Showing posts with label சிவாஜி. Show all posts
Showing posts with label சிவாஜி. Show all posts

Saturday, July 22, 2017

சிவாஜியும் கண்ணதாசனும் தமிழ்ச் சமூகமும்......

நாகேஷ் மிகச்சிறந்த நடிகர். தேர்ந்த திறமை மிக்கவர். நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு குணச்சித்திர நடிப்பிலும், நடனக் காட்சிகளிலும்கூட வெகு நேர்த்தியாகத் தம்மை நிரூபிக்கக் கூடியவர். அவருக்கென்று சில லிமிட்டேஷன்கள் உண்டு. அந்த வரையறைக்குள் அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை மிகச்சிறப்பாகச் செய்து எவரையும் அசத்திவிடக்கூடிய அளவு ஆற்றல் மிக்கவர். ஒரு தருமியாகவும், மாதுவாகவும், சுந்தரமாகவும், வைத்தியாகவும், ஒரு ஜோசப்பாகவும் அவரை உச்சத்தில் வைத்துப் பார்க்கமுடியுமே தவிர -
குணசேகரனாகவோ, பிரஸ்டிஜ் பத்மனாபனாகவோ, சிவனாகவோ, திருமாலாகவோ, கர்ணனாகவோ, பாலும் பழமும், பாசமலர், உயர்ந்த மனிதன், அந்த நாள், பலேபாண்டியா, தெய்வமகன், உத்தம புத்திரன், புதிய பறவை, திரும்பிப் பார், மனோகரா, நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், ஞான ஒளி, தங்கப்பதக்கம், வ.உ.சி, கட்டபொம்மன், என்ற பாத்திரங்களிலோ வைத்துப் பார்க்க முடியாது, கூடாது.
சிவாஜி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிம்பம் என்பது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தாலோ, சில பாத்திரங்களாலோ கட்டமைக்கப்பட்ட ஒன்று அல்ல. தோற்றம், அழகு, திறன், உடலிலுள்ள கம்பீரம், குரலில் உள்ள கம்பீரம், உடல் மொழியிலுள்ள நேர்த்தி, நடையிலுள்ள நுணுக்கம், பேசும் திறனிலுள்ள நுணுக்கம், உதட்டசைவு, கண்ணசைவு இவை எல்லாவற்றையும் தாண்டிய தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்ட பிம்பம்தான் சிவாஜியே தவிர குறிப்பிட்ட சில பாத்திரங்களில் நன்றாக நடித்திருப்பவர் என்ற பெருமை மட்டுமே அவருக்கு உரித்தானது இல்லை...............!
இப்போது எதற்காக இவற்றையெல்லாம் சொல்ல நேர்கிறது எனில் நம்மில் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேலையே எங்காவது நாகேஷ் பற்றிய பதிவுகள் வருகிறதா என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருப்பதுதான். நாகேஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்ற பதிவைப் பார்த்துவிட்டால் சர்வாங்கமும் மகிழ்ச்சிப் பொங்கிப் பூரித்துவிடும் இவர்களுக்கு. உடனடியாக ஒரு 'கருத்து' எழுதுவார்கள். என்னவென்று தெரியுமா?

'நாகேஷ் ஒரு அற்புதமான நடிகர். பிறவி நடிகர். அவரை விட்டால் சிவாஜியையே 'தூக்கிச் சாப்பிட்டுவிட்டு'ப் போய்விடுவார்' என்ற பாணியில் அந்தக் 'கருத்து' இருக்கும். (இம்மாதிரியான கருத்துக்களை எல்லாம் நாகேஷே எப்படிப் புறம் தள்ளுவார் என்பது இந்த மூடர்களுக்குத் தெரியாது. 'சிவாஜியெல்லாம் நாம் அன்னாந்து பார்க்கக்கூடிய இமயம். அவரெல்லாம் மனிதரே கிடையாது. இறைவன் அனுப்பிய வரம்' என்பது நாகேஷின் கூற்று.) நாகேஷுக்கு மட்டுமல்ல, இதே 'கருத்தை' நாகேஷ் என்ற பெயரை மட்டும் எடுத்துவிட்டு வேறு சிலர் பற்றிய 'கமெண்டுகளிலும்' வைப்பார்கள். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்கராவ் என்று யாரைப்பற்றி 'சிறப்பித்து'ச் சொல்ல வேண்டுமென்றாலும் இவர்களுக்கு இந்த ஒரே Pattern தான்.
ஆக, இவர்களுடைய நோக்கமெல்லாம் நாகேஷை, எம்.ஆர்.ராதாவை, எஸ்.வி.சுப்பையாவை, ரங்கராவைப் புகழ்வதோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல. மாறாக -
சிவாஜியை 'சிறுமைப் படுத்துவது'.
இப்படிக் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் சிவாஜி மீது மண்ணை, கல்லை, சேற்றை வாரி இறைத்துவிட்டதாக இவர்களுக்குள் ஒரு சிறிய சந்தோஷம் கிளம்புமே.................. அதுதான் முக்கியம். அது போதும் இவர்களுக்கு.
இம்மாதிரியான விவாதங்கள் வரும்போது சிவாஜியைப் பற்றி, அவரது பல்வேறு சிறப்பான தகுதிகள் பற்றிக் கூறுகிறோம் இல்லையா? கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் இவர்களுக்குக் கையில் கிடைக்கும் இன்னொரு அஸ்திரம் - சிவாஜியின் வசன உச்சரிப்பு............. தமிழ் உச்சரிப்பு.
உடனடியாக 'இவர்களுடைய' தலையில் பதில் வந்து துருத்திக்கொண்டு நின்றுவிடும். "ஏன், எஸ்.எஸ் ராஜேந்திரன் தமிழை அழகாக உச்சரிப்பவர் இல்லையா?"என்று கேட்டுவிட்டு வேலை முடிந்ததென்று கிளம்பிவிடுவார்கள். (பாருங்கள்..... ஒரு மனிதரின் சிறப்புக்களைக் 'குறைக்க' இவர்கள் கையெலெடுக்கும் நபர்கள் எத்தனைப் பேர் என்று. நாகேஷ், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவ், இன்றைக்குக் கமலஹாசன், அப்புறம் கடைசியாக எஸ்.எஸ்.ராஜேந்திரன்)
அட, புத்திக் கொழுத்த சுப்பன்களே உங்களுக்கு அறிவே கிடையாதா? (இதில் மனோரமாவைப் 'பொம்பளை சிவாஜி' என்று ஒரு பாராட்டுக் கூட்டத்தில் சோ சொல்லிவைக்க, அதைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். -அப்படியானால் நடிகையர் திலகம் என்றழைக்கப்பட்ட சாவித்திரி என்ன ஆனார்? என்பதற்கு சோ தான் பதில் சொல்ல வேண்டும்.)
ஆயிற்றா?
விஷயம் இத்தோடு முடியவில்லை. இன்னமும் இருக்கிறது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தமிழ்த் திரை இசைக்குக் கிடைத்த மகத்தான கவிஞர்களில் ஒருவர். அவருக்கான பாராட்டுக் கட்டுரை எங்காவது வருகிறதா? மூக்கு வேர்த்துவிடும் சிலருக்கு. உடனே தயாராகிவிடுவார்கள். எதற்கு...................?
கொஞ்சம் பொறுங்கள்.
மெட்டுக்கு ஏற்பப் பாடல் புனைவதிலும், வெகுஜன ரசனைக்கேற்ப விருந்து வைப்பதிலும் தம்மைப் பட்டைத் தீட்டிக்கொண்டு ஜொலித்தவர் வாலி. வாலி பற்றிய சிறப்புக் கட்டுரைகள் எங்காவது வருகின்றனவா? அது போதும் இவர்களுக்கு. ஆனந்தமாய்க் கிளம்பிவிடுவார்கள். எதற்கு?.............
கொஞ்சம் பொறுங்கள்.
மாயவநாதன் தண்ணிலவு தேனிறைக்க போன்ற அழகிய தமிழ் வரிகள் மூலம் பாடல்களைச் செழுமைப் படுத்தியவரா?
புதுக்கவிதைப் பாணியைத் திரை இசையில் விதைக்க வந்தவரா வைரமுத்து? அது போதும். மூக்கு வேர்த்த பட்டாளங்கள் கிளம்பிவிடும். '
பட்டுக்கோட்டை பிரமாதமான பாட்டுக்கோட்டை. மாயவநாதன் சொல்லாற்றல் முகிந்த கவிஞன்' என்ற பாணியில் `கருத்துரைப்பார்கள் என்றா கருதுகிறீர்கள்?
அவர்களின் நோக்கம் பட்டுக்கோட்டையாரையோ, வாலியையோ, மாயவநாதனையோ, வைரமுத்துவையோ, புகழ்வதோ தூக்கிவைத்துக் கொண்டாடுவதோ அல்ல.
பின் என்ன? 'அவர்களுடைய கருத்துக்கள்' எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இப்படித்தான் ....................
'ஒரே பாடலில் கண்ணதாசனையே மிஞ்சிவிட்டார் பட்டுக்கோட்டையார்'
'வாலி ஒன்றும் குறைந்தவர் அல்ல; கண்ணதாசனுக்கு சமமானவர்தான் வாலி. என்னவொன்று, கண்ணதாசன் முன்னரே வந்துவிட்டார். வாலி சற்று பின்னால் வந்தார் அவ்வளவுதான்.'
'மாயவநாதனுக்குப் போதுமான வாய்ப்புகள் மட்டும் கிடைத்திருந்தால் கண்ணதாசன் ஒன்றுமே இல்லாமல் போயிருப்பார்.'
'முதல் மரியாதை படப்பாடல்களை கண்ணதாசனுக்கு சமமாக எழுதி இருக்கிறார் வைரமுத்து.'
இப்படித்தான். இதுதான் அவர்கள் போடக்கூடிய 'கருத்துக்கள்'. இங்கேயும் பாருங்கள், கண்ணதாசன் என்ற ஒரு மனிதருக்காக இவர்கள் நான்கைந்து பேர்களைத் தோளில் தூக்கிச் சுமந்து வந்து இறக்க வேண்டியிருக்கிறது.
இப்படிக் 'கருத்து'க் கூறும் இந்தக் கூட்டத்தை நாம் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தோமானால் இவர்கள் அத்தனைப் பேரும் - ஆமாம் அத்தனைப் பேரும் - ஒரே புள்ளியிலிருந்து கிளம்பி வந்திருப்பார்கள் என்பதை நம்மால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்.
ஆம்.
எம்ஜிஆர் என்பதுதான் அந்த ஒரு புள்ளி.
இது கொஞ்சம் கசக்கும் செய்தி என்றாலும் உண்மை இதுதான்.
'இப்படியெல்லாம்' எழுதுபவர்களின், பேசுபவர்களின் அடிப்படைக்குச் சென்று பாருங்கள். அவர்கள் நேசிக்கும், சுவாசிக்கும் ஒரே கலைஞர் எம்ஜிஆராகத்தான் இருப்பார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தெய்வமாக எம்ஜிஆரை 'வைத்திருப்பவர்கள்' சிவாஜியையும், கண்ணதாசனையும் விலக்கப்பட்ட பட்டியலில்தான் வைக்க விரும்புவார்கள்.
அதன் வெளிப்பாடுகள்தாம் இவ்வளவும்.(சிவாஜியும் எம்ஜிஆரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டும்,
கண்ணதாசனுக்கு கடைசிக் காலத்தில் அரசவைக் கவிஞர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் எம்ஜிஆர் - என்ற பதில்களையெல்லாம் தூக்கிக்கொண்டு யாரும் ஓடிவர வேண்டாம். அவையெல்லாம் வேறு விவாதங்கள்)
மேற்கண்ட எண்ணம் கொண்டவர்களால்தான் தமிழ்ச்சமூகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் கலையின் அடையாளமாக சிவாஜி சொல்லப்படுகிறாரா? அங்கே வந்து நின்று சிவாஜி மீது சேற்றை இறைத்து அவரை சிறுமைப் படுத்து. ஒன்றுமில்லாமல் ஆக்கு. அல்லது அந்த 'உயரத்தைக்' குறை.
தமிழ்த் திரைப்பாடல்களின் அடையாளமாக கண்ணதாசன் சொல்லப்படுகிறாரா? அந்த அடையாளத்தை நொறுக்கு. ஏதாவது செய்து அழி. 'இளிச்சவாய்த் தமிழன்' அத்தனையையும் கேட்டுக்கொண்டு அடையாளங்கள் இல்லாமல் இருக்க சம்மதிப்பான்.
காலகாலமாய் இங்கே நடந்துகொண்டிருப்பது இதுதான்.
பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் ராஜ்குமாரை பொதுவெளியில் விமர்சித்துவிட்டு அவன் உயிருடன் வீடு போய்ச் சேர்ந்துவிட முடியாது. காரணம் கலையின் அடையாளமாக ராஜ்குமார் இங்கே கொண்டாடப் படுகிறார்.
தமிழன் சிவாஜியைச் சொல்கிறானா?
சிவாஜியா விமர்சித்து கிழித்துத் தூக்கி எறி.
காமராஜரை ஒரு அரசியல் அடையாளமாக மாற்றுவதைத் தமிழன் தொலைத்தான். தொடர்ந்து பாரதியை, பாரதிதாசனை, கண்ணதாசனை இங்கே கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு அடையாளங்களை ஏற்படுத்த விடாமல் தமிழனே தடுத்தான்.
கேட்பதற்கு நாதி இல்லை. இதுதான் தமிழ் இனம்.

Monday, May 30, 2011

நான்கு பிரபலங்கள்-திடீர் சந்திப்புகள்!


பிரபலமானவர்களுடன் முன்கூட்டியே ஏற்பாடுசெய்துகொண்டு சந்திக்கச் செல்லுவது என்பது ஒருவகை. சற்றும் எதிர்பார்க்காத இடத்திலும் சூழ்நிலையிலும் சந்தர்ப்பத்திலும் அவர்களை சந்திக்கநேர்வது என்பது ஒருவகை. இந்த இரண்டாவது வகையான சந்தர்ப்பங்களும் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. அப்படி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் சந்திக்கநேர்ந்த நான்குபேரைப்பற்றிய தகவல்கள் இவை. இந்த சந்திப்புக்களின் மொத்த நேரமே இரண்டொரு நிமிடங்கள்தாம்; இரண்டொரு வார்த்தைகள் மட்டும்தான் பேச முடிந்திருக்கிறது. அவ்வளவுதான் பேசவும் முடியும். ஆனாலும் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட்டிருக்கிறது.

அந்த நாட்களில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் மிகவும் கொண்டாடப்பட்டவர். தமிழில் ஒளிப்பதிவு என்பதுபற்றிய சிந்தனையையே ஏற்படுத்தியவர் அவர்தான். ஸ்ரீதரின் முக்கால்வாசிப்படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவாளர். இன்றைய பாலுமகேந்திரா, ஸ்ரீராம், ஜீவா, ரத்னவேலு, கே.வி.ஆனந்த் போன்றவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய முன்னோடி அவர்தான். தமிழில் தொழில்நுட்பங்களுக்காகப் பேசப்பட்ட முதல் இயக்குநர் ஸ்ரீதர்தான். அதுவும் குறிப்பாக ஸ்ரீதர் படங்களில் வின்சென்டின் பங்களிப்பு கணிசமானது. காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை போன்ற படங்களைப் பார்த்தோமானால் முக்கியமான பாடல் காட்சிகளிலெல்லாம் ஒவ்வொரு பிரேமையும் அப்படியே பிரதியெடுத்து கண்ணாடி போட்டு வீட்டில் மாட்டிவைத்துக்கொள்ளலாம். அப்படி ரவிவர்மா பாணியில் ஓவியம் தீட்டியதுபோன்ற டச் ஒன்றைத் தந்திருப்பார். ஆனால் வேடிக்கை பாருங்கள், பாலுமகேந்திரா உட்பட எந்த ஒளிப்பதிவாளரும் வின்சென்டின் பெயரை மறந்தும்கூட உச்சரிப்பதில்லை. அது போகட்டும்.
நாம் விஷயத்திற்கு வருவோம்.

வின்சென்ட் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதுதெரிந்து அவரைச் சந்திக்க வரட்டுமா என்று கேட்டதற்கு “இரவு ஏழு மணிக்கு அறைக்கு வந்துவிடுங்களேன்” என்றார். அவர் சொல்லியிருந்தபடி நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்(தற்சமயம் krishnathreya blogspot-என்று வலைப்பூ எழுதிக்கொண்டிருக்கிறார்) உட்லண்ட்ஸ் சென்றிருந்தோம்.

வின்சென்ட்டைச் சென்று சந்தித்ததும் அறைக்குள்ளிருந்து வெளிவந்தவர், “வாங்க உள்ளே ஒரே கூட்டமாயிருக்கு. டைரக்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தான்னு எல்லாரும் நாளைய படப்பிடிப்புக்கான ஆலோசனையில இருக்காங்க. நாம இங்கே உட்கார்ந்தே பேசுவோம்” என்றுசொல்லி வராந்தாவிலேயே உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். ஒரு அரைமணி நேரம் சென்றிருக்கும். வாசலில் சர்ர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. கார் நின்றதும் நிற்காததுமாக அதிலிருந்து ஒருவர் இறங்கி அவசர அவசரமாக உள்ளே ஓடிவந்தார். பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி.

ஓடிவந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.

“என்ன வின்சென்ட் டைரக்டர் இருக்காரா, தயாரிப்பாளர் இருக்காரா?” என்று கேட்டபடி புயல்போல உள்ளே நுழைந்தார்.

“இருக்காங்க இருக்காங்க வாங்க” என்று அவருக்கும் “ஒரு நிமிஷம் வந்துர்றேன்” என்று எங்களுக்கும் சொல்லிக்கொண்டே எழுந்து உள்ளே ஓடினார் வின்சென்ட்.

உள்ளே போனவர் திரும்பிவந்து எங்களிடையே உட்கார்ந்து தொடர்ந்து பேச ஆரம்பித்தார். எங்களுடைய கவனம் பூராவும் திரும்ப எப்போது கதவு திறக்கும் சிவாஜி எப்போது வெளியே வருவார் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்குமா என்பதிலேயே இருந்தது

ஒரு பத்து நிமிடம் ஆகியிருக்கும்.. கதவு திறந்தது. “என்ன என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்று கேட்டபடியே சிவாஜி வெளியே வந்தார்.

“பத்திரிகைக்கான பேட்டி ஒண்ணு. பேசிட்டிருக்கேன்” என்று சொன்ன வின்சென்ட் எங்களை அறிமுகம் செய்துவைக்க “சரி ராஜா சந்தோஷம் வர்றேன்” என்று கைகூப்பியபடியே ஓடிச்சென்று காருக்குள் ஏறிக்கொண்டார் நடிகர் திலகம்.

ஒரு மின்னல் சந்திப்புதான். இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது!
********
இது நடந்தது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு...! பெங்களூர் கன்டோன்மென்ட்டின் மையப்பகுதியில் கோல்ஸ் பார்க் என்றொரு பூங்கா இருக்கிறது. அதற்கு சற்றே பக்கத்தில் சவேரியார் கோவில் என்ற மிகப்பெரிய சர்ச் ஒன்று இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய சர்ச் அது. மொத்தமும் கருங்கற்களால் ஆன பிரமாண்ட கட்டடம்.

அந்த சர்ச்சின் பெரிய வளாகத்திலிருந்து நாராயணபிள்ளை தெருவுக்குப்போக சர்ச்சின் வெளிவாசல் வழியாக வெளியேறியபோது ஒரு பெரிய லாரி ஒன்று கடந்து சென்றது. அது போகட்டும் என்பதற்காக நின்றபோது அந்த லாரி சடன்பிரேக் போட்டு நின்றது. யாரோ ஸ்கூட்டரில் குறுக்கே போயிருக்கிறார்கள். அந்த லாரிக்குப் பின்னே வந்துகொண்டிருந்த வெள்ளை நிறத்து அம்பாசிடர் கார் ஒன்றும் சடாரென்று நின்றது. இப்போது இந்தக்கார் நின்றிருப்பது எனக்கெதிரில். அதாவது வெறும் இரண்டடி எதிரில்.

உள்ளே பார்த்தால் ஆச்சரியம். ஜன்னலோரத்தில் சத்ய சாய்பாபா உட்கார்ந்திருக்கிறார். நான் பார்க்க அவரும் என்னைப் பார்க்கிறார். கனிவான பார்வை. சட்டென்று என்ன செய்வது என்று தெரியவில்லை. வணக்கம் தெரிவித்தேன். சிரித்துக்கொண்டே கையை உயர்த்தினார். கார் சென்றுவிட்டது.

அப்போதெல்லாம் சாய்பாபாவின் கீர்த்தி உச்சத்தில் இருந்த நேரம். ஆசிரமத்தில் துப்பாக்கிச்சூடு, விபூதி வரவழைப்பது வெறும் மாயாஜாலம் என்பதுபோன்ற யூடியூப் விவகாரங்கள் எதுவும் வராத நேரம். நண்பர்களிடம் சொன்னபோது “பாரேன் நாங்கள்ளாம் எத்தனையோ செலவழித்து புட்டபர்த்திக்கும் ஒயிட்ஃபீல்டுக்கும் போய் தூரத்தில் நின்று அவரைத் தரிசித்து ஆசி பெற்று வருகிறோம். உனக்கு போகும் வழியில் அவராகவே வந்து தரிசனமும் ஆசியும் கொடுத்துட்டுப் போறார்னா சம்திங் கிரேட்” என்றார்கள். எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஒரு திடீர் சந்திப்பு அவ்வளவுதான்!
*************
இந்த சந்திப்பும் முந்தையது போலவே சாலையில் ஏற்பட்ட சந்திப்புதான்.

பெங்களூர் மகாத்மா காந்திசாலைக்கு அடுத்த கப்பன்சாலை. ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக பிஆர்வி தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். மாலை ஆரம்பித்திருந்த நேரம். நான்கு மணி இருக்கலாம்.

எதிர்புறத்திலிருந்து பாஆஆஆஆங் என்று கூவிக்கொண்டு படுவேகமாக ஒரு பைலட் ஜீப் வந்தது. பின்னேயே நான்கைந்து கார்கள் மிக வேகமாக வந்துகொண்டு இருந்தன. கவர்னர் மாளிகையிலிருந்து வரும் சாலை இது. எனவே யாரோ ஒரு விவிஐபி வருகிறார் என்று தெரிந்தது. சர் சர்ரென்று நான்கைந்து கார்கள் போய்விட மறுபடி ஒரு ஜீப்பும் இன்னொரு காரும் வந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்தபோதே பிஆர்வி முனையிலிருந்த சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்துவிட சடன் பிரேக் அடித்து கிரீச்சிட்டுக்கொண்டு நின்றது அந்த விவிஐபியின் கார். எனக்கு நேர் எதிரில்..இரண்டடி எதிரில்.

முன்னால் போன ஜீப்களும் கார்களும் நிறுத்தப்பட்டு அதிலிருந்து குதித்து ஓடி வந்த அதிகாரிகள் சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்த போலீஸைக் காய்ச்சி எடுக்க அவர் என்னவோ சொல்லி சமாளிக்கப் பார்க்க.. அதற்குள் குறுக்கு வெட்டாகப் போகவேண்டிய வாகனங்கள் போக ஆரம்பிக்க...இந்தக் களேபரங்களுக்கு இடையில் என் எதிரில் இருந்த காரில்

சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தவர் வாஜ்பேயி.

கார் நிறுத்தப்பட்டதற்கு டிரைவர் ஏதோ சமாதானம் சொல்ல முற்பட ‘டீக்கே டீக்கே’ என்று அவரை சமாதானப்படுத்திவிட்டுத் திரும்பியவரிடம் ஒரு அடி முன்னே சென்று ‘நமஸ்தே சார்’ என்றேன். சிரித்துக்கொண்டே தலையாட்டியவர் என்னைப் பார்த்து ஏதோ கேட்டார் இந்தியில். எனக்குப் புரியவில்லை. “பார்டன் சார்” என்றேன். அவர் தாம் சொன்னதையே மறுபடியும் சொன்னார் அதே இந்தியில். நான் ஒன்றும் புரியாமல் நிற்க அதற்குள் காருக்குள்ளே இருந்த வேறு யாரோ அவரது கவனம் கலைக்க.. இந்தச் சந்தடியில் டிராபிக் சரியாகி பச்சை விழுந்துவிட கார் நகர ஆரம்பித்துவிட்டது. வாஜ்பேயியைக் காருக்குள் பார்த்த நான்கைந்துபேர் ஓடிவர கார் வேகம் பிடித்துவிட்டது. இது அத்தனையையும் கொஞ்ச தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரர் அவசர அவசரமாக ஓடிவந்து “சார் என்ன பேசினீங்க அவர்ட்ட?” என்றார். “அவர்ட்ட என்னங்க பேசமுடியும் வெறும் நமஸ்தே சொன்னேன் அவ்வளவுதான்” என்றேன்.

இது நடந்த அடுத்த மாதமே அவர் பிரதமராகிவிட்டார்.

அவர் இந்தியில் என்ன கேட்டிருப்பார் என்பது இப்போதும் மனதைக் குடைந்துகொண்டுதான் இருக்கிறது.
************
மறுபடியும் ஹோட்டல்!

பெங்களூர் பேலஸ்கிரவுண்டில் கிரானைட்ஸ் எக்ஸிபிஷன் நடந்துகொண்டிருந்தது. அதில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களில் குறிப்பிட்ட ஒருவரைச் சந்திப்பதற்காக லீ மெரிடியன் ஹோட்டலுக்கு நானும் நண்பர் கிருஷ்ணசாமியும் சென்றிருந்தோம். கிருஷ்ணசாமி இப்போது காதிகிராமயோத் பவன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். லீமெரிடியன் ஹோட்டலின் வரவேற்பறையைக் கடந்து லிஃட்டுக்குச் சென்றோம். லிஃப்டில் ஏறி பொத்தானை அழுத்தி கதவு மூடப்பார்த்திருக்கும்போது “ஒன்மினிட் ஒன்மினிட் பிளீஸ் வெய்ட்” என்றபடி ஒரு பெண்மணி லிஃப்ட்டை நோக்கி ஓடிவருவது தெரிய லிஃப்ட்டை நிறுத்தினோம். அந்தப் பெண்மணி தாம் மட்டும் ஓடிவரவில்லை. தம்முடன் மிகப்பெரிய இரண்டு சூட்கேஸ்களையும், கூடவே தூக்கமுடியாத இன்னொரு லெதர் பையையும் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார். அவர் வேகத்துக்கு அந்த சூட்கேஸ்கள் ஒத்துழைப்பவையாக இல்லை. ஒவ்வொன்றும் அவ்வளவு கனம்; அவ்வளவு பெரியது. அவற்றைத் தூக்கி லிஃப்ட்டுக்குள் வைக்கவும் அவரால் இயலவில்லை. “கொஞ்சம் இருங்கள்” என்று சொல்லி நாங்கள் இருவரும் வெளிவந்து அவரது எல்லா லக்கேஜ்களையும் எடுத்து உள்ளே வைத்தோம்.

“தேங்க்யூ தேங்க்யூ” என்று நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னவர், அதற்குள் வியர்த்துவிட்ட தம்முடைய முகத்தைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் மட்டும் மனதுக்குள் வந்தது. யார் என்பது மனதில் சிக்கவில்லை.

“எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டு நீங்களே எடுத்து வர்றீங்க? ரூம் பாய்ஸ் எடுத்து வந்திருப்பாங்களே” என்றார் நண்பர்.

“ரிசப்ஷன்லயும் சொன்னாங்க..ஆனா வெய்ட் பண்ணனும்னு சொன்னாங்க. கொஞ்சம் அர்ஜண்ட் அதான் நானே வந்துட்டேன்” என்று சிரித்தார். ஒன்று வெளிநாட்டிற்கு இங்கிருந்து புறப்படுவதாக இருக்கவேண்டும். அல்லது வெளிநாட்டிலிருந்து நேரடியாக வந்திருக்கவேண்டும். அவ்வளவு பெரிய பெட்டிகள்...”ஐந்தாம் மாடி” என்று தாம் போகவேண்டிய தளத்தையும் சொன்னார். அவர் போகவேண்டிய தளம்தான் நாங்களும் போவதால் “எந்த அறை சொல்லுங்க கொண்டுவந்து தர்றோம்” என்றோம்.

“நோ..நோ.. நீங்க இப்ப செய்த ஹெல்ப்பே போதும். ரொம்ப தேங்ஸ். கீழருந்து போன் பண்ணியிருக்கேன். எங்க ஹஸ்பெண்ட் லிஃப்ட்டுகிட்டேயே வெய்ட் பண்ணுவார். நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம்” என்றார்.

ஐந்தாம் தளம் வந்ததும் கதவு திறந்தது. அந்தப் பெண்மணியின் ஹஸ்பெண்ட் கருப்புச் சட்டையும் ஜீன்ஸுமாக லிப்ட் அருகிலேயே நின்றிருந்தார்.

அட, ரஜனி!

நாங்கள் எதுவும் பேசுவதற்கு முன்பாக திருமதி ரஜனி முந்திக்கொண்டு “இவங்கதான் லக்கேஜ் எல்லாம் கொண்டுவருவதற்கு ரொம்பவும் ஹெல்ப் பண்ணவங்க” என்றார்.

“தேங்க்யூ தேங்க்யூ...,தேங்க்யூ வெரிமச்” என்று அவசரமாய்ச் சொல்லியபடியே ஒருகையில் சின்ன சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு மறுகையால் பெரிய சூட்கேஸை இழுத்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தார் ரஜனி.

ரஜனி விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள்.

Wednesday, February 10, 2010

இளைய ராஜாவா.....? ரகுமானா......?

இளைய ராஜாவுக்கும் ரகுமானுக்கும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, சில காலமாகவே இளையராஜாவா ரகுமானா என்ற வாக்குவாதங்களும், பட்டிமன்றங்களும் இணையதளம் உட்பட பல்வேறு தளங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. எண்பதுகளின் இறுதியில் தொடங்கி சில வருடங்களின் முன்புவரையிலும் -குறிப்பாகச் சொல்லப்போனால் ரோஜாவின் வருகை வரையிலும் இளையராஜாவின் ஆதிக்கமும் தாக்கமும் மிகுதியாகவே இருந்தன. இளையராஜாவின் அன்னக்கிளி எப்படி ஒரு மாறுதலைக் கொண்டுவந்ததோ அதே போன்ற ஒரு மாறுதலை, அல்லது அதைவிடவும் அதிகமான ஒரு மாறுதலை ஏ.ஆர்.ரகுமானின் ரோஜாவும் கொண்டு வந்தது. இரண்டு படங்களின் பாடல்களும் பெருவாரியான அளவில் மக்களைப்போய்ச் சேர்ந்தன. இளையராஜாவின் பாடல்கள் எந்த அளவுக்குச் சேர்ந்ததோ அதைவிடவும் அதிகமான அளவில் ரகுமானின் பாடல்கள் மக்களிடம் சேர்ந்தன. இந்த அதிகப்படியான சென்றடைதலுக்கு ரகுமானின் பாடல்களில் இருந்த இனிமையை விடவும்,அவர் பாடல்களில் செய்திருந்த மாற்றங்களை விடவும், முக்கியமான காரணம் -அந்தந்த காலகட்டங்களில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும். அன்றைய தினம் இளையராஜாவின் பாடல்கள் திடீரென்று அத்தனைப் பரவலான வளர்ச்சியைப் பெற்றதற்கும் இதே தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த அடிப்படையான இயற்கை விதியினைக் கருத்தில் கொள்ளாமல் எந்த ஒரு கலைஞனின் படைப்பையும் அந்த படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும் இதுதான் அளவில் பெரியது ,இதுதான் சிறந்தது என்றெல்லாம் கச்சைக் கட்டிக்கொண்டிருப்பது சரியான முறைமையாக இருக்காது. இந்த ஒரு விதியைக் காரணம் காட்டியே அந்தந்த படைப்புக்களில் ஒன்றுமே இல்லை எல்லாவற்றுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம் என்று சுட்டுவதும் அறிவுடைமை அல்ல. சில படைப்பாளர்களின் படைப்புகள் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றிப் பேசும்போது வர்த்தகரீதியான விஷயங்களுக்கு அப்பால் அவை சமூகரீதியாக மக்கள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதும் முக்கியம். இசைப்பாடல்களைப் பொறுத்தவரையில் தாக்கங்கள் என்பதனை அவை எந்த அளவுக்கு மனதில் ஊடுருவிப் பதிந்திருக்கின்றன , எவ்வளவு காலங்கள் நீடித்திருக்கின்றன மனதிலே தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கையிலே எந்த அளவுக்கு தொடர்ந்திருக்கின்றன,எத்தகைய அனுபவங்களை அவர்களுக்குத் தந்திருக்கின்றன என்பதையெல்லாம் அளவுகோல்களாகக் கொள்ளலாம்.
இந்தக் கோணத்திலிருந்து திரைஇசைப்பாடல்களை அணுகும்போதுதான் காலத்தைத்தாண்டி அவை நிற்கின்றனவா என்பதும் , காலத்தைத்தாண்டி நிற்கின்ற பாடல்களை இசையமைப்பாளர்கள் தந்திருக்கின்றார்களா என்பதையும் கணிக்க முடியும். இந்த அளவுகோல்களெல்லாம் இல்லாமல் அவர்களின் வணிகரீதியான வெற்றிகளை மட்டும் கணக்கிட்டு இவர்தான் எல்லாமே என்பதும்,அவரை இவர் வென்றுவிட்டார் என்பதும் இவரை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறக்கவில்லை என்றெல்லாம் புகழ் மாலைகள் சூட்டுவதும் சரியான ஒப்பீடுகள் ஆகாது.
இதுபோன்ற விஷயங்களில் விடுபட்டுப் போகின்ற இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் ஒருவரைப் பற்றிச்சொல்லும்போது அதே துறையில் இவ்வளவு காலமும் கொடிகட்டிப் பறந்த, அல்லது கோலோச்சிக் கொண்டிருந்த இன்னொரு முக்கிய மேதையை மிகச்சௌகரியமாக மறந்துவிடுவது ,அல்லது வேண்டுமென்றே விடுபட்டுப் போய்விட்டதான பாவனைக் காட்டுவது. இந்தச் செயலும் வர்த்தகரீதியான நடைமுறைக்கு
மிகவும் உதவுகிறது என்பதனால் இத்தகு செயல்பாடுகளும் சர்வசாதாரணமாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த முந்தைய மேதை இப்போதைய 'ஒளி வட்டத்து' மேதை நினைத்தே பார்க்க முடியாத சாதனைகளை இத்தனைக் காலமும் உயிரைக் கொடுத்துச் சாதித்து முடித்திருப்பார். அவர் சிரமப்பட்டுப் போட்ட ரோட்டில் இந்தச் சாதனையாளர் சர்வசாதாரணமாக சாரட்டு வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிப்பார். எல்லாவிதமான சாதனைகளுக்கும் தான்தான் சொந்தக்காரன் என்பதாக இவரது பாவனைகளும் நடவடிக்கைகளும் இருக்கும். இவரை ரசிக்கின்ற கூட்டமும் இதற்குத் தோதாக நடந்துகொள்ளும். அந்தக் கூட்டத்திற்கு அதனைத் தாண்டிய எந்த நோக்கமும் இருக்காது. தொடந்து ஒரே செய்திகளைச் சொல்லிக்கொண்டு ,ஒரே விதமான புகழுரைகளை முழங்கிக்கொண்டு சலிப்பு ஏற்படுகின்றவரைக்கும் இவர் பின்னாலேயே பயணம் போய்க் கொண்டிருக்கும். அடுத்த ரசனைக்குரிய சாதனையாளர் கிடைக்கிறவரை இந்தக் காட்சிகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்துகொண்டேயிருக்கும்.. இதில் பரிதாபம் என்னவென்றால் சில நாட்களுக்குப்பின் நடைபெறுகின்ற அத்தனையையும் அதுதான் உண்மை என்பதுபோலவும் ,அதுதான் நிதர்சனம் என்பதுபோலவும் குறிப்பிட்ட அந்தச் சாதனையாளரே நினைக்க ஆரம்பித்துவிடுவார் என்பதுதான். இன்றைய பொதுவான நிலைப்பாடு இதுதான். இதே பாதையில்தான் இன்றைய பல்வேறு ஒளிவட்ட ஊர்வலங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ரகுமானுக்கு இன்றைய நிலையில் கிடைத்திருக்கும் பரிசுகளும் சரி; அங்கீகா
ரங்களும் சரி; புகழ் வெளிச்சங்களும் சரி அவருடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரங்களாக அவை கருதப்பட்டாலும் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு வகையான முணுமுணுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவை இசையின் கடவுளாகக் கொண்டாடுகிறவர்களின் சார்பாக வரும் முணுமுணுப்பு அது. இந்த முணுமுணுப்பு நியாயமானதுதானா, ரகுமானுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நியாயமானதுதானா என்பதையெல்லாம் அலசுவதற்கு முன்னால் இந்தியாவில் எந்தவொரு இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அங்கீகாரமும் ,அதைச்சார்ந்த பரிசுகளும் அதற்கேற்ற புகழ் வெளிச்சமும், கோடானுகோடி பணமும் ரகுமானுக்குக் கிடைத்திருப்பதை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். அதைவிடவும் முக்கியம் இத்தனைப் புகழ் வெளிச்சம் தம்மீது விழுந்திருக்கும் நிலையிலும் துளிக்கூட ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ, கர்வமோ,ஆணவமோ இல்லாமல் அதனை ஒரு சின்னச்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் ரகுமானின் பெருந்தன்மை.அவ்வளவு சாதாரணமாக எந்தவொரு மனிதரிடத்தும் அல்லது எந்தவொரு கலைஞரிடத்தும் காணமுடியாத மிக அரிய பண்பு இது. அற்புதமானதொரு குணம் இது. இந்த ஒன்றிற்காகவே ரகுமானுக்கு இன்னமும் நூறு ஆஸ்கார்களும், நூறு கிராம்மிகளும் தாராளமாகத் தரலாம்.
பரிசுகளும் அதனைத் தொடர்ந்த அங்கீகாரங்களும் எப்படிக் கிடைக்கின்றன அவை நியாயமானவர்களுக்கு நியாயமான நேரங்களில் கிடைக்கின்றனவா என்பவையெல்லாம் விவாதத்திற்குரிய விஷயங்கள். அவை எப்படிக்கிடைக்கின்றன என்பது இங்கே பேசுபொருள் இல்லை. இந்த இருவரில் யார் வித்தகர்? இந்த இருவரில் யார் விற்பன்னர்? என்பதாக இங்கே முன்வைக்கப்படுகின்ற வாதங்களுக்குள்ளே இருக்கின்ற நியாய அநியா
யங்களுக்குள்ளே சென்று பார்ப்பதுதான் நமது நோக்கமே.
இன்றைக்கு ஏ.ஆர்.ரகுமான் எட்டியிருக்கும் உயரம் என்பது சாதாரணமானது அல்ல.இசைத்துறையில் என்றில்லை, திரைப்படத்துறையில் இருக்கும் பல்வேறு துறைகளையும் சார்ந்த எந்தக் கலைஞனாலும் இத்தனை உயரத்தையும் இனிமேலும் தொடரந்து ரகுமான் எட்டப்போகும் உயரங்களையும் தொடமுடியுமா என்பதுவும் சந்தேகம்தான். இது ஒருபுறமிருக்க, இந்தக் காரணங்களாலேயே ரகுமான் யாரை விடவும் மிகப்பெரிய இசை மேதை ஆகிவிடமுடியுமா என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி. ரகுமான் காலத்தைக் கடந்த இசைமேதையா என்பது நம்முன்னுள்ள மிக முக்கியமான கேள்வி.
இந்த இடத்தில் வேண்டுமானால் நாம் ரகுமானையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர இயலும். 'காலத்தைக் கடந்த இசை ' என்ற ஒற்றை வரி விதியொன்றை அளவுகோலாக வைத்துக்கொண்டு ரகுமானையும் , இளையராஜாவையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் நிச்சயம் இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. மாறுபட்ட இசை , புதுமையான இசை, மேல்நாட்டுப் பாணியிலான இசை, நவீன உத்திகளில் கோர்க்கப்பட்ட நவநாகரிக இசை, இதுவரை நாம் கேள்விபட்டேயிராத வாத்தியக்கருவிகளின் லயம் சேர்ந்த இசை, என்று இன்னும் என்னென்னவோ சொல்லி வகைப்படுத்தலாம். அத்தனையும் உண்மைதான், ஆனால் காலத்தைக்கடந்து நிற்கவும், மனதை ஊடுருவிச்சென்று மனதைக் கரைக்கவும் உயிருள்ள வரை உங்களுடனேயே தொடர்ந்து வரவும் ,இத்தனைப் பக்கத்துணைகள் ஒரு நல்ல இசைக்கோர்வைக்கு அவசியமே இல்லை. ஒரு நல்ல இசை என்பது ஒரேயொரு ஒற்றைப் புல்லாங்குழலிலிருந்துகூட வெளிப்படக்கூடும். அந்த இசையில் தோய்ந்துள்ள சுகமான இனிமைதான் அடிப்படை.
அத்தகைய இனிமைச்சொட்டும் பாடல்களைத் தந்திருப்பவர் என்று பார்த்தால் இளையராஜாவுக்குச் சற்று பின்னேதான் நிற்கிறார் ரகுமான். இளையராஜா தந்திருக்கும் இனிமையான பாடல்களின் எண்ணிக்கை அதிகம். ரகுமான் பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும் அனுபவம் வித்தியாசமானது. இனிமையான சுகானுபாவம் என்பது மிகவும் குறைவானது. ஆகவே, இந்த வகையில் ரகுமானைப் பின்னே தள்ளிவிட்டு நிற்பவர் இளையராஜாதான். எனவே ரகுமானை மிஞ்சி நிற்பவர் இளையராஜாவே என்று சொல்லி விலகிக்கொள்ள முடியுமா என்று பார்த்தால் 'முடியாது'என்பதுதான் பதில்.காரணம் இளையராஜா பெயரைச் சொல்வதற்கு முன்னாலேயே சொல்லவேண்டிய பெயர்கள் சில இருக்கின்றன என்பதுதான்.
இளையராஜா தமிழில் சில சாதனைகள் புரிந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இதற்காக ,சாதனைகள் புரிந்த ஒரேயொருவர் இளையராஜாதான் என்பதுபோலவும், அல்லது சாதனைகள் புரிந்த முதலாமவர் இளையராஜாதான் என்பதுபோலவும் ஒரு கற்பிதம் ஏற்படுத்த முயல்வதையும் ஏற்பதற்கில்லை. தமிழ் இசையை முதன்முதலில் தமிழுக்குக் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்றெல்லாம் சிலபேர் எழுதிவருவதைப் பார்க்கும்போது அவர்கள்மீது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இன்னொருவர் எழுதுகிறார் 'இளையராஜா அளவுக்குச் சாதனைகள் புரிந்தவர்கள் அவருக்கு முன்னும் இல்லை. பின்னாலும் வரப்போவதில்லை.' இம்மாதிரியான கருத்துக்களெல்லாம் ஒன்று அறியாமையால் வருவது- அல்லது அவர்மீது கொண்ட அதீத ரசிப்புக்கொண்ட்டாட்டத்தால் வருவது. உலகில் எம்.ஜி.ஆர் படத்துக்கு இணையான இன்னொரு படம் வரவே வராது என்றும் வேறு யாருடைய படத்தையும் பார்க்கவே மாட்டேன் என்றும் இலட்சக் கணக்கான ரசிகர்கள் கருத்துக் கொண்டிருந்ததற்கு ஒப்பாகும் இது. இத்தகைய கருத்துக் கொண்டிருக்கும் சில ரசிகர்கள் இருப்பதுபற்றி இளையராஜா வேண்டுமானால் மகிழ்ச்சி கொள்ளலாமே தவிர, அந்த வாதங்களுக்கு எவ்விதமான முக்கியத்துவமோ அங்கீகாரமோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
ஒருவர் மிகவும் புகழ்பெற்றவராக இருக்கிறார் என்பதாலோ, முந்தையவரை விடவும் வசூல் சாதனைகள் செய்தார் என்பதனாலோ அவருக்கு முன்பு இதே சாதனைகளை செய்த அவரது அப்பன் பாட்டனையெல்லாம் தூக்கிக் குப்பைக்கூடையிலே போடுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரமில்லை. சொல்லப்போனால் இது அதிகாரம் பற்றிய பிரச்சினைக்கூட இல்லை, அறியாமை சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். தனக்கு இந்திரா காந்தியை மிகவும் பிடிக்கும் என்பதற்காக, "இந்தியா என்றாலேயே இந்திராதான் .இவருக்கு முன்பு இவர் போன்ற ஒரு தலைவர் இந்தியாவில் தோன்றியதே இல்லை. காந்தி, நேரு போன்றவர்களுக்கெல்லாம் மக்கள் செல்வாக்கு இருந்ததே இல்லை" என்றெல்லாம் அறியாமையால் சொல்வதற்கு ஒப்பாகும்.
இளையராஜாவுக்குப் பின்னால்தான் ரகுமான் நிற்கிறார் என்பது போலவே இளையராஜா யாருக்குப் பின்னால் நிற்கிறார் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் சரியான அணுகுமுறை. அப்படிப் பார்க்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பின்னால்தான் இளையராஜா நிற்கிறார் என்பது சாதாரண குழந்தைக்குக் கூடத்தெரியும் . தமிழ் இசை உலகில் , இன்னமும் சொல்லப்போனால் திரைஇசை உலகில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. விஸ்வநாதனின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் இளையராஜாவின் சாதனைகள் முழங்காலுக்குக்கூடக் காணாது. விஸ்வநாதன் இசையமைத்து வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கையும் சரி; விஸ்வநாதன் இசையமைப்பில் வந்த பாடல்களின் எண்ணிக்கையும் சரி; இளையராஜாவின் இசையமைப்பில் வந்த பாடல்களுடனெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கணிப்புகள் கூறுவது விஸ்வநாதனின் மேதைமைக்கு இழுக்காகவே இருக்கும். இந்த ஒப்பீடுகூட தனிப்பட்ட விஸ்வநாதனின் சாதனைகளை முன்வைத்துச் சொல்லப்பட்டதுதானே தவிர, அவரது முந்தைய அடையாளமான 'விஸ்வநாதன்-ராமமூர்த்தி ' என்ற இருவர் கட்டியமைத்துச் சாதித்த பிம்பத்தை முன்வைத்துச் சொல்லப்பட்டது அல்ல.
விஸ்வநாதன் -ராமமூர்த்திக்கு முன்புவரையிலும் தமிழ்த்திரையை ஆதிக்கம் செலுத்திவந்த இசையமைப்பாளர்களாக எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன். ஆதிநாராயணராவ், சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையாநாயுடு ஆகிய விற்பன்னர்கள் பலர் இருந்தார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களின் தனிப்பாடல்களுக்கெல்லாம் கூட இசையமைத்துத் தந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். எஸ்.வி.வெங்கட்ராமனைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் கால் பணிந்து வணங்குவார் எம்.எஸ் .என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. ஜி.ராமனாதன் அந்தக்கால இசையமைப்பில் செய்யாத புதுமைகள் இல்லை.ஒரு பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் ஜி.ராமனாதன். இவர்கள் அத்தனைப் பேரும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் வருகை நிகழ்கிறது. ஒரு புதிய பிரளயம் பாய்ந்ததுபோல் அத்தனை நாட்களும் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்த பாடல்களின் போக்கு சத்தமில்லாமல் மாற்றியமைக்கப்படுகிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாணியிலான மெல்லிசை புதிய பாணி திரைஇசையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அன்றைக்குப் பிரவாகமெடுக்கத்தொடங்கிய அந்த இசை சின்னச் சின்ன மாறுதல்களுடன் இன்றைக்கும் பிரவாகமாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
ஒவ்வொரு மாற்றங்களுக்கும் அந்த மாறுதல்களை நிகழ்த்தும் சாதனையாளர்
களையும் மீறியதொரு புறக்காரணம் இருக்கும். அந்தக் காரணத்தோடு ஒன்றிணைந்துதான் சாதனையாளர்களுக்கும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். திரையுலகில் அப்படியொரு மாற்றம் நிகழ்வதற்கான ஆண்டாக 1952-ஐக் குறிப்பிட வேண்டும். திரையுலகில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான மாபெரும் கலைஞனின் வருகை நிகழ்ந்த வருடம் அது. அந்த வருடத்திலிருந்துதான் நடிப்பு, கதை, வசனம், இசை, இயக்கம், என்று ஆரம்பித்து திரையின் அத்தனைத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்த அற்புதம் நடந்தேறியது. 52-க்கு முந்தைய படங்களையும், அதற்குப் பிந்தைய படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள முடியும். கலைஞர் கருணாநிதிகூட அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்தே திரைக்கதை வசனங்கள் எழுதி வந்தபோதிலும் 52-ன் பராசக்தி படத்திற்குப் பிறகுதான் ஒரு புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை அவராலும் போட முடிந்தது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவரையிலும் தயாரிக்கப்பட்டு வந்த பழைய பாணிப்படங்களுக்கு விடை கொடுக்கப்பட்டு புதிய பாணியில் படங்கள் வர ஆரம்பித்தது அந்த ஆண்டிலிருந்துதான். ஆக, அந்த ஆண்டிலிருந்து ஒரு புதிய திருப்பம் நிகழ ஆரம்பித்தது.
இந்தத் திருப்பம் திரையுலகில் மட்டுமல்ல. ஊடகத்துறையிலும் நிகழ ஆரம்பித்தது. தமிழில் வெவ்வேறு புதிய பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாகச் சொல்லப்போனால் திராவிட இயக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு இதழ்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அதுவரையிலும் இதழ்களில் ஆதிக்கம் செலுத்திவந்த 'ஐயராத்துத் தமிழும்', பண்டிதர்களின் தமிழும் விடைபெற்று ,புதிய -எளிய-இயல்பான -இலக்கியத்தமிழ் அரியாசனம் ஏறியது.அதிகக் கல்விக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதிகமான பொதுக்கூட்ளும் அதிகமான இலக்கியக் கூட்டங்களும் மக்களிடையே நிகழ்கின்றன. ஆக மொத்தத்தில் சமூகச் சூழலுக்கான ஒரு மாறுதல் பெரிய அளவில் நிகழ்கிறது.
'பணம்' என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் இசைப்பயணம் ஆரம்பிக்கிறது.ஆரம்பம் சாதாரணமானதாக இருந்தபோதிலும் மொத்த ஊரையும் போர்த்தும் பனிபோர்வையைப்போல தமிழக மக்களைச் சுற்றிக் கவிகிறது அந்த இசை மழை. பொழுது போக்கிற்காக ஏதோ இரண்டு பாடல்களைக் கேட்டோம் அடுத்த வேலையைப் பார்க்கப் போனோம் என்றில்லாமல் ஊனில்,உணர்வில், உயிரில் கலந்து மக்களுடன் நிலைத்து நிற்க ஆரம்பிக்கிறது அவர்களின் பாடல்கள். படுத்தால் எழுந்தால் நிமிர்ந்தால் உட்கார்ந்தால் நடந் தால் அவர்களின் இசையோடுதான் என்கிற அளவுக்கு அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிக் கலக்கிறது. அந்த நாளை முடித்து இரவு படுக்கைக்குச் செல்வதற்குக்கூட அவர்களுடைய பாடல்களை ஒருமுறைக் கேட்டுவிட்டே நித்திரையின் வசப்படுவது என்ற பழக்கத்தை ஏற்படுத்துகிறது அவர்களின் இசை.
அவர்களின் இந்தச் சாதனைக்கு ஆணிவேராய், அஸ்திவாரமாய், உயிராய் இருந்தது இன்னொரு மகாகலைஞன். அந்தக் கலைஞனின் பெயர்; 'கண்ணதாசன்!' ஆம் நண்பர்களே, இந்த மூன்றுபேரும் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் இசை சாம்ராஜ்ஜியம் மிகப்பெரியது. அளவிட முடியாதது. இன்னொருவராலோ அல்லது இன்னும் சிலர் சேர்ந்துகொண்டோ இதனை மிஞ்சும் ஒரு இசை சாதனையை இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்த்திவிட முடியாது. இந்தக் கூட்டணி உடைந்த பின்னால் அதில் இருந்த இரண்டுபேர் சேர்ந்து அவர்களின் முந்தைய சாதனைகளுக்கு நிகரான இன்னொரு சாதனையை நிகழ்த்த முடியவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்தாகவேண்டும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி பிரிந்த பின்னால் விஸ்வநாதன் -கண்ணதாசன் இணைந்தோ, அல்லது ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் இணைந்தோ முந்தைய அளவுக்கு ,அந்த உயரத்திற்கு அவர்களால் மீண்டும் வரமுடியவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்ததற்குப்பின் அந்த இரட்டையர் ஏற்படுத்தியிந்த தாக்கத்தின் பலன் இசையமைப்பாளர் என்ற முறையில் விஸ்வநாதன் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் அமைந்துவிட்டது. வணிகப்போட்டியில் விஸ்வநாதனுக்கு ஈடுகொடுத்து ஓடி வரமுடியாமல் மிகவே பின்தங்கிப் பின்னர் ஒதுக்கப்பட்டவராகவே மாறிப்போனார் ராமமூர்த்தி. திரைப்பட வணிகச் சூழல்களுக்கு அப்பாற்பட்டு தம்முடைய இசைஞானத் திறமையால் தனியரசராய் அதற்குப் பின்னரும் இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத சக்தியாய் ஆட்சி செலுத்தினார் விஸ்வநாதன். பல ஆயிரம் பாடல்கள் அவரது இசைப்பிரவாகத்திலிருந்து புறப்பட்டு இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தியாய் இருந்து எழுப்பிய இசைக்கோயிலுக்கு இணையான இன்னொன்று கிடையாது.
அவர்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்த இசைக்கோர்வைகளில் யாருடைய பங்கு அதிகம் என்பதான ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் அந்த இருவருமாகச் சேர்ந்திருந்து உருவாக்கியபோது கிடைத்த அந்த ஒருங்கிணைப்பு, அந்தப் பக்குவம், அவர்களில் இருந்த அந்தப் புரிந்துணர்வின் பலன், அந்த ஒருங்கிசையின் வெளிப்பாடு, இரண்டுபேரின் திறமையும் எந்த அளவுக்குச் சேர வேண்டுமோ அந்தக் கலவையின் சரியான சதவிகிதம் இவையாவும் ஒரு அற்புதப் படைப்பின் ரகசியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த இருவரின் பங்களிப்பில் உருவான பாடல்கள்தாம் இன்றைக்கும் தமிழ்ப்பாடல்களின் அடையாளமாக இருந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்படங்களின் உன்னத அடையாளங்களாகவும் மிகப்பெரும் சிகரங்களாகவும் இருந்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இவர்களின் மிகப்பிரபலமான பாடல்கள் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே இந்த மண்ணில் நிலைத்து நிற்கப்போகும் சாகாவரம் பெற்றவை. அந்தப் பாடல்களில் பெரும்பாலானவற்றை உருவாக்கிய படைப்பாளிகள் இவர்கள்தாம்.
இவர்களின் காலத்திய பாடல்கள்தாம் தமிழில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள் என்பதற்கான அடையாளங்கள் ஆரம்பமுதலே கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு படத்தில் வரும் பாடல்களில் ஏதாவது ஒரு பாடல் பிரபலமாவதற்கே என்னென்னமோ பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு பாடல் பிரபலமாகிவிட்டால் வேறு என்னென்னமோ செய்து அதனைக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களையும் இனிமையாகவும் பிரபலமாகவும் உருவாக்கும் அதிசயம் அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் இவர்கள் அதனைச் செய்திருக்கிறார்கள். ஒரு படம் இரண்டு படத்தில் அல்ல; சுமார் நூறு படங்களிலாவது அவர்களின் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த அபூர்வ சாதனை அந்தக் காலத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமல்ல ; சில இந்திப் படங்களிலும் அன்றைக்கு இருந்த சில இந்தி இசையமைப்பாளர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு படத்தின் அத்தனைப் பாடல்களும் இனிமையாகவும் பிரபலமாகவும் இருக்கும் இந்தச் சாதனைகளை இன்றைய இசையமைப்பாளர்களுக்குப் பொருத்திப் பார்த்தோமானால் அவர்கள் இசையமைத்த படங்களில் ஒரு பத்துப் படங்களோ அல்லது இன்னும் இரண்டொன்றோ தேறலாம். நூற்றுக் கணக்கான படங்கள் விஸ்வநாதனுக்குப் பின்னர் யாருக்குமே தேறாது.
இவர்களின் இசைவெற்றிகளுக்கு கண்ணதாசன் பெருமளவு காரணமாக இருந்ததுபோலவே பின்னணிப் பாடகர்கள் சிலரும் காரணமாக இருந்தனர். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, சீர்காழிகோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி ஆகியோரின் பல்வேறுபட்ட திறமைகள் பட்டைத் தீட்டப்பட்டுப் பிரகாசப்படுத்தப்பட்டன. வேறு பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கத்தை 'செந்தமிழ்த் தேன் மொழியாள்' மூலமும் 'எங்கள் திராவிடப்பொன்னாடே' மூலமும் வேறொரு தளத்திற்குக் கொண்டுவந்தனர். என்றைக்கும் மறக்கமுடியாத இன்னொரு பாடல்தளம் சந்திரபாபுவுடை யது. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு இன்னொரு மாற்றுக்குரல் இதுவரையிலும் வரவில்லை. பின்னணிப் பாடகர்களைப் பொறுத்தவரையில் யாரை எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களெல்லாம் இன்றைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் சேர்த்தே இவர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சினிமாவின் பொதுவான நியதியே பெரிய படங்களுக்குச் சிறப்பாகச் செயல்படுவது என்பதுதான்.அந்தக் கணக்குப்படி பார்த்தால் சிவாஜி படங்கள், எம்.ஜி.ஆர். படங்கள் மற்றும் வேறுசில பெரிய படங்களுக்கு மட்டும்தான் சிறப்பான இசைக்கோர்வை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரட்டையரின் பட்டியலைப் பார்த்தோமானால் இவர்கள் ஈடுபடும் எல்லாப்படங்களுக்குமே தங்களின் திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான இசையையே வெளிப்படுத்தும் தொழில் நேர்மை இவர்களுக்கு இருந்திருக்கிறது.அதனால்தான் அவ்வளவு வெற்றிபெறாத பல படங்களின் பாடல்கள்கூட இன்றைக்கும் மக்கள் மத்தியில் புழங்கும் பாடல்களாக இருந்துவருகின்றன.
இவர்களின் அன்றைய பாடல்களைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள், ஜெமினிகணேசன் பாடல்கள் , பீம்சிங் பாடல்கள், ஸ்ரீதர் பாடல்கள் என்று தனித்தனியாகப் பிரித்து இனம் காணக்கூடிய பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவையல்லாமல் கண்ணதாசனின் படைப்புக்கள் எல்லாருக்கும் பொதுவானவை. அவற்றில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தெய்வப் பாடல்கள் உறவு பற்றிய பாடல்கள்,குடும்பம் பற்றிய பாடல்கள், பாசத்தைச் சொல்லும் பாடல்கள் என்று வாழ்க்கையின் அத்தனைக் கட்டங்களுக்குமான பாடல்கள் அற்புதச் சித்திரங்களாகச் செதுக்கப்பட்டு என்றென்றைக்குமான பாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களைத் தவிர்த்து இவர்களின் இசையில் மிகப்பிரபலமான பாடல்களாகவும் ,அதே சமயத்தில் மிகப் பிரமாதமான பாடல்களாகவும் அமைந்த சில படங்களின் பட்டியலைப் பார்ப்போம். மாலையிட்ட மங்கை, அமுதவல்லி, ஆளுக்கொரு வீடு, கவலையில்லாத மனிதன், பாக்கியலக்ஷ்மி, மணப்பந்தல், காத்திருந்த கண்கள், சுமைதாங்கி, வீரத்திருமகன், இது சத்தியம், கற்பகம், இதயத்தில்நீ, மணிஓசை, கலைக்கோயில், கறுப்புப் பணம், சர்வர் சுந்தரம், வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக்கிளி, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்று பட்டியல் நீள்கிறது.இவற்றில் ஸ்ரீதரின் மற்ற படங்களையும் சேர்த்தால் பட்டியல் எங்கேயோ போய் நிற்கும்.
1952-ல் பணம் படத்தின் மூலம் ஆரம்பித்த இவர்களின் பயணம் பதின்மூன்று ஆண்டுகள் 1965-ல் வெளிவந்த ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் வரையிலும் கொடிகட்டிப் பறந்து முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு குழந்தையும் தெய்வமும் படத்தின் மூலம் தமது தனிப்பட்ட பயணத்தை ஆரம்பிக்கிறார் எம். எஸ்.விஸ்வநாதன். அவருடைய நீண்ட பயணம் இன்னொரு இருபது ஆண்டுகளுக்கான சாதனையாக விரிகிறது.
இத்தனை ஆண்டுகளின் சாதனையில் மக்கள் மனதில் என்றென்றைக்கும் பசுமையாய் நிற்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர்கள் அளித்திருக்கிறார்கள். இந்தப் பாடல்கள் யாவும் வெறும் பட்டியல் போடுவதற்குப் பயன்படுபவையோ அல்லது புள்ளிவிவரம் காட்டுவதற்குப் பயன்படுபவையோ அல்ல. மாறாக மக்களிடையே இத்தனை ஆண்டுக் காலமும் புழக்கத்தில் இருந்து, இன்னமும் பல நூறு ஆண்டுக்காலமும் புழக்கத்தில் இருக்கப்போகும் பாடல்கள். செந்தமிழ்த் தேன்மொழியாள், அச்சம் என்பது மடமையடா, காலங்களில் அவள் வசந்தம், அத்தான் என்னத்தான், அத்தைமடி மெத்தையடி, போனால் போகட்டும் போடா, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மலர்ந்தும் மலராத பாதிமலர்போல, சட்டி சுட்டதடா கைவிட்டதடா, ஆறுமனமே ஆறு, வீடுவரை உறவு வீதிவரை மனைவி, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, பார்த்த ஞாபகம் இல்லையோ,பாலிருக்கும் பழமிருக்கும், கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், மயக்கமா கலக்கமா, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால், பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள், கட்டோடு குழலாட ஆட, மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள், நானொரு குழந்தை நீயொரு குழந்தை, உள்ளத்தில் நல்ல உள்ளம்....என்றிப்படி எத்தனைப் பாடல்களை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஒரு பட்டியலை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் போடமுடியாது. இவர்களுடைய காலத்திலேயே கே.வி.மகாதேவன் உட்பட இன்னமும் சில இசையமைப்பாளர்களின் சிரஞ்சீவித் தன்மைப் பெற்ற பாடல்கள் உள்ளன, ஆனால் அவை யாவும் எண்ணிக்கையில் குறைவே.' தொட்டதெல்லாம் பொன்னாகும்' என்பார்களே, அதுபோல விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கண்ணதாசன் மூவரும் தொட்டதெல்லாம் பொன்னான காலம் அது. இப்படிப்பட்ட பொற்காலங்கள் ஏதாவது ஒருமுறைதான் வரும்.தமிழுக்கு வந்து முடிந்துவிட்டது. தமிழ்ப்படங்களைப் பற்றிய கிராஃப் ஒன்று போட்டோமானால் அம்புக்குறி உச்சத்தைத் தொட்டு நிற்கும் காலகட்டம் அது. நல்ல படங்கள், நல்ல இயக்குநர்கள், நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல இசை, நல்ல பாடல்கள் என்று காலத்தைக்கடந்து நெஞ்சில் நிறைந்திருக்கும் திரைப்படங்கள் வந்த காலம் அது. அதனால்தான் அந்தக் காலத்தில் திரையில் பரிணமித்த எல்லாக் கலைஞர்களுமே - சிவாஜி எம்.ஜி.ஆர் முதல் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் துவங்கி பீம்சிங், ஸ்ரீதர் என்று தொடர்ந்து கலைஞர் கருணாநிதி கவிஞர் கண்ணதாசன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி , டி.எம்.சௌந்தர ராஜன் ,பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி ,சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா,நாகேஷ்,மனோரமா என்று இன்றைக்கும் வரலாறு படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைக்குத் திறமைசாலிகள் இல்லையா, இன்றைய சாதனையாளர்கள் இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு துறைகளிலும் வரும் திறமையாளர்கள் காலத்துக்கு ஏற்றாற்போல் வெற்றிக் கொடிகளை நாட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் காலத்தைக்கடந்து நிற்பார்களா என்பதைச் சொல்வதற்கில்லை. நாட்டில் எத்தனையோ மகால்கள் வந்திருக்கலாம். ஆனால் தாஜ்மஹாலுக்கு இன்னொன்று வரவில்லை. வரவும்போவதில்லை. எத்தனையோ சோழ மன்னர்கள் இருந்திருக்கலாம். ஆனால் ராஜராஜ சோழனுக்கு இன்னொருவன் ஈடாக முடியாது. அதுபோன்றதொரு காலகட்டம்தான் ஐம்பதுகளில் துவங்கி எழுபதுகளில் முடிந்த காலகட்டம். அது திரும்பி வராது.
இளையராஜாவின் திறமைகளையும், ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளையும் மனமுவந்து ஒப்புக்கொள்வோம். ஆனால் அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் இடங்களை அவரவர்களுக்கு விட்டுவிடுவோம். இன்றைய இளைஞர்களுக்கு இர்விங் வாலசைப் பிடித்திருக்கலாம். ஹாரிபாட்டரின் புத்தக விற்பனை உலகின் எல்லா எழுத்தாளர்களையும் மிஞ்சினதாக இருக்கலாம். அதற்காக யாரும் இவர்கள் இருவரும் ஷேக்ஸ்பியரை மிஞ்சிவிட்டார்கள் என்று எந்தப் பைத்தியமும் சொல்லிக்கொண்டு அலைவதில்லை. தமிழில் திரைஇசையில் சாதித்தவர்களுக்கான இடங்களை வணக்கத்துடன் அவர்களுக்குத் தந்துவிடு
வோம். இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் எந்த இடம் உள்ளதோ அதனை இவர்களுக்குத் தந்து இவர்களைக் கொண்டாடுவோம் . இந்த இடத்தில் இளையராஜாவைப் பற்றி இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழில் நாட்டுப்புற இசையை முதன்முதலில் கொண்டுவந்தவரே இளையராஜாதான் என்று பலபேர் தவறுதலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐயா, உங்களின் தவறான கருத்துக்களை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் நாட்டுப்புற இசையை குளங்களாக ஏரிகளாகக்கூட அல்ல; பெரிய பெரிய அணைக்கட்டுக்களாகவே கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் கே.வி. மகாதேவன். மதகுகளைத் திறந்து உங்கள் கவனத்தை அங்கே கொஞ்சம் திருப்புங்கள். இளையராஜாவே அடிக்கடி 'வாழையடி வாழையாக வந்த ' என்ற சொற்பிரயோகத்தை உபயோகிப்பார். அந்த அடிப்படையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, அதைத் தொடர்ந்த விஸ்வநாதனின் தனி ராஜாங்கம் , அதே சமயத்தில் இன்னொரு ராஜபாட்டையில் வந்துகொண்டிருந்த கே.வி.மகாதேவன் இவர்களை ஒட்டி , இவர்கள் வந்த பாதையில் வந்து வெற்றிபெற்றவர்தான் இளையராஜாவே தவிர, தமிழ் திரைப்பட இசையே இளையராஜாவிலிருந்துதான் துவங்குகிறது என்று தவறான கற்பி தங்களை யாரும் கற்பித்துக்கொள்ள வேண்டாம். அப்புறம் எல்லாக்கணக்குகளையுமே தப்பும் தவறுமாகவே போடவேண்டியிருக்கும். தமிழின் முதல் பிரம்மாண்டப் படத்தைத் தயாரித்தவரே செல்வராகவன்தான் என்று சொல்ல வேண்டியிருக்கும. எஸ்.எஸ்.வாசனை யெல்லாம் சௌகரியமாக விட்டுவிடலாம். மூன்று நான்கு வருடங்களாகவே மிகவும் பிரபலமான பாடல்களை எழுதுபவர் நா.முத்துக்குமார். எனவே, நா. முத்துக்குமாரிலிருந்து
தான் தமிழ்ப்பாடல்களின் வரலாறு ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை , வாலி ஆகியோரையெல்லாம் விட்டுவிடலாம். விக்ரமும் சூர்யாவும் சமீப காலத்தில் மிகுதியான திறமையை நடிப்பின் மூலம் நிரூபித்தவர்கள். எனவே இப்படிப்பட்ட நடிகர்கள் தமிழுக்கு இதுதான் முதல் என்று கூறிவிடலாம். சிவாஜி, கமலையெல்லாம் கண்டுகொள்ளவே வேண்டாம்........எப்படி சௌகரியம்? இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வாய்ப்பு அவரது வருகையின் சமயத்தில் தொழிற்புரட்சியால் ஏற்பட்ட டேப் ரிகார்டர்களின் வளர்ச்சி. வீடுகளிலும் கார்களிலும் டேப்ரிகார்டர்கள் புற்றீசல்போல் அதிகரிக்கத்தொடங்க , காசெட்டுகளாகப் புதிய பாடல்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். பழைய பாடல்களில் இருந்த இனிமையை விடவும் புதிய பாடல்களின் ரிகார்டிங்கில் இருந்துவந்த புதிய ஒலிகள் வசீகரிப்பவையாய் இருந்தன. மோனோவிலிருந்து ஸ்டீரியோவுக்கு ஒலிகள் மாறியபோது ஸ்டீரியோ ரிகார்டிங்குகளில் வெளிவந்த பாடல்கள் இளையராஜாவுடையவை. இந்த தொழிற்புரட்சியும் இளையராஜா அதிகமாகப் பரவ ஒரு காரணம்.
இதே காரணத்தை நாம் ரகுமானுக்கும் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. இளையராஜா பாடல்கள் மிக வேகமாய்ப் பரவியதற்கு காசெட்டுகளும் ஸ்டீரியோவும் பெருமளவு காரணம் என்பதுபோலவே ரகுமானின் பாடல்கள் அதைவிட அசுர வேகத்தில் பரவியதற்கு இன்றைக்கிருக்கும் விஞ்ஞானத் தொழிற்புரட்சிதான் மிகப்பெரிய காரணம். அன்றைக்கு டேப்ரிகார்டர்களும் காசெட்டுகளும் என்றால் இன்றைக்கு ஹோம் தியேட்டர், சிடிக்கள் ,ஐபாட் ,டிஜிட்டல் பதிவுகள் இன்டர்நெட் , செல்போனில் மியூசிக் என்று விஞ்ஞான வளர்ச்சி எங்கேயோ போய் நிற்கிறது. இன்னமும் வாஷிங்டனில் பாடல் பதிவு முடிந்தது என்றதும் நம் காதோரம் இருக்கும் ஏதாவதொரு தலைமுடியில் பொருத்தப்பட்டிருக்கும் மயிரிழையைவிட மெல்லிய ரிகார்டரில் பாடல் பதிந்து நம் காதுகளில் அதுவாகவே ஒலிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த அசுர விஞ்ஞான யுகத்துக்கு இசைமூலம் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் இசையமைப்பாளராகத்தான் ரகுமானைப் பார்க்க வேண்டும்.
இந்த தொழிற்புரட்சிகளைப் பற்றிக் கவலையே படாமல் அந்த இரட்டையர் போட்ட நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பாடல்கள் நாள்தோறும் உலகம் பூராவும் தினமும் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன என்பதுதான் எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய ஒரு விஷயம்! இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னம் எத்தனை லட்சக்கணக்கான பேர் அந்தக் காலத்துப் பழைய பாடல்களைக் கேட்கிறார்கள் தெரியுமா? அத்தனைச் சேனல்களும் அமுதகானம் என்றும் தேனருவி என்றும் தேன்கிண்ணம் என்றும் தேனும் பாலும் என்றும் விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பழைய பாடல்களைத்தானே ஒலியும் ஒளியுமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்........

தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிக்குப் பிறகு இளையராஜாதான் என்று சொல்வதும் வேண்டாம். இளையராஜா ஒன்றுமே இல்லை, ரகுமானுக்கு இணை இங்கே யாருமில்லை என்று சொல்வதும் வேண்டாம். நடந்து முடிந்த கால்பந்தாட்டத்தில் கோல் போட்டு உலக மக்களைக் கவர்ந்தவர் ரொனால்டோவாக இருக்கலாம். அவருக்கு முன்னேயே பீலேக்களும் மாரடோனாக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

************************