Sunday, September 15, 2013

சோவும் இசையமைப்பாளர் எம்எஸ்வியும்




சோவைப் பொறுத்தவரை அவருடைய அரசியல், மொழி, இலக்கியம், இனம், சமூக நலன், இட ஒதுக்கீடு சார்ந்த கருத்துக்களில் நமக்கு உடன்பாடு இல்லையே தவிர வேறு பல்வேறு விஷயங்கள் சார்ந்த கருத்துக்களில் உடன்பாடு உண்டு. பொதுவாக சினிமாவைப் பற்றிய அவரது பல்வேறு கருத்துக்கள் ஒப்புக்கொள்ளுகிற மாதிரிதான் இருக்கும்.

அவரது பழகும் சுபாவம் ஒரு ஆச்சரியம். அவருடைய கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் நேர் விரோதமான கொள்கை கொண்டவர்களுடனும் அதுபற்றிய எந்தவித விரோதமும் பாராட்டாமல் அவர் பாட்டுக்குக் கலகலப்பாகப் பழகுவார். எவ்வளவு தீவிரமான கருத்தோட்டம் கொண்டவர்களுடனும் ‘தன்னுடைய கருத்துக்கு ஒத்துவராதவராயிற்றே இவர், இவரிடம் எப்படிப் பேசுவது?’ என்பது போன்ற சங்கோஜங்கள் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த விஷயம் வேண்டுமானாலும் அவரிடம் பேச முடியும். தமக்குப் பிடிக்கவில்லையென்றால் தமது கருத்தை முகத்திலடித்தமாதிரி சொல்லிவிடுவார். நாம் மறுத்துப் பேசினால் அவரும் விவாதிப்பாரே தவிர அதற்காக நம்மீது விரோதம் பாராட்ட மாட்டார். இத்தகைய சுபாவம் கொண்டவராக இருப்பதனால்தான் அவரால் பொதுவாழ்க்கையில் ஐம்பது வருடங்கள் தாண்டியபிறகும் இன்னமும் நிலைத்து நிற்க முடிகிறது. ‘பார்மகளே பார்’ படம் வந்ததிலிருந்து இதுவரைக்கும் புகழுடன் இருக்க முடிகிறது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்தபோதிலும் இன்னமும் அரசியல் பத்திரிகையான துக்ளக்கைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்க முடிகிறது.

தலைவர் காமராஜர் போன்றவர்கள் எல்லாம் ஒரு மனிதரை அருகில் சேர்க்கிறார்கள் என்றால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. ஒரே பார்வையிலேயே ஒரு மனிதரை எடைபோட்டுவிடும் வல்லமை காமராஜருக்கு உண்டு. காமராஜருடன் மிக நெருங்கிய நட்பைப் பேணியவர் சோ. இதே கருத்தை மொரார்ஜி விஷயத்திலும் சொல்லலாம்.

திரையுலகில் சிவாஜியுடனும் எம்ஜிஆருடனும் ஒரே சமயத்தில் சோவால் பழக முடிந்தது. இருவருடனும் சேர்ந்து படங்களில் நடிக்க முடிந்தது. இருவருக்கும் எதிரான கருத்துக்களை அவர்களிடமே பேசிக்கொண்டு, அவர்கள் சார்ந்த கட்சிகளை அவர்களிடமே கிண்டல் செய்துகொண்டெல்லாம் இருந்தவர் சோ. இருவரும் இவரது பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிரித்துவிட்டு விட்டுவிடுவார்கள். எம்ஜிஆர் மட்டும்தான் கட்சி தொடங்கிய சமயத்தில் இவர் கருத்துக்களுக்காக இவர் மீது கோபம் கொண்டவர். ஆனாலும் அது அரசியல் சார்ந்த ஒன்றே தவிர தனிப்பட்ட முறையில் எப்போதும் போல அதே நட்புடன்தான் எம்ஜிஆருடனும் பழகி வந்திருக்கிறார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மிகமிக முரட்டுத்தனமான வாதங்களை வைக்கக்கூடியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரிடமும் நெருங்கிய நட்புடன் இருப்பவர் சோ. ஜெயகாந்தனைத் தமது பத்திரிகையில் தொடர்ந்து எழுதச்செய்தவர். சுஜாதா உச்சத்தில் இருந்தபோது “சுஜாதா எழுத்துக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை சோவிடம் கேட்டேன்.

“ஒண்ணு சொல்லட்டுமா? இப்போ எல்லாப் பத்திரிகைகளிலும் பிரபலமா எழுதிட்டிருக்கவர் சுஜாதா. அவர் எப்படி எழுதுகிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவருடைய சில எழுத்துக்களைப் படிச்சிருக்கேனே தவிர தொடர்ந்து படிப்பதில்லை. இவர்னு இல்லை. எந்த எழுத்தாளருடைய எழுத்தையுமே முழுமையாகப் படிப்பதில்லை. இதை ஒரு குறைன்னு நினைச்சா நினைச்சுக்கங்க. அதான் என்னுடைய சுபாவம். இப்பவும் எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் கல்கிதான். படிக்கணும்னு தோணுச்சின்னா என்னுடைய டேஸ்ட்டே வேற. நான் பாட்டுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசங்க பக்கம் போயிருவேன். நவீன எழுத்துக்கள் என்னைக் கவர்வதில்லை. ஜெயகாந்தன் பூராவும் படிச்சிருக்கேன். அகிலன் நாபா எல்லாம்கூடப் படிச்சிருக்கேன். பாரதி, கண்ணதாசன் படிச்சிருக்கேன். கண்ணதாசனை ரொம்பவும் பிடிக்கும். உரைநடைன்னு பார்த்தால் கல்கிதான். இப்பவும் தோணுச்சின்னா பொன்னியின் செல்வன் வேணும்னா படிக்க ஆரம்பிச்சிருவேன்” என்றார்.

சோவின் தீவிரமான அரசியல் கருத்துக்களில் பலருக்கு உடன்பாடில்லை. அதற்காக நிறையப் பேருடைய எதிர்ப்பைச் சேர்த்து வைத்திருப்பவர்தான் சோ. கலைஞருக்கு சோ எந்த அளவு அரசியல் எதிரி என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவ்வளவு மோசமாக கலைஞரை விமர்சித்து எழுதுபவர். ஜெயலலிதாவின் அதி தீவிர விசுவாசி. சென்னையில் நடந்த ஒரு பெரிய திருமணத்திற்கு அப்போது முதல்வராக இருந்த கலைஞர் வந்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த சோ சட்டென்று எழுந்தார். மடமடவென்று கலைஞரிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். அவருடைய காதில் ஏதோ கிசுகிசுத்தார். மறுகணம் கலைஞர் குலுங்கிச் சிரித்தபடி பதிலுக்கு அவரும் ஏதோ இவரிடம் சொல்லிவிட்டுச் சிரிக்க…… நிறைய காமிராக்கள் இந்தப் படங்களை உள்வாங்கிக்கொண்டன. மொத்த விருந்தினர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். எவ்வளவு தீவிரமான அரசியல் எதிர்ப்பு கொண்டிருந்தபோதும் தனிப்பட்ட முறையில் எப்படிப் பழகுவது என்ற கலை சோவுக்கு அத்துப்படி.

எந்த நாளிலும் எந்த நேரத்திலும் நகைச்சுவையுடனேயே பேசும் திறமை எல்லாருக்கும் வந்துவிடாது. சோவின் கேள்வி பதில்களில் இரண்டு பதில்களை மறக்க முடியாது. ஒரு முறை துக்ளக் கேள்விபதிலில் ஒரு வாசகர் ‘மழை ஏன் சோவென்று பெய்கிறது?’ என்று கேட்டிருந்தார். அவரது பெயர் காட்டான் புதூர் மாணிக்கமோ என்னவோ. ‘பின்னே என்ன காட்டான்புதூர் மாணிக்கம் என்றா பெய்யும்?’ என்று பதிலளித்திருந்தார் சோ.

இன்னொரு சமயம் ஒரு வாசகர் ‘இந்திரா காந்திக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?’ என்று கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது ரொம்பவும் சிரமம். வேறு யாராயிருந்தாலும் இந்தக் கேள்வியையே தவிர்த்திருப்பார்கள். தூக்கிக் குப்பையில் போட்டிருப்பார்கள். சோ பதில் சொல்லியிருந்தார். ‘நடந்து முடிந்த தேர்தலில் நான் அலகாபாத்தில் போட்டியிட்டிருந்தால் நானும் தோற்றிருப்பேன் என்பதைத் தவிர அவருக்கும் எனக்கும் வேறெந்த 
ஒற்றுமையும் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்’

சினிமா பற்றிய, நாடகங்கள் பற்றிய, நண்பர்கள் பற்றிய, தனி மனிதர்கள் பற்றிய சோவின் கருத்துக்களில் பாசாங்குகள் இருக்காது. நேர்மையுடன் தமது மனதிற்குப் பட்டதைத் துணிச்சலுடன் சொல்லிவிடுவது அவர் வழக்கம். கல்வி கேள்விகளில் சிறந்த அவருடைய அரசியல் சார்பான கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாமே தவிர அவருக்கு அந்த விஷயங்கள் தெரியாது என்றெல்லாம் யாராலும் சொல்லமுடியாது. தவிர, இசை, நாடகம், நடனம் போன்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். இசை பற்றிய ஞானம் அவருக்கு நிறைய உண்டு.

தற்போது குமுதம் வார இதழில் தாம் பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதி வருகிறார் சோ. இந்தத் தொடரிலும் அவ்வளவுதான். எவ்வித பாசாங்குகளும் அற்று தம்முடைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார் அவர். சமீபத்தில் இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல சுவாரஸ்யமான தகவல்களுடனும் திரை இசையைப் பற்றிய, எம்எஸ்வியைப் பற்றிய  தமது கருத்துக்களுடனும்……………….!. அதில் சில கருத்துக்களும் தகவல்களும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களாகவும் உள்ளன. அவர் சொல்கிறார்; 

(இதில் சோ சொன்னவையெல்லாம் வண்ணத்தில் உள்ளன)

“கவிஞர் கண்ணதாசனைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவருக்கு குழந்தை மனது என்றிருப்பேன். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு குழந்தையேதான்.


அவரைப் பொறுத்தவரை இசைதான் அவருக்கு எல்லாம். இசையைத் தவிர மற்றவற்றைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்வதிலும் விருப்பம் காட்டமாட்டார்.
அவருக்குக் குருநாதர் இசையமைப்பாளர் எஸ்எம் சுப்பையா நாயுடு. அவருக்காக எம்எஸ்வி ஒரு விழா எடுத்தார். அந்த விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை அழைத்திருந்தார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

அந்த விழாவில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல நடிகர்கள் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வதாக தகவல் தெரிய வந்ததும் விஸ்வநாதனிடம் கேட்டேன். “நான் திமுகவைக் கடுமையா விமர்சனம் பண்ணிண்டிருக்கேன். திமுகவை விமர்சிக்கிறதை எம்ஜிஆர் கொஞ்சம்கூட விரும்ப மாட்டார்(அப்போது அவர் திமுகவில் இருந்த சமயம்). நான் அவரோட சினிமாவில் நடிச்சாலும் இந்த மேடையில் நான் தொகுத்து வழங்கறப்போ என்ன பேசுவேனோன்னு அவர் நினைக்கலாம். சில பிரச்னைகள் வரலாம். அதனால் நீங்க என்னைத் தொகுத்து வழங்கச் சொல்லாமல் வேறு யாரையாவது பண்ணச் சொல்லுங்க. நான் வேண்டாம். உங்களுக்கும் இது நல்லதில்லை”.

விஸ்வநாதன் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.                             

“அதெல்லாம் பத்தி எனக்கென்ன? நான் ஒரு விழா எடுக்கறேன். எனக்கு சோ ஃபிரண்ட். எனக்கு அவர் வேணும். கலந்துக்கணும். இதனாலே எல்லாம் எம்ஜிஆருக்குக் கோபம் வராது. நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டு என்னிடம் “நீங்க அங்கே அரசியல் பேசுவீங்களா?” என்று கேட்டார்.

“நான் எந்த இடத்தில் எதைப் பேசறதுன்னு எனக்குத் தெரியாதா? நான் அரசியல் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.

“சரி அது போதும்” என்று சொல்லிவிட்டு விழாவுக்கான அழைப்பிதழைக் கொண்டுவந்து காண்பித்தார்.

எம்ஜிஆரின் பெயர் முதலில் போடப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் இருந்தது.

“எம்ஜிஆரிடம் இதைக் காண்பிச்சுட்டீங்களா?”

“இல்லை இனிமேல்தான் காண்பிச்சுட்டு சொல்லப்போறேன்” சொல்லிவிட்டு எம்ஜிஆரைச் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார்.  அழைப்பிதழை வாங்கியதும் அதிலுள்ள பெயர்களை எல்லாம் பார்த்திருக்கிறார் எம்ஜிஆர்.

“இந்த இன்விடேஷன்ல இருக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டீங்களா?”
“சொல்லிட்டேன்”

“சோ கிட்டே சொல்லிட்டீங்களா?”

“சொல்லிட்டேன்”

“என்ன காரியம் பண்ணியிருக்கீங்க நீங்க? சோ திமுகவை எதிர்க்கிறவர். அவர் ஏதாவது திமுகவைப் பத்திப் பேசினா எனக்குத் தர்மசங்கடமாப் போகும். என் கிட்டே நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா?”

“இதில் பிரச்னை இருக்கும்னு தோணலை” – தயக்கத்துடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார் எம்எஸ்வி. “உங்க படங்களில்கூட சோ நடிக்கிறாரே?”

“அது வேற. இது வேற”

“நான் வேணும்னா சோ கிட்டே போய் ‘எம்ஜிஆர் வேணாம்ங்கிறார். அதனால் நீங்க வேணாம்னு சொல்லிடுறேன்”

“இன்னும் இதைக் கெடுக்கறதுக்கு என்ன வழியுண்டோ அதைக் கண்டுபிடிக்க உன்னால்தான் முடியும்” என்று எம்எஸ்வியைக் கண்டித்தாலும் சொன்னபடி விழாவுக்கு வந்து விட்டார் எம்ஜிஆர்.
சிவாஜியும் வந்துவிட்டார்.  மேடை நிறைந்துவிட்டது.  முன்னால் நல்ல கூட்டம். விழா நிகழ்ச்சிகளைத் தொகுக்க வந்த நான் முதலில் மைக்கைப் பிடித்தேன். போனதும் உரத்த குரலில் “வாத்தியார்” என்று சொல்ல, கூட்டத்தில் ஒரே கைத்தட்டல்.

“இது வாத்தியாருக்கான விழா. இங்கே ஒரு வாத்தியார் வந்திருக்கார். அது மட்டுமில்லை. விஸ்வநாதன் தன்னுடைய வாத்தியார் சுப்பையா நாயுடுவுக்காக நடத்துற விழா இது” என்று வாத்தியார் என்கிற சொல்லை வைத்து ரொம்பவும் விளையாடினேன். எதிரில் இருந்த கூட்டத்திற்கும் திருப்தி. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த எம்ஜிஆருக்கும் பரம திருப்தி.

அடுத்த நாள் சிவாஜியுடன் ஷூட்டிங். நான் போனதுமே “சரியான அயோக்கியன்டா நீ. வாத்தியார்ங்கற ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு எப்படியெல்லாம் சமாளிச்சே” என்று கிண்டல் பண்ணினார் அவர்.
********************          *********************      ********************
எம்எஸ்வி, கண்ணதாசன், வாலி, டிஎம்எஸ் என்று இவர்களுடைய ஒருங்கிணைப்பில்  உருவான பாடல்களை  தமிழ் சினிமாவின் பொக்கிஷம்  என்றுதான் சொல்லவேண்டும்  இவர்கள் இணைந்து இயங்கிய காலம் சினிமாவின் பொற்காலம்
சில சமயம் இசையமைக்க எம்எஸ்வி உட்கார்ந்துவிட்டால் குறிப்பிட்ட டியூனுக்குத்தான் பாட்டெழுத வேண்டும் என்று கண்ணதாசனிடம் உரிமையுடன் சொல்லிவிடுவார். சில சமயம் கண்ணதாசனைப் பாடல் எழுதச் சொல்லிவிட்டு அதற்கு ட்யூன் போடுவார். இரண்டையும் அவரால் பண்ணமுடியும். அவருடைய கையில் அந்த அளவுக்கு வித்தை இருந்தது.

இசையமைக்கும்போது ரிகர்சலில் பத்து வயலின்களை இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்கள். அதை உன்னிப்பாக கவனித்து ஏழாவது வயலின்காரர் வாசித்ததில் உள்ள தவறை மிகச் சரியாக சுட்டிக்காட்டுவார். அவ்வளவு விரிந்த துல்லியமான ஞானம் உள்ளவர் எம்எஸ்வி. அவரை மாதிரி ஒரு இசையமைப்பாளர் அதற்குப் பிறகு வந்த மாதிரி எனக்குத் தெரியவில்லை……………அதாவது என்னுடைய ரசனையின்படி.” என்கிறார் சோ.

 (இப்படிப்பட்ட தகவல்கள் இரட்டையர் காலத்தில் மிக அதிகமாகவே சொல்லப்பட்டன. பத்து, பதினைந்து, இருபது, நூறு வயலின்கள்…………. என்றாலும் அத்தனை வயலின்களும் இசைக்கப்படும்பொழுது அது ஒரே வயலினிலிருந்து வந்த இசைபோல இருக்கவேண்டும் அத்தனைத் துல்லியமாக அந்த நோட் வாசிக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் டி.கே ராமமூர்த்தி என்றும் சொல்வார்கள்).

மேலும் தொடர்கிறார் சோ. “அவர் சம்பந்தப்பட்ட பாடல் கம்போசிங் நடக்கும்போது பலமுறை போயிருக்கிறேன். இசையமைக்கும்போது எம்எஸ்வி அந்தப் பாடலை எப்படிப் பாட வேண்டும் என்று பாடிக்காட்டுவார் பாருங்கள். அவருடைய குரல் கேட்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த அளவுக்குப் பாடக்கூடியவர் ஏன் படத்தில் பாட மறுக்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கும். டிஎம்எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு முன்னால் இவர் பாடிக்காட்டுவதைப் பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அவருடைய குரலை அந்த அளவுக்கு ரசித்ததால் அதை சரிவரப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஆதங்கம் எனக்கு இருந்தது. அதற்கு ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது.”

இந்த இடத்தில் சோ, முகம்மது பின் துக்ளக் படத்தில் எம்எஸ்வி பாடி மிகப் பெரிய ஹிட்டான அல்லா அல்லா பாடல் உருவான கதையைச் சொல்லவருகிறார். பொதுவாகவே எம்எஸ்வி, படங்களில் தமக்குப் பாட வாய்ப்பு இருக்கும் இடத்திலும் மற்றவர்களைப் பாடவைத்து அழகு பார்க்கும் சுபாவம் கொண்டவர். அவரே பாடியிருக்கிறார் என்றால் அதற்கு நிச்சயம் இயக்குநர் அல்லது முக்கியமான வேறொருவரின் பிடிவாதம்தான் காரணமாக இருந்திருக்கவேண்டும். பாசமலர் படத்தில் டைட்டில் சாங்காக வரும் ‘அன்புமலர் ஆசைமலர் இந்த மலர்களிலே…’ என்ற பாடல் அந்த நாட்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல். அந்தப் படத்துக் கதையின் தொனி அந்தப் பாடலைக் கேட்டமாத்திரத்திலேயே மனதில் புகுந்து ஏதோ ஒருவிதமான உணர்வை எழுப்பிவிடும் மாயத்தை அந்தப் பாடல் செய்துவிடும். அதற்குப்பின் ‘இக்கரைக்கு அக்கரைப் பச்ச’ பாடல் கண்ணதாசன் வற்புறுத்தியதால் அவரே பாடினார் என்று சொல்வார்கள். பாடல் பாடுவதற்குத்தான் அதிகமாக முன்வரமாட்டாரே தவிர ஹம்மிங்குகளை விரும்பிச் செய்வார் என்று சொல்லப்படுவதுண்டு. பாவமன்னிப்பு படத்தில் ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில் வரும் ஹம்மிங்குகள் ஓஹோ, ஆஹா, ம்ம்ம் என்பவையும் இன்னமும் பல பாடல்களில் வரும் ஹம்மிங்குகளையும் அவரே செய்துவிடுவார். குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும் ‘நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு’ பாடலில் வரும் ஹம்மிங் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. அது காதல் பாடல்தான் என்றாலும் அந்த டியூனும் சுசீலாவின் குரலும் எம்எஸ்வியின் ஹம்மிங்கும் சேர்ந்து ஒரு கொண்டாட்டமான குதூகலமான மறக்கமுடியாத பாடலாக அந்தப் பாடலைச் செய்துவிடும்.

இப்போது ‘அல்லா அல்லா’ பாடலை எம்எஸ்வியையே பாடவைத்த சம்பவத்தைச் சொல்கிறார் சோ. 

“நான் இயக்கிய ‘முகம்மது பின் துக்ளக்’ படத்தில் வாலி எழுதிய பாடல் அல்லா அல்லா. இந்தப் பாடலை விஸ்வநாதன்தான் பாடவேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் அவரோ “இந்தப் பாட்டு நல்லா வரும். இதை நான் பாட வேண்டாம். முகமது ரஃபி தமிழில் இதைப் பாடட்டும்” என்று ரஃபியைத் தானே கூப்பிட்டு வருவதாகவும் சொன்னார்.

எனக்கு என்னவோ இது உடன்பாடாக இல்லை.

“நீங்கதான் சார் பாடணும். மற்றவங்களைப் பாட வைக்க வேணாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அவரோ “அதெல்லாம் முடியாது. உங்க பிடிவாதத்துக்காக எல்லாம் என்னால் ஒத்துக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் படத் தயாரிப்பாளரான நாராயண அய்யரோ தவித்துக் கொண்டிருந்தார். விவாதம் நீண்டு கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் நாராயண அய்யர் சொன்னார் “திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்திருவோம்”

முகமது ரஃபி, டிஎம்எஸ், எம்எஸ்வி- இந்த மூன்று பேரின் பெயர்களையும் திருவுளச்சீட்டில் எழுதிப் போடுவதாக முடிவெடுத்தோம். விஸ்வநாதனையே அதில் ஒரு சீட்டை எடுக்கச் சொன்னேன். 

அவரும் எடுத்தார். “என் பெயரே வந்திருக்கு” என்று ஏமாற்றமாய் முகத்தை வைத்திருந்தார் எம்எஸ்வி.

“சார் கடவுளுக்கு அதான் இஷ்டம். நீங்கதான் பாடணும்னு முடிவாயிருச்சு” என்று நான் சொன்னேன்.

“சரி என்ன செய்யறது? சீட்டே வந்துருச்சி. நானே பாடிடறேன்” என்றதும் நான் புகுந்தேன்.

“சார் பாடுறதுன்னு முடிவெடுத்துட்டீங்க. இனி அதிலிருந்து மாற மாட்டீங்களே?”

“அதெப்படி மாத்துவேன்? ஒத்துண்டுட்டேன்”

“நிச்சயமாக மாற மாட்டீங்கள்லே?”

“நிச்சயமா மாற மாட்டேன்” என்று எம்எஸ்வி சொன்னதும் கையில் இருந்த மற்ற திருவுளச் சீட்டுகளை அவரிடம் கொடுத்தேன். பிரித்துப் பார்த்தார். அவற்றிலும் எம்எஸ்வி பெயர்தான் எழுதப்பட்டிருந்தது.

“இதென்ன மோசடி வேலை” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் எம்எஸ்வி.

“நீங்க உறுதியா முடிவை மாத்த மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க” என்றதும் பிறகு அந்தப் பாடலை அவரே பாடினார். அதை அவர் பாடிய விதம், அவருடைய குரல் வளம், பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து அந்தப் பாடலை உயர்த்திவிட்டது” – என்று இந்த சம்பவத்தை விவரித்திருக்கும் சோ அதே படத்தின் இன்னொரு தகவலையும் தருகிறார்.

‘முகமது பின் துக்ளக் படத்தில் இசையமைத்த எம்எஸ்வியைக் கூப்பிட்டு “திமுகவுக்கு எதிரான படம் இது. இந்தப் படத்தில் நீ எப்படி மியூசிக் போடலாம்?” என்று கேட்டிருக்கிறார் எம்ஜிஆர்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மியூசிக் போடக் கூப்பிட்டாங்க. ஒத்துண்டேன்”

“இப்போ நீ போய் முடியாதுன்னு சொல்லிடு”

“இசையமைக்கிற வேலைகள் பாதி முடிஞ்சிருச்சி. நான் இப்போ போய் முடியாதுன்னு சொன்னா நல்லாயிருக்காது”

“அதெல்லாம் இல்லை……………..நீ முடியாதுன்னுதான் சொல்லணும்”



“நீங்க சொல்ற மாதிரி நான் போய்ச் சொன்னா அது தெய்வக்குத்தம் மாதிரி ஆயிடும். நான் செய்ற தொழிலுக்குத் துரோகம் பண்ண மாட்டேன். நீங்க வேணும்னா சோவைப் பத்தி ஒரு படம் எடுங்க. அதுக்கு நான் வந்து மியூசிக் பண்றேன்”

எம்எஸ்வி சொல்லிமுடித்ததும் எம்ஜிஆருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அந்தப் படத்தில் கடைசிவரை இருந்து அசராமல், எந்த மிரட்டலுக்கும் பணியாமல் தான் எடுத்துக்கொண்ட வேலையைச் சரிவர செய்துகொடுத்தார் எம்எஸ்வி.” – இப்படிச் சொல்லும் சோ, முடிவாக எம்எஸ்வியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

‘தோல்வியை எப்படியாவது தாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்வது கஷ்டம். தலைக்கனம் ஏறாமல், கர்வம் புகுந்து விடாமல், அகம்பாவம் படிந்துவிடாமல், வெற்றியைச் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எத்தனையோ வெற்றிகளைச் சந்தித்தும் தன்னைப் பற்றி மிகையாக நினைக்காமல், தொழில் சிரத்தையோடு இப்போதும் இருப்பவர் விஸ்வநாதன். அவருடைய வெற்றிகள் அவரிடம் வெற்றி காண முடியவில்லை என்று சொல்லலாம்……………….தான் செய்கிற தொழில்மீது வைத்திருக்கிற பக்தி, ஈடுபாடு என்று எத்தனையோ வார்த்தைகளில் அதை விளக்கலாம். ஆனால் இதுதான் எம்எஸ்வியின் இயல்பு.’

Tuesday, September 3, 2013

வெளிவந்துவிட்டது ‘என்றென்றும் சுஜாதா’ - சுஜாதா பற்றிய புத்தகம்.



 மறைந்த எழுத்தாளர் சுஜாதா தமிழ் எழுத்தாளர்களில் பன்முகம் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய அவரது சிந்தனையும் எழுத்தும் அடுத்த நூற்றாண்டைத் தொட்டுப்பார்ப்பதாக இருந்ததுதான் நிறையப்பேர் வியக்கவும் விரும்பவும் காரணமாக இருந்தது. தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு அவருடைய பங்கு எத்தகையது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.

தமிழில் விஞ்ஞானத்தை சுஜாதா அளவுக்கு எளிமையாகவும் அழகாகவும் வேறு யாருமே எழுதியதில்லை. விஞ்ஞானத்தைக் கட்டுரைகள் வாயிலாக மட்டுமல்லாமல் கதைகளிலும் புகுத்தி தமிழில் விஞ்ஞானக் கதைகளைப் பிரபலமாக்கியவரே அவர்தான். இந்த ஒன்றுக்காகவே தமிழ் நல்லுலகம் அவரை என்றென்றைக்கும் கொண்டாட வேண்டும்.

புதுடெல்லியிலிருந்து 1969 அல்லது 1970-ல் பெங்களூரில் குடியேறியதிலிருந்து 1993-ல் குமுதம் ஆசிரியராகப் பணியேற்று சென்னைக்குச் செல்லும் நாள்வரை அவர் பெங்களூர்வாசியாகத்தான் இருந்தார்.

அவர் மிகப்பெரிய எழுத்தாளராகவும் பிரமுகராகவும் உயர்ந்த வேளையில் அவரது வேர்கள் பெங்களூரில்தான் பதிந்திருந்தன. அந்த நாட்களில் அவருடன் எழுத்து, இலக்கியம், பத்திரிகை, சினிமா சார்பாகப் பேசிப் பழக பெங்களூரில் அவருக்குக் கிடைத்த ஒரே நபர் நான் மட்டும்தான்!

அந்த நாட்களின் படிப்படியான அவரது வளர்ச்சியை, மகிழ்ச்சியை, சில பொழுதுகளில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை என்னுடன் மனம்விட்டுப் பரிமாறிக்கொண்டிருக்கிறார். அந்த நாட்களில் எல்லாம் நான் அவருடன் இருந்திருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த மிக அரிய வாய்ப்பு.

ஏறக்குறைய இருபத்தி மூன்று ஆண்டுகள் அவருடன் நெருக்கமாகவும் அவர் சென்னை சென்றபிறகும் கடைசிவரையிலும் தொடர்பு விட்டுவிடாமலும் பழகிய அந்த ஈர நினைவுகளை அந்த அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறேன்.

நடிகர் கமலும் சுஜாதாவும் முதன்முதலாக சந்தித்த அனுபவத்தை ஏற்கெனவே என்னுடைய இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அந்த ஒரு கட்டுரைக்கே மிகுந்த வரவேற்பிருந்தது. சுஜாதா வாசகர்களும் கமல் ரசிகர்களுமாக மிகவும் ரசித்த அந்தக் கட்டுரையின்போதே சுஜாதாவின் நினைவலைகளை முழுவதும் புத்தகமாக எழுதப்போவதாகச் சொல்லியிருந்தேன். அதைப் படித்ததிலிருந்தே நிறைய இணைய நண்பர்கள் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரப்போகிறது? எழுதிவிட்டீர்களா, எழுத ஆரம்பித்துவிட்டீர்களா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். 
  
சுஜாதாவுக்கும் எனக்கும் இருந்த நட்பு பற்றி அறிந்த பெங்களூர் நண்பர்களும் சுஜாதா பற்றிய புத்தகம் எப்போது வரும் என்று கேட்டபடியே இருந்தனர்.

இதோ வந்துவிட்டது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

‘சுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன்.

சுஜாதா மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப்பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதிவிடாமல் க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது………………………………………………..

சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும் ஒரு படத்தில் அவர் நடித்தது அவரை நடிக்கவைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச்சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதவை. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து’ என்று முன்னுரையில் சொல்கிறார் விகடன் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தை முடித்ததும் முதலில் படிக்கக்கொடுத்தது திருமதி சுஜாதா அவர்களிடம். “அப்படியே ஒரு முன்னுரையும் எழுதித் தந்துவிடுங்கள்” என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். முழுவதும் படித்துப் பார்த்து “இந்த நூலில் என்னைப்பற்றியும் எழுதியிருக்கீங்க. என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூலுக்கு நானே முன்னுரையும் தருவது நன்றாயிருக்காது” என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் திருமதி சுஜாதா. நூலை முழுவதுமாகப் படித்துப் பார்த்து ஒப்புதல் தந்த திருமதி சுஜாதா அவர்களுக்கு நன்றி.

பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ‘சுஜாதா பற்றிய புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னேன்.

“அப்படியா நான் கூட அவருடைய ஓவியம் ஒன்றை வரைஞ்சு வச்சிருக்கேன். அவரிடமே தரலாம்னு வரைஞ்சது. அதுக்கான சந்தர்ப்பமே அமையாமல் போய்விட்டது. அதுக்குள்ள மறைஞ்சிட்டார். இன்னமும் எந்தப் பத்திரிகைக்கும் அதைத் தரலை. பத்திரமா நானே வைச்சிருக்கேன். அவங்க துணைவியாரிடம் தரலாம்னு இருக்கேன்” என்றார்.

இந்த புத்தகம் முடிந்ததும் விகடனிடம் சேர்ப்பிக்கும்போது திரு மணியம் செல்வன் சொன்னதை விகடன் பிரசுரத்தின் முதன்மை உதவி ஆசிரியர் திரு அன்பழகனிடம் சொன்னேன். “அப்படியா இதுவரையிலும் பிரசுரமாகாத படம் அவரிடம் இருக்கா? அப்படின்னா அதையே வாங்கி அட்டைப்படமாப் போட்டுடலாம்” என்றார் அன்பழகன். சொன்னபடியே அந்த அழகிய ஓவியம்தான் முகப்புப் பக்கமாய் ஜொலிக்கிறது.

இந்த நூலில் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. சுஜாதா பத்திரிகை ஆசிரியர்களைப் பற்றிப் பேசும்போது குறிப்பாக மூன்றுபேரைத்தான் எந்த நாளும் குறிப்பிட்டுப் பேசுவார். ஒருவர் குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி, அடுத்தவர் விகடனின் முன்னாள் ஆசிரியரும் சேர்மனுமான எஸ்.பாலசுப்பிரமணியம், அடுத்தவர் ஆசிரியர் சாவி. இவர்களில் விகடன் முன்னாள் ஆசிரியர் திரு எஸ்.பாலசுப்பிரமணியத்தைப் பற்றிய தகவல்களை எழுதியபோது நிறையவே தயக்கம் இருந்து. 

இவற்றை எல்லாமே அடித்துவிடுவார்கள்; எப்படியும் பிரசுரிக்கப்போவதில்லை எடிட் செய்துவிடுவார்கள் என்று நினைத்துத்தான் எழுதினேன். காரணம், நீண்ட நாட்களுக்கு விகடனில் அப்படியான நிலைமைதான் இருந்தது. நடிகர் சிவகுமாரே பல பேட்டிகளில், கட்டுரைகளில் திரு பாலன் அவர்களைப்பற்றிச் சொன்னதை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டார்கள். விகடன் நிறுவனர் எஸ்எஸ் வாசன் அவர்களைப் பற்றியும்  திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றியும் எந்தப் பாராட்டுக் குறிப்புகளும், புகழுரைகளும் வராமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் இந்த நூலிலும் அதுதான் நடக்கப்போகிறது என்றுதான் நினைத்திருந்தேன். நல்லவேளையாக அப்படியெல்லாம் நிகழாமல் திரு பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி சுஜாதா சொன்னதெல்லாம் வெட்டப்படாமல் வந்திருக்கிறது.

அந்தவகையில் எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்.

சுஜாதா எழுதியதை நிறையப் படித்திருப்பீர்கள். சுஜாதாவைப் பற்றி இதில் படித்துப்பாருங்கள்.

விகடன் பிரசுரம் என்பதால் எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

Sunday, July 7, 2013

இளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.



 கங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்பிய கலைஞர்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அத்தனை திறமையும் இருந்து சாதனை படைத்தவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் மீடியா கவனமும் மக்கள் பார்வையும் இவர்கள் மீது பதிந்து இருக்கும். இன்றைய திரையுலகில் டி.ராஜேந்தருக்கடுத்து கங்கை அமரனைத்தான் இந்தவகையில் நம்மால் சேர்க்கமுடியும்.

கங்கை அமரன் கதை எழுதுவார், வசனம் எழுதுவார், பாடல்கள் புனைவார், அவரே பாடுவார், இசை அமைப்பார், படங்களை இயக்குவார், டிவியிலும் மேடைகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தும் தொகுத்தும் வழங்குவார், பல வாத்தியக்கருவிகளை வாசிப்பார்………………என்று எண்ணற்ற திறமைகள் கைவரப்பெற்றவர் கங்கை அமரன்.

இளையராஜா சகோதரர்கள் மூன்று பேராகத்தான் திரையுலகில் நுழைந்தனர். மூத்தவர் பாஸ்கர் குடும்ப நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்று மட்டுமே பார்த்துக்கொண்டு விளம்பர வெளிச்சத்திற்கு அதிகமாக வராமலேயே நின்றுவிட்டார். மற்ற இரு சகோதரர்களும் திரைப்பட வெளிச்சத்திலேயே உழல்கின்றவர்களாகத் தம்மை நிறுத்திக்கொண்டு விட்டனர். இளையராஜா வந்த காலத்தில் இளையராஜா ஒரு பக்கம் இசையமைத்துக்கொண்டிருக்க இளையராஜாவுக்காகத் திரையுலகில் செய்யப்பட்ட ‘மவுத் பப்ளிசிடி’ சாதாரணமானதல்ல; அதனைப் பெரும்பாலும் பல்வேறு உத்திகளிலும் ‘ரூபங்களிலும்’ செய்துவந்தவர் கங்கை அமரன்தான். இன்றைய பின்னூட்டப் புலிகளுக்கெல்லாம் அதன் மகத்துவமோ முக்கியத்துவமோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை. ஏனெனில் இதனைப் படித்ததும் ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் ராஜாவுக்கான விளம்பரம் மட்டுமல்ல அவருக்கான ‘எல்லாமே’ அவரது இசைதான். அவரது இசையே போதுமானது. அதுவே மொத்த உலகையும் சுருட்டிக் கொண்டுவந்து அவரது காலடியில் கிடத்தும்’ என்பதுபோல் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். திரையுலகில் இதெல்லாம் வேலைக்காவாது. 

எத்தனைத் திறமை எத்தனை வல்லமை இருந்தாலும் அங்கே நிற்கவும் நிலைக்கவும் ‘வேறுமாதிரியான’ சில ‘சப்போர்ட்டுகள்’ தேவைப்படுகின்றன. அதையெல்லாம் அன்றைக்கு கவனித்துக்கொண்டவர் கங்கைஅமரன்தான்.

அதுமட்டுமல்ல, தன்னுடைய சகோதரரை இளையராஜா வேண்டாமென்று சொல்கிறவரைக்கும் இளையராஜாவுடன் மட்டுமல்ல அவரது ‘இசையுடனும்’ கூடவே இருந்தவர் கங்கை அமரன். 

இவரது ‘பங்களிப்பு’ எத்தகையது என்பதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் கங்கைஅமரனின் ‘பங்களிப்பே துளிக்கூட இல்லை’ என்று நிச்சயம் சொல்வதற்கில்லை.

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

இளையராஜாவுக்கும் கங்கைஅமரனுக்கும் இடையில் தகராறுகள் வந்து “இனிமேல் நீ ரிகார்டிங் இடத்திற்கு வரவேண்டாம்” என்று தம்பியை இளையராஜா கடுமையாகச் சொல்லிவிட்டார் என்று செய்தி.

இந்தச் செய்திகளுக்குக் காரணம் கங்கை அமரன் தனியாக இசையமைக்கச் சென்றதுதான் என்றும் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் இரண்டு சகோதரர்களுக்கும் பொதுவான ஒரு நண்பர், “நீ அந்தப் பக்கமாய்ப் போயிறாதே. அண்ணன் உன் மீது ரொம்பவும் கோபமாயிருக்காராம். அவர் கம்போஸ் பண்ணி வச்சிருந்த டியூனையெல்லாம் நீ எடுத்துவந்து அவரை முந்திக்கிட்டு உன்னுடைய படத்துல பாடல்களாய் போட்டுடறியாம்” என்று சொன்னதற்கு-

“அப்ப இத்தனை நாட்களும் நான் எத்தனை டியூன் சொல்லியிருப்பேன். அதையெல்லாம் அவர் போட்டு பேரும் பணமும் வாங்கினாரே அதுமட்டும் பரவாயில்லையா?” என்று கங்கைஅமரன் பதில் சொன்னதாகச் சொல்வார்கள். இதுபற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது அவர்களுக்குள் உண்டான சகோதரச் சண்டை.

ஆரம்பத்தில் ஒரு இசைக்குழுவாகவே அவர்கள் செயல்பட்டு வந்ததால் இதுவெல்லாம் சாத்தியமே. நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்களில் அந்தச் சகோதரர்களுக்கு நிறைய பரிச்சயம் இருப்பதால் தங்களைக் கவர்ந்த, தங்களுக்குத் தெரிந்த பல பாடல்களை அவர்கள் திரைப்படங்களில் மெட்டுக்களாகப் போட்டிருக்கிறார்கள். எந்தப் படத்தில் எந்தப் பாடல் அப்படி வந்தது போன்ற விவரங்களையும் கங்கை அமரன் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நிறையச் சொல்லியும் பாடிக்காட்டியும் இருக்கிறார்.

அவர் டைரக்ட் செய்து மிகப்பெரிய வசூலைப் பெற்ற கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு’ பாடல்கூட கோவிலில் பாடப்படும் வேறொரு பாடலின் தழுவல்தான் என்று சொல்லி இரண்டு பாடல்களையும் நிறைய நிகழ்ச்சிகளில் பாடிக்காட்டியிருக்கிறார் அமரன்.

பொதுவாக இது இந்தப் பாடலின் தழுவல், அது அந்தப் பாடலின் தழுவல்……இளையராஜா இந்தப் பாடலிலிருந்து இதனைத் தழுவியிருக்கிறார் என்பது போன்ற பட்டியலை நான் எப்போதுமே எழுதுவதில்லை. ஆனால் இது சம்பந்தமாய் வரும் விவாதங்களில் சிலவற்றைச் சொல்லமுனைவதுண்டு. ராஜ்கபூர் படத்தின் பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது முகேஷோ, மன்னாடேயோ பாடிய ஒரு பாடலைக் கேட்டபோது ‘அட இதை எங்கேயோ கேட்டிருக்கிறோமே’ என்று தோன்றிற்று.பிறகு பார்த்தால் ‘வெத்தல வெத்தல வெத்தலையோ’ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி படப்பாடல் ‘இங்கிருந்துதான்’ என்பது தெரிந்தது.

‘ஓஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…………….’.என்று பிரபுதேவாவின் அண்ணன் ராஜூசுந்தரம் ‘இதயம்’ படத்தில் பாடிக்கொண்டு ஆடிய பாடல் ‘ஓஓஓ தேவதாஸ்’ என்று தேவதாஸ் படத்தில் சி.ஆர். சுப்பராமன் போட்ட டியூன்தான் என்பதும் நிறையப்பேருக்குத் தெரிந்த விஷயமே.

இதெல்லாம் சாதாரணமே. அங்கீகரிக்கக்கூடிய ஒரு விஷயமே. ஏனெனில், திரைத்துறையில் ஒரு பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என்று நிலைத்திருந்து தொழில் செய்யும்போது இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கமுடியாதவை. ஐநூறு படங்கள், அறுநூறு படங்கள், எண்ணூறு படங்கள் என்று ஒப்புக்கொண்டு பணியாற்றும்போது சில தழுவல்கள் வந்துதான் தீரும். இது ராஜாவுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே பொருந்தும். அதுபோன்ற தழுவல்களில் ஈடுபட மாறுபாடான பல்வேறு காரணங்களும் அமைவதுண்டு.

இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, கவிஞர்களுக்கும் இது பொருந்தும். கண்ணதாசன் பாடல்களிலுள்ள சில வரிகளைக் குறிப்பிட்டு ‘இது தனிப்பாடலில் வந்துவிட்டது. இது மகாபாரதத்தில் உள்ள வரி. இது குற்றாலக்குறவஞ்சியில் உள்ளது. அங்கிருந்து சுட்டிருக்கிறார் கவிஞர். இது கம்பராமாயணத்தில் வந்த வரி; இது பட்டினத்தாரில் உள்ள வரி’ என்றெல்லாம் எழுதுவார்கள். இருக்கலாம். அந்த வரி ஏதோ ஒரு இடத்தில் அதிகம் பேர் கவனிக்கமுடியாத இடத்தில் வந்திருக்கிறது. அது பல பேரைச் சென்று அடையவேண்டிய வரி. நாம் பணியாற்றும் ஊடக வழியாக அதனைப் பயன்படுத்தினால் அதனை லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்றுகூட ஒரு கவிஞன் நினைத்து தான் எழுதும் பாடலில் அந்தவரியைச் சேர்க்கலாம். அதேபோலவே ஒரு இசையமைப்பாளரும் எங்கோ தான் கேட்டு ரசித்த ஒரு மெட்டை, அல்லது தன்னைக் கடந்துபோகும்போது ஒருகணம் தன்னைப் பரவசப்படுத்திவிட்டுப் போகும் ஒரு இசைத்துணுக்கை, எல்லாரும் கேட்டு அனுபவிக்கட்டும் என்ற எண்ணத்தில்கூட தன்னுடைய இசையில் சேர்க்கலாம். இது தவறே இல்லை. தவறில்லை என்பது மட்டுமல்ல, பல்வேறு தருணங்களில் இது நடைமுறைச் சாத்தியமே.

ஆனால் இது ‘பொதுபுத்தியில்’ எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்றுதான் பார்க்கவேண்டும். பிரபல பதிவர் வவ்வால் தம்முடைய ஒரு பதிவில் சில தழுவல் பாடல்களின் பட்டியலையும் அதற்கான இணைப்புகளையும் கொடுத்திருந்தார். அவற்றில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஒன்றும், மீதி நான்கு பாடல்கள் இளையராஜா பிற மெட்டுக்களைத் தழுவி அமைத்த பாடல்களும் இருந்தன.

விகடன் இணையதளத்தில் யார் யார் எந்தெந்தப் பாடல்களிலிருந்து ‘சுட்டிருக்கிறார்கள்’ என்று ஒரு வீடியோ தொகுத்திருந்தார்கள். மற்ற எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களும், இளையராஜா, ரகுமான் பாடல்களும் அதில் இருந்தன. இந்த விகடன் இணையதளத்தில் வந்த வீடியோவை மதுமதி என்ற பதிவர் தமது தளத்தில் எடுத்துப்போட்டு ‘எல்லா இசையமைப்பாளர்களும் எப்படி தழுவியிருக்கிறார்கள்  பாருங்களேன்’ என்று ஒரு பதிவு எழுதுகிறார். உடனே கமெண்ட் என்ன வருகிறது என்றால் “அப்படியானால் நம்முடைய இசைஞானி ஒருவரைத்தவிர மற்ற அத்தனைப்பேரும் இப்படித் திருடித்தான் போடுகிறார்களா’ என்பதுபோன்ற தொனியில் உடனடியாக எதிர்வினை ஆற்றப்படுகிறது.

‘ஏங்க நீங்க வீடியோவை சரியாகக் கேட்கவில்லையா, பார்க்கவில்லையா? சரியாக கவனிக்காமலேயே பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல’ என்று அந்தப் பதிவர் பதில் சொல்லுகிறார். ஏனெனில் இளையராஜா தழுவியிருக்கும் டியூன்களையும் கொண்டதுதான் அந்த வீடியோ என்பதே கமெண்ட் போட்டவருக்குத் தெரியவில்லை. அல்லது இளையராஜா அப்படியெல்லாம் செய்யக்கூடியவர் அல்ல என்று மட்டுமே நம்புகிற ரகம்.

ஆக, இப்படியொரு பிரமை, இப்படியொரு மயக்கம், இப்படியொரு மூடஎண்ணம், இப்படியொரு அபரிமிதமான தவறான சிந்தனை இளையராஜாவைப் பற்றி நிறையப்பேருக்கு இணையத்திலும் சரி, எண்பதுக்குப் பிறகு பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்தவர்களுக்கும் சரி இருக்கிறது – ஏற்பட்டிருக்கிறது –ஏற்படுத்தப்படுகிறது.

இளையராஜாவை நல்ல இசையமைப்பாளர் என்று சொல்லுங்கள்; அருமையான பல பாடல்களைத் தமிழுக்குத் தந்தவர் என்று சொல்லுங்கள்; சில படங்கள் அவரது இசை காரணமாகவே வெற்றி பெற்றிருக்கின்றன என்று சொல்லுங்கள். யாரும் ஆட்சேபணை தெரிவிக்கப்போவதில்லை. 

ஏனெனில் இவையெல்லாமே எல்லா பிரபல இசையமைப்பாளர்களுக்கும் ஏற்படும் விவகாரங்கள்தாம்.

அந்தக் காலத்திலேயே பாடல்களுக்காக மட்டுமே ஓடிய படங்கள் எத்தனை? 

எஸ்விவெங்கட்ராமனுக்கும் சிஆர் சுப்பராமனுக்கும் ஜி. ராமனாதனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை என்ன? அவர்களின் இசை கட்டிப்போட்ட ரசிகர்கள் எவ்வளவு?

பழைய நாட்களை விட்டுவிடுவோம்.

இரண்டு தலைமுறைக்கு முன்புகூட என்ன நடந்தது? கேவிமகாதேவனின் சங்கராபரணம் சாதிக்காத கர்நாடக இசையனுபவமா? அந்த ஒரு படத்திற்காக இந்த நாட்டின் சாதாரண தொழிலாளி முதல் குடியரசுத்தலைவர்வரை கேவிஎம்முக்கு மரியாதை செய்தார்கள். அவரைக் கூப்பிட்டு கௌரவிக்காத சங்கீத சபாவே இந்தியாவில் இல்லை. இந்துஸ்தானி மேதைகளிலிருந்து கர்நாடக இசைமேதைகள்வரை பலரும் வீடுதேடிவந்து கேவிஎம்மைப் பாராட்டிவிட்டு நெக்குருகி நின்றார்கள்.

ஒரு பின்னணிப் பாடகருக்கு ஆயிரம் படத்தில் பாடினாலும் கிடைக்கமுடியாத மரியாதை எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு அந்த ஒரே படத்தில் கிடைத்தது.

கேவிமகாதேவன் மட்டுமா?

தன்னுடைய ஒரே ஒரு பாட்டின் மூலமே பல படங்களை ஓட வைத்திருக்கிறார் எம்எஸ்வி. ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா?’ பாடலுக்காகவே ‘தீர்க்கசுமங்கலி’ படம் ஓடியது ஒருபுறம் இருக்க இன்றைக்கும் வாணி ஜெயராமின் விலாசமே அந்தப் பாடல்தானே?
‘அடி என்னடி ராக்கம்மா’ பாடல் தாரை தப்பட்டைக் கிழிபட பட்டிதொட்டியெங்கும் அடித்துத் தூள் கிளப்பியதா இல்லையா?

தோல்விப்படம்தான் என்றாலும் ‘ரோஜாமலரே ராஜகுமாரியை’க் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவர்கள் இன்றைக்கும் லட்சக்கணக்கில் இருக்கிறார்களா இல்லையா? (முரசு, மெகா டிவி, ஜெயா மேக்ஸ் ஆகிய சேனல்களில் இந்தப் பாடல் நாள்தவறாமல் ஒருமுறையாகிலும் ஒளிபரப்பப்பட்டுவிடுகிறது.)

கேஎஸ்ஜியின் திறமையான திரைக்கதையமைப்பும் வசனங்களும் படத்தின் வெற்றிக்குத் துணைபோயின என்றாலும் ‘கற்பகம்’ என்ற படத்தை நினைத்ததும் நினைவுக்கு வருவது ‘அத்தைமடி மெத்தையடி’தானே?

‘எலந்தப் பயம்’ என்ற ஒற்றைப் பாடல் ‘பணமா பாசமா’ படத்தை இருபத்தைந்து வாரங்களுக்கும் மேல் ஓட வைத்த கதை எத்தனைப்பேருக்குத் தெரியும்?

அந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டுதான் அதுவரை வெளிவந்த தமிழ் இசைத்தட்டுக்களிலேயே அதிகம் விற்பனையான இசைத்தட்டு என்று ஹெச்எம்வி நிறுவனம் அறிவித்த கதை தெரியுமா?
இதுபோன்ற பட்டியல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.

இப்போதுகூட இவற்றையெல்லாம் எதற்காகச் சொல்ல நேர்ந்திருக்கிறது என்றால் காலம்காலமாகத் திரையுலகில் நடந்துவரும் பல சர்வசாதாரண நிகழ்வுகளையெல்லாம் ஏதோ இளையராஜா வந்து செய்த சாதனை என்பதுபோல் பலபேர் நினைத்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். நேற்றுக்கூட ஒரு தளத்தில் யாரோ ஒரு அன்பர், ‘இளையராஜா தமது பாடல்களினாலேயே எத்தனைப்பேரை லட்சாதிபதியாக்கியிருக்கிறார் தெரியுமா?’ என்று எழுதியிருக்கிறார்.

திரையுலகில் இதெல்லாம் சர்வசாதாரணம். ஐடியில் பணிபுரியும் தம்பி ஒருவர் வந்திருந்தார். சென்னையைச் சேர்ந்தவர். ‘நாங்க ரொம்ப பெரிய பணக்காரரா இருந்தோம். நிலம் நீச்சு என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒரேயொரு படம் எடுத்து அத்தனை சொத்துக்களும் போச்சு. இப்ப வாடகை வீட்லதான் இருக்கோம். காரணம் அப்பா ஒரேயொரு படம் எடுத்து அத்தனையும் இழந்துட்டார். வெறும் புதுமுகங்கள் நடித்த படம். இளையராஜா மியூசிக் ஒன்றுக்காகவே ஓடிடும்னு நினைச்சு எடுத்த படம். மியூசிக்கல் சப்ஜெக்ட். படமோ பாட்டோ எடுபடலை. பயங்கர நஷ்டம்” என்றார். இதற்காக இளையராஜா மீது குறையோ குற்றமோ சொல்லவா முடியும்? திரையுலகில் அன்றாடம் கடந்துபோகும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

சரி, இப்போது நாம் கங்கை அமரன் விஷயத்துக்கு வருவோம். 

கங்கை அமரனை எனக்கு நேரில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. இளையராஜாவை ஒரு ஏழெட்டுமுறை சந்தித்திருக்கிறேன். அவரது அண்ணன் பாஸ்கருடன் சில நாட்கள் பழகியிருக்கிறேன். ஆனால் கங்கை அமரனை இளையராஜா பெங்களூரில் ஆர்க்கெஸ்டிரா நடத்த வந்தபோது ஒரேயொரு முறை சந்தித்து ஒரு ஒருமணி நேரம்போல பேசிக்கொண்டிருந்திருக்கிறேன் அவ்வளவுதான். ஆனால் அந்த ஒரு மணி நேரத்திலேயே எத்தனை விஷயங்கள் பேசினார் என்பதை நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது., நகைச்சுவைக்கும் கலகலப்பிற்கும் சொந்தக்காரர் அவர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களின் வெற்றி குறித்தெல்லாம் பல விஷயங்கள் பேசினார் அவர். விஸ்வநாதனின் திறமை குறித்து அந்த அளவுக்குப் பெருமைப்பொங்கப் பேசினார்.

பாடல்களுக்கு நடுவில் வரும் இடையிசை குறித்துப் பேசினோம். BGM என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். இடையிசை, இன்டர்லூட் என்று இந்தக் காலத்தில் சொல்லிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருக்கும் அதே சமாச்சாரம்தான். அந்த இடையிசையில் அப்போதுதான் இளையராஜா கொஞ்சம் மாற்றத்தைச் செய்ய ஆரம்பித்திருந்தார். என்ன மாற்றம்?

விஸ்வநாதனும் மற்றவர்களும் பிஜிஎம்மில் ஒரு அழகிய கோர்வையைச் செய்திருப்பார்கள். அதுவே ஒரு அற்புதமான இசைக்கலவையாக இனிமைத்துணுக்காக இருக்கும். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் வரும் அந்த இசைத்துணுக்கு அப்படியே மனதில் இடம் பிடித்துவிடும். முதல் அடி சரணத்திற்குப்பின் வரும் இரண்டாவது சரணத்தில் சில சமயம் மிகச்சில வேறுபாடுகள் செய்வார்கள். சிலவற்றை அப்படியே இரண்டாவது சரணத்திலும் போட்டுவிட்டு மூன்றாவது சரணத்திற்கு மட்டும் வேறு மாதிரி போடுவார்கள். எப்படிப்போட்டாலும் ஒரு முழுமை அதில் இருக்கும். கவனித்துப் பார்த்தால் தெரியும். அதுவும் ஒரு குட்டிப்பாட்டுத்தான். கவிதை மொழியில் சொன்னால் அது ஒரு குட்டிக்கவிதை. மிகச்சிறிய ஹைக்கூ.

இதற்கு உதாரணமாக நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்லலாம். ஆனால் ஒரேயொரு பாடல் எனில் ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ பாடலைக் கேளுங்கள்.

அடுத்து வருபவர்களும், புதிதாக வருபவர்களும் - தங்களுக்கென்று ஏதாவது வித்தியாசம் செய்து காட்டவேண்டாமா? இளையராஜா என்ன செய்கிறார் இந்த இடையிசையில் ‘முழுமை பெற்ற ஒரு இசைத்துணுக்கு’ ஒலிப்பதை மாற்ற எண்ணி சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு வயலின் கீற்று, ஒரு கிடாரின் சிறு இசை…இன்னமும் வெவ்வேறு வாத்தியங்களில் சின்னச்சின்ன இசை இழைகள் என்று கோர்த்து வாசிக்கவைத்து ‘எப்படியோ ஒரு வழியாக’ சரணத்துக்குக் கூட்டி வருகிறார். மறுபடி அடுத்த சரணத்தில் இதையே இன்னும் அங்கே கொஞ்சம் மாற்றி இங்கே கொஞ்சம் மாற்றி என்று வித்தைகள் செய்து பாடலை முடிக்கிறார்.

ரிசல்ட் என்னவென்றால் கேட்பதற்கு பழைய வழக்கமான பாடல்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட பாடல்போல் ஒலிக்கிறது. தோன்றுகிறது.

பின்னர் இதே பாணியைத் தம்முடைய பாணியாகவும் அவர் ஆக்கிக்கொண்டுவிட்டார்.
பாடல் வித்தியாசமாக ஒலிக்கிறது சரி; பிரச்சினை என்னவென்றால், இந்த இசைத்துணுக்குகள் கோர்வையாக இல்லாத காரணத்தினால் எந்த வாத்தியக்காரர்களாலும் தனித்தனி இழைகளாக வாசிக்கப்பட்ட இந்த இசைத்துணுக்குகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது.
ஏன் இளையராஜாவுக்கே அந்த இசைத் துணுக்குகள் ஞாபகமிருக்க வாய்ப்புகள் இல்லை. அவர் ‘எழுதிக்கொடுத்துவிடுகிறார்’ என்கிறார்களே அது இதைத்தான்.

இதனை ‘எழுதிக்கொடுக்காமல்’ அந்தக் கடவுளே வந்தாலும் வாசிக்கமுடியாது. அதனால்தான் இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற வேண்டுமென்றால் மிக அதிகமான பயிற்சிகள் நடைபெற வேண்டியுள்ளது. நிறைய ஒத்திகை திரும்பத் திரும்ப பார்க்கவேண்டியுள்ளது.

ரிகர்சல்……………மீண்டும் மீண்டும் ரிகர்சல் என்பார்கள்!

அப்படிப் பார்த்துக்கொண்டு போனாலும் நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் ‘இளையராஜாவின் ஸ்பெஷல்’ என்று சொல்லப்படும் அந்த இன்டர்லூட் எப்படியோ ‘ஒப்பேற்றப்பட்டுத்தான்’ அடுத்த சரணத்தை எட்டிப்பிடிக்கிறது என்பதை சற்றே நுணுக்கமாக கவனிக்கிறவர்களால் கண்டுணர முடியும். இதனால் கிடைத்த லாபம் என்னவென்றால் சாதாரண இசைக்கோஷ்டிகளால் திரையில் ஒலித்த, அல்லது டேப்பில் ஒலித்த அதே இன்டர்லூடை மேடையில் வாசிக்கமுடியாது. பாடலைக் கேட்பவர்கள் “என்ன இருந்தாலும் ஒரிஜினல் மாதிரி இல்லையே” என்று சொல்லிவிடுவார்கள்.

“என்ன இருந்தாலும் இசைஞானி பாடலை எல்லாம் அவ்வளவு சுலபமா வாசிக்கமுடியுமா? அதுக்கெல்லாம் ஞானம் பத்தாது. அந்த நுணுக்கங்கள் எல்லாம் அத்தனை சுலபமாக வந்துவிடாது’ என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள்.

என்ன ஆகும் தெரியுமா?

பல பாடல்கள் அதோ கதியென்று விடப்பட்டுவிடும்.

இன்னிசைக் கோஷ்டிகள் இப்படிப்பட்ட பாடல்களை சத்தமில்லாமல் கைகழுவிவிட்டு அடுத்த பாடலுக்கு நகர்ந்துவிடுவார்கள்.

இளையராஜாவின் மிகமிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஓரிரண்டை மட்டும் வாசித்துவிட்டு இன்றைய ஹிட் பாடல்களுக்கும் அந்தக் காலத்தின் ‘எவர்கிரீன்’ பாடலுக்குமாகச் சென்றுவிடுவார்கள். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு பாடல் ஐம்பது வருடங்கள் அறுபது வருடங்கள் எழுபது வருடங்கள் என்று தொடர்ந்து நிலைக்க மக்கள் முணுமுணுக்கவேண்டும். இன்னிசைக் கோஷ்டிகள் தவறாமல் ஒவ்வொரு மேடையிலும் பாடவேண்டும். ஒலிபெருக்கிகளிலும், சேனல்களிலும் இடைவெளி குறையாமல் ஒலிக்க ஒளிக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் “நான் வீட்டில் எத்தனை சிடிக்கள் வாங்கிவைத்திருக்கிறேன் தெரியுமா? என்னுடைய ஐபாடில் இருப்பதெல்லாம் வெறும் அவருடைய பாடல்கள் மட்டுமே” என்பதுபோன்ற சவடால்கள் எல்லாம் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவித்துவம் பெற்றுத்தந்துவிடாது.

“எதுவும் ஒரு ஒழுங்கமைதியுடனும் கோர்வையுடனும் இருந்தால்தான் நினைவில் தங்கும். 

‘மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை’ 

என்ற வரியைச் சொல்லிப்பாருங்கள். ஒரு கோர்வை இருக்கிறது இல்லையா? ஒருமுறை படித்துவிட்டால் ஜென்மத்துக்கும் மறக்காது. எதிலும் கோர்வை வேண்டும். துண்டுத் துண்டாய்ச் சொல்லப்படும் வார்த்தைகள் எத்தனை வலிமையாக இருந்தபோதிலும் சீக்கிரத்திலேயே மறந்துபோய்விடும்” என்பார் கொத்தமங்கலம் சுப்பு.

அம்மாதிரி இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்க வேண்டிய இளையராஜாவின் சில பாடல்கள் காணாமல் போய்விட்டதற்கு அவருடைய இந்தப் ‘புதுமையான’ இன்டர்லூடும் ஒரு காரணம். கோர்வை இல்லாததால் கவனம் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது. சாத்தியமில்லை. கவனம் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் வாசிக்கமாட்டார்கள். பேசாமல் அடுத்த விஷயத்துக்குப் போய்விடுவார்கள்.

கங்கை அமரன் சொன்னார். “அண்ணனின் இந்த வகையான பிஜிஎம் எப்படி நிற்கப்போகிறது நிலைக்கப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். நாம விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பிஜிஎம் பற்றிப் பேசணும்னா அதெல்லாம் யாராலும் முடியாத விஷயம். ஏன்னா அவங்களுடைய பிஜிஎம் ஒன்றே போதும். அதை மட்டுமே எடுத்துக்கொண்டு இன்னொரு முழுப்பாடலுக்கு இசையமைத்துவிட முடியும். அப்படிப்பார்த்தால் அந்த பிஜிஎம்மை மட்டுமே தனியாக எடுத்து நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான புது மெட்டுக்களைப் போட்டுவிட முடியும். அப்படிப்பட்ட பிஜிஎம்கள் அவை.  

அவங்களுடைய எந்தப் பாடலை வேணும்னாலும் சொல்லுங்க நான் அதை அப்படியே பிஜிஎம் உட்பட வாயாலேயே இசைத்துக்காட்டிவிடுவேன். அந்த அளவுக்கு மனப்பாடம். மனப்பாடம் மட்டுமல்ல எங்க ரத்தத்துலேயே ஊறிப்போய்க்கிடக்கற பாடல்கள் அவர்களுடையவை”

அவர் மேலும் சொன்னார். “விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைச்சது ஆகட்டும், தனியா விஸ்வநாதண்ணன் இசையமைச்ச பாடல்கள் ஆகட்டும். அத்தனைப் பாடல்களும், வெறும் முக்கியமான பாடல்கள்னு இல்லை – அவங்களுடைய அத்தனைப் பாடல் கலெக்ஷனும் எங்களிடம் இருக்கு. ஒரேயொரு படம், ஒரேயொரு பாடல்கூட மிஸ் ஆகலை. அத்தனையும் இருக்கு. இந்தக் கலெக்ஷன் விஸ்வநாதண்ணனிடம்கூட இல்லை. விஸ்வநாதண்ணனே “பல பாட்டுக்கள் எங்கிட்ட இல்லை. குடுப்பா” அப்படின்னு என்னைக் கேட்டிருக்காரு. அந்த அளவுக்கு அந்த நாட்களிலிருந்தே பொக்கிஷம் போல் சேர்த்துவைத்திருக்கிறோம்”

இதனையெல்லாம் இங்கே சொல்வதற்குக் காரணம் ஏதோ அண்ணனுக்கும் தம்பிக்கும் இப்போது ஆவதில்லை (இதுவே உண்மையா என்பது தெரியாது) என்பதனால் அவர் இப்போது இப்படிப் பேசுகிறார் என்பதுபோல் யாரும் பின்னூட்டம் போட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். இருவரும் ஒன்றாக இருந்த காலத்திலேயே எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டவர்தான் கங்கை அமரன்.

கங்கை அமரனிடம் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அதைவிடவும் அவரைப்பற்றி நினைத்தால் உடனே ஞாபகம் வரக்கூடிய சுவாரசியமான சம்பவம் ஒன்றும் இருக்கிறது. கங்கைஅமரனுக்கு நிறைய பெயர்கள். கங்கை அமரன் என்பது மூன்றாவது பெயர் என்று நினைக்கிறேன். பிறந்தபோது வைத்த பெயர் வேறு. அதற்குப்பின்னர் அவருடைய பெயர் அமர்சிங். சினிமாவில் வாய்ப்புத்தேடிய சமயங்களில் அவரது பெயர் அமர்சிங்தான். தம்மை ஒரு பாடகராக நிலைநிறுத்திக்கொள்ளத்தான் அமரன் வந்தாராம். அப்படி வாய்ப்புத்தேடி கவிஞர் வாலியை அணுகியிருக்கிறார். வாலி சொன்னாராம். “உன்னுடைய பெயர் அமர்சிங். நீ பாடத்தெரியும் என்கிறாய். வா இப்படி. அமர். அமர்ந்தாயிற்றா சிங்” என்றாராம். இதையெல்லாம் கங்கை அமரன் சொல்லிக்கேட்கவேண்டும்.

ஆயிற்றா?




இதோ இன்றைய தினத்தந்தியில்(06-07-2013) இன்னொரு செய்தி வந்திருக்கிறது. இதுவும் கங்கை அமரன் பேசியதுதான். தேனான்டாள் பிலிம்ஸ் ராமநாராயணன் தயாரித்து இயக்கும் 126-வது படமான ‘ஆர்யா சூர்யா’ படவிழாவில் கங்கை அமரன் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அவர் கூறுகிறார். “நான் இளையராஜாவின் பாடல்களைக் காப்பியடித்து இசையமைத்து இருக்கிறேன். 

அதேபோல் இளையராஜா எம்எஸ் விஸ்வநாதன் பாடல்களை காப்பி அடித்து இருக்கிறார். எத்தனைப் பாடல்கள் என்று என்னால் சொல்லமுடியும். எந்தெந்த பாடல்கள் என்பது எனக்கும் இளையராஜாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.


இளையராஜாவுக்கு கிராமிய பாடல்களுக்கு மட்டுமே இசையமைக்க முடியும் என்று முதலில் பேசினார்கள். சிகப்பு ரோஜாக்கள் படம் அதை மாற்றிக்காட்டியது. கர்நாடக சங்கீதமும் அவருக்குத் தெரியும் என்று நிரூபித்தது சிந்துபைரவி படம்” மேற்கண்டவாறு கங்கை அமரன் பேசினார் என்று சொல்கிறது தினத்தந்தி.

இந்தப் பதிவுக்கு முன்னர் இளையராஜா எழுதும் நோட்ஸ் பற்றிய பதிவொன்றை எழுதுவதாக டி.சௌந்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்தேன். அதனை முந்திக்கொண்டது இந்தப் பதிவு.

இந்தச் செய்திகளையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதற்குக் காரணம் ‘இளையராஜாவையும் தமிழுக்குக் கிடைத்த நல்லதொரு இசையமைப்பாளர் என்ற பொதுப்பார்வையில் பாருங்கள்’ என்பதற்குத்தான். அதில்லாமல் ‘பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா, மொசார்டுக்கு இசை சொல்லிக்கொடுத்தவர், பாக்கிற்கு டியூஷன் எடுத்தவர்’ என்றெல்லாம் சொல்வதால்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. இதோ இப்போதுகூட ஃபேஸ்புக்கில் யாரோ எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர் சொன்னார். ‘இளையராஜா தமிழ்நாட்டில் பிறக்காமல் வெளிநாட்டில் மட்டும் பிறந்திருந்தால் பீத்தோவனை விடவும் உயர்வாக மதிக்கப்பட்டிருப்பார்’ என்று எழுதியிருக்கிறார்களாம். கங்கை அமரன் ‘இளையராஜா எம்எஸ்வியைக் காப்பியடித்துப் பாடல்கள் போட்டார்’ என்கிறார்.


பீத்தோவன், மொசார்ட், பாக் இவங்கெல்லாம் எங்க ஞானிக்கு முன்னால் ஒண்ணுமே இல்லை என்கிறது ஒரு கூட்டம். இப்படியெல்லாம் எழுதி எழுதியே பாவம் அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.