Thursday, May 19, 2011

கலைஞரின் தோல்வி-சில அடிப்படைக் காரணங்கள்



தமிழகத்தேர்தல் முடிவுகளைப் பத்திரிகைகளும் இணையத்துப் பதிவுலகமும் பிய்த்துப்போட்டு ஆய்ந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் திமுகவுக்கு மட்டுமல்ல; அதிமுகவுக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளே இவை. தமிழக வாக்காளன் இப்படித்தான் ஓட்டளிக்கப்போகிறான் என்பது தெரிந்திருந்தால் ஜெயலலிதா பத்துப்பதினைந்து நாட்கள் அலைந்து வேனுக்குள் உட்கார்ந்து பிரச்சாரம் செய்த சிரமத்தைக்கூட மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை. இன்னொரு அறிக்கையை மட்டும் கொடுத்துவிட்டுப் பேசாமல் ஓட்டு எண்ணுவதற்கு முந்தின நாள் மட்டுமே கொடநாட்டை விட்டு வந்திருந்தாலே போதுமானது. அப்போதும் இதே முடிவுதான் வந்திருக்கும்.

எந்த விஷயமாயிருந்தாலும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து உட்கார்ந்து கட்டுரை எழுதும் கலைஞரே இதுவரையிலும் ‘மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்’ என்ற ஒற்றை வரியைத்தாண்டி ஒன்றையும் சொல்லவில்லை. திமுகவின் எந்தத் தலைவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. கருத்து எதுவும் சொல்வதற்கு இல்லையா, அதிர்ந்து போயிருக்கிறார்களா, அல்லது கையறு நிலையில் இருக்கிறார்களா என்பது எதுவும் புரியவில்லை.

ஆனால், தமிழ் இன உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் மிகவும் மகிழ்ந்து கருத்துச்சொல்லியிருக்கிறார்கள். ‘ஈழத்தில் தமிழ்இன அழிப்பிற்குக் காரணமாயிருந்த காங்கிரசும் அந்தக் கட்சிக்குத் துணைபோன களவாணிகளான திமுகவும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். திமுகவை மிரட்டி அறுபத்துமூன்று இடங்களை வாங்கிய காங்கிரஸ் வெறும் ஐந்து இடங்களில்தான் வெற்றிபெற்றிருக்கிறது’ என்று உளம் மகிழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரியானதாகத் தோன்றினாலும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கும்போது இது வேறுமாதிரியானதாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

உண்மையில் காங்கிரஸ் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் வெற்றிபெற்றிருக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம்.

இந்த உண்மை நிச்சயம் சுடும். சுடுகிறது.

கலைஞர் என்ற பெயர் மக்கள் மத்தியில் தனியானதொரு இடத்தைப் பெற்றிருந்தது. இளைஞர்களுக்குப் பெரிதாக இவர் மீது அபிமானம் இல்லையென்ற போதிலும் கோபமோ வெறுப்போ இருந்ததில்லை. அதுவும் நடுநிலையாளர்கள் எப்போதுமே அவர் மீது மிகுந்த நல்லெண்ணமும் மரியாதையும் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.எல்லாமே ஈழ விவகாரத்தில் மாறிப்போயின. இவர் பெரிதாக எதையோ செய்வார் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் மனதில் தீயைக்கொட்டிய சம்பவம் உண்ணாவிரதக் காட்சிதான். சிதம்பரத்திடமிருந்து போன் வந்துவிட்டது, போரை நிறுத்த ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று அறிவித்துவிட்டு இவர் உண்ணாவிரதத்தை முடித்ததும் அதற்கடுத்து நடந்த சம்பவங்களும் அவருடைய நற்பெயரை நடுநிலை மக்களிடமிருந்து துடைத்துப்போட்டுவிட்டன. இதன் தாக்கம் உடனடியாய் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓரளவுக்கு மட்டுமே தெரிந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸூக்கு வேறுமாதிரியான திட்டங்கள் இருந்திருக்கவேண்டும். தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் இல்லாமல் போகவேண்டும் என்பது ராகுலின் திட்டமாக இருக்கலாம். அதற்கு முதலில் திமுகவைக் காலி செய்தாக வேண்டும். அதிமுகவை எப்போது வேண்டுமானாலும் தாங்கள் நினைத்தபடி கபளீகரம் செய்யலாம், அல்லது சுருட்டிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். ஆனால் திமுக என்பது அப்படியல்ல; அவ்வளவு எளிதில் அந்த இயக்கத்தை சாய்த்துவிட முடியாது. அரசியல் ரீதியாக அவ்வளவு சுலபமான காரியமல்ல அது. அதனால் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ள திமுகவைப் பதம் பார்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதைத் தீர்மானித்திருக்கலாம். நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது இதை நோக்கித்தான் டெல்லியில் இரண்டொரு வருடங்களாகவே காய் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அதனால் கலைஞருக்கு ஏகப்பட்ட பொறிகள் வைக்கப்பட்டன. இந்திய அரசியல்வாதிகளில் கைதேர்ந்த ராஜதந்திரி என்று மதிக்கப்படும் கலைஞர் இந்தப் பொறிகளில் தாமாகவே சென்று விழுந்த காட்சிகள் நிறையக் காணக்கிடைக்கின்றன. ஈழ விவகாரத்திலேயே தமிழினத்தலைவரின் இமேஜ் காணாமல் போய்விட்டதையும் அவர் அந்தக் காலத்தில் மொழிக்காகவும் இனத்துக்காகவும் போராடிய, லட்சக்கணக்கான மக்களைத் தமது எழுத்தாலும் பேச்சாலும் போராட்டத்துக்குத் தூண்டித் தமது பின்னால் அணிவகுக்கச் செய்யும் தானைத்தலைவராக இல்லாமல் போய்விட்டதையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டுவிட்டார்கள். அதனுடைய முதல் அறிகுறிதான் அமைச்சர் பதவி வாங்க டெல்லி சென்றவரைக் காத்திருக்கச்செய்து அதையெல்லாம் ஆங்கில ஊடகங்களில் வரச்செய்து கடைசிவரை சந்திக்கமுடியாது என்று சொல்லி அவமானப்படுத்தி அனுப்பி வைத்தது.


அதற்கடுத்து ஈழ விவகாரங்களிலும் சரி, ஒவ்வொரு முறையும் தமிழகத்து மீனவர்களை இலங்கைக் கடற்படை கொடூரமான முறையில் சுட்டு வீழ்த்தும்போதும் சரி இவரது வேண்டுகோள்களை சல்லிக்காசுக்குக்கூட மதிக்காமலேயே நடந்துகொண்டது டில்லி. இவரும் எல்லாப் போர்க்குணங்களையும் இழந்த நிலையில் ஈனஸ்வரத்தில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதையும், இனிமேல் இப்படி ஆகாது என்று அவர்கள் சொல்வதை நம்பி அடுத்த வேலையைப் பார்ப்பதையும் மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தார்- மக்களின் நம்பிக்கையைத் தாம் இழந்துகொண்டே வருகிறோம் என்பதை அறியாமலேயே!

அடுத்து வந்தது மிகமிக முக்கியமான விஷயம். மரணப்படுக்கையிலே இருந்த பார்வதி அம்மாள் சிகிச்சை வேண்டி தமிழகம் வந்தார். உண்மையில் கலைஞர் தமக்குக் கிடைத்த பொன்னான ஒரு சந்தர்ப்பமாக இதனைக் கருதியிருக்கவேண்டும். தாம் தெரிந்தோ தெரியாமலோ ஈழ விவகாரத்தில் நடந்துகொண்ட விதத்திற்குப் பிராயச்சித்தமாக நினைத்துச் செயல்பட்டிருக்க வேண்டும். சுயநினைவுகூட இல்லாமல் சிகிச்சை வேண்டித் தமிழகம் வந்த அந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பிய விதம் இருக்கிறதே மனித நேயம் உள்ள அத்தனை மக்களையும் பதறித்துடிக்கவைத்த சம்பவம் அது. விடுதலைப்புலிகளை ஆதரிக்காதவர்கள் கூட அனுதாபப்பட்ட விவகாரம் அது. ‘மத்திய அரசின் இலங்கைப் பற்றிய வெளிவிவகாரக்கொள்கை எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். நான் இதனை மனித நேயத்துடன்தான் அணுகுவேன். அவர்கள் இங்கே தாராளமாக சிகிச்சைப் பெறலாம்’ என்று மட்டும் அறிவித்திருந்தாரானால் தமிழ் உணர்வாளர்களின் வெறுப்பெல்லாம்கூட வடிந்துவிட்டிருக்கும். ‘இலங்கையிலிருந்து திரும்பும் அமைதிப்படையை வரவேற்கப்போகமாட்டேன்’ என்று அறிவித்தாரே அன்றைக்கு ஏற்பட்ட மரியாதைக்கு சற்றும் குறையாத மரியாதையை இந்த விவகாரத்திலும் பெற்றிருக்கலாம். தவிர இலங்கை விவகாரத்தில் நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் வரமாட்டேன் என்ற செய்தியை மத்திய அரசுக்கு அறிவிக்கும் செயலாகவும் இதனைச் செய்திருக்கலாம். ஆனால் மத்திய அரசாங்கத்தின் எண்ணத்திற்கு மாறாக மனிதநேயச் செயலைக்கூடச் செய்யமாட்டேன் என்று உணர்த்துவதில்தான் அவர் கவனமாக இருந்தார். மாற்றி மாற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் உணர்வாளர்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் பெண்களிடமும் மாறாத கோபத்தையும் வெறுப்பையும் இவர்மீது ஏற்படுத்தவே செய்தது .

ஈழ விவகாரம் பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது என்பது பொய்த்துப்போனது. இளைஞர்கள் அதுவும் ஐடி இளைஞர்கள் இவர்மீது மாறாத கோபத்தில் இருந்திருக்கின்றனர் என்பதைத் தேர்தல் முடிவுகளும் இணையத்தில் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களும் மெய்ப்பிக்கின்றன. இதற்கு ஆதரவாக ஒரு செய்தியை இங்கே குறிப்பிடவேண்டும். பெங்களூர் நகரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் ஐடியில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்தி. தேர்தலுக்கு முந்தைய தினம் பெங்களூர் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம். என்ன காரணம்? எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு ஓட்டுப்போடுவதற்காகப் புறப்பட்டிருந்தனர். கிடைக்கிற பஸ்ஸைப்பிடித்துப் போய்விடலாம் என்று சில்க்போர்டு அருகே மாலை ஐந்து மணிக்கு நின்றசிலருக்கு ஒரு பேருந்திலும் இடம் கிடைக்காமல் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சாட்டிலைட் பஸ்நிலையம் வந்து அங்கிருந்து ஏதோ பஸ்ஸை எப்படியோ பிடித்து ஊர்களுக்குச் சென்று திமுக அணிக்கு எதிராக ஓட்டுப்போட்டு வந்தார்களாம். போய் வந்த ஒருவர் சொன்னார். “அங்கே வந்திருந்த பலபேருக்கு தங்கள் தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்ற விஷயம்கூடத்தெரியாது. அவர்கள் விசாரித்துத் தெரிந்துகொண்டதெல்லாம் இங்கே திமுக அணியை எதிர்த்து நிற்பது யார்? அதிமுகவா அதன் கூட்டணியா என்பது மட்டும்தான். இந்த மொத்தக்கூட்டமும் இவர்களுடைய கைக்காசைச் செலவழித்துப்போய் திமுகவுக்கு எதிராக ஓட்டுப்போட்டுவிட்டு வந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.” புதிய வாக்காளர்களின் மற்றும் இளைஞர்களின் ஓட்டு நூறு சதவிகிதமும் கலைஞருக்கு எதிராகத் திரும்பியது இப்படித்தான்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் சாதாரண விஷயமல்ல என்பதை இவர் ஏன் கவனிக்கதவறினார் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஒரு லட்சத்து எழுப்பத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்றே தெரியவில்லை’ என்ற ஒரு வார்த்தை மந்திரம்போல் தமக்கு எதிராகச் சுழலப்போகிறது என்பதை அறியாதவராகவே இவர் நடந்துகொண்டார். அத்தனைப் பெரிய ஊழல் – அது எப்படியெல்லாம் தம்மையும் தமது குடும்பத்தையும் பின்னி வளைக்கப்போகிறது என்பதையோ அதில் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நடவடிக்கையையோ எதையுமே மேற்கொள்ளாமல் தம்மை எப்படியும் சோனியா காந்தி பாதுகாத்துவிடுவார் என்று வெள்ளந்தியாக நம்பிக்கொண்டிருந்ததையும் எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை.

‘என்ன செய்தாலும் இந்த மனிதர் ஒன்றும் சொல்லாமல் தாங்கிக்கொள்கிறாரப்பா; மிச்சமிருக்கிற எல்லாவற்றையும் தூக்கி இவர் மேலேயே போடு. நாம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்’ என்பதுபோன்ற எண்ணத்தை மேலேயிருப்பவர்களுக்குத் தருவதுபோலவே எல்லாவற்றுக்கும் பேசாமல் இருந்தார்.

இவரது தற்காப்பு ஆயுதங்கள் ஒன்றுமே இல்லாமல் போய்க்கொண்டேயிருந்தன. கூட்டணியின் பிரதானக் கட்சியான காங்கிரஸ் இவருக்கான எதிர்ப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தீவிரமாகத் தொடங்கியது. மாநிலத்தலைவர்கள் மாறிமாறி இவரைக் கேவலமாகப் பேச ஆரம்பித்தனர். அத்தனையையும் மறுவார்த்தைப் பேசாமல் பொறுத்துக்கொண்டார் இவர். யுவராஜ் போன்ற ‘மக்கள் தலைவர்களை’ உருவாக்கி வசை பாட வைத்தார்கள். ‘ம்மா இந்தப் பையன் என்னை கேலி செய்யறாம்மா’ என்று அம்மாவிடம் முறையிடும் சின்னக்குழந்தைகள்போல் சோனியா காந்தியிடமும் குலாம்நபி ஆசாத்திடமும் முறையிட்டாரே தவிர ஒரு சின்ன எதிர்ப்பைக்கூட இவர் காட்டவில்லை. அவர்களும் இவர் சொன்னாரே என்பதற்காக ஒரு வாரம் பேசாமல் இருக்கச்சொல்வார்கள். மறுவாரமே இன்னொருவர் வசையை ஆரம்பிப்பார். தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கின்றவரையிலும் திட்டமிட்டு காங்கிரஸ் இதனைச் செய்தது. ‘பொறுமையின் சிகரம் கலைஞர்தான்’ என்ற பட்டத்தை வாங்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ அத்தனை வசைகளையும் பேசாமலேயே தாங்கிக்கொண்டார். ‘கலைஞர் மிகவும் பலகீனப்பட்டுவிட்டார்’ என்ற கருத்து மக்களிடம் வருவதை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோர்ட்டின் பிடி இறுகிக்கொண்டே வர தேர்தல் நெருங்கியது. ராசா உள்ளே போய்விட தயாளு அம்மாள், கனிமொழி என்று கிடுக்கிப்பிடி போடப்பட்டது. அறிவாலயத்தின் ஒரு தளத்தில் சிபிஐ விசாரணை இன்னொரு தளத்தில் தேர்தல் பேச்சு வார்த்தைகள் என்று காங்கிரஸின் பலே வியூகங்கள் கச்சிதமாக வகுக்கப்பட்டன. அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்வதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளப்படுகிறார் கலைஞர்.

காங்கிரஸின் நீக்குப்போக்குகளைத் தெரிந்த அவர் சீட்டுகள் விஷயத்தில் எப்படிக்கேட்பார்கள் என்பதை ஊகித்திருக்க முடியாதா என்ன, அதனால் அவர்களை முந்திக்கொண்டு மற்ற கட்சிகளை அழைத்து அவர்களே கேட்காத எண்ணிக்கையில் சீட்டுகளை வழங்கி அவர்களைத் திக்குமுக்காட வைத்து அனுப்புகிறார். ‘இருப்பதே குறைச்சல்தான். அதனால் அதிகம் கேட்காதீர்கள்’ என்று காங்கிரஸுக்கு சேதி சொல்லலாம் என்று இவர் நினைக்க இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏடாகூடமான எண்ணிக்கை ஒன்றைச் சொல்கிறது.

முடியாது என்று சிலிர்த்து எழுகிறார் கலைஞர். மத்திய அரசின் மந்திரிப்பதவிகள் ராஜினாமா என்று அறிவிக்கிறார். அத்தனை மந்திரிகளும் ராஜினாமாக்கடிதங்களுடன் டெல்லி போகிறார்கள் என்று அறிவிக்கிறார். வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவு என்று அறிவிக்கிறார். திடுக்கிட்டுப்போன திமுக தொண்டன் ‘அப்பாடா இத்தனை வருடங்களுக்குப் பிறகு தலைவர் இப்போதாவது சரியான முடிவை எடுத்தாரே’ என்று துடித்து எழுகிறான். தலைவர்னா தலைவர்தான் என்று கொண்டாடுகிறான். தலைவர் இந்த முடிவில் உறுதியா இருக்கணும். நிச்சயமா காங்கிரஸையும் ஜெயலலிதாவையும் எப்பாடு பட்டாவது தோற்கடித்துக்காட்டுவோம் என்று கூடிக்கூடிப்பேசுகிறான். நீண்ட நாட்களுக்குப்பிறகு திமுக தொண்டன் உணர்ச்சிவசப்பட்ட தருணம் அது.

மறுநாளே எல்லாமே புஸ்வாணமாகிறது. நெஞ்சை நிமிர்த்தி டெல்லி சென்றவர்கள் அங்கே “ம்ம் என்ன இதெல்லாம்?”என்ற ஒரேயொரு கேள்வி கேட்கப்பட, சர்வநாடியும் ஒடுங்க, கூனிக்குறுகி சலாம்போட்டுவிட்டு ராஜினாமாக் கடிதத்தைப் பாக்கெட்டிலிருந்தே எடுக்காமல் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்துவிட்டுத் திரும்பியபோது கலைஞர் முதல்முறையாக நிராயுதப்பாணியாக மக்கள் முன்னால் பரிதாபத்துக்குரியவராக நின்றார்.

உண்மையில் பதின்மூன்றாம் தேதி வந்த தேர்தல் முடிவின் முதல் பாகத்தின் ரிசல்ட் அன்றைக்கே வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கலைஞருடைய வீரம் வெளிப்படும் என்று கொஞ்சநஞ்சம் நம்பிக்கொண்டிருந்தவனெல்லாம் சுருண்டு விழுந்தது அன்றைக்குத்தான்.

குடும்ப ஆதிக்கம், விலைவாசி உயர்வு, மின்வெட்டுப் பிரச்சினை போன்ற இவையெல்லாம் பொதுவாகவே கருணாநிதியைப் பிடிக்காத ஊடகங்களும் மற்றவர்களும் முன்வைக்கும் வாதங்களாகத்தான் தோன்றுகிறது. ஏனெனில் இவற்றில் எதுவுமே தமிழகத்தை மட்டும் சார்ந்த பிரச்சினை அல்ல; நேரு, இந்திரா காந்தி, பெரோஸ்காந்தி, சஞ்சய்காந்தி, ராஜிவ்காந்தி, சோனியாகாந்தி, மேனகா காந்தி, வருண்காந்தி, ராகுல்காந்தி அவ்வப்போது பிரியங்கா காந்தி என்று மொத்த குடும்பமும் அரசியலில் இருப்பதை மக்கள் அனுமதித்துத்தான் வந்திருக்கிறார்கள்., வடநாட்டிலே வழிவழியாகப் பல குடும்பங்கள், கர்நாடகத்திலே தேவே கௌடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி, குமாரசாமியின் மனைவி என்று நான்குபேர் பதவியில்தான் இருக்கிறார்கள். இதோ இப்போது நடந்த இடைத்தேர்தலில்கூட ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகனும் அவருடைய அம்மாவும் ஒருசேர தேர்தலில் நின்று இருவருமே பெருவாரியான முறையில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். எடியூரப்பா முதல்வர், அவரது மகன் எம்.பி, இன்னொரு பெண் அமைச்சர் முதல்வருக்கு நட்பு ரீதியிலே உறவு.....என்று நிறைய குடும்பங்கள் கோலோச்சிக்கொண்டுதான் இருக்கின்றன. இவை எதுவுமே ஊடகங்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தாலும் ஒரேயொரு முறை செய்தி வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் கருணாநிதி விஷயத்தில் மட்டும் நாள்தோறும் போட்டுப்போட்டு மக்களை மறந்துவிடாமல் செய்வதை வாழ்க்கை நியதியாகவே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

தமிழகத்தில் எந்த அளவு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமான மின்வெட்டு கர்நாடகத்திலும் ஏன் பெங்களூரிலும்கூட இருக்கிறது. தற்சமயம் நிலைமை பரவாயில்லை, சில மாதங்கள் முன்புவரை ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் ஐந்து மணிநேரம்கூட மின்வெட்டு இருக்கும். அல்லது, ஐந்துமணி நேரம்தான் மின்சாரமே இருக்கும். காரணம் புதிதுபுதிதாக அத்தனைத் தொழிற்சாலைகள், வீட்டு உபயோகத்திற்கென அத்தனை மின்சாதனங்கள், தவிர இந்தியாவெங்கும் குவிந்திருக்கும் கோடிக்கணக்கான செல்போன்கள். இத்தனை செல்போன்களின் செயல்பாடுகளுக்கும் சார்ஜ் செய்துகொள்வதற்கும் மின்சாரத்திற்கு எங்கிருந்து போவது? மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துக்கொண்டே போக உற்பத்தி அதே அளவில்தான் இருக்கிறது. மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது சர்வதேசப்பிரச்சினை. ஆனால் எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் வீராசாமியும் கருணாநிதியும் மட்டுமே பலிகடாவாக்கப்பட்டனர். இங்கே கர்நாடகத்தில் மின்பற்றாக்குறையைப்பற்றிய சிந்தனைகள் விவாதத்திற்கும் ஆய்வுக்கும் ஊடகங்களால் வைக்கப்படுகிறதே தவிர எடியூரப்பாவைக் குறிபார்த்து வீழ்த்தும் ஆயுதமாக அதனைப் பயன்படுத்தவில்லை.

அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சொத்து சேர்த்தனர் என்ற விவகாரமும் அப்படித்தான். இன்றைய இந்தியாவில் டாட்டா சுமோவும் இன்னோவாவும் தம்மைச் சுற்றிலும் எந்நேரமும் ஒரு பத்துப்பேர் இல்லாத கவுன்சிலர் யாராவது இருக்கிறார்களா என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். சில தலைநகரங்களைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மாத வருமானமே ஒரு கோடிக்குக் குறையாமல் வருகிறது என்று புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது.

ஆகவே கருணாநிதியைத் தோற்கடிக்க மக்களுக்கு ஏற்பட்ட கோபத்துக்கான உண்மைக்காரணத்தை விட்டு மக்களை வேறுபக்கம் நகர்த்தி மாற்றுக்காரணங்கள்தாம் இவரை வீழ்த்தியிருக்கிறது என்று வாதங்களை முன்வைக்கும் அரசியலும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. ஈழ விவகாரத்தில் இவர் நடந்துகொண்ட விதம், முள்ளிவாய்க்கால் படுகொலையின்போது இவர்காட்டிய அசிரத்தை, மீனவர்களை அடுத்தடுத்து சிங்கள ராணுவத்தினர் சுட்டுக்கொன்றபோது இவர் கடிதங்கள் மட்டும் எழுதிவிட்டுப்பேசாமல் இருந்தது, இறுதியாக பார்வதி அம்மாள் விஷயத்தில் இவர் அடித்த பல்டிகள் என இளைஞர்களின் கோபம் இவர்மீது கட்டுக்கடங்காமல் திரும்பியபோது இந்த வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் இவருக்கு எதிராகத் திரட்டிப்போடவைக்கவேண்டும் என்று இவரை எந்நாளுமே வெறுக்கும் கூட்டம் வகையாகத் திட்டமிட்டு காய் நகர்த்திய செயல்கள்தாம் இத்தகு முடிவுகளுக்குக் காரணமாயிருக்கின்றன.

ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள், ஒரு பத்து சதவிகித ஓட்டு இளைஞர்களுடையதே. இன்னொரு ஐந்து முதல் பத்து சதவிகித ஓட்டு நடுநிலையாளர்களுடையது. ஆனால் கலைஞருக்கு எதிராகச் செயல்பட்ட ஊடகங்களும் சரி; வேறு சக்திகளும் சரி இவரை எதிர்ப்பதற்குக் காரணமாக மறந்துகூட தமிழ், இன உணர்வு, ஈழம், பார்வதிஅம்மாள் என்பது சார்ந்த எதையும் முன்வைக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் மிக சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்சாரவெட்டு, குடும்ப ஆதிக்கம், திரைப்படத்துறையில் ஆதிக்கம், ஊழல், ரியல் எஸ்டேட், ஆடம்பர விழாக்கள் போன்ற பொதுவான காரணங்களையே முன்வைத்து அதற்கான பரப்புரைகளை மட்டுமே தொடர்ச்சியாக அதுவும் மிகவும் தொடர்ச்சியாக செய்துகொண்டுவந்து அவர்கள் விரும்பிய முடிவுகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். அடிப்படையில் ஆதார சுருதியாக ஓடிக்கொண்டிருந்த காரணங்களை வெளிப்படுத்தாமலேயே கலைஞரின் இந்தத் தோல்வி கொண்டாடப்படுமேயானால் இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களாக எந்தக் காரணத்துக்காக ஒரு ஆட்சியைப் பழிவாங்கவேண்டுமென்று காத்திருந்து லீவு போட்டுவிட்டு கைக்காசைச் செலவழித்துப்போய் ஓட்டைப் போட்டுவிட்டு வந்தார்களோ அந்தக் காரணம் ஒன்றுமேயில்லாமல் போய்விடக்கூடிய அபாயம் இருக்கிறது.

சரி, பதிவின் ஆரம்பத்தில் இது முழுக்க முழுக்க காங்கிரஸின் கணக்கு என்று சொல்லியிருந்ததைப் பார்ப்போம். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவைப் பார்த்தபின்னர்தான் இனிமேல் இந்தக் கட்சியை அரசியல் ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பது இந்திரா காந்தி குழுவினருக்குப் புரிந்தது. இதை வேறு வழியில் செய்யவேண்டும் என்ற சிந்தனையில் பிறந்ததுதான் திமுகவிலிருந்து எம்ஜிஆரைப் பிரித்தெடுத்து வேறு கட்சி அதுவும் அதே சாயல்கொண்ட கட்சி ஆரம்பிக்கவைத்தது; பின்னர் அந்தக் கட்சியுடன் கூட்டுவைத்து திமுகவை பலவீனப்படுத்தியது காங்கிரஸ் இயக்கம். கலைஞரையும் அவர் குடும்பத்தையும் கேவலமான முறையில் பலவீனப்படுத்தினார்கள். பின்னர் எம்ஜிஆர் அரசியலில் மிக வலிமையானவராக ஆனபின்னர் அவரைக் கலவரப்படுத்த திரும்பவும் கலைஞருடன் கூட்டுவைத்தார்கள். பஞ்சாபில் பிந்தரன்வாலேயை உருவாக்கிவிட்டுப் பின்னர் அவரையே எதிர்த்ததும், இங்கே பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் வளர்த்துவிட்டுவிட்டு பின்னர் தாங்கள் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லையென்றதும் கடுமையாக எதிர்க்கத்துவங்கியதும் காங்கிரஸுக்கு வழக்கம்தான்.
மம்தா விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. காங்கிரஸிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட துண்டுதான் திரிணமூல் காங்கிரஸ். அரசியல் பௌதீக விதிகளின்படி காங்கிரஸுக்கு எதிரான மனநிலை இருக்கும்போது காங்கிரஸுக்கு எதிராகத் துவங்கப்பட்ட கட்சி நிச்சயம் மக்களின் ஆதரவைப் பரபரப்பாகப் பெறும். நன்றாக வளர்கிறவரைக்கும் வளர்த்துவிட்டுப் பிறகு நாம் மேலாதிக்கம் செலுத்தலாம். அங்கங்கே அவர்களுக்குத் தெரியாமலேயே நிறையப் பொறிகள் வைக்கப்பட்டிருக்கும். பணிய மறுக்கும்போது நிச்சயம் மாட்டிவிட்டுக் கதையை முடித்துவிடலாம்.

இத்தனையும் செய்துவிட்டு காங்கிரஸுக்கு அதிகபட்ச சீட்டுக்களை வாங்கியதே எப்படியும் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறாது கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் அதிமுகவிடம் பேரம்பேசி அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற கணிப்புதான். அதுவும் குறிப்பாக அவர்கள் இளைஞர்களின் ஓட்டுக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இளைஞர்கள் அதுவும் கம்ப்யூட்டர் படித்த இளைஞர்கள் அடிப்படையைப் பற்றியோ வேர்களைப்பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாத கூட்டம். ஐபிஎல் கிரிக்கெட்டிற்கும், பப் கலாச்சாரத்திற்கும், மால்களுக்கும், இன்னோவேட்டிவ் தியேட்டர்களுக்கும், நவீன மோட்டார் சைக்கிள்களுக்கும் அடுத்ததுதான் குடும்பம், சமூகம் உட்பட மற்ற எல்லாமே அவர்களுக்கு. அவர்கள் எப்படியும் ஓட்டுப்போடவும் வரப்போவதில்லை என்று காங்கிரஸும் நினைத்தது; திமுகவும் நினைத்தது. இரண்டு கட்சிகளும் கவிழ்ந்துபோக இந்த நினைப்பு ஒரு மிகப்பெரிய காரணம்.

இலவசம் என்ற பெயரில் கிராம மக்களுக்கும் ஏழைகளுக்கும் சென்ற அரசு செய்த உதவிகள் ஏராளம். அவர்களும் அத்தனைச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு திமுகவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். இதற்காக அவர்களைப் பாராட்டுவதற்கில்லை. உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டால் அடித்தட்டு மக்களிடையே ஒரு வருடத்திற்குப் பத்துக்கும் குறைவான குடும்பங்கள் மட்டுமே முன்னேறிவந்தன. அந்தப் பத்துக்குடும்பங்களில்தான் அன்றாட வாழ்வுமுறையில் மாறுதல் வரும். கலர் டிவி, கியாஸ்டவ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாதனங்கள் அந்தப் பத்துக் குடும்பங்களுக்குத்தான் வரும். மிக மெதுவான ஆமை வேக முன்னேற்றம்தான் இவர்களுக்கு. இவர்களுடைய அடிப்படைத் தேவையை மீறி பணம் கிடைத்தபோதும் மது அருந்தியும் வேறு வழிகளிலும் செலவு செய்துவிட்டு ஒரே விதமான வாழ்க்கையைத்தான் வாழ்வார்களேயன்றி தங்கள் வாழ்க்கைநிலையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களின் அத்தனைக் குடும்பங்களிலும் அதிரடியாக உள்ளே புகுந்து மிகப்பெரிய மாறுதலைச் செய்தது திமுக அரசாங்கம்.

இலவச காங்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்ததுவும், விவசாயக்கடனை ரத்து செய்ததுவும், இலவச மனைப்பட்டா வழங்கியதுவும், 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கியதுவும், மகளிர் சுய உதவிக்குழுவை முறைப்படி பயன் பெறுமாறு செய்ததுவும் நிச்சயம் எந்த அரசாங்கமும் இதுவரையிலும் செய்யாத பணிகளே. இதற்கு நன்றி காட்டாத மக்களைப் பாராட்டுவதற்கில்லை. அவரென்ன சொந்தப் பணத்திலிருந்தா செய்தார்? மக்களின் வரிப்பணத்திலிருந்துதானே செய்தார்? என்ற கேள்வி
தார்மிக நியாயமற்றது. எல்லா அரசுகள் செயல்படுவதும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான். அதனை எப்படி முறைப்படுத்தி மக்களுக்கே பயன்பெறுமாறு செய்கிறார்கள் என்பதில்தான் தலைவர்களின் திறமை வெளிப்படுகிறது.

இந்த விஷயத்தில் மக்கள் மனநிலையோடு எப்படி ஒத்துப்போக முடியவில்லையோ அதே போல கருத்துக்கணிப்புகள் விஷயத்திலும் மக்கள் மனநிலையோடு ஒத்துப்போக முடியவில்லை. எல்லா மாநிலங்களின் கருத்துக்கணிப்புகளும் சரியாக வந்துகொண்டிருக்க எப்போதுமே தமிழகம் பற்றிய கருத்துக்கணிப்புகள் மட்டும் தவறாகவே வரும். அல்லது பத்துக் கணிப்புகள் வந்தால் ஏதோ ஒன்று அல்லது இரண்டு கணிப்புகள்தாம் சரியானதாக இருக்கும். இதற்கும் மக்களைத்தான் குறை சொல்லத்தோன்றுகிறது.

என்ன காரணம் தெரியுமா? கருத்துக்கணிப்புகள் எல்லாமே மற்றவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று அந்த பதில்களிலிருந்து அவன் மன நிலையைக் கணித்துப்போடப்படும் ஒரு சாதாரண கணக்கு. தான் யாருக்கு ஓட்டளிக்கப்போகிறோம் என்பதையோ யாருக்கு ஓட்டளித்தோம் என்பதையோ சரியாகச் சொன்னால்தானே சரியான முடிவுகள் வரும்? இவன் பாட்டுக்கு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசினால் முடிவுகள் எப்படி சரியாகவரும்? கேட்பவனிடம் கள்ளத்தனமாக பதில் சொல்லிவிட்டு அவனை வேடிக்கைப் பார்ப்பதில் நம்ம ஆள் மிகவும் எக்ஸ்பர்ட்! ஆக, கணிப்புகள் கதி அதோ கதிதான்.

மக்களை அவ்வளவு சுலபமாக எடை போட்டுவிட முடியாது. அவர்கள் ஒவ்வொன்றையும் கவனித்து சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை அளிப்பார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இது மற்ற மாநிலத்தவருக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர, தமிழர்களுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. அப்படிப்பார்த்தால் 67-ல் காமராஜரையும் கக்கனையும் மஜீத்தையும் இன்னபிற எளிமையான தலைவர்களையும் தோற்கடித்திருப்பார்களா என்ன?

எமர்ஜென்சி கொடுமை இந்தியா பூராவிலும் இருந்தது. தமிழகம் மிக அவலமான முறையில் கொடுமைகளை அனுபவித்தது. பீகார் போன்ற படிப்பறிவு அதிகம் இல்லாத மாநிலங்கள்கூட காங்கிரஸைத் தோற்கடித்தது. ஆனால் தமிழகம் மட்டும் காங்கிரஸையும் அதனை ஆதரித்த எம்ஜிஆரையும் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தது.

சாதாரண நடிகர்களெல்லாம் நிறைய தடவை வென்றிருக்கிறார்கள். சிவாஜி கணேசனை ஒரு மரியாதைக்காகவாவது வெற்றிபெற வைத்திருக்கிறார்களா தமிழக மக்கள்?

இப்போதுகூட பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களைத் தோற்கடித்திருக்கலாமா?

ஆக, தமிழ்நாட்டு வாக்காளனும் சிலபல கருத்துருவாக்கங்களில் தொடர்ந்தாற்போல் இழுத்துச் செல்லப்பட்டு வாக்களிப்பவனாகத்தான் இருக்கிறானே தவிர புத்திசாலித்தனமாக வாக்களிப்பதில் முன்நிற்கிறான் என்பது தவறான வாதம்.

ஜெயலலிதாவுக்காக இங்கே நாடாளும் அதிர்ஷ்டம் எந்நேரமும் கைகட்டிக் காத்துக்கொண்டிருக்கிறது. ராஜிவ்காந்தி மரணத்தில் பயனடைந்தவர் ஜெயலலிதா. மூப்பனார் கலைஞர் மீது கொண்ட கோபத்துக்கு இரண்டாவது முறையாகப் பயனடைந்தவர் ஜெயலலிதா. இதோ இப்போது இளைய சமுதாயமும் நடுநிலை வாக்காளர்களும் கருணாநிதி மீது கொண்ட கோபத்துக்குப் பயனடைந்தவரும் ஜெயலலிதாவேதான்.

கலைஞர் மீதான எதிர்மறை எண்ணங்கள் மக்களிடையே எப்படி, எங்கிருந்து எழுந்து எப்படியெல்லாம் உருமாறி கிளைபரப்பி மொத்த வெறுப்பாக ஒன்று திரண்டு இப்போது பதவியைவிட்டு இறக்கியிருக்கிறது என்பதைத்தான் இங்கே அலசியிருக்கிறோம். இந்த எதிர்ப்புணர்வை ஊதி மிகப்பெரிதாக ஆக்கி இதற்கு வேறொரு வடிவம் கொடுத்து இந்த நிலைமைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருப்பதில் பெரும்பங்கு ஊடகங்களுக்கு உண்டு. ஆதாரமான காரணத்தை மக்களுக்குக் காட்டாமல் வேறொரு திசைக்கு மக்களை மிக எளிதாக ஏமாற்றி கூட்டிச்செல்லும் வித்தையை ஊடகங்கள் இன்றைக்கு மிக சாமர்த்தியமாகச் செய்துவருகின்றன. கலைஞருடைய தோல்விக்கும் ஜெயலலிதாவின் வெற்றிக்கும் சூத்திரதாரிகளாய் சோ மாதிரி நபர்களை முன்னிறுத்தும் கைங்கரியமும் இன்று நடைபெறுகிறது. சோ வேண்டுமானால் ஷோ காட்டலாமே தவிர உண்மைகள் வேறுமாதிரியானவை என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றக்கட்டடத்தை மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறார். கருணாநிதி கட்டினார் என்பதற்காக மாற்றவேண்டும் என்று முடிவெடுத்தால் என்னென்ன ஆகும் என்பதை ஊகிக்க முடியவில்லை. கருணாநிதியால் வழங்கப்பட்ட எல்லா டிவிக்களையும் திரும்பப் பெறுவாரா?

எல்லா கியாஸ்டவ்களும் திரும்பப் பெறப்படுமா? விவசாயிகளுக்கு ரத்து செய்யப்பட்ட கடன்களைத் திரும்ப கட்டச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஆபரேஷன் செய்துகொண்டவர்களுக்கு அந்தத் தொகையை செலுத்தச்சொல்லி பில் அனுப்பப்படுமா? ஒன்றும் புரியவில்லை.

தமிழ்நாட்டு அரசியல் என்பது தாய விளையாட்டு போல் ஆகிவிட்டது. தாயக்கட்டைகளை உருட்டிப்போடும்போது சமயங்களில் என்ன விழும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. இன்னதுதான் விழ வேண்டும் என்று திட்டமிட்டு உருட்டவும் முடியாது. ஒரு சில அதிர்ஷ்டக்காரர்களுக்கு எவ்வித முயற்சிகளும் இல்லாமலேயே அதிர்ஷ்ட எண்கள் அடிக்கடி விழுவதுண்டு.

அதிர்ஷ்டக்காரர்கள் இளைய சமுதாயத்தினரை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

Sunday, April 24, 2011

வீடுகட்டிப் பார்த்தேன்.










பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம் ஒன்றை ஒரு வார இதழில் வாசிக்க நேர்ந்தது. படிப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் அனுபவம் அது. அந்த அனுபவம் இது;

‘சமீபத்தில் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்லட்டுமா?....பெங்களூரில் எனது பழைய-சிறிய வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்திப் புதுப்பிக்க ஆறு லட்சம் ரூபாய் வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்தேன். அந்த வீட்டின் மதிப்பு பெங்களூர் நிலவரப்படி ரூ.25 லட்சம். அதை அடமானமாகக் காட்டியும், எனது சம்பளத்தில் இருந்து 60 மாதத் தவணையில் பிடித்துக்கொள்ளலாம் என்று எழுதிக்கொடுத்தும், முப்பது செக்குகளில்
கையொப்பமிட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தும்கூட,கிட்டத்தட்ட 10 முறை அலைந்தபின்பே கடனின் முதல் தவணை கிடைத்தது.

ஆனால் ஒவ்வொரு முறையும் பிரச்சினை என்னிடம்தான் இருந்தது...வங்கியிடமல்ல. வங்கியில் இருக்கும் நடைமுறைகள் அப்படி.

இதில், அவர்களுக்கே கொஞ்சம் சங்கடமாக இருந்ததை நான் அறிவேன். ஏன்.... எல்லாம் முடிந்த பின் அதே வங்கிக்கிளை ஒன்றை என்னை வைத்து ரிப்பன் வெட்டித் திறந்தார்கள்.
அப்போது நான் சொன்னது,’’இந்த வங்கியில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கும்.

ஏனெனில் என்னையே பலமுறை சோதித்தபின்தான் பணம் கொடுத்தார்கள். அதுவும் நான் வீட்டை உண்மையிலேயே அவர்களிடம் வரைபடத்தில் காட்டியபடிதான் கட்டுகிறேனா என்பதை பல கட்டங்களில் வந்து பார்த்துவிட்டு, நான்கு தவணையில் தொகையைக் கொடுத்தார்கள்.அப்படி இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய வங்கிகள் திவாலாகியும் இந்திய வங்கிகளில் மக்களின் பணம் பத்திரமாக இருக்கிறது.
இந்திய ஜனநாயகமும் வங்கியும் மிகவும் பலமானதே. என்ன...கொஞ்சம் பொறுமையுடனும் பொறுப்புடனும் அணுகவேண்டும்.”

இதனை வாசித்த போது ஒருபுறம் நெஞ்சு கனத்தது. நியாயமாகவும் நேர்மையாகவும் அணுகுகிறவர்களுக்கு வங்கிகளிடமிருந்தும், வேறு அரசு நிறுவனங்களிடமிருந்தும் கிடைக்கின்ற அனுபவம் இதுதான். அவர்கள் எவ்வளவு பெரியவர்களாகவும் எத்தகைய சாதனையாளர்களாகவும் இருந்தாலும் சட்டதிட்டங்களையும், நிர்வாக நடைமுறைகளையும் சொல்லி திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த இடத்தில் இருக்கும் அலுவலர் கொஞ்சம் மனசாட்சி உள்ளவராக இருந்தால் கூடுதலாக ஒரு அனுதாப வார்த்தையையும் சேர்த்து அனுப்பிவைப்பார்.’’என்ன பண்றது சார், உங்களுக்கே இந்த நிலைமை. ரொம்ப வருத்தமாயிருக்கு. நம்ம சட்டதிட்டங்கள் அப்படி. ஒண்ணும் பண்றதுக்கு இல்லை.’’
ஆனால் இந்தியா பூராவிலும் நகரங்களில் ஒரு அங்குலம் பாக்கியில்லாமல் வானளாவ உயர்ந்துகொண்டிருக்கிறதே கட்டிடங்கள் அவையெல்லாம் என்னவாம்? எந்த வணிக நிறுவனம், எந்த அபார்ட்மெண்ட், எந்த தொழில் நிறுவனம், எந்தக் கல்லூரி நிறுவனம், எந்தத் தனியார் நிறுவனம் சொந்தப் பணத்தில் எழுகிறது? எல்லாமே வங்கிக் கடனில் எழும் கட்டிடங்கள்தானே? அவையெல்லாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, வரைபடங்களுக்கு உட்பட்டு நியதி நெறிமுறைகளுக்கு உட்பட்டுக் கடன் பெற்றுக் கட்டப்படுபவைதானா?

வேடிக்கையாயிருக்கிறது....விஷயம் என்னவென்றால் நீதி நேர்மை நியாயம் என நமக்கென்று பிறப்பித்துக்கொண்ட நெறிமுறைகளுடன் வாழ நேரும்போதுதான் இம்மாதிரியான சோதனைகளையெல்லாம் சந்திக்க நேர்கிறது. இன்றைய உலகில் வெற்றிபெற்றவர்களாய் வாழ்வதற்கு வேறுமாதிரியான சட்டதிட்டங்களும் வழிமுறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. இதனை நடத்துவது ஜனநாயகம் அல்ல; பணநாயகம். பணநாயகத்தின் ஆட்சிக்குட்பட்டே இங்கு பல காரியங்கள் நடைபெறுகின்றன. அதில் சிக்கி அடிபடாமல் வெளியே வரும் அப்பாவி பொதுஜனம் வெகு சொற்பமே. இந்தப் பிரிவினர்க்குப் ‘பிழைக்கத்தெரியாதவர்கள்’ என்று பெயர்! இதற்கு அப்பாற்பட்ட ‘பிழைக்கத்தெரிந்த’ பொதுஜனம்தான் சுகபோகங்களுடன் வாழ்பவர்கள்.

இது ஒருபுறமிருக்க, இந்த வங்கிவிவகாரம் வீடு கட்டிய எனக்கும் ஏற்பட்டது. பல வங்கிகளில் சட்டதிட்டங்களைச் சொல்லியே திருப்பியனுப்பினார்கள். ஒரு கோரிக்கையை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு நிறைய சட்டப்பாயிண்டுகள் கிடைத்துவிடுகின்றன. நியாயப்படுத்துவதற்கு நம்மிடம்தான் சட்டக்குறிப்புகள் எதுவும் இருப்பதில்லை. நிலத்தை வாங்கிவைத்துக்கொண்டு வங்கிக்கடனுக்காக அலைந்துகொண்டிருந்தேன். என்னுடைய பரிதாப நிலையைப் பார்த்த நண்பரொருவர் சிரித்துவிட்டு “சார் இப்படியெல்லாம் நீங்களே போய் அணுகினால் எந்த வங்கியிலும் கடனெல்லாம் கொடுக்கமாட்டார்கள். அதற்கென்று ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகப் போனால்தான் நீங்கள் கடனெல்லாம் வாங்கமுடியும். வாங்க நான் கூட்டிப்போறேன்” என்று சொல்லி ஒரு ஏஜெண்டிடம் கூட்டிச்சென்றார்.

அவர் நான் வைத்திருந்த பத்திரங்களை எல்லாம் வாங்கிப்பார்த்தார். பிறகு கடனுக்கு வேண்டிய சான்றிதழ்கள் எவையெவை குறைந்திருக்கின்றன என்தைச்சொன்னார். பிறகு ‘அவையெல்லாம் உங்களுக்கு அரசாங்கத்திலோ கார்ப்பரேஷனிலோ கிடைக்காது. அவற்றெயெல்லாம் வேறு வழிகளில் வாங்க வேண்டும்’ என்றார். ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும்?” என்றார்.

“இருபது லட்சம்” என்றேன். என்னுடைய மகள் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுவதால் அவள் பெயரில் கடன் பெறுவதற்கான வாய்ப்பிருந்தது.

அந்த மனிதர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. நாம் அதிக பணத்தை எதிர்பார்க்கிறோமோ என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

“என்ன சார் இவ்வளவு கொறைச்சலா கேட்கறீங்க? உங்க மகள் சம்பளத்துக்கு இன்னமும் அதிகமாக நீங்கள் கேட்கலாம். ஒரு இருபத்தைந்து லட்சம் கேளுங்க” என்றார்.

“வேண்டாம். அப்புறம் நாங்கதானே கட்டணும்..இது கிடைச்சாலே போதும்” என்றேன்.
அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “உங்களுக்குத் தெரியாதுசார். வீடு கட்ட ஆரம்பிச்சா கடைசியிலதான் பயங்கரமா இழுத்துரும். அந்தச் சமயத்துல என்ன செய்வீங்க? இருப்பதஞ்சு போடறேன்” என்றார்.

கடன் கிடைப்பதே பெரிது என்றிருக்கும் இந்த நேரத்தில் இவர்பாட்டுக்கு இன்னமும் அதிகமாக வாங்கித்தருகிறேன் என்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு.
கொஞ்சம் தயங்கியபடியே “சரி” என்றேன்.

“எதுக்கும் இருபத்தாறாவே போடறேன்” என்றார். என்ன இப்படி வாரிக்கொடுக்கிறேன் என்கிறாரே என்று யோசித்தபோதுதான் அவர் பேசிய அடுத்த வார்த்தையின்போது அதற்கான சூட்சுமம் தெரிந்தது. “எத்தனை லட்சமோ அத்தனை லட்சத்துக்கும் நாலு பெர்சன்ட் கமிஷன் தந்துரணும். இந்த பத்திரங்களெல்லாம் ரெடிபண்ண இருப்பஞ்சாயிரம் தந்துரணும்” என்றார்.

“எல்லார்ட்டயும் ஐந்து பெர்சன்ட்தான் வாங்குறது..நண்பர் கூட்டிட்டு வந்திருக்காரே என்பதற்காக உங்களிடம் நாலு பெர்சன்ட்” என்றார். கூட்டிக்கழித்துப் பார்த்தபோது ஒண்ணேகால் லட்சம் வெறும் கமிஷனாகவே தரவேண்டும் என்பது புரிந்தது.

ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டேன். பலரிடமும் பேசிப்பார்த்தபோது இது சாதாரணம்தான் என்று புரிந்தது. கமிஷன் தொகை அங்கங்கே வேறுபடுகிறது என்பதுதான் வித்தியாசம். இந்த வரிசையில் இன்னொரு புரோக்கர் சொன்னதுதான் வியப்பின் உச்சம். எல்லாம் பேசிவிட்டு ‘எந்த வங்கி?’ என்றேன். “உங்களுக்கு எந்த வங்கி வேண்டுமோ அந்த வங்கியில் வாங்கித்தருகிறேன்” என்றார் கூலாக.

புரோக்கர் சமாச்சாரமே வேண்டாம் என்று தள்ளிப்போட்டு சில மாதங்களுக்குப் பிறகு நண்பர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தொடர்பு ஏற்பட்டு கடனுக்கு வழி பிறந்தது.

கடன் கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா என்ன? வீட்டைக் கட்டிக்கொடுக்க நல்லதொரு காண்ட்ராக்டர் கிடைக்கவேண்டுமே! என்னுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால் என்னுடைய நெருங்கிய நட்பில் இருப்பவர் திரு. கோ.தாமோதரன். பெங்களூரின் குறிப்பிடத்தக்க காண்ட்ராக்டர்களில் ஒருவர். பெரிய தொழில் நிறுவனங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி, விஜய் மல்லய்யாவின் ஒரு கட்டிடம் என்று பல பெரிய பெரிய கட்டுமானங்களைக் கட்டியவர். ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்ற நிறைவில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பொதுச்சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்து தற்போது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று சத்தமில்லாமல் தமிழ்த்தொண்டு புரிந்துகொண்டிருப்பவர். இவரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி, ஆனாலும் கேட்டுவிட்டேன்.

“அட, அதுக்கென்ன தாராளமா கட்டித்தர்றேன்” என்று முன்வந்தார். முக்கிய விஷயம், ஒரேயொரு ஒற்றைப் பைசாகூட வாங்கவில்லை. தம்மிடமுள்ள ஆட்களை அனுப்பினார். அவர்களுக்கான கூலி, மற்றும் கட்டட வேலைக்கான பொருட்கள் வந்து இறங்கினால் அவற்றுக்கான விலை-அவ்வளவுதான். வாரத்திற்கு இரண்டுமுறை அல்லது மூன்றுமுறை என்று வந்து மேற்பார்வையிட்டு யோசனைகள் சொல்லி மொத்த வீட்டையும் முடித்துகொடுத்துவிட்டார்.

கணக்குப்போட்டுப் பார்த்த நண்பர்கள் எப்படியும் காண்ட்ராக்ட் விட்டிருந்தால் ஐந்துமுதல் ஆறு லட்சம்வரைக்கும் அதிகமாகியிருக்கும் என்று சொல்கின்றனர். இப்படி நல்ல மனம் கொண்ட நண்பர் ஒருவர் கிடைத்ததில் இலகுவாக அழகிய வீடு ஒன்று உருவாகிவிட்டது.

அடுத்தது புதுமனைப் புகுவிழா!

என்னுடைய திருமணத்திலிருந்து எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக்கொடுத்தவர் நடிகர் சிவகுமார். வாழ்க்கையில் சில அதிர்ஷ்டங்கள் கிடைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அப்படியொரு அதிர்ஷ்டம் சிவகுமார் அவர்களின் நட்பு. எந்த ஜென்மத்திலோ செய்த நற்பயன் அவருடைய நட்பாக இன்றும் தொடர்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே, புதுவீட்டை அவரும் திருமதி சிவகுமாரும் வந்திருந்து குத்துவிளக்கேற்றித் துவக்கிவைக்க வேண்டும் என்பது ஏற்கெனவே முடிவான ஒன்று.

அவர்களுடன் யார் வருவது?

நான் சொன்னேன்,’’சார் இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் பேராசைப் பிடித்தவன். எனக்கு சூர்யா, ஜோதிகா, குழந்தைகள், கார்த்தி, பிருந்தா, குழந்தைகள் என்று எல்லாரும் வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்றேன்.

சிவகுமார் சிரித்துவிட்டுச்சொன்னார்.’’அதெல்லாம் சரி, ஆனால் நடைமுறைக்கு அதெல்லாம் ஒத்துவரணுமான்னு பார்க்கணும். குட்டிக்குழந்தைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாது. சூர்யா கார்த்தியைப் பொறுத்தவரைக்கும் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்ந்தாற்போல வீட்டுல வச்சிப்பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. ஒருத்தர் இருந்தா இன்னொருத்தர் வெளில இருப்பாங்க. பார்க்கலாம்.. ரெண்டு பேர்ல யார் ஃப்ரீயாக இருக்காங்களோ அவங்களை மட்டும் கூட்டிவர்றேன். மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார்.

சூர்யாவா கார்த்தியா யார் வருவார்கள் என்ற சஸ்பென்ஸ் ஒருபுறம் இருக்க நாட்கள் நகர்ந்தன. செய்தியை வெளியில் கசிய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.. ஆனால் நிகழ்ச்சிக்கு அழைத்த அத்தனைப் பேரும் முதலில் கேட்ட கேள்வி “சிவகுமார் வருகிறாரா?” என்பதுதான். பூசிமெழுகினாற்போல் பதில் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தால் அவர்களின் அடுத்த கேள்வி-“சூர்யா வர்றாரா இல்லை கார்த்தி வர்றாரா?” என்பது.

மிக நெருங்கிய நட்பு வட்டத்தையும் உறவினர்களையும் மட்டுமே அழைப்பது மிக எளிமையாக நிகழ்ச்சியை நடத்துவது என்று முடிவானது. மூலிகைமணி டாக்டர் வெங்கடேசன் தமது கனவுத்திட்டமான ஷாங்ரீலாவை முழுமைப்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்.
கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு பெரிய மூலிகைப்பண்ணை, மூலிகைத்தொழிற்சாலை, காட்டேஜ்களுடன் கூடிய மருத்துவமனை என்று மிகப்பெரிய திட்டம். அதனை முடிப்பதில் தீவிரமாக இருந்தவரை என்னுடைய அழைப்பு தொடவும் “குடும்பத்துடன் வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

கவிஞர் அறிவுமதியை அழைக்க,” எந்த நிகழ்ச்சி இருந்தாலும் விட்டுட்டு பெங்களூருக்கு ஓடிவந்துருவேன்” என்றார்.

எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமமூர்த்தி. “காலையிலேயே வந்துர்றோம்” என்றார். தென்காசியைச் சேர்ந்த பிரபல மூட்டு எலும்பு சிகிச்சை சர்ஜன் டாக்டர் சந்திரன் ‘தவறாமல் கலந்துக்கறேன்’என்றார். தொழிலதிபர் ஈஸ்வர் “இப்பவே அட்டெண்டன்ஸ் போட்டுக்கங்க” என்றார். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் புதிய விளக்கம் எழுதுவதில் ஈடுபட்டிருக்கும் திரு கே.பத்மநாபன் ‘’ஞாயிற்றுக்கிழமைத்தானே எல்லோருமே வந்துர்றோம்” என்றார்.

மேலும் கோலார் தங்கவயல் சுரங்கத்தில் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்றவர் சேலம் ஜெயராமன், அவரும் அவருடைய நண்பர் பேராசிரியர் டாக்டர் ரமணிகோபாலும் சேலத்திலிருந்து காரிலேயே வந்துவிடுகிறோம் என்றனர்.

இரண்டு நாட்கள் இருக்கும்போது சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. அவரது உறவு அம்மாள் ஒருவர் மிகவும் உடல்நலிவுற்றிருப்பதால் கோவைக்குப் போகவேண்டியிருக்கிறது. “நானும் வீட்டம்மாவும் போகிறோம். அங்கிருந்து நாங்கள் எப்படியாவது பெங்களூர் வந்து கலந்துகொள்கிறோம். சூர்யாவையோ கார்த்தியையோ கோவை பெங்களூர் என்றெல்லாம் கூட்டிக்கொண்டு வரமுடியாமற்போகலாம்” என்றார்.

அடுத்த தகவல் “அந்த அம்மாள் இப்போது கொஞ்சம் தேவலை. பிளைட் டிக்கெட் கான்சல் செய்துட்டோம். கோவை போறதாயிருந்தாலும் பெங்களூர் வருவதாயிருந்தாலும் காரிலேயே வந்து செல்வதாக ஏற்பாடு. சூர்யா வரலை.வெளியூர் சூட்டிங். கார்த்தியைக் கூட்டிவர்றேன்” என்றார்.

அடுத்த தகவல், “கார்த்தி வருவதும் சந்தேகம். அவனுக்கு முதுகு பிடிச்சிருக்கு. அத்தனை தூரம் கார்ல டிராவல் பண்ணமுடியுமான்னு தெரியலை. டாக்டர்ட்ட போயிருக்கான். டாக்டர், பயணம் பண்ணலாம்னு சொன்னால்தான் வருவான்” என்றார்.
இன்னொரு அரைமணி நேரம் கழித்து அவரிடமிருந்து வந்த குறுந்தகவல்-‘karthi is coming’ என்றது.

ஆக, நாங்கள் நினைத்தது போலவே சிவகுமாரும் திருமதி சிவகுமாரும் கார்த்தியுடன் வந்திருந்து அத்தனைப்பேரின் மகிழ்வுக்கும் நிறைவுக்கும் காரணமாயினர்.
வீட்டிற்கு ‘ஆனந்தம்’ என்று பெயர் வைத்திருந்தோம். அந்த உணர்வு எல்லாருக்கும் கிடைத்தது.

இந்தத் தகவல்களை வலைப்பூவில் எழுதுவதாக எண்ணம் எதுவும் இருக்கவில்லை. சொந்த விஷயங்களை கடைவிரிக்கக் கூடாது என்ற நினைப்பு எனக்கு உண்டு. ஆனால் இங்கே இதனை எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் அனுபவம்தான். வங்கிக் கடன்கள்பற்றி அப்பாவியாக அவர் சொல்லியிருக்கும் கருத்துக்களையொட்டி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றிற்று. அதனால்தான் நிகழ்ச்சி நடந்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே இதுபற்றி இங்கே எழுத நேர்ந்திருக்கிறது.

நேர்மையும் நாணயமுமாக நடந்துகொள்ள நினைக்கும் அத்தனைப்பேரையும் சட்டங்களைக்காட்டி நிராகரிக்கும் சமூக அமைப்புதான் பரவலாக இருக்கிறது. ‘இதெல்லாம் வேற ரூட்ல போய்ப் பண்ணிக்கணும்சார்’ என்ற பிழைக்கத்தெரிந்த மனிதர்களின் பஞ்ச் டயலாக்தான் இங்கே வெற்றிக்கான ஃபார்முலா.

கூடவே, வேறொரு கருத்தும் தோன்றியது. வலைப்பூவில் சமூகம் சார்ந்து நிறைய எழுதுகிறோம். நம்முடைய கோபங்களை, எரிச்சல்களைப் பகிர்ந்துகொள்கிறோம். ஆனால் மகிழ்ச்சியையும் நிறைவான தருணங்களையும் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் இது எனக்கானது மட்டுமே என்று கமுக்கமாக இருந்துவிடுகிறோம். அப்படியில்லாமல் மகிழ்ச்சி அலைகளையும் பரவச்செய்யலாமே என்று தோன்றிற்று.

எனவே பகிர்ந்துகொள்கிறேன்.

Monday, April 11, 2011

கலைஞரா...? ஜெயலலிதாவா...?


தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கலைஞரா ஜெயலலிதாவா என்ற கேள்வி நான்குபுறமும் தகித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்களும் வலைத்தளங்களும் தெளிவான இறுதியான முடிவை எடுத்துவிட்டு அதனைப் பெருங்குரலில் பரப்பிக்கொண்டும் இருக்கின்றன. ‘கலைஞர் உடனடியாகத் தோற்கடிக்கப்பட்டு ஜெயலலிதா உடனடியாக அரியணை ஏறியாகவேண்டும்’ என்ற முடிவை தொண்ணூறு சதம் ஊடகங்களும், தொண்ணூற்றொன்பது சதம் வலைப்பூக்களும் பேரொலியாக உரக்கச்சொல்லிக்கொண்டிருக்கின்றன.

கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களாக ஈழ விவகாரத்தில் அவர் நடந்துகொண்டவிதம், ஸ்பெக்ட்ரம் விவகாரம், குடும்ப ஆதிக்கம் என்ற மூன்று விஷயங்கள் பிரதானமாக வைக்கப்படுகின்றன.

இலவசங்களை அள்ளிக்கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும், ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டு தேர்தல்களில் வெல்கிறார் என்பதும் இவர்மீது வைக்கப்படும் மேலும் சில குற்றச்சாட்டுகள்.
வெளிப்படையாகப் பார்க்கும்போது இவை அத்தனையுமே தவறுகள்தாம் என்பதில் சந்தேகம் கிடையாது.

அதே சமயம் ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றத்துடிக்கும் அறிவுஜீவிகள் அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்கு எந்த வலுவான காரணத்தையும் கூறுவதாக இல்லை. கருணாநிதி தோற்கடிக்கப்படவேண்டும், ஜெயலலிதா அரியணை ஏற வேண்டும் என்பதுமட்டும்தான் அவர்களுடைய வாதமும் எதிர்பார்ப்பும். இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கலைஞர் மீது இவர்கள் இப்போது சொல்லும் ஸ்பெக்ட்ரம், குடும்ப ஆதிக்கம் போன்ற காரணங்கள் இல்லாமல் இருந்திருந்தால்கூட இவர்கள் ‘கருணாநிதி தோற்கவேண்டும்’ என்ற வாதத்தை முழக்கமாக்கிக்கொண்டு வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இவர்களில் ஒரேயொரு பிரிவினர்தான் புதிதாகச் சேர்ந்திருப்பவர்கள்.
எதிர்ப்பாளர்களை நான்கு வகையினராகப் பிரிக்கலாம்.

1) இன மத துவேஷம் காரணமாக கருணாநிதியை எப்போதுமே எதிர்ப்பவர்கள்....சோ ராமசாமி, குருமூர்த்தி, இந்து, தினமலர், ராமகோபாலன் போன்றவர்கள் இதில் அடக்கம்.

2) எம்ஜிஆரின் ஏகாதிபத்திய ரசிகத்தன்மைக்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட ரசிகர்கள், அரசியல் மற்றும் கட்சி சார்ந்தவர்களும் இதில் அடக்கம்.

3) தமிழ் உணர்வில் ஈர்க்கப்பட்டு அண்ணா, கலைஞர் என்று நெஞ்சில் வைத்திருந்து..பின்னர் பிரபாகரன் விசுவரூபம் எடுத்ததும் தங்களின் தலைவனாக பிரபாகரனை வரித்துக்கொண்டவர்கள்... இவர்கள்தாம் புதிய பிரிவினர்.

4) தினசரிகளையும் செய்திச்சேனல்களையும் பார்த்து தங்களுக்கான பொதுவாழ்வு மற்றும் அரசியல் கூர்மைகளை தினசரி பெறுகிறவர்கள்.. என்று இந்த நான்கு விதத்தினர்தாம் கலைஞர் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இவர்களில் முதல் இரண்டு வகையினர் எந்தக் காரணத்திற்காகவும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்கிறவர்கள் அல்ல. தாங்கள் சார்ந்த அரசியல் பற்று காரணமாகவும், எம்ஜிஆர் மீதுள்ள அதீதமான மோகம் காரணமாகவும் கடைசி வரைக்கும் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்ஜிஆரின் விசுவாசிகளாகவும்தாம் இரண்டாவது வகையினர் எப்போதுமே இருப்பார்கள்.

இவர்களில் முதல்வகையினரின் எதிர்ப்பும் ஆற்றலும்தாம் விபரீதமானவை. தாங்கள் நினைத்ததை மக்களிடம் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதும், மக்களையோ ஒட்டுமொத்த சமுதாயத்தையோ தங்களின் இசைவுக்கு ஏற்ப எப்படியெல்லாம் திசைதிருப்ப வேண்டும் என்பதும் இவர்களுக்குக் கைவந்த கலை. அரசியலமைப்பு ஆட்சித்துறை அதிகார மையங்கள் சட்டத்துறை ஊடகங்கள் என்று மக்களை ஆட்டுவிக்கும் அத்தனைத் துறைகளும் இவர்கள் கைவசம் இருப்பதால் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளும் வல்லமை இவர்களுக்கு அபரிமிதமாக உண்டு.

கருணாநிதிக்கு எதிரான மிகப்பெரிய கரும்புள்ளியாய் ஆ.ராசாவை மக்களுக்கு இன்றைக்கு காட்டியிருப்பதில் இவர்களின் பங்கு மிகப்பெரியது. ராசா குற்றமற்றவர் என்றோ, ஸ்பெக்ட்ரமில் ஊழல் நடக்கவில்லையென்றோ சொல்லவரவில்லை. அல்லது இன்றைய அமைச்சர்களில்- அமைச்சர்கள் என்றால் நமது மாநிலத்தில் இருக்கிறவர்கள் மட்டுமல்ல; மத்தியிலே ஆளுகிறவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் ஆளும் அமைச்சர்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டால் ஒரேயொரு வார்த்தைதான் சொல்லமுடியும். எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதையின் தலைப்பு ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடர்கள் அல்ல;’ ராசா அகப்பட்டுக் கொண்டார் அவ்வளவுதான்!

இந்தியாவில் உள்ள பரிசுத்தவான்களின் அத்தனைத் துப்பாக்கிகளும் இன்றைக்கு ராசாவை நோக்கியும் கருணாநிதியை நோக்கியும் திருப்பப்பட்டுவிட்டன. இதில் அரைவேக்காட்டுத்தன புத்திகொண்ட காங்கிரஸ்காரனின் கைங்கர்யம் வேறு.

சோ போன்றவர்கள் கருணாநிதியை எதிர்ப்பது ஒன்றும் புதிதல்ல. சோவுக்கு அதிமேதாவி என்றதொரு பிம்பம் இருக்கிறது. ஆங்கில ஊடகங்கள் தமிழகத்து அரசியலைப்பற்றிக் கருத்துச்சொல்லும் மேதையாக இன்றைக்கும் சோவைத்தான் கருதுகிறார்கள். சோவை விட ஆழமாகவும் அழகாகவும் கருத்துரைக்க எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவிட்ட நட்பு அல்லது வேறுசில தொடர்புகள் காரணமாக இன்றைக்கும் சோவைத்தான் ஆங்கில ஊடகங்கள் நாடுகின்றன. கருணாநிதி எதிர்ப்பை விட்டுவிடுவோம். இவற்றில் ஒரேயொரு முறைகூட தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனம் என்றவற்றைச் சார்ந்தோ அல்லது தமிழனுக்கு ஆதரவான ஒற்றை வார்த்தையையோகூட சோ இதுவரை தவறியும்கூட உச்சரித்ததில்லை.

கருணாநிதி பற்றிக் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவரது அறிவுக்கூர்மை குறித்தோ, அரசியலில் அவருக்கிருக்கும் ராஜதந்திரம் குறித்தோ, அவரது இலக்கிய மேதைமை குறித்தோ, படைப்பாற்றலில் அவருக்கிருக்கும் திறமை குறித்தோ எவரும் வியக்கவே செய்வர். இந்த விஷயங்களில் யாரையும் அவருக்கிணையாகச் சொல்வதற்கில்லை. ஆனால் சோ போன்றவர்கள் இப்படிப்பட்ட கருணாநிதியைக் கொச்சைப்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளும் விஷயம் மிகவும் அற்பமான ஒன்று.

எப்போது பார்த்தாலும் அல்லது அடிக்கடி இவரே ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வார். ‘கருணாநிதியைவிட ஜெயலலிதா எந்த வகையில் மேலானவர்? அல்லது சிறந்தவர்?’ என்பது
கேள்வி.

இந்தக் கேள்விக்கு சோ சொல்லும் பதில்-‘கருணாநிதிக்கு ஆங்கிலம் தெரியாது. ஜெயலலிதாவுக்கு மிக நன்றாக ஆங்கிலம் தெரியும். எனவே இந்த வகையில் கருணாநிதியைவிட ஜெயலலிதா எவ்வளவோ மேலானவர்.’

இதைவிட அபத்தமான ஒரு பதிலை அற்பபுத்தி படைத்தவன்கூடச் சொல்லமாட்டான். நீண்ட காலத்துக்குச் சோ இந்த பதிலையே சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் சொல்லுவதில்லை. ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களில் ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அதிகமில்லாமல் இருந்தபோது சொன்ன பதில் இது. இப்போதெல்லாம் கருணாநிதி வீட்டுச் சின்ன குழந்தைகள் எல்லாம்கூட ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிட்டனர். நம்முடைய வீட்டிலும் பிள்ளைகள் எல்லாம் சோவைவிட நல்ல ஆங்கிலம் பேசுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொதுவாழ்க்கையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மிக அழகிய ஆங்கிலம், ஜெயலலிதாவை விடவும் அழகாகப் பேசுகிறார். வடக்கத்திய ஊடகங்கள் அடிக்கடி ஜெயந்தி நடராஜன் ஆங்கிலத்தில் பேசும் பேச்சுக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டதும் இனிமேல் இந்தப் பருப்பு வேகாது என்ற எண்ணத்தில் இந்த பதிலைத் தவிர்த்துவிட்டார் சோ.

இது என்னவிதமான ஆங்கில மோகம் என்னவிதமான அடிமைத்தனம் என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்திய சுற்றுப்பயணத்துக்கு வந்தார். பத்திரிகைகள் எல்லாம் சார்லஸ் வருகையைப்பற்றி அதிகமான செய்திகளை வெளியிட்டன. உடனே வந்ததே கோபம் சோவுக்கு. பேனாவைத் திறந்து கொட்டித் தீர்த்துவிட்டார். ‘இன்னமும் இவர்களுக்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சியின் மோகமும் அடிமைத்தனமும் போகவேயில்லை. அவர்கள் விட்டுச்சென்ற மிச்சங்களைக் கட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கும் அடிமைகளாகத்தான் இருக்க விரும்புகிறார்கள். எப்போதுதான் இவர்களுக்கெல்லாம் புத்திவருமோ?’ என்றெல்லாம் போட்டுக்காய்ச்சி எடுத்திருந்தார். பரவாயில்லையே மனிதர் பல விஷயங்களில் ஒருபக்கச் சார்புடன் இருந்தாலும் இம்மாதிரி விஷயங்களில் சரியான வாதங்களையே முன்வைக்கிறாரே என்று தோன்றிற்று.

அடுத்து வந்தது கிரிக்கெட் மேட்ச் சீசன்...அடாடா அதே இங்கிலாந்து நம்மிடம் விட்டுச்சென்ற அந்த ஆட்டத்தை சிலாகித்தும் அதற்குத்தான் பரம ரசிகராக இருந்து அந்த ஆட்டத்துக்கும் ஆட்டக்காரர்களுக்கும் துதிபாடுவதையும் ஆரம்பித்தார் பாருங்கள்..அப்போதுதான் இந்த மனிதரின் மனதிலும் படிந்துவிட்டிருந்த ஆங்கிலேய மோகமும் அடிமைத்தனத்தின் எச்சங்களும் பல்லையிளித்தன. இவர் கருத்துப்படி கருணாநிதியைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்தான் நாட்டை ஆள தகுதியானவர் என்றால் ஜெயலலிதாவைவிட நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்த சிறுமிகள் ஒவ்வொரு கான்வென்டிலும் நூறுபேராவது தேறுவார்கள்.
சோவைப்பற்றி இந்த அளவுக்கு இங்கே எடுத்துக்கொண்டு விமர்சிப்பதற்கு காரணம் பல தேர்தல்களின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் தம்மை வரித்துக்கொண்டு செயல்படுவதும், பல சமயங்களில் அவை செயல்வடிவமும் பெற்றுவிடுவதாலும்தான்.

இதோ, இந்தமுறைகூட கருணாநிதியின் அணியை எதிர்த்து எம்மாதிரி அணி அமையவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக சோ தான் இருந்திருக்கிறார். ஜெயலலிதா அணியில் பெரும்பாடுபட்டு விஜயகாந்த்தைக் கொண்டுபோய்ச் சேர்த்ததிலும் இரண்டு கம்யூனிஸ்டுகளைக் கொண்டுவந்து சேர்த்ததிலும் சோவின் பங்கு கணிசமானது.

விஜயகாந்த்தின் இன்றைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது சோ அவரை அறியாமலேயே தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் செய்திருக்கிறாரோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.
எம்ஜிஆரைப்பற்றி விரிவாகப்பேசாமல் சிறு குறிப்புடன் நிறுத்திக்கொள்வோம். எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியிலே இருக்கும் பிம்பம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அவர்
ஏழைப்பங்காளன் என்பதும் கொடைவள்ளல் என்பதும் வாரிவாரி வழங்குபவர் என்பதும்தான். இதுபற்றிய விரிவான விவாதங்களைப் பிறிதொரு சமயத்தில் வைத்துக்கொள்வோம். அதனால்தான் அவர் ஆட்சிக்கு வந்ததும் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்டு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த இலவச மதிய உணவு திட்டத்தை மறுபடியும் கொண்டுவந்தார். அதுவும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற செய்தி முழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டு எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாக மட்டுமே பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த இலவச உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்த பிறகு வந்த தேர்தல்களில் அவர் கட்சிக்கான ஓட்டு கணிசமாக உயர்ந்தது. கூடவே, அவர் ஆட்சிபுரிந்த சமயங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மக்களுக்குப் பணமும் இலவசங்களும் தாராளமாக வழங்கப்பட்டன. இவையெல்லாவற்றையும் அந்த நாட்களின் தினசரிகளைப் படித்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். லட்டுக்குள் மூக்குத்தி, எவர்சில்வர் குடங்கள் என்றெல்லாம் அப்போது ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்ட தகவல்கள் அத்தனையும் அன்றைய பத்திரிகைகளில் பிரசித்தம். அல்லது ஜூனியர் விகடன் பழைய இதழ்களின் கோப்புக்களைப் பார்த்தாலும் தெரிந்துகொள்ளலாம். ஆக, இதெல்லாம் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது மாத்திரமின்றி மக்களின் மன இயல்பும் அவர்களின் எதிர்பார்ப்பும் இதுதான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தன.

வெறும் கொள்கை, கோட்பாடு, தமிழர்க்கான உரிமைகள், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் என்று மட்டுமே பேசியும் எழுதியும் இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதைக் கலைஞர் புரிந்துகொண்ட தருணம் இதுவே. பேச்சைக்கேட்டுவிட்டு, உடன்பிறப்புக்கான கடிதத்தைப் படித்துவிட்டு ஓட்டுப்போட்ட காலம் மலை ஏறிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டார் அவர். இலவசங்களை எடுத்துவிட்டார். ஸ்டாலின் மூலம் மகளிர் அணியினருக்குப் போய்ச்சேரவேண்டிய பலன்களை முடுக்கிவிட்டார்.

மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ, வள்ளலாரின் வாரிசுகளோ இல்லை. கொஞ்சம் முரட்டுத்தன அரசியலுக்குப் பெயர்போனவர்கள். இவரகளின் கையிலிருக்கும் மதுரையை மீட்க வேண்டும் என்ன செய்யலாம்? அனுப்பு அழகிரியை அங்கே...என்று முடிவெடுத்து அழகிரியை அங்கே அனுப்பிவைக்கிறார்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரை அந்தப் பிடிகளிலிருந்து முழுவதுமாக மீட்கப்படுகிறது. முற்றாக அழகிரியின் கைகளுக்குள் வருகிறது.

அரசியல் வரலாற்றில் இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல;

சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல. சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.

ஆக, இலவசங்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் மற்ற அரசியல்வாதிகளைப்போன்றே இத்தனைக்காலமும் அரசியல் நடத்திக்கொண்டிருந்த கலைஞரை இலவசங்களை நோக்கித் தள்ளியதும்,
முரட்டுத்தனம் காட்டித்தான் மதுரையில் அரசியல் நடத்த முடியும் வேறுவழியில்லை என்பதும் காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இவற்றிற்கான பங்களிப்பு கணிசமாக எம்ஜிஆரின் அரசியலுக்கும் அவர் காலத்தில் கலைஞர் பெற்ற தொடர்ச்சியான தோல்விகளுக்கும் இருக்கிறது.

அடுத்து, இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் குறித்து எந்தத் தமிழனும் அவரைப் பாராட்டமாட்டான். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவரும் மத்திய அரசும் நடந்துகொண்ட விதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதற்காக இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் போக்கையும் நியாயப்படுத்த முடியாது.

இலங்கை விவகாரத்தில் கலைஞர் நடந்துகொண்டவிதம் நியாயமற்றது என்று சொல்லும் அதே நேரத்தில் வேறு சில விஷயங்களையும் கவனிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இலங்கை விவகாரம் ஒன்றிற்காக மட்டுமே அவர் இரண்டுமுறை ஆட்சியை விட்டு இறங்கியிருக்கிறார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. அப்படி ஆட்சியை அவர் பறிகொடுத்த சமயத்தில் அவர் பின்னால் அத்தனைத் தமிழ் சமூகமும் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்பதும் அவருக்குப்பின்னால் ஒரே குரலில் அணிசேரவில்லை என்பதையும் சௌகரியமாக மறந்துவிடக்கூடாது.

இலங்கை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே தனித்தனிக் குழுக்களாகப் போராளிக்குழுக்கள் தமிழகம் வந்து ஆதரவு திரட்டியபோது யார்யார் எந்தெந்தத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்களோ அவரவர் அந்தந்தத் தலைவர்களுடனேயே நட்பைத் தொடர்ந்தார்கள். அப்படித்தான் முகுந்தனும், பாலகுமாரும், சிறீசபாரத்தினமும், பத்மநாபாவும், பிரபாகரனும் வெவ்வேறு தலைவர்களுடன்தான் நட்பு பூண்டார்கள். பின்னாளில் இவர்களில் பிரபாகரன் மட்டுமே வானளாவிய வலிமையுடன் உயர்ந்து நின்றார். ஆனால் பிரபாகரன் ஆரம்பத்திலேயே எம்ஜிஆருடன் நட்புகொண்டுவிட்ட காரணத்தால் கலைஞரைப் பிரபாகரன் புறக்கணித்ததும், பிரபாகரனைக் கலைஞர் புறக்கணித்ததும் மாறி மாறி நடந்தது.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் நிலைகள் மாறியபோது பிரபாகரனுடனான கலைஞரின் தொடர்புகளோ அல்லது கலைஞருடனான பிரபாகரனின் தொடர்புகளோ நிச்சயம் மறுபரிசீலனைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்ததாகத் தகவல்கள் இல்லை. இது தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு. பிரபாகரனுக்கு வேண்டியவர்களாக இங்கு இருந்த சில தலைவர்களும் கலைஞருக்கும் பிரபாகரனுக்கும் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. அல்லது பிரபாகரன் தரப்பில் வெளிநாடுகளில் இருந்தாவது கலைஞரிடம் ஒரு நல்ல நட்பைப் பேணியிருக்கவேண்டும். அதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

அதனைத்தொடர்ந்து ராஜிவ் காந்தியின் மரணம். குற்றவாளிகள் யாரோ பழி என்னவோ கலைஞர் தலையில் விழுந்தது. தேர்தல் முடிவு என்னவென்றால் 234 தொகுதிகளில் திமுகவுக்கு ஒரேயொரு இடம்.

என்ன செய்யலாம் கருணாநிதி?

ராஜிவ் மரணத்தின் தாக்கமெல்லாம் குறைந்து இலங்கையில் விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருக்கும் நிலைமைகள் இருந்தபோது மறுபடி கலைஞர் இங்கே ஆட்சிபீடம் ஏறினார். அதன்பிறகாவது பிரபாகரனுக்கும் கலைஞருக்கும் நல்லதொரு தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். அதற்குபதில் அவருக்கும் இவருக்குமான ego clash ஐ உருவாக்கிவிட்டு இரண்டுபேருக்கும் எவ்விதமான புரிதலும் ஏற்படாமல் இங்குள்ள தலைவர்கள் சிலர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தொடர்ந்து வந்துவிட்டது முள்ளிவாய்க்கால். விளைவுகள் இத்தனை மோசமாக இருக்கும் என்பதை கருணாநிதியே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தம்முடைய கடிதங்களுக்கோ, அல்லது ‘உண்ணாவிரதத்துக்கோ’ மத்திய அரசு செவி சாய்க்கும் என்றுதான் நினைத்தார் அவர். இலங்கை விவகாரத்தில் இவருடைய வார்த்தைகளுக்கு சல்லிக்காசு மரியாதையும் இல்லை என்ற அதிர்ச்சியான பதிலைத்தான் ‘சென்ட்ரல்’ இவருக்குத் தெரிவித்தது. இவர் கையில் இருந்தது ஒரேயொரு அஸ்திரம்தான். மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் கோரக்கொடுமைகள் நின்றிருக்குமோ இல்லையோ, இவரது பெயர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அதன் தொடர்ச்சியாக இங்கிருக்கும் எதிர்க்கட்சியுடன் சேர்ந்துகொண்டு தன்னையும் தன்குடும்பத்தையும் படுத்தப்போகும் பாட்டை அவர் யோசித்துப் பார்த்திருக்கவேண்டும். மத்திய அரசுடன் ஒத்துப்போய்விடுவது என்ற தவறான முடிவுக்குத்தான் அவரால் வரமுடிந்தது.

சகோதர யுத்தம்தான் இவ்வளவுக்கும் காரணம் என்ற பலவீனமான காரணத்தைச் சொல்லத்தொடங்கினார். முரசொலியை நாள்தவறாமல் அறுபது வருடங்களுக்கும் மேலாகப்படித்துக்கொண்டிருக்கும் கடைநிலை உடன்பிறப்புக்கூட இதை ஒப்புக்கொள்ளமாட்டான் என்று அவருக்கே தெரியும்.

அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ஒருமுறை சொன்னார். “நான் சூழ்நிலைகளின் கைதி” என்று. இன்று அது இவருக்குத்தான் நூறு சதம் பொருந்துகிறது.

இலவசங்கள், இலங்கைப் பிரச்சினைக்கடுத்து குடும்ப ஆதிக்கம் என்ற ஒன்றும் கருணாநிதிக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கில் அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாம் மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டோமானால் அங்கு அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் எல்லாரும் டீக்கடையோ அல்லது பெட்டிக்கடையோதான் வைத்திருக்கிறார்கள். அசாமிலும் குஜராத்திலும் அமைச்சராயிருப்பவர்களின் பிள்ளைகள் மூட்டை தூக்கித்தான் பிழைக்கிறார்கள். இங்கே கர்நாடகத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் எல்லோரும் கட்டடம் கட்டும் இடத்தில் கொல்லத்து வேலைதான் செய்கிறார்கள். இவ்வளவு ஏன்? ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த தம்பிதுரை, செங்கோட்டையன், பன்னீர்செல்வம், வளர்மதி, மதுசூதனன் இன்னபிறரும் அவர்களது உறவினர்களும் தினக்கூலிக்குத்தான் வேலைப்பார்க்கிறார்கள். கருணாநிதி குடும்பம் மட்டும்தான் ஆட்சியை உபயோகித்து கோடிகளில் புரள்கிறார்கள்.....

உண்மை என்னவென்று பார்த்தோமானால் சாதாரண ரத்தத்தின் ரத்தங்களெல்லாம் மிகப்பெரிய ‘கல்வித்தந்தைகளாக’ உருமாற்றம் கொண்டது எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் ஏகப்பட்ட கல்வித்தந்தைகள் உருவாகி நாடெங்கும் கல்விக்கோவில்களைப் பெருக்கினார்கள். மணல் ராஜாக்கள் உருவானார்கள். அந்த பிசினஸ் இந்த பிசினஸ் என்று கல்லா கட்டினார்கள். இவையெல்லாம் பொதுமக்களின் விவாதத்திற்கு வராத விஷயங்கள். ஆனால் சினிமா என்பது அப்படியல்ல. சினிமா என்பதும் பத்திரிகை என்பதும் சேனல்கள் என்பதும் பொதுமக்களின் கண்முன்னாடியே இருக்கின்ற விஷயங்கள். கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனைப்பேரும் இதே தொழிலில் இறங்கியதும், ஒவ்வொரு படத்துக்கும் கதாநாயகனுடனும் கதாநாயகியுடனும் சேனலில் தோன்றி பேட்டி கொடுத்ததுவும் இன்று இவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருக்கிறது அவ்வளவுதான்.

மற்றபடி உறவினர்களின் ஆதிக்கம் என்பது என்னதான் இருந்தாலும் வளர்ப்பு மகன் திருமணத்தை மைசூர் தசரா ஊர்வலம் போல் நடத்திக்காட்டினாரே ஜெயலலிதா அப்படியெல்லாம் தறிகெட்டுப்போகவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவர்களாகவே இருக்கிறோம். (அதிலும் அந்தத் திருமணத்தின்போது உலகப்புகழ்பெற்ற அந்த மகாநடிகன் சிவாஜிகணேசன் எழுந்து நின்று ஜெயலலிதாவைப் பார்த்து முதுகு வளைந்து ஒரு கூழைக்கும்பிடு போடும் போட்டோவைப் பார்த்து-அந்த மனிதனுக்கு அப்படியொரு நிலைமையை ஏற்படுத்திய ஜெயலலிதாவை நினைத்து நெஞ்சுபிளக்காத சிவாஜி ரசிகர்கள் இருக்கமுடியாது.)

இப்போது தேர்தல்!

கலைஞரின் தவறுகள் தெரிகின்றன. சரி கலைஞரைத் தோற்கடித்துவிடுவோம். ஆனால் அவருக்குப்பதில் யார்? என்பதைச் சொல்லவேண்டிய கடமையும் கட்டாயமும் இருக்கிறது.
கலைஞரைத் தோற்கடித்த இடத்திற்கு எளிமையும் பண்புமாய் இந்த நாட்களிலும் வலம்வரும் தலைவர் நல்லகண்ணு வருவாரா?

எம்எல்ஏக்களிலேயே இவர்போல் யாரும் இவ்வளவு எளிமையாய் இருந்ததில்லை. சட்டமன்ற விடுதியைக் காலி செய்யும்போது ஒரு காட்டன் பையில் வேட்டியையும் சட்டையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் நன்மாறன் என்று இன்னொரு கம்யூ. உறுப்பினரைப்பற்றி பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அந்த நன்மாறன் வருவாரா?

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை உலகிலுள்ள தொண்ணூறு சதம் தமிழர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரே தமிழகத் தலைவர் ஐயா நெடுமாறன். அந்த நெடுமாறன் வருவாரா?
இல்லை. ஜெயலலிதாதானே வருவார்?

கலைஞருடைய தகுதிகள், பெருமைகள், திறமை, பழுத்த அனுபவம், ஞானம், ஆளுமை, இலக்கியத் தேர்ச்சி தேசத்தலைவர்களிடையே அவருக்கிருக்கும் நன்மதிப்பு, அவருக்கே உரித்தான ராஜதந்திரம் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆட்சிக்கு வந்தால் மக்களோடு மக்களாக அவர்கள் பிரச்சினைகளுக்கு ஏற்ப அவர்களின் ஏற்றத்தாழ்வில் பங்கு பெறும் தலைவராக அவர் இருப்பாரா மாட்டாரா என்பதை முடிவு செய்பவர்களாகவே மக்கள் இருக்கவேண்டும். பதினான்கு வயதுமுதல் மக்களோடு மக்களாகவே அவர் இருக்கிறார். ஸ்டாலினும் அழகிரியும்கூட மக்களுக்கு எந்த நேரமும் கிடைக்கின்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதனைப் படித்துக்கொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும், அல்லது இதனை எழுதும் நான் வேண்டுமானாலும் எப்போது நினைத்தாலும் கலைஞரையோ அல்லது ஸ்டாலினையோ அழகிரியையோ, பேராசிரியர் அன்பழகனையோ சென்று சந்தித்துவிட முடியும்.

ஜெயலலிதாவை அப்படிச்சென்று சந்திப்பது சாத்தியமா?

குறைந்தபட்ச மனிதப்பண்புகளோ, தனிமனித நாகரிகமோ அவரிடம் காணக்கிடைக்கிறதா?
மற்ற மக்கள் தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளை உட்காரவைத்துப் பேசும் மனப்பான்மை அவரிடம் சாத்தியமா?

சாத்தியமில்லையெனில் அப்படிப்பட்ட ‘மக்கள்தலைவர்’ மக்களுக்கு எதற்கு? அவர்பாட்டுக்கு ராஜவாழ்க்கை வாழ்வதற்கும், அவரது கோபதாபங்களுக்கு ஏற்ப எல்லாரையும் தண்டிப்பதற்கும், பந்தாடுவதற்கும் மட்டுமே முதல்மந்திரி பதவி என்பது ஜனநாயகத்திற்கு இழுக்கு அல்லவா?

எல்லாம் போகட்டும்.. தோல்விக்குப்பின்னர் தன்னுடைய போக்குகளை அவர் கொஞ்சமேனும் மாற்றிக்கொண்டிருக்கிறாரா?

வைகோ போன்ற ஒரு தலைவனை அவர் நடத்தியவிதம் அரசியல் பண்புகளுக்கு உகந்ததுதானா? ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவியாகவாவது கடந்த ஐந்தாண்டுகளில் அவர் நடந்துகொண்டிருக்கிறாரா?

நாம் எப்படியாவது ராஜயோக சுபவாழ்க்கை நடத்திக்கொண்டு ஜாலியாக இருப்போம். கொடநாட்டில் குளுகுளு பிரதேசத்தில் மொத்தநாட்களைக் கழிப்போம். சட்டமன்றத்துக்குப் போகவேண்டியதில்லை. மக்கள் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தவேண்டியதில்லை. தேர்தல் சமயத்தில் சென்னைக்குப்போய் ஒரு பிரச்சாரவண்டியில் ஏறிக்கொண்டு ஒரு ரவுண்ட் அடித்து எழுதிவைத்த அட்டைகளை வாசித்துக்காட்டிவிட்டு வந்தோமானால் பதவிக்கு வந்துவிடலாம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ராஜவாழ்க்கை மற்றும் எதிர்த்தவர்களைப் பந்தாடுவதற்கு வாய்ப்பு உறுதி என்று அந்த அம்மையார் நினைத்தால் அது தப்பு என்று உணர்த்தும் கடமை தமிழ்மக்களுக்கு இருக்கிறது என்றே தோன்றுகிறது.

ஒரு விஷயம், கலைஞர் சில தவறுகளைப் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கிருக்கிறது. அதனால் எப்படிப்பட்ட பெரிய மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஜெயலலிதா மாறுவதற்கான எந்த அறிகுறியும் அவர் செயற்பாடுகளில் இல்லை.

Monday, March 28, 2011

செக்ஸ் பற்றி சிவகுமார்- 18+


பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் நல்ல புரிதலுடனும் சொல்கிறார்.

அது பற்றிய கேள்வியும் பதிலும்;

கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல்வதில்லையே..நீங்களாவது விளக்குவீர்களா?

ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமியிலேயே பேரின்பம். காமக்கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப்பிய பாரதத்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம்.

குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டோமென்று கருதமுடியாது.

ஆணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு. ஆண் செயல்படுபவன்; பெண் அதை பெற்றுக்கொள்பவள்.

எத்தனை நதி பெருக்கடுத்தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக்கட்டைகளைப் போட்டாலும் வேள்வி நெருப்பு அணையாது. அவ்வளவு வீரியமானது பெண்களுடைய செக்ஸ் உணர்வு.

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று ஆகாயத்திலும் அடுக்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன் ஜாலம் செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க முடியாது.

மனதாலும் உடலாலும் ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.

ராமாயணத்தில் கௌதம முனிவன் மனைவி அகலிகையிடம் தேவேந்திரன் மாறுவேடத்தில் வந்து கூடுவான். தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில நொடிகளில் இதுவேறு ஆடவன் என்று புரிந்துவிடுகிறது. இருந்தாலும் போகட்டும் என்று அனுமதித்துவிட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்துவிட்டான் என்று கதை போகும்.

டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகையின் உணர்வை உறுதிப்படுத்துகிறார். எவ்வளவுதான் ஒரு பெண் மனதளவிலும் உடல்வழியாகவும் முரண்டுபிடித்தாலும், ஒரு காமுகனின் பலாத்காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு ஏற்றுக்கொள்கிறது. மனதை உணர்ச்சி தற்காலிகமாக வென்றுவிடுகிறது. சில கணம் உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை வெல்லும்போது நடந்துவிட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை என்கிறார்.

மனித உடம்பை இரண்டாகப்பிரித்து மேல்பகுதி சுத்தமானது, கீழ்ப்பகுதி அசுத்தமானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று பிள்ளைகளிடம் சொல்லித்தராதீர்கள் என்கிறான் ஓஷோ. உடல் முழுமையானது. வாயில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவேண்டுமென்றால் ஆசனவாய் சுத்தமாக இருக்கவேண்டும். ஆசனவாயில் அடைப்பு ஏற்பட்டால் துர்நாற்றம் மேலே கிளம்பி சிறுகுடல், இரைப்பை, உணவுக்குழாய் வழி வாயிலே புகுந்து வெளியேறும்.

ஆசனவாய் சிறுநீர்த்தாரை இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சிறுவனோ சிறுமியோ சிறுநீர்க் கழித்தபின் அதிலே தேங்கும் உப்பின் காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது விரலால் சொறியவே செய்யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந்தைகளை அதட்டாதீர்கள், மிரட்டாதீர்கள்.

சிறுநீர் மற்றும் மலம் கழித்தபின் அந்தப்பகுதிகளைச் சுத்தமாகக் கழுவப் பழக்கிவிடுங்கள். அதைவிடுத்து, வீண் மிரட்டல் விடுப்பதால் தன் உடம்பில் உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று-தீண்டத்தகாதது என்று அந்தச் சிறுவன் அல்லது சிறுமி மனதிலே எண்ணம் படிய, அவர்கள் வளர்ந்து திருமணம் செய்து முதலிரவில் சந்திக்கும்போது ஏதோ கெட்ட காரியம் செய்கிறோம்-பாவ காரியம் செய்கிறோம் என்று பயந்தே கூடுகிறார்கள். அதனால் பிறக்கும் குழந்தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது.

ஒரு வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்தவுடன் செக்ஸ் பற்றிய விஷயத்தையும், பிறப்பு உறுப்புக்களின் பயன்பாட்டையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்கிறான் ஓஷோ.
‘மனிதனுக்கு இயற்கையில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று கீழ்வயிற்றுப்பசி. இரண்டு பசிக்கும் முறையாகத் தீனி போடாவிட்டால் அடங்காது’ என்கிறார் கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு நாட்கள் அவளுடன் கூடிக்குலவி ருசி பழக்கிவிட்டு துபாய்க்கு நீ வேலைப்பார்க்கப் போய்விட்டால் அவள் கதி என்ன ஆகும்?

ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறுமையாக இருக்கும்?

இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் வணக்கத்திற்குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண்டியே திருமணம் செய்துகொண்டார். சாரதா தேவிக்கும் அவருக்கும் இருபத்தியிரண்டு வயது வித்தியாசம். தன் மனைவியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர் பார்த்தார். அவரது பக்தியை சாரதா அம்மையாரும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.அவர்கள் தெய்வீகத்தம்பதிகள்.

இன்று ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை மணந்து, செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன ஆகும் ? யோசியுங்கள்!

பூப்படைந்து ஆறு ஆண்டுகளில் செக்ஸ் உணர்ச்சிப்பொங்கிப் பிரவாகமெடுக்கும் வயதில் அவளை நீ ‘அம்பாள் வடிவம் நெருங்காதே’ என்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனையோடு, இருபது ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக்கூடாது.

‘அதே சமயம் இனவிருத்திக்காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை நெருங்கக் கூடாது’ என்கிற காந்திஜி தத்துவத்தைக் கடைப்பிடித்து, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும் உறவு தவிர்த்து வாழ்வதும் அவசியமில்லை.

முழுமையான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒருமித்து திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ளவர்கள், ஆண்மை இழந்தவர்கள் கூட, ஒரு பெண்ணுக்கு மனதளவில் செக்ஸ் இன்பம் அனுபவித்த திருப்தியைக் கொடுக்கமுடியும்.

விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ்ஸில் அழைத்துப் போங்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும்போது குளிரில் பற்கள் தடதடக்கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவிக்குப் போட்டுவிடுங்கள்.

அதிகாலை ஆள்மறைக்கும் மேகமண்டலத்தில், மயிர்க்கூச்செரியும் குளிரில், தொட்டபெட்டா சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி சூடான வேர்க்கடலைக் கொரியுங்கள். நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து ‘பெடல் போட்டில்’ ஐஸ்கிரீம் சாப்பிட்டவாறு ஒரு மணிநேரம் சவாரி செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் வரிசையாக மட்டக்குதிரைகள் நிற்கும். ஒரு குதிரையில் மனைவியை ஏற்றிவிட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். பகல் விருந்துக்குப்பின் மேட்னி காட்சி. இரவு கதகதக்கும் ஹோட்டல் அறையில், நடுங்கிக்கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து படுத்துக்கொள்ளுங்கள். எழுபத்தைந்து விகித சந்தோஷத்தை அவள் அனுபவித்திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம்தான்.

ஆணைப்பொறுத்தவரை செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக்காரன்தான். அடுப்பை மூட்டாமலேயே, தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றிவிடுகிற புத்திசாலி இவன். சில சமயம் தோசைக்கல், 50 தோசைகளை வேக வைக்கும் அளவு சூடாக இருக்கும்போது இவன் அரைக்கரண்டி மாவை மட்டும் ஊற்றுவான்.

பெண்களை நெருங்காமலேயே இருந்துவிடுவது உத்தமம். அவர்களை ஆட்டத்திற்குத் தயாராக்கிவிட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இயற்கையிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு.

அதிக செக்ஸ் பசி உள்ள மனைவிக்கு கையாலாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போதுதான் ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ கதை நிகழும்.

50 ஆண்டுகள் மணமொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் நிலையில், உச்சம் தொட்ட இன்பத்தை- ஐந்து அல்லது ஆறு முறை அனுபவித்திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.

ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கிவிடுவான்
அல்லது அவள் உச்சம் தொடும்போது இவன் ஓய்ந்திருப்பான்!

உடல் பலத்தைப் பயன்படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதைவிட, சாதுர்யத்தைக் கடைப்பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ்விப்பது எளிது.

பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைவதே. அது தெய்வ நிலை.

உலகை மறந்த அற்புதக் கணம்!

அந்தக் கணங்களில்தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக் கணவனும் தன் மனைவியிடம் இன்று நீ சந்தோஷமாய் இருந்தாயா என்று கேட்பதில்லை. பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவுகளில், மயக்க நிலை முனகல்களில் வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.
இந்த லட்சணத்தில் விலைமாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கிவந்து வீட்டிலிருக்கும் மனைவிக்கும் அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் அந்த எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணியவான்களும் உண்டு.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்றுதான் பெண்கள் திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போடவேண்டும். ஆண் சனிக்கிழமை குளிக்கவேண்டும் என்று வகுத்து வைத்தனர்.

தலையில் குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம்பெல்லாம் பூசிவிடும்போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப்பகுதிக்கு வந்துவிடுகிறது. அன்று மனைவியைக் கூடும்போது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவதால் மறுநாள் உடல் அசதி கூடுதலாக இருக்கும்.

குடித்துவிட்டு உறவுவைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். மது, ‘உடல் இன்ப வேட்கையை அதிகப்படுத்திவிட்டு, செயல்பாட்டைக் குறைத்துவிடும்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று படித்தவர்கள்கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க்கின்றனர். காலையில் எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்றுண்டி தயாரித்து, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, ஊட்டிவிட்டு யூனிஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு, கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணாதிக்கம் மிக்க மேனேஜரிடம் அநியாயமாகத் திட்டுவாங்கி, மாலைவரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து, பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கையில் சாய்பவள்-

உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சியளிக்க வேண்டும்- தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?

ஓய்ந்து களைத்து உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.
இன்றைய வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந்தாற்போல் இரண்டு மணிநேரம் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. இருவரும் வேலைப் பார்க்கிறார்கள். பெரும்பகுதி அலுவலகத்திலும் பஸ் பயணத்திலுமே கழிந்துவிடுகின்றன. மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று பற்றாக்குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷனாகவே இருக்கிறோம்.

கணவன் மனைவி வாரத்தில் கடைசி ஒருநாளாவது வீட்டைவிட்டு எங்காவது வெளியில் சென்றுவர வேண்டும். வசதி இல்லாதவர்களுக்கு சென்னையில் கடற்கரை இருக்கிறது. பாம்புப் பண்ணை, மிருகக் காட்சி சாலை இருக்கின்றன. வெளியூர் தம்பதிக்கு இருக்கவே இருக்கிறது சினிமா. அதைவிட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயில். இப்படி அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு நாளையாவது ஒதுக்குங்கள்.

கணவன் மனைவியரிடையே விரிசல் ஏற்பட புறக்காரணங்களைவிட, உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தியே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து வாழவேண்டும்

போகப்பொருளாக- துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண்களை நினைப்பதை நாம் மறந்து, அவளும் நம்மைப்போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு, ஆசாபாசம் அவளுக்கும் உண்டு. அவளில்லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக்கிவிட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள் பெண். நம் வெற்றிக்குத் துணை நிற்பவள் பெண். நம் வயோதிகக் காலத்தில் பாசத்தைப் பொழிபவள் பெண்....என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

நன்றி ; ராணி வார இதழ்.

Monday, March 14, 2011

காதல் திருமணம் செய்துகொள்வது நல்லதா? – நடிகர் சிவகுமார்.


இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் செய்துகொள்வது நல்லதா? பெற்றோர் பார்த்த ஆணையோ பெண்ணையோ மணப்பது நல்லதா?-என்ற முக்கியமான கேள்விக்கான விடையைச் சொல்கிறார் சிவகுமார்.

காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதையுண்டாம்
கானமுண்டாம் சிற்ப முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே-

என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே காதலின் அவசியத்தை, சிறப்பை பாரதி கூறிவிட்டுப்போய்விட்டான். உடல் சேர்க்கையின் துவக்கம்தான் காதல் என்று வாதிட்டாலும் உடல் சேர்க்கை சில நிமிடங்களில் முடிந்துவிடக்கூடியது. கூடியதும் பிரியக்கூடியது. உடல் சேர்க்கைக்கு முந்தைய காதல் உயிர்ப்பானது. மனதை குதூகலம் அடையச்செய்யக்கூடியது. கலைகள் கற்பனைகள் விரிய அது உதவிசெய்யும்.
காதல் என்ற ஒன்று இல்லையென்றால் பிறவி பாலைவன வாழ்க்கையாகிவிடும். சங்க இலக்கியத்திலேயே கற்பு ஒழுக்கம், களவு ஒழுக்கம் என்று இரண்டு பிரிவுகள் இருந்திருக்கின்றன. பெற்றோர் பார்த்து மணந்துகொள்வது, திருமணத்திற்கு முன் சந்தித்து நட்பு கொண்டு அன்பு காட்டி அது காதலாகி இருமனங்கள் இணைந்தபின் பெற்றோருக்குத் தெரியாமலோ தெரிந்தோ திருமணத்தில் இணைவது.

ஆனால் நீண்ட நெடுங்காலம் பெற்றோர் பார்த்து நடத்திவைத்த திருமணங்களே நடந்திருக்கின்றன. இனவிருத்தி- வாரிசு உரிமைக் கொண்டாட குடும்பம் என்ற அமைப்பும் அதன் மூலம் குழந்தை பெறுதலும் நிகழ்ந்து வந்துள்ளன.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்ப அமைப்பு வேர்விடும் சூழலில் சாக்ரடீஸின் சீடன் பிளேட்டோ ஒரு தியரி கொண்டுவர முயற்சித்தான். அதாவது உலகில் வருங்காலத்தில் பிறப்போர் எல்லாம் அறிவாளிகள், அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பலசாலிகளாகப் பிறக்க ஒரு வழி இருக்கிறது.
அழகும் இளமையும் ஆரோக்கியமான உடலும் உள்ள பெண்களைத் தேர்வு செய்து, பொது இடத்தில் அவர்களைச் சேர்த்துப் பராமரித்து- தற்காலத்தில் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் மேதைகளை அந்தப் பெண்களுடன் கூட வைத்து குழந்தைப் பிறக்கச் செய்தால் உலகெங்கும் மேதைகளே நிறைந்திருப்பார்கள்.

கொசு உற்பத்தி செய்வதுபோல பூமிக்குப் பாரமாக மனிதக்கூட்டத்தை உற்பத்தி செய்வது வீண்வேலை என்று ஒரு யோசனை சொன்னான்.

அந்தக் கோரிக்கையைக் கேட்ட இன்னொரு அறிஞன், ‘எல்லாம் சரி; மேதைகளுக்குப் பிறப்பவர்கள் மேதைகளாக இருப்பார்கள். பாடகனுக்குப் பிறப்பவன் பாடகனாக வருவான். ஓவியனுக்குப் பிறந்தவன் ஓவியனாக வருவான். புத்திசாலிக்கு இன்னொரு புத்திசாலிதான் பிறப்பான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?’ என்று குறுக்குக் கேள்வி போட்டான்.
ஆசிரியர் பிள்ளை மக்காகவும், பலசாலிப்பிள்ளை நோஞ்சானாகவும் பிறக்க வாய்ப்பிருக்கிறதே என்றான்.

அப்படி ஒரு புண்ணியவான் பிளேட்டோ திட்டத்தை முறியடித்ததால் ஈ எறும்புக்குப் போட்டியாக நீங்களும் நானும் பிறந்து இன்று பூமிக்குப் பெரும் பாரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தனியுடைமை என்று தோன்றிய காலகட்டத்தில், இது என் நிலம், இது என் வீடு, இது என் மனைவி, இவர்கள் என் பிள்ளைகள் என்ற உணர்வுடன் பொதுச்சொத்துக்களை, பொது மகளிரைப் பிரித்து தன் உடைமை ஆக்கிக்கொண்டான் மனிதன்.
அன்று துவங்கியது- பெண் பார்த்து மணந்துகொள்வது- பெற்றோர் பார்த்து திருமணம் செய்துவைப்பது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆண் ஆதிக்கம் தொடர்ந்த காரணத்தால், மனைவியாக வந்தவளை, பல்வேறு கோணங்களில் கணவன் துன்புறுத்தி அடிமையாக வைத்திருந்திருக்கிறான்.

அவன் விருப்பமே முக்கியம். அவன் முடிவே இறுதியான முடிவு. அவன் உறவுகளே முதன்மையான உறவுகள் என்று பெண்ணின் உணர்வுகளைத் தீய்த்தே வைத்திருந்திருக்கிறான்.
அவன் மனைவி என்பதற்கு அடையாளமாக அவள் கழுத்தில் தாலி இருக்கும். இவள் கணவன் அவன் என்பதற்கு அவன் உடம்பில் எந்த அடையாளமும் இருக்காது.

திருமணமானதும் பெற்றோர் பாசம், உடன்பிறப்புக்களின் அன்பு, பிறந்த ஊரின் தொடர்பு, நண்பர்களின் சினேகம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அனைத்தையும் அவள் தியாகம் செய்துவிட்டு, கணவனோடு அவன் கொள்கைகளோடு, முரண்டு பிடிக்கும் அவன் பெற்றோர்கள், முசுடுகளான அவன் உடன்பிறப்புக்களோடு இவள் சமரசம் செய்துகொண்டு யார் மீதும் குற்றம் சுமத்தாது வாய் இருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் ஜடமாக வாழவேண்டும்.

போதாக்குறைக்கு படிப்பு வேறு கிடையாது. சுயமாக அவள் எதையும் சிந்திக்க முடியாது. திருமணம் செய்துகொடுத்ததோடு பெற்றவர்கள் கடமை முடிந்துவிட்டது. பிறந்த வீட்டு வாசல் நமக்கு மூடப்பட்டுவிட்டது என்ற உணர்வோடு வாழ்வு சாவு எதுவாக இருந்தாலும் புகுந்த வீட்டில்தான் அவளுக்கு இனி நடக்கவேண்டும்......இப்படித்தான் கடந்த ஐம்பது ஆண்டு காலம்வரை இந்தியப்பெண்களின் வாழ்க்கை நடந்துவந்திருக்கிறது. கேவலம் ஓட்டளிக்கும் உரிமையைக்கூட நாகரிகம் பேசும் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, பிரான்சோ பெண்களுக்கு முதலில் கொடுக்கவில்லை. நியூசிலாந்துதான் கொடுத்தது.

இன்று உலகெங்கும் பெண்கள் கவனமாகப் படிக்கத்தொடங்கிவிட்டனர். கல்வியில் மட்டுமல்ல, பொது அறிவில், பிரச்சினைகளைக் கையாளுவதில், மனோவலிமையில் ஆண்களைவிடப் பலமடங்கு புத்திசாலிகளாக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். அன்று புலியுடன் மோத, சிங்கத்தைச் சீண்டிவிளையாட ஆணுக்கு உடல் பலம் தேவைப்பட்டது. இன்று அதே புலியை, சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த நவீன ரக துப்பாக்கி போதும். குறி பார்த்துச் சுட ஒரு குழந்தைக்கூடப் போதும். அறுபதாயிரம் அடி உயரத்தில் பறக்கும் ஆகாய விமானத்தை ஓட்ட உடல் பலம் தேவையில்லை. சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் உள்ள இருபது வயதுப்பெண் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.........
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம்-என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்- என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாரதி கண்ட கனவு நனவாகிவருகிறது.

ஆண் இனி பெண்ணை அடிமையாக்கி காலடியில் கிடத்த முடியாது. ‘கற்பு நிலை என்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’ என்று பாரதி பாடியபடி ‘நான் ஆண், என் இஷ்டப்படி 5, 6 சின்னவீடு வைத்துக்கொள்வேன். ஆனால் நீ எனக்குமட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும்’ என்று இனி வாதாட முடியாது. அப்படிச்செய்தால், ‘நீ எனக்கு மட்டுமே கணவனாக இரு; நான் உனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கிறேன்’ என்று கேட்கும் நிலை வந்துவிட்டது.

பெண்களுக்கு கல்வி கிடைத்துவிட்டது, வேலை கிடைத்துவிட்டது, கை நிறைய பணம் கிடைக்கிறது, சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் வந்துவிட்டது, தனியே உலகில் வாழ முடியும் என்ற தைரியம் வந்துவிட்டது-

இனிமேல் காதல் திருமணங்கள் நடைபெறவே எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது!
வீட்டுக்குள்ளேயே பெண்கள் அடைந்து கிடந்தால், பூப்பு நன்னீராட்டு விழா என்று ஒரு சடங்கு செய்து, ஊரைக்கூட்டி ‘என் மகள் இதோ திருமணத்துக்குத் தயாராகிவிட்டாள். பிள்ளை பெற்றவர்கள் 3, 4 ஆண்டுகள் கழித்துப் பெண் கேட்டுவரலாம். என்று தண்டோரா போடவேண்டி வந்தது.

இன்று 80 சதம் பெண்கள் படித்து முடித்து வேலைக்கும் போகிறார்கள். வேலைப்பார்க்கும் இடத்தில் பல தரப்பட்ட ஆண்களுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் இருக்கிறது. ஒரு நாளில் பெரும்பகுதி அந்த ஆண், அல்லது பெண்ணுடன் தொழில் செய்யும் சூழலில் தன் வருங்கால வாழ்க்கைக்கு ஏற்றவர் யார் என்று இருவருமே முடிவு செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

எனவே, பெற்றோர் பெண் தேடி, வரன் தேடி அலையும் அலைச்சல் இன்னும் 20 ஆண்டுகளுக்குப்பின் இருக்காது.

கல்வியும் பொருளாதாரமும் மேம்படுகிறபோது சாதி மத பேதம் அதன் வீரியத்தை இழந்துவிடும்.

இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த I.P.S, I.A.S அதிகாரிகள் உயர்ந்த சாதிப்பெண்களை, பெரும்பாலும் பிராமணப் பெண்களை கலப்புத்திருமணம் செய்திருக்கிறார்கள்.

இது வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் நிகழும்.

இன்று காதல் திருமணம் செய்பவர்கள் காதல் திருமண வாழ்க்கைக்கு முன்னோடிகள். அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது.

அல்ப காரணங்களுக்காக கோர்ட்டில் விவாகரத்து கேட்டு நிற்காமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அனுசரித்து, வெற்றிகரமாக வாழ்ந்து வருங்காலத்தில் காதல் திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும்.

யாரும் யாரையும் அடிமைப்படுத்த வேண்டாம். கணவன் திறமையை, கம்பீரத்தை, அன்பை மனைவி மதிக்கட்டும். மனைவியின் அழகை, அறிவை, அதிக சம்பாத்தியத்தை பெருந்தன்மையோடு கணவன் ஏற்று மதித்து அவளைக் கொண்டாடட்டும்.

என்னதான் படித்து எவ்வளவு சம்பாதித்தாலும் கணவனோடு வாழ்ந்திட, தன் கடந்த கால உறவுகளை, சந்தோஷங்களை துறந்து வரும் பெண் உண்மையில் ஒரு தியாகி!

அவளை நெஞ்சில் வைத்துக் கொண்டாட வேண்டியது ஒரு யோக்கியமான ஆணின் கடமை.

Monday, February 28, 2011

‘குழந்தைகளை எப்படி வளர்ப்பது?’ என்பது பற்றி நடிகர் சிவகுமார்.


உயர்ந்த பண்புகளுடனும் நெறிசார்ந்த செயற்பாடுகளுடனும் தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகர் சிவகுமார். அவரது வாழ்வியல் முறைகளால் மட்டுமின்றி தமது பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் செயற்பாடுகளாலும் கவனிக்கத் தகுந்த மனிதராகவும், நல்லதொரு தந்தையாகவும் விளங்கிவருகிறார் அவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ; “கண்டித்தாலும் தவறு..கண்டுக்காமல் விட்டாலும் தவறு. எப்படி ஐயா குழந்தைகளை வளர்ப்பது?”

அவரது பதில் இங்கே;

“ இனவிருத்தி செய்வதோடு பூச்சிகள், பறவைகள், விலங்குகள் கடமை முடிந்துவிடுகிறது. ஆடு மாடு போன்றவை கொஞ்ச நாட்கள்தாம் குட்டிக்கு-கன்றுக்கு பால் கொடுக்கும். பறவைகள் இரை தேடி எடுத்துவந்து குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும்வரை ஊட்டிவிடும். அதன் பிறகு அதது தன் வாழ்வை வாழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

ஆறறிவு படைத்த மனிதன் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு ஓடிவிட முடியாது. உடல் இன்பத்தின் நீட்சியாக குழந்தைப் பிறந்தது என்ற மனோபாவத்திலிருந்து உயர்ந்து நம் வம்சத்தை விருத்தி செய்ய, தன் பாரம்பரியப் பெருமைகளைத் தூக்கி நிறுத்த, தான் பெறாத சுகத்தை, தான் கற்க முடியாத கல்வியை, தான் அடைய முடியாத புகழை-செல்வத்தைத் தன் வாரிசுகள் பெற்று, பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகளாக அவை வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் குழந்தைப் பெற்றுக்கொள்வது நல்லது.

நூற்றுக்குப் பத்துப்பேர்கூட அப்படிப்பட்ட சிந்தனையுடன் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பது சந்தேகமே!

கல்யாணம் நடந்தது, முதல் இரவு முடிந்தது, உடல் சேர்க்கை நிகழ்ந்தது-அதன் விளைவாக ஒரு ஜீவன் பிறந்துவிட்டது. என்ன செய்வது, பெற்றுத் தொலைத்துவிட்டோம். பிறகு வளர்த்துத்தானே ஆகவேண்டும் என்ற அலுப்பு, சலிப்பு பெற்றோர்களுக்கு-குறிப்பாகப் பெற்றவளுக்கு ஏற்பட்டுவிட்டால், அந்தப் பிள்ளை பிறவியிலேயே சபிக்கப்பட்ட பிள்ளைதான்.

ஆறு மாதம்கூட முழுசாகத் தாய்ப்பால் தராமல், தனக்குத் தூக்கம் கெடுகிறது; அழகு குலைகிறது; உடல் சோர்ந்து விடுகிறது; பிரமோஷன் தாமதப்படுகிறது என்பதற்காக அந்தப் பச்சைக்குழந்தையை அள்ளி எடுத்துப்போய் ‘க்ரீச்’ என்ற குழந்தைக் காப்பகத்தில் ஆயாக்களிடம் ஒப்படைத்து, ‘செரிலாக்’ என்கிற பால்பவுடர், அல்லது புட்டிப்பால் தந்துவிட்டு அலுவலகம் ஓடுகின்ற பெருமைக்குரிய தாய்மார்கள் நிறையப்பேரைப் பார்க்கிறோம்.

அடுத்த ஆறுமாதத்தில் ஆயாக்கள் புஷ்டியாக உடம்பு தேறி வர, குழந்தைகள் சோமாலியா நாட்டு ஊட்டச்சத்தற்ற, எலும்பின்மீது தோல் போர்த்தப்பட்ட குழந்தைகளாக இளைத்துப்போகும் கொடுமைகள் நடக்கின்றது.

ஓராண்டுகூட அந்தப் பச்சைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டுக் கொஞ்சி பாலூட்டி வளர்க்க முடியாதவர்கள் அந்தக் குழந்தையின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களாகிறார்கள்.

குழந்தை பசிக்கு அழுகிறதா, தொடையில் எறும்பு கடித்ததால் அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, காது வலி எடுத்து அழுகிறதா, மூக்கடைப்பால் அழுகிறதா, எதற்கு அழுகிறது என்பது பெற்ற தாய்க்கும்-அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்குத்தான் எளிதாகப் புரியுமே தவிர, நாற்பது குழந்தைகளுக்கு நடுவில் நாதியற்று, வெயிலில் காய்ந்து, வாய் வறண்டு ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ‘டயாஃபர்’ என்ற கோவணம் போன்ற உள்ளாடையில் போய், அது வறண்டு சீந்துவாரற்றுக் கிடக்கும் சூழலில் அக்குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களுக்குப் புரியாது.

தாயின் மடியில் படுத்துக்கொண்டு அவள் இடது கை முழங்கை மடிப்பில் தலை வைத்து இடது மார்பில் குழந்தைக்குப் பாலூட்டும்போது உச்சி முகர்ந்து முத்தமிட்டு தாய் கொஞ்சும்போது- உலகில் அதற்கிணையான பரவசத்தை, பாதுகாப்பு உணர்வை, குழந்தை எங்கும் எப்போதும் பெறமுடியாது.

தேவதை ஒருத்தி பூமிக்குவந்து குழந்தையைத் தூக்கி எடுத்துக் கொஞ்சினாலும், தாய் கைப்பட்ட அடுத்த விநாடிதான் குழந்தையின் அழுகை நிற்கும். ஒருமாத குழந்தைக்கூட தாயின் கரங்களில் உள்ள உஷ்ணத்தை இனம் கண்டு பாதுகாப்பை உணர்ந்துகொள்ளும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் குழந்தையின் உடம்பு மட்டுமல்ல மூளையும், அறிவும், அறிதலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தவறான நிகழ்வுகளோ கண்டிப்பான வார்த்தைகளோ எதுவாயினும் மனத்திரையில் எளிதாகப் பதிவாகிவிடும்.

கணவன் மனைவி தங்களின் குழந்தை முன்பு வாக்குவாதம் செய்வது, வேலைக்காரர்களை குழந்தை முன்பு கடுஞ்சொல்லால் திட்டுவது-எல்லாம் அழிக்கமுடியாத பதிவுகளாகிவிடும்.
குடும்பத்தலைவன் நான், நான் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் ஆனால் குழந்தைகள் அதைக் கண்டுகொள்ளக்கூடாது என்று வறட்டுவாதம் பிடிக்கக் கூடாது. திருமணத்திற்கு முன்பு எல்லைதாண்டி பல தவறுகள் செய்திருந்தாலும் குழந்தைகள் வளரும்போது பெற்றோர் அவர்களுக்கு ‘ரோல்மாடல்களாக’ இருக்கவேண்டும்.
அப்பாவுடைய குணமும் ஆற்றலும், அம்மாவுடைய பொறுமையும் கனிவும், குழந்தைகளை ரொம்பவே கவரும்.

அப்பா தவறு செய்திருந்தாலும், அம்மா தவறுசெய்திருந்தாலும் குழந்தைகளிடம் ‘சாரி’ சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதைப்பார்க்கும் குழந்தைகள், தவறு செய்தால் மறைக்கவேண்டிய அவசியமில்லை-அதை உணர்ந்து மன்னிப்புக்கேட்பது நல்லது என்று புரிந்துகொள்ளும்.

குழந்தகள் ரொம்பவும் ‘பொஸஸிவ்’ ஆக, அனைத்தும் தனக்கே சொந்தமானதாக இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள்.

‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற படத்தில் என் மகளாக மீனா நடிப்பார். உடல்நலமின்றி தாய் மருத்துவமனையில் இருக்க அந்தக் குழந்தைக்கு டைனிங்டேபிளின் அடியில் அமர்ந்து நான் சோறு ஊட்டிவிடுவேன். முதுகில் சுமந்தவாறு மாடிக்குத் தூக்கிச் செல்வேன். மார்புமேல் படுக்கவைத்து தட்டிக்கொடுத்து தூங்கவைப்பேன்.

என் மகள் பிருந்தாவுக்கு அப்போது மூன்றுவயது. படத்தைப் பார்த்த குழந்தை வீட்டுக்குவந்ததும் ஒரு கேள்வி கேட்டாள். “அப்பா, நீங்க என்அப்பாவா? மீனாவோட அப்பாவா? அவளுக்கு மட்டும் சோறு ஊட்டிவிட்டீங்க. உப்புமூட்டைச் சுமந்தீங்க, நெஞ்சுமேலே படுக்கவச்சு தூங்கவச்சீங்க, நான்தானே உங்கபொண்ணு..அதெல்லாம் இப்ப எனக்கும் பண்ணுங்க” என்றாள்.

வாயே திறக்காமல் டைனிங்டேபிள் அடியில் நுழைந்து அவளுக்கு சாதம் ஊட்டிவிட்டேன். மாடியிலுள்ள படுக்கை அறைக்கு முதுகில் தூக்கிப்போனேன். படுக்கையில் மல்லாந்து படுத்து மார்மீது அவளைப் படுக்கவைத்துக்கொண்டேன். போதாததற்கு, ஜெயச்சந்திரன் அப்படத்தில் எனக்காகப் பாடிய பாடலை என் கட்டைக்குரலில் பாடி தூங்கவைத்தேன்.

ஆங்கிலேயர் கலாச்சாரம் வேறு; தமிழ் மக்களின் கலாச்சாரம் வேறு. அவர்கள் குழந்தைப்பெற்றவுடனேயே ஆயாக்களிடம் கொடுத்து பக்கத்து அறையில் பச்சைக்குழந்தையைத் தூங்கப் பழக்கிவிடுவார்கள். பசியில், நடுநிசியில் குழந்தை அழுதாலும் பால்தர தாய் போகமாட்டாள்.

மருத்துவரிடம் கேட்டால் அந்த மேதை, “அதை அப்படியே விட்டுவிடுங்கள். பசியில் அழுது ஓய்ந்து பழகிக்கொள்ளும். நீங்கள் போய்ப் பால்கொடுத்தால் இரண்டு மணிக்கு ஒருதரம் அது எழுந்து அழும். இரவில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு மூன்றுமுறை போய் பால்தர வேண்டும். வேண்டாம். விட்டுவிடுங்கள். பசியில் அழுது சோர்ந்து தூங்கிவிடும். ஒன்றும் ஆகாது” என்று கூறுவார்.

இங்கு நம் மண்ணில் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரையிலாவது குழந்தை இரவில் பசியால் அழும்போது தாய் எழுந்து பால்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. ஆரோக்கியமான பழக்கம்.

தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் குழந்தை ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போர்டிங் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள்.

குழந்தைகளுக்குத் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளவும், சுயமாக முடிவெடுக்கவும் ஹாஸ்டல் வாழ்க்கை-அந்தக் கான்வெண்ட் பள்ளிவாழ்க்கை கற்றுத்தருகிறது என்பது உண்மைதான். அதற்கு நீங்கள் குறைந்தது குழந்தைக்கு பத்துவயது தாண்டியதும்தான் அனுப்பவேண்டும்.

மூன்றுவயது, நான்குவயது சிறுவர்களை-சிறுமிகளை, பிளேட்டில் போட்ட சாதத்தைக் கையால் எடுத்துச் சாப்பிடத் தெரியாத வயதில், ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போய்விட்டுக் கழுவத்தெரியாத வயதில், தன் டிராயர் பட்டனைத் தானே போடத்தெரியாத- கழுத்துவழி சட்டை மாட்டிக்கொள்ளத் தெரியாத வயதில், போர்டிங் ஸ்கூலில் போடும் கொடுமையைச் செய்யாதீர்கள்.

நடுங்கி உடல் விறைக்கும் 5 டிகிரி குளிரில் ரத்த ஓட்டமே குறைந்துவிடும். மட்டன் சிக்கன் 2 மணிநேரம் அடுப்பில் வைத்தாலும் வேகாது. அடிப்பக்கம் உஷ்ணம், மேல்பகுதியில் கடும்குளிர் படுவதால் குழம்பு சீக்கிரம் கொதிக்காது.

மாலை 6 மணிக்கெல்லாம் இரவு சப்பாத்தி-குருமா குழந்தைகளுக்கு பரிமாறப்படும். ஆயிரம் குழந்தைகளுக்கு சப்பாத்தி தயாரிக்க பிற்பகல் 2 மணிக்கே சமையல் அறை பரபரப்பாகிவிடும். 4000 சப்பாத்திகள் சுட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பிளேட்டிலே அவை விழும்போது விறைத்து குளிர்ந்து நாய்த்தோலைவிட கெட்டியாக இருக்கும். விவரம் தெரிந்த குழந்தைகள் குருமாவில் சப்பாத்தியை ஊறப்போட்டு பிய்த்துச் சாப்பிடும். அப்பாவிக் குழந்தைகள் அந்தச் சப்பாத்தியைப் பிய்க்க நாய் படாத பாடுபடும்.

ஒருவழியாக சாப்பிட்டு பிளேட் அலம்பிவைத்து 50, 100 பேர் படுக்கும் நீண்ட ஹாலில் கருங்கம்பளிக்குள் நுழைந்து சுருண்டு படுத்துக்கொள்ளும்.
இரவு 9.30மணிக்கு குழந்தைக்குப் பசி எடுக்கும். யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. பொதுவாக ஒரு வகுப்பில் 25, 30 குழந்தைகள் படிக்கும்போது பாடங்களில் ஏற்படும் சந்தேகத்தைத் தீர்க்கவே ஆசிரியருக்கு நேரம் போதாது. இந்த அழகில் இரவு பசி எடுத்ததையோ, வயிற்றுவலி வந்ததையோ, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையோ ஆசிரியரிடம் சொல்ல குழந்தை அஞ்சும், அவமானப்படும். இரவும் பகலும் ஊமை அழுகையாக அழுது ஆறுமாதப் படிப்பு முடியும்.

அம்மா வந்து ஆறுவயது மகனை அள்ளி எடுத்து வீட்டுக்கு அழைத்துப்போவாள். அந்த ஒரு மாத விடுமுறையில் அக்குழந்தைக்கு ராஜ உபசாரம். வடை பாயாசமென்ன, புத்தாடைகள் என்ன, கார் ரெயில் பொம்மைகள் என்ன, பிளாக் தண்டர் ரிசார்ட்டில் ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் ரயில் சவாரி, துப்பாக்கிச் சுடுதல், குதிரை சவாரி- என்று பூலோக சொர்க்கத்தைக் காட்டுவாள் அம்மா.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிசென்று அந்த சிறைக்கம்பிகளுக்கு ஒப்பான இரும்புக்கதவைத் திறந்து உள்ளே மகனை அல்லது மகளை அனுப்பி அம்மா ‘டாட்டா’ சொல்லும்போது நெஞ்சமெல்லாம் குமுறி கோபத்தின் உச்சத்தில் ‘உன்னைக் கொலை செய்யப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அந்த ஆறு வயதுச் சிறுவன்/சிறுமி செல்வான்.....என்ன வலி இருக்கவேண்டும்-எப்படிப்பட்ட வேதனை அக்குழந்தைக்கு இருந்தால் அந்த வார்த்தையை அம்மாவைப் பார்த்துச் சொல்வான்..........! இந்தப் பாவத்தை 10 வயதாகும்வரை குழந்தைகளுக்குச் செய்யாதீர்கள்.

எங்கள் வீட்டில் உறவுக்காரக்குழந்தைகள், வீட்டுக்குழந்தைகள் என்று விடுமுறை நாட்களில் வீடே அல்லோலகல்லோலப்படும். ஒரு நாள் பிள்ளைகளின் அறையில் ஒரு பீரோ டிராயரை துணைவி திறந்து பார்த்தபோது பிளேபாய் பத்திரிகையில் வெளியாகும் அழகிய பெண்களின் நிர்வாணப்படங்கள் சில கிடந்தன. பதறிப்போனவர் என்னிடம் வந்து ‘இது யார் வேலை தெரியவில்லை’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். “அவர்கள் ஒன்றிரண்டுதான் வைத்திருக்கிறார்கள். நான் பதினாறு வயதிலேயே வாத்சாயனம் கொக்கோக சாஸ்திரம் எல்லாம் படித்திருக்கிறேன். இதை நான் பார்த்துக்கொள்கிறேன் போ” என்றேன்.

ஐந்தாறு பிள்ளைகள். எல்லோருக்கும் 14 வயது முதல் 18-க்குள் இருக்கும். என் மகனிடம் “ஓவிய அலமாரிக்குச் சென்று இரண்டு ஸ்கெட்ச் நோட்டுக்கள் எடுத்து வா” என்றேன். குறிப்பிட்ட அந்த நோட்டில் ஓவியக் கல்லூரியில் பெண்களை- பெண்களின் உடலமைப்புகளை- பல கோணங்களில் நிர்வாணமாக வரைந்த ஸ்கெட்ச்கள் தீட்டப்பட்டு இருந்தன.
பிள்ளைகளை அழைத்து ஒவ்வொரு உறுப்பாகக் குறிப்பிட்டுக்காட்டி “இது மார்பகம் குழந்தைகள் பிறந்ததும் பால்சுரக்கும் பகுதி. இதில்தான் நீங்கள் பால் ஊட்டப்பட்டீர்கள். வயிற்றின் கீழ்ப்பகுதியில் தொப்புளுக்குக் கீழே சுருக்கங்கள் தெரிகிறதா? இது குழந்தைகள் அம்மா வயிற்றுக்குள் வளரும்போது வயிறு பெரிதாவதால் ஏற்படுபவை.

குழந்தை பிறந்துவிட்டபின் ஊதிய வயிறு சுருங்கும்போது- காற்றடைத்த பலூனிலிருந்து காற்று வெளியேறிவிட்டால் பலூன் எப்படிச் சுருங்கிவிடுகிறதோ அப்படி வயிறு சுருங்கியுள்ளது.

அதற்குக் கீழே உள்ளது பிறப்புறுப்பு. இதன் வழியாகத்தான் நீங்கள் பிறந்தீர்கள். காக்கா கொண்டாந்து போட்டுட்டுப்போச்சு, தவிட்டுக்கு உன்னை வாங்கிட்டு வந்தேன்-என்று அம்மாக்கள் சிறுவயதில் சொல்வதெல்லாம் உண்மையில்லை” என்று தெளிவுபடுத்தினேன்.
மறுநாள் அந்த டிராயருக்குள் இருந்த பிளேபாய் படங்கள் காணாமல் போய்விட்டன.
பிள்ளைகளுக்கு சிலிர்ப்பூட்டுகிற, கிரக்கத்தை ஏற்படுத்துகிற, மர்மமாகத்தோன்றுகிற, விடைகாண முடியாமல் தவிக்கிற டீன்ஏஜ் பிரச்சினைகளை வெளிப்படையாக நீங்கள் பேசி சந்தேகத்தைத் தீர்த்துவிட வேண்டும்.

தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை உன் தோழன்தான். எதையும் மறைக்காமல், மறுக்காமல் பிள்ளைகளோடு விவாதியுங்கள்.

தனித்தனியே என் பிள்ளைகளுக்கு அறைகள் இருந்தபோதிலும் கல்லூரி செல்லும் வரையில்கூட ஒரே படுக்கை அறையில்தான் குழந்தைகள் எங்களோடு தூங்கினார்கள்.
கணவன் மனைவிக்கு ‘பிரைவஸி’ வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் பெரிதாகக் கருதாமல் குழந்தைகளின் விருப்பப்படியே உடன் தூங்கினோம்.
குறிப்பாகப் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபின் தனி அறையில் தூங்கவிடாதீர்கள். பாட்டியுடனோ ஆயாவுடனோ அம்மாவுடனோ குழந்தை தூங்குவது வேண்டாத சிந்தனைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

பள்ளிக்கூடத்தில் பல் இளித்தவன், பஸ் ஸ்டேண்டில் டாட்டா சொன்னவன், ஆண்டு விழா மேடைகளில் ஆடிப்பாடியவன் இப்படி எவனாவது ஒருவன் பட்டாம்பூச்சியாய் அந்தப் பெண் மனதில் சிறகடித்து தூக்கத்தைக் கெடுப்பான். இப்போது எஸ்எம்எஸ் என்று ஒரு எமன். இப்படி ரகசியமாக அந்தரங்கமாக பட்டாம்பூச்சி பையனை நினைத்து கனவு காண்பதைத் தடுக்க ஒரே வழி அம்மாவுடனோ பாட்டியுடனோ குழந்தை தூங்குவதுதான்.
திருமணத்துக்கு ஆறுமாதம்வரை எங்கள் மகள் எங்களோடுதான் தூங்கினாள்.
இணைய தளம் என்கிற இன்டர்நெட் வலைத்தளம் இன்னொரு போதையான சமாச்சாரம். நல்லது கெட்டது எல்லாம் வெட்டவெளிச்சமாக, மூஞ்சியில் அடித்தாற்போல மனதைப் பாதிக்கின்றன.

கம்ப்யூட்டரை வீட்டு நடு ஹாலில் வைத்துவிடுவது ஒன்றுதான் சிறந்த வழி. தவறான எண்ணத்துடன் தப்பான காட்சிகளை ஹாலில் உட்கார்ந்து எந்தப் பிள்ளையும் பார்க்கமுடியாது.
‘நான்தான் டாக்டருக்குப் படிக்கலே. நீயாவது படி. நம்ம வீட்ல எஞ்சினியர் இருக்கார்,வக்கீல் இருக்கார். எப்படியும் நீ டாக்டராக வேண்டும்’ என்று உங்கள் விருப்பங்களை- அபிலாஷைகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ அந்தத் துறையில் படிக்க அனுமதியுங்கள்.

சூலூர் பள்ளியில் ஐந்தாவது ஆறாவது ரேங்க் படிப்பில் வாங்கிய நான் சென்னைக்கு ஓவியக்கலை படிக்க புறப்பட்டபோது படிப்பறிவில்லாத என் தாய் ‘உன் விருப்பம் எதுவோ அதைச் செய். என்னால் முடிஞ்சவரைக்கும் பாடுபட்டு பணம் அனுப்புகிறேன்’ என்று தைரியமூட்டி அனுப்பினார்
இன்று நான் வரைந்த காந்திஜி, நேரில் சென்று எட்டுமணி நேரம் வரைந்த தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை கோபுரங்கள், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற எண்ணற்ற ஓவியங்களை ‘அந்தளவுக்கு உயர்தரத்தில் இருபத்து நான்கு வயதில் வரைந்தவர்கள் இந்திய அளவில் இருபது பேர் கூட இருக்கமாட்டார்கள்’ என்றார் என் ஓவிய ஆசிரியர்.

லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கும்போது மூன்று பாடங்களில் அரியர்ஸ் வைத்து தடுமாறி பின்னர் தேர்ச்சி பெற்ற சூர்யா, திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக முத்திரை பதிக்க முடிந்திருக்கிறது.

பிள்ளைகளின் தனித்திறமை பார்த்து அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவியுங்கள்.
பணம் சம்பாதிக்கும் மெஷினாக உங்கள் பிள்ளையை உருவாக்கி பெருமைப் படாதீர்கள். அதிகாலைச் சூரியன், தேன் உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சிகள், குழந்தைகளின் மழலைகள், கோபுரங்களின் அழகு, நதியின் பிரவாகம், நண்பர்களின் அரட்டை, பெற்றோரின் பாசம், இசையின் அருமை, ஏழைக்கு உதவுதல், உள்ளிட்ட வாழ்க்கையின் உன்னதங்களை உங்கள் பிள்ளைகள் அனுபவிக்க கற்றுக்கொடுங்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் நல்வாழ்வு, அவர்கள் பெறும் வெற்றி- இவைதாம் பெற்றோரை கடைசி மூச்சுவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கும்.

Thursday, February 17, 2011

கலைஞரும் ஜெயகாந்தனும்



எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கிப் பேசிய விழாவில் நன்றி தெரிவித்துப்பேசிய ஜெயகாந்தன் கலைஞரின் ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று புகழப்போக, இந்தப் பேச்சு நிறைய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஜெயகாந்தன் எப்படி இம்மாதிரிப் பேசலாம். அதே நிகழ்ச்சியில் வைரமுத்து என்னென்னவோ பேசினார். அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் ஜெயகாந்தன் இப்படிப்பேசலாமா? என்கிற ரீதியில் நிறைய கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

ஜெயகாந்தன் பேசியது சரியா தவறா என்கிற வாதத்திற்குள் இங்கே நுழைய விரும்பவில்லை. ஆனால் ஜெயகாந்தன் பேசிய பேச்சிற்கு பதிலளித்து கலைஞர் பேசியிருக்கிறாரே அதுதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தனை வருட காலத்தில் கலைஞருக்கு வராத சிந்தனை இது. இதோ கலைஞரின் பேச்சைப் பார்ப்போம்.

“பாரதி விருதைப் பெற்ற அன்புக்குரிய நண்பரும் புரட்சி எழுத்தாளருமான அன்புக்குரிய ஜெயகாந்தன் பேசும்போது, ‘இது ஒரு பொற்காலம்’ என்று குறிப்பிட்டார். பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ-என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ அதுதான் பொற்காலம்.

இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் ‘நீ அப்படித்தான் சொல்லிக்கொள்வாய். ஏனென்றால் ஆட்சிப்பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை’ என்று நீங்கள் எண்ணக்கூடும். அல்லது சொல்லக்கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன், எதையும் விமர்சிக்கக் கூடியவர்-நாணயமாக விமர்சிக்கக் கூடியவர். நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர். அச்சத்திற்கு ஆட்படாமல் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

அப்படிப்பட்டவர் இந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று சொன்னதை, தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னாலான பதக்கத்தைவிட, அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களைவிட, சிறந்த பரிசாக எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக்கொள்கிறேன். நல்லவர்களுடைய வாழ்த்து, ஜெயகாந்தனைப் போன்ற வல்லுநர்களுடைய வாழ்த்து, இந்த ஆட்சிக்கு, எங்களுக்கு என்றென்றும் தேவை.ஒரு காலத்தில் எங்களைப்போன்றவர்கள் எழுதத் தொடங்கி, அவை எல்லாம் எங்கள் இயக்கத்தோழர்களால் படிக்கப்பெற்றபோது ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல; எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்.

எங்களுடைய எழுத்தை அன்றைய தினம் பாராட்டாதவர், இன்றைக்குப் பாராட்டுகிறார் என்றால் நாங்கள் அப்படிப்பட்ட பாராட்டைப் பெறுவதற்கு குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்கின்ற அளவிற்கு, அவர் எங்களைத் தாக்கி மறுத்து எழுதிய போதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.

ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது. உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால் நான் கொடுத்து வைத்தவன். நான் என்னையே பாராட்டிக்கொள்ளக்கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்கவேண்டுமென்று கருதுகின்ற சிலபேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்துப் பயன்படுமேயானால் இது பொற்காலமாகவும் இருக்கவேண்டாம்; கற்காலமாகவும் இருக்கவேண்டாம். தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்தனுடைய தமிழ்ப்பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பேசியிருக்கிறார் கலைஞர்.

ஜெயகாந்தனுக்குக் கொடுக்கப்பட்ட விருதைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதல்வரின் இந்தப்பேச்சு இருக்கிறது. ஏனெனில் தமிழில் படைப்பிலக்கியவாதிகளை அரசு மதிக்கும் வழக்கம் பல வருடங்களாகவே தமிழகத்தில் இல்லை. நான் பல இடங்களிலும், இந்த வலைப்பூவில் பல பதிவுகளிலும் குறிப்பிட்டுவருவதைப்போல், தற்கால இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அரசு கண்டுகொள்வதே இல்லை. தமிழ் மொழி என்றாலேயே இவர்களுக்கு சங்க இலக்கியம் மட்டும்தான்.

இலக்கியவாதிகள் என்றால் திருக்குறளில் ஆரம்பித்து சங்க இலக்கியம் வந்து பாரதிதாசனோடு நின்றுவிடுபவர்கள் மட்டும்தாம். இலக்கியக்கூட்டங்களில்கூட இவ்வளவு மட்டும்தாம் பேசுவார்கள். இதுவே போதும் என்கிற ஒரு மனோபாவம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த எல்லா உலகத்தமிழ் மாநாட்டிலும் இதுதான் நடந்தது. செம்மொழி மாநாட்டிலும் இதே கதைதான். இருபதாம் நூற்றாண்டு படைப்பிலக்கியவாதிகளுக்கு ஒதுக்கப்பட்டது மிகச்சிறிய மூலை. பொருட்காட்சிகளில் ஒரேயொரு அப்பளக்கடை போட்டுக்கொடுத்த மாதிரி!

தமிழில் படைப்பிலக்கியம் என்றால் திருக்குறளில் இல்லாததா? சிலப்பதிகாரத்தில் இல்லாததா? அகநானூறு சொல்லாத காதலா? புறநானூற்றில் இல்லாத வீரமா? நற்றிணையில் இல்லையா, குறுந்தொகையில் இல்லையா என்று கேட்டு பாரதிதாசன் பாடிய இரண்டு பாடல்களைச் சொல்லி முடித்துவிடுவார்கள்.

தமிழைத் தாண்டிய இலக்கிய உலகின் அங்கீகாரங்களுக்கு இது போதுமானதல்ல என்பது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்றே தெரியவில்லை.

ஞானபீடம் முதலான இலக்கிய அங்கீகாரங்கள் தற்கால படைப்புக்களுக்குத்தான் கொடுக்கப்படுமேயல்லாமல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் இலக்கியம் இருந்தது என்று சொல்லி அங்கேயே தீபாராதனைக் காட்டிக்கொண்டு இருந்தால் அந்த மொழிக்குக் கிடைக்காது. பழமையைப் போற்றவேண்டும், பாதுகாக்க வேண்டும், பெருமை கொள்ளவேண்டும். அதே நேரத்தில் புதுமையை உயர்த்திப் பிடிக்கவும் செய்ய வேண்டும். தமிழக அரசும், அரசு நிறுவனங்களும் இதனைச் செய்யவே இல்லை.

ஒரு மொழி என்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கியம் படைத்ததோடு நின்றுவிடக்கூடாது. காலந்தோறும் அந்த மொழியில் படைப்பிலக்கியம் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். நாள்தோறும் அந்த மொழி தனக்கான பதிவுகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அப்படித்தான் தமிழும் நாள்தோறும் தனது இலக்கியங்களைத் தனது படைப்பிலக்கியக் குழந்தைகள் மூலம் அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த படைப்பிலக்கியவாதிகளை உலகிற்கு அடையாளம் காட்டுவதுதான் ஒரு அரசின் கடமை. அந்தக் கடமையைத் தமிழர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதற்கு பதில்கூற கடமைப்பட்டவர்கள் நாம்.

மலையாளத்திலும் வங்கத்திலும் கன்னடத்திலும் படைப்பிலக்கியவாதிகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் மரியாதைகளும் என்ன? அவர்களை ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் முன்னிலைப் படுத்துவதும் சிறப்பிப்பதும், அவர்கள் பெயர்களை நகரங்களுக்கும் கட்டடங்களுக்கும் சாலைகளுக்கும் சூட்டுவதும் எத்தனை?
எத்தனை எழுத்தாளர்களின், கவிஞர்களின் பெயர்களில் நகர்களும் சாலைகளும் இருக்கின்றன தெரியுமா கர்நாடகத்தில்?

ஒருமுறை தகழியுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “நான் பலமுறை சென்னை வரும்போது அகிலன் வீட்டில் தங்குவேன். அப்போதெல்லாம் அவரும் நானும் கடற்கரையில் வாக்கிங் போவோம். வீட்டிலிருந்து கிளம்பி திரும்ப வருகிறவரைக்கும் ஒரு இரண்டுபேர் அல்லது மூன்று பேர் மட்டும்தான் அகிலனைப் பார்த்து விஷ் பண்ணுவாங்க. கேரளத்துல எல்லாம் இம்மாதிரி நாங்கள் ஃப்ரீயா போய்வர முடியாது. அகிலனுக்கே இந்தக் கதி என்றால் மற்ற எழுத்தாளர்களுக்கு எப்படி? இங்கேயெல்லாம் வெறும் சினிமாக்காரனுக்கும் அரசியல்காரனுக்கும் மட்டும்தான் மதிப்பு. இதுக்கு உங்க அரசியலும் பெருமளவு காரணம்”
உண்மைதான். கர்நாடகத்தில் சிதானந்த மூர்த்திக்கு டாக்டர் பட்டம் வழங்கி அரசு சார்பிலே கொண்டாடுகிறார்கள். யு.ஆர்.அனந்தமூர்த்தியைத் தேடி மாநில முதல்வர் வீட்டிற்கே ஓடுகிறார். பல முக்கிய அரசு விழாக்களைக்கூட எழுத்தாளர்கள்தாம் தலைமைத் தாங்கி நடத்துகிறார்கள். எப்படியெல்லாம் சிறப்பிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடி சிறப்பிக்கிறது அரசு.

யோசித்துப் பாருங்கள் புதுமைப் பித்தனுக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் என்ன? பி.எஸ்.ராமையா எப்படியெல்லாம் போற்றப்பட்டிருக்கிறார்? கு.ப.ராவையும், கு.அழகிரிசாமியையும் இந்த அரசு எப்படி நினைவுகூர்கிறது?கல்கியையும் தி.ஜானகிராமனையும் சாண்டில்யனையும் எப்படிச் சிறப்பித்திருக்கிறார்கள்? அகிலனுடைய பெயரை எதற்குச் சூட்டியிருக்கிறார்கள்?நா.பாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?....அதிகம் போனால் இவர்களின் நூற்றாண்டு விழாக்கள் வந்தால் அவர்கள் குடும்பத்திற்கு சில லட்சங்கள் வழங்கி இவர்களின் நூல்கள் தேசியமயமாக்கிவிட்டதாக அறிவிப்பார்கள். அத்தோடு முடிந்தது இவர்களின் கதை.

இந்த நிலைமை தொடர்வதால்தான் இத்தனை ஆண்டுகளில் தமிழுக்கு இரண்டே இரண்டு ஞானபீடம்.

இத்தனூண்டு மொழிகளெல்லாம்கூட நோபல் பரிசு பெற்றுவருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான தமிழ்மொழி குறிப்பிட்ட எல்லையைக்கூட தாண்டமாட்டேனென்கிறது. காரணம்- தூக்கிப்பிடித்து உயர்த்த வேண்டியவர்கள் கண்டுகொள்வதேயில்லை. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதற்கு இங்கே திராவிடச் சிந்தனைகளும் திராவிட எழுத்துக்களின் தாக்கங்களும் ஏற்பட்டதே காரணம்.

இந்தத் திராவிடச் சிந்தனை நிரம்பியவர்கள் எல்லாம் மற்ற எழுத்துக்களை எழுத்துக்களாகவோ அதை எழுதும் எழுத்தாளர்களை படைப்பிலக்கியவாதிகளாகவோ ஏற்றுக்கொள்ளவே இல்லை. திராவிடச் சிந்தனையைப் பரப்பிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் எழுத்தின் வீர்யத்தை எல்லாம் கட்சியின் கொள்கையை ஒட்டியே பரப்பிக்கொண்டிருந்தார்களே தவிர, வாழ்க்கைக்கும் அதற்குமான தொலைவு மிக அதிகமாகவே இருந்தது. அதனால்தான் உலக இலக்கியங்களை ஒட்டி சமூகத்தையும் நிதர்சன வாழ்க்கையையும் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் திராவிட எழுத்தாளர்களை ஒப்புக்கொள்ளாமலும் அங்கீகரிக்காமலும் இருந்தார்கள். திராவிட எழுத்தாளர்கள், மற்ற எழுத்தாளர்களை ஒப்புக்கொண்டால் தங்களின் இருப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்பதற்காக இவர்களைத் திட்டமிட்டு அங்கீகரிக்காமலேயே இருந்தார்கள்.
அறுபத்தேழில் ஆரம்பித்த திராவிடக் கழகங்களின் ஆட்சி தமிழை இல்லந்தோறும் கொண்டுசென்று வளர்த்துக்கொண்டிருந்த எந்தவொரு தமிழ்ப் படைப்பாளியையும் அங்கீகரிக்கவே இல்லை. இவர்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்ததெல்லாம் வார, மாத, இதழ்கள்தானே தவிர, அரசோ அரசின் நிறுவனங்களோ அல்ல.

அதனால்தான் மற்ற மொழிகளிலெல்லாம் ஓரிரு நூல்கள் எழுதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் கூட பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையெல்லாம் மாநில அரசுகள் மத்திய அரசிடம் சிபாரிசு செய்து வாங்கித்தந்து அழகு பார்த்திருக்கும்போது இதுவரைக்கும் ஒரு தமிழ் எழுத்தாளருக்குக்கூட இப்படிப்பட்ட விருதுகளையெல்லாம் வாங்கித்தரும் முயற்சிகளை இந்தத் திராவிட அரசுகள் செய்யவே இல்லை என்பது எத்தனைக் கொடுமை என்பதை எண்ணப்பார்க்க வேண்டியுள்ளது. இதுபற்றிய குறைந்த பட்ச சிந்தனைக்கூட சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கும் சரி, அவர்களை மதிக்கும் வாசகவட்டத்திற்கும் சரி, வரவே இல்லை என்பது இன்னொரு வியப்பான விஷயம்.

கல்கி, அகிலன், ஜெயகாந்தன் போன்ற வெகுஜன எழுத்தாளர்களை மட்டுமல்லாது இவர்களை விடவும் பல மடங்கு பிரபலமான கவிஞர் கண்ணதாசனைக்கூட இவர்கள் இதே பட்டியலில் அடைத்து புறக்கணித்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களுக்குக்கூட இந்த விருதுகள் இல்லையென்றால் வேறு யாருக்காக? என்ற கேள்வி இத்தனை நாட்களும் ஊடகங்களால்கூட எழுப்பப்படவில்லை என்பது எத்தனை சோகமான விஷயம்?
எழுத்தாளர்கள் மட்டுமல்ல கௌரவிக்கப்பட வேண்டிய எந்தவொரு கலைஞரும் இந்த திராவிட அரசுகளால் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பதற்கு மிக எளிய உதாரணம் மகாகலைஞன் சிவாஜி கணேசன். உலகின் மிகச்சிறந்த கலைஞனாகக் கொண்டாடப்படவேண்டிய சிவாஜி கணேசனுக்குக் கடற்கரையில் ஒரேயொரு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது.

கர்நாடகத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ராஜ்குமாரை இந்த மாநிலம் எப்படிக் கொண்டாடுகின்றது என்பதை யார் வேண்டுமானாலும் கர்நாடகம் வந்து பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பெங்களூரில் மட்டுமல்ல கர்நாடகம் பூராவிலுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் பெயரில் நகர்கள்; சாலைகள், பல்வேறு இடங்களில் நினைவுச்சின்னங்கள், விருதுகள்...அவர் படங்கள் இல்லாத தெருக்கள்கூட கிடையாது என்கிற அளவுக்கு அவரைக் கொண்டாடுகிறது கர்நாடகம்.

ஆனால் திட்டம் போட்டே இங்கே சிவாஜி புறக்கணிக்கப்பட்டார். ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் தமது திறமையால் மட்டும்தான் நின்றாரே தவிர அவரை உயர்த்திப்பிடிக்க அரசு எதையுமே செய்யவில்லை. அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு போட்டி ஏற்படுத்தப்பட்டு அந்தப் போட்டியில் சிவாஜி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு எம்ஜிஆர் முன்னிலைப் படுத்தப்பட்டார். இது வெறும் வணிகப்போட்டி மட்டுமல்ல.இதையும் தாண்டிய அரசியல் வன்மம் அதில் இருந்தது. அரசியலைப் புறந்தள்ளி ஒரு கலைஞனாக சிவாஜி கொண்டாடப்பட்டிருந்தால் இன்றைய அரசியல் சீர்கேடே தமிழகத்திற்கு வந்திருக்காது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டார்.

சிவாஜி எந்தளவு எம்ஜிஆரை வைத்துப் புறக்கணிக்கப்பட்டார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஒரு படத்திற்காக அந்த வருடத்தின் சிறந்த நடிகராக மத்திய அரசினால் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும் அப்போது அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் உடனடியாக டெல்லி அனுப்பப்பட்டு சிவாஜி பெயர் நீக்கப்பட்டு அந்த இடத்தில் ரிக்ஷாக்காரன் என்ற படத்தில் நடித்த எம்ஜிஆர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி. இதனை நெடுஞ்செழியனே சொல்லப்போக “அப்படியானால் அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம்” என்று ‘ஒன்றும் தெரியாத’ எம்ஜிஆர் அந்தப் பட்டத்தைத் துறந்த கூத்தெல்லாம் நடந்தது.
சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் அரசு என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெரியாதவரா கலைஞர்? ஆனாலும் அவர்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களை அவர் இன்னமும் மறக்கவில்லை என்பதைத்தான் அவரது மவுனம் காட்டுகிறது. இந்த இரண்டு பேரைப்பற்றிப் பேச வரும்போதெல்லாம் “என் ஆருயிர் நண்பர் சிவாஜி” என்றும் “என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன்” என்றும் சொல்லி அவர்களைப்பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு தமது கடமை முடிந்தது என்று கலைஞர் கடந்து செல்லக்கூடாது.
தம்மைப் பற்றி மிக மோசமாக, மிகக் கேவலமாகப் பேசிய எத்தனையோ பேரை மன்னித்து மீண்டும் தமது பக்கத்தில் சேர்த்துக்கொண்டு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று எத்தனையோ பேரை உதாரணங்களாகச் சொல்லலாம். சிவாஜி விஷயத்திலும் கண்ணதாசன் விஷயத்திலும் கலைஞர் தமது கோபத்தை உதறித்தள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் பின்னர் வரும் அரசுகள் நிச்சயம் காலத்தால் அழியாத இந்த மகா கலைஞர்களைக் கொண்டாடும்பொழுது எத்தனையோ செய்த கலைஞர் ஏன் இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி நிச்சயம் எழுப்பப்படும்.

கலைஞரால் ‘என் ஆருயிர் நண்பர்’ என்று புகழப்பட்ட கவியரசருக்கு கலைஞர் ஆட்சியிலிருந்தபோது ஒன்றும் செய்யவில்லை.எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரைத் தேடிச்சென்று அரசவைக்கவிஞராக நியமித்தார். இத்தனைக்கும் அன்றைக்கு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் நல்ல நட்பு இல்லை. நீண்ட காலமாக திரைப்படங்களில் கூட கண்ணதாசனைத் தவிர்த்து வாலியையும் புலமைப்பித்தனையும்தாம் பாடல்கள் எழுதவைத்திருந்தார். ஆனாலும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் சந்தர்ப்பங்களை எம்ஜிஆர் என்றைக்கும் எந்த விஷயத்திலும் கோட்டை விடுவதில்லை. கண்ணதாசனை அரசவைக்கவிஞராக ஆக்கியதில் மட்டுமல்ல, ஈழ விவகாரத்தில் எத்தனையோ குழுக்கள் இருக்க பிரபாகரனைத் தேர்ந்தெடுத்து ஆதரித்ததிலும் எம்ஜிஆர் பாராட்டப்படவேண்டிய முடிவுகளையே மேற்கொண்டார். இதற்குக் காரணம் மக்களின் மதிப்பீடு என்னவோ அதனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு அவர் செயல்பட்டார் என்பதுதான்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜெயகாந்தனைப்பற்றிய கலைஞரின் பேச்சு அவர் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகிறேன். படைப்பிலக்கியவாதிகளையும் மாபெரும் கலைஞர்களையும் மற்ற மாநில அரசுகள் போல் உயர்த்திப்பிடியுங்கள். அவர்களுக்கு வேண்டிய அங்கீகாரங்களை மாநில அரசு வழங்குவதோடு மத்திய அரசிலிருந்து வரவேண்டிய சிறப்புக்களையும் வாங்கித்தருபவர்களாக இருங்கள். இலக்கியத்திலும் கலைத்துறையிலும் கட்சி அரசியல் வேண்டாம்.

இனிமேல் படிப்பகங்களுக்கும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களுக்கும் தற்காலப்படைப்பாளர்களின் பெயர்களைச் சூட்டுங்கள். கல்கி,அகிலன், ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,கண்ணதாசன்,சுரதா,புதுமைப்பித்தன் என்றெல்லாம் பெயர்களைச் சூட்டுங்கள்.

சுஜாதாவின் பெயரை நீங்கள் ஏதாவதொரு இலக்கிய நிறுவனத்துக்குச் சூட்டினால் உங்களை இளைஞர் சமூகம் எப்படிக் கொண்டாடும் தெரியுமா!

ஜெயகாந்தனைப்பற்றி நீங்கள் பேசியிருக்கும் பேச்சுக்கள் சாதாரணமானவை அல்ல. படைப்பிலக்கியம் மீது நீங்கள் கொண்டிருந்த பார்வை அடியோடு மாறியிருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.

அரசு முறையில் இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்