Sunday, May 26, 2013

டி.எம்.எஸ் என்ற இமயம்!




டி.எம்.எஸ் மறைந்துவிட்டார். ‘பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே’ என்று கணீரென்ற குரலில் பாடிக்கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான குரல் காலதேவனின் கணக்கு முடிந்துபோனவுடன் தன்னுடைய உலக இருப்பை முடித்துக்கொண்டு பயணம் புறப்பட்டுவிட்டது. அவர் அதற்கு முன்னாலேயே பின்னணி பாடிவிட்டார். ‘ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி’ என்று பாடியதுதான் அவருடைய முதல் பாடல் என்றெல்லாம் கணக்கு சொல்லப்பட்டாலும் அவர் மக்களிடம் அறிமுகமானதும் திரை ரசிகனின் வியப்புக்களுக்கு ஆளானதும் இன்னமும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு மிகவும் நெருக்கமாகவும், ஒரு நான்கைந்து தலைமுறை ரசிகர்களின் முதன்மையான குரலாக விளங்கப்போவதற்கான அங்கீகாரம் பெற்றதுவும் நடிகர் திலகத்தின் தூக்குத் தூக்கி படத்தின் மூலம்தான்.

சென்ற வருடத்தில் நானும் கவிஞர் அறிவுமதியும் திண்டுக்கல் மலைப்பிரதேசங்களில் ஊடுருவிச்செல்லும் கோடைக்கானல் மலைப்பகுதிகளின் பின்புறமிருந்த மலைத்தோட்டங்களின் ஊடாக நிறைய கிராமங்களுக்குச் சென்றிருந்தோம். அழகும் இயற்கையும் பின்னிப்பிணைந்து நாகரிகத்தின் வெளிப்பூச்சுக்களும் அலங்காரங்களும் ஆடம்பரங்களும் அவ்வளவாய் குடிபுகாமல் இன்னமும் பளிங்கு போன்ற பரிசுத்தத்துடனேயே மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துசெல்லும் பகுதிகள் அவை. ஆடலூர், பன்றியூர், பித்தளைப்பட்டி என்றெல்லாம் நீண்ட பயணங்கள் முடித்துக்கொண்டு திண்டுக்கல்லுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அறிவுமதி கேட்டார். 

“அமுதவன் ஒண்ணு கவனிச்சீங்களா? காலையிலிருந்து நாம எத்தனையோ மலைக்கிராமங்களுக்குப் போனோமே எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு ஒலிபெருக்கியில் ஏதோ ஒரு பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லாமே எம்ஜிஆர் சிவாஜி காலத்துப் பாடல். எல்லாமே டிஎம்எஸ் சுசீலா பாடல். எல்லாமே விஸ்வநாதன் ராமமூர்த்தி, விஸ்வநாதன் காலத்துப் பாடல். இன்னும் இதையெல்லாம் விட்டே இவங்க வரவில்லையே. இவங்க எப்போ இளையராஜா காலத்துக்கு வந்து எப்போ ரகுமான் ஹாரிஸ் காலத்துக்கெல்லாம் வரப்போறாங்க தெரியலையே. இவங்க இன்னும் கண்ணதாசனில்தான் இருக்காங்க. எப்போ வைரமுத்து காலத்துக்கு வந்து எப்போ அறிவுமதியையும் நா.முத்துக்குமாரையும் கேட்கப்போறாங்க?” அவர் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்கூட டிஎம்எஸ் ‘உள்ளம் என்பது ஆமை’ பாடிக்கொண்டிருந்தார்.

இதனை  ஒரு குறையாகவோ ஆதங்கமாகவோ ஆற்றாமையிலோ அறிவுமதி சொல்லவில்லை. அந்தக் காலத்துப் பாடல்களுக்கிருந்த வலிமை…அவை உருவான விதம், காலத்தைக் கடந்து நிற்கும் அவற்றின் தொன்மை….. இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், அந்தப் படத்தின் கதை, அந்தப் பாடலுக்கு நடித்த நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள் என்று இத்தனைப்பேரின் கூட்டுமுயற்சியும் ஒரே புள்ளியில் இணைந்த அற்புதங்கள் அவை. இன்றைய பாடல்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் முடமாக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரு இடம் பழுது பட்டிருக்கும். ஏதோ ஒரு புள்ளி குறைந்திருக்கும். எங்கோ ஒரு கண்ணி விடுபட்டிருக்கும். இந்தக் காரணங்களால்தான் இன்றைய பாடல்களின் வாழ்நாள் அற்பமாகப் போய்விடுகிறது. பிறக்கும்போதே பல்வேறு குறைகளுடன், அற்ப ஆயுளுடன்தான் பல பாடல்கள் இங்கே பிரசவிக்கப்படுகின்றன.

சாஸ்திர ரீதியான சம்பிரதாயமான பாடல்கள் இடம்பெற்ற பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் காலத்திலிருந்து திரையிசை மக்கள் இசையாக மாற ஆரம்பித்த காலகட்டத்தில் திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன், கண்டசாலா என்றிருந்த வரிசையில் டிஎம்எஸ் வருகிறார். சிவாஜி எம்ஜிஆர் என்ற இரு பெரும் இமயங்களின் ஆட்சிதான் அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு என்ற விதி ஏற்படுத்தப்பட்டவுடன் இருவரின் குரலாகவும் அவதாரம் எடுக்கிறார் டிஎம்எஸ்.  இவருக்கு முன் யார் யாரோ சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் பின்னணி பாடியிருந்தபோதிலும் “அட, இவருக்காகத்தானே தமிழ்த்திரையுலகம் காத்திருந்தது” என்பதைப்போல் வாரி அணைத்துக்கொண்டது இவரை. இவருடைய ஆட்சிக்காலம் ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை இவருக்கு இணையான- முழுமையான- இன்னொரு ஆண் பாடகர் தமிழில் வரவில்லை. வரவில்லை. வரப்போவதுமில்லை.

முகமது ரஃபியைப் பார்த்துத்தான் தமது பாடும் பாணியை இவர் வடிவமைத்துக்கொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு. ‘பாகவதரின் பாடும் பாணிதான் ஆரம்பத்தில் என்னுடையது’ என்று இவரே சொல்லியிருப்பதும் உண்டு. இங்கிருந்து கொஞ்சம் அங்கிருந்து கொஞ்சம் என்பதாக சிறந்த விஷயங்களை சில இடங்களிலிருந்து பெற்றிருக்கலாம். ஆனால் பிற்பாடு அதே முகமதுரஃபி பின்னாளில் இவரைப் பார்த்து வியந்திருக்கிறார். இவரது சில பாடல்கள் இந்தியில் படமாக்கப்பட்டபோது அவற்றைப் பாட நேர்ந்த சமயங்களில் “அடேயப்பா இந்த மாதிரி பாட என்னால் முடியாது. இந்த ஆலாபனையெல்லாம் பாடினால் நான் செத்தே போய்விடுவேன்” என்று முகமது ரஃபி சொன்ன சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

தூக்குத்தூக்கி படத்திற்காக டிஎம்எஸ்ஸை அழைத்துப் பாடவைக்க முயன்றபோது மிக அதிகமான கோபத்துடன் அதனை எதிர்த்தவர் சிவாஜி கணேசன். “எதுக்கு? சிதம்பரம் ஜெயராமன் குரல் நல்லாத்தானே போய்கிட்டிருக்கு….எதுக்காக இப்ப புது ஆளைக் கொண்டுவந்து போட்டு குழப்பம் பண்றீங்க? அதெல்லாம் வேண்டாம். சிதம்பரம் ஜெயராமனே பாடட்டும்” என்றிருக்கிறார்.
 “இல்லை இந்தப் பாடல் பாடியிருக்கார். கேட்டுப்பாருங்க. திருப்தியில்லைன்னா நீங்க சொன்னபடியே செய்துறலாம்” என்று சொல்லி டிஎம்எஸ் சிவாஜிக்காகப் பாடிய பாடலைப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். கேட்டிருக்கிறார். கேட்டவர் வியந்துபோய் “யார் இவர்? என்னுடைய குரலிலியே பாடின மாதிரி இருக்கு….எல்லாப்பாட்டுமே இவரை வச்சே ரிகார்ட் பண்ணிருங்க” என்று சொல்லிவிட்டாராம்.

பின்னர் லதா மங்கேஷ்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “என்னுடைய குரலுக்கு பின்னணிப் பாட டிஎம்எஸ் கிடைச்சது எனக்குக் கிடைச்ச வரம்” என்றிருக்கிறார்.

அன்றைய தினத்திலிருந்து No looking back…..சிவாஜி என்றால் டிஎம்எஸ்தான் என்றுதான் போய்க்கொண்டிருந்தது. எம்ஜிஆருக்கும் இவர்தான் என்றபோதும் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் “டிஎம்எஸ் வேண்டாம், புதிய பாடகரை உருவாக்குங்க” என்று விஸ்வநாதனிடம் சொல்லிவிட்டார். எம்ஜிஆரைப் பற்றி டிஎம்எஸ் இலங்கை வானொலியில் அளித்த பேட்டியின் விளைவு அது என்று சொல்லப்படுகிறது.

எம்ஜிஆர் குணம் அதுதான்.

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்று விட்டதாலும், மக்கள் மத்தியில் ஈடு இணையற்ற பெரியதொரு பிம்பம் அவருக்கு ஏற்பட்டுவிட்டதாலும் அவருடைய இம்மாதிரியான குணங்கள் யாவும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. பல உண்மைகளை மக்கள் மத்தியில் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதில்லை. தேவையற்ற புனித பிம்பம் எம்ஜிஆரைச் சுற்றி நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கிறது.

இலங்கை வானொலிப் பேட்டியில் அவர் சிவாஜியைப் பற்றியும் அதனைத்தான் சொன்னார். அந்தப் பேட்டி மட்டுமல்ல வெளியூர்களுக்குச் சென்று நடத்தும் இன்னிசைக் கச்சேரிகளிலும் அப்படித்தான் பேசுவார் டிஎம்எஸ். “எம்ஜிஆரையும் சிவாஜியையும் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பவன் இந்த டிஎம்எஸ்தான். இந்த டிஎம்எஸ்ஸின் குரலால்தான் அவர்கள் அறியப்படுகிறார்கள். அவர்களின் முகவரியே என்னுடைய குரல்தான்.” என்பார். இன்னும் ஒருபடி மேலே சென்று “எம்ஜிஆரும் சிவாஜியும் என்னால்தான் புகழ் பெற்றார்கள்” என்பார்.  இந்தத் தொனியில்தான் பேசுவார். அவருக்கு வாய் நீளம் அதிகம்தான். தம்மைப்பற்றி மிக அதிகமாக அவரே பேசிக்கொள்வார் என்பதுதான் அவரிடமிருந்த ஒரே குறை. அவர் பேச்சில் எப்போதுமே இம்மாதிரியான செருக்கு தென்படும். என்னுடைய நண்பர் சொல்லுவார் “அவர் பேசுவதைக் கேட்கக்கூடாது. பாடுவதை மட்டும் கேட்கவேண்டும்”
   
இப்படிப்பட்ட பேச்சுக்கள் சிவாஜியை அசைத்துப் பார்ப்பதில்லை. 

அவர் என்றைக்கோ அதனையெல்லாம் கடந்துவிட்டிருந்தார். சில சம்பவங்கள் சொல்லுவார்கள். சிவாஜி அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவருடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர் அசோகனும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனும் திமுகவைச் சேர்ந்த பேச்சாளர்கள். இவர்கள் அவ்வப்போது நிறைய கூட்டங்களில் பேசுவார்கள். எல்லாக் கூட்டங்களிலும் சகட்டுமேனிக்கு சிவாஜியைப் போட்டுத் தாக்குவார்கள். அவரை நாராச நடையில் கிழிகிழியென்று கிழிப்பார்கள். மறுநாள் காலையில் படப்பிடிப்புக்கு வந்து சிவாஜியின் படத்தில் அவருடன் நடிப்பார்கள். ஒருமுறை அப்படித்தான். இவர்களில் யாரோ ஒருவர் மிகவும் தரம்தாழ்ந்து சிவாஜியைப் பற்றிப் பேசிய பேச்சு அன்றைய தினசரியில் வந்துவிட்டது. நிச்சயம் இந்தப் பேச்சைப் பார்த்தால் சிவாஜி கொதித்தெழுவார் படத்திலிருந்தே அவரைத் தூக்கிவிடுவார். எப்படியும் ரீ ஷூட்தான் செய்யவேண்டியிருக்கும், என்ற பதட்டத்துடன் இருந்திருக்கிறார்கள். சிவாஜி வந்தவுடன்

கையைப் பிசைந்துகொண்டே “அவரை வேண்டுமானால் நீக்கிவிடலாம். வேண்டுமானால் ரீ ஷூட் பண்ணிக்கலாம்” என்றிருக்கின்றனர். 

“ஏம்ப்பா என்ன ஆச்சு?” என்றாராம் சிவாஜி.

“இல்லை உங்களைப் பற்றி இப்படிப் பேசி அது பத்திரிகையிலும் வந்திருக்கு”

மவுனமாக அந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்த்த சிவாஜி ஒரு சின்னப் புன்முறுவலுடன் “அவன் நம்மளைப் பத்தி இப்படிப் பேசியிருக்கான்னா அரசியல்ல அவனுடைய வயித்துப் பொழைப்பு நடக்கணும்ன்றதுக்காகப் பேசியிருக்கான். நம்மைப் பத்தி இப்படிப் பேசிப் பொழைக்கிறான்னா பொழைச்சிட்டுப் போறான். அதுக்காக அவனுடைய மெயின் வருமானத்துல எதுக்குக் கையை வைக்கணும்? அவன் வயித்துல எதுக்கு அடிக்கணும்? அவனே இருந்துட்டுப் போறான் விட்ருங்க” என்று சொல்லிவிட்டாராம்.

எம்ஜிஆரிடம் இதெல்லாம் நடக்காது. அவரைப் பற்றிச் சின்னதாக கமெண்ட் அடித்தவன்கூட அதற்கான விலையைக் கொடுத்தாகவேண்டும். அவர் படத்திலிருந்து நீக்குவது என்பது மட்டுமல்ல; திரைப்படத்துறையிலிருந்தே காலிசெய்துவிட்டுத்தான் மறுவேலைப் பார்ப்பார்.

கண்ணதாசனுக்கும் அவருக்குமான கருத்துவேறுபாடுகள் வந்தபோது கண்ணதாசனை ஒழித்துக்கட்ட அவர் செய்த வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. கடைசிவரையில் அவரால் அது முடியாமலேயே போய்விட்டது. கண்ணதாசன் இல்லாமல்தான் எம்ஜிஆரின் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. இவர்கள் கருத்துவேறுபாட்டினால் முழுமையாக லாபம் பார்த்தவர் வாலிதான்.

எம்ஜிஆரின் அரசியல், திரைப்படம், மற்றும் பொதுவாழ்க்கையில் அவர் முழுமையாகத் தோல்வியடைந்தது ‘கண்ணதாசனை ஒழித்துக்கட்டும்’ விஷயத்தில் மட்டும்தான். கடைசியில் அவரை “வேறுவழியாக சமாதானப்படுத்தி’ தம்முடன் சேர்த்துக்கொள்ளும் விதமாகத்தான் அவரைத் தேடிச்சென்று அவருக்கு அரசவைக்கவிஞர் பதவி வழங்கி சமாதான உடன்படிக்கை போடப்பட்டது.
இதே கண்ணதாசனுடன் சிவாஜிக்கும் பலமுறை கருத்துவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் மட்டும் ஒருசில படங்களுக்கு கண்ணதாசன் வேண்டாம் என்றிருந்தார் சிவாஜி. 
ஒருமுறை சமாதானம் ஆனபிறகு அவ்வளவுதான். ‘கவிஞர்தான், கண்ணதாசன்தான், செட்டியார்தான்’! “எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு இருப்பது நிசம்தான். ஆனா அது வேறு; தொழில் வேறு. இந்தத் தொழில்ல அவருக்கு இணையா இங்கே யாருமே கிடையாது. நான் பேசலைன்னா என்ன? என்னுடைய படத்துக்குக் கவிஞர்தான் பாட்டு எழுதணும். வேறு ஏதேதோ காரணங்களால் அவர் இல்லைன்னாலோ கிடைக்கலைன்னாலோ வேணும்னா நீங்க வேற யாரையாவது வெச்சு பாட்டு எழுதிக்கங்க” என்பார் சிவாஜி.


சிவாஜி எம்ஜிஆர் பற்றிய இந்த மனப்பான்மை டிஎம்எஸ் பற்றிப் பேசுவதற்கும் இன்றியமையாததாய் இருக்கிறது. ஏனெனில் சிவாஜிக்குக் கடைசிவரை டிஎம்எஸ்தான். 

டிஎம்எஸ்ஸூக்கு பதிலாக ஒரு மாற்றைக் கொண்டுவருவது என்பதில் திரைப்படத்துறையும் ஒரு கட்டத்தில் எம்எஸ்வியும்கூட உறுதியாய் இருக்கிறார்கள். எம்ஜிஆர் இனி டிஎம்எஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சிவாஜியை நாம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று முதன்முதலாக வேறொருவரைப் பாடவைத்து ஒரு பாடலைப் பதிவுசெய்து விட்டார்கள்.

சிவாஜியிடம் பாடல் போட்டுக் காட்டப்படுகிறது.

பாடலைக் கேட்ட சிவாஜி முகம் சிவக்கிறார். “யாரைக்கேட்டு இப்படிச் செய்தீங்க?” என்கிறார். டிஎம்எஸ் ஏன் இல்லை என்பதற்கான காரணங்கள் வண்டிவண்டியாக அவரிடம் சொல்லப்படுகின்றன. ‘இனிமேல் இப்படித்தான் இவர்தான்…அல்லது வேறு புதுப்புதுப் பாடகர்கள்தாம்’ என்று அவரிடம் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் சமாதானமடைவதில்லை. “என்னமோ பண்ணிகிட்டு நாசமாப்போங்க. ஆனா நான் முடிவெடுத்தது எடுத்ததுதான். அடுத்த பாடலுக்கு எப்படின்றதை அப்புறமாப் பார்த்துக்கலாம். இந்தப் பாட்டுக்கு டிஎம்எஸ் இல்லாத குரலுக்கு நான் வாயசைக்கப்போவதில்லை. அந்தப் பாடல் அதுபாட்டுக்கு ஒலிக்கட்டும். நான் நடித்துக்கொடுக்கிறேன். வாயசைக்கமாட்டேன். அப்படியே எடுத்துக்கங்க” என்று தீர்மானமாய்ச் சொல்லிவிடுகிறார். கடைசியில், பாடலின் குரலுக்கு வாயசைக்காமலேயே புதிய பாடகரின் குரல் படமாக்கப்படுகிறது. அந்த அளவுக்கு டிஎம்எஸ்ஸின் குரலை நேசித்தவர் சிவாஜி.

ஒரு சிலரை இங்கே மிகவும் உயர்த்திச் சொல்வதால் மற்ற கலைஞர்களின் ரசிகர்கள் கோபித்துக்கொள்ள நேரலாம். அது இங்கே முக்கியமில்லை. சில உண்மைகள் சொல்லுவாரின்றி தனியே அனாதையாய்க் கிடக்கின்றன. சிலவற்றைச் சொல்லுவதற்கு ஆட்கள் இருப்பதில்லை.
அதானாலேயே அவரவர்களுக்குத் தெரிந்ததை வைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்ததுதான் முழுமுதல் உண்மையானது என்று தவறாக நினைத்துக்கொண்டு விடுகிறார்கள். இணையத்தில் அவர்களுக்கு என்னென்ன படிக்கக்கிடைக்கிறதோ அவை மட்டும்தான் உண்மை என்றே நினைக்கிறார்கள். இணையத்தின் பதிவுகளுக்கு வராமல் இன்னமும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன என்பது பாவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இவர்களுடைய வட்டத்துக்கு உட்பட்ட விஷயங்களை வைத்துக்கொண்டுதான் இவர்களுக்குள் அபிப்பிராயங்கள் உருவாகின்றன. பரிதாபம் என்னவென்றால் இவர்களுடைய ‘வட்டங்கள்’ மிகமிகச் சிறியவையாக இருக்கின்றன.

திரைப்படத்தில் சிறந்த நடனம் என்றால் இவர்களுக்கு அனுஷ்காவையும் அசினையும்தான் தெரிந்திருக்கிறது. பத்மினியையும் வைஜயந்திமாலாவையும் தெரியுமா என்று கேட்டால் கோபம் வருகிறது.

இயக்குநர் என்றால் இவர்களுக்குத் தெரிந்தது மணிரத்தினத்திலிருந்துதான். ஸ்ரீதரையும் பீம்சிங்கையும் கேபியையும் தெரியவில்லை என்பதை இவர்கள் ஒரு இழப்பாகவே கருதுவதில்லை.
ஒளிப்பதிவாளர் என்றால் இவர்கள் அறிந்தது பிசிஸ்ரீராம்தான். அங்கிருந்துதான் கணக்கைத் துவக்குகிறார்கள். வின்சென்டையும், மார்கஸ் பார்ட்லேயையும் மஸ்தானையும் கர்ணனையும் இவர்களுக்குத் தெரிவதில்லை.

இசை என்றால் இளையராஜாவிலிருந்துதான் கணக்கு ஆரம்பிக்கிறது (வேடிக்கை என்னவென்றால் இந்தக் கணக்கு மட்டும் அத்துடனேயே நின்றும் விடுகிறது). ஜி.ராமனாதனையோ, சிஆர்சுப்பராமனையோ,எஸ்எம்சுப்பையா நாயுடுவையோ, விஸ்வநாதன் ராமமூர்த்தியையோ, கேவிமகாதேவனையோ இவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

அதே போல பின்னணிப் பாடகர் என்றால் ‘இவர்களைப்’ பொறுத்தவரை வெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மட்டும்தான். பாடகி என்றால் எஸ்.ஜானகி மட்டும்தான். நடிகர் என்றால் கமலஹாசன் மட்டும்தான்.

இந்தச் ‘சின்ன வட்டக்காரர்கள்’ மொத்த மக்கள் தொகையில் ஒரு பத்து சதவிகிதம் கூட இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் சொல்வதுமட்டும் ஏன் அல்லது எப்படி பிரதானமாகத் தெரிகிறது என்றால் இந்தச் சின்ன வட்டத்தின் கையில்தான் இணையங்கள் இருக்கின்றன. இன்றைய பத்திரிகைகளும் இவர்களுடைய வட்டத்திலிருந்துதான் வெளிவருகின்றன. நல்ல வேளையாக விகடன் குமுதம் கல்கி போன்ற பத்திரிகைகள் இன்னமும் பெரும்பாலான வாசகர்களைக் கொண்டவையாக இருப்பதாலும் சில தொலைக்காட்சிகளில் விஷயம் தெரிந்தவர்கள் இருப்பதாலும் ‘கருத்துப் பேரழிவு’ பெருமளவில் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

சரி விஷயத்துக்கு வருவோம்.

தமிழில் எத்தனைப் பாடகர்கள் வந்தாலும் சரி அவர்களால் டிஎம்எஸ்ஸூக்கு மாற்றாக ஒருநாளும் வரமுடியாது. இளையராஜா சொல்லியிருப்பதுபோல் ‘தமிழின் ஒரே ஆண்குரலுக்குச் சொந்தக்காரர்’ அவர்தான். அவருக்குப்பின் ஏ.எம்.ராஜாவின்- பிபிஎஸ்ஸின் குரலுக்கு மாற்றானவர்களாகத்தான் கேஜேஏசுதாஸூம் எஸ்பிபியும் அவர்களைத் தொடர்ந்து ஹரிஹரன், கார்த்திக் போன்றவர்களும் வந்தனரே அன்றி டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக ஒருவரும் இல்லை. ஒரு ஓரத்தில் மலேசியா வாசுதேவனும், இன்னொரு புறத்தில் சங்கர் மகாதேவனும்  சிறிது தூரம் ஓடிவந்தனர். பெரிய சாதனைகள் என்பதுபோல் இவர்களிடம் சொல்ல எதுவுமில்லை.

தொல்காப்பியன் காலம் தொடங்கி வள்ளுவன் சங்க காலம் என்று இந்த நாள்வரைக்கும் சீரிளமைக்குன்றாத தமிழ் என்றெல்லாம் பேசுகிறோம். அந்தத் தமிழை சரியாக எழுதவும் பேசவும், சரியாக உச்சரிக்கவும் நாதியற்றுப் போய் இருக்கிறோம். எட்டுக்கோடித் தமிழரில் தமிழைச் சரியாக உச்சரிக்க பிரபலமானவர்களில் மொத்தமே ஒரு நூறுபேர் இருந்தார்களென்றாலேயே அதிகம்.

கவனம் வைத்துக்கொள்ளுங்கள் திரைபடத்துறையில் தமிழைச் சரியாக உச்சரித்தவர்கள்; வசனத்தில் சிவாஜிகணேசன், பாடலில் டிஎம்சௌந்தரராஜன். இரண்டுபேர் மட்டுமே!
 
உடனே எஸ்எஸ்ஆர் உச்சரிக்கவில்லையா, பாடல்களில் சீர்காழி சரியாக உச்சரிக்கவில்லையா என்றெல்லாம் கேட்டு சண்டைக்குக் கிளம்பவேண்டாம். இவர்களுடைய உச்சரிப்பிலெல்லாம் தவறு கண்டுபிடிக்கமுடியாது


அவ்வளவுதான். தவறுகள் இல்லை என்பது மட்டுமல்ல, தரம் என்பதும், தரசுத்தம் எவ்வளவு என்பதும்கூட இங்கே முக்கியம். அதனால் உச்சரிப்பு என்பது எப்படி இருக்கவேண்டும், எதுமாதிரி இருக்கவேண்டும் என்பதற்கெல்லாம் சான்று வேண்டும், சாட்சி பகரவேண்டும் பாடம் நடத்தவேண்டும் பெருமைப் படவேண்டும் என்றெல்லாம் பார்த்தால்-
சிவாஜிதான், டிஎம்எஸ்தான். இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை!

சிவாஜி அளவுக்கும் டிஎம்எஸ் அளவுக்கும் உச்சரிப்புடன் கூடவே பாவமும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் நடிகரும் சரி, பாடகரும் சரி இன்னமும் யாரும் வரவில்லை. வரப்போவதுமில்லை.

சிவாஜியையும் இன்னும் சிலரையும் இங்கே திரும்பத் திரும்ப பேசுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இவர்களுக்குப் பின்னர் வந்த பலபேரை இதே அளவுக்கு உயர்த்திச் சொல்லுவதில்லையே என்பது ஒரு சிலரின் ஆதங்கமாகவும் இருக்கிறது. எழுபதுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அத்தனைக் கலைஞர்களுமே சுயமாக வந்தவர்கள். அவர்கள் அத்தனைப்பேருமே மூலத்தை எடுத்துக்கொண்டு தொழில் புரிந்தவர்கள். மூலத்திலிருந்து பிரிந்துவரும் இழைகளைக் கொண்டுதான் அவர்கள் தங்கள் கலையம்சங்களை வெளிப்படுத்தினார்கள். எழுபதுக்குப் பிறகு காலம் மாறிவிட்டது. விஞ்ஞானத்துடன் கூடிய மாபெரும் தொழில் புரட்சி திரைபடத்துறையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

ஆயிரக்கணக்கான ‘மாதிரிகள்’ ஒவ்வொன்றிலும் இங்கே வந்து குவிய ஆரம்பித்துவிட்டன. ஆயிரக்கணக்கான ஆடல்கள், பாடல்கள், நடனங்கள், காட்சி அமைப்புக்கள், சண்டைக்காட்சிகள் எல்லாமே கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இசைத்துறையை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் குறிப்பிட்ட ஆங்கிலப் படங்கள், குறிப்பிட்ட ஆங்கிலப் பாடல்கள் என்று மட்டுமே வந்துகொண்டிருந்த நிலைமை மாறி எப்போது டேப் ரிகார்டர் நுழைந்ததோ லட்சக்கணக்கான பாடல்கள் இசைத்துறையை நிரப்ப ஆரம்பித்தன. யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டு  வருடத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ மட்டுமே பாடல்களிலும் இசைக்கோர்ப்புகளிலும் மாறுதல்கள் செய்துகொண்டிருந்த இசையமைப்பாளர்களுக்கு அடித்தது யோகம். காலையில் ஒரு காசெட், மாலையில் ஒரு காசெட் என்று வந்து புதிது புதிதாய் ‘இசை அமைக்க’ யோசனை தந்தது. புதிய புதிய வாத்தியங்கள் சிங்கப்பூர் மார்க்கெட்டிலேயே கடை விரிக்கப்பட்டன. இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர் சிலர். அந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு எல்லாமே புதிது. இவரல்லவோ நம் ஆதர்சம், இவரல்லவோ நம் மீட்பர் என்று கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

சிவாஜியை எடுத்துக்கொண்டால் அந்தக் கலைஞன் புதிது புதிதாய் யோசித்து குறைந்த பட்சம் ஒரு அறுபது எழுபது பாத்திரங்களையாவது புதிதாகச் செய்திருப்பார். வ.உ.சியாக நடிக்க அவருக்கு அதற்கு முன்பு ‘மாதிரி பார்த்துக்கொள்ள’ எந்தப் படமும் கிடையாது. கட்டபொம்மனாக நடிக்க ‘மாதிரி பார்க்க’ படம் கிடையாது. சிவபெருமானும் தருமியும் பேசிக்கொள்ளும் காட்சியை எந்தப் படத்தைப் பார்த்து நடித்திருப்பார்? பராசக்தி, மனோகரா, திரும்பிப்பார் வசனங்கள் பேச எந்தப் படம் பார்த்துக் கற்றுக்கொண்டிருப்பார்? கணவனாக, அண்ணனாக, தம்பியாக, வேலைக்காரனாக, மேனேஜராக, நண்பனாக இன்னும் என்னென்னவோ வேடங்கள் முதன்முதலாக அவர் செய்துவைத்துவிட்டுப் போனவையாக இருக்கின்றன. இவை அத்தனையும் இயக்குநர், கதாசிரியர், நடிகர் என்ற கூட்டு முயற்சியில் வெளிப்பட்ட  கலைவடிவங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது..

ஆனால் இவருக்குப் பின் வந்தவர்களுடைய படங்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு ‘மாதிரி பார்த்துக்கொள்ள’ (reference-க்கு)சிவாஜியின் படங்களேகூட வேண்டிய அளவு இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சிடிக்கள் கிடைக்கின்றன.. அதைப் பார்த்து பண்ணவேண்டியதுதான். அல்லது அவற்றைப் பார்த்துவிட்டு அதிலிருந்து எந்தெந்த வகையில் மாறுதல் செய்துகொள்ளலாம் என்று பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

அதிலும் சிவாஜி காலத்திலெல்லாம் ஒரு காட்சி நன்றாக வந்திருக்கிறதா அதனை அப்படியே விட்டுவிடலாமா இல்லை மாற்றிச் செய்யலாமா என்றெல்லாம் சரிபார்த்துக்கொண்டு செய்வதற்கான வசதியெல்லாம் இருக்கவில்லை. மூவியாலாவில் போட்டுப் பார்த்தபிறகுதான் தெரியவரும். இப்போது அப்படியல்ல. ஒரு காட்சி எடுத்தவுடன் அப்போதே ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டியது. சரியாக வரவில்லையா திருப்பி எடுக்கவேண்டியது. இம்மாதிரி எத்தனைதடவை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டே இருக்கலாம். அதனால் இன்றைய நடிகர்களை சிவாஜியோடெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பதே அயோக்கியத்தனம்.
ஒன்றை நினைத்துப் பாருங்கள்.

ஒரு சாதாரண தோசையோ இட்லியோ வீட்டில் செய்யவேண்டுமென்றால்கூட அரிசியைப் புடைத்து, கல்பொறுக்கி, களைந்து, ஊறவைத்து, மாவாட்டி இரவு பூராவும் புளிக்கவைத்து காலை எழுந்து தோசையோ இட்லியோ செய்து கொடுத்தவர்களின் உழைப்பையும் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் யோசித்துப் பாருங்கள். தற்சமயம் இன்ஸ்டண்ட் மாவு கிடைக்கிறதே அதை அப்படியே தோசைக்கல்லில் ஊற்றி எடுப்பவரையும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். அன்றைய கலைஞர்களின் உழைப்பும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் நிச்சயம் புரியும்.

டிஎம்எஸ் குரலிலுள்ள அருமை பெருமைகளை இங்கே விவரித்துச் சொல்லிக் கொண்டிருப்பது வீண்வேலை. இவரது குரலைக் கேட்டவுடன் எம்ஜிஆரையும் சிவாஜியையும் நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதக்கலையை அவர் மட்டுமே செய்தார் இல்லையா? அதுவே போதும். இனி எந்தவொரு பாடகரும் யாருக்கும் இதனைச் செய்யப்போவதுமில்லை. செய்யவும் முடியாது.

எந்தக் கலைஞனாயிருந்தாலும் புகழ் சரிவு ஏற்படவில்லையெனினும் ஆடிக்கொண்டிருக்கும் அரங்கத்தைவிட்டு இறங்கவேண்டிய தருணம் வந்தே தீரும்.

அது இந்த மகா கலைஞனுக்கும் வந்தது. நிறையப்பேர் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் டிஎம்எஸ் ஒதுக்கப்பட்டார் என்று சொல்லுவது தவறு.
அதற்கு முன்னாலேயே எம்எஸ்வி காலத்திலேயே அவரது சரிவு ஆரம்பமாகிவிட்டது. 

எம்எஸ்விக்கும் டிஎம்எஸ்ஸூக்கும் என்ன மனத்தாங்கலோ தெரியவில்லை. எம்எஸ்வியே இவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பித்தார். பி.சுசீலா இவருடன் டூயட் பாடுவதை விரும்பவில்லை, இவருடன் சேர்ந்து பாட மறுக்கிறார் என்று கூடச் சொல்லப்பட்டது. அதற்காகவே எஸ்பிபிக்கும் யேசுதாஸூக்குமான வாய்ப்புகள் அதிகமாயின. இதற்கெல்லாம் காரணம் என்னவென்பது தெரியவில்லை. ஆன்மிக பக்தரான டிஎம்எஸ் இதற்கு வேறு காரணங்கள் சொல்ல ஆரம்பித்தார். “நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு ஒரு தலை ராகம் படத்தில் பாடியதுதான். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று பாடினேன். அன்றுமுதல் என்னுடைய ராசி என்னைவிட்டு அகன்று போனது. அதாவது பரவாயில்லை. அதே படத்தில் ‘என் கதை முடியும் நேரமிது’ என்று நானே எனக்கு அறம் பாடிக்கொண்டேன். இந்தப் பாடல்தான் என்னுடைய திரை 
 வாழ்க்கையையே முடித்துவிட்டது” என்றார். அப்படியே  நம்பவும் செய்தார் அவர்.

பெங்களூரில் எழுபதுகளில் அப்போது இருந்த சுபாஷ்நகர் மைதானத்தில் நடந்த எக்ஸிபிஷனில் முதன்முதலாக அவருடைய இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது ஒரு ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டுபோய் ஆயிரக்கணக்கான மக்களிடையே நின்றபடியே அவருடைய கச்சேரியைக் கேட்டது நினைவிருக்கிறது. நான் ஆணையிட்டால் பாடலையும், உள்ளம் என்பது ஆமை பாடலையும் வழக்கம்போல் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் முகவரி நான்தான் என்பதுபோல் என்னென்னவோ சொல்லிவிட்டு அவர் பாடினார். ரேடியோவில் கேட்பதுபோல், அல்லது லவுட்ஸ்பீக்கரில் கேட்பதுபோல் இல்லையே என்ற எண்ணமும் ஏமாற்றமும்தான் அப்போது தோன்றியது.

அடுத்து லால்பாக்கில் நடைபெற்ற எம்எஸ்வியின் இசை நிகழ்ச்சியில் அவரை நேரில் பார்த்துப்பேசும் சந்தர்ப்பம் முதல்முறையாகக் கிடைத்தது. “நான் எங்க தம்பி பாடறேன்? என்னைப் பாட வைக்கிறதே அவன் முருகன்தானே” என்று மேலே கைகாட்டி ஜவ்வாது வாசனை மணக்கப்பேசினார் அவர்.

சிவகுமார் வீட்டுத் திருமணங்கள் அத்தனையிலும் நீண்ட நேரத்துக்கு வந்திருந்து செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தார் என்பதால் சூர்யா கார்த்தி அவர்களது தங்கை என மூன்று திருமணங்களிலுமே அவரிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. கடைசியாய் கார்த்தி திருமண வரவேற்புக்கு வந்திருந்தவரிடம் பேசுவதற்குக் கை கொடுத்தபோது அவர் கைகளிலிருந்த நடுக்கமும் குச்சிக் குச்சியாய் இருந்த விரல்களின் மெலிவும் மனதை நீண்ட நாட்களுக்கு என்னவோ செய்துகொண்டே இருந்தன………………………

இதோ பாடல்களின் அரசன் புறப்பட்டுவிட்டான். 


ஆயிரக்கணக்கான திரைஇசைப் பாடல்களை மட்டுமல்ல என்றைக்குமே மறக்கமுடியாத சில முருகனின் பாடல்களையும் விட்டுவிட்டு! அந்த வசீகரமும் கம்பீரமும் கலந்த குரலில் ஒட்டப்பட்டுள்ள வெள்ளிச்சரிகையின் பளீரென்ற ஒளிமட்டும் என்றைக்குமே மங்கப்போவதில்லை.

37 comments :

saicom said...

VERY GOOD ARTICLE

வவ்வால் said...

அமுதவன் சார்,

பலப்புதிய தகவல்களுடன் ,நல்ல நினைவேந்தல்!

தமிழ்த்திரையிசையில் டி.எம்.எஸ் என்றும் நினைவுக்கூறப்படுவார்!

ஆழ்ந்த இரங்கல்கள்.

வவ்வால் said...

ஹி..ஹி சிவாஜிக்கு கலர்ப்படம் போட்டுவிட்டு தங்கத்தலைவர் எம்சிஆருக்கு கருப்பு வெள்ளை படம் போட்ட நுண்ணரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்!

//திரைப்படத்தில் சிறந்த நடனம் என்றால் இவர்களுக்கு அனுஷ்காவையும் அசினையும்தான் தெரிந்திருக்கிறது. பத்மினியையும் வைஜயந்திமாலாவையும் தெரியுமா என்று கேட்டால் கோபம் வருகிறது.//

ஹி..ஹி இந்த இடத்தில் ஒரு அசின் படம் போட்டிருக்கலாம்!

சாதுர்யம் பேசாதடி ..என் சலங்கைக்கு பதில் சொல்லடி டான்ஸ் எல்லாம் இப்பவும் அசத்துது தான்,ஆனா அதுக்குனு வைஜெயந்திமாலா,பத்மினி படமெல்லாம் போட்டு பதிவெழுத சொல்லிடாதிங்க அவ்வ்.

Amudhavan said...

நன்றி saicom.

Amudhavan said...

ஆமாம் வவ்வால். சொன்னால் புதிய தகவல்கள் ஏதாவது இருந்தால் சொல்லணும். அல்லது சரியான வாதங்களையாவது எடுத்து வைக்கணும். இது இரண்டும் இல்லாமல் சும்மா பதிவு எதுவும் எழுதறது வீண் என்பது என்னுடைய கொள்கை.

Amudhavan said...

அடட, இதில் அரசியலோ அல்லது நுண்ணரசியலோ இரண்டுமே கிடையாது. எம்ஜிஆரின் இளவயதுப் படம் தேடினால் சரியான படம் கூகிளில் கிடைக்கவில்லை. தொப்பி கறுப்புக்கண்ணாடி படங்கள்தாம் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இருக்கின்ற கலர்ப்படங்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளுகிற மாதிரி இல்லை. அதனால்தான் இந்தப் படம் போட்டேன்.
நீங்கள் அசினைப் பொறுத்தவரை எப்படி என்பதுபற்றி சமீபத்தில் உங்கள் ராசநட கூடச்சொல்லியிருந்தார். அசின் படங்களை நீங்கள் குத்தகைக்கு எடுத்திருப்பதால் உங்கள் உரிமையில் தலையிட நான் விரும்பவில்லை.

Anonymous said...

நீங்கள் உங்கள் காலத்திலேயே நிற்க ஆசைப்படுபவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். திண்டுக்கல் மலைப்பிரதேசங்களில் ஊடுருவிச் சென்ற நீங்கள் பார்த்த மக்கள் முன்னேற்றமில்லாமல் அப்படியே நின்று விட்டது அவர்களது பரிதாபம்.அதனை நீங்கள் ஏன் தூக்கி பிடிக்கிறீர்கள்?
டி .எம்.எஸ் ஒரு சிறந்த பாடகர் என்பதில் எவ்விதத சந்தேகமுமில்லை.அவர் திரியுகத்திர்க்கு வருவதற்கு முக்கிய காரணம் திறமை மட்டுமில்லை.அவருடைய ஜாதிக்காரர்கள் சினிமாவில் அவரை கைதூக்கி விட்டனர் என்பதை அவரே சொல்லியிருக்கின்றார்.நட்கரணி நேபவர் வீட்டில் வேலை செய்ததாக வலையிலே உள்ளது.

பின்னணி பாடுவதென்பது அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் தெரிந்திராத காலத்தில் அவர் வந்தார்.சி.எஸ்.ஜெயராமன பாடுவதையே சிவாஜி பாடுவதாக சினிமா உலகிலேயே பேசப்பட்ட காலமும் இருந்தது.ஏன் சிவாஜியே தனக்கு ஜெயராமன் தவிர யாரும் பாடக் கூடாது என்று பிடிவாதம் பிடித்ததும் வரலாறு.

சிவாஜிக்கு ஏ.எம்.ராஜா தொடர்ந்து பாடியிருந்தால் , இன்று நாம் என்ன சொல்லுவோம் ? அவர் தான் இவருக்குப் பொருத்தம் என்று தானே பேசுவோம்.ஏ.எம்.ராஜாவை ஒதுக்கிய விஸ்வநாதன் வலிந்து P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களைப் [ மெய்யப்ப செட்டியாரின் விருப்பத்திற்கு மாறாக ] பயன்படுத்தியதை விஸ்வநாதனே பேட்டியில் சொல்லியிருக்கின்றார்.அதாவது செட்டியார் ஏ.எம்.ராஜாவை பாட வையுங்கள் என்று சொல்லியும் இவர்கள் ஸ்ரீனிவாசை பாட வைத்தார்கள்.இன்று என்ன பேசுகிறோம்," ஜெமினிக்கு ஸ்ரீநிவாஸ் தான் பொருத்தம் என்று "

இப்படியான் கருத்துக்கள் எல்லாம் வெறும் மாயையே தவிர இதில் எள்ளளவும் உணமியில்லை.எம்.ஜி.ஆருக்கு ஏஎம்.ராஜா பாடிய " மாசிலா உண்மைக்காதலே " , மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ " போன்ற பாடல்களைக் கேட்கும் போது மிகப் பொருத்தமாகவே உள்ளது.இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது.அது தான் உண்மை.
அதுமட்டுமல்ல டி.எம்.எஸ்.எல்லோருக்கும் ஏற்ப பாடுவார் என்பதிலும் உண்மை இல்லை.உண்மையை சொல்ல போனால் அவர் தன குரலிலேயே பாடிக்கொண்டிருந்தார்.சிலர் தான் அவரை பற்றிய பிம்பங்களை உருவாக்கினர்.

நினைந்து நினைந்து நெஞ்ச உருகுதே என்று சதாரம் படத்திலும் , காதல் கீதம் கேடுக்குமா என்று கொசும்சலங்கை படத்திலும் அவர் பாடிய பாடலகளுக்கு வாய் அசைத்தவர் ஜெமினி கணேசன்.ஆனால் ஜெமினிக்கு அவர் பாடியது மிக குறைவு என்பதால் நமக்கு பழக்கமில்லாமல் போய் விட்டது.அவர் சிவாஜிக்குக் ,எம்.ஜி.ஆருக்கு. அதிகம் பாடியதால் அவரால் தான் இருவரும் புகழ் பெற்றது என்பது மிக மிக அறியாமை.அந்த புகழ் பெற்ற இரு நடிகர்களுக்கு வேறு யாரும் பாடியிருந்தாலும் அவர்கள் புகழ் பெற்றிருப்பார்கள் சூதாடிகளின் ,குழுமனப்பானையுள்ளவர்கள் கையில் சினிமா இருந்ததால் இந்த விபரீதம் நடநதது.
எல்லாரும் தன பாட்டால் தான் முன்னுக்கு வந்தார்கள் என்பது ஓவராக இல்லையா ?
இந்த மனப்பால் குடித்த சிவாஜி கணேஷன் தனக்கு " கண்ணதாசன், செட்டியார் தான் வேணும்" என்றது அதன் விளைவே தான்.வாலி எழுதிய பாடலா கண்ணதாசன் எழுதிய பாடலா என்பதை பாடல்களை வைத்து கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.கற்பகம் படத்தில் வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்று எத்தனையோ பேர்கள் இன்றும் நினைக்கின்றார்கள்.விஸ்வநாதனே வாலி எழுதிய பாடலை ஞாபக மறதியில் , அவர் முன்னாலே , கண்ணதாசன் பாடல் என்று சொல்லியிருக்கின்றார்.
நீங்கள் சிவாஜி ரசிகனாக இருப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை.இந்த சிவாஜி கணேசன் தான் டி.எம்.எஸ் நடிக்க வந்த போது " அவனவன் , அவனது வேலையை பார்க்கவேண்டும் " என்று புலம்பிய ஜனநாயக வாதி.இதை கனடாவில் சொன்னவர் டி.எம்.எஸ் தான்!

ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு தனமி இருக்கிறது அவரை மிஞ்ச யாருக்கில்லை என்பதெல்லாம் பத்தாம் பசலித்தனம்.முகமது ரபியை பின்பற்றி பாடிய ஜேசுதாஸ் " அவரைப் போல யாரும் இனிமேல் பாட முடியாது " என்றார்.ஜேசுதாஸ் அவரை விட மிகச் சிறந்த பாடகர் என்பதை நாம் கண்டுள்ளோம்.

நீங்கள் உங்களுக்கு பிடித்த இடத்தில நிர்ப்பதால் உலகமே நிற்கிறது.நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
இளையராஜா வந்த பொது " இந்த தவில் கொம்பனி அதிக நாள் நிற்காது " என்று 1978 இல் இலங்கையில் சொன்னவர் நம் டி.எம்.எஸ் என்ற மாபெரும் பாடகர்.
சிவிஜி யார் யார் எல்லாம் காப்பி அடித்தார் என்பதயும் ஜி.ராமநாதனின் இசையை விகடன் எப்படி மட்டம் தட்டியது என்பதையும் இன்னொரு முறை எழுதுகிறேன்.

தாஸ்

Amudhavan said...

வாருங்கள் தாஸ் என்னென்னவோ நிறையச் சொல்லியிருக்கிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. சில விஷயங்கள் நான் எழுதியதையே திரும்பவும் சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் பதிவை எப்போதும்போல் முழுமையாகப் படிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துவிட்டு ஏதோ பதட்டத்தில் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
சௌந்தரராஜனுக்குப் பாடத்தெரியவில்லை என்கிறீர்களா, குரல் வளம் இல்லையென்கிறீர்களா, ஏ.எம்.ராஜா ஒருவர்தான் பாடகர் என்கிறீர்களா ஒன்றுமே புரியவில்லையே.(நீங்கள் ஏ.எம்.ராஜாவை வாழ்த்தியும் புகழ்ந்தும் ஏதாவது எழுதுகிறீர்கள் என்றால் என்னுடைய 'லைக்கை' இப்போதேயே போட்டுக்கொள்ளுங்கள்.) கண்ணதாசனுக்குப் பாட்டு எழுதத் தெரியாது. சிவாஜிக்கும் நடிப்பிற்கும் சம்பந்தமில்லை. விஸ்வநாதன் இசையமைப்பாளருக்கு லாயக்கில்லை. இதுதானே உங்கள் முடிவு?
எல்லாரும் சேர்ந்து இளையராஜாவுக்கு 'மட்டும்' ஒரு ஜே போடணும். அவ்வளவுதானே உங்கள் ஆசை?

Amudhavan said...

மேலே உள்ள கமெண்டில் ஒரு விஷயம் தவறிவிட்டது. நீங்கள் ஒரே இடத்தில் நிற்பவர் அல்ல என்பதை மறந்துவிட்டேன். உங்கள் 'கொள்கைப்படி' ஒரே இடத்தில் நிற்கக்கூடாது இல்லையா அதனால் இளையராஜாவின் எண்பதுகளில் நீங்கள் நிச்சயம் நின்றுகொண்டிருப்பதற்கு சான்ஸ் இல்லை. அதனால் அங்கிருந்து இந்நேரம் இறங்கி ஓடியே வந்துவிட்டிருப்பீர்கள். ரகுமான்,வித்யாசாகர்,ஹாரிஸ் ஜெயராஜ்,இமான் இவர்களையெல்லாம் கடந்து பிரகாஷ்குமார், தாஜ்நூர், அனிருத் என்று வந்திருப்பீர்கள். அதனால் அனிருத்துக்கு ஒரு ஜே போடுங்கள் என்று சொல்லலாமா?

வவ்வால் said...

அமுதவன் சார்,

// சொன்னால் புதிய தகவல்கள் ஏதாவது இருந்தால் சொல்லணும். அல்லது சரியான வாதங்களையாவது எடுத்து வைக்கணும். இது இரண்டும் இல்லாமல் சும்மா பதிவு எதுவும் எழுதறது வீண் என்பது என்னுடைய கொள்கை.//

ஆஹா இந்த விடயத்தில் நீங்க நம்மக்கட்சி, அதனால் தான் பல நேரங்களில் பதிவே போடாம சும்மா கிடப்பேன் ஹி...ஹி சும்மா இருப்பதே சுகம் :-))

# கூகிளிலேயே படம் கிடைக்கலையா ,என்னக்கொடுமை, எம்சிஆருக்குனு தனியா பல தளங்கள் இருக்கே.சொல்லியிருந்தா படங்களை தோண்டி எடுத்திருப்பேன், தங்க பஸ்பம் சாப்பிட்டு தகதகனு மின்னுவாரே தலைவரு :-))

# குத்தகைனு முடிவே பண்ணியாச்சா அவ்வ்!
----------

தாஸ் என்னமோ சொல்றார்,அவருக்கு என்ன வயித்துக்கடுப்போ :-))

Anonymous said...

அமுதவன் அவர்கட்கு ,

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்று விட்டதாலும், மக்கள் மத்தியில் ஈடு இணையற்ற பெரியதொரு பிம்பம் அவருக்கு ஏற்பட்டுவிட்டதாலும் அவருடைய இம்மாதிரியான குணங்கள் யாவும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. பல உண்மைகளை மக்கள் மத்தியில் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதில்லை. தேவையற்ற புனித பிம்பம் எம்ஜிஆரைச் சுற்றி நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கிறது.- அமுதவன்
இவ்வாறு எழுதும் நீங்கள் சிவாஜியை ஒரு உத்தமன் என்றா சொல்கிறீர்கள்.?

சிவாஜியின் மேன்மையைப் பற்றி மேம்போக்காகச் சொல்லி செல்கிறீர்கள்.எம்.ஜி.ஆர்எத்தனை குறையிருந்தாலும் தன்னை ஒரு சாதி வெறியன் என்று அடையாளம் காட்டவில்லை."நான் தேவன்டா " என்று பேசியதாக அறிந்தேன்.தஞ்சையில் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட மக்களின் கொலையில் இந்த தேவரய்யாவுக்கும் சமபந்தமிருந்ததை அழகாக மறைத்து விட்டார்கள்.
திருவிளையாடல் படத்தின் வெற்றி விழாவுக்கு நடிகர் நாகேசை கௌரவிக்கவில்லை என்பதில் மறைந்திருந்த கை சிவாஜினுடைதாகும்.என்ற நாகேஷ் மறைமுகமாக சொல்லியிருந்தார்.நாகேஷ் எம்ஜிஆரை விதந்து பலமுறை சொல்லியிருக்கின்றார்.
எம்.ஜி.ஆர் என்ற நடிகர் முதலமைச்சர் ஆன பொது கண்ணதாசனை அரசவைக்கவிஞன் ஆக்கியதால் அவருக்கு ஒரு நன்மை இல்லை.அவரிடம் யாசகம் பெற வேண்டிய நிலையில் எம்ஜிஆர் எப்போதும் இருந்ததில்லை.அவரை அரசவைக் கவிஞனாக்கியது எம்ஜிஆரின் பெருந்தன்மை.பழைய நட்பாக இருக்கலாம்.
பாடுகிறவன் எல்லாம் ஏன் நடிக்க வேண்டும் என்று தான் நடிக்க வந்த போது சிவாஜி சொன்னதாகவும் " அவன் சண்டாளன் " என்று டி.எம்.எஸ் கனடாவில் சொல்லியிருக்கின்றார்.

டிஎம்.எஸ் தான் தமிழை சரியாக உச்சரித்தார் என்பது ஒரு பக்கச் சார்பான கருத்து.பழயபாடலகள் நிறைய கேட்பவன் என்ற முறையில் சொல்கிறேன், அந்தக்கால பாடகர்கள் எல்லோரும் சரியான உச்சரிப்பில் தான் பாடியிருக்கின்றார்கள்.சீர்காழி அற்ப்புதமான உச்சரிப்பு.என்னைப்பொருத்த வரையில் கண்டசாலா ,ஜெயராமன் போன்றவர்களைத் தவிர அத்தனை பெரும் உச்சரிப்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.தனியே இவர் பாடுவது தான் சரியான் உச்சரிப்பு என்பது மிகை சொல்.

இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற சூதாட்டத்தில் நாலு பேர் நடத்திய தர்பாரை இளையராஜா கலைத்தார்.

நல்ல பாடகர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மறைந்து விட்டார்.இருந்தாலும் மனம் கலங்குகிறது.ஆனாலும் அவர் தன வாயாலேயே கேட்டார் என்பதும் நாம் கண்டவைதான்.இதனை நீங்களும் அழகாக எழுதியுள்ளீர்கள்.

நான் 80 பதில் நிற்பதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள், அத்துடன் தேவையில்லாமல் இளையராஜாவையும் சம்பந்தப்படுத்தியிருக்கின்றீர்கள்.இளையாராஜா இன்னமும் ஆட்டத்தில் தான் உள்ளார்.80 இல் மட்டுமல்ல்ல 90 , 2000 த்திலும் நல்ல பாடலகளைத் தந்து கொண்டிருக்கின்றார்.அவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம்.எப்போதல்ல இப்பவும் அவர் ராஜா தான்.
இன்னும் ஒரு பத்தாண்டு தாண்டியும் நவீனமாக அவரால் இசையமைக்க முடியும்.

தங்கள் எழுத்தாற்றலை வாழ்த்தி விடை பெறுகிறேன்.மீண்டும் சிந்திப்போம்.

நல்ல பதிவுக்கு நன்றி!
அன்பன் தாஸ்

Amudhavan said...

//தங்க பஸ்பம் சாப்பிட்டு தகதகனு மின்னுவாரே தலைவரு :-))//
அந்தத் தங்கபஸ்பம்தான் அளவு அதிகமாகப்போய் அவருடைய கிட்னியில் ஒரு லேயராகவே தங்கியிருந்தது என்றும் அவருடைய உடல்நலக்குறைவுக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் செய்தி எந்த அளவு நம்பகமானது என்று தெரியவில்லை.
எம்ஜிஆரின் இளமைக்காலப் படங்களுக்கு வேறு தளங்கள் சென்று தேடணுமோ? அடுத்த தடவை செய்கிறேன்.
பதிவுகள் எழுதுவதில் நீங்களும் நம்ம கட்சிதான் என்பதை நினைத்து மகிழ்ச்சி வவ்வால்.

Amudhavan said...

//சிவாஜியை ஒரு உத்தமன் என்றா சொல்கிறீர்கள்.?//
ஆமாம் தாஸ். அவருடைய காலத்தில் அவருடன் ஒப்பிடுபவரைக் காட்டிலும் இவர் பல விஷயங்களில் உத்தமன்தான்.

//பாடுகிறவன் எல்லாம் ஏன் நடிக்க வேண்டும் என்று தான் நடிக்க வந்த போது சிவாஜி சொன்னதாகவும்//
சிவாஜி அம்மாதிரியான கமெண்டுகள் நிறைய உதிர்ப்பார். பல கமெண்டுகள் நினைத்து நினைத்து ரசிக்கிற மாதிரியெல்லாம் இருக்கும்.பல கமெண்டுகள் மிகமிக ஷார்ப்பாக- 'சே, என்ன மனுஷன் இந்தாளு இப்படியெல்லாம் எப்படித்தோணுது' என்று வியக்கவைப்பதாய் இருக்கும். அவற்றையெல்லாம் தொகுத்து புத்தகமாகப் போடலாம் என்று யாராவது முன்வந்தார்களானால் சிறப்பாக இருக்கும்.(என்னிடமே ஒரு சிறு தொகுப்பு உண்டு) பல விஷயங்களிலும் வெறும் ஷார்ப்பான கமெண்ட் மட்டும்தான். நடவடிக்கைகள், உள்குத்து,பழிவாங்குவது,குழியில் தள்ளுவது,காலடியில் கம்பளியை உருவுவது அதுபோன்றெல்லாம் எதுவும் இருக்காது.(இதெல்லாம் தங்கத்தலைவருக்கு மட்டுமே உரியவை) இவர் பாட்டுக்கு ஏதாவது சுரீரென்று சொல்லிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கப்போய்விடுவார்.

//தஞ்சையில் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட மக்களின் கொலையில் இந்த தேவரய்யாவுக்கும் சமபந்தமிருந்ததை//
அந்தக் கொலைச்சதியில் ஈடுபட்ட அந்த மிராசுதார் சிவாஜிக்கும் நண்பர் என்று மட்டுமே ஒரு செய்தியுண்டு. அவர் மட்டுமல்ல, தஞ்சாவூரிலிருந்த அத்தனை மிராசுதார்களுமே அன்றைய நிலையில் சிவாஜியிடம் வலியப்போய் நண்பர்களாகப் பழகியவர்கள்தாம். தஞ்சையில் மட்டுமல்ல கோவை திருச்சி போன்ற பெரிய நகரங்களின் 'ஆகப்பெரும் பணக்காரர்கள்' எல்லாருமே சிவாஜி எம்ஜிஆர் போன்றவர்களிடம் பழகுவதையும் அவர்கள் வீட்டிற்கு இவர்களை வரவைப்பதையும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தானே கருதி நடந்தார்கள். அப்படிக்கிடக்க, நீங்கள் பாட்டுக்கு வினவு தளம் படித்துவிட்டு இப்படி எதையாவது சொல்லிவைக்க சிவாஜி குடும்பத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் எதுவும் வந்துவிடப்போகிறது- எச்சரிக்கை.

//அந்தக்கால பாடகர்கள் எல்லோரும் சரியான உச்சரிப்பில் தான் பாடியிருக்கின்றார்கள்.சீர்காழி அற்ப்புதமான உச்சரிப்பு.//
தாஸ், இதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் என்னுடைய பதிவை சரியாகவோ முழுமையாகவோ படிக்கவில்லை என்று. இதுபற்றியெல்லாம் நான் பதிவிலேயே எழுதியிருக்கிறேன். மீண்டும் படியுங்கள்.
//இன்னும் ஒரு பத்தாண்டு தாண்டியும் நவீனமாக அவரால் இசையமைக்க முடியும்.//
இன்னும் பத்தாண்டுகள் கழித்து நவீனமாக இசையமைக்க ராஜாவால் முடியட்டும். இன்றைக்கே 'நாளைய இசையை' அமைத்துக்கொண்டிருக்கும் ரகுமான் போன்றவர்களைத் தாண்டி இவரால் 'நவீனத்தில்' ஏதாவது செய்யமுடியுமா என்பது கேள்வி. இந்த 'நவீனத்தை' விட்டுவிட்டு இனிமையாக இசையமைக்க முடியுமா என்பதை மட்டும் அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

காரிகன் said...

அமுதவன் அவர்களுக்கு,
டி எம் எஸ் சின் சிறப்பை சொல்வது வானவில்லை விவரிப்பது போன்றது. உங்கள் பதிவில் பல நிகழ்சிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்.வழக்கமான இரங்கல் பதிவாக இல்லாமல் சிலரை வாழ்த்தியும் சிலரை காய்ச்சியும் எழுதி உருவாக்கப்பட்ட சில பிம்பங்களை முடிந்த அளவு உடைத்திருக்கிறீர்கள். சாதித்த மேதைகளைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்ற எண்ணவோட்டதுடன் பலர் இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இசையின் வேறுபட்ட பரிமாணங்களை உள்வாங்கிகொள்ளாமல் இளையராஜா எஸ் பி பி ஜானகி என்று இசையின் விஸ்தாரத்தை ஒரு கை அளவுக்கு சுருக்கிக்கொண்டு புதிராக மதிகெட்ட சிந்தனைகளை கடைவிரிக்கிறார்கள். நண்டுகளால் நேராக நடக்கவே முடியாது.

Anonymous said...

அமுதவன் அவர்களே .

ரகுமான் இசையில் என்ன புதுமை செய்கிறார் என்பதை விளக்குவீர்களா?வெட்டி ஓட்டுவது புதுமையா ?அதைவிட அவரது மருமகன் திறமையாக் ஒட்டிக்கொண்டிருக்கின்றார்.
சிவாஜி ரசிகன் நீங்கள்.நான் எம்ஜிஆர் ரசிகன் அல்ல என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
கண்ணதாசன் பற்றி ஏதோ எழுதினீர்கள்.ஏதோ எம்ஜிஆர் அவரை நம்பி தான் இருந்தார் என்று?

எம்ஜிஆர் தான் தமிழ் சினிமாவின் என்றைக்குமான் சுப்பர் ஸ்டார்.சிவாஜி ஓவர் அக்டிங் .எங்கும் எடுபடாது.சும்மா நாங்களே பிதற்ற வேண்டியது தான்!

//இன்னும் ஒரு பத்தாண்டு தாண்டியும் நவீனமாக அவரால் இசையமைக்க முடியும்.//
இனிமையாகவும் இசையமைக்க முடியும்.
ஒளியிலே தெரிவது தேவதையா - அழகி
இசையில் தொடங்குதம்மா - ஹேராம்
எனக்கு பிடித்த பாடல் - ஜூலி கணபதி
பிறையே பிறையே - பிதாமகன்
உன்னைவிட இந்த உலகத்தில் - விருமாண்டி

நீங்கள் நிஜ உலகத்திற்கு வர வேண்டுகிறேன்.
கப்பலோட்டிய தமிழன் பட இசையை நீங்கள் சொன்ன பத்திரிகைகள் சரியில்லை என்று எழுதினார்கள்.அது உண்மையா ? காலம் மண்ணுக்கு ஒவ்வாத இசையை புறம் தள்ளும்.

தாஸ்

காரிகன் said...

இளயராஜா தான் இன்னாருக்கு இன்னார்தான் பாடவேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்தார் என்பது உண்மை அல்ல. சொல்லப்போனால் அவர் எல்லா ஹீரோக்களுக்கும் ஒரே பாடகரையே பாடவைத்தார். ஆண் என்றால் எஸ் பி பி பெண் என்றால் எஸ் ஜானகி. இதைத் தவிர ஜென்சி, எஸ் ஷைலஜா போன்ற சில "அற்புதமான" குரல்களை தமிழுக்கு இறக்குமதி செய்தார். எஸ் பி பி யுடன் வாட்டு வந்த போது மனோவை அறிமுகம் செய்தார்.டி எம் எஸ் சை ஓரம் கட்ட மலேசியா வாசுதேவனை பயன் படுத்திகொண்டார். எல் ஆர் ஈஸ்வரியை தன் இசையில் பாட வைக்காமல் புதுமை செய்தார்.சித்ரா போன்ற வகையறாக்களின் குரல்களை கேட்க வேண்டிய நிலைக்கு தமிழர்களை தள்ளினார். இன்னும் அவர் ஆட்டத்தில் இருப்பதாக சொல்வது உண்மைதான்---அதாவது எண்ணிக்கையில். நல்ல இசை என்ற ரீதியில் பார்த்தால் இளயராஜாவின் காலம் எண்பதுகளின் மத்தியிலேயே முடிந்துவிட்டது . அதன் பின் அவர் கொடுத்ததெல்லாம் அவரின் தரத்திற்கே ஈடு இல்லை. இளையராஜாவின் நவீன இசையை கேட்க இளையதலைமுறை தயாராக இல்லை என்ற உண்மை சிலருக்கு ஜீரணிக்கமுடியாத அளவுக்கு கசக்கிறது. அவரின் இந்த இருபது வருட இசைத் தொண்டே போதும்.

Amudhavan said...

//டிஎம்.எஸ் தான் தமிழை சரியாக உச்சரித்தார் என்பது ஒரு பக்கச் சார்பான கருத்து//

//தனியே இவர் பாடுவது தான் சரியான் உச்சரிப்பு என்பது மிகை சொல்.//

//எம்.ஜி.ஆர் என்ற நடிகர் முதலமைச்சர் ஆன பொது கண்ணதாசனை அரசவைக்கவிஞன் ஆக்கியதால் அவருக்கு ஒரு நன்மை இல்லை.அவரிடம் யாசகம் பெற வேண்டிய நிலையில் எம்ஜிஆர் எப்போதும் இருந்ததில்லை.அவரை அரசவைக் கவிஞனாக்கியது எம்ஜிஆரின் பெருந்தன்மை.பழைய நட்பாக இருக்கலாம்.//

தாஸ், மேலேயுள்ள டிஎம்எஸ் பற்றிய உங்கள் கமெண்டுக்கு உங்கள் பாணியிலேயே உங்கள் fomulaவிலேயே பதிலளிக்க வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாமா?
'இளையராஜாதான் எம்எஸ்விக்குப் பிறகு சாதித்தார் என்பது ஒரு பக்கச் சார்பான கருத்து.'
'தனியே இவர்தான் நாட்டுப்புற இசையைத் திரைப்படங்கள் மூலம் பரப்பினார் என்பது மிகை சொல்.'

கண்ணதாசன் விஷயத்தில் பதறுகிறீர்கள். திரைப்படத்தில் இவர் பாட்டுக்கு இவர் வழியில் போகிறார், அவர் பாட்டுக்கு அவர் வழியில் போய்க்கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் நிலையிலேயே கண்ணதாசனை வேண்டாமென்கிறார்-ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்.
அப்படி இருக்கும்போது சகலவிதமான அதிகாரங்களும் கைக்கு வந்த நிலையில், தமிழ் நாட்டின் ஆட்சியையே பிடித்துவிட்ட நிலையில், கண்ணதாசனைத் 'தேடிச்சென்று'......... எம்ஜிஆர் சார்பாக முதலில் கவிஞரைத் தேடிச்சென்று சந்தித்தவர்களும், அதன்பிறகு எம்ஜிஆரே தேடிச்சென்று பேசிவிட்டு வந்ததும் ஏன் நடந்தது?
எம்ஜிஆருக்கு இதனால் ஒரு 'நன்மையும்' இல்லாதபோது எதற்காக எம்ஜிஆர் இந்த முடிவை எடுத்தார்?
அவ்வளவு சாதாரணமாக இம்மாதிரி முடிவுகளை எடுப்பவரா எம்ஜிஆர்?
இலக்கிய நோக்கம், பெருந்தன்மை,பழைய நட்பு என்றெல்லாம் பீலா விட்டுக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்குத் தெரியவில்லை என்றால் சரியானவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அவரிடம் யாசகம் பெறவேண்டிய நிலையில் எம்ஜிஆர் எப்போதும் இருந்ததில்லை என்பது உண்மைதான். 'யாசகம்' என்பது வெறும் பணம்தான் என்ற பொதுப்புத்தியுடன் பார்த்தால் இதற்கெல்லாம் எப்போதும் விடை கிடைக்காது.

Jayadev Das said...

\\தூக்குத்தூக்கி படத்திற்காக டிஎம்எஸ்ஸை அழைத்துப் பாடவைக்க முயன்றபோது மிக அதிகமான கோபத்துடன் அதனை எதிர்த்தவர் சிவாஜி கணேசன். “எதுக்கு? சிதம்பரம் ஜெயராமன் குரல் நல்லாத்தானே போய்கிட்டிருக்கு….எதுக்காக இப்ப புது ஆளைக் கொண்டுவந்து போட்டு குழப்பம் பண்றீங்க? அதெல்லாம் வேண்டாம். சிதம்பரம் ஜெயராமனே பாடட்டும்” என்றிருக்கிறார்.\\ சிவாஜி-TMS இந்த அளவுக்கு குரலுக்கும் பின்னணிக்கும் வேறெந்த நடிகருக்காவது ஒத்துப் போயிருக்கிறதா என்று தெரியவில்லை, சத்தியமா எம்ஜியாருக்கு இல்லை.

[சிவாஜி படங்களைப் பார்க்கும் போது அதை அவரேதான் பாடுகிறார் என்று சிறுவயதில் நினைத்து ஏமாந்ததுண்டு. பின்னர் வானொலியில் பாடியவர் TM சௌந்திர ராஜன் என்றதும், ஏன் சிவாஜிதானே பாடினார் எதற்காக வேறொருவர் பெயரைச் சொல்கிறார்கள் என்று குழம்பியதும் உண்டு. ]

Jayadev Das said...

\\
தேவையற்ற புனித பிம்பம் எம்ஜிஆரைச் சுற்றி நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கிறது.
\\

இவற்றைப் பார்க்கும்போது, மறைந்த நல்ல தலைவர்களைப் பற்றியும், இதுவும் வெறும் எழுத்தில் மட்டும்தானோ, அவர் எப்படி வாழ்ந்திருப்பாரோ என்ற சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியிருக்கிறது!!

Jayadev Das said...

மிகப் புகழ் பெற்ற காலத்திலும் TMS ஒரு பாடலுக்கு வாங்கியது 500 ரூபாய்தானாம். ஆச்சரியமாக இருந்தது.

Anonymous said...

காரிகன் !
நீங்கள் கொஞ்சமாவது இசையை தெரிந்து கொண்டு எழுத வேண்டுகிறேன்.நீங்கள் எல்லாம் தெரிந்த பண்டிதர் போல உளற வேண்டாம்.எல்.ஆர்.ஈஸ்வரி இளையராஜாவின் இசையில் பாடவில்லையா?

நல்ல காமடி தான் போ !
நீங்கள் இந்தியாவில் தானே இருக்கின்றீர்கள் நண்பரே?
நீங்கள் உங்களுக்குத் தெரியாத விசயங்களைப் பற்றி எழுதி உங்கள் மேதாவித்தனத்தை காண்பிப்பவர்.

"சித்ரா வகையறை " பாடகிகள் என்று எழுதுகிறீர்களே,உங்களுக்கு இசைஞானம் இல்லை என்றே எண்ணுகிறேன்.அல்லது அதன் ஒழுங்கான வரலாறு ,அதன் பரிமாணம் தெரியவில்லை என்றே எண்ணுகிறேன்.

வாழ்க நலமுடன்
தாஸ்

vasu devan said...

அமுதவன் சார்,

நான் புதிது. அற்புதமான கட்டுரை என்று ஒரு வரியில் சொல்ல முடியாதபடி அவ்வளவு அருமை. நடிகர் திலகத்தைப் பற்றி புரியாதவர்கள் பலர். அவரை முழுமையாகப் புரிந்தவர்கள் ஒரு சிலர். மனதாலும் யாருக்கும் தீங்கிழைக்காத அற்புத மாமனிதர் அவர். என்ன ஒன்று மனதில் உள்ளதை தாங்கள் கூறியபடி மறைக்காமல் கூறுவார். இது ஒன்று போதாதா அவரது பெயரை இழிவுபடுத்த.

நான் நேரிடையாக அவருடன் பழகியவன் என்ற முறையில் கூறுகிறேன். அப்படிப்பட்ட வெள்ளேந்தி மனிதரை எங்கு தேடினாலும் கிடைக்காது. தன் அருகில் இருந்த நாற்காலியில் சரிசமமாக மாணவப் பருவத்தில் இருந்த என்னை உட்காரவைத்து பெருமைப் படுத்தியவர் அவர். படிப்புக்கு அவ்வளவு மரியாதை தருவார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். கேமராவுக்குப் பின்னால் நடிப்பில் அவர் பூஜ்யம்.

வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பலர் கண்டபடி கதை கட்டுகிறார்கள். அந்த மாமனிதரைப் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. அந்த வரிசையில் நீங்கள் இல்லாதது மிக்க மகிழ்ச்சி.

Amudhavan said...

என்னங்க காரிகன் நீங்க வந்தாலேயே கச்சேரி களை கட்டிவிடுகிறது.
/
//இளயராஜா தான் இன்னாருக்கு இன்னார்தான் பாடவேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்தார் என்பது உண்மை அல்ல. சொல்லப்போனால் அவர் எல்லா ஹீரோக்களுக்கும் ஒரே பாடகரையே பாடவைத்தார். ஆண் என்றால் எஸ் பி பி பெண் என்றால் எஸ் ஜானகி. இதைத் தவிர ஜென்சி, எஸ் ஷைலஜா போன்ற சில "அற்புதமான" குரல்களை தமிழுக்கு இறக்குமதி செய்தார். எஸ் பி பி யுடன் வாட்டு வந்த போது மனோவை அறிமுகம் செய்தார்.டி எம் எஸ் சை ஓரம் கட்ட மலேசியா வாசுதேவனை பயன் படுத்திகொண்டார்.//
எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து ஒரே அதகளம் பண்ணிவிடுகிறீர்கள்.
எல்.ஆர்.ஈஸ்வரியை அவர் ஒரு பாடலோ இரண்டு பாடல்களோ பாடவைத்தார் என்று நினைவு.இரண்டுமே எடுபடவில்லை. எல்.ஆர்.ஈஸ்வரிக்கு ஏற்றமாதிரியான பாடலை அல்லது இசையை இவரால் தரமுடியாமல் போய்விட்டது. பேசாமல் சுத்தமான மெல்லிசையை அவருக்குத் தந்திருக்கலாம். பல நீட்டான மெல்லிசைப் பாடல்களை மிக அற்புதமாகப் பாடியிருக்கிறார் அவர். நம்முடைய லிஸ்டில் எல்.ஆர்.ஈஸ்வரியும் இருக்கட்டும் என்பதற்காக என்னத்தையோ போட்டுத்தர அந்தப் பாடலும் விலாசமற்றுப் போய்விட்டது.
இந்த ஒரு பாயிண்ட்டைப் பிடித்துக்கொண்டு தாஸ் வந்துவிடுவார் என்று நினைத்தேன். வந்தே விட்டார்.

காரிகன் said...

ஒரு டி வீ பேட்டியில் எல் ஆர் ஈஸ்வரி சொன்ன செய்தியை வைத்து நான் எழுதிய தவறான தகவலை(இளயராஜா இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாடவேயில்லை என்பது)திருவாளர் தாஸ் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. நல்லதொரு குடும்பம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. உப்பு பெறாத இந்த சங்கதிக்கே இப்படி கூச்சல் போடும் தாஸ் வகையறாக்கள் இணையத்தில் இளையராஜாவைப் பற்றி வரும் பொய்யான புகழ்ச்சிகளை ராஜாவை விமர்சிக்கும் என்னைப் போன்றவர்கள் அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மடத்தனமாக எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்?

எனக்கு இசை தெரியும் என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் நார்சிஸ்ட் வகையை சேர்ந்தவன் நான் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். நான் இளையராஜாவை மட்டும் கேட்பவன் இல்லை---சிலரைபோன்று. எனவேதான் என்னால் இளையராஜாவை விமர்சிக்க முடிகிறது. உங்களுக்கு பிடித்த ராஜாவையும் சித்ராவையும் எனக்கும் பிடிக்கவேண்டுமா என்ன? எஸ் ஜானகியையாவது ஒரு அளவில் ஏற்றுக்கொள்ளலாம். இளையராஜா ஒருவரே இசை அமைதுக்கொண்டிருந்த நேரத்தில் அவர் அறிமுகம் செய்த எல்லோரின் குரல்களையும் கேட்கும் துர்ப்பாக்கிய நிலைமை நமக்கு ஏற்பட்டது. அப்படி நிகழ்ந்த ஒரு விபத்தே சித்ரா,மனோ,போன்றவர்கள். ஏன் ராஜாவின் குரலே நம் இசை சீரழிவின் ஒரு குறியீடுதானே? ராஜாவின் குரலில் பாடல்களை கேட்கவேண்டி இருந்தது நாம் செய்த புண்ணியமா அல்லது பாவமா என்று பட்டிமன்றமே நடத்தலாமே?

நீங்கள் என்னதான் சங்கரதாஸ் சுவாமிகள், கே வீ மகாதேவன், சுதர்சனம், சுப்பையா நாயுடு, எம் எஸ் வி ராமாமூர்த்தி, என்று எழுதினாலும் அவர்களின் பாடல்களை உண்மையான ரசனையோடு கேட்கவில்லை என்பது உங்களின் ராஜா மோகத்திலே தெரிகிறது.இவர்களை கேட்டவர்கள்தானே ராஜாவை ஏற்றுக்கொண்டார்கள் என்றும்,ராஜா இவர்களை எல்லாம் வென்று விட்டார் என்றும் கன்னாபின்னா வென்று உணர்ச்சி காட்டியவரல்லவா நீங்கள்? இளையராஜாவைப் பற்றிய ஒரு மிகத் தப்பான ஒரு மாய பிம்பம் இங்கே இருக்கிறது. உங்களைப் போன்றவர்களுக்கு அது பெருமையாக இருக்கலாம். அதற்காக நான் எனக்கு தெரிந்ததை சொல்லாமல் இருக்க முடியுமா?

Amudhavan said...

வாருங்கள் ஜெயதேவ் தாஸ்,
//சிவாஜி-TMS இந்த அளவுக்கு குரலுக்கும் பின்னணிக்கும் வேறெந்த நடிகருக்காவது ஒத்துப் போயிருக்கிறதா என்று தெரியவில்லை, சத்தியமா எம்ஜியாருக்கு இல்லை.//
சிவாஜி அளவுக்கு டிஎம்எஸ்ஸின் குரல் வேறு யாருக்குமே பொருந்தவில்லை என்பது உண்மை. இதனை சிவாஜியே பல சமயங்களில் சொல்லியிருக்கிறார். என்னவொன்று, எம்ஜிஆருக்கும் பொருந்திப்போய்விட்டதாக மனரீதியாக நினைக்க ஆரம்பித்துவிட்டோம்.

//இவற்றைப் பார்க்கும்போது, மறைந்த நல்ல தலைவர்களைப் பற்றியும், இதுவும் வெறும் எழுத்தில் மட்டும்தானோ, அவர் எப்படி வாழ்ந்திருப்பாரோ என்ற சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியிருக்கிறது!! //
சகல விஷயங்களைப் பற்றியும் தேடிப்பிடித்து அவற்றில் மெய்ப்பொருள் பருப்பொருள் ஆய்ந்து அல்லது நீக்கி விவாதத்திற்கு வருகிறீர்கள் என்று நான் இணையத்தில் நினைத்திருக்கும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர்.
உங்களுக்கு எம்ஜிஆர் போன்ற மிக மிகப் பிரபலமானவர் பற்றிய செய்திகளில் ஒருபக்கச்சார்பான செய்திகள் மட்டுமே தெரிந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. எம்ஜிஆரின் மறுபுறம் பற்றிய உண்மையான செய்திகளே ஏராளமாக இருக்கின்றன.அவரைப் பற்றிய செய்திகள் அவர் கட்சி துவங்கி நடத்திய சமயத்தில்கூட பத்திரிகைகளில் விவாதப்பொருளாக விவாதிக்கப்பட்டுதான் வந்தன. என்றைக்கு ஆட்சியில் உட்கார்ந்தாரோ அன்றையிலிருந்து இதில் கொஞ்சம் மாறுதலான நிலைமை வந்தது. அவரது ஆட்சிக்காலத்தின் குளறுபடிகளை அன்றைய பத்திரிகைகள் குறிப்பாக ஜூனியர் விகடன் மிக அதிக விமர்சனத்திற்கு உட்படுத்தியது. இதன் பலனை அந்தப் பத்திரிகை அனுபவிக்க நேர்ந்தது.
சாதாரண ஒரு ஜோக்கிற்காக விகடன் ஆசிரியரைப் பிடித்து உள்ளே போட்டார் எம்ஜிஆர்.
அவரது ஆட்சிக்காலத்தில் திரவியம் என்ற தலைமைச் செயலாளரை அவர் நடத்திய விதம் குறித்தும் நிறைய செய்திகள் உண்டு.
பழி வாங்கும் போக்கிற்கு ஜெயலலிதா எல்லாம் அவர் முன்னிலையில் ஒன்றுமே இல்லை.
அவர் உயிரோடு இருந்தவரை அவரை அரசியலில் கருணாநிதியால் வெல்லமுடியவில்லை என்பார்கள். அவருடைய ஆட்சிக்காலத்தில் மிகவும் கெட்ட பெயர் ஏற்பட்டு அன்றைய பாராளுமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டு சீட்டுக்கள் பெற்றுத் தோற்றார்.
மறுபடி அவரது உடல்நலம் பாதிக்கப்பட அவருக்கு ஆதரவாக ஒரு மாபெரும் 'அனுதாபப் பேரலை' உருவாயிற்று...இந்தப் பேரலைக்குப் பின்னர் அவரைச் சுற்றி ஒரே புனித பிம்பம்தான்!
இது ஒரு புறமிருக்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அவர் எடுத்த அவதாரம் இன்றுவரை அவருடைய பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணகர்த்தா கலைஞர். ஈழ விவகாரத்தில் இவர் நடந்துகொண்ட விதமும் இவரது குளறுபடிகளும் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆதரவாக மாறிக்கொண்டிருப்பதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே.(நீங்கள் கலைஞருடைய அதி தீவிர எதிர்ப்பாளர் என்பதும் தெரியும்.)

Amudhavan said...



// மிகப் புகழ் பெற்ற காலத்திலும் TMS ஒரு பாடலுக்கு வாங்கியது 500 ரூபாய்தானாம். ஆச்சரியமாக இருந்தது.//
இது ரொம்பவும் பிற்பகுதியில் அல்ல; ஒரு ஏக்கர் ஐநூறு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த காலம்தான் அது.

Amudhavan said...

Fantastic Old Tamil mp3's........
//நான் புதிது. அற்புதமான கட்டுரை என்று ஒரு வரியில் சொல்ல முடியாதபடி அவ்வளவு அருமை. நடிகர் திலகத்தைப் பற்றி புரியாதவர்கள் பலர். அவரை முழுமையாகப் புரிந்தவர்கள் ஒரு சிலர். மனதாலும் யாருக்கும் தீங்கிழைக்காத அற்புத மாமனிதர் அவர். என்ன ஒன்று மனதில் உள்ளதை தாங்கள் கூறியபடி மறைக்காமல் கூறுவார். இது ஒன்று போதாதா அவரது பெயரை இழிவுபடுத்த.//

வாருங்கள் நண்பரே, உங்களைப் போன்றவர்கள் மனம் நெகிழ்ந்து சொல்லும் இதுபோன்ற வார்த்தைகளில்தான் எழுதியதற்கான நிறைவு கிடைக்கிறது. நடிகர் திலகத்தைப் பற்றி மோசமான கற்பிதங்களே இங்கு நிறைய பரப்பப் பட்டிருக்கின்றன.
இரண்டாவது, அவர் ஓவர் ஆக்டிங் பண்ணியவர்தானே என்று ஒற்றை வரியில் விமர்சித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போகும் அயோக்கியத்தனம்தான் பரவலாக இருக்கிறது. அவர் ஓவர் ஆக்டிங் செய்ய ஆரம்பித்ததே அவருடைய பிற்காலப் படங்களில்தான். அதற்கு முன்னால் தான் என்னென்ன செய்ய வேண்டுமோ அது அத்தனையையும் அவர் செய்துவிட்டார். பழைய கறுப்பு வெள்ளைப் படங்களின் பாடல்களைப் பார்த்தாலேயே பல பாட்டுக்களில் அவர் எவ்வித நடிப்பிலும் ஈடுபடாமல் சும்மாதான் இருப்பார்.

பிற்காலத்தில் நயாகரா போல் கொட்டித்தீர்த்த அந்த நடிப்பு இமயத்தின் நடிப்பை அணைகட்டித் தடுக்கத் தெரியாமல் அப்படியே பெருகி ஓட விட்டுவிட்டார்கள் அன்றைய இயக்குநர்கள்.
சிவாஜி பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய இயக்குநர்கள் சிவிராஜேந்திரன்,பி.மாதவன்,தேவராஜ் மோகன்,வின்சென்ட்,நடிகர்கள் சிவகுமார்,கமல்,நடிகை சரோஜாதேவி பத்திரிகை ஆசிரியர் வல்லபன், தினத்தந்தி பாண்டியன் ஆகியோர் மூலம் பெற்ற தகவல்களே ஏராளம் ஏராளம் இருக்கின்றன. இவர்களெல்லாம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் உருவாக்கிய பிம்பம்தான், சினிமாக்களும் பத்திரிகைகளும் உருவாக்கும் பிம்பத்தைத் தாண்டி என்னுடைய மனதில் அவரை மிக உயரத்திற்கு எழுப்பியிருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றைச் சொல்லலாம். நீங்களும் அவருடனான உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

Jayadev Das said...

\\அவருடைய ஆட்சிக்காலத்தில் மிகவும் கெட்ட பெயர் ஏற்பட்டு அன்றைய பாராளுமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டு சீட்டுக்கள் பெற்றுத் தோற்றார்.
மறுபடி அவரது உடல்நலம் பாதிக்கப்பட அவருக்கு ஆதரவாக ஒரு மாபெரும் 'அனுதாபப் பேரலை' உருவாயிற்று.\\

எம்ஜிஆர் இன்னொரு பக்கத்தை நாம் நேரடியாகவே பார்த்திருக்கிறோம் சார், ஆகையால் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அவரை தூக்கிப் பிடிப்பதை அவ்வப்போது காண நேரும்போது, முன்னர் வாழ்ந்த உண்மையில் நல்ல குணம் படைத்தவர்கள் மீதும் சந்தேகம் வருகிறது என்றுதான் சொன்னேன்.

இன்னொன்று இரண்டு சீட்டுகள் வாங்கித் தோற்றதற்கு காரணம் செல்வாக்கு இழந்ததால் அல்ல, மைத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் எம்ஜிஆர் அரசும் அமையட்டும் என்ற தமிழக மக்களின் அப்போதைய மன நிலையால் தான். இந்த முடிவை வைத்து கருணாநிதி இந்திராகாந்தியின் உதவியுடன் எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்த போதும், அடுத்த தேர்தலில் தனியாகவே காங்-தி.மு.க வை மண்ணை கவ்வ வைத்தார்.

எம்ஜிஆர் தனிப்பட்ட முறையில் எந்த அளவுக்கு நல்லவர் என்பது விவாதிக்க வேண்டிய விஷயம், ஆனால் அவர் எத்தனை வருடங்கள் இருந்திருந்தாலும் யாராலும் அவரை பதவியில் இருந்து இறக்கியிருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.

காரிகன் said...

இணையத்தில் கலக்கி வரும் திருவாளர் வவ்வால் இளையராஜாவைப் பற்றி ஒரு அட்டகாசமான பதிவை எழுதி இருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து ஒரு நியாயமான பதிவு இளையராஜாவைப் பற்றி என்பதில் நிம்மதி கொண்டேன். கண்டிப்பாக நீங்கள் இதை படிக்க வேண்டும்

http://vovalpaarvai.blogspot.in/

Amudhavan said...

வவ்வால் இளையராஜா பற்றி எழுதியிருக்கிறாரா, கண்டிப்பாகப் படிக்கிறேன் என்று இங்கே மறுமொழி போட்டுவிட்டுப் போய் படித்துவிட்டு வரலாம் என்று நினைத்தேனே தவிர உடனடியாகப் போய் படித்துவிட்டேன்.
வவ்வால் இணையத்தில் இருக்கும் பெரிய அறிவுஜீவிகளில் ஒருவர்.
அந்தக் காரணத்தினாலேயே பலபேரின் எதிர்ப்புக்கு அடிக்கடி ஆளாகிவருபவர். ஆழ்ந்த ஆய்வுடன் பதிவுகளையும் மிக வித்தியாசமான கோணத்தில் பின்னூட்டங்களையும் போட்டுத் தமக்கென தனிப்பாணி ஒன்றை உருவாக்கி வைத்திருப்பவர்.
இணையத்தில் நடக்கும் இளையராஜா பற்றிய புரட்டுக்கு பதில் சொல்ல வவ்வால் போன்றவர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

Anonymous said...

//தஞ்சையில் மட்டுமல்ல கோவை திருச்சி போன்ற பெரிய நகரங்களின் 'ஆகப்பெரும் பணக்காரர்கள்' எல்லாருமே சிவாஜி எம்ஜிஆர் போன்றவர்களிடம் பழகுவதையும் அவர்கள் வீட்டிற்கு இவர்களை வரவைப்பதையும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தானே கருதி நடந்தார்கள். //

உண்மை.

Anonymous said...

**“நான் எங்க தம்பி பாடறேன்? என்னைப் பாட வைக்கிறதே அவன் முருகன்தானே” என்று மேலே கைகாட்டி ஜவ்வாது வாசனை மணக்கப்பேசினார் அவர்.**

//
வெளியூர்களுக்குச் சென்று நடத்தும் இன்னிசைக் கச்சேரிகளிலும் அப்படித்தான் பேசுவார் டிஎம்எஸ். “எம்ஜிஆரையும் சிவாஜியையும் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பவன் இந்த டிஎம்எஸ்தான். இந்த டிஎம்எஸ்ஸின் குரலால்தான் அவர்கள் அறியப்படுகிறார்கள். அவர்களின் முகவரியே என்னுடைய குரல்தான்.” என்பார். இன்னும் ஒருபடி மேலே சென்று “எம்ஜிஆரும் சிவாஜியும் என்னால்தான் புகழ் பெற்றார்கள்” என்பார். இந்தத் தொனியில்தான் பேசுவார். //

அது வேற வாயி! இது நாற வாயி!

Unknown said...

excellant
=surya

Unknown said...

Hello Fantastic old Mp3..
I am one of your long time follower and looking forward to your shivaji posts..
pls restart.
-surya

Amudhavan said...

வாருங்கள் சூர்யா, தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
old Mp3 யின் சிவாஜி பற்றிய பதிவுகளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

manjoorraja said...

என்றோ எழுதிய இந்தப் பதிவை இன்று தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னூட்டங்களையும் படித்தேன். டிஎம் எஸ் தமிழுக்கு ஒரு கொடை என்றால் மிகை அல்ல. ஆனால் அதே நேரத்தில் அவர் தன் வாயால் தான் கெட்டார் என்பது ஒரு புறம் இருந்தாலும், புகழின் உச்சியில் இருக்கும் போது யாரையும் மதிக்காமல் ரொம்பவும் ஆடினார் என்பது தான் உண்மை அதனாலேயே ஒரு கட்டத்தில் அனைவருக்கும் அவர்மீது ஒரு வெறுப்பு வந்துவிட்டது. தொடர்ந்து இளையராசாவின் சகாப்தம் ஆரம்பித்ததும் பின் நடந்ததையும் நாம் நன்கறிவோம். சிங்காரவேலனே தேவா என்ற மிக அருமையான பாடலை பாடியும் பல வருடங்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமலே எஸ். ஜானகி அவர்கள் இருந்தார் என்பதும் இளையராஜா வந்தப் பிறகே அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் கிடைத்ததென்பதும் சரித்திரம். அதற்கு முன் பி.சுசிலா, எல்.ஆர் ஈஸ்வரி இருவருதாம் கோலொச்சினார்கள். பின் இளையராஜாவின் காலத்தில் எஸ்பிபி, மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, சித்ரா.இதற்கு பிறகே பல பாடகர்கள் வெளிச்சத்திற்கு வந்தனர். இதற்கு இளையராசா ஒரு காரணம் என்றாலும் ரகுமான் முக்கிய காரணம் என்பதை நாம் மறந்துவிடலாகது.
சிவாஜியின் காலத்திலும் பின் வந்த கமல் ரஜினி காலத்திலும்கூட சிவாஜியின் நடிப்பிற்கு இணையில்லாமல் தான் இருந்தது என்பதும் பரவலாக பலரும் சிவாஜியை காப்பியடித்தனர் என்பதும் உண்மை. முதல் மரியாதை, தாவணிக் கனவுகள் போன்ற ஒரு சில படங்களை தவிர்த்து அந்த சமயத்தில் வந்த மற்றப்படங்களில் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் வகையாகவே இருந்தது. அவரது பழையப் படங்களை போல இல்லை என்பதுன் உண்மை. எம்ஜியாரை பொருத்தவரை ஒரு கட்டத்தில் அதாவது ஆட்சியைப் பிடித்தப் பிறகு அவரை எதிர்த்தவர்களின் கதி அதோ கதி தான். அன்றைய எம். ஆர், ராதா, சந்திரபாபு முதல் இன்றைய பிரபல நடிகர் (கள்) வரை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது இன்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அன்று அவை பரவலாக பேசப்பட்டது தான். இளையராஜா டிஎம் எஸ்ஸை போலவே பிரபலமடைந்தவர் திறமைசாலி என்றாலும் இவருக்கும் தலைகனம் மிகவும் அதிகம் என்பதை அவரது பல பேச்சுகளின் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். எவ்வளவோ பகை இருந்தாலும் பொது நிகழ்ச்சியில் இவரும் வைரமுத்துவும் அருகருகே வெவ்வேறு பக்கத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததை உலகமே பார்த்ததை மறந்திருக்கமாட்டோம். இன்னும் அது புகைந்துக்கொண்டுதான் இருக்கிறது. வைரமுத்துவைப் பற்றி இங்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவரைப் பற்றி உங்களுக்கு அதிகமாகவே தெரிந்திருக்கும்.
நிற்க இப்போதைய இசையமைப்பாளார்கள், பாடகர்கள் திறமைசாலிகள் அல்ல என்று சொல்வது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. அந்த காலத்தில் எம் எஸ் வியும் பல பாடல்களை காப்பியடித்திருக்கிறார். நவீனம் புகுந்துவிட்ட இந்த சூழ்நிலையில் உலக இசையின் பாதிப்பு எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. திறமை வாய்ந்தவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பிருக்கத்தான் செய்கிறது. அந்த காலத்தில் இசையமைப்பாளர்கள் குறிப்பிட்ட பாடகர்கள், பாடலாசிரியர்கள் தவிர்த்து வேறு யாருக்குமே பாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது தான் உண்மையே தவிர திறமையான பாடகர்கள் பாடலாசிரியர்கள் அப்போதும் இருந்தார்கள் என்பதே கசப்பான உண்மை. ஆனால் தற்போது அப்படியில்லை புதியவர்களுக்கும் திறமைசாலிகளுக்கும் மிகவும் பரவலாக வாய்ப்புகள் கிடைக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்க அம்சம்.

கண்ணதாசனின் பாடல்களையும், டி எம் எஸ் அவர்களின் குரலையும், இளையராஜாவின் இசையையும், சிவாஜியின் நடிப்பையும், எம்ஜியாரின் சில பல நற்காரியங்களையும், மற்றவர்களின் திறமையயும் நாம் பாராட்டுவோம். அவர்களின் மறுப்பக்கத்தை தோண்டவேண்டிய அவசியம் இல்லை. மறந்துவிடுவோம். நன்றி.

Amudhavan said...

மஞ்சூர் ராஜா தங்களின் வருகைக்கு நன்றி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவுக்கான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். எல்லாமும் சரியாகத்தான் இருக்கிறது. எஸ்.ஜானகி பற்றி 'சிங்காரவேலனே தேவா போன்ற புகழ்மிக்க பாடலைப் பாடியிருந்தபோதிலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் பல வருடங்கள் இருந்தார்' என்பதுபோன்று சொல்லியிருக்கிறீர்கள். அதனை நாம் அப்படிப் புரிந்துகொள்ளக் கூடாது. தமிழில் அவ்வளவாகப் பாடாமல் இருந்த அந்தக் காலங்களில் எல்லாம் கன்னடத்தில் அவர்தான் நம்பர் ஒன். அதேபோல தெலுங்கில், மலையாளத்தில் என்று 'முன்னணியிலிருந்த பின்னணிப் பாடகி'யாகத்தான் அவர் இருந்தார். தமிழில் பி.சுசீலாவின் ஆதிக்கம் அப்போது இருந்தது. கன்னடத்தில் ஜி.கே. வெங்கடேஷ் முன்னணியிலிருந்த இசையமைப்பாளராக இருந்ததால் முக்கால்வாசிப் பாடல்களை எஸ்.ஜானகிதான் பாடுவார் என்பதையும்- ஜி.கே.வெங்கடேஷுக்கு இளையராஜாதான் உதவியாளராக இருந்தார் என்பதையும் சேர்த்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் எஸ்.ஜானகிக்கும் இளையராஜாவுக்கும் ஒரு தொழில்முறை புரிதல் அப்போதே இருந்தது.
இளையராஜா தமிழில் கோலோச்ச ஆரம்பித்ததும், பி.சுசீலாவையும் டிஎம்எஸ்ஸையும் தவிர்த்துத் தனக்கென்று ஒரு 'டீமைக்' கொண்டுவரவேண்டும் என்று நினைத்தபோது அவர் சுலபமாக ஜானகியையும் எஸ்பிபியையும் பயன்படுத்திக்கொண்டார்.
ஜானகி கன்னடம் உட்பட மற்ற மொழிகளைக் குறைத்துக்கொண்டு தமிழுக்குத் தம்முடைய தொழிலை மடைமாற்றிக்கொண்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.ஆகவே எஸ்.ஜானகியின் ஆதிக்கம் தமிழுக்கு வந்துவிட்டது.
இப்போது திறமையானவர்கள் யாருமே இல்லை என்று சொல்லவரவில்லை. ஆனால் சில திறமைகளுக்கு ஈடு இணையில்லை என்பதைச் சொல்லவேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம்.
இன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் காமராஜரைப் போன்று ஒரு தலைவர் இல்லை என்று சொல்லக்கூடாதா என்ன!

Post a Comment