Saturday, November 16, 2013

ஊதாப்பூ இனிமேல் கண் சிமிட்டாது.



புஷ்பா தங்கதுரை மறைந்துவிட்டார்.

இந்த வருட தினமணி தீபாவளி மலரில் வாழும் மூத்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் எழுதிய சில கட்டுரைகள் வந்துள்ளன. தி.க.சி பற்றி பழ நெடுமாறனும், ஜெயகாந்தனைப் பற்றி கவிஞர் வைரமுத்துவும், அசோகமித்திரனைப் பற்றி ஞாநியும், இந்திரா பார்த்தசாரதியைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணனும், கு.சின்னப்ப பாரதியைப் பற்றி ஸ்டாலின் குணசேகரனும் எழுதியிருக்கிறார்கள். அந்த வரிசையில் எழுத்தாளர் விக்கிரமனைப் பற்றி புஷ்பா தங்கதுரை எழுதியிருந்தார். புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வரும் மாதநாவல்களையும் தொடர்கதைகளையும் படிக்கமாட்டேன். ஆனால் சிறுகதைகளோ வேறு கட்டுரைகளோ என்றால் உடனே படித்துவிடுவேன். அதுவும் அவரது இயற்பெயரான ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் ஏதாவது வந்திருந்தால் உடனே உடனே படித்துவிடுவேன்.

அதுபோல்தான் இந்த மலரிலும் இந்தக் கட்டுரைக் கண்ணில் பட்டதும் உடனடியாகப் படித்தேன். எழுத்தாளர் விக்கிரமனைப் பற்றிச் சொல்ல வந்தவர்….’இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது எனது கஷ்ட காலத்தில் விக்கிரமனைச் சந்தித்திருக்கிறேன். அவரிடம் என்னைப் பற்றிய செய்திகளைக் கூற அவர் எனக்கு ஒரு ரூபாய் கொடுத்ததாக நினைவு’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இம்மாதிரியான சின்னச்சின்ன உதவிகளைக்கூட மறக்காமல் நினைவுகூறும் பண்பு புஷ்பா தங்கதுரையிடம் உண்டு. சாவி பற்றி அப்படித்தான் பேசுவார். “எவ்வளவோ எழுதி எழுதிக் குவித்திருக்கிறேன். ஆனால் சாவி போன்று பப்ளிசிடியும் பணமும் கொடுத்துப் பார்த்துக்கொள்கிறவர்கள் யாரும் இல்லை. இப்ப என்னமாதிரி பப்ளிசிடி என்கிறீர்கள்? கல்லூரிகள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் புஷ்பா தங்கதுரை என்பது யாரென்று தெரியாது. ஆனால் அந்தப் பெயருக்கு அப்படியொரு கிரேஸ். பத்திரிகை ஆபீஸுக்கு வந்து குவியும் கடிதங்களைப் பார்த்தா மலைச்சுப் போயிருவீங்க. நான்தான் புஷ்பா தங்கதுரை என்பது வெளில யாருக்கும் தெரியாது. என்னை முழுமையாய் மறைத்துக்கொண்டுதான் உலவ வேண்டியிருக்கிறது” என்பார்.

அவர் சொன்னதை அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலை கவனத்தில் கொண்டு பார்க்கும்போதுதான் அதன் உண்மையும் தீவிரமும் புரியும்.

சுஜாதா மிகவும் பரபரப்புடன் புகழ் பெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. கூடவே இன்னொரு டிராக்கில் புஷ்பா தங்கதுரை என்ற பெயருக்கு பயங்கர கிரேஸை உருவாக்கிக்கொண்டிருந்தார் சாவி. எல்லாம் திடீரென்று நிகழ்ந்ததுபோல்தான் ஆரம்பிக்கப்பட்டது.

தினமணி கதிரின் இரண்டுபக்க அளவுக்கு கோபுலு வரைந்த பெரிய சித்திரம். எல்லாரும் குனிந்து எதையோ அல்லது யாரையோ பார்த்துக்கொண்டிருக்கிறமாதிரி.

அவர்களின் தலையும் தோள்பட்டையும் கைகளும் மட்டும்தான் தெரியும். அதனுடன் கூடிய சிறுகதை ஒன்று. ‘அப்பாவி சுண்டுவுக்கு ‘அதெல்லாம்’ தெரியும்’ என்று தலைப்பு. 

எழுதியவர் பெயர் புஷ்பா தங்கதுரை.

கதையைப் படித்தால் சின்னத்தம்பி ரேஞ்சுக்கு ஒரு அப்பாவி. எல்லாராலும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய ஒரு பையன். ஆனால் ‘அந்த’ விஷயத்தில் மட்டும்  அவன் கில்லாடிதான் என்கிறமாதிரியான கதையமைப்பு. புஷ்பா தங்கதுரை என்ற பெயரின் அறிமுகம் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒரு கல் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது என்று அடுத்த வாரம் இன்னொரு சிறுகதை. இப்படியே வாரம் ஒரு சிறுகதை. அதற்கேற்ப பார்த்தவுடன் கவனத்தைக் கவர்கிற அளவில் பெரிய பெரிய சித்திரங்கள். வாசகர் கடிதம் பகுதியில் இந்தச் சிறுகதைகளுக்கான எதிர்வினைகள். Talk of the town என்பார்களே அதுபோல் மொத்த தமிழ்நாட்டையும் ‘யார் இந்த புஷ்பா தங்கதுரை?’ என்று சில வாரங்களிலேயே பேச வைத்துவிட்டார் சாவி. எங்கும் எல்லா இடத்திலும் இதே பேச்சாகத்தான் இருந்தது. அன்றைக்கு வாரப் பத்திரிகைகள் படிக்கிறவர்கள் அத்தனைப்பேர் கவனமும் இந்த ஒரு புள்ளியில் குவிய ஆரம்பித்து விட்டது.

இந்த சிறுகதைகளைத் தொடர்ந்து சிவப்பு விளக்கு பேசுகிறது என்ற பெயரில் பம்பாய் சென்று சிவப்பு விளக்கு பகுதியில் வாழும் பெண்களைப் பற்றிய கதைகள். இந்தக் கதைகளும் பெருமளவில் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பின. ஆனால் புஷ்பா தங்கதுரை என்ற பெயர் செக்ஸ் விஷயங்களைப் பரவலாக எழுதும் ஒரு எழுத்தாளர் என்பதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டது.

நான் அப்போதுதான் எழுத்துத்துறையில் ஓரளவு கவனம் ஈர்க்க ஆரம்பித்த நேரம். என்னுடைய தொழிற்சாலையில் இருந்த வாசக நண்பர்கள் நான் வேலைப் பார்க்கும் செக்ஷன் தேடிவந்து வேறுவிஷயங்கள் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள். “சார் இந்தப் புஷ்பா தங்கதுரைன்றது யாரு சார்?”

கொஞ்ச நாட்களுக்கு ஒரு ராணுவ ரகசியம்போல்தான் இந்தப் பெயரைப் பாதுகாத்துவைத்திருந்தார்கள்.

சென்னையில் சில நண்பர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். கடைசியில் டெல்லியிலிருந்த நகைச்சுவை எழுத்தாளர் அகஸ்தியனுக்குக் கடிதம் எழுதி விஷயம் தெரிந்துகொண்டேன்.

ஒருநாள் சுஜாதாவிடம் இது பற்றிய பேச்சு வந்தது. அப்போது சுஜாதா சிரித்துக்கொண்டே சொன்னது நினைவில் இருக்கிறது “என்னய்யா அது? கொஞ்சப் பேரு நான்தான் அந்தப் பெயரிலும் எழுதுகிறேனா என்று சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க. என்னையே சிலபேர் நீங்க தானா சார் அது?ன்னு கேட்கறாங்க”.

“சார் அந்த சிறுகதைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பா அவருடைய நடை ரொம்ப அழகா இருக்கு” என்றேன் சுஜாதாவிடம்.

“வேணுகோபாலனை நீங்க வெறும் புஷ்பா தங்கதுரையாப் பார்க்காதீங்க. தமிழ் இலக்கியங்களை ரொம்ப ஆழமா தீவிரமாப் படிச்சவர் அவர். சமஸ்கிருதத்துல ரொம்பவும் புலமை உண்டு. வைணவ இலக்கியங்கள்ள ஈடுபாடு அதிகம். மணிக்கொடியிலதான் எழுத ஆரம்பிச்சார்னு நினைக்கிறேன். ரொம்பப் பெரிய நிறைய விஷயங்கள் உள்ள ஆளு. அவரை வச்சு ஒரு பெரிய மேஜிக் பண்ணப்போறேன்ற மாதிரி சாவி சொல்லிட்டிருந்தார். ஆரம்பிச்சுட்டார்னு நினைக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.

சாவி செய்த மேஜிக் மிகப்பெரிய அளவிலேயே பத்திரிகை உலகிலும் வாசகப் பரப்பிலும் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது. அந்தப் பரபரப்பின் போதேயே புஷ்பா தங்கதுரை எழுதும் தொடர்கதை என்ற அறிவிப்பும் தினமணி கதிரில் வெளியானது.

‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ என்பது தொடர்கதையின் தலைப்பு. தலைப்பே கவிதை பேச பத்திரிகையின் விற்பனை பல மடங்கு எகிறியது. ‘யார் இந்த புஷ்பா தங்கதுரை?’ என்ற கேள்வி சகல விதத்திலும் சுழன்றடிக்க “யார் இந்த புஷ்பா தங்கதுரை என்பதை தயவுசெய்து சொல்வீர்களா? தெரிந்துகொள்ளாவிட்டால் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருக்கிறது’ என்று ஒரு அவசரக் கடிதம் ஒன்று எழுதினார் ஒரு பிரபலம்.

அந்தப் பிரபலம் அந்த நாட்களில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த பிரபல நடிகை ஸ்ரீவித்யா.



ஸ்ரீவேணுகோபாலன்தான் என்று அவருக்குப் பதில் எழுதிப்போட, உடனடியாக அவரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. ‘அவரை நான் சந்திக்கவேண்டும். ஏற்பாடு செய்ய முடியுமா?’

ஆரம்பத்தில் கமலஹாசனும் இதுபற்றிக் கேட்டார். “புஷ்பா தங்கதுரைங்கறது ஸ்ரீவேணுகோபாலன்தானா? கன்ஃபர்ம்டா? அவர்தான்னு தெரியவந்தது, கன்ஃபர்ம் பண்ணிக்கத்தான் கேட்கறேன்”

இத்தனைக் களேபரங்கள் அவருக்காக நடைபெற்றுக்கொண்டிருக்க தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருந்தார் புஷ்பா தங்கதுரை என்ற வேணுகோபாலன்.

அதற்கு முன்னமேயே ‘நீ நான் நிலா’ என்ற தொடர்கதை மூலம் என்னைக் கவர்ந்த எழுத்தாளராகியிருந்தார் அவர். அந்தத் தொடர்கதை தினமணி கதிரில் வந்து முடிந்தபோது அவரைப் பாராட்டி நான் எழுதியிருந்த கடிதத்திற்கு பதில் போட்டிருந்தார். அந்த பதிலிலேயே அவர் குறிப்பிட்டிருந்தது ‘சென்னைப் பக்கம் வர நேர்ந்தால் தெரிவியுங்கள். நாம் சந்திப்போம்’
ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது தொடருக்குப் பிறகு அந்த நாவலுக்கு மக்கள் மத்தியில் எழுந்திருந்த பரபரப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய திரைப்படத்துறை அந்த நாவலைப் படமாக்க விழைந்தது. கமலஹாசன் சுஜாதா ஆகியோர் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் படமாக வந்தது. இந்த நாவலிலிருந்து புஷ்பா தங்கதுரைக்குச் சித்திரம் வரையும் பொறுப்பு கவர்ச்சி ஓவியர் ஜெயராஜூக்குப் போய்விட்டது என்று நினைக்கிறேன். அதற்கடுத்து புஷ்பா தங்கதுரை என்ற பெயர் தீயாய்ப் பற்றிக்கொள்ள எல்லாப் பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு புஷ்பா தங்கதுரை எழுத்துக்களை வாங்கிப் போட ஆரம்பித்தார்கள்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் புஷ்பா தங்கதுரை என்ற பெயருக்கும் அதற்கான கதையின் சித்திரத்திரங்களிலும் இருந்த செக்ஸ் அப்பீல் அவரது கதைகளிலோ எழுத்துக்களிலோ இருக்கவில்லை. மெல்லிய போர்னோவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் படிக்கிறவர்களிடம் இருந்ததே தவிர கதைகளில் போர்னோவும் இல்லை ஒன்றும் இல்லை. புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வந்தவை பூராவும் துப்பறியும் கதைகள்தானே தவிர செக்ஸ் கதைகள் அல்ல. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் “சார் ‘நீ நான் நிலா’ மாதிரியான கதைகள் எப்போது எழுதுவீர்கள்?” என்றே கேட்டுக்கொண்டிருப்பேன். நீ நான் நிலாவுக்கு அடுத்து ‘நந்தா என் நிலா’ என்றொரு தொடர்கதை எழுதினார். “இந்தக் கதை அந்த அளவுக்கு இல்லை” என்று அபிப்பிராயம் சொன்னபோது “உண்மைதான் எனக்கே தெரியுது. ஆனால் இந்தக் கதைக்குக் கிடைத்த வரவேற்பும் விளம்பரமும் நீ நான் நிலாவுக்கு இல்லையே” என்றார்.

மிகமிக மென்மையான சுபாவம். அதிர்ந்துகூடப் பேசமாட்டார். எப்போது பார்த்தாலும் அப்போதுதான் குளித்துவிட்டுத் தலை துவட்டிக்கொண்டு வந்து நிற்கிறமாதிரியான தோற்றம். மெல்லிய சுருளுடன் புசுபுசுவென்ற தலைமுடி. சாம்பல் நிறத்தில் பூனைக்கண்கள். சிரித்தமுகம். அடிப்பாகத்திலிருந்து மூக்கை உள்ளங்கையால் மேல்நோக்கி அழுத்தித் துடைத்துக்கொண்டேயிருப்பார் அடிக்கடி. அது ஒன்றுதான் பார்ப்பதற்குக் கஷ்டமாயிருக்கும். “ஏன் சார் இப்படிப் பண்றீங்க? இந்த மேனரிசத்தை விடமுடியலையா?” என்றேன். ஒருமுறை.

“நானும் முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். விடமுடியலை. சரி தொலையட்டும்னு விட்டுட்டேன்” என்று சிரித்தார்.

அளவெடுத்த சுருக்கமான வார்த்தைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதுவார். பெரும்பாலும் கார்டுகள்தாம். ‘நாளை பெங்களூர் வருகிறேன். சேஷாத்ரிபுரத்தில் சாவியுடன் வந்திருந்தபோது தங்கிய அதே ஓட்டல். முடிந்தால் சந்தியுங்களேன்’ என்று ஒருமுறை எழுதியிருந்தார். மறுநாள் ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். டிபன் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டே சேஷாத்ரிபுரத்திலிருந்து மல்லேஸ்வரம் வரைக்கும் நடந்து சென்று வந்தோம். அவர் தனிமையில்தான் வசித்து வந்தார். 

பேச்சலர் லைஃப் என்றுதான் சொன்னார்கள். ஒருமுறை திருமணம் பற்றிக் கேட்டேன். “ஒய்ஃபைத் தேடிக்கிட்டே இருக்கேன். இன்னும் கிடைக்கலை. எங்காவது பார்த்தா சொல்லுங்க” என்றார். 

அதிலிருந்து அவரது திருமண வாழ்க்கைப் பற்றி அவரிடம் எதுவும் பேசியதில்லை.
சென்னை சென்றிருந்தபோது ஒருமுறை கே.கே.நகரிலிருந்த அவரது வீட்டைத் தேடினோம்  நானும் அகிலன் கண்ணனும். எத்தனைத் தேடியும் விலாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு கடைக்குச் சென்று போன் பண்ணியபோது இப்போது எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டார். கடையின் அடையாளத்தைச் சொன்னதும் “அங்கேயே இருங்க இதோ வந்துர்றேன்” என்றவர் சற்று நேரத்திலேயே வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வீடு முழுக்கக் குப்பையும் கூளமுமாக இறைந்து கிடந்தன புத்தகங்கள். “சார் ஏதாவது புத்தகம் தேடினீங்களா?” என்றேன். “அதெல்லாம் இல்லை. சாதாரணமாகவே இப்படித்தான் இருக்கும். எப்பவாச்சும்தான் அடுக்கிவைப்பேன்” என்றார். 
 அவரது தாயாரிடம் அறிமுகப்படுத்தி காப்பி கொடுத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து வழியனுப்பி வைத்தார்.

ஒருமுறை ஏதோ ஒரு பத்திரிகையில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லும்போது “புஷ்பா தங்கதுரை அல்ல, ஸ்ரீவேணுகோபாலனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது நீ நான் நிலா, திருவரங்கன் உலா இரண்டும் தமிழின் முக்கியமான நூல்கள் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும்” என்று சொல்லியிருந்தேன். இதைச் சொல்லி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் சென்னையில் கலந்துகொண்டிருந்தபோது நிகழ்ச்சியிலிருந்து கிளம்பிக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் அருகில் வந்து “நீங்க சொல்லியிருந்தது பார்த்தேன். ரொம்ப தேங்ஸ்” என்று ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார்.

தனக்கு உரிய முக்கியத்துவம் தமிழ் இலக்கிய அரங்கில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் நிறையவே இருந்தது. அந்த ஆதங்கத்தினால்தான் அவர் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதவே துவங்கினார் என்று நினைக்கிறேன். ‘நல்ல எழுத்து எழுதும்போது கிடைக்கவேண்டிய முக்கியத்துவம் கிடைக்கலை. இப்ப செக்ஸ் எழுதறேன்னு ஆரம்பிச்சதும் மொத்த பத்திரிகைத் துறையும் வந்து குவியுது. இது ஒரு மாதிரி பழி வாங்கறதுன்னு வச்சுக்கங்களேன். உனக்கு என்ன வேணுமோ அதை நான் தர்றேன். நீ என்னிடம் வந்து விழு ஆட்டிடியூட்தான். வேலைக்கும் போய்க்கிட்டு இவ்வளவு எழுதறதுன்றது முடியலை. ரொம்ப சிரமமாத்தான் இருக்கு’ என்றார் ஒருமுறை.

அடுத்த சந்திப்பிலேயே அவருடைய இந்தக் கருத்திற்கு முழுவதும் மாறாகப் பேசத்தொடங்கியிருந்தார். “என்ன சார், நான் ஒண்ணும் பெரிசா செக்ஸ் எழுதவே இல்லை. எழுத ஆரம்பிச்சா தாங்காது நம்ம பத்திரிகைகள். ஏன் செக்ஸ் எழுதுவது கூடாதா என்ன? எதுக்காக இப்படி ஒரு ஹிப்போக்ரசித்தனம்? அவனவன் முக்காடு போட்டுக்கிட்டுத்தான் எல்லாத்தையும் செய்யணும்னு நினைக்கறான். இவனுக்கெல்லாம் செக்ஸ் வேண்டாமா? எழுத்தில் செக்ஸ் இருக்கக்கூடாதா? போர்னோ எழுதுகிறவன் எல்லாரும் மிக மட்டமான எழுத்தாளன்னு முத்திரைக் குத்தறான். மேல்நாட்டில் போர்னோ எழுதுகிற எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள் சார். மிகப்பெரிய எழுத்தாளனா அங்கே மதிக்கப்படுகிறவர்கள் எல்லாருமே போர்னோ எழுதுகிறவர்களே. அவங்களுக்கு அங்கே என்ன மரியாதை தெரியுமா? ஒவ்வொரு போர்னோ புத்தகங்களும் என்ன வருமானத்தை அவர்களுக்குத் தருகிறது என்று நினைக்கிறீர்கள். ஒவ்வொருவரும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இத்தனை டாலர்கள் என்று சம்பாதிக்கிறார்கள். அங்கே இம்மாதிரி எழுத்துக்களுக்கே பரிசுகள் எல்லாம் தருகிறார்கள். இங்கே நாம்தான் கொஞ்சூண்டு செக்ஸ் எழுதினாலே தரக்குறைவான எழுத்து என்று முத்திரைக் குத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார். (இப்போது இதே வாதங்களைத்தானே சாருநிவேதிதா சொல்லிக்கொண்டிருக்கிறார்!)

இது சம்பந்தமாய் அவர் எனக்கு ஒரு யோசனையும் சொன்னார். “பிளேபாய் வருகிறது இல்லையா? அந்தப் பத்திரிகையில் வரும் படங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மிக அருமையான பிரமாதமான எழுத்துக்களைக் கொண்டு வெளிவரும் பத்திரிகை அது. அதில் வரும் கட்டுரைகளும் பேட்டிகளும் பிரமாதமானவை. சில சிறுகதைகள் அற்புதமானவை. வருடந்தோறும் பிளேபாயில் வரும் சிறுகதைகளை மட்டும் தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் புத்தகம் போடுகிறார்கள். அந்த புத்தகம் கிடைத்தால் வாங்கிவிடுங்கள். அந்தக் கதைகளைப் படித்துப் பார்த்தீர்கள் என்றாலேயே எத்தனையோ புதிய பிளாட்டுகள் கிடைக்கும். சிறுகதைகளை அவர்கள் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுத்தும். ஒரு இளம் எழுத்தாளர் என்பதனால் உங்களுக்குச் சொல்கிறேன். பிளேபாய் சிறுகதைகள் கலெக்ஷனை வாங்கிவிடுங்கள்” அவர் சொன்னாரே என்பதற்காக நானும் பெங்களூரில் பல இடங்களில் தேடிவிட்டேன். ஒரு நாளும் அத்தகைய கலெக்ஷன் கிடைக்கவே இல்லை இதுவரைக்கும்.

ஜெயகாந்தன் எழுத்துக்களில் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்ததே தவிர ஜெயகாந்தன் நடந்துகொள்வதையும் அவரது சில பேச்சுக்களையும் எழுத்துக்களையும் கடுமையாகவே விமரிசிப்பார். ஒருமுறை இவரது எழுத்துக்களை ஜெயகாந்தன் மிக மோசமாக விமரிசித்துவிட மிகக் காட்டமாக அவருக்கு இவர் தொடுத்த வினாக்கள் அந்த சமயத்தில் மிகுந்த விவாதத்துக்குள்ளானது. ‘எழுத்தில் சமுதாய ஆன்மிகப்பார்வை வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன். சும்மா அர்த்தமில்லாமல் இப்படி ஏதாவது வார்த்தைகளைப் போட்டுத் தப்பிக்க வேண்டாம். தெரியாமல்தான் கேட்கிறேன். அதென்ன சமுதாய ஆன்மிகப்பார்வை? முதலில் அந்த வார்த்தைக்கு ஜெயகாந்தன் அர்த்தம் சொல்லட்டும்’ என்று கோபப்பட்டார் ஸ்ரீவேணுகோபாலன்.

தமிழ் இலக்கிய அரங்கில் அவருக்கான இடம் எது என்பதுபற்றிக் கவலையில்லை. ஆனால் இத்தனை வருடங்களும் அவருக்கென்று ஒரு இடம் இருந்தது என்பதுதான் முக்கியம். அவருக்கென்று பரந்ததொரு வாசகப்பரப்பு இருந்தது. அவர் பெயரைப் போட்டாலேயே பத்திரிகைகள் விற்பனை ஆயின. அவரை மட்டும் நம்பியே மாத நாவல்கள் ஆரம்பிக்கப்பட்டன. புகழ் வெளிச்சம் அவர் மீது எவ்வளவு இருந்தபோதிலும் அடக்கமும் பணிவுமாக அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டார் என்பதுதான் இன்றைய நிலையில் முக்கியம். பல லட்சக்கணக்கான வாசகர்கள் ஒரு முப்பது நாற்பது வருடங்களாகச் சலிக்காமல் அவரைப் படித்து வந்தார்கள் என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல.

ஆயிற்று. அவருடன் எந்தவிதத் தொடர்புமற்று பல வருடங்கள் ஓடிவிட்டன. சில நாட்களுக்கு முன்பு தினமணி தீபாவளி மலரில் அவருடைய கட்டுரையைப் பார்த்ததும்தான் அந்த எண்ணம் வந்தது. இவரைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டனவே. அடுத்தமுறை சென்னை செல்லும்போது சென்று பார்த்துப் பேசிவிட்டு வரலாம் என்று நினைத்தேன். சில நாட்களுக்குள் இப்படியொரு அதிர்ச்சி செய்தி. ‘புஷ்பா தங்கதுரை மறைந்துவிட்டார்.’

அனேகமாய் புஷ்பா தங்கதுரை எழுதிய கடைசி எழுத்து விக்கிரமனைப் பற்றியதாக இருக்கலாம். அதில் விக்கிரமன் குறித்து இப்படி எழுதியிருக்கிறார்.

“இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்’ என்று வைணவரது வாழ்த்தொளியுடன் அவரை வாழ்த்துகிறேன்”

இந்த வாழ்த்துக்கள், எழுதிய புஷ்பா தங்கதுரைக்குக் கிடைக்காமல் போய்விட்டதுதான் உலகின் சோகங்களில் ஒன்று.