Monday, January 17, 2011

கடவுள் நம்பிக்கை-சிவகுமாரின் மேலும் சில கருத்துக்கள்....!


கடவுள் பற்றித் தமது கருத்துக்களைத் தெரிவித்த சிவகுமாரிடம் “நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா..இல்லையா? நேரடியான பதில் தேவை என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவருடைய பதில்;-

நான் சிறுவயது முதலே கடவுள் நம்பிக்கை ஊட்டப்பட்டவன். நினைவு தெரிந்த நாளிலிருந்து மொட்டை ஆண்டி முருகன் படத்தை வணங்கி வருபவன். பழக்கமாக இருந்த பக்தி உணர்வு, வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும்போது, நாம் வேண்டியது நடக்கும்போது-இறுக்கமான நம்பிக்கையாகி விடுகிறது.

ஓவியக்கல்லூரியில் சென்னையில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது-‘Mother serious start immediately’ என்று தந்தி வந்தது. எந்த விநாடியிலும் தாயின் உயிர் போகலாம். சென்னையிலிருந்து கோவை பத்து மணிநேர பயணத்தின் போதும் உயிர் போகலாம். உலகில் எனக்குள்ள ஒரே பற்றுக்கோடு என் தாய். அவரை இம்முறை உயிரோடு நான் பார்த்துவிட்டால் சாகும்வரை கடவுள் நம்பிக்கையோடு இருப்பேன் என்று விடிய விடிய ரயில் படிக்கட்டில் அமர்ந்து அழுதுகொண்டே சென்றேன்.

மறுநாள் தாயை உயிரோடு பார்த்தேன்!

ஓவியக் கலையில் ஒரு கட்டத்தை அடைந்தபோது ‘நவீன ஓவியர்கள் உன் ஓவியங்களை ஏற்க மாட்டார்கள். உன்னுடையவை பதினாறாம் நூற்றாண்டு பாணி ஓவியங்கள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது-திரையுலகை நோக்கி என் வாழ்வை திசை திருப்பி விட்டவன் இறைவன் என்று கருதுகிறேன்.

நான் மட்டும் சினிமாவில் இருந்தால் போதும். என் பிள்ளைகள் இதில் இறங்கிச் சீரழிய வேண்டாம். நித்ய கண்டம் பூரண ஆயுசு உள்ள தொழிலில் அவர்கள் அகப்பட்டுக்கொள்ள வேண்டாம் என்று ஸ்டுடியோ பக்கமே பிள்ளைகளை அழைத்துப் போகாமல் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.

‘உன்னைவிட உன் பிள்ளைகள் பேர் வாங்க வேண்டாமா? உன்னைவிட சமுதாயத்திற்கு அவர்கள் தொண்டு செய்ய வேண்டாமா? அவர்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்ய நீ யார்? என்று கேள்வி கேட்டு- அவர்களை நான் பயந்த சினிமா உலகிலேயே, நம்பிக்கை நட்சத்திரங்களாக வாழ வைப்பது இறைவன் செயலாகவே நான் நினைக்கிறேன்.

என் மகளுக்குச் சென்னையிலேயே மாப்பிள்ளை கிடைத்தது, தங்கமான பையன் மருமகனாக வந்ததும் இறைவன் செயலே.

சூர்யாவுக்கு, ஜோதிகா என்ற குணவதியை மனைவியாக்கியதும் இறைவன் செயலே.

எந்தச் சூழ்நிலையிலும், புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, சூதாடக்கூடாது, பிற மாதர் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது-என்பதில் நான் வைராக்கியமாக இருந்து சென்னை வந்து இந்த ஐம்பத்திரண்டு வருடங்களும் வாழ்ந்துவிட்டேன். இன்று என் குடும்பம், குழந்தைகள்-இந்த அளவுக்குப் புகழ் பெறுவார்கள், மக்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

மனித முயற்சியால் மட்டுமே இவை அனைத்தும் நடந்துவிட்டதாக நான் கருதவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி பின்னால் இருந்து வழி நடத்துவதாகவே நான் கருதுகிறேன்.

6 comments :

Mathiseelan said...

சரி சார் ஒப்புக்கறேன்.

ஜோதிஜி said...

உண்மையான கருத்துகள் உணர்ந்தவர் வாழ்ந்த வாழ்க்கையின் போது சொல்வது இன்னமும் நம்பிக்கையை உருவாக்குகின்றது.

marsjk said...

nalla karthukal. Avarin attral arinthavan endra murayil avar innamum athigam elutha vendum avarin karuthukal melum melum veli vara vendum
Kumar

Anonymous said...

last words no

தறுதலை said...

பொதுவாக சிலப்பதிகாரத்தை புறக்கணித்துவிட்டு கம்ப ராமாயணத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு ஒரு நுண்ணரசியல் இருக்கும். சிவகுமார் சிலம்பு பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கிறாரா எனத் தெரியாது. இல்லையென்றாலும் சிவகுமார் அப்படிப்பட்ட அரசியல்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது என் நம்பிக்கை.

முருகன், வேலன் போன்ற தமிழ்ப் பெயர்களைத் தவிர்த்து சரவணன், கார்த்தி என்று சிவகுமார் போன்றவர்களே பெயர் வைத்தால் ஏங்கி போய் முட்டிக்கொள்வது?

வளரும் கலைஞ்சர்கள் சமரசம் செய்வதில் குறை காண முடியாது. வளர்ந்துவிட்ட பின்னரும் 'தமிழே' என்று மூக்கு விடைக்க பேசிக்கொண்டு , தமிழாலும், தமிழர்களாலும் வயிறு வளர்த்துக் கொண்டு - தமிழுக்கு ஊறு செய்யும் 'சோ'மாறி கலைஞ்சர்களே அதிகம்.
--------------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன - '2012)

இறைகற்பனைஇலான் said...

அய்யா, சிவக்குமார் அவர்களே, கடவுள் நம்பிக்கை என்பது வேறு, அதன் உண்மைத்தண்மை வேறு. நாத்த்கிகன் என்று கூறிக்கொண்டால் மிகு மக்கள் முன் வேறாகத்தெரியும் என்றக் காரணத்தினாலன்றி இப்படிச் சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

Post a Comment