Sunday, February 24, 2013

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்






பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்திகள் எல்லாரையும் உலுக்கி எடுத்திருக்கிறது. ஈழம் உட்பட எல்லா விஷயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு சிங்கள அரசாங்கத்தையும் அவர்களுக்கு எல்லா விதங்களிலும் உதவி புரிந்த இந்திய அரசாங்கத்தையும் ஆதரித்துவந்தவர்கள் கூட இந்தப் பச்சைபடுகொலையைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கின்றனர். சில பேர் நமக்கேன் வம்பு கொஞ்ச நாட்களுக்கு வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவோமே என்று கள்ள மவுனம் சாதித்துவருகின்றனர்.

நம்முடைய அரசியல் தலைவர்கள் எல்லாரும் கொதித்துக் குமுறியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்’ என்றிருக்கிறார். ‘பாலச்சந்திரனுக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. அவன் ஒரு குழந்தை. அந்தக் குழந்தை எந்தவிதக் குற்றமும் புரியவில்லை. பிரபாகரனின்  மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அந்தக் குழந்தையைச் சுட்டுத்தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்த ஆதாரங்களையும் இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மையும் மனப்பான்மையும் எண்ணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் பார்க்கும்போது முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி ஞாபகம்தான் வருகிறது.’ என்பவர், இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை வாங்கித்தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி “பாலச்சந்திரன் என்ற இளம்தளிரை துப்பாக்கிக் குண்டுகளால் கருகச்செய்த கோர நிகழ்ச்சியைக் காணும்போது கொடுமை கொடுமை இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காணமுடியாது. உலகத்திலே உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. மணல் சாக்குகளின் மத்தியிலே பிணைக்கைதியாக அந்தச் சிறுவனை அடைப்பதற்கே கல் நெஞ்சம் வேண்டும். அந்தப் பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்? அந்த இளைஞனை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவதற்கு எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்? பாலச்சந்திரனின் மூத்த சகோதரனைப் போர்க்களத்திலே கொன்றழித்த மாபாவிகள் பாலச்சந்திரனை நிராயுதபாணியாக நிற்கவைத்து மூன்றடி தூரத்தில் இருந்தவாறு சுட்டுக்கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்?’ என்று குமுறித்தள்ளியிருக்கிறார்.

வைகோ இப்படிக் கொதிக்கிறார். “நம் போற்றுதலுக்குரிய தேசியத்தலைவர் பிரபாகரினின் இளையபுதல்வன் 12 வயதான பாலகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் அச்சின்னஞ்சிறு பாலகனையும் 5 குண்டுகளைச் சுட்டுக் கொலைசெய்த கொடுமை கோடானுகோடித் தமிழர்களை மனம் பதறச் செய்து உலகில் தமிழனுக்கு நாதி இல்லையா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது” என்றிருக்கிறார்.

தொல்.திருமாவளவன் “12 வயது பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் சிறைபடுத்தப்பட்டு பிஸ்கெட் போன்ற பொருட்களைக் கொடுத்து பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை மூலம் தெரிய வருகிறது. இது ஒன்றே சிங்கள இனவெறி அரசாங்கத்தின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு போதுமான ஆதாரமாகும். எனவே போர்க்குற்றம் குறித்து சர்வதேச சுயேச்சையான விசாரணை வேண்டும்” என்று கொதித்திருக்கிறார்.

விஜயகாந்த் “12 வயதே நிரம்பிய பால்வடியும் முகம் மாறாத பாலச்சந்திரன் சிங்களராணுவத்தால் கொல்லப்படுவதற்கு சில வினாடிகள் முன்பு எடுக்கப்பட்டு இருக்கின்ற புகைப்படத்தையும் சடலமாக இருக்கின்ற புகைப்படத்தையும் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். உலகம் தெரியாத அப்பாவி குழந்தையாக சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிலவறையில் பசிக்கு ருசி அறியாது என்பதுபோல் கைக்கு கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு நல்ல நிலையில் இருக்கும் குழந்தை சற்று நேரத்தில் ஐந்து குண்டுகள் பாய்ந்து சடலமாக கிடக்கின்ற காட்சி காண்போரைக் கண்கலங்க வைக்கிறது. ……இலங்கை மண்ணிலே பிறந்த சிறுவனை அந்நாட்டு அரசே கொடூரமாக படுகொலை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசு எப்பொழுதும் போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது செயல்பட வேண்டும்” என்றிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் “பன்னிரண்டே வயதான அந்தச் சிறுவனை நேருக்குநேர் நிறுத்தி மிக அருகில் நின்று துப்பாக்கியால் சுட்டு அவன் நெஞ்சைத் துளைத்துக்கொன்றுள்ளது சிங்கள இனவெறி ராணுவம். இது போர்க்குற்றம் அல்ல இந்தப் போரே குற்றம் என்பதை சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றிருக்கிறார்.

மருத்துவர் ராமதாசும் இதே போன்று தமது வருத்தத்தையும் குமுறலையும் தெரிவித்திருக்கிறார்.

கவிதை நெஞ்சம் குமுறுவதை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார், “பாலச்சந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும்போது இருதயம் ஒருகணம் நின்றுவிட்டது. 
 என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது. பால்வடியும் முகம், பளபளக்கும் மேனி, கனவுகளின் ஈரம் காயாத கண்கள் மிருகம்கூட அவனைக்கண்டு ஒதுங்கிப்போயிருக்குமே. எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை ராணுவத்திற்கு? மரணம் நிகழும்போது என்னதான் நினைத்திருக்குமோ அந்த கொலைக்களத்துக் குலக்கொழுந்து? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக்கிறான்.

வாழைத்தண்டு மார்பில் வடுக்களாகப் பதிந்திருக்கின்றன துளைத்துப்போன தோட்டாக்கள். கண்கள் என்ற உறுப்பைக் கொண்டதற்காக நான் முதன்முதலில் துக்கப்பட்டேன். ஒரு பிள்ளையைக் கொல்லவா பீரங்கி? ஓர் அரும்பை உடைக்கவா அணுகுண்டு?......................ராஜபட்சே கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப்போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப்போகிறார்கள்? பால்முகம் மாறாத பாலகனே! பாலச்சந்திரனே! அபிமன்யுபோல அஞ்சாமல் களப்பலி ஆனவனே! அழுகிறோம். சாவை மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து சிந்திய ரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து” என்று கண்ணீரைக் கொட்டியிருக்கிறார் அவர்.

இந்த அளவுக்குத் தாக்கத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்று பார்த்தோமானால் நேற்றைக்கு அல்ல, முந்தாநாளோ அதற்கு முந்தின நாளோ நடைபெற்றது அல்ல; போன வாரம் நடைபெறவில்லை. நடைபெற்று ஏறக்குறைய நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. 2009-ம் வருடம் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெற்று உலகையே குலுக்கிப்போட்டிருக்கவேண்டிய சம்பவம் இது. அப்படி எதுவும் அப்போது நடைபெறாமல் இப்போது ‘லேசான குலுக்கல்களுக்காக’ எப்படியோ யாராலோ பந்தி வைக்கப்பட்டிருக்கும் சம்பவமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

பிரபாகரனின் பச்சிளம் பாலகனான இந்தக் குழந்தை பரிதாபமாக செத்துக்கிடக்கும் இந்தப் படங்களும் புதியவை அல்ல; இணையதளங்களில் வலம் வருகிறவர்களுக்கு இந்தப் படம் மிகப்பழைய ஒரு படமே. சில பத்திரிகைகளில் குறிப்பாகச் சொல்லப்போனால் நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட படங்கள்தாம் இவை.

அப்போதெல்லாம் ஏற்படுத்தாத தாக்கத்தை நம்முடைய தலைவர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் இந்தப் படங்கள் இப்போது ஏன் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் கேள்விக்குரியது. 

அந்தப் படங்களுடைய பின்னணி பற்றியும் உண்மைத்தன்மை பற்றியும் சாதாரணர்களான நமக்குத் தெரியாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. குப்பனுக்கும் சுப்பனுக்கும், ராமசாமிக்கும் நாகசாமிக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். கருத்துத் தெரிவித்திருக்கிற ஆட்சியாளர்கள், பெரியவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்குக் கூடவா அந்தப் படங்களைப் பற்றிய தகவல்களும் பின்னணிகளும் உண்மைத்தன்மைகளும் தெரியாமல் போய்விட்டன? அப்போதெல்லாம் ஒரு சிறிய முனகலைக்கூடத் தெரிவிக்காதவர்கள் இப்போது புரண்டு புரண்டு அழுவதும் புலம்புவதும் கங்கையையும் காவிரியையும் இணைத்த அளவுக்குக் கண்ணீர் வடிப்பதும் ஓலமிடுவதும் ஒப்பாரி வைப்பதும் புதிராக இருக்கிறது.

அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் பார்வைக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய செய்திகளும் அப்போதே வரவில்லையா? ஸ்டாலினுக்கு, பேராசிரியர் அன்பழகனுக்கு அப்போதே தெரியாதா?


ஹிட்லர் ஆட்சியை நினைவு படுத்துவதாக’ இப்போது குமுறும் ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்போதே இந்தப் படங்கள் தென்படவில்லையா?

நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் ராமதாஸுக்கும் தொல்.திருமாவுக்கும் சீமானுக்கும் புத்தம் புதிய செய்திகளா இந்தப் படங்களும் இவைபற்றிய தகவல்களும்?

தன்னுடைய சமூகத் தொடர்புகளை ஈழ விடுதலைப் போராளிகளுடன் ஆரம்பித்த விஜயகாந்துக்கு இந்த விஷயம் வரவே இல்லையா?

‘காலையில் தினமும் கண்விழித்தெழுவதற்கு முன்பேயே தொலைபேசியில் என்னை அழைக்கும் கரகரக் குரல் கலைஞருடையது’ என்றெல்லாம் சொந்தம் கொண்டாடி எந்நேரமும் ஆட்சியாளர்கள் வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த கவிஞர் வைரமுத்துவுக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய தகவல்களும் இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கக் கிடைத்தனவா?

என்ன சொல்லுகிறார்கள் இவர்கள். என்ன செய்ய முயலுகிறார்கள்?

ஒன்றும் புரியவில்லை.

அப்போதே இந்தப் படங்கள் பார்க்கக் கிடைத்திருந்தபோதிலும் அவைபற்றிய உண்மைத்தகவல்கள் தெரியாமல் இருந்து இப்போது சேனல்4 தொலைக்காட்சி ‘உறுதிசெய்தபிற்பாடுதான்’ இவர்களுக்கு உணர்வுவந்து கொதித்து எழுந்திருக்கிறார்களா?

அல்லது இந்து பத்திரிகை தெரிவித்திருப்பதனால்தான் இவர்களின் ‘சந்தேகம்’ போக்கப்பட்டதா?

ஏற்கெனவே மூன்றுமுறையோ நான்கு முறையோ பிரபாகரனைக் கொன்றுவிட்டு ஒருமுறை Funeral today என்று வெளியிட்ட பத்திரிகைதானே இந்து? அப்புறம் ‘இந்தமுறை மட்டும்’ எப்படி இந்துவின் மீது நம்பிக்கை வந்தது?

இந்து பத்திரிகையை விடுவோம். நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் எல்லாம் இத்தனை நாட்களும் என்ன செய்துகொண்டிருந்தன? தமிழில் வரும் புலனாய்வு பத்திரிகைகள் என்ன அவ்வளவு சாதாரணமானவையா?

மதுரையிலிருந்து கோபத்துடன் கோபாலபுரம் வீட்டிற்கு வரும் அழகிரி வீட்டுக்குள்போய் தனியறையில் தயாளுஅம்மாளிடம் என்ன பேசினார் எப்படிக் குமுறினார் என்பதையெல்லாம் அடுத்தவாரமே வெளிக்கொண்டுவந்துவிடுவதில்லையா நம் பத்திரிகைகள்?

கோபித்துக் கொண்டிருந்த நாட்களில் ஜெயலலிதா சசிகலாவை போயஸ்கார்டனுக்கு வரவழைத்து தனியறைக்குக் கூட்டிச்சென்று எப்படியெல்லாம் பேசினார் இருவரும் என்னென்ன பேசிக்கொண்டார்கள் ஜெயலலிதா எங்கெங்கே குரலை உயர்த்தினார் சசிகலா எங்கெல்லாம் அழுதார் அப்புறம் எப்படி சமாதானத்துக்கு வந்தார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாகப் புட்டுப்புட்டு வைப்பதில்லையா நம் பத்திரிகைகள்?

தினத்தந்தி என்ன அவ்வளவு சாதாரணப் பத்திரிகையா? தமிழகத்தின் எங்கேயோ மூலையில் முட்டுச்சந்தில் நடைபெறும் கள்ளக்காதல் விவகாரங்களையெல்லாம் ஒன்றுவிடாமல், ஒருவரி விடாமல் பிடித்துக்கொண்டு வருவதில்லையா?

இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு இவ்வளவு பெரிய அரசியல் நிகழ்வுகளில் நடப்பது என்ன என்பதை வெளிக்கொண்டுவருவது அவ்வளவு சிரமமா என்ன?

பின்னே எதற்காக எல்லாரும் சேனல்4 என்ன சொல்கிறது என்பதற்காகக் காத்திருக்கிறார்கள்?
இனிமேல் சேனல்4 என்ன சொல்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் இங்கே அரசியல் நிகழ்வுகள் தீர்மானிக்கப்படவிருக்கின்றதா?

எங்கேயோ கண்காணாத தேசத்தில் இருக்கும் ஒரு புலனாய்வு ஊடகத்துக்கு இருக்கும் பொறுப்பும் திறமையும் நம்முடைய ஊடகங்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லையா?

புரியவில்லை!

இந்தப் பதிவைப் படிக்கும் சில நண்பர்கள் உடனடியாக வந்து கருணாநிதி மீது மட்டும் சொல்லக்கூசும் வார்த்தைகளைப் போட்டுத் திட்டித்தீர்த்துவிட்டு விலகிவிடுவார்கள்.

கருணாநிதி தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. நடைபெற்ற அவ்வளவு தவறுகளுக்கும் அவரை மட்டுமே குற்றம் சாட்டிவிட்டு மற்றவர்களெல்லாம் தப்பித்துவிடும் கைங்கரியத்துக்குத் துணை போய்விடாதீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அவர் ஆட்சியில் இருந்தார் என்பதனாலும் தமிழர்களின் ஒரே இனமானத் தலைவராக அவரை மட்டுமே இந்தத் தமிழ் சமூகம் நினைத்தது என்பதாலும் அவர் எப்படியாவது இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்திவிடுவார் என்ற நினைப்பு கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இருந்தது என்பதாலும் அவ்வளவு நம்பிக்கையிலும் மண்ணைக்கொட்டிச் சிதறடித்துவிட்டார் என்பதாலும் அவர் மீது ஆற்றமுடியாத கோபம் இருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈழப்படுகொலைகள் நடந்த காலகட்டங்களில் கருணாநிதியைத்தவிர நாட்டில் இருந்த – குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் இருந்த மற்ற தலைவர்களின் பங்கு என்ன பொறுப்பு என்ன அவர்கள் ஆற்றிய கடமைகள் என்ன என்பதையெல்லாம் பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கருணாநிதி ஒரு தலைவனே இல்லை என்றெல்லாம் கூப்பாடு போடுவதெல்லாம் சரிதான். அவர் குடும்பத்தை மட்டுமே கவனிக்கிறார், மற்ற எல்லா விஷயங்களிலும் கபட நாடகங்கள் மட்டுமே ஆடுகிறார் என்று சொல்வதெல்லாம் சரிதான்………

அவர் இல்லையென்றால் உடனடியாக அவருக்கு மாற்றாக இன்னொருவரைத் தேர்வு செய்கிறோமல்லவா அந்த ‘இன்னொருவர்’ அல்லது அதற்கு ‘மாற்றானவர்கள்’ ஆற்றிய கடமை என்ன என்பது முக்கியமில்லையா? அவர்கள் என்ன பங்கு பெற்றார்கள், எப்படியெல்லாம் காய் நகர்த்தினார்கள் எப்படியெல்லாம் ஈழப்போராட்டங்களைக் கொண்டு சென்றார்கள் என்பதெல்லாம் விவாதத்திற்கு வரவேண்டாமா?

இந்த நாட்டின் அரசியல் அமைப்பு என்பது எப்படி இருக்கிறது? ஆட்சி அதிகாரம் எல்லாம் ஒருபுறம் இருக்க அந்த ஆட்சி அதிகாரத்தைத் தட்டிக்கேட்கும் மற்ற எதிர்கட்சிகளின்- எதிர்க்கட்சித்தலைவர்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன, என்பதெல்லாம் கணக்கில் வரவேண்டுமா வேண்டாமா?

ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் எதிர்ப்பரசியலும் மக்களைத்திரட்டி அரசுக்கெதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராடுவதும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின்- தலைவர்களின் பொறுப்பா இல்லையா?

அதனைத் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைப்பேரும் செய்திருக்கிறார்களா?
இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பதற்காக எல்லா எம்பிக்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்று கருணாநிதி அறிவித்ததற்கேற்ப ராஜினாமா செய்ய எல்லாக்கட்சி எம்பிக்களும் முன்வந்தார்களா?

திமுக எம்பிக்கள் வெறும் ‘அவரிடம்’ மட்டுமே ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து நாடகமாட மற்ற எல்லாக்கட்சி எம்பிக்களும் அதுமாதிரியான நாடகத்தைக்கூட ஆடாமல் எங்கேயோ போய்ப் பதுங்கிக்கொண்டார்களா இல்லையா?

கருணாநிதி இலங்கை விவகாரத்தில் இன்னின்ன மாதிரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அவருக்கு அரசியல்ரீதியான அழுத்தம் என்னென்ன கொடுக்கப்பட்டது?

எப்படியெல்லாம் கொடுக்கப்பட்டது?

வேறுமாதிரியான சிந்தனையே அவருக்கு எழாதவண்ணம் அவரைத் தங்கள் போக்கிலேயே இழுத்துக்கொண்டு செல்லலாம் என்ற அளவிற்கு எதிர்க்கட்சிகளோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர்களோ அவருக்கு என்ன அழுத்தத்தைக் கொடுத்தனர்?

என்ன மாதிரியான போராட்டத்தை அவருக்கு எதிராக நடத்தினர்?

எல்லாருமே வாய்மூடி கள்ள மவுனம் சாதித்துக்கொண்டிருந்துவிட்டு அங்கே ஒரு பேரழிவு நடைபெற்று முடிந்தபின்னர் எல்லாரும் சேர்ந்து அவருக்கெதிராக மட்டுமே குற்றச்சாட்டு வீசிக்கொண்டிருந்தால் எப்படி?

மற்ற மாநிலங்களில் எல்லாம் இதுவா நடைபெறுகிறது? பொதுவான விஷயங்கள் என்று வரும்போது எல்லாக்கட்சிகளும் ஒருமித்த குரலில்தாம் போராடுகின்றன. எல்லா விஷயங்களிலும் ‘ஒற்றைமுடிவுகள்தாம்’ மேற்கொள்ளப்படுகின்றன. எல்லா விஷயங்களிலும் எல்லாக்கட்சிகளும் ஒரே அணியில் நின்றுதான் போராடுகின்றன.

அதெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?

இருக்கவேண்டுமா இல்லையா?

வெறும் கருணாநிதியை மட்டும் திட்டித்தீர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு உட்கார்ந்துகொண்டிருந்தால் எப்படி?

மற்ற விஷயங்கள் போகட்டும். ஈழ விவகாரம் என்பது மக்கள்இனம் நேரடியாக கொத்துக்கொத்தாக செத்துப்போகின்ற விளிம்பில் நின்றுகொண்டிருந்த விவகாரம். இதில்கூட அத்தனைக்கட்சிகளும் – அழுத்தம் கொடுத்துப் படியுங்கள், அத்தனைக் கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் நின்றுகொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்துபோனதும் ‘ஒரேயொருவர்மீது’ மட்டும் அத்தனைப் பழியையும் போட்டுவிட்டுத் தாங்கள் தப்பிக்க நினைத்தால் எப்படி?

இதையே வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம். அங்கே யார் புண்ணியத்திலோ அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இனப்படுகொலை எதுவும் நடைபெறாமல் நின்று போயிருந்தது என்று வைத்துக்கொள்வோம். ‘என்னால்தான் நின்றது’ ‘நான்தான் பிரதமரிடம் பேசி நிற்கவைத்தேன்’ ‘எங்கள் கட்சிதான் இதற்கான தீர்வை முன்வைத்தது’ என்று எத்தனைப்பேர் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள் தெரியுமா?


இன்னமும் எத்தனைப்பேர் வேறுமாதிரியான பாட்டுப் பாடியிருப்பார்கள் தெரியுமா? ‘தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வாய்ப்பை கருணாநிதிதான் கெடுத்துவிட்டார். ராஜிவ் கொலையாளிகளைத் தப்பிக்கவைத்தது கருணாநிதிதான். அந்தக் கொலையாளிகளைப் பிடித்துவந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அதற்கான தண்டனையை அவர்களுக்கு மட்டுமில்ல கருணாநிதிக்கும் கொடுக்கப்படவேண்டும்’ – சொல்லியிருப்பார்களா இல்லையா?

அதனால் இம்மாதிரியான விவகாரங்களில் எல்லாம் நாம் நம்முடைய சிந்தனைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியவர்களாக இருக்கிறோம். தங்களுக்கான கடமைகளில் தவறிவிட்டு அதனை வேறொருவர் மீது மட்டுமே போட்டுவிட்டுத் தப்பிக்க நினைக்கும் தலைவர்களையும் கொஞ்சம் அடையாளம் கண்டுகொள்வோம்.
இது தொடர்பாக ஒரு பிரபல கவிஞர் சொன்னதை மறந்துவிடக்கூடாது. “ஈழ விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அத்தனைத் தலைவர்களின் கரங்களிலும் ரத்தக்கறை படிந்துதான் இருக்கிறது!”
எல்லாத் தலைவர்களுமே தங்கள் கரங்களை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இப்போது இந்தப் பாலகனின் படுகொலை விஷயத்திற்கு வருவோம்!

தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் இப்போதுதான் தகவல் கேள்விப்பட்டதுபோல் இப்படிக் கூப்பாடு போடுகிறார்களே என்ன நடந்துவிடப்போகிறது?

எல்லா இடங்களிலும் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி எந்த இடத்தில் தேவையான விளைவுகளையும் மாறுதல்களையும் ஏற்படுத்தவேண்டுமோ அந்த இடத்தில் துளியேனும் மாறுதலையோ சின்னஞ்சிறு அசைவையோகூட ஏற்படுத்தவில்லை என்பதுதான் கொடுமையான விஷயம்.

இந்திய அரசாங்கத்தின் கண்களைத் திறந்து வெளியுறவுக் கொள்கைகளில் சிறிய அளவிலேனும் தங்கள் பார்வையை இந்த அரசாங்கம் மாற்றிக்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான அவசியம் எதுவும் இல்லை என்பது போன்ற அவர்களுடைய அறிவிப்புதான் தமிழ் இனத்தை மீண்டும் மீண்டும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திப் பழிவாங்கும் போக்காகவே இருந்துவருகிறது.

இதோ, “இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல; பாதிதான் உண்மை. மீதி சித்தரிக்கப்பட்டவை. உலக அரங்கில் ஸ்ரீலங்காவைக் குற்றவாளியாகக் காட்டவேண்டும் என்பதற்காக எதிரிகள் சித்தரித்திருப்பவை” என்று எவனோ ஒரு ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அமைச்சர் சொல்லிவிட்டான்.

உடனே அதனை அப்படியே அடிபணிந்து நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் “அந்தப் படங்களின் உண்மைத்தன்மை பற்றி விசாரிக்கவேண்டியிருக்கிறது. அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

அப்புறம் என்ன? தூக்கிக் கடாசிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதானே!

நம்முடைய அரசியல்தலைவர்கள் வாய்ப்பந்தல் போடுவதற்கு இன்னொரு ஈழத்தமிழரின் துயரம் தோய்ந்த இன்னொரு விவகாரம் வெளிச்சத்திற்கு வராமலா போய்விடும்?

கண்ணதாசன் எத்தனைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறான்-
‘ஒண்ணுமே புரியலே உலகத்துலே
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்துலே!’







Monday, January 14, 2013

லியோனியின் பட்டிமன்றமும் பாரதிதாசனும்


திருவிழா நாட்களில் எல்லா முக்கிய சேனல்களிலும் பட்டிமன்றம் என்பது தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகிவிட்டது. ஆரம்பித்த புதிதில் சன் டிவி ஆரம்பித்துவைத்த இந்தக் கலாச்சாரம் இப்போது எல்லா சேனல்களையும் பீடித்துவிட்ட நோயாகவே மாறிவிட்டது. எல்லா முக்கிய சேனல்களும் வானொலியின் நிலைய வித்துவான்கள்போல் பட்டிமன்றத்துக்கென்று சில நிரந்தர பேச்சாளர்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சன் டிவி சாலமன் பாப்பையாவை நிரந்தர வித்துவானாக வைத்துக்கொண்டிருப்பது போன்றே கலைஞர் டிவி திண்டுக்கல் லியோனியை நிரந்தர பட்டிமன்ற வித்துவானாக வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் தலைமையில்  சிலரைத் தவிர மற்ற பேச்சாளர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பார்கள். இந்தப் பொங்கலுக்கு அம்மாதிரி மாறிவந்த பேச்சாளர்களில் ஒருவர் அன்பு. இவர் பேராசிரியர் என்றும் ஏதோ கல்லூரிக்கு முதல்வர் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அவர் பேசும்போது பாரதிதாசனைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் ஒரு அற்புதமான தகவலைச் சொன்னார். அதாவது அண்ணா முதல்வராக இருந்தபோது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு ஒரு விழா எடுத்து பொற்கிழி வழங்கியதாகவும் அதனைப் பெறப்போகும் கவிஞரை அண்ணா “நான் என்னதான் நாட்டுக்கு முதல்வராக இருந்தாலும் நீங்கள் ஒரு பெரிய கவி. நான் கொடுக்கும் இந்தப் பொற்கிழியை வாங்குவதற்கு உங்கள் கரம் தாழ்ந்துபோகக்கூடாது. என்னுடைய கரம் கீழேபோகலாம். அதனால் இதனை நான் என் கையில் வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் கரத்தை மேல்நோக்கிக் கொண்டுவந்து அதனை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.”- என்பதாக ஒரு அரும்பெரும் தகவலைச் சொன்னார்.

கேட்டதும் தலை கிறுகிறுத்துப் போய்விட்டது. இந்தச் சம்பவம் எப்போது நடந்தது, அண்ணா எப்போது இப்படி சொன்னார், பாரதிதாசன் அதுபோன்று நடந்துகொண்டாரா……………. இப்படியொரு சம்பவம் எங்கு நடந்தது ஒன்றுமே புரியவில்லை.

காரணம் அண்ணா வெற்றிபெற்று முதல்வராக வந்தது 1967-ல். பாரதிதாசன் இறந்தது
1964-ல்.  


இன்னமும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தோராம் தேதி. அப்படியிருக்க இப்படியொரு சம்பவம் எப்படி நடந்தது என்பதே புரியவில்லை. ஒருவேளை திராவிட முன்னேற்ற கழகம் பாரதிதாசனை மட்டுமே தமிழின் ஆகச்சிறந்த ஒரே கவிஞராக உயர்த்திப் பிடித்ததனால் அண்ணா முதல்வராக வந்ததும் ‘நம்மை உயர்த்திப் பிடிச்ச ஆட்கள் ஆட்சிக்கு வந்துட்டாங்க. நாம இனிமேலும் மண்ணுக்குள்ளேயே புதைஞ்சி கிடக்கிறது நல்லதுக்கில்லை. போய் அவங்க கொடுக்கற மரியாதையை எல்லாம் ஏத்துக்கலாம்’ என்று நினைத்து எழுந்து வந்துவிட்டாரா என்பதும் தெரியவில்லை.

எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. அதுவும் பேசியது யாரோ ஒரு பொதுஜனம் என்றாலும் பரவாயில்லை.  கல்லூரியின் பேராசிரியர் தற்சமயம் முதல்வராகவும் பொறுப்பேற்றிருப்பவர் இப்படித் தப்பும் தவறுமாக ஒரு தகவலை அதுவும் நிறையப்பேர் பார்க்கும் ஒரு பண்டிகை நாளில் சொல்கிறார் என்றால் அதை எந்த வகையில் சேர்ப்பது என்பதே தெரியவில்லை. அத்தனையும் தவறு; பொய்யாய்ப் புனையப்பட்ட கதை என்பது அவருக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. இதனை அவர் எங்கே படித்தார் அல்லது யார் அவரிடம் சொன்னார்கள் அப்படியே யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் அதனை உலகம் முழுதும் ஒளிபரப்பாகும் ஒரு பெரிய டிவி சேனலில் சொல்லும்முன்பு சரிபார்த்துக்கொண்டாரா என்பதும் தெரியவில்லை. இப்படியொரு தவறான தகவலை அவர் சொல்லியபோது லியோனி அவரைத் திருத்தவில்லை. ஒருவேளை அடுத்த பேச்சாளரை அழைப்பதற்கு முன்பு இதுபற்றிய சரியான தகவலை லியோனி சொன்னாரா என்பதும் தெரியவில்லை(ஏனெனில் அதன் பிறகு அந்தச் சேனலைத் தொடரும் வாய்ப்பு இருக்கவில்லை).

சங்கடம் என்னவென்றால் தமிழ்நாட்டின் ஒரு கல்லூரி முதல்வர் நடக்காத ஒன்றை நடந்ததுபோலும் அதுவும் மிகவும் பெருமைக்குரிய சம்பவம் என்பதுபோலும் ஒரு பிரபல சேனலில் சொல்லுகின்றார். பல தகவல்கள் அறிந்த லியோனி போன்றவர்கள் அதனை மறுத்துத் திருத்தாமல் இருக்கிறார்கள்.

அதாவது பரவாயில்லை. அந்தப் பேச்சின் தொகுப்பு ஒன்றும் நேரலையல்ல. கலைஞர் டிவியின் ஆசிரியர் குழுவால் பார்க்கப்பட்டு செப்பனிடப்பட்டு எடிட் பண்ணப்பட்டுத்தான் ஒளிபரப்பாகிறது. அங்கிருந்த ஒருத்தருக்குக்கூடவா இத்தனைப் பெரிய தவறு தெரியவில்லை? சாதாரண அடிப்படைத் தகவல்கள்கூடத் தெரியாதவர்கள்தாம் இம்மாதிரி பட்டிமன்றப் பேச்சுக்கள் போன்றவற்றை எடிட் செய்யும் பொறுப்பில் உட்காருகிறார்களா? சில பகுதிகளை டிலீட் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றைத்தவிர அவர்களுக்கு வேறு எந்தத் தகவல்களும் தெரியாதா? அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றபோது பாரதிதாசன் உயிருடன் இருக்கவில்லை என்ற தகவல்கூடவா யாருக்கும் தெரியவில்லை? யார் என்ன சொன்னாலும் அதனைக் கொஞ்சம்கூடச் சரிபார்க்காமல் அப்படியே ஒளிபரப்பிவிடுவார்களா? பத்திரிகைகள் மற்றும் இம்மாதிரி ஊடகங்களில் இருப்போர் பொதுமக்களைவிடவும் மேலதிகத் தகவல்கள் தெரிந்து இருக்கும் காலமெல்லாம் மெதுவே 
மறைந்து வருகிறதா? வருத்தமாக இருக்கிறது.

இந்தப் பேராசிரியர்களெல்லாம் சங்க இலக்கியத்திலிருந்து நேரே அப்படியே சொய்ங் என்று இறங்கிவந்து அவர்கள் மையம் கொண்டு நிற்கும் இடமே பாரதிதாசன்தான். அப்படியே தமிழ் தமிழ் உணர்வு என்று பேசுபவர்க்கெல்லாம் ஆதர்சம் அறிஞர் அண்ணா. இவர்கள் இருவரையும் இணைத்து ஏதாவது சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் இந்தப் பேராசிரியர். யாரோ சொன்ன இந்த டுபாக்கூர் கதையை அவிழ்த்து விட்டுவிட்டார்.
உண்மையில் இப்படியொரு சம்பவம் பாரதியார் வாழ்வில் நடந்ததாகத்தான் சொல்வார்கள். அதுவும் அன்றைய ராமநாதபுரம் சேதுபதி பாரதிக்கு ஏதோ பொற்கிழி கொடுக்கப்போக “நீர் கொடுக்க நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய கை தாழாது. நீர் உம் கையில் வைத்துக்கொள்ளும். நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று பாரதி சொல்லி எடுத்துக்கொண்டதாகச் சொல்லப்படுவதுண்டு. இது ஒரு சம்பவம்.

பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி கொடுத்த சம்பவமும் நடைபெற்றது.
பாரதிதாசன் பிறந்த நாளுக்காக திமுகழகம் சார்பில் நிதி திரட்டப்பட்டு அதனை ஒரு விழாவில் அண்ணா அவரிடம் வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட பாரதிதாசன் அண்ணாவைப்பற்றியே மிக மோசமாக அந்த விழாவில் பேசப்போக அது அப்போது 


மிகப்பெரிய பரபரப்பாகிவிட்டது. திமுகவினரெல்லாம் பாரதிதாசன்மீது ஏகத்துக்கும் கடுப்பெய்திவிட அப்போது திமுகவிலிருந்த கண்ணதாசன் பாரதிதாசன் மீது செம கோபம் கொண்டு ‘குரல்கெட்ட குயிலே கேள்!’ என்ற தலைப்பில் பாரதிதாசனைக் கடுமையாகத் தாக்கி தென்றல் பத்திரிகையில் கவிதை எழுதப்போக அது இன்னமும் பரபரப்பாகிவிட்டது. (இந்தக் கவிதை கண்ணதாசனின் கவிதைத் தொகுதியில் இன்றும் காணக்கிடைக்கிறது) அதன்பிறகு அண்ணா தலையிட்டு பாரதிதாசன் மீது யாரும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று தடுக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இந்த விஷயங்களெல்லாம் அந்தப் பேராசிரியருக்குத் தெரியாது போலும். ஏதோ சொல்லவேண்டுமே என்பதற்காக எதையோ புனைகதையாகப் புனைந்து சொல்லிவிட்டுப் போய்விட்டார்.


இனிமேலாவது இதுபோன்ற பட்டிமன்றங்களில் பேச வருகின்றவர்கள் சரியான தகவல்களுடனும் பொறுப்புணர்வுடனும் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.


Tuesday, December 25, 2012

‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!



இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்.

உலகில் அவ்வப்போது எல்லா விஷயங்களிலும் சில புதிய புதிய பாணிகளும் நடைமுறைகளும் பழக்கவழக்கங்களும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். முதலில் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கும் நம்முடைய மனம் காலப்போக்கில் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் அவசியமேற்பட்டு பின்பற்றத் துவங்கிவிடும். 

அறிமுகமான நேரத்தில் பெரிதாகவும் பிடிவாதமாகவும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மறுத்திருப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலேயே இதற்கான நிறைய உதாரணங்கள் கிடைக்கும்.

ஆரம்பத்தில் பல் துலக்க பற்பொடி வந்தபோது அதற்கு மாற மறுத்தவர்கள் எத்தனைப் பேர்? 

அப்புறம் பிரஷ்ஷும் பேஸ்ட்டும் வந்தபோது வேப்பங்குச்சியையும் ஆலம்விழுதையும் விட்டுவிலக மறுத்தவர்கள் எத்தனைப்பேர்? (இருப்பதிலேயே அதுதான் சாலச்சிறந்தது என்பது வேறு விஷயம்) 

இன்னமும்கூட நகரத்தில் இருக்கும் சில பெரியவர்கள் ஊருக்குப் போகும்பொழுது தங்களுக்கு வேண்டிய ஆலங்குச்சிகளையும் வேப்பங்குச்சிகளையும் கொண்டுவந்து ஸ்டாக் வைத்துக்கொண்டு உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் இதனை ரஜனி அறிமுகப்படுத்தினார் என்ற கூமுட்டை வாதம் வேறு. அது கிடக்கட்டும்.

சிறிது நாட்களுக்கு முன்பு பார்த்தோமென்றால் யோகாசனத்தை நிறையப் பேர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல கேலி பேசி நிராகரித்துக் கொண்டும் இருந்தனர். முக்கியமாக டாக்டர்கள் யோகாசனத்துக்கு எதிராகவே இருந்தனர். இப்போது நிறைய டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு யோகாசனம் சிபாரிசு செய்கிறார்கள். இன்னமும் நிறைய டாக்டர்கள் அவர்களே யோகாசனம் பயின்று தினசரி யோகா செய்து பலனை அனுபவித்து வருகிறார்கள்.

ஆல்டர்னேட் தெரபி என்று சொல்லக்கூடிய பல மாற்றுமருத்துவ விஷயங்கள் நிறைய காலமாக ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு இன்றைக்கு ஒவ்வொன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணம் நிறைய மக்கள் வெறும் ஆங்கில மருத்துவர்களுக்காகவும் மருந்துகளுக்காகவும் காத்திருக்காமல் அவர்களுக்கு எதில் சுகம் கிடைக்குமோ அந்த மருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். ‘வேறு வழியில்லை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று டாக்டர்களால் சொல்லப்பட்ட எத்தனை நோயாளிகள் திரும்பவும் அவர்களிடமே ஆபரேஷனுக்காக வந்திருக்கிறார்கள் என்ற கணக்கை எடுத்துப்பார்த்தால் இதற்கான விடை கிடைத்துவிடும்.

‘சரி டாக்டர் நான் வீட்டில் ஆலோசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிச் செல்லும் நிறைய நோயாளிகள் இந்த வியாதி ஆபரேஷன் இல்லாமலேயே குணமாகிறதா என பல்வேறு மருத்துவமுறைகளை நாடிச்செல்வதும் அங்கு சென்று பரிபூரண குணம் அடைவதும் பதிவு செய்யப்படாத கணக்கில் வராத தகவல்களாகவே இருக்கின்றன.(அவற்றில் சில குணமடைவதில்லை என்பது எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று)

இப்படி ஆங்கில மருத்துவமுறையை விட்டு ‘வெளியேவரும்’ நோயாளிகள் யாருமே தாங்கள் குணமடைந்ததும் மறுபடி அந்த ஆங்கில மருத்துவரைத் தேடிச்சென்று தாங்கள் குணமடைந்ததைச் சொல்வதே இல்லை என்பதுதான் இதிலுள்ள சோகம்.

இந்தக் காரணத்தினால்தான் மாற்று மருத்துவ முறைகளால் குணம் அடைய முடியும் என்ற செய்தியே ஆங்கில மருத்துவத்திற்கும் மருத்துவ விஞ்ஞானத்திற்கும் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவும் எள்ளிநகையாடும் கேவலமானதொரு விஷயமாகவும் இருந்துவருகிறது.

மாற்றுமருத்துவ முறைகளான பாரம்பரிய முறைகளைத் தவிர மருந்து மாத்திரைகள் இல்லாத மருத்துவமுறைகள் சிலவற்றை ஆங்கில டாக்டர்கள் மட்டுமல்ல சித்தவைத்தியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் போன்ற ஆங்கில மருத்துவர்களால் ‘ஒப்புக்கொள்ள மறுக்கப்பட்ட’ இந்த வகையினர்கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் இதிலுள்ள பெரிய வேடிக்கை.

ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது?

பல தனியார் மருத்துவ மனைகளில் ரெய்கி இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கிறது.
பல மருத்துவமனைகளில் பிராணிக் ஹீலிங் சிகிச்சைமுறைக்கு வழிசெய்திருக்கிறார்கள்.
சில மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சைகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இவையெல்லாம் நல்ல மாற்றத்திற்கான அடையாளம். எல்லாத்துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை மேற்கொள்வதும் கடைப்பிடிப்பதும் மற்ற துறைகளை விடவும் ஆரோக்கிய துறைக்கு மிகவும் உகந்த விஷயங்கள்.

ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது. 

ஆதலால்தான் இப்போதெல்லாம் கடற்கரைகள், பூங்காக்கள், நடைபாதைகளில் நடைபயிலும் கூட்டத்தினரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுக்காலமாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலபேருக்கு இன்றைக்கு சுதந்திரமாய் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலைமை.

அவ்வளவு கூட்டம்!

தினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு.

நடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம்.

சரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும்.

சமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும்.
மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு.

அதுதான் எட்டு நடை!

எட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம்.

அதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது.

மொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை.

இந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம்

மொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.  

அடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம்.

இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும்.
அரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம்.

இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும்.

இந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.

எட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

ரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும்.

இரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

உடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட 
பிரச்சினைகள் விலகும்.

ரத்த ஓட்டம் சீர்ப்படும்.

ஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும்.

தூக்கமின்மை சரியாகும்.

அப்புறமென்ன? இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும்.
ரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம்.

அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை.

இந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது.

நம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

நேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது.
ட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம்.

இந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. 

இதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார்.
அவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். 

சேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார்.

இந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார்.

என்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர்.

தன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம்.

கால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார்.

எல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.

இங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
காசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா? 

எல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்!

Monday, December 10, 2012

இந்த நூற்றாண்டின் முதல் மகாகவி



இந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த முதல் மகாகவி பாரதிதான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனிப்பட்ட நடையில் உழன்று கொண்டிருந்த தமிழ்க்கவிதையைச் சட்டென்று திசைதிருப்பி இன்றைக்கு இருக்கின்ற - இனிமேல் இருக்கப்போகின்ற நவீன நடைக்கான ராஜபாட்டையை- மன்னிக்கவும் மக்களுக்கான பாட்டையைப் போட்டுக்கொடுத்த அற்புதன் அவன்தான். அவனுடைய காலம்வரை தமிழ் இலக்கியம் என்பதும் தமிழ்ப்பாடல்கள் என்பதும் சங்க இலக்கியத்தின் நீட்சியாகத்தான் இருந்தது. அதன் மருட்சி நடை பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கித் திரும்பவில்லை. எந்தச் சாதாரணப் பாடலுக்கும் உரை சொல்வதற்கு ஒரு தமிழ் வித்துவானையோ தமிழ்ப்புலவரையோ தேடிப்போக வேண்டியிருந்தது. 

சில புலவர்களின் தமிழ் உரையை விளங்கிக்கொள்வதற்கு இன்னொரு உரை தேவையிருந்தது. இதே நிலைமை தொடர்ந்திருந்திருந்தால் தமிழ்க்கவிதைகள் அழிந்தே போயிருக்கும். வேகமாய் வந்துகொண்டிருந்த நவீனத்தின் காலம் ஒரு பாடலைப் புரிந்துகொள்ள யாரையோ தேடிப்போகவேண்டும் அவர்கள் விளக்கம் சொன்னார்களானால்தான் இலக்கியம் புரியும் என்ற 

நிலைமை தொடர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு உரை நடைக்கும் (அந்தக் காலத்திலே அதற்குப் பெயர் வியாசம்) ஒரு வித்துவானைத் தேடிக்கண்டுபிடித்து உரை சொல்லக்கேட்டு இலக்கியம் படித்திருக்கப் போகிறார்கள்? ‘குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்” என்று ஆரம்பித்தவுடன் “அண்ணே எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறமா வாரேன்” என்று எழுந்து போய்விட மாட்டார்களா? நம் காலத்து மொழிநடையில் கவிதை இருக்கவேண்டும் கரடு முரடான தமிழ் பேச்சுமொழிக்கும் சற்றே மேம்பட்ட ஒரு நடையில் இருக்கவேண்டும் ரொம்ப உயரத்தில் புரியாத மொழிநடையில் இருக்கக்கூடாது என்ற எண்ணம் பாரதி காலத்துக்குக் கொஞ்சம்  முன்னரே விதைக்கப்பட்டிருந்த போதிலும் அதனை வெற்றிகரமாகக் கையிலெடுத்து மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவன் பாரதிதான்.

இயல்பான மொழிநடை, உணர்ச்சிகரமான சொற்கள், தத்துவ விசாரம், ஆன்மிக ஞானம் பழையன சாடல் புதியன பேசல் புதுப்புது உத்திகள் அறநெறி பேணல் விடுதலை வேட்கை காதல், நாட்டுப்பற்று, மொழி உணர்வு, அழகியல், இயற்கையை நேசித்தல் என்று மக்களின் வெகு அருகில் வந்து நின்று இலக்கியம் பேசியவன் பாரதி. அதனால்தான் அவனை ஒரு மகாகவியாகவும் யுகபுருஷனாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

பாரதிக்கு அடுத்துவந்த பாரதிதாசன் பாரதி பாடாமல் விட்ட சில பகுதிகளையும் மாறிவரும் சமுதாயத்திற்குத் தேவையான உணர்வுகளையும் ஊட்டத்தொடங்கினான். தேசவிடுதலையை பாரதி பாடிச்சென்றுவிட ‘ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று தனக்கு முன்னோன் சொன்னதை 
தமிழ் இனப்புரட்சியாக கொண்டுவர பாடுபட்டவன் பாரதிதாசன்.

அடுத்துவந்த கண்ணதாசன் சங்க இலக்கியத்தின் மரபு சார்ந்த நீட்சியையே பாடுபொருள் ஆக்குகிறான். அவன் காலத்தில் இருந்த கவிஞர்களுக்கும் அவனுக்கு முன்பிருந்த கவிஞர்களுக்கும் கண்ணதாசனுக்கும் அதுதான் வித்தியாசம். சங்க இலக்கிய மரபு திரைஇசைப் பாடலாக உலா வர ஆரம்பிக்கிறது. அதற்கு அவனுக்கு அற்புதமாய் வாய்த்த இடம் திரைப்படத்துறை. ஏட்டில் படிப்பதுதான் இலக்கியம் என்றிருந்த காலகட்டம் மெதுவாக மாறுகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியால் மீடியா வானொலி இசைத்தட்டு டேப்ரிகார்டர், சி.டி, ஐபேட் என்று வகைவகையாக மாறி இசைவடிவத்தில் பாடல் வரப்போக ஏட்டில் படிக்காதவனையும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ என்று இதழில் தேன் தடவிப் பாடவைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் வெறும் சினிமாக்கவிஞன் தானே சினிமாப்பாட்டெல்லாம் இலக்கியமாகிவிடுமா? என்று இன்னமும் சிலபேர் முனகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட கவிஞன் அவன்.  மனித 
வாழ்க்கையின் அத்தனை நொடிகளையும் பாடிவைத்திருக்கும் ஒரே கவிஞன் அவன்தான்.
நாம் பாரதிக்கு வருவோம்.

ஒரு கவிஞன் எந்நாளும் நிலைத்து நிற்க அவன் வெறுமனே அழகியலைப் பாடிச்செல்லுபவனாகவோ தினசரி வாழ்க்கையைப் பதிவு செய்துவைத்துவிட்டுப் போகிறவனாகவோ மட்டும் இருந்தால் போதாது. அவன் ஒரு தத்துவ ஞானியாகவும் இருத்தல் வேண்டும். 

இப்போதெல்லாம் சில கவிஞர்கள் பாடல்களில் நிறைய புள்ளிவிவரம் சொல்லுகிறார்கள். இன்னும் சில கவிஞர்கள் என்சைக்ளோபீடியா விஷயங்களைச் சொல்லுகிறார்கள்.

“எறும்பு பற்றித் தெரியுமா நண்பர்களே உங்களுக்கு?

அதன் சின்னஞ்சிறு உருவத்துக்குப் பின்னே இருக்கும் மலைக்க வைக்கும் விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூச்சி இனத்தில் மிகுந்த அறிவு கொண்டது எறும்புதான் என்பது தெரியுமா?

எறும்புகளில் எட்டாயிரம் வகைகள் உண்டு

உடலை விடத் தலை பெரியதாக உள்ள உயிரினம் எறும்பு.

பிரிந்துபோன எறும்பு ஒன்று ஆறுமாதம் கழித்து வந்தாலும் மற்ற எறும்புகள் அதை அடையாளம் கண்டுகொள்ளும்.

எறும்புகள் வரிசையாக செல்லக் காரணம் அவை செல்லும்போது சுரக்கும் பியுமரோன் ப்யூமரிக் அமிலம்தான்

அவை மோப்ப சக்தியை இழக்கும்போது இறந்துவிடும்……………”இப்படியெல்லாம் ‘கவிதை’ எழுதுகிறார்கள்.

இந்தக் கவிதை கவிதை அல்ல; தினமணியில் வந்த செய்தித் துணுக்குத்தான். இப்படி தினமணி தினத்தந்தி தினமலர் போன்ற பத்திரிகைகளின் சிறுவர் மலர்களிலும் பாப்பா மலர்களிலும் ஓராயிரம் தகவல்கள் வருகின்றன. அதனைத் தொகுத்து பாடல்களாகவும் கவிதைகளாகவும் சிறுபிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள். இந்த தகவல் துணுக்குகள் எல்லாம் தகவல் துணுக்குகளே. கவிதைகள் ஆகா.

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்றவன் பாரதி. தீ சுடும் என்பது தகவல். ‘தீ இனிது’ என்றானே அதுதான் கவிதை.

பாரதி பரலி சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் இவ்வார தினமணியின் தமிழ்மணி பகுதியில் வந்துள்ளது. அவற்றிலுள்ள சில பகுதிகளைப் பாருங்களேன்.

‘தம்பி- மாதத்துக்கு மாதம் நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கின்றேன். 

நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலேயே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது.

நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

தமிழ் – தமிழ் – தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை, புதிய உண்மை, புதிய புதிய இன்பம் – தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும்.

தம்பி – நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.

தமிழைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை!

தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி!

உள்ளமே உலகம்.

ஏறு! ஏறு! ஏறு!

மேலே! மேலே! மேலே!

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைக்க முயற்சி பண்ணு.

பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி!

உனக்குச் சிறகுகள் தோன்றுக.

பறந்து போ! பற, பற!

மேலே மேலே மேலே!

தம்பி _ ‘தமிழ் நாடு வாழ்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க’ என்றெழுது. ‘தமிழ் நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக’ என்றெழுது. ‘அந்தப்  பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க’ என்றெழுது.

தமிழ் நாட்டிலே ஒரே ஜாதிதான் உண்டு!

அதன் பெயர் தமிழ் ஜாதி!

அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது!

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.

பெண்ணைத் தாழ்வு செய்தோன் கண்ணைக் குத்திக்கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.

தொழில்கள் தொழில்கள் தொழில்கள் என்று கூவு!

வியாபாரம் வளர்க, இயந்திரங்கள் பெருகுக, முயற்சிகள் ஓங்குக.

சங்கீதம், சிற்பம், இயந்திர நூல், பூமி நூல், வான நூல்…………இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் – 

இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு.

சக்தி! சக்தி! சக்தி! – என்று பாடு!”

இவன்தான் பாரதி.

தினமணியில் ஞாயிறுதோறும் வரும் தமிழ்மணி இம்மாதிரியான முத்துக்களையெல்லாம் தேடியெடுத்து வாசகப்பரப்பில் வைக்கிறது. இப்படியொரு இலக்கியச்சேவையை இன்றைய நாளில் எந்தவொரு ஊடகமும் செய்வதில்லை என்பதைப் பார்க்கும்போதுதான் இதன் மேன்மை புரியவரும். கலாரசிகன் என்ற பெயரில் இந்தப் பகுதியைச் சிறப்பாகச் செய்துவரும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பாராட்டுக்குரியவர்.  

பாரதியை சரிவரப் படிக்காமலேயே அல்லது இனம்சார்ந்த விமர்சனத்தை அந்த மகாகவிஞன் மீது வைப்பதானாலேயே அவன்மீது சேற்றை வாரித்தூற்றும் சிலரை நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அவன் ஆதங்கப்பட்டிருப்பதையெல்லாம் வசதியாகத் திரைப்போட்டு மறைத்த திராவிட சிந்தனையாளர்களையும் இந்த நேரத்தில் பரிதாபமாக நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இவர்களையெல்லாம் தாண்டிக்கொண்டுதான் மகாகவிகள் நிற்கிறார்கள்.

இமயத்தைவிடவும் அதைவிட உயரமாகவும் அவர்கள் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.