Thursday, December 22, 2016

என்னுடைய பார்வையில் சசிகலா




ஜெயலலிதாவுக்கு அந்தப் பெயர் உண்டு. 

யாராலும் அணுக முடியாதவர், யாராலும் வெல்ல முடியாதவர், யாராலும் ஏமாற்ற முடியாதவர்….. என்றெல்லாம் அவருக்குப் புகழ் மொழிகள் உண்டு. ஆனால்,
- இதற்கெல்லாம் பின்னணியில் வேறொரு பெண்மணி இருந்தார்.
எல்லா விஷயங்களிலும் மொத்தப் பெருமையும் ஜெயலலிதாவுக்குப் போகும். அதே அளவுக்குக் கோபமும், எரிச்சலையும், பொறாமையையும், விமரிசனத்தையும் இன்னொருவர் மீது கொட்டித் தீர்ப்பார்கள்.
தவறுகள் அத்தனைக்கும் காரணம் இந்தப் பெண்மணிதான் என்று இவரை நோக்கிக்  கைநீட்டுவார்கள்.
அவர் மிரண்டதில்லை.
அலட்டிக் கொண்டதில்லை.
அசைந்து கொடுத்ததில்லை.
பரபரத்துப்போய் எதிர்வினையாற்றியதில்லை.
எதிர்த்து அறிக்கை விட்டதில்லை.
எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு ‘எப்போதும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று இருந்துவிடுவார்.

அவர்தான் சசிகலா!

இன்றைய அரசியலில் சசிகலாவுக்கு இருக்கின்ற ‘ரோல்’ என்ன? அவரைச் சுற்றிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகள் என்ன? அவரை வைத்து நகர்த்தப்படுகின்ற அரசியல் காய்கள் என்ன? அவரை வைத்து நடைபெறுகின்ற சதுரங்கம் என்ன? என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க- அதற்குள் போக விரும்பாமல் நான் அன்றிலிருந்து அறிந்த சசிகலாவை, அவரைப்பற்றி என்னுடைய எண்ணத்தில் இருக்கும் பிம்பத்தைச் சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

நான் இந்தப் பதிவில் அவரைப் பற்றிய பாசிட்டிவ்வான சில எண்ணங்களைத்தான் சொல்லப்போகிறேன். பிடிக்காதவர்கள் இங்கேயே விலகிக்கொள்ளலாம். அரசியல் கண்ணாடி அணிந்துகொண்டுதான் சசிகலாவைப் பார்ப்பேன் என்று விரதம் பூண்டவர்கள் சட்டென்று கம்ப்யூட்டரை அணைத்துவிட்டு வேறு வேலைப் பார்க்கப்போகலாம்.
சசிகலாவைப் பற்றிய வேறொரு கோணமும் இருக்கும்போலிருக்கிறதே என்று நினைப்பவர்கள் மட்டும் மேலே தொடரலாம்.

சசிகலா முதன்முதலாகச் சென்னைக்கு வந்ததைப் பற்றி மறைந்த குமுதம் பால்யூ சொல்லக் கேட்டிருக்கிறேன். திடீரென்று திருமணமான ஒரு சில தினங்களில் புது மனைவியைக் கையோடு கூட்டிக்கொண்டு சென்னை வந்து நின்றிருக்கிறார் புது மாப்பிள்ளை நடராஜன். சென்னையில் எங்கு போவது என்று தெரியாத நிலையில் பால்யூ தெரிந்த நண்பர் என்பதால் அவருடைய வீட்டிற்கு வந்து நின்றிருக்கிறார்.
புது மணமக்களைப் பார்த்த பால்யூவுக்கு ஒரே திகைப்பு. 
அவர்களை எங்கே தங்கவைப்பது? 

ஏனெனில் பால்யூ வீடு சிறியது. தவிர அவருக்கே ஏகப்பட்ட பிள்ளைகள். அதனால் இவர்களைத் தங்க வைக்க போதிய இடவசதி வீட்டில் இல்லை. வேறொரு வீடு பார்த்துத்தான் இவர்களைக் குடி அமர்த்த வேண்டும்.

எனவே, சசிகலாவை வீட்டில் விட்டுவிட்டு பால்யூவும், நடராஜனும் வீடு தேடக் கிளம்பியிருக்கிறார்கள். சென்னையில் புதிய வீடு அத்தனை சீக்கிரத்தில் கிடைத்துவிடுமா என்ன? எங்கு சுற்றித் திரிந்தும் ஒன்றும் அகப்படவில்லை.

பால்யூவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

“சரி வாருங்கள்” என்று அவர் நடராஜனைக் கூட்டிக்கொண்டு வந்து நின்ற இடம் விக்கிரமன் அலுவலகம்.

பிரபல சரித்திரக் கதாசிரியரான விக்கிரமன் அப்போது அமுதசுரபியின் ஆசிரியர். அவரிடம் வந்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவர் சொன்னாராம். “சென்னையில் புது வீடு கிடைப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை. இரண்டொரு நாட்கள் ஆகும். ஏன் ஒரு வாரமோ பத்து நாட்களோகூட ஆகலாம். அதுவரை அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென்றால் இதோ இந்த அலுவலகத்தில் ஏராளமான இடம் இருக்கிறது. அவர்கள் ஒரு பகுதியில் தங்கிக் கொள்ளலாம். நான் இந்தப் பகுதியில் இருந்து செயல்பட்டுக் கொள்கிறேன். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளட்டும். வீடு கிடைத்தபிறகு சாவகாசமாய் அவர்கள் காலி பண்ணிக்கொள்ளலாம்” என்று கூறி நடராஜனும் சசிகலாவும் தங்குவதற்கு அந்த அலுவலத்திலேயே வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விக்கிரமன்.

சில நாட்கள் ஆனதும் வீடு ஒன்று அமைந்துவிட நடராஜன் சசி தம்பதியினர் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு தனிக்குடித்தனம் போயிருக்கின்றனர். 

விக்கிரமனும், பால்யூவும் செய்த இந்த உதவிகளை நடராஜனும் சரி, சசிகலாவும் சரி என்றைக்கும் மறக்கவே இல்லை.

அவ்வப்போது அவர்களைப் பார்த்துவர பால்யூ சசிகலாவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சசிகலாவின் விருந்தோம்பல் பண்பு எப்படி இருந்தது என்பதை வியந்து சொல்வார் பால்யூ. “சசி அத்தனை நன்றாகப் பார்த்துக்கொள்ளும். அத்தனை அன்பாகப் பேசும். அவ்வளவு அன்பாக காபி போட்டு சிற்றுண்டி சாப்பிடவைத்து அனுப்பிவைக்கும்” என்று சொல்வார். கூடவே இன்னொன்றையும் சொல்வார். “இப்போது சசிகலா பற்றி என்னென்னவோ கேள்விப் படுகிறேன். அமைச்சர்களிடமும் , அரசு உயர் அதிகாரிகளிடமும் எப்படியெல்லாம் பேசுகிறது என்னவெல்லாம் உத்தரவு போடுகிறது என்பதையெல்லாம் கேள்விப் படுகிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டிற்குப் போனால் நேரில் கூட வந்து நின்று பேசாது. காபி கொடுத்துவிட்டு எதிரில் உட்காராமல் அறையின் கர்ட்டனில் பாதி தன்னை மறைத்து நின்றுகொண்டுதான் ‘வீட்ல அம்மால்லாம் எப்படிப்பா இருக்காங்க?’ என்று பேசும்” என்று வியந்திருக்கிறார்.

சரி, இப்போது விக்கிரமனிடம் வருவோம்.

சசிகலாவின் வாழ்க்கை ஒரு பெரிய மாறுதலுக்கு உட்பட்டு சசிகலா போயஸ் கார்டன் வந்த பிறகு, நடராஜன் தனியாக அச்சுக்கூடமெல்லாம் வாங்கிப்போட்டு  பத்திரிகை அதிபராக அவதாரம் எடுக்கிறார்.
அவர் ஆரம்பித்த பத்திரிகையின் பெயர் ‘புதிய பார்வை’. புதிய பார்வை பத்திரிகை ஆரம்பித்த அதே கையோடு கூடவே இன்னொரு பத்திரிகையையும் ஆரம்பிக்கிறார்

அந்தப் பத்திரிகையின் பெயர் ‘தமிழரசி.’

தமிழரசிக்கு ஆசிரியராக ஒருவரை நியமிக்கிறார் நடராஜன். அவர் - விக்கிரமன்.

விக்கிரமனை நடராஜன் சந்தித்து தமிழரசிக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது விக்கிரமன் மறுத்திருக்கிறார். “அமுதசுரபி பத்திரிகையை நான் ஆசிரியராக இருந்து நடத்திக்கொண்டிருக்கிறேன். இதனை விட்டு நான் வரமாட்டேன்” என்று அவர் சொன்னபோது “உங்களை யார் அதனை விட்டுவிட்டு வரச்சொன்னது? அதிலும் நீங்களே ஆசிரியராக இருங்கள். இந்தப் பத்திரிகையையும் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார் நடராஜன்.

காரணம் தமிழரசிக்கு ‘ஆசிரியர்’ என்று ஒருவர் கிடைக்கமாட்டார் என்பதற்காக அல்ல; தனது நிலை உயர்ந்தவுடன் நன்றி மறவாமல் விக்கிரமன் செய்த உதவிக்குக் கைமாறாக அவருக்குத் தாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்காக உருவாக்கியதுதான் ‘தமிழரசிக்கு ஆசிரியர் பதவி’ என்பது.

பத்திரிகை துவங்கிய முதல் நாளில் விக்கிரமன் கையில் ஒரு கார்ச் சாவியைத் தருகிறார் நடராஜன்.

விக்கிரமனுக்கு செலுத்தும் அன்புக் காணிக்கை அது.

நடராஜன் துவங்கிய தமிழரசி பத்திரிகைக்குப் பெயர் வைத்த காரணத்தைச் சொல்வார்கள். அது எந்த அளவு உண்மை என்பது தெரியாது. “என்ன இது தமிழரசி என்று பெயர் வைத்திருக்கிறீர்களே……..யார் அந்த தமிழரசி?”- என்று கேட்டார்களாம்.

“வேறு யார்? உண்மையான ‘தமிழரசி’ சசிகலா தானே? அவருக்காகத்தான் அந்தப் பெயரை வைத்திருக்கிறேன்” என்றாராம் நடராஜன்.

இவையெல்லாம் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்கள். 

ஆக, என்னைப் பொறுத்தவரை அந்தக் காலத்திலிருந்தே சசிகலாவை ஒரு பாசிட்டிவ் கண்ணோட்டத்திலேயே பார்த்து வருகிறேன். அரசியலைப் பொறுத்தவரை காமராஜர் அண்ணா காலத்துக்குப் பிறகு கலைஞரின் காலம் ஆரம்பித்தபோது ஒன்று தோன்றியது. ‘கலைஞரை அரசியலில் வெற்றி கொள்வது என்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல’ என்பது.

எம்ஜிஆர் என்ற மக்கள் செல்வாக்கு கருணாநிதியைத் தோற்கடித்தது.
அதிக பட்ச செல்வாக்கு என்பது எத்தனை திறமைசாலியாயிருந்தாலும் தோற்கடித்துவிடும் என்ற பாடம் கிடைத்தது. சரி ‘எம்ஜிஆர் புயல்’ ஒருமுறை அடித்து ஓய்ந்துவிட்டது. இனி திறமைக்குத் தோல்வியில்லை’ என்றே தோன்றிற்று.

கருணாநிதியை வெல்வது என்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. காரணம், கருணாநிதி என்பவர் ஏதோ காரணத்திற்காக உச்சிக்குச் சென்று அமர்ந்திருக்கும் அரசியல் ‘நட்சத்திரம்’ அல்ல; இலக்கியம், பல்வேறு அசாத்தியமான திறமைகள், தமிழ் உணர்வு, பட்டறிவு, பகுத்தறிவு என்றெல்லாம் உறுதியாகி இறுகிப்போய் கெட்டிப்பட்டதொரு ‘இரும்புக் கோட்டை’ அது.

போகிற போக்கில் மக்கள் செல்வாக்கு, அவ்வப்போது அரசியலில் அடிக்கிற பரபரப்பு என்ற புயலில் எம்மாதிரியான கோட்டையையும் எளிதில் தாண்டி வந்துவிடலாம். வந்துவிட முடியும்.

ஆனால் ‘நிற்பதற்கும்’ அங்கேயே நின்று ‘நிலைப்பதற்கும்’ ஒரு திறம் வேண்டும். அந்தத் திறம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. எப்படி இருந்தது, யாரால் இருந்தது என்பதுதான் இங்குள்ள முக்கியமான கேள்வி.

அப்படி நின்று நிலைப்பதற்கு உங்களைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள ஒரு கரம் வேண்டும். என்ன புயல் அடித்தாலும் விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளும் சக்தித் திறம் வேண்டும்.

அரசியலில் அவ்வப்போது சதுரங்கம் ஆடவேண்டியிருக்கும்.
தோளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அரசியல் சதுரங்கத்தில் குயுக்தியாய்க் காய் நகர்த்த ஒரு ‘சூப்பர் நுட்பம்’ வேண்டும்.

ஜெவின் தோளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “அக்கா இந்தக் காயை நகர்த்து, அந்தக் காயை அங்கே கொண்டு போ” என்று அக்காவை ‘இயக்குவதற்கு’ ஒரு தேர்ந்த மதிநுட்பம் வேண்டும்.

அந்த மதிநுட்பம்தான் சசிகலா.

அதாவது ‘ஆனானப்பட்ட’ கருணாநிதியையே ஜெயலலிதா ஆட்டிவைத்தார் என்று எடுத்துக்கொண்டால் –

அப்படிப்பட்ட ஜெயலலிதாவையே ஆட்டிவைத்தவர் சசிகலா!
எல்லாவைற்றையும் விடுங்கள்.

ஜெயலலிதா அட்மிட் ஆன செப்டம்பர் 22ம் தேதியிலிருந்து அவர் மறைந்துபோன தினம்வரை எடுத்துக்கொள்வோம்.

இந்தத் தேதிகளில் நிச்சயம் ஜெவின் பங்கென்று எதுவும் கிடையாது, எதுவுமே கிடையாது.

அவர் படுத்த படுக்கையாகி விட்டார்.

இப்போது எல்லாமே சசிகலாதான்.

இது ஒரு நவீன யுகம்.

எவருக்கும் தெரியாமல் இங்கு எதுவுமே நடப்பதற்கு சாத்தியமே இல்லை.
ஸ்டிங் ஆபரேஷன் என்று சொல்லி என்னென்னமோ நடக்கிறது. 

இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று சொல்லி என்னென்னவோ ஜாலம் நடத்துகிறார்கள். காற்றுப் புக முடியாத இடத்திலும் புகுந்து புகைப்படம் எடுத்து வந்து விடுகிறார்கள்.

காமிராவை பொட்டு மாதிரி நெற்றியில் வைத்துக்கொண்டு போய் படமெடுக்கிறார்கள். பேனாவில், சட்டை பட்டன்களில்  இத்தனூண்டு காமிராவை ஒட்டிக்கொண்டுபோய் நடப்பவற்றைச் சுருட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அத்தனைத் தொழில் நுட்பம். அத்தனை நவீனம்.

எழுபத்தைந்து நாட்களுக்கும் மேலாகிப் போயும் அப்படியெல்லாம் எந்த ‘பாச்சாவும்’ இந்தம்மாவிடம் பலிக்கவில்லை. ஒரேயொரு ஒற்றை போட்டோ வெளிவராமல் இருப்பதற்கு யாராலும் காபந்து செய்ய முடியுமா?

ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற விவரமோ, அவரைப் பற்றிய படமோ, அவர் பற்றிய சின்னஞ்சிறு செய்தியையோகூட யாராலும் வெளிக்கொண்டுவர முடியவில்லை.

என்ன மாதிரியான ஆளுமை இது?

வந்தது கவர்னராக இருக்கட்டும், மத்திய அமைச்சராக இருக்கட்டும், ராகுல் காந்தியாகவே இருக்கட்டும். யாராயிருந்தாலும் ‘உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே’தான்.

‘இந்தம்மா’ ‘உத்தரவைத் தாண்டி’ இரண்டாம் தளத்திற்குமேல் யாராலும் செல்லமுடியவில்லை.

எவராலும் எங்கும் எப்படியும் எதுவும் செய்ய முடியவில்லை.
அந்தம்மாவின் குரல் எப்படியிருக்கும் என்பதுகூட வெளி உலகிற்குத் தெரியாது.

தன்னை விளம்பர வெளிச்சத்திலிருந்து தள்ளி வைத்துக்கொண்டிருந்து எப்போது வெளிக்காட்ட வேண்டும் என்பதற்கு இவரிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கக்கூடும்.

தான் எப்போது வெளியே வரவேண்டும் என்பதை இவர் தீர்மானித்து வைத்திருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தனிப்பட்ட தைரியமும் ஆளுமைத் திறனும் வேண்டும்.
இந்த இரண்டும் சசிகலாவிடம் இருக்கிறது.

தன்னுடைய நேரம் எதுவென்று அவருக்குத் தெரிந்திருக்கலாம். அந்த நேரம் இதுவாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்த அவர் இப்போது வெளிச்சத்திற்கு வந்தாலும் வரலாம்.


வாருங்கள் சசி.

Sunday, September 4, 2016

அன்னை தெரசா ‘செயிண்ட் தெரசா’ ஆனார். ‘செயிண்ட்’ என்றால் என்ன?


உலக மக்களில் பெரும்பாலானோருக்கு – அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருப்பவர்களுக்கு-  நம்முடைய வாழுங்காலத்திலேயே, சிறிது காலத்திற்கு முன்பு நம் முன்னே ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒருவரை புனிதர் என்று, ஆங்கிலத்தில் செயிண்ட் (Saint) என்று வழங்கப்படும் வாய்ப்பைப் பார்க்கக் கொடுத்துவைத்தவர்களாக இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.

இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராவுக்கும் அதிலும் எத்தனை காலத்திற்கு இந்த பூமிப்பந்து 

இருக்கப்போகின்றதோ அத்தனைக் காலத்திற்கும் ‘அன்னை தெரசா’ ‘செயிண்ட் தெரசா’ என்றுதான் இதற்குமேல் வழங்கப்படப் போகிறார். 

இது கால காலத்திற்கும் யுகயுகாந்திரங்களுக்கும் இருக்கப்போகும், வழங்கப்போகும், வழிபடப்போகும் ஒரு பட்டமாக, ஒரு நிலையாக 
இருக்கப்போகிறது என்பதுதான் இதிலுள்ள விசேஷம்.

வாழுங்காலத்திலேயே ‘மகாத்மாவாக’ வாழ்ந்த எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம். இலக்கியத்திலும் வரலாறுகளிலும் மக்கள் மனங்களிலும் அவர்கள் நின்று நிலைத்துவிடுவதைப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றிய புத்தகங்களும், கட்டுரைகளும், நிறையப் படித்திருக்கிறோம். இலக்கியக் கூட்டங்களிலும், பட்டி மன்றங்களிலும் அவர்களின் புகழ்பாடக் கேட்டிருக்கிறோம். மனிதப் புனிதர் என்று நாமும் எத்தனையோ பேரைப் பெயர் சொல்லிக் கொண்டாடியிருக்கிறோம்.


இதற்கெல்லாம் மேம்பட்ட ஒன்று இந்தப் புனிதர் பட்டம்.

நாம் கொண்டாடுகின்ற மற்ற புனிதர்களுக்கும் இந்தப் ‘புனிதருக்கும்’ வேறுபாடு என்னவெனில் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டம். 

அதாவது இந்திய தேசத்தை எடுத்துக்கொண்டால் நாம் என்னதான் கூட்டங்களிலும் ஏடுகளிலும் நூல்களிலும் பேசினாலும் எழுதினாலும் பாராளுமன்றத்தால் ‘அங்கீகரிக்கப்பட்டது’ என்றால் என்ன ஒரு தனி முக்கியத்துவம் கிடைக்குமோ, அதுபோன்ற ஒரு முக்கியத்துவம் வாடிகனில் இருக்கும் திருச்சபை மூலம் மதர் தெரசாவுக்குக் கிடைத்திருக்கிறது.

இனிமேல் உலகம் உள்ள அளவுக்கும் உலகம் முழுமைக்கும் காலங்களைக் கடந்தும் இதே அளவு மரியாதையுடனும் இதே அளவு முக்கியத்துவத்துடனும் இதே அளவு பக்தியுடனும் (இது அதிகரிக்கவும் வாய்ப்புண்டு) நீடித்து நிலைக்கப்போகிறது.

என்ன அது அப்படிப்பட்ட அங்கீகாரம்? அப்படியென்ன முக்கியத்துவம்? இத்தனைக் காலமும் கிடைத்துக்கொண்டிருந்த அங்கீகாரத்தைத் தாண்டி அப்படியென்ன புதிய அங்கீகாரம் அன்னை தெரசாவுக்குக் கிடைத்திருக்கிறது? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். பெரும்பாலும் தொண்ணூறு சதவிகிதத்தினருக்கு இதுபற்றிய புரிதல் நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.

அன்னை தெரசாவுக்கு அவர்கள் வாழுங்காலத்திலேயே மிகப்பெரிய மரியாதைகள் கிடைத்துக்கொண்டிருந்தன என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். 120க்கும் மேற்பட்ட நாடுகளில் அவருடைய துறவறச் சேவைகளுக்கான கிளைகள் உள்ளன; உலகத் தலைவர்கள் இந்தியா வரும்போது டெல்லியில் குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் சந்தித்துவிட்டு கல்கத்தா போய்(ஆமாம் அப்போதெல்லாம் கொல்கொத்தா இல்லை, கல்கத்தாதான்) அன்னை தெரசாவையும் சந்தித்துவிட்டுத்தான் செல்வார்கள்.

வாழும்போதே உலகின் அத்தனை விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. உலகின் பெரிய விருதாக மதிக்கப்படும் நோபெல் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. உலகத்தலைவர்களின் அத்தனை அரசு இல்லங்களும் மதர் தெரசாவின் காலடிகள் படுவதற்காக காத்திருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு அங்கீகாரமா இப்போது வழங்கப்பட்டிருப்பது? என்பதுதான் முக்கியமான கேள்வி.


பதில் ‘ஆம்’ என்பதுதான். 


நாலரை அடிகள் மட்டுமே உயரம் கொண்ட ஒரு பெண்மணி மொத்த உலகையும் தம்முடைய கருணையால் கட்டிப்போட்டிருந்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல; பத்திரிகைகள் சொல்வதையும் பேச்சாளர்கள் சொல்தையும் விட்டுவிடுவோம். பெங்களூரில் எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. நகரின் மிகப்பெரிய புகழ்பெற்ற ஆர்க்கிடெக்டுகளில் ஒருவர். அன்னை தெரசா உயிருடன் இருந்த காலத்தில் ‘இப்படிப் பேசுகிறார்களே, இப்படிப் புகழ்கிறார்களே, அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் பார்த்துவரலாம்’ என்று கல்கத்தாவுக்கு நேரில் சென்று வந்தவர் சொன்னதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

“அந்த இடத்தையெல்லாம் போய்ப் பார்த்ததும் எனக்கே இந்த உலகத்தின் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. ஐயோ, சாதாரண நாற்றத்தைக்கூடத் தாங்கமுடியாமல் நாம் எப்படியெல்லாம் அந்த இடங்களையும் அந்தச் சூழல்களையும் தவிர்க்கிறோம் தெரியுமா?

எத்தனை விலை உயர்ந்த செண்ட்டுகளையும் ஸ்ப்ரேக்களையும் அடித்துக்கொண்டு வேடம் போட்டுக்கொண்டிருக்கிறோம் தெரியுமா?

ஒரு சின்ன நாற்றத்துக்கே மூக்கைப் பொத்திக்கொண்டு காத தூரம் ஓடுகிறோம் தெரியுமா?

அவங்க அப்படியே துர்நாற்றமடிக்கும் மனிதர்களைத் தூக்கி மடிமேல் வைத்துக்கொள்கிறார்கள்;

சீழ்வடியும் காயங்களைக் கொஞ்சமும் முகம் சுளிக்காமல், மூக்கில் துணியைக்கூட கட்டிக்கொள்ளாமல் கழுவித் துடைக்கிறார்கள்.

மலத்தையும் மூத்திரத்தையும் கைகளில் வாரி சுத்தம் செய்கிறார்கள்.

வியாதியஸ்தர்களைத் தோளில் சாய்த்துப் படுக்கவைத்துத் தூங்கவைக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழுநோயாளிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்………

ஐயோ, அதையெல்லாம் நினைத்தால் தூக்கம் பறிபோய் விடுகிறது. நான் கல்கத்தாவில் அதையெல்லாம் பார்த்துவிட்டு வந்து பலநாட்கள் சாப்பிடவே பிடிக்காமல் இருந்தேன்” என்றார். அவர் சொன்னபோது அவரின் உடம்பு துடித்தது. கண்களில் நீர் கோர்த்துக்கொண்டு கேவிக் கேவி அழுதார் அவர்.

இதுதான் அன்னை தெரசா. 

தம்மை அவ்வப்போது வந்து வாட்டிவதைத்த நோயைக்கூட அவர் சாதாரண நகைச்சுவைப் போலத்தான் சொல்வாராம். அவருக்கு அவ்வப்போது இதய வலி வருமாம். அதற்கென பேஸ்மேக்கர் கருவி பொருத்தியிருப்பாராம். ‘என்னுடைய நெருங்கிய நண்பர் இப்போது என்னைப் பார்க்க வந்திருக்கிறார்’ என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னாரென்றால் அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது என்று அர்த்தமாம்.

விமானத்தில் ஏறி வேறொரு இடத்திற்கு மதர் போகிறார் என்றால் எல்லாரும் இறங்கி வந்தபிறகும் அவர் மட்டும் வரமாட்டாராம். ஏனெனில் அவருக்கு விமானப் பணிப்பெண்களிடமும் பணியாளர்களிடமும் வேலையிருக்கிறது.

விமானத்தில் பயணிகள் சாப்பிட்டு மீதம் வைத்ததை, எவற்றையெல்லாம் குப்பையில் கொட்ட வேண்டுமென்று நினைப்பார்களோ அவற்றில் கெட்டுப்போகாத பொருட்களையெல்லாம் சேகரித்து தன்னுடன் கொண்டு போகும் பெரிய பிளாஸ்டிக் பையொன்றில் போட்டு எடுத்துக்கொண்டு வருவது நிரந்தரக் காட்சி.

அவர் அடுத்துச் செல்லப்போகும் ஆசிரமங்களில் இருப்பவர்களுக்கான உணவு அது.

சரி; இப்போது விஷயத்திற்கு வருவோம். இவ்வளவு நாட்களும் மனிதப் புனிதராயிருந்தவருக்கு வாடிகன் திருச்சபை அளித்திருக்கும் அங்கீகாரம் என்னென்ன? 

1)   முதலாவதாக அவருடைய புகைப்படங்கள் இவ்வளவு நாட்களும் சாதாரணமாக இருந்திருக்கும். இனிமேல் மதர் தெரசாவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போடப்பட்டிருக்கும். ஆரா (Aura) என்று சொல்லப்படும் ஒளிவட்டம் இது.

2)   மனிதர்கள் எல்லாருக்கும் இந்த ஆரா உண்டு. நல்லவர்களுக்கு இந்த ஒளிவட்டம் உடம்பைச் சுற்றிலும் மற்றவர்களை விடவும் கொஞ்சம் அதிகம் இருக்கும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் இன்னமும் அதிகமாக இருக்கும். ஆனால் கடவுள்களுக்கும் கடவுளுக்கு நெருக்கமாக வைத்து மதிக்கப்படுபவர்களுக்கும் மட்டும்தான் தலையைச் சுற்றிலும்கூட ஒளிவட்டம் இருக்கும். திருச்சபையால் புனிதர் என்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் அவருடைய படத்துடன் இந்த ஒளிவட்டம் நிரந்தரமாகிவிடும்.

3)   ஒருவர் எத்தனை தான் புகழப்பட்டாலும், போற்றப்பட்டாலும், மனிதப் புனிதர் என்று திரும்பத் திரும்ப பேசப்பட்டாலும் அவர்கள் பெயரில் கோவில்கள் இருக்காது. இருப்பதற்கு வாய்ப்பில்லை.

செயிண்ட் என்று அங்கீகாரம் பெற்றவர்கள் பெயரில்தான் கோவில்கள் உருவாக்க வழியிருக்கிறது. செயிண்ட் தாமஸ் சர்ச், செயிண்ட் செபாஸ்டியன் சர்ச், செயிண்ட் பால்ஸ் சர்ச் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? இனிமேல் செயிண்ட் தெரசா பெயரில் கோவில்கள் உருவாக்கப்படும்- அதாவது உலகமெங்கிலும்.

4)   இனிமேல் மதர் செயிண்ட் தெரசா பெயரில் (இப்படித்தான் அழைக்கப்படுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கெனவே புனிதரான தெரசாக்கள் இருக்கிறார்கள். செயிண்டு தெரசா ஸ்கூல், செயிண்ட் தெரசா கான்வெண்ட் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?) பிரார்த்தனைகள் உருவாக்கப்படும். ஜெபங்கள் உருவாக்கப்படும். அந்தோனியார் ஜெபங்கள், அந்தோனியார் பிரார்த்தனைகள் என்றெல்லாம் வழங்கப்படுவதுபோல் அன்னை பெயரிலும் பிரார்த்தனைகள் உருவாக்கப்படும்.

5)   கோவில், ஜெபம், பிரார்த்தனைகள் என்றெல்லாம் வந்துவிட்ட பிறகு வருடந்தோறும் திருநாள், கொடியேற்றம், தேர்பவனி என்பதெல்லாம் துவங்கப்படும்.

6)   பதுவைப் பதியரான அர்ச் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்- என்று சொல்கிற மாதிரி ‘வாழ்நாளெல்லாம் தொழுநோயாளிகளுக்காகப் பாடுபட்ட அன்னை தெரசாவே – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்’ என்கிற மாதிரியான பிரார்த்தனைகள் உருவாக்கப்படும்.

இவ்வளவு நாட்களும் நம்மில் ஒருவராக இருந்த ஒருவரை இறைவனுக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அங்கீகரித்த ஒரு நிலைப்பாடுதான் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்ட புனிதர் பட்டம்.
1


Thursday, April 21, 2016

திருமாவுக்கு ஒரு கேள்வி



திருமாவளவன் ஆர்.கே.நகர் தொகுதியைக் கேட்டுப்பெற்று அங்கே ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு வசந்தி தேவியை வேட்பாளராகப் போட்டிருக்கிறார். ஆர்.கே.நகர் என்பது சென்ற டிசம்பரில் செம்பரம்பாக்கம் வெள்ளம் சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தபோது அதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு பகுதி.

என்னதான் ஊடகங்களும் குறிப்பாக டிவி சேனல்களும் அதன் அரசியல் விவாதங்களில் பங்கேற்கும் உலகின் நிகரற்ற சிந்தனைச் சிற்பிகளும், அந்த சிந்தனைச் சிற்பிகளுக்குத் தலைமைத் தாங்கும் நெறியாளர் என்ற பெயரில் உலவும் வெறியாளர்களும், ‘ ‘வெள்ளத்தையெல்லாம் மக்கள் மறந்துட்டாங்க; அதிலும் குறிப்பாக வெள்ளத்துக்குப் பிறகு செய்யப்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசின் கோக்கு மாக்கு நிறுவனங்கள் எல்லாமே பாராட்டு தெரிவித்திருக்கின்றன. அகில உலகமே பாராட்டுகிறது; அதிலும் குறிப்பாக அத்தனைப் பெரிய வெள்ளத்துக்குப் பிறகு எந்த விதமான தொற்றுநோயும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டதில் இந்த அரசின் மெச்சத்தகுந்த பணிகள் பாராட்டப்பட்டிருக்கின்றன’ என்று பலவாறாகவும் ஏதோ வெள்ளம் வந்தது இந்தப் பகுதி மக்கள் எல்லாரும் செய்த பூர்வ ஜென்ம பலன் என்பது போலவும் வெள்ளம் வராத பகுதிகளிலில் இருந்தவர்கள் எல்லாரும் வாழத்தகுதியே இல்லாத கழிசடைகள் என்பதுபோலவும் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வளவு எளிதாக அந்த சோகத்தைக் கடந்து செல்கிறவர்களாக இல்லை.

ஒரு வாழ்நாளில் தாங்கள் பார்க்கவிரும்பாத சோகத்தை நேரில் பார்த்தவர்கள் அவர்கள். இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் எவ்வளவு மோசமான மனிதகுலத்திற்கும் இவ்வளவு கோரமான, கொடுமையான, சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என்று உளப்பூர்வமாக வேண்டிக்கொள்பவர்கள் அவர்கள். தங்களின் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தவர்கள் அவர்கள். அவர்களின் நிம்மதி, வாழ்வுக்கான ஆதாரம், வாழ்வின் மகிழ்ச்சி, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்ட அந்த நிகழ்வு தங்கள் வாழ்நாளில் ஏற்பட்டுவிட்ட ஒரு கொடுங்கனவு நினைத்து மறுகுகிறவர்கள் அவர்கள். 

அது, அந்த சோகம் ஒரு வாழ்நாள் அல்ல ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்கமுடியாத ஒரு சோகம் அது.

‘அந்த சோகம் ஒன்றுமே இல்லை. அது சாதாரணம்தான்’ என்று அந்த சோகத்தை ஒன்றுமில்லாததாக்கி, ‘நிவாரணப் பணிகளும் தொற்றுநோயும் ஏற்படாமல் காத்ததுதான் மிகப்பெரிய சாதனை – புண்ணியம்’ என்பதுபோல் பேசித்திரியும் மகாக் கனவான்கள் இந்த ஜென்மத்திலேயே எத்தனைப் பெரிய பாவங்களுக்கு அடிமையாகி எவ்வளவு பெரிய இடர்ப்பாடுகளைச் சந்திக்க இருக்கிறார்கள் என்பது அறம் சார்ந்த ஒரு விஷயம். ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரம் சொல்வது இவர்களுக்காகத்தான்.

இது ஒருபுறமிருக்க அந்த ஆர்.கே. நகரில் செம்பரம்பாக்கம் வெள்ளத்துக்குக் காரணமான ஜெயலலிதா தேர்தலில் நிற்கிறார். அவருக்கு எதிரான ஒரு வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் என்ற ஒரு வழக்கறிஞரை திமுக நிறுத்தியிருக்கிறது.

ஒரு பிரபலமான வேட்பாளரை இன்னொரு பிரபலமான வேட்பாளர்தான் வெற்றிபெற முடியும் என்பது நம் தேர்தல்களில் தேவையற்றது. இந்தியத் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக போற்றப்படவேண்டிய காமராஜரை பெ.சீனிவாசன் என்ற சாதாரண ஒரு இளைஞர்தான் 
தோற்கடித்தார். அண்ணாவை வென்ற பரிசுத்த நாடார் என்பவரை யாருக்கும் தெரியாது. 
ஜெயலலிதாவை பர்கூரில் தோற்கடித்த சுகவனம் யார் என்றே தெரியாத ஒரு வேட்பாளர்தான். உலகப் பெரு நடிகர்களில் ஒருவராக இருந்த சிவாஜிகணேசனைத் தோற்கடித்தவர் பெயரும் நூற்றில் இரண்டு பேருக்குக் கூடத் தெரியாது. 

அப்படியிருக்க ஜெயலலிதாவை ஆர்.கே.நகரில் தோற்கடிக்க யாரோ ஒரு வேட்பாளர் போதும்.

மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் கடைவிரித்திருக்கும் விஜயகாந்த் தலைமையை ஏற்ற தொண்டர்களான விடுதலைச் சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொகுதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ‘பதியம்’ போடுகிறார்கள். ‘டெல்லியின் கேஜ்ரிவால் ஷீலா தீக்ஷித்தைத் தோற்கடித்ததுபோல் இங்கேயும் ஜெயலலிதாவைத் தோற்கடிக்க ‘பிரபலமான’ ஒருவர் வேண்டாமா?’ என்கிறார்கள். 

சரி திருமாவளவன்தான் இங்கே போட்டியிடப்போகிறார் என்கிற சம்சயத்தை இரண்டு நாட்களுக்கு ஏற்படுத்துகின்ற யுக்தியாகத்தான் அவர்களைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு இருக்கிறது. 

இதோ, இன்றைக்கு வசந்திதேவிதான் வேட்பாளர் என்று அறிவித்திருக்கிறார்கள்.

வசந்திதேவி முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர். பெரிய கல்வியாளர். நல்ல பண்புகளும் திறமைகளும் கொண்டவர். மகளிர் ஆணையத் தலைவியாகவும் பதவி வகித்தவர். பல்வேறு தலைப்புகளில் காலச்சுவடு இதழில் பல நல்ல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தவர். ஜெயலலிதாவை எதிர்க்க மிகச்சிறந்த வேட்பாளர்.

எனக்கு ஒரேயொரு சந்தேகம்தான் தோன்றுகிறது.

ஜெயலலிதாவை ‘எதிர்க்க’ சிம்லாவே போதும் என்கிறபோது எதற்காக வசந்திதேவி? வசந்திதேவி எப்படியும் வெற்றிபெறப் போவதில்லை என்பது சிறுகுழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால் வசந்தி தேவியைக் களமிறக்குவதன்மூலம் படித்த மக்களிடையே, ஓரளவு விஷயம் தெரிந்த மக்களிடையே சிம்லாவுக்குப் போகக்கூடிய வாக்குகளைப் பிரிக்க முயல்வதுதான் வசந்திதேவியைக் களமிறக்கியிருப்பதன் ‘சூட்சுமம்’.

விடுதலைச் சிறுத்தைகள் வேறொரு வேட்பாளரைப் போட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய ஓட்டுக்களைவிடவும் ஐந்தாயிரம் ஆறாயிரம் ஓட்டுக்களை வசந்திதேவி நிச்சயம் அதிகம் பெறுவார். 

அந்த ‘அதிகபட்ச ஓட்டுக்கள்’ சிம்லாவுக்குப் போகாமல் இருப்பதற்கான யுக்திதான் இது.

ஆக ஜெயலலிதாவின் வெற்றியை எப்படியாவது ‘உறுதி செய்வது’ என்பதுதான் வசந்திதேவியைப் போட்டியிட வைப்பதன் ‘ரகசியம்’. 

அப்படியெல்லாம் இல்லை. திருமாவின் ராஜதந்திரம் இது. அவருடைய மிகச்சிறந்த அரசியல் சாதுர்யம், யுக்தி என்றெல்லாம் பேசப்படுமேயானால் - திருமா அவர்களுக்கு ஒரு கேள்வி. 

ஜெயலலிதாவை வெற்றிகொள்ள மிகச்சிறந்த வேட்பாளர் இவர்தான். இவர் சாதாரணமானவர் இல்லை. மிகத்தேர்ந்த கல்வியாளர். திறமைகள் அதிகம் வாய்க்கப்பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாங்கள் நிறுத்தியிருக்கிறோம் என்று திருமா சொல்வாரேயானால் அவரிடம் இந்தக் கேள்வி.

எனக்குத் திருமாவளவனைத் தெரியும். அவரது பகுத்தறிவு தெரியும். அரசியல் அறிவு தெரியும். இன்றைக்கு இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்களிலும் –கலைஞரை விட்டுவிட்டுப் பார்த்தோமானால் - திருமா அளவுக்கு அரசியல் அறிவும் தெளிவும் ஆற்றலும் பெற்ற அரசியல் தலைவர்கள் யாரும் கிடையாது. அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. 

ஆகவே அவரிடம் இந்தக் கேள்வி-

எல்லாத் தகுதிகளும் திறமைகளும் பெற்ற வசந்திதேவியை வெறும் ஒற்றைத் தொகுதியில் வெற்றிபெற வைப்பதுமட்டும்தான் உங்கள் குறிக்கோளா?

அந்தம்மாவின் திறைமையை வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா?

ஆகவே இப்போதே ஒன்று செய்யுங்கள்.


எப்படியும் உங்கள் 'முதல்வர்' வேட்பாளர்மீது படித்தவர்களுக்கும் விவரம் அறிந்தவர்களுக்கும் நல்ல அபிப்ராயமில்லை. 

அவரும் பத்திரிகைக்காரர்களைக் கேவலமாகப் பேசுவதும் அவர்களிடம் நாக்கைத் துருத்திக்கொண்டு பாய்வதும் பொது இடங்களில் அருகில் இருப்பவர்களை கைநீட்டி அடிப்பதுமாக இருக்கிறார். 

ஆகவே அவரை மாற்றிவிட்டு நீங்கள் சொல்லியுள்ளபடி “அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்ற கல்வியாளரும் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவியை’ தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்” என்று சொல்லி அறிவியுங்கள். 

இதனைச் செய்வீர்களா திருமா? 

உங்கள் அரசியல் யுக்திக்கு அப்போது படித்தவர்கள் மத்தியில் எத்தனை ஆதரவு பெருகுகிறது என்பதை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள். 

அப்படியில்லாவிட்டால் இது ஜெயலலிதாவின் பி டீம் செய்கின்ற சில்லுண்டித் தனங்களில் ஒன்றாகப் போகக்கூடிய ஆபத்துதான் அதிகம்.

Tuesday, April 12, 2016

வைகோவும் கலைஞரும் ஒரு சம்பவமும்……..


வைகோ கலைஞரைப் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் இன்றைக்கு அரசியல் அரங்கில் மிகப் பெரிதாக விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன. விஷயம் எல்லை மீறிப் போவதற்கு முன்னால் அவர் அதற்கான மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார். ‘என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக இதனைக் கருதுகின்றேன்’ என்பதுபோல் ஒரு அறிவிப்பையும் அவர் செய்திருக்கிறார். ‘கலைஞர் என்னை நன்றாக அறிவார். எனக்குள் சாதி ரீதியிலான உணர்வுகள் எனக்கு இல்லையென்பதை அண்ணன் கலைஞர் நன்றாக அறிவார்’ என்று ஒரு வார்த்தையையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

வைகோ ஒரு தேர்ந்த அரசியல்வாதி. அரசியலில் நிறைய மேடு பள்ளங்களைப் பார்த்தவர். என்னமாதிரியான செய்கைக்கு என்னமாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை அறிந்தவர். ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவனை நாக்கில் நரம்பில்லாமல் தன்னுடைய இச்சைக்கு ஏற்ப வசைபாடிவிட்டுப் போனால் அதற்கு கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பதை அறியாதவரல்ல. ஏதோ ஒரு ஆத்திரத்தில் செய்வது அறியாமல், அல்லது -‘இன்றைக்குத்தான்

கலைஞரை எல்லாத் திசைகளிலும் போட்டு வறுத்தெடுக்கிறார்களே…………..

போகிறவன் வருகிறவன் எல்லாம் அவரை ஒரு ‘சாத்துச் சாத்திவிட்டுப் போவதுதான்’ தினசரி கடமை என்று எண்ணுகிறானே…………….

முளைத்து மூணு இலைகூட இல்லை, இன்னமும் முளைக்காதவன் எல்லாம் இஷ்டத்துக்கு அவரை வசைபாடுகிறானே……………..

யாருமே அதற்கு மறுப்புக்கூடச் சொல்வதில்லையே………

இப்படி இவரை கேவலமாகவும், படு கேவலமாகவும் பேசுவதுதான் இன்றைய தமிழக அரசியலின் பாலபாடம் என்பதாக ஒரு சித்தாந்தத்தைத்தான் இன்றைய ஊடகங்களும் குறிப்பாக இணைய தளமும் கட்டிஎழுப்பி இருக்கின்றனவே…..

ஆகவே நாமளும் அதற்கு உரமேற்றுவதுபோல் ஒன்றைச் சொல்லிவைப்போம். ஒன்றும் ஆகாது. எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்று  தன்னுள் இருந்த அத்தனை ஆத்திரத்தையும் அத்தனை அசிங்கத்தையும் ஒன்று சேர்த்ததுபோல் அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

நண்பர் ஒருவர் சொன்னதைப்போல் “அவர் ஒன்றும் அதனை வாய்தவறிச் சொன்னதாகத் தெரியவில்லை. நீங்கள் அந்த விடியோவைப் பாருங்கள்….. நிறுத்தி நிதானமாக உள்ளுக்குள் அசைபோட்டு அசைபோட்டு அனுபவித்து அனுபவித்து வார்த்தை ஜோடனைகளுடன் இலக்கிய நயம் குன்றிவிடக்கூடாது என்ற அக்கறையுடன்தான் சொல்லியிருக்கிறார் வைகோ” என்றார் அந்த நண்பர்.

வைகோ பேசியது காலையில்……… இந்தச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து மாலையில்தான் எல்லாருக்கும் போய்ச் சேருகிறது.

செய்தி போய்ச் சேர்ந்ததும் திமுக தொண்டன் கொதித்துப் போகிறான்.

எதிர்ப்பு நடத்த வெளியே வருகிறான்.

எதிர்ப்பின் வேகம் என்னவென்பதை ஒரு சிலரால் ஊகிக்க முடிகிறது. 

மதுரையிலும் திருநெல்வேலியிலும் வேறு சில இடங்களிலும் தீ வைக்கப்பட்டதுபோல் செய்தி பரவுகிறது. இணையதளங்களில் திரும்பத் திரும்ப பல்வேறு பதிவுகளில் வைகோவின் ‘அழகிய பேச்சு’ பகிரப்படுகிறது.

இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கி எப்படியெல்லாம் இந்த எதிர்ப்பு எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு வேகமாகப் பரவும் என்பது சாதாரணமாய் அரசியலை கவனிப்பவர்களுக்கே புரிகிறது.

இதன் வீச்சு எப்படியிருக்கும் என்பதையும், இந்த விபரீதம் எங்கேயெல்லாம் கொண்டுசென்று முடியும் என்பதையும், இது எப்படியெல்லாம் விபரீதம் எடுக்கும் என்பதையும்- புரியாதவரல்ல வைகோ.

பல தொலைக் காட்சிகள் இதுபற்றி விவாதிக்க ‘விவாத வீரர்களுக்கு’ அழைப்பு விடுத்து விட்டது என்ற செய்தியெல்லாம் அவரை எட்டுகிறது.

இது தேர்தல் நேரம்.

எந்தக் காற்று எப்படி வீசும் என்பதைக் கணிக்கவே முடியாத சூழலில் இந்த விபரீதத்திற்கு தன்னால் தாக்குப் பிடிக்கமுடியுமா என்று யோசிக்கிறார் அவர். ‘முடியாது’ என்பதை அவரது அனுபவம் உணர்த்துகிறது. நண்பர்களும் சொல்கிறார்கள்.

உணர்ந்ததும் உடனே மன்னிப்புக்கடிதம் என்ற பெயரில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு கடிதத்தை எழுதி வெளியிடுகிறார்.

கவனியுங்கள்.

காலையில் பேசிவிட்டு அடுத்த அரை மணி நேரத்திலோ, ஒரு மணி நேரத்திலோ ‘உணர்ந்து’ அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு எப்படியெல்லாம் எழப்போகிறது என்பதை உணர்ந்தபிறகுதான், எல்லாவிதமான கணக்குகளையும் போட்டுப் பார்த்து அதன் அடிப்படையில்தான் இந்த விபரீதத்தைச் சமாளிப்பது அவ்வளவு எளிதன்று என்பதைப் புரிந்தபிறகுதான்-

அன்றைய மாலையில் வருத்தமே தெரிவிக்கிறார்.

இந்த இடத்தில் வைகோவை விடவும் சும்மாவே அந்தரத்தில் ‘சம்மர்சால்ட் பல்டி’ அடித்த சில மேதாவிகள்தான் முக்கியம்.

‘இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து அரசியலில் நடந்துகொள்ளக்கூடாது’ என்பதை வைகோவுக்கு உணர்த்தவேண்டிய ‘தமிழகத்து அண்ணன்மார்கள்’ உடனடியாக வைகோவைப் ‘புகழ்ந்து’ கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆமாம், கருணாநிதியைக் காயப்படுத்தியதற்குப் பரிசாக வைகோவைப் ‘புகழ’ ஆரம்பித்துவிட்டார்கள்.

‘என்னுடைய ஐம்பத்திரண்டு கால அனுபவத்தில் இப்படி எந்த ஒரு தலைவரும் வருத்தம் தெரிவித்துப் பார்த்ததில்லை நான்’ என்கிறார் ஒரு ‘அண்ணன்’.

‘என்னுடைய ஐம்பதாண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன். நான் அரசியலை அன்றையிலிருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறேன். உடனடியாக மன்னிப்புக் கேட்ட ஒரு தலைவரை நான் பார்த்ததே இல்லை’ என்கிறார் இன்னொரு ‘அண்ணன்’.

‘என்னுடைய நாற்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில்……….’ என்று ஆரம்பித்து வைகோவைப் பாராட்ட துயிலெழுகிறார் மற்றொருவர்.

இவர்களுடைய ‘சமூக அக்கறை’ கண்டு மெய் சிலிர்க்கிறது.

தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் இத்தகைய ‘அற்புதமான அரசியல் நடுநிலை வழிகாட்டிகளை’ எப்படிக் கொண்டாட வேண்டும்  என்பதே புரிபடாமல் திண்டாடித் திணற வேண்டியிருக்கிறது.

கலைஞரை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு மிகமிக தரம்தாழ்ந்து பொதுவெளியில் பேசிக்கொண்டிருந்த சில ‘நடுநிலை மேதாவிகள்’ இந்தச் சந்தர்ப்பத்தையும் வைகோவைப் பாராட்ட கிடைத்த சந்தர்ப்பமாக உருமாற்றும் செப்படி வித்தைகள் எந்த மாநிலமும் காணாத ஒன்று.

இதுஒரு புறமிருக்க வைகோ என்பவர் எப்படிப்பட்ட மனிதர் என்று மனதில் நிலைபெற்றிருக்கும் சித்திரத்தை இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் உணர ஒரு சில அனுபவங்களோ அல்லது ஒரேயொரு அனுபவமோகூட போதுமானதாயிருக்கலாம். 

அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு. மே மாதம். இருபத்தைந்தாம் தேதி.

25 – 5 -1988.

இந்த நாளுக்கு தமிழகத்திலே ஒரு முக்கியத்துவம் உண்டு.

சில பேருடைய வாழ்க்கையிலே மிக அழுத்தமாகப் பதிந்துபோய்விட்ட நாட்களில் ஒன்று இந்த நாள்.

இந்த நாளைத் தமது வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான ஒரு நாளாகக் கருத வேண்டியவர் இளையராஜா.

ஏனெனில் அவருக்கு இசைஞானி பட்டம் மேற்கண்ட நாளில்தான் வழங்கப்பட்டது.

காரைக்குடியில் – கலைஞரால்!

இந்த நாள் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, எனக்கும் மறக்கமுடியாத நாளாகவே அமைந்துவிட்டது.
அதற்குக் காரணமும் இளையராஜாதான்.

இது இளையராஜாவுடனான அனுபவத்தைச் சொல்லும் கட்டுரை அல்ல என்பதனால் அந்த அனுபவத்தை வேறொரு நாளுக்குத் தள்ளிவைத்துவிட்டு இப்போது வைகோவுக்கு வருகிறேன்.

நடிகர் சிவகுமார் அவர்கள் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தபோது அவருக்கான வெளியூர் படப்பிடிப்பு எங்கே இருந்தாலும் ஒரு மூன்று நாட்களுக்கோ நான்கு நாட்களுக்கோ என்னையும் உடன் அழைத்துக்கொள்வார்.

அதேபோல சென்னையைத் தவிர வெளியூர்களில் அவர் கலந்துகொள்ளும் முக்கிய விழாக்கள் எதுவாக இருந்தபோதிலும் தவறாமல் என்னையும் அழைத்துக்கொள்வார். இது இன்றைக்கும் தொடர்கிறது.

அதேபோல எண்பத்தெட்டாம் வருடம் சிவகுமார் அவர்களிடமிருந்து அந்த இண்லாண்ட் லெட்டர் வந்திருந்தது. அப்போதெல்லாம் போன் இல்லை என்பதனால் கடிதப்போக்குவரத்துத்தான்.

‘மே மாதம் இருபத்தைந்தாம் தேதி புதன்கிழமை காரைக்குடியில் கலைஞர் தலைமையில் இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெறுகிறது. நண்பர் பழ கருப்பையா நடத்துகிறார். நானும் கலந்துகொள்கிறேன். நீங்கள் 25ம் தேதி காரைக்குடி வந்துவிட்டு மறுநாள் காலையிலேயே ஊருக்குத் திரும்பிவிடலாம்.அதற்கேற்ப புரோகிராம் அமைத்துக்கொண்டு வாருங்கள்’ – என்று எழுதியிருந்தார்.

எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஞானபீடம் பரிசுபெற்ற அகிலன் அவர்களின் இரண்டாவது மகன் ஜெகன்னாதனின் திருமண நிச்சயதார்த்தம் 24ம் தேதி புதுக்கோட்டையில். நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றுவிட்டு அங்கேயே தங்கி புதுக்கோட்டையிலிருந்து பக்கத்திலிருக்கும் காரைக்குடிக்கு மறுநாள் கிளம்பிப் போனோமென்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பவும் காரைக்குடியிலிருந்து 26ம் தேதி கிளம்பி அன்றைக்கே திருச்சியில் நடைபெறும் அகிலன் மகன் திருமணத்தில் பங்கேற்கலாம்.

விஷயத்தைக் குறிப்பிட்டு சிவகுமார் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். ‘மிக்க மகிழ்ச்சி. வாருங்கள். காரைக்குடியில் இறங்கி பழ கருப்பையா வீட்டிற்கு வந்துவிடுங்கள். அங்கே சந்திப்போம்’ என்று சுருக்கமாக பதில் போட்டிருந்தார்.

முதல் நாள் நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு மறுநாள் 25ம் தேதி காலையில் புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும் காரைக்குடி சென்றோம். பஸ் நிலையத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கினோம். 

வெயில் பயங்கரமாகக் கொளுத்திக்கொண்டிருந்தது..

தெரு பூராவும் போஸ்டர்களும் பேனர்களுமாக சாலையே தெரியாத அளவு நிறைக்கப்பட்டிருந்தது. கலைஞரை வரவேற்று, இளையராஜாவை வரவேற்று, அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று அன்றைக்கே போக்குக்காட்டிக்கொண்டிருந்த விஜயகாந்த்தை வரவேற்று என்று ஏகப்பட்ட போஸ்டர்கள். 

பெயருக்கு இரண்டு பேனர்கள் சிவகுமாரை வரவேற்றும் வைக்கப்பட்டிருந்தன.

பழ கருப்பையா காரைக்குடியில் முக்கியமான புள்ளி என்பதனால் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை. பழ கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது ஏகப்பட்ட பிரமுகர்கள் சூழ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் அவர்.

அவரை ஏற்கெனவே எனக்குத் தெரியும். நண்பர் தமிழருவி மணியன் மூலம் பழ கருப்பையா ஏற்கெனவே பழக்கம் என்பதால் அறிமுகம் எதுவும் வேண்டியிருக்கவில்லை. பழ கருப்பையாவைச் சுற்றி ஏகப்பட்ட செட்டியார்கள் கூட்டம்.

எல்லாரும் தமிழகம் அறிந்த மிக முக்கியமான பிரமுகர்கள். தமிழண்ணல், ஆறு.அழகப்பன் தொடங்கி ஏகப்பட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் ஒருபக்கம், ப.சிதம்பரத்தின் அண்ணன் லட்சுமணன் தொடங்கி நான்கைந்து அரசியல் பிரமுகர்கள் மறுபக்கம், எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம் தொடங்கி ஏகப்பட்ட திரையுலகப் பிரபலங்கள் என்று அந்த இடமே அனைத்து ‘புகழ்பெற்ற செட்டியார்களால்’ நிரம்பி வழிந்தது.

“வாங்க வாங்க நீங்க வருவீங்கன்னு சிவகுமார் இப்பத்தான் சொன்னார். அவரும் இளையராஜாவும் பத்து நிமிஷம் முன்புதான் வந்தாங்க. இப்பதான் இதோ இங்க பக்கத்துலதான் தங்கியிருக்காங்க. நீங்க வேணும்னா சிற்றுண்டி சாப்பிட்டுட்டு அவங்க தங்கியிருக்கற இடத்துக்குப் போய்க்கலாம்” என்றார் பழ.கருப்பையா.

அதற்குள் அங்கிருந்த தெரிந்த முகங்களிடம் வணக்கம் தெரிவித்து இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு “இல்லை நாங்க டிபன் சாப்பிட்டுட்டோம். அவங்க தங்கியிருக்கற இடத்துக்குப் போகிறோம்” என்றேன்.

யாரோ ஒரு உறவினரைக் கூப்பிட்டு “சிவகுமாரும் இளையராஜாவும் மாமா வீட்ல இருக்காங்க. அங்க இவங்களைக் கூட்டிட்டு போய் விட்டுரு” என்று சொல்லி அவருடன் எங்களை அனுப்பி வைத்தார்.

அதே தெருவில் ஒரு ஏழெட்டு வீடு தள்ளி இருந்த இன்னுமொரு பிரமாண்டமான செட்டிநாட்டு மாளிகை அது. 

அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளுமே ஒன்று போலவே இருந்தன. அந்த வீடுதான் பழ கருப்பையாவின் மாமனார் வீடாம்.

எல்லா வீடுகளையும் போல அந்த வீடும் காலியாகத்தான் இருந்தது.

அதில்தான் சிவகுமாரும் இளையராஜாவும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். “கலைஞர், விஜயகாந்த் இவங்கெல்லாம் வந்துட்டாங்களா?” என்று உடன் வந்த நண்பரை விசாரித்தேன்.

“கலைஞர் ஐயா மாலைதான் வர்றாங்க. திருச்சியில் ஏதோ பெரிய திருமணம். கலைஞர்தான் நடத்தி வைக்கிறார். அதை முடிச்சுட்டு அங்கிருந்து நேராக இங்கே வர்றார். விஜயகாந்தும் மனோரமாவும் வந்துட்டாங்க. அவங்களை ஓட்டல்ல தங்க வைச்சிருக்கோம். சிவகுமார் சாரும் இளையராஜா சாரும் ஓட்டல் வேணாம் வீடுகள்ளயே தங்கிக்கறோம்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் இங்க அவங்களைத் தங்க வச்சிருக்கு” என்று நடைமுறை செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார் அந்த அன்பர்.

அதற்குள் வீடு வந்துவிட பிரமாண்டமான மாளிகை போலிருந்த அந்த வீட்டிற்குள் போனோம். நடு ஹாலில் அமர்ந்து சிவகுமாரும் இளையராஜாவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“வாங்கய்யா வாங்க. நாங்க வந்தே ஒரு பத்து நிமிடம்தான் ஆகுது. அதற்குள் வந்துட்டீங்களே” என்றபடியே வரவேற்றார் சிவகுமார்.

இருவருக்கும் வணக்கம் சொன்னோம்.

சிவகுமார் மட்டும் பதில் வணக்கம் சொன்னார்.

எங்களைக் கூட்டிவந்தவர் எங்களுக்கும் இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டுவிட்டு பவ்வியத்துடன் விடைபெற்றுக் கொண்டார்.

சிவகுமார், இளையராஜா அவர்களுடன் நான் மற்றும் என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு இரண்டு மணிநேரம் பல்வேறு செய்திகளையும் பேசியபடியே இருந்தோம்.

மீண்டும் ஒரு நினைவூட்டல்.

இளையராஜா அவர்களுடனான அனுபவங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுத இருப்பதால் வைகோ அவர்களைப் பற்றிய செய்திக்கு நேராக வந்துவிடுகிறேன்.

எங்களைப் பகல் உணவிற்கு அழைத்துச் செல்வதற்காக பழ கருப்பையா வீட்டிலிருந்து அன்பர் ஒருவர் வந்திருந்தார்.

அவருடன் நாங்கள் நால்வரும் சென்றோம்.

உணவு முடிந்தவுடன் “வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுங்கள். கலைஞர் சரியாக ஐந்து மணிக்கு வருவதாக இப்பத்தான் போனில் தகவல் வந்தது. நீங்க நாலரை மணிக்கு வந்துடுங்க. அப்பத்தான் சரியாக இருக்கும். கலைஞர் வந்ததும் டிபன் சாப்பிட்டுவிட்டு நேராக நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குப் போய்விடலாம். மைதானம் இங்கிருந்து சரியாக ஒரு நிமிடம்தான். அதோ பாருங்க அதான் மைதானம்” என்று கீழ்ப்புறமாக கையைக் காட்டினார் பழ கருப்பையா. அந்தப் பக்கம் பார்த்தபோது இரண்டொரு வீடுகள் தள்ளி தெரு முடிவடைந்து ஒரு பெரிய மைதானத்தின் நுழைவு தெரிந்தது.

“மைதானத்துக்கும் நடந்தே போய்விடலாமா?” என்று கேட்டார் சிவகுமார்.

“இல்லை இல்லை பிரபலங்கள் எல்லாம் நடந்து போகமுடியாது. மக்கள் விடமாட்டாங்க. இந்தப் பிரதான தெரு வழியாக சுற்றிக்கொண்டு காரில் வந்துரலாம். மத்தவங்க எல்லாம் நடந்தே நேராக மைதானம் வந்துவிடலாம். சுத்திக்கிட்டு வரவேண்டிய தேவை இல்லை” என்றார் பழ.கருப்பையா. மீண்டும் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்து நால்வரும் குளித்துத் தயாராக இருந்தோம்.

மறுபடியும் நாலரை மணிவாக்கில் பழ கருப்பையா வீட்டிற்கு எங்களைக் கூட்டிப்போக ஆள் வந்தது.

இப்போது பழ.கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது சிவகுமாரையும் இளையராஜாவையும் எழுந்து வந்து வரவேற்றவர் விஜயகாந்த். பழ கருப்பையாவின் வீடு இப்போது இன்னமும் அதிகப் பிரமுகர்களால் நிரம்பி வழிந்திருந்தது.

மதிய உணவு சமயத்திலேயே மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் உட்பட பலரும் வந்திருந்தனர். வீட்டின் உள்ளேயே பொதுக்கூட்டம் போடலாம் என்ற அளவிற்கு பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது அந்த இல்லம்.

ஒவ்வொருவரின் அறிமுகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்க வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய மக்கள் கூட்டம் பிரமுகர்களின் தரிசனத்திற்காக நிறைந்திருந்தது. வீட்டைச் சுற்றிலும் காவலர்கள் நின்றிருந்தார்கள். அதற்கிடையில் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த எக்கச்சக்க மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக வீட்டின் எல்லா சன்னல்களையும் மூடியிருந்தார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் ‘விஜயகாந்த் வாழ்க’ ‘விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம் எல்லாச் சத்தங்களையும் மீறி கேட்டுக்கொண்டே இருந்தது. கலைஞரின் வருகைக்காக எல்லாரும் காத்திருந்தோம்.

கலைஞரின் கார் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்ற செய்திகள் காவலர்கள் மூலம் அடிக்கடி சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது.

பத்து நிமிடம் சென்றிருக்கும். 

கலைஞர் இன்னமும் ஓரிரு நிமிடங்களில் வந்துவிடுவார் என்ற செய்தி சொல்லப்பட திடீரென்று ஒரு பரபரப்பு அங்கே தொற்றிக்கொண்டது. முக்கியமான பிரமுகர்கள் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்.

கலைஞர் உள்ளே வரவும், வந்து அமரவுமான இடங்களும் இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

திடீரென்று “கலைஞர் வாழ்க கலைஞர் வாழ்க” கோஷங்கள் காதைப் பிளக்க கலைஞரின் பரிவாரம் வந்து இறங்கிற்று. 

ஏழெட்டுக் கார்களில் கலைஞரும் அவருடன் வந்திருந்தவர்களும் இறங்கினர்.

கலைஞர், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, தென்னரசு, துரைமுருகன், வை.கோபால்சாமி, கோ.சி.மணி, ரகுமான் கான், செல்வேந்திரன் என்று ஏகப்பட்ட திமுக பிரபலங்கள் கலைஞரைத் தொடர்ந்து திபுதிபுவென்று வந்தனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பேராசிரியர் அன்பழகன் ஒருவரைத் தவிர அன்றைக்கு யார் யார் திமுகவில் முன்னணியில் இருந்தார்களோ, யாரெல்லாம் எம்பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருந்தார்களோ அவர்கள் அத்தனைப் பேரும் வந்திருந்தனர் என்றே சொல்லலாம்.

உள்ளே வந்ததும் அங்கிருந்தவர்கள் அத்தனைப் பேரையும் கலைஞருக்குப் பழ.கருப்பையா அறிமுகம் செய்துவைத்தார். அவர் அறிமுகம் முடிந்ததும் சிவகுமார் சினிமா தொடர்பானவர்களை அறிமுகம் செய்தார்.

அப்படியே உட்காருவது என்று முடிவானது.

நாற்காலிகள் இங்கேயும் அங்கேயுமாகப் போடப்பட எல்லாரும் அவரவர் நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.

கலைஞருடனேயே ஒட்டியபடி இருந்த வைகோ சட்டென்று “எனக்கு நாற்காலியெல்லாம் வேண்டாம்ப்பா. நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்” என்று சத்தமாகச் சொல்லியபடியே கலைஞரின் காலடியில் உட்கார்ந்துவிட்டார்.

“இல்லை இல்லை இதோ சேர் இருக்கு. இப்படி உட்காருங்க” என்று சொல்லி அவருக்கு நாற்காலி போடப்பட-

“எனக்கு வேணாம். வேணும்ங்கறவங்க சேர்ல உட்காருங்க. எனக்குத்  தலைவரின் காலடிதான் சொர்க்கம். நான் சொர்க்கத்தில் உட்கார்ந்துக்கறேன்” என்றபடியே நாற்காலி வேண்டாம் என்பதற்கடையாளமாக இரு கைகளையும் வேண்டாம் என்று அசைத்தார்.

பழ.கருப்பையா வீட்டில் ஏற்பாடுகளையெல்லாம் கவனித்தவர்கள் பதறிவிட்டனர். “இல்லை அண்ணே மேலே உட்காருங்க. இதோ நாற்காலி இதில் உட்காருங்க” என்றபடி யாரோ ஒரு திமுக பிரமுகர் அவருக்கு நாற்காலியை விட்டுக்கொடுத்தார்.

மாட்டேன் என்று மறுத்தார் வை.கோபால்சாமி.

“இல்லை இல்லை ஒருத்தர் மட்டும் அப்படி உட்கார்ந்தா சரிப்படாது. நீங்க மேல உட்காருங்க” என்று பலரும் அவருக்குச் சொன்னார்கள்.

“நாந்தான் சொல்றனே… என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்னு. நான் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன். எதுக்குஎன்னைத் தடுக்கறீங்க?” என்றார் அவர்.

“அப்ப எங்களுக்கெல்லாம் தலைவனின் காலடி சொர்க்கமில்லையா என்ன? நாங்க மேலே நாற்காலியில் உட்காரலை? சும்மா ‘டிராமா’ பண்ணாம எழுந்து மேலே உட்காருங்க” என்று யாரோ ஒரு திமுக பிரமுகர் சொன்னார்.

“நீங்க உட்கார்ந்துட்டீங்க இல்லை? சும்மா விட்டுருங்க. நான் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன்” என்றபடி தம்முடைய பேச்சை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்வதில் அக்கறையாக இருந்தார் வைகோ.

இவை எதையும் ‘கவனிக்காதவர் போன்ற’ பாவனையில் பக்கத்தில் அமர்ந்திருந்த மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கத்திடம் பேசுவதில் சுவாரஸ்யமாய் மூழ்கி இருந்தார் கலைஞர்.


கலைஞருக்கு அடுத்து மூன்றாவதாக உட்கார்ந்திருந்த ஒருவர் திடீரென்று எழுந்தார்.

“யோவ் கோபால்சாமி எந்திருய்யா. என்ன டிராமா பண்றியா? எல்லார் முன்னாடியும் ஷோ காட்றீயா? உனக்கு மட்டும்தான் தலைவரு… எங்களுக்கெல்லாம் தலைவரில்லையா? காலடி, சொர்க்கம்னு வசனமெல்லாம் பேசிக்கிட்டு? எந்திருச்சி மேலே உட்காரப்போறீயா இல்லையா?” என்றார் அதட்டலான குரலில்.

கடுமையானதொரு நிசப்தம் அங்கே சட்டென்று விழுந்தது.

ஒரேயொரு கணம்தான்.

மறுவார்த்தைக்கு இடமில்லாதபடி சட்டென்று எழுந்த வைகோ தமக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலியில் சென்று அமர்ந்தார்

வைகோவுக்கு ஒரு ‘அதட்டல்’ போட்டு அவரைத் தன்னிலைக்குக் கொண்டுவந்தவரும் தமது இடத்தில் அமர்ந்துகொண்டார்.

அந்த மனிதர் முரசொலி மாறன்.

வைகோவின் செய்கை அந்த இடத்தில் நடைபெற்ற ஒரு இயல்பான நிகழ்வாக இல்லாமல் ‘சீன் போடுவது’ என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் தோன்றிற்று. எத்தனைக் கூட்டங்கள் பார்த்தவர், எத்தனைப் பாராளுமன்றங்களைப் பார்த்தவர் எதற்காக எல்லார் முன்னிலையிலும் இத்தனைச் செயற்கையாக நடந்துகொள்கிறார் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருந்தது.

அவருடைய அந்தச் செய்கை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக விடுபட இயலவில்லை. இவர்களெல்லாம் வேடிக்கை மனிதர்களா, அல்லது காரியக்காரர்களா அல்லது போலி மனிதர்களா என்ற எண்ணம் சுற்றிச் சுழன்றபடியே இருந்தது. ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

முரசொலி மாறனின் கடமை அத்தோடு முடியவில்லை.

இளையராஜாவைப் பக்கத்தில் கூப்பிட்டு அமரவைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார் கலைஞர். அவர்களது உரையாடல்களைப் பாதிக்கும்விதமாக வெளியிலிருந்து விடாப்பிடியாக ஒரு கோஷம் ஒலித்தபடியே இருந்தது. அது ‘விஜயகாந்த் வாழ்க, விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம். உள்ளே இருந்தவர்கள் ‘நார்மலாக’ இருக்கமுடியாத அளவுக்கு அடிக்கடி பதம் பார்த்தபடி இருந்தது அந்தக் கோஷம்.  

ஒரு கட்டத்தில் அந்தக் கோஷங்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குப் போக………… இளையராஜாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டு முரசொலி மாறனை ஒரு பார்வைப் பார்த்தார் கலைஞர்.

அவ்வளவுதான்.

கலைஞரின் பார்வை என்ன ‘சொல்கிறது’ என்பதை உணர்ந்துகொண்ட முரசொலி மாறன் உடனடியாக எழுந்தார்.

விஜயகாந்தைப் பார்த்து “விஜயகாந்த் ஒரு நிமிஷம் இப்படி வாங்க” என்று சொல்லித் தனியாகக் கூட்டிப்போனார். அவரது முதுகில் கை வைத்தபடியே அவரிடம் என்னமோ பேசிவிட்டு மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டார்.

அவர் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ தெரியவில்லை. அவருடைய பேச்சில் என்ன மாயம் இருந்ததோ மகத்துவம் இருந்ததோ தெரியவில்லை.

பிரதான கதவைத் திறந்துகொண்டு வெளியில்போன விஜயகாந்த் அங்கிருந்த தமது ரசிகர்களிடம் எதையோ பேசினார். மீண்டும் உள்ளே வந்தார்.

என்ன ஆச்சரியம்……….. 

அத்தனை நேரமும் யாரையும் பேசவிடாமல், கேட்கவிடாமல், சும்மா உட்காரவிடாமல் செய்துகொண்டிருந்த வாழ்க கோஷமும், கூச்சல் குழப்பமும் சட்டென்று முடிவுக்கு வந்திருந்தது. 

அந்த இடத்தில் அந்த அளவு அமைதி குடிகொண்டு விட்டது.

சிறிது நேரம் சென்றது.

கலைஞரும் மற்றவர்களும் ஒவ்வொருவரிடமும் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஐயா ஒரு சின்ன சிற்றுண்டி சாப்பிட்டுரலாமா?” என்று கலைஞரிடம் கேட்டார் பழ.கருப்பையா. கலைஞர் எதிரில் இடம் சரிசெய்யப்பட்டு ஒரு குட்டி டேபிள் போடப்பட்டது.“அப்படியே பரிமார்றதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க உட்கார்ந்தபடியே சாப்பிடலாம்” என்றார்.

நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டார் கலைஞர்.

“எல்லாரோடவும் வரிசையில உட்கார்ந்துக்கறேன். அப்படியே எல்லாரும் ஒரே சமயத்துல சாப்பிட்டுரலாமே” என்றார்.

உடனடியாக பாய்களும் ஜமக்காளங்களும் விரிக்கப்பட்டு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுவதற்கு வரிசையாக மாணவர்கள் உட்காரவைக்கப்படுவார்களே அப்படி எல்லாரும் சுவரை ஒட்டி ஒரு வரிசை, எதிர்த்தாற்போல ஒரு வரிசை என்று நெடுகிலும் உட்கார்ந்துகொள்ள பணியாரம், அப்பம், போண்டா, பஜ்ஜி என்று பரிமாறப்பட்டது.

எல்லாருடனும் ஒன்றாய் தரையில் அமர்ந்து சாப்பிட்ட கலைஞர் ஏதோ பெயருக்கு சாப்பிட்டவர்போல எழுந்துகொண்டார். “நான் எழுந்துட்டேன்னு எல்லாரும் எழுந்துராதீங்க. உங்களுக்கெல்லாம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் சாப்பிட்டு எழுந்திருங்க” என்று சொல்லியபடியே ஒரு நாற்காலியில் அமர்ந்து தமக்கு வழங்கப்பட்ட காப்பியைப் பருகத் தொடங்கினார்.

இந்தக் காட்சி நிச்சயம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இத்தனை எளிமையாக எல்லோருடனும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு வேறு சில முதலமைச்சர்களும் தலைவர்களும் தயாராக இருப்பார்களா என்ற சிந்தனை நிச்சயம் இந்த இடத்தில் தேவை.

எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் காத்திருந்தவர்போல “நேரமாயிருச்சி. கிளம்பலாமா?” என்றார் கலைஞர்.

அதற்குள்ளாக மைதானத்தில் எத்தனைக் கூட்டம் வந்திருக்கிறது, இங்கே வராத மனோரமா போன்ற ஒரு சில பிரபலங்கள் மேடைக்கு நேரடியாக வந்துவிட்டார்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் காவலர்கள் மூலமாகச் சொல்லப்பட்டன.

முக்கியப் பிரமுகர்களும் மற்றவர்களும் கார்களில் ஏறிக்கொள்ள மற்ற பிரமுகர்களும் பிரபலங்களும் குறுநடை நடந்தபடியே மைதானத்தை அடைந்தோம். 

மைதானத்தில் பயங்கரக் கூட்டம்.

குறைந்தது ஐம்பதாயிரம் பேராவது இருந்தார்கள்.

முன்பு எப்போதோ ஒரு சமயம் அண்ணா கலைஞர் எல்லாரும் வந்திருந்தபோது இப்படியொரு கூட்டம் இங்கே கூடியிருந்தது எனவும், பின்னர் கவிஞர் கண்ணதாசன் காமராஜரைக் கூட்டிவந்து கூட்டம் போட்டபோது இந்த அளவுக்குக் கூடியிருந்தது எனவும் ‘அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் இத்தனைப் பெரிய கூட்டத்தை என் வாழ்நாளில் பார்க்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார் மைதானத்தின் எதிர் சாலையில் டீக்கடை வைத்திருந்த ஒருவர்.

நாங்கள் மைதானத்திற்குச் சென்று சேர்ந்தபிறகு சில நிமிடங்கள் கழித்துத்தான் கலைஞர், இளையராஜா சிவகுமார் விஜயகாந்த் போன்ற பிரபலங்களின் கார்கள் மேடையருகே வந்தன. மக்களின் ஆரவாரங்களுக்கிடையே கலைஞரும் மற்றவர்களும் மேடையேறினார்கள். எல்லாரும் மேடையில் நாற்காலிகளில் அமர வைக்கப்பட கலைஞர் மேடையின் நாற்புறமும் சென்று மக்களுக்குக் கையசைத்தபடி இருந்தார்.

நாங்கள் சிலர் மேடையின் ஒரு ஓரமாக நின்றுகொண்டோம்.

இங்கே மேடையில் யார்யாருக்கு எந்த நாற்காலி என்று பழ.கருப்பையா, முரசொலி மாறன் என்று இன்னும் சிலர் மற்றவர்களை அமர வைத்துக்கொண்டிருக்க “இங்கேயும் டிராமா பண்ணப்போறியா? பேசாமல் உன்னுடைய நாற்காலியில் உட்கார்” என்று முரசொலி மாறன் யாரிடமோ கோபமாகச் சொல்லிக்கொண்டிருந்ததும், ‘என்னுடைய தலைவன் காலடியில் உட்கார்ந்துக்கறேன்னு சொல்றேன். அதுக்கு விடமாட்டேங்கறீங்க’ என்று முரசொலி மாறனுக்கு யாரோ பதில் சொல்லிக்கொண்டிருந்ததும் கேட்டது.

மேடையில் கூட்டம் அதிகமாயிருந்ததால் பிரமுகர்கள் அமரும் இடத்தில் என்ன நடைபெற்றது என்பதும் யார் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.

பின்னர், விழா தொடங்கி நடைபெற்றதும், மனோரமா, தென்னரசு, கலைமணி, ஜி.கே.வெங்கடேஷ், தமிழண்ணல், வை.கோபால்சாமி ஆகியோர் மேடையில் பேசியதும் இவர்களைத் தொடர்ந்து சிவகுமார், விஜயகாந்த், இளையராஜா ஆகியோர் பேசியதும் கலைஞர் பேசும்போது இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தைத் தந்து பேசியதும் எல்லோருக்கும் தெரிந்த, பத்திரிகைகளில் செய்திகளாக வந்த நிகழ்வுகள்……

நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் கிளம்பிப் போனதும் பழ.கருப்பையா வீட்டில் தங்கியிருந்த நாங்கள் மட்டும் மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்று இரவு சிற்றுண்டியை முடித்துக்கொண்டு- நாங்கள் என்றால்- சிவகுமார், இளையராஜா, நான், என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மட்டும் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியதும், நடைபெற்ற கூட்டத்தைப் பற்றியும், பேசியவர்களின் பேச்சுக்கள் பற்றியும் இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட இசைஞானி பட்டம் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வதற்கு இரவு பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.

இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவிலும், அதிலும் குறிப்பாக ‘இசைஞானி’ பட்டம்  வழங்கப்பட்ட நிகழ்விலும் காலையிலிருந்து அவர் கூடவே தங்கியிருந்ததும், இரவு அதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றதும் மறுநாள் காலையில் அவருடனேயே காரில் கிளம்பி பாதிவழியில் இறங்கிக்கொண்டு நான் திருச்சி திரும்பியதும், அவர் மதுரை சென்றதும் இனிமையான நினைவுகள்…..

இளையராஜாவின் நினைவுகள் ஒருபுறமிருக்க, அன்றைய நிகழ்வுகளில் வைகோவின் செயல்பாடுகளும் மறக்க முடியாத பதிவுகளாக மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. 


அதுவும் அவர் கலைஞரைப் பற்றி அவ்வப்போது பேசுகின்ற பேச்சுக்கள் அத்தனையும் உடனடியாக எனக்கு எப்போதுமே காரைக்குடியில் பழ.கருப்பையா வீட்டில் நடைபெற்ற அந்த சம்பவத்தையும், அவர் சொன்ன ‘என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்’ வசனத்தையும் நினைவூட்டி விடுகின்றன.

அதுவும் தற்போது அவர் கலைஞரைப் பற்றிப் பேசிய பேச்சும் இந்த சம்பவத்தை மிக அதிகமாகவே நினைவூட்டிவிட்டன.

அத்தனை செயற்கையாக புகழ்பெற்ற ஒருவரால் நடந்துகொள்ளமுடியுமா என்பதும், போகிற போக்கில் என்னமாதிரியான டயலாக்குகளையும் சர்வ சாதாரணமாக ஒருவரால் அவிழ்த்துவிட முடியுமா என்பதும், எவ்வளவு பேர் இருந்தபோதிலும் அத்தனைப் போலித்தனமாக ஒருவரால் நடந்துகொள்ள முடியுமா என்பதுவும் இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே இருக்கிறது.

அந்தச் செயல்களின் மூலம் அவரது ‘கேரக்டர்’ எத்தகையது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ‘சீன் போட்டே ஜெயிப்பவர்கள்’ என்ற பட்டியல் ஒன்று தயார் செய்யலாம் போலிருக்கிறது.

நேரத்திற்கு ஏற்றாற்போல தங்களைக் காட்ட நினைக்கும் பச்சோந்திகள் மத்தியில் சமயமறிந்து, தலைவனின் குறிப்பறிந்து  செயல்படும் முரசொலி மாறன் போன்றவர்களின் ஆளுமையும் திறமையும்தான் கலைஞர் போன்றவர்களின் வெற்றிக்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.


ஒன்று மட்டும் நிச்சயம்…. கலைஞர் முரசொலி மாறனை இவ்வளவு விரைவாக இழந்தது அவருக்கு மிகப்பெரிய இழப்பு என்பது மட்டும் நிதர்சனம்.