Sunday, March 10, 2013

வைகோவும் சீமானும் என்ன செய்யப்போகிறார்கள்?

 
மீண்டும் டெசோ ஆரம்பிக்கப்பட்டு சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்று எல்லாக்கட்சிகளையும் சார்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரைத் தொடர்ந்து பிரதமரும் இந்திய அரசின் நிலைகுறித்து விளக்கியிருக்கிறார்கள். இவர்களின் விளக்கெண்ணெய் விளக்கம் என்னவென்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இனப்படுகொலைக்குத் துணையாக நின்றவர்கள் இப்போது உலக அரங்கின் முன் தங்கள் சுயரூபம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்டை நாடு, வெளியுறவுக்கொள்கை, இறையாண்மை, பேச்சுவார்த்தை நடத்துவோம், விசாரணை நடத்த வற்புறுத்துவோம் என்று என்னென்னமோ சொல்லி பிரச்சினையை இப்போதைக்கு நீர்த்துபோகச் செய்வதற்கு படாதபாடு படுகிறார்கள்.

திமுகவையும் கருணாநிதியையும் ஆயிரம்தான் இந்த விஷயத்தில் குறை சொன்னாலும் தற்போது மொத்த இந்தியாவின் கவனத்தையும் பாரதிய ஜனதா உள்பட மொத்தக் கட்சிகளின் கவனத்தையும் மத்திய அரசாங்கத்தின் கவனத்தையும் இந்த அளவுக்குக் கொண்டுவந்திருப்பது டெசோவின் சாதனைதான். மற்ற கட்சிகளெல்லாம் எத்தனைக் கூப்பாடு போட்டாலும் நடைபெறாத ஒன்று (அப்படி எந்தக் கட்சியும் கூப்பாடு போடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்) இப்போது இவர்களின் முயற்சியால் நடைபெற்றிருக்கிறது.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் கலந்துகொண்டவர்கள் சரியான, முறையான விவாதங்களையே வைத்திருக்கிறார்கள். திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பேசும்போது “தமிழர்களுக்கு எதிராக இலங்கை தொடுத்த போரில் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் தங்களது கணவன்மாரை இழந்துள்ளனர். இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும். மத்திய அரசு உறுதியான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும்.

நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான்!

இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமையும்” என்று பேசியிருக்கிறார். இது தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு முட்டுச்சந்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு இல்லை. பாராளுமன்றத்தில் அவர் சார்ந்த கட்சியின் கருத்தாக இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் பாலு.

அதிமுகவின் எம்பி தம்பித்துரை பேசும்போது “இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. உண்மையிலேயே இது இனப்படுகொலைதான். 
 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்” என்றிருக்கிறார்.

தயாநிதி மாறன் பேசும்போது “இலங்கைப் பிரச்சினையில் எவ்வளவோ பேசியும் எழுதியும்கூட பல்லாண்டு காலமாக நிலைமை அப்படியேதான் உள்ளது” என்றார்.

காங்கிரசைச் சேர்ந்த அழகிரி, இடதுசாரிக்கட்சிகளைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், லிங்கம், மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது “நாம் நினைக்கிறபடி ஒருநாளும் இலங்கை நட்புநாடாக இருந்ததில்லை. இலங்கை நமது நட்பு நாடு என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். இந்தியா இலங்கை மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது. “பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றைக் கொரித்துக்கொண்டிருந்த காட்சியும் அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்துகிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும்…..2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகிவிட்டது. தேவைப்பட்டபோது இந்தியா செயல்படத் தவறிவிட்டது. இனப்படுகொலை நடந்தபோது மத்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது.
புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.

தீர்மானத்தின் மீது இந்தியா வெறுமனே ஓட்டுப்போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்” என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் பாரதிய ஜனதாவின் யஷ்வந்த் சின்ஹா.

பிரதமர் கனவில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசுகையில் “தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள்(மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா? ‘மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்’ என்று ஜவஹர்லால் நேரு கூறியிருக்கிறார். இந்தக் கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதன் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதைத் தெளிவு படுத்துங்கள். (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைப் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ஏடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத் துறை மந்திரியையும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு தேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல” என்று குறிப்பிட்டார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுக்கத்தா ராய் நேரடியாக திமுக எம்பிக்களை நோக்கி இந்தக் கேள்வியை முன்வைத்தார். “சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலைஉயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்” என்று நாம் நினைக்கும் கருத்தை முகத்துக்கு நேராகவே திமுக எம்பிக்களைப் பார்த்துக்கூறினார் அவர்.

ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலுபிரசாத் பேசும்போது “இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தாராசிங் பேசும்போது “இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்தப் பிரச்சினையத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தலையிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆக, இந்தியாவின் அத்தனைப் பெரிய அரசியல்கட்சிகளின் கவனத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை உணர்த்தப்பட்டு, அங்கு நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பது சொல்லப்பட்டு, இத்தகைய கொடுமைகளுக்கும் இலங்கை அரசின் அநீதிகளுக்கும் எதிராக இந்திய அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதை அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகளே நாடாளுமன்றத்தில் சொல்லும் அளவுக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தது நிச்சயம் ஸ்டாலினும் பாலுவும் திருச்சி சிவாவும் டிகேஎஸ் இளங்கோவனும் அவர்கள் சார்ந்துள்ள திமுகவும்தான் என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை.

அட்டூழியமும் கொடுமையும் இனப்படுகொலையும் நடைபெறும்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது இது என்ன நாடகம்? என்று திமுகவைப் பார்த்துக் கேள்வி எழுப்பினால் நிச்சயம் அதற்கு பதிலில்லை.

அன்று முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றபோது கருணாநிதி என்ன செய்துகொண்டிருந்தார்? என்ற கோபக்கேள்விகளுக்கும் நம்மால் உரிய பதிலை நிச்சயம் சொல்வதற்கில்லை.

இது சம்பந்தமாய் இத்தனை நாட்கள் கழித்து அவர் கொடுத்துள்ள நீண்ட விளக்கமும் (போரை நிறுத்திவிட்டதாக ராஜபட்சே பொய் சொன்னதும் ஒரு போர்க்குற்றமே) எந்தத் தமிழ் உணர்வாளரையும் திருப்திப்படுத்தவில்லை.

நடந்துமுடிந்துவிட்ட கொடுந்துயரம் ஈடுசெய்ய முடியாதது என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இதையே சொல்லிக்கொண்டு காலாகாலத்திற்கும் இப்படியே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது.

‘கருணாநிதி துரோகி, கட்டுமரக்காரனை நம்புவதற்கில்லை, 
 குடும்பத்தைத்தவிர வேறு சிந்தனை தாத்தாவுக்கு இல்லை. ஏ! பெரிசு நீ ஒதுங்கிக்கோ மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றெல்லாம் இணையத்தில் கமெண்ட் போட்டுவிட்டு விலகிவிடுவதனால் ஒரு புல்லும் இங்கே அசைந்துவிடுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் அரங்கில் அடுத்த நிலைக்குப் போவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று.

இனிமேலாவது எல்லாரும் ஒன்று சேர்ந்து ஏற்கெனவே நடைபெற்றதுபோன்ற அக்கிரமங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கைக்கெட்டும் தூரத்தில் வாழும் நம் தொப்புள்கொடி சமூகம் அங்கே உயிர் பயம் இன்றி வலம்வரவும், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்படாமல் மானத்துடன் வாழவும், அவர்களுக்கு உறைவிடம் உணவு போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக குடிமக்களுக்கான அனைத்து உரிமைகளுடன் வாழவும் வழி ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அதற்காக அந்த கொடுங்கோல் அரசாங்கத்தைப் பணியவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் கடமையை நமது நாட்டிற்கும் நாட்டை ஆளுகிறவர்களுக்கும் உடனடியாக உணர்த்தும் நிகழ்வுகளை நாம் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம்.
அத்தகைய ஒரு நிகழ்வாக இந்த நாடாளுமன்றத்தின் விவாதம் நடைபெற்றிருக்கிறது.

இரண்டாவதாக-

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

மூன்றாவதாக-

திமுக நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி “நாங்கள் கேட்பது தமிழ் ஈழம்தான். இலங்கைப் பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டும்தான் தீர்வாக அமைய முடியும்” என்பதை நோக்கி நகரவேண்டும்!

இந்த அறிவிப்பை ஏதோ டி.ஆர்.பாலு சொன்னதாக எடுத்துக்கொள்ளாமல் திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதி சொன்னதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவருடைய ஒப்புதல் இல்லாமல் சாதாரண டி.ஆர்.பாலுவால் இவ்வளவு பெரிய ‘ஸ்டேட்மெண்ட்டை’ நாடாளுமன்றத்தின் முக்கிய விவாதத்தின்போது இவ்வளவு அழுத்தம் திருத்தமாக உரத்த குரலில் சொல்லியிருக்கமுடியாது.

ஆகவே அது கலைஞரின் அறிவிப்புதான்!

இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவிடாமல் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக டெசோ அமைப்பு எடுத்துச் செல்லவிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவையெல்லாமே மத்திய அரசாங்கத்தை ‘மிரட்டுவதற்கு’ திமுக கைக்கொள்ளும் உத்தியாகக்கூட இருக்கலாம்.
இருந்துவிட்டுப் போகட்டுமே………………..

மத்திய அரசாங்கத்தை ஏதோ ஒரு வழியில் மிரட்டி சரியான திசைக்கு அவர்களைக் கொண்டுசெல்லும் எந்த உத்தியும் இந்த காலகட்டத்தில் வரவேற்கப்படவேண்டியதே!

டெல்லியில் டெசோ சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்திற்று என்று பார்த்தோமானால் தமிழ்நாட்டில் சில பத்திரிகைகளும் வெறும் பத்துப்பதினோரு பேர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விவகாரம் இன்றைக்கு தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது என்பதே ஒருவகையில் வெற்றிதான்.
 
குலாம்நபி ஆசாத் போன்ற காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மனித உரிமை ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ், சர்வதேச பொதுமன்னிப்பு அவையின்
 இந்தியச் சார்பாளர் அனந்த பத்மநாபன் போன்றவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினர் என்பது முக்கியமான ஒன்று.

இதனால் உடனடி லாபம் என்று பார்த்தோமானால் முன்பெல்லாம் செய்ததைப்போல அண்டை நாடு இறையாண்மை என்றெல்லாம் போலி வெளியுறவுக் கொள்கை பேசிக்கொண்டு தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுப்பதும் மேலும் இன அழிவை நடத்துவதும் கொடூரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நிச்சயம் முடியாது.

அதேபோல ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் ‘தமிழ்த்தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் மகிழ்ச்சி’ என்பது போன்ற பொறுக்கித்தனமான செய்திகளை ஒளிபரப்ப நிச்சயம் தயங்குவார்கள்.

இது கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி எழுதப்படும் பதிவு அல்ல; 

2009-ல் நடைபெற்ற பேரழிவைத் தடுத்து நிறுத்தும் கடமை அவருக்கு நிச்சயம் இருந்தது. 

அப்படி அந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தும் நிலைமை அன்றைக்கு இல்லாமல் போயிருக்கும் நிலையில் உடனடியாகப் பதவியைத் துறந்துவிட்டு தெருவில் இறங்கிப் போராடியிருக்கவேண்டும் அவர் என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு.
அதனை அவர் செய்யவில்லை.

அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.

மக்கள் அவரை மிகவும் கேவலமாகத் தோற்கடித்தனர். கடந்த எழுபது ஆண்டுகளாக உலகத் தமிழர்களிடம் அவர் சேர்த்துவைத்திருந்த புகழ் ஒரே வாரத்தில் அதல பாதாளத்தில் விழுந்தது. ஊடகங்கள் அவரை உண்டு இல்லையென்று ஆக்கின. உலகத் தமிழர்கள் சொல்லக்கூசும் வார்த்தைகளால் அவரை அர்ச்சித்தனர். இணையத்தில் அவருக்கு எதிராக எழுதப்படும் விமரிசனங்களை எந்த அச்சு ஊடகமும் பிரசுரிக்க முடியாது. அத்தனை ஆபாச வார்த்தைகள்…………

சரி; இந்த நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? ஒரு கணம் யோசியுங்கள்.

ஆயிரம்தான் இருந்தாலும் ‘இலங்கைத் தமிழர்’ பிரச்சினைக்கோ அல்லது ‘ஈழத்தமிழர்’ பிரச்சினைக்கோ இந்தியாவிலுள்ள மத்திய அரசாங்கத்தின் துணையுடன்தான் எந்த ஒரு தீர்வும் கண்டாகவேண்டும். இப்போதைக்கு இதைத்தவிர வேறு வழியே இல்லை.

நினைவில் வையுங்கள். மத்திய அரசை அடிபணியச் செய்ய மக்கள் சக்தி அவசியம்.

பெரும்பாலான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையிலெடுத்தால் மட்டுமே அடிப்படையான சில நகர்வுகளாவது சாத்தியம். வெறும் வாய்க்கூச்சல் போடும் ஆயிரம் உணர்ச்சிகரப் பேச்சாளர்களை வைத்து திரும்பத்திரும்ப கூட்டங்கள் போட்டு கூடிக்கொண்டும் ராஜபட்சேவையும் கருணாநிதியையும் சோனியாவையும் திட்டிக்கொண்டிருப்பதனால் மட்டும் ஒரு துரும்பு கூட அசையாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மிகப்பெரும் மக்கள் திரளை வைத்துள்ள இயக்கங்கள் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே.

இவர்கள் மட்டும்தான் இருபது சதவிகிதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை வைத்திருக்கும் மக்களைக்கொண்ட இயக்கங்கள். மற்றவை எல்லாம் ஐந்து, நான்கு, இரண்டு, ஒன்று என்ற சதவிகித  மக்கள் ஆதரவு கொண்ட இயக்கங்கள் மட்டும்தாம்.

அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆ,ர் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் எம்ஜிஆர் ஆதரவாக இருந்தாரே தவிர அந்த இயக்கமோ அல்லது அந்த இயக்கத்தொண்டர்களோ ஆதரவாக இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. இன்னமும் சொல்லப்போனால் தீவிரமான ஒரு அதிமுக தொண்டனுக்கு ஈழப்பிரச்சினை என்னவென்பதும் அதன் அடிநாதம் என்னவென்பதும் தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது.

ஆனால் திமுகவின் நிலைமை அப்படியல்ல;

திமுகவின் தொண்டன் என்பவன் ஒரு தீவிரமான உணர்வுமயமான மொழி ஆதரவாளன். கட்சியில் சேர்ந்த நாளிலிருந்தே தமிழ்மொழியின் காதலன் அவன். இலங்கை விவகாரத்தில்கூட ‘தலைவர் எதுக்கு இப்படி நடந்துக்கறார்?’ என்று தொண்ணூறு சதம் தொண்டன் மனதிற்குள்ளேயே புழுங்கித் தவித்தவன்தான். தங்கள் தலைவன் மேற்கொண்டிருக்கிற தவறான பாதையை வெளியில் சொல்லமுடியாமல் வேதனையில் தவித்தவன்தான் அவன். அதானால்தான் இன்றைக்கு டெசோ என்று கலைஞர் குரல் கொடுத்ததும் இருக்கிற வேலையை எல்லாம் போட்டுவிட்டுத் தெருவில் இறங்கி நிற்கிறான் அவன். இல்லையென்றால் இத்தனைக்கூட்டம் எங்கிருந்து வந்தது?

இலங்கை விவகாரத்தில் தலைவர்கள் தவறாக நடந்துகொண்டார்களே தவிர திமுகவின் தொண்டர்கள் தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
இங்கே இன்னொரு முக்கியமான கோணமும் உள்ளது. கலைஞர் தவறான முடிவை எடுத்து மத்திய அரசின் நடவடிக்கை எல்லாவற்றிற்கும் வாய்பேசாது மௌனியாக இருந்தாரே தவிர, இதுநாள்வரையிலும் ஈழத்தமிழர்களைப் பற்றியோ அந்தத் தமிழர்களுக்காகப் போராடிய போராளிகளைப் பற்றியோ தப்பித்தவறி ஒரு வார்த்தைக்கூடப் பேசாதவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் நண்பர்களே.

ஆனால் மற்றொரு பெரிய இயக்கமான அதிமுக அப்படி அல்ல; அதன் தலைவியான ஜெயலலிதா என்றைக்குமே ஈழம் பற்றியோ அதற்குப் போராடிய போராளிகளைப் பற்றியோ உயர்வான கருத்தையோ நல்ல கருத்தையோ கொண்டிருந்தவர் அல்ல; அவரை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆரால் போற்றப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, உதவிகள் புரிந்து பேணப்பட்ட பிரபாரன் மீது என்றைக்குமே நல்ல அபிப்பிராயத்தை அந்த அம்மையார் சொன்னதே இல்லை.

வாயைத் திறந்தாலேயே பிரபாகரனைப் பிடித்துவரவேண்டும்; கோர்ட்டிலே நிறுத்தவேண்டும்; தண்டனை தரவேண்டும்; தூக்கிலே போடவேண்டும் என்றுதான் பேசியிருக்கிறார். “ஸ்ரீலங்காவிலே நடைபெற்றுவரும் செயல்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தது……இந்தச் செயல்கள் அனைத்துமே இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக சம்பந்தம் உள்ளவை. இது குறித்துத் தமிழக மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள்.”

“நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான எல்டிடியின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கே கொண்டுவந்து சேர்த்து ராஜிவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன். 20-9-1991 அன்று பி.வி.நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய ராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். படுகொலையைப் புரிந்ததற்காக பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமென்று கோரியிருந்தேன். அதன்பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வற்புறுத்தினேன்.

அம்மையாரின் ஆவேசம் இன்னும் தொடர்கிறது. “தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது”

“என்னுடைய பெருமுயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் இயக்கம் 14-5-1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.”

“எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவுப்பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன” (‘நமது எம்ஜிஆர்’ 3-10-2008)

“14-10-2008 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்த்தால் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி’ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது” (16-10-2008)
இறுதிப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “போரை நிறுத்தவேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப்புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.”

இறுதிக்கட்ட போரின்போது அம்மையார் என்ன திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் பார்ப்போமா?

நிருபர் ; “ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?”

ஜெயலலிதா ; “அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில் அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இப்போது என்ன நடைபெறுகிறது என்றால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களைக் கேடயமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்”
ஆக, ஈழம் பற்றியும் ஈழப்பிரச்சினைப் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஈழப்போராளிகள் பற்றியும் ஜெயலலிதாவின் ‘நிரந்தர’ நிலைப்பாடு என்பது இதுதான்.
 
ஆட்சிக்கு வந்தால் ஈழம் வாங்கித்தருவேன் என்றும் கச்சத்தீவை மீட்டுத்தருவேன் என்றும்  வீராவேசம் பேசியதெல்லாம் தேர்தலுக்காகத்தான் என்பதையும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். இலங்கை அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதும், கச்சத்தீவை மீட்டுத்தரவேண்டுமென்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதும் போதும் என்பதுபோல் பேசாமல் அமைந்துவிட்டார் அம்மையார்.

“இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று வாக்கு சேகரித்த சீமான்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

உள்ளத்தில் தமிழ் உணர்வு எதுவுமே இல்லாமல் எப்போதோ ஆட்சிக்கு வருவதற்காக இரண்டொரு கூட்டங்களில் மட்டும் ‘மெக்கானிகலாக’ தமிழ் உணர்வு பற்றிப் பேசும் ஒருவரையும், தமிழ் உணர்வாலேயே வளர்ந்துவிட்டு, தமிழ் உணர்வை லட்சோப லட்சம் இளைஞர்களின் மனதில் விதைத்துவிட்டு வேறு ஏதோ நிர்ப்பந்தங்களுக்காக இன்றைக்கு வாய்மூடி மௌனியாக இருந்து இப்போது மீண்டும் தமிழ் உணர்வைக் கையில் எடுத்திருக்கும் ஒருவரையும் தலைவராகக் கொண்ட இருவேறு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

ஆயிரம்தான் பேசினாலும் இந்த இரு இயக்கங்கள்தாம் தமிழ்நாட்டின் அரசியலை நகர்த்தும் இயக்கங்களாக இருக்கின்றன. 

இவற்றில் ஒன்று தீவிரமாக களத்தில் இறங்கி செயலாற்றினால் மட்டுமே மத்திய அரசாங்கத்தை சில விஷயங்களிலாவது பணியவைக்க முடியும். 

காரணம் மக்கள் சக்தி. 

மக்கள் சக்திக்கு மட்டுமே அரசுகள் செவிமடுக்கும்.

இந்த இரு இயக்கங்களைத் தவிர்த்துவிட்டு தமிழ் உணர்வுபேசும் மற்ற இயக்கங்களையோ தமிழ்த் தலைவர்களையோ பார்த்தோமானால் எந்தத் தலைவரும் சொல்லிக்கொள்கிறமாதிரியான மக்கள்சக்தியைத் தமக்குப் பின்னால் கொண்டவர்கள் அல்ல; அதுவும் ஈழப்பிரச்சினையை எடுத்துக்கொண்டால் பழ.நெடுமாறனிலிருந்துதான் பட்டியல் ஆரம்பிக்கிறது. மற்ற தலைவர்களைக் காட்டிலும் ஈழத்தமிழர்களுக்காக இரவு பகல் பாராமல் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றிவரும் மூத்த தலைவர் இவர்தாம். ஈழத்தமிழர் ஆதரவுக்கூட்டமும் இளைஞர்கள் கூட்டமும் ஓரளவு இவர் பின்னே அணிதிரளுமே தவிர இவருக்கென்று தனியான கூட்டமெல்லாம் இல்லை. இவர் பின்னால் திரளும் கூட்டம்தான் வைகோவுக்கும் போகும். அதில் ஒரு பகுதிதான் சீமான் அழைத்தாலும் போகும்.

திருமா அழைத்தாலும் போகும் கூட்டமும் இது மட்டும்தான்.

திமுகவிலிருந்த தமிழ் உணர்வும் ஈழ ஆதரவு மனப்பான்மையும் கொண்ட பெருவாரியான இளைஞர்கள் ஈழ ஆதரவு விஷயத்தில் கலைஞர் எடுத்த தவறான முடிவுகள் காரணமாக அல்லது தீவிரமான ஆதரவு எடுக்கவில்லையென்பதனால்தான் வைகோ பின்னால் அணிதிரண்டார்களே தவிர வைகோ புதிய கொள்கைகளையும் புதிய சிந்தனைகளையும் அமைத்து இயக்கம் ஆரம்பித்தார் புதிய சமுதாயம் படைக்க இருந்தார் என்பதானால் எல்லாம் அவர்பின்னால் யாரும் சென்று சேரவில்லை.

சீமான் மிகவும் உணர்ச்சிவசமாகப் பேசக்கூடிய இளைய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். மிகப்பெரும் புரட்சி இவரால் நடைபெற இருக்கிறது என்பது போன்ற பிம்பம் இவர் அரசியல்கட்சி ஆரம்பித்ததும் கட்டமைக்கப்பட்டது. 

ஆனால் சிறிது நாட்களிலேயே அது கலகலத்துவிட்டது. 

பெரியார் தொண்டர்களுக்கும் இவருக்கும் நடைபெறும் கொள்கை விளக்கங்களிலேயே இளைஞர் கூட்டம் நாளுக்கு நாள் இவரைவிட்டு அகன்றுகொண்டிருக்கிறது.

வைகோ ஒருவர்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதுபோன்ற தோற்றம் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டாலும் அந்த நம்பிக்கையை உடனடியாகச் சிதற அடிக்கும் காரியத்தை வைகோவே கச்சிதமாக செய்துமுடித்துவிடுவார்.

ஒவ்வொரு பெரிய இயக்கங்களிலும் ஒவ்வொரு விஷயம் பற்றிப்பேச ஒவ்வொருவரை வைத்திருப்பார்கள். அப்படி ஈழம் பற்றிப் பேச திமுகவின் போர்வாளாக, கலைஞரின் போர்வாளாக நியமிக்கப்பட்டிருந்தவர் வைகோ. நாடாளுமன்றத்தில் ஈழம் பற்றிப்பேசவும், ஈழம் பற்றிய பல்வேறு கருத்தரங்குகளில் திமுகவின் ‘குரலைப்’ பேசவும் பரிந்துரைக்கப்பட்டவர், கட்சி சார்பாக அனுப்பிவைக்கப்பட்டவர் வைகோ. ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் இம்மாதிரியான செயல்பாடுகள் எங்கோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு நிலையில் இடறும். கட்சித்தலைமைக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் கருத்து வேறுபாடுகள் முளைக்கும். இனிமேலும் இந்தத் தலைமையின் கீழ் இந்த இயக்கத்துக்குக் கட்டுப்பட்டு நம்மால் செயல்பட முடியாது என்று தோன்றும். அப்போது வெளியேறிப்போய் இன்னொரு இயக்கத்தில் சேருவதோ அல்லது புதிய இயக்கம் ஆரம்பிப்பதோ நடைபெறும். அதுதான் வைகோ விஷயத்திலும் நடந்தது.
வைகோவின் செயல்பாடுகளை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருபவர்கள், அவர் பேச்சுக்களைத் தொடர்ந்து வருபவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறமாட்டார்கள். 

அது கலைஞர் வைகோவுக்குக் கொடுத்திருந்த இடமும் முக்கியத்துவமும்.

திமுகவில் அவ்வளவு வருடங்களுக்குத் தொடர்ந்து நியமன எம்பியாக யாரையும் கட்சி நியமித்தது இல்லை. தன்னுடைய தம்பிகளில் வைகோவுக்குத் தனியிடம் கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். கட்சியை விட்டுப்போய் வேறுகட்சி அமைத்து எதிரணிக்குப் போய்விட்ட பின்னாலும் மறுபடி தம்மிடம் வந்தபோது அதே முக்கியத்துவத்தை அவருக்குத் தந்தார். இதே இலங்கைப் பிரச்சினைக்காக வைகோ சிறை படுத்தப்பட்டபோது வேலூருக்கு ஓடிச்சென்று சிறையில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்தவர் அவர். 

இவற்றையெல்லாம் மக்கள் கவனத்தில் வைத்தபடிதான் இருக்கிறார்கள். 

இப்படிப்பட்டவருடன் வைகோ எப்படி நடந்துகொள்கிறார் என்பதையெல்லாம் ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு’ கவனிக்கிறார்கள். ‘நான் அவருக்காகத் தூங்காமல் ரயில் பயணம் செய்தேன்; அதிமுக அமைச்சர் கலைஞர் பயணம் செய்த ரயில் கோச்தான் தனக்கு ஒதுக்கப்படவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தபோது நான் தூங்காமல் அந்தப் பெட்டிக்கு வெளியே காவலிருந்தேன்’ என்பதெல்லாம் ஒரு பெரிய தலைவனுக்குச் செய்த ஒப்பற்ற தியாகம் என்று மக்கள் நினைக்கவேண்டும் என்று வைகோ நினைப்பது பரிதாபத்திற்குரியதுதான்.

இதுதான் மிகப்பெரிய தியாகம் என்று வைகோ நினைத்தாரென்றால் இதைவிடவும் பெரிய தியாகங்களை ‘இன்னோவா கார் புகழ்’ நாஞ்சில் சம்பத் வைகோவுக்குச் செய்திருக்கிறார் என்பதையும் அவருக்கு ஏன் உரிய முக்கியத்துவத்தை வைகோ தரவில்லை என்பதையும் சம்பத் இவரைவிட்டுவிட்டு ஏன் போனார் என்பதையும் மக்களுக்குச் சொல்லவேண்டிய நிலையில்தான் வைகோ இருக்கிறார்.

கலைஞர் மீதான மிக அதிகபட்ச முறைப்பையும் விறைப்பையும் சரி; பாதையோர ஒரு நிமிட விசாரணைக்காக ஜெயலலிதா மீதான மிக அதிக பட்சக் குழைவையும் பணிவையும் சரி மக்கள் ரசிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் நிலையில் வைகோ இருக்கிறாரா என்பதே சந்தேகத்துக்குரியது.

இதுமாதிரியான தலைவர்கள்தாம் நம்மைச் சுற்றிலும் இருக்க இந்திய அரசும் சரி இலங்கை அரசும் சரி தங்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை வைத்துத்தான் தங்களின் அடுத்தகட்ட நகர்வு பற்றித் தீர்மானிக்கிறார்கள்.

‘திரளான மக்களிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் வரவில்லையா? 
 தொடர்ந்து செய்; மக்கள் பெருவாரியாக எதிர்க்கிறார்களா? நிறுத்திவிடு’ என்பதுதான் அரசுகள் செயல்படும் முறை.

மத்திய அரசுக்கும் சரி இலங்கை அரசுக்கும் சரி மண்டபக்கூட்டங்கள், எரிதழல் அறிக்கைகள், ‘ஏ ராஜபட்சே எங்களிடமிருந்து நீ தப்பிக்கமுடியாது; நாங்கள் ஒன்றுதிரண்டால் என்ன ஆகும் தெரியுமா?’ என்பது போன்ற வாய்ச்சவடால்கள் எல்லாம் எந்தவித துரும்பையும் அசைக்காது என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். 

மிகப்பெரும் மக்கள் சக்தியைக்கொண்ட எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களும், அரசியல் ரீதியான அணுகுமுறைகளும், நிர்வாக ரீதியான காய் நகர்த்தல்களும்தாம் ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்ல உதவும்.

ஐநா சபையிலும், மனித உரிமைக் கழகத்திலும் அதன் தீர்மானங்களை நேரில் ஒப்படைத்தது, வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று அவற்றின் தூதர்களைச் சந்தித்து பிரச்சினை என்ன என்பதை எடுத்துச்சொல்லி விளக்கம் அளித்தது, நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்து இதுபற்றிப் பேசுமாறு கேட்டுக்கொண்டது என்று சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது டெசோ.

இம்மாதிரியான காரியங்களையெல்லாம் சிறு கட்சிகளோ சிறு குழுக்களோ அதன் தலைவர்களோ செய்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சிறு குழுக்களின் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக தூதரகங்களுக்குள் சென்று வெளிநாட்டுத் தூதுவர்களையெல்லாம் சந்தித்துத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திவிட்டெல்லாம் வரமுடியாது.

ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ஈழம் தொடர்பாகப் பேசியிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான குழு.

இதை இவ்வளவு நாட்கள் ஏன் செய்யவில்லை என்ற கேள்வி வருமானால் நிச்சயம் அந்தக் கேள்விக்கு பதிலில்லை. இப்போதாவது செய்கிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

டெசோவின் இந்தச் செயல்கள் எல்லாம் கலைஞர் நடத்தும் ‘போலிநாடகம்’ என்றிருக்கிறார் வைகோ. ஏறக்குறைய இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்கள் பழ.நெடுமாறனும் சீமானும்.

இருந்துவிட்டுப் போகட்டுமே, உங்களின் ‘நிஜநாடகங்களில்’ நடைபெறாத ஒன்று இவரின் ‘போலி நாடகத்தால்’ நடைபெறுகிறது என்றால் நடந்துவிட்டுப் போகட்டுமே.

உள்ளூர் அரசியலுக்காக, இந்தச் செயல்பாடுகளுக்கு எதிராக இங்கே குளறுபடிகள் செய்து ‘எந்த விஷயத்திலும் நாங்கள் ஒன்றுபட மாட்டோம்’ என்பதை உலகுக்கு உணர்த்தினால் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
  
இத்தனைச் செய்தும் மத்திய அரசாங்கத்தின் பதில் சாதகமாக இல்லை. இதனைக் கலைஞரும் உணர்ந்திருக்கிறார். வழக்கம்போல் அடிபணிந்து
இருந்துவிடப்போவதில்லை என்பது அவர் அறிவித்திருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. ‘காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப்பிரச்சினையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைகளை எடுத்து ஒருவது கவலை தருவதாக உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஐநா அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை. ஆனால் அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்துகொண்ட குலாம்நபி ஆசாத் “அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்போம்” என்பதாக உரையாற்றினார். ஆனால் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் எந்த உறுதியும் வழங்காமல் தமிழ் ஈழத்தலைவர்களோடு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினை தொடர்ந்து மவுனமாகப் பார்த்துக்கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது என்பதை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். எனவே இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலை நிறுத்தம் நடைபெற்றே தீரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வைகோவும் சீமானும் பழ.நெடுமாறன் ஐயாவும் என்ன செய்யப்போகிறார்கள்?

மக்கள் திரள் அதிகரிக்கும்போது அதில் இணைந்துகொள்ளப்போகிறார்களா, அல்லது குறுக்குசால் ஓட்டப்போகிறார்களா அல்லது ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலையெடுத்து அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதனைச் செய்யப்போகிறார்களா, அல்லது பேசாமல் இருந்துவிடப்போகிறார்களா என்பது இந்த நேரத்தின் மிக முக்கியமான கேள்வி.

இதற்கு முந்தைய கட்டம் எப்படியோ கலைஞரின் இன்றைய நிலைப்பாடுகள் சரியானவையாகத்தான் இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சரியான திசையில் பயணம் செய்ய அவருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

அவர் இப்படி அப்படி நழுவிவிடாமல் தமிழர்களுக்காகப் பாடுபடவேண்டிய அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் அவருக்குத் தரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுதான் சரியான வழிமுறையாக இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தமுறை இவ்வளவு தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தபின்னர் வேறு காரணங்களுக்காக அதிலிருந்து மாறுவார் என்று சொல்வதற்கில்லை.

அப்படி மாறினாரென்றால் தமிழ்ச்சமுதாயம் அவரை மன்னிக்காது!

இந்த நேரத்தில் உள்ளடி வேலைகள் செய்து அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால் அப்படித் தடுப்பவர்களையும் தமிழ்ச்சமுதாயம் மன்னிக்காது.

69 comments :

ராஜ நடராஜன் said...

கலைஞரின் முந்தைய ஆட்சிக்கால விமர்சனங்கள் எல்லோருக்கும் உள்ளது போலவே எனக்கும் இருந்தாலும் கூட மறுபடியும் கலைஞர் டெசோவை கையில் எடுத்தது கட்சியின் பின்னடைவை திரும்ப கட்டமைக்கவோ அல்லது ஆட்சியில் இல்லாத சுதந்திரத்தில் அறிக்கை விட்டாரோ தெரியாது.ஆனாலும் ஏதாவது புது வழிகள் தென்படுகிறதா என்ற நோக்கில் டெசோ குறித்த ஆதரவையே இது வரை பதிவு செய்து வந்திருக்கிறேன்.இலங்கை குறித்தும்,ஈழப்பிரச்சினை குறித்தும் இப்போதைய பாராளுமன்ற விவாதம் ஒரு முக்கிய ஜனநாயக முறை என்பது சரிதான். தான் ஏமாந்து போனதை கலைஞர் தற்போது வெளிப்படையாகவும் கூறியுள்ளார் என்ற போதிலும் ஆட்சிக்கால அறிக்கைகள் அனைத்தும் மக்களை திசை திருப்பும் முயற்சியாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும்.முந்தைய ஆட்சி போல் அல்லாமல் இப்பொழுது தங்கள் குரல்களை பல அமைப்புக்களும் வெளிப்படுத்த முடிகின்றது என்பதையும் மறுக்க இயலாது. டெசோ சார்ந்த அழுத்தங்கள் இந்தியா சார்ந்து என்ற போதிலும் புலம் பெயர் தமிழர்கள் குறிப்பாக லண்டன் வாழ் தமிழர்கள் மேற்கத்திய நாடுகளை தங்களுக்கு சாதகமாக இணைக்கும் முயற்சியில் திறம்பட செயல்படுகிறார்கள். பல குழுக்களாய் இருந்தாலும் கூட தற்போது அடிப்படையில் ஒருமித்த கருத்தாக வெளிப்படுவது சிறிய முன்னேற்றம்தான். நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு உதவாவிட்டாலும் மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவதை ஏனைய தலைவர்கள் தவிர்க்க வேண்டும். இந்திய நிலைப்பாட்டிலும், இலங்கை அரசின் முரண்டு பிடிப்பிலும் இன்னும் போராட்டத்துக்கான எல்லைகள் விரிவடையும் நிலையிலேயே தமிழகம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.


சீமானும்,வை.கோவும் பெரும் சக்தியாக இல்லாமல் போனாலும் கூட கலைஞர் மீதான கறை இவர்களிடம் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு எதிராகவும் ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு சபையில் ரஷ்யாவும்,சீனாவும் உறுதுணையாக இருக்கின்றன.அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்துவதற்கு இலங்கை கையெழுத்திடாத சாதகமும் இருக்கின்றது. ராஜபக்சே அரசு ஆட்சியில் இருக்கும் வரை இதற்கான சாத்தியங்கள் இல்லையென்ற போதிலும் இப்போதைய அழுத்தங்கள் தனிமனிதர்கள் என்ற வகையில் நாளை ஆட்சியில் இல்லாத போது உளரீதியாக பயப்படுத்தும் வாய்ப்புக்களே அதிகம்.மேலும் ஆட்சியில் இல்லாத போது போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் இன்னும் அதிகமாகவும் வெளிவரக்கூடும்.

நீங்கள் இல்லையென்று சொன்னாலும் கூட இந்த பதிவு கலைஞருக்கு வக்காலத்து வாங்கும் பதிவுதான்::)

கலைஞரின் டெசோ இன்னும் செயல்படும் விதத்தைப் பொறுத்து அர்ச்சனைகள் குறைவதோ அதிகமாவதும்.

டெசோவுக்கான விடுகதையை டெசோவே தீர்க்க முடியும்.

ராஜ நடராஜன் said...

தற்போதைய நிலையில் இந்தியாவின் துணையோடு அதாவது காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு தீர்வு என்பது தலையைச் சுற்றி வாய்க்கு மாதிரிதான் தெரிகிறது.பூகோள ரீதியாக இந்தியாவின் துணை மறுக்க முடியாத ஒன்று என்ற போதிலும் தற்போது இலங்கை குறித்த பிரச்சினையை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஐ.நாவின் மனித உரிமைக் குழு.அம்னெஸ்டி,மேற்கத்திய நாடுகள்,அமெரிக்கா மற்றும் கனடா.

ஜெயலலிதாவின் முந்தைய நிலைப்பாடு யாவரும் அறிந்ததே.ஆனால் இப்பொழுது விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பிறகும்,போர்க்குற்றங்களை உணர்ந்த பிறகும் அவரிடம் ஒரு மாற்றம் இருப்பதாகவே தெரிகிறது. கலைஞரின் தமிழர்கள் எதிர்ப்பார்த்தது அதிகம் என்பதாலும் ஆட்சியிலிருந்து கொண்டு சுகபோகமாக இருந்து விட்டாரென்ற குற்றங்களையும் வரலாற்றுத் தவறுகளையும் எத்தனை எழுத்துக்களிலும்,பதிவுகளிலும் மாற்றி விடமுடியாது.அதே நேரத்தில் செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக உருப்படியாக ஏதாவது செய்து விட்டுப் போனால் ஒருவேளை கோபங்கள்,விமர்சனங்கள் கு|றைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

இந்தியா,அமெரிக்கா,உலகநாடுகள்.ஐ.நா,செஞ்சிலுவை சங்கம், தமிழகம் என பலரும் போரின் திசையை மாற்றிய குற்றவாளிகள் என்ற போதும் அப்போதைய காலகட்டத்தில் தமிழகத்தில் எழுந்த குரல்களை சட்டம்.பாதுகாப்பு காரணங்களுக்காக கலைஞர் திசை திருப்பினார் என்ற கோபம் பலருக்கும் இருந்தது என்பதோடு இன்றைக்கு நீங்கள் சொல்லும் மக்கள் சக்தியை திசை திருப்பிய முக்கிய தவறை கலைஞர் செய்தாரல்லவா?

ஓல்டு மாங்கு மாதிரி ராவாக இருந்தாலும் கூட இணைய பதிவுகளும்,பின்னூட்டங்களும் ஊடகங்கள் செய்யாத பணியை அப்பொழுது செய்தன. இருந்தாலும் கூட இணைய பகிர்வுகள் பலருக்கும் போய் சேராத சூழல் இருந்தது.மதுரையிலிருந்து பிரபாகரன் புத்தக வடிவமாக கொண்டு வந்த இனப்படுகொலைகளையெல்லாம் தமிழகத்தில் சிலர் தவிர பலருக்கும் போய்ச் சேராத வண்ணம் கெடுபிடிகள்,அழுத்தங்கள் இருந்தன. இன்றைய சேனல் 4ன் கெலம் மெக்ராவின் ஆவணப்பதிவுகள் மேறக்த்திய நாடு என்பதாலும்,ஆதாரங்கள் உறுதிப்படுத்தப் பட்டவை என்பதாலும், வீட்டுத் தொலைக்காட்சிப்பெட்டிகளுக்குள் வந்து அமரும் வசதி கொண்டும் நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தாமதமாக குரல்கள் ஒலித்தாலும் கூட மௌனித்துக் கிடப்பதை விட ஈழத்தமிழரகளுக்கு எந்த விதத்திலாவது விடியலைத் தரும் போராட்டங்களை வரவேற்கிறேன்.

Ashok said...

மிக மிக மிக மிக அருமையான பதிவு தோழர். அட்டகாசம். வாழ்த்துக்கள்.

Amudhavan said...

வாருங்கள் ராஜநட(இது வவ்வால் ஸ்டைல் இல்லையா?)கலைஞருடைய தவறுகளை நான் எங்கேயுமே நியாயப்படுத்தவில்லை. ஆனால் அதை மட்டுமே சொல்லிக்கொண்டு மற்ற தலைவர்கள் தப்பித்ததையும் சேர்த்தே ஈழப்பிரச்சினையை இங்கே பார்க்கவேண்டியிருக்கிறது.
இவர் மீது படிந்திருக்கும் கறை அதிகம் மற்றவர்கள் மீது படிந்திருப்பது குறைவு என்கிறீர்கள். உண்மைதான். இவர் களத்திலிருப்பது எழுபது வருடங்களாக. மற்றவர்கள் இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறார்கள்!
ஜெயலலிதா இந்த விவகாரம் தொடர்பாக இன்னமும் வாயே திறக்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு அவருடைய நிலை என்னவென்பதை அவரே ஏதாவது பொதுக்கூட்டத்தில் குட்டிக்கதைகளையும் தாண்டி சொன்னால்தான் உண்டு.
இணையத்தில் ஈழப்பிரச்சினை தொடர்பான உங்கள் பதிவுகள் அதிகம் காத்திரம் கொண்டவை. அவை சரியானவர்களிடம் சேர்ந்து பயனடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

Amudhavan said...

டான் அசோக், தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக மிக மிக நன்றி.

Anonymous said...

20-9-1991 அன்று பி.வி.நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய ராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். படுகொலையைப் புரிந்ததற்காக பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமென்று கோரியிருந்தேன். அதன்பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வற்புறுத்தினேன்.”

Amudhavan said...

ஆமாம் நண்பரே, ஜெயலலிதா அடிக்கடி சொல்லிவந்த கூற்றுதான் இது. அவருடைய இந்த நிலைப்பாட்டை நிறைய முறை அவர் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

Unknown said...

இன்றைய சூழலில் ஈழத்தின் நிலையையும்,அதற்கு பாடுபடும் டெசொவின் செயல் பாடுகளையும் மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள்..
நிச்சயமாக டெசோ வின் மூலம் இதற்கொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நல்லதே நடக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பங்கள்..
அருமையான அலசல். வாழ்த்துக்கள் நண்பரே...

Amudhavan said...

என்னுடைய எண்ணமும் அதுதான் அபுல் பஸார், எப்படியாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட பதிவுதான் அது. எல்லாரும் ஒரே மாதிரியான சிந்தனைகளையே விதைத்துக்கொண்டிருக்கும் நிலையில் தயவுசெய்து கொஞ்சம் மாறுபட்ட பார்வையும் பாருங்களேன் என்று சொல்லும் முயற்சிதான்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நம்ம ஸ்டைலை எல்லாம் கவனிக்கிறிங்களா :-))

நீங்கள் இரு பக்கமும் அலசி இருப்பதாகவே தோன்றுகிறது ,ஆனால் கலைஞர் பற்றி பேசும் போது மயிலிறகின் வருடல் இருப்பதாக தோன்றுகிறது :-))

பழநெடுமாறன், வைகோ,சீமான்,திருமா போன்றவர்களின் கூட்டங்களுக்கு சிலர் போவார்கள் என்றீர்களே,அந்த சிலரில் அடியேனும் ஒருவன், ஆனால் பேசி பேசி கொன்றார்கள் என வெறுப்பாகி போனது தான்ன் மிச்சம். நள்ளிரவு 12-1 வரைக்கும் கூட முடிக்காம பேசிட்டு இருப்பாங்க , அதிலும் நான் மேதகு பிராபாகரனை பார்த்தப்போது எனக்கு துப்பாக்கி சுட சொல்லித்தந்தார், டீ போட்டுக்கொடுத்தார் என்ற கதைகளே மிக அதிகம், இதெல்லாம் எப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் முள்ளிவாய்க்காலில் சம்பவம் நடந்த பொழுது :-((

# வைகோ நிலை மாறும் பறவையாக இருந்தாலும் கலைஞர் விரோதம் என்பது வேறு என உங்களுக்கே புரியும்.

கள்ளத்தோணியில் இலங்கை சென்று , தனக்கு என தனி இமேஜ் எல்லாம் வைக்கோ வளர்த்துக்கொள்வது , தனக்கு பின்னால் ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்பதாலே.

கலைஞர் ஈழப்போராட்டத்தினரை களங்கமாக பேசவேயில்லை என்பதும் மேலோட்டமாக பார்த்தால் சரி என்பதாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய எதிராக பேசி,காய் நகர்த்தியிருக்கிறார்.

வைகோவை கட்சியைவிட்டு நீக்க சொன்னக்குற்றச்சாட்டு "புலிகள் ஆதரவுடன் என்னைக்கொல்ல சதி" இதில் ஒரே சமயத்தில் இருவரையும் களங்கப்படுத்தவில்லையா?

# முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது கடிதம் ,மற்றும் தொலைத்தொடர்பு என கலைஞருக்கு தகவல் அனுப்பப்பட்டது, சரி செய்கிறேன் என சொல்லிவிட்டு ,அதன் பின்னர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார் என ஒரு குற்றச்சாட்டு உண்டு.

#அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் கூட முக்கியமான அம்சங்களே இல்லை, அமெரிக்கா இலங்கையை மிரட்டிப்பார்க்க செய்யும் செயல் என பரவலாக ஒரு கருத்துள்ளது, இணையத்தில் படித்தும் பார்த்தேன், அத்தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்றவாளியாக இராசபக்சேவை விசாரிக்க முடியாத வண்ணமே இருக்கு.

# இலங்கையின் சீனக்காதலை பொறுக்காமல் அமெரிக்கா வைக்கும் "ஒரு செக்" என்றே இத்தீர்மானத்தினை பார்க்கலாம்.

சேனல் -4 இன் ஆவணப்படம், புலம்ப்பெயர் தமிழர்களின் அழுத்தம் ஆகியன தான் உண்மையை மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து சொல்லும் என நினைக்கிறேன்.

# திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கேட்டது அருமை. இப்பொழுதும் பாராளுமன்ற நடவடிக்கை மூலம் தான் காங்கிரசுக்கு புரிய வைக்க முடியும் என கூட்டணி கட்சியான தி.முக சொல்லிக்கொண்டிருப்பது கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கலாம் என சொல்வதாகவே படுகிறது.

#அ.தி.முக மத்திய கூட்டணியில் இல்லை அவர்களும் இலங்கையில் பற்றி பாராளுமன்றத்துல் குரல் கொடுத்துள்ளார்கள், கூட்டணியில் உள்ள திமுகவும் அதே வேலையை தான் செய்யுமா?

#பாராளுமன்றத்தில் விவாதங்களில் பேசுவது ஆவணப்படுத்தும் செயலே அதனை வைத்து சாதிக்க முடியாது. அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும், கூட்டணிக்கட்சியான தி.முக என்ன அழுத்தம் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

R.Puratchimani said...


இந்தியா இலங்கைக்கு உதவியது உண்மை என்றால் இந்தியாவும் அப்பொழுது ஆட்சியில் இருந்த காங்கிரசு தலைவர்களும் தண்டிக்கப்படவேண்டும். இதை கூற எந்த அரசியல் கட்சிக்காவது தைரியம் உண்டா?

கொலை செய்ய உதவி செய்தவனிடம்....நீ அவனை காட்டி கொடு என்றால் எப்படி காட்டி கொடுப்பான்?

நீதானே என்னை கொல்ல சொன்னாய் அல்லது நீயும்தானே அதற்க்கு உதவி செய்தாய் இப்பொழுது நீ என்னை மட்டும் குறை சொல்வது நியாயமா என்று கேட்க மாட்டானா?

Anonymous said...

முற்றாக மறுக்கவேண்டிய பல விடயங்கள் இந்தப் பதிவில் இருக்கிறது. கிட்டத்தட்ட டெசோ என்ற ஒரு அமைப்பினை திமுக தூசு தட்டி எடுத்திருக்கிறது என்றால் அது கருணாநிதியின் கபட அரசியலே தவிர, வேறுஎதுவும் இல்லை. இந்தப் பதிவில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் உண்மையாக ஒரு பிரச்சினையினை வெளிகொணரும் விதமாக இருந்தது. பதிவு மேலும் மேலும் செல்லும் போது அது திமுக அதிமுக வைகோ சீமான் என்பவர்களுடைய அரசியல் விமர்சனமாகவே இருக்கிறது. பதிவாளர் பல கருத்துக்களை உண்மையாக சொல்லுவதுக்கும் இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் பங்கிற்கும் சம்பந்தமே இல்லை. இப்பதிவு திமுகவுக்கு சார்பானதாகவே இருக்கிறது. வருத்தங்கள். இலங்கையில் இருந்து இவற்றையெல்லாம் கவனிக்கும் போது, எங்களின் பிரச்சினைகளை திமுக தனது அரசியலுக்காக பயன்படுத்துகிறது என்று வெட்கமாக இருக்கிறது.

Amudhavan said...

வாருங்கள் வவ்வால். நீங்கள் சொல்லியிக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் சரியே.

நம்ம வைகோ கலைஞரிடம் எப்படிப் பழகுவார், மற்றவர்கள் முன்னிலையில் தம்மை எப்படி வெளிப்படுத்துவார் என்பதையெல்லாம் கொஞ்சமே கொஞ்சூண்டு நேரில் பார்த்துமிருக்கிறேன்.

புலிகளுக்கு எதிராக நேரிடையாகப் பேசாமல் அவர்களுக்கு எதிராக காய் நகர்த்தல்கள் சில நடைபெற்றிருக்கலாம். அதற்கு கலைஞருடனான புலிகளின் அப்ரோச்சும் ஒரு காரணமென்றே நினைக்கிறேன். ஐந்து முறை ஒரு மாநிலத்தின் முதல்வராகும் வாய்ப்புப்பெற்ற ஒருவரிடம் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் ஏதோ உள்ளூர் சிறுகட்சிகள் செய்வதுபோன்று 'நாங்களெல்லாம் எப்பவுமே எம்ஜிஆர் பக்கமாக்கும்' என்று முடிவெடுத்துச் செயல்பட்ட புலிகளின் தவறான அரசியல் முடிவுகளுக்கும் இவற்றில் பெரும் பங்கு உண்டு.

கலைஞரை மயிலிறகால் வருடுவதுபோல் பேசியிருப்பதாகச் சொல்கிறீர்கள். தற்சமயம் இணையத்தில் கொதிக்கக் கொதிக்கவரும் அர்ச்சனைகளுக்கு மத்தியில் லேசான கண்டனமே மயிலிறகாய்த் தெரிகிறது உங்களுக்கு.

பார்லிமெண்ட் விவாதங்களெல்லாம் விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விவகாரங்கள் ஆகியிருக்கின்றன இல்லையா?

தவிர இது ஏதோ தமிழ்நாட்டின் கடைக்கோடி சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைத்துக்கொண்டிருந்த வடநாட்டுக்காரர்களுக்கு ஓரளவாவது விஷயம் புரிந்திருக்கக்கூடிய நிகழ்வாக அமைந்ததும் ஒரு முன்னேற்றமே.

daya said...

Dear Amuthan hope this article may have some answers from u looking forward to hear from you http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=570 apparently whats the move DMK taken over since 1980's over Indian foreign policy south east asia ?

Anonymous said...

ha...ha......adainthaal dravida nadu......illaiyel......SUDUKAADU!!!!!!!!!ha...ha...ha...

Amudhavan said...

புரட்சிமணி, உங்கள் கேள்விகள் நியாயமானவை.

Amudhavan said...

அனானிமஸ் கலைஞர் மேலுள்ள உங்கள் கோபம் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்காகத்தான் அவரைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருக்கிறார்களே. அவரை மட்டும் கைகாட்டிவிட்டுத் தப்பிக்கும் மற்றவர்களின் மீதான விமரிசனங்களும் வைக்கப்படவேண்டுமா இல்லையா?
இலங்கைப் பிரச்சினையைத் திமுக மட்டுமே தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுதான் தவறு என்கிறேன். இங்கே நிறைய அரசியல்வாதிகளின் பிழைப்பே இதை வைத்துத்தான் ஓடுகிறது.
டெசோ இப்போதாவது சரியான திசையில் பயணம் செய்து நல்ல முடிவுகளை எட்டுகிறதா என்று பார்ப்போமே. அதற்குள் எதற்காக மாறுகொள்கை பேசவேண்டும்?

Amudhavan said...

தயா, வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லியிருக்கும் பதிவைப் படித்துப்பார்க்கிறேன்.

Amudhavan said...

அனானிமஸ், உங்கள் சிரிப்பின் அர்த்தம்...................

SAMPATH KUMAR said...

மிக தெளிவான கருத்து! உங்கள் வயது எனக்கு தெரியவில்லை ஆனால் ஒரு அனுபவம் வாய்ந்த உண்மை நடுநிலையாளர் சொன்னது போல் உங்கள் கருத்து மிக மிக அருமையான ஒன்று

Anonymous said...

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும் என்று சொல்லி பிரபாகரனை தவறாக வழி நடத்தியது வைகோவின் மிக தவறான சொதப்பல் என்பதை யாரும் பேசியதான தெரியலையே.......

இது சாதாரண விசயம் இல்லை அமுதவன் அவர்களே....

விடுதலைபுலிகளின் முட்டாள்தனமான முரட்டு அரசியல் விவாதிக்க்படவேண்டும்.


Anonymous said...

//ஃஃ# முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது கடிதம் ,மற்றும் தொலைத்தொடர்பு என கலைஞருக்கு தகவல் அனுப்பப்பட்டது, சரி செய்கிறேன் என சொல்லிவிட்டு ,அதன் பின்னர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார் என ஒரு குற்றச்சாட்டு உண்டு.//

இதைவிட கேவலமான பொய் இருக்கமுடியாது. பிரபாகரன் கடைசி வரை வெளிப்படையாக எதுவும் எங்கேயும் பேசியதில்லை.


Amudhavan said...

நன்றி சம்பத்குமார், இங்கே எறும்பு ஒரே சாரியாகப் போவதைப்போல்தான் பெரும்பாலான கருத்துக்கள் பதியப்படுகின்றன. அப்படியில்லாமல் கொஞ்சம் விஷயத்தை அலசத்தொடங்கினாலேயே நடுநிலையான கருத்துக்களுக்கு நம் எண்ணமே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

Anonymous said...

புலிகளுக்கு எதிராக நேரிடையாகப் பேசாமல் அவர்களுக்கு எதிராக காய் நகர்த்தல்கள் சில நடைபெற்றிருக்கலாம். அதற்கு கலைஞருடனான புலிகளின் அப்ரோச்சும் ஒரு காரணமென்றே நினைக்கிறேன். ஐந்து முறை ஒரு மாநிலத்தின் முதல்வராகும் வாய்ப்புப்பெற்ற ஒருவரிடம் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் ஏதோ உள்ளூர் சிறுகட்சிகள் செய்வதுபோன்று 'நாங்களெல்லாம் எப்பவுமே எம்ஜிஆர் பக்கமாக்கும்' என்று முடிவெடுத்துச் செயல்பட்ட புலிகளின் தவறான அரசியல் முடிவுகளுக்கும் இவற்றில் பெரும் பங்கு உண்டு.



இதேதான்...தான் சக்கரவர்த்தி என்று நம்பிய பிரபாகரன் யாரையும் கண்டுக்கொள்ளவில்லை. அப்படி நம்ப வைத்து பிரபாகரனை கழுத்தறுத்தது தமிழனின் முட்டாள்தனம்....

Amudhavan said...

வாருங்கள் அனானிமஸ், 'பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் என்று சொல்லி....' வைகோ பற்றிய இப்படியொரு தகவல் உலா வருவது தெரியும். இது எந்த அளவுக்கு உண்மை என்பது பற்றியோ மேற்கொண்டு விளக்கமான தகவல்களோ வரவில்லை. முள்ளிவாய்க்கால் விவகாரம் பற்றிய உண்மையான தகவல்கள் என்றைக்குத்தான் வெளிவருமோ தெரியவில்லை.....

Amudhavan said...

அனானிமஸ்-2, உங்களைப் போன்றவர்கள்- நிறைய விவரம் தெரிந்தவர்கள், பல விஷயங்களை இன்னமும் வெளியில் கசியவிடாமல் வைத்திருப்பீர்கள் போலிருக்கிறதே.

த. முத்துகிருஷ்ணன் said...

எல்லாவற்றையும் தெளிவாய் முடித்தபிறகு பதவிகளையும் காப்பாற்றிய பிறகு தமிழர்களுக்கு நல்லது செய்வதுபோல் டெசோ என்ற ஆகாத அமைப்பைத் துவங்கியிருக்கிறார்கள். ஆட்சியில்லாதபோது பொழுதுபோக இப்படியொன்று தேவைப்படுகின்றதுபோலும். தமிழர்களுக்குத் தெரியும் இவர்களை நம்பி இனியும் ஏமாந்துவிடக்கூடாதென்று. - கவிஞர் அய்யப்ப மாதவன்

Anonymous said...

நடுநிலையாய் எழுதினால் கூட இது கலைஞருக்கு சாதகமான பதிவு என்கிறார்கள் .ஒரு வேலை அம்மையார் பேசியதை எல்லாம் எழுதாமல் இருந்திருந்தால் ,அருமை அருமை என்று பாராட்டுவார்களோ !!!

யார் ,சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் ,இது நடுநிலையான பதிவுதான் .அருமையாய் சொல்லி இருக்கீங்க அண்ணே !

Amudhavan said...

முத்துகிருஷ்ணன் பதிவை மறுபடியும் படியுங்கள். உங்கள் சந்தேகத்திற்கும் சரி; கவிஞர் அய்யப்ப மாதவனின் சந்தேகத்திற்கும் சரி, பதிவிலேயே பதில் உள்ளது.

Amudhavan said...

வாருங்கள் அனானிமஸ், ரொம்ப ரொம்ப நன்றி!

Anonymous said...

//வைகோ பற்றி அப்படியொரு தகவலா...கிழிஞ்சது போங்க....//

எரிக் சொல்கம் சொல்லியிருக்கார். வேற யார் சொன்னா நம்புவீங்க? வைகோ நல்லவர்தான்.ஆனால் விவரம் பத்தாது.

கொக்கரக்கோ..!!! said...

மிகவும் அற்புதமாக நிலைமையினை புட்டுப் புட்டு வைத்திருக்கின்றீர்கள் அமுதவன் சார். யதார்த்தமான ஒரு பதிவு. நன்றி.

muthusivakumaran said...

மிகவும் அருமை. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இதனை படிக்க வேண்டும்..

Amudhavan said...

வைகோ பற்றிய தகவலுக்கு நன்றி அனானிமஸ்

Amudhavan said...

வாங்க கொக்கரக்கோ. நீண்ட நாட்களுக்குப்பிறகு வந்திருக்கிறீர்கள். நன்றி.

Amudhavan said...

வாருங்கள் முத்து சிவகுமாரன், தங்களின் பாராட்டிற்கும் நல்ல யோசனைக்கும் என் நன்றி.

Thamizhan said...

அனைத் துத் தமிழர்களும் ஏமாற்றப் பட்டுவிட்டார்கள் .புது டில்லியும் மன்மோ கனும் மக்களவையிலி யே பொய் சொல்லி பல முறை ஏ மாற்றினர் .தமிழர்கள் அனை வரும்
சேர்ந்து வி பி சிங் சொ ன்ன மாதிரி கொ ந்தளிக்க வே ண் டிய நே ரம் .அப்போ து தான் டில்லி கேட்கும் .

Unknown said...

excellent compilation sir.. Thank you sir..

ஷாஜஹான் said...

வைகோவும் சீமானும் பழ.நெடுமாறன் ஐயாவும் என்ன செய்யப்போகிறார்கள்?
...................வைகோ வை பொறுத்தவரை அவர் எப்போதோ ஈழத்தை வைத்து இனி அரசியல் நடத்த வாய்ப்பில்லை, வாழ்நாள் முழுதும் கலைஞரை சுற்றி வந்த அரசியல் இனியும் திமுக வலுப்பெற்றால் தளபதியின் பின்னால் பொய் விடுமோ ,,,என்கின்ற பயம் மேலிட்டு விட்ட நிலையில் தான் திடீரென கூடங்குளம், பூரண மது விலக்கு என நடக்கத்தொடங்கிவிட்டார்...இனி பிரபாகரனே தோன்றி டேசொவை ஆதரிக்க சொன்னாலும் செய்ய மாட்டார்...ஏனெனில் அது அவரை இன்னுமோர் ஈவிகே சம்பத் ஆக்கிவிடுமென அவருக்குத்தெரியும்.

Anonymous said...

நல்ல கட்டுரை .நானும் இலங்கைத் தமிழன் தான் ...உங்களைப் போலவே நானும் உணருகிறேன் ...

புரட்சி தமிழன் said...

//திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கேட்டது அருமை. இப்பொழுதும் பாராளுமன்ற நடவடிக்கை மூலம் தான் காங்கிரசுக்கு புரிய வைக்க முடியும் என கூட்டணி கட்சியான தி.முக சொல்லிக்கொண்டிருப்பது கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கலாம் என சொல்வதாகவே படுகிறது.// -:)

viyasan said...

இந்தியாவை எதிர்த்து ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் எந்த‌ உரிமையையும் பெற‌ முடியாது. ஆனால் த‌மிழ்நாட்டு அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளின‌து சுய‌ந‌ல் அர‌சியலாலும், போட்டி பொறாமைக‌ளாலும் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப்போராட்ட‌ம் சீர‌ழிந்த‌து என்ப‌தையும் ம‌ற‌க்க‌க் கூடாது. குறைந்த‌ ப‌ட்ச‌ம், இனிமேலாவ‌து த‌ம‌து சுய‌ந‌ல‌ அர‌சிய‌லை ஒருபுற‌ம் வைத்து விட்டு, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ த‌மிழ்நாட்டின் அர‌சிய‌ல்க‌ட்சிக‌ள் அனைத்தும் ஒரே கொள்கை அடிப்ப‌டையில் ஒன்று சேர்ந்தால் ம‌ட்டும் தான் உருப்ப‌டியான‌ எதையும் சாதிக்க‌ முடியும்.

த‌மிழீழ‌ம் அமைக்க‌ ராஜீவ்காந்தி ஒத்துழைப்ப‌தாக‌வும் அத‌ற்குப்ப‌திலாக‌ பிர‌பாக‌ர‌ன் இல‌ங்கை ஜ‌னாதிப‌தி பிரேம‌தாசாவுட‌ன் உள்ள‌ தொட‌ர்பைத் துண்டிக்க‌வேண்டுமெனவும், அதைப்ப்ற்றி பிரபாக‌ர‌னுட‌ன் பேசுமாறு கூறிய‌தை முர‌சொலி மாற‌னும், க‌ருணாநிதியும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வில்லையாம்.

"Rajiv had asked me to open dialogue with Prabhakaran"
EXPRESS NEWS SERVICE


NEW DELHI, Dec 15: DMK leader and Industries Minister Murasoli Maran has corroborated former Prime Minister V.P. Singh's statement before the Jain Commission that Rajiv Gandhi had in a discussion with him in mid-1989 told him that he would, if necessary, help LTTE chief V. Prabhakaran in securing an independent State of Eelam.

Justice M.C. Jain and some Congress MPs have questioned the truth of Singh's testimony and pointed out that Maran himself had not made any such claim before the commission.

In an interview to The Indian Express today, Maran, however, clarified that if he did not speak before the Jain Commission and authenticate V.P. Singh's recollection of his conversation with Rajiv Gandhi, it was because he was not asked to do so. ``I did not receive any summons from the Jain Commission,'' he clarified.

Maran says that Rajiv had asked him to open up a dialogue with Prabhakaran through Karunanidhi because he was concerned about the growing understanding between Sri Lankan Prime Minister Premadasa and Prabhakaran, who had found a common goal in demanding the withdrawal of the Indian Army from Sri Lanka.``Rajiv was upset that Premadasa and Prabhakaran were getting closer and he felt India's honour is involved,'' Maran recollects. `` He asked me to urge Karunanidhi to speak to Prabhakaran and offer something more to satisfy him,'' says Maran.

Maran pointed out to Rajiv that short of dejure sovereignty, by this stage the LTTE already had practically everything else. They collected taxes, they had their own courts and imposed punishments including capital punishment.

Maran felt that short of Eelam, nothing would satisfy the LTTE. He cited the example of Cyprus where the Turkish army had had been sent by the government to guard the Turkish majority portion of Cyprus. He even joked with Rajiv that if he became the father of Tamil Eelam it would be hara-kiri for the DMK. ``The whole idea was very acceptable to Rajiv,'' Maran says.


http://expressindia.indianexpress.com/news/ie/daily/19971216/35050893.html

http://www.financialexpress.com/old/ie/daily/19971207/34150653.html

Amudhavan said...

வாங்க தமிழன், வி.பி.சிங் சொன்னதை எப்போதோ கேட்டிருக்கவேண்டும் போலிருக்கிறதே.

Amudhavan said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிதா சபாபதி.

Amudhavan said...

உண்மைதான் ஷாஜஹான்,வைகோ சரி; அப்படியானால் சீமானும் பழ.நெடுமாறன் ஐயாவும் என்ன செய்யப்போகிறார்கள்?

Amudhavan said...

நன்றி அனானிமஸ் நண்பரே.

Amudhavan said...

புரட்சித்தமிழரே, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் காங்கிரஸுக்குப் புரியவைக்க முடிகிறதோ இல்லையோ, மற்ற அகில இந்தியக் கட்சிகள் மற்றும் அவற்றின் முக்கியத் தலைவர்களைப் பேச வைத்திருப்பது சாத்தியமாகியிருக்கிறதா இல்லையா? யஷ்வந்த் சின்ஹாவின் பேச்சும் முலாயம்சிங் யாதவின் பேச்சும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே படுகிறது. வெறுமனே பத்திரிகைகளிலும் இணையத்திலும் பொதுக்கூட்டங்களிலும் விவாதிக்கப்படும் விஷயம் இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா? அந்த வகையில்தான் இதனைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

Amudhavan said...

வியாசன், நீங்கள் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று. தங்கள் சுயநல அரசியலை மறந்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்று திரண்டால்தான் சரியான அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி தமிழ் ஈழ மக்களுக்கு நன்மை செய்யமுடியும்.

Anonymous said...

FROM YOUR ARICLE I UNDERSTAND FOUR THINGS.
1. BECAUSE OF TESO, AMERICA BIS BRINGING THIS RESOLUTION IN U.N!
2. ALL SHOULD SUPPORT KALAIGNAR, IRRESEPTCTIVE OF WHAT HE HAD DONE OR NOT DONE, TO GAIN POLITICAL MILEAGE.
3. PARLIMENT DEBATE IS ENOUGH TO GET EEZHAM!.
4. YOUR INTEEST IS NOT TAMIL EEZHAM.
KALAIGNAR'S POLITCAL CARRER.
IT APPEARS, NEUTRALITY AND TRUTH ARE TWO DIFFERENT THINGS.

Unknown said...

மிக அருமையான பதிவு தோழர். V.KARTHIBAN

Unknown said...

மிக அருமையான பதிவு தோழர். V.Karthiban

Mu Muthukumar said...

ஈழ தமிழர்கள் விசயத்தில் தண்டிக்க படவேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் கருணாநிதியும் இருக்கிறார், பின் அவரை எப்படி நம்ப முடியும்,..தயவு செய்து எந்த திமுக தொண்டரும் ஈழ தமிழர் விஷயம் பற்றி பேசாதீர்கள் எங்களுக்கு கோபம் வருகிறது...உங்களுக்கு அந்த அருகதை இல்லை...

Unknown said...

you are a good writer. but its not enough for this generation. we knew that what was happened, whats happening now, what will happen, please do not waste your time to support who killed tamils., your analysis are from one side, you ppl were in position to save this generation from karunanithi, but you were not played, please get retired give way to us, lets see what we ll do, "songi pesurathe methavithanama poiduchu intha ulagathula".

let kalangar to do one, at-least ask kalangar to get back his MP from parliament.
atha vittuttu kasa musa nu pesitte evlo nan than sagadippenga..

மணிசேகர் said...

நண்பர்களே, ஆனால் தமிழக தலைவர்கள் எல்லாம் ஓரணியாய் சேரும் வாய்ப்பு வருமா...??? உலகத்திலே ஒற்றுமையாய் செயல்பட தவறும், ஒற்றுமைப்படுத்த மிகவும் கடினமான இனம் நம் இனம் தான் என்ற பழிதான் மிஞ்சுமா? இந்த கேள்வி என் மனதில் ஒவ்வொரு நிகழ்விலும் எழுந்துகொண்டே இருக்கிறது... இனத்தின் மேன்மைக்காக போராடாத இந்த தலைவர்களெல்லாம் இனம் காணப்பட்டு ஒதுக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை...

மணிசேகர் said...

உலகத்திலே ஒற்றுமைப்படுத்த முடியாத இனம் தமிழினம் தானா? எத்தனை - வேறுபாடுகள் தலைவரிகளில்... சுயநலவாத தலைவர்கள்... என்று மாறும் இந்நிலை...?

VOICE OF INDIAN said...

மிக அருமையான கருத்துப் பதிவு

AM AMSA - Naturalist said...

சரியான கோணத்தில் சிந்தித்து, சரியான சமயத்தில், சரியான கருத்தை வெளியிட்டு இருக்கிறீர்கள்.நாங்கள் சமீபத்தில் இது பற்றி விவாதம் செய்யும் பொழுது நான் தங்களை போலவே நண்பர்களிடம் கருத்தை வெளிப்படுத்தினேன்.நீங்கள் மிக விரிவாக அரசியல் அனுபவத்தோடு,கடந்த கால நிலைப் பாட்டுடன், நிகழ்கால சாத்தியங்களையும் கட்டுரை மூலம் அலசி இருப்பது மிகுந்த பாராட்டுக் குரியது.உங்கள் கட்டுரையை எனது நண்பர் திரு அருண் அறிமுகப் படுத்தினார் அவருக்கும் நன்றி.நாங்கள் சிந்தித்த கருத்துக்கள், உங்கள் சிந்தனையில் மிக விரிவாக,அழகான கட்டுரையாக வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து... மேலும் உங்கள் சிந்தனையை எதிர்ப் பார்க்கின்றோம்...
நன்றி,
A.M.AMSA,
Tirupur.

Anonymous said...

கலைஞர் அன்று செய்ததை நியாயம் என்று சொல்லும் நீ.., 1/12 லட்சம் பேர் இறப்புக்கு பொறுப்பு யார்? .., பிரபாகரன் தாயார் என்ன செய்தார்.., அவருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பு அனுப்பியது யார்..,நீ இன்று வக்காலத்து வாங்கும் தி.மு.க.., வை.கோ வை மாறனை.., நியமன எம்.பி யாக வைத்த போது.., குடும்ப அரசியல் தலையிடு..., இன்று டெசொ ஒரு பொழைப்புக்காக.., தேர்தல் வருவதால்தான்.., இது தெரியாமல் நீ எழுத்திய வாந்தியை கலைஞர் சாப்பிடுவார்.., தன்மானம்முள்ளா எவனும்..,

ஷாஜஹான் said...

நிறைய கேள்விகள் இருக்கின்றன உங்ள் பதிவு குறித்து. //தலைவர்கள் தவறாக நடந்துகொண்டார்களே தவிர திமுகவின் தொண்டர்கள் தவறான எந்த முடிவையும் எடுக்கவில்லை// - அங்கே தொண்டர்கள் எந்தக் காலத்தில் முடிவெடுத்தார்கள...
//பிரபாகரனைப் பிடித்துவந்து நீதிமன்றத்தின்முன் நிறுத்த வேண்டும் என்றார் ஜெ.//நாட்டின் பிரதமராக இருந்தவரை, மீண்டும் பிரதமர் ஆகக்கூடியவரை படுகொலை செய்தவர்களை விசாரணைக்கு அழைத்து வராமல் விருந்துக்கா அழைத்து வருவார்கள்? காங்கிரஸ் அரசின் மெத்தனப்போக்குக்கு முக்கியக் காரணமாக இருப்பது இதுவல்லவா?
உங்கள் பதிவு இலங்கைத்தமிழர் என்றால் பிரபாகரன் என்கிற கட்டமைப்பையே மீண்டும் முன்னிறுத்துகிறது. மணியான வாய்ப்புகளை எல்லாம் துச்சமாகத் தள்ளிவைத்து, தெளிவான அரசியல் பார்வையின்றி தானே அழிவுக்கு நடந்து சென்றது அவர்கள் தவறு அல்லவா?
எனக்கும் உங்களைப்போலவே எதிர்பார்ப்பு உண்டு. அதற்கு டெசோ மிகப்பெரிய முன்னேற்றம் என்று வாதம் புரிவது, ஜெ பயன் தர மாட்டார் என்பது போன்றவை. இதில் திமுக அனுதாபியின் குரல்தான் ஒலிக்கிறது.
அத்தனை கட்சிகளும் பொது நிபந்தனைகளை ஒருமனதாக உருவாக்க வேண்டும், பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவை வலுப்படுத்த வேண்டும். மைய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். இறுதிக்காலத்தில் இலங்கைத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்க்க வேண்டும்.
பிகு. உங்கள் அரசியல் பின்புலம் எனக்குத் தெரியாது, இந்தக்கட்டுரையைப் படித்து, இதற்குப் பதில் தருகிறேன் அவ்வளவே. நான் திமுக-அதிமுக-காங்கிரஸ் ஆகிய எந்தக்கட்சியின் அனுதாபியும் அல்ல.

ரவி said...

ஹரிஸ் சந்தோலா எழுதிய நாகா ஸ்டோரி படிங்க !! இன்னும் நிறைய தகவல்கள் இருக்கு ! என்னுடைய கருத்து அடுத்த பின்னூட்டத்தில் வருது !

ரவி said...

காங்கிரஸ் அரசு தான் ஈழப்போர் முடிவுக்கும் அதன் அத்துனை இழப்புகளுக்கு காரணம். அதன் கூட்டணியான திமுக தான் காரணம். சோனியா தான் காரணம். கலைஞர் தான் காரணம். இது தான் திடீர் குபீர் தமிழ் ஈழ உணர்வாளர்கள் வாய் ஓயாமல் சொல்லி வருவது.

சோனியா, கலைஞர், ராகுல் காந்தி, தங்கபாலு, மற்றும் சத்தியமூர்த்தி பவனில் டீ-கடை வைத்திருப்பவர் என்று அனைவர் மீதும் இது போன்ற வெறுப்பை கடந்த நான்கு ஆண்டுகளாக உமிழ்ந்து வருகிறார்கள். ஆனால் உண்மை அதுவா ?

ஈழப்போர் தோல்வியடைந்தமைக்கு காங்கிரஸ் கட்சி காரணமா ? இதில் சோனியாஜி, கலைஞர், ராகுல் காந்தி இவர்களின் பங்கு என்ன ? என்று சீர்தூக்கி பார்த்திருக்கிறீர்களா ? தன்னுடைய கணவர் தமிழ் மண்ணில் கொல்லப்பட்டபோது வராத வெறி 18 ஆண்டுகள் கழித்து சோனியா அவர்களுக்கு வந்து, ஈழப்போரில் தமிழ் மக்களை குண்டு போட்டு கொல்ல உத்தரவிட்டாரா ? சற்று சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

திடீர் குபீர் தமிழ் ஈழ உணர்வாளர்களுக்கும், அவர்களின் உணர்ச்சிமயமான வார்த்தை மாய்மாலங்களுக்கு மயங்கி அரை மயக்கத்தில் இருந்து கருத்திடுபவர்களுக்கு, கருத்துக்களை பரப்புபவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இது தான். இவர்களின் இந்த போலி பரப்புரையில் ஏமாந்து போகவேண்டாம்...வரலாறு என்ன ? உண்மை என்ன என்று சீர்தூக்கி பார்த்து, முடிவு செய்யுங்கள். இவர்களின் கருத்துக்களை படித்தால் நுனிப்புல் மேய்ந்து ஏமாந்து போவீர்கள்...

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இவர்கள் அல்ல. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரிகள். எம்.கே.நாராயணன் போன்றவர்கள். இன்றைக்கு நார்த் ஈஸ்ட் மாநிலங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மேற்கு வங்க கவர்னர் பதவியில் இருக்கிறார். கடந்த வாரம் நியமிக்கப்பட்ட நாகாலாந்து கவர்னர் யார் ? சிபிஐ முன்னாள் இயக்குனர் அஸ்வினி குமார்.

காங்கிரஸ் அரசு பதவியில் இருந்தாலும் அவர்களை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது எம்.கே.நாராயணன் போன்ற அதிகாரிகளே. ஜியோ பாலிட்டிக்ஸ் / ஆசிய நாடுகளில் இலங்கையை கட்டுப்படுத்துவது / இந்திய பெருங்கடல் முழுமையையும் கட்டுக்குள் கொண்டுவருவது / நாகாலாந்து மாநிலத்தில் ஆயுத போராட்டத்தின் மூலம் சுய நிர்ணய உரிமையை பெற முயன்ற A.Z. PHIZO ஐ லண்டனுக்கு விரட்டி அங்கேயே மடிய வைத்தது யார் ? இன்றைக்கும் இருக்கும் AFSPA எப்போதில் இருந்து உபயோகப்படுத்தப்படுகிறது தெரியுமா ? (1958 என்பது விடை) / அதே கொள்கை தான் இன்றும்.

காஷ்மீரம் முதல் கன்னியாக்குமரி வரை, பஞ்சாப் முதல் நாகாலாந்துவரை, தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையை பெற்றால் இந்தியா சிதறுண்டு போகும். அதனை தடுக்கும் வகையில் தான் இந்திய அரசு அதிகாரிகளின் ஒவ்வொரு நகர்த்தல்களும் இருக்கும். இது ஒன்று இரண்டு அதிகாரிகளின் செயல் அல்ல. அனைத்து அதிகாரிகளுக்கும் படிப்பிக்கப்படும் பாலபாடம்.

காங்கிரஸ் போய் பாரதீய ஜனதா ஆட்சி வந்தாலும் இதே வகையில் தான் அனைத்து போராட்டங்களும் ஒடுக்கப்படும். நாளையே வேறு ஏதாவது மேஜிக் நடந்து தமிழக முதல்வர் பிரதமர் பதவியில் அமர்ந்தாலும் அவர் ஈழத்தை எதிர்ப்பார். இது தான் உண்மை.

இந்த விடயத்தை உடைக்க, கொள்கை அளவில் அதிகாரிகள் கன்வின்ஸ் ஆகவேண்டும். அதற்கு மக்கள் சக்தி / மாணவ சக்தி ஒன்று திரள வேண்டும். (திரண்டாலும் அவர்கள் மனது வைத்தால் தான் எதுவும் நடக்கும் என்பது வேறு கதை. தெலுங்கானாவுக்காக எத்தனை மாணவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள் தெரியுமா ? )

மாணவர் சமூகம் உறுதியான போராட்டத்தில் ஈடுபடுவது வரவேற்க தக்கது, அவர்கள் அமைப்பாக மாறவேண்டும். ஆனால் அரசியல் அதிகாரம் வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் எதுவும் சாதிக்க இயலாது (உதாரணம் அஸ்ஸாம் கன பரிஷத்)

எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் அரசையும், திராவிட முன்னேற்ற கழகத்தையும் டார்கெட் செய்வதை விட்டுவிட்டு, கொள்கை அளவில் இந்திய அதிகாரிகளை கன்வின்ஸ் செய்ய என்ன செய்யவேண்டும் என்பதை தான் நாம் பார்க்கவேண்டும். அப்போது தான் உண்மையான வெற்றியான இலங்கையில் ஐ.நா உதவியோடு பொது வாக்கெடுப்பு, அங்கே ஐ.நா பாதுகாப்பு படைகளை நிறுத்துவது, அங்கே சூடானை போல தனி நாட்டை உருவாக்குவது போன்றவற்றை நாம் வாழும் காலத்தில் பார்க்க முடியும் !!!

http://en.wikipedia.org/wiki/Armed_Forces_(Special_Powers)_Act,_1958

Anonymous said...

கலைஞரோடு சுமூகமான உறவு புலிகளுக்கு இல்லை...இது முக்கிய விடயம்.நீங்கள் சொன்னமாதிரி கடந்த காலத்தை ஒதுக்கிவிட்டு போனால் நிச்சயம் நல்லது நடக்கும்.நல்ல அலசல். ஆனால் பிரபாகரன் அல்லது LTTE என்ற பெயருக்கு நீங்கள் நினைக்கிற மாதிரி பெரிய உணர்வு அலை இல்லை என்பதே என் கருத்து. இலங்கை விவகாரம் = பிரபாகரன்+LTTE என்கிற பிம்பம் பெரிய பின்னடைவாக இருக்கிறது என்பதே உண்மை. இந்த இரு வார்த்தைகளை பேசாமல் மக்களிடம் எடுத்துச் செல்லும்போது, பெரும்பான்மை ஜனத்தின் ஆதரவு குவியும்.அதுவே மக்கள் சக்தி. அப்போது எந்த கழகமும் இதை தவிர்க்க முடியாது.

இன்னமும் ஒவ்வாமை இருக்கிறது புலிகளைப்பற்றி பெரும்பான்மையான தமிழக மக்களிடம். அதை புரிந்து கொள்ளாமல் அடுத்த கட்ட நடவடிக்கை பலன் அளிக்காது.

தலைவர்கள் வருவார்கள் போவார்கள். இது இலங்கை தமிழர்க்கும் பொருந்தும். பிரபாகரன் புகழ் பாடுவதை விட்டுவிட்டு, அது இப்போது பலன் அளிக்காது. நாளை சாதித்ததும் அவரை புகழலாம்...இப்போது பிரச்னையை மட்டும் பேசுவதே பலன் அளிக்கும்.

Unknown said...

அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்.

jayashankar said...

good one... overall view... near to perfect.. keep going

Selvam said...

ஒரு தலைபட்சமான விமர்சனம்

Anonymous said...

Prabhakaran is a terrorist. There is no second thought. One must differentiate between LTTE and common Tamils (SL Tamils in this context). Secondly I'm completely against your perception of Mr. Kalaignar since he is doing all this because of political compulsion. 99% of the population are much more mature and intelligent than what they were around 1970s where all these Dravida kalagams fooled people in the name of caste, tamil language and other stuff. I don't find this article in good taste and this writing completely supports Mr. Karunanidhi.

shiva said...

தி.மு.க விற்கு ஆதரவான ஒரு நீண்ட கட்டுரை. இதை நீங்கள் இவளவு இழு இழுத்து இருக்க வேண்டியதே இல்லை.


கொலை செஞ்சுட்டு அத தெரியாம பண்ணிட்டேன்நு சொன்ன உங்கள வெத்தல பாக்கு வெச்சா வெளிய அனுப்புவாங்க?

நீங்க செஞ்ச பாவத்துக்கு தண்டனை சீக்கிரம் கெடைக்கும்.........இதுல பார்லிமென்ட் ல சத்தம் போட்டு பேசிட்ட சரி ஆகிவிடுமா? அதுதான் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி செருபுல அடிச்சமாதிரி கேட்டரே?


உங்களவுக்கு மக்களை ஏமாத்த வைகோவுக்கு பத்தாது சரிதான். அப்டிபட்ட ஆட்சியும் வேண்டாம் பதவியும் வேண்டாம். உங்கள் கருணாநதியாக இருந்து இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையின் சந்தில் ஆயிரம் கோடிகளுடன் பதுங்கி இருப்பீர்கள். அனால் எங்களுக்கு மக்களும் அவர்களின் உரிமைக்களுமே முக்கியம்.

அமெரிக்காவின் தீர்மானம் பல் இல்லாத பாம்பு என்று தெரிந்தும் அதை மாற்றம் கோராமல், ஆதரிக்க சொல்லும் டேசொவின் போலிமுகம் தெரியவில்லையா?

இதில் பந்த் வேறு.

கொஞ்சம் கட்சி மக்களுக்கு உணர்வையும் சொல்லி கொடுங்கள்.
பாலச்சந்திரன் பெயரை பாலக்ருஷ்ணன் என்று பிரிண்ட் செய்து உங்கள் உணர்வை காட்டியமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

YOU'RE A COMPLETE DMK SUPPORTER. THIS IS THE REAL TRUTH. I'D GONE THROUGH YOUR OLDER POSTS AND IT SIMPLY SHOWS THAT YOU ARE 100% REAL SUPPORTER OF DMK AND I CAN'T EXPECT NEUTRAL VIEWS FROM YOUR WRITING. SO GOOD LUCK AND GOOD BYE.

aravaazhi said...

arumaiyana pathivu

Post a Comment