ஜெயலலிதா இந்தத் தேர்தலில்
எந்தப் பெரிய கட்சியின் துணையுமில்லாமல் போட்டியிட்டவுடன் பத்திரிகைகள் உட்பட எல்லாருக்குமே
‘என்ன இருந்தாலும் ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்குவரும்?’ என்ற எண்ணம்தான் வந்தது.
தவிர, சில இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவங்களும் இருப்பதால் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும்
அந்த ஃபார்முலாபடியே வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அம்மையாருக்கு இருக்கக்கூடும்.
பத்திரிகைகளும் அதேபோல நினைக்கவும் கூடும்.
இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்ற
ஃபார்முலா என்பது இப்போதைய தலைமுறைக்கு ‘திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா’ என்று
சொல்லப்பட்டு அதன் முழுப்பெருமையும் அழகிரிக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் இத்தகைய ஃபார்முலாக்களின்
பிதாமகன் திருவாளர் எம்ஜிஆர் அவர்கள்தாம். அவர் ஆட்சியிலிருந்த காலத்தில் நடைபெற்ற
மருங்காபுரி தேர்தல் தொடங்கி எல்லா இடைத்தேர்தல்களிலும் அவர் கையாண்டு வெற்றிகண்ட உத்திகளைத்தாம்
அழகிரியும் கொஞ்சம் பிரமாண்ட அளவில் கையாண்டார்.
எம்ஜிஆர் தமது ஆட்சியின்போது
எவர்சில்வர் ஸ்டீல் குடங்களையும், காமாட்சி விளக்குகளையும், மூக்குத்திகளையும் கொடுத்து
அன்றைய எதிர்க்கட்சிகளையெல்லாம் திக்குமுக்காட வைத்தார்.
அப்போதிருந்த மக்கள் மனநிலை
அதனைக் கொண்டாடவே செய்தது. ‘என்ன இருந்தாலும் வாத்தியார் வாத்தியார்தான். அவருடைய கொடையுள்ளம்
யாருக்கு வரும்?’ என்றேதான் அந்த நாட்களில் இந்த நிகழ்வுகள் பார்க்கப்பட்டன. தேர்தல்
ஆணையமும் இன்றைய அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருந்தபடியால் எம்ஜிஆருக்கு
அன்றைக்குத் தாம் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு மிகவும் வசதியும் வாய்ப்புக்களும் இருந்தன.
அழகிரி அதனைத்தான் தொடர்ந்தார்………………. கலைஞர் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் மக்களுக்கு
பணம் மற்றும் கொடைகள் என்று ஏதோ தருகிறார் என்பதே சற்று வித்தியாசமாகப் பார்க்கப்பட்டது.
ஏனெனில் ‘கலைஞருக்கு மக்களிடமிருந்து வாங்கித்தான் பழக்கமே தவிர கொடுத்துப் பழக்கமில்லை’
என்ற ஒரு சொல்லாடலும் எப்படியோ மக்கள் மத்தியில் இன்னமும் புழங்கித்தான் வருகிறது.
மதுரையில் காலூன்றிய அழகிரி
இந்த சித்தாந்தத்தை அப்படியே உடைத்துப் போட்டார். அழகிரியை நம்பிப் போகிறவர்களை அழகிரி
கைவிடமாட்டார் என்ற எண்ணத்தை மக்களிடம் அவர் எப்படியோ ஏற்படுத்தினார். அதனால்தான் ‘மதுரை
என்பது எம்ஜிஆரின் கோட்டை’ என்று முப்பது வருடங்களாக வழங்கிவந்த பெயரைச் சில ஆண்டுகளிலேயே
மாற்றிக்காட்டினார் அழகிரி. அதனைத் தொடர்ந்து வந்தவைதாம் திமுக ஆட்சியில் அழகிரியிடம்
இடைத் தேர்தல்களை ஒப்படைத்து விட்டால் வெற்றி நிச்சயம் என்ற நிலைமை.
இந்த சித்தாந்தத்தை அப்படியே
பற்றிக்கொண்ட ஜெயலலிதா தாமும் எதிர்கொண்ட இடைத்தேர்தல்களில் தமது அமைச்சர்களை வைத்துக்கொண்டு
அழகிரி ஃபார்முலாவையே பயன்படுத்தினார். பத்திரிகைகளும் ஜெயலலிதாவின் எல்லாத் தவறுகளுக்கும்
முட்டுக்கொடுப்பது போலவே ஏற்காட்டில் திருமங்கலம் ஃபார்முலாதான் கடைப்பிடிக்கப்படுகிறது
என்றே எழுதின. இதன் பிதாமகர் எம்ஜிஆர்தான் என்பதை மறந்துபோயும் எந்தப் பத்திரிகையும்
குறிப்பிட்டுவிடவில்லை.
சரி இப்போதைய அரசியல் விவாதங்களில்
‘ஓட்டுக்குப் பணம் வழங்கும் இந்தச் செயல்’ பற்றிக் குறிப்பிட விரும்புவர்கள் ‘ஏற்காடு
ஃபார்முலா’ என்று குறிப்பிடுகிறார்களா என்றால் கிடையாது. அப்படிச் சொன்னால் ஜெவின்
கோபத்துக்கு ஆளாக நேரிடுமே. அதனால் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்றே சொல்லித் தப்பித்துக்
கொள்கின்றனர்.
திருமங்கலம் ஃபார்முலாவோ
ஏற்காடு ஃபார்முலாவோ என்ன இழவாவது இருந்துவிட்டுப் போகட்டும்.
இந்த நாடாளுமன்றத்தில்
இதையே முழுமையாகச் செய்து ஓட்டு வாங்கிவிடமுடியுமா என்றால் முடியாது. ஏனெனில் ஒரே ஒரு
தொகுதியில் செய்து பார்க்கும் குயுக்தியை மொத்தத் தமிழ்நாட்டிற்கும் பரவலாகச் செய்வது
சாத்தியமில்லை. அதனால் ஓட்டுவங்கியைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.
ஓட்டு வங்கி என்று பார்த்தால்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத்தாம் சொல்லும் விதத்தில்
ஓட்டு வங்கி இருந்தது. காங்கிரஸின் ஓட்டு வங்கியை அந்தக் கட்சியும் அதன் தலைவர்களும்
விடாப்பிடியாக ஒற்றுமையாக நின்று ஒழித்துக்கட்டி விட்டனர். பின்னர் அந்த ஓட்டுவங்கி
அப்படி இப்படி அலைந்து பாமகவுக்குக் கொஞ்சம், அந்தக் கட்சிக்குக் கொஞ்சம் இந்தக் கட்சிக்குக்
கொஞ்சம் என்பதாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.
வந்தாரய்யா விஜயகாந்த்.
ஒரு கணிசமான ஓட்டுவங்கியை
கறுப்பு எம்ஜிஆர், திமுக அதிமுகவுக்கு மாற்று, நான் வந்தால் உங்கள் வீட்டு வாசலுக்கே
ரேஷன் பொருட்கள் என்று என்னென்னமோ சொல்லி ஓரளவு திரட்டி வைத்திருந்தார்.
சென்ற தேர்தலில் ஸ்டாலினுக்குக்கூடக்
கிடைக்காத எதிர்க்கட்சித்தலைவர் பதவி லட்டு மாதிரி வந்து வாய்த்தது.
என்னவெல்லாம் செய்திருக்கவேண்டும்
அந்த மனிதர்?
ஒன்றுமே இல்லை.
இதோ இப்போதைய தேர்தலில்கூட
கூட்டணி அமைப்பதற்குள் குழம்பித் தவித்து கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பதையே கொத்து
பரோட்டாவாக்கிக் குதறிப்போட்டுவிட்டார். ஓரளவு படித்தவர்களின் நம்பிக்கையை எல்லாம்
அடித்து நொறுக்கி சூரசம்ஹாரம் பண்ணிவிட்டுத்தான் கூட்டணியே போட்டார். அதனால் அவருடைய
வாக்குவங்கி என்பது போன தேர்தலில் இருந்தபடியே இன்றைக்கும் இருக்குமா என்பதைச் சொல்வதற்கில்லை.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
ஜெயலலிதா எதற்கும் பயப்படுவதில்லை
என்பது ஒருபுறம் இருக்கட்டும். இது மட்டுமே மிகப்பெரிய தகுதி என்றும் சொல்வதற்கில்லை.
‘அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை’ என்பதையும் நாம் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சென்ற தேர்தலில் கம்யூனிஸ்டுகள், புதிய தமிழகம், முஸ்லிம்களின் ஒரு பிரிவு, இவற்றோடு
விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்துத்தான் அத்தனை ஓட்டுக்களை அவரால்
பெற முடிந்தது.
இன்றைக்கு இந்தக் கட்சிகளெல்லாம்
இல்லை.
முஸ்லிம்களின் ஓட்டுக்கள்
இல்லை.
கம்யூனிஸ்டுகளின் ஓட்டுக்கள்
இல்லை.
புதிய தமிழகம் கட்சியினரின்
ஓட்டுக்கள் இல்லை.
மிகப்பெரிய பலமாக இருந்த
தேமுதிகவின் ஓட்டுக்கள் இல்லை.
எத்தனைக் குறைச்சலாகப்
போட்டாலும் இவையெல்லாம் சேர்ந்து ஒரு ஐந்து சதவிகிதம்தான் என்றாலும்
-அந்த ஐந்து சதவிகித ஓட்டுக்கள்
இன்றைக்கு அதிமுகவிற்கு இல்லை.
அதுமட்டுமல்ல; சென்ற தேர்தலில்
நேரடிக் கூட்டணி இல்லையென்ற போதிலும் பாஜக சிந்தனைக் கொண்ட அத்தனைப்பேரின் ஓட்டுக்களும்
ஜெயலலிதாவிற்குக் கிடைத்தன.
இன்றைக்கு அந்த ஓட்டுக்களும்
இல்லை.
புதிய வாக்காளர்கள் தொகை
இந்தத் தேர்தலில் நிறைய இருக்கிறது.
இந்தப் புதிய வாக்காளர்களும்
சரி,
சென்ற தேர்தலில் முதல்முறையாக
ஓட்டுப்போட்ட புதிய வாக்காளர்களும் சரி தங்கள் வாக்குகளை அதிமுகவுக்குத்தாம் போட்டார்கள்.
இப்போது அதனை எதிர்பார்ப்பதற்கில்லை.
புதிய வாக்காளர்கள் நிறையப்பேர்
மோடிக்குத்தான் ஓட்டுப்போடுவார்கள்.
அவர்களில் ஒரு கணிசமான
சதவிகிதம்பேர் கேஜ்ரிவால் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
பாரதிய ஜனதா சித்தாந்தம்
கொண்ட நிறையப்பேர் தங்கள் வாக்குகளை எப்போதுமே ஜெயலலிதாவுக்குத்தாம் போடுவார்கள்.
வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால்
குறிப்பாக பிராமணர்கள் தங்கள் வாக்குகளை என்றென்றும் ஜெயலலிதாவுக்குத்தான் போடுவார்கள்.
இப்போது அவர்களுக்கே அவர்களுக்கென்று
கட்சியும் சின்னமும் ‘கேண்டிடேட்டும்’ பிரதம வேட்பாளரும் கிடைத்துவிட்ட பிறகு அவர்கள்
எதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்கப்போகிறார்கள்?
ஆக இத்தனைப் பேரின் வாக்குவங்கியைக்
கழித்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஓட்டுவங்கி என்பது எத்தனை வலுவானது என்று
தெரியவில்லை.
யார் எங்களிடமிருந்து பிரிந்து
போனாலும் அதுபற்றிக் கவலை இல்லை. எங்களிடம் இருக்கும் ஓட்டுக்களே போதும் என்று அதிமுகவினர்
மார் தட்டுவதற்கு அவர்களிடம் என்ன அறுபது சதவிகிதமும் எழுபது சதவிகிதமும் கொண்ட வாக்குவங்கியா
இருக்கிறது?
திமுகவுக்கும் அதிமுகவுக்கும்
இருக்கும் சதவிகிதத்தின் வித்தியாசமே இரண்டோ மூன்றோதானே?
தவிர அதிமுகவின் வாக்குவங்கியை
அதிகரிக்கச் செய்யுமாறு அவர் ஆட்சிக்கு வந்து எந்த செயற்கரிய செயலையும் செய்ததாகவும்
தெரியவில்லை. புதிய சட்டமன்றக் கட்டடத்தை மருத்துவமனையாக்கியது, அண்ணா நூலகத்தை அகற்ற
நினைத்தது, வந்ததும் வராததுமாக பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பாடத்திட்டம் இல்லாமல் இரண்டு
மாதங்களுக்கு வீட்டுக்கு விரட்டியது, இரண்டு மணி நேரமிருந்த மின்வெட்டை பதினெட்டு மணி
நேரமாக்கியது என்று தொடர்ந்து செய்த அனர்த்தங்களில் நம்பி வாக்களித்த நடுத்தட்டு வர்க்கத்தினரின்
வாக்குகளிலும் கணிசமான பகுதியை அல்லவா இழந்திருப்பார்?
அசட்டுத் துணிச்சல் மட்டுமே
பிரதமர் நாற்காலியில் ஒருவரைத் தூக்கிப்போய்
உட்காரவைத்துவிடுமா என்ன!