இலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன்
பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர்
நிகழ்ச்சி அவர்களால் அடிக்கடி சொல்லப்பட்ட ‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்’
அவர்கள் விருப்பப்படியே பிரமாண்டமாக நடைபெற்று முடிவுக்கும் வந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியின் இத்தனை வரவேற்புக்கும் காரணம் இந்த நிகழ்ச்சியின்
மூலம் திரையிசையில் விரும்பிய பாடல்களை, அல்லது
முக்கியமான பாடல்களை மீண்டும் கேட்கிறோம் என்பதையும் தாண்டி- எது சிறந்த பாடல், யார்
சிறந்த பாடகர் என்பதை நிர்ணயம் செய்வதில் தாங்களும் ஒரு ஜட்ஜாக இருக்கிறோம் என்னும்
மனோபாவமே என்பதுதான் முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.
அதனால்தான் ஓட்டுப்போடுவதற்குத் தாங்கள் பணம் இழக்கிறோம் என்பது
தெரிந்தும் கோடிக்கணக்கான மக்கள் அதுகுறித்துக் கவலைப்படாமல் ஓட்டுக்களையும் போட்டு
தங்கள் ஆர்வத்தையும் ஆதரவையும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்து வருகிறார்கள்.
“இந்த நிகழ்ச்சியில் ஓட்டுப்போடுவதற்குப் பணம் தந்தாகவேண்டுமே இது சரிதானா?” என்று கேட்டதற்கு
இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான நண்பர் ஒருவர் “அதிலென்ன தப்பு இருக்கிறது?
படங்களைப்
பார்க்கத் தியேட்டர்களுக்குப் போகும்போது காசு கொடுத்து டிக்கெட் வாங்குவதில்லையா?
அதுபோல்தான் இது. அதுவும் ஒரு ஓட்டுக்கு வெறும் ஆறு ரூபாய்தானே? அதுவுமின்றி சின்னக்குழந்தைகளுக்காகத்தானே
செலவு செய்கிறோம்? அந்தக் குழந்தைகளின் திறமைக்கு முன்னால் இதெல்லாம் வெறும் தூசு”
என்றார்.
ஆக சரியாகத்தான் நூல் பிடித்திருக்கிறார்கள் விஜய் டிவிக்காரர்கள்……………!
ஸ்பூர்த்திக்கு முதல் பரிசைக் கொடுத்ததன் மூலம் முடிவுகளுக்குப்
பின்னால் எழும்பப் போகும் சர்ச்சைகளை விஜய்டிவி வெகுவாகத் தவிர்த்திருக்கிறது என்று
சொல்லலாம்.
யாராலும் குறை சொல்லமுடியாத ஒரு முடிவு இது.
அந்தச் சின்ன உடம்பிற்குள் அத்தனைத் திறமை. எவ்வளவு சிரமமான
பாடல்களையும், ஓரளவு பயிற்சிபெற்ற பாடகர்களால் சுலபமாகப் பாடமுடியாத பாடல்களையும் நிகழ்ச்சி
முழுவதும் சர்வசாதாரணமாகப் பாடி அசத்திக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.
அதுவும் ஏற்ற இறக்கங்கள், கமகங்கள், பிர்காக்கள் என்று கர்நாடக
சங்கீதத்தில் வரக்கூடிய சங்கதிகளையும், ஸ்வரங்களையும் கலந்தடித்து அந்தக் குழந்தை பண்ணிக்கொண்டிருந்தது
அதகளம், அட்டகாசம்.
நடுவர்களாக வந்த பிரபல பாடகர்களும் சரி, இசையமைப்பாளர்களும்
சரி அந்தச் சிறுமியின் திறமையை வெளிப்படையாகவே புகழ்ந்தார்கள், பாராட்டினார்கள், வியந்தார்கள்.
இதென்ன குழந்தை மேதையா என்று அதிசயித்தார்கள்.
அவள் பாடிமுடித்ததும் நம்ப முடியாத பலபேர் அந்தக் குழந்தையிடம்
“உனக்கு என்ன வயசாகுதம்மா?” என்று கேட்டுக்கொண்டார்கள். இத்தனைப் பாராட்டுக்களையும்
நிகழ்ச்சிகளின் தொடரிலேயே வாங்கிக்குவித்த அந்தப் பெண்ணுக்கு முதல் பரிசு என்றதும்
‘சரியான தீர்ப்புத்தான்’ என்று நிம்மதியுடன் தூங்கச் சென்றவர்கள் ஏராளம்.
இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். அந்தச் சிறுமி பெங்களூரைச்
சேர்ந்தவள்.
தாய்மொழி கன்னடம். தமிழில் சரியாகப் பேசக்கூடத் தெரியாது. ஆனாலும் அட்சர
சுத்தம் என்பார்களே அதுபோல் அத்தனைத் துல்லியமாய்த் தமிழை உச்சரித்தாள். அதுவும் கேவிமகாதேவனால்
இசையமைப்பக்கப்பட்ட பல கவியரசரின் அழகிய தமிழ்ப் பாடல்கள் அவளுடைய கொஞ்சும் குரலில்
அத்தனை வசீகரமாய் வெளிப்பட்டன.
மீதிப் பரிசுகளையும் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை.
ஆறு பேருக்குமே முதல் பரிசுகளைக் கொடுத்திருக்க வேண்டும் என்று
வேண்டுமானால் சொல்லலாம்.
எப்படிப் பார்த்தாலும் மூன்று பேரை ஒதுக்கியே ஆகவேண்டும் என்ற
கட்டாயம். நீக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம். வேறுவழியில்லாமல்தான் அதைச் செய்திருக்கிறார்கள்
என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரே ஆறுதல் அந்த மூன்று பேருக்கும்கூட ஆளுக்கு
ஐந்துலட்சம் என்று பரிசுப்பொருள் தந்திருக்கிறார்கள்.
என்னவொன்று, சம்பிரதாயத்துக்காகவாவது இறுதி நிகழ்ச்சிவரை வந்த
பரத் என்ற அந்தச் சிறுவனுக்கு ஏதாவது விசேஷப் பரிசு அறிவித்திருக்கலாம். ஏனென்றால்
அந்தப் பையனை இரண்டு காம்பியர் பெண்களும் ஆரம்பத்திலிருந்தே என்னென்னவோ சொல்லி உசுப்பேற்றிக்கொண்டே
இருந்தனர். ‘நீ தாண்டா இறுதிப் பரிசை வெல்லப்போறே’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற
எல்லா வார்த்தைகளையும் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.
அந்தப் பையனும் அபாரத் திறமையுடன் எல்லாப் பாடல்களையும் பாடிக்கொண்டிருந்தான்.
இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் மற்றவர்களைவிட அந்தப் பையனின் முகத்தில் ஏமாற்றம்
அப்பட்டமாய்த் தெரிந்தது.
இத்தனைப் பெரிய நிகழ்ச்சியின் இறுதிநாள் இன்னமும் பெரிய பிரம்மாண்டத்துடன்
இருந்திருக்கலாம். நிகழ்ச்சியின் வீச்சை வைத்துப் பார்க்கும்போது நிறைவுநாள் கூட்டம்
குறைவாகத்தான் இருந்தது.
இன்னொரு குறை பங்கேற்ற பிரபலங்கள்.
எல்லாப் பிரபலங்களையும் ஏற்கெனவே நடைபெற்ற வாராந்தர நிகழ்ச்சிகளுக்கு
அழைத்துவிட்டு இறுதிநாள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்கள் கிடைக்காமல் அவஸ்தைப் பட்டிருக்கிறார்கள்
என்பது புரிந்தது. எம்எஸ்வி, ஏ.ஆர்.ரகுமான், சுசீலா, ஜானகி, பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம்,
தேவா, டி.ராஜேந்தர், இமான் என்று எல்லாரையும் ஏற்கெனவே அழைத்துவிட்டுக் கடைசி நாளுக்குப்
பிரபலங்கள் கிடைக்காமல் சங்கர் மகாதேவனையும், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் என்று
மற்றவர்களையும் அழைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
நிகழ்ச்சியின் பெரிய குறை மேக்கப் என்ற ஒரு கோரத்தைப் போட்டு
பாடிய அத்தனைக் குழந்தைகளையும் ஏறக்குறைய குமரிப்பெண்கள் போலத் தோன்றச் செய்திருந்தது.
சிறுமிகள், குழந்தைகள் என்ற தோற்றமே தெரியாமல் அடித்திருந்தார்கள்.
இன்னொன்று ‘இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவில் ஆறுகோடி
வாக்குகள் வந்திருக்கின்றன’ என்று அறிவித்தார்கள். வேண்டுமென்றே அப்படி அறிவித்துவிட்டுப்
பிறகு ‘இல்லை இல்லை ஒரு கோடியே சொச்சம் வாக்குகள்தாம். ஆறு கோடி என்பது அந்தக் காம்பியர்
ஆசைப்பட்ட வாக்குகள்’ என்று திருத்திக்கொண்டார்கள்.
காம்பியர் பத்து கோடிக்கு ஆசைப்பட மாட்டாரா என்ன?
இதிலிருந்த ‘அரசியல்’ என்னவென்பது புரியவில்லை.
.
இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கும்
முக்கியமான பாடம் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. இது இணைய ரசிகர்களுக்கு என்பதால் இதனை மறுபடியும்
சொல்ல நேர்கிறது. சென்ற பதிவிலேயே லேசாகச் சுட்டிக்காட்டியிருந்த அந்த முக்கியமான விஷயம்
இந்த இறுதி நாளிலும் உறுதிசெய்யப் பட்டிருக்கிறது.
அதாவது, ‘இளையராஜா இல்லாமல் இசை சம்பந்தப்பட்ட எதுவுமே இங்கே
நகராது. இந்தக் காலகட்டத்தின் இசைக்கடவுள் இளையராஜாதான்’ என்ற நம்பிக்கை இங்கே பலபேருக்கு
இருக்கிறது.
இளையராஜா தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் திறமையான இசையமைப்பாளர்தான். தமிழ்த்திரை இசையின் சகாப்தத்தில் அவருக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, அதற்குப் பின்னர் தனியாக எம்எஸ்வி, கே.வி.மகாதேவன், ஏ.எம்.ராஜா, சுதர்சனம் வரிசையில் வருகிறவர் இளையராஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை.
அதுபோலவே இளையராஜாவைத் தொடர்ந்து வருகிறவர்களாக ஏ.ஆர்.ரகுமான்,
வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
ஆனால் இம்மாதிரியான எந்தவித முக்கியத்துவமும் யாருக்குமே அளிக்கப்படாமல், இசை என்றாலேயே இளையராஜா மட்டும்தான் என்ற தவறான
பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது.
அதற்கான முயற்சிகள் மிகப்பெரும் அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் இங்கே எழுதப்படுகின்றன.
‘நாங்கள் எங்களுக்குப் பிடித்தவரை எழுதுகிறோம்’ என்ற பெயரில்
பொதுவெளியில் தவறான பிம்பத்தைக் கட்டுகிறார்கள். ‘நாங்கள் மற்ற யாரையும் குறை சொல்லுவதில்லையே’.
என்று சமாதானம் வேறு சொல்கிறார்கள்.
குடிமக்கள் நிறைந்திருக்கும் தெருவில் ஒற்றை வீட்டில் மட்டும்
‘இங்கே இருக்கும் பெண்டிர் அனைவரும் பத்தினிகள்’ என்று போர்டு போட்டுவிட்டு, யாரும்
தட்டிக்கேட்டால் ‘நாங்கள் வேறு யாரையும் குறை சொல்லவில்லையே. எங்கள் வீட்டில் உள்ளவரைத்தானே
நாங்கள் சொல்லிக்கொள்ளுகிறோம்’ என்று அடாவடி பேசுகிற வாதம்தான் இது.
ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சி நெடுகிலும் அவ்வப்போதாவது சில இளையராஜா
பாடல்கள் பாடப்பட்டன. ஆனால் இறுதி நிகழ்வில் ஆறுபேர்கள் கலந்துகொண்ட போட்டியில் ஆளுக்கு
இரண்டு பாடல்கள் என்று பன்னிரண்டு பாடல்கள்.
அதில் ஒரேயொரு பாடல்தான் இளையராஜா இசையமைத்த பாடல்.
மற்ற அத்தனையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தவை.
இவையெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று சம்பந்தப்பட்டவர்கள்
யோசிக்கவேண்டும்.
ஒரு இசையமைப்பாளரை மட்டுமே சுற்றிக்கொண்டு இந்த உலகம் இல்லை
என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படி இல்லை எனில் இத்தனைப் பெரிய, அதுவும் பல கோடி மக்கள்
சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி எப்படி இத்தனை வெற்றிகரமாக சாத்தியப்படும்?
திரை இசை என்றால், அதிலும் தமிழ் இசை என்றால் நிறைய ஜாம்பவான்கள்
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்த்திரை இசை என்பதே பல முன்னோர்களால் வார்த்தெடுக்கப்பட்டு,
வளர்க்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிற ஒரு இசை வேள்வி
என்பதே இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்ற பாடம் என்றே கருதவேண்டியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி இன்னொரு கற்பிதத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறது.
அதாவது ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் நிலைக்காதவை. அவற்றை ஒருமுறைக்குமேல்
திரும்பத் திரும்ப கேட்க முடியாது என்ற வாதமும் இணையத்தில் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே
அடிக்கடி சிலரால் அதுவும், இ.ரா ரசிகர்களால் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான்
பாடல்களே.
அதிலும் குறிப்பாக இறுதிநாளில் பாடப்பட்ட பல பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான்
இசைத்தவையே.
கேட்கின்ற அத்தனைப்பேரையும் உணர்ச்சிவசப்பட வைக்கின்ற அளவிலான பாடல்கள்
என்பதாலேயே அவை இறுதி நிகழ்ச்சியில் பாடப்பட்டன.
எந்த உணர்வை ஊட்ட வேண்டுமோ அதற்கு மேலேயே ஊட்டுவதாகத்தான் அந்தப்
பாடல்கள் அமைந்திருந்தன. உணர்ச்சித் ததும்ப அமைந்திருந்த அந்தப் பாடல்கள் உணர்ச்சித்
ததும்ப பாடப்பட்டன.
ஆக, சிலர் ‘ஆசைப்படும்’ இந்தக் கற்பிதம்- ‘ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்
ஒருமுறைக்குமேல் கேட்க முடியாது’ என்பது- சிதறுத்தேங்காயாக உடைந்திருக்கிறது. தேங்காய்கூடப்
பெரிய பெரியத் துண்டுகளாகத்தான் உடையும். இந்தக் கற்பிதமோ கண்ணாடித் துண்டுகள்போல்
நொறுங்கிச் சிதறியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வெறும் பிரமாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக
இருந்தாலும் இவற்றில் வேறு சில அம்சங்களும் பொதிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை. சார்லஸ் என்ற ஒரு இசை ரசிகர் குறிப்பிடுவதுபோல ‘
குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி. இசையைப் பற்றி தவறான
கண்ணோட்டம் மாற்றும் நிகழ்ச்சி. பாடுவது எளிதான காரியமல்ல என்று உணர்த்தும் நிகழ்ச்சி.
திறமைக்கு சான்று பகரும் நிகழ்ச்சி. பாடல் உருவான விதம், பாடியவரின் பெருமை, இசையமைப்பாளரின்
திறமை போன்ற பல விஷயங்கள் அங்கே பகிரப்படுகின்றன. ஒரு பாடல் என்றால் என்னென்ன விஷயங்கள்
கவனிக்கப்பட வேண்டும் என்ற பாடம் அங்கு நடத்தப்படுகிறது’- என்கிறார்.
இது அவ்வளவும் உண்மைதான். ஆனால் இப்படிச் சொல்லும் அந்த அன்பர்
இ.ராவின் ரசிகர். ஆனால் அவர் சொன்ன அத்தனை
விஷயங்களும் அவருடைய அபிமான இசையமைப்பாளரின் பாடலே இல்லாமல்கூட அங்கு உணர்த்தப்பட்டிருக்கின்றன
என்பதுதான் இங்கே முக்கியம்.
காலம் என்பது கொஞ்சம் கொடுமையானதுதான். யாரைவேண்டுமானாலும் தொப்பென்று
கீழே போட்டுவிட்டு அதுபாட்டுக்குத் தன் திசையில் பயணம் செய்துகொண்டே இருக்கும்.
இதனைப் புரிந்துகொண்டால் அதி தீவிர ரசிக மனப்பான்மையைப் பிடிவாதமாகப்
பிடித்துக்கொண்டிருப்பதிலிருந்து வெளியேறிவிடலாம்.