்களில் என்ன செய்வது? எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்!

அடுத்த அரை மணி நேரத்தில் சூடாக ஏராளமான எலுமிச்சை சாதத்தை சமைத்து பொட்டலம் கட்டி எல்லாப் பயணிகளுக்கும் கிடைக்கிறமாதிரி செய்த அந்த கேண்டின் சமையல்காரப் புண்ணியவானுக்குக் கோடி நமஸ்காரம். அத்தனைச் சூடாகவும் அவ்வளவு நன்றாகவும் இருந்தது அந்த எலுமிச்சை சாதம்.

ஓரிரு மணி நேரக் காத்திருப்பிற்குப்பின் ஜோலார்ப்பேட்டையிலிருந்து கிளம்பிய ரயில் அதற்கு அடுத்து காடுபோலிருந்த ஏதோ ஒரு ஸ்டேஷனில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நின்றது. அந்த நீண்ட காத்திருப்பிற்குப்பின் அங்கிருந்து கிளம்பி இரவு ஏழு மணிக்கு பெங்களூரை வெற்றிகரமாக வந்து அடைந்தது.

இப்போதைய கேள்வியெல்லாம் வண்டிகள் ஓடுவதும் தடம் புரளாமல் மோதிக்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று சேருகின்ற மாதிரி திறம்பட நிர்வகிப்பதும் பயணிகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்வதும் ரயில்வே துறையின் மகத்தான சேவைதான் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இம்மாதிரி தாமதங்கள் ஆகும்போது எதற்காக இப்படியொரு தாமதம்? என்ன நடந்திருக்கிறது? என்ன நடக்கவேண்டி இருக்கிறது? தாமதம் சரியாக இன்னமும் எவ்வளவு நேரமாகும்? போன்ற தகவல்களை பயணிகளுக்கு அறிவிக்க வேண்டுமா வேண்டாமா? அதனைத் தெரிந்துகொள்ளும் உரிமை ஒரு பயணிக்கு இல்லையா என்ன?

ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிலோ வழியில் எங்காவது நிறுத்திவைத்திருக்கும் ரயிலிலோ அறிவிப்பிற்கான வழிவகைகள் இல்லாமல் இருக்கலாம். ஒரு ரயில் ஜோலார்ப்பேட்டை போன்ற சகல வசதிகளும் நிறைந்த ஜங்ஷனில் நின்றிருக்கும்போது கூடவா அறிவிக்கக்கூடாது? அதாவது போகட்டும். செய்தி தெரிந்தவுடன் டிக்கெட் பரிசோதகர்கள் குறைந்தபட்சம் அவர்களுடைய பெட்டியில் இருப்பவர்களிடம் கூடவா இத்தகைய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடாது? இல்லை இதெல்லாம் ராஜ ரகசியங்களா?

நாட்டிலிருக்கும் பொதுமக்களுக்கெல்லாம் டிவி செய்திகள் மூலம் அந்தத் தகவல்கள் தெரியும்போது குறிப்பிட்ட அதே வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் அதுவும் எத்தனையோ வேலைகளை முடிப்பதற்காகப் பயணம் செய்துகொண்டிருக்கும் பயணிகளுக்கு அந்தத் தகவல்கள் தெரியக்கூடாதா? ரயில் குறிப்பிட்ட ஊர் போய்ச்சேர நீண்ட நேரம் ஆகும் என்றால் எத்தனையோ பேர் சில ரயில்வேஸ்டேஷன்களில் இறங்கி பஸ் பிடித்தோ அல்லது தனி டாக்சி வைத்துக்கொண்டோ போகிறவர்கள் இருப்பார்கள். குறைந்தபட்சம் வயிறைப் பட்டினிபோடாமல் பார்த்துக்கொள்ளவாவது இத்தகைய தகவல்கள் உதவும் இல்லையா?

என்ன பொறுப்பற்றதனம் இது?

இன்னமும் ஐந்தாறு மணி நேரம் ஆகும் என்பதை வாணியம்பாடியிலேயே தெரிவித்திருந்தால் நான் அங்கேயே இறங்கி ஒரு டாக்ஸி வைத்து பெங்களூர்ப் போயிருப்பேன். சாயந்திரம் மகளுக்கு கல்யாண ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருக்கேன். இப்படி ஆகிவிட்டதே என்று அழாத குறையாய் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் ஒரு தந்தை.

நான் நாலரை மணிக்கு ஒரு இன்டர்வ்யூவில அட்டெண்ட் பண்ணுவதற்காகப் போய்க்கிட்டிருக்கேன் சார் என்று பரிதாபமாகச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

ரயில்வேத்துறை இம்மாதிரி சம்பவங்களின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறது?

Wednesday, September 26, 2012

தங்கமழை பொழிந்தார் ஜெயலலிதா; தழுதழுத்தார் இளையராஜா!


ஜெயலலிதா தமது விருப்பத்திற்கேற்ப நடத்தி முடித்த மெல்லிசை மன்னர்களுக்கான பாராட்டுவிழாவின் இரண்டாவது பாகத்தையும் ஜெயா டிவி 23-09-2012 அன்று ஒளிபரப்பிற்று. இதுவரை ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளிலேயே சாலச்சிறந்த நிகழ்ச்சியாக இதனையே சொல்லமுடியும். ரஜனியின் பேச்சை குளறுபடி செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியிருந்தார்களெனில் அவர்களின் பெருமை நிச்சயம் இன்னமும் கூடியிருக்கும்.(விஸ்வநாதன் ஆரம்ப காலத்தில் நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார் என்று சொல்லி யாரோ ஒருவருடைய படத்தைக் காட்டினார்கள். சி.ஆர்.சுப்பராமன் குழுவில் இருந்தார் என்று சொல்லி கிவஜவின் படத்தைக் காட்டினார்கள். இந்த இரண்டு தவறுகளையும் மன்னித்துவிடலாம்)

இப்படியொரு விழாவை திரைப்படத்துறையின் ஆகச்சிறந்த கலைமகன்களுக்காகவும் தலைமகன்களுக்காகவும் பிரமாண்டமாக நடத்தி முடித்த ஜெயலலிதாவை இதற்காக எத்தனைப் பாராட்டினாலும் தகும். ஏனெனில் நமக்கு ஜெயலலிதாவின் அரசியல் மீது நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. அதற்காக அவர் எது செய்தாலும் அரசியல் கண்ணோட்டத்துடனேயே பார்த்து கருத்துச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு துளியும் அரசியல் கலக்காமல் எடுக்கப்பட்ட ஒரு பாராட்டு விழாவாகவே கொள்ள வேண்டும்.

அவரே தமது உரையில் குறிப்பிட்டதுபோல் சின்னக்குழந்தையாக இருந்தபோது விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களை ரசிக்க ஆரம்பித்து – அறியும் பருவம் வந்தபிறகு அந்த பாடல்களின் இசையனுபவத்தில் மூழ்கி – இன்றைய நாள்வரை அந்தப் பாடல்களின் இனிமையுடன் அவற்றுக்கான நிஜமான அனுபவங்களுடனும் பயணிக்கிறவர் அவர். ‘என்னுடைய உயிர் பிரியும்வரை இவர்கள் இசையமைத்த பாடல்கள் என்னுடன் கலந்திருக்கும்’ என்று சொல்லும் அளவுக்கு இவர்களின் பாடல்களில் தோய்ந்தவராக மனம் பறிகொடுத்தவராக இருக்கிறார் அவர். 

இந்த விஷயத்தில் ஜெவின் கருத்துக்களை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போகிறபோக்கில் சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டுப் போகிற விஷயமாக இதனைக் கொள்வதற்கில்லை. கலைத்துறையில் திரைப்படக் கதாநாயகியாக ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகள் பவனி வந்த ஒரு கலைஞர்; கலைத்துறை சார்ந்த குடும்பச்சூழல் என்பதால் திரைப்படத்தில் அடியெடுத்து வைக்குமுன்னரே வீட்டிலேயே சங்கீதம், நாட்டியம் என்று கற்றுத் தேர்ந்தவர்; கர்நாடக இசை பற்றியும் நாட்டிய நாடகங்கள் குறித்தும் தெளிவான கண்ணோட்டம் மிக்க ஒருவர், தாம் ஈடுபட்ட ஒரு பிரிவு குறித்து – அந்தப் பிரிவில் மகத்தான சாதனைகள் புரிந்த இரு மகான்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை அவர் நினைத்த அளவில் பிரமாதமாய் பிரமாண்டமாய் செய்து முடித்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.


அவரது இந்த முடிவு ஒன்றும் சாதாரணமாக வந்ததாக நினைப்பதற்கில்லை. ஏதோ ஒரு தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட சமயத்தில் ஒருவரின் பாடலை ரசிக்க ஆரம்பித்து பிற்பாடு அதையே விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டு தொடரும் மௌடிக ரசனை சார்ந்தது அல்ல அவருடைய இந்த ரசனை. அந்த விழாவிலேயே சிவகுமார் சொன்னதுபோல்  சென்னையில் அலிகான் என்பவரிடம் ஏராளமான இசைப்பாடல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு அவரிடமிருந்து சுமார் அறுபதாயிரம் பாடல்களை (சரியாகப் படியுங்கள்- அறுபதாயிரம் பாடல்கள்) பதிவுசெய்து வாங்கிவைத்துக் கேட்டு உய்த்துணரும் உயர் ரசனைக்கு சொந்தக்காரராகத்தான் ஜெயலலிதா இந்த விழாவை எடுத்திருக்கிறார் என்பதையும் நாம் சேர்த்தே நினைவுகொள்ள வேண்டும்.

சாதனையாளர்கள் வாழ்கின்ற காலமெல்லாம் பேசாமலிருந்துவிட்டு அவர்கள் போய்ச்சேர்ந்த பின்னர் அவர்களுக்கென விழாவெடுத்து சிலைவைத்து தெருக்களுக்கும் கட்டடங்களுக்கும் அவர்கள் பெயரைச் சூட்டுவதும் அவர்கள் பெயரால் விருதுகள் வழங்குவதும் அவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவதும் என்று தொடரும் இம்மாதிரி சம்பிரதாயங்களுடன் ஒப்பிடும்போது ஜெவின் இந்தச் செயல் மிகப்பெரும் பாராட்டுக்குரியது.

அதிலும் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் ஜெவின் இந்தச் செய்கையில் துளிக்கூட அரசியல் கிடையாது. அவர் அரசியலில் ஈடுபட்டு இத்தனை ஆண்டுக்காலமும் பேசிய பேச்சுக்களை வைத்துப் பார்த்தாலும் ‘பத்ம விருதுக்கு இவர்களை நான் சிபாரிசு செய்தால் அதனை மத்திய அரசு ஏற்றுச் செயல்படுத்தும் இடத்துக்கு நிச்சயம் வருவேன்” என்று குரல் உயர்த்திய அந்த ஒரு பாராவை விட்டுவிட்டுப் பார்த்தால் பேச்சு நெடுகிலும் துளிக்கூட அரசியல் இல்லை.

ஒரு நல்ல கலா ரசிகர் ஆட்சிபுரியும் இடத்திற்கு வந்தபிற்பாடு தாம் இத்தனைக் காலமும் கண்டு கேட்டு அனுபவித்து பிரமித்த அந்த உயர் கலைஞர்களுக்குத் தன்னுடைய அன்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் வெகுமதியையும் எப்படி நம்முடைய பாணியில் செலுத்தலாம் என்று தெரிவிப்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த விழா.
யோசித்துப் பாருங்கள்…………… இன்றைக்கு விசுவநாதன் ராமமூர்த்திக்குப் பாராட்டு விழா எடுப்பதனால் ஜெயலலிதாவுக்கு ஆகப்போவது என்ன?
இதிலே அரசியல் ரீதியாக அவருக்கு என்ன ஆதாயம் இருக்கப்போகிறது?

இந்தக் காயை நகர்த்துவதன் மூலம் அரசியல் சதுரங்கத்தில் அவர் எந்தக் காயை வீழ்த்தப் போகிறார்? அவருக்குக் கிடைக்கப்போகும் வெற்றி என்ன?

ஒன்றுமே இல்லை.

ஆக, ஆத்மார்த்தமாக செலுத்தப்பட்ட நன்றி நவிலும் நிகழ்வாகவே இது பரிமளிக்கிறது. இதனை அவர் ஸ்டைலில் ஆளுக்கு ஒரு காரும் தங்கக் காசுகளாகவும் பொழிந்து தமது மரியாதையைத் தெரிவித்தார். இதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டும் அதே சமயத்தில் இளையராஜாவையும் வேறொரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும்.
முதல்வர் மட்டுமல்ல இளையராஜாவும் இதனை ஆத்மார்த்தமாக நன்றி செலுத்தும் விழாவாகவே மாற்றிக்கொண்டதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். 
                                  

இங்கே பதிவுகளில் இளையராஜாவைப் பற்றிப் பேசும்போது நிறைய பதிவர்கள் கோபம் கொள்ளுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இசை என்றால் அது இளையராஜா மட்டும்தான் என்றே தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகள் மட்டுமல்ல பிற ஊடகங்களும் இதே தவறுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. இந்தப் பாராட்டுவிழாவை ஒரு மிகப்பெரும் நிகழ்வாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவேண்டிய ஊடகங்கள் ரஜனி கலைஞர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய ஒன்றுமில்லாத விஷயத்தை மட்டுமே ‘பேனைப் பெருமாளாக்கிய’ கதையாகச் சொல்லி  ஏதோ ஒரு பரபரப்புத் தேடுவதாக நினைத்து வெற்று உரலைக் குத்தி சில்லைப் பேர்த்திருக்கிறார்கள்.

இளையராஜா நிற்கும் இடம் எது என்பது இளையராஜாவுக்குத் தெரிந்திருக்கிறது. பாவம் இவர்களுக்குத் தெரியவில்லை.
தன்னுடைய உயரம் எது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரது ரசிகர்களுக்கு அது தெரியவில்லை.

தம்மிடம் இருக்கும் சொத்து சொத்து எவ்வளவு என்பதற்கான சரியான கணக்கை அவர் வைத்திருக்கிறார். பாவம் ரசிகர்கள் ‘உலகமே உன்னுது தாண்ணே’ என்றே ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த்திரை இசையில் சாதித்த முன்னோர்கள் நிறைய இருக்கிறார்கள். ஜி.ராமனாதன் நிறைய மாறுதல்களைச் செய்தவர். அதற்கு அடுத்தும் நிறையப்பேர் இருக்கிறார்கள். முதலில் பாடல்களை எழுதவைத்து அந்தப் பாடல் வரிகளுக்கு மட்டுமே மெட்டமைத்தவர் கே.வி.மகாதேவன். அது மட்டுமின்றி நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் தமிழ்த்திரையில் பெருக்கெடுத்தோடச் செய்தவர் அவர்தான்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாதனைகளோ இன்னமும் மகத்தானவை. இனிமை ததும்பிய ஓராயிரம் பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் மட்டுமே. வேறு யாருடைய இசையிலும் ‘நின்று நிலைக்கும்’ பாடல்கள் இத்தனைத் தேறாது. தவிர மற்றவர்கள் ஒரு படம் இசையமைக்கிறார்கள் எனில் அதில் ஒரு பாடலோ இரண்டோ அல்லது மூன்று பாடல்களோ மட்டும்தான் தேறும். அவைதான் கொஞ்ச நாட்களுக்கேனும் வலம் வரும். மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் எந்தவொரு இசையமைப்பாளரின் படங்களாக இருந்தாலும் இதுதான் இயல்பு. தமிழில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த படங்களிலும் சரி, அதன்பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த பல படங்களிலும் சரி - அத்தனைப் பாடல்களும், ஆமாம் அத்தனைப் பாடல்களும் - தெவிட்டாத தேனமுதாய் நின்று 
நிலைக்கும் பேறு பெற்றவையாக இருந்தன, இருக்கின்றன! இம்மாதிரியான படங்கள் குறைந்தபட்சம் நூற்றி ஐம்பதாவது இருக்கும்.

எண்பத்தாறு படங்களுக்கு மட்டுமே இருவரும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். பிறகு விஸ்வநாதன் தனியாக இசையமைத்த படங்கள் நானூற்று ஐம்பதுக்கும் மேல். தனியாய்ப் பிரிந்தபின்னர் ராமமூர்த்தியால் பெரிதாகத் தனி ஆவர்த்தனம் செய்ய முடியவில்லை. இருபது படங்கள்தாம் தனியாக இசையமைத்தார் என்றே தெரிகிறது.
ஆனால் அந்தக் காம்பினேஷன்……………………!

அற்புதங்களை இசையில் விதைத்துச் சென்ற சேர்க்கை அவர்களுடையது.

அவர்கள் பிரிந்து இன்றைக்கு ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டன.

நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்து உட்காரவைத்து இருவருக்குமாக இந்தத் தமிழகம் விழா எடுக்கிறது என்றால் அவர்கள் சாதனைகளை நினைத்துப் பாருங்கள். 

அவர்கள் பிரிந்தது 1965-ல்! இப்போது விழா நடந்திருப்பது 2012-ல்.

தமிழ்த்திரை இசை என்றால் கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, டிஎம்எஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ஆர்.மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், பிபிஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி, சந்திரபாபு, ஜமுனாராணி, கே.பி.சுந்தராம்பாள், எம்எஸ் ராஜேஸ்வரி, ஏஎல் ராகவன் என்று இத்தனைப் பேரின் பங்களிப்புடன் வலம்வரும் சாகாவரம் பெற்ற பாடல்கள்தாம் நம்முடைய அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள். தமிழ்த் திரையின் அடையாளம் தெரிவிக்கும் பாடல்கள் இவர்கள் சம்பந்தப் பட்டவைதாம். இந்த - அத்தனை ஜாம்பவான்களின் பின்னணியிலும் இருக்கும் இசை முகவரிக்குச் சொந்தக்காரர்கள் இரட்டையர்கள் மட்டுமே.
இன்னமும் நூறு வருடங்கள் அல்ல, ஐநூறு வருடங்களுக்குப் பின்னரும் தமிழ்த்திரையின் சாதனையாளர்களாக சிவாஜியும் எம்ஜிஆரும் கண்ணதாசனும் கொண்டாடப்படுவார்கள் என்றால் அப்போதும் பேசப்படக்கூடியவர்களாக இருக்கப்போகிறவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியுமே.

ஏதோ இருபது பதிவர்கள் திட்டுவார்களே என்பதற்காக நாம் வரலாற்றை விட்டு ஓடிவிட முடியாது. அப்படித் திட்டுபவர்களால் எந்தப் புதிய வரலாற்றையும் உருவாக்கவும் முடியாது. இதற்கும் கண்ணதாசன் எழுதி இந்த இரட்டையர்கள் இசையமைத்த பாடல் வரிகளே பதில் சொல்கிறது; ‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது’

இளையராஜாவை மட்டுமே ரசிக்கிறவர்கள் ரசித்துக்கொண்டு போங்கள். ஆட்சேபணையே கிடையாது. “இளையராஜா ‘மட்டும்தான்’ நான் விரும்பும் ஒரே இசையமைப்பாளர்” என்பது உங்கள் கருத்தா?

பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்தில் குறுக்கிடும் எண்ணமே நமக்குக் கிடையாது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் இளையராஜா மட்டும்தான் தமிழின் ஒரே இசையமைப்பாளர் என்பதுபோன்ற ஒரு கருத்தாக்கத்தைப் பொதுவெளியில் பரப்ப முயலாதீர்கள் என்பதை மட்டும்தான் வலியுறுத்துகிறோம்.

“மொழி படத்தில் ‘காற்றின் மொழி’ பாடலை என்றைக்குக் கேட்டேனோ அன்றிலிருந்து நான் வித்யாசாகரின் இசைக்கு அடிமையாகிவிட்டேன். இனி வித்யாசாகர்தான் என்னுடைய ஃபேவரிட்”

அப்படியா? மகிழ்ச்சி.

“மின்னலே படத்தில் ‘வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்’ கேட்ட மாத்திரத்திலிருந்து எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்”

ரொம்பவும் மகிழ்ச்சி.

“ரோஜா படத்தில் கொஞ்சம் சுமாராகத்தான் பிடித்தது. காதலன் படம் வந்தது பாருங்க………அதுல சூப்பர் ஹிட்ஸ் தந்தாரு பாருங்க. அடட………, ஏ.ஆர்.ரகுமானுக்கு இணை யாருமே இல்லைங்க”

அப்படியா? ஓகே. வைத்துக்கொள்ளுங்கள்.

“ரொம்பச் சின்னப் பையன்சார் இவன். வெயில் படத்திலும் மதராசப் பட்டிணம் தெய்வத்திருமகள் படத்திலும் என்னமா ஸ்கோர் பண்ணியிருக்கான் தெரியுமா? இந்த வயசிலயே இப்படின்னா இன்னும் போகப்போக எப்படிசார்? இளையராஜா ரகுமானையெல்லாம் ஒண்ணுமில்லாம செய்திருவான் போலிருக்கே”
ஜி.வி.பிரகாஷ்குமாரைப் பற்றி இப்படியொரு சிலாகிப்பு.

மாறுபாடான ரசனைகளும் மனநிலைகளும் கொண்ட மக்களிடமிருந்து இப்படியெல்லாம் விமரிசனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். தனிப்பட்ட அபிப்பிராயங்கள் என்பவை வேறு. உனக்குப் பிடித்தது இர்விங் வாலஸாக இருக்கலாம். உன்னுடைய பிள்ளைக்குப் பிடித்தது ஹாரிபாட்டராக இருக்கலாம். ஆனால் ஆங்கில இலக்கிய உலகம் அங்கீகரித்துக் கொண்டாடுவது சாமர்செட் மாமையும் பெர்னார்ட்ஷாவையும் மில்டனையும் இன்னும் வேறு பல முன்னோர்களையும் என்பதை மறந்துவிடக்கூடாது. இர்விங் வாலஸின் இடம் இவர்களுக்கு மிகவும் பின்னால்தான் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.

இந்தக் கருத்தைச் சொன்னாலேயே நண்பர்கள் சீறுகிறார்கள். இவர்கள் சீறலையும் கோபத்தையும் தாண்டி டிஎம்எஸ்ஸும் பி.சுசீலாவும் கண்ணதாசனும் கணந்தோறும் தமிழர்கள் உள்ள இடங்களில் அவர்கள் பாட்டுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ரஜனி சொன்னமாதிரி போனால் போகட்டும் போடா சட்டிசுட்டதடா எல்லாம் இன்னமும் கன்னடர்களாலும் உச்சரிக்கப்படும் பாடல்கள்.

இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லட்டும். நமக்கும் சம்மதமே. ஆனால் தமிழனுக்குக் காதுகள் முளைத்ததே இளையராஜா பாடல்கள் போட்டபிறகுதான் என்கிற மாதிரி பிதற்றித்திரிவதைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது.
ஆனால் நம்முடைய கவலையைக் களைகிற மாதிரியான நடவடிக்கைகளை இளையராஜாவும் கங்கை அமரனுமே எடுத்திருக்கின்றனர். ராஜா ரசிகர்களின் மருளையும் மருட்சியையும் போக்கும் விதமாக அவர்கள் இருவருமே முத்தாய்ப்பாக சில விஷயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.

ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என்பதனால் அதற்குப் போட்டியாக அன்றைய தினம் காலையில் மெகா டிவியில் இதைப் போன்றே ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவருக்கும் மெகா டிவியில் அதன் உரிமையாளர் திருமதி ஜெயந்தி தங்கபாலு நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.(பார்ரா இங்கேயும் இவர்கள் இருவருக்கும்தான் பாராட்டுவிழா!) அந்த நிகழ்வில் இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன் பேசிய பேச்சு முக்கியமான ஒன்றாக இருந்தது.

“நாங்களெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையைக் கேட்டு வளர்ந்தவர்கள். எங்கள் கிராமத்தில் ஒலித்த பாட்டெல்லாம் இவங்களுடையதுதான். முதன்முதலாக விஸ்வநாதன் இசையில் மலர் எது  பாடலுக்கு அண்ணன் இளையராஜா வாசித்துவிட்டு வந்தார். அவ்வளவுதான்… எங்கள் கிராமம் பூராவும் கொண்டாடியது அதை. கிராமம் பூராவும் இதான் பேச்சு. எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டே ‘காலமகள் கண்திறப்பாள் சின்னையா’ பாட்டுத்தான். எங்களுக்குத் தெரிஞ்ச இசையெல்லாம் இவங்ககிட்டயிருந்து கத்துக்கிட்டதுதான். கோரஸ் எப்படிப் பாடணும், தபலா எப்படித் துவங்கணும், எப்படித் தொடரணும் வாத்தியக்கருவிகளை எல்லாம் எப்படி யூஸ் பண்ணனும் எல்லாமே இவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான். அவங்ககிட்ட யார் யார் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வாசிச்சாங்களோ அவங்கதான் பிற்பாடு மியூசிக் டைரக்டர்ஸ். அவங்களுக்கு நாங்களெல்லாம் சரண்டர்தான். எங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அவங்கதான்” என்று பேசிக்கொண்டே வந்தவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுத் தழுதழுத்த குரலில் சொன்னார். “இந்த சூட், இந்தக் கார், இந்த பங்களா எல்லாமே இவங்க போட்ட பிச்சை”.

இதை அப்படியே கவனத்தில் பதித்துக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா நடத்திய விழாவில் இளையராஜா பேசிய பேச்சுக்கு வருவோம்.

“அந்தக் காலத்தில் டைரக்டர் ஸ்ரீதர்சார்தான் எங்களுக்கு ஹீரோ. அவர் நடத்திய வெண்ணிற ஆடை ஷூட்டிங்கில் ஜெயலலிதாதான் கதாநாயகி. அந்த படப்பிடிப்பு பார்ப்பதற்கு அன்றைக்கு அங்கே நின்றிருந்தவன் நான்” என்று உற்சாகமாகத்தான் பேச்சை ஆரம்பித்தார் இளையராஜா. பிற்பாடு அவர் பேசியதும் ஏறக்குறைய கங்கை அமரன் பேச்சினை ஒட்டியே இருந்தது. “என்னுடைய மனசு நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிக்கிடப்பது இவருடைய இசைதான். இதெல்லாம் அவர் போட்ட பிச்சை” என்றவர் உணர்ச்சிவசப்பட்டவராக அடுத்து சொன்னதுதான் மிகப்பெரிய வார்த்தை. நிச்சயமாக மிக மிகப் பெரிய வார்த்தை.

“அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது”-

என்று சொன்ன இளையராஜா அதற்குமேல் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றவராக ‘நன்றி வணக்கம்’ என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார்.
ஜெயலலிதா எப்படி ஆத்மார்த்தமாக இந்த விழா எடுத்தார் என்று சொல்கிறோமோ அதே போல இளையராஜாவும் மிகவும் ஆத்மார்த்தமாக தமது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் சொல்லவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் இப்படிச் சொல்வதால் இளையராஜாவுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. அவருக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

இளையராஜா அவர்கள் மீது மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் இரண்டு விஷயங்களில் அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. முதலாவது, விஸ்வநாதன் மீதான அவருடைய வெளிப்படையான என்றைக்கும் மாறாத இந்தக் கருத்திற்காக.

இரண்டாவது சம்பவத்தை நண்பர் ஒருவர் சொன்னார். கவியரசர் கண்ணதாசன் பிறந்த இடத்தைத் தரிசிப்பதற்காக சிறுகூடற்பட்டி கிராமத்துக்குப் போனாராம் இளையராஜா. அந்த கிராமத்தை அடைந்ததும் காரை அங்கேயே நிறுத்தி “அந்த மகாகவிஞன் பிறந்த ஊர் எனக்குப் புனிதமானது. இந்த மண்ணில் செருப்பு அணிந்து நடக்கமாட்டேன்” என்று சொல்லி செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் காலோடுதான் மொத்த கிராமத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாராம்.