இந்த வார்த்தை ஒன்றும் சாதாரண வார்த்தை அல்ல. சென்ற சட்டமன்றத்
தேர்தலில் ஒரு ஆட்சியையே கவிழ்த்து வீட்டுக்கு அனுப்பிவைத்த வார்த்தை இது. இப்படி ஒரு
சிறிய புள்ளி கிடைத்ததும் அதனை அப்படியே திரித்து நூலாக்கி தமிழகத்தின் ஐம்பது ஆண்டுகால
வரலாற்றுக்குக் காரணமாயிருந்த ஒரு கட்சியை மூட்டைக் கட்டி மூலையில் எறிந்த வார்த்தை.
இந்த வார்த்தையைக் கேட்டவர்கள் அப்படியே மலைத்துப் போனார்கள்.
‘எத்தனைச் சாதாரணமானவர்கள், எவ்வளவு சாதாரண நிலையிலே இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்,
நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலித்தவர்கள்,
கீழ்த்தட்டு மக்களுக்காகக் கட்சி நடத்துபவர்கள் இவ்வளவு ஒரு மோசமான ஊழலையா, இப்படி
ஒரு பிரமாண்டமான ஊழலையா செய்வார்கள்? ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்றால் எப்படி?
இப்படி ஒரு தொகையைக் கணக்குப் பாடத்தில்கூட எழுதிப் பார்த்ததில்லையே. இவ்வளவு பணத்தையா
கொள்ளை அடித்தார்கள்?’ என்று வியந்தார்கள். மூக்கின் மேல் விரலை வைத்தார்கள். இவ்வளவு
பெரிய ஊழலைச் செய்தவராக ஆ.ராசா அடையாளப்படுத்தப்பட்டார்.
அத்தனைப் பணமும் ஆ.ராசாவுக்கும் அவரது தலைவர் கருணாநிதிக்கும்
நேரடியாகக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டதாக ஒரு பிம்பம் புனையப்பட்டது.
மாபெரும் பொய்ச் சித்திரம் ஒன்று வானத்தைவிடப் பெரியதாக வரையப்பட்டு
மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
இதனால் பலன் பெற நினைத்தவர்கள் திட்டமிட்டு இதனை பூதாகாரமாக்கினார்கள்.
ஊடகங்கள் தங்களின் அசுர பலத்தினால் இதனை எத்தனைப் பெரிதாகக்
காட்டமுடியுமோ அத்தனைப் பெரிதாகக் காட்டின.
மக்களுக்கு மலைப்பு மட்டுமல்ல, கோபமும் தலைக்குமேலே கிளம்பியது.
‘இவ்வளவு பெரியதான ஒரு ஊழல், இத்தனைப் பெரிதான ஒரு திட்டம்
இந்த நாட்டின் தலைமை அமைச்சரை மீறி, அந்தத் தலைமை அமைச்சரை ஆட்டுவித்துக்கொண்டிருப்பவர்களை
மீறி, இந்த நாட்டின் நிதி அமைச்சரை மீறி, சம்பந்தப்பட்ட வலிமை வாய்ந்த அரசுத் துறைகளை
மீறி ஒரு சாதாரண அமைச்சரால், அதுவும் ஆளும் கட்சியுடைய அமைச்சரால்கூட அல்ல, ஆளும் கட்சியின்
கூட்டணியில் உள்ள அமைச்சரால்- சுயமாகத் தானே முடிவெடுத்துச் செய்யமுடியுமா?’ என்ற சாதாரணக்
கேள்விகூட எந்த ஒரு குடிமகனுக்கும் வரவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் ‘வர’விடவில்லை.
திரும்பத் திரும்ப இந்த ஒற்றை வரியே நாடு முழுக்க பரப்பப்பட்டது.
‘ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியாமில்ல, ஆ.ராசா சுருட்டிட்டிராமில்ல’ என்ற வரிகளைத்
திட்டமிட்டு நாடுமுழுக்கப் பரப்பினார்கள்.
பரப்பினவர்களின் நோக்கம் கலைஞர் கருணாநிதியைச்
சிறுமைப் படுத்தி அவர்களுடைய கட்டுக்குள் வைத்துக்கொள்வதாகவும், தாங்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம்
அவரை வரச்செய்வதாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் இதற்கான ஒட்டுமொத்தப் பலனை அறுவடை செய்தவர் ஜெயலலிதாதான்.
அவர் பாட்டுக்கு எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல்
தான் உண்டு தன் வேலை உண்டு என்று நீட்டப்பட்ட அறிக்கைகளில் கையெழுத்து மட்டும் போட்டுக்கொண்டிருந்தவர்
அசால்ட்டாக சில நாட்கள் மட்டுமே தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில்
உட்கார்ந்துவிட்டார்.
அனைத்துக்கும் காரணம் இந்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிதான்.
இந்தத் திட்டத்தில் ஊழலே நடைபெறவில்லையா, நடைபெற்ற ஊழலில்
ஆ.ராசாவுக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்விகளுக்குள்ளேயெல்லாம் நான் போக விரும்பவில்லை.
இன்றைக்கு இந்த நாட்டில் கேவலம் ரோடு போடுவதிலிருந்து நடைபெறும்
எல்லா விஷயங்களிலும் ஊழல் விளையாடாத இடமே இல்லை.
சாதாரணமாக நகரசபை விவகாரங்களிலேயே
ஊழல் புகுந்துவிடுகிறது நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், டான்சி ஊழல், மணற்கொள்ளை ஊழல்
என்று நிறைய ஊழல்களைக் கேள்விப் படுகிறோம். அப்படியிருக்க பல ஆயிரம் கோடிகள் புரளும்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் இருக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை.
ஊழல்கள் மற்றும் நிதி பெறுவது ஆகியன பற்றி சமீபத்தில் நடைபெற்ற
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் எம்எல்ஏ திரு பலராமன்
ஒரு கருத்தைச் சொன்னார். “இந்த நிதி வாங்கறது ஊழல் இதெல்லாம் எல்லாக் கட்சிகளும்தான்
பண்ணுகின்றன. இதையெல்லாம் ஒண்ணுமே செய்யமுடியாது. யார்கிட்ட இருந்தும் பணம் வாங்கலைன்னா
அரசியல் கட்சிகள் கட்சியே நடத்த முடியாது. அவை பணத்துக்கு எங்கே போகும்? யார் கொடுப்பார்கள்?
பொதுமக்கள் கொடுப்பார்களா? ஒரு ரூபாய்க்கூட தரமாட்டார்கள்.
மக்களிடமிருந்து பணம் வாங்கி
கட்சி நடத்தமுடியுமா என்ன? அதெல்லாம் சும்மா பேச்சு. ஒருத்தனும் ஒரு பைசாகூடத் தரமாட்டான்.
எதோ இங்கே பார்வையாளர்களா உட்கார்ந்திருக்கிற மக்களிடம் கேட்டுப் பாருங்களேன். யாராவது
ஒரு பைசா தரத் தயாராண்ணு? யாரும் தரமாட்டாங்க………….ஆக இந்த மாதிரிப் பணமெல்லாம் வேற
இடத்துல இருந்துதான் வந்தாகணும்” என்றார். இது மிகவும் சத்தியமான வார்த்தை.
ஆக ஊழல்கள் எல்லாக் கட்சிகளிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
மேலே சொன்ன எம்எல்ஏவைப் போல அதனை நியாயப்படுத்துவதும்
என் நோக்கமல்ல. ஆனால் ஒட்டுமொத்த ஊழலையும் ஒருத்தரின் மீது மட்டுமே சுமத்துவதும், அதற்கு
ஒரு கட்சியை மட்டுமே ஆளாக்குவதும் மற்றவர்கள் எல்லாம் தப்பித்துக்கொண்டு பதுங்குவதும்,
சம்பந்தமேயில்லாத ஒருவர் அதற்கான பலனை அறுவடை செய்துகொண்டு
உத்தம வேடம் போடுவதும் ஏற்புடையது அல்ல என்பதுதான் இங்கே சொல்லவருவது.
‘இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். இதெல்லாம் மக்களிடம்
போய்ச்சேராது’ என்று ஆரம்பத்திலிருந்தே அசட்டையாக இருக்க ஆரம்பித்தது திமுக. இதுதான்
திமுக செய்த மிகப்பெரிய தவறு.
முதலில் இருந்தே இதனை சரியான முறையில் கையாளத் தவறிய திமுக
கத்தி தன்னுடைய கழுத்தை அறுக்க ஆரம்பித்தபிறகுதான் விழித்துக்கொண்டு தடுக்க நினைத்தது.
ஆனால், அதற்குள் விபரீதம் திமுகவின் கையை மீறிப் போய்விட்டதையும் பார்த்தோம்.
தணிக்கைக் கணக்காளரின் அறிக்கை ‘இந்தத் திட்டத்தினால் ஒரு
லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இழப்பு’ என்றுதான் இருந்தது.(பிறகு இந்த இழப்புத் தொகையே
வெறும் முப்பதாயிரம் கோடிதான் என்று வந்தது வேறு விஷயம்)
ஆனால் இதனையே ‘ஆ. ராசா வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போன
தொகை ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி’ என்று ‘கட்டமைத்தார்களே’ அந்த மகானுபாவர்களைத்தான்
ஜெயலலிதா காலாகாலத்திற்கும் நினைத்து நினைத்துத் தொழ வேண்டும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த விவகாரங்களெல்லாம் வெட்ட
வெளிச்சமாகி எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த பிறகும்கூட சில இணைய உலகப் புலிகள் தொடர்ந்து
‘ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி’ என்றே எழுதிக்கொண்டிருப்பது கடைந்தெடுத்த கயமையைத்
தவிர வேறொன்றுமில்லை.
இந்த இழப்பீடு தொகையைப் பற்றி கல்வியாளர் ரமேஷ் பிரபா ஒரு
உதாரணம் சொன்னார். சுருளிராஜன் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வந்தது. மகன்
சிக்கனமாக இருக்க வேண்டியதுபற்றி அவனுடைய தந்தை அவனுக்கு நிறைய யோசனைகள் சொன்னாராம்.
அந்த யோசனைகளைப் பயன்படுத்திய அந்தப் பையன் அடுத்த மாதமே அதற்கான பலனைத் தந்தையிடம்
தெரிவித்தானாம். “அப்பா நீ சொன்னபடியே சிக்கனமா இருக்க ஆரம்பிச்சுட்டேன்பா. தினசரி
அஞ்சு ரூபாய் மிச்சம் பிடிச்சுட்டேன்பா” என்றானாம்.
அப்பா வியந்து “தினசரி அஞ்சு ரூபாயா எப்படிடா மிச்சம் பிடிச்சே?”
“அதுவந்து ஸ்கூல்லருந்து திரும்பறதுக்கு பஸ்ஸுக்குக் காசு
கொடுத்தே இல்லையா? தினமும் அஞ்சு ரூபா டிக்கெட். நான் அஞ்சு ரூபா டிக்கெட் எடுக்காமல்
பஸ் பின்னாடியே ஓடி வந்துருவேன். அப்ப அஞ்சு ரூபா மிச்சம்தானே” என்றானாம்.
கேட்ட அப்பா தலையில் கைவைத்துக்கொண்டாராம். “அட முட்டாப்பய
மவனே, மோசம் போயிட்டியேடா. அஞ்சுரூவா டிக்கெட் எடுக்காம நீ பஸ் பின்னாடி ஓடி வந்ததுக்குப்
பதிலா ஆட்டோ பின்னாடி ஓடி வந்திருந்தா நாளொன்னுக்கு ஐம்பது ரூபாய் மிச்சம் புடிச்சிருக்கலாமே”டான்னாராம்!
கணக்காயரின் கணக்கு இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
சரி விஷயத்துக்கு வருவோம். இதில் திமுகவுக்குச் சேர்ந்தது
என்று சொல்லப்பட்டது இருநூறு கோடிகள்.
இந்த இருநூறு கோடிகளை வைத்துத்தான் கலைஞர் டிவி துவங்கப்பட்டது
என்றுதான் வழக்குப் பயணிக்கிறது.
இந்த இருநூறு கோடிகள் ஸ்பெக்ட்ரம் மூலம் திமுகவுக்கு வழங்கப்பட்டதா
என்ற விவகாரத்திற்குள்ளெல்லாம் நுழைய விரும்பவில்லை.
ஆனால் எனக்கு இங்கே உதிக்கும் வேறொரு சந்தேகத்திற்கு விடை
தேட வேண்டியிருக்கிறது.
அதாவது கலைஞர் டிவி என்ற ஒரு புதிய சேனல் துவங்க இருநூறு
கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்கிற செய்தி நமக்கு இங்கே கிடைக்கிறது.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஒரு புதிய சேனல் துவங்க
இருநூறு கோடி ரூபாய் தேவை.
சரியா?
அந்தக் கணக்குப்படி கலைஞர் டிவி துவங்கத் தேவைப்பட்ட அந்த
இருநூறுகோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் மூலம், ஆ.ராசா மூலம் வந்து சேர்ந்தது. இதுதானே குற்றச்சாட்டு?
ரொம்பவும் சரி………………அப்படியானால் ஜெயா டிவி துவங்க ஒரு ‘இருநூறு
கோடி’ எங்கிருந்து வந்து சேர்ந்தது?
மெகா டிவி துவங்க எங்கிருந்து வந்தது?
கேப்டன் டிவி துவங்க எங்கிருந்து வந்தது?
மக்கள் டிவி துவங்க எங்கிருந்து பணம் வந்தது?
இன்னமும் நிறைய அரசியல் கட்சிகள் அவரவரும் தனித்தனி சேனல்கள்
வைத்திருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் இந்த ‘இருநூறு கோடிகள்’ எங்கிருந்து வந்தன?
எப்படியோ அவதூறுகளும் முடிந்துவிட்டன; அறுவடையும் முடிந்துவிட்டது.
அடுத்த தேர்தலும் இதோ வந்துவிட்டது.
இதே ராசா திரும்பவும் தைரியமாய் மக்களைச் சந்திக்கிறார்.
அதைவிட தைரியமாய் கோர்ட்டுக்குப் போகிறார். பார்லிமெண்ட் விவகாரக் குழுவில் தாம் நேரடியாக
சாட்சியமளிக்கத் தயார் என்கிறார். எங்கே
வரவேண்டுமோ சொல் வருகிறேன் என்கிறார். எந்த
ஊடகவியலாளரையும் அச்சமின்றி எதிர்கொள்கிறார்.
தேர்தலில் நின்றிருக்கிறார்.
அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால்
வழக்கை அவர் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் விதம் அவர் மீதான வியப்பை அதிகப்படுத்துகிறது.
ராசா மீது சுமத்தப்பட்ட இந்த ஊழல், ஈழ விவகாரம், இரண்டு மணிநேர
மின்வெட்டு இன்னோரன்ன விவகாரங்களால் ஜாக்பாட் அடித்த ஜெயலலிதா நாடாளுமன்றத்துக்கான
தேர்தல் வந்ததும் பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் உற்சாகமாக எல்லாரையும் முந்திக்கொண்டு
தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.
இவர் இறங்கிய வேகத்தைப் பார்த்த ஊடகங்கள் ‘நாற்பது தொகுதிகளிலும்
அம்மாவே வெற்றி பெறுவார்’ என்றே எழுதின. அடுத்த பிரதமர் இவர்தான் என்றும் எழுதின. தமிழகத்துப்
போஸ்டர்கள் எல்லாம் அடுத்த பிரதமர் என்றுகூட அல்ல, பிரதமரே ஜெயலலிதாதான் என்றும் உலக
நாட்டுத் தலைவர்கள் எல்லாரும் இவர் முன்பு கைகட்டிக்கொண்டு இருப்பது மாதிரியெல்லாம்
சென்னை முழுக்க தூள் கொட்டின.
நம்முடைய ஊடகங்களுக்குப் பெரிய பிரச்சினை.
ஊடகங்கள் ஒரு பக்கம் மோடியைப் பிரதமர் ஆக்குவதாக உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நானும் பிரதமராவேன் என்று ஜெயலலிதாவும் களத்தில் இறங்கிவிட்டார்.
இப்போது என்ன செய்வது?
சிக்கல் என்னவென்றால் இருப்பது ஒரேயொரு இந்தியாதான்.
இரண்டு இந்தியா இருந்திருந்தால் ஊடகங்களுக்கு சுலபமாகப் போயிருக்கும்.
மோடிக்கு ஒரு இந்தியா, ஜெயலலிதாவுக்கு ஒரு இந்தியா என்று பிரித்துக் கொடுத்துவிட்டிருப்பார்கள்.
முடியவில்லை. இதுதான் ஊடகங்களின் பிரச்சினை.
ஏனென்றால் இந்தத் தேர்தலை நடத்துவதே ஊடகங்கள்தாம்.
மோடி, ஜெயலலிதா, மோடி, ஜெயலலிதா என்று எத்தனை ரவுண்டு வரமுடியுமோ
அத்தனையும் வந்தாகிவிட்டது.
எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் உள்ளூர் விவகாரத்துக்குத்தான் முக்கியத்துவம் தருவது என்ற கொள்கையில் விடாப்பிடியாய்
இருக்கும் தினத்தந்திகூட ஒரு நாளைக்குப் பதினேழு பதினெட்டுச் செய்திகள் மோடியைப் பற்றியது
என்று போட்டாகிவிட்டது. மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் பேசுகிறார்(அவர் மத்திய பிரதேசத்தில்
பேசுவதற்கு தமிழ்நாட்டுக்காரன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை) என்பதுவரை தினத்தந்தி
செய்தியாகிவிட்டது.
ஜெயலலிதா பற்றிய செய்திகளைக் கேட்கவே வேண்டாம். பக்கம் பூராவும்
ஜெயலலிதா பேச்சுக்கள்தாம்) மிச்சமீதிக் கூட்டங்களிலாவது ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு
அம்புலிமாமா கதையை எழுதிக் கொடுப்பார்கள்.
அவரும் அந்தக் கதையைப் படித்துவிட்டு கருணாநிதியை
ஆசை தீர நான்கு வார்த்தைத் திட்டிவிட்டுப் போவார். சுவாரஸ்யமாய் இருக்கிறதோ இல்லையோ
வித்தியாசமாகவாவது இருக்கும். தேர்தல் கூட்டங்களில் அம்புலிமாமா கதையும் இல்லை. வித்தியாசமும்
இல்லை.
தேர்தல் கூட்டங்களிலேயே இத்தனை போரடிக்கும் உரை இவருடையதாகத்தான்
இருக்கவேண்டும்.
தவிர, அந்த உரை படிக்கப்படுவதற்கு ஆகும் செலவு ஒவ்வொரு உரைக்கும்
சுமார் ஒரு கோடி என்பது யோசிக்கவேண்டிய விஷயம். ஒவ்வொரு ஊரிலும் ஹெலிபேட் அமைக்க ஆகும்
செலவே முப்பது முப்பத்தைந்து லட்சம் என்கிறார்கள். மற்றபடி ஹெலிகாப்டர் வாடகை, மேடைச்
செலவுகள், மக்களைக் கூட்டிவர ஆகும் செலவு என்றெல்லாம் பார்த்தால் ஒவ்வொரு கூட்டத்திற்குமான
செலவு ஒரு கோடி ரூபாய் என்கிறார்கள். இந்தச் செலவுகளுக்கான பணமெல்லாம் எங்கிருந்து
வருகிறது என்பதை காங் பிரமுகர் பலராமனைத்தான் கேட்க வேண்டும்.
தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள். மக்களுக்கும் தனக்கும்
எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாத ஒரு முதலமைச்சரை அவர்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறார்கள்.
அவர் மக்களைச் சந்திப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளைச் சந்திப்பதில்லை.
பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. ஆனாலும் ஊடகங்கள் அவரை எந்தவகையிலும் விட்டுக்கொடுப்பதே
இல்லை.
இந்த அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்?
இந்தத் தேர்தலில் பார்த்தால் அம்மையாரின் ஆரம்ப சுருதி மட்டுமல்ல
பத்திரிகைகளின் ஆரம்ப சுருதியும் மிகவே சுருங்கிவிட்டது.
சுருதி சுணங்கிப்போனதற்கு கூட்டமின்மை மட்டுமே காரணமில்லை.
பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கும் ஒரு காரணம்.
வேறு ஏதோ காரணங்களுக்காக எப்போதோ நடந்திருக்க வேண்டிய அரசுத்தரப்பு
வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதத்தை என்னென்னவோ செய்து தள்ளிப்போட்டுக் கொண்டே வர, கோக்குமாக்கான
நேரம் பார்த்து குரங்கு குதித்த கதையாக தேர்தல் நேரம் பார்த்து பவானி சிங் “கொடநாட்டிலே
எண்ணூத்து முப்பத்து நான்கு ஏக்கர், சிறுதாவூரிலே……………” என்று பட்டியல் வாசிக்க ஆரம்பிக்க
ஜெயலலிதா அதிர்ந்தாரோ இல்லையோ அதிர்ந்து போனவை நம் ஊடகங்கள்தாம்.
அட இது என்ன பெரிய விஷயம், எத்தனையோ விஷயங்களை இரும்புத்திரைப்
போட்டு மூடியிருக்கிறோம். இதை மூட மாட்டோமா என்று ஊடகங்கள் நினைத்து இந்தச் செய்திகளை
மூட ஆரம்பிக்க இது தேர்தல் நேரமென்பதால் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு கலைஞரும் ஸ்டாலினும்
திரும்பத் திரும்ப இதே செய்திகளைப் படிக்க…………….மற்ற திமுககாரர்கள் எல்லாரும் கூவித்தீர்க்க….வீட்டுக்கு
வீடு கச்சிதமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டன திமுக ஆதரவு சேனல்கள்.
முதலில் அதிமுக சுலபமாக அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்
என்றவர்கள், அடுத்து முப்பத்தைந்து என்றார்கள், இருபத்தைந்து என்றார்கள், இப்போது இருபத்தி
இரண்டு தொகுதிகளில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும், திமுக பதினாலு இடங்களைப் பெறும்
பாஜக கூட்டணி மூன்று இடங்களைப் பெறும் என்று
இறங்கிவந்து நிற்கிறார்கள்.
யார் யார் எத்தனை இடங்களைப் பெறுவார்கள் என்பதைப் பிறகு பார்க்கலாம்.
ஊடகங்களாலும் இணையப் புலிகளாலும் ஒன்றுமேயில்லை என்று ஊதித்தள்ளப்பட்ட திமுகவுக்கு,
அதிலும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில்
கிடைத்திருக்கும் வரவேற்பும் கூடும் மக்கள் கூட்டமும் தமிழக அரசியலில் நிச்சயம் வேறு
கணக்குகளைப் போட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை.
அரசியல் தலைவர்களில் யாருக்குமே கூடாத கூட்டம் பரவலாக எல்லா
மாவட்டங்களிலும் ஸ்டாலினுக்குக் கூடியது என்பதுதான் இந்தத் தேர்தல் உணர்த்தும் பாடம்.
இந்த முக்கிய மாறுதலைப் புறக்கணிப்பதற்கில்லை.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பேயே ஸ்டாலின் குறிப்பிடத்தகுந்த
தலைவராகிவிட்டார் என்பதுதான் இங்கே உணர்த்தப்படும் செய்தி.
உடனடியாக, ‘கூட்டம் கூடினால் ஓட்டுப் போட்டுருவாங்களா? போன
தடவை வடிவேலுக்குக்கூடத்தான் கூட்டம் கூடியது. ஓட்டுக் கிடைத்ததா’ என்று அனானிமஸ் பெயரில்
தட்டச்சு செய்ய முனைவோர் ஒரு நிமிடம் நில்லுங்கள்.
ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் கூடவில்லை
என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அப்போது இந்த ஊடகங்களும் இணையப் புலிகளும் என்ன எழுதியிருப்பார்கள்
என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
ஸ்டாலினையும் திமுகவையும் எத்தனைக் கேவலப்படுத்த முடியுமோ
அத்தனையையும் செய்திருப்பார்களா இல்லையா?
தவிர, கூட்டத்துக்கு மக்கள் வருகை தராவிட்டால்தான் ஓட்டு
விழும் என்பது என்ன லாஜிக் என்பதும் புரியவில்லை.
ஊடகங்கள் எல்லாவற்றையும் கட்டமைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் ஊடகங்களின் கட்டமைப்புகள் எப்போதுமே வெற்றி பெறுவதில்லை என்பதையும் சேர்த்தே
புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.
இதுபோலவே முன்பொரு தேர்தலில் மொத்த ஊடகங்களும் சேர்ந்து சொன்ன
அத்தனைக் கணிப்புகளும் பொய்யாகிப் போனபோது முரசொலியில் கட்டம் கட்டி எழுதியிருந்த ஒரு
பெட்டிச் செய்திதான் நினைவு வருகிறது.
ஹிண்டுவின் சிண்டு பறந்தது.
துக்ளக்கின் டோப்பி எகிறியது.
எக்ஸ்பிரஸ் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது………………என்பதுபோல்
கேலி செய்திருந்தார்கள்.
இந்தத் தேர்தல் முடிவுகள் எதை உணர்த்தப்போகின்றன என்பதைப்
பொறுத்திருந்து பார்ப்போம்.



.jpg)