Sunday, March 10, 2013

வைகோவும் சீமானும் என்ன செய்யப்போகிறார்கள்?

 
மீண்டும் டெசோ ஆரம்பிக்கப்பட்டு சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்று எல்லாக்கட்சிகளையும் சார்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரைத் தொடர்ந்து பிரதமரும் இந்திய அரசின் நிலைகுறித்து விளக்கியிருக்கிறார்கள். இவர்களின் விளக்கெண்ணெய் விளக்கம் என்னவென்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இனப்படுகொலைக்குத் துணையாக நின்றவர்கள் இப்போது உலக அரங்கின் முன் தங்கள் சுயரூபம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்டை நாடு, வெளியுறவுக்கொள்கை, இறையாண்மை, பேச்சுவார்த்தை நடத்துவோம், விசாரணை நடத்த வற்புறுத்துவோம் என்று என்னென்னமோ சொல்லி பிரச்சினையை இப்போதைக்கு நீர்த்துபோகச் செய்வதற்கு படாதபாடு படுகிறார்கள்.

திமுகவையும் கருணாநிதியையும் ஆயிரம்தான் இந்த விஷயத்தில் குறை சொன்னாலும் தற்போது மொத்த இந்தியாவின் கவனத்தையும் பாரதிய ஜனதா உள்பட மொத்தக் கட்சிகளின் கவனத்தையும் மத்திய அரசாங்கத்தின் கவனத்தையும் இந்த அளவுக்குக் கொண்டுவந்திருப்பது டெசோவின் சாதனைதான். மற்ற கட்சிகளெல்லாம் எத்தனைக் கூப்பாடு போட்டாலும் நடைபெறாத ஒன்று (அப்படி எந்தக் கட்சியும் கூப்பாடு போடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்) இப்போது இவர்களின் முயற்சியால் நடைபெற்றிருக்கிறது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் கலந்துகொண்டவர்கள் சரியான, முறையான விவாதங்களையே வைத்திருக்கிறார்கள். திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பேசும்போது “தமிழர்களுக்கு எதிராக இலங்கை தொடுத்த போரில் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் தங்களது கணவன்மாரை இழந்துள்ளனர். இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும். மத்திய அரசு உறுதியான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும்.

நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான்!

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமையும்” என்று பேசியிருக்கிறார். இது தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு முட்டுச்சந்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு இல்லை. பாராளுமன்றத்தில் அவர் சார்ந்த கட்சியின் கருத்தாக இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் பாலு.

அதிமுகவின் எம்பி தம்பித்துரை பேசும்போது “இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. உண்மையிலேயே இது இனப்படுகொலைதான். 
 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்” என்றிருக்கிறார்.

தயாநிதி மாறன் பேசும்போது “இலங்கைப் பிரச்சினையில் எவ்வளவோ பேசியும் எழுதியும்கூட பல்லாண்டு காலமாக நிலைமை அப்படியேதான் உள்ளது” என்றார்.

காங்கிரசைச் சேர்ந்த அழகிரி, இடதுசாரிக்கட்சிகளைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், லிங்கம், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது “நாம் நினைக்கிறபடி ஒருநாளும் இலங்கை நட்புநாடாக இருந்ததில்லை. இலங்கை நமது நட்பு நாடு என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். இந்தியா இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. “பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றைக் கொரித்துக்கொண்டிருந்த காட்சியும் அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்துகிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும்…..2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகிவிட்டது. தேவைப்பட்டபோது இந்தியா செயல்படத் தவறிவிட்டது. இனப்படுகொலை நடந்தபோது மத்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது.
புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.

தீர்மானத்தின் மீது இந்தியா வெறுமனே ஓட்டுப்போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் பாரதிய ஜனதாவின் யஷ்வந்த் சின்ஹா.

பிரதமர் கனவில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில் “தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள்(மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா? ‘மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்’ என்று ஜவஹர்லால் நேரு கூறியிருக்கிறார். இந்தக் கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதன் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதைத் தெளிவு படுத்துங்கள். (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ஏடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத் துறை மந்திரியையும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு தேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல” என்று குறிப்பிட்டார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுக்கத்தா ராய் நேரடியாக திமுக எம்பிக்களை நோக்கி இந்தக் கேள்வியை முன்வைத்தார். “சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலைஉயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்” என்று நாம் நினைக்கும் கருத்தை முகத்துக்கு நேராகவே திமுக எம்பிக்களைப் பார்த்துக்கூறினார் அவர்.

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் பேசும்போது “இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தாராசிங் பேசும்போது “இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்தப் பிரச்சினையத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தலையிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆக, இந்தியாவின் அத்தனைப் பெரிய அரசியல்கட்சிகளின் கவனத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை உணர்த்தப்பட்டு, அங்கு நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பது சொல்லப்பட்டு, இத்தகைய கொடுமைகளுக்கும் இலங்கை அரசின் அநீதிகளுக்கும் எதிராக இந்திய அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதை அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகளே நாடாளுமன்றத்தில் சொல்லும் அளவுக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தது நிச்சயம் ஸ்டாலினும் பாலுவும் திருச்சி சிவாவும் டிகேஎஸ் இளங்கோவனும் அவர்கள் சார்ந்துள்ள திமுகவும்தான் என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை.

அட்டூழியமும் கொடுமையும் இனப்படுகொலையும் நடைபெறும்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது இது என்ன நாடகம்? என்று திமுகவைப் பார்த்துக் கேள்வி எழுப்பினால் நிச்சயம் அதற்கு பதிலில்லை.

அன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றபோது கருணாநிதி என்ன செய்துகொண்டிருந்தார்? என்ற கோபக்கேள்விகளுக்கும் நம்மால் உரிய பதிலை நிச்சயம் சொல்வதற்கில்லை.

இது சம்பந்தமாய் இத்தனை நாட்கள் கழித்து அவர் கொடுத்துள்ள நீண்ட விளக்கமும் (போரை நிறுத்திவிட்டதாக ராஜபட்சே பொய் சொன்னதும் ஒரு போர்க்குற்றமே) எந்தத் தமிழ் உணர்வாளரையும் திருப்திப்படுத்தவில்லை.

நடந்துமுடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடுசெய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இப்படியே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.

‘கருணாநிதி துரோகி, கட்டுமரக்காரனை நம்புவதற்கில்லை, 
 குடும்பத்தைத்தவிர வேறு சிந்தனை தாத்தாவுக்கு இல்லை. ஏ! பெரிசு நீ ஒதுங்கிக்கோ மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றெல்லாம் இணையத்தில் கமெண்ட் போட்டுவிட்டு விலகிவிடுவதனால் ஒரு புல்லும் இங்கே அசைந்துவிடுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.

இனிமேலாவது எல்லாரும் ஒன்று சேர்ந்து ஏற்கெனவே நடைபெற்றதுபோன்ற அக்கிரமங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கைக்கெட்டும் தூரத்தில் வாழும் நம் தொப்புள்கொடி சமூகம் அங்கே உயிர் பயம் இன்றி வலம்வரவும், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்படாமல் மானத்துடன் வாழவும், அவர்களுக்கு உறைவிடம் உணவு போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடிமக்களுக்கான அனைத்து உரிமைகளுடன் வாழவும் வழி ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அதற்காக அந்த கொடுங்கோல் அரசாங்கத்தைப் பணியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் கடமையை நமது நாட்டிற்கும் நாட்டை ஆளுகிறவர்களுக்கும் உடனடியாக உணர்த்தும் நிகழ்வுகளை நாம் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம்.
அத்தகைய ஒரு நிகழ்வாக இந்த நாடாளுமன்றத்தின் விவாதம் நடைபெற்றிருக்கிறது.

இரண்டாவதாக-

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

மூன்றாவதாக-

திமுக நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி “நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான். இலங்கைப் பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமைய முடியும்” என்பதை நோக்கி நகரவேண்டும்!

இந்த அறிவிப்பை ஏதோ டி.ஆர்.பாலு சொன்னதாக எடுத்துக்கொள்ளாமல் திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதி சொன்னதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவருடைய ஒப்புதல் இல்லாமல் சாதாரண டி.ஆர்.பாலுவால் இவ்வளவு பெரிய ‘ஸ்டேட்மெண்ட்டை’ நாடாளுமன்றத்தின் முக்கிய விவாதத்தின்போது இவ்வளவு அழுத்தம் திருத்தமாக உரத்த குரலில் சொல்லியிருக்கமுடியாது.

ஆகவே அது கலைஞரின் அறிவிப்புதான்!

இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவிடாமல் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக டெசோ அமைப்பு எடுத்துச் செல்லவிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவையெல்லாமே மத்திய அரசாங்கத்தை ‘மிரட்டுவதற்கு’ திமுக கைக்கொள்ளும் உத்தியாகக்கூட இருக்கலாம்.
இருந்துவிட்டுப் போகட்டுமே………………..

மத்திய அரசாங்கத்தை ஏதோ ஒரு வழியில் மிரட்டி சரியான திசைக்கு அவர்களைக் கொண்டுசெல்லும் எந்த உத்தியும் இந்த காலகட்டத்தில் வரவேற்கப்படவேண்டியதே!

டெல்லியில் டெசோ சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்திற்று என்று பார்த்தோமானால் தமிழ்நாட்டில் சில பத்திரிகைகளும் வெறும் பத்துப்பதினோரு பேர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விவகாரம் இன்றைக்கு தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது என்பதே ஒருவகையில் வெற்றிதான்.
 
குலாம்நபி ஆசாத் போன்ற காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மனித உரிமை ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ், சர்வதேச பொதுமன்னிப்பு அவையின்
 இந்தியச் சார்பாளர் அனந்த பத்மநாபன் போன்றவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினர் என்பது முக்கியமான ஒன்று.

இதனால் உடனடி லாபம் என்று பார்த்தோமானால் முன்பெல்லாம் செய்ததைப்போல அண்டை நாடு இறையாண்மை என்றெல்லாம் போலி வெளியுறவுக் கொள்கை பேசிக்கொண்டு தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுப்பதும் மேலும் இன அழிவை நடத்துவதும் கொடூரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நிச்சயம் முடியாது.

அதேபோல ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் ‘தமிழ்த்தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் மகிழ்ச்சி’ என்பது போன்ற பொறுக்கித்தனமான செய்திகளை ஒளிபரப்ப நிச்சயம் தயங்குவார்கள்.

இது கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி எழுதப்படும் பதிவு அல்ல; 

2009-ல் நடைபெற்ற பேரழிவைத் தடுத்து நிறுத்தும் கடமை அவருக்கு நிச்சயம் இருந்தது. 

அப்படி அந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தும் நிலைமை அன்றைக்கு இல்லாமல் போயிருக்கும் நிலையில் உடனடியாகப் பதவியைத் துறந்துவிட்டு தெருவில் இறங்கிப் போராடியிருக்கவேண்டும் அவர் என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு.
அதனை அவர் செய்யவில்லை.

அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத் தமிழர்களிடம் அவர் சேர்த்துவைத்திருந்த புகழ் ஒரே வாரத்தில் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்க முடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்…………

சரி; இந்த நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? ஒரு கணம் யோசியுங்கள்.

ஆயிரம்தான் இருந்தாலும் ‘இலங்கைத் தமிழர்’ பிரச்சினைக்கோ அல்லது ‘ஈழத்தமிழர்’ பிரச்சினைக்கோ இந்தியாவிலுள்ள மத்திய அரசாங்கத்தின் துணையுடன்தான் எந்த ஒரு தீர்வும் கண்டாகவேண்டும். இப்போதைக்கு இதைத்தவிர வேறு வழியே இல்லை.

நினைவில் வையுங்கள். மத்திய அரசை அடிபணியச் செய்ய மக்கள் சக்தி அவசியம்.

பெரும்பாலான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையிலெடுத்தால் மட்டுமே அடிப்படையான சில நகர்வுகளாவது சாத்தியம். வெறும் வாய்க்கூச்சல் போடும் ஆயிரம் உணர்ச்சிகரப் பேச்சாளர்களை வைத்து திரும்பத்திரும்ப கூட்டங்கள் போட்டு கூடிக்கொண்டும் ராஜபட்சேவையும் கருணாநிதியையும் சோனியாவையும் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டும் ஒரு துரும்பு கூட அசையாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மிகப்பெரும் மக்கள் திரளை வைத்துள்ள இயக்கங்கள் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே.

இவர்கள் மட்டும்தான் இருபது சதவிகிதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை வைத்திருக்கும் மக்களைக்கொண்ட இயக்கங்கள். மற்றவை எல்லாம் ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்று என்ற சதவிகித  மக்கள் ஆதரவு கொண்ட இயக்கங்கள் மட்டும்தாம்.

அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆ,ர் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் எம்ஜிஆர் ஆதரவாக இருந்தாரே தவிர அந்த இயக்கமோ அல்லது அந்த இயக்கத்தொண்டர்களோ ஆதரவாக இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. இன்னமும் சொல்லப்போனால் தீவிரமான ஒரு அதிமுக தொண்டனுக்கு ஈழப்பிரச்சினை என்னவென்பதும் அதன் அடிநாதம் என்னவென்பதும் தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது.

ஆனால் திமுகவின் நிலைமை அப்படியல்ல;

திமுகவின் தொண்டன் என்பவன் ஒரு தீவிரமான உணர்வுமயமான மொழி ஆதரவாளன். கட்சியில் சேர்ந்த நாளிலிருந்தே தமிழ்மொழியின் காதலன் அவன். இலங்கை விவகாரத்தில்கூட ‘தலைவர் எதுக்கு இப்படி நடந்துக்கறார்?’ என்று தொண்ணூறு சதம் தொண்டன் மனதிற்குள்ளேயே புழுங்கித் தவித்தவன்தான். தங்கள் தலைவன் மேற்கொண்டிருக்கிற தவறான பாதையை வெளியில் சொல்லமுடியாமல் வேதனையில் தவித்தவன்தான் அவன். அதானால்தான் இன்றைக்கு டெசோ என்று கலைஞர் குரல் கொடுத்ததும் இருக்கிற வேலையை எல்லாம் போட்டுவிட்டுத் தெருவில் இறங்கி நிற்கிறான் அவன். இல்லையென்றால் இத்தனைக்கூட்டம் எங்கிருந்து வந்தது?

இலங்கை விவகாரத்தில் தலைவர்கள் தவறாக நடந்துகொண்டார்களே தவிர திமுகவின் தொண்டர்கள் தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
இங்கே இன்னொரு முக்கியமான கோணமும் உள்ளது. கலைஞர் தவறான முடிவை எடுத்து மத்திய அரசின் நடவடிக்கை எல்லாவற்றிற்கும் வாய்பேசாது மௌனியாக இருந்தாரே தவிர, இதுநாள்வரையிலும் ஈழத்தமிழர்களைப் பற்றியோ அந்தத் தமிழர்களுக்காகப் போராடிய போராளிகளைப் பற்றியோ தப்பித்தவறி ஒரு வார்த்தைக்கூடப் பேசாதவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் நண்பர்களே.

ஆனால் மற்றொரு பெரிய இயக்கமான அதிமுக அப்படி அல்ல; அதன் தலைவியான ஜெயலலிதா என்றைக்குமே ஈழம் பற்றியோ அதற்குப் போராடிய போராளிகளைப் பற்றியோ உயர்வான கருத்தையோ நல்ல கருத்தையோ கொண்டிருந்தவர் அல்ல; அவரை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆரால் போற்றப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, உதவிகள் புரிந்து பேணப்பட்ட பிரபாரன் மீது என்றைக்குமே நல்ல அபிப்பிராயத்தை அந்த அம்மையார் சொன்னதே இல்லை.

வாயைத் திறந்தாலேயே பிரபாகரனைப் பிடித்துவரவேண்டும்; கோர்ட்டிலே நிறுத்தவேண்டும்; தண்டனை தரவேண்டும்; தூக்கிலே போடவேண்டும் என்றுதான் பேசியிருக்கிறார். “ஸ்ரீலங்காவிலே நடைபெற்றுவரும் செயல்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தது……இந்தச் செயல்கள் அனைத்துமே இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக சம்பந்தம் உள்ளவை. இது குறித்துத் தமிழக மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள்.”

“நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்டிடியின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டுவந்து சேர்த்து ராஜிவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். 20-9-1991 அன்று பி.வி.நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய ராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். படுகொலையைப் புரிந்ததற்காக பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமென்று கோரியிருந்தேன். அதன்பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வற்புறுத்தினேன்.

அம்மையாரின் ஆவேசம் இன்னும் தொடர்கிறது. “தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது”

“என்னுடைய பெருமுயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இயக்கம் 14-5-1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.”

“எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவுப்பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன” (‘நமது எம்ஜிஆர்’ 3-10-2008)

“14-10-2008 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்த்தால் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி’ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது” (16-10-2008)
இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “போரை நிறுத்தவேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப்புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.”

இறுதிக்கட்ட போரின்போது அம்மையார் என்ன திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் பார்ப்போமா?

நிருபர் ; “ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?”

ஜெயலலிதா ; “அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில் அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இப்போது என்ன நடைபெறுகிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களைக் கேடயமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்”
ஆக, ஈழம் பற்றியும் ஈழப்பிரச்சினைப் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஈழப்போராளிகள் பற்றியும் ஜெயலலிதாவின் ‘நிரந்தர’ நிலைப்பாடு என்பது இதுதான்.
 
ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கித்தருவேன் என்றும் கச்சத்தீவை மீட்டுத்தருவேன் என்றும்  வீராவேசம் பேசியதெல்லாம் தேர்தலுக்காகத்தான் என்பதையும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். இலங்கை அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதும், கச்சத்தீவை மீட்டுத்தரவேண்டுமென்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதும் போதும் என்பதுபோல் பேசாமல் அமைந்துவிட்டார் அம்மையார்.

“இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று வாக்கு சேகரித்த சீமான்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

உள்ளத்தில் தமிழ் உணர்வு எதுவுமே இல்லாமல் எப்போதோ ஆட்சிக்கு வருவதற்காக இரண்டொரு கூட்டங்களில் மட்டும் ‘மெக்கானிகலாக’ தமிழ் உணர்வு பற்றிப் பேசும் ஒருவரையும், தமிழ் உணர்வாலேயே வளர்ந்துவிட்டு, தமிழ் உணர்வை லட்சோப லட்சம் இளைஞர்களின் மனதில் விதைத்துவிட்டு வேறு ஏதோ நிர்ப்பந்தங்களுக்காக இன்றைக்கு வாய்மூடி மௌனியாக இருந்து இப்போது மீண்டும் தமிழ் உணர்வைக் கையில் எடுத்திருக்கும் ஒருவரையும் தலைவராகக் கொண்ட இருவேறு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

ஆயிரம்தான் பேசினாலும் இந்த இரு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டின் அரசியலை நகர்த்தும் இயக்கங்களாக இருக்கின்றன. 

இவற்றில் ஒன்று தீவிரமாக களத்தில் இறங்கி செயலாற்றினால் மட்டுமே மத்திய அரசாங்கத்தை சில விஷயங்களிலாவது பணியவைக்க முடியும். 

காரணம் மக்கள் சக்தி. 

மக்கள் சக்திக்கு மட்டுமே அரசுகள் செவிமடுக்கும்.

இந்த இரு இயக்கங்களைத் தவிர்த்துவிட்டு தமிழ் உணர்வுபேசும் மற்ற இயக்கங்களையோ தமிழ்த் தலைவர்களையோ பார்த்தோமானால் எந்தத் தலைவரும் சொல்லிக்கொள்கிறமாதிரியான மக்கள்சக்தியைத் தமக்குப் பின்னால் கொண்டவர்கள் அல்ல; அதுவும் ஈழப்பிரச்சினையை எடுத்துக்கொண்டால் பழ.நெடுமாறனிலிருந்துதான் பட்டியல் ஆரம்பிக்கிறது. மற்ற தலைவர்களைக் காட்டிலும் ஈழத்தமிழர்களுக்காக இரவு பகல் பாராமல் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றிவரும் மூத்த தலைவர் இவர்தாம். ஈழத்தமிழர் ஆதரவுக்கூட்டமும் இளைஞர்கள் கூட்டமும் ஓரளவு இவர் பின்னே அணிதிரளுமே தவிர இவருக்கென்று தனியான கூட்டமெல்லாம் இல்லை. இவர் பின்னால் திரளும் கூட்டம்தான் வைகோவுக்கும் போகும். அதில் ஒரு பகுதிதான் சீமான் அழைத்தாலும் போகும்.

திருமா அழைத்தாலும் போகும் கூட்டமும் இது மட்டும்தான்.

திமுகவிலிருந்த தமிழ் உணர்வும் ஈழ ஆதரவு மனப்பான்மையும் கொண்ட பெருவாரியான இளைஞர்கள் ஈழ ஆதரவு விஷயத்தில் கலைஞர் எடுத்த தவறான முடிவுகள் காரணமாக அல்லது தீவிரமான ஆதரவு எடுக்கவில்லையென்பதனால்தான் வைகோ பின்னால் அணிதிரண்டார்களே தவிர வைகோ புதிய கொள்கைகளையும் புதிய சிந்தனைகளையும் அமைத்து இயக்கம் ஆரம்பித்தார் புதிய சமுதாயம் படைக்க இருந்தார் என்பதானால் எல்லாம் அவர்பின்னால் யாரும் சென்று சேரவில்லை.

சீமான் மிகவும் உணர்ச்சிவசமாகப் பேசக்கூடிய இளைய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். மிகப்பெரும் புரட்சி இவரால் நடைபெற இருக்கிறது என்பது போன்ற பிம்பம் இவர் அரசியல்கட்சி ஆரம்பித்ததும் கட்டமைக்கப்பட்டது. 

ஆனால் சிறிது நாட்களிலேயே அது கலகலத்துவிட்டது. 

பெரியார் தொண்டர்களுக்கும் இவருக்கும் நடைபெறும் கொள்கை விளக்கங்களிலேயே இளைஞர் கூட்டம் நாளுக்கு நாள் இவரைவிட்டு அகன்றுகொண்டிருக்கிறது.

வைகோ ஒருவர்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதுபோன்ற தோற்றம் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டாலும் அந்த நம்பிக்கையை உடனடியாகச் சிதற அடிக்கும் காரியத்தை வைகோவே கச்சிதமாக செய்துமுடித்துவிடுவார்.

ஒவ்வொரு பெரிய இயக்கங்களிலும் ஒவ்வொரு விஷயம் பற்றிப்பேச ஒவ்வொருவரை வைத்திருப்பார்கள். அப்படி ஈழம் பற்றிப் பேச திமுகவின் போர்வாளாக, கலைஞரின் போர்வாளாக நியமிக்கப்பட்டிருந்தவர் வைகோ. நாடாளுமன்றத்தில் ஈழம் பற்றிப்பேசவும், ஈழம் பற்றிய பல்வேறு கருத்தரங்குகளில் திமுகவின் ‘குரலைப்’ பேசவும் பரிந்துரைக்கப்பட்டவர், கட்சி சார்பாக அனுப்பிவைக்கப்பட்டவர் வைகோ. ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் இம்மாதிரியான செயல்பாடுகள் எங்கோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு நிலையில் இடறும். கட்சித்தலைமைக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் கருத்து வேறுபாடுகள் முளைக்கும். இனிமேலும் இந்தத் தலைமையின் கீழ் இந்த இயக்கத்துக்குக் கட்டுப்பட்டு நம்மால் செயல்பட முடியாது என்று தோன்றும். அப்போது வெளியேறிப்போய் இன்னொரு இயக்கத்தில் சேருவதோ அல்லது புதிய இயக்கம் ஆரம்பிப்பதோ நடைபெறும். அதுதான் வைகோ விஷயத்திலும் நடந்தது.
வைகோவின் செயல்பாடுகளை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருபவர்கள், அவர் பேச்சுக்களைத் தொடர்ந்து வருபவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறமாட்டார்கள். 

அது கலைஞர் வைகோவுக்குக் கொடுத்திருந்த இடமும் முக்கியத்துவமும்.

திமுகவில் அவ்வளவு வருடங்களுக்குத் தொடர்ந்து நியமன எம்பியாக யாரையும் கட்சி நியமித்தது இல்லை. தன்னுடைய தம்பிகளில் வைகோவுக்குத் தனியிடம் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். கட்சியை விட்டுப்போய் வேறுகட்சி அமைத்து எதிரணிக்குப் போய்விட்ட பின்னாலும் மறுபடி தம்மிடம் வந்தபோது அதே முக்கியத்துவத்தை அவருக்குத் தந்தார். இதே இலங்கைப் பிரச்சினைக்காக வைகோ சிறை படுத்தப்பட்டபோது வேலூருக்கு ஓடிச்சென்று சிறையில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தவர் அவர். 

இவற்றையெல்லாம் மக்கள் கவனத்தில் வைத்தபடிதான் இருக்கிறார்கள். 

இப்படிப்பட்டவருடன் வைகோ எப்படி நடந்துகொள்கிறார் என்பதையெல்லாம் ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு’ கவனிக்கிறார்கள். ‘நான் அவருக்காகத் தூங்காமல் ரயில் பயணம் செய்தேன்; அதிமுக அமைச்சர் கலைஞர் பயணம் செய்த ரயில் கோச்தான் தனக்கு ஒதுக்கப்படவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தபோது நான் தூங்காமல் அந்தப் பெட்டிக்கு வெளியே காவலிருந்தேன்’ என்பதெல்லாம் ஒரு பெரிய தலைவனுக்குச் செய்த ஒப்பற்ற தியாகம் என்று மக்கள் நினைக்கவேண்டும் என்று வைகோ நினைப்பது பரிதாபத்திற்குரியதுதான்.

இதுதான் மிகப்பெரிய தியாகம் என்று வைகோ நினைத்தாரென்றால் இதைவிடவும் பெரிய தியாகங்களை ‘இன்னோவா கார் புகழ்’ நாஞ்சில் சம்பத் வைகோவுக்குச் செய்திருக்கிறார் என்பதையும் அவருக்கு ஏன் உரிய முக்கியத்துவத்தை வைகோ தரவில்லை என்பதையும் சம்பத் இவரைவிட்டுவிட்டு ஏன் போனார் என்பதையும் மக்களுக்குச் சொல்லவேண்டிய நிலையில்தான் வைகோ இருக்கிறார்.

கலைஞர் மீதான மிக அதிகபட்ச முறைப்பையும் விறைப்பையும் சரி; பாதையோர ஒரு நிமிட விசாரணைக்காக ஜெயலலிதா மீதான மிக அதிக பட்சக் குழைவையும் பணிவையும் சரி மக்கள் ரசிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் நிலையில் வைகோ இருக்கிறாரா என்பதே சந்தேகத்துக்குரியது.

இதுமாதிரியான தலைவர்கள்தாம் நம்மைச் சுற்றிலும் இருக்க இந்திய அரசும் சரி இலங்கை அரசும் சரி தங்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை வைத்துத்தான் தங்களின் அடுத்தகட்ட நகர்வு பற்றித் தீர்மானிக்கிறார்கள்.

‘திரளான மக்களிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் வரவில்லையா? 
 தொடர்ந்து செய்; மக்கள் பெருவாரியாக எதிர்க்கிறார்களா? நிறுத்திவிடு’ என்பதுதான் அரசுகள் செயல்படும் முறை.

மத்திய அரசுக்கும் சரி இலங்கை அரசுக்கும் சரி மண்டபக்கூட்டங்கள், எரிதழல் அறிக்கைகள், ‘ஏ ராஜபட்சே எங்களிடமிருந்து நீ தப்பிக்கமுடியாது; நாங்கள் ஒன்றுதிரண்டால் என்ன ஆகும் தெரியுமா?’ என்பது போன்ற வாய்ச்சவடால்கள் எல்லாம் எந்தவித துரும்பையும் அசைக்காது என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். 

மிகப்பெரும் மக்கள் சக்தியைக்கொண்ட எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களும், அரசியல் ரீதியான அணுகுமுறைகளும், நிர்வாக ரீதியான காய் நகர்த்தல்களும்தாம் ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்ல உதவும்.

ஐநா சபையிலும், மனித உரிமைக் கழகத்திலும் அதன் தீர்மானங்களை நேரில் ஒப்படைத்தது, வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று அவற்றின் தூதர்களைச் சந்தித்து பிரச்சினை என்ன என்பதை எடுத்துச்சொல்லி விளக்கம் அளித்தது, நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து இதுபற்றிப் பேசுமாறு கேட்டுக்கொண்டது என்று சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது டெசோ.

இம்மாதிரியான காரியங்களையெல்லாம் சிறு கட்சிகளோ சிறு குழுக்களோ அதன் தலைவர்களோ செய்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சிறு குழுக்களின் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக தூதரகங்களுக்குள் சென்று வெளிநாட்டுத் தூதுவர்களையெல்லாம் சந்தித்துத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திவிட்டெல்லாம் வரமுடியாது.

ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ஈழம் தொடர்பாகப் பேசியிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான குழு.

இதை இவ்வளவு நாட்கள் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி வருமானால் நிச்சயம் அந்தக் கேள்விக்கு பதிலில்லை. இப்போதாவது செய்கிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

டெசோவின் இந்தச் செயல்கள் எல்லாம் கலைஞர் நடத்தும் ‘போலிநாடகம்’ என்றிருக்கிறார் வைகோ. ஏறக்குறைய இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்கள் பழ.நெடுமாறனும் சீமானும்.

இருந்துவிட்டுப் போகட்டுமே, உங்களின் ‘நிஜநாடகங்களில்’ நடைபெறாத ஒன்று இவரின் ‘போலி நாடகத்தால்’ நடைபெறுகிறது என்றால் நடந்துவிட்டுப் போகட்டுமே.

உள்ளூர் அரசியலுக்காக, இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக இங்கே குளறுபடிகள் செய்து ‘எந்த விஷயத்திலும் நாங்கள் ஒன்றுபட மாட்டோம்’ என்பதை உலகுக்கு உணர்த்தினால் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
  
இத்தனைச் செய்தும் மத்திய அரசாங்கத்தின் பதில் சாதகமாக இல்லை. இதனைக் கலைஞரும் உணர்ந்திருக்கிறார். வழக்கம்போல் அடிபணிந்து
இருந்துவிடப்போவதில்லை என்பது அவர் அறிவித்திருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. ‘காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப்பிரச்சினையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைகளை எடுத்து ஒருவது கவலை தருவதாக உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐநா அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை. ஆனால் அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்துகொண்ட குலாம்நபி ஆசாத் “அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்போம்” என்பதாக உரையாற்றினார். ஆனால் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் எந்த உறுதியும் வழங்காமல் தமிழ் ஈழத்தலைவர்களோடு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினை தொடர்ந்து மவுனமாகப் பார்த்துக்கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது என்பதை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். எனவே இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலை நிறுத்தம் நடைபெற்றே தீரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வைகோவும் சீமானும் பழ.நெடுமாறன் ஐயாவும் என்ன செய்யப்போகிறார்கள்?

மக்கள் திரள் அதிகரிக்கும்போது அதில் இணைந்துகொள்ளப்போகிறார்களா, அல்லது குறுக்குசால் ஓட்டப்போகிறார்களா அல்லது ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலையெடுத்து அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதனைச் செய்யப்போகிறார்களா, அல்லது பேசாமல் இருந்துவிடப்போகிறார்களா என்பது இந்த நேரத்தின் மிக முக்கியமான கேள்வி.

இதற்கு முந்தைய கட்டம் எப்படியோ கலைஞரின் இன்றைய நிலைப்பாடுகள் சரியானவையாகத்தான் இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சரியான திசையில் பயணம் செய்ய அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

அவர் இப்படி அப்படி நழுவிவிடாமல் தமிழர்களுக்காகப் பாடுபடவேண்டிய அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் அவருக்குத் தரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுதான் சரியான வழிமுறையாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தமுறை இவ்வளவு தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தபின்னர் வேறு காரணங்களுக்காக அதிலிருந்து மாறுவார் என்று சொல்வதற்கில்லை.

அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது!

இந்த நேரத்தில் உள்ளடி வேலைகள் செய்து அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் அப்படித் தடுப்பவர்களையும் தமிழ்ச்சமுதாயம் மன்னிக்காது.

Sunday, February 24, 2013

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்






பாலகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்திகள் எல்லாரையும் உலுக்கி எடுத்திருக்கிறது. ஈழம் உட்பட எல்லா விஷயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு சிங்கள அரசாங்கத்தையும் அவர்களுக்கு எல்லா விதங்களிலும் உதவி புரிந்த இந்திய அரசாங்கத்தையும் ஆதரித்துவந்தவர்கள் கூட இந்தப் பச்சைபடுகொலையைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கின்றனர். சில பேர் நமக்கேன் வம்பு கொஞ்ச நாட்களுக்கு வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவோமே என்று கள்ள மவுனம் சாதித்துவருகின்றனர்.

நம்முடைய அரசியல் தலைவர்கள் எல்லாரும் கொதித்துக் குமுறியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்’ என்றிருக்கிறார். ‘பாலச்சந்திரனுக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. அவன் ஒரு குழந்தை. அந்தக் குழந்தை எந்தவிதக் குற்றமும் புரியவில்லை. பிரபாகரனின்  மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அந்தக் குழந்தையைச் சுட்டுத்தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்த ஆதாரங்களையும் இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மையும் மனப்பான்மையும் எண்ணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் பார்க்கும்போது முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி ஞாபகம்தான் வருகிறது.’ என்பவர், இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை வாங்கித்தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி “பாலச்சந்திரன் என்ற இளம்தளிரை துப்பாக்கிக் குண்டுகளால் கருகச்செய்த கோர நிகழ்ச்சியைக் காணும்போது கொடுமை கொடுமை இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காணமுடியாது. உலகத்திலே உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட கொடூரமான கொலை செய்யப்பட்டதற்கான குறிப்பே இல்லை. மணல் சாக்குகளின் மத்தியிலே பிணைக்கைதியாக அந்தச் சிறுவனை அடைப்பதற்கே கல் நெஞ்சம் வேண்டும். அந்தப் பச்சிளம் பாலகன் என்ன பாவம் செய்தான்? அந்த இளைஞனை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவதற்கு எத்தகைய நெருப்பு நெஞ்சம் வேண்டும்? பாலச்சந்திரனின் மூத்த சகோதரனைப் போர்க்களத்திலே கொன்றழித்த மாபாவிகள் பாலச்சந்திரனை நிராயுதபாணியாக நிற்கவைத்து மூன்றடி தூரத்தில் இருந்தவாறு சுட்டுக்கொலை செய்திருக்கிறார்கள். இதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்?’ என்று குமுறித்தள்ளியிருக்கிறார்.

வைகோ இப்படிக் கொதிக்கிறார். “நம் போற்றுதலுக்குரிய தேசியத்தலைவர் பிரபாகரினின் இளையபுதல்வன் 12 வயதான பாலகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் அச்சின்னஞ்சிறு பாலகனையும் 5 குண்டுகளைச் சுட்டுக் கொலைசெய்த கொடுமை கோடானுகோடித் தமிழர்களை மனம் பதறச் செய்து உலகில் தமிழனுக்கு நாதி இல்லையா என்ற கேள்வியை எழுப்பிவிட்டது” என்றிருக்கிறார்.

தொல்.திருமாவளவன் “12 வயது பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் சிறைபடுத்தப்பட்டு பிஸ்கெட் போன்ற பொருட்களைக் கொடுத்து பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை மூலம் தெரிய வருகிறது. இது ஒன்றே சிங்கள இனவெறி அரசாங்கத்தின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு போதுமான ஆதாரமாகும். எனவே போர்க்குற்றம் குறித்து சர்வதேச சுயேச்சையான விசாரணை வேண்டும்” என்று கொதித்திருக்கிறார்.

விஜயகாந்த் “12 வயதே நிரம்பிய பால்வடியும் முகம் மாறாத பாலச்சந்திரன் சிங்களராணுவத்தால் கொல்லப்படுவதற்கு சில வினாடிகள் முன்பு எடுக்கப்பட்டு இருக்கின்ற புகைப்படத்தையும் சடலமாக இருக்கின்ற புகைப்படத்தையும் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். உலகம் தெரியாத அப்பாவி குழந்தையாக சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிலவறையில் பசிக்கு ருசி அறியாது என்பதுபோல் கைக்கு கிடைத்ததை சாப்பிட்டுக்கொண்டு நல்ல நிலையில் இருக்கும் குழந்தை சற்று நேரத்தில் ஐந்து குண்டுகள் பாய்ந்து சடலமாக கிடக்கின்ற காட்சி காண்போரைக் கண்கலங்க வைக்கிறது. ……இலங்கை மண்ணிலே பிறந்த சிறுவனை அந்நாட்டு அரசே கொடூரமாக படுகொலை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசு எப்பொழுதும் போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது செயல்பட வேண்டும்” என்றிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் “பன்னிரண்டே வயதான அந்தச் சிறுவனை நேருக்குநேர் நிறுத்தி மிக அருகில் நின்று துப்பாக்கியால் சுட்டு அவன் நெஞ்சைத் துளைத்துக்கொன்றுள்ளது சிங்கள இனவெறி ராணுவம். இது போர்க்குற்றம் அல்ல இந்தப் போரே குற்றம் என்பதை சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றிருக்கிறார்.

மருத்துவர் ராமதாசும் இதே போன்று தமது வருத்தத்தையும் குமுறலையும் தெரிவித்திருக்கிறார்.

கவிதை நெஞ்சம் குமுறுவதை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார், “பாலச்சந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும்போது இருதயம் ஒருகணம் நின்றுவிட்டது. 
 என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது. பால்வடியும் முகம், பளபளக்கும் மேனி, கனவுகளின் ஈரம் காயாத கண்கள் மிருகம்கூட அவனைக்கண்டு ஒதுங்கிப்போயிருக்குமே. எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ இதயமற்ற இலங்கை ராணுவத்திற்கு? மரணம் நிகழும்போது என்னதான் நினைத்திருக்குமோ அந்த கொலைக்களத்துக் குலக்கொழுந்து? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக்கிறான்.

வாழைத்தண்டு மார்பில் வடுக்களாகப் பதிந்திருக்கின்றன துளைத்துப்போன தோட்டாக்கள். கண்கள் என்ற உறுப்பைக் கொண்டதற்காக நான் முதன்முதலில் துக்கப்பட்டேன். ஒரு பிள்ளையைக் கொல்லவா பீரங்கி? ஓர் அரும்பை உடைக்கவா அணுகுண்டு?......................ராஜபட்சே கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப்போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப்போகிறார்கள்? பால்முகம் மாறாத பாலகனே! பாலச்சந்திரனே! அபிமன்யுபோல அஞ்சாமல் களப்பலி ஆனவனே! அழுகிறோம். சாவை மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து சிந்திய ரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து” என்று கண்ணீரைக் கொட்டியிருக்கிறார் அவர்.

இந்த அளவுக்குத் தாக்கத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்று பார்த்தோமானால் நேற்றைக்கு அல்ல, முந்தாநாளோ அதற்கு முந்தின நாளோ நடைபெற்றது அல்ல; போன வாரம் நடைபெறவில்லை. நடைபெற்று ஏறக்குறைய நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. 2009-ம் வருடம் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெற்று உலகையே குலுக்கிப்போட்டிருக்கவேண்டிய சம்பவம் இது. அப்படி எதுவும் அப்போது நடைபெறாமல் இப்போது ‘லேசான குலுக்கல்களுக்காக’ எப்படியோ யாராலோ பந்தி வைக்கப்பட்டிருக்கும் சம்பவமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

பிரபாகரனின் பச்சிளம் பாலகனான இந்தக் குழந்தை பரிதாபமாக செத்துக்கிடக்கும் இந்தப் படங்களும் புதியவை அல்ல; இணையதளங்களில் வலம் வருகிறவர்களுக்கு இந்தப் படம் மிகப்பழைய ஒரு படமே. சில பத்திரிகைகளில் குறிப்பாகச் சொல்லப்போனால் நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட படங்கள்தாம் இவை.

அப்போதெல்லாம் ஏற்படுத்தாத தாக்கத்தை நம்முடைய தலைவர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் இந்தப் படங்கள் இப்போது ஏன் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் கேள்விக்குரியது. 

அந்தப் படங்களுடைய பின்னணி பற்றியும் உண்மைத்தன்மை பற்றியும் சாதாரணர்களான நமக்குத் தெரியாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. குப்பனுக்கும் சுப்பனுக்கும், ராமசாமிக்கும் நாகசாமிக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். கருத்துத் தெரிவித்திருக்கிற ஆட்சியாளர்கள், பெரியவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்குக் கூடவா அந்தப் படங்களைப் பற்றிய தகவல்களும் பின்னணிகளும் உண்மைத்தன்மைகளும் தெரியாமல் போய்விட்டன? அப்போதெல்லாம் ஒரு சிறிய முனகலைக்கூடத் தெரிவிக்காதவர்கள் இப்போது புரண்டு புரண்டு அழுவதும் புலம்புவதும் கங்கையையும் காவிரியையும் இணைத்த அளவுக்குக் கண்ணீர் வடிப்பதும் ஓலமிடுவதும் ஒப்பாரி வைப்பதும் புதிராக இருக்கிறது.

அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதியின் பார்வைக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய செய்திகளும் அப்போதே வரவில்லையா? ஸ்டாலினுக்கு, பேராசிரியர் அன்பழகனுக்கு அப்போதே தெரியாதா?


ஹிட்லர் ஆட்சியை நினைவு படுத்துவதாக’ இப்போது குமுறும் ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்போதே இந்தப் படங்கள் தென்படவில்லையா?

நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் ராமதாஸுக்கும் தொல்.திருமாவுக்கும் சீமானுக்கும் புத்தம் புதிய செய்திகளா இந்தப் படங்களும் இவைபற்றிய தகவல்களும்?

தன்னுடைய சமூகத் தொடர்புகளை ஈழ விடுதலைப் போராளிகளுடன் ஆரம்பித்த விஜயகாந்துக்கு இந்த விஷயம் வரவே இல்லையா?

‘காலையில் தினமும் கண்விழித்தெழுவதற்கு முன்பேயே தொலைபேசியில் என்னை அழைக்கும் கரகரக் குரல் கலைஞருடையது’ என்றெல்லாம் சொந்தம் கொண்டாடி எந்நேரமும் ஆட்சியாளர்கள் வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த கவிஞர் வைரமுத்துவுக்கு இந்தப் படங்களும் இவை பற்றிய தகவல்களும் இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கக் கிடைத்தனவா?

என்ன சொல்லுகிறார்கள் இவர்கள். என்ன செய்ய முயலுகிறார்கள்?

ஒன்றும் புரியவில்லை.

அப்போதே இந்தப் படங்கள் பார்க்கக் கிடைத்திருந்தபோதிலும் அவைபற்றிய உண்மைத்தகவல்கள் தெரியாமல் இருந்து இப்போது சேனல்4 தொலைக்காட்சி ‘உறுதிசெய்தபிற்பாடுதான்’ இவர்களுக்கு உணர்வுவந்து கொதித்து எழுந்திருக்கிறார்களா?

அல்லது இந்து பத்திரிகை தெரிவித்திருப்பதனால்தான் இவர்களின் ‘சந்தேகம்’ போக்கப்பட்டதா?

ஏற்கெனவே மூன்றுமுறையோ நான்கு முறையோ பிரபாகரனைக் கொன்றுவிட்டு ஒருமுறை Funeral today என்று வெளியிட்ட பத்திரிகைதானே இந்து? அப்புறம் ‘இந்தமுறை மட்டும்’ எப்படி இந்துவின் மீது நம்பிக்கை வந்தது?

இந்து பத்திரிகையை விடுவோம். நம்முடைய புலனாய்வு பத்திரிகைகள் எல்லாம் இத்தனை நாட்களும் என்ன செய்துகொண்டிருந்தன? தமிழில் வரும் புலனாய்வு பத்திரிகைகள் என்ன அவ்வளவு சாதாரணமானவையா?

மதுரையிலிருந்து கோபத்துடன் கோபாலபுரம் வீட்டிற்கு வரும் அழகிரி வீட்டுக்குள்போய் தனியறையில் தயாளுஅம்மாளிடம் என்ன பேசினார் எப்படிக் குமுறினார் என்பதையெல்லாம் அடுத்தவாரமே வெளிக்கொண்டுவந்துவிடுவதில்லையா நம் பத்திரிகைகள்?

கோபித்துக் கொண்டிருந்த நாட்களில் ஜெயலலிதா சசிகலாவை போயஸ்கார்டனுக்கு வரவழைத்து தனியறைக்குக் கூட்டிச்சென்று எப்படியெல்லாம் பேசினார் இருவரும் என்னென்ன பேசிக்கொண்டார்கள் ஜெயலலிதா எங்கெங்கே குரலை உயர்த்தினார் சசிகலா எங்கெல்லாம் அழுதார் அப்புறம் எப்படி சமாதானத்துக்கு வந்தார்கள் என்பதையெல்லாம் விலாவாரியாகப் புட்டுப்புட்டு வைப்பதில்லையா நம் பத்திரிகைகள்?

தினத்தந்தி என்ன அவ்வளவு சாதாரணப் பத்திரிகையா? தமிழகத்தின் எங்கேயோ மூலையில் முட்டுச்சந்தில் நடைபெறும் கள்ளக்காதல் விவகாரங்களையெல்லாம் ஒன்றுவிடாமல், ஒருவரி விடாமல் பிடித்துக்கொண்டு வருவதில்லையா?

இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு இவ்வளவு பெரிய அரசியல் நிகழ்வுகளில் நடப்பது என்ன என்பதை வெளிக்கொண்டுவருவது அவ்வளவு சிரமமா என்ன?

பின்னே எதற்காக எல்லாரும் சேனல்4 என்ன சொல்கிறது என்பதற்காகக் காத்திருக்கிறார்கள்?
இனிமேல் சேனல்4 என்ன சொல்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் இங்கே அரசியல் நிகழ்வுகள் தீர்மானிக்கப்படவிருக்கின்றதா?

எங்கேயோ கண்காணாத தேசத்தில் இருக்கும் ஒரு புலனாய்வு ஊடகத்துக்கு இருக்கும் பொறுப்பும் திறமையும் நம்முடைய ஊடகங்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லையா?

புரியவில்லை!

இந்தப் பதிவைப் படிக்கும் சில நண்பர்கள் உடனடியாக வந்து கருணாநிதி மீது மட்டும் சொல்லக்கூசும் வார்த்தைகளைப் போட்டுத் திட்டித்தீர்த்துவிட்டு விலகிவிடுவார்கள்.

கருணாநிதி தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. நடைபெற்ற அவ்வளவு தவறுகளுக்கும் அவரை மட்டுமே குற்றம் சாட்டிவிட்டு மற்றவர்களெல்லாம் தப்பித்துவிடும் கைங்கரியத்துக்குத் துணை போய்விடாதீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அவர் ஆட்சியில் இருந்தார் என்பதனாலும் தமிழர்களின் ஒரே இனமானத் தலைவராக அவரை மட்டுமே இந்தத் தமிழ் சமூகம் நினைத்தது என்பதாலும் அவர் எப்படியாவது இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்திவிடுவார் என்ற நினைப்பு கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இருந்தது என்பதாலும் அவ்வளவு நம்பிக்கையிலும் மண்ணைக்கொட்டிச் சிதறடித்துவிட்டார் என்பதாலும் அவர் மீது ஆற்றமுடியாத கோபம் இருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈழப்படுகொலைகள் நடந்த காலகட்டங்களில் கருணாநிதியைத்தவிர நாட்டில் இருந்த – குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் இருந்த மற்ற தலைவர்களின் பங்கு என்ன பொறுப்பு என்ன அவர்கள் ஆற்றிய கடமைகள் என்ன என்பதையெல்லாம் பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கருணாநிதி ஒரு தலைவனே இல்லை என்றெல்லாம் கூப்பாடு போடுவதெல்லாம் சரிதான். அவர் குடும்பத்தை மட்டுமே கவனிக்கிறார், மற்ற எல்லா விஷயங்களிலும் கபட நாடகங்கள் மட்டுமே ஆடுகிறார் என்று சொல்வதெல்லாம் சரிதான்………

அவர் இல்லையென்றால் உடனடியாக அவருக்கு மாற்றாக இன்னொருவரைத் தேர்வு செய்கிறோமல்லவா அந்த ‘இன்னொருவர்’ அல்லது அதற்கு ‘மாற்றானவர்கள்’ ஆற்றிய கடமை என்ன என்பது முக்கியமில்லையா? அவர்கள் என்ன பங்கு பெற்றார்கள், எப்படியெல்லாம் காய் நகர்த்தினார்கள் எப்படியெல்லாம் ஈழப்போராட்டங்களைக் கொண்டு சென்றார்கள் என்பதெல்லாம் விவாதத்திற்கு வரவேண்டாமா?

இந்த நாட்டின் அரசியல் அமைப்பு என்பது எப்படி இருக்கிறது? ஆட்சி அதிகாரம் எல்லாம் ஒருபுறம் இருக்க அந்த ஆட்சி அதிகாரத்தைத் தட்டிக்கேட்கும் மற்ற எதிர்கட்சிகளின்- எதிர்க்கட்சித்தலைவர்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன, என்பதெல்லாம் கணக்கில் வரவேண்டுமா வேண்டாமா?

ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் எதிர்ப்பரசியலும் மக்களைத்திரட்டி அரசுக்கெதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராடுவதும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரின்- தலைவர்களின் பொறுப்பா இல்லையா?

அதனைத் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைப்பேரும் செய்திருக்கிறார்களா?
இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பதற்காக எல்லா எம்பிக்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்று கருணாநிதி அறிவித்ததற்கேற்ப ராஜினாமா செய்ய எல்லாக்கட்சி எம்பிக்களும் முன்வந்தார்களா?

திமுக எம்பிக்கள் வெறும் ‘அவரிடம்’ மட்டுமே ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து நாடகமாட மற்ற எல்லாக்கட்சி எம்பிக்களும் அதுமாதிரியான நாடகத்தைக்கூட ஆடாமல் எங்கேயோ போய்ப் பதுங்கிக்கொண்டார்களா இல்லையா?

கருணாநிதி இலங்கை விவகாரத்தில் இன்னின்ன மாதிரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அவருக்கு அரசியல்ரீதியான அழுத்தம் என்னென்ன கொடுக்கப்பட்டது?

எப்படியெல்லாம் கொடுக்கப்பட்டது?

வேறுமாதிரியான சிந்தனையே அவருக்கு எழாதவண்ணம் அவரைத் தங்கள் போக்கிலேயே இழுத்துக்கொண்டு செல்லலாம் என்ற அளவிற்கு எதிர்க்கட்சிகளோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர்களோ அவருக்கு என்ன அழுத்தத்தைக் கொடுத்தனர்?

என்ன மாதிரியான போராட்டத்தை அவருக்கு எதிராக நடத்தினர்?

எல்லாருமே வாய்மூடி கள்ள மவுனம் சாதித்துக்கொண்டிருந்துவிட்டு அங்கே ஒரு பேரழிவு நடைபெற்று முடிந்தபின்னர் எல்லாரும் சேர்ந்து அவருக்கெதிராக மட்டுமே குற்றச்சாட்டு வீசிக்கொண்டிருந்தால் எப்படி?

மற்ற மாநிலங்களில் எல்லாம் இதுவா நடைபெறுகிறது? பொதுவான விஷயங்கள் என்று வரும்போது எல்லாக்கட்சிகளும் ஒருமித்த குரலில்தாம் போராடுகின்றன. எல்லா விஷயங்களிலும் ‘ஒற்றைமுடிவுகள்தாம்’ மேற்கொள்ளப்படுகின்றன. எல்லா விஷயங்களிலும் எல்லாக்கட்சிகளும் ஒரே அணியில் நின்றுதான் போராடுகின்றன.

அதெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?

இருக்கவேண்டுமா இல்லையா?

வெறும் கருணாநிதியை மட்டும் திட்டித்தீர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு உட்கார்ந்துகொண்டிருந்தால் எப்படி?

மற்ற விஷயங்கள் போகட்டும். ஈழ விவகாரம் என்பது மக்கள்இனம் நேரடியாக கொத்துக்கொத்தாக செத்துப்போகின்ற விளிம்பில் நின்றுகொண்டிருந்த விவகாரம். இதில்கூட அத்தனைக்கட்சிகளும் – அழுத்தம் கொடுத்துப் படியுங்கள், அத்தனைக் கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் நின்றுகொண்டிருந்துவிட்டு எல்லாம் முடிந்துபோனதும் ‘ஒரேயொருவர்மீது’ மட்டும் அத்தனைப் பழியையும் போட்டுவிட்டுத் தாங்கள் தப்பிக்க நினைத்தால் எப்படி?

இதையே வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம். அங்கே யார் புண்ணியத்திலோ அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இனப்படுகொலை எதுவும் நடைபெறாமல் நின்று போயிருந்தது என்று வைத்துக்கொள்வோம். ‘என்னால்தான் நின்றது’ ‘நான்தான் பிரதமரிடம் பேசி நிற்கவைத்தேன்’ ‘எங்கள் கட்சிதான் இதற்கான தீர்வை முன்வைத்தது’ என்று எத்தனைப்பேர் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள் தெரியுமா?


இன்னமும் எத்தனைப்பேர் வேறுமாதிரியான பாட்டுப் பாடியிருப்பார்கள் தெரியுமா? ‘தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வாய்ப்பை கருணாநிதிதான் கெடுத்துவிட்டார். ராஜிவ் கொலையாளிகளைத் தப்பிக்கவைத்தது கருணாநிதிதான். அந்தக் கொலையாளிகளைப் பிடித்துவந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். அதற்கான தண்டனையை அவர்களுக்கு மட்டுமில்ல கருணாநிதிக்கும் கொடுக்கப்படவேண்டும்’ – சொல்லியிருப்பார்களா இல்லையா?

அதனால் இம்மாதிரியான விவகாரங்களில் எல்லாம் நாம் நம்முடைய சிந்தனைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியவர்களாக இருக்கிறோம். தங்களுக்கான கடமைகளில் தவறிவிட்டு அதனை வேறொருவர் மீது மட்டுமே போட்டுவிட்டுத் தப்பிக்க நினைக்கும் தலைவர்களையும் கொஞ்சம் அடையாளம் கண்டுகொள்வோம்.
இது தொடர்பாக ஒரு பிரபல கவிஞர் சொன்னதை மறந்துவிடக்கூடாது. “ஈழ விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அத்தனைத் தலைவர்களின் கரங்களிலும் ரத்தக்கறை படிந்துதான் இருக்கிறது!”
எல்லாத் தலைவர்களுமே தங்கள் கரங்களை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இப்போது இந்தப் பாலகனின் படுகொலை விஷயத்திற்கு வருவோம்!

தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் இப்போதுதான் தகவல் கேள்விப்பட்டதுபோல் இப்படிக் கூப்பாடு போடுகிறார்களே என்ன நடந்துவிடப்போகிறது?

எல்லா இடங்களிலும் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி எந்த இடத்தில் தேவையான விளைவுகளையும் மாறுதல்களையும் ஏற்படுத்தவேண்டுமோ அந்த இடத்தில் துளியேனும் மாறுதலையோ சின்னஞ்சிறு அசைவையோகூட ஏற்படுத்தவில்லை என்பதுதான் கொடுமையான விஷயம்.

இந்திய அரசாங்கத்தின் கண்களைத் திறந்து வெளியுறவுக் கொள்கைகளில் சிறிய அளவிலேனும் தங்கள் பார்வையை இந்த அரசாங்கம் மாற்றிக்கொள்ளும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது மட்டுமல்ல அதற்கான அவசியம் எதுவும் இல்லை என்பது போன்ற அவர்களுடைய அறிவிப்புதான் தமிழ் இனத்தை மீண்டும் மீண்டும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திப் பழிவாங்கும் போக்காகவே இருந்துவருகிறது.

இதோ, “இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல; பாதிதான் உண்மை. மீதி சித்தரிக்கப்பட்டவை. உலக அரங்கில் ஸ்ரீலங்காவைக் குற்றவாளியாகக் காட்டவேண்டும் என்பதற்காக எதிரிகள் சித்தரித்திருப்பவை” என்று எவனோ ஒரு ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அமைச்சர் சொல்லிவிட்டான்.

உடனே அதனை அப்படியே அடிபணிந்து நம் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் “அந்தப் படங்களின் உண்மைத்தன்மை பற்றி விசாரிக்கவேண்டியிருக்கிறது. அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை” என்று சொல்லிவிட்டார்.

அப்புறம் என்ன? தூக்கிக் கடாசிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதானே!

நம்முடைய அரசியல்தலைவர்கள் வாய்ப்பந்தல் போடுவதற்கு இன்னொரு ஈழத்தமிழரின் துயரம் தோய்ந்த இன்னொரு விவகாரம் வெளிச்சத்திற்கு வராமலா போய்விடும்?

கண்ணதாசன் எத்தனைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறான்-
‘ஒண்ணுமே புரியலே உலகத்துலே
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்துலே!’