Saturday, April 4, 2015

பெண்கள் விரும்பும் பாடல்கள்

பெண்கள் விரும்பும் திரைப்படப் பாடல்கள் குறித்து ஒரு பெண்மணி எழுதிய கட்டுரை ஒன்று மார்ச் 2015 உயிர்மை இதழில் வந்துள்ளது. ‘கூட்டாளிகளின் குரல்கள்’ என்ற அந்தக் கட்டுரையை ஜா. தீபா என்பவர் எழுதியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே சரியான நிலையைத் தொடுகிறார் அந்தப் பெண்மணி. அவர் அந்தக் கட்டுரையை இப்படித் தொடங்குகிறார். ‘சில நேரங்களில் மனம் வெட்கம் அறிவதில்லை. பேருந்தில் யாரோ ஏதோ புத்தகத்தைப் படித்தால் அதற்கு என்ன? இறங்குவதற்குள் அது என்ன புத்தகம் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா? நிச்சயமாக. இதுபோன்ற அல்ப மனம்கூட இல்லாமல் எனக்கென்ன என்று இருந்துவிடுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது? அதனால் சில சமயங்களில் வாய்விட்டும் கேட்டுவிடுவதுண்டு. “அது என்ன புத்தகங்க?”

சமீபத்தில் இதுபோன்ற அல்பத்தனங்களில் இன்னொன்றும் கூட சேர்ந்துவிட்டிருக்கிறது. 

பேருந்துகளிலும் மின்சார ரயில்களிலும் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் காதுகளில் மாட்டியிருக்கிற ஹெட்ஃபோனில் அப்படி என்ன பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? இது சுவாரஸ்யமிக்க கேள்வியாகவே தோன்றுகிறது. ஏனெனில் சில பெண்கள் தங்களையும் அறியாமல் புன்னகைக்கிறார்கள். சிலர் தூங்கிவிழுகிறார்கள். இன்னும் சிலர் அவசரமாகப் பாடலை மாற்றுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்றுகொண்டு பயணம் செய்யும்போது ‘யதார்த்தமாக’ கண்கள் அவர்கள் செல்போனை கவனிக்கையில் சில வேளைகளில் கண்டுபிடித்தும் விடலாம். 

அப்படியானதொரு பார்வையில் ஒரு பெண் லயித்துக் கேட்டுக்கொண்டிருப்பது Hits of 60s என்பதாக அந்தப் பெண்ணின் மொபைல் திரை காட்டியது. 

என்னுடைய மேலான ஆச்சரியத்திற்குக் காரணம், அந்தப் பெண் இருபத்தைந்து வயதிற்குள்ளும், அதிநவீன உடையில் காணப்பட்டதும்தான். 

அந்தப் பெண்ணிற்கு இந்தப் பாடல்களை யார் அறிமுகம் செய்து வைத்திருப்பார்கள்? உலகளவில் வெளியாகிற சமகால இசை உடனுக்குடனே கிடைக்கிறபோது அவள் அந்தக் காலத்துப் பாடல்களை ஏன் கேட்க விரும்புகிறாள்?’ என்று இப்படிக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார் அவர்.

அதாவது இன்றைய மொத்த ஜனத்தொகையும், அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் அனைவருமே ‘ஒருவருடைய’ பாடல்களை மட்டுமே விரும்பிக் கேட்கின்றனர் என்றும் அனுபவிக்கின்றனர் என்றும், அவருடைய பாடல்களை மட்டுமே தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கின்றனர் என்றும் ஒரு தவறான பிம்பம் இங்கே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அல்லது கட்டமைக்கப்பட்டு வருகிறது.

‘அவருடைய’ பாடல்கள் மட்டுமே கேட்கத் தகுந்தவை என்றோ அல்லது அவருடைய பாடல்களுக்கு இணையாக இதுவரை எந்தப் பாடல்களும் வந்ததில்லை என்றோ, இனிமேலும் வரப்போவதில்லை என்றோ அந்தக் ‘கற்பிதம்’ தவறாக வலியுறுத்தப்படுகிறது.

அவருக்கு முன்பிருந்தே பாடல்கள் இருந்துவந்த போதிலும் அவையெல்லாம் துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன என்றும் அப்படித் துருப்பிடிக்க ஆரம்பித்தபோது வந்த இசைப்பிதா இவர்தானென்றும், துவண்டுகிடந்த இசையைத் தூக்கிப்பிடித்த மகான் இவர் ஒருவரே என்றும் கற்பிதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

இதற்கு நடுவே அந்த இசையமைப்பாளர் சிம்பொனி இசைக்கு முயற்சிக்க, ‘சிம்பொனி இசையமைத்த ஒரே இந்தியர், ஒரே ஆசியர்’ என்றெல்லாம் புகழ் மாலைகள் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்தன. 

‘இதுவரையிலும் பூலோகம் கண்டிருக்கவே முடியாத இசைப் படைப்பாளர்’ என்றும் ‘இப்படியொருவர் இதுவரையிலும் பிறந்ததே இல்லை’யென்றும் கொண்டாடினார்கள்.

பிறகு பார்த்தால் அவர் சிம்பொனி அமைக்க முயற்சித்தார் என்றும் அந்த முயற்சி கூடிவரவில்லை என்றும் வெற்றிபெறவில்லை என்றும் தகவல்கள் வந்தன. 

இந்தத் தகவல்களையெல்லாம் அறியாமலேயே அல்லது அறிந்துகொள்ள முயற்சிகள் எதுவும் செய்யாமலேயே தொடர்ந்து புகழ்மாலை சூட்டிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் இணைய உலகிலும் அச்சு ஊடகங்களிலுமாக உருவாகிவிட்டிருந்தது.

இசையை வைத்து இந்த அரசியல் உருவாகியிருந்ததே தவிர இதற்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லை.

எல்லாத் துறைகளிலும் எத்தனையோ பகீரத முயற்சிகள் இங்கே காலந்தோறும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளும் அவற்றில் அடங்கும். அதற்கென்று பயிற்சிகள் பெறுவதும், காலத்தைச் செலவழிப்பதும், உடலை வருத்திக்கொள்வதும், சிந்தனையைச் செலுத்துவதும், திறமையைச் செலுத்துவதும் நடைபெறும்.

எல்லாமே அந்த விஷயம் வெற்றிபெற்றால்தான் பயன்தரும்.

அல்லாமல் ஏதோ காரணத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டால் அத்தனையும் விரயம் என்றுதான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அதற்கான முயற்சிகள் செய்ததாலேயே, அதனை அடைந்துவிட்டதாகவும், சாதித்துவிட்டதாகவும், வெற்றிபெற்றுவிட்டதாகவும் கருதவும் கூடாது. அதனை சாதனையாகச் சொல்லிக் கொண்டாடவும் கூடாது. இதுதான் உலக வழக்கம், மரபு, அடிப்படையான நேர்மை.

பட்டங்கள் பெற்று ஐஏஎஸ் தேர்வுக்கு பகீரத முயற்சிகள் செய்துவிட்டதனாலேயே ஒருவன் ஐஏஎஸ் என்று தன்னை அழைத்துக்கொள்ளக்கூடாது. முடியாது. அதற்கான மொத்தத் தேர்வுகளிலும் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் ஐஏஎஸ் என்று அழைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் இளையராஜா சிம்பொனிக்கு வாசித்ததையே சிம்பொனியில் சாதித்துவிட்டார் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

அது இல்லையென்று சுட்டிக்காட்டியதும் ‘அதற்கு முயற்சி செய்தாரா இல்லையா’ என்று காகிதக் கோபுரம் கட்டினார்கள். அதைவிடக் காமெடியாக ‘அவருக்கு அதற்கான திறமையும் தகுதியும் இருக்கிறதா இல்லையா?’ என்று கொனஷ்டைக் கேள்விகளை எழுப்பினார்கள்.

ஆக அவர்களின் எண்ணமெல்லாம் சிம்பொனி வெளிவந்ததா இல்லையா என்பது முக்கியமில்லை. அவர் சிம்பொனி இசையமைத்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை எவ்விதத் தடங்கல்களும் 
இல்லாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டும் என்பதுதான்.

ஏனெனில் இணையத்தில் வருவதை அப்படியே நம்புவதற்கு இங்கே நிறைய ‘அப்பாவி ஆடுகள்’ தயாராக இருக்கின்றன.

சரி, ஜா. தீபாவின் கட்டுரையைத் தொடர்வோம். அவர் மேலும் சொல்கிறார்…………’பிடித்த பாடல்களைத் தரவிறக்கம் செய்து நினைத்த நேரத்தில் கேட்கும் வசதி அநேகமாய் அலைபேசி இருக்கும் எல்லாருக்குமே இருக்கிறது. அதே சமயம் தனக்கு விருப்பமான ஒரு பாடலைக் கேட்க எல்லாரும் காத்திருந்த காலம் என்று ஒன்றும் இருந்தது. அதிலும் வானொலியோ மின்சாரமோ கூட இல்லாத வீடுகளில் உள்ள பெண்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல்களை எப்படி எப்போது கேட்டிருப்பார்கள்?

திகட்டத் திகட்டப் பாடல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த ஏராளமான ஊடகங்கள் வந்தடைந்த காலத்திற்கு முன்பு மனம் விரும்பிய பாடல்கள் டீக்கடையிலோ, யார் வீட்டு வானொலியிலோ ஒலிபரப்பப்பட்டால் நின்று கேட்பதற்காக ஒரு டீயைச் சொல்லிவிட்டு ஊதி ஊதிக் குடிக்கும் வாய்ப்பும் சாக்குபோக்கும் ஆண்களுக்கு இருந்தது. அதே சமயம் பாடலைக் கேட்கவேண்டும்போல் இருந்தாலும் தவறாக யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எதையோ மறந்துவிட்டு யோசிப்பதுபோல நிற்பதுவும், தயங்குவதுபோல நடப்பதுவும் என பெண்களுக்கும் சில சாக்குப்போக்குகள் இருந்தன.

ஆனால் இன்னும் கொஞ்சம் முன்னோக்கிப் பார்த்தால் மிகவும் பிடித்த ‘முல்லைமலர் மேலே’, ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘நீரோடும் வைகையிலே’ போன்ற பாடல்களைக் கேட்கவேண்டும் போல் இருந்தால் அப்போதைய காலகட்டத்துப் பெண்கள் என்ன செய்திருப்பார்கள்? அதற்கும் வழி வைத்திருந்தார்கள். அது கொஞ்சம் சுதந்திரமான வழிதான். யாரும் இல்லாத நேரங்களிலும், குழந்தையைத் தாலாட்டுகிறவகையிலும் அப்பாடல்களைப் பாடிப் பாடித் தீர்த்திருக்கிறார்கள்.’ – என்று நீள்கிறது கட்டுரை.

இந்தப் ‘பாடிப் பாடித் தீர்ப்பது’ என்பதுதான் பல பாடல்கள் அந்தக் காலம்தொட்டு இன்றைக்கு வரைக்கும் நீடித்துவிளங்குவதன் ரகசியம்.

இப்படிப் பாடித் தீர்ப்பதற்கு அந்தப் பாடலின் மெட்டும், பாடலின் வரிகளும் எளிமையாகவும் அதே சமயம் எல்லாருக்கும் புரியும் படியாகவும் இருக்கவேண்டியது அவசியம்.

புரிவது மட்டுமின்றி பாடலின் வரிகளிலும், மெட்டிலும் ஒரு வசீகரம் இருக்கவேண்டும். குறிப்பாக பாடலின் வரிகள் அழகைச் சுமந்ததாக இருக்கவேண்டியது அவசியம். 

இந்த வசீகரத்தை உணர்ந்து அதனை இலக்கியத்தரம் குன்றாமல் கொடுத்துப் புகழ் அடைந்தவர்களில் பெரும்புகழ் அடைந்தவர்தான் கண்ணதாசன். 

அதனால்தான் எத்தனையோ கவிஞர்கள் இருக்க இன்றைக்கும் மகா கவிஞராகக் கொண்டாடப்படுகிறார் அவர். அவரை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. பா வரிசைப் படங்களில் பாடல்கள் யாவும் காலங்களைத் தாண்டியும் நிற்பதற்குக் காரணம் அந்தப் பாட்டுவரிகளின் ஜீவன்தான்.

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கர்நாடகத்தில், அதிலும் பெங்களூரில் ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களை எல்லா மொழியினரும் கொண்டாடிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. (இன்றைக்கும் தமிழ்ப் படங்களைப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அதுவெறும் திரைப்படங்கள் பார்ப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது) அன்றைக்கெல்லாம் தங்கள் வாழ்க்கையைப் படங்களோடு இணைத்துப் பார்த்துக்கொண்டார்கள். பாடல் வரிகளில் ஆறுதலும் சுகமும் தேடினார்கள்.

அப்படித் தேடியவர்களுக்கு கண்ணதாசனின் பல தத்துவார்த்தப் பாடல்கள் பற்றுக்கோடுகளாக இருந்தன.

‘போனால் போகட்டும் போடா, வீடுவரை உறவு, சட்டிசுட்டதடா கை விட்டதடா, மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், ஆறுமனமே ஆறு, நினைக்கத் தெரிந்த மனமே, மனிதன் என்பவன் தெய்வமாகலாம், ஏன் பிறந்தாய் மகனே, பிறக்கும்போதும் அழுகின்றாய், அச்சம் என்பது மடமையடா, வந்தநாள் முதல் இந்தநாள் வரை, உடலுக்கு உயிர் காவல், வாழநினைத்தால் வாழலாம், உள்ளம் என்பது ஆமை, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, எங்கே நிம்மதி, அண்ணன் என்னடா தம்பி என்னடா, சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ’ போன்று எண்ணற்ற பாடல்கள்………..(வெறும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வந்த கண்ணதாசன் பாடல்கள் மட்டுமே இவை. மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் வந்த பாடல்களையெல்லாம் பட்டியலிட்டால் அது எங்கோ போய் நிற்கும்) 

இந்தத் தத்துவார்த்தப் பாடல்கள் இல்லாமல், காதல் பாடல்கள், காதல் தோல்விப்பாடல்கள், குடும்பம் பாசம் உறவு, சோகப் பாடல்கள், நம்பிக்கைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் என்று மனிதர் ‘அடித்து ஆடாத’ துறையே இல்லை.

இவருடைய பல பாடல்களை சேகரித்து வைத்த கன்னட நண்பர்கள் உண்டு.

நான் பணியாற்றிக்கொண்டிருந்த பெரிய தொழிற்சாலையில் பணிபுரிந்த பல கன்னட நண்பர்கள் பாடல் ரிகார்டுகளை வாங்கி வீட்டில் வைத்து என்னைத் தேடிவந்து பல பாடல்களை சொல்லச்சொல்லிக் கன்னடத்தில் எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். பல வார்த்தைகளுக்குக் கன்னடத்தில் அர்த்தமும் கேட்டு எழுதிக்கொள்வார்கள்.

கன்னடத்திரையுலகில் மிகப்பெரும் பாடலாசிரியராக ஏறக்குறைய பன்னிரெண்டாயிரம் பாடல்கள் எழுதி மிகப்புகழ்பெற்ற கவிஞராக வலம்வந்த திரு ஆர்.என்.ஜெயகோபாலை ஒருமுறை ஒரு உணவுவேளையில் அவருடைய அண்ணன் வீட்டில் சந்திக்க நேர்ந்து இந்த விஷயத்தைச் சொன்னபோது “கண்ணதாசன்தானே சார் எங்களுக்கெல்லாம் கைடு” என்றார் ஒற்றை வரியில்.
பாடலின் வசீகரம் ஒருபுறமிருக்க காந்தம்போல் கவர்ந்திழுக்க வேண்டியது அந்தப் பாடலின் மெட்டு. மெட்டும் வரிகளும் கலந்து ஒரு அற்புதமான லயத்தில் இணைந்துவிட்டால் அந்தப் பாடல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்து நிற்கும் உன்னத நிலைக்குச் சென்றுவிடும். எழுபது வரையிலான பாடல்கள் இன்றும் நிலைத்து நின்றிருப்பதன் சூட்சுமம் இதுதான்.

அப்படியில்லாமல் மெட்டுக்கள் சுமாராக இருக்க வரிகளை மட்டுமே நம்பி நிற்கும் பாடல்கள் காட்சியின் சிறப்புக்களை வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர மிக அருமையான பாடல் என்ற பட்டியலுக்கு வராது.

அதேபோல் வரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் வெறும் இசையை மட்டுமே நம்பி, வாத்தியங்களின் சத்தங்களுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் பாடல்களும்  கேட்பதற்கு வேண்டுமானால் வித்தியாசமாக இருந்து அந்த நேரத்திற்கான இன்பத்தைத் தரலாமே தவிர, கேட்பவர்களின் மனதில் படிந்திருந்து எந்தக் காலத்திலும் நின்று நிலைக்கும் வாய்ப்புக்களை மிகவும் குறைந்தே பெறமுடியும்.

வெற்றிபெற்ற பாடல்கள் என்பன வரிகளும் இசையும் அதிஅற்புதமாக ஒன்றிணைந்து முயங்கிக் கிடக்கும் பரவசநிலையை எய்திய வடிவம் என்பதே சாலவும் பொருந்தும். 

ஒரு பாடல் காலத்தைக் கடந்து நிற்பதற்கு அந்தப் பாடல் கேட்டவுடன் மனதில் பதிந்துவிட வேண்டும்.

அதன் வரிகள் மனதிற்குள் எழுத்துச் சித்திரங்களாக உருமாறி என்றென்றைக்கும் முணுமுணுப்பதற்குத் தோதாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வரிகளை முணுமுணுக்க வைக்க அதன் இசை, வரிகளுடன் இணைந்து கூடவே வருதல் வேண்டும்.

நம்மைப் பாடத்தூண்ட வேண்டும்.

அப்படிப் பாட முடியாதவர்கள் ‘ஐயோ யாராவது இந்தப் பாடலைப் பாட மாட்டார்களா? கேட்க வேண்டுமே’ என்ற ஆவலை மனதிற்குள் எழுப்புவதாக அமைந்திருக்க வேண்டும்.

இந்த நிலைகளைத் தாண்டி வாழ்க்கை அனுபவத்தில் அந்தப் பாடலின் வரிகளை பேச்சுவழக்கில் மக்கள் எடுத்துக்காட்டுக்களாக வழங்குவதாக இருத்தல் வேண்டும்.


இதையும் தாண்டி இலக்கிய அரங்குகளிலும் வாதப் பிரதிவாதங்களிலும் அந்தப் பாடல்கள் சொல்லப்படுபவையாக பேசப்படுபவையாக அமைந்திருத்தல் வேண்டும்.

 இப்படி அமைந்துவிட்டால் அந்தப் பாடல்கள் எத்தனை ஆண்டுகளை வேண்டுமானாலும் கடந்துநிற்கும் பாடல்களே. இப்படி அமைந்த பாடல்களால்தான் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரமும், கவியரசர் கண்ணதாசனும் வாலியும் மற்றும் சிலரும் இன்னமும் நினைக்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை அந்தக் கட்டுரையும் பேசுகிறது. அந்தப் பெண்மணி சொல்கிறார். “வரி பிசகாமல் இத்தனைப் பாடல்களையும் இதுபோன்ற பெண்கள் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்? சமையலறையில் இருந்தபடி எங்கிருந்தோ வரும் ஒரு பாடலின் வரியினைக் கேட்டுத் தேய்ந்த பின்னர் முணுமுணுத்தபடி அதனைத் தொடரும் அளவுக்கு எத்தனை தடவை அந்தப் பாடல்களைக் கேட்டிருப்பார்கள்? கேட்டது பாதி. படித்தது மீதி.

‘வரும்போது வேட்டைக்காரன் பாட்டுப் புஸ்தகம் வாங்கிட்டு  வாங்க’ என்று கணவனிடம் சொல்லியனுப்பும் பெண்கள் பலரும் இருந்தார்கள்.’ என்பவர் மறக்கமுடியாத ஒரு பெண்மணியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்………….

 ‘இப்படிப் பாடக் கற்றுக்கொண்ட ஒரு பாட்டியை எட்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்திருக்கிறேன். சேரன்மகாதேவியில் இருந்தார். அவருடைய குரல் வளத்திற்காகத் தெருவினரால் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது அவர் இருந்த வீடு. நீர்நிலைத் தொட்டிக்குக் கீழே இருக்கும் கால்பங்கான அறைதான் என்றாலும் அதுவும் வீடுதான். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். எழுந்ததும் பாட ஆரம்பித்துவிடுவார்.

எல்லாமே அக்மார்க் பழைய பாடல்கள்!

அதிலும் கல்யாணியும், சுபபந்துவராளியும் சண்முகப்பிரியாவும் பற்றியிழுக்கும் நீளமான பாடல்கள். ஒரு காலத்தில் மேடைப் பாடகியாக இருந்தவர் அவர்’ என்கிறார் ஜோ.தீபா.

பாட்டு வரிகள் இல்லாமல் பாடல்கள் என்றால் வெறும் இசை மட்டுமே போதும், பாடல் என்பதே வெறும் இசையால் ஆனதுதான்  என்ற எண்ணம் மேலை நாட்டுத் தாக்கத்தினால் உருவான ஒன்று. வாத்தியக்கருவிகளினால் உருவாகும் இசை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவமே. ஆனால் அந்த நாட்டு பிரம்மாண்ட வாத்திய இசைகளுடன் நம்முடைய வாத்தியக்கருவிகள் இசையை ஒப்பிடமுடியாது.

நம் நாட்டின் இசைக்கருவிகள் வேறு. மேலை நாட்டின் இசைக்கருவிகள் வேறு.

நம் நாட்டு இசைக்கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இசை இரு வடிவங்களைக் கொண்டது. ஒன்று கர்நாடகம், இந்துஸ்தானி என்ற மரபு ரீதியான இசை. அந்தக் காலத்தில் அரண்மனைப்போன்ற தர்பார் மண்டபங்களில் வாசிக்கப்பட்ட வாத்தியக்கருவிகளைக் கொண்டு இந்தவகையான இசை இசைக்கப்பட்டது.

மற்றொன்று நாட்டுப்புறப் பாடல்கள் வழியில் எளிய வாத்தியக்கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இசை. இதில் கொட்டாங்கச்சி, புல்லாங்குழல் முதல் எளிய மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தாங்களே தயாரித்துக்கொண்ட இசைக்கருவிகளை உபயோகித்து இசைக்கப்படும் இசை.

விஞ்ஞானத்திலும் நவீனத்திலும் நம்மை விட எப்போதுமே பல ஆண்டுகள் முன்னணியிலிருக்கும் மேலை நாட்டினர் பிரம்மாண்டமான இசைக்கருவிகளை உபயோகித்து அவர்களின் இசையை வடிவமைத்திருந்தனர்.

இந்த அத்தனை இசையையும் இணைக்கும் முயற்சிகளைத் திரைப்படங்கள் செய்தன.

ஆரம்ப காலத்து இசையமைப்பாளர்களான எஸ்விவெங்கட்ராமன் போன்றோர் கர்நாடக இசையை அடிப்படையாக வைத்தே இசையமைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஜி.ராமனாதன் போன்றவர்கள் இந்தியில் இசைக்கப்படும் வடிவத்தையும் சில ஆங்கிலப்பட இசைவடிவங்களையும் துணிந்து தமிழுக்குக் கொண்டுவந்தனர்.

இவரது பாணியைத் தொடர்ந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் மொத்த இசையின் பாணியையே மாற்றியமைக்கும் புரட்சியில் ஈடுபட்டனர். கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை அத்தனையையும் எளிமைப்படுத்தி, பெரிதாக இசை ஞானம் இல்லாதவரையும் ஈர்க்கும் படியான, இசை தெரியாதவர்களும் முணுமுணுக்கும் படியான  எளிமையான அதே சமயம் இனிமையான இசையின் புதியதொரு வடிவத்தை உருவாக்கி மெல்லிசை என்று அழைக்கவும் செய்தனர். 

அந்த மெல்லிசைதான் இன்றுவரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அதனால்தான் அவர்கள் கண்ணதாசனால் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று அழைக்கவும் பட்டனர்.
இவர்கள் ஏற்படுத்திய பாணிதான் தமிழ்த்திரையுலகில் பல்வேறு மாறுதல்களையும் கடந்து இன்னமும் பல்வேறு இசையமைப்பாளர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இவர்களுக்குப் பின் வந்த அத்தனை இசையமைப்பாளர்களும் தொடர்ந்துகொண்டிருக்கும் பாணி இதுதான். இதுவேதான்.

இவர்களுடைய காலகட்டத்தில் இவர்களுக்குப் போட்டியாக, இணை ஓட்டத்தில் இவர்களுக்கு சமமாகவே வந்துகொண்டிருந்தவர் கே.வி.மகாதேவன்.

கே.வி.மகாதேவன் தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். மெல்லிசை ஒரு பக்கம் போய்க்கொண்டே இருக்க தமக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டார் அவர்.

அதுதான் நாட்டுப்புற இசை.

இன்றைய இளையதலைமுறை கருதிக்கொண்டிருப்பதுபோல் தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசையைக் கொண்டுவந்தவர் இளையராஜா கிடையாது. கொண்டுவந்தவர் என்பது மட்டுமல்ல அதனை நிலைநிறுத்தியவரும் கே.வி.மகாதேவன்தான். மகாதேவன் வெற்றிகரமாகப் பவனிவந்துகொண்டிருந்த அதே பாணியை இ.ராவும் தொடர்ந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்..

ஏனெனில் கே.வி.எம் நாட்டுப்புற இசையில் போட்டிருக்கும் பாடல்கள் ஒன்றோ இரண்டோ அல்ல, நூற்றுக்கணக்கான பாடல்கள்.

நூற்றுக்கணக்கான பாடல்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதம் ஹிட் ரகம்தாம். ஒரு படத்தில் ஆறு அல்லது ஏழு பாடல்கள் என்றால் இரண்டு பாடல்கள் மெல்லிசை, இரு பாடல்கள் சுத்தமான கர்நாடக இசை, இரு பாடல்கள் நாட்டுப்புற இசை என்பதுபோல் ஒரு கணக்கு வைத்துக்கொள்வார் கேவிஎம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களின் பிரிவுக்குப் பின்னர் மொத்த இசையுலகமும் விஸ்வநாதனின் கைகளுக்குள் வந்துவிட்டது.

மற்றவர்களின் ராஜ்ஜியத்தில் இசையுலகம் வந்தபோது அவர்கள் செய்த  ஆடம்பர அட்டகாசங்களைப் போல் இல்லாமல், தம்மைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டுக்கொள்வதற்கு முயற்சிகள் ஏதும் செய்யாமல்  ‘தம் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று மட்டுமே இயங்கியவர் விஸ்வநாதன்.

அவருக்குப் பின்னால் வந்த இளையராஜா ஆரம்பித்து தேவா. ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் என்று இன்றைய ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் வரைக்கும் இசையில் அடிப்படையாக என்ன சாதித்திருக்கிறார்களோ அவற்றையெல்லாம் ஒற்றை மனிதராகவே சாதித்துவைத்துவிட்டுப் போயிருப்பவர் எம்எஸ்வி.

தொழில்நுட்ப ரீதியிலும் இதுவரையிலும் பயன்படுத்தாத, புதிதாக வந்திருக்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது என்றவகையிலும், பிற இசைகளைக் கோர்ப்பது, கலப்பது என்றவகையிலும், எக்கோ, ஸ்டீரியோ, டால்பி, டிஜிட்டல் என்று நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கின்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது என்றவகையிலும்தாம் இளையராஜாவோ, ரகுமானோ, ஹாரிஸ் ஜெயராஜோ இன்னபிற இசையமைப்பாளர்களோ புதிதாக ஏதாவது செய்யமுடிகிறதே தவிர, பாடல்களின் அடிப்படை விஷயங்களில் விஸ்வநாதனைத் தாண்டி இதுவரையிலும் யாராலும் எதுவும் செய்யவும் முடியவில்லை- செய்யப்போவதும் இல்லை என்பதும் உண்மை.

காரணம் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒவ்வொரு துறையிலும் இதுபோல் நிறைவான, அத்தனை சாதனைகளும் செய்துவிட்டுச் செல்லும்  பெருங்கலைஞர் ஒருவர் வருவார். தமிழின் அதிர்ஷ்டம் தமிழுக்கு – தமிழ்த்திரைத்துறைக்கு, அப்படி முக்கியமான மூன்று துறைகளுக்கு முக்கியமான மூன்று சாதனையாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.

ஒருவர் சிவாஜிகணேசன்

இன்னொருவர் கண்ணதாசன்,

மூன்றாமவர் எம்எஸ்விஸ்வநாதன்….

-இந்த மூன்று பெரும் சாதனையாளர்கள் போட்டுவிட்டுப் போயிருக்கும் ராஜபாட்டையில்தான் மற்றைய சாதனையாளர்கள் இன்றைக்கும் நடைபோட்டு அவரவர்களுடைய சாதனைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த மூன்று பேரின் சாதனைகளைத் தாண்டி ஏதாவது செய்யமுடியுமா என்றால் மேலோட்டமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில மாறுதல்கள் செய்து வித்தியாசமாகத் தோன்றச் செய்ய முடியுமே தவிர அடிப்படையிலான பெரிய மாறுதல்கள் எதுவும் செய்துவிடமுடியாது.

செய்வதற்கும் ஒன்றும் இல்லை.

உதாரணத்திற்கு, திருக்குறளில் உள்ள கருத்துக்களைத் தாண்டி புதிதாக எந்தக் கருத்தும் சொல்லிவிடமுடியுமா என்ன? வேண்டுமானால் விஞ்ஞானம், சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர், ஐபாட் என்று இப்படி ஏதாவது சொல்லலாம்.

நான் சொல்லவந்தது அடிப்படை விஷயங்கள் பற்றி.

பாடல்களுக்கு உயிர்நாடி இனிமையான மெட்டு. அந்த மெட்டுக்களை எம்எஸ்வியைப் போல் அதிகமான அளவில் தமிழுக்குக் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.

அடிப்படையிலான வித்தியாசங்களையும் பாடல்களில் செய்துகாட்டியவர் அவர்.

கிளி பேசும் வார்த்தைகளோடு ஒரு பாடல் ‘தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா?’ என்று சர்வர் சுந்தரம் படத்திலே ஒரு பாடல்-

பாரதியின் கனவுக்காட்சிகளோடு ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்றொரு ‘கை கொடுத்த தெய்வம்’ படப்பாடல்-

பச்சைவிளக்கில் ரயிலின் ஓட்டச் சத்தத்தைப் பின்னணியில் வைத்துப் பின்னப்பட்ட ‘கேள்வி பிறந்தது அன்று’ என்ற பாடல்  (இந்த மூன்று பாடல்களும் ராமமூர்த்தியுடன் இணைந்திருந்த சமயத்தில் போட்டது)-

ஸ்வரம் சொல்லச் சொல்ல ‘சிப்பி இருக்குது முத்து இருக்குது திறந்துபார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி’ என்றொரு பாடல் –

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ என்று ஏகப்பட்ட மிமிக்ரி சத்தங்களுடன் ஒரு பாடல்-

‘இருமனம் கொண்ட திருமணவாளன்’ என்று அவர்கள் படத்தில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு கதாநாயகன் வாயைத் திறக்காமல் வயிற்றிலிருந்து பேசும் வென்ட்ரிலோகிஸம் (ventriloquism) என்ற வகையில் பேசவைத்து ஒரு பாடல்……………….
 என்பது போல, பாடல்களின் இத்தகைய வடிவமெல்லாம் அதுவரை யாரும் சிந்தித்திராதது. 

திரைப்படத்துறையில் எந்த இசையமைப்பாளரும் யோசித்துப் பார்க்காத வடிவங்களில் அமைக்கப்பட்ட பாடல்கள் இவை.

இதுபோன்ற பாடல்களுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது.

இம்மாதிரியான சோதனைக் களத்தில் அமைந்த பாடல்களை வேறு எந்த இசையமைப்பாளராவது முயன்றாரென்றால் சோதனை முயற்சிகளில்தாம் கவனம் செலுத்துவார்களே தவிர மெட்டுக்களின் ‘இனிமையை’ அவர்களால் காப்பாற்ற முடியாது. 

ஆனால் விஸ்வநாதனைப் பொறுத்தவரை மெட்டுக்கள்தாம் முதலில். மற்றவையெல்லாம் அதன்பிறகுதான்.

சாதாரணப் பாடலோ சாதனை முயற்சி பாடலோ பாடல்களின் மெட்டுக்களில் இனிமை வழியும்.

அதனால்தான் அவருடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பாடல்கள் இனிமையாக இருக்கும். ஒரு ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமை இல்லாமல் ‘பேசுவதுபோன்று’ இருக்கும்.

மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை உள்நுழைந்து பார்த்தோமானால் (இவர்களில் அந்தக் காலத்து ஏ.எம்.ராஜாவையோ சுதர்சனம் போன்றவர்களையோ சேர்க்கவில்லை) ஐம்பதோ அறுபதோ பாடல்கள்தாம் இசை இனிமையுடன் இருக்கும். மற்ற பாடல்கள் எல்லாம் பல்லவியைத் தாண்டிவிட்டால் பல்லை இளிக்கும்.

வெறும் பல்லவிக்கு மட்டும் இசையமைத்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் ஓகே வாங்கிவிட்டு சரணத்தை எப்படியோ கொண்டுவந்து எப்படியோ இழுத்துக்கொண்டுபோய் எப்படியோ முடித்து வைப்பது என்ற பிசினஸ், போங்காட்டம் எல்லாம் இவரிடம் இல்லவே இல்லை. 

இதுதான் விஸ்வநாதன்!

அதனால்தான் உயிர்மை கட்டுரையில் அந்தப் பெண்மணி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு செய்தியையும் இங்கே கவனத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது.

அவர் சொல்கிறார் “ ஒரு பத்திரிகையில் வாசகி ஒருவர் இப்படி எழுதியிருந்தார். ‘என் கணவருக்கு ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலென்றால் உயிர். அடிக்கடி என்னைப் பாடச்சொல்லிக் கேட்பார். அவர் இறந்தபிறகும் அவரை நினைத்து தவம் போல ஒவ்வொரு இரவும் அந்தப் பாடலைப் பாடுகிறேன்’ என்று. நான் கவனித்ததில் பல பெண்களுக்குப் பிரியமாக இருந்திருக்கிறது இந்தப் பாடல். இதுபோன்று பெண்களின் விருப்பங்களுக்கு உரியவைகளாக இன்னும் அனேகப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. காதலின் உட்சரடுகளை மறைமுகமாகவும், அழகியலோடும் வெளிப்படுத்திய பாடல்களை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு அர்த்தப்படுத்திக்கொண்டு அதனோடவே வாழ்ந்தும் வருகிறார்கள்.’ என்று குறிப்பிடுகிறது கட்டுரை.

இம்மாதிரியான மொத்தத் தகவல்களையும் உண்மைகளையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கிவைத்துக் கொண்டாடும் மனநிலை அறிந்தோ அறியாமலோ இணையத்தில் ஒரு சிலரால் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. இதனை ஒரு கொள்கை போலவும் லட்சியப் பிடிப்பு போலவும் தொடர்ந்து செய்துவருகிறார்கள் சிலர்.

அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும், ஏதாவது சொல்லிக்கொண்டு போகட்டும் நமக்கென்ன வந்தது என்று இருந்துவிடுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதை ஆபத்தானது. மற்ற எல்லாரையும் புறந்தள்ளிவிட்டு ஒரேயொருவரை மட்டுமே தூக்கி நிறுத்த வேண்டிய தேவை என்ன?

ஆயிரம் பொய்யைச் சொல்லி மற்றவர்களுக்கு அகழி தோண்டவேண்டிய அவசியம் என்ன?

சிம்பொனி அமைத்ததாகச் சொல்கிறார்கள்.

அதைவிடவும் கூடுதலாகக் கேட்கவே காதுகள் கூசும்படியான ஒரு பொய் என்னவென்றால் ‘இ.ரா தான் தமிழ்ப் பாடல்களை முதன்முதலாக கிராமங்களுக்கும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்றவர்’ என்பதாக ஒரு பச்சைப் புளுகைக் கொளுத்திப் போடுகிறார்கள்.

கிராமங்களிலும் பட்டிதொட்டிகளிலும் ஒலிக்காத பாகவதர் பாடல்களா? எம்ஜிஆர் பாடல்களா?  சிவாஜி பாடல்களா? கண்ணதாசன் பாடல்களா? டிஎம்எஸ் பாடல்களா? பிபிஸ்ரீனிவாஸ் பாடல்களா? சீர்காழி பாடல்களா? சந்திரபாபு பாடல்களா? டி.ஆர்.மகாலிங்கம் பாடல்களா? பி.சுசீலா பாடல்களா? எல்.ஆர். ஈஸ்வரி பாடல்களா? கே.பி.சுந்தராம்பாள் பாடல்களா?

எந்தப் பாடல்கள் கிராமங்களில் ஒலிக்காமல் இருந்தது?

எந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவாமல் இருந்தது?

எந்தப் பாடல் கிராமத்தின் உயிர்நாடியைத் தொட்டு உலுக்காமல் இருந்தது?

பட்டிகளிலும் தொட்டிகளிலும் பரவிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றைப் பாடிப் பாடித்தானே தமிழ்ச்சமூகம் வளர்ந்திருக்கிறது?

ஐம்பதுகளிலிருந்து பட்டிதொட்டிகளில் நடைபெறும் வைபவங்களை ஒலிபெருக்கிகள்தானே கோலாகலக் கொண்டாட்ட அனுபவங்களாக மாற்றியமைத்தன….அந்த ஒலிபெருக்கிகளில் எல்லாம் ஒலித்தது என்ன?

ஊரின் நடுவே அரசாங்கம் அமைத்த ஒலிபெருக்கிகளில் மாலை வேளைகளில் ஒலித்த பாடல்கள் எந்தப் பாடல்கள்?

அல்லது, எந்தப் பாடல்களையும் கேட்காத செவிடர்களாகத்தான் எம் தமிழர்கள் 1976வரை இருந்தார்களா, அல்லது 1976 வரை தமிழகத்தில் தமிழர்களுக்குக் காதுகளே முளைக்கவில்லையா? 

அட மொண்ணைகளே, பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் பரவியதால்தானே ஐயா எம்ஜிஆர் என்ற ஒரு திரைப்பட நடிகருக்கு மிகப்பெரிய பிம்பம் ஏற்பட்டு பெரிய தலைவர்களில் ஒருவராய் உயர்ந்து தமிழக ஆட்சியையே பிடிக்கமுடிந்தது?

திரும்பத் திரும்ப பராசக்தி வசனத்தையும், மனோகரா வசனத்தையும் பட்டிகளும் தொட்டிகளும் கேட்டதால்தானே ஐயா கலைஞர் கருணாநிதி என்ற ஒருத்தர் ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்ற முடிந்தது?

யாரையோ பாராட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா பொய்களில் புரள்வது? இப்படியெல்லாம் பேச கொஞ்சம்கூட வெட்கமாய் இல்லையா உங்களுக்கு?

இன்னொரு புரட்டுவாதமும் இப்போது பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த எண்பத்தேழு வருடங்களாக உலகம் முழுவதும் திரைப்படங்களில் ஈடுபடுபவர்களின் உச்சபட்ச கனவே ஆஸ்கார் அவார்டைப் பெறுவது என்பதுதான்.

ஆஸ்கார் வென்றுவிட்டால் ஒரு திரைப்படக் கலைஞனுக்கு அதற்குமேல் எந்த அவார்டு பற்றியும் கவலை இருக்க நியாயமில்லை.

இப்படி உலகம் முழுமைக்கும் ஆஸ்கார் மீது இருக்கும் மதிப்பின் காரணமாகத்தான்  ‘என்னுடைய லட்சியம் எப்படியும் ஆஸ்கார் வெல்லுவதுதான்’ என்ற தனது கனவைப் பேட்டிகள் மூலமும் 
பேச்சுக்களாகவும் விடாமல் பதிவு செய்துவந்தார் கமல்ஹாசன்.

அவருக்கு இருந்த எண்ணற்ற ரசிகர்களின் காரணமாகவும், வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் அர்ப்பணிப்பின் காரணமாகவும், அவர் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாகவும் ஆஸ்கார் அவார்டு பெறும் முதல் தமிழர், ஏன் முதல் இந்தியர் கமல்ஹாசனாகத்தான் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்பையும், பிரமையையும் அவருடைய பேட்டிகளும் பேச்சுக்களும் தமிழர்களிடம் ஏற்படுத்தவே செய்தன.

கமல்ஹாசனை அவரது ரசிகர்களும் பத்திரிகைகளும் ‘ஆஸ்கார் நாயகன்’ என்றும் ‘உலக நாயகன்’ என்றும் அழைக்கவும் ஆரம்பித்தனர்.

ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது அவர் தேர்ந்தெடுத்துச் செய்த பல படங்கள், வேடங்கள், அல்லது பாத்திரங்கள் ஏற்கெனவே வேறு அயல்நாட்டு மொழிப்படங்களில் மற்ற நடிகர்கள் ஏற்றுச் செய்ததாகவே இருந்தன.

சொந்தமாகச் செய்த சில வேடங்கள் அல்லது பாத்திரங்கள் ஆஸ்கார் படப் போட்டிகள் அளவுக்கு அவரைக் கூட்டிச் செல்வதாக இருக்கவில்லை. முடிந்தவரை முயற்சி செய்து பார்த்துவிட்டு ஒன்றும் தேறாது என்ற முடிவுக்கு வந்தபின்னர் தம்முடைய நிலைமையை உணர்ந்த கமல்ஹாசன் திடீரென்று ஒரு பல்டி அடித்தார். 

‘ஆஸ்கார் அவார்டு என்பது அமெரிக்கப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு அவார்டு என்றும் ஆகவே அந்த அவார்டு பெறுவது காரியசாத்தியமில்லை என்றும் ஒரேயொருபிறமொழிப் படத்திற்குத்தான் ஆஸ்கார் அவார்டு வழங்கப்படுமென்பதால் அதிலொன்றும் தமக்குப் பெரிதான நாட்டமில்லை என்றும் தாம் ஆஸ்கார் அவார்டு பற்றிப் பேசவே இல்லையென்றும்’ ஒரே போடாகப் போட்டார்.

பாவம், அவருடைய ரசிகர்கள்தாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. 

அவன் ஆஸ்காரைக் கண்டானா, கியாஸ்காரைக் கண்டானா? ஆஸ்கார் என்ற சிந்தனையை அவனுடைய மண்டைக்குள் ஏற்றி வைத்ததே இவர்தானே?

சரி சகலகலா வல்லவனை சூப்பர்ஹிட் ஆக்கிய தனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று வாயை மூடிக்கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கிக்கொண்டான் ரசிகன். ஆஸ்கார் இந்த இடத்தில் நின்றுவிடவில்லை. அது வேறுமாதிரி தமிழனிடம் தொடர்ந்தது.

சிம்பொனிக்காரருக்கு ஆஸ்கார் பற்றிய சிந்தனைகள் இருந்திருக்குமா என்பது நமக்குத் தெரியவில்லை.


இந்தச் சமயத்தில்தான் ரோஜா என்ற ஒரேயொரு படத்தின் மூலம் அதுவரைத் தமிழில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு பெரிய இசையமைப்பாளரைச் சாய்த்துவிட்டு, இந்திக்கு நுழைந்து இந்திப்பாடல்கள் மூலம் மொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன்பால் ஈர்த்து, வந்தே மாதரம்- மா துஜே சலாம்…. (தாய்மண்ணே வணக்கம்) என்ற தேசபக்திப் பாடல் மூலம் திரைப்படத்தையும் தாண்டி அறுபது கோடி, எழுபது கோடி என்ற அளவில் மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கிறான் ஏ.ஆர்.ரகுமான் என்ற ஒரு தமிழ் இளைஞன்.

ஒட்டுமொத்த இந்தியாவும் கண்களை கசக்கிக்கொண்டு பார்க்கிறது அந்த இளைஞனை.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று வலம் வந்த அவனுடைய இசை சாம்ராஜ்யம் கடல்கடந்து பறக்கிறது.


ஆங்கிலப் படத்திற்கு இசையமைக்கிறான் என்ற செய்திகள் வருகின்றன.

வியப்பதா அண்ணாந்து பார்ப்பதா என்ற சிக்கல் தீருவதற்குள் –

இரண்டு கைகளில் இரண்டு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கிக்கொண்டு பணிவுடன் நிற்கிறான் அவன்!

மொத்த உலக நேயர்கள் அவ்வளவு பேரும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க ஆஸ்கார் மேடையிலே நின்று “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று தமிழ் உச்சரிக்கிறான்.

உடம்பு சிலிர்க்கிறது.

தமிழ்த்திரை இசையைப் புரட்டிப்போட்ட இசையமைப்பாளர் இந்த இளைஞன்தான் என்று யாரும் சொல்லவில்லை.

உலக இளைஞர்களெல்லாம் முணுமுணுப்பது இவர் பாடல்களைத்தாம் என்று யாரும் பரிவட்டம் கட்டவில்லை.

ஆனால் நம் மண்ணில் வேர் விட்ட ஒரு விருட்சம் உலக அரங்கை எட்டிப்பிடித்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆஸ்கார் என்பது திரைப்படங்களுக்கு மட்டுமானது. இசைக்கென்றே உலக அரங்கில் உச்சபட்ச பரிசொன்று இருக்கிறது. அதற்கு கிராம்மி அவார்ட் என்று பெயர் என்பதை எல்லாரும் அறிவதற்குள்ளாகவே-

இரண்டு கிராம்மி அவார்டுகளையும் கையிலேந்தி நிற்கும் அந்த இளைஞனை வியக்காமல் இருக்கமுடியுமா என்ன!

ஆனால் அந்த வியப்பும் மகிழ்ச்சியும் தமிழகத்தில் பலருக்கு ஒரு பெரிய வயிற்றெரிச்சலையே கிளப்பியிருக்கிறது என்பதுதான் சோகம்.

தமிழரான ஏ.ஆர். ரகுமான் உலக ரீதியில் புகழ் பெறுகிறார் எனும்போது வீறு கொண்டு எழுந்து பாராட்டவேண்டிய, கொண்டாட வேண்டிய, பெருமைப்பட வேண்டிய தமிழ் சமூகம் வயிறு காய்ந்து புழுத்துப் புழுங்குகிறது என்பது எத்தனைப் பெரிய அவமானம்………………..?

‘ஆஸ்கார் என்பது பெரிய பட்டமா? அதுவும் விலைக்கு வாங்கக்கூடிய பட்டம்தான்’ என்று எழுதித் தங்கள் ஆத்திரத்தையும் ஆசாபாசத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள் பலபேர்.

பணம் செலவழித்தால் எத்தனை ஆஸ்கார் வேண்டுமானாலும் வாங்கமுடியும் என்று உள்காயத்துக்கு வெளியிலிருந்தே பற்றுப் போடுகிறார்கள் சிலர்.

அந்த அகடமியில் உறுப்பினர்களாக உள்ள ஆறாயிரம் பேரின் இறுதி ஓட்டுக்கள்தாம் ஆஸ்காரைத் தீர்மானிக்கிறது என்பதனால் ஆஸ்கார் என்பது ஸ்ரீரங்கம் ஓட்டுக்கள் என்ற நினைப்புத்தான் பலபேருக்கு இருக்கிறது போலும். ஆஸ்கார் அகடமி உறுப்பினர்கள் எல்லாரும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற வாக்காளர்களா என்ன?

உலகமே கொண்டாடும் பெரிய பெரிய அமைப்புக்களில் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்ககூடும்தான்.

அது மிகப்பெரிய அமைப்பு என்பதனால் அந்த அமைப்பிற்கு எதிராக சில கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கும்தான்.

அப்படியொரு எதிர்ப்புக்கட்டுரையை எடுத்து சேமித்துவைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ஆஸ்கார் என்று பேசினாலேயே போதும் தயாராக வைத்துள்ள அந்தக் கட்டுரையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து காப்பிபேஸ்ட் செய்துவிட்டு மூச்சுவாங்க வேண்டியதுதான் சிலரின் இன்றைய வேலை.

இந்த இடத்தில் இது சம்பந்தமாய் ஒரேயொரு யோசனை சொல்லத்தோன்றுகிறது.

ஆஸ்கார் அவார்டு வாங்குவது அத்தனை சுலபம் என்பதும், காசு செலவழித்தால்
 வாங்கிவிடலாம் என்ற நிலைமையும் இருக்கும்போது எதற்காக இன்னமும் சும்மா இருக்கிறீர்கள்?
அதுதான் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறீர்களே ஆளுக்கு ஐந்து ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ போட்டு செலவழித்து உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளருக்கு அந்த அவார்டை ‘வாங்கிக்கொடுத்துவிட வேண்டியதுதானே’?

அல்லது, அவரே மிகப்பெரும் செல்வந்தர்தானே?

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சம்பாதித்தவர்தானே?

அதில் துளியுண்டு பணத்தை எடுத்து வீசியெறிந்து ஆஸ்கார் அவார்டை வாங்கிவிட்டு ‘இதோ பாருங்க இது ஒண்ணும் பெரிய அவார்டே இல்லை. தெரிஞ்சுக்கங்க’ என்று உலகிற்குக் காட்டவேண்டியதுதானே!

இப்படிச் செய்தால் நாமும் ஆஸ்கார் பற்றிய பெரிய பெரிய கற்பிதங்களை எல்லாம் விட்டுத் தொலைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போகலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமான பல வேலைகளில் இறங்கித் தங்கள் ஆதங்கத்தைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்திவருகிறார்கள் சிலர்.

ஆஸ்கார் அவார்டு பாடல்கள் என்று இ.ராவின் பாடல்களை ஒவ்வொன்றாகத் தம்முடைய வலைப்பதிவில் போட ஆரம்பித்திருக்கிறார் ஒருவர். அவருடைய கூற்று என்னவென்றால் குறிப்பிட்ட அந்தப்  பாட்டு ‘போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவில்லை’ என்ற ஒரே காரணத்தினால்தான் அது ஆஸ்கார் பெறவில்லை. ஆனால் ஆஸ்கார் பெற முழுத்தகுதி உடையது இந்தப் பாடலும் அவர் குறிப்பிடவிருக்கும் மீதிப் பாடல்களும் என்பதாகும்.

வலைத்தளம் நடத்தும் என்னுடைய நண்பர் ஒருவர் “சார் இந்த ஐடியா நல்லாருக்கு. நான் ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதிவச்சிருக்கேன். பிரசுரத்துக்கு அனுப்பினதில் ஒரு பயலும் போடலை. அதுக்கென்ன, ‘நோபல் பரிசு பெறும் தகுதியுடைய கதைகள்’ என்று போட்டு தினந்தோறும் ஒரு பதிவு போட்டுக்கொண்டு வருகிறேனே” என்றார்.

இதாவது பரவாயில்லை. என்னுடைய பக்கத்து வீட்டுப் பையன் தோளில் கிடாரை மாட்டிக்கொண்டு திரிகிறவன் “சார் நான் கிடாரில் நிறையப் பாடல்கள் வாசித்து ரிகார்ட் பண்ணி வச்சிருக்கேன். உங்களிடம் தருகிறேன்….‘கிராம்மி அவார்டு பாடல்கள்’ என்று தினசரி ஒன்றாகப் போட்டுவருகிறீர்களா?” என்று கேட்டான்.

“இவையெல்லாம் மனப்பிறழ்வின் உச்சம். பேசாமல் இருங்கள்” என்று சொன்னேன்.

சரி போகட்டும்……………அந்தப் பெண்மணியின் கட்டுரைக்கு வருவோம். ‘இப்படிக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட எல்லை விரிவு படுத்தப்பட்டு ‘அடிரா அவளை…வெட்டுரா அவளை’…. ‘பொம்பளைங்களே இப்படித்தான்’…. ‘வேணாம் மச்சான் வேணாம்…… இந்தப் பொண்ணுங்க காதலு’ என்று கள்ள ஒப்பாரிகளை முன்வைக்கிறது இன்று. இந்தப் பாடல்களும் பெருமளவில் ரசிக்கப்படுகிறது என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதையெல்லாம் வாசிப்பதற்கு நல்லவேளை இப்போது பாட்டுப் புத்தகங்கள் பரவலாக விற்பனையாவதில்லை என்பதைத்தான் ஆறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று கட்டுரையை முடித்திருக்கிறார் அவர்.

பாட்டுப்புத்தகத்தின் தேவை ஏன் இல்லாமல் போனது என்பது பற்றி எழுதினால் அது இன்னொரு விவாதக்களத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Saturday, February 21, 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்




இலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி அவர்களால் அடிக்கடி சொல்லப்பட்ட ‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்’ அவர்கள் விருப்பப்படியே பிரமாண்டமாக நடைபெற்று முடிவுக்கும் வந்துவிட்டது.

இந்த நிகழ்ச்சியின் இத்தனை வரவேற்புக்கும் காரணம் இந்த நிகழ்ச்சியின் மூலம்  திரையிசையில் விரும்பிய பாடல்களை, அல்லது முக்கியமான பாடல்களை மீண்டும் கேட்கிறோம் என்பதையும் தாண்டி- எது சிறந்த பாடல், யார் சிறந்த பாடகர் என்பதை நிர்ணயம் செய்வதில் தாங்களும் ஒரு ஜட்ஜாக இருக்கிறோம் என்னும் மனோபாவமே என்பதுதான் முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.

அதனால்தான் ஓட்டுப்போடுவதற்குத் தாங்கள் பணம் இழக்கிறோம் என்பது தெரிந்தும் கோடிக்கணக்கான மக்கள் அதுகுறித்துக் கவலைப்படாமல் ஓட்டுக்களையும் போட்டு தங்கள் ஆர்வத்தையும் ஆதரவையும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிவித்து வருகிறார்கள்.

“இந்த நிகழ்ச்சியில் ஓட்டுப்போடுவதற்குப் பணம்  தந்தாகவேண்டுமே இது சரிதானா?” என்று கேட்டதற்கு இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான நண்பர் ஒருவர் “அதிலென்ன தப்பு இருக்கிறது? 
படங்களைப் பார்க்கத் தியேட்டர்களுக்குப் போகும்போது காசு கொடுத்து டிக்கெட் வாங்குவதில்லையா? அதுபோல்தான் இது. அதுவும் ஒரு ஓட்டுக்கு வெறும் ஆறு ரூபாய்தானே? அதுவுமின்றி சின்னக்குழந்தைகளுக்காகத்தானே செலவு செய்கிறோம்? அந்தக் குழந்தைகளின் திறமைக்கு முன்னால் இதெல்லாம் வெறும் தூசு” என்றார்.

ஆக சரியாகத்தான் நூல் பிடித்திருக்கிறார்கள் விஜய் டிவிக்காரர்கள்……………!


ஸ்பூர்த்திக்கு முதல் பரிசைக் கொடுத்ததன் மூலம் முடிவுகளுக்குப் பின்னால் எழும்பப் போகும் சர்ச்சைகளை விஜய்டிவி வெகுவாகத் தவிர்த்திருக்கிறது என்று சொல்லலாம்.

யாராலும் குறை சொல்லமுடியாத ஒரு முடிவு இது.

அந்தச் சின்ன உடம்பிற்குள் அத்தனைத் திறமை. எவ்வளவு சிரமமான பாடல்களையும், ஓரளவு பயிற்சிபெற்ற பாடகர்களால் சுலபமாகப் பாடமுடியாத பாடல்களையும் நிகழ்ச்சி முழுவதும் சர்வசாதாரணமாகப் பாடி அசத்திக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.

அதுவும் ஏற்ற இறக்கங்கள், கமகங்கள், பிர்காக்கள் என்று கர்நாடக சங்கீதத்தில் வரக்கூடிய சங்கதிகளையும், ஸ்வரங்களையும் கலந்தடித்து அந்தக் குழந்தை பண்ணிக்கொண்டிருந்தது அதகளம், அட்டகாசம்.

நடுவர்களாக வந்த பிரபல பாடகர்களும் சரி, இசையமைப்பாளர்களும் சரி அந்தச் சிறுமியின் திறமையை வெளிப்படையாகவே புகழ்ந்தார்கள், பாராட்டினார்கள், வியந்தார்கள்.

இதென்ன குழந்தை மேதையா என்று அதிசயித்தார்கள்.

அவள் பாடிமுடித்ததும் நம்ப முடியாத பலபேர் அந்தக் குழந்தையிடம் “உனக்கு என்ன வயசாகுதம்மா?” என்று கேட்டுக்கொண்டார்கள். இத்தனைப் பாராட்டுக்களையும் நிகழ்ச்சிகளின் தொடரிலேயே வாங்கிக்குவித்த அந்தப் பெண்ணுக்கு முதல் பரிசு என்றதும் ‘சரியான தீர்ப்புத்தான்’ என்று நிம்மதியுடன் தூங்கச் சென்றவர்கள் ஏராளம்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். அந்தச் சிறுமி பெங்களூரைச் சேர்ந்தவள். 
தாய்மொழி கன்னடம். தமிழில் சரியாகப் பேசக்கூடத் தெரியாது. ஆனாலும் அட்சர சுத்தம் என்பார்களே அதுபோல் அத்தனைத் துல்லியமாய்த் தமிழை உச்சரித்தாள். அதுவும் கேவிமகாதேவனால் இசையமைப்பக்கப்பட்ட பல கவியரசரின் அழகிய தமிழ்ப் பாடல்கள் அவளுடைய கொஞ்சும் குரலில் அத்தனை வசீகரமாய் வெளிப்பட்டன.

மீதிப் பரிசுகளையும் ஒன்றும் குறை சொல்வதற்கில்லை.

ஆறு பேருக்குமே முதல் பரிசுகளைக் கொடுத்திருக்க வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

எப்படிப் பார்த்தாலும் மூன்று பேரை ஒதுக்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயம். நீக்கியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம். வேறுவழியில்லாமல்தான் அதைச் செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரே ஆறுதல் அந்த மூன்று பேருக்கும்கூட ஆளுக்கு ஐந்துலட்சம் என்று பரிசுப்பொருள் தந்திருக்கிறார்கள்.

என்னவொன்று, சம்பிரதாயத்துக்காகவாவது இறுதி நிகழ்ச்சிவரை வந்த பரத் என்ற அந்தச் சிறுவனுக்கு ஏதாவது விசேஷப் பரிசு அறிவித்திருக்கலாம். ஏனென்றால் அந்தப் பையனை இரண்டு காம்பியர் பெண்களும் ஆரம்பத்திலிருந்தே என்னென்னவோ சொல்லி உசுப்பேற்றிக்கொண்டே இருந்தனர். ‘நீ தாண்டா இறுதிப் பரிசை வெல்லப்போறே’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லா வார்த்தைகளையும் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர். 

அந்தப் பையனும் அபாரத் திறமையுடன் எல்லாப் பாடல்களையும் பாடிக்கொண்டிருந்தான். இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் மற்றவர்களைவிட அந்தப் பையனின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய்த் தெரிந்தது.

இத்தனைப் பெரிய நிகழ்ச்சியின் இறுதிநாள் இன்னமும் பெரிய பிரம்மாண்டத்துடன் இருந்திருக்கலாம். நிகழ்ச்சியின் வீச்சை வைத்துப் பார்க்கும்போது நிறைவுநாள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.

இன்னொரு குறை பங்கேற்ற பிரபலங்கள்.

எல்லாப் பிரபலங்களையும் ஏற்கெனவே நடைபெற்ற வாராந்தர நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவிட்டு இறுதிநாள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்கள் கிடைக்காமல் அவஸ்தைப் பட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. எம்எஸ்வி, ஏ.ஆர்.ரகுமான், சுசீலா, ஜானகி, பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம், தேவா, டி.ராஜேந்தர், இமான் என்று எல்லாரையும் ஏற்கெனவே அழைத்துவிட்டுக் கடைசி நாளுக்குப் பிரபலங்கள் கிடைக்காமல் சங்கர் மகாதேவனையும், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் என்று மற்றவர்களையும் அழைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நிகழ்ச்சியின் பெரிய குறை மேக்கப் என்ற ஒரு கோரத்தைப் போட்டு பாடிய அத்தனைக் குழந்தைகளையும் ஏறக்குறைய குமரிப்பெண்கள் போலத் தோன்றச் செய்திருந்தது.

சிறுமிகள், குழந்தைகள் என்ற தோற்றமே தெரியாமல் அடித்திருந்தார்கள்.

இன்னொன்று ‘இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவில் ஆறுகோடி வாக்குகள் வந்திருக்கின்றன’ என்று அறிவித்தார்கள். வேண்டுமென்றே அப்படி அறிவித்துவிட்டுப் பிறகு ‘இல்லை இல்லை ஒரு கோடியே சொச்சம் வாக்குகள்தாம். ஆறு கோடி என்பது அந்தக் காம்பியர் ஆசைப்பட்ட வாக்குகள்’ என்று திருத்திக்கொண்டார்கள்.

காம்பியர் பத்து கோடிக்கு ஆசைப்பட மாட்டாரா என்ன?

இதிலிருந்த ‘அரசியல்’ என்னவென்பது புரியவில்லை.
.
 இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கும் முக்கியமான பாடம் ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது.  இது இணைய ரசிகர்களுக்கு என்பதால் இதனை மறுபடியும் சொல்ல நேர்கிறது. சென்ற பதிவிலேயே லேசாகச் சுட்டிக்காட்டியிருந்த அந்த முக்கியமான விஷயம் இந்த இறுதி நாளிலும் உறுதிசெய்யப் பட்டிருக்கிறது.

அதாவது, ‘இளையராஜா இல்லாமல் இசை சம்பந்தப்பட்ட எதுவுமே இங்கே நகராது. இந்தக் காலகட்டத்தின் இசைக்கடவுள் இளையராஜாதான்’ என்ற நம்பிக்கை இங்கே பலபேருக்கு இருக்கிறது.



இளையராஜா தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் திறமையான இசையமைப்பாளர்தான். தமிழ்த்திரை இசையின் சகாப்தத்தில் அவருக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. ஜி.ராமனாதன், சி.ஆர்.சுப்பராமன், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, அதற்குப் பின்னர் தனியாக எம்எஸ்வி, கே.வி.மகாதேவன், ஏ.எம்.ராஜா, சுதர்சனம் வரிசையில் வருகிறவர் இளையராஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை.

அதுபோலவே இளையராஜாவைத் தொடர்ந்து வருகிறவர்களாக ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

ஆனால் இம்மாதிரியான எந்தவித முக்கியத்துவமும் யாருக்குமே அளிக்கப்படாமல்,  இசை என்றாலேயே இளையராஜா மட்டும்தான் என்ற தவறான பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. 

அதற்கான முயற்சிகள் மிகப்பெரும் அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் இங்கே எழுதப்படுகின்றன.

‘நாங்கள் எங்களுக்குப் பிடித்தவரை எழுதுகிறோம்’ என்ற பெயரில் பொதுவெளியில் தவறான பிம்பத்தைக் கட்டுகிறார்கள். ‘நாங்கள் மற்ற யாரையும் குறை சொல்லுவதில்லையே’. என்று சமாதானம் வேறு சொல்கிறார்கள்.

குடிமக்கள் நிறைந்திருக்கும் தெருவில் ஒற்றை வீட்டில் மட்டும் ‘இங்கே இருக்கும் பெண்டிர் அனைவரும் பத்தினிகள்’ என்று போர்டு போட்டுவிட்டு, யாரும் தட்டிக்கேட்டால் ‘நாங்கள் வேறு யாரையும் குறை சொல்லவில்லையே. எங்கள் வீட்டில் உள்ளவரைத்தானே நாங்கள் சொல்லிக்கொள்ளுகிறோம்’ என்று அடாவடி பேசுகிற வாதம்தான் இது.

ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சி நெடுகிலும் அவ்வப்போதாவது சில இளையராஜா பாடல்கள் பாடப்பட்டன. ஆனால் இறுதி நிகழ்வில் ஆறுபேர்கள் கலந்துகொண்ட போட்டியில் ஆளுக்கு இரண்டு பாடல்கள் என்று பன்னிரண்டு பாடல்கள்.

அதில் ஒரேயொரு பாடல்தான் இளையராஜா இசையமைத்த பாடல்.

மற்ற அத்தனையும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தவை.

இவையெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேண்டும்.

ஒரு இசையமைப்பாளரை மட்டுமே சுற்றிக்கொண்டு இந்த உலகம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படி இல்லை எனில் இத்தனைப் பெரிய, அதுவும் பல கோடி மக்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி எப்படி இத்தனை வெற்றிகரமாக சாத்தியப்படும்?

திரை இசை என்றால், அதிலும் தமிழ் இசை என்றால் நிறைய ஜாம்பவான்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்த்திரை இசை என்பதே பல முன்னோர்களால் வார்த்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு  இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிற ஒரு இசை வேள்வி என்பதே இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்ற பாடம் என்றே கருதவேண்டியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி இன்னொரு கற்பிதத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறது.

அதாவது ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் நிலைக்காதவை. அவற்றை ஒருமுறைக்குமேல் திரும்பத் திரும்ப கேட்க முடியாது என்ற வாதமும் இணையத்தில் ஒரு கொள்கைப் பிரகடனம்போலவே அடிக்கடி சிலரால் அதுவும், இ.ரா ரசிகர்களால் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடல்களே.

அதிலும் குறிப்பாக இறுதிநாளில் பாடப்பட்ட பல பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசைத்தவையே. 

கேட்கின்ற அத்தனைப்பேரையும் உணர்ச்சிவசப்பட வைக்கின்ற அளவிலான பாடல்கள் என்பதாலேயே அவை இறுதி நிகழ்ச்சியில் பாடப்பட்டன.

எந்த உணர்வை ஊட்ட வேண்டுமோ அதற்கு மேலேயே ஊட்டுவதாகத்தான் அந்தப் பாடல்கள் அமைந்திருந்தன. உணர்ச்சித் ததும்ப அமைந்திருந்த அந்தப் பாடல்கள் உணர்ச்சித் ததும்ப பாடப்பட்டன.

ஆக, சிலர் ‘ஆசைப்படும்’ இந்தக் கற்பிதம்- ‘ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் ஒருமுறைக்குமேல் கேட்க முடியாது’ என்பது- சிதறுத்தேங்காயாக உடைந்திருக்கிறது. தேங்காய்கூடப் பெரிய பெரியத் துண்டுகளாகத்தான் உடையும். இந்தக் கற்பிதமோ கண்ணாடித் துண்டுகள்போல் நொறுங்கிச் சிதறியிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி வெறும் பிரமாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் இவற்றில் வேறு சில அம்சங்களும் பொதிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை.  சார்லஸ் என்ற ஒரு இசை ரசிகர் குறிப்பிடுவதுபோல ‘ குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சி. இசையைப் பற்றி தவறான கண்ணோட்டம் மாற்றும் நிகழ்ச்சி. பாடுவது எளிதான காரியமல்ல என்று உணர்த்தும் நிகழ்ச்சி. திறமைக்கு சான்று பகரும் நிகழ்ச்சி. பாடல் உருவான விதம், பாடியவரின் பெருமை, இசையமைப்பாளரின் திறமை போன்ற பல விஷயங்கள் அங்கே பகிரப்படுகின்றன. ஒரு பாடல் என்றால் என்னென்ன விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற பாடம் அங்கு நடத்தப்படுகிறது’- என்கிறார்.

இது அவ்வளவும் உண்மைதான். ஆனால் இப்படிச் சொல்லும் அந்த அன்பர் இ.ராவின் ரசிகர். ஆனால் அவர்  சொன்ன அத்தனை விஷயங்களும் அவருடைய அபிமான இசையமைப்பாளரின் பாடலே இல்லாமல்கூட அங்கு உணர்த்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் இங்கே முக்கியம்.

காலம் என்பது கொஞ்சம் கொடுமையானதுதான். யாரைவேண்டுமானாலும் தொப்பென்று கீழே போட்டுவிட்டு அதுபாட்டுக்குத் தன் திசையில் பயணம் செய்துகொண்டே இருக்கும்.


இதனைப் புரிந்துகொண்டால் அதி தீவிர ரசிக மனப்பான்மையைப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டிருப்பதிலிருந்து வெளியேறிவிடலாம்.

Monday, February 2, 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்

                                

                           

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டது. அவர்களே அடிக்கொருதரம் அறிவிக்கிற மாதிரி தமிழகத்தின் ‘செல்லக்குரலுக்கான தேடல்’ என்ற அழகிய பெயருடன் நீண்ட நாட்களாக வலம் வந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி முடிவுபெறும் நிலைக்கு வந்தாகிவிட்டது.  நிச்சயமாக மக்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றிருக்கிறது இந்த நிகழ்ச்சி. மற்ற சேனல்களில் வரும் சீரியல் குப்பைகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பெரியதொரு ஆதரவு இருக்கிறது என்பதே உவப்பிற்குரிய விஷயம்தான்.

ஒரு வருடம் பெரியவர்களை வைத்து நடத்தப்படும் இதே நிகழ்ச்சியை அடுத்த வருடம் சிறியவர்களை வைத்து நடத்துகிறார்கள் போலும். ஏனெனில் முந்தைய வருடம் ஃபைனலுக்கு ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு ஜட்ஜாகவும் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று  ஆஜித் என்ற சிறுவனைத் தேர்வு செய்ய, சென்ற வருடம் எஸ்.ஜானகி பங்கேற்று திவாகர் என்பவரைத் தேர்வு செய்தார்.
அதனால் ஒரு வருடம் செல்லக்குரல்களுக்கான தேடலாகவும், அடுத்த வருடம் பொதுவான சிறந்த பாடகர் தேர்வாகவும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வளர்ந்துவிட்ட பெரியவர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சியை விடவும் சிறுவர்களை வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கான வீர்யமும் ரசிகக் கூட்டமும் நிச்சயம் அதிகம்தான்.

சின்னக்குழந்தைகளை வைத்து, அதிலும் பால்மணம் மாறாத பிஞ்சுக்குழந்தைகளை வைத்து சிரமமான ராகத்தையும், அவர்களுக்கு என்னவென்றே புரியாத வரிகளுடன் கூடிய பாடல்களையும் அவர்கள் மீது திணித்து அதனைத் தேர்ந்த தொழில்முறை சார்ந்த பின்னணிப் பாடகர்கள் எப்படிப் பாடியிருக்கிறார்களோ அதே தொனியில் அதே பாவங்களுடன் அதே உணர்வுகளுடன் பாடல்களை வெளிக்கொண்டுவரச் செய்யும் முயற்சி-

அடிப்படையில் யோசித்தால் அராஜகமானது என்றுதான் சொல்லவேண்டும்!

ஆனால் நாம் எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம், எம்மாதிரியான அலப்பறைகளுக்கு மத்தியில் வாழ்கிறோம் என்பதையும், இம்மாதிரியான அராஜகங்களுக்குத்தாம் இப்போது மதிப்பு என்பதையும் சேர்த்தே புரிந்துகொண்டால்தான் இதற்கான விடைகள் கிடைக்கும்.

உண்மையில் சில அசாத்தியங்களை ரசிக்கும், அதனைக் கொண்டாடும் மனப்பான்மையும் நம்மிடம் இருக்கிறது.

சின்னக்குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி செய்யும் சேஷ்டைகளை நாம் விரும்பி ரசிக்கிறோம்.

சின்னக்குழந்தைகளைக்குப் புடவைக் கட்டிப் பார்ப்பதும், சின்னப்பையன்களுக்கு வேட்டி ஜிப்பா அணிந்து பார்ப்பதும் நம்முடைய ரசிப்புப் பட்டியலில்தான் இருக்கிறது.

இப்போதெல்லாம் யார் வீட்டிற்குப் போனாலும் அந்த வீட்டுக்குழந்தை அதுபாட்டுக்கு அதன் கையிலிருக்கும் ஸ்மார்ட் போனில் நம்மைப் புகைப்படம் எடுத்து நம்மிடமே காட்டுவதை இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இதனையெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.
எமர்ஜென்சிக்குப் பிறகு ஜனதா கட்சி மொரார்ஜி தலைமையில் பரபரப்பாக ஆட்சி அமைத்திருந்த நேரம்.

முதன்முதலாக நண்பர்களுடன் டெல்லி செல்லும் வாய்ப்பு வந்தது.

அப்போது ஒரு நண்பர் தன்னுடன் கிளிக்-3 காமிரா ஒன்றைக் கொண்டுவந்திருந்தார். அந்தக் காமிராவுக்காக அந்த நண்பருக்கு எங்கள் வட்டத்தில் ஒரு ஸ்பெஷல் மரியாதையே இருந்தது என்பதையும் புரிந்துகொண்டால்தான் இன்றைய டேப்லெட்டிலும் ஸ்மார்ட் போனிலும் சின்னக்குழந்தைக்கூட அபாரமான படங்களை எடுத்துத் தள்ளுவதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

கால ஓட்டம் வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

                         

விஜய் டிவி நடத்தும் இந்தப் போட்டியில் வெற்றிபெறப்போகும் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகிற பரிசுப் பொருட்களும் நினைத்துப் பார்க்கவே முடியாதவையாக இருக்கின்றன.

முதல் பரிசு பெறும் குழந்தைக்கு ஒரு வீடாம். 

அதற்கடுத்து வரும் குழந்தைக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்று பரிசுப்பொருளாம்.

அதற்கடுத்துவரும் குழந்தைக்கு ஒரு கிலோ தங்கமாம்………………. இவை பரிசுப் பொருட்கள்.

அந்தக் குழந்தைகள் மத்தியில் இந்த வயதிலேயே இம்மாதிரியான விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அவர்களை எம்மாதிரியான மனநிலைக்கு உட்படுத்தும், அவர்களை எம்மாதிரியான எதிர்கால இளைஞர்களாக உருவாக்கும் என்பதெல்லாம் மனோதத்துவ நிபுணர்கள் யோசிக்கவேண்டிய விஷயங்கள்.

ஏனெனில், இம்மாதிரி பதினாறு வயதிலேயே பல ஆயிரங்களும் லட்சங்களும் வழங்கப்பட்டு, அவர்கள் மீது புகழ் வெளிச்சமும் பரப்பப்படும் சில நடிகைகள் பிற்காலத்தில் எந்த அளவு தங்களை சர்வாதிகார மனம் கொண்டவர்களாக வரித்துக்கொள்கிறார்கள் என்பதையும்-
மற்ற அவ்வளவு பேரையும் எந்த அளவுக்குக் கேவலமானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதையும் –
எம்மாதிரியான வகையில் தங்களை இந்தச் சமூகத்திற்கு வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கான விபரீதங்களையும் நாம் கண்ணெதிரில் பார்த்தபடிதான் இருக்கிறோம்.

இது ஏதோ வெறும் நடிகைகளைப் பற்றி மட்டும் இல்லை. நடிகர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

எக்கச்சக்க பணமும் எக்கச்சக்கப் புகழும் மிகச்சிறிய வயதிலேயே வந்துவிட்டால் அந்தப் பணத்தையும் புகழையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அவ்வளவு எளிதாக எல்லாரிடமும் வந்துவிடுவதில்லை.

மிகப்பெரிய புகழையும் மிகப்பெரிய பணவரவையும் தாங்கிக்கொள்ளுவதற்கு அரியதொரு மனப்பக்குவம் வேண்டும்.

அந்த மனப்பக்குவம் பெரும்பாலானோரிடையில் இருப்பதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இவை இரண்டில் - அதுவும் புகழ் வெளிச்சம் என்பது இவர்கள்மீது சுத்தமாக இல்லை. ஆனால் இவர்களின் தகுதிக்கு மீறிய பணம் மட்டும் இவர்களுக்கு எப்படியோ கிடைத்துவிடுகிறது. அல்லது சம்பளமாகவே கிடைத்துவிடுகிறது. இந்த ஒன்றை வைத்துக்கொண்டே அந்த இளைஞர்கள் போடும் ஆட்டமும் நாம் பார்த்துவருவதுதான்.

இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் இணையத்தில் உலவுவதும் அவர்களுடைய வார்த்தைகளில் கிஞ்சிற்றும் மரியாதை இல்லாமல் ஒருவித தடித்தனம் இருப்பதும் இந்தப் பணம் படுத்தும் பாடுதான்.

இந்த லட்சணத்தில் இவர்கள் மீது புகழ்வெளிச்சமும் பட்டால் எப்படியிருக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

நமக்குத் தெரிந்து அப்படியொரு மனப்பக்குவத்துடன் இருந்த இரண்டு பேராக எம்ஜிஆரையும் சிவாஜியையும் மட்டும்தான் சொல்லமுடியும்.

தற்கால இளைஞர்கள் மத்தியில் ஏ.ஆர்.ரகுமானையும் கிரிக்கெட் தெண்டுல்கரையும் சொல்லலாம்.

                                                  

இந்தச் சூழலில்தான் சூப்பர் சிங்கர் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகும் பரிசுப்பொருள்களையும் அங்கீகாரத்தையும் புகழ்வெளிச்சத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

தொடர்ந்துவரும் நிகழ்ச்சிகளில் இந்தப் பரிசுப் பொருள்கள் மேலும் அதிக அளவுக்கு உயரப்போகிறது என்கிற யதார்த்தமும் இப்போதே சுடுகிறது.

இது ஒருபுறமிருக்க நிகழ்ச்சிக்குச் செல்லுவோம்.

முதலில் இந்தச் சின்னஞ்சிறுசுகளை இந்த அளவுக்குத் தயார்ப்படுத்தி கேட்பவர்கள் பிரமிக்கிற அளவுக்குப் பாடச் செய்வதற்குப் பின்னணியில் இருக்கும் அனந்த் நிச்சயம் மிகப்பெரிய பாராட்டிற்கு உரியவர். ஏனெனில் இதற்கான பயிற்சி என்பது பல்வேறு டெக்னிக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்பதைப் பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் போட்டியின் இடையில் பேசும்போது தெரிவித்தார். இது ஒரு செயற்கரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்தச் செயலை முதன்முதலாகச் செய்பவர் எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் விஜய்டிவியின் அனந்த் அல்ல.

அதற்கும் முன்பே இதனைச் செய்தவர் அபஸ்வரம் ராம்ஜி.

அவர்தான் சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மிகக் கஷ்டமான பாடல்களைக் கொடுத்து அவர்களைத் தயார்ப்படுத்தி அச்சு அசலாகப் பாடவைத்துக் கேட்பவர்களை பிரமிக்கவைத்தவர்.

நீண்ட நாட்களுக்கு இத்தகைய சாகசங்களை அவர் பல மேடைகளிலும் செய்துகொண்டிருந்தார். 

பொதிகை டிவியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைய நடந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

ஒரு பிரமுகர் வீட்டுத் திருமணத்திற்கு நானும் சுஜாதாவும் சென்றிருந்தோம். அபஸ்வரம் ராம்ஜி குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்யும் கச்சேரி அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது.  நாங்கள் ஒருபுறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அபஸ்வம் ராம்ஜி அங்கு வந்தார். “சார் தயவு செய்து இரண்டுபேரும் அங்குவந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இந்தக் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு அவர்களை வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.

                      


“இருக்கட்டும் ராம்ஜி. நான் இங்கேயே இருக்கேன்” என்றார் சுஜாதா.

“இல்லை சார் ஒரு இரண்டு பாடல்களுக்கு நீங்கள் அங்கே வந்து உட்கார்ந்தால் அது என்னையும் குழந்தைகளையும் கவுரவப்படுத்தியதுபோல் இருக்கும். ஒரு இரண்டு பாடல்களைக் கேட்டுவிட்டுக் குழந்தைகளை ஆசீர்வதித்துவிட்டுப் போங்கள்” என்றார்.

அவர் அழைத்தபடியே அந்த மேடையின் முன்பு சென்று அமர்ந்தோம். ஒரு சிறுவன் டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே’ என்று ஆரம்பித்து செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடினான்.

இன்னொரு சிறுமி எம்எஸ்ஸின் ஒரு பாடலைப் பாடினாள்.

அத்தனை சுத்தம். அச்சு அசலாக அப்படியொரு க்ஸெராக்ஸ் பதிப்பு.

வியந்துபோன சுஜாதா (பொதுவாகக் குழந்தைகளை பெரியவர்கள் போல் இமிடேட் செய்ய வைக்கக்கூடாது  என்ற மனப்பான்மை கொண்டவர் அவர்) குழந்தைகளையும் ராம்ஜியையும் மனம்விட்டுப் பாராட்டினார்.

ராம்ஜியைத் தொடர்ந்து தற்சமயம் அனந்த் அதே பணியை விஜய் டிவியில் மிகச்சிறப்பாகவே செய்துவருகிறார்.

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று தெரிகிறது. 

பல வீடுகளில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கென்றே தயாராகிவிடுகிறார்கள் என்றும் 
கூறப்படுகிறது. பெண்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும் உணரமுடிகிறது. இத்தனைப் பெரிய நிகழ்ச்சியைத் தொகுத்துத் தரும் தொகுப்பாளர்களின் மாபெரும் அறுவையையும், ஜட்ஜ்களாக வரும் சில பின்னணிப் பாடகர்கள் மற்றும் பாடகியரின் ஈகோ கலந்த ஆய்வுகளையும் (இதில் எல்லாரையும் சொல்லவில்லை) சகித்துக்கொள்ளப் பழகிவிட்டால் நிச்சயம் செல்லக்குரல்களின் சில தென்றல் போன்ற வருடல்களுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி பல அரிய தகவல்களை சத்தமில்லாமல் உணர்த்திவிடுகிறது என்பதுதான் இதிலுள்ள விசேஷம்.

தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து பாடல்களுக்கு அடிமையாகிக் கிடப்பதுதான் நம்முடைய தமிழினம். பாடல்களை நாம் திரைப்படங்களின் மூலம்தான் அனுபவிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம். பாடல்கள் ஒரு காலத்தில் நாடோடிப் பாடல்களாக இருந்திருக்கக்கூடும். தெம்மாங்குப் பாடல், நாட்டுப்புறப் பாடல், உழவுப்பாடல் என்று பல்வேறு வகையான பாடல்கள் இருந்தபோதிலும் அவை யாவும் ஒரு சில பாணியிலேயே உழன்று வந்தவைதாம்.

பாடும் பாணியும் மெட்டுக்களும் வேறுபட்டாலும் அவை எல்லாமே அடிப்படையில் ஒரு சில வரையறைக்குள்ளேயே அடங்கிவிடக்கூடியவைதாம்.

அதன்பிறகு கர்நாடக இசையின் காலம் ஆரம்பித்தது.

கர்நாடக இசைப்பாணியிலான பாடல்கள் அணிவகுத்தன.

திரையிசையையும் மேடைகளையும் அத்தகைய பாடல்களே ஆக்கிரமித்தன.

கர்நாடகப் பாணியிலான பாடல்கள் வந்தபிறகுதான் இசை அனுபவத்தில் மிகப்பெரியதொரு இடைவெளி ஆரம்பித்தது.

கர்நாடக இசை கற்றவர்களுக்கும் அந்த இசையின் பரிச்சயம் இல்லாதவர்களுக்குமான மிகப்பெரியதொரு கோடு நடுவில் போடப்பட்டது.

கர்நாடக இசை அறிந்தோர், அறியாதோர் என்றொரு பிரிவு மிக வேகமாக வளர ஆரம்பித்தது. 

கர்நாடக இசை கற்றவர்கள் மேலோர் என்றும் அதை அறியாதவர்கள் கொஞ்சம் கீழே இருப்பவர்கள் என்பதுமான வரையறை லேசாகத் தலைதூக்க ஆரம்பித்தது.

இது வேறு எந்த கலைவடிவமாக இருந்திருந்தாலும் இந்தப் பிளவு மேலும் மேலும் ஆழமாகப் போயிருக்கக்கூடும். இடையில் சாதி புகுத்தப்பட்டு  பல்வேறு பாதகங்களை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த இடைவெளியை இட்டு நிரப்பி திரையிசைக்கு வேண்டியது மெல்லிசைதான் என்ற நிலையை ஏற்படுத்தித் தந்தவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்தான்.

அன்றைய திரையுலகில் ஜி.ராமனாதனுக்கு அடுத்து  பிரபல இசையமைப்பாளர்களாக அறியப்பட்டு மிகப்பெரிய சாதனைகளையும் புரட்சிகளையும் இசையுலகில் கொண்டுவந்தவர்கள் இவர்கள் இருவரும்தான்.

இவர்களின் சாம்ராஜ்ஜியத்தில் நடைபெறாத சோதனை முயற்சிகளோ, பரீட்சார்த்தங்களோ, புதுமைகளோ, புரட்சிகளோ எதுவுமே கிடையாது.

அதனால்தான் இவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்று அறியப்பட்டார்கள்.

அதன்பிறகு நிறைய மன்னர்களும் ராஜாக்களும் வந்துவிட்டதனால் இவர்களை தற்போது 

மெல்லிசை மாமன்னர்கள் என்று குறிப்பிடுகின்றனர் விமரிசகர்கள்.

இவர்களுடைய அடியைப் பின்பற்றித்தான் இன்றைய இசையமைப்பாளர்கள்- இளையராஜாவிலிருந்து இன்றைய சங்கர்நாராயணன்வரை நடைபோடவேண்டிய கட்டாயத்தை இயல்பாகவே உருவாக்கிவிட்டிருப்பவர்களாக இவர்கள் இருவரையும்தான் சொல்லவேண்டும்.

52ல் துவங்கி 57ல் வேகமெடுத்த இவர்களின் இசைப்பயணம் 65ல் பிளவுபட்டபோதும் விஸ்வநாதன் பிரிந்துசென்று தனியொருவராக நின்று அவருடைய சாதனைகளில் சேதாரம் எதுவும் வராமல் பார்த்துக்கொண்டது அரியதொரு சாதனை.

இன்னமும் நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் ஆனபோதும் சிவாஜி என்றாலோ, எம்ஜிஆர் என்றாலோ கண்ணதாசன் என்றாலோ டிஎம்எஸ் என்றாலோ பி.சுசிலா என்றாலோ நினைவுக்குவரும் பாடல்கள் இவர்கள் இசையமைத்தவையாக மட்டுமே இருக்கும். இவர்களுக்கு இணையாக கூடவே பவனிவந்த இன்னொரு இசையமைப்பாளராக கே.வி.மகாதேவனையும் சொல்லவேண்டும்.

இந்த வரிசைக்குப் பின்னால்தான் எந்த வரிசையாயிருந்தாலும் வரவேண்டும்.
அத்தனை சாதனை. அத்தனை வெற்றி.

சினிமாவைப் பொறுத்தவரை சாதி மதம் மொழிக்கெல்லாம் இடமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதிய அடையாளங்கள் இருந்துகொண்டிருந்தாலும் அவை பொதுவான தளத்தில் வைக்கப்பட்டு இயங்குவதில்லை.

திரையுலகைப் பொறுத்தவரை இங்கு அடையாளப் படுத்தப்படுவது வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான்.

அதனால்தான் சினிமாவில் ‘மட்டும்’ சாதிய மற்றும் மொழி அடையாளங்களை அவ்வளவாகப் பார்க்கமுடியாது.

இங்கு எம்ஜிஆர் மலையாளியா தமிழரா என்று பார்க்கப்படுவதில்லை.

ரஜனிகாந்த் மராட்டியரா கன்னடரா தமிழரா என்று பார்க்கப்படுவதில்லை.

ஏசுதாஸ் மலையாளியா, எஸ்பிபி தெலுங்கரா, எம்எஸ்வி மலையாளியா என்பதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை.

அதுபோலவே நடிகைகள் விஷயத்தில் சாதி, மதம், மொழி என்பதெல்லாம் என்றைக்கும் யாரும் பார்த்ததே இல்லை. அன்றிலிருந்து இன்றையவரைக்கும் நான்கைந்துபேரைத் தவிர தமிழச்சிகள் கதாநாயகிகளாக பவனிவந்ததே இல்லையென்பதும், அதனை ஒரு பொருட்டாகக்கூட யாரும் நினைத்ததில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு காலகட்டத்தில் தெலுங்கர்களும் மலையாளிகளும் கன்னடர்களும் மட்டுமே கதாநாயகிகளாக நிறைந்திருந்த தமிழ்த்திரையில் தற்சமயம் வடநாட்டுப் பெண்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு திரையுலகை ஆக்கிரமித்துள்ளனர்.

சினிமாவில் கதாநாயகர்களும்(ஓரிருவரைத் தவிர) கதாசிரியர்களும் கவிஞர்களும் மட்டுமே ‘பெரும்பாலும்’ தமிழர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இந்தப் பாட்டையில்தான் தமிழ்த்திரையுலகம் அன்றிலிருந்து இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறது.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் இதனடிப்படையில்தான் அணுகவேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேடையில் அமர்ந்திருக்கும் ஜட்ஜூகளும் சரி, பாடவந்திருக்கும் சிறுவர் சிறுமியரும் சரி பெரும்பாலும் பிற மொழியினரே.

அவர்கள் பாடுவது மட்டும்தான் தமிழ்.

சினிமாவில் என்ன நடக்கிறதோ அதுதான் இங்கேயும் நடக்கிறது.

சினிமாவில் வெற்றிக்குத்தான் முக்கியத்துவம், வெற்றிக்கு மட்டும்தான் முதல் மரியாதை. முதல் மரியாதை என்ன மரியாதையே வெற்றிக்கு மட்டும்தான்.

தொடர்ச்சியான வெற்றி மட்டும் தரவில்லையென்றால் அவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும், எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட்டு அதன் பாதையில் போய்க்கொண்டே இருக்கும் திரையுலகம்.

சாதனை என்பதும், திறமை என்பதும், உழைப்பு என்பதும் இங்கே வெற்றியை மட்டுமே வைத்துக் கணக்கிடப்படும். வெற்றி மட்டும் தரவில்லையென்றால் (அதுவும் தொடர்ச்சியான வெற்றி) நீ எத்தனைப் பெரிய கொம்பனாக இருந்தாலும் திரையுலகம் கவலைப் படுவதில்லை. ‘தூக்கிக் கடாசிவிட்டுப்’ போய்க்கொண்டே இருக்கும்.

மிகப்பெரிய சாதனையாளர்கள் புறந்தள்ளப்படுவதும், சாதாரணர்கள் இமயத்துக்கும் அப்பால் கொண்டாடப்படுவதும் இங்கே சர்வசாதாரணம் என்பது இயற்கைக்குப் புலப்படாத ஒரு விதி.

அதே சமயம் திறமைக்கு மதிப்பே இல்லை என்றும் சொல்லமுடியாது.

திறமைக்குத்தான் மதிப்பு. கூடவே அதிர்ஷ்டமும் இருக்கவேண்டும்.(பகுத்தறிவு வாதங்கள் நாயடி பேயடி வாங்கும் இடங்களில் திரைத்துறையும் ஒன்று. பகுத்தறிவு வாதங்களை வைத்து இங்கே எந்த முடிவுக்கும் வரவே முடியாது)

பகுத்தறிவு இங்கே எதையுமே நிர்ணயிப்பதில்லை. மாறாக ‘அதிர்ஷ்டம்தான்’ இங்கே எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முடிவுகள் இன்னமும் சில நாட்களில் வந்துவிடும். முடிவு எப்படியிருக்கப்போகிறதோ என்பது ஒருபுறமிருக்க இங்கே போட்டிக்கென எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்கள் மீது ஒரு பார்வையை வீசுவோம்.

பாடியவர்கள் அத்தனைப்பேரும் சிறுவர் சிறுமியர்.

பெரும்பாலான பாடல்கள் சிக்கலானவை. பெரியவர்களே பாடத் திணறும் நுட்பம் கொண்டவை. 

மிகத் தீவிரமான பயிற்சி இல்லையென்றால் சாதாரண ரசிகர்கள் என்றில்லை ஓரளவு பாடத்தெரிந்து ஆர்க்கெஸ்ட்ராக்களில் பாடும் நிலையில் இருப்பவர்கள்கூட சட்டென்று எடுத்துப் பாடமுடியாதவை.

அத்தகைய பெரும்பாலான பாடல்களை இந்தச் சிறார்கள் பாடியதை, அதுவும் சர்வசாதாரணமாகப் பாடியதை வியப்புக்குரிய ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும்.

நிச்சயம் அவர்களின் வயதுக்கும் ஞானத்துக்கும் அப்பாற்பட்ட பாடல்கள்தாம் பெரும்பாலானவை. 

அவர்கள் அதனை மிகச்சிறப்பாகப் பாடியதுதான் நிகழ்ச்சியின் பிரமாண்ட வெற்றிக்குக் காரணம்.
இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் தொண்ணூறு சதம் நல்ல பாடல்களே.

தமிழின் மிகப்பெரிய இசையமைப்பாளர்களால் மிகத் தேர்ச்சியுடன் பின்னப்பட்டு மிகச்சிறப்பான நுணுக்கங்களுடன் இசையமைக்கப்பட்ட பாடல்கள் அவை. மெட்டிலும், பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், ஆர்க்கெஸ்ட்ரேஷனிலும், இவையெல்லாவற்றையும்விட பாடுகிறவர்களின் குரல் வளத்தாலும், உத்தியாலும் பிரமாதமாக அமைந்த பாடல்கள்.

சாதாரணப் பாடல்கள் என்று ஒரு வகை இருக்க – பாடல் போட்டிகளில் பாடுவதற்கென்றே சிறப்பான பாடல்கள் என்று சில இருக்குமல்லவா? அந்தவகையில் அமைந்த பாடல்கள் இவை.

அதனைத் தேர்ந்தெடுத்துப் பாடிய சிறார்களும் சரி; பாடவைத்த நிகழ்ச்சி அமைப்பாளர்களும் சரி பாராட்டுக்குரியவர்கள்.

அதே சமயம் அம்மாதிரி பாடல்களை உருவாக்கி நமக்களித்த அந்தப் பெரிய இசையமைப்பாளர்கள் அனைவரும் நம்முடைய வணக்கத்துக்குரியவர்கள்.

இந்த இடத்தில்தான் ஒரு உண்மையைப் பதிவு செய்யவேண்டும்.

போட்டிக்கென அமைந்த பெரும்பாலான பாடல்களின் இசைக்குச் சொந்தக்காரர்கள் எழுபதுக்கு முன் வந்த இசையமைப்பாளர்களாகவே இருக்கிறார்கள்.

ஜி.ராமனாதன் தொடங்கி, டி.ஜி.லிங்கப்பா, விஸ்வநாதன்- ராமமூர்த்தி, எம்எஸ்வி, கே.வி.மகாதேவன் என்றுதான் பெரும்பாலான பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. அதுவும் கே.வி.மகாதேவன் பாடல்கள்தாம் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.

இளையராஜா தொடங்கி ரகுமான் மற்றும் ஜிப்ரான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யா சாகர், இமான், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரின் பாடல்கள் மிகக்குறைந்த அளவிலேயே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

அதிலும் இளையராஜா வருகைக்குப் பின்னர்தான் தமிழ்ப் படங்களில் இசை என்பதே ஆரம்பமாயிற்று, அவர் ஒருவர்தான் பாட்டுக்கு மெட்டமைத்தவர் அவர் இல்லாவிட்டால் தமிழனுக்கு இசை என்ற ஒன்றோ பாடல் என்ற ஒன்றோ கிடைத்தே இருக்காது, இசை என்றாலேயே அது இளையராஜாதான் என்ற மயக்கத்திலேயே இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரமாண்ட போட்டி நிச்சயம் ஒரு பெரிய ஏமாற்றத்தையே அளித்திருக்கும்.

ஏனெனில், அவ்வப்போது பல்வேறு சிரமமான கட்டங்களைத் தாண்டி வருவதற்குத் தேர்ந்தெடுத்துப் பாடப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்களாகவே இருந்தன.

கடைசி ரவுண்டுகளில் இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றைப் பாடினாலும், அதற்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமாக ஏ.ஆர்.ரகுமானின் மிகக் கடினமான பாடல்களை இந்தச் சின்னஞ்சிறுசுகள் அனாயாசமாகப் பாடியது ரசிப்பதற்குரியதாகவே இருந்தது.

ஸ்பூர்த்தி  என்ற ஒரு சுட்டிப்பெண், பெங்களூரைச் சேர்ந்தவள் பல பிரபலமான கஷ்டமான பாடல்களைப் பாடியது அசத்தல் ரகம். இத்தனைக்கும் அவளுடைய தாய்மொழி கன்னடம். 

அதிலும் அனுஷ்யா என்ற சின்னப் பெண் ‘புத்தம்புது பாட்டுவந்தா தாண்டவக்கோனே’ என்ற வித்யா சாகரின் அற்புதமான ஒரு பாடலைப் பாடியமுறை கேட்பவர்களை உணர்ச்சிவசப்பட வைப்பதாக இருந்தது. ஜட்ஜ்கள் அத்தனைப்பேரும் உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று கைதட்டியதோடு அருகில்வந்து அந்தச் சிறுமியைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்தது நெகிழ்ச்சியூட்டிய ஒரு அனுபவம்.

                     


ஒவ்வொருவர் பாடி முடித்ததும் நீதிபதிகளாக வந்திருந்த கர்நாடக இசைப் பாடகர்களும், திரையிசைப் பின்னணிப் பாடகர்களும், சில இசையமைப்பாளர்களும் செய்த விமர்சனங்கள் அவர்களுடைய ஈகோவை விட்டுக்கொடுக்காமல் செய்யப்பட்டதுபோல் செயற்கையாகத் தோன்றினாலும், சில விமர்சனங்கள் உபயோகமுள்ளவையாகவே இருந்தன. அதிலும் எல்.மகராஜனுடைய விமர்சனங்கள் கனகச்சிதம்.

சில பாடல்களைத் தவிர பெரும்பாலான பாடல்களைக் கேட்கும்போது அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்கும்போது ஒரு பெரிய குறை தென்பட்டது.

அதாவது ஏதோ ரயிலைப் பிடிக்கவோ அல்லது விமானத்தைப் பிடிக்கவோ ஓடுவதுபோன்ற அவசரத்துடன் பாடல்கள் பாடப்பட்டன.

பின்னணி இசையும் அதற்கேற்பவே வாசிக்கப்பட்டது.

இதுபற்றி ஜட்ஜ்களாக வந்திருப்பவர்கள் யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று காத்திருந்ததில் வியர்த்தமே மிஞ்சியது.

இந்தக் குறையை அவர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

அதாவது ஒரு பாடல் எப்படிப் பாடப்பட்டிருக்கிறதோ அந்தத் தாள லயத்திலும் நேர லயத்திலும் இல்லாமல் படுவேகமாக ஓடி முடிந்திருந்தன ஒவ்வொரு பாடலும்.

ஒரு பாடல் எவ்வளவு நேரத்தில் முடியவேண்டுமோ அதற்கேற்ப இல்லாமல் அரை நிமிடம் முன்னதாகவே முடிந்திருந்தன என்பதுதான் விஷயம்.

இதனை யாரும் உணரவில்லை என்பது ஒரு சோகம்.

வேறொன்றுமில்லை. எம்பி-3 சிடிக்களில் திணித்து நிரப்பப்படும் பாடல்களைக் கேட்டுவிட்டு அதற்கேற்ப பாடுவதாலும் அதற்கேற்ப இசைப்பதாலும் வருகின்ற வினை இது.

இதைப்பற்றி பிரபல இசை விமரிசகர் ஷாஜிகூட ஏதோ ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்ததாக ஞாபகம்.

நூறு இருநூறு பாடல்களை, அல்லது நானூறு ஐநூறு பாடல்களை ஒரே சிடியில் திணிப்பதனால் வரும் மோசமான விளைவு இது.

நெருக்கியடித்துக்கொண்டு அத்தனைப் பாடல்களை ஒரே சிடியில் சேர்த்துத் திணிக்கும்போது இப்படிக் கைகால்கள் ஒடுங்கிப்போய் மூச்சுத்திணறிப் போய் அந்தப் பாடல்கள் தங்களின் சுயம் இழந்து ஏதோ ஒரு வேகத்துக்கும் எண்ணிக்கைக்கும் மட்டுமே ஈடு கொடுக்கமுடியும். நிச்சயமாக இனிமைக்கு அல்ல.

 பழைய பாடல்களின் ரசிகர்கள் இந்த ‘எம்பி- 3’ சிடிக்களை வாங்கி மோசம் போகாதீர்கள். உங்களின் இசை ரசனையையே கெடுத்துவிடக்கூடியவை அவை.


பழைய பாடல்கள் தேவையெனில் யூ டியூபில்வரும் பாடல்களுடன் கூடிய திரைக்காட்சிகளிலிருந்து ஒலியை மட்டும் பதிந்துவைத்துக்கொண்டு கேளுங்கள்.(விபரம் 
தெரிந்தவர்கள் மேற்கொண்டு வேறு எப்படி நல்லமுறையில் சேமிக்கலாம் என்பதைத் தெரிவித்தால் நலம்)


அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதற்குள் இந்தப் பிரச்சினைக்கு விஜய் டிவிக்காரர்கள் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்.