Saturday, March 27, 2010

சிவகுமாரின் புதிய அவதாரம்



தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் தங்கள் ஆண்டு விழாவுக்கு இரண்டுபேரின் வருகைக்காக மட்டுமே காத்திருக்கின்றன. ஒருவர் அப்துல் கலாம். இன்னொருவர் நடிகர் சிவகுமார்.
அப்துல்கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர். விண்வெளி ஏவுகணைத் துறையில் உலகம் கவனிக்கத் தகுந்த விஞ்ஞானி. தாம் வகித்த பதவிக்கு கௌரவம் சேர்த்த அந்த மனிதர் 'முன்னாள் குடியரசுத் தலைவர்' என்ற வசதிகளோடு ஒரு குட்டி மாளிகையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு நாடு பூராவும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் இளம் பருவத்தினரைச் சந்திப்பது. அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நல்லெண்ணெங்களை விதைப்பது; எதிர்காலச் சிந்தனைகளை உயர்ந்த நெறிகளாக மாற்றுவது; அதன் மூலம் இளம் சந்ததியினரை வல்லரசு நாட்டின் குடிமக்களாக மாற்றுவதற்காக அவர்களை 'லட்சியக் கனவு' காணவைப்பது. இந்தப் பின்புலத்தில் அப்துல்கலாம் நாடெங்கும் பயணம் செய்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இளம் பருவத்தினரைச் சந்தித்து வருகிறார்.
சிவகுமாரின் பயணம் வேறுமாதிரியானது.
இருப்பதிலேயே மிகவும் கவர்ச்சிகரமான திரைப்படத்தொழிலைப் பின்புலமாகக் கொண்டவர் சிவகுமார். அவரது இரு மகன்களில் ஒருவரான சூர்யா தமிழின் மிக முன்னணி நடிகர்களில் ஒருவர். இரண்டாவது மகனான கார்த்தியும் அந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பவர். மருமகளான ஜோதிகாவும் பிரபல நடிகையாயிருந்தவர். 'தமிழ்த்திரைப்படங்களின் பொற்காலம் ' என்று சொல்லப்படும் சிவாஜி-எம்.ஜி.ஆர் காலகட்டத்து நடிகர்களில் ஒருவர் சிவகுமார். சிவாஜியோடு நிறையப் படங்களிலும் ,எம்ஜிஆருடன் சில படங்களிலும் இணைந்து நடித்தவர். தமிழின் புராணப் படங்களில் முருகனாகவும் வேறு சில தெய்வப் பாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் தனியொரு இடத்தைப் பிடித்தவர். தாம் இருநூறு படங்கள்வரை நடித்திருந்த போதிலும் பரபரப்பான கதாநாயகனாக இல்லாமல் நிதானமாய் அடியெடுத்து வைக்கும் கதாநாயகனாகவே இருந்து நிலையான ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்தவர். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அடையாளம் அவருக்குக் கிடைத்திருந்தது. நடிகர்களில் மிகச்சிறந்த ஓவியக்கலைஞராக அறியப் பட்டிருந்தவர் அவர். இதைவிடவும் பெரிதான இன்னொரு அடையாளமும் அவருக்கிருந்தது. நீக்குப் போக்குகள் நிறைந்த திரைப்பட உலகில் பண்பாட்டு நெறிகள் கொண்ட மனிதராகவும் , ஒழுக்க சீலமிக்க கலைஞராகவும் அவர் மதிக்கப்பட்டார். அதனால்தான் இயக்குநர் கே. பாலச்சந்தர் அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் "நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி; நடிகர்களுக்கு இலக்கணம் சிவகுமார்" என்றார்.
திரைப்படத்துறையில் தமக்கான இடம் நழுவ ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் தேர்ந்தெடுத்தது சின்னத்திரையை. திரைப்படத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் சின்னத்திரையை மிகச் சாதாரணமாகவும் கேவலமாகவும் பேசிக்கொண்டிருந்த காலட்டம் அது. சிவகுமார் துணிந்து சின்னத்திரையைத் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்துதான் பெரிய பெரிய ஜாம்பவான்கள்கூட சின்னத்திரைப் பக்கம் தங்கள் பார்வையைச் செலுத்தத் தொடங்கினர். ஆக சின்னத்திரையையும் திரைப்படக்கூட்டம் மொய்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் அங்கிருந்து அடுத்த தளத்திற்குச் செல்ல விரும்பியிருக்கிறார் சிவகுமார். அவர் தேர்ந்தெடுத்த துறைதான் ஆச்சரியம் மிகுந்தது. அது பேச்சு........மேடைப் பேச்சு!
திரைபடத்துறையில் இருந்த காலத்திலிருந்தே மற்றவர்கள் கவனிக்கத் தகுந்த ஒரு பேச்சாளராகத்தான் அவர் விளங்கிக்கொண்டிருந்தார். முக்கியமான விழாக்களில் நல்ல பேச்சு தேவைப்படும் மேடைகளில் 'சிவகுமாரைக் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன்' என்று கலைஞர் போன்றவர்கள் குறிப்பட்டுச் சொல்லும் அளவுக்குத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர் அவர். அதிலும் குறிப்பாக சிவாஜியின் புகழ்பெற்ற வசனங்களை சிவாஜியே வியக்குமளவுக்கு மேடைகளில் அற்புதமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பொருத்தமான இடங்களில் பேசிக்கொண்டிருந்தவர். திரைப்படத்துறையின் சிறந்த பேச்சாளராக அறியப்பட்டவர். இந்தப் பின்புலத்தில் தம்மை ஒரு பேச்சாளராக வரித்துக்கொண்டு தமிழகத்தில் மைக் முன் வந்து நிற்கிறார்.
பேசிப் பேசியே தமிழகத்தைக் கெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு பலபேரின் மீதும் பரவலாக வந்திருக்கும் நிலையில் சிவகுமாரின் பேச்சுக்களம் ஆரம்பமாகிறது. மேடைப்பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருக்கிறது தமிழ் இனம். அரசியல் மேடைகளுக்கென்று ஒரு பாணி. அலங்கார வார்த்தைகள் ; பொய்யான வாக்குறுதிகள், வெற்றுக்கூச்சல்கள், சாரமற்ற சவால்கள்..........
இலக்கியப் பேச்சுக்களுக்கென்று ஒரு பாணி. மனப்பாடம் செய்த சில செய்யுள்கள் ; குட்டிக்கதைகள், வறண்டுபோன நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்கள்..........
இவை இரண்டும் கலந்த குழப்பமான கலவையில் பொதுவான சில பேச்சுக்கள்..........
இதே சப்பையான பாணியில் எல்லாப் பேச்சுக்களும் மக்களைச் சுற்றிவளைக்க ஆரம்பித்ததில் இப்போதெல்லாம் பேச்சுக்கேட்க வரும் கூட்டம் சுத்தமாய் அற்றுப்போய் விட்டது. பல கூட்டங்களுக்கு எண்ணி எட்டுப்பேர் பத்துப்பேர்கூட வருவதில்லை என்ற நிலைமை. இந்தச் சூழலில்தான் சிவகுமார் 'பேச' வருகிறார்.
ஈரோட்டு புத்தகச் சந்தை அவருக்குக் களம் அமைத்துத் தருகிறது. பல்லாயிரக்கணக்கில் கூட்டம். 'திரை வளர்த்த தமிழ்' என்று ஆரம்பிக்கிறார். இளங்கோவன் துவங்கி அண்ணா, கலைஞர்,ஏ.பி.நாகராஜன், சக்தி கிருஷ்ணசாமி, ஸ்ரீதர், கே.பாலச்சந்தர்வரை தமிழை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று விவரிக்கிறார். அவர் பேசப் பேச ஒவ்வொரு காட்சியும் மக்கள் மனதில் நாடகக் காட்சிகளாய்த் திரைக்காட்சிகளாய் விரிகின்றன. வசனங்கள் மட்டுமின்றி பாடல்களில் தமிழ் எவ்வாறு பயன்பட்டது என்பதை விவரிக்கிறார். பாபநாசம் சிவன் தஞ்சை ராமையா தாஸ் துவங்கி கண்ணதாசன் வைரமுத்துவரை தமிழை எப்படியெல்லாம் கையாண்டார்கள் என்பதை எடுத்துரைக்கிறார். பண்பட்ட நடிகராக இருந்ததனால் குரலில் ஏற்ற இறக்கங்களும் உச்சரிப்பு சுத்தங்களும் கேட்போரைக் கட்டிப் போடுகின்றன. பேசும்போது கையில் ஒரு சிறிய குறிப்புக்கூட வைத்திருப்பதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்.
தொடர்ந்து மூன்று வருடங்கள் ஈரோட்டு புத்தகச் சந்தையில் பேச்சு. ஒவ்வொரு வருடமும் கூட்டம் பெருகிக்கொண்டே போனது. இதற்கிடையில் ஒரு பேச்சின் பதிவு விஜய் டிவியின் பண்டிகை தினத்தில் ஒளிபரப்பாக ஆதரவு அதிகரித்தது. அடுத்த பதிவையும் அடுத்த பண்டிகைக்கு ஒளிபரப்பியது விஜய் டிவி. இதன் தலைப்பு;'பெண்-தாய், மனைவி , மகள் ' இதில் தன்னுடைய தாயாரை, தன்னுடைய மனைவியை, தன்னுடைய மகளை முன்னிருத்தி பெண்களைப் பற்றிய தமது மதிப்பீட்டை தமது மரியாதையை சமூகத்தின் முன் வைக்கிறார் சிவகுமார். எந்தவித ஜோடனைகளோ பாசாங்குகளோ இல்லாமல் பட்டவர்த்தனமாய்த் தம்மையே படையலிட்டிருந்த சிவகுமாரின் நேர்மை கேட்டவர்களை உலுக்கிற்று. விளைவு, தொலைக்காட்சியின் பிரபலத்தைத் தாண்டி பிரபல மோசர்பியர் நிறுவனம் சிவகுமாரின் பேச்சுக்களை சிடிக்களாக வெளியிட ஆரம்பித்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களின் வியாபார உத்தியாக குறிப்பிட்ட தொகைக்குமேல் தங்களிடம் துணி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிவகுமாரின் சி.டி.க்களை போனஸாக விநியோகிக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்தார் சிவகுமார். 'கம்பன் என் காதலன் ' என்ற தலைப்பில் கம்பனின் நூறு பாடல்கள் வழியாக மொத்த இராமாயணக் கதையையும் ஒரே பரப்பில்- ஆங்கிலத்தில் at a stretch என்பார்களே அதுபோல் விவரித்தார். "ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு. பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித்தரும் உன்னத காவியம் இராமாயணம். அது இளையதலைமுறையினரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சி இது" என்றார். இதனை ஒரு புராண நோக்கிலோ கதா காலாட்சேப நோக்கிலோ இல்லாமல் இலக்கிய நோக்கில் சொன்னதும், வழக்கம்போல் கையில் ஒரு சின்னக்குறிப்பும் இல்லாமல் இலக்கிய நடையை எளிய தமிழில் அதுவும் அங்கங்கே தமது விமர்சனங்களையும் இணைத்துச் சொன்னதும்தான் இவரின் சிறப்பு. இதனைப் பெண்கள் மட்டுமே சூழ்ந்திருந்த ஒரு கல்லூரி விழாவில் அரங்கேற்றினார் அவர். பேசினார் என்று சொல்லமுடியாது. 'அரங்கேற்றம்'தான். இதற்கு அவர் எடுத்துக் கொண்டது இரண்டரை மணிநேரம். அந்த இரண்டரை மணிநேரமும் ஒரு சின்னச் சலனமோ அசைவோ இன்றி விக்கித்து விதிர்விதிர்த்துப்போய் செவி மடுத்த கூட்டம், சிவகுமார் பேசி முடித்துக் கீழே மண்டியிட்டுத் தரையைத்தொட்டு வணங்கியபோது உணர்ச்சிவசப்பட்டு எழுந்துநின்று ஐந்து நிமிடத்திற்கும் மேலாகக் கைத்தட்டியது இதுவரை யாருக்கும் கிடைக்காத பெருமை என்றே சொல்லலாம்.
அடுத்தது இன்னொரு கல்லூரி வளாகம். சேலத்தில் நடந்த இந்த விழாவில் 'என் கண்ணின் மணிகளுக்கு' -என்று பேச ஆரம்பிக்கிறார். இந்த தடவை அவரது பேச்சு முழுக்கவும் இளைய சமுதாயத்தைச் சுற்றிச் சுழல்கிறது. ஒரு தந்தையாக, ஒரு ஆசானாகச் சொல்ல வேண்டிய செய்திகளை ஒரு தோழனின் தொனியில் சொல்லிச் செல்கிறார். வேறு யார் சொல்லியிருந்தாலும் நல்லுரைகளாக, உபதேசங்களாக எரிச்சல் ஊட்டியிருக்கக்கூடிய விஷயங்கள் இவரது மொழிநடையில் கவனமாகச் செவிமடுக்கும் உரையாக மாற்றம் கொள்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் அழுகையை அடக்க முயலும் பெண்களையும் தேம்பியழும் இளையதலைமுறையினரையும் கவனமாகப் பதிவு செய்கிறது காமிரா.
நாமக்கல் பாவை எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷனில் பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டம். இங்கே 'ஒரு கிராமத்து இளைஞனை கலைஞனாக மனிதனாக மாற்றியவர்கள்' என்ற தலைப்பில் பேச ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அப்பட்டமான கிராமத்தின் படப்பிடிப்பு.ஏதோ தி.ஜானகிராமன் நாவலையோ, கி. ராஜநாராயணன் நாவலையோ படித்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை. அத்தனை அசலாய் கிராமம் பற்றிய வர்ணனைகள். அதற்கடுத்து குடும்பச்சூழல், ஓவியக் கல்லூரி, திரைப்பட நுழைவு, தாம் சந்தித்த பெரிய மனிதர்கள் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் என்று பேசிச்செல்கிறார். எல்லாம் புதிய புதிய தகவல்களாய் வந்து விழுகின்றன. மெய்மறந்து கேட்கிறது கூட்டம்.
எல்லாப் பேச்சுக்களிலுமே அடிநாதமாய் ஓடும் இழை ஒன்றே ஒன்றுதான். 'நீ வளர்ந்த சமுதாயத்தின் வேர்களை விட்டுவிடாதே . பெற்ற தாய் தந்தைக்கு மிஞ்சிய தெய்வமில்லை. உன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள். உலகம் உன்னுடையது. ஒவ்வொரு நாளையும் ரசனையுடன் வாழக்கற்றுக்கொள்.' - இந்தச் செய்தியைத் தம்முடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே தொகுத்துச் சொல்கிறார். ஒளிவு மறைவில்லாத பட்டவர்த்தனமான உண்மைகள் சர்வசாதாரணமாய் வருகின்றன. தாம் சந்தித்த தோல்விகளையும் அவமானங்களையும்கூட சத்திய சோதனைபோல் சொல்லிச் செல்வதனால் இந்த மனிதரின் பேச்சிலுள்ள நேர்மை கேட்பவர்களைக் கட்டிப்போடுகிறது.
திரையுலகின் புகழ்பெற்ற அத்தனைப் பெரிய மனிதர்களோடும் பழகியவர் என்பதனால் அவர்களைப் பற்றி இதுவரை நமக்குத் தெரியாத பல தகவல்கள் தெரிய வருகின்றன.அவை எல்லாமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துவதாகவே இருக்கின்றன. பேசி முடிக்கும்போது கனமான ஒரு இறுக்கம் கவிந்தது போன்ற உணர்வு தவிர்க்க முடியாததாகிறது. ஏதோ ஒரு பேச்சைக் கேட்டுவிட்டு வந்தோம் என்பதுபோல் இல்லாமல் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்று வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதில் சுலபமான வெற்றிபெறுகிறார் சிவகுமார்.
ஒரு ஓவியராக, நடிகராக, மக்கள்முன் பிரபலமடைந்த சிவகுமார் இன்றைக்கு ஒரு சிறந்த பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை ஒரு பிரபலமான பேச்சாளர் என்றோ இலக்கியப் பேச்சாளர் என்றோ வகைப்படுத்த முடியாது. தமிழின் நல்லெண்ணத் தூதுவர்களில் ஒருவர் என்பதே பொருத்தமாக இருக்கும்.

5 comments :

Muszhaaraff Muthunabeen said...

நிறைவான பதிவு. தமிழ் பேசும் உலகுக்கு சிவகுமாரின் உரை முக்கியத்துவம் பெறுவதைப் போலவே இந்தப் பதிவும் சமூகத்தின் தேவையாக அருக்கின்ற தேர்ந்த ஆளுமைகளை அடையாளப்படுத்தும் விடயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் சிவகுமாரையும், அப்துல் கலாமையும் ஒரே தளத்தில் பொருத்திப்பார்க்கும் உங்களது அவதானம் வரவேற்கத்தக்கது.
கமல்ஹாசன் பற்றிய எனது பதிவையும் நீங்கள் வாசிக்க நான் விரும்புகின்றேன்.

Muszhaaraff Muthunabeen said...

http://maarall.blogspot.com/2010/03/blog-post_31.html

நாகா said...

Nice Article..!

Balakumar Vijayaraman said...

நல்லதொரு பகிர்வு. நன்றி.

marsjk said...

You need to write more on such people. it is not only about popularity for such persons. the way Mr Sivakumar carries his message is astonishing. the simple philosophy of Mr Sivakumar is that his society should progress and be happy. it is not about his showcasing his oratorical skill or his elephant memory - it is about the way he can appeal to young and old.

Post a Comment