Monday, April 23, 2012

இளையராஜாவும் இன்னிசை மழையும்!


 கலைஞர் டிவியில் இசையை வைத்து ஒரு நல்ல நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தக்கால இலங்கை வானொலியில் தமது கம்பீரக்குரலாலும் தெளிவான உச்சரிப்பாலும் லட்சக்கணக்கான நேயர்களை ரசிகர்களாகப்பெற்ற பி.ஹெச்.அப்துல்ஹமீது நடத்தும் நிகழ்ச்சி ‘இன்னிசை மழை.’. ‘இன்னிசை மழை.’இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறது மற்ற காம்பியர்கள் நடத்தும் பழைய விஷயங்களைச் சார்ந்த நிகழ்ச்சிகள் என்றால் அவர்களுக்கு அந்த விஷயங்கள் பற்றிய தகவல்கள் யாவும் சொல்லப்பட்டு அறிவுறுத்தப்பட்டு அதன்பின்னர் அந்த நிகழ்ச்சி நடத்தப்பெறும். அப்படி அறிவுறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளில்கூட அவர்கள் போட்டு அதிரடியாக சொதப்புவார்கள்.

“ஓ! சாவித்திரி என்று அந்தக் காலத்தில் ஒரு நடிகை இருந்தாங்களா?
“அட, ஆயிரத்தில் ஒருவன் என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு படம் வெளிவந்திருக்குங்களா?
“அப்படியா, கே.பாலசந்தர் அப்படீன்றவர் ரஜனியையும் கமலையும் ஒண்ணா நடிக்கவச்சு படம் எடுத்திருக்காரா? என்பன போன்று காம்பியர்களின் அட்டூழியங்களைக் கேட்கும்போது அப்படியே எழுந்துபோய் அவர்களின் கழுத்தை நெரிக்கலாமா என்று தோன்றும்.

அப்துல்ஹமீது போன்ற ஒருசிலரின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. அதிலும் அப்துல்ஹமீது திரைஇசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முற்றுமுழுதாக அறிந்தவர். இன்னமும் சொல்லப்போனால் நிகழ்ச்சியில் பங்குபெறும் சில கலைஞர்களை விடவும் நிறைய செய்திகள் அறிந்தவர். எனவே ஒரு நிறைவான நிகழ்ச்சிக்கு உத்தரவாதம் என்ற அளவில் இந்த நிகழ்ச்சியை அணுகலாம்....அனுபவிக்கலாம்!
 

முதலாவதாக இது பாடல் போட்டி நிகழ்ச்சி அல்ல. அதனால் ஓ....ஹூ...ஹா என்ற ஆண்ட்டிகளின் கூச்சலும் அந்த மாஸ்டர் இந்த மாஸ்டர் என்ற எந்த மாஸ்டரின் நீதிபதி சட்டாம்பிள்ளைத்தனமும் இல்லாமல் பார்க்கக்கூடிய மற்றும் கேட்கக்கூடிய நிகழ்ச்சியாகவும் இது இருக்கிறது. இதனை ஐம்பது வயதைக் கடந்தவர்கள் அதிலும் குறிப்பாகப் பழைய பாடல்களை விரும்புபவர்கள் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்பதில்லை. இன்றைய இளைஞர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி என்பதுதான் இதற்கான முக்கியத்துவம்.

அதிலும் குறிப்பாக பாடல்போட்டிகளில் க்ளிஷே போன்ற ஒரு சம்பிரதாயமான மொக்கை பதில்களைக் காணலாம். பாட வந்திருக்கும் பையனிடம் “உனக்குப் பிடித்த பாடகர் யார்? யார் உன்னுடைய ரோல் மாடல்? என்று கேட்டுவிட்டால் போதும்.
அவன் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான். “எனக்குப் பிடித்த பாடகர் எஸ்பிபிதான்

இதே கேள்வியைப் பாட வந்திருக்கும் பெண்ணிடம் கேட்டுவிட்டால் போதும். “எனக்குப் பிடிச்சவங்க ஜானகியம்மாதான். அப்புறம் சின்னக்குயில் சித்ராவைப் பிடிக்கும்

“உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? என்ற அடுத்த கேள்விக்கு சட்டென்று வரும் பதில் “இசைஞானி இளையராஜா என்பதுதான். அப்புறம் எதற்கும் இருக்கட்டுமே அப்ளிகேஷன் போட்டுவைக்கலாம் என்பதுபோல் “ஏ.ஆர்.ரகுமானையும் பிடிக்கும் என்பார்கள்.

இவையெல்லாம் சரியான பதில்கள் இல்லையா என்றால் அவர்கள் ‘போகவிரும்பும் உயரத்தைக் கணக்கில்கொண்டால் சரியான பதில்களே. அரைக்கிணறு மட்டுமே தாண்ட விரும்புபவர்களுக்கு இது போதும். ஆனால் திரைஇசையை சரியான அளவில் கற்கத்துணிந்திருக்கும் ஒரு திரைஇசை மாணாக்கருக்கான சரியான பதிலா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

டி.எம்.சௌந்தரராஜனையும் பி.சுசீலாவையும் கேட்காமல், பலமுறைக் கேட்டு அவர்களின் வித்தையை மனதிற்குள் வாங்காமல், அவர்களின் ராக பாவ ஆலாபனைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், உணர்ச்சிகளை தங்கள் குரல்களில் அவர்கள் கொண்டுவரும் நேர்த்தியை உணர்ந்துகொள்ளாமல், மிக முக்கியமாக தமிழை எப்படி  உச்சரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அவர்கள் இருவரும் புகுத்தியுள்ள நுணுக்கங்களையும் அழகுகளையும் கணக்கில் கொள்ளாமல், ஏதோ போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக தங்களுக்கு முன்பு யார் இருந்தார்களோ அவர்களை மட்டுமே சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று நினைக்கும் இளம்எதிர்கால கலைஞர்கள் எதைப் பெரிதாக சாதித்துவிட முடியும்?

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டி.எம்.சௌந்தரராஜன் ஆளுமை இருந்த காலத்துக்குப் பிறகு தமிழில் ஒரு குரல்கூட ‘ஆண்குரல் இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம். டிஎம்எஸ் இடத்தை யாரும் இன்னமும் நிரப்பவில்லை, நிரப்பிவிடவும் முடியாது.

திரைஇசை மக்களை வெகுவாக வசீகரிக்கத் துவங்கிய அந்தக்காலத்தில் ஆண்குரல் என்று பி.யூ.சின்னப்பா குரலைச் சொல்லலாம். அதன்பிறகு பெருவாரியானவர்களைக் கவர்ந்த ஆண்குரல்கள் நிறையவே இருந்தன. டிஆர்மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன் என்று நிறையப்பேர் இருந்தனர்.
இவர்களுடைய கம்பீரம் ஒருபக்கமிருக்க கொஞ்சம் பெண்மை கலந்து தமிழ்நாட்டையே வசீகரித்த குரல் எம்கேடியுடையது. அவரைச் சார்ந்துவந்த குரல்தான் ஏ.எம்.ராஜாவுடையது. ஏ.எம்.ராஜா இசையமைப்பாளரான பிறகு அவருக்கு மாற்றாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி கொண்டுவந்த குரல்தான் பி.பி.ஸ்ரீனிவாஸுடையது. பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலுக்கு மாற்றாக வந்தவைதாம் கே.ஜே.ஏசுதாஸ் மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் குரல்கள். எஸ்பிபியின் குரலுக்குப் பின்னர் தற்போது வந்திருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட குரல்களும் எஸ்பிபியின் பாணியில் வந்துள்ள குரல்கள்தாமே தவிர 
ஒன்றுகூட ஆண்குரலுக்குரியவை அல்ல.

இவர்களில் கொஞ்ச காலத்துக்கு ஆண்குரலுடன் வந்த பாடகராக மலேசியா வாசுதேவனைச் சொல்லலாம். வேறு எந்த ஆண் குரலையும் எண்பதுக்குப் பின்னர் தமிழ்த்திரை இசையுலகம் அனுமதிக்கவே இல்லை.
இந்த அனுமதியின்மைக்குக் காரணம் திரை இசை முழுக்க முழுக்க இளையராஜாவின் ஆதிக்கத்தில் இருந்ததுதான்.

அவர் என்னென்ன டிரெண்டைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருந்தாரோ அந்த டிரெண்டிற்கு ஆண்குரல்கள் தோதுப்படவில்லை போலும். மலையாளத்தில் யார் பாடலைக்கேட்டாலும் ஏசுதாஸ் பாடிய பாடலைப் போலவே இருப்பதுபோல தமிழில் எந்த ஆண்குரல் பாடலும் எஸ்பிபி அவரைத் தொடர்ந்து பிபிஸ்ரீனிவாஸ் அவரைத் தொடரந்து ஏஎம்ராஜா என்ற ஞாபக அடுக்குத்தொடரை நினைவூட்டுவதாகவே அமைந்துவிட்டது. இப்படி அமைந்துவிட்டதை ஒரு துறைக்கு ஏற்பட்ட இழப்பு என்றுதான் சொல்லவேண்டும்.

டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்ததையும் அவரைத் தமிழ்த் திரையுலகம் ஒதுக்க ஆரம்பித்ததையும் இளையராஜாவின் வருகைக்கு முற்பட்ட காலத்து விஷயங்களாகத்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்துபோவதற்கான ஏற்பாடுகளை டிஎம்எஸ்ஸேதான் ஏற்படுத்திக்கொண்டார் என்றுதான் சொல்கிறார்கள். குறிப்பாக எம்ஜிஆரைப் பற்றியும் சிவாஜி பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்கள்...இருவருமே தன்னால்தான் இத்தனைப் பாப்புலராக இருக்கிறார்கள் என்பதுபோல் அவர் ஊடகத்தில் சொல்லிய விஷயம்தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை சிவாஜி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது சுபாவம் அது. யார் தம்மைப்பற்றி என்ன சொல்லியிருந்தாலும் “சொல்லிட்டுப் போறாம்ப்பா. வயித்துப் பொழப்புக்காக என்னத்தையோ சொல்லுவானுங்க. அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கக்கூடாது. அவன் தொழிலைப் பிரமாதமா செய்யறான் இல்லையா. நமக்கு வேண்டியது அவன் தொழில்தானே? அவனையே போடு என்று சொல்வது சிவாஜியின் சுபாவம்.

எம்ஜிஆர் குணம் வேறு மாதிரியானது. தம்மைப் பற்றித் தவறாக யாராவது ஏதாவது சொன்னது தமது காதுக்கு வந்துவிட்டால் அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிட்டு மறுவேலைப் பார்ப்பது எம்ஜிஆரின் சுபாவம். அன்றைய திரையுலகில் இதற்கான சம்பவங்கள் ஏராளம் ஏராளமாக நடந்துள்ளன. பிறகு எம்ஜிஆர் அரசியலில் வெற்றிபெற்றுவிட்டார் என்றதும் இம்மாதிரி தகவல்கள் யாவும் மறைக்கப்பட்டு அவர் பெயரைச் சுற்றி பெரிய ஒளிவட்டம் மட்டுமே பாய்ச்சும்வேலைகளை ஊடகங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டது வேறு விஷயம். இளையதலைமுறையினருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் இதனை இங்கே குறிப்பிடவேண்டி வந்தது.
இதன் பிறகுதான் டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக ஒருத்தரைக் கொண்டுவர எம்ஜிஆர் விரும்ப, அதிர்ஷ்டக்காற்று அல்ல அதிர்ஷ்ட சுனாமியே எஸ்பிபிக்கு அடித்தது. எம்ஜிஆர் சிவாஜியின் கோபத்துக்கு மட்டுமல்ல இன்னமும் பல இசையமைப்பாளர்களின் மற்றும் முக்கியமான பிரதான பின்னணிப் பாடகியின் கோபத்திற்கும் ஆளானார் டிஎம்எஸ் என்று சொல்கிறார்கள். சில பாடல்களை அவருடன் சேர்ந்து டூயட் பாடமாட்டேன் என்று குறிப்பிட்ட பின்னணிப் பாடகி சொல்லிவிட அதற்காகவும் அடித்தது யோகம் எஸ்பிபிக்கு.

அன்னக்கிளியில் அன்னக்கிளி ஒன்னத்தேடுதே பாடலைப்பாடும்போது டிஎம்எஸ் சொல்லிய சில திருத்தங்கள் இளையராஜாவுக்குப் பிடிக்காமல் ஆனால் அன்றைய தினத்தில் வேறு வழியில்லாமல் அந்தப் பாடலை அவர் ரிகார்டிங் செய்தார் என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரியான டிஎம்எஸ் பற்றிய சில பலவீனங்களான பகுதிகள் உள்ளன. ஆனால் அதற்காக அந்த மகா பாடகரைப்பற்றிய திறமைகளை நாம் குறைத்து மதிப்பிடுதல் ஆகாது. டிஎம்எஸ்ஸுக்கு இணை டிஎம்எஸ்தான். மற்றவர்களின் பாடல் இவர் பாடலுக்கு ஈடாகிவிடாது.
அதே போலத்தான் பி.சுசீலாவும். பி.சுசீலாவின் ஒற்றைக்குரலை இந்த தமிழ்நாடு நாற்பது வருடங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. 

சிறிதும் சலிப்புத் தட்டவில்லை.

இனிமை குறையவில்லை.

வேறு குரலைக் கேட்கத்தோன்றவில்லை

தேவையிருக்கவில்லை.

சுசீலா காலம் முடிந்தபிறகு என்னாயிற்று? இன்னொரு பெண் குரலை பத்துவருடங்கள் தொடர்ச்சியாக கேட்க முடியவில்லை. இப்போது பத்துவருடங்களும் குறைந்து ஐந்து வருடங்கள் இரண்டு வருடங்கள் ஏன்......இப்போதெல்லாம் ஒரு பாடல், அத்தோடு போதும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறமாதிரி ஆகிவிட்டது.

எஸ்.ஜானகி இளையராஜா கண்டுபிடித்த அல்லது அவர் அறிமுகப்படுத்திய பாடகி அல்ல. காலகாலமாகவே தமிழிலும் அதைவிட அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் கோலோச்சிக்கொண்டிருந்தவர்தான் அவர். அவருடைய குரல் குறிப்பிட்ட ‘மூடுக்கு சரியானதாக இருக்கும் என்று அன்றைய இசையமைப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டு ஒரு படத்தில் ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல்கள் என தமிழில் பயன்படுத்தப்பட்டவர் ஜானகி. அந்தக்கால இசையமைப்பாளர்களால் இப்படி பயன்படுத்தப்பட்ட ஜானகி பாடிய பெரும்பாலான பாடல்கள் பெரிய அளவில் புகழ்பெற்ற பாடல்களாகவே அமைந்தன.

இளையராஜாவின் ஆட்சிக்காலம் திரையுலகில் தொடங்கியபோது தமக்கென்று தனித்த அடையாளங்களும் தமக்கென்று தனியானதொரு ‘டீமும் இருக்கவேண்டும் என்று நினைத்தார் ராஜா. இந்த நினைப்பில் எந்தத் தவறும் கிடையாது. டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக எஸ்பிபியை வரித்தவர், பி.சுசீலாவுக்கு மாற்றாக எஸ்.ஜானகியை முன்னிறுத்தினார். எஸ்.ஜானகியைப் பயன்படுத்தி சுசீலாவின் சாம்ராஜ்ஜியத்தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் இளையராஜாவுக்கு இருந்திருக்கலாம். தொழில் ரீதியாக அந்த ‘அப்புறப்படுத்தல்ராஜாவுக்கு சாத்தியமானது. ராஜாவின் இசையில் பெரும்பாலான பாடல்களைப் பாடிய பெண்குரலுக்கு சொந்தக்காரரானார் ஜானகி. இதன் பலனாக சில நல்ல பாடல்கள் கிடைத்த அதே நேரத்தில் பல பாடல்கள் ஜானகி கீச்சுக்கீச்சென்று கீச்சுக்குரலில் கத்தும் பாடல்களாக அமைந்தன. மற்ற இசையமைப்பாளர்கள் ஜானகியின் ரேஞ்ஜ் தெரிந்து அவருக்கான பாடல்களைத் தந்தனர். இளையராஜாவோ தம்முடைய இசை எல்லாவற்றையும் சரிசெய்யும் என்றும் தாம் செய்துவிட்டால் மறுபேச்சுக்கு இங்கே இடமில்லை என்றும் பெருநம்பிக்கைக் கொண்டவராக இருந்ததால் கீச்சுக்குரல் பாடல்கள் ஏராளமாக தமிழுக்குக் கிடைத்தன.

இளையராஜாவின் ரசிகர்கள் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ரசித்துவிட்டுப் போவதுபற்றிக் கவலை இல்லை. ஆனால் பாடவேண்டும் என்று களத்துக்கு வருகிறவர்கள் எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. குறிப்பாக முன்னோர்கள் எது எதையெல்லாம் எப்படியெப்படி எல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்பதை நேர்மையான முறையில் தெரிந்துகொண்டு களத்துக்கு வருவது அவசியம்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

தமிழ்த்திரை இசையில் முன்னோர்களின் சாதனைகள் என்ன என்பதை ஒரு பகுதியாவது அறிந்துகொள்ள அப்துல்ஹமீதின் இன்னிசை மழை நிகழ்ச்சி உதவுகிறது என்பதுதான் விஷயம்.
இதுவரை திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன், ஏ.எம்.ராஜா ஆகியோர் பற்றிய தகவல்களும் அவர்கள் பாடிய காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடல்களும் வந்தன. ராகவேந்தரின் மகளான கல்பனா பல்வேறு பாடல்கள் பற்றிய தகவல்களுடன் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். இளையராஜாவின் தம்பியும் கவிஞர் இசையமைப்பாளர் இயக்குநர் என்று பல்வேறு சிறப்புக்களுடன் வலம்வரும் கங்கை அமரன் நிகழ்ச்சியும் வந்தன. கங்கை அமரன் மிகமிக நேர்மையோடு முன்னோர்களுக்கான மரியாதையையும் அவர்களுக்கான இடத்தையும் மிகச்சரியாக வழங்கி தமது நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தமது அண்ணன்களின் புகழை எந்தெந்த இடங்களில் சொல்லவேண்டுமோ அந்தந்த இடங்களில் எல்லாம் சரிவரச் சொன்னார். அவர் சொன்னதில் வேறு மூன்று முக்கிய நிகழ்வுகள்.......
“அந்தக் காலத்தில் எல்லாம் விஸ்வநாதன் இசையமைத்து பாப்புலரான பாடல்களில் அந்த மெட்டுக்களுக்கு வேறு பாடல்வரிகளைப் போட்டுத்தான் நாங்கள் மேடையில் பாட்டுக்கச்சேரி நடத்துவோம். ஒருமுறை திருச்சி பொன்மலைப் பகுதியில் எங்கள் பாட்டுக்கச்சேரி. அங்கே நாங்கள் மேடைப் போட்டிருக்கும் பகுதிக்கு வெகு அருகில் எம்எஸ்வி ஐயா அவர்களுக்கு உறவினர் ஒருவர் வீடு. அந்த வீட்டிற்கு அப்போது எம்எஸ்வி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து எப்படியாவது அவர் காதில் எங்களுடைய பாட்டு விழாதா அந்த மேதையின் பார்வை எங்கள் மீது படாதா என்ற எண்ணத்தில் அந்தக் கச்சேரியை நாங்கள் நடத்தியது மறக்கமுடியாதது.

“புன்னகை மன்னன் படத்திற்கு அண்ணன் இளையராஜா மியூசிக். அந்தப் பாடல்களுக்கு கீ போர்டு வாசித்தவர் ஏ.ஆர்.ரகுமான். ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. பாடல் ரிகார்டிங்கிற்கு முன்னால் பிஜிஎம் என்னென்ன வரவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நோட்ஸை முன்பே எழுதிக்கொடுத்துவிடுவார் அண்ணன் இளையராஜா. அப்படி எல்லாருக்கும் நோட்ஸ் கொடுத்து அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை ரிகர்சல் பார்ப்பதற்காக ஒவ்வொருவரையும் வாசித்துக் காட்ட சொன்னார். கிடார் வாசிக்கிறவர் அவர் நோட்ஸை வாசித்தார். ப்ளூட் வாசிக்கிறவர் அவர் நோட்ஸை வாசித்தார். அடுத்து கீ போர்டு. ம்ம்ம்..நீ வாசி என்று அண்ணன் சொல்ல அவர் கீழே குனிந்து இரண்டு மூன்றுமுறை அவரே வாசித்து சரிபார்த்துக்கொண்டு அப்புறம்தான் அந்த நோட்ஸை வாசித்துக்காட்டினார். காரணம் பெர்ஃபெக்ஷன். தம்முடைய மனதுக்கு மிகச்சரியாக வரும்வரை அவர் தயாராகி அப்புறம்தான் வாசித்தார். இந்த குணம் அன்றைக்கே அவரிடம் இருந்தது.

“மிகப்பெரிய இசைமேதையான எம்எஸ்வியும் அண்ணன் இளையராஜாவும் இணைந்து இசையமைத்த பாடல்களில் ஒன்று ‘ஊருசனம் தூங்கிருச்சி ஊதக்காத்தும் அடிச்சிருச்சி இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பாடலுக்கான மெட்டு எம்எஸ்வி அவர்கள் அமைத்தது. பின்னணி இசைதான் அண்ணன் இளையராஜா அமைச்சார். அந்தப் படத்துல ஒரேயொரு பாடலுக்கு மட்டும்தான் இளையராஜா இசையமைச்சார். மற்ற எல்லாப் பாடல்களுக்கும் எம்எஸ்விதான் இசையமைச்சார்.- என்பது போன்ற பல தகவல்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சொன்னார் கங்கை அமரன்.

(அந்த ஒரு பாடல் மெல்லிசை மாமன்னர்களின் இசையமைப்பு அளவுக்கு ஏன் இருக்கிறது என்பது இப்போது தெரிகிறதா?)

அவருக்கு அடுத்து ஏ.எல்.ராகவன் என்று பயணிக்கிறது அந்த நிகழ்ச்சி. இன்னமும் இரண்டு வருடங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்லக்கூடிய கான்செப்ட்டை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா நிச்சயம் பாராட்டுக்குரியவர்.
முன் பின் என்று எதுவும் தெரியாமல் தெரிந்து கொள்ள விரும்பாமல் இசை என்றால் இளையராஜா, பாடகர் என்றால் எஸ்பிபி, பாடகி என்றால் ஜானகி என்று மொக்கையாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி அது.

67 comments :

Ganpat said...

அன்புள்ள அமுதவன்,

இவ்வளவு சிறந்த பதிவு கிடைக்குமென்றால் நாங்கள இரண்டு மாதம் என்ன இரண்டு ஆண்டுகள் கூட காத்திருக்க தயார்!

Thank you for this brilliant writeup.

இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்

இந்த நிகழ்ச்சியை நான் பார்த்து ரசித்து பலருக்கு சிபாரிசும் செய்து கொண்டிருக்கிறேன்.இதன் பதிவுகள் tubetamil வலைத்தளத்தில் காணக்கிடைக்கிறது.

ஒரு பதிவர் எழுதினர்:"ஒரு அதி அற்புதப் பாடலை எம் எஸ் வி கர்ணன் படத்தில் தந்திருப்பார்.கண்கள் எங்கே என்ற அந்தப் பாடலைக் கேட்பதற்கே பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்" இதுவல்லவோ ரசனை.

மிக மிக மிக மிக நன்றி.

வணக்கம்.

கீதமஞ்சரி said...

இசையுலகம் பற்றிய பல அபூர்வ தகவல்களைத் திரட்டித் தந்தமைக்கும் அந்நாளைய இசைமேதைகளை இந்நாளைய இளந்தலைமுறையினர் அறிந்துகொள்ள வழி வகுத்தமைக்கும், திரைப்பாடல்கள் பற்றிய அருமையான ஒரு அலசலை முன்வைத்தமைக்காகவும் தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.

gkrishna said...

Dear amudavan sir,
excellant post. always old is gold

காரிகன் said...

திரு மெல்கியூ அவர்களே நீங்கள் எழுதியிருப்பது உண்மையான வார்த்தைகள். நானும் இதையே தான் என்னிடம் மற்றும் இந்த இணையத்தில் சும்மா வேணும் உதார் விடும் இளையராஜா என்ற தமிழ் திரை இசையை கெடுத்தவரின் அடிவருடிகளிடம் சொல்வதுண்டு. எம் எஸ் வி என்ற ஒரு மகா இசை கலைஞனின் இசையின் முன் எந்த ராஜாவும் நிற்க முடியாது என்பது என் அசைக்கமுடியாத எண்ணம். தற்போது இணையத்தில் எழுதி வரும் (குறிப்பாக மதிமாறன், ரவி ஆதித்யா, இன்னும் சில) வெத்து வேட்டுக்கள் இந்த ராஜா என்னத்தை செய்தாலும் உடனே அதை எவரெஸ்ட் ரேஞ்சுக்கு புகழ்வது படிக்க சக்கிகவில்லை. எம் எஸ் வி யை கேட்க்காத எந்த மனிதனும் இன்னும் ஒரு சிறப்பான உயரிய மேனமையான இசை அனுபவத்தை பெற வில்லை என்பது என் கருத்து. உங்கள் எழுத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றன. நீங்கள் இன்னும் பல பதிவுகள் எம் எஸ் வி பற்றி எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயத்தில் தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மற்றவர்களை மதிக்காத இந்த டானியேல் ராஜா (இளையராஜா) எப்படியெல்லாம் எம் எஸ் வி கட்டிவைத்திருந்த தரமான இசை சாம்ராஜ்யத்தை சீரழித்தார் என்பதையும் அவ்வப்போது குறிப்பிடவும். என்னை பொறுத்தவரை இனிமையான இசை என்பது எம் எஸ் வி யுடன் முடிந்து போய் விட்டதாகவே கருதுகிறேன்..

Amudhavan said...

வாருங்கள் கண்பத், தங்களின் கனிவான வார்த்தைகளுடன்கூடிய விமரிசனத்திற்கு எனது நன்றி.தங்களின் அன்புக்கு மீண்டும் எனது நன்றி.

Amudhavan said...

தங்களின் முப்பெரும் பாராட்டுக்களுக்கும் நன்றி கீதமஞ்சரி.

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கிருஷ்ணா. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. சில பழமொழிகளைச் சும்மாவா சொல்லிவைத்திருப்பார்கள்? அனுபவங்களின் சேகரிப்புகள்தாமே பழமொழிகள்!

Amudhavan said...

நன்றி காரிகன். உங்களின் தெளிவான கருத்துக்களை வேறு ஏதோ வலைப்பூவிலோ அல்லது கருத்துரைகளிலோ படித்த நினைவு. அதிலும் இதேபோன்றுதான் நேர்மையாகவும் ஆணித்தரமாகவும் பதிவிட்டிருந்தீர்கள். 'எம்எஸ்வியைக் கேட்காத எந்த மனிதனும் இன்னும் ஒரு சிறப்பான உயரிய மேன்மையான இசையனுபவத்தைப் பெறவில்லை' என்பது எனது கருத்து என்று சொல்லியிருக்கிறீர்கள்.முற்றிலும் சரியான கருத்து.

இணையத்தில் இளையராஜாவைப் புகழ்ந்து எழுதுபவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இணையத்தில் மட்டுமல்ல இளையதலைமுறையைச் சேர்ந்த சிலர் பத்திரிகைகளிலும் இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியொரு நிலைமை எப்படி ஏற்பட்டது? அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் தனியொரு பதிவு எழுதவிருக்கிறேன். இவர்களுக்கு யாரை வேண்டுமானாலும் பிடிக்கட்டும். நமக்கு அதுபற்றி ஆட்சேபணை இல்லை. ரஜனியை ஒருவருக்குப் பிடிக்கிறது என்று சொல்வதில் நமக்கென்ன ஆட்சேபணை இருக்கப்போகிறது? ஆனால் ரஜனிக்கு ஈடு இணை இங்கே யாருமே இல்லை. ரஜனிக்குப்பிறகுதான் தமிழ்த்திரைப்பட உலகம் என்ற ஒன்றே உருவானது என்பதுபோல் இவர்கள் கொடுக்கும் 'ஸ்டேட்மெண்டின்'போதுதான் தம்பி, அப்படியில்லை நீ தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்று காரணகாரியங்களுடன் சொல்லவேண்டியிருக்கிறது.

நீங்கள் சொல்லியிருப்பதுபோல் தமிழ்த்திரைப்பட இசையுலகம்பற்றி எழுதவேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது. அவ்வப்போது எழுதுவேன். தங்களின் வருகைக்கு மீண்டும் எனது நன்றி.

சார்லஸ் said...

இளையராஜாவிற்கு ஒரு தனி இடமுண்டு . அன்னக்கிளி படம் வந்தபோது வழக்கமான மெல்லிசை கேட்டு கேட்டு காது புளித்து போயிருந்த ஜனங்களுக்கு ஒரு வித்தியாசமான இசை வேகத்தையும் துள்ளலையும் கொடுத்தது. யார் அந்த இளையராஜா என திரும்பி பார்க்க வைத்ததை யாரும் மறுக்க முடியாது . இளையராஜா வந்த பிறகுதான் பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் பர பரத்தன ; காற்றில் கல கலத்தன.; எதிரொலித்தன. எம். எஸ். வி. ஒரு இசை அரசன் என்றால் இளையராஜா இசை பேரரசன் என்று சொல்லலாம். எம். எஸ். வி குறைந்தவர் இல்லை. ஆனால் இளையராஜா அவரை விட குறைந்தவர் இல்லை.

Amudhavan said...

சார்லஸ் சும்மா எதையோ அள்ளிவிட்டுவிட்டுப் போகலாம் என்று பார்க்காதீர்கள். வழக்கமான மெல்லிசைக் கேட்டுக்கேட்டு எந்தக்காது புளித்துப்போயிருந்தது?
யாருக்குமே ஒரு ரவுண்டு வந்தபிறகு ஒரு தொய்வு வருவது சாதாரணமானதுதான். அந்தத் தொய்வு எம்எஸ்விக்கும் வந்திருந்தது. அந்த சமயத்தில் இளையராஜா திடீரென்று வந்தபோது எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைத்ததும் நிஜம்தான்.பிற்பாடு இளையராஜாவுக்கும் அந்தத் தொய்வு வெகுசீக்கிரமே வந்துவிட்டது.
இளையராஜா வந்தபிறகுதான் பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் பரபரத்தன;காற்றில் கலகலத்தன;எதிரொலித்தன...என்கிறீர்கள். உண்மைதான்.அப்படியே பல பாடல்கள் காணாமலும் போய்விட்டன என்பதும் உண்மைதான்.

அதற்கு முன்னால் வானொலியிலும் லவுட்ஸ்பீக்கர்களிலும் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள் இளையராஜா காலத்தில் டேப்ரிகார்டர் வந்ததால் இன்னமும் கொஞ்சம் அதிகமாக கேட்கக்கிடைத்தன.இதற்கு டேப்ரிகார்டர்கள்தாம் காரணமே தவிர இளையராஜா அல்ல என்பது தெரியாமல்தான் இளையராஜா ரசிகர்கள் இன்னமும் ஆச்சரிய உலகிலேயே உள்ளனர்.
இப்போது இணையமும் யூடியூபும் இருப்பதால் இரண்டொரு நாட்களிலேயே கொலவெறி பாடல் கோடிக்கணக்கான மக்களைப் போய் அடைந்தது இல்லையா அதுபோல்தான் இதுவும். அதனால்தான் ஒரு பாடல் எவ்வளவு ரீச் பண்ணியிருக்கிறது என்பதைத்தாண்டி எத்தனைக் காலம் நின்றிருக்கிறது எத்தனைப் பாடல்கள் நின்றிருக்கின்றன என்பதை வைத்துத்தான் ஒருவரைக் கணக்கிடவேண்டியிருக்கிறது.
எம்எஸ்வி ஒரு இசையரசன் என்றால் இளையராஜா ஒரு இசைப்பேரரசன் என்று சொல்லலாம் என்கிறீர்கள். இந்த ஒற்றை வரியை வைத்துக்கொண்டு காரணகாரியங்களோடு வாதங்கள் முன்வைக்க நீங்கள் தயாரா?
அப்படியென்றால் விவாதிக்கலாம் வாருங்கள். அப்படியில்லை நீங்கள் வெறுமனே உங்கள் அன்பினால் அப்படிச்சொல்கிறீர்கள் என்றால் இளையராஜா இசைப்பேரரசன் என்றால் ஏ.ஆர்.ரகுமான் ஒரு இசைச்சக்கரவர்த்தி இசையில் ஒரு பெரும்பேரரசன் என்று சொல்ல நிறையப்பேர் இருக்கிறார்கள். அதனை ஒப்புக்கொள்ளவேண்டியது இருக்கும்.
இளையராஜாவுக்கென்று ஒரு தனியிடம் இருக்கிறது என்பது உண்மைதான். அது எந்த இடம் என்பதில்தான் சிக்கல்.

R.S.KRISHNAMURTHY said...

எந்த விவாதத்தையும் நடுநிலையோடு அணுகுவது என்பதும் ஒரு பண்பே. நம்மைப் போன்றவர்கள் சொல்வதெல்லாம் ‘நீங்கள் யாரை வேண்டுமானாலும் ரசியுங்கள். ஆனால் அவரை விட்டால் இதற்கு முன்போ, பின்போ யாருமேயில்லை’ என்று சொல்லப் புகுந்தீர்களானால் - மன்னிக்கவும் - உங்களுடைய பேதைமையை மன்னிக்க முடியாது, என்றுதான்! எல்லா இசையமைப்பாளர்களையும் எடை போட்டு விட்டு நீங்கள் இந்தக் கூற்றை எடுத்து வைத்தால் யாரும் உங்களிடம் வாதம் செய்ய முடியும். அதைவிட்டு, யாருக்கோ காதில் புளித்தது என்று சொல்வதெல்லாம் அழகல்ல. பதிலுக்கு நானும் கேட்கலாம் ‘அந்த யாருடைய காதிலோ ஈயம் காய்ச்சி ஊற்றுவது ஒன்றே அதற்கான மருந்து’ என்று! ஆனால் அது விவாதமாகாது. வெறும் சொற்போர் மட்டுமே! மன்னியுங்கள், இசை புளித்துப் போனால், வாழ்வின் கடைசிக்கு வந்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம், திரு.சார்லஸ்!

இன்னொன்று கவனித்திருக்கிறீர்களா? இளையராஜாவின் பல்லக்கைச் சுமக்கும் பல பேருக்கு அவரின் நல்ல படைப்புக்கள் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. இவர்களுக்கும் சேர்த்து, நாமே வாதாட வேண்டி வருவதுதான் பரிதாபமே!

அருமையான அலசல். இதற்கு இதுவரை வந்துள்ள கருத்துக்களில் கூட ஒருவர் மட்டுமே மாறுபட் முயற்சித்து......வேண்டாம், நாகரீகத்தின் எல்லைக்கு நாமும் போகவேண்டாம். மீண்டும் நன்றி!

Ganpat said...

கிருஷ்ணமூர்த்தி ஸார்!
இதை சொல்ல உங்கள் தன்னடக்கம் தடுக்கலாம்.எனவே நான் சொல்கிறேன்.

அருமையான, ஆனால் அதேசமயம் துரதிருஷ்டவசமாக, அவ்வளவாக பிரசித்தியடையாத சினிமாபாடல்களை அழகாக விவரித்து தொகுத்து கொடுக்கிறார்,திரு கிருஷ்ணமூர்த்தி தன் வலைதளத்தில்.

யார்,எது என வினாக்கள் எழுப்பாமல் நல்ல இசையை ரசிக்க விரும்புவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய ஒரு நல்ல blog இது.

சார்லஸ் said...

அமுதவன் சார் ! நானும் மெல்லிசை மாமன்னர் எம். எஸ். வி. ரசிகன்தான் . எத்தனையோ பாடல்கள் எனக்குள்ளும் ஒரு இசை ராஜாங்கத்தை ,பிரளயத்தை ஏற்படுத்தியவைதான். பள்ளிக்கூட நாட்களில் எம். எஸ். வியா இளையராஜாவா என்று எம்.எஸ்.விக்காக சண்டை போட்டவன்தான். ஆனால் காலம் செல்ல செல்ல இளையராஜாவின் இசையின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டுக்கு எதை காரணாமாக சொல்வது ! இசையின் புதிய பரிமாணமா , இசைக்கருவிகளின் கோர்வையா, இசைக்கப்பட்ட விதமா , புது புது இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட யுக்தியா , தொழில் நுட்ப வளர்ச்சியா , பாடலோடு இழைந்து வரும் பின்புல இசையா, மெலடி யில் உண்டான பிரமிப்பா , எதுவென்று சொல்வது !? ஒப்பாரி, தாலாட்டு, நாடோடி பாடல் , தெருக்கூத்து,மேற்க்கத்திய இசை ,பக்தி,சோகம், வீரம் , கர்நாடகம் , கரகாட்டம் ,கேலி, நையாண்டி என்று எந்த சூழல் இருந்தாலும் அதற்கு எல்லாம் அற்புதமாய் பாடல்களை பதிய வைத்தவர் இளையராஜா . ஸ்வரங்களும் ராகங்களும் பொது. ஆனால் அதை கையாள்பவர்கள் ஏற்படுத்தும் பிரமிப்பு மிக முக்கியம் . பாமரனுக்கும் புரியும்படியும் கேட்கும்படியும் இசையை கொடுத்தவர் இளையராஜா . உலகளவில் மிக சிறந்த நூறு பாடல்களில் 'ராக்கம்மா கைய தட்டு ' என்ற இளையராஜாவின் பாடல் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதை மறுக்க முடியாது . அவருடைய How to name it, Nothing but wind, symphoni என்று எதையும் குறைத்து மதிப்பிடவும் முடியாது ; மதிப்பிடவும் கூடாது. அவர் ஒரு இசைஞானி இல்லை என்றால் இருபது வருடங்கள் நிலைத்திருக்க முடியாது . எம் . எஸ். வியே சொல்லி இருக்கிறார் , " தம்பி இளையராஜா ஒரு பாட்டுக்கு இசைச்சேர்ப்பு (BGM) செய்வதில் என்னை விட வல்லவர் " என்று ! அதே நேரத்தில் இளையராஜா சொல்லி இருக்கிறார் , "அண்ணன் என்னை விட நல்ல composer" என்று! நீங்கள் சொல்ல முடியுமா யார் சிறந்தவர் என்று!?

Amudhavan said...

கண்பத் அவர்களே உங்களுக்கு என்னுடைய நன்றி. நண்பர் ஆர்எஸ்கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தளம் பற்றி நானே தகுந்த சமயத்தில் சொல்லவேண்டும் என்றிருந்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
திரு கிருஷ்ணமூர்த்தி மிகச்சிறந்த இசை ரசிகர். மிகச்சிறந்த விமரிசகர். கர்நாடக சங்கீதம் ஆரம்பித்து திரைப்பட இசை மேற்கத்திய இசை என்று சகலத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். எல்லா இசைக்கூறுகளையும் தெரிந்துவைத்திருப்பவர். திரைப்படத்துறையில் ஈடுபட்டிருந்தால் ஒரு நல்ல பாடகராகவோ அல்லது ஒரு நல்ல இசையமைப்பாளராகவோ வந்திருக்கவேண்டியவர். தாம் பார்த்துவந்த பொறியியல் துறையில் அதிகாரியாக இருந்ததே போதுமென்ற நிறைவுடன் ஒரு இசை ரசிகராகவே வாழ்ந்துவருபவர்.
வீணை சிட்டிபாபுவின் நல்ல நண்பர். இசை மேதை எஸ்வி வெங்கட்ராமன்,திரு டி.கே.ராமமூர்த்தி போன்றவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். இங்கே இணையத்தில் எதுவுமே தெரியாமல் சும்மா எதற்கெடுத்தாலும் இளையராஜாவைக் குறிப்பிடுவது மட்டுமே தங்களின் மேதைமையை உணர்த்திவிடும் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களை விடவும் அதிகம் தெரிந்தவர் நண்பர் கிருஷ்ணமூர்த்தி.
அவருடைய தளத்தில் இந்த நண்பர்களுக்கெல்லாம் தெரியாத நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்வதற்கு உள்ளன.
அவரது தளத்தின் முகவரி இது;http://krishnathreya.blogspot.in/இசை பற்றி நிறைய தெரிந்துகொள்ள இந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

R.S.KRISHNAMURTHY said...

நண்பர்கள் கண்பத் அவர்களுக்கும், அமுதவனுக்கும் என் நன்றிகள்!

Amudhavan said...

நண்பர் சார்லஸ் அவர்களே மேலுள்ள பதிவில் நான் இளையராஜாவைப் பற்றித் தவறாக ஒன்றுமே சொல்லவில்லை.விஸ்வநாதனைப்பற்றித் தனியாகவும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் சில உண்மைகளை முன்வைக்கும்போது அவை இளையராஜா ரசிகர்களுக்கு உகந்ததாக இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.உங்கள் பாணியில் அதுவும் இளையராஜாவுக்காகவே வரிந்துகட்டிக்கொண்டு வாதாடுபவர்கள் ஒருசிலர் இருக்கிறீர்கள் இணையத்தில். எல்லாருடையதும் ஒரே pattern பதில்களாகவே இருக்கின்றன. திரு தாஸும் இதே பாணி பதில்களாகவேதான் சொல்கிறார்.(அல்லது எல்லாருமே ஒருவர்தானா அதுவும் தெரியவில்லை) உங்களுடைய இந்த வாதங்களுக்கெல்லாம் உரிய பதில்களை நான் ஏற்கெனவே இளையராஜாவும் ரகுமானும் பதிவு 1& 2 விலும் 'நன்றி நண்பர்களே நன்றி'என்ற பதிவிலும் அதைத் தொடர்ந்த பின்னூட்டங்களிலும் மிகமிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். திரும்பத்திரும்ப ஒரே விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பது நேர விரயமே.
விஸ்வநாதன் ராமமூர்த்தி (கவனியுங்கள் தனி விஸ்வநாதன் அல்ல),சிவாஜி,கண்ணதாசன்,டிஎம்எஸ்,பி.சுசீலா இவர்களுக்கெல்லாம் யாரும் இங்கே இணையில்லை. யாராவது வந்தார்களென்றாலும் இவர்களுக்கு அடுத்து தான். இவர்களுக்குக் கீழே தான்.
அதே போல் கே.வி.மகாதேவன் கர்நாடக இசையிலும் நாட்டுப்புற இசையிலும் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்னவெல்லாம் சாதித்திருக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல், முழுத்திரைப்போட்டு மறைத்துவிட்டு அவரைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் அந்தத் துறைக்கான பெருமையையும் தூக்கி இளையராஜாவுக்கே தரும் கொடுமையைத் தமிழ்ச்சமூகம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் போலும்.
புது இசைக்கருவிகளின் சேர்க்கை, தொழில்நுட்ப வளர்ச்சி என்பதெல்லாம் அந்தந்த காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். இந்த இசைக்கருவிகளின் சேர்க்கையும் நுட்பமும் ஒரு பாடலைப் புதிதாக கேட்கிற மாதிரியான பிரமையை வேண்டுமானால் தோற்றுவிக்கலாமே தவிர பாடலின் இனிமைக்கும் நின்று நிலைக்கப்போவதற்கும் துளிக்கூட உதவாது.கொஞ்ச காலத்துக்குப்பின் அவை காற்றோடு போய்விடும். அதனால்தான் இளையராஜா காலத்து புதிய இசைக்கருவிகளின் சேர்க்கையையும் இன்றைய ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கோர்வையையும் கேட்கும்போது இளையராஜா என்ன இவ்வளவு மோசமாக இசையமைத்திருக்கிறாரே என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. அன்றைய நிலையில் அது புதுமையானதாக இருந்திருக்கலாம்.ஏன் சில பாடல்களில் யுவன்சங்கர் ராஜாவே இளையராஜாவை விடவும் நல்ல இசைக்கோர்ப்பை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் மறுபடி மறுபடி சொல்கிறேன்.
ஒரு நல்ல பாடலுக்கு இசைக்கருவிகள் மட்டுமே போதாது.

உயிரை உருக்கும் ஒரு பாடலுக்கு ஒற்றைப் புல்லாங்குழல் மட்டுமே போதும்.

ராக்கம்மா கையைத்தட்டு பாடல் சிறந்த நூறு பாடல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படியெனில் ஓட்டுப்போட்ட ரசிகர்கள் கணிணியைக் கையாளத்தெரிந்தவர்கள் என்பதுமட்டுமே.கணிணியைக் கையாள்கிற பெரும்பான்மையானவர்கள் ஒருசில க்ளிஷேக்களுக்கு அடிமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
இப்போதுகூட கணிணியில் ஒரு ஓட்டெடுப்பு நடத்துங்களேன். நடிப்பில் சிறந்த நடிகை யார் கேத்ரினா கைஃபா சாவித்திரியா? என்று. கேத்ரினா கைஃப் என்றுதான் ரிசல்ட் வரும்.

எதற்கு வெறும் ராக்கம்மா?

கொலவெறியை ஏன் விட்டுவிட்டீர்கள்?
கொலவெறி கோடிக்கணக்கான மக்களைக் கவர்ந்த பாடல்தானே? அப்படியானால் நீங்கள் சொல்லும் உதாரணங்கள்படி இளையராஜாவை ஒரே பாடலில் அநிருத் தூக்கிச்சாப்பிட்டுவிட்டார் என்று வைத்துக்கொள்ளலாமா? வேடிக்கையாக இல்லை?

அதனால் இந்த ராக்கம்மா, கொலவெறி இவற்றையெல்லாம் உதாரணத்திற்கு வைத்துக்கொள்வதை விட்டுவிடுங்கள்.

இளையராஜாவின் சிம்பொனி பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.
அது வெளியிடப்பட்டுவிட்டதா?
அப்படி இல்லையெனில் ஏன்?
அதுபற்றித் தகவல் தெரிவித்தீர்களானால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
இளையராஜாவின் பிஜிஎம் பற்றியெல்லாம் பிறகு பதிவுகள் எழுதப்போவதால் அதுபற்றி இங்கே ஒன்றும் குறிப்பிடவிரும்பவில்லை.

சார்லஸ் said...

கிரிஷ்ணமூர்த்தி சார்! இசை என்பது யாருக்குள்ளே என்ன செய்யும் , யாரை அழ வைக்கும் , சிரிக்க வைக்கும், தூங்க வைக்கும் , ஏங்க வைக்கும், புது புது உலகத்திற்குள் கூட்டிச் செல்லும் என்பதற்கு அளவுகளும் அலகுகளும் கிடையாது. அது தனிப்பட்ட மனிதர்களின் அனுபவம், தவம். ஒரே பாடலையே ஆயிரம் முறை தொடர்ந்து கேட்டால் புளிக்கத்தான் செய்யும். ஒரே மாதியான பாடல்களை கேட்கும்போதும் அந்த அனுபவம்தான் ஏற்படும். 70 களின் கடைசியில் எம். எஸ். வி பாடல்கள் அந்த நிலையை அடைந்தன . அப்போதுதான் புது பிரவாகமாய் புது வெள்ளமாய் புறப்பட்டவர் இளையராஜா. ஆனால் அவர் இசைக்கும் முடிவு வந்து கொண்டே இருக்கிறது. எல்லோருடைய இசையிலும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசை உண்டு . அதை விட்டு எந்த இசை அமைப்பாளரும் தாண்ட முடிவதில்லை . அந்த அலைவரிசைக்குள்ளேயே இருந்து கேட்டு பழகி போன நமக்கு புதிய அலைவரிசைக்குள் நுழையும்போது பிரம்மிப்பு ஏற்படத்தான் செய்யும். அப்படிப்பட்ட பிரமிப்பை ஊட்டியவர் இளைய ராஜா . யாருக்கும் குறைந்தவர் இல்லை.

பால கணேஷ் said...

டியர் அமுதவன் ஸார்... இப்போது மிகத் தாமதமாக உங்கள் தளத்தைக் கண்டுவிட்டு இதுவரை படிககாததற்கு வருந்தினேன். இந்தக் கட்டுரை தவிர்த்த மற்ற எல்லாவற்றையும் விரைவில் படித்து ஒவ்வொன்றுக்கும் கருத்திடுகிறேன். நான் இப்போது வந்தது... சாவி அவர்கள் பற்றிய ஒரு பதிவு இன்று வெளியிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்து கருத்துக் கூறினால் மிக மகிழ்வேன். நன்றி!

http://www.minnalvarigal.blogspot.com/2012/05/blog-post_5334.html

சார்லஸ் said...

காரிகன் சார்! என்ன எழுதினாலும் கண்ணியத்தோடு எழுதுங்கள் . சிறப்பான மேன்மைமிகு இசை அனுபவத்தை இளையராஜாவும் கொடுத்தவர்தான். கெடுக்கவில்லை. யாருடைய தர மான இசை சாம்ராஜ்யத்தையும் இளையராஜா கெடுக்கவில்லை . புதிய சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியவர் . இனிமையான இசையை எல்லா இசை அமைப்பாளர்களும் கொடுத்திருக்கிறார்கள் . இளையராஜா அதிகமாகவே கொடுத்திருக்கிறார் . அவரை கர்வம் பிடித்தவர் என்று சொல்கிறீர்கள் . திறமைசாலிகள் கர்வம் கொள்வதில் தவறில்லை . அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று . ராஜாவின் ராஜாங்கம் புரியாதவர்களுக்கு இசை அனுபவம் கம்மி . வளர்த்துக் கொள்ளுங்கள்

R.S.KRISHNAMURTHY said...

தீவிர ரசிகர்களை ஆங்கிலத்தில் (FAN) என்று குறிப்பிடுவதை ’விசிறி’ என்று வசதியாக மொழி பெயர்த்திருக்கிறோம். ஆனால் அந்த ஆங்கில வார்த்தையின் முழு வடிவம் தெரியுமா திரு.சார்லஸ்? அதையும் தருகிறேன்.Fanatic - இந்த வார்த்தையின் அர்த்தம் ‘வெறியர்’ என்றே கொள்ளவேண்டும். எங்களைப் போன்றவர்கள், எத்தனை முறை, எப்படிச் சொன்னாலும் ’நான் சிந்திக்க மாட்டேன், என் கூற்றைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்” என்றால், நிச்சயமாக நஷ்டம் எங்களுக்கில்லை. ஒரு ஸிம்பிள் கருத்து. நாங்கள் சொல்வதை நீங்கள் (இங்கே ’நீங்கள்’ என்பது எல்லா இளையராஜா வெறியர்களுக்கும் சேர்த்து!) ஒத்துக் கொள்ளத் தேவையே இல்லை. ஆனாலும் தனிமனித நாகரீகம், பண்பாடு இவற்றிற்காவது மரியாதை கொடுத்து, மற்ற மனிதர்களிலும் ஜீனியஸ்கள் உண்டு, அன்று சாதனை புரிந்த அவர்களும் அவர்களுடைய ரசிகர்கள் எல்லாரும் மடையர்கள் அல்ல என்ற உணர்வோடாவது இனி விவாதம் செய்ய வாருங்கள்.

இன்னொரு முக்கியமான உண்மையை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளியிருக்கிறீர்கள். தமிழ் நாட்டுப்புற இசையில் ராஜா அவர்கள் மன்னர், சக்கரவர்த்தி என்று சொல்லுகிறீர்களே, அவர் அந்த இசையை எங்கிருந்து கற்று, கடத்தி வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெகுவாக அடிபட்ட செய்தி இது. திரைஇசைக்கு வருவதற்குச் சற்றுமுன்னர், ஒரு தமிழ்நாட்டு பரதக் கலை விற்பன்னருடன், தமிழ்நாடு முழுக்கச் சுற்றி அவரின் நாட்டுப் புற இசை ஆராய்ச்சிக்காக உதவியாக இருந்தார் ராஜா. இவரின் திரை இசையைக் கேட்ட அந்த பிரபல நாட்டிய மேதை மூலமாக (நேரடியாக இல்லாமல்) விஷயம் வெளியே கசிந்து அசிங்கப் பட்ட உண்மை தெரியுமா உங்களுக்கு. இன்றும் உயிரோடிருக்கும் செல்வி.பத்மா சுப்பிரமணியம் இன்று அந்த உண்மையை வெளியிட்டால் தாங்குவீர்களா நீங்கள்?

உங்கள் கருத்திலிருந்து இன்னொன்றும் புரிந்துகொண்டேன். எந்த இசையும் ஒரு காலகட்டத்தில் புளித்து விடும் என்று. அப்படியென்றால் நாங்கள் ரசிக்கும் திரைஇசை என்றோ புளித்துப் போயிருக்கும், போயிருக்க வேண்டும். பின்னர் ஏன் இன்னமும், 1960/70/80 வருடங்களின் திரைப்பாடல்களை தினமும் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி, எஃப்.எம் போன்ற ஊடகங்களில் ஒளி/ஒலி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்?

ஒரு கேள்வியோடு முடிக்கலாமா?
‘பாரதி’ என்றொரு இளையராஜாவின் இசையமைப்பைக் கொண்டிருந்த திரைப்படம். அவருடைய மகளுக்கு ’நாட்டின் அந்த வருடத்திய சிறந்த பாடகி’ என்ற நடுவண் அரசின் சிறப்பைப் பெற்றுத் தந்த படம். அதன் பாடல்களை எப்போதாவது (மேற்கூறிய) ஊடகங்களில் கேட்டிருக்கிறீர்களா? இணையம் பற்றி அறிந்த திரு. சார்லஸ் அவர்களிடம் அந்தப் படத்தின் காஸட்/ஸிடி இருக்கிறதா என்பதை உண்மையாகக் கூறுவாரா?

நன்றி, திரு.சார்லஸ்!

காரிகன் said...

இளையராஜா என்ற ஒரு இத்துப்போன காலி தகர டப்பாவுக்கு இத்தனை ஆவேசமான பக்தனா? அடடே, என்ன ஒரு வார்த்தை விளையாட்டு? திரு சார்லஸ் தன்னுடைய தமிழ் விஸ்தாரத்தை காணமல் போன ஒருவருக்காக வீணாக செலவழிக்கிறார்.இவர் சிறு வயதில் எம் எஸ் வி தான் சிறந்தவர் என்று பட்டிமன்றம் வைத்தாராம் பின்னர் இளையராஜாவின் இசை பிரம்பிப்பை கண்டு அதிசயித்து தன் முடிவை மாற்றிகொண்டாராம்.. எம் எஸ் வி யை கேட்டுவிட்டு பின்னர் இளையராஜாதான் சிறந்தவர் என்று சொல்லும் ஒருவரின் இசை ஞானத்தை பழைய பேரிச்சம்பழ கடையில்தான் பார்க்கமுடியும்.. என்ன செய்வது.. அறுசுவை உணவு கிடைக்கும் போது எனக்கு இந்த உப்புமாவே போதும் என்று சொல்லும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இளையராஜாவின் அடிவருடிகள் மூளைசலவை செய்யப்பட்டவர்கள் போல, உடைந்த எல் பி ரெகார்டு போல சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ராக்கம்மா கையை தட்டு என்கிற பாடல் சிறந்த நூறு பாடல்களில் ஒன்று என்பது அபத்தமானது. முதலில் அந்த பாடல் காவிய பாடலோ அல்லது தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கும் பாடலோ அல்ல. இரண்டாவது திரு சார்லஸ் அவர்களின் கூற்றுப்படி இளையராஜாவை விட எ ஆர் ரகுமான் சிறந்தவர் ஏனென்றால் அவர் ஆஸ்கார் வாங்கியவர். இதை இந்த மூளை இல்லாத இளையராஜா கூட்டத்தார் ஒத்துக்கொள்வார்களா? அந்தந்த காலத்திற்கு ஏற்ப இசை விரிவு பெறுவது இயல்பானது. எம் எஸ் வி ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் செய்த இசை புரட்சி இசை சகாப்தம் காலம் கடந்து வாழ்வது. ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரு நாசர் சொன்னார் அவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்ற போது மக்கள் இளையராஜாவின் பாடல்களைத்தான் விரும்பி கேட்டார்களாம். இதில் ஓட்டெடுப்பு வேற..நாலு பேர் எம் எஸ் வி ஏழு பேர் எ ஆர் ரகுமான் இருபத்தி எட்டு பேர் இளையராஜாவாம் என்ன ஒரு கண்டுபிடிப்பு...இப்படியெல்லாம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளோடு வந்த தோனி படத்தின் இசையை பற்றி படம் வந்த பின் யாரும் பேசியதாக தெரியவில்லை.திரு சார்லஸ் கூட அந்த படத்தின் பாடல்களை கேட்டிருப்பாரா என்பது சந்தேகமே. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுவதை போன்று இளையராஜாவின் அபிமானிகள் அவரின் மிக சிறந்த பாடல்களை விரும்புவது கிடையாது. அதை அவர்கள் கேட்டிருக்க கூட மாட்டார்கள்.வழக்கம் போல அவரின் பிரபலமான பாடல்களை அவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் ஆட்டு மந்தைகள் மாதிரி.இளையராஜாவே ஒத்துக்கொண்ட ஒரு விஷயத்திற்கு (அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை) ஏன் அவர் விசுவாசிகள் காட்டுகூச்சல் போடுகிறார்கள் என்று புரியவில்லை. எம் எஸ் வி யின் அடியை பின் பற்றியே இளையராஜா இசை அமைத்து வந்தார்.அவரின் ஆரம்பகால பாடல்கள் வி குமார் ஜி வெங்கடேஷ் போன்றவர்களின் இசையை போலவே இருந்தது என்று ஒரு கருத்து கூட உண்டு. பின்னர் ஒரு ஐந்து வருடங்கள் நல்ல இசை கொடுத்தார்.. மறுப்பதற்கில்லை. பின் அவரின் தனிகாட்டு ராஜ்ஜியம் தமிழ் திரை இசையின் சீரழிவிற்கு வித்திட்டது.மனம் போன போக்கில் சாலையில் நடந்து போகும் ஒரு மனிதனின் சாதாரண வார்த்தைகளை வைத்து கொண்டு பாடல்கள் அமைத்தார். ராஜா ரோஜா ராஜா ராஜாதான் மவுசு ரவுசு என்று அர்த்தமில்லாமல் டன் கணக்கில் பாடல்கள் அவரிடமிருந்து இசைவெள்ளமாக வந்துகொண்டே இருந்தன. கடைசியில் ரகுமானின் சின்ன சின்ன ஆசை என்கிற ஒரே பாடலில் தன் விலாசத்தை இழந்தார். இன்றைக்கும் பெரும்பாலான மக்கள் கேட்பது எம் எஸ் வி யின் இசைதான் என்பதை நாசர் போன்றோரும் மறுக்க முடியாது, கிளாசிக் என்றால் அது எம் எஸ் வி தான். இளயராஜா அந்த தகுதியை அடைய அவரின் தீவிர விசுவாசிகள் பிரார்த்திப்பது நலம்.

காரிகன் said...

நான் திரு சார்லஸ் அவர்களுக்கு சூடாக பெரிய விளக்கம் கொடுத்திருந்தேன் அதை ஏனோ அமுதவன் அவர்கள் வெளியிடவில்லை. அறுசுவை உணவு கைகெட்டும் தூரத்தில் இருந்தாலும் வெறும் உப்புமாவே போதும் என்று சொல்லும் ஒரு சிலரின் கருத்தை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாவம் அதுவே அவர்களின் ரசனை. பாமரனும் விரும்பும் விதத்தில் இசையை அள்ளிதெளிக்கும் இளையராஜாவை ரசிக்க இசை அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமாம். சார்லஸ் அவர்கள்தான் இன்னும் எல் கே ஜி அளவிலேயே இருக்கிறார்.

Amudhavan said...

ஒரு மூன்று நாட்கள் பணிச்சுமைக் காரணமாக இணையத்தின் பக்கம் வராமல் போய்விட்டதனால் ஏற்பட்ட தொய்வு. அதுதான் இந்தத் தாமதம். நீங்கள் என்னதான் சிவாஜியின் நடிப்பு பற்றி வகுப்பெடுத்துவிட்டு(கவனிக்கவும்; வகுப்பு! வெறும் புகழாரம் அல்ல.) உணர்வுகளை வெளிப்படுத்துவது எப்படி? வசன உச்சரிப்பு எப்படி,நிற்பது எப்படி? பார்ப்பது எப்படி? என்பன போன்றவற்றையெல்லாம் விளக்கிவிட்டு சிலருடைய கருத்தைக் கேட்டால் உடனே 'இருக்கலாம். ஆனாலும் எங்களுக்குப் பிடித்தவர் எம்ஜிஆர்' என்பார்கள். இதுவேதான் கமலைப் பற்றிச்சொல்லிவிட்டுக் கேட்டாலும் 'எங்களுக்குப் பிடித்தவர் ரஜனிதான்' என்பார்கள். இதில் பிடித்தது பிடிக்காதது என்பதையெல்லாம் தாண்டி திறமை குறித்தான மதிப்பீடுகள் அந்தத் திறமையால் நிற்கும் சாதனை குறித்தான மதிப்பீடுகள் என்பவையெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இந்தவகை ரசிகர்கள் இளையராஜாவுக்கும் இருப்பதற்கு பெருமளவு காரணம் ஊடகங்கள்.

திருவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காரிகன் ஆகியோரின் விளக்கங்களுக்கு பதில் சொல்லுவதற்கு முன்பு இளையராஜாவின் ரசிகர்கள் நான் கேட்டிருக்கும் சிம்பொனி பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் சொல்லிவிட்டார்களானால் நன்றாக இருக்கும்.
வழக்கமாக அரைத்த மாவையே திரும்ப அரைக்காமல் கொஞ்சம் உருப்படியான பதில்களாகச் சொன்னால் நன்றாயிருக்கும்.

காரிகன் said...

திரு அமுதவன் அவர்களுக்கு என் நன்றி.இப்பொழுதுதான் என் பின்னூட்டத்தை கான நேரிட்டது. நீங்கள் குறிப்பிட்ட இளையராஜாவின் அந்த மாய சிம்பனி சீடி இன்னும் வெளிவரவே இல்லை.முதலில் இளையராஜா சிம்பனி இசை அமைத்தாரா என்பதே சந்தேகதிற்க்குரியது.அவர் யாரோ எழுதிய குறிப்புக்களுக்கு இசை conduct மட்டுமே செய்தார் என்று ஒரு பேச்சு உண்டு. மற்றும் சிம்பனி என்கிற மேற்கத்திய இசைமுறை இளையராஜாவுக்கு பிடிபடுமா புரியுமா என்பதே கேள்விகுறி.எதோ தமிழ் நாட்டில் சிறுவயதில் சர்சுகளில் கற்றுக்கொண்ட இசை அனுபவத்தைக்கொண்டு அவர் ஒரு நூற்றைம்பது படங்களுக்கு புதிய இசை பங்களிப்பை தந்தார். பல பாடல்கள் நன்றாகவே இருந்தன. இளைஞர்கள் விரும்பும் படி டப்பாங்குத்து தாளத்தோடு அவர் செய்த "இசைத்தொண்டு" ஆஹா அபாரமானது.எம் எஸ் வி யின் இசை அந்த அளவுக்கு "மேன்மையாக" இல்லாததால் அவர் தமிழிசையை விட்டு விலகி நிற்கும்படி ஆனது. இருந்தாலும் இளையராஜாவின் ராஜாங்கம் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த பொழுதே எம் எஸ் வி தன்னை மாற்றிக்கொள்ளாமல் மனதை அள்ளிப்போகும் இனிமையான பாடல்கள் பல தந்தார்.உதாரணம்;நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்கள்.அவர் தன் தாளத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை,இசை அமைப்பு முறையையும் மாற்றிக்கொள்ளவில்லை,தற்போது இளையராஜா ரகுமானை வீழ்த்த தன்னுடைய ஸ்டைலை மாற்றிக்கொண்டதுபோல.எனக்கு எந்த கவிஞனும் தேவை இல்லை நீ என்னத்தை வேண்டுமானாலும் எழுது நான் அதை என் இசையால் வெற்றிபெற செய்கிறேன் என்று திமிர் பிடித்து கொக்கரித்தார் இந்த" நாட்டுப்புற நாயகன்".அதனால்தான் இளையராஜாவின் கடைசி பத்து வருட பாடல்கள் தரமில்லாமல் (இசை நன்றாகவே இருந்தாலும்)ஒரே தாளத்தோடு எந்த பாட்டை கேட்டாலும் ஏற்கனவே கேட்டது போலவே இருந்தன.அதே நேரம் எம் எஸ் வி யின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவிதமாக இருக்கும்.இதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது.நீங்கள் எம் எஸ் வி யின் எந்த இரண்டு பாடல்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று குறிப்பிடுங்கள்.(இது இளையராஜாவின் விசிறிகளுக்கு).நானும் இளையராஜாவின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் கலகலத்த சலசலத்த சமயத்தில் பள்ளிக்கூடம் படித்தவன்தான்.அவரின் பாடல்கள் மட்டுமே கேட்டவன்.எல்லா சிறுவயதினரும் எண்ணும் விதமாக தான் பார்ப்பது கேட்பது இவைதான் உலகம் என்று எண்ணியவன்தான்.ஆனால் உண்மை அதுவல்லவே.இளையராஜாவை ஆராதிப்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள். எத்தனை சாதனைகள் எத்தனை இசை புரட்சிகள் எத்தனை ஆன்மாவை உலுக்கும் பாடல்கள் நம் தமிழ் திரை இசையில் இருக்கின்றன என்று. இளையராஜா செய்ததாக திரு தாஸ், திரு annonymous திரு சார்லஸ் அவர்கள் சொல்லும் எல்லா புரட்சிகளும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டாயிற்று. இளையராஜா செய்த ஒரு மிக முக்கியமான சாதனை என்னவென்றால் மானே தேனே ராசா ரோசா நோவுது நீவுது ஆத்தா என்ன பெத்தா போன்ற இலக்கிய சொற்களோடு கூடிய வரிகளுக்கு மெட்டு அமைத்து பாடல்கள் கொடுத்ததுதான்.இளையராஜாவை பற்றி பேசும் போது popularity and quantity பற்றி மட்டுமே பேசுங்கள். தயவு செய்து Quality பற்றி பேசாதீர்கள்.என்றைக்கு சகலகலாவல்வன் படத்திற்கு பாலுறவு சத்தத்தை வெளிப்படையாக கொடுத்தாரோ அன்றைக்கே அவர் தரம் காணாமல் போய்விட்டது. இந்த லட்சணத்தில் இவர் சிம்பனி இசை அமைத்தாராம். இதை படித்துவிட்டு கண்ணா பின்னா என்று கோபப்படும் இளையராஜா வின் ஆட்டு மந்தை கூட்டத்தார்க்கு என் கேள்வி.. எங்கே அந்த சிம்பனி சி டி?

சார்லஸ் said...

அமுதவன் சாரும் , கிருஷ்ணமூர்த்தி சாரும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டு அழகாக வாதிடுகிறார்கள் . அவர்களின் வயது அதில் தெரிகிறது . ஆனால் காரிகன் சார் ரொம்ப காட்டமாகவும் காட்டுமிராண்டிதனமாகவும் வாதிடுகிறார் . தனிமனித தாக்குதல்கள் அதிகமாக தெரிகின்றன . முன்னவர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்களோ என்னவோ!? உண்மையான இசை ரசிகன் இப்படி வாதிட மாட்டார் ... பரவாயில்லை .. நான் நாகரீகமாகவே வாதிடுகிறேன் .
so... உங்கள் எல்லோருடைய கணிப்பின்படி இளையராஜா காப்பி மன்னன் , எளவு கொட்டு வாசிக்க மட்டும் தெரிந்தவர் , யாருக்கோ வாசிக்க வந்துதான் நாட்டுப்புற பாடல்கள் பற்றி அறிந்தவர் , மேன்மையான, மென்மையான இசை கொடுக்க தெரியாதவர் , இசை தரத்தை கெடுத்தவர் , வாழ்வாங்கு வாழும் பாடல்கள் கொடுக்க மறந்தவர் , காலத்தால் அழியாத பாடல்கள் கொடுக்காதவர் ...அப்படித்தானே?
சிவபெருமான் , அல்லா , இயேசு இவர்களில் எந்த கடவுள் சிறந்தவர் என்று கேள்வி கேட்டால் உங்கள் மூவருக்கும் எப்படி அபத்தமாகப் படுகிறதோ அப்படிதான் இந்த கேள்வியும் . எம்.எஸ் .வி , இளையராஜா, ரகுமான் இவர்களில் யார் சிறந்த இசை அமைப்பாளர்கள்? எம். எஸ். வி என்று நீங்கள் சொல்லும்போது நான் இளையராஜா என்கிறேன் . இன்னொருவர் ரகுமான் என்று சொல்லப் போகிறார் . ஒவ்வொருவரும் தான் சொல்வதே சரி என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்!
இளையராஜா உள்ளே நுழைந்தபோது ஊடகங்கள் கேலி பேசின .. உறுமி வாசிக்க வந்தவன், செத்த கொட்டுக்குதான் லாயக்கு , டப்பாங்குத்துதான் தெரியும் என்று ! சில உயர் குலத்தோர் ஊடகங்கள் அவருடைய சாதியைப் பற்றி கூட விமர்சித்தன . சாதி கெட்டவனுக்கு இசையை பற்றி என்ன தெரியும் என்று கேட்டன . இறைவன் கொடுத்த இசை அறிவு எந்த சாதிக்கும் சொந்தமில்லை . எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து இசை உலகத்தில் புகுந்தவர் இளையராஜா . கேலி பேசிய ஊடகங்கள் பிறகு பாராட்டிய கதை தனி .
சிம்பொனி cd எங்கே என்று கேட்கிறார் ஒருவர் . அது வெளியிடப்படவில்லை என்பதை இளையராஜாவே ஒப்புக் கொண்ட விஷயம் . காரணங்கள் வெளியிட தேவை இல்லை என நினைக்க அவருக்கு சுதந்திரம் உண்டு . ஆனால் ஹங்கேரி நாட்டு சிம்பொனி குழு ஒன்று அவருடைய சில பாடல்களுக்கு பின்புல இசையில் பங்கெடுத்து இருக்கிறது . சமீபத்தில் ஜெயா டிவி பொங்கல் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இன்னிசை விருந்து வழங்கப்பட்டது . அதிலும் சிம்பொனி குழு விருப்பத்தோடு பங்கெடுத்து அசத்தியது . கொஞ்சம் அதை download செய்து பார்த்தீர்கள் என்றால் பெரிய பெரிய இசைக் கலைஞர்கள் எல்லாம் எவ்வளவு விருப்பத்தோடு அவர் இசையில் கலந்து மகிழ வந்திருந்தார்கள் என்பது புரியும் .
தோணி பட பாடல்கள் ஹிட் ஆகாமல் போனதற்கு காரணம் நான் ஏற்கனவே சொன்னதுதான் ...ஒரே அலை வரிசை .. தாண்டிப் போகவில்லை ..மக்கள் ஏற்கவில்லை . இந்த மாதிரியான தருணங்கள் எம்.எஸ்.விக்கு வந்து முடிந்து அதுவும் காலாவதி ஆகிவிட்டது . இனி அவர் எழப் போவதும் இல்லை அதற்காக அவரை குறைத்து நான் மதிப்பிடக்கூடியவன் அல்ல . காலமும் கோலமும் மாறும்போது அதை ஏற்க மனதில்லாத நால்வரில் நாசர் சொன்ன மூவர் நீங்கள்தானா !? அவர் அவருடைய அனுபவத்தை சொல்வதை கண்டுபிடிப்பு என்கிறார் இந்த காரிகன் . உண்மை உங்களை சுடுகிறது பாவம் ! இசை ஞானத்தில் நான் எல்.கே.ஜி யாம் .. அவருடைய விமர்சனம் பார்க்கும்போது படிக்கும்போது இசை அறிவில் பள்ளிக்கூடமே போகாதது போல தெரிகிறதே ! பழைய கஞ்சியே குடிசுகிட்டு பழைய பஞ்சாங்கமே பேசிக்கிட்டு எதனை நாள்தான் ஓட்ட போறீங்களோ!? இளையராஜா பாடல்களை அமைதியா கேளுங்க . உங்களை புது புது உலகத்திற்குள் கூட்டிச் செல்வார் புரியாததையும் புரிய வைப்பார் .

காரிகன் said...

திரு அமுதவன் இந்த பதிவில் சொல்லி இருப்பது விவாதத்துக்கு உட்பட்டதல்ல. உனக்கு யாரை வேண்டுமானாலும் பிடிக்கட்டும். அவரை கடவுள் என்று கூட சொல்லிக்கொள். ஆனால் அவரிடமிருந்துதான் எல்லாமே ஆரம்பிக்கிறது என்று சொல்ல முற்பட்டால் விஷயம் தெரிந்த சிலர் தங்கள் கருத்துக்களை சொல்லவேண்டிய அவசியம் உண்டாகிறது என்பதே அவரின் நோக்கம்.இந்த பதிவின் பின்னூட்டத்தில் ஒருவரை தவிர (அவரை யாரும் அழைக்கவும் இல்லை.தானாகவே வந்து நின்றுகொண்டு இது இப்படி அது அப்படி இதை நீ எப்படி சொல்லலாம் என்று "நாகரீகமாக"கூப்பாடு போடுகிறார்) மற்றவர்கள் எல்லாருமே ஒருமித்த கருத்தை கொண்டவர்கள்தான். திரு சார்லஸ் அவர்களுக்கென்ற சில இளையராஜா வெறியர்கள் வலைப்பூ வைத்திருக்கிறார்கள். அங்கே போய் கை,வாய் வலிக்கும் வரை இளையராஜாவை வாழ்த்தி விட்டு வாருங்கள். இளையராஜாவுக்கு கூஜா தூக்கும் நண்பர்கள் பதில் சொல்ல தெரியாத சந்தர்ப்பங்களில் அவரின் சாதி பற்றி பேசி அதன் பின் ஒளிந்து கொள்வது வழக்கம்தான்.மதிமாறன் என்பவரும் இதையேதான் செய்கிறார்.இங்கே நாம் யாருடைய சாதி பற்றியும் நினைக்கவேயில்லை.திறமை எல்லாரிடமும் உண்டு என்று திரு சார்லஸ் சான்றிதழ் வழங்கவேண்டாம். அது தெரிந்ததே.இளையராஜா புகுந்த போது அவரை கேலி பேசியவர்கள் பின்னர் பாராட்டியது போலவே தான் ரகுமானுக்கும் நடந்தது. ஒரு பட வியப்பு என்று ரகுமானை குறிப்பிட்டார்கள். எந்த கொம்பனாலும் இளையராஜாவை ஒன்றும் செய்யமுடியாது என்று அவரின் வெறியர்கள் மார் தட்டினார்கள். ஆனால் நடந்தது...ரகுமான் சென்ற தூரம் ரொம்ப அதிகம். அவர் ஒரு சரித்திரத்தையே படைத்துவிட்டார்.(இதை சொல்வதால் நான் ரகுமான் ரசிகன் என்று எண்ணி இந்த பதிவின் நோக்கத்தை திசை திருப்ப வேண்டாம்) ஹங்கேரி யில் சிம்பனி அமைக்க உதவியாளர்களை ஏற்பாடு செய்வது ஒன்றும் புதிதல்ல. ஜெய டீவீயில் இளையராஜாவுடன் ஹங்கேரி நாட்டு கலைஞர்கள் இருந்ததால் இளையராஜாவின் சிம்பனி உண்மையாம். எங்கே சி டி என்றால் அதை இளையராஜாவே இல்லை என்று ஒத்துக்கொண்டாராம். இல்லாத ஒன்றைத்தான் நீங்கள் இருப்பதாக பூச்சாண்டி காட்டுகிறீர்கள்.அந்த இல்லாத ஒன்றை வைத்துக்கொண்டுதான் அவரை மேஸ்ட்ரோ என்று அபத்தமாக புகழ்கிறீர்கள். இளையராஜாவை விமர்சிப்பது தனி மனித தாக்குதல் என்று விவரம் தெரியாமல் குறை சொல்கிறார் இந்த சார்லஸ்.ஆரம்பத்தில் இளையராஜாவை கேட்க இசை ஞானம் கம்மி வளர்த்துக்கொள்ள சொன்ன இவருக்கு அவர் பாணியிலேயே பதில் கிடைத்ததும் சம்பம்தம் இல்லாமல் குதிக்கிறார்.நல்லது நண்பரே.. என்னை பற்றி என்ன? பழைய கஞ்சி என்று ஒரே போட்டாக போட்டுவிட்டார் கடைசியில். நீங்கள் மட்டும் என்ன k f c pizza வையா சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்களும் கதை முடிந்து போன ஒருவருக்கு தானே இத்தனை சிரம்பப்பட்டு வக்காலத்து வாங்குகிறீர்கள்? மறுபடி இளையராஜா அந்த சாதி எம் எஸ் வி இந்த சாதி என்று கோழை போல எதன் பின்னும் ஒளிந்து கொள்ளாமல் நேர்மையாக பேசுங்கள் திரு சார்லஸ் அவர்களே..

காரிகன் said...

ஆரம்பத்தில் வெகு நாணயமாக எனக்கு எம் எஸ் வி யையும் பிடிக்கும் அவரின் ரசிகன் அவரை குறைத்து மதிப்பிடமாட்டேன் என்று சுய வாக்குமூலம் கொடுத்த திருவாளர் சார்லஸ் வர வர தன் உண்மையான முகத்தை காண்பிக்க துவங்குகிறார். எம் எஸ் வி கே வி மஆகாதேவன் போன்ற இசை ஜாம்பவான்கள் எல்லாம் பழைய கஞ்சி என்று வாய் கூசாமல் தன் இசை "ஞானத்தை " வெளிப்படுத்துகிறார். ஆஹா இதுவல்லவோ உண்மையான விசுவாசம். இளையராஜாவின் அடிவருடிகள் இப்படித்தான் பொங்கி எழுவார்கள்,கண்ணா பின்னா என்று பிதற்றுவார்கள்,கண்ணுக்கு முன்னே இருக்கும் மலை போன்ற உண்மையைக்கூட பார்க்காமல் இல்லாத ஒன்றை புகழ்ந்து தள்ளுவார்கள். இதெல்லாம் வாடிக்கைதான். என்ன செய்வது? இளையராஜா இன்றைக்கும் எதோ மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது போல illusion என்ற சுழலில் மாட்டிக்கொண்டு செக்கு மாடு சுற்றி வருவது மாதிரி சொன்னதயே சொல்லிக்கொண்டு அட போங்கப்பா வேற புதுசா எதையாவது யோசிச்சு எழுதுங்கப்பா.. போரடிக்காதீங்க...

R.S.KRISHNAMURTHY said...

என்னது, ஹங்கேரி இசை விற்பன்னர்கள் ‘தாமாகவே’ வந்து வாசித்தார்களா? இது எப்படி இருக்கு? விஜயோ, கமலோ எந்தக் கதாநாயகன் வெளிநாட்டில் ஆடினாலும் கூடவே கோஷ்டியில் ஆடும் வெளிநாட்டவர்கள் எல்லாம் இந்தக் கதாநாயகர்களின் (நடனத்) திறமை பற்றிக் கேள்விப்பட்டுத் ‘தாமாகவே’ வந்து ஆடினர் என்பார் போலிருக்கு, திரு சார்லஸ்! ஐயா, காசு கொடுத்தால் ஆப்பிரிக்காவிலிருந்து கூட ஆயிரம் பேர் எதற்காகவும் வருவார்கள்!

இன்னமும் என் கேள்விக்கும் பதில் தரவில்லை, திரு.சார்லஸ்! சும்மா, நினைவூட்டினேன்!

நம் விவாதத்தின் கருத்துக்கள், ரசிகனுக்குப் புரியும். 'FAN'களுக்குப் புரியாது. ஏனென்றால், தங்கள் மதிப்பீடு தவறானது, முழுமையானதல்ல என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் அவர்களுக்கில்லை என்பதே நிதரிசனம்.

இன்னும் இளையராஜாவே மறுக்கமுடியாத சில உண்மைகள் இருக்கின்றன. இந்த அரைகுறை விவாதத்தில் அவைகளை வீணாக்குவது அறிவுடைமை அல்ல என்பதால், இந்த விவாதத்தில் இருந்து விலகிக் கொள்வதுதான் விவேகம். எனக்கு, ரசிக்க வேண்டிய பாடல்கள் (இளையராஜா உட்பட!) ஏராளம் இருக்கிறது. ஆளை விடுங்க, சாமி!

Amudhavan said...

சார்லஸ் திரைஇசைப்பாடல்கள் பற்றிய விவாதத்தில் எதற்காக இளையராஜாவின் சாதியை இழுத்துவருகிறீர்கள்? யார் கேட்டார்கள்? சாதியைக் கொண்டுவந்து நிறுத்தி வாதாடுவது என்ன உத்தி?
சிம்பொனி பற்றி நீங்களாகவே சொன்னதனால்தானே அதுபற்றிய பேச்சுவந்தது. இப்போது இளையராஜாவே சிம்பொனி வெளியிடப்படவில்லை என்று சொல்லிவிட்டார் என்பது என்ன பதில்?
கேள்வி இளையராஜா சொன்னாரா முதியராஜா சொன்னாரா என்பதல்ல; சிம்பொனி வெளியானதா இல்லையா என்பதுதான். அப்படி இல்லையெனும்போது மேஸ்ட்ரோ என்று ஏன் அழைக்கிறீர்கள்? என்ற கேள்வியை காரிகன் முன்வைக்கிறார். அது நியாயமானதுதானே!
இளையராஜா இசைக்கோர்ப்பில் வெளிநாட்டுக்காரர்கள் வாசிப்பது பற்றிச்சொல்கிறீர்கள். நீங்கள் வேறு நிகழ்ச்சிகளே பார்க்கமாட்டீர்களா? சமீபத்தில் ஹாரிஸ்ஜெயராஜ் இசைக்கோர்ப்பில் வெளிநாட்டு ஆர்க்கெஸ்ட்ரா வாசித்ததைப் பார்க்கவில்லையா?
அட, இப்போதெல்லாம் நாள் தவறாமல் ஏஆர் ரகுமானின் இசைக்கோர்ப்பில் வாசிப்பவர்கள் யார்யார்? முருகேசனும் கண்ணபிரானுமா வாசிக்கிறார்க்ள்? ஃபிராங்க்ளினும் ஸ்மித்தும் தானே வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்!
'பழைய கஞ்சியே குடிச்சிக்கிட்டு பழைய பஞ்சாங்கமே பேசிக்கிட்டு'...என்கிறீர்கள். இதைக்கண்ணாடி முன்பு நீங்கள் சொல்வதுதான் பரிதாபமாக இருக்கிறது. இளையராஜா என்ற கண்ணாடியை விட்டுவிட்டு வெளிவாருங்கள். எல்லாம் சரியாய்ப்போகும்.
இளையராஜா எங்கெங்கோ புதிய உலகங்களுக்கெல்லாம் கூட்டிப்போவார் என்கிறீர்கள். அவர் கூட்டிப்போன உலகங்கள் பற்றித்தான் காரிகன் பட்டியல் போட்டிருந்தாரே பார்க்கவில்லை? ராசா ரோசா, நோவுது நீவுது என்ற அடாஸ் புடாஸ் வார்த்தைகள் முக்கல் முனகல் சத்தங்கள் என்று.
இளையராஜா இசை பற்றிய முழுமையான விமரிசனங்கள் இதற்குமேல்தான் வரப்போகின்றன. மேற்கொண்டு அப்போது பேசுங்கள்.நன்றி.

Amudhavan said...

மிக நீளமான பதில்களைக் Comment பெட்டி மறுப்பதால் மேலே விடுபட்டுப்போன பகுதி இது; 'எம்எஸ்வி இளையராஜா ரகுமான் இவர்களில் யார் சிறந்த இசையமைப்பாளர்? என்று கேட்டால்'.....உங்களை யார் கேட்டார்கள், எதற்குக் கேட்கவேண்டும்?
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாதனைகள் பற்றித்தான் சொல்லியிருக்கிறோமே..அதுதான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறதே...அவர்கள் போட்ட சாலையில் பயணிக்கிறவர் இளையராஜா என்றுதான் சொல்கிறோமே. அவர்கள் சக்ரவர்த்திகள் மாமன்னர்கள் என்றுதான் புகழப்படுகிறார்களே...அப்புறம் எதற்கு அவரையும் இவரையும் கூடவே ரகுமானையும் ஒப்பிட்டு நீங்களாகவே கேள்வி தயார் பண்ணுவது! இளையராஜா வேண்டுமானால் குறுநில மன்னராகவோ அல்லது மன்னராகவோகூட இருந்துவிட்டுப்போகட்டும்.
நானும் திரு கிருஷ்ணமூர்த்தியும் திரு காரிகனும் கேட்ட பல கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.
வெறுமனே இளையராஜாவுக்கு இங்கு ஈடில்லை என்ற கோஷம், ஊர்வலக்கோஷம் போன்ற ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லா விவாதங்களையும் முறியடித்துவிடலாம் என்று எண்ணாதீர்கள்.
இப்போதெல்லாம் சிற்சில குழுக்களுக்கான Cultகள் ஏராளமாகத் தோன்றிவிட்டன. மெய்வழிச்சாலை ஆண்டவர், வைகுந்தசாமி ஐயா,பிரேமானந்தா,கல்கி பகவான் என்று! இந்த மடங்களுக்கெல்லாம் சென்று அங்கிருக்கும் 'பக்தர்களைக்' கேட்டுப்பாருங்கள். உலகைப் படைத்தவன், உலகை ஆள்பவன், முக்காலத்துக்கும் இறைவன்- மெய்வழிச்சாலை ஆண்டவர்தான், வைகுந்தசாமி ஐயாதான், பிரேமானந்தாதான்,கல்கி பகவான்தான் என்ற பதில்கள் முறையே வரும். இவர்கள் வேறு யாரையும் கடவுள்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களது மூளையைச் சலவைக்கு உட்படுத்திக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட இளையராஜாவுக்கான பக்தர்களும் அந்த நிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். வேறு கடவுள்தான் இவர்களை வந்து காப்பாற்றவேண்டும். வேறு வழியில்லை.

Kite said...

ஒரு நல்ல மெட்டை தயார் செய்துவிட்டு அதற்கேற்ப வரிகளை எழுதி வாங்கி இசைமையப்பது ஓரளவு இசை தெரிந்தவர் எவரும் செய்யக் கூடியது.
விஸ்வநாதன் காலத்தில் பாடலுக்கு மெட்டு அமைக்கப்பட்டது என்பது என்னுடைய அனுமானம். இதுவும் பாடலின் சந்த அமைப்பு புரிந்தவர்களுக்கு சாத்தியமே.

இளையராஜா வருகைக்குப் பிறகுதான் நிறைய பாடல்களில் முதலில் சிறிது நேரம் வாத்திய கருவிகள் (Prelude), பிறகு பல்லவி, பிறகு வாத்திய கருவிகள் (Interlude), பிறகு சரணம் என்ற முறையான அமைப்புள்ள பாடல்கள் வந்தன. பழைய பாடல்களில் பெரும்பாலும் மெட்டு நன்றாக இருந்தாலும் இசைக் கருவிகளுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில்லை. பாடல் ஆரம்பத்திலேயே வரிகள் வந்து விடும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின்மை அதற்கு காரணம் எனச் சொல்லப்பட்டாலும் ஏன் வாத்தியக் கருவிகளை நிறையப் பயன்படுத்தவில்லை என்பதற்கு பதில் கிடையாது. பூங்கதவே தாழ் திறவாய், அந்தி மழை பொழிகிறது போன்ற வாத்திய அமைப்புள்ள அனைத்து விதமான இசைகளையும்
உள்ளடக்கிய பாடல்கள் மிகவும் குறைவு.

பின்னணி இசை என்பு இளையராஜா காலத்தைத் தவிர முன்பும் சரி பின்பும் சரி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ரஹ்மான் பம்பாய், ரோஜா போன்ற படங்களில் சிறப்பாக பின்னணி இசை அமைத்திருந்தார். எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அப்படிச் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

ரஹ்மான் இளையராஜாவை அப்புறப்படுத்தவென்றே உருவாக்கப்பட்டவர். ஆனால் இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதன் தொய்வடைந்திருந்த காலத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். அப்படி இருக்கையில் ஏன் விஸ்வநாதன் ரசிகர்கள் இளையராஜாவை கரித்துக் கொட்டுகிறார்கள் என்று புரியவில்லை. இதற்கான காரணம் தலைமுறை இடைவெளி என்று ஊகிக்கிறேன். சாக்ரடீஸ் காலத்திலிருந்து "அந்த காலம் மாதிரி வருமா?" என்று பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

அமுதவனின் முந்தைய தலைமுறையில் உயிரோடு இருப்பவர்களில் பிளாக் எழுதுபவர்கள் இருந்தால் தியாகராஜ பாகவதர் மாதிரி வருமா என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். அமுதவன் ஏன் அடுத்து தியாகராஜ பாகவதரை வைத்து இளையராஜாவைத் தூற்றக் கூடாது?

Kite said...

இன்றைக்கும் பெரும்பாலான மக்கள் கேட்பது எம் எஸ் வி யின் இசைதான் என்பதை நாசர் போன்றோரும் மறுக்க முடியாது, கிளாசிக் என்றால் அது எம் எஸ் வி தான். //

கனவுலகைத் தாண்டி வரவும். உங்கள் தலைமுறையைத் தாண்டி யாரும் விஸ்வநாதன் பாடல்களைக் கேட்பதில்லை அவை நன்றாக இருந்தாலும். FM ல் ராஜாங்கம், நீங்க நான் ராஜா சார் நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பாகின்றன.

Kite said...

ஒரு கேள்வியோடு முடிக்கலாமா?
‘பாரதி’ என்றொரு இளையராஜாவின் இசையமைப்பைக் கொண்டிருந்த திரைப்படம். அவருடைய மகளுக்கு ’நாட்டின் அந்த வருடத்திய சிறந்த பாடகி’ என்ற நடுவண் அரசின் சிறப்பைப் பெற்றுத் தந்த படம். அதன் பாடல்களை எப்போதாவது (மேற்கூறிய) ஊடகங்களில் கேட்டிருக்கிறீர்களா? //

இந்த கேள்விக்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? படம் வந்த புதிதிலேயே பாடல்கள் இணையத்தில் கிடைத்ததாக ஞாபகம் raaga.com தளத்தில்.

காரிகன் said...

இதோடு நிறுத்தி விடலாம் என்றிருந்த என்னை தொடர்ந்து எழுத வைக்கும் திரு ஜகன்னாத் அவர்களுக்கு நன்றி. முதலில் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்வோம்.இளையராஜாவை விமர்சிக்க யாருக்கும் உரிமை இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் அவரை இசை கடவுள், ஞானி என்று அழைத்துக்கொள்ளுங்கள். ஆனால் லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் ஒரு இசைஅமைப்பாளர் மட்டுமே. எதையும் தெரிந்துகொள்ளாமல் அதை பற்றிய எண்ணமே சிறுதும் இல்லாமல் தான் கேட்ட ஒரு விஷயத்தை ஊதி பெரிசாக கட்டும் ஒரு சிறுவனின் மனநிலையில் தான் திருவாளர் ஜகன்னாத் இருக்கிறார். நான் முன்பே சொன்னது படி இளையராஜாவின் ரசிகர்கள் கடிவாளம் போட்ட குதிரை போல ஒரே பாதையில் பயணிப்பவர்கள். கொஞ்சமும் இங்கே அங்கே பின்னே பார்க்கவே மாட்டார்கள்.இதைதான் இவரும் நிரூபித்திருக்கிறார்.இளையராஜாவின் வருக்கைக்கு பின்னர்தான் இசைஅமைப்பில் பல மாற்றங்கள் (முன்னிசை,இடையிசை,பின்னிசை,சரணம்,பல்லவி போன்றவை)உண்டானதாம்.தயவு செய்து வெளியில் சத்தமாக இதை சொல்லிவிடதீர்கள் நண்பரே. எனக்கு வேண்டுமானால் இது ஒரு நகைச்சுவை துணுக்கு போல இருக்கலாம்..பல பேருக்கு கோபம் மற்றும் கொலைவெறி வரலாம்.. இதிலிருந்தே இவர் இளையராஜாவை தவிர வேற எந்த பாடலையும் கேட்டதில்லை என்று தெரிகிறது.இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் இது போல இல்லை என்று சொல்வது நீங்கள் கடந்த கால மற்றும் நிகழ் கால இசை மாற்றங்களை ஒரேடியாக மறுப்பதுபோல இருக்கிறது..நல்லது இளையராஜாவின் ரசிகர்கள் இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சர்யம். உங்களுக்காக சில எம் எஸ் வி பாடல்கள் தருகிறேன். எங்கிருந்தோ ஆசைகள்(சந்திரோதயம்),ஒரு பெண்ணைபார்த்து நிலவை பார்த்தேன்(தெய்வத்தாய்)யார் அந்த நிலவு (சாந்தி)எங்கேயும் எப்போதும் (நினைத்தாலே இனிக்கும்)போன்ற பாடல்கள் நீங்கள் சொன்ன முன்னிசையை கொண்டு அமைக்கப்பட்டவை.இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. இங்கே நான் இப்படி சில உதாரணங்களை கொடுப்பதே ஒரு வித மடத்தனம்தான் என்ன செய்வது குழந்தைகளிடம் அதற்க்கு புரியும் படியாகத்தானே பேசவேண்டும்? ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து (நினைத்ததை முடிப்பவன்)பாடலில் மூன்று சரணங்கள் உண்டு மூன்றுக்கும் வெவ்வேறு வகையான இடையிசை (interlude) உண்டு.இதை என்ன சொல்கிறேன் என்றால் இப்படி மூன்றுவிதமான வெவ்வேறு இடையிசை அமைத்தது இளையராஜாதான் என்று ஒரு கூட்டம் பெருமை பேசி வருகிறது. எம் எஸ் வி மட்டுமல்ல அவருக்கு முன்பே கே வி மகாதேவன் கூட ஒரு பாடலில் இதை செய்திருக்கிறார்.

காரிகன் said...

நீண்ட பதிவை வெளியிட முடியாததால் என் கருத்துக்கள் தொடர்கின்றன.. இளையராஜா பலவிதமான வாத்திய கருவிகளை கொண்டு இசை அமைத்தது போல எம் எஸ் வி அமைக்கவில்லை என்பது ஒரு மாபெரும் பொய். அதற்க்கு காரணம் எம் எஸ் வி காலத்தில் ரெகார்டிங் தொழில் நுட்பம் ஒரு சாதாரண நிலையில் தான் இருந்தது. பாடுபவரோ இசைஅமைக்கும் உதவியாளர்களோ ஒரு சிறிய தவறை செய்தாலும் மீண்டும் முழுவதுமாக அந்த குறிப்பிட்ட பாடலை ரெகார்ட் செய்யவேண்டிய அளவிலேயே அன்று தொழில்நுட்பம் இருந்தது. இளையராஜாவின் வருகையின் போது மோனோ ஸ்டீரியோ ஆனது. அதன்விளைவாக அவர் பாடல்களில் இருந்து ஒலித்த பலவித இசைக்கருவிகள் மக்களுக்கு இது போல என்னத்தை கொடுத்தன என்பதே உண்மை. இன்றைக்கு இருக்கும் இசை தொழில் நுட்பத்தை கொண்டு எம் எஸ் வி அவர்களின் பாடல்கள் மறுபடி ரெகார்ட் செய்யப்பட்டால் அவர் செய்துள்ள மேற்கத்திய கலப்பு இசை (fusion) என்னவிதமாக மேன்மையாக கேட்பதற்கு அலுக்காத வகையில் ரம்மியமாக இருந்தது என்பதை தெரிந்துகொள்ளலாம்.இதோ போலவே ரகுமான் வருகைக்கு பின்னர்தான் மக்கள் இது போலகூட இசை இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டார்கள்.அந்த அளவில் இளையராஜா மக்களை ஒரே விதமான நாட்டுப்புற தாளத்திலும் மேற்கத்திய இசையிலும் (அவரின் மேற்கத்திய இசைமைப்பே ஒரே விதமான cliche ) கட்டிப்போட்டு வைத்திருந்தார்.எனவேதான் ரோஜாவில் ரகுமானின் ரெகே வடிவில் வந்த சின்ன சின்ன ஆசை உள்ளங்களை கொள்ளை கொண்டது. காதல் ஜோஜாவே பாடலில் வரும் தென்றல் போன்ற பிசுறு தட்டாத மேற்கத்திய பாணி தாளம் அடடா இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா என்று என்ன வைத்து. நான் ரகுமானை வரவேர்ப்பதற்க்கு காரணம் அவர் வந்த பின்தான் தமிழில் இருந்த தனிகாட்டு ராஜ்ஜியம் ஒழிந்தது. பல இசை அமைப்பாளார்கள் பாடகர்கள் என இசைக்கே ஒரு புதிய வழி பிறந்தது. பின்னணி இசை அமைப்பில் இளையராஜா சிறந்தவர் என ஊடகங்கள் தெரிவிப்பது வழக்கம்தான். ஆனால் அவரின் பின்னணி இசையே சில படங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி படத்தை ரசிக்கமுடியாமல் செய்ததுண்டு. ஒரு முறை திரு எம் ஜி ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படம் வரும் முன் இப்படிசொன்னார் "இந்த படத்தில் இரண்டு நாயகர்கள் ஒன்று நான் இன்னொன்று எம் எஸ் விஸ்வநாதன்" படத்தின் பாடல்களை கேட்ட எல்லோரும் எம் எஸ் வி இடம் கேட்ட கேள்வி"இத்தனை நாள் இந்த மெட்டுக்களை இந்த படத்துக்காகவே வைத்திருந்தீரோ?" பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையிலும் எம் எஸ் வி ராஜ்ஜியம் அமைத்த படம் அது.திரு ஜகன்னாத் இளையராஜாவோடு நின்றுவிட்டார். சரணம் பல்லவி போன்ற இசை கோப்புகள் இளையராஜாவின் வருகைக்கு அப்புறம் தான் வந்தன என்று தன் அறியாமையை தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார். இதை நான் சொல்லவில்லை திரு கங்கை அமரன் சொல்கிறார். "தமிழ் திரை இசை எம் எஸ் வி க்கு முன் சாஸ்த்ரிய முறையில் பாமரர்களுக்கு எட்டாத வகையில் படித்த பண்டிதர்கள் மற்றும் உயார்குல மக்கள் மட்டுமே ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது வந்தது. ராகங்கள் தெரிந்தவர்கள் மட்டுமே அதை கேட்டு ரசித்து புகழ்ந்து வந்தார்கள். எம் எஸ் வி அந்த பாணியை தலைகீழாக மாற்றிபோட்டதுடன் இசையை எல்லோரும் விரும்பும் விதமாக மாற்றி அமைத்தார். ஒரு சரணம் ஒரு பல்லவி இடை இடையே இடையிசை என்று பாடல்களுக்கு ஒரு வடிவம் கொடுத்தவர் அவரே. அவரை பின் பற்றியே மற்ற எல்லா இசை அமைப்பாளர்களும் இசை அமைத்து வருகிறார்கள் எங்கள் இளையராஜா உட்பட". உண்மை இப்படி இருக்க எதுவும் தெரியாமல் உளறிக்கொட்டும் திரு ஜகன்னாத் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? திரு கிருஷ்ணமூர்த்தி இதை படித்தால் அவர் எப்படி react செய்வார் என்று எண்ணிப்பார்க்கிறேன்.கடைசியாக ஒன்று. நான் இளயராஜா பாடல்கள் தெருக்களில் ஒலித்த போது பள்ளிக்கூடம் சென்றவன்தான். ஆனால் என் காலத்தை தாண்டி அதற்க்கு முன்னரே இசை ரம்மியமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்திருக்கிறது என்பதை சற்று தாமதமாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். என் காலகட்ட பாடல்களே சிறந்தது என்று சொல்வது ஒரு வகையான nostalgia. நான் உண்மையான இசையை தேடி அது எங்கு இருந்தாலும் அதை ரசிக்கும் மன நிலையில் இருப்பதால் மனம்கவர்ந்த சுவையான இசை எந்த காலத்தில் இருந்து வந்தாலும் அதை பற்றி அலட்டிக்கொள்வது கிடையாது. எனவே நீங்கள் மற்றும் திரு சார்லஸ் சொல்வது போல பழைய கஞ்சி பழைய காலம் போன்ற அடைமொழிக்குள் நான் இசையை அடைத்து அதன் சிறப்பை மறுக்கமாட்டேன்.நல்ல இசை தரமான இசை என்பதே ஒரு உண்மையான இசை ரசிகனின் ரசனையாக இருக்க முடியும். பழைய இசை புதிய இசை என்று வரம்பு வைத்துகொண்டு இசை ரசிப்பது ஒரு தவறான அணுகுமுறை.அப்படி செய்பவர்கள் அதற்குரிய இடங்களில் தங்கள் புலம்பல்களையும் அறியாமையையும் மடமையையும் பதிவு செய்துகொள்ளலாம்.

காரிகன் said...

இளையராஜா எம் எஸ் வி தொய்வடைந்திருந்த காலத்தில் மக்களை கவர்ந்தவர் என்கிறார் திரு ஜன்கன்னாத். அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. இதுவேதான் இளையராஜாவுக்கும் இருபது வருடங்கள் கழித்து நடந்தது. அதை ஒத்துக்கொள்ளாமல் ரகுமான் இளையராஜாவுக்கு எதிராக வேண்டுமென்றே உருவாகாப்பட்டவர் என்று சொல்வது நியாயமானதல்ல.யாரையும் ஒருவருக்கு (அதுவும் இசை ஞானி என்று அழைக்கப்பட்டவருக்கு) எதிராக யாராலும் செயற்கையாக உருவாகமுடியும் என்றால் அதற்கு இத்தனை வருடங்கள் அவசியமில்லை.இளையராஜா காலத்தில் சந்திர போஸ், தேவேந்திரன்,தேவா,மரஹதமணி,ஹம்சவல்லி போன்ற பல இசை அமைப்பாளர்கள் புதிதாக வந்தவர்கள்தான். எல்லோராலும் அவரை மிஞ்ச முடியவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. எ ஆர் ரகுமான் கூட ரோஜாவிற்கு பின் மக்கள் மத்தியில் அவ்வளவாக அங்கீகாரம் அடையவில்லை.அவரும் ஆங்கில காப்பி,வார்த்தைகளை மிஞ்சும் இசை அமைப்பவர், அவரின் பாடல்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக மேலும் பலவிதமான் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்தான். அவர் இளையராஜா போன்று மிக அதிகமான படங்களுக்கு இசை அமைத்தவர் கிடையாது. இருந்தும் அவர் இளையராஜாவுக்கு ஒரு சரியான மாற்றாக வந்தார். தமிழ் இசையை புரட்டி போட்டார். இந்திய அளவில் தமிழனின் பெயரை உச்சரிக்க வைத்தார்.(ஒரு விதத்தில் உலக அவில் என்று கூட சொல்லலாம்).இன்றைய தலைமுறை அவரை கொண்டாடிவருகிறது. அது இளையராஜாவின் வெறியர்களுக்கு இன்னும் வெறியூட்டுகிறது.அதை ஏற்க மனமில்லாமல் புதிது புதிதாக பொய்களை உருவாக்கி பழி சுமத்துகிறார்கள். எம் எஸ் வி தொய்வடைந்து போனது எவருக்குமே இயல்பாக இயற்கையாக நடக்கக்கூடியதே. ஆனால் இளையராஜா புகழின் உச்சாணிக்கொம்பில் இருந்தபோதே அகற்றப்பட்டவர். அது ஏனென்றால் மக்கள் அதை விரும்பினார்கள். அந்த அளவுக்கு இளையராஜா மக்களுக்கு அலுத்துப்போயிருந்தார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் எம் எஸ் வி தானாகவே ஒதுங்கிகொண்டார் தன் காலம் மாறியதை அறிந்தவுடன். இளையராஜாவோ ஒதுக்கப்பட்டார்.அந்த "இனிய பொன் மாலை பொழுதோ", "அந்தி மழையோ"மீண்டும் வராது. பொழியாது.நீங்களும் உங்கள் கனவுலகை விட்டு வெளியே வாருங்கள். தமிழ் இசை இளையராஜாவை தாண்டி வெகு வருடங்களாகி விட்டன. உங்கள் அடைமொழியின் படியே இளையராஜாவும் ஒரு பழையகஞ்சி ஆகி பல மாமாங்கம் ஆகிறது.

சார்லஸ் said...

கை கொடுங்க ஜெகநாத் சார் ...கை கொடுங்க ..உங்களுக்கு என் பாராட்டுக்கள் ..அமுதவன் சார் ,கிருஷ்ணமூர்த்தி சார் , காரிகன் சார் மூவரும் சேர்ந்து கொண்டு இளையராஜாவை எவ்வளவு மட்டப்படுத்த முடியுமோ அவ்வளவு பேசுகிறார்கள் . நிஜத்தை பொய் என்கிறார்கள் . இளையராஜாவை பற்றிய உண்மையை மறைக்க பார்க்கிறார்கள் . என்னோடு சேர்ந்து வாதம் செய்ய யாருமே இல்லை . நீங்களாவது வந்தீங்க ...முடியல !
ஏற்கனவே இளையராஜாவின் அருமை பெருமைகளை நிறைய எடுத்து சொல்லி இருந்தேன் . அமுதவன் சார் அதை பதிவிட மறுக்கிறார் . அநாகரீகமாக பதிவிடும் காரிகன் போன்றோரின் பதிவுகள் உடனடியாக வெளி வருகின்றன .

சார்லஸ் said...

கை கொடுங்க ஜெகநாத் சார் ...கை கொடுங்க ..உங்களுக்கு என் பாராட்டுக்கள் ..அமுதவன் சார் ,கிருஷ்ணமூர்த்தி சார் , காரிகன் சார் மூவரும் சேர்ந்து கொண்டு இளையராஜாவை எவ்வளவு மட்டப்படுத்த முடியுமோ அவ்வளவு பேசுகிறார்கள் . நிஜத்தை பொய் என்கிறார்கள் . இளையராஜாவை பற்றிய உண்மையை மறைக்க பார்க்கிறார்கள் . என்னோடு சேர்ந்து வாதம் செய்ய யாருமே இல்லை . நீங்களாவது வந்தீங்க ...முடியல !
ஏற்கனவே இளையராஜாவின் அருமை பெருமைகளை நிறைய எடுத்து சொல்லி இருந்தேன் . அமுதவன் சார் அதை பதிவிட மறுக்கிறார் . அநாகரீகமாக பதிவிடும் காரிகன் போன்றோரின் பதிவுகள் உடனடியாக வெளி வருகின்றன .

Kite said...

பாடல் அமைப்பில் வாத்திய கருவிகளுக்கு குரலுக்கு சமமான முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் அமைத்தவர் இளையராஜா என்று எழுதியிருந்தேன். பல்லவி, சரணம் அமைப்புள்ள பாடல்களை இளையராஜாதான் கொண்டு வந்ததாகச் சொல்லவில்லை. அவற்றின் இடையே சிறந்த வாத்திய இசை அமைக்கப்பட்டது அவர் பாடல்களில்தான் அதிகம் என்று சொல்லியிருக்கிறேன். நான் சொல்லியிருப்பது அப்படி புரிந்து கொள்ளப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் காரிகன் அப்படித்தான் திரித்திருக்கிறார்.

பழைய பாடல்களில் நல்ல வாத்திய அமைப்புள்ள பாடல்கள் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது மாலைப் பொழுதின் மயக்கத்திலே, தில்லானா மோகனாம்பாள் பாடல்கள் ஆகியவைதான். அத்தகைய பாடல்கள் குறைவாகத்தான் உள்ளன.

இளையராஜாவின் முசுட்டு தனம் பிடிக்காமல் பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் ரஹ்மானை அறிமுகப்படுத்தினர். வேறு யார் மூலமாகவாவது அறிமுகமாகியிருந்தால் இவ்வளவு விரைவாக உச்சத்தை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அவருடையது இயல்பான வளர்ச்சி என்றால் யாராவது சிறிய இயக்குனர், தயாரிப்பாளர் அறிமுகப்படுத்தி படிப்படியாக வளர்ச்சியடைந்திருப்பார்.
அவர் ஒலி தொழில்நுட்பத்தில் மிகவும் திறமையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் 1990 களுக்கு பின் அவரும் தொய்வடைந்து விட்டார்.
வருடத்திற்கு இரு படம் மட்டும் செய்வதென்றால் அனைத்தையுமே ஹிட் ஆக்குவது சாத்தியமே. இத்தனை வருடங்களில் 120 படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். அவரை அறிமுகப்படுத்தியவர்களே அவர் இசையமைக்க எடுத்துக்கொள்ளும் நீண்ட காலத்தைப் பார்த்து அதிருப்தியை பொது மேடைகளிலேயே வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Amudhavan said...

திரு ஜெகன்னாத்திற்கு பதில் சொல்லிவிட்டுப் பிறகு வரலாம் என்று பார்த்தேன். திரு சார்லஸின் சந்தோஷத்தையும் குதிப்பையும் பார்த்தால் இவருக்கு முதலில் பதில்சொல்லிவிடலாமே என்று தோன்றிற்று.
உங்களுக்கு ஆதரவாக வர ஜெகன்னாத் கிடைத்ததே அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். இதைவிடவும் அபத்தமாக பதில் சொல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டம்.

ஜெகன்னாத்திற்கு நான் சொல்ல நினைத்த பதிலைத் தொண்ணூறு சதம் திரு காரிகன் சொல்லிவிட்டார். என்னைவிடவும் அழகாகவே சொல்லியிருக்கிறார்.

இந்தப் பகுதியில் மட்டும் நண்பர் சார்லஸின் ஏழு பதில்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் எழுதிய அத்தனை பதில்களையும் வெளியிட்டிருக்கிறேன். இதற்கு முந்தைய இளையராஜா பற்றிய பதிவு ஒன்றிற்கு திரு தாஸ் என்பவர் பெயரில் வந்திருந்த ஒரேயொரு பதிலை மட்டுமே வெளியிடவில்லை. காரணம் புரட்டிப் புரட்டிப்போட்டு பதில் சொல்லியிருந்தும் ஒரே வாதத்தைத் திரும்பத் திரும்ப போரடிக்கிற அளவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அதனால் அந்த ஒரு பதிலை வெளியிடவில்லை. உடனே உங்களுக்கு அறிவு நாணயம் இல்லை என்று மிகவும் கோபமாக இன்னொரு பதிலை எழுதியிருந்தார். சரி கொஞ்ச நாளைக்கு அறிவும் நாணயமும் இல்லாமல்தான் இருந்து பார்ப்போமே என்று பேசாமல் இருந்துவிட்டேன். இந்தப் பதிவுக்கு தாஸ் என்ற பெயரில் வராமல் சார்லஸ் என்ற பெயரில் வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரின் பதிலளிக்கும் பாணியிலிருந்து இது தெரிகிறது. இதனை மேலே ஒரு பதிலிலும் குறிப்பிட்டிருக்கிறேன். மறுபடி இங்கே அதே பாணி பதில்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அத்தனையையும் வெளியிட்டும் அவர் குறைப்பட்டுக் கொண்டிருப்பதால் இதனை இங்கே விளக்கவேண்டி வந்தது.

காரிகன் said...

"இளையராஜா வருகைக்குப் பிறகுதான் நிறைய பாடல்களில் முதலில் சிறிது நேரம் வாத்திய கருவிகள் (Prelude), பிறகு பல்லவி, பிறகு வாத்திய கருவிகள் (Interlude), பிறகு சரணம் என்ற முறையான அமைப்புள்ள பாடல்கள் வந்தன. பழைய பாடல்களில் பெரும்பாலும் மெட்டு நன்றாக இருந்தாலும் இசைக் கருவிகளுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில்லை. பாடல் ஆரம்பத்திலேயே வரிகள் வந்து விடும். "
இது திருவாளர் ஜகன்னாத் அவர்கள் சொல்லி இருக்கும் கருத்துக்கள். நான் அவர் சொன்னதை திரித்து கூறுவதாக இப்போது அவர் u turn அடிக்கிறார்.வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு (அதற்கு ஆதாரமும் கொடுத்துள்ளேன்) பதில் சொல்லமுடியாத சந்தில் நின்று கொண்டு நான் அப்படி சொல்லவே இல்லை என்று குழந்தை போல உளறுகிறார்.நான் எதற்கு உங்கள் வார்த்தைகளை திரிக்க வேண்டும் நண்பரே?நீங்களேதான் முட்டாள்தனமாக பேசி வருகிறீர்களே?வாத்திய கருவிகளின் பங்களிப்பு அதிகம் இருந்தது இளையராஜாவின் இசையில்தான் என்பது உண்மைதான். அதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார் அப்போதுதான் மோசமான கவிதை வெளியே கேட்காது என்று வழக்கம் போல சிரித்துக்கொண்டே அவர் கூறியது கல்கி இதழில் பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்தது.மற்றபடி இசை வாத்திய கலப்பு நான் சொன்னபடி technology சம்பந்தப்பட்ட விஷயம்.இதில் எம் எஸ் வி யை குறை கூறுவது ஒரு தலை முறை அறிவியல் வளர்ச்சியையே தவறு என்பதற்கு ஒப்பானது.எத்தனை முறைதான் இதையே சொல்லிக்கொண்டிருப்பது?திரு ஜகன்னாத் குறிப்பிட்ட எந்த புதிய சங்கதியும் இளையராஜாவிடமிருந்து வரவில்லை என்று நான் வெகு சில ஆதாரங்களுடன் விவாதித்துள்ளேன்.இன்னும் பல என்னிடம் உள்ளன.இப்படி தான் முன் சொன்னதையே நான் சொல்லவில்லை என்று short term memory loss நோயில் அவதிப்படும் இந்த நண்பரிடத்தில் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? என்ன இரட்டையர்களே நீங்கள் சொல்லவதை எல்லாம் சொல்வீர்கள் நாங்கள் அப்படியா அடடே என்று வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? மேலும் ரகுமான் ஜென்டில்மன் படத்திற்கு இசை அமைத்தபோது குஞ்சுமோன்,ஷங்கர் இருவருமே புதியவர்கள்தான். புதிய முகம், புதிய மன்னர்கள்,மே மாதம்,வண்டிசோலை சின்ராசு,போன்ற படங்கள் பிரபலமானவர்களால் எடுக்கப்பட்டதில்லை.அவர் தொடர்ந்து மணிரத்தினம் படங்களுக்கு இசை அமைத்தது அந்த இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை காட்டுகிறது.ரகுமானின் இசை அமைப்பு தொண்ணூறுகளின் அறிவியல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு புதிய முறையில் நவீனமாக வெளிவந்த காரணத்தினால் அவர் சீக்கிரமாக ஹிந்திக்கு செல்ல முடிந்தது.ஒருவரின் வளர்ச்சியை யாரும் திட்டமிட்டு செயல் படுத்த முடியாது. ரகுமான் தொய்ந்து போய்விட்டாராம்.. நல்லது இளையராஜா மட்டும் இன்னும் இருக்கிறாரா என்ன? மற்றபடி திரு சார்லஸ் அவர்களின் துள்ளலுக்கு நான் பதில் சொல்லி ஒரு குழாயடி சண்டை ரேஞ்சுக்கு இந்த நல்ல விவாதத்தை கொண்டு செல்ல விரும்பவில்லை.

Kite said...

எந்த விடயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் சிறந்தவர் என்று பார்த்தால் இது போன்ற சர்ச்சைகள் இருக்காது. அப்படி இல்லாமல் அனைவரையும் ஒப்பிடுவது எனப் புகுந்தால் யார் அனைத்து விதங்களிலும் சிறப்பானவர்களோ அவர்கள் பக்கம்தான் ஆதரவு அதிகம் இருக்கும். பின்னணி இசை என்ற பலத்தை வைத்தே இளையராஜா தனித்து தெரிகிறார் என்று சொல்லி விடலாம்.

சார்லஸ் said...

பாலுறவு சத்தம் உள்ள பாடல்கள் பற்றி காரிகன் குறிப்பிட்டிருந்தார் ,எம்.எஸ்.வி அவர்களும் இது போன்ற பாடல்கள் அமைத்திருக்கிறார். சிவகாமியின் சபதம் படத்தில் "எத்தனை அழகு கொட்டி கிடக்குதே ",இதயக்கனி படத்தில் "இதழே இதழே தேன் வேண்டும் "இந்த இரண்டில் இல்லாத பாலுறவு சத்தங்களா என்ன ? இந்த பாடல்களை கேட்டும் பார்த்தும் எத்தனை இளைஞர்கள் வயதுக்கு வந்தார்களோ என்னவோ? காரிகன் சார் ரசித்திருப்பதை பார்த்தால் "நிலா காயுது " கேட்டே அவர் 'வந்திருப்பார்' போல தெரிகிறது .
ராசா ரோசா நோவுது நீவுது என்று இசை அமைத்தாராம் இளையராஜா .' ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு ' என்று எம்.எஸ்.வி இசை அமைக்கவில்லையா !? அர்த்தமற்ற வார்த்தைகளை கொண்டு அமைந்த பாடல்கள் எல்லா காலகட்டத்திலும் வந்திருக்கிறது . அது டைரக்டர் ஆசை கவிஞர்களின் ஏக்கம் ,மக்களின் வரவேற்பு இவைகளைச் சார்ந்தவை . எதைக் கொடுத்தாலும் பாட்டை பிரபலபடுத்துவதில்தான் இசை அமைப்பாளரின் திறமையே இருக்கிறது . நோவுது நீவுது என்று எதை எழுதிக் கொடுத்தாலும் இசைஞானி ஹிட் பண்ணி கொடுத்திருக்கிறார் . சின்னபுள்ளைதனமா அதை எழுதாதீங்க .
எம்.எஸ்.வி ஹார்மோனியம் மட்டுமே வாசிக்கத் தெரிந்தவர் . இசைஞானிக்கு பல கருவிகள் வாசிக்க தெரியும் . எம். எஸ்.விக்கு notes எழுத தெரியாது . இசைஞானி எழுதி கொடுத்தால் எதுவும் இசகுபிசகாது . எம்.எஸ்.வி தனி ஆல்பம் போட்டதில்லை . இசைஞானி நிறைய போட்டிருக்கிறார் . எம்.எஸ்.வி நல்ல composer . ஆனால் BGM சுமார் ரகம்தான். இசைஞானி இரண்டிலும் வல்லவர் . எம்.எஸ்.வி சில மொழிகளில் மட்டுமே இசைஅமைத்திருக்கிறார் . எங்கள் இசைஞானி பல மொழிகளில் இசை அமைத்திருக்கிறார் . இப்ப சொல்லுங்க யார் சிறந்தவர்?

சார்லஸ் said...

'எலந்த பழம்' என்ற பாடலில் இல்லாத விரசமா இளையராஜா பாடல்களில் உள்ளது . விரசமான பாடல்கள் யாரோட அரிப்போ ? அதற்கு இசை அமைப்பாளர்கள் என்ன செய்வார்கள் ? இறுமாப்பும் எகத்தாளமும் கொண்ட சில கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களால்தான் பாட்டே பிரபலம் ஆவதாக மார் தட்டி கொண்டிருந்த நேரம் ராஜா, கூஜா என்று பாட்டெழுதி ஹிட் பண்ணி காட்ட முடியும் சபதமிட்டு அதை நிரூபித்தும் காட்டியவர் இளையராஜா.
எம்.எஸ்.வி இசை பழைய கஞ்சி , இசைஞானி இசை அறுசுவை உணவு , ரகுமான் இசை fast food இதில எது சிறந்தது என்று நீங்க யோசியுங்கள்

Amudhavan said...

நண்பர் ஜெகன்நாத் பின்னாடி கொஞ்சம் பல்டி அடித்திருக்கிறாரே தவிர ஆரம்ப பதில்களை எல்லாம் பார்த்தால் ஒன்றை மட்டும்தான் சொல்லவில்லை. அதாவது எஸ்விவெங்கட்ராமன் காலத்திலிருந்து பாடல்கள் எல்லாமே இசையமைப்பாளர்கள் இசையமைக்க நினைத்து, கவிஞர்கள் எழுத நினைத்து, பாடகர்கள் பாட நினைத்து......பாடினார்கள். ஆனால் பாடல் தொண்டையைவிட்டு வெளியே வரவில்லை. அது முதன்முதலாக அவர்களின் தொண்டையைவிட்டு வெளியே வந்தது இளையராஜாவால்தான்...... என்றுமட்டும்தான் சொல்லவில்லை.
பின்னிசை முன்னிசை அந்த இசை இந்த இசை என்கிறார். எல்லா இசையும் எல்லா சோதனை முயற்சிகளும் அந்தக்காலத்திலேயே மெல்லிசை மன்னர்களால் செய்தாகிவிட்டது. மிச்சசொச்சம் இருந்ததை விஸ்வநாதன் தனியாகவே செய்துவிட்டார். இது ஒன்றும் அதீதமான ஒன்றோ புகழாரம் சூட்டுவதற்காகச் சொல்லப்படும் மிகையான வார்த்தைகளோ அல்ல.
எல்லா விஷயங்கள் பற்றியும் எல்லா வகையாகவும் கண்ணதாசன் எழுதிவிட்டார்.அவர் எழுதாமல் மிச்சம் வைத்திருப்பது எதுவுமே இல்லை என்பது எப்படி உண்மையோ எப்படி அது சாத்தியமானதோ அதேபோல்தான் இதுவும்.
உடனே கண்ணதாசன் செல்போனை உவமையாக வைத்து எழுதினாரா, சிம்கார்டை உவமையாகப் பயன்படுத்தினாரா,கம்ப்யூட்டர் கேம்ஸ் பற்றி எழுதினாரா என்றெல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தமோ எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அதே அளவு பைத்தியக்காரத்தனம்தான் மற்றதும்.
மெல்லிசை மன்னர்களின் இசைக்கச்சேரிகளில் முதல் பாடல் எது தெரியுமா?
காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் நாளாம் நாளாம் திருநாளாம் பாடல்தான். ஏன் தெரியுமா? இசைக்கலைஞர்கள் அத்தனைப்பேரையும் ஜெகஜெகவென்று வேலை வாங்கும் இசைக்கோர்ப்பு அது. ஒரேயொரு பாடலுக்கு நூறு வயலின்களைப் பயன்படுத்தினார்கள் என்று தினத்தந்தியில் செய்தி வந்திருந்தது புதிய பறவை படத்தின் எங்கே நிம்மதி பாடலுக்கு....இம்மாதிரியான தகவல்களெல்லாம் ஏராளமாக இருக்கின்றன. அதனையெல்லாம் இங்கே இவர்களுக்காகச் சொல்லவில்லை. இன்னமும் நிறையப் பேர் இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள் அவர்களுக்காகத்தான்சொல்லவேண்டியிருக்கிறது. இந்த நண்பர்கள் திரும்பத் திரும்ப வாத்தியக்கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். படங்களிலேயே பார்த்திருப்போம். பெரிய நடிகர்கள் ஏராளமான பொருள்செலவு, பிரம்மாண்டமான செட்டுகள் என்று போட்டுப் படமெடுப்பார்கள் ஏதோ ஓரிரண்டு படங்கள் தவிர இம்மாதிரி எடுத்த அத்தனைப் படங்களும் கவிழ்ந்துதான் போயிருக்கின்றன. படங்களைக் காப்பாற்றுவது சரியான கதையமைப்புத்தான். இதுவேதான் பாடல்களுக்கும் பொருந்தும். எத்தனை வாத்தியக்கருவிகளைப் புதிது புதிதாய் இறக்குமதி செய்து வாசித்தாலும், எத்தனைத்தான் நோட்ஸ் எழுதத் தெரிந்திருந்தாலும் நல்ல மெட்டு இல்லையென்றால் பாடல் அம்போ தான்.
ஐநூறு அறுநூறு பாடல்களைக் காலம்கடந்து நிறுத்தியிருப்பவர்களை இருபத்தைந்து முதல் முப்பது பாடல்களைக் காலம்கடந்து நிறுத்தியிருப்பவருடன் ஒப்பிடக்கூடாது என்பதைத்தான் சொல்கிறோம்.

Amudhavan said...

மியூசிக் நோட்ஸ் எழுதுவது என்பதெல்லாம் பெரிய சாதனையே அல்ல. எங்கள் தந்தையார் கூடத்தான் மியூசிக் நோட்ஸ் எழுதுவார். எப்படி எழுதுவது என்று வகுப்புக்கள் எடுப்பார். அதனால் அவர் இளையராஜாவை மிஞ்சக்கூடியவர் என்று நான் சொல்லமுடியுமா என்ன?
சிவாஜி தாம் நடித்த எந்தப் படத்திலும் கார் ஓட்டியதில்லை. அவருக்குக் கார் ஓட்டத்தெரியாது. அதனால் அவர் சிறந்த நடிகர் இல்லை என்றா சொல்லமுடியும்!
படத்தின் காட்சி அமைப்புக்கு ஏற்ப பின்னணி இசை அமைப்பது என்பது இளையராஜா காலத்தில்தான் வழக்கத்திற்கு வந்தது. அதனை இளையராஜா சரிவரவே செய்தார். மெல்லிசை மன்னர்களின் காலத்தில் காட்சிகளின் உணர்வுகளுக்கேற்ப இசைக்கோர்வையை வெளியிடுவது என்பதே வழக்கத்தில் இருந்தது. அதனைத்தான் அவர்கள் செவ்வனே செய்தார்கள். அதுவும் சாதாரணமாக இல்லை நண்பர்களே உணர்வுபூர்வமான காட்சிகளில் சிவாஜி சாவித்திரி பத்மினி ரங்கராவ் பாலையா எஸ்விசுப்பையா போன்றவர்களின் நடிப்பு, ஆரூர்தாஸ், சோலைமலை, கேஎஸ்கோபாலகிருஷ்ணன் போன்றோரின் காட்சி அமைப்பு இவற்றுக்கு ஈடாக தங்களின் இசைப்பங்கையும் வெளியிட்டு அந்தந்தக் காட்சிகளின் உணர்வுகளை மக்களிடம் ஒரு ஐம்பதாண்டு காலத்துக்கு உச்சகட்டத்தில் வெறும் இசைத்துணுக்குகள் மூலம் நிறுத்துவது ஒன்றும் சாதாரண விஷயமில்லை.

இன்றைய இசையமைப்பாளர்களுக்கு நாக்குத்தொங்கிப்போயிருக்கும்.

அழுகின்ற காட்சிகளில் மக்களையும் அழவைத்து, சிரிக்கின்ற காட்சிகளில் மக்களையும் சிரிக்கவைத்து படத்துடன் ஒன்றச்செய்தார்களா அல்லது அந்நியப்படுத்தி வைத்திருந்தார்களா?
கோடிக்கணக்கான மக்களை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக வசியப்படுத்தி வைத்திருந்தார்களா இல்லையா?
ஒன்று செய்யுங்கள். இதெல்லாம் பழைய பஞ்சாங்கம், பழங்கஞ்சி என்றுதானே பல்லவி பாடுகிறீர்கள்? தமிழ் சேனல்கள் மட்டும் பத்துக்கும் மேல் இருக்கின்றன. அவற்றிடம் சென்று இனிமேல் அன்னக்கிளி படத்திற்குப் பிறகு வந்த இளையராஜா பாடல்களை மட்டுமே பயன்படுத்தி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். அவருக்கு முன்பிருந்த ஒருத்தரின் இசையமைப்பையும் பயன்படுத்தவேண்டாம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் போராட்டம் தர்ணா இன்னமும் என்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனையும் செய்து அம்மாதிரி நிகழ்ச்சிகளை முழுக்கத் தடை செய்துவிட்டு வாருங்கள். அப்புறம் சாவகாசமாய்ப் பேசுவோம்.

சார்லஸ் said...

மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் வழக்கொழிந்து கொண்டே வருகின்றன என்பதற்கு இப்போதுள்ள FM கள், TV கள் எல்லாமே சாட்சிகள்தான்! காலையில் புது பாட்டுக்களாக போடுகிறார்கள் . பிறகு இளையராஜாதான் பெரும் பங்கு வகிக்கிறார் . இரவு 12 மணிக்கு மேல்தான் எம்.எஸ்.வி பாட்டுக்களும் மற்ற பழைய பாட்டுக்களும் ! காரணம் என்ன ? தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் பழம் பெருசுகளுக்காக போடுகிறார்கள் . காரிகன் பெரும்பாலும் அந்த வயதுக்கு வந்து விட்டாரோ என்னவோ !? இல்லாவிடில் எம்.எஸ்.வி இசைக்குப் பிறகு அவர் வளரவே இல்லையோ !? அதாவது இசை அறிவை சொன்னேன் .
TV களில் இன்னிசை ஞானி என்று நிகழ்ச்சி உண்டு .FM களில் ராஜா PROGRAMME நிறைய உண்டு. எம்.எஸ்.விக்காக மெகா டிவி யில் என்றும் எம்.எஸ்.வி என்ற ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டுமே உண்டு . அதையும் ரொம்பவும் செயற்கைத் தனமாக முகத்தை அஷ்டகோணத்தில் அசைத்து ஆட்டி ஒரு பழைய director ஒருவர் விளக்கம் சொல்வார் பாருங்கள் . .. நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான் !
கின்னஸ் புகழ் எம்.ஈஸ்.வி அவர்கள் 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்திருந்தாலும் 400 படபாடல்கள் ஹிட் ஆகி இருக்கலாம் . ஆனால் ஞானி அவர்கள் 800 படங்களுக்கு இசை அமைத்து 700 படப்பாடல்கள் ஹிட் கொடுத்தவர் . யார் பாடல்கள் அதிகம் நிலைத்திருக்கும் ? யார் பாடல்கள் நீண்ட காலம் பயணம் செய்யும் ? பழைய கஞ்சியை புதிய பாத்திரத்தில் ஊற்றி கொடுத்து பார்க்கிறார்கள் . சூடும் இல்லை . சுவையும் இல்லை .(remix பாடல்கள் )ஏன்?
அதிலும் கூட இளையராஜா ,'உன்னை ஒன்று கேட்பேன் ' என்ற பாடலை மீண்டும் மெருகேற்றி கொடுத்து அசத்தினார் . சூப்பர் டுப்பர் ஹிட் ! நாயகன் படத்தில் வருமே ஒரு பாடல் ...அட அட அட ..பழைய பாடல் பாணியில் மெல்லிசை மன்னர்களின் பாடல் போலவே ..! நான் சிரித்தால் தீபாவளி ...தன்னால் அப்படிப்பட்ட பாடல்களையும் கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர் இசைஞானி . எம்.எஸ்.வி அவர்கள் ஞானியைப் போல அப்படி ஒரு பாடல் கொடுத்திருக்கிறாரா? அமுதவன் சார் ! எம்.எஸ்.வி போட்ட சாலையில் இளையராஜா பயணித்தாலும் புதிய சாலைகளை உருவாக்கியவர் . அவர் சாலைகளில் பலர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது . புதிய trend உருவாக்கிய இசைஞானிக்கு புகழாரம் சூட்டுங்கள் .

சார்லஸ் said...

இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன் . உலகத்தின் தலைசிறந்த 100 படங்களில் நாயகன் படம் இடம் பிடித்திருக்கிறது . இசைஞானியின் இசை ராஜாங்கமும் காரணமாக இருக்கலாம் . மெல்லிசை மன்னர்களோ காசு கொடுத்து வாங்கிய ஆஸ்க்கர் அவார்டு வின்னரோ இந்த லிஸ்டில் வரவில்லையே ஏன்? 50 வருடங்களாக இசை அமைத்தார்கள் என்று சொல்லுகிறீர்கள் . நிலைக்கவில்லையே ஏன் ? பட்டி தொட்டி எங்கும் பாடவில்லையே ஏன் ? notes எழுதுவதை சாதாரணமாக சொல்லுகிறீர்கள் . நூறு பேருக்கு எழுதிக் கொடுத்து இசை அமைப்பு செய்யும்போது பார்த்தீர்கள் என்றால் இப்படி பேச மாட்டீர்கள் . எம்.எஸ்.வி பாடல் இசைப்பார் . மற்றவற்றை இசைக்கருவி வாசிப்பவர்களின் யோசனைக்கு விட்டு சரி செய்து கொள்வார் . இது அவரே சொன்னதுதான்! ஞானி அப்படி இல்லை . இசை செல்லும் பாதையை அவரே தீர்மானிப்பார் . notes கொடுத்து இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்று தெளிவாய் செய்வார் . வாசிக்க எல்லோரும் பிரியப்படுவார்கள் ,பிரமிப்பார்கள் . எவ்வளவு பெரிய ஞானம் அது !? அவரா இத்துப்போன காலி தகர டப்பா ?. அப்பா காரிகன் அப்பா ..கண்ணை மூடிக்கிட்டு உலகம் இருட்டு இருட்டு என்று சொல்லிக் கொண்டு ஓடாதேயும் ! இளையராஜா இசை கேளுங்கள் . குணமடைவீர்கள் ... இசை அறிவீனத்திலிருந்து!

Amudhavan said...

சார்லஸ் நீங்கள் மெய்வழிச்சாலை ஆண்டவர், பிரேமானந்தா மடாலய பக்தர்களின் மைண்ட்லெவலில்தான் இருக்கிறீர்கள். இனியும் உங்களிடம் விவாதித்துப் பலன் இல்லை. விலகிக்கொள்கிறேன் ந்ன்றி.

சார்லஸ் said...

திரு சார்லஸ்! ஐயா, காசு கொடுத்தால் ஆப்பிரிக்காவிலிருந்து கூட ஆயிரம் பேர் எதற்காகவும் வருவார்கள்!

இது கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னது . அவர் ஒரு நல்ல இசை அமைப்பாளராகவோ அல்லது பாடகராகவோ வந்திருக்க வேண்டியவர் என்று அமுதவன் சார் சொல்லி இருந்தார் . காசு கொடுத்து கூட அவர் அப்படி வந்திருக்கலாமே! ஏன் வர முடியவில்லை ? இளையராஜாவைப் பற்றி இன்னும் முழுமையாக அறியாமல் பேசுகிறார்களே என்பதை நினைக்கும்போது சிறிய வருத்தம் அவ்வளவுதான் .

சார்லஸ் said...

அமுதவன் சார் இன்னும் மெல்லிசை மன்னர்களை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது . அதையெல்லாம் விட்டு விட்டு விலகுகிறீர்களே. இது என்ன ஞாயம் ? அதைப் போலவே இளையராஜாவை பற்றிச் சொல்வதற்கும் இன்னும் நிறைய இருக்கிறது . அவர் இசையை கூர்ந்து பாருங்கள் . ஆழமாக கேளுங்கள் . புரிந்து கொள்வீர்கள் . orchestra நடத்துபவர்கள் சொல்வார்கள், எம்.எஸ்.வி பாடல்களை எளிதாக வாசித்து விடுவோம் . ரகுமானின் பாடல்கள் பெரும்பாலும் programmed ஆகத்தான் இருக்கும் . புரோக்ராம் பண்ணி எளிதாக கொடுத்து விடுவோம் . ஆனால் இளையராஜாவின் பாடல்களை வாசிப்பதும் கடினம் . originaliy கொடுப்பது அதை விட கடினம் என்று சொல்வார்கள் . கேட்டால் தொழில் நுட்பம் என்பீர்கள் . இல்லை அவ்வளவு நுணுக்கங்கள் அந்த பாடல்கள் முழுவதும் எங்கும் வியாபித்திருக்கின்றன. அதுதான் உண்மை . இன்னொரு உதாரணம் . "மாதாவின் கோயிலில் " தூண்டில் மீன் பட பாடல் . stereophonic உருவாகாத காலம் . அந்த பாடல் நன்றாக இருந்தாலும் mono வில் சுமாராகத்தான் இருக்கும் . ஆனால் சமீபமாக நான் கடவுள் படத்தில் அதே பாடலை வேறொரு பாடகி வைத்து அதே BGM கொடுத்து இசைத்திருப்பார் . நல்ல hometheatre ஸ்பீகர்களில் அந்த பாடலை கேட்டு பாருங்கள் . பல நுணுக்கங்கள் அதில் தெரியும் .அந்த பாடலையா இப்படி கொடுத்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படும். இன்னும் நிறைய அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அமுதவன் சார்! ஒரு விஷயம் நான் தாஸ் இல்லை .

Amudhavan said...

'ஈயை ஈசனாக்கி,பேனைப் பெருமாளாக்கி' என்று ஒரு சொலவடை உண்டு. அதனை இளையராஜாவுக்காக செய்கிறீர்கள்.செய்துவிட்டுப் போங்கள். தமிழின் முன்னோர்களை எல்லாம் அவமதிக்கும் உங்களைப் போன்றோரிடம் அனாவசியமாக வாதிட்டுக்கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லையென்றே தோன்றுகிறது. உங்கள் வாதமும் இளையராஜாவுக்காக இல்லையென்பதும் புரிகிறது. யார் என்ன சொன்னாலும் 'கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் ;கிழவியைத் தூக்கி மனையில் வை' கதையாய்ப் பேசுபவர்களைத் தொடர்வதும் தேவையில்லை என்றே படுகிறது.
இளையராஜா பற்றி நீங்கள் கூறும் 'அருமைபெருமைகள்'புல்லரிக்கவைக்கின்றன.செல்லரித்துப்போகாமலும் டல்லடித்துப் போகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்த பதிவில் பார்ப்போம்.

R.S.KRISHNAMURTHY said...

வயதின் காரணமோ, ரசனையின் மேம்பாடோ, நான் கொஞ்சம் முன்பே இந்த விவாதத்திலிருந்து புத்திசாலித்தனமாக விலகிவிட்டேன். இப்போது இத்தனை நாள் பொறுமைகாத்த அமுதவனும் விலகியதால் சார்லஸ் அவர்கள் ‘வெற்றி, வெற்றி’ என்று கூவும் பதிலை அனுப்புவார் - தயவு செய்து அதனை உடனடியாக வெளியிட்டுக் காப்பாத்துங்க, அமுதவன். தாங்கமுடியல! என்ன ஸார், என் பதிவில், நேற்றுத்தான் 1949 (கவனிக்க, 1949)ல் வெளிவந்த ஜி.ராமநாதன் இசையமைத்து டி.வி.ரத்னத்துடன் பாடிய ‘நீலவானும், நிலவும் போலே’ என்ற அற்புதமான பாடலைத் தந்திருக்கிறேன். முடிந்தால் திரு.ஜெகநாத் அதைக் கேட்கட்டும். இவர்கள் வாதிடும் ’எல்லா’ இசையும் அந்தப் பாட்டில் இருக்கிறது!

ஆமாம், இவர்கள் ‘பச்சைவிளக்கு’ பாடலான, ’கேள்வி பிறந்தது அன்று’ கேட்டதே கிடையாதோ? கேளுங்கள், வயலின்களை எப்படி எல்லாம் ஒலிக்கச் செய்யமுடியும் என்பதைக் கற்றுக் கொள்ளலாம்!

கொஞ்சம் விட்டால், நோட்ஸ் என்பதைக் கண்டுபிடித்தவரே, இளையராஜா தான் என்பார்கள் போலிருக்கு! ஐயா, மெல்லிசை மன்னர்கள் குழுவில் நிறையப் பேர் நோட்ஸ் இல்லாமல் வாசிக்கவே மாட்டார்கள், ஐயா!

என்னைப் பற்றியும் பேச்சு வந்திருப்பதால் சொல்கிறேன். எனக்கும் நோட்ஸ் எழுத ஓரளவு தெரியும். என் காலத்தில் காசுகொடுத்து ‘எதையுமே’ சாதிக்கமுடியாது. திறமை ஒன்றே திறவுகோல் என்பதை நன்றாக நினைவிலிருத்திக் கொள்ளுங்கள், சார்லஸ்! நான் தீவிரமாக முயற்சிக்கவில்லை என்பதே உண்மை, போதுமா!

இளையராஜாவின் இசையை எந்த வகையிலும் நானோ, அமுதவனோ, வேறு யாருமோ இந்தப் பதிவில் எந்த இடத்திலும் கொச்சைப் படுத்தவில்லை. வழக்கம் போல் அந்தக் காரியத்தையும் அவரின் அணுக்கத் தொண்டர்களான நீங்களே சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் என்ற பெருமையும் உங்களுக்கே! வாழ்த்துக்கள்!!!!!!

Ganpat said...

ஒரு ராஜபாட்டையில் செல்லவேண்டிய விவாதம் பாதை விலகி சென்னை சாலைகளில் செல்ல ஆரம்பித்தது துரதிருஷ்டமானது.நல்லவேளையாக சம்பந்தபட்டவர்கள் சரியான நேரத்தில் விலகி கொள்ள மேலும் வாகனங்களுக்கு பழுது ஏற்படுவது தடுக்கப்பட்டது.

அரிசி எங்கே கிடைக்கிறது என்றால் ஸ்பென்சர்ஸ் டெய்லியில் எனும் பதிலளிக்கும் தற்காலத்திய இளைஞர்களுக்கும் சிறார்களுக்கும்,கிராமத்தில் பாடுபடும் விவசாயியை அறிமுகப்படுத்தும் நோக்கில் அமைந்தது அமுதவனின் பதிவு.

மேலும் ரசனையில் ஏது உயர்வு தாழ்வு?
தற்பொழுது சிறப்பாக வேலை செய்பவர்களை பாராட்டும் போது,அவ்வேலையை அதே அளவு சிறப்பாக செய்து ஒய்வு பெற்றவர்களை வணங்குவோம்.பின்னவர் இன்றி முன்னவர் இல்லை அல்லவா?

Anonymous said...

அமுதவன் அவர்களே, உங்கள் பதிவு அருமை. இளையராஜாவின் இசையோடு வளர்ந்ததால் அவரின் இசையை தாண்டி யோசிக்க முடியாத பலரில் நானும் ஒருவனே. ஆனால் சமீப காலமாக, பழைய பாடல்களை கேட்கும் போது நான் அடையும் ஆனந்தத்திற்கு அளவில்லை. அதற்கு காரணம் இசை மட்டும் அல்ல; பாடல் வரிகளும் அதை பாடியவர்களும்தான். இளையராஜாவின் காலத்தில் இசைக்கே பிரதான இடம். நீங்கள் குறிப்பிட்டது போல சில பாடல்களை ஜானகியின் கீச்சுக் குரலையும் தாண்டி இரசிக்க முடிந்ததற்கு அந்த இசையே காரணம். மெட்டமைப்பதில் வல்லவர் மெல்லிசை மன்னர் என்றால் இசை கோர்ப்புகளை அருமையாக சேர்ப்பதில் வல்லவர் இசைஞானி. மேற்கத்திய சாஸ்திரிய இசையில் அவருக்கு நிகர் அவரே. பின்னனி இசை சேர்ப்பதிலும் அப்படியே. இவ்வளவு சிறப்புகள் இருக்க அவர் காலத்தில் அவர் இசை பரவ டேப் ரிக்கார்டரே முக்கிய காரணம் என்று கூறிவிட்டீர்களே:‍‍‍) எப்படியோ இசைஞானியின் காலத்தில் சரியான பாடலாசிரியர்கள் இல்லை என்றே நான் கூறுவேன். வைரமுத்து மாபெரும் கவிஞர்தான் என்றாலும் இசைஞானியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் வாலியே பல பாடல்கள் எழுதவேண்டியிருந்தது. வாலி நல்ல கவிஞர்தான் என்றாலும் அவரின் வரிகள் இசைக்கு பலம் சேர்க்கவில்லை (பல சந்தர்ப்பங்களில்) ‍‍இசைக்கு ஒத்து ஊதுவதாகவே அமைந்தது. இசைஞானியும் பாடல் எழுதுகிறேன் பேர்வழி என்று எதையோ கிறுக்க ஆரம்பிக்க தரம் குறைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இசையின் தரம் கூடவே செய்தது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? குறிப்பாக, counterpoint, chromaticism போன்ற மேற்கத்திய சாஸ்திரிய முறைகளை தமிழ் இரசிகனுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அதில் மேதமையும் கொண்டிருந்தார் என்பதை.

Anonymous said...

"காசு கொடுத்து வாங்கிய ஆஸ்க்கர் அவார்டு வின்னரோ"

தரமற்ற விமர்சனம். இந்த பதிவை நீங்கள் நீக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அமுதவன். ஒரு நல்ல இசை இரசிகர் இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைக்க மாட்டார். நானும் இசைஞானி இரசிகன் தான். ஆனால் இரகுமான் காசு கொடுத்து விருது வாங்கினார் என்று கூறுவது அவரை இழிவு படுத்துவதாகாது. நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதற்கு சமம். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் கடுமையாக உழைத்து உங்கள் மேலாளர் உங்களை பாராட்டி அதிக ஊதிய உயர்வு அளித்து அதை மற்றவர்கள் தவறாக பேசினால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா சார்லஸ்? இரகுமானுக்கு கிடைக்கும் பாராட்டும் விருதும் அவரின் திறமைக்கு கிடைத்த பரிசு. அந்த விருது கிடைக்காததால் மெல்லிசை மன்னரோ இசைஞானியோ தாழ்ந்ததாக அர்த்தம் இல்லை. அந்த விருதை தேடி அவர்கள் போகவில்லை. அவ்வளவுதான். அதற்காக இரகுமானை இப்படி பழிப்பது நியாயமில்லை. அவர் காசு கொடுத்தது உங்களுக்கு தெரியுமா? தமிழனுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அவனே போதும்.

Anonymous said...

தோனி படப்பாடல்கள் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். "தாவித்தாவி போகும் மேகம்" ஒரு அற்புதமான பாடல். மெட்டு சிறிது நேரத்தில் சலிப்பு தட்டலாம் என்ற காரணத்தால் இசை கோர்ப்பை அழகாக செதுக்கியிருப்பார் இசைஞானி. "வாங்கும் பணத்துக்கும்" அருமையான பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு இசைஞானியின் இசையில் எஸ்.பி.பி பாடிய நல்ல பாடல். "விளையாட்டா படகோட்டி"யும் நன்றாகவே இருந்தது. பின்னனி இசை அபாரம். இப்படி இருக்க தோனி படப் பாடல்கள் பற்றி சார்லஸே ஹிட் இல்லை என்று கூறுவது விந்தையாக இருக்கிறது. காரிகன் அவர்களே, நீங்கள் கூறுவதில் பாடல் வரிகளுக்கு ஞானி முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே போல் மெட்டமைப்பதில் மெல்லிசை மன்னரே சிறந்தவர் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். இசைஞானிக்கும் இதுபோல் தனிச்சிறப்புகள் உண்டு. அதனால் அவரைப்பற்றி தாங்கள் வைக்கும் விமர்சனங்களில் உள்ள காட்டம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும். நீங்களே அவரின் இசை நன்றாக இருந்தாலும் பாடல் வரிகளே சுமார் என்று கூறியிருக்கிறீர்கள். இசைஞானியிடம் எனக்குள்ள ஒரே குறை இதுதான். பின்னனி இசைக்கு இசை மட்டுமே பிரதானம். ஆனால் ஒரு பாடலுக்கு வரிகள் மிக முக்கியம். "ஆண்டவன் கட்டளை" படத்தில் வரும் "ஆறு மனமே ஆறு" பாடலை கேட்டுப்பாருங்கள். கவியரசரின் வரிகளை தாலாட்டி செல்வதாக இசை அமையும். அந்த வரிகளை மக்கள் மனதில் பதிவு செய்யும் பணியை இசை செவ்வனே செய்யும். அதுவே சிறந்த பாடல். "இராஜா கூஜா" என்று தற்புகழ் பாடும் பாடல்கள் ஹிட் ஆகலாம். மனதில் நீண்ட நாள் இடம் பிடிக்காது. இசைஞானியின் இசையில் அற்புதமான பாடல்கள் இருக்கையிம் போயும் போயும் "இராக்கம்மா"வையா உதாரணமாக காட்டுவது. அந்த பாடலின் இசை கோர்ப்பு நன்று, ஆனால் அது ஒன்றும் சிறந்த பாடல் இல்லை. கர்னாடக சங்கீதத்தில் கே.வி.மகாதேவனை மிஞ்சுவார் எவருமில்லை. "திருவிளையாடல்" படத்தில் வரும் "ஒரு நாள் போதுமா" பாடலை கேட்டுப்பாருங்கள். வரிகளில் இராகங்களின் பெயர் வர இராகங்கள் அழகாக மாறுவதை கேளுங்கள். "சிந்து பைரவி"க்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

Amudhavan said...

அனானிமஸ் நீங்கள் யாரென்று சரியாகத் தெரியவில்லை. யாராயிருந்தாலும் சரி; இகழ்வதுபோல புகழ்வதும் புகழ்வதுபோல இகழ்வதுமாக எழுதும் கலையில் நாம் ஒரு விற்பன்னர் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் இளையராஜாவைப் பாராட்டுவதாக இருந்தால் தாராளமாகப் பாராட்டிவிட்டுப் போங்கள். நமக்கு ஆட்சேபணையே கிடையாது. கேவிமகாதேவன் பற்றிச் சொல்லவந்த இடத்தில் மகாதேவன் பாடலைக் கேளுங்கள் சிந்துபைரவிக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்ற விமரிசனம் வைக்கிறீர்கள் பாருங்கள், உங்கள் நோக்கம் தெளிவாகப் புரிந்துவிடுகிறது.

Shan said...

அமுதவன் அவர்களே, நீங்கள் இப்படி கேட்பதில் நியாயம் இருக்கிறது. அந்த கே.வி.மகாதேவன் பற்றிய கருத்து நண்பர் சார்லஸுக்காக. எனக்கு எந்த தவறான எண்ணமும் கிடையாது. நிச்சயமாக யாரையும் இகழும் எண்ணமும் கிடையாது. அதுவும், மாபெரும் இசை மேதைகளான கே.வி.எம், எம்.எஸ்.வி, டி.கே.ஆர் போன்ற மாமேதைகளை இகழ எனக்கு பைத்தியமும் இல்லை. நான் இசைஞானியின் தீவிர இரசிகன். அவர் அளவிற்கு இசை ஞானம் வேறு யாருக்கும் இருந்து விட முடியாது என்று நான் முன்பு நினைத்தது உண்மைதான். நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல், நான் இப்போது தான் பழைய தமிழ் பாடல்களை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்திருக்கிறேன். இப்போது தான் அவர்களின் மேதமையும் அவர்கள் எவ்வளவு சாதித்திருக்கிறார்கள் என்பதும் எனக்கு புரிகிறது. இந்த கருத்தை என் போன்ற மற்ற இசை இரசிகர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமென்பதே எனது நோக்கமே தவிர யாரையும் இகழ்வது அல்ல.

காரிகன் said...

நீண்ட நாட்களுக்குப்பின் திரு shan அவர்களின் பின்னூட்டலுக்கு பதில் எழுத வேண்டியது அவசியமாகிறது.இதுநாள் வரை ஒரு கிணற்றுக்குள் குதித்து குளித்துக்கொண்டிருந்த நீங்கள் இப்பொழுதுதான் இசை சமுத்திரத்தை அடைந்திருக்கிறீர்கள்.அந்த வரையில் மிக நன்று. வாருங்கள் வந்து எம் எஸ் வி கே வி எம் போன்ற இசை சொர்கங்களை அனுபவியுங்கள்.இதைதான் திரு அமுதவன் அவர்கள் இந்த பதிவில் எளிய முறையிலும் கண்ணியமாகவும் சொல்லி இருக்கிறார். நான் இளையராஜாவை மிக காட்டமாக விமர்சிப்பதாக நீங்கள் கருதுவது உங்கள் விருப்பம்.நான் அவரின் சிறந்த பாடல்களை என்றுமே குறை சொல்வபன் கிடையாது. இருந்தும் அவரின் முன்னோடிகள் கொடுத்த ரம்மியமான இசை அனுபவத்திற்கு முன் இவர் என்றைக்கும் ஈடாக மாட்டார் என்பதையே நான் அவ்வாறு சொல்லி இருக்கிறேன். நீங்கள் இன்னும் பல அபாரமான எம் எஸ் வி பாடல்களை கேட்டு உங்கள் இசை ரசனையை மேன்மை படுத்திக்கொள்ள என் வாழ்த்துக்கள்.

சார்லஸ் said...

எல்லோரும் சேர்ந்து விட்டீர்களா!? சகட்டு மேனிக்கு என்னையும் இளையராஜாவையும் தாக்குவதில் சலிப்பே இல்லை போல் தெரிகிறது . பெரியவர்கள் , முன்னோடிகள் எல்லோரும் செய்த இசை சாதனைகளை மதிப்பதில் நானும் பின் வாங்க வில்லை . ஆனால் இளையராஜா இசைக்கு பொருத்தம் இல்லாதவர் போல் அமுதவன் சாரின் பதிவுகள் எனக்கு படுகின்றன . மற்ற பதிவுகளும் நாடு நிலையோடு இல்லை . இசை ஞானியை குறைப்பதிலேயே குறியாக இருக்கிறார் . அது மற்றவர்களுக்கும் புரியவில்லை . ஒரு வேலை அவர் "அவா"ளாக இருப்பாரோ!? ஒரு சில அவாள் இளையராஜாவை ஏற்றுக் கொள்வதே இல்லை . ஊன கண்ணில் பார்த்தால் எதுவும் குற்றம்தான் . ஞான கண்ணில் பார்த்தால் எதுவும் சுற்றம்தான் !

Amudhavan said...

சார்லஸ், உங்களுடைய ஒருசில பதில்களிலேயே தெரிந்துபோன விஷயம் நீங்கள் சார்லஸ் என்ற முகமூடியுடன் வந்திருக்கிறீர்கள் என்பது. நடுநிலைமை போல வேடமிட்டு முக்காட்டுக்குள் ஒளிந்துகொண்டு இளையராஜா புகழ் பாடுவதுதான் உங்கள் குறிக்கோள் என்பதும் தெரிகிறது.
இளையராஜாவின் புகழை நீங்கள் பாடிக்கொண்டுபோங்கள் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை கிடையாது என்றும் பலமுறை இங்கே சொல்லியாகிவிட்டது. இளையராஜாவை இசைக்குப்பொருத்தமில்லாதவர் என்று யாரும் சொல்லவே இல்லை. சொல்லவும் முடியாது. ஆனால் 'அவர்தான் தமிழ்த்திரை இசையைக் கண்டுபிடித்தவர்' 'அவருக்கு இணை இங்கே யாரும் இல்லை' போன்ற அபத்தங்களை நிறையப்பேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனைத் தவிர்ப்பது மட்டுமே நம் வேலை என்பதையும் பலமுறை சொல்லியாகிவிட்டது.இது எதையும் புரிந்து கொள்ளாதது போன்ற பாவனை, சின்னப்பிள்ளைகளைப் போல ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருப்பது என்கிற இதே சவசவத்த பாணியைத் தொடர்ந்து செய்கிறீர்கள். மீண்டும் மீண்டும் எப்பாடு பட்டாவது சாதியை இங்கே கொண்டுவந்து புகுத்துவதில் பெரும்பாடு படுகிறீர்கள். நான் அவாள் இல்லை. இதிலிருந்தே அவாள்கள் மட்டும்தான் இளையராஜாவின் உண்மை நிலைமை தெரிந்து அவரை வெறும் ஒரு இசையமைப்பாளராகத்தான் பார்க்கிறார்கள் என்ற உங்கள் எண்ணம் தகர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவாள்களாக இல்லாதவர்களும் இளையராஜாவை வெறும் ஓரளவு நல்ல ஒரு இசையமைப்பாளராக மட்டுமே பார்க்கிறார்கள் என்ற உண்மையை நீங்கள் புரிந்துகொள்ளுதல் நலம்.
ஊனக்கண்ணில் எதையும் பார்க்கக்கூடாது என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஊனக்கண் மூலம் மட்டுமே பார்த்து இளையராஜாவுக்கு இங்கே இணை யாருமே இல்லை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்காதீர்கள். அடுத்த வேலையைப் பார்ப்போம். வரட்டுமா?

Anonymous said...

இந்த பதிவு நடுநிலையானதல்ல. அமுதவன் , காரிகன் ,கிருச்னமூர்த்தி ஏதோ இசை தெரிந்தவர்கள் போல புலம்புகிறார்கள்.வெறும் ரசிக மனப்பானமையுடன் இளையராஜாவை மட்டம் தட்டுவதே நோக்கமாக உள்ளனர்.இளையராஜா தன்னைவிட திறமைசாலி என்பதை விஸ்வநாதன் ஏற்றுக்கொள்வார்.ஏன் சாதாரண ரசிகனுக்கும் தெரியம்.
உண்மையான இசை ஆய்வு என்றால் தியாகராஜா பாகவதரிலிருந்து தொடங்க வேண்டும்.இந்த அப்துல்மீடுக்கு என்ன இசையா தெரியும்.அவரால் தன இயல்பாகவே பேச முடியாதவர்.[வைரமுத்து போல ]வெறும் அலங்காரவித்தைகளில் காலம் ஓட்டுபவர். அவருக்கு தெரிந்தெல்லாம் இன்ன படத்தில் இன்னார் பாடினார் என்பதே !
அமுதவர் இளையராஜா பெரைவைத்தால் தான் பதிவைஊட்டமுடியும் என்பதுநன்கு தெரிந்திருக்கிறார்.

thas

Amudhavan said...

நடுநிலைமையாக ஏதாவது காரணம் சொல்லி நீங்களும் உங்கள் கருத்தை வலுப்படுத்தலாமே. காரிகனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இசை தெரியவில்லை-புலம்புகிறார்கள். உங்களுக்குத்தான் 'இசை' தெரியுமே. புலம்பாமல் வீரதீரமாக கருத்துக்களை விதைப்பதுதானே. உண்மையான இசை ஆய்வை நீங்கள் தியாகராஜர் காலத்திலிருந்து தொடங்கி திலீபன் காலம்வரைக்கும் கொண்டுசென்று நல்லதொரு தீர்ப்பை வழங்கவேண்டியதுதானே.
அப்துல்ஹமீதுவிற்கும் பேசவரவில்லை. வைரமுத்துவுக்கும் இயல்பாக பேச வரவில்லை. அனானிமஸ் அல்லது தாஸ் உங்கள் பிரச்சினைதான் என்ன? இளையராஜாதான் உங்கள் பிரச்சினை என்று நினைக்கிறேன். குமுதத்தில்தான் அவர் பதில் சொல்கிறாரே ஏதாவது அவரிடம் ஏடாகூடமாக கேளுங்கள். உங்களுக்குப் புரிகிற மொழியில் பதில் சொல்லுவார். வாங்கி பத்திரபடுத்திக்கொள்ளுங்கள்.

Unknown said...

ஐயா, வணக்கம் நான் நாகூரை பிறப்பிடமாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட பகுதிநேர வயலின் கலைஞன்.
மெல்ல திறந்தது கதவு திரைப்படத்திலும் நான் வயலின் வாசித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் திரு.கங்கை அமரன் குறிப்பிட்டதாக கூறும் விடயத்தில் சிறு திருத்தம் அல்லது எனது கருத்தை கூற விரும்புகிறேன்.
அந்த படத்தில் அனைத்து பாடல்களுக்கும் திரு.விஸ்வநாதன் ஐயா அவர்கள் மெட்டமைத்தார். ஆனால் ஊரு சனம் தூங்கிருச்சு என்ற பாடலுக்கு திரு MSV அவர்களே பின்னணி இசை வழங்கியிருந்தார். ஆனால் மற்றைய பாடல்கள் அனைத்துக்கும் ராஜா அவர்களே பின்னணி இசை வழங்கினார். எங்களுக்கு முன்னாலேயே ராஜா நோட்ஸ் எழுதி ஒவ்வொரு வாத்தியகாரர்களுக்கும் வழங்குவார். அதன் பின் ஒத்திகை பின் ரெகார்டிங். ஏன் அமர் அவ்வாறு மாற்றி சொன்னார் என்று தெரியவில்லை. தவறுதலாக மாறி சொல்லியிருக்கலாம். அல்லது மறந்து போயிருக்கலாம்.
இரண்டாவது புன்னகை மன்னன் தீம், அதில் கமல் நடன மாடும் போது (ரேவதியுடன்) வரும் தீம் AR ரஹ்மான் மற்றும் விஜி மனுவல் ஆகியோர் கம்ப்யூட்டர் உதவியுடன் keyboad ல் வாசித்தது. ராஜா எழுதி கொடுத்த நோட்ஸ் ஐ கம்ப்யூட்டர் ல் உள்ளுடு செய்து பின் அதை கணினி உதவியுடன் வாசித்தது. இதில் வாத்தியக்காரர் எவரும் பங்கு பெறவில்லை. முதல் நாள் அதே மெயின் நோட்ஸ் க்கு சில மேலதிக இணைப்புகளுடன் வயலின் மற்றும் குழல் வாத்தியக்கார வாசித்தனர். அந்த தீம் அந்த படத்தில் பல தடவைகள் வரும். ஒரே நோட்ஸ். வித்தியாசமான arrangement இதில் ARR பங்கு பெறவில்லை. இதை தகவலுக்காக தருகின்றேன். 1990 ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு எனது கை நரம்பு பாதிக்கப்பட்டதால் வயலின் வாசிக்க முடியவில்லை. உங்கள் கட்டுரை எனது நினைவலைகளை கிளறிவிட்டது.
சிவகுமார்.

Amudhavan said...

நாகூர் கனி அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. தங்களைப் போன்று தமிழ்த்திரை இசையில் நேரடியாகப் பங்கேற்ற கலைஞர்கள் நிறைய செய்திகளையும் தகவல்களையும் பகிர முடியும். நீங்களெல்லாம் பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி அவர்களின் செயல்பாடுகளை எல்லாம் உடனிருந்து பார்த்தவர்கள், அவர்களுடனேயே பணியாற்றியவர்கள். மக்களின் உள்ளங்களில் இன்றும் நிலைத்திருக்கும் எத்தனையோ பாடல்கள் உருவானதில் உங்கள் பங்களிப்பும் அதில் இருந்திருக்கும். இப்படியொருவர் என்னுடைய பதிவுகளைப் படித்து அதில் பங்கேற்பதும் இங்குள்ள பதிவுகளைப் படிக்கும்போது அவை பழைய நினைவுகளைக் கிளறிவிடுகிறது என்று சொல்லும்போதும் மனது நெகிழ்கிறது.
அதிலும் விபத்து ஏற்பட்டு இப்போது வயலின் வாசிக்கமுடியவில்லை என்பதைக் கேள்விப்படும்பொழுது வருத்தமாக இருக்கிறது. தங்களின் நினைவுகளையும் கருத்துக்களையும் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

Unknown said...

வணக்கம் ஐயா, தங்களின் பதில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். தங்களை போல் நீண்டகாலம் சினிமா துறையுடன் தொடர்பு பட்ட பத்திரிகையாளர்கள் தமிழ் சினிமா வரலாறை அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்ல வேண்டும். அல்லாது விடில் அவர்கள் நினைப்பதுதான் வரலாறு என்று ஆகிவிடும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
தங்களின் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு விடயம், எங்கிருந்தோ வந்தான் திரைப்படத்துக்காக MSV அவர்களும் ராமமூர்த்தி அவர்களும் இணைந்த போது (நான் அந்த உன்னதமான நிகழ்வில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வில்லை) அங்கு இசைக்கருவிகளை இசைக்க வந்த பல இசை கலைஞர்கள் இவர்கள் இருவரையும் ஒரு சேர பார்த்த போது கண்ணீர் விட்டு அழுதனர்.
எனது பெயர் ஜெய பாலு , நாகூரை சேர்ந்தவன் நாகூர் ஹனிபா எனக்கு பிடித்தமான பாடகர். ஏனெனில் நாகூரை சேர்ந்தவர்கள் ஹனிபா அவர்களின் பாடலை கேட்ட படிதான் காலையில் கண் விழிப்பார். ஹனிபா அவர்களின் நினைவாக எனது profile க்கு நாகூர் ஹனி என்ற பெயரை வைத்தேன்.

முக்கிய விடயம் என்னெவென்றால் நான் internet Cafe இல் இருந்து எனது பின்னோட்டத்தை இட்டேன். எனக்கு முன் இந்த கணினியை பாவித்தவர் தனது கணக்கை LOG OUT பண்ணாமல் விட்டு விட்டு போய் விட்டார். நான் பின்னோட்டம் இடும் போது அவருடைய பெயரில் வந்து விட்டது அதை தயவு செய்து நீக்கி விடவும்.

Post a Comment