தற்போது உலகின் மொத்த கவனமும் பதிந்திருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இளையராஜாவின் இசையமைப்பும் இருக்கிறது என்ற செய்தி கடந்த இரண்டு மாத காலங்களாகவே இணையத்தில் இறக்கை கட்ட ஆரம்பித்துவிட்டது. நாம் பாட்டுக்கு நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இளையராஜா பாட்டிற்கு அவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இதில் நம்முடைய இரண்டுபக்க கவனத்தையும் திசைதிருப்புகிற மாதிரியான இப்படியொரு செய்தி வந்ததுமே சரி இளையராஜா மறுபடி புதிதாக எதையோ சாதிக்கப்போகிறார் என்பதாகவும், அல்லது அவரது மேதைமைக்கு மரியாதை செய்யும்விதமாக ஒலிம்பிக்ஸ் கமிட்டி அவரைத் தேடிவந்து புதியதோரு பொறுப்பைக் கொடுத்து மறுபடி அவரையும் அவரது பாடலை விரும்பிக்கேட்ட கோடானுகோடி ரசிகர்களையும் அவரைத்தவிர இசையமைப்பாளர்கள் இந்தப் பூவுலகில் பிறக்கவேயில்லை என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் சில நூறு இணைய ரசிகர்களையும் பெருமையின் உச்சிக்கே கொண்டுசென்று உட்காரவைக்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கைப் புதியதாகத் துளிர்விட ஆரம்பித்தது.
நிறைய ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தின் இயக்குநர் டானி பாயில்தான் தொடக்கவிழாவின் கலை நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சரி ரகுமானுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பினால் ஏ.ஆர்.ரகுமானை அழைத்து ஏதாவது இசைக்கோர்ப்பு வேலைகளைத் தருவதற்கு வாய்ப்பிருக்கிறது இவர் எப்படி இளையராஜாவைக் கூப்பிட்டு எந்த அஸைன்மென்ட்டும் தருவார் என்ற சந்தேகம் எழவே செய்தது. ஆனால் இணைய இளையராஜா ரசிகர்களின் இசையறிவைக் கணக்கில்கொள்ளும்போது இளையராஜாதானே ஒரேயொரு இசைச்சக்கரவர்த்தி இவரைப் புறக்கணித்து உலகில் பெரிய எந்த நிகழ்ச்சியும் களைகட்ட முடியாதே என்பதனால் இந்தச் செய்திக்கும் சாத்தியம் இருக்கும்போலும் என்ற நினைப்பு ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது.
இதை மெய்ப்பிக்கும் விதமாகப் பத்திரிகைகளிலும் சில செய்திகள் வந்தன.
இளையராஜாவின் ஏதோ ஒரு பழைய பாடலிலிருந்து ஒரேயொரு அடியை மட்டும் எடுத்துப்போட்டு ஒரு இசைக்கோர்ப்பு செய்யப்படும் என்று ஒரு செய்தி வந்தது. வேறொரு கலைக்குழுவினர் அங்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அவர்கள் ஆடும் ஒரு பாட்டில் இளையராஜா இசையமைத்த ஒரு பிட்டுக்கு ஆடப்போவதாகவும் சொல்லியிருந்தனர். ஏதோ நம்ம ஆளுடைய இசை எப்படியாவது உலகை அசைத்துப்பார்க்கட்டுமே என்ற எண்ணம்தான் இருந்தது.
ஒலிம்பிக்ஸ் துவக்கவிழாவின் நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றதை பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் மனம் பூராவிலும் இளையராஜா இளையராஜா என்றே துடித்துக்கொண்டிருந்ததை அடக்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு பிரிட்டிஷ் தேசப்பாடல் பாடப்பட்டபோதும் சரி; மிஸ்டர் பீனைக் கதாபாத்திரமாக வைத்து ஸ்டார்வார்ஸ் இசையமைப்பாளர் சிம்பொனி இசையமைப்பை வழங்கியபோதும் சரி நம்ம மாஸ்டரின் பாடல் இன்னமும் வரவில்லையே என்றுதான் மனம் எண்ணியது. பிரதான நிகழ்ச்சியில் ஒன்றும் வரவில்லை. பின்னர் நடைபெறும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளில் யாரும் அறியாதவண்ணம் ஒரு ஓரத்தில் எங்காவது இளையராஜா பாடலை நுழைத்துவிடும் சாகசத்தை எந்தக் கலைக்குழுவாவது செய்துவிட்டு வருமா என்பது தெரியவில்லை. அப்படி வந்தால் அவர்களுக்கு இணையத்தில் நடைபெறும் பாராட்டுக்கள் இமயத்தையும் தாண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
இது இப்படியிருக்க தொலைக்காட்சியில் பார்த்த நமக்குத்தான் எதுவும் சரிவரப் பார்க்கவோ கேட்கவோ கிடைக்காமல் போயிருக்கலாம் லண்டனில் இருக்கும் என்னுடைய நண்பர் முனிராஜு நேரில் ஒலிம்பிக்ஸிற்குப் போயிருக்கிறார். அவரையாவது கேட்டு நிச்சயப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக தொலைபேசியில் அவரை அழைத்துக்கேட்டேன். "பிரதான நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த பாடல் எதுவும் இடம் பெற்றதா?" என்று கேட்டேன்.
"ஓ....இடம் பெற்றதே நான் கேட்டேனே" என்றார் அவர்.
"அப்படியா எப்போது?" என்றேன் ஆச்சரியத்துடன்.