உண்மையைச் சொல்லப்போனால்
ஆரம்ப நாட்களில் வாலியை சுத்தமாகப் பிடிக்காது. நானெல்லாம் சிறு வயதிலிருந்தே எப்படி
நடிகர் திலகத்தின் ரசிகனோ அதே போல அதே அளவுக்குக் கவிஞர் கண்ணதாசனுக்கும் ரசிகன். பொதுவாகவே
இம்மாதிரி பிரபலங்களுக்கு எப்போதுமே இருக்கும் அதி தீவிர ரசிக மனப்பான்மையுடன் கூடிய
கூட்டத்திற்கு இருக்கும் வெறித்தனமான என்னவென்றே தெரியாத ஒரு உணர்வு எனக்குள்ளும் இருந்ததாகத்
தெரியவில்லை. ஏனெனில் சிவாஜியின் எல்லாப் படங்களையும் பார்ப்பது, சிவாஜியின் படங்கள்வரும்
பத்திரிகைகளையெல்லாம் சேர்த்துவைத்துக்கொள்வது, படம் ஓடும் தியேட்டர்கள் முன்னால் சென்று
கூடுவது இப்படிப்பட்ட ரசிகத்தன்மை எல்லாம் கிடையாது. அவருடைய அற்புதமான நடிப்பாற்றல்,
ஏற்ற இறக்கங்களுடன்கூடிய உணர்ச்சிமயமான வசன உச்சரிப்பு, பாடல்களுக்கு அவர் காட்டும்
முகபாவங்கள் என்று இப்படிப்பட்ட விஷயங்கள் சிறுவயதிலேயே அவர்பால் ஒருவித மரியாதையை
ஏற்படுத்தியிருந்தன. ஆகவே இது மரியாதையுடன் கூடிய ரசிகமனப்பான்மை என்று வேண்டுமானால்
சொல்லலாம்.
அதுபோலவே கண்ணதாசனின் பாடல்கள்.
அந்த நாட்களில் தெருவெல்லாம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’
பாடலும் சரி; ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலும் சரி, அந்த நாட்களில் அந்தப் பாடலின்
தமிழ் வரிகள் எழுப்பிய இனிமையான உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பதற்கில்லை. அதே ‘மாலையிட்ட
மங்கை’ படத்தில் வரும் ‘திங்கள்முடி சூடும் மலை; தென்றல் விளையாடும் மலை’ பாடலும் பாடல்
என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உணர்வையே தோற்றுவித்திருந்தன.
இதற்கடுத்து
எனக்கு சற்றே விவரம் தெரிந்து நான் பார்த்த படமாக ‘பாவமன்னிப்பு’ படத்தைச் சொல்லலாம்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் அத்தான் என்அத்தான், காலங்களில் அவள் வசந்தம்,
சிலர்சிரிப்பார் சிலர் அழுவார், வந்தநாள்முதல் இந்தநாள் வரை, பாலிருக்கும் பழமிருக்கும்
போன்ற பாடல்கள் அப்படியே மனதைக் கொள்ளைகொண்டு போயின. அந்த நாட்களில் இந்தப் பாடல்கள்
குறித்து ஏதோ போட்டி வேறு வைத்திருந்தார்கள் என்று நினைவு.
தினத்தந்தியில் போட்டி பற்றி
தினசரி விளம்பரங்கள் வந்தபடி இருக்கும். அந்தப் போட்டியைப் பற்றியும் அந்தப் பாடல்கள்
குறித்தும் என்னுடைய அப்பாவும் அவரது நண்பர்களும் என்னென்னவோ விவாதித்துக்கொண்டிருப்பார்கள்.
என்ன விவாதம் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அந்த சமயத்தில் நாள்தோறும் வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த
இந்தப் பாடல்களின் வரிகளில் உள்ள செறிவும் பாடல்களின் இனிமையும் சந்தேகத்துக்கிடமில்லாமல்
நாம் ரசிக்க வேண்டிய கவிஞர் யார், ரசிக்க வேண்டிய இசையமைப்பாளர் யார் என்பதை இனம் காட்டிவிட்டன
என்பதில் சந்தேகமில்லை.
அப்போது என்னுடைய இரண்டாவது
சகோதரர் ஒருநாள் ஏதோ ஒரு படத்திற்குப் போய்விட்டு வரும்போது வீட்டில் மாட்டுவதற்கென்று
இரண்டு பிரேம் போட்ட போட்டோக்களை வாங்கிவந்திருந்தார். ஒன்று வீரபாண்டிய கட்டபொம்மன்
வேடத்தில் இருந்த சிவாஜிகணேசன், இன்னொரு போட்டோ கவிஞர் கண்ணதாசன். தலையைப் படிய வாரி
மஞ்சள் சட்டை போட்டு சைடில் பார்த்தபடி இருந்த போட்டோ.
“எங்கே கிடைத்தது?” என்று
கேட்டதற்கு “ஸ்ரீ தியேட்டர் வாசலில் விற்றுக்கொண்டிருந்தார்கள்” என்று சொன்னார்.
“எதுக்குப்பா சினிமாக்காரங்க
படமெல்லாம் வாங்கிவந்து வீட்ல மாட்டுறீங்க?” என்றார் அப்பா.
“இருக்கட்டும்பா…..எத்தனையோ
படம் மாட்டியிருக்கு. இதுவும் இருந்துட்டுப் போகட்டுமே” என்றார் அண்ணன். அப்போதெல்லாம்
எல்லார் வீடுகளிலும் நிறையப் போட்டோக்கள் மாட்டிவைத்திருப்பார்கள்.
“சிவாஜி சரி; கண்ணதாசன்
போட்டோ எதுக்கு?” என்றார் அப்பா.
“போப்பா என்னமா பாட்டு
எழுதறார்”
“நல்லா எழுதறாருப்பா. ஆனா
கடவுள் இல்லைன்றாரே” அப்பா தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்.
“அந்தப் பாட்டெல்லாம் விட்டுருப்பா.
நீ வேற பாட்டைப் பாரு” சொல்லியபடியே ஆணியும் சுத்தியலும் கையிலெடுத்துக்கொண்டு இரண்டு
படங்களையும் மாட்டத்தொடங்கிவிட்டார் அண்ணன். இரண்டு படங்களும் ஒரு பத்து வருடங்களுக்காவது
எங்கள் வீட்டுச் சுவரில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது நினைத்துப் பார்த்தாலும்
ஆச்சரியமாயிருக்கிறது. ஒரு கவிஞன். அவன் நுழைந்து பத்துவருடங்கள்கூட ஆகியிருக்காது.
ஓவர்நைட்டில் முன்னணிக்கு வருகிறான். தொடர்ந்து தன் நிலையைத் தக்கவைத்துக்கொள்கிறான்.
அவனுடைய படங்கள் அச்சடித்து பிரேம் போட்டு விற்கிறார்கள். அவை வாங்கப்பட்டு வீடுகளில்
மாட்டிவைக்கப்படுகின்றன. உலகில் வேறு எந்தக் கவிஞனுக்காவது இப்படிப்பட்ட அங்கீகாரங்கள்
கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
அடுத்து கொஞ்ச நாட்களுக்குள்
ஒரு புத்தகம் வந்தது. பளபளவென்று பயங்கர கருப்பில் ஒரு அட்டை. அதன் நடுவே அதே அளவு
சிவப்பில் ஒரு ரோஜா. கருப்பும் சிவப்பும் திமுகவைக் குறிக்கும் வண்ணங்கள் என்றாலும்
எங்கள் வீட்டில் யாருக்கும் திமுக உணர்வெல்லாம் கிடையாது.
எல்லாருக்கும் பிடித்த தலைவர்
காமராஜர்தான். ஆகவே இது கட்சி ரீதியாக இல்லாமல் அந்த அட்டைப்படமே பார்த்தவுடன் கவர்கிறமாதிரியான
அழகுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது என்றே சொல்லலாம். அட்டையில் கண்ணதாசன் கவிதைகள் என்றிருந்தது.
உள்ளே ஆயில் பேப்பர் வைத்து முழுப்பக்க அளவுக்கு கண்ணதாசனின் வண்ணப்படம். அந்த நாட்களில்
அந்தப் புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்தபோது ரொம்பவும் அதிக அளவில் காதல் என்பதாக ஒரு
முகச்சுளிப்புதான் வந்தது. ஆனால் உள்ளே நுழைந்தபோது நமக்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன
என்பது புரிந்தது. பழைய இலக்கியப் பாடல்களை எடுத்து வைத்து அந்தப் பாடல்களுக்கு விளக்கமாக
இவருடைய பாணியில் புதிய வார்த்தைகளில் கவிதை, மாதவி காவியம் என்றொரு நீண்ட கவிதை, தலைவர்களைப்
பற்றிய கவிதைகள், இரங்கற்பாக்கள், தாலாட்டு, திரைப்படப் பாடல்கள் என்று நிறைய இருந்தன.
கலைவாணர் மறைவைப் பற்றி கலையாவாணர் என்று ஆரம்பித்து எழுதியிருந்த வரிகள் படித்ததும்
அழுகையைக் கொண்டுவருமளவுக்கு இருந்தது. சில கவிதைகளின் அழகு மறுபடி மறுபடி படித்து
மனப்பாடம் செய்துகொள்ளுமளவுக்கு இருந்தது.
அவருடைய மாதவி நெடுங்கவிதையை அர்த்தம் தெரிந்ததோ
இல்லையோ அந்த நாட்களிலேயே மனப்பாடம் செய்துவிட்டேன். தமிழ் மொழிபற்றி அவர் எழுதியிருந்த
‘முப்பாலுக்கப்பாலோர் பொருளே இல்லை. மூவாதச் சிலம்பின்றி கூத்தே இல்லை’ கவிதை தமிழ்
பற்றி வெளிவந்திருந்த மற்ற கவிதைகளை விடவும் பிரமாதமாக இருப்பதாகத் தோன்றிற்று.
இதற்குப்பின் அவருடைய எழுத்துக்களைத்
தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன். தேடுவதற்கு அவசியமில்லாமலேயே தினந்தோறும் அவரது
பாடல்களோ பேச்சுக்களோ வானொலியிலும் பத்திரிகைகளிலும் வந்துகொண்டே இருந்தன. அவரது கருத்துக்களுடன்
ஒத்துப்போகிறேனோ இல்லையோ அவருடைய தமிழும் எழுத்து நடையும் மிகப்பெரிய ஈர்ப்பை அவர்பால்
ஏற்படுத்தின.
இந்தப் பின்னணியில் அந்த
நாட்களில் கண்ணதாசனை நேசிக்கவும் வாசிக்கவும் ஆரம்பித்திருந்ததால் மற்ற கவிஞர்களின்
பங்களிப்பையும் அங்கீகரிக்கத் தவறவில்லை. திரைப்படங்களில் பாபநாசம் சிவன், கம்பதாசன்
ஆரம்பித்து தஞ்சை ராமய்யதாஸ், மருதகாசி, பட்டுக்கோட்டை, சுரதா என்று எல்லாக் கவிஞர்களையும்
அடையாளங்கண்டு ரசிக்க ஆரம்பித்த பொழுது மாயவநாதன் பாடல்களும் கவர ஆரம்பித்தன.
‘தண்ணிலவு தேனிறைக்க தாழைமரம்
நீர்தெளிக்க’ என்ற படித்தால் மட்டும் போதுமா பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அற்புத
இசையில் லாகிரிபோல கிறங்கவைத்தது. யார் எழுதியது என்று பார்த்தால் மாயவநாதன். அடுத்தது
பந்தபாசம் படத்தில் ‘இதழ் மொட்டுவிரிந்திட முத்துவிளைத்திடும் சித்திரப்பூம்பாவை’ என்றொரு
பாடல்….. ‘இதயத்தில் நீ’ படத்தில் ‘சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ’
என்றொரு பாடல். எல்லாம் மாயவநாதன். ஆகவே கண்ணதாசனுக்குப் பிறகு அடுத்து கவர்ந்தவராக
மாயவநாதன்தான் இருந்தார். கூடவே ‘கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு’, ‘எப்போ வச்சுக்கலாம்
அதை எப்படி வச்சுக்கலாம்’, ‘நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ’ என்று தொடர்ச்சியாக
ஸ்கோர் செய்துகொண்டே இருந்தார் மாயவநாதன்.
இந்தப் பாடல்களின் பட்டியலெல்லாம் எதற்காக
இங்கே சொல்லப்படுகின்றன என்றால் கண்ணதாசனைப் போன்றே பாடல்கள் எழுதியவர் வாலி என்று
சொல்லப்படுவதுண்டு. மேற்கண்ட பாடல்களை எத்தனைப்பேர் மாயவநாதன் எழுதியவை என்று நினைத்திருக்கப்போகிறீர்கள்?
அவையெல்லாம் கண்ணதாசன் பாடல்கள் என்றுதானே நிறையப்பேர் நினைத்திருக்கக்கூடும்! அதனால்,
அந்தக் காலத்தில் கண்ணதாசன் மாதிரியே பாடல் எழுதிய முதல் கவிஞர் மாயவநாதன்தான். அதற்குப்
பின்னர்தான் வாலி. எதற்கும் சமரசம் செய்துகொள்ளாதவர் என்று மாயவநாதனைச் சொல்லுவார்கள்.
அவருடைய அந்த இயல்புதான் அவருக்கான வாய்ப்புக்களைக் குறைத்துவிட்டன என்று சொல்லலாம்.
இதற்கிடையே கண்ணதாசனின்
திமுக விலகல், அதற்காக அவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, ஈவிகே சம்பத்துடன் சேர்ந்து புதிய
கட்சி தொடக்கம், பிறகு காங்கிரஸுடன் இணைப்பு என்ற இத்தனை மாறுபாடுகளிலும் வீழ்ந்துவிடாமல்
நின்ற கண்ணதாசனின் பாடல்களின் கம்பீரம் அவர்பால் மேலும் ஈர்ப்பையே ஏற்படுத்தின. ஏனெனில்
அந்த நாட்களில் இருந்த மொழி உணர்வை வைத்துப்
பார்க்கும்போது திமுகவில் இருந்து, அதற்கு எதிராகத் திரும்பிய ஒருவன் ‘தமிழ்மொழியின்
மூலம்’ நிற்கமுடியும் என்பதே யோசித்துப்பார்க்கமுடியாத ஒரு விஷயம். அத்தனை எதிர்ப்பு,
அத்தனைப் புறக்கணிப்பு………….
ஆனாலும் வெற்றிகரமாகப்
பவனிவந்த கண்ணதாசன் ஒரு ஆச்சரிய மனிதராகவே தென்பட்டார்.
தொடர்ந்து கண்ணதாசனுக்கும்
எம்ஜிஆருக்குமான சண்டை, தகராறு என்று என்னென்னமோ செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு
காலகட்டத்தில் கண்ணதாசன் இரண்டு பேருக்கு- அதாவது கலைஞர், எம்ஜிஆர் என்ற இருவருக்குமே
வேண்டாதவராக இருந்தார். இருவராலும் வெறுக்கப்படுகின்ற மனிதராக இருந்தார். யோசித்துப்
பாருங்கள் இப்படி இருபெரும் துருவங்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டு ஒருவரால்
தமிழ் நாட்டில் எந்தத் துறையிலாவது நிலைக்கவும்
நீடிக்கவும் முடியுமா?
நீடித்தார். அதுதான் கண்ணதாசன்!
இந்த சமயத்தில் வாலியின்
வருகை நிகழ்ந்தது. வாலி ஏற்கெனவே எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்றாலும்
எம்ஜிஆருடன் அவரை முற்றுமுழுதாக இணைத்த படமாக தெய்வத்தாய் படத்தைத்தான் சொல்லவேண்டும்.
தெய்வத்தாய் படம் 1964-ல் வருகிறது. அதற்கு முன்பேயே முக்தா பிலிம்ஸ் ‘இதயத்தில் நீ’
படத்தில் குறிப்பிடத்தகுந்த நான்கு பாடல்களை எழுதுகிறார் வாலி. ‘பூவரையும் பூங்கொடியே
பூமாலை போடவா’ என்பது ஒரு பாடல். ‘ஒடிவதுபோல் இடை இருக்கும், இருக்கட்டுமே’ என்று கேள்விபதில்
பாணியில் ஒரு பாடல், ‘யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன?’ என்று ஒரு பாடல்.
அதற்கு அடுத்து இன்னொரு பாடல் ‘உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்.
காதல் என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்’ என்ற பி.சுசீலாவின் தேன்குரலில்
மிதந்துவந்த இந்தப் பாடல் கண்ணதாசனின் இன்னொரு புகழ்பெற்ற பாடலாகவே பேசப்பட்டது. ஆனால்
இந்தப் பாடலை எழுதியவர் வாலி.
சிறிது இலக்கியம் கற்றவர்களால்
முதன்முதலாக கவனிக்கப்பட்டவராக வாலி மாறியது இந்தப் பாடலின் மூலம்தான்.
இதற்கடுத்து வந்த படம்
கற்பகம். 1963-ல் வந்த கற்பகம் வாலியைத் தனித்தன்மையுள்ள கவிஞராக நிறுத்தியது என்றே
சொல்லலாம். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் வியத்தகு இசையும் சுசீலாவின் தேன்குரலும் வாலியின்
சொற்களை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன.
படத்தில் மொத்தம் நான்கே
பாடல்கள். நான்கு பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. படத்தில் ஆண்குரலே இல்லை. வெறும்
பெண்குரலில் நான்கே நான்கு பாடல்களைப்போட்டு அந்த நான்கு பாடல்களையுமே சூப்பர் ஹிட்டாக்கிக்
காட்டும்
வித்தையெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கடுத்து எந்த இசையமைப்பாளருக்கும்-ஆமாம்
எந்த இசையமைப்பாளருக்கும், இதுவரை வாய்த்ததில்லை.
‘அத்தைமடி மெத்தையடி’ பாடல் தமிழகத்தையே குலுக்கிப்போட்டது.
அதற்கடுத்த பாடல் ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு’ மூன்றாவது பாடல் ‘பக்கத்துவீட்டு பருவமச்சான்’,
நான்காவது பாடல் ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’ வாலி தமிழக மக்களின் நாக்கில் நிரந்தரமாக
வந்து உட்கார்ந்தது இந்தப் படத்தில் இருந்துதான்.
இந்தப் படத்தைப் பற்றிய
ஒரு சம்பவத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
அந்தக் காலத்துப் படங்களின் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களில் இவரும் ஒருவர்.
இவரது வசனங்கள் புகழ்பெற்றவை. நடிகை கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
கற்பகம் படத்தை கே.எஸ்.ஜி ஆரம்பித்தபோது அந்தப் படத்தில் வெறும் சுசீலாவை மட்டும் பாடவைத்து
பாடல்கள் போடுவது என்றெல்லாம் திட்டம் இருக்கவில்லை. அதேபோல வெறும் வாலியை மட்டும்
வைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதவைப்பது என்பதும் திட்டமில்லை. கண்ணதாசன் இல்லாமல்
அந்தக் காலத்தில் பெரிய படங்கள் வராது. அவர்
இல்லாமல் மற்றவர்கள் பாடல்கள் எழுதுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தாம்
இருக்கவேண்டும். ஒன்று அவர் கிடைத்திருக்கமாட்டார். அரசியலில் மிகவும் பரபரப்பாக அவர்
இருந்த காலகட்டம் அது. இன்று ஒரு ஊர் நாளை இன்னொரு ஊர் என்று அலைந்துகொண்டிருந்த நாட்களில்
மற்றவர்களைப் பயன்படுத்திப் பாடல்கள் எழுத வைப்பார்கள். இது ஒரு காரணம். அடுத்த காரணம்,
குறைவான பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
கற்பகம் படத்துக்கு என்ன
காரணத்தினால் வாலியை மட்டும் பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பாடல்கள்
இப்போதைய வார்த்தையில் சொல்லவேண்டுமானால் சூப்பர் டூப்பர் ஹிட். படமும் பிரமாத ஹிட்.
இந்தச் சமயத்தில் படத்தின் நூறாவது நாள் விழாவோ வெள்ளிவிழாவோ கொண்டாடப்படுகிறது. இந்த
விழாவுக்குத் தலைமைத் தாங்க கண்ணதாசனைக் கூட்டிவருகிறார் கேஎஸ்ஜி. நம்மைப் பாடல் எழுதவைக்காத
படவிழாவுக்கு நாம் வருவதா என்பதுபோன்ற ஆதங்கம் எல்லாம் எந்தக் காலத்திலும் வைத்துக்கொள்ளாதவர்
கண்ணதாசன். மகிழ்ச்சியோடு வருகிறார். மேடையில் வாலியும் இருக்கிறார்.
அந்த விழாவில் சின்ன அண்ணாமலை
பேசுகிறார். “இந்தப் படத்தில் கவிஞர் பாடல் எழுதவில்லை. வேறொருவர் எழுதியிருக்கிறார்.
ஆனால் எல்லாப் பாடல்களுமே பிரபலமாகியிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாய்
இருக்கும். ஆச்சரியம்தான். பல ரேக்ளா ரேஸ்களில் ஒன்றுக்கும் ஆகாத சில சோப்ளாங்கி மாடுகள்
அதுபாட்டுக்கு ஓடி முன்னால் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒன்றுதான் இது” என்று பேசிவிட்டார்.
பதறி எழுந்தார் கண்ணதாசன்.
“நண்பர் சின்ன அண்ணாமலை தவறாகப் பேசிவிட்டார். கற்பகத்தில் வாலி எழுதியிருக்கும் பாடல்களை
நான் கேட்டேன். இதோ இப்போது வெளியூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணம் செய்தபோது
வழியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டு அத்தைமடி மெத்தையடிதான். மிகவும் நன்றாக எழுதியிருக்கிறார்.
ஒன்றுமில்லாமல் சும்மாவெல்லாம் ஒரு பாட்டு இந்த அளவுக்குப் பிரபலமாகிவிடாது. இதே படத்தில்
இன்னொரு பாட்டு..பக்கத்து வீட்டு பருவமச்சான் என்று. அந்தப் பாட்டில் ‘பார்வையிலே வடம்
புடிச்சான்’ என்றொரு வரி வருகிறது. இப்படி ஒரு வரியை சாதாரணமானவர்கள் எழுதமுடியாது.
ஒரு கவிஞனால்தான் எழுதமுடியும்” என்று பேசினார். கவிஞரிடமிருந்து வாலிக்குக் கிடைத்த
முதல் அங்கீகாரம் இதுதான்.
அடுத்து வருகிறது தெய்வத்தாய்.
தெய்வத்தாய்க்கு சற்றே முன்னால் சர்வர் சுந்தரம் படத்தில் வாலி எழுதிய ‘அவளுக்கென்ன
அழகியமுகம்’ பாடலும் பெரிய அளவில் ஹிட்டடிக்கிறது.
தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக
வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம். இந்தப்
படத்தில் மற்ற பாடல்களும் பெரிதாக ஹிட் ஆனவைதாம் என்றபோதிலும் ‘மூன்றெழுத்தில் என்
மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் எம்ஜிஆர் பிராண்ட் பாடலாக பெரிதும் விரும்பப்பட்டு
ரசிக்கப்பட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அதற்கு முன்னரேகூட எம்ஜிஆருக்காக
அவருடைய பிராண்ட் பாடலை வாலி எழுதியிருந்தபோதும் மிக மிக அதிகமாக சிலாகிக்கப்பட்ட பாடலாக
இதைத்தான் சொல்லவேண்டும். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றால் அந்த மூன்றெழுத்து
என்ன என்ற விவாதம் சாமான்ய மக்களிடையே எல்லாம் நடந்தது. ‘கடமை அது கடமை’ என்றே பாடல்
பதில் சொன்னபோதும், கொள்கை என்று சிலர் அர்த்தம் கற்பித்தனர். இல்லை, திமுக என்பதைத்தான்
எம்ஜிஆர் இப்படிப் பாடியிருக்கிறார் என்றனர் சிலர். எம்ஜிஆர் அண்ணாவைத்தான் சொல்கிறார்
என்றனர் சிலர். ‘தமிழ்’ என்றனர் சிலர். எம்ஜிஆரைக் கொண்டாடிய ரசிகர்கள் அந்த மூன்றெழுத்து
எம்ஜிஆர் என்றனர். இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க அந்த மூன்றெழுத்து
என்ன என்பதற்குத் தன்னுடைய பாணியில் விளக்கம் சொன்னார் சோ.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
என்று பாடுகிறாரே எம்ஜிஆர் அந்த மூன்றெழுத்து என்ன? என்பது சோவிடம் கேட்கப்பட்ட கேள்வி.
‘அந்த மூன்றெழுத்து மூக்கு’- என்பது சோ சொன்ன பதில்.
ஆக, சில பாடல்கள் மக்களிடையே
சமூகத்தில் எவ்விதமாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்காகத்தான் இதையெல்லாம்
இவ்வளவு விரிவாகச் சொல்லவேண்டியிருக்கிறது. புகழ்பெற்ற பாடல்கள் என்றால் இப்படியெல்லாம்
தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும். அப்படியில்லாமல் ஒரு சிலருக்கு மட்டும் பிடித்துப்போய்
அவர்கள் தங்களின் ரசனைக்கேற்ப அந்தப் பாடலைத் தங்களின் ஐபாடிலோ அல்லது கார் ஸ்டீரியோவிலோ
மட்டும் போட்டுக்கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ‘ஆஹா என்ன அருமையான பாடல்… இந்தப் பாடலுக்கு
இணை எதுவுமே இல்லை. இதனை இசையமைத்தவருக்கு இணை யாருமே இல்லை’ என்றெல்லாம் இணையம் உட்பட
பல இடங்களிலும் உளறிக்கொட்டிக்கொண்டிருப்பதையெல்லாம் காண நேர்கிறது. ‘சமூகத்தில் இறங்கி
மக்களிடையே சென்று புழங்கியதா?’ என்பதுதான் கேள்வி. மக்களின் நாவில் பத்து ஆண்டுகள்
இருபது ஆண்டுகள் தாண்டி உட்கார்ந்திருக்கிறதா என்பது கேள்வி. அந்தப் பாடலைச் சட்டென்று
மக்களால் அடையாளப்படுத்த முடிகிறதா என்பது கேள்வி. இப்படிப்பட்ட அடையாளங்களை வாலியின்
பாடல்களால் ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் அவரது சாதனை.
மீண்டும் தெய்வத்தாய் படத்திற்கு
வருவோம். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் பாடலுக்கு அடுத்து ‘இந்தப் புன்னகை என்ன
விலை? என் இதயம் சொன்ன விலை’ என்ற பாடல் ஹிட். அதற்கடுத்து ‘வண்ணக்கிளி நீ சொன்ன மொழியே
என்ன மொழியோ? வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ’ என்ற பாடல் மெல்லிய மேற்கத்திய இசைக்
கலப்புடன் சேர்ந்து மென்மையாக இதயத்தை வருடும் பாணியில் மெல்லிசை மன்னர்களால் இசையமைக்கப்பட்டு
பிரபலமானது. ‘காதலிக்காதே கவலைப்படாதே’ உட்பட ஐந்து பாடல்கள் வாலிக்கு. ஒரு பாடலை மட்டும்
ஆலங்குடி சோமு எழுதியிருந்தார். இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு பாடல் ‘பருவம்போன
பாதையிலே என் பார்வையை ஓடவிட்டேன்’ வாலி எழுதியதுதான்.
மெல்லிசைக்கு அர்த்தம்
புரியவேண்டுமானால் மெல்லிசை மன்னர்கள் படைத்து, குறிப்பாக சுசீலாவைப் பாடவைத்திருக்கும்
சில பாடல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும்.
கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது
மனம் லேசாகி மிதந்து கரையும். அந்தப் பாடல் சோகரசம் ததும்பியது இல்லையென்றாலும் மனதில்
இனம்புரியாத ஒரு சோகம் படர்ந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். மெல்ல மெல்ல தாலாட்டியது போன்று
தோன்றும். அந்தப் பாடலின் இசையும் வரிகளும் ஆண்டாண்டு காலமும் மனதில் தங்கிவிடும்.
அப்படிப்பட்ட அனுபவங்களையெல்லாம் மெல்லிசை மன்னர்களின் அற்புதப் பாடல்கள் ஏற்படுத்திவிடும்.
பி.சுசீலாவின் குரலில்
வந்த பாடல்களின் ஒரு சிறிய பட்டியலைப் பார்ப்போமா? நினைக்கத் தெரிந்த மனமே பாடல் அப்படிப்பட்டதுதான்.
(இதில் நிஜமாகவே சோகரசம் உண்டு) தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், காதலெனும் வடிவம்
கண்டேன், மாலைப்பொழுதின் மயக்கத்திலே, காணவந்த காட்சியென்ன வெள்ளிநிலவே, மயங்குகிறாள்
ஒரு மாது, ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், காதல் சிறகை காற்றினில் விரித்து, அத்தான்
என் அத்தான், ஒரே ராகம் ஒரே தாளம், வா என்றது உருவம், மாலை சூடும் மணநாள், சொன்னது
நீ தானா, தண்ணிலவு தேனிறைக்க, உனது மலர்க் கொடியிலே எனது மலர் மடியிலே(இதில் எல்ஆர்
ஈஸ்வரியின் குரலும் உண்டு), அத்தை மகனே போய்வரவா, எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த
என்தலைவன், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, கற்பகம் படத்தின் நான்கு பாடல்கள், ஒருநாள் இரவில்
கண்உறக்கம் பிடிக்கவில்லை, அழகேவா அருகே வா, என்னுயிர்த்தோழி கேளொரு சேதி, கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே, கண்ணுக்குக் குலமேது, தூதுசெல்ல ஒரு தோழியில்லையென(இதிலும் எல்ஆர்
ஈஸ்வரியின் குரலும் உண்டு), அவள் மெல்லச்சிரித்தாள், என்னை எடுத்து தன்னைக்கொடுத்து,
அத்தைமகள் ரத்தினத்தை, உன்னை ஒன்று கேட்பேன், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, நெஞ்சத்திலே
நீ நேற்றுவந்தாய், தமிழுக்கும் அமுதென்று பேர்…………………………………………….
இந்தப் பட்டியல் மிகப்பெரியது.
சொல்லிக்கொண்டே போகலாம். இதுவெறும் மெல்லிசை மன்னர்களின் முதல்பாதிப் படங்களிலிருந்து
சொல்லப்பட்டவைதாம். அதிலும் குறிப்பாக வெறும் பி.சுசீலாவை வைத்து அவர்கள் தமிழுக்குத்
தந்திருக்கும் பாடல்கள். பாடல்கள் அல்ல இவை; கொடைகள்!
மேற்கண்ட பாடல்களில் தண்ணிலவு
தேனிறைக்க மாயவநாதன் எழுதியது. கற்பகம், தெய்வத்தாய் படகோட்டி பாடல்கள் வாலி எழுதியவை,
மற்ற எல்லாப் பாடல்களுமே கவியரசர் எழுதியவை என்பதையும் சேர்த்தே நாம் இந்தப் பட்டியலைப்
பார்க்கவேண்டும். அப்போதுதான் அந்த மூவரின் மகத்துவம் புரியும். இந்தப் பாடல்களையெல்லாம்
கேட்கும்போதுதான் இன்னிசை என்றால் என்னவென்று தெரியவரும். இசையை வைத்து மனதை எப்படியெல்லாம்
நெகிழவைக்க, உருகவைக்க முடியும் என்பதும் புரியவரும்.
ஆக, விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம்
வந்து சேர்ந்தது வாலியின் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். தெய்வத்தாய்க்கு அடுத்து
அதே 1964-ல் வாலி தம்மை ஒரு முழுமையான கவிஞராக நிரூபித்த படம் படகோட்டி. படகோட்டியின்
அத்தனைப் பாடல்களுக்கும் சொந்தக்காரர் வாலிதான். வாலியின் மிகவும் சிறந்த பாடலாகப்
பேசப்படும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ பாடலும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலும்
படகோட்டியில்தான் வந்தன. அதிலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தனித்து நின்றது. இது வெறுமனே
சினிமாவுக்கான ஒரு பாடல் என்பதைத்தாண்டி தினமும் கடலில் மீன்பிடிக்கச் சென்றுவரும்
ஒரு மீனவனின் உடலுக்குள் புகுந்து அவனுடைய உதிரமாய் உணர்வுகளாய் வெளிவந்த ஒரு பாடலாகத்தான்
இந்தப் பாடலைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும் வாலியை இன்னமும்
பல படிகளுக்கு மேலே உயர்த்தின. பி.சுசீலாவின் குரலில் ‘என்னை எடுத்து தன்னைக்கொடுத்து
போனவன் போனாண்டி’ பாடல், மனதின் ஏக்கங்களைக் கடல் அலைகள் போல் வாரி வாரி அடித்தது.
‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ பாடலும் சற்றே கொண்டாட்ட லாகிரியுடன் இசைக்கப்பட்டிருந்தது.
ஆனால் படகோட்டி படத்தின்
பாடல்கள் டிஎம்சௌந்தரராஜனுக்கானவை. ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தொடங்கி ‘கொடுத்ததெல்லாம்
கொடுத்தான்’ மற்றும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ ஆகிய பாடல்கள் கிறங்கடித்தன
(இப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை வரிசைப்படுத்தினால் தவறாமல் இடம்பெறும்
பாடல், ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’). ‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி
வரும் வளையல்’ பாடலில் கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் தம்முடைய அற்புதக் குரலில்
அனாயாசமாகக் கொண்டுவந்திருப்பார் டிஎம்எஸ். ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’
ஆகிய இரண்டு பாடல்கள் டிஎம்எஸ்ஸூம் பி.சுசீலாவும் சேர்ந்து மறக்கமுடியாத பாடல்களாகச்
செய்திருந்தனர்.
படகோட்டிக்கு அடுத்து வாலி
ஸ்கோர் செய்தது ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில்தான். அதற்கும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன்
படத்தில் கண்ணதாசன் மற்ற பாடல்களை எழுதியிருக்க வாலியின் “பருவம் எனது பாடல்” பாடலும்,
“ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை” பாடலும் புகழ்பெற்றன. அடுத்து வந்த
படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை. 1965-ல் வந்த இந்தப் படம்தான் வாலியை இன்றுவரை நினைக்கும்
அளவுக்குத் தூக்கி நிறுத்தியது.
அதுவரை
வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய
எம்ஜிஆர் என்ற
அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும்
தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும்,
மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக
ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான்
இடம் பெற்றது.
இந்தப் பாடலைத்தவிர ‘குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே’, பாடலும் ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ பாடலும் வாலிக்குப் புகழ்
சேர்த்தன. (வாலி அடிக்கடி ஒரு கிளிஷே போல இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றுதான்
சொல்லவேண்டும். தெய்வத்தாயில் வாடகை, விலை, இதயம் என்ற கான்செப்டை ஆரம்பித்தவர் நிறையப்
பாடல்களில் திரும்பத் திரும்ப இதையே சொல்லியிருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை’……….’.என்
இதயம் சொன்ன விலை’, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்……………வாடகை
என்ன தரவேண்டும்?)
அடுத்துவந்த பஞ்சவர்ணக்கிளியில்
புரட்சிக் கவிஞரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாடலுக்கு அடுத்து (இங்கே இசை ரசிகர்கள் கொஞ்சம் கவனிக்கவேண்டும். ‘துன்பம்
நேர்கையில்’ பாடலுக்கு அடுத்து பாரதிதாசனின் இந்தப் பாடலுக்கு இணையாக இனிமையாக இசையமைக்கப்பட்ட
புரட்சிக்கவிஞரின் பாடல் வேறு ஏதாவது இருக்கிறதா? பாரதிதாசனின் பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன.
மற்ற எந்த இசையமைப்பாளரையாவது பாரதிதாசனின் ஏதாவது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு ‘தமிழுக்கு
அமுதென்று பேர்’ என்பதை விடவும் இனிமையாக இசையமைத்து புழக்கத்தில் விடச்சொல்லுங்களேன்.
அந்த இசையமைப்பாளரைத் தமிழுலகம் உலகம் உள்ளவரைக்கும் கொண்டாடும்) புகழ்பெற்ற பாடல் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’, மற்றும்
‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’……………..
எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு
அடுத்து எம்ஜிஆர் படங்களுக்கு வாலிதான் என்று அமைந்துவிடுகிறது.
அடுத்து வருகிறது ‘பணம்
படைத்தவன்.’ இதில் மொத்தம் ஏழு பாடல்கள். ஏழு பாடல்களில் ஆறு பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன.
முக்கியமானவை இரண்டு பாடல்கள். ஒன்று – ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’, இரண்டாவது ‘தன்னுயிர்
பிரிவதைப் பார்த்தவரில்லை’. இந்த
இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும் லட்சக்கணக்கானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி.
அதிலும் ‘தன்னுயிர் பிரிவதைப்
பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்’ என்ற ஒற்றை வரியில் காதலனின்
பிரிவு நுட்பத்தைச் சொல்லும் இடத்தில் வாலி மிக உயரத்தில் நிற்கிறார் என்பதை உரத்துச்
சொல்லவேண்டியிருக்கிறது.
கண்போனபோக்கிலே கால்போகலாமா
என்பதும் வாலியின் பெயர் சொல்லும் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தின்
மற்ற பாடல்கள்…………’அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்’, ‘பவளக்கொடியிலே
முத்துக்கள் பூத்தால்’, ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க’, அடுத்தது ‘எனக்கொரு மகன் பிறப்பான்’……………….இதில்
எனக்கொரு மகன் பிறப்பான் பாடல் எம்ஜிஆரின் எதிர்ப்பாளர்களால் பரிகாசத்துக்கும் கேலிக்கும்
ஆளான பாடல் என்பதையும் குறிப்பிடவேண்டும். எம்ஜிஆருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை
வைத்து அவருக்கு எதிரணியில் இருந்தவர்கள் இந்தப் பாடலைச் சொல்லி எம்ஜிஆரின் ரசிகர்களைச்
சீண்டுவதும் பதிலுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் ஆவேசமாகச் சீறுவதும், அங்கங்கே சண்டைகளும்
கைகலப்புகளும் நிகழவும் காரணமாயிருந்திருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், பாடல்களின்
‘தாக்கம்’ அப்போதெல்லாம் எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் இதையெல்லாம்
இங்கே சொல்லவேண்டியிருக்கிறது.
கவியரசர் பாடல்கள் எழுதும்
படங்களிலும் ஓரிரு பாடல்களை வாலி எழுதுகின்ற சந்தர்ப்பம் நிறையவே வாய்க்கிறது. தம்மை
நாடிவரும் சில பட அதிபர்களிடமும் இயக்குநர்களிடமும் “வாலி நல்லா எழுதறான் அவனிடம் எழுதிக்கங்க.
எனக்காக காத்திருக்க வேணாம்” என்று கவிஞரே சொன்னதாகவும் கூறியிருக்கிறார் வாலி. குழந்தையும்
தெய்வமும் படத்தில் ‘அன்புள்ள மான்விழியே’ பாடலும், ‘நான் நன்றிசொல்வேன் என் கண்களுக்கு’
என்ற இரு பாடல்களை எழுதுகிறார் வாலி. இவை கவியரசரின் மற்ற பாடல்களுடன் சேர்ந்து (குழந்தையும்
தெய்வமும் குணத்தால் ஒன்று, பழமுதிர்ச் சோலையிலே, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
பாடல்கள் கண்ணதாசனுடையவை) செம ஹிட்டடிக்கின்றன.
எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம்
படத்தில் ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ ஆகிய புகழ்பெற்ற
பாடல்கள் பஞ்சு அருணாசலம் இயற்றியவை. வாலி எழுதிய ‘நான் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன்’, ‘என்ன உறவோ என்ன பிரிவோ’, ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ மூன்று பாடல்களும்
இசை ரசிகர்களைக் கொண்டாடவைத்த பாடல்கள். இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லவேண்டும்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்ததாகச் சொல்லப்பட்ட ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ படத்திற்கு
அடுத்து உடனடியாய் வந்த படங்கள் குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், நீலவானம்,
நீ………………. ஆகியன. அதனால் இந்தப் படங்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்து வெளியாகாமல்
இருந்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதனால் விஸ்வநாதன் பெயரில் வந்தன என்றும் சொல்லப்படுவதுண்டு.
அதுபற்றிய விளக்கத்தை எம்எஸ்வியோ அல்லது ராமமூர்த்தியோ இதுவரை சொன்னதில்லை. ஆனால் கலங்கரை
விளக்கம், குழந்தையும் தெய்வமும் பாடல்களை வைத்துப் பார்க்கும்போது இருவரும் சேர்ந்து
இசையமைத்த படங்களே என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
எது எப்படியோ, எம்எஸ்வி
முழுக்க முழுக்க ‘தனியாக’ இசையமைத்து வெளிவந்த படம் ‘அன்பே வா’தான் என்று சிலர் சொல்வார்கள்.
(தொடரும்)