வைகோ கலைஞரைப் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் இன்றைக்கு அரசியல்
அரங்கில் மிகப் பெரிதாக விவாதத்துக்குள்ளாகியிருக்கின்றன. விஷயம் எல்லை மீறிப்
போவதற்கு முன்னால் அவர் அதற்கான மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார். ‘என்னுடைய வாழ்க்கையில்
நான் செய்த மிகப்பெரிய தவறாக இதனைக் கருதுகின்றேன்’ என்பதுபோல் ஒரு அறிவிப்பையும் அவர்
செய்திருக்கிறார். ‘கலைஞர் என்னை நன்றாக அறிவார். எனக்குள் சாதி ரீதியிலான உணர்வுகள்
எனக்கு இல்லையென்பதை அண்ணன் கலைஞர் நன்றாக அறிவார்’ என்று ஒரு வார்த்தையையும் சொல்லிவிட்டுப்
போயிருக்கிறார்.
வைகோ ஒரு தேர்ந்த அரசியல்வாதி. அரசியலில் நிறைய மேடு பள்ளங்களைப்
பார்த்தவர். என்னமாதிரியான செய்கைக்கு என்னமாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை அறிந்தவர்.
ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவனை நாக்கில் நரம்பில்லாமல் தன்னுடைய இச்சைக்கு ஏற்ப வசைபாடிவிட்டுப்
போனால் அதற்கு கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பதை அறியாதவரல்ல. ஏதோ ஒரு
ஆத்திரத்தில் செய்வது அறியாமல், அல்லது -‘இன்றைக்குத்தான்
கலைஞரை எல்லாத் திசைகளிலும்
போட்டு வறுத்தெடுக்கிறார்களே…………..
போகிறவன் வருகிறவன் எல்லாம் அவரை ஒரு ‘சாத்துச் சாத்திவிட்டுப்
போவதுதான்’ தினசரி கடமை என்று எண்ணுகிறானே…………….
முளைத்து மூணு இலைகூட
இல்லை, இன்னமும் முளைக்காதவன் எல்லாம் இஷ்டத்துக்கு அவரை வசைபாடுகிறானே……………..
யாருமே அதற்கு மறுப்புக்கூடச் சொல்வதில்லையே………
இப்படி இவரை கேவலமாகவும், படு கேவலமாகவும் பேசுவதுதான் இன்றைய
தமிழக அரசியலின் பாலபாடம் என்பதாக ஒரு சித்தாந்தத்தைத்தான் இன்றைய ஊடகங்களும் குறிப்பாக
இணைய தளமும் கட்டிஎழுப்பி இருக்கின்றனவே…..
ஆகவே நாமளும் அதற்கு
உரமேற்றுவதுபோல் ஒன்றைச் சொல்லிவைப்போம். ஒன்றும் ஆகாது. எதுவும் ஆகிவிடப் போவதில்லை
என்று தன்னுள் இருந்த அத்தனை ஆத்திரத்தையும்
அத்தனை அசிங்கத்தையும் ஒன்று சேர்த்ததுபோல் அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
நண்பர் ஒருவர் சொன்னதைப்போல் “அவர் ஒன்றும் அதனை வாய்தவறிச்
சொன்னதாகத் தெரியவில்லை. நீங்கள் அந்த விடியோவைப் பாருங்கள்….. நிறுத்தி நிதானமாக உள்ளுக்குள்
அசைபோட்டு அசைபோட்டு அனுபவித்து அனுபவித்து வார்த்தை ஜோடனைகளுடன் இலக்கிய நயம் குன்றிவிடக்கூடாது
என்ற அக்கறையுடன்தான் சொல்லியிருக்கிறார் வைகோ” என்றார் அந்த நண்பர்.
வைகோ பேசியது காலையில்……… இந்தச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாகக்
கசிந்து மாலையில்தான் எல்லாருக்கும் போய்ச் சேருகிறது.
செய்தி போய்ச் சேர்ந்ததும் திமுக தொண்டன் கொதித்துப் போகிறான்.
எதிர்ப்பு நடத்த வெளியே வருகிறான்.
எதிர்ப்பின் வேகம் என்னவென்பதை ஒரு சிலரால் ஊகிக்க முடிகிறது.
மதுரையிலும் திருநெல்வேலியிலும் வேறு சில இடங்களிலும் தீ வைக்கப்பட்டதுபோல் செய்தி
பரவுகிறது. இணையதளங்களில் திரும்பத் திரும்ப பல்வேறு பதிவுகளில் வைகோவின் ‘அழகிய பேச்சு’
பகிரப்படுகிறது.
இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கி எப்படியெல்லாம் இந்த எதிர்ப்பு
எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு வேகமாகப் பரவும் என்பது சாதாரணமாய் அரசியலை கவனிப்பவர்களுக்கே
புரிகிறது.
இதன் வீச்சு எப்படியிருக்கும் என்பதையும், இந்த விபரீதம் எங்கேயெல்லாம்
கொண்டுசென்று முடியும் என்பதையும், இது எப்படியெல்லாம் விபரீதம் எடுக்கும் என்பதையும்-
புரியாதவரல்ல வைகோ.
பல தொலைக் காட்சிகள் இதுபற்றி விவாதிக்க ‘விவாத வீரர்களுக்கு’
அழைப்பு விடுத்து விட்டது என்ற செய்தியெல்லாம் அவரை எட்டுகிறது.
இது தேர்தல் நேரம்.
எந்தக் காற்று எப்படி வீசும் என்பதைக் கணிக்கவே முடியாத சூழலில்
இந்த விபரீதத்திற்கு தன்னால் தாக்குப் பிடிக்கமுடியுமா என்று யோசிக்கிறார் அவர். ‘முடியாது’
என்பதை அவரது அனுபவம் உணர்த்துகிறது. நண்பர்களும் சொல்கிறார்கள்.
உணர்ந்ததும் உடனே மன்னிப்புக்கடிதம் என்ற பெயரில் வருத்தம் தெரிவிக்கும்
ஒரு கடிதத்தை எழுதி வெளியிடுகிறார்.
கவனியுங்கள்.
காலையில் பேசிவிட்டு அடுத்த அரை மணி நேரத்திலோ, ஒரு மணி நேரத்திலோ
‘உணர்ந்து’ அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு எப்படியெல்லாம் எழப்போகிறது என்பதை
உணர்ந்தபிறகுதான், எல்லாவிதமான கணக்குகளையும் போட்டுப் பார்த்து அதன் அடிப்படையில்தான்
இந்த விபரீதத்தைச் சமாளிப்பது அவ்வளவு எளிதன்று என்பதைப் புரிந்தபிறகுதான்-
அன்றைய மாலையில் வருத்தமே தெரிவிக்கிறார்.
இந்த இடத்தில் வைகோவை விடவும் சும்மாவே அந்தரத்தில் ‘சம்மர்சால்ட்
பல்டி’ அடித்த சில மேதாவிகள்தான் முக்கியம்.
‘இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து அரசியலில் நடந்துகொள்ளக்கூடாது’
என்பதை வைகோவுக்கு உணர்த்தவேண்டிய ‘தமிழகத்து அண்ணன்மார்கள்’ உடனடியாக வைகோவைப் ‘புகழ்ந்து’
கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆமாம், கருணாநிதியைக் காயப்படுத்தியதற்குப் பரிசாக வைகோவைப்
‘புகழ’ ஆரம்பித்துவிட்டார்கள்.
‘என்னுடைய ஐம்பத்திரண்டு கால அனுபவத்தில் இப்படி எந்த ஒரு தலைவரும்
வருத்தம் தெரிவித்துப் பார்த்ததில்லை நான்’ என்கிறார் ஒரு ‘அண்ணன்’.
‘என்னுடைய ஐம்பதாண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன். நான் அரசியலை
அன்றையிலிருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறேன். உடனடியாக மன்னிப்புக் கேட்ட ஒரு தலைவரை
நான் பார்த்ததே இல்லை’ என்கிறார் இன்னொரு ‘அண்ணன்’.
‘என்னுடைய நாற்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில்……….’
என்று ஆரம்பித்து வைகோவைப் பாராட்ட துயிலெழுகிறார் மற்றொருவர்.
இவர்களுடைய ‘சமூக அக்கறை’ கண்டு மெய் சிலிர்க்கிறது.
தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் இத்தகைய ‘அற்புதமான அரசியல்
நடுநிலை வழிகாட்டிகளை’ எப்படிக் கொண்டாட வேண்டும்
என்பதே புரிபடாமல் திண்டாடித் திணற வேண்டியிருக்கிறது.
கலைஞரை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு மிகமிக தரம்தாழ்ந்து
பொதுவெளியில் பேசிக்கொண்டிருந்த சில ‘நடுநிலை மேதாவிகள்’ இந்தச் சந்தர்ப்பத்தையும்
வைகோவைப் பாராட்ட கிடைத்த சந்தர்ப்பமாக உருமாற்றும் செப்படி வித்தைகள் எந்த மாநிலமும்
காணாத ஒன்று.
இதுஒரு புறமிருக்க வைகோ என்பவர் எப்படிப்பட்ட மனிதர் என்று மனதில்
நிலைபெற்றிருக்கும் சித்திரத்தை இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு மனிதர் எப்படிப்பட்டவர்
என்பதை நாம் உணர ஒரு சில அனுபவங்களோ அல்லது ஒரேயொரு அனுபவமோகூட போதுமானதாயிருக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தெட்டாம் ஆண்டு. மே மாதம்.
இருபத்தைந்தாம் தேதி.
25 – 5 -1988.
இந்த நாளுக்கு தமிழகத்திலே ஒரு முக்கியத்துவம் உண்டு.
சில பேருடைய வாழ்க்கையிலே மிக அழுத்தமாகப் பதிந்துபோய்விட்ட
நாட்களில் ஒன்று இந்த நாள்.
இந்த நாளைத் தமது வாழ்க்கையில் மறக்கமுடியாத முக்கியமான ஒரு
நாளாகக் கருத வேண்டியவர் இளையராஜா.
ஏனெனில் அவருக்கு இசைஞானி பட்டம் மேற்கண்ட நாளில்தான் வழங்கப்பட்டது.
காரைக்குடியில் – கலைஞரால்!
இந்த நாள் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, எனக்கும் மறக்கமுடியாத
நாளாகவே அமைந்துவிட்டது.
அதற்குக் காரணமும் இளையராஜாதான்.
இது இளையராஜாவுடனான அனுபவத்தைச் சொல்லும் கட்டுரை அல்ல என்பதனால்
அந்த அனுபவத்தை வேறொரு நாளுக்குத் தள்ளிவைத்துவிட்டு இப்போது வைகோவுக்கு வருகிறேன்.
நடிகர் சிவகுமார் அவர்கள் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக
இருந்தபோது அவருக்கான வெளியூர் படப்பிடிப்பு எங்கே இருந்தாலும் ஒரு மூன்று நாட்களுக்கோ
நான்கு நாட்களுக்கோ என்னையும் உடன் அழைத்துக்கொள்வார்.
அதேபோல சென்னையைத் தவிர வெளியூர்களில் அவர் கலந்துகொள்ளும் முக்கிய
விழாக்கள் எதுவாக இருந்தபோதிலும் தவறாமல் என்னையும் அழைத்துக்கொள்வார். இது இன்றைக்கும்
தொடர்கிறது.
அதேபோல எண்பத்தெட்டாம் வருடம் சிவகுமார் அவர்களிடமிருந்து அந்த
இண்லாண்ட் லெட்டர் வந்திருந்தது. அப்போதெல்லாம் போன் இல்லை என்பதனால் கடிதப்போக்குவரத்துத்தான்.
‘மே மாதம் இருபத்தைந்தாம் தேதி புதன்கிழமை காரைக்குடியில் கலைஞர்
தலைமையில் இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெறுகிறது. நண்பர் பழ கருப்பையா நடத்துகிறார்.
நானும் கலந்துகொள்கிறேன். நீங்கள் 25ம் தேதி காரைக்குடி வந்துவிட்டு மறுநாள் காலையிலேயே
ஊருக்குத் திரும்பிவிடலாம்.அதற்கேற்ப புரோகிராம் அமைத்துக்கொண்டு வாருங்கள்’ – என்று
எழுதியிருந்தார்.
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஞானபீடம் பரிசுபெற்ற அகிலன் அவர்களின் இரண்டாவது மகன் ஜெகன்னாதனின்
திருமண நிச்சயதார்த்தம் 24ம் தேதி புதுக்கோட்டையில். நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றுவிட்டு
அங்கேயே தங்கி புதுக்கோட்டையிலிருந்து பக்கத்திலிருக்கும் காரைக்குடிக்கு மறுநாள் கிளம்பிப்
போனோமென்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பவும் காரைக்குடியிலிருந்து
26ம் தேதி கிளம்பி அன்றைக்கே திருச்சியில் நடைபெறும் அகிலன் மகன் திருமணத்தில் பங்கேற்கலாம்.
விஷயத்தைக் குறிப்பிட்டு சிவகுமார் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
‘மிக்க மகிழ்ச்சி. வாருங்கள். காரைக்குடியில் இறங்கி பழ கருப்பையா வீட்டிற்கு வந்துவிடுங்கள்.
அங்கே சந்திப்போம்’ என்று சுருக்கமாக பதில் போட்டிருந்தார்.
முதல் நாள் நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு மறுநாள் 25ம் தேதி
காலையில் புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்
காரைக்குடி சென்றோம். பஸ் நிலையத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கினோம்.
வெயில்
பயங்கரமாகக் கொளுத்திக்கொண்டிருந்தது..
தெரு பூராவும் போஸ்டர்களும் பேனர்களுமாக சாலையே தெரியாத அளவு
நிறைக்கப்பட்டிருந்தது. கலைஞரை வரவேற்று, இளையராஜாவை வரவேற்று, அரசியலுக்கு வந்துவிடுவேன்
என்று அன்றைக்கே போக்குக்காட்டிக்கொண்டிருந்த விஜயகாந்த்தை வரவேற்று என்று ஏகப்பட்ட
போஸ்டர்கள்.
பெயருக்கு இரண்டு பேனர்கள் சிவகுமாரை வரவேற்றும் வைக்கப்பட்டிருந்தன.
பழ கருப்பையா காரைக்குடியில் முக்கியமான புள்ளி என்பதனால் வீட்டைக்
கண்டுபிடிப்பதில் சிரமமிருக்கவில்லை. பழ கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது ஏகப்பட்ட
பிரமுகர்கள் சூழ அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் அவர்.
அவரை ஏற்கெனவே எனக்குத் தெரியும். நண்பர் தமிழருவி மணியன் மூலம்
பழ கருப்பையா ஏற்கெனவே பழக்கம் என்பதால் அறிமுகம் எதுவும் வேண்டியிருக்கவில்லை. பழ
கருப்பையாவைச் சுற்றி ஏகப்பட்ட செட்டியார்கள் கூட்டம்.
எல்லாரும் தமிழகம் அறிந்த மிக முக்கியமான பிரமுகர்கள். தமிழண்ணல்,
ஆறு.அழகப்பன் தொடங்கி ஏகப்பட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் ஒருபக்கம், ப.சிதம்பரத்தின்
அண்ணன் லட்சுமணன் தொடங்கி நான்கைந்து அரசியல் பிரமுகர்கள் மறுபக்கம், எஸ்.பி.முத்துராமன்,
பஞ்சு அருணாசலம் தொடங்கி ஏகப்பட்ட திரையுலகப் பிரபலங்கள் என்று அந்த இடமே அனைத்து ‘புகழ்பெற்ற
செட்டியார்களால்’ நிரம்பி வழிந்தது.
“வாங்க வாங்க நீங்க வருவீங்கன்னு சிவகுமார் இப்பத்தான் சொன்னார்.
அவரும் இளையராஜாவும் பத்து நிமிஷம் முன்புதான் வந்தாங்க. இப்பதான் இதோ இங்க பக்கத்துலதான்
தங்கியிருக்காங்க. நீங்க வேணும்னா சிற்றுண்டி சாப்பிட்டுட்டு அவங்க தங்கியிருக்கற இடத்துக்குப்
போய்க்கலாம்” என்றார் பழ.கருப்பையா.
அதற்குள் அங்கிருந்த தெரிந்த முகங்களிடம் வணக்கம் தெரிவித்து
இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு “இல்லை நாங்க டிபன் சாப்பிட்டுட்டோம். அவங்க தங்கியிருக்கற
இடத்துக்குப் போகிறோம்” என்றேன்.
யாரோ ஒரு உறவினரைக் கூப்பிட்டு “சிவகுமாரும் இளையராஜாவும் மாமா
வீட்ல இருக்காங்க. அங்க இவங்களைக் கூட்டிட்டு போய் விட்டுரு” என்று சொல்லி அவருடன்
எங்களை அனுப்பி வைத்தார்.
அதே தெருவில் ஒரு ஏழெட்டு வீடு தள்ளி இருந்த இன்னுமொரு பிரமாண்டமான
செட்டிநாட்டு மாளிகை அது.
அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளுமே ஒன்று போலவே இருந்தன.
அந்த வீடுதான் பழ கருப்பையாவின் மாமனார் வீடாம்.
எல்லா வீடுகளையும் போல அந்த வீடும் காலியாகத்தான் இருந்தது.
அதில்தான் சிவகுமாரும் இளையராஜாவும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
“கலைஞர், விஜயகாந்த் இவங்கெல்லாம் வந்துட்டாங்களா?” என்று உடன் வந்த நண்பரை விசாரித்தேன்.
“கலைஞர் ஐயா மாலைதான் வர்றாங்க. திருச்சியில் ஏதோ பெரிய திருமணம்.
கலைஞர்தான் நடத்தி வைக்கிறார். அதை முடிச்சுட்டு அங்கிருந்து நேராக இங்கே வர்றார்.
விஜயகாந்தும் மனோரமாவும் வந்துட்டாங்க. அவங்களை ஓட்டல்ல தங்க வைச்சிருக்கோம். சிவகுமார்
சாரும் இளையராஜா சாரும் ஓட்டல் வேணாம் வீடுகள்ளயே தங்கிக்கறோம்னு சொல்லிட்டாங்க. அதனால்தான்
இங்க அவங்களைத் தங்க வச்சிருக்கு” என்று நடைமுறை செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே
வந்தார் அந்த அன்பர்.
அதற்குள் வீடு வந்துவிட பிரமாண்டமான மாளிகை போலிருந்த அந்த வீட்டிற்குள்
போனோம். நடு ஹாலில் அமர்ந்து சிவகுமாரும் இளையராஜாவும் பேசிக்கொண்டிருந்தனர்.
“வாங்கய்யா வாங்க. நாங்க வந்தே ஒரு பத்து நிமிடம்தான் ஆகுது.
அதற்குள் வந்துட்டீங்களே” என்றபடியே வரவேற்றார் சிவகுமார்.
இருவருக்கும் வணக்கம் சொன்னோம்.
சிவகுமார் மட்டும் பதில் வணக்கம் சொன்னார்.
எங்களைக் கூட்டிவந்தவர் எங்களுக்கும் இரண்டு நாற்காலிகளை எடுத்துப்
போட்டுவிட்டு பவ்வியத்துடன் விடைபெற்றுக் கொண்டார்.
சிவகுமார், இளையராஜா அவர்களுடன் நான் மற்றும் என்னுடைய நண்பர்
கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு இரண்டு மணிநேரம் பல்வேறு செய்திகளையும் பேசியபடியே இருந்தோம்.
மீண்டும் ஒரு நினைவூட்டல்.
இளையராஜா அவர்களுடனான அனுபவங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுத
இருப்பதால் வைகோ அவர்களைப் பற்றிய செய்திக்கு நேராக வந்துவிடுகிறேன்.
எங்களைப் பகல் உணவிற்கு அழைத்துச் செல்வதற்காக பழ கருப்பையா
வீட்டிலிருந்து அன்பர் ஒருவர் வந்திருந்தார்.
அவருடன் நாங்கள் நால்வரும் சென்றோம்.
உணவு முடிந்தவுடன் “வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுங்கள்.
கலைஞர் சரியாக ஐந்து மணிக்கு வருவதாக இப்பத்தான் போனில் தகவல் வந்தது. நீங்க நாலரை
மணிக்கு வந்துடுங்க. அப்பத்தான் சரியாக இருக்கும். கலைஞர் வந்ததும் டிபன் சாப்பிட்டுவிட்டு
நேராக நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குப் போய்விடலாம். மைதானம் இங்கிருந்து சரியாக
ஒரு நிமிடம்தான். அதோ பாருங்க அதான் மைதானம்” என்று கீழ்ப்புறமாக கையைக் காட்டினார்
பழ கருப்பையா. அந்தப் பக்கம் பார்த்தபோது இரண்டொரு வீடுகள் தள்ளி தெரு முடிவடைந்து
ஒரு பெரிய மைதானத்தின் நுழைவு தெரிந்தது.
“மைதானத்துக்கும் நடந்தே போய்விடலாமா?” என்று கேட்டார் சிவகுமார்.
“இல்லை இல்லை பிரபலங்கள் எல்லாம் நடந்து போகமுடியாது. மக்கள்
விடமாட்டாங்க. இந்தப் பிரதான தெரு வழியாக சுற்றிக்கொண்டு காரில் வந்துரலாம். மத்தவங்க
எல்லாம் நடந்தே நேராக மைதானம் வந்துவிடலாம். சுத்திக்கிட்டு வரவேண்டிய தேவை இல்லை”
என்றார் பழ.கருப்பையா. மீண்டும் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்து
நால்வரும் குளித்துத் தயாராக இருந்தோம்.
மறுபடியும் நாலரை மணிவாக்கில் பழ கருப்பையா வீட்டிற்கு எங்களைக்
கூட்டிப்போக ஆள் வந்தது.
இப்போது பழ.கருப்பையா வீட்டிற்குச் சென்றபோது சிவகுமாரையும்
இளையராஜாவையும் எழுந்து வந்து வரவேற்றவர் விஜயகாந்த். பழ கருப்பையாவின் வீடு இப்போது
இன்னமும் அதிகப் பிரமுகர்களால் நிரம்பி வழிந்திருந்தது.
மதிய உணவு சமயத்திலேயே
மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வ.சுப.மாணிக்கம் உட்பட பலரும் வந்திருந்தனர். வீட்டின்
உள்ளேயே பொதுக்கூட்டம் போடலாம் என்ற அளவிற்கு பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது அந்த
இல்லம்.
ஒவ்வொருவரின் அறிமுகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்க வீட்டிற்கு
வெளியே ஒரு பெரிய மக்கள் கூட்டம் பிரமுகர்களின் தரிசனத்திற்காக நிறைந்திருந்தது. வீட்டைச்
சுற்றிலும் காவலர்கள் நின்றிருந்தார்கள். அதற்கிடையில் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த
எக்கச்சக்க மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக வீட்டின் எல்லா சன்னல்களையும் மூடியிருந்தார்கள்.
எல்லாப் பக்கங்களிலிருந்தும் ‘விஜயகாந்த் வாழ்க’ ‘விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம் எல்லாச்
சத்தங்களையும் மீறி கேட்டுக்கொண்டே இருந்தது. கலைஞரின் வருகைக்காக எல்லாரும் காத்திருந்தோம்.
கலைஞரின் கார் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்ற செய்திகள் காவலர்கள்
மூலம் அடிக்கடி சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது.
பத்து நிமிடம் சென்றிருக்கும்.
கலைஞர் இன்னமும் ஓரிரு நிமிடங்களில்
வந்துவிடுவார் என்ற செய்தி சொல்லப்பட திடீரென்று ஒரு பரபரப்பு அங்கே தொற்றிக்கொண்டது.
முக்கியமான பிரமுகர்கள் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள்.
கலைஞர் உள்ளே வரவும், வந்து அமரவுமான இடங்களும் இருக்கைகளும்
ஏற்பாடு செய்யப்பட்டன.
திடீரென்று “கலைஞர் வாழ்க கலைஞர் வாழ்க” கோஷங்கள் காதைப் பிளக்க
கலைஞரின் பரிவாரம் வந்து இறங்கிற்று.
ஏழெட்டுக் கார்களில் கலைஞரும் அவருடன் வந்திருந்தவர்களும்
இறங்கினர்.
கலைஞர், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி
ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, தென்னரசு, துரைமுருகன், வை.கோபால்சாமி, கோ.சி.மணி,
ரகுமான் கான், செல்வேந்திரன் என்று ஏகப்பட்ட திமுக பிரபலங்கள் கலைஞரைத் தொடர்ந்து திபுதிபுவென்று
வந்தனர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் பேராசிரியர் அன்பழகன் ஒருவரைத் தவிர அன்றைக்கு
யார் யார் திமுகவில் முன்னணியில் இருந்தார்களோ, யாரெல்லாம் எம்பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும்
இருந்தார்களோ அவர்கள் அத்தனைப் பேரும் வந்திருந்தனர் என்றே சொல்லலாம்.
உள்ளே வந்ததும் அங்கிருந்தவர்கள் அத்தனைப் பேரையும் கலைஞருக்குப்
பழ.கருப்பையா அறிமுகம் செய்துவைத்தார். அவர் அறிமுகம் முடிந்ததும் சிவகுமார் சினிமா
தொடர்பானவர்களை அறிமுகம் செய்தார்.
அப்படியே உட்காருவது என்று முடிவானது.
நாற்காலிகள் இங்கேயும் அங்கேயுமாகப் போடப்பட எல்லாரும் அவரவர்
நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
கலைஞருடனேயே ஒட்டியபடி இருந்த வைகோ சட்டென்று “எனக்கு நாற்காலியெல்லாம்
வேண்டாம்ப்பா. நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்” என்று சத்தமாகச் சொல்லியபடியே கலைஞரின்
காலடியில் உட்கார்ந்துவிட்டார்.
“இல்லை இல்லை இதோ சேர் இருக்கு. இப்படி உட்காருங்க” என்று சொல்லி
அவருக்கு நாற்காலி போடப்பட-
“எனக்கு வேணாம். வேணும்ங்கறவங்க சேர்ல உட்காருங்க. எனக்குத் தலைவரின் காலடிதான் சொர்க்கம். நான் சொர்க்கத்தில்
உட்கார்ந்துக்கறேன்” என்றபடியே நாற்காலி வேண்டாம் என்பதற்கடையாளமாக இரு கைகளையும் வேண்டாம்
என்று அசைத்தார்.
பழ.கருப்பையா வீட்டில் ஏற்பாடுகளையெல்லாம் கவனித்தவர்கள் பதறிவிட்டனர்.
“இல்லை அண்ணே மேலே உட்காருங்க. இதோ நாற்காலி இதில் உட்காருங்க” என்றபடி யாரோ ஒரு திமுக
பிரமுகர் அவருக்கு நாற்காலியை விட்டுக்கொடுத்தார்.
மாட்டேன் என்று மறுத்தார் வை.கோபால்சாமி.
“இல்லை இல்லை ஒருத்தர் மட்டும் அப்படி உட்கார்ந்தா சரிப்படாது.
நீங்க மேல உட்காருங்க” என்று பலரும் அவருக்குச் சொன்னார்கள்.
“நாந்தான் சொல்றனே… என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்னு. நான் சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன். எதுக்குஎன்னைத் தடுக்கறீங்க?” என்றார் அவர்.
“அப்ப எங்களுக்கெல்லாம் தலைவனின் காலடி சொர்க்கமில்லையா என்ன?
நாங்க மேலே நாற்காலியில் உட்காரலை? சும்மா ‘டிராமா’ பண்ணாம எழுந்து மேலே உட்காருங்க”
என்று யாரோ ஒரு திமுக பிரமுகர் சொன்னார்.
“நீங்க உட்கார்ந்துட்டீங்க இல்லை? சும்மா விட்டுருங்க. நான்
சொர்க்கத்தில் உட்கார்ந்திருக்கேன்” என்றபடி தம்முடைய பேச்சை அழுத்தம் திருத்தமாகப்
பதிவு செய்வதில் அக்கறையாக இருந்தார் வைகோ.
இவை எதையும் ‘கவனிக்காதவர் போன்ற’ பாவனையில் பக்கத்தில் அமர்ந்திருந்த
மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வ.சுப.மாணிக்கத்திடம் பேசுவதில் சுவாரஸ்யமாய் மூழ்கி
இருந்தார் கலைஞர்.
கலைஞருக்கு அடுத்து மூன்றாவதாக உட்கார்ந்திருந்த ஒருவர் திடீரென்று
எழுந்தார்.
“யோவ் கோபால்சாமி எந்திருய்யா. என்ன டிராமா பண்றியா? எல்லார்
முன்னாடியும் ஷோ காட்றீயா? உனக்கு மட்டும்தான் தலைவரு… எங்களுக்கெல்லாம் தலைவரில்லையா?
காலடி, சொர்க்கம்னு வசனமெல்லாம் பேசிக்கிட்டு? எந்திருச்சி மேலே உட்காரப்போறீயா இல்லையா?”
என்றார் அதட்டலான குரலில்.
கடுமையானதொரு நிசப்தம் அங்கே சட்டென்று விழுந்தது.
ஒரேயொரு கணம்தான்.
மறுவார்த்தைக்கு இடமில்லாதபடி சட்டென்று எழுந்த வைகோ தமக்கென்று
ஒதுக்கப்பட்ட நாற்காலியில் சென்று அமர்ந்தார்
வைகோவுக்கு ஒரு ‘அதட்டல்’ போட்டு அவரைத் தன்னிலைக்குக் கொண்டுவந்தவரும்
தமது இடத்தில் அமர்ந்துகொண்டார்.
அந்த மனிதர் முரசொலி மாறன்.
வைகோவின் செய்கை அந்த இடத்தில் நடைபெற்ற ஒரு இயல்பான நிகழ்வாக
இல்லாமல் ‘சீன் போடுவது’ என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் தோன்றிற்று.
எத்தனைக் கூட்டங்கள் பார்த்தவர், எத்தனைப் பாராளுமன்றங்களைப் பார்த்தவர் எதற்காக எல்லார்
முன்னிலையிலும் இத்தனைச் செயற்கையாக நடந்துகொள்கிறார் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருந்தது.
அவருடைய அந்தச் செய்கை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து அவ்வளவு
சீக்கிரமாக விடுபட இயலவில்லை. இவர்களெல்லாம் வேடிக்கை மனிதர்களா, அல்லது காரியக்காரர்களா
அல்லது போலி மனிதர்களா என்ற எண்ணம் சுற்றிச் சுழன்றபடியே இருந்தது. ஒரு முடிவுக்கும்
வர முடியவில்லை.
முரசொலி மாறனின் கடமை அத்தோடு முடியவில்லை.
இளையராஜாவைப் பக்கத்தில் கூப்பிட்டு அமரவைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார்
கலைஞர். அவர்களது உரையாடல்களைப் பாதிக்கும்விதமாக வெளியிலிருந்து விடாப்பிடியாக ஒரு
கோஷம் ஒலித்தபடியே இருந்தது. அது ‘விஜயகாந்த் வாழ்க, விஜயகாந்த் வாழ்க’ என்ற கோஷம்.
உள்ளே இருந்தவர்கள் ‘நார்மலாக’ இருக்கமுடியாத அளவுக்கு அடிக்கடி பதம் பார்த்தபடி இருந்தது
அந்தக் கோஷம்.
ஒரு கட்டத்தில் அந்தக் கோஷங்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குப்
போக………… இளையராஜாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டு முரசொலி மாறனை ஒரு பார்வைப் பார்த்தார்
கலைஞர்.
அவ்வளவுதான்.
கலைஞரின் பார்வை என்ன ‘சொல்கிறது’ என்பதை உணர்ந்துகொண்ட முரசொலி
மாறன் உடனடியாக எழுந்தார்.
விஜயகாந்தைப் பார்த்து “விஜயகாந்த் ஒரு நிமிஷம் இப்படி வாங்க”
என்று சொல்லித் தனியாகக் கூட்டிப்போனார். அவரது முதுகில் கை வைத்தபடியே அவரிடம் என்னமோ
பேசிவிட்டு மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்ந்துகொண்டார்.
அவர் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ தெரியவில்லை. அவருடைய பேச்சில்
என்ன மாயம் இருந்ததோ மகத்துவம் இருந்ததோ தெரியவில்லை.
பிரதான கதவைத் திறந்துகொண்டு வெளியில்போன விஜயகாந்த் அங்கிருந்த
தமது ரசிகர்களிடம் எதையோ பேசினார். மீண்டும் உள்ளே வந்தார்.
என்ன ஆச்சரியம்………..
அத்தனை நேரமும் யாரையும் பேசவிடாமல், கேட்கவிடாமல்,
சும்மா உட்காரவிடாமல் செய்துகொண்டிருந்த வாழ்க கோஷமும், கூச்சல் குழப்பமும் சட்டென்று
முடிவுக்கு வந்திருந்தது.
அந்த இடத்தில் அந்த அளவு அமைதி குடிகொண்டு விட்டது.
சிறிது நேரம் சென்றது.
கலைஞரும் மற்றவர்களும் ஒவ்வொருவரிடமும் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ஐயா ஒரு சின்ன சிற்றுண்டி சாப்பிட்டுரலாமா?” என்று கலைஞரிடம் கேட்டார் பழ.கருப்பையா.
கலைஞர் எதிரில் இடம் சரிசெய்யப்பட்டு ஒரு குட்டி டேபிள் போடப்பட்டது.“அப்படியே பரிமார்றதுக்கு
ஏற்பாடு பண்ணியிருக்கேன். நீங்க உட்கார்ந்தபடியே சாப்பிடலாம்” என்றார்.
நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டார் கலைஞர்.
“எல்லாரோடவும் வரிசையில உட்கார்ந்துக்கறேன். அப்படியே எல்லாரும்
ஒரே சமயத்துல சாப்பிட்டுரலாமே” என்றார்.
உடனடியாக பாய்களும் ஜமக்காளங்களும் விரிக்கப்பட்டு பள்ளிகளில்
மதிய உணவு சாப்பிடுவதற்கு வரிசையாக மாணவர்கள் உட்காரவைக்கப்படுவார்களே அப்படி எல்லாரும்
சுவரை ஒட்டி ஒரு வரிசை, எதிர்த்தாற்போல ஒரு வரிசை என்று நெடுகிலும் உட்கார்ந்துகொள்ள
பணியாரம், அப்பம், போண்டா, பஜ்ஜி என்று பரிமாறப்பட்டது.
எல்லாருடனும் ஒன்றாய் தரையில் அமர்ந்து சாப்பிட்ட கலைஞர் ஏதோ
பெயருக்கு சாப்பிட்டவர்போல எழுந்துகொண்டார். “நான் எழுந்துட்டேன்னு எல்லாரும் எழுந்துராதீங்க.
உங்களுக்கெல்லாம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் சாப்பிட்டு எழுந்திருங்க” என்று சொல்லியபடியே
ஒரு நாற்காலியில் அமர்ந்து தமக்கு வழங்கப்பட்ட காப்பியைப் பருகத் தொடங்கினார்.
இந்தக் காட்சி நிச்சயம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.
இத்தனை எளிமையாக எல்லோருடனும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு
வேறு சில முதலமைச்சர்களும் தலைவர்களும் தயாராக இருப்பார்களா என்ற சிந்தனை நிச்சயம்
இந்த இடத்தில் தேவை.
எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் காத்திருந்தவர்போல “நேரமாயிருச்சி.
கிளம்பலாமா?” என்றார் கலைஞர்.
அதற்குள்ளாக மைதானத்தில் எத்தனைக் கூட்டம் வந்திருக்கிறது, இங்கே
வராத மனோரமா போன்ற ஒரு சில பிரபலங்கள் மேடைக்கு நேரடியாக வந்துவிட்டார்கள் இசை நிகழ்ச்சி
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது போன்ற தகவல்கள் காவலர்கள் மூலமாகச் சொல்லப்பட்டன.
முக்கியப் பிரமுகர்களும் மற்றவர்களும் கார்களில் ஏறிக்கொள்ள
மற்ற பிரமுகர்களும் பிரபலங்களும் குறுநடை நடந்தபடியே மைதானத்தை அடைந்தோம்.
மைதானத்தில்
பயங்கரக் கூட்டம்.
குறைந்தது ஐம்பதாயிரம் பேராவது இருந்தார்கள்.
முன்பு எப்போதோ ஒரு சமயம் அண்ணா கலைஞர் எல்லாரும் வந்திருந்தபோது
இப்படியொரு கூட்டம் இங்கே கூடியிருந்தது எனவும், பின்னர் கவிஞர் கண்ணதாசன் காமராஜரைக்
கூட்டிவந்து கூட்டம் போட்டபோது இந்த அளவுக்குக் கூடியிருந்தது எனவும் ‘அதற்குப் பிறகு
இன்றைக்குத்தான் இத்தனைப் பெரிய கூட்டத்தை என் வாழ்நாளில் பார்க்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்
மைதானத்தின் எதிர் சாலையில் டீக்கடை வைத்திருந்த ஒருவர்.
நாங்கள் மைதானத்திற்குச் சென்று சேர்ந்தபிறகு சில நிமிடங்கள்
கழித்துத்தான் கலைஞர், இளையராஜா சிவகுமார் விஜயகாந்த் போன்ற பிரபலங்களின் கார்கள் மேடையருகே
வந்தன. மக்களின் ஆரவாரங்களுக்கிடையே கலைஞரும் மற்றவர்களும் மேடையேறினார்கள். எல்லாரும்
மேடையில் நாற்காலிகளில் அமர வைக்கப்பட கலைஞர் மேடையின் நாற்புறமும் சென்று மக்களுக்குக்
கையசைத்தபடி இருந்தார்.
நாங்கள் சிலர் மேடையின் ஒரு ஓரமாக நின்றுகொண்டோம்.
இங்கே மேடையில் யார்யாருக்கு எந்த நாற்காலி என்று பழ.கருப்பையா,
முரசொலி மாறன் என்று இன்னும் சிலர் மற்றவர்களை அமர வைத்துக்கொண்டிருக்க “இங்கேயும்
டிராமா பண்ணப்போறியா? பேசாமல் உன்னுடைய நாற்காலியில் உட்கார்” என்று முரசொலி மாறன்
யாரிடமோ கோபமாகச் சொல்லிக்கொண்டிருந்ததும், ‘என்னுடைய தலைவன் காலடியில் உட்கார்ந்துக்கறேன்னு
சொல்றேன். அதுக்கு விடமாட்டேங்கறீங்க’ என்று முரசொலி மாறனுக்கு யாரோ பதில் சொல்லிக்கொண்டிருந்ததும்
கேட்டது.
மேடையில் கூட்டம் அதிகமாயிருந்ததால் பிரமுகர்கள் அமரும் இடத்தில்
என்ன நடைபெற்றது என்பதும் யார் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.
பின்னர், விழா தொடங்கி நடைபெற்றதும், மனோரமா, தென்னரசு, கலைமணி,
ஜி.கே.வெங்கடேஷ், தமிழண்ணல், வை.கோபால்சாமி ஆகியோர் மேடையில் பேசியதும் இவர்களைத் தொடர்ந்து
சிவகுமார், விஜயகாந்த், இளையராஜா ஆகியோர் பேசியதும் கலைஞர் பேசும்போது இளையராஜாவுக்கு
இசைஞானி என்ற பட்டத்தைத் தந்து பேசியதும் எல்லோருக்கும் தெரிந்த, பத்திரிகைகளில் செய்திகளாக
வந்த நிகழ்வுகள்……
நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் கிளம்பிப் போனதும் பழ.கருப்பையா
வீட்டில் தங்கியிருந்த நாங்கள் மட்டும் மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்று இரவு சிற்றுண்டியை
முடித்துக்கொண்டு- நாங்கள் என்றால்- சிவகுமார், இளையராஜா, நான், என்னுடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி
ஆகியோர் மட்டும் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியதும், நடைபெற்ற கூட்டத்தைப்
பற்றியும், பேசியவர்களின் பேச்சுக்கள் பற்றியும் இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட இசைஞானி
பட்டம் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வதற்கு இரவு பதினொன்றரை
மணிக்கு மேல் ஆகிவிட்டது.
இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவிலும், அதிலும் குறிப்பாக
‘இசைஞானி’ பட்டம் வழங்கப்பட்ட நிகழ்விலும்
காலையிலிருந்து அவர் கூடவே தங்கியிருந்ததும், இரவு அதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப்
படுக்கைக்குச் சென்றதும் மறுநாள் காலையில் அவருடனேயே காரில் கிளம்பி பாதிவழியில் இறங்கிக்கொண்டு
நான் திருச்சி திரும்பியதும், அவர் மதுரை சென்றதும் இனிமையான நினைவுகள்…..
இளையராஜாவின் நினைவுகள் ஒருபுறமிருக்க, அன்றைய நிகழ்வுகளில்
வைகோவின் செயல்பாடுகளும் மறக்க முடியாத பதிவுகளாக மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன.
அதுவும் அவர் கலைஞரைப் பற்றி அவ்வப்போது பேசுகின்ற பேச்சுக்கள் அத்தனையும் உடனடியாக
எனக்கு எப்போதுமே காரைக்குடியில் பழ.கருப்பையா வீட்டில் நடைபெற்ற அந்த சம்பவத்தையும்,
அவர் சொன்ன ‘என்னுடைய தலைவனின் காலடிதான் எனக்கு சொர்க்கம்’ வசனத்தையும் நினைவூட்டி
விடுகின்றன.
அதுவும் தற்போது அவர் கலைஞரைப் பற்றிப் பேசிய பேச்சும் இந்த
சம்பவத்தை மிக அதிகமாகவே நினைவூட்டிவிட்டன.
அத்தனை செயற்கையாக புகழ்பெற்ற ஒருவரால் நடந்துகொள்ளமுடியுமா
என்பதும், போகிற போக்கில் என்னமாதிரியான டயலாக்குகளையும் சர்வ சாதாரணமாக ஒருவரால் அவிழ்த்துவிட
முடியுமா என்பதும், எவ்வளவு பேர் இருந்தபோதிலும் அத்தனைப் போலித்தனமாக ஒருவரால் நடந்துகொள்ள
முடியுமா என்பதுவும் இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே இருக்கிறது.
அந்தச் செயல்களின் மூலம் அவரது ‘கேரக்டர்’ எத்தகையது என்பதை
மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ‘சீன் போட்டே ஜெயிப்பவர்கள்’ என்ற பட்டியல் ஒன்று
தயார் செய்யலாம் போலிருக்கிறது.
நேரத்திற்கு ஏற்றாற்போல தங்களைக் காட்ட நினைக்கும் பச்சோந்திகள்
மத்தியில் சமயமறிந்து, தலைவனின் குறிப்பறிந்து செயல்படும் முரசொலி மாறன் போன்றவர்களின் ஆளுமையும்
திறமையும்தான் கலைஞர் போன்றவர்களின் வெற்றிக்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ள
முடிகிறது.
ஒன்று மட்டும் நிச்சயம்…. கலைஞர் முரசொலி மாறனை இவ்வளவு விரைவாக
இழந்தது அவருக்கு மிகப்பெரிய இழப்பு என்பது மட்டும் நிதர்சனம்.