Friday, December 31, 2010

தமிழ் மணம் தேர்வில் ‘அமுதவன் பக்கங்கள்!’

தமிழ் மணம் போட்டியின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவுக்கு என்னுடைய இரண்டு பதிவுகள் வந்திருக்கின்றன. இரண்டு பதிவுகளுக்கும் ஓட்டுப்போட்டவர்களுக்கும் மறுபடி ஓட்டுப்போட இருக்கின்றவர்களுக்கும் எனது நன்றி. உண்மையில் இந்தப்போட்டியில் நான் எழுதிய வேறு சில பதிவுகளைத்தான் சிபாரிசு செய்யவிருந்தேன். ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் டெம்ப்ளேட்டை மாற்றப்போக தமிழ்மணம் இணைப்பிற்கான சுட்டியும் அத்துடன் போய்விட்டது. பின்னர் என்ன செய்தும் பதிவுகளைத் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. உங்கள் பதிவு ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வருகிறதேயல்லாமல் இணைக்க முடியவில்லை.அதனால் திரைப்படம் பற்றியவை அல்லாத வேறு பதிவுகளைக்கூட திரைமணத்தில் இணைத்துப் பின்னர்தான் தமிழ்மணத்தில் இணைக்க முடிந்தது. இந்தக் காரணத்தால் ரெய்கி பற்றிய என்னுடைய ஒரு பதிவும், தற்காலத்தமிழ் இலக்கியம் பற்றிய இன்னொரு பதிவையும் தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கப்படாததால் அவர்கள் அனுப்பிய பட்டியலில் இந்த இரண்டு கட்டுரைகளும் சேர்க்கப்படவில்லை.

உண்மையில் மாற்று மருத்துவம் பற்றிய ரெய்கி கலைக்கான கட்டுரை போட்டியில் இடம்பெற வேண்டும் என்று நிறைய விரும்பினேன். பரிசு பெற வேண்டும் என்பதற்காக அல்ல; நிறையப்பேரைச் சென்றடையுமே என்பதால்.

போட்டியில் சேர்க்க நினைத்த மூன்று கட்டுரைகளில் இரண்டு கட்டுரைகளைச் சேர்க்க முடியாததால் வேறு இரண்டு கட்டுரைகளை அனுப்பியிருந்தேன். அவற்றில் இரண்டு கட்டுரைகள் இரண்டாவது கட்டத்துக்கு வந்துள்ளன.
ஒன்று; உலகத்தமிழ் மாநாட்டை உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக மாற்றிய கலைஞரின் டெக்னிக்.

இரண்டு; இளைய ராஜாவா, ரகுமானா...?
இந்த இரண்டு கட்டுரைகளுமே அவசியம் நிறையப்பேரைச் சென்றடைய வேண்டிய விஷயங்கள் கொண்டவை என்றே கருதுகின்றேன்.

குறிப்பாக கலைஞர் தமது நுண்ணிய அறிவாற்றலால் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுகுகிறார் என்பதும், எவ்வாறு தாம் விரும்புவதற்கேற்ப குயுக்தியாக காய்களை நகர்த்தி தந்திரமாகத் தம்முடைய விருப்பத்திற்கேற்ப அவற்றை மாற்றியமைத்து மற்றவர்களையும் அதனை ஒப்புக்கொள்ள வைக்கிறார் என்பதையும் இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன். கலைஞரைப் பற்றித் துல்லியமாக அறிந்துகொள்ள இந்தப் பதிவு உதவும்.

அடுத்ததாக, ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ என்ற கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்துகொண்டிருந்த ‘பிலிமாலயா’ இதழில் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான கட்டுரைகளை எம்.ஜி.வல்லபனும் நானும் எழுதிவந்தோம். அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களைப்பற்றி சற்றே வித்தியாசமான கட்டுரைகளை மிகச்சிலர்தான் எழுதிவந்தோம். இன்றைய நிலை போல் நிறையப்பேர்கள் எழுதிக்கொண்டிருக்கவில்லை. இன்றைய இணையத்திலும் சில சிறு பத்திரிகைகளிலும் திரைப்படங்களைப் பற்றிய வித்தியாசமான பார்வைகளை நிறையப்பேர் முன்வைக்கிறார்கள். ஆனாலும் சில அடிப்படையான விவரங்களில் அவர்கள் மேலோட்டமாக மட்டுமே கருத்துச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாக கடந்து சென்றுவிடுவதைத்தான் பார்க்க முடிகிறது. இவற்றில் ஒன்று திரை இசைத்துறை. திரை இசையைப் பற்றி ஷாஜி என்பவர் நிறைய எழுதுகிறார். அதுகூட அவர் மலையாளத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி தமிழில் மொழி பெயர்க்கப்படும் எழுத்துக்களாகத்தான் இருக்கின்றன. இசையைப் பற்றியும் திரை இசையைப் பற்றியும் அவருக்கு நிறையத் தெரிந்திருக்கிறதே தவிர, அவர் எடுக்கும் சார்பு நிலைகளை அவரால் தவிர்க்க முடிவதில்லை. அதனால்தான் சீர்காழி கோவிந்தராஜன் போன்ற மகத்தான ஒரு பாடகரையெல்லாம் மிக மோசமாக அவரால் கேவலப்படுத்திவிட முடிகிறது. இது ஒருபுறமிருக்க, இசை என்றதும் அதுவும் திரைப்பட இசை என்றதும் இது ஏதோ இளையராஜாவிலிருந்துதான் தொடங்கியது என்பது போன்ற ஒரு பிரமை, அல்லது தவறான ஒரு கற்பிதம்-இன்றைய பெரும்பாலானோருக்கு இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு யார் மார்க்கெட்டில் இருக்கிறார்களோ அவர்களையும், அவருக்கு முன்னால் வரிசையில் யார் இருந்தார்களோ அவர்களையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது என்ற நோய் பெரும்பாலானவர்களைப் பீடித்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த நோய் தமிழர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேகமான நோய்தான். மிகச்சிறந்த பாடகர் என்றால் அது எஸ்பிபி மட்டும்தான். டி.எம்.சௌந்தரராஜனை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். மிகச்சிறந்த பாடகி என்றால் அது சித்ராவும் எஸ்.ஜானகியும்தான். பி.சுசீலாவை இவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சி செய்யவும் மாட்டார்கள். தங்கள் எதிரில் என்ன இருக்கிறதோ அது மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும். அதுதான் வரலாறு; அதுதான் சாதனை; அதுதான் உலகம். இந்தக் கண்ணோட்டம் சராசரி ரசிகனுக்கு சரியாயிருக்கலாம். பொதுவில் வந்து நின்று பேசவோ எழுதவோ செய்கிறவன் கொஞ்சமாவது அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். செயற்பட வேண்டும்.

இந்தப் புரிதல் எல்லாம் இல்லாமல் இருப்பதால்தான் இயக்குநர் என்றால் மணிரத்தினம் மட்டுமே என்ற கண்ணோட்டத்திலேயே இவனால் இருக்க முடிகிறது. பாலச்சந்தரையோ ஸ்ரீதரையோ அவர்களுக்கும் முன்னால் இங்கே சரித்திரம் படைத்தவர்களையோ திரும்பிப் பார்க்கும் பக்குவமோ பட்டறிவோ இவனுக்கு இல்லை. அதனைத் தேடிக்கொள்ளவும் விரும்புவதில்லை. தன் முன் இருக்கும் கலைஞர்களில் மட்டுமே ஆரம்பித்து மொத்த விவகாரத்துக்கும் சேர்த்து ஜட்ஜ்மெண்ட் கொடுத்துவிடும் தகுதி தனக்கு இருப்பதாகவே பல விற்பன்னர்களும் நினைக்கிறார்கள். கருத்து மன்னர்களாக உலா வந்து இதனையொட்டியே தங்கள் கருத்துக்களைக் கொட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அதாவது, காங்கிரஸ் என்றால் சோனியா காந்தியும் ராஜிவ் காந்தியும்தான். இந்திரா காந்தியையோ,நேருவையோ கணக்கில் எடுத்துக்கொள்ளும் பக்குவமோ புரிதலோ இவர்களுக்கு இல்லை; அது தேவையும் இல்லை.

இந்த மனப்பிரமையைப் போக்கும் கட்டுரைதான் ‘இளையராஜாவா...ரகுமானா?’ தேவை கருதி கொஞ்சம் பெரிய கட்டுரையாகவே அது நீண்டிருக்கிறது. தயவு செய்து அதனைப் படித்துப் பாருங்கள். தமிழ் மணம் போட்டியினால் நிறையப்பேரின் கவனம் கவரும் கட்டுரையாக அது அமையும் என்று நம்புகின்றேன். அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

போட்டியின் 20-ம் பிரிவான ‘உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான பதிவுகள்’ என்ற பட்டியலில் ‘இளைய ராஜாவா...ரகுமானா?’ கட்டுரையை நீங்கள் பார்க்கலாம்.

3 comments :

ம.தி.சுதா said...

புது வருட வாழ்த்துக்கள் சகோதரம்...

Unknown said...

கட்டுரைகள் மிகவும் நன்றாக இருக்கிறது,

தமிழ்மணம் இறுதி தேர்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...

Kandumany Veluppillai Rudra said...

தைப் பொங்கல் வாழ்த்து.!http://manyandten-rudra.blogspot.com/2011/01/blog-post_15.html

Post a Comment