Sunday, February 16, 2014

பாலுமகேந்திரா எதற்காக அப்படி ஓடினார்?



பாலுமகேந்திராவைப் பற்றி எப்போது நினைத்தாலும் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவின்போது ஒவ்வொரு படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு முதல் ஆளாக வெளிவந்து எங்கேயோ வெகு அவசரமாக ஓடுவார். அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் இருக்கிறது. அது சாதாரண அவசரமாக இருக்காது. அடித்துப் பிடித்து ஓடுவதுபோல் இருக்கும். எங்கே ஓடுகிறார் என்பது தெரியாது. ஆனால் ஓடுவார்.

கொஞ்சம் தாட்டியான உடம்பு. தலையில் தொப்பி. (ஆமாம் அந்தக் காலத்திலேயே தொப்பிதான்) தோளில் ஒரு நீண்ட ஜோல்னாப்பை சகிதம் தியேட்டரை விட்டு வெளியில் போய்விடுவார். எங்கே போகிறார் என்பது தெரியாது.

அது சர்வதேச திரைப்பட விழா என்பதால் திரையுலகின் சாதனையாளர்கள் ஏகமாய் குவிந்து இரைந்து கிடப்பார்கள். படங்களைப் பற்றிய விமரிசனங்கள், புதியவர்களின் அறிமுகங்கள் என்று ஒருவரையொருவர் சந்தித்துப் பேசுகின்ற வாய்ப்பு அங்கே கிடைக்கும்.பாலுமகேந்திரா அங்கெல்லாம் நின்று பேசிக்கொண்டிருந்ததாக ஞாபகமில்லை. சில முக்கியமான படங்களின் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் சந்திப்பு நட்சத்திர ஓட்டலான அசோகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சில வேளைகளில் அந்தச் சந்திப்புகளில் பாலுமகேந்திராவின் முகம் தெரியும். சிறிது நேரம்தான்……பிறகு பார்க்கலாம் என்று பார்த்தால் ஆள் இருக்கமாட்டார்.

அவரிடம் எனக்கு நல்ல பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு  ஏழெட்டு தடவைகள் சந்தித்திருக்கிறேன் என்ற அளவுக்குத்தான் தெரியும். ஃபிலிம் ஃபெஸ்டிவலில் மலையாளப் படங்களின் ஒளிப்பதிவாளர், குறிப்பாக நெல்லு படத்தின் ஒளிப்பதிவாளர்  என்ற முத்திரை அவருக்கு இருந்தது. புகழ்பெற்ற சங்கராபரணமெல்லாம் பின்னால் வந்த படங்கள்…….

ஒரு படம் முடிந்து   அடுத்த படம் துவங்குவதற்கு இருந்த இடைவேளையில் நான், பத்திரிகையாளரும் கவிஞருமான எம்.ஜி.வல்லபன் மற்றும் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அதே அவசரத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தார் பாலுமகேந்திரா. “சார் வாங்க.. என்ன கிடைக்கவே மாட்டேன்றீங்க. அவசரமா எங்கேயோ ஓடிர்றீங்க. ஒரு காபி சாப்பிடலாம் இருங்க” என்று வல்லபன் சொன்னபோது “பேசிட்டிருங்க வல்லபன். கொஞ்சம் வேலையிருக்கு. இதோ வந்திர்றேன்” என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருந்தார் அவர்.

அவர் போனதும், “சார் நாளைக்கி நமக்கு இதான் சார் வேலை. அவரு எங்கே இப்படி ஓடுறார்னு கண்டுபிடிக்கணும்” என்று சொல்லிவிட்டார் வல்லபன்.

அதேபோல மறுநாள் முதல்காட்சி முடிந்து அவசர அவசரமாக பாலுமகேந்திரா கிளம்பியதும் நான், வல்லபன், மற்றும் இன்னொரு பத்திரிகை நண்பர் மூன்றுபேரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றோம்.

வேகமாகச் சென்ற அவர் மெஜஸ்டிக்கின் பிரதான சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போனார். குப்தா மார்க்கெட் என்ற பகுதி அது. அந்தக் காம்பவுண்டிற்குள் நுழைந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த போஸ்ட் பாக்சின் அருகில் சென்று நின்றார்.

தமது ஜோல்னாப் பையைத் திறந்து கத்தையாக இன்லண்ட் லெட்டர்களை எடுத்து அதிலிருந்து ஒன்றை உருவிக்கொண்டார்.

ஒரு நோட்டுப் புத்தகத்தை அடியில் கொடுத்து அந்தப் பெட்டியின் மீது வைத்து மளமளவென்று எழுத ஆரம்பித்தார்.

நாங்கள் மூன்று பேரும் எதிர்புறத்தில் இருந்த கடையின் நிழலில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தோம். வேகமாக எழுதியவர் கடிதத்தை முடித்து நாக்கில் ஈரப்படுத்தி அதை ஒட்டி அந்தத் தபால் பெட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்தார்.

இப்போது அவர் முகம் ஆசுவாசப்பட்டதுபோல், தமது கடமையை முடித்துவிட்ட திருப்தியில் இருந்ததுபோல் இருந்தது. பிறகு சாவதானமாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு மதிய உணவுக்காக பக்கத்திலிருந்த ஓட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினார் அவர்.

‘பிலிம்பெஸ்டிவல் பற்றிக் கவர் பண்றதுக்காக ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிகையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம். அதான் ஒவ்வொரு படம் முடிந்தவுடனும் அது பற்றிய விவரங்களை உடனுக்குடன் எழுதி அனுப்பிடறார். நாம எல்லாம் குறிப்பு எடுத்து வச்சுக்கிட்டு ஓட்டல்ல போய் உட்கார்ந்து எழுதுவோம். அவர் பாருங்க உடனடியா எழுதி அனுப்பிடறார்’ என்று காரணம் சொன்னார் வல்லபன். அப்படித்தான் இருக்கும்போலும் என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டோம்.

அதன்பிறகு படம் முடிந்ததும் அவர் அவசரமாக ஓடியபோதெல்லாம் கடிதமெழுதத்தான் ஓடுகிறார் என்பது புரிந்தது. அவரும் குப்தா மார்க்கெட் காம்பவுண்டுக்குள்தான் போவார். அங்கே கடிதமெழுதி போஸ்ட் செய்துவிட்டுத்தான் வருவார். இது கடைசிவரைத் தொடர்ந்தபடியே இருந்தது.

இதன்பிறகு அவரை நேரில் சந்தித்தது கோகிலா கன்னடப் படத்தின் படப்பிடிப்பின்போது. கமல் கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தியபோது “உங்களை இதுக்கு முன்னாலேயே பார்த்திருக்கேனே” என்றார். “பிலிம் பெஸ்டிவல் நேரத்தில் வல்லபனுடன் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு படம் முடிஞ்சதும் வேகமாகப் போய் ஒரு கடிதம் எழுதிப்போடுவீங்க. அதை கவனிச்சிருக்கேன்” என்றேன்.

அவர் முகத்தில் சட்டென்று ஆச்சரியம் தாக்கியதுபோல் என்னை ஒரு கணம் பார்த்தவர் “ஓ. அதை கவனிச்சிருக்கீங்களா நீங்க?” என்றார்.

“என்ன பிலிம்பெஸ்டிவல், என்ன கடிதம்?” என்றார் கமல்.

“அதை அப்புறமா சொல்றேன்” என்று கமலுக்கு பதிலளித்தார் பாலுமகேந்திரா.

“இவர் சுஜாதாவுக்கும் நல்ல நண்பர். சுஜாதாவை இங்கே அழைச்சுவரச் சொல்லியிருக்கேன். போன்ல பேசியிருக்கார். சாயந்திரமா சுஜாதா இங்கே வரப்போறதா சொல்லியிருக்கார்.”என்று தெரிவித்தார் கமல்.

“ஓ….சுஜாதா வரப்போறாரா?” என்றவர் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

சற்று நேரம் கழித்து சுஜாதா வந்ததும் “இவர் முதலில் எழுத்தாளர், அப்புறம் கவிஞர், அப்புறம் ஒளிப்பதிவாளர், அப்புறம் டைரக்டர் - மொத்தத்தில் ஒரு படைப்பாளி” என்று பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்தினார் கமல்.

“இது நீங்களே எழுதினதா இந்தக் கதை? அப்புறம் எப்படி தெரியாத கன்னட மொழியில படம் எடுக்கறீங்க? தமிழ்லயே எடுக்க வேண்டியதுதானே” என்றார் சுஜாதா.

“உங்களுக்கு சினிமா ஃபீல்டைப் பற்றித் தெரியாது சார். எத்தனைப் பெரிய கொம்பனா இருந்தாலும் அவன் திறமையை வச்சு இங்கே அங்கீகரிக்க மாட்டான். வெற்றியை மட்டும்தான் ஒத்துக்குவான். இந்தப் படத்துக்கே தமிழ்ல எத்தனைப் பேரிடம் கேட்டிருக்கேன் தெரியுமா? எவனும் முன்வரலை. கமலும் ட்ரை பண்ணினார். கமல் நடிச்சுத்தர்றேன்னு சொன்னபிற்பாடுகூட எவனும் தயாரிக்க முன்வரலை. கன்னடத்தில் சின்ன பட்ஜெட் என்பதால் இங்கே தயாரிப்பாளர் கிடைச்சிருக்கார். எந்த மொழியாயிருந்தா என்ன முதல்ல நம்மை நிரூபிக்கணும்னு இறங்கியிருக்கேன். நமக்கு என்ன சார் நாம பேசறது சினிமா மொழிதானே?”

அதன்பிறகு அவர் படப்பிடிப்பில் ஈடுபட அவர் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த சுஜாதா அவரிடம் காமிரா லென்ஸ் லைட்டிங் என்று தொழில்நுட்பங்களாக என்னென்னமோ பேசிக்கொண்டே இருந்தார்.

அடுத்து இரண்டொருநாள் கோகிலா படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ஒன்றை கவனிக்க முடிந்தது.

அது நடிகை ஷோபாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் இருந்த அந்நியோன்யம். அதுபற்றி அப்போதே பத்திரிகைகளில் செய்தி வந்துகொண்டிருந்ததும் பிறகு அது பெரிய அளவிலான செய்தியாக மாற்றம் பெற்றதும் எல்லாருக்கும் தெரியும்.

அதற்கு அடுத்து பாலுமகேந்திராவைச் சந்தித்தது ஒரு வருடத்திற்குப் பிறகு என்று நினைக்கிறேன்.

அப்போது கமலுக்கு சேஷாத்ரி என்றொரு உதவியாளர் இருந்தார். கமலுடைய சினிமா வரலாற்றில் அவருடைய முதல் உதவியாளர் இவர்தான். இருவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்களாம். கமல் சினிமாவில் பெரிய ஆளானதும் இவர் கமலின் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். கமல் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்தபோதும் இவர்தான் அவருடைய உதவியாளராக இருந்தவர். அதன்பிறகுதான் ஏதோ காரணத்தால் கமல் இவரை விலக்கிவிட்டதாகச் சொல்வார்கள்.

சேஷாத்ரியிடமிருந்து போன் வந்தது. தான் அடுத்தநாள் பெங்களூர் வரப்போவதாகவும் ஒருநாள் தம்முடன் செலவிடமுடியுமா என்றும் கேட்டு போன் செய்திருந்தார்.

மறுநாள் சேஷாத்ரியைச் சந்தித்தபோது இது கமல் சம்பந்தப்பட்ட விஷயமில்லை என்றும் ‘கமலுக்கே இன்னமும் தெரியாது; அவரிடம் சொல்லவில்லை, விஷயம் நல்லபடியாய் முடிந்தால் அவரிடம் சொல்லி பர்மிஷன் வாங்கிக்கொள்வேன்’ என்றும் சொன்னார். அதாவது கோகிலா படத்தைக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப் செய்யும் உரிமையைத் தமக்கு வழங்கும்படி பாலுமகேந்திராவைக் கோரப்போவதாகவும், அவர் அதற்கு ஏற்பாடு செய்வாரானால் கமலின் செகரட்டரியாக இருந்துகொண்டே உபரியாக ஒரு பிசினஸைத் தம்மால் சுலபமாகச் செய்யமுடியும் என்றும் முடிவிலிருந்தார் அவர். இன்னமும் இதுபற்றி பாலுமகேந்திராவுக்கே சொல்லவில்லை என்றும் பெங்களூரில் இருக்கும் அவரை உடனடியாக சந்திக்கவிரும்புவதாகச் சொன்னபோது இன்றைக்கு வரச்சொல்லியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

பாலுமகேந்திரா வழக்கமாக பெங்களூர் வந்தால் தங்குவது செயிண்ட் மார்க்ஸ் ரோடு அருகிலிருக்கும் ஏர்லைன்ஸ் ஓட்டலில். எப்போதும் அங்குதான் தங்குவதாகவும், கோகிலா படத்திற்காக மட்டும்தான் அந்த தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்த பராக் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும் ஏற்கெனவே அவர் சொல்லியிருந்தார். ஏர்லைன்ஸ் ஓட்டலும் அவருடைய ரசனைக்கு ஏற்றதாக ஏகப்பட்ட தோட்டமும் துரவுமாக இருக்கும்.

சேஷாத்ரியும் நானும் ஏர்லைன்ஸ் ஓட்டலுக்குச் சென்றிருந்தோம். எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பாலுமகேந்திரா. வேறொரு பட ஒளிப்பதிவுக்காக பெங்களூர் வந்திருப்பதாகவும் இன்றைக்கு மதியத்துடன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

சேஷாத்ரியின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

கமல் நடித்த கோகிலா படத்தை டப் செய்யும் முடிவில் அந்தத் தயாரிப்பாளர் இல்லையென்றும், அப்படியே டப் செய்வதாக இருந்தாலும் அவராகவே டப் செய்து அவரேதான் தமிழகத்திலும் வெளியிடும் முடிவில் இருப்பதாகவும் வேறு யாருக்கும் தரப்போவதாக இல்லையென்றும் சொன்னார்.

அதைவிட முக்கியமாக, படத்தில் கமலே கன்னடம் பேசி நடித்திருப்பதால் டப் செய்வதை கமலே விரும்பவில்லை என்றும் டப் செய்யாமலேயே கன்னடத்திலேயே படத்தை வெளியிட்டு ஓடவைக்க முடியும் என்று கமல் விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.

ஆக, வந்த விஷயம் டிராப் ஆனதும் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தோம்.

தமிழ் இலக்கியங்களிலும் தற்கால இலக்கியங்களிலும் பாலுமகேந்திராவுக்கு இருந்த ஈடுபாடும் அவருடைய வாசிப்பு அனுபவமும் புரிந்தது. சிவாஜி காலத்துக்கு முந்தைய படங்கள், சிவாஜியின் வருகைக்குப் பின்பான படங்கள், இப்போது கமல் ரஜனி என்று ஆரம்பித்திருப்பதால் இதற்குமேல் தமிழில் வரப்போகும் படங்கள், வரவேண்டிய படங்கள் என்று நிறையப் பேசினார். அன்றைய தினத்தில் மலையாளப் படங்களின் மீதான ஈடுபாடு அவரிடம் அபரிமிதமாக இருந்தது. 

“நானே உங்களை ஒரு மலையாளத்துக்காரர் என்றுதான் நினைத்திருந்தேன்” என்றேன்.

“நீங்கள் மட்டுமில்லை மொத்த இண்டஸ்ட்ரியுமே என்னை மலையாளத்துக்காரனாகத்தான் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறது” என்று சிரித்தார்.

சினிமா இலக்கியம் என்பதற்குப் பின் அவருக்கு மிக உவப்பான விஷயம் மியூசிக் என்பது புரிந்தது.

அந்தக் காலத்தில் பிரபல மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன்- இவரும் ஒரு தமிழர்தான்.- ஒரு இசைக்குழுவை வைத்துக்கொண்டு வானொலியில் கோயர் முறையில் பிரமாதமான இசைத்தொகுப்பை வழங்கிக்கொண்டிருந்தார். எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையைப் பற்றியும் (கே.ஜே.ஏசுதாசைத் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்) அதே போன்ற கோயர் கூட்டத்தை வைத்துக்கொண்டு சலீல் சௌத்ரி வடக்கே பிரமாதப் படுத்திக்கொண்டிருப்பதையும் சிலாகித்துப் பேசினார். சலீல் சௌத்ரி பற்றிப் பேசியபோது மதுமதி செம்மீன் படங்களில் வந்த இசைத்தொகுப்பு குறித்தெல்லாம் பேசினார். இதனைப் பிற்பாடு அழியாத கோலங்கள் படத்தை எடுத்தபோது பாலுமகேந்திரா அதே சலீல் சௌத்ரியைத்தான் இசையமைப்பாளராகப் போட்டார் என்பதையும் இணைத்துப் பார்க்கவே தோன்றிற்று.

அழியாத கோலங்களில் வரும் ‘நான் எண்ணும் பொழுது’…… என்று எஸ்பிபி பாடிய பாடல் ஒரு மறக்கமுடியாத அபாரமான பாடல். (அதனை ‘நான் என்னும்பொழுது’ என்று பாடியிருப்பார் எஸ்பிபி. இரண்டு வார்த்தைகளுமே பொருந்தும்படித்தான் இருக்கும்).

‘நான் எண்ணும்பொழுது………..ஏதோ சுகம், எங்கோ தினம், செல்லும் மனது’ என்று வெகு சுகமாகக் கிளம்பும் பாடல் அது. பழைய நினைவுகளையும் பழைய எண்ணங்களையும் அடிமனதிற்குள் போய்க் கிளறி மேலே கொண்டுவந்து பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்று விட்டுவிட்டு வந்துவிடும் இசையைக் கொண்ட பாடல் அது.

நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை

என்றும் அது கலைவதில்லை

எண்ணங்களும் மறைவதில்லை – என்றுபாடி ‘அந்த நாள் அம்மா என்ன ஆனந்தமே’ என்று இறங்கும்போது நம் மனதை ஒரு வழி செய்திருக்கும் அந்த இசை.

அடுத்த தொகையறாவையும்,

ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே

அங்குவந்த காற்றினிலே

தென்னை இளங்கீற்றினிலே – என்று செம ஈடுபாட்டோடு வார்த்தைகளைப் போட்டு விளையாடியிருப்பார் பாடலாசிரியர் கங்கைஅமரன். இந்த வரிகளுடன் நம்மை இழுத்துக் கொண்டுபோகும்போது எஸ்பிபியும் சரி சலீல் தாதாவும் சரி நம்முடைய மனதை ஒரு ரேஞ்சுக்குப் பதம் பார்த்துவிடுவார்கள்.

இசை பற்றிப் பேசுவதற்கு நடுவில் “ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசுவோமே” என்ற பாலுமகேந்திரா போனை எடுத்து “நம்ம ஐஸ்கிரீம் ஒரு மூணு பிளேட் அனுப்புங்க” என்றார்.

ஐஸ்கிரீம் மூணு பிளேட்டா?

வந்தபிறகுதான் தெரிந்தது. அது எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது.

கீழே ஒரு லேயர் முழுக்க ஸ்பாஞ்ஜ் கேக்.

அதற்கடுத்து நடுவில் ஐஸ் கிரீம் ஒரு லேயர்.

மறுபடியும் அதை மூடினதுபோல் திரும்பவும் ஸ்பாஞ்ஜ் கேக் இன்னொரு லேயர்…………..

அன்றைய தினத்தில் அப்படியொரு காம்பினேஷனுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதில்லை என்பதால் அதன் சுவை எங்கோ தூக்கிக்கொண்டு போயிற்று.

“ரொம்பப் பிரமாதம்” என்றபோது “வேற சில இடங்கள்ள இந்தக் காம்பினேஷன்ல கிடைக்கும் ஆனா இந்த சுவைக்கு ஈடில்லை” என்றார் பாலுமகேந்திரா. “இந்த ஓட்டல்ல ரெகுலரா நான் வந்து தங்கறதுக்கு இது ஒரு காரணம். இங்கே இந்த ஐஸ்கிரீமும் மசால் தோசையும் பிரமாதம். அதற்காகவே இங்கே தங்கறேன்” என்றார்.

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விடைபெற்று வந்தோம். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பாலுமகேந்திராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு திரும்பவும் அமையவில்லை. அழியாத கோலங்கள் வந்தபோது அதைப் பார்த்துப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். நன்றி தெரிவித்து பதில் கடிதம்  போட்டிருந்தார் பாலுமகேந்திரா.

அதன்பிறகு அவர் இயக்குநராகப் படங்கள் தயாரித்ததுவும், ஷோபா விஷயத்தில் அவர் பேசப்பட்டதுவும் ஷோபாவின் அசாதாரண மரணமும் அவரை மிகமிக பரபரப்புக்குள்ளான மனிதராக மாற்றிவிட்டிருந்தன. 

சில மனிதர்களின் சாதனைகள் அவர்களை எங்கோ உச்சத்தில் தூக்கி நிறுத்திவிடும். அதன்பிறகு எத்தனை தாறுமாறான மோசமான தகவல்கள் வந்தாலும் அவை அவர்களை அசைத்துப் பார்ப்பதில்லை. அவற்றையும் தாண்டி அதே செல்வாக்குடன் அல்லது அதைவிடவும் அதிக செல்வாக்குடன் நின்று நிலைத்துவிடுவார்கள்.

பாலு மகேந்திராவும் அத்தகையோரில் ஒருவர்தான்.

ஏனெனில் ஷோபாவின் மரணத்துக்குப் பிற்பாடு திரையுலகைச் சார்ந்த ஒரு பெரிய மனிதரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நண்பர் மனோபாலாவின் டைரக்ஷனில் ரஜனி நடித்துக்கொண்டிருந்த ஊர்க்காவலன் படத்தின் படப்பிடிப்பு அது.

“பாலுமகேந்திரா மிக அருமையான ரசனையுள்ள மனிதர். அற்புதமான கலைஞன். ஆனால் மற்ற எதைவிடவும் ஷோபா மீது அவர் வைத்த அளவுக்கு அதிகமான காதல் அவருக்குள்ளிருக்கும் கலைஞனைப் பாதித்துவிடாமல் இருக்கணும்” என்பதுபோல் அவரிடம் ஏதோ ஒரு கருத்தைச் சொன்னேன்.

அதற்கு அந்தப் பெரிய மனிதர் சொன்ன பதில்தான் வியக்க வைத்தது. “பாலுமகேந்திரா ஒரு அற்புதமான கலைஞர் அபாரமான திறமைசாலி என்பதிலெல்லாம் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. அவர் ஷோபா மேல வச்ச அதே காதலைத்தான் நிறையப்பேர் மேல வச்சிர்றாரு என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

மத்தவங்களை விடுங்க. மூன்றாம்பிறை படத்தில் நடிச்ச அந்தக் கதாநாயகி மேல அவருக்கு உண்டான ‘காதலைக்’ கேட்டிங்கன்னா மூர்ச்சையே போட்டுருவீங்க. முக்கால்வாசிப் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. மாலையானதும் படப்பிடிப்பு முடிஞ்சிரும். ஷூட்டிங் முடிஞ்சதும் கதாநாயகியை வீட்டுக்கு அனுப்பமாட்டார்.

ஸ்டில் போட்டோஸ் எடுக்கணும் என்று சொல்லி நிறுத்திவைத்து விடுவார்.

சரிவுகளுக்கும் ஆபத்தான மலைப்பகுதிகளுக்கும் கூட்டிச்சென்று நிற்க வைத்து விதவிதமாக படங்கள் எடுப்பார். படங்கள் என்னவோ பிரமாதமாக வரும். சரி ஒரு காமிராக் கலைஞனுடைய கலைத்தாகம் எப்படியெல்லாம் வெளிப்படுது என்றுதானே பார்ப்போம்…… அப்படி எடுத்த அந்தப் படங்களை அன்றைய தினமே எக்ஸ்போஸ் பண்ணி பிரிண்ட் எடுத்து என்லார்ஜ் ஆக்கி பிரேம் போட்டுக்கொண்டு வரச்சொல்லுவார்.

ஊட்டியில் இதற்கெல்லாம் வசதி ஏது?

‘எனக்கு நாளைக் காலைக்குள்ள ரெடியாயிருக்கணும். கோயம்புத்தூருக்குப் போய் செய்துட்டு வந்துருங்க’ என்பார். அந்தப் படங்கள் வந்தால்தான் அடுத்த நாள் ஷூட்டிங் துவங்கும். வேறுவழியில்லாமல் கோயம்புத்தூர் போய் அவர் சொன்னபடி என்லார்ஜ் பண்ணி பிரேம் போட்டு எடுத்து வருவோம்.

தயாராக அழகான பொக்கே ஒன்று வாங்கி வைத்திருப்பார். இந்தப் புகைப்படத்துடன் என்னென்னமோ காதல் கவிதைகள் எல்லாம் எழுதி அந்தக் கதாநாயகிக்குப் பரிசளிப்பார்.

கதாநாயகி ஆச்சரியத்தில் மலர்ந்து போவாரே தவிர சிறிது நாட்களுக்குப்பின் இவரின் இத்தகைய டார்ச்சர்களிலிருந்து மீள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்” என்று சொல்லிச் சிரித்தார் அந்தப் பெரிய மனிதர்.

இந்தத் தகவல் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொன்றையும் அணுகுகிறார்கள் என்பதுதான் இங்கே நமக்குக் கிடைக்கும் சேதி.

இப்போது மறுபடியும் தலைப்பிற்கும் முதல் பாராவுக்கும் வருவோம்.

முதன் முதலாக பாலுமகேந்திராவைப் பார்த்தபோது அவர் கடிதம் எழுதுவதற்காக ஓடினதும் ஏதாவது ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு விமரிசனம் எழுத கமிட் ஆகியிருப்பார் என்று வல்லபன் சொன்னதற்குமான உண்மையான பதில் ஷோபா இறந்தபிறகுதான் கிடைத்தது.

ஷோபா பற்றிய கட்டுரையொன்றில் பெங்களூரின் இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவல் பற்றிக் குறிப்பிடும் பாலுமகேந்திரா ஒவ்வொரு படம் முடிந்ததும் தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் விமரிசனங்களையும் ஷோபாவுக்கு உடனுக்குடன் கடிதம் எழுதித் தெரிவித்ததைக் குறிப்பிடுகிறார். சுமார் நாற்பது ஐம்பது கடிதங்கள் எழுதினதாகவும், ஒவ்வொன்றையும் அந்தப் படங்கள் முடிந்து சில நிமிடங்களுக்குள் எழுதி போஸ்ட் செய்ததையும் குறிப்பிடுகிறார். அந்தக் கடிதங்கள்தாம் ஷோபாவை அவர்பால் காதல் கொள்ள வைத்தது என்பதாகவும் சொல்கிறார்.

ஷோபா பற்றிய தொடர் கட்டுரையில் கோகிலா படத்திற்காக பராக் ஓட்டலில் தங்கியிருந்தபோது நடைபெற்ற சம்பவம் ஒன்றைப் பற்றியும் மிகவும் உணர்ச்சிகரமாகச் சொல்கிறார்... கொஞ்சம் கோக்குமாக்கான விஷயம் அது.

அந்த ஓட்டலில் தங்கியிருந்தபோது இருவரும் மிகவும் அந்நியோன்யமாக இருந்த பொழுதில் ஷோபாவை மிக ஆழமாக முத்தமிட்டபோது ஷோபாவின் மூக்கிலிருந்த வைர மூக்குத்தி இவருடைய வாய்வழியாக வயிற்றுக்குள் போய்விட்டதாகவும் மறுநாள் டாய்லெட்டில் கையைவிட்டுத் தேடி அந்த மூக்குத்தியைக் கண்டெடுத்ததாகவும் அத்தனை ஆழமான காதலை அந்த தேவதை மீது வைத்திருந்தேன் என்பதாகவும் எழுதுகிறார். 

இலக்கியங்களிலும் காவியங்களிலும்கூட வரமுடியாத இத்தனை ஆழமான காதல் ஷோபா மீது என்றால்-

அது அந்தப் பெண்ணுடன் மட்டுமே நின்றிருக்கவேண்டும்!

ஆனால் அப்படியில்லை.

மேற்கொண்டு கிடைக்கிற செய்திகளில் பாலுமகேந்திராவின் காதல் மடைமாற்றப்பட்டு அர்ச்சனா மௌனிகா என்றெல்லாம் பயணித்ததை நிஜ வாழ்க்கையில் செய்திகளாக அறிகிறோம். மூன்றாம் பிறை படத்தின் சந்தர்ப்பத்தில் வேறொரு பெண்ணிடமும் இது போன்ற ஒரு காதலுக்கான முயற்சிகள் நடைபெற்றதாகவும் தெரியவருகிறது.

ஒரு மிகப்பெரிய ஒளிப்பதிவு மேதையையும் திரைப்படக் கலைஞனையும் புரிந்துகொள்ள முடிந்த நம்மால் இவர் காதல் மீது கொண்டிருந்த மதிப்பீடுகளையும் தாத்பர்யங்களையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

வரிசையாக இவர் காதலைத் தொடர்ந்துகொண்டிருந்த விதமும் சரி, பெண்களும் அதற்கேற்ப வரிசையாக இவரிடம் விழுந்துகொண்டிருந்த முறையும் சரி கொஞ்சமும் புரிபடாத மர்மங்களாகவே போய்விட்டன.

எது எப்படியோ, அந்த மகத்தான கலைஞன் போய்ச் சேர்ந்துவிட்டான். அழியாத கோலங்கள் படத்தில் வரும் பாடலைப் போலவே

‘நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை

என்றும் அது கலைவதில்லை


எண்ணங்களும் மறைவதில்லை’- என்ற வார்த்தைகள் பாலுமகேந்திரா படைத்த திரைஓவியங்களுக்கு மட்டுமில்லை, இவர் வாழ்ந்துகாட்டிய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியதே.

81 comments :

ezilmaran said...

அருமையான கட்டுரை... முழுமையான கோணத்தில் பாலுமகேந்திரா குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. எழில்மாறன்-பெங்களூர்

Amudhavan said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி எழில்மாறன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நீங்க ஏன் அடக்கி வாசிக்கிறிங்கனு புரியுது,நிறைய பிரபலங்களுடன் பழக்கம், பல உண்மைகள் அறிந்திருப்பது என இருக்கும் நிலையில் நிதானம் தவறிவிடக்கூடாது என , பொறுமையாக "அடிகளை எண்ணி அளந்து எடுத்து வைக்கிறீர்கள்"!

# அரசல் புரசலாக பத்திரிக்கைகளில் படிச்சதுலாம் உண்மைனு புரியுது,பல புதிய தகவல்கள்.

# வழக்கமான துதிப்பாடல் நினைவுக்கூறலாக இல்லாமல் குறை,நிறை என இரண்டும் சரிசமமாக கலந்து நினைவுக்கூறி இருக்கீங்க.

# என்னைப்பொறுத்த வரையில் பாலுமகேந்திரா நல்ல கேமிரா மேன் ஆனால் இயக்குனர் அல்ல, அவரது "ஷாட் கம்போசிஷன்கள்" பெரும்பாலும் பழைய பாணியில் அமைந்திருக்கும், "டைம் கம்ப்ரஸன்" பற்றிய கவலையே இல்லாமல் "நீண்டு போகும்!

இது என்னோட அவதானிப்பு,அவர் எம்மாம் பெரிய இயக்குனர் இத எல்லாம் நீ எப்படி சொல்லலாம்னு கேட்டா , ஹி...ஹி சும்மா சொல்லி வச்சேன்னு ஃபிரியா விடுவோம்னு எடுத்துக்கொள்ளவும்!

வவ்வால் said...

சொல்ல மறந்துட்டேன், காட்சியின் நேரம், டைம் எப்படி காட்சியில் வீணாக்குறாங்க ,டைம் கம்ப்ரஸன் பத்திலாம் சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார், அப்போ தான் எனக்கும் அறிமுகமாச்சு ,இதுக்கே தமிழ் சினிமா இயக்குனர்களூக்கு காட்சியின் நேரத்தை எப்படி மெயின்டைன் செய்வது ,அதன் முக்கியத்துவம் எல்லாம் தெரியாதுனு செவிட்டுல அறைஞ்சிருப்பார் அவ்வ்!

வவ்வால் said...

//அடுத்த படம் துவங்குவதற்கு இருந்த இடைவேளையில் நான், பத்திரிகையாளரும் கவிஞருமான எம்.ஜி.வல்லபன் //

எல்லாரையும் நட்பு வட்டத்தில் வச்சிருக்கிங்களே !

எம்.ஜி வல்லபன் அதிகமாக எம்சிஆர் பத்தி எழுதியிருப்பார், ஒரு பத்திரிக்கை கூட எம்சிஆர் பெயரால் நடத்தினார்னு நினைக்கிறேன், மணிரத்னம் இயக்கத்தில் பெயர் வாங்கின "இதயக்கோயில்" படத்தோட கதை கூட எம்.ஜி.வல்லபன் அவர்களோடது தானாம் ஆனால் பேரு என்னமோ மணிரத்னத்துக்கு அவ்வ்!

எம்.ஜி.வல்லபன் எனப்பேரு பார்த்ததும் எப்பவோ படிச்சது நினைவுக்கு வரவே சொல்லி வச்சேன் ,பதிவுக்கு சம்பந்தமில்லாது எனவே நீக்கினாலும் தவறில்லை.

Umesh Srinivasan said...

இந்தத் திரைப்படமேதை பற்றித் திரையுலகில் அரசல்புரசலாக உலவும் பல கதைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். 'மூடுபனி' படத்தில் வரும் பிரதாப் கதாபாத்திரமும், 'மறுபடியும்' படத்தில் வரும் நிழல்கள் ரவி கதாபாத்திரமும் அவருடைய நிஜவாழ்க்கையுடன் தொடர்புடையவை போலவே தோன்றுகின்றன. என்னைப் பொறுத்தவரை பெண்ணெனும் போதைக்கு இவரும், பிரபலம் எனும் போதைக்கு அந்தப் பெண்களும் அடிமைகள்.

குட்டிபிசாசு said...

…ஷோபாவின் தற்கொலைக்கு தான் காரணம் என எல்லோரும் சொன்னதற்கு பதில் சொல்லவே மூன்றாம்பிறை படம் எடுத்தேன் என பாலு சொல்லி இருந்தார். இப்போது சந்தேகமாக இருக்கிறது, அவர் யாரை நினைத்து (ஷோபாவை நினைத்தா அல்லது படத்தின் நாயகியை நினைத்தா?) அப்படத்தை எடுத்தார் என்று தெரியவில்லை.

…பாலுமகேந்திரா தன்னுடைய படத்தில் நடித்த நடிகைகளை உருகி உருகி காதலித்திருப்பார் என நினைக்கிறேன். இதில் ஷோபா தற்கொலை செய்து கொண்டதால், அதற்கு தான் காரணமில்லை எனச் சொல்லவே இந்த "தெய்வீக காதல்" விளக்கம்.

Amudhavan said...

வவ்வால் said...

\\# என்னைப்பொறுத்த வரையில் பாலுமகேந்திரா நல்ல கேமிரா மேன் ஆனால் இயக்குனர் அல்ல, அவரது "ஷாட் கம்போசிஷன்கள்" பெரும்பாலும் பழைய பாணியில் அமைந்திருக்கும், "டைம் கம்ப்ரஸன்" பற்றிய கவலையே இல்லாமல் "நீண்டு போகும்!\\


இந்த நீண்டுகொண்டே போகும் நேரம் 'ஆர்ட் பிலிம்' என்று சொல்லத்தக்க எல்லாப் படங்களுக்குமே பொதுவானதுதானே! இங்கேயிருந்து புறப்பட்டு ஒருவர் போகிறார் என்றால் அவர் மொத்த சாலையையும் மெதுவே நடந்து சென்று மறைகிறவரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.. மற்றபடி இந்த விமர்சனத்தைப் பொறுத்தவரை பாலுமகேந்திராவின் காமிரா எனக்குப் பிடிக்கும் என்பதுடன் கழன்றுகொள்கிறேன்.

\\எம்.ஜி வல்லபன் அதிகமாக எம்சிஆர் பத்தி எழுதியிருப்பார், ஒரு பத்திரிக்கை கூட எம்சிஆர் பெயரால் நடத்தினார்னு நினைக்கிறேன்\\

எனக்கு எம்ஜிவல்லபன் மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சித்தி சீரியல் எழுதுவதற்காக அவருடைய வீட்டிலேயே ஒரு பத்து நாட்கள் சேர்ந்தாற்போல் தங்கியிருந்த அளவுக்கு நெருக்கம்(அப்புறம் என்ன ஆனது என்பதெல்லாம் வேறு சமயம்...சந்தர்ப்பம் வாய்த்தால் சொல்லலாம்) வல்லபன் ஒரு மலையாளியாய் இருந்தபோதிலும் தமிழிலும் இலக்கியத்திலும் மிக அதிகமான பரிச்சயம் கொண்டவர். ஆனாலும் அவர் எம்ஜிஆரோடு அத்தனை சிநேகமாய் இருந்தவரல்ல. எம்ஜிஆருக்கு எதிராக சந்திரபாபு எழுதிய 'ஒரு மாடி வீட்டு ஏழையின் கண்ணீர்க்கதையைத் தமது பத்திரிகையில் வெளியிட்டவரே வல்லபன்தான். அந்தக் கோபம் எம்ஜிஆருக்குக் கடைசிவரைக்கும் இவர் மீது இருந்தது. அதனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல் சரியானதாக இருக்க சந்தர்ப்பம் இல்லை.

Amudhavan said...

Umesh Srinivasan said...

\\என்னைப் பொறுத்தவரை பெண்ணெனும் போதைக்கு இவரும், பிரபலம் எனும் போதைக்கு அந்தப் பெண்களும் அடிமைகள்.\\

அடாடா, இரண்டே வரிகளில் எத்தனை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் உமேஷ்.

திண்டுக்கல் தனபாலன் said...

தபால் அனுப்பும் தகவல், (யாருக்கு அனுப்புகிறார்...? உண்மையான உண்மை அவருக்கு மட்டும் தான் தெரியும்) மூன்றாம்பிறை கதாநாயகி ஈர்ப்பு + மற்றவை - இவையெல்லாம் அறியாதவை... மர்மமாகவே இருக்கட்டும்... தனிப்பட்ட / சொந்தமான அவரது எண்ணங்களை அல்லது வாழ்வை விமர்சிக்க விருப்பவில்லை... ம்... அவர் மட்டுமல்ல... யாராக இருந்தாலும்... இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும், என்றும் அழியாத கோலங்கள் தான்...

என்றும் ரசிக்கும் பாட்டு ஐயா...

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://deviyar-illam.blogspot.in/2014/02/blog-post_14.html

Amudhavan said...

குட்டிபிசாசு said...

\\…பாலுமகேந்திரா தன்னுடைய படத்தில் நடித்த நடிகைகளை உருகி உருகி காதலித்திருப்பார் என நினைக்கிறேன்.\\

உங்களுடைய விளக்கமும் நன்றாகவும் ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்கிறது கு.பி.

Amudhavan said...

திண்டுக்கல் தனபாலன் said...

\\தபால் அனுப்பும் தகவல், (யாருக்கு அனுப்புகிறார்...? உண்மையான உண்மை அவருக்கு மட்டும் தான் தெரியும்) மூன்றாம்பிறை கதாநாயகி ஈர்ப்பு + மற்றவை - இவையெல்லாம் அறியாதவை... மர்மமாகவே இருக்கட்டும்... தனிப்பட்ட / சொந்தமான அவரது எண்ணங்களை அல்லது வாழ்வை விமர்சிக்க விருப்பவில்லை... ம்... அவர் மட்டுமல்ல... யாராக இருந்தாலும்...\\

தனபாலன், தனிப்பட்ட கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி விமரிசனம் செய்வதில் உங்களைப் போன்றே எனக்கும்- ஏன் நம்மைப் போலவே இன்னும் நிறையப்பேருக்கும் விருப்பமில்லை என்பது உண்மையே.

ஆனால் எத்தனைக் கலைஞர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய ரகசியங்கள் வெளியில் வரவேண்டும், பத்திரிகைகளில் வரவழைக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா?

இரண்டு திரைத்துறை பிரபலங்கள் ஒன்றாகவே பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்று சேர்ந்து வருவது, சகலரும் பார்க்க தங்களை மிக நெருக்கமானவர்களாகக் காட்டிக்கொள்வது, அது பத்திரிகைகளில் வரவேண்டும் என்று முயற்சிப்பது... என என்னென்னமோ நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

பாலுமகேந்திரா தமக்கும் ஷோபாவுக்கும் இடையில் இருந்த அந்நியோன்யங்களையெல்லாம் பத்திரிகையில் அவராகவேதான் எழுதியிருந்தார். நீங்கள் படித்திருக்க வாய்ப்பு இல்லைபோல் தெரிகிறது.

Anonymous said...

//,இதுக்கே தமிழ் சினிமா இயக்குனர்களூக்கு காட்சியின் நேரத்தை எப்படி மெயின்டைன் செய்வது ,அதன் முக்கியத்துவம் எல்லாம் தெரியாதுனு செவிட்டுல அறைஞ்சிருப்பார் அவ்வ்!//

அத விட முக்கியமா 4 பாட்டு, 3 பைட்டு, 2 ரேப்பு, 1 காமெடி ட்ராக். இத ஒழிச்சாலே நேரம் நிறையக் கிடைக்குமே!

வேட்டைக்காரன் said...

நல்ல நினைவுகூறல் கட்டுரை சார்.

Lakshmanan17 said...

பெண் என்பவள் ஒரு போதை வஸ்து என்பது படைப்புலகின் ரகசியம் மட்டும் அல்ல அடிப்படை ரி - க்ரிஏஷனின் தத்துவமும்தான். ஆனால் விளங்கவே முடியாத "காதலி"ன் மறுபக்கத்தை பார்த்தோமானால் ஒன்றுக்கு மேற்பட்ட காதலிகளை நாடும் ஆழ் மனம் ஒரு தேடலின் விளக்க இயலாத கவிதை நோக்குதான் வெளிப்படும். வெறும் சதைத் தாகம்தான் இதற்கு சின்ன விளக்கம் என ஒதுக்க முடியாது. கலைத்தாகம் படைப்பு தாகம் "காதல்" எனும் அலை பாயும் இரைச்சல் தாங்க முடியாத ஒரு வேட்கையின் வெளிப்பாடுதான் இது என உணர்கிறேன். தினம் ஒரு கடிதமாக ஷோபாவுக்கு வெளிப்படுத்தினார் என்ற ஒரு காரணமே இவரின் உள்ள வேட்கையை அறிய முடிகிறது. ஸ்ரீதேவி மேல் காதல் என்பதை விட அவர தோற்றம் விளைவித்த காதலி தோற்றமே தூண்டுதல் என அறிகிறேன். நிரந்தர காதலனாக அவரை நான் அறிகிறேன். மதிப்பு இன்னும் கூடுகிறது. என் விளக்கம் உங்களால் ஒத்துக்கொள்ள முடிகிறதா? உங்கள் வலைப்பக்கம் ஜோதிஜியின் மூலம் நேற்றுதான் அறிமுகம் பெற்றேன். தகவலைப் பரிமாறுவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
லட்சுமணன்

வவ்வால் said...

அமுதவன் சார்,

// அந்தக் கோபம் எம்ஜிஆருக்குக் கடைசிவரைக்கும் இவர் மீது இருந்தது. அதனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல் சரியானதாக இருக்க சந்தர்ப்பம் இல்லை.//

நீங்க சொன்னது தான் சரியாக இருக்கணும்னு , நாம ஒரு நினைவில் சொன்னது தான்.

எம்.ஜி. வல்லபன் அவர்களின் பெயரில் பல கட்டுரைகள் படித்த நினைவு , எந்த பத்திரிக்கைனு கவனம் இருப்பதில்லை, அவர் நிறைய பத்திரிக்கைகளை நடத்தினார்னு கேள்வி எனவே அவரு கட்டுரை எழுதுற பத்திரிக்கைலாம் அவருதுனு நினைச்சிட்டேன் :-))

உங்க சுயவிரக்குறிப்பில "பிலிமாலயா" பத்தி சொல்லி இருக்கிங்க நான் தான் மறந்துட்டேன், ஹி...ஹி!

# இதயக்கோவில் படத்தினை பத்தி தேடிப்பார்த்தேன் ,அதில் வசனம் எம்ஜி. வல்லபன் என போட்டிருக்கு ,அப்போ கதையிலும் வல்லபனின் பங்கு இருக்க வாய்ப்பிருக்கு(கதை-ஆர்.செல்வராஜ்னு போட்டிருக்கு) , ஏதோ ஒன்ன குத்து மதிப்பா சரியா சொல்லிட்டேன் அவ்வ்!

மோகனின் சூப்பர் ஹிட் படமான உதயகீதத்துக்கும் கதை-வசனம் எம்ஜி வல்லபன் தானாம்,மேலும் என்னோடு பாட்டுப்பாடுங்கள் என சூப்பர் ஹிட் பாடல் , எழுதி இருக்கார். அதே போல ஏகப்பட்ட ஹிட் சாங்க் எழுதியிருக்கார், தைப்பொங்கல்னு படம் இயக்கி இருக்கார்,ஆனால் அதிகம் வெளியில் தெரியாமலே 2003 இல் காலமாகிட்டார்.

இதெல்லாம் உங்க தூண்டுதலால் இப்போ தேடிப்பார்த்தது , ஒரு வேளை நான் சொல்லும் எம்.ஜி வல்லபன் வேறு ஒருவரா?

#//இந்த நீண்டுகொண்டே போகும் நேரம் 'ஆர்ட் பிலிம்' என்று சொல்லத்தக்க எல்லாப் படங்களுக்குமே பொதுவானதுதானே! //

இந்த இலக்கணத்தை தான் பழைய பாணி என சொன்னேன், ஆஸ்கார்,கேன்ஸ் விருது வாங்கியப்பல படங்களில் இந்த இலக்கணமில்லையே, யாரோ நீட்டி முழக்கி காட்சியை இழுத்தால் கலைப்படைப்புனு நம்ம ஊரில தப்பா சொல்லி வச்சிட்டாங்க அவ்வ்!

இப்படி இழுவை காட்சி முறை உருவானதுக்கு பின்னாலே அந்தக்காலத்தில் இருந்த ஒரு டெக்னிக்கல் டிபிசியன்ஸி தான் காரணம்னு நினைக்கிறேன்,
இதனைப்பற்றி பிறகு அலசுவோம்,வாய்ப்பிருப்பின்!

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
பாலு மகேந்திராவை பற்றிய உங்கள் பதிவு அவருடைய சில ரசிகர்களுக்கு அவ்வளவு இனிப்பாக இருக்காது என்று படுகிறது. ஆனாலும் மிகச் சரியான கருத்து. பாலு மகேந்திரா ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதோடு நிறுத்திக்கொள்வது நலம். அவரை மிகச் சிறந்த இயக்குனர் என்று சொல்வதெல்லாம் வேடிக்கைப் பேச்சு.சமூக அக்கறையுடன் பாலு மகேந்திரா ஒரு படத்தையும் எடுக்கவில்லை. அவர் படங்கள் ஏறக்குறைய எல்லாமே ஆங்கிலப் படங்களின் தழுவல்தான். summer of 42வைத்தான் அழியாத கோலங்கள் என மாற்றினார். மூடுபனி,ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ஜூலி கணபதி என்று எல்லாம் ஆங்கிலத் தழுவல்கள். மறுபடியும் ஹிந்திப் படத்தின் தழுவல்.வீடு படம் வந்த போது கூட ஒரு எழுத்தாளர் என் கதையை திருடிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.தலைமுறைகள் கூட ஒரு கொரிய படத்தின் பிரதியே. சுயமாக அவர் சிந்தித்து எடுத்ததாக நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களை சொல்லலாம். அவ்வளவே. ஒரு காப்பி கேட் இயக்குனரை ஒரு அபாரமான இயக்குனராக தமிழ்த் திரையுலகம் பட்டம் சூட்டியிருப்பது நம்மிடம் இருக்கும் நலிந்த திரை ரசனையை வெளிப்படுத்துவதாகவே நான் நினைக்கிறேன். பெண்கள் மீதான அவரது ஈர்ப்பு அதிர்ச்சி கொடுக்கக்கூடிய அளவுக்கு பிரசித்தம். (மூன்றாம் பிறை episode இதுவரை நான் அறிந்திராதது). ஷோபாவின் தற்கொலைக்கு ஷோபாவின் தாயாரும் ஒருவிதத்தில் காரணம் என்று அப்போது பத்திரிகைகளில் செய்தி அடிபட்டது.
எம் பி ஸ்ரீனிவாசன் பற்றி நான் என்னுடைய அடுத்த பதிவில் எழுதியிருக்கிறேன். கடைசியாக நான் எண்ணும் பொழுது பாடலை பற்றிய உங்கள் ரசனை அற்புதம். சலில் சவுத்ரியின் இசை என்னென்ன கோலங்கள் வரைகிறது அந்தப் பாடலில்! எங்கோ துவங்கி எங்கோ செல்வது போல தோன்றுகிறது. So, I vanish.

Anonymous said...

வயிர மூக்குத்தி வயிற்றுக்குள் போனால் என்னாவும் தெரியுமா? இந்த பாலு சரியான அண்டப்புளுகனா இருப்பான். இயக்குநர் என்ற போர்வையில் எத்தனை பெண்களின் வாழ்வை சீரழிக்கின்றார்கள். சோபாவின் மரணமும் அப்படித்தான், 18 வயதுப் பெண்ணினை காதலிக்கத் தூண்டி கழற்றிவிட்ட கிழட்டின் பாவங்கள் எங்கே போய் கழுவும். உண்மையில் சோபா தற்கொலை தான் பண்ணாரா இல்லை இந்தாளு கொன்று தூக்கினானா? யாருக்குத் தெரியும்..! லேகாவுடைய மரணம் என்ற மலையாளப்படத்தில் சோபாவின் கதையை ஜார்ஜ் கூறியிருப்பார் மிக தெளிவாக, ஒரு பெண்ணை பெண்ணாக கருதாமல் உடல் எந்திரமாக கருதும் சமூகத்தில் பெண்கள் மரணத்தை தழுவுவதே விதியாய் போம்.

Anonymous said...

சோபாவின் மரணத்துக்கு மூன்றாம் பிறையல்ல, ஜூலி கணபதியே பொருத்தமாப் படுது. அவ்வ்வ்

Paramasivam said...

மூன்றாம் பிறை பார்த்து நான் பாலு மகேந்திராவைப் பற்றி மிக உயர்வாக எண்ணி இருந்தேன். ஆனால், இப்போது..........சிறிது குறைவு தான்.

ஜோதிஜி said...

தனி மனித ஒழுக்கத்தில் நம்பிக்கையில்லாதவர்களின் திறமைகள் காலப்போக்கில் ஒரு வட்டத்திற்குள் நின்று விடும். எழுத்தாளர் ஞாநி நாகரிகமாக இவரைப்பற்றி நிலைத்தகவலாக எழுதியிருந்தார்.

கடைசிவரைக்கும் அவரின் ரொமாண்டிக் அப்ரோச் உடலை வயதானவராகவும், மனதை இளமையாகவும் வைத்திருந்தது தான் பிரச்சனை.

ஆங்கிலத்தில் சில வார்த்தைகளில் ஒரு பெரிய கட்டுரையின் தாக்கத்தை கொடுத்து விட முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.

எப்போதும் போல பல இடங்களில்அடக்கி வாசித்து இருக்கீங்க.

Amudhavan said...

நன்றி வேட்டைக்காரன்.

Amudhavan said...

Lakshmanan17 said...

\\நிரந்தர காதலனாக அவரை நான் அறிகிறேன். மதிப்பு இன்னும் கூடுகிறது.\\

வாருங்கள் லட்சுமணன், உங்களுடைய மாறுபட்ட சிந்தைனையும் ஒருபுறத்தில் இருந்துவிட்டுப் போகட்டுமே.

Jayadev Das said...

இவர் மாதிரி பிரபலங்கள் கூட தனக்கு வேண்டியவருடன் போனில் பேச முடியாத நிலை. கடிதம் போடணும். இப்போ பாருங்க கை இருக்கிறவங்க எள்ளுக்கும் போன் இருக்கு, வெட்டு நம்பர் இல்லாட்டியும் செல் போன் நம்பர் இருக்கு. உடனுக்குடனே பேச முடியும்.............. காலம் மாறிப் போச்சு...........

Umesh Srinivasan said...

\\என்னைப் பொறுத்தவரை பெண்ணெனும் போதைக்கு இவரும், பிரபலம் எனும் போதைக்கு அந்தப் பெண்களும் அடிமைகள்.\\

ரிப்பீட்டு..................!! எனக்கும் இதே தான் தோன்றியது.

வைர மூக்குத்தி கதை......... ROFL தரையில் உருண்டு புரண்டு சிரிச்சேன்!!

Amudhavan said...

வவ்வால் said...

\\இதெல்லாம் உங்க தூண்டுதலால் இப்போ தேடிப்பார்த்தது , ஒரு வேளை நான் சொல்லும் எம்.ஜி வல்லபன் வேறு ஒருவரா? \\

எது ஒன்றையும் உடனடியாகத் தேடிப்பிடித்துப் படித்துவிட்டுப் பிறகுதான் விவாதம் செய்ய வருகிறீர்கள். அதற்கு முன்னாலேயே எந்த விஷயமாயிருந்தாலும் குறைந்த பட்சம் அதன் முனை பற்றியாவது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. வவ்வாலின் இந்தத் திறன்தான் உங்களை இணையத்தில் தனிப்படக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

வல்லபனைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். சரியான வல்லபனைத்தான் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். வல்லபன் முன்பு பேசும்படத்தில் துணையாசிரியராக இருந்தார். பிறகு பிலிமாலயா. பிலிமாலயா மூடியபிறகு பாக்யாவில் சிறிது காலம் ஆசிரியப்பொறுப்பில் இருந்தார். மறுபடி பிலிமாலயா தொடங்கப்பட்டபோது மீண்டும் அதில் ஆசிரியப்பொறுப்பு ஏற்றார். இன்று ஹெல்த் என்ற பெயரில் நிறையப் பத்திரிகைகள் தமிழில் வருகின்றனவே அவற்றுக்கெல்லாம் முன்னோடி அவர்தான். அவர்தான் முதன் முதலில் ஹெல்த் பத்திரிகையைத் தமிழில் ஆரம்பித்தவர்.

தைப்பொங்கல் அவர் இயக்கிய படம். அந்தப் படத்தில்தான் சுஜாதாவைக் கூட்டிச் சென்று நடிக்க வைத்தோம் என்பதை என்னுடைய என்றென்றும் சுஜாதா நூலில் எழுதியிருக்கிறேன்.

Amudhavan said...

காரிகன் said...
\\பாலு மகேந்திரா ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதோடு நிறுத்திக்கொள்வது நலம். அவரை மிகச் சிறந்த இயக்குனர் என்று சொல்வதெல்லாம் வேடிக்கைப் பேச்சு.சமூக அக்கறையுடன் பாலு மகேந்திரா ஒரு படத்தையும் எடுக்கவில்லை. அவர் படங்கள் ஏறக்குறைய எல்லாமே ஆங்கிலப் படங்களின் தழுவல்தான்.\\

வாருங்கள் காரிகன், வழக்கம்போல் இரண்டொரு பாராக்களிலேயே முழுமையான ஒரு கட்டுரைக்கான வாதத்தை ஆற்றியிருக்கிறீர்கள். ஆங்கிலப் பட சாயல்களுடன்தான் அவருடைய பெரும்பாலான படங்கள் இருந்தன.
'நான் எண்ணும்பொழுது' உங்களுக்கும் பிடித்த பாடலாகத்தான் இருக்குமென்று எழுதும்போதே நினைத்தேன். அப்படியேதான் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Amudhavan said...

இக்பால் செல்வன் தங்களின் வருகைக்கு நன்றி. ரொம்பவும் கோபமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. என்ன செய்ய.......

Amudhavan said...

Paramasivam said...
\\மூன்றாம் பிறை பார்த்து நான் பாலு மகேந்திராவைப் பற்றி மிக உயர்வாக எண்ணி இருந்தேன். ஆனால், இப்போது..\\
அவரைப் பற்றிய என்னுடைய பார்வையைத்தான் நான் முன்வைத்திருக்கிறேன். இங்கே பின்னூட்டமிட்டிருக்கும் லட்சுமணனுக்கு ஒரு மாதிரியும், பரமசிவத்துக்கு வேறு மாதிரியும் நினைக்கத்தோன்றுகிறது.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\கடைசிவரைக்கும் அவரின் ரொமாண்டிக் அப்ரோச் உடலை வயதானவராகவும், மனதை இளமையாகவும் வைத்திருந்தது தான் பிரச்சனை.\\

உங்களுடைய இந்தக் கருத்தும் யோசிக்கத்தூண்டும் ஒரு கருத்துத்தான் ஜோதிஜி.

Amudhavan said...

Jayadev Das said...

\\இவர் மாதிரி பிரபலங்கள் கூட தனக்கு வேண்டியவருடன் போனில் பேச முடியாத நிலை. கடிதம் போடணும். இப்போ பாருங்க கை இருக்கிறவங்க எள்ளுக்கும் போன் இருக்கு, வெட்டு நம்பர் இல்லாட்டியும் செல் போன் நம்பர் இருக்கு. உடனுக்குடனே பேச முடியும்.............. காலம் மாறிப் போச்சு......\\

என்னதான் போன் வந்தாலும் மனதில் நினைப்பதைக் கடிதத்தில் சொல்வதுபோல் அழகாக விரிவாக சுதந்திரமாகச் சொல்லமுடியுமா ஜெயதேவ்?

உடனடியாய் வேணும்னா சொல்லலாம்.

ஆனா நிச்சயம் அந்த அழகு மிஸ்ஸிங்தான்.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல நினைவுகூறல் கட்டுரை
நன்றி

வேட்டைக்காரன் said...

மீசைல மண் ஒட்டவில்லைதானே வவ்வால்?

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
Amudhavan said...

கரந்தை ஜெயக்குமார் தங்களுக்கு என் நன்றி.

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...

\\பாலுமகேந்திரா ஒரு நல்ல ஒளிப்பதிவாளர். இருந்த போதிலும் நடிகை ஷோபாவின் தற்கொலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் அவருக்கிருந்த மதிப்பு குறைந்தது உண்மை.\\

அவர் இறந்து முதல் இரண்டு நாட்களுக்கு இணையத்தில் அவருடைய சிறப்புக்கள் மட்டுமே பேசப்பட்டன. இப்போது அவரைப் பற்றிய மற்ற விஷயங்களும் அலசப்படுகின்றன என்றே நினைக்கிறேன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

நீங்க வேற , எல்லாம் கூகிளாண்டவரின் கடாட்சம் இல்லைனா எனக்கென்ன தெரியப்போவுது!

எவ்ளோ விஷயங்கள் தெரியாம , மண்ணாங்கட்டியா இருக்கோம்னு புரிய வைப்பதே கூகிள் தான், எம்.ஜி.வல்லபன் பத்தி கூட அதிகம் தெரியல, பத்திரிக்கைல எழுதுவார்,கதை ,வசனம் எழுதியிருக்கார்னு லேசா தெரியும், பார்த்தால் பல ஹிட் பாடல்கள் எழுதியிருக்காரு, மீன் கொடி தேரில் மன்மத ராஜன், ஒரு தங்க ரதத்தில் மஞ்சள் நிலவு போன்ற பாடல்கள் எல்லாம், ஆனால் ஏன் ஒரு வாலி,வைரமுத்து போல உருவாகாமல் போனார்னு புரியலை.

நீங்க சொல்லி தான் ஹெல்த் வகை பத்திரிக்கைக்கே முன்னோடினு தெரியுது, ஆரம்பிச்சவங்களை விட பின்னாடி வரவங்க தான் அறுவடை செய்றாங்க அவ்வ்!
------------------------------------

#காரிகன்,

//பாலு மகேந்திரா ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதோடு நிறுத்திக்கொள்வது நலம். //

வாங்க நான் மட்டும் தனியா படகுல துடுப்பு போடனுமேனு நினைச்சேன் ,நீங்களும் நம்ம படகுல இருக்கீங்க :-))


# உன் கண்ணில் நீர் வழிந்தாலும் ,இந்தியில் கோவிந்த் நிக்லானி எடுத்த "அர்த் சத்யா(பாதி உண்மை)" படத்தின் ரிமேக் தானே!

நிக்லானி படத்தை கொலைப்பண்ணி இருப்பாங்க தமிழில், இதே போல நிக்லான்னி படமான 'துரோக்காலை" லோகநாய்யகர் பங்குக்கு சிதைச்சிருப்பார் அவ்வ்!

# மறுபடியும் மகேஷ் பட்டின் "அர்த்" படத்தின் ரிமேக் , "உண்மை" என்ற சொல் பாலுமகேந்திராவுக்கு ரொம்ப புடிக்கும் போல அவ்வ்!

# அழியாத கோலங்கள் படத்தில் சலில் சவுத்ரியின் இசையில்

"பொன் வண்ணம் போல நெஞ்சம் பொங்கி நிற்கும் தினம்,

என்றென்றும் இன்ப ராகம் பாடும் நேரம் போடும் தாளம் என்னுள்ளம்..."

பாடல் தான் எனக்கு புடிச்சிருக்கு :-))

அந்த டியூன் வங்களாத்தில கூட பயன்ப்படுத்தப்பட்டிருக்காம்!
----------------------------------------

வேட்டைக்காரன்,

எப்போதுமே பின்னூட்டமிட்டு விட்டு மீண்டும் ஒரு முறை பார்ப்பேன்,பார்த்தால் உங்க அவதானிப்பு அவ்வ்!

எப்போ மண் ஒட்டும்னு காத்திருக்கீர் போல ,ஒட்டின மண்ணை தட்டி விடுங்களேன் :-))

இன்னிக்கு இல்லைனாலும் என்னிக்காவது எல்லார் உடம்பிலும் மண்ணு ஒட்டி ,மண்ணாக போவது நடக்கத்தானே போகுது,எனவே இப்போ கொஞ்சம் மண்ணு ஒட்டினால் ஒன்னும் ஆகிடாது :-))

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை

மனிதன் மீது மண்ணுக்கு ஆசை!

ஸ்ரீராம். said...

ஒருவர் இறந்ததும் அவரைப்பற்றிய நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே முதலில் பேசுவார்கள். மற்ற விஷயங்கள் அப்புறம் வெளி வந்துதானே தீரும். மூன்றாம்பிறை சம்பவம் எனக்குப் புதிது. எவ்வளவு திறமைகள் இருந்தாலும், எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், அந்த மனிதர்களின் பலவீனங்களைக் காட்டுகிறது.

நான் எண்ணும்பொழுது பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். சலீல் சவுத்ரி அதை சுவாமி ஹிந்திப் படத்தில் உபயோகித்திருப்பார். எது முதல் என்று கூகிள் இட்டுப் பார்த்தால் தெரிந்து விடும்!

அவருடைய படங்களில் அழியாத கோலங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது. யாருக்குமே அவரவர்களுடைய பதின்ம வயது நினைவுகள் மறக்க முடியாது என்பதால் நிறையப் பேர்களுக்கு அந்தப் படம் பிடித்துதான் போயிருக்கும்!

ஷோபா மரணம் போலவே, சில்க், திவ்யபாரதி, விஜி போன்ற நடிகைகளின் மரணத்துக்கும் கூட இது மாதிரி பிரபலங்கள் காரணமாயிருக்கலாம்!

ஐஸ்க்ரீம் ரசிப்பதிலிருந்து, இசை, பெண்கள், ஒளி என பன்முக ரசிகத் தன்மை கொண்டவராயிருந்திருக்கிறார் பாலு! கமல் ஹிந்துவில் அவர் பற்றி நன்றாக எழுதி இருந்தார்.

Amudhavan said...

வவ்வால், எல்லாவற்றையுமே தெரிந்துகொண்டு இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படித் தெரிந்திருந்தாலும் அதனால் ஆகபோவது ஒன்றுமில்லை. ஆனால் எழுத வருபவர்கள் சிலவற்றைப் பற்றியாவது தெரிந்து இருக்கவேண்டுமென்பதுதான் அவசியம். அப்படித் தெரியவில்லை என்றால் அதைப்பற்றி எழுதாமலாவது இருக்கலாம். ஆனால் இணையத்தில் பலபேர் அப்படியில்லை. ஒன்றுமே தெரியாமல் இஷ்டத்துக்குப் புகுந்து சுழற்றி அடிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்றுமில்லை என்பதை அவர்கள் எழுத்தே காட்டிக்கொடுத்து விடுகிறது.

ஆனால் சிலபேர் ஆச்சரியப்படுத்துகிறமாதிரி நிறையத் தெரிந்து வைத்திருந்து எழுதுகிறார்கள். ஒரு இருபத்தைந்திலிருந்து முப்பது பேர் வரைக்கும் இம்மாதிரியானவர்களின் பட்டியல் போட முடியும். இதில் சீரியஸாக எழுதும் பதிவர்களையாவது சட்டென்று அடையாளம் காட்டிவிடலாம். ஏகத்துக்கும் கோபப்படுகின்ற வருண் போன்றவர்கள், பல விஷயங்கள் தெரிந்திருந்தும் சினிமா பற்றியே நிறைய எழுதும் பிலாசபி பிரபாகரன் போன்றவர்களும் 'விஷயமறிந்தவர்கள்' பட்டியலில்தான் வருவார்கள்.
எம்.ஜி.வல்லபன் பற்றி அவ்வப்போது நிறையப் பேசுவோம். அவர் ஏன் வாலி வைரமுத்துபோல மிகப் பிரபலக் கவிஞராக வரவில்லை என்று கேட்டிருக்கிறீர்கள். இதுபற்றி பதில் சொன்னால் மறுபடியும் சம்பந்தப்பட்டவரின் ரசிகர்கள் என் மீது காழ்ப்புகொண்டு அவர்களுடைய தூக்கத்தைத் தொலைத்து பிபி, சுகர் என்றெல்லாம் எகிறி அவஸ்தைப்படுவார்கள். இப்போதே தனிப்பதிவெல்லாம் எழுதி மூச்சு முட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் பிறகு வேறு ஏதாவது சமயத்தில் பேசுவோம்.

Unknown said...

பாலு மகேந்திரா பிளஸ் மைனஸ் என்று தலைப்பு வைத்திருந்தால் சரியாக இருந்து இருக்கும் ,உங்கள் அலசல் அருமை !

Amudhavan said...

ஸ்ரீராம். said...

\\நான் எண்ணும்பொழுது பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். சலீல் சவுத்ரி அதை சுவாமி ஹிந்திப் படத்தில் உபயோகித்திருப்பார். எது முதல் என்று கூகிள் இட்டுப் பார்த்தால் தெரிந்து விடும்!

அவருடைய படங்களில் அழியாத கோலங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது. யாருக்குமே அவரவர்களுடைய பதின்ம வயது நினைவுகள் மறக்க முடியாது என்பதால் நிறையப் பேர்களுக்கு அந்தப் படம் பிடித்துதான் போயிருக்கும்!\\

நீங்கள் சொல்வது உண்மைதான். பதின்ம வயது ஞாபகங்களை அழகியல் வடிவில் ஒவ்வொரு மனதிலும் மீண்டும் உயிர்ப்பித்த படம் அழியாத கோலங்கள்.

அது காப்பி என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அதுபோல தமிழில் யாரும் அதற்கு முன்னே சொல்லியிருக்கவில்லை என்பதுதான் இங்கே முக்கியமாகிவிடுகிறது.

நான் எண்ணும்பொழுது பாடல் நீங்கள் சொல்லியதுபோல் வங்கத்தில் முதலில் வந்திருக்கலாம். ஏன் பிறகு இந்தியிலும் வந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.
பல மொழிப் படங்களுக்கு டியூன் போடும் எல்லா இசையமைப்பாளர்களும் செய்கின்ற வேலைதான் அது. கேவிமகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா, ரகுமான் எல்லாருமே இதைத்தான் செய்வார்கள், செய்திருக்கிறார்கள்.
ஒரு மொழியில் பாப்புலரான அதே பாடல் இங்கும் பாப்புலராகும் என்பதற்காகவும் போடுவதுண்டு.
அட, அந்த மொழியிலே இந்தப் பாடல் பாப்புலராகாமல் போய்விட்டதே இந்த மொழியில் நிச்சயம் பாப்புலராக்கிக் காட்டுவோம் என்பதற்காகவும் அதே டியூனை இன்னொரு மொழியில் போடுவதுண்டு.

ஸ்ரீராம். said...

ஹிந்தியில் அல்லது வாங்க மொழியில் வந்ததை தமிழில் போட்டதை நான் குறையாகச் சொல்லவில்லை. ஒரு தகவலாகத்தான் சொன்னேன். இதே சுவாமி பாடல் டைட்டில் சாங் எனப்படும் பாடல் (பல்பர் மேரே கியா ஹோகயா) பாடலின் டியூனை சலீல்தா மலையாள 'அவளோடே ராவுகள்' படத்தில் உபயோகித்திருப்பார்.

இளையாராஜாவின் மௌனராகம் பாடல்களை அவர் ஹிந்தி 'சீனிகம்' படத்திலும், 100வது நாள் பாடலான 'விழியிலே மணி விழியில்' பாடலை முன்னரே கன்னடத்திலும் (கன்னடத்தில் இன்னும் நன்றாக இருக்கும்) இன்னும் இது போன்ற ஒரு மொழியில் பிரபலமான பாடல்களின் டியூனை பிற மொழிகளில் அந்தந்த இசையமைப்பாளர்களே உபயோகித்திருப்பதை கேட்டிருக்கிறேன்! :)))

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள அமுதவன் அவர்களுக்கு, எனது கருத்துரையில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது.

// அவருடைய அழியாத கோலங்கள் எனக்கு பிடித்தமான படம். அந்த படத்தில் வரும் நடிகர் விஜயன் பாத்திரப் படைப்பு இவருடைய குணாதிசயத்தின் பிரதிபலிப்போ?//

உதிரிப் பூக்களில் நடித்த நடிகர் விஜயனை இங்கு தவறாக குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். டைரக்டர் மகேந்திரன், டைரக்டர் பாலு மகேந்திரா பெயர்க் குழப்பம் எனக்கு. மன்னிக்கவும்.

தி.தமிழ் இளங்கோ said...

பாலுமகேந்திரா பற்றிய உங்களது மலரும் நினைவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பாலுமகேந்திரா ஒரு நல்ல ஒளிப்பதிவாளர். இருந்த போதிலும் நடிகை ஷோபாவின் தற்கொலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் அவருக்கிருந்த மதிப்பு குறைந்தது உண்மை.

Anonymous said...

பாலு மகேந்திரா சதா இயக்குனர், காப்பி இயக்குனர் என்றெல்லாம் வசை பாடியிருக்கும் அறிவாளிகள்
மறந்தும் கூட பாலுவின் சிறந்த , ஒரிஜினல் படைப்புகளான வீடு , சந்தியாராகம் பற்றி மூச்சு கூட விடவில்லை (அமுதவன் உட்பட )

இதில் இருந்து இங்குள்ளவர்களின் நட்டநடுநிலைமை புரிகின்றது. வவ்வால் பல விடயங்களை பல இடங்களில் பேசினாலும் அவர் பக்கச்சார்பாளர் என்பது தெரியும். ஆனால் நட்டநடுநிலமையாளர் போன்று வேஷம் போட்டு வந்த காரிகனின் வேஷம் கலைந்தது தான் அதிசயம்.

பாலு மகேந்திரா விமர்சனத்துக்கு அப்பால் பட்டவர் , அவர் படைப்புகள் அனைத்தும் உச்சம் என்று கூறுவது எனது நோக்கம் அல்ல. அவரை படைப்பு சார்ந்தது விமர்சிப்பவர்கள் அவரின் ஒரு சிறந்த படைப்பை திட்டமிட்டு மறைத்தமையை எப்படி சொல்வது ...

பாலு படத்தில் வந்த பாடல் ... காரிகனுக்கு

நீல சாயம் வெளுத்து போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலஞ்சு போச்சு
டும் டும் டும் டும்

siva gnanamji(#18100882083107547329) said...

M.G.Vallabhan....was he not the manager for lalitha ,padmini and rahini?

ரெங்கா... said...

அமுதவன் பக்கங்கள் படிப்பதற்கு ஆர்வத்தை உண்டாக்கலாம். ஆனால் பாலு மகிந்திரா உயிரோடு இருக்கும் போது அவர் பற்றிய இந்த விஷயங்களை எழுதியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். அவர் இறந்த பிறகு அவர் பற்றிய இரண்டாம் தகவல்களை அனைவருக்கும் விருந்து படைப்பது நாகரீகமாக இருக்காது.
இந்த விஷயத்தை யாரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ளதாது ஆச்சர்யமாக இருக்கிறது.

காரிகன் said...

வாங்க அனானி,
இப்படி பெயர் இல்லாமலே வந்து நல்லாவே கதகளி ஆடுறீங்க... அதுசரி விஷயத்துக்கு வருவோம். என் வேஷம் கலைந்தது அதிசயமா? நான் அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லங்க. நீங்கதான் என்னபத்தி கொஞ்சம் அதிகமா நினைச்சிருக்கீங்க போல தோணுது.
பாலு மகேந்திரா ஒரு காப்பிகேட் என்பதில் சந்தேகமேயில்லை. அதை நான் சொல்வது உங்களுக்கு வலித்தால் நான் என்ன செய்ய முடியும்? வீடு படம் பற்றி அப்போது அடிபட்ட செய்தியையும் சொல்லியிருக்கிறேன்- அதுவும் ஒருவிதத்தில் சுடப்பட்ட கதையே என்று. சந்தியா ராகம் நான் பார்க்கவில்லை. நல்ல படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் எத்தனை பாலு ரசிகர்கள் இந்தப் படங்களை அவருடைய முத்திரையாக எண்ணுகிறார்கள் என்பது விவாதத்திற்குரியது. அவர்கள் சிலாகிப்பதெல்லாம் அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, மூடுபனி.. பிறகு சமீபத்தில் வந்த தலைமுறைகள். குறிப்பாக மூன்றாம் பிறை படமே பாலு மகேந்திராவை ரசிகர்கள் நெஞ்சில் உறைய வைத்தது. உண்மையை சொல்லவேண்டுமென்றால் மூன்றாம் பிறை ஒரு அபத்தமான கதையைக் கொண்டது. லாஜிக் அந்தப் படம் முழுவதும் உதைத்துக் கொண்டேயிருக்கும் அப்பட்டமான சினிமாத்தனம் உள்ளடக்கியது பாடல்களாலும் நேர்த்தியான ஒளிப்பதிவினாலும் சிறிய காட்சிகளாலும் பாலு மகேந்திரா நம்மை படத்தில் இல்லாத லாஜிக்கைப் பற்றி சிந்திக்கவிடாமல் செய்திருப்பார். உடனே ரஜினி, விஜய், அஜித், படங்களில் மட்டும் என்ன லாஜிக் என்று களத்தில் குதிக்கவேண்டாம்.
நடைமுறையில் சாத்தியப்படாத திரைக்கதையை வைத்து முழு படத்தையும் நகர்த்தியிருப்பார் இயக்குனர். காணாமல் போன மகளை கவலைப்படாமல் தேடும் பெற்றோர் ஒரு பக்கம், பரிதாபமான பெண்ணை வெகு எளிதாக எதோ திருவிழாவில் பஞ்சு மிட்டாய் வாங்கிகொண்டு வருவதுபோல கதாநாயகன் கூட்டிக்கொண்டு வருவது, அவரைப் பற்றி அந்த ஊரில் யாருமே விசாரிக்காமலிருப்பது, வானொலி, தினசரிகளில் காணாமல் போனவர்கள் விவரம் வராமலிருப்பது, போலிஸ் என்று யாரும் கண்ணில் தென்படாமலிருப்பது, (அவ்வப்போது அவர்கள் வருவார்கள்), இப்படி கொண்டுவந்த பெண்ணை உரியவர்களிடத்தில் ஒப்படைக்கவேண்டிய பள்ளி ஆசிரியர் அவளுக்கு கதை சொல்லிக்கொண்டும் சில்க் சுமிதாவுடன் ரசனையாக நடனமாடிக்கொண்டும் எதோ அந்தப் பெண்ணுடன் மாமன் மகள் போல ஒட்டுறுவாடுவதும் (ஆனால் காதல் கிடையாது) எத்தனை அபத்தங்கள்.... இதையாவது மன்னித்தோமானால் இறுதியில் அம்னீசியாவை குணப்படுத்தும் படு செயற்கையான திருப்பம். லேகியம் விற்கும் சாமியார் போன்ற ஒருவர் ஒருநாள் முழுவதும் எதோ பச்சிலை கட்டி அம்னீசியாவை ஒரே நாளில் குணப்படுத்திவிடுவார். சரி போகட்டும் என்று பார்த்தால்கடைசி காட்சியில் மகளின் பெற்றோர்கள் இத்தனை காலம் தங்களின் மகளை நல்லபடியாக வைத்திருந்த நாயகனை நியாயப்படி பார்த்து நன்றி சொல்லிவிட்டல்லவா சென்றிருக்கவேண்டும்? எந்த ஊரிலாவது காணமால் போன மகளை கண்டுபிடிப்பவர்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து பெண்ணை அழைத்துச் செல்வது போலவா போவார்கள்? ஏன் என்று பார்த்தால் இறுதிக் காட்சியில் நாயகனுக்கு ஒரு சவாலான நடிப்புக்கான இடம் வேண்டுமல்லவா? அவர் குதித்து உதைத்து உருண்டு ஆடி ஓடி அழுது பார்பவர்களையும் அழவைத்து... அடடா என்ன நடிப்பு என்று ரசிகர்கள் சொல்லவேண்டுமானால் அங்கே யதார்த்தம் இருக்கக்கூடாது. அதற்காகத்தான்.... பாலு மகேந்திரா யதார்த்தமான படங்களை எடுத்தார் என்று துணிந்து யாராவது சொல்லமுடியுமா? சினிமாத்தனங்கள் குறைவான படங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அவராலும் சில அபத்தக் கோடுகளைத் தாண்டிவரமுடியவில்லை.

காரிகன் said...

அனானிக்கு,
மூன்றாம் பிறையைப் பற்றி நான் எழுதியது கொஞ்சமே. இன்னும் நிறையவே இருக்கிறது. தனி பதிவே தேவைப்படும். ஏன் மூன்றாம் பிறை என்றால் நீங்கள்தான் அந்தப் படத்தில் வரும் ஒரு கதை சொல்லும் பாடலை எனக்காக குறிப்பிட்டு, டும் டும் டும் என்று பாடியிருந்தீர்கள். இதே போல பாலு மகேந்திராவின் "யதார்த்தமான" படங்கள் என்று சிலர் சிலாகிக்கும் படங்களை எல்லாம் என்னால் கூறு போட முடியும். காப்பியாக இருந்தாலும் அழியாத கோலங்கள், மூடுபனி இரண்டும் அவர் படங்களில் சற்று பரவாயில்லை ரகம். வீடு, சந்தியா ராகம் இரண்டும் ஆவணப் படங்கள் (Documentary movies) வரிசையில் சேர்க்கப்படவேண்டியவை என்பது என் கருத்து.

Amudhavan said...

Anonymous said...

\\பாலு மகேந்திரா சதா இயக்குனர், காப்பி இயக்குனர் என்றெல்லாம் வசை பாடியிருக்கும் அறிவாளிகள்
மறந்தும் கூட பாலுவின் சிறந்த , ஒரிஜினல் படைப்புகளான வீடு , சந்தியாராகம் பற்றி மூச்சு கூட விடவில்லை (அமுதவன் உட்பட )\\

அனானி, காரிகன் பற்றிய உங்கள் விமரிசனத்திற்கு அவர் பதிலளித்திருக்கிறார்.
மற்றபடி நான் இந்தப் பதிவை பாலுமகேந்திரா படைப்புக்களின் விமரிசனமாக எழுதவில்லை. பாலுமகேந்திரா என்றதும் என்னுடைய மனதில் என்னென்ன நினைவுகள் வருமோ அந்த நினைவுகளையும் அனுபவங்களையும்தான் எழுதியிருக்கிறேன். அவரைப் பற்றியும் அவர் திறமைகளைப் பற்றியும் சிலாகித்தே சொல்லியிருக்கிறேன். பின்னூட்டத்தில்கூட ஒரு பதிலில் -
'பதின்ம வயது ஞாபகங்களை அழகியல் வடிவில் ஒவ்வொரு மனதிலும் மீண்டும் உயிர்ப்பித்த படம் அழியாத கோலங்கள்.

அது காப்பி என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அதுபோல தமிழில் யாரும் அதற்கு முன்னே சொல்லியிருக்கவில்லை என்பதுதான் இங்கே முக்கியமாகிவிடுகிறது.' என்றுதான் சொல்லியிருக்கிறேன். இது 'வசை' அல்ல என்றே நினைக்கிறேன். மற்றபடி அவரைப் பற்றிய ஞாபகங்களின் தொகுப்புதான் நான் எழுதியிருப்பது.

\\வவ்வால் பல விடயங்களை பல இடங்களில் பேசினாலும் அவர் பக்கச்சார்பாளர் என்பது தெரியும்.\\

வவ்வால் எந்தப் பக்கத்துக்காரர், எந்தச் சார்புடையவர் என்பதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலாகவே இருக்கிறேன்.

Amudhavan said...


siva gnanamji(#18100882083107547329) said...

\\ M.G.Vallabhan....was he not the manager for lalitha ,padmini and rahini?\\

சிவஞானம், பத்திரிகைத்துறையில் இருந்த பலர் பிரபலமான கதாநாயகர்களுக்கும் கதாநாயகிகளுக்கும் பிஆர்ஓவாக இருந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். வல்லபன் அப்படி இருந்தாரா என்பது தெரியாது. அவருடனான பல வருட நட்பில் எத்தனையோ விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் சொன்னதில்லை. அதனால் இதுபற்றிய என்னுடைய பதில் ; 'தெரியாது.'

காரிகன் said...

மீண்டும் அனானிக்கு,
"நீல சாயம் வெளுத்து போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலஞ்சு போச்சு
டும் டும் டும் டும்"

ராஜாவின் வேஷம் கலைஞ்சு போயி ரொம்ப காலம் ஆச்சேப்பா. உங்களுக்கு இப்பத்தான் தெரியுதாக்கும்.இதைத்தானே அமுதவனும் நானும் சொல்லிகிட்டேயிருக்கோம்.

Amudhavan said...

ரெங்கா... said...

\\அமுதவன் பக்கங்கள் படிப்பதற்கு ஆர்வத்தை உண்டாக்கலாம். ஆனால் பாலு மகிந்திரா உயிரோடு இருக்கும் போது அவர் பற்றிய இந்த விஷயங்களை எழுதியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். அவர் இறந்த பிறகு அவர் பற்றிய இரண்டாம் தகவல்களை அனைவருக்கும் விருந்து படைப்பது நாகரீகமாக இருக்காது.
இந்த விஷயத்தை யாரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ளதாது ஆச்சர்யமாக இருக்கிறது.\\

மேலே சொன்னது மாதிரி பாலுமகேந்திரா என்றதும் என்னுடைய மனதில் என்னென்ன நினைவுகள் வருமோ அந்த நினைவுகளையும் அனுபவங்களையும்தான் எழுதியிருக்கிறேன். அவரைப் பற்றியும் அவர் திறமைகளைப் பற்றியும் சிலாகித்தே சொல்லியிருக்கிறேன். சில விஷயங்களைச் சொல்லாமல் விடும் நாகரிகம் எனக்கும் தெரியும். அதே போல சில விஷயங்களை அவர்கள் உயிருடன் இருக்கும்போது சொல்லாமல் இருப்பதும் நாகரிகம்தான்.
இன்னும் சிலருடைய விஷயங்களில் கேள்விப்படும் எல்லாவற்றையும் சொல்லாமல் மிகச்சில விஷயங்களை மட்டுமே தவிர்க்க இயலாமல் கோடிகாட்டிச் செல்வதும் எழுத்துத்துறையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மரபுதான்.
திரைப்படத்துறையில் தங்களுக்குப் பெண்களுடன் ஏற்பட்ட தொடர்புகளை நிறையப்பேர் வெளிப்படையாகவே அவர்களாக முன்வந்தே பேசியிருக்கிறார்கள்.
கண்ணதாசன் பேசியிருக்கிறார், வேலுபிரபாகரன் சிலுக்கு பற்றிச் சொல்லியிருப்பதையெல்லாம் நீங்கள் படித்ததில்லை போலும். போகட்டும், பாலுமகேந்திரா ஷோபா பற்றி எழுதிய தொடராவது படித்திருக்கிறீர்களா?
ஒரு வரம்புக்குள் இருந்தபடிதான் இந்தப் பதிவு எழுதப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். தங்கள் கருத்திற்கு நன்றி.

காரிகன் said...

அமுதவன் அவர்களே,
பாலுவைப் பற்றி திரு. வருண் தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கும் பதிவு உங்கள் பார்வைக்கு.

http://timeforsomelove.blogspot.in/2014/02/blog-post_16.html

வேட்டைக்காரன் said...

// ஒரிஜினல் படைப்புகளான வீடு , சந்தியாராகம் பற்றி மூச்சு கூட விடவில்லை (அமுதவன் உட்பட )

இதில் இருந்து இங்குள்ளவர்களின் நட்டநடுநிலைமை புரிகின்றது. வவ்வால் பல விடயங்களை பல இடங்களில் பேசினாலும் அவர் பக்கச்சார்பாளர் என்பது தெரியும். ஆனால் நட்டநடுநிலமையாளர் போன்று வேஷம் போட்டு வந்த காரிகனின் வேஷம் கலைந்தது தான் அதிசயம். //

ஹாஹ்ஹா....
என்னங்க இப்படி சொல்லீட்டாரு?

போகட்டும், 90கள்ல SAP சிறப்பாசிரியர் அப்படின்னு வச்சு வாராவாரம் குமுதம் போட்டப்போ, பாலு மகேந்திராவும் ஒருவாரம் இதழ் தயாரித்தார். அந்த வாரத்தில் அவரின் (முதல்?) சிறுகதையென்று ஒன்று கொடுத்திருந்தார். அது யாருக்கும் நினைவுக்கு வருகிறதா?

விடலைச் சிறுவன் ஒருத்தன் தன் ஒன்றுவிட்ட மூத்த சகோதரியுடன் மையல் கொண்டது போன்ற incest கதை!

வவ்வால் said...

அனானிங்க்ணா,

வாங்கண்ணா ,வணக்கங்ண்ணா!

//இதில் இருந்து இங்குள்ளவர்களின் நட்டநடுநிலைமை புரிகின்றது. வவ்வால் பல விடயங்களை பல இடங்களில் பேசினாலும் அவர் பக்கச்சார்பாளர் என்பது தெரியும். ஆனால் நட்டநடுநிலமையாளர் போன்று வேஷம் போட்டு வந்த காரிகனின் வேஷம் கலைந்தது தான் அதிசயம். //

அடேங்கப்ப்பா பெரிய "ISO 9000-2000" சான்றிதழ் ஆப்பீசரா இருப்பார் போல , எல்லாருக்கும் சுண்டல் விநியோகம் செய்றாப்போல "சான்றிதழ்" அள்ளி வீசுறார் :-))

ஓய் நீர் வழங்கும் "நட்ட நடுநிலைவாதி" சான்று வச்சு காலையில கக்கூஸ்ல தண்ணி வரலைனா தொடைச்சுக்க பயன்ப்படுத்த முடியுமா?

ஒன்னியும் பயனில்லை,அப்புறம் என்ன எழவுக்கு நட்ட நடுநிலைனு நீர் சொல்லி நாங்கலாம் வாங்கிக்கணுமா?

ஆமாம் நீர் என்ன நட்ட நடுநிலைவாதியா இல்லை வாந்தியா? யார்யா நீ அனாமாத்து அனானி இதுல எங்களுக்கு எப்படினு சான்று கொடுக்க கிளம்பிட்டீர்?

இதுக்கு முன்ன நீர் எங்க ஒட்டிக்கிடந்தீர் ,இப்ப எங்க ஒட்டிக்கிடக்கீர்னு யாருக்கு தெரியும்?

ஆமாம் ராசா நான் பக்கசார்புள்ளவன்னு சொன்னீர் எத்தினி பக்கம்னு சொல்லவேயில்லை அவ்வ்!

பக்கசார்புள்ளவன்னு தெரியுமா? உமக்கு எல்லாம் தெரியும் போல அப்படினா இப்போ எனக்கு எங்கே அரிக்குதுனு சொல்லும் :-))

// பாலுவின் சிறந்த , ஒரிஜினல் படைப்புகளான வீடு , சந்தியாராகம் பற்றி மூச்சு கூட விடவில்லை (அமுதவன் உட்பட )//

அய்யோ ராசா, நான் மூச்சு விட்டா அனல் அடிக்கும் ,கனல் பறக்கும்னு தெரியாதா?

சும்மா கிடக்க என்ன சொறிஞ்சு விட வரும் போதே தெரியுது ,உமக்கு பாலுமகேந்திரா மேல செம காண்டு , என்னை கிளப்பி "சகுனி" வேலை செய்தால் "சந்தியாராகம்" சப்பானிய படம் காப்பினு உண்மைய போட்டு உடைப்பேன்,அத வச்சு உமது பாலுமகேந்திரா வெறுப்பை தீர்த்துக்கலாம்னு தானே :-))

கவனிக்க ,நான் பாலுமகேந்திரா படம் பத்திலாம் அலசவேயில்லை பொதுவா பேசிட்டு இருக்கேன் ,எதுக்கு வீணாக வேலில தொங்குற வவ்வாலை வேட்டியில விடுறீர் ,கடிச்சா கண்டம்!
--------------

அமுதவன் சார்,

எம்ஜி.வல்லபன் மற்றும் பற்றி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்,நல்ல தீனியாக அமையும்(சிந்தனைக்கு)!

அனானிகளின் அமோக ஆதரவு இருக்கும் வரைக்கும் ,உங்க கடைக்கு "நல்ல விளம்பரம்" கிடைக்கும். அவர்கள் சொல்வதை எல்லாம் மனசுக்குள் போட்டுக்கொள்ளவே கூடாது, எல்லாமே சிரிப்பு தான்னு என்சாய் பண்ணனும் :-))
--------------------------

காரிகன் said...

அமுதவன் அவர்களே,

பாலஹனுமான் என்னும் நண்பரின் தளத்தில் திருமதி சுஜாதா எண்ணுகிறேன் எழுதுகிறேன் என்று ஒரு தொடர் எழுதிவருகிறார். நீங்கள் அதை படித்திருக்காத பட்சத்தில் இதோ அதன் லிங்க்.

http://balhanuman.wordpress.com/2014/02/16/1-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9/

Amudhavan said...

காரிகன், இதன் சில பகுதிகளை சாரு நிவேதிதா தரும் லிங்குகள் மூலம் சைரன் இதழில் வாசித்திருக்கிறேன். தங்கள் தொடுப்புக்கு நன்றி.

வேட்டைக்காரன் said...

//எப்போ மண் ஒட்டும்னு காத்திருக்கீர் போல ,ஒட்டின மண்ணை தட்டி விடுங்களேன் :-))

இன்னிக்கு இல்லைனாலும் என்னிக்காவது எல்லார் உடம்பிலும் மண்ணு ஒட்டி ,மண்ணாக போவது நடக்கத்தானே போகுது,எனவே இப்போ கொஞ்சம் மண்ணு ஒட்டினால் ஒன்னும் ஆகிடாது :-))//

மீசைல மண் ஒட்டுறது எல்லோருக்கும் ஜகஜந்தானே தல. To err is human!
எங்கே MGRக்கு ஒரு ட்வின் பிரதர் இருந்தாரு. அவரோட பத்திரிகையத்தான் எம்.ஜி.வல்லபன் நடத்துனாருன்னு இணையத் தரவுகள் தந்துருவீங்களோன்னு பயந்திட்டேன். Mauf keejiye.

ஜோதிஜி said...

அமுதவன்

உங்கள் பதிவுகளை அதற்கு வரும் பின்னூட்டங்களை ஒவ்வொரு முறையும் கவனிக்கும் போது...............

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.

Anonymous said...

பாலு மகேந்திரா பற்றி சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்)

தூர்தர்ஷனின் சிறப்பு தமிழ்ச் சிறுகதைகள் வரிசையில் ‘பரிசு’ சிறுகதையை பாலுமகேந்திரா தொலைப்படமாக்கி இருக்கிறார். அது தொடர்பாக என்னைப் பேட்டி எடுத்தார். பேட்டி என்பதைவிட, இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்னை ஒரு அறையில் செயற்கை விளக்கில்லாமல் ஜன்னலோரம் உட்கார்த்தி வைத்து, ஒரே ஓர் தெர்மோகோல் வைத்துவிட்டு, காமிரா கோணத்தைச் சற்று திருத்தி அமைத்துவிட்டு எதிரே உட்கார்ந்து கொண்டார். பல விஷயங்கள் பற்றிப் பேசினோம். பேட்டி முடிந்து படம் போட்டுக் காட்டினபோது, ‘அட…. இது நானா….?’ என்று ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் பயன்படுத்தும் காமிராதான். தெர்மோகோல் ஏராளமாக சென்னையில் கிடைக்கிறது. இருந்தும், எதை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு பாலுமகேந்திரா தான் இருக்கிறார்.

Anonymous said...

பாலு மகேந்திரா பற்றி சுஜாதா கூறுகிறார்….

பாலுவுடன் பழக்கம் என் ஆரம்ப எழுத்துக் காலங்களிலேயே தொடங்கியது.

விசாகப்பட்டணத்தில் அவர் ‘சங்கராபரணம்‘ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘மறுபடியும் கணேஷ்‘ படித்துவிட்டு, அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்டு அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.

பெங்களூருக்கு அவர் ‘கோகிலா‘ படம் எடுக்க வந்திருந்தபோது, கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார். மூவரும் நிறையப் பேசினோம்

பின்னர், ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘வை பாலு மகேந்திரா எடுப்பதாக, நடராஜன் (பிற்பாடு பிரமிட்) தயாரிப்பதாக, காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது. திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார். ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

பாலு அதற்குப் பதில் ‘மூடுபனி‘ எடுத்தார். பின்னர், பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை எழுத, அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம். அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது. ஓரளவுக்கு பாலு மகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள் பத்தையும், ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார். சற்றே சமாதானமானோம்.

அந்தச் சமயத்தில் ஷோபாவைச் சந்திக்க நேர்ந்தது. சட்டென்று அறைக்குள் நுழைந்து பாலுவின் கழுத்தை ‘அங்கிள்’ என்று கட்டிக்கொண்டார். என்னுடன் வந்திருந்த என் மனைவி வீட்டுக்கு வந்ததும், ‘இது அங்கிள் உறவு இல்லை’ என்றாள். சில தினங்கள் கழித்து குமுதம் இதழில் இருவரும் மணந்து கொண்ட செய்தி போட்டோவுடன் வந்திருந்தது. அடுத்த ஆண்டு அந்தப் பெண்ணின் தற்கொலைச் செய்தி.

அந்த இளம் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று வியந்திருக்கிறேன். அதுபற்றி பாலு சொனன தகவல்கள் அந்தரங்கமானவை. அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை.

Anonymous said...

சுஜாதாவின் பல நாவல்கள், படமாக்கப்படும்போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கப்படுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம். ஆயினும் அவரே ‘தன் நாவல்கள் இவரால் படமாக்கப் படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.

அம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே பாலு மகேந்திரா பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில். எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை. தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”

Anonymous said...

ஷோபா விவகாரத்தின் பிடிப்பிலிருந்து பாலு மகேந்திரா விடுபட்டிருக்கிறார் என்று என்னை எண்ண வைத்தது அவருடைய உற்சாகமான, சந்தோஷமான மனப்போக்கு. "அது என்ன ஆயிற்று?" என்று கேட்டேன். "It is going on" என்றார் சுருக்கமாக. "என்னுடைய அழுகைகள் எனக்குள்ளே தான் ஒலிக்கும். வெளியே கேட்காது. அப்படிப் பக்குவப்பட்டிருக்கிறேன்" என்றார் கவித்துவமாக. ஆனால் உள்ளேயும் அழுது கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. Far from it.

அவருடைய present obesssion - ஸ்ரீதேவி. கமலையும், ஸ்ரீதேவியையும் வைத்து மூன்றாம் பிறை டைரக்ட் செய்து வருகிறார். "சொன்ன உடனே எதையும் கிரகித்துக் கொள்கிறார். understanding ஆகச் செய்கிறார். சிவாஜிக்கு ஒரு மனோகரா மாதிரி, நாகேஸ்வர ராவுக்கு ஒரு தேவதாஸ் மாதிரி இது அவருடைய கேரியரிலேயே மைல் கல்லாக இருக்கப் போகிறது" என்றார்.

--லைட்ஸ் ஆன் - வினோத் (ரா.கி.ரங்கராஜன்)

Anonymous said...

பாலு மகேந்திரா basically ஒரு கவிஞர் என்பது சாலிகிராமம் சொந்த வீட்டின் மாடியில் தனக்கென்று அவர் அமைத்துக் கொண்டிருக்கும் காட்டேஜைப் பார்த்தாலே புரியும். கீற்றுக் கொட்டகை மாதிரி வெளியே காட்சி தந்தது. உள்ளே அழகிய மூங்கில் தட்டிகளும், மழைத் தொட்டிகளும், இரண்டொரு ஓவியங்களும் வனப்பான புதுக் கவிதை. ஹரிசங்கர் என்ற பத்து வயது மகனிருக்கிறான். அவனைச் சினிமாவில் விடப் போவதில்லை என்று ஒப்புக்குக் கூடச் சொல்லத் தயாராயில்லை. "சினிமா உலகின் பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் கவனித்தபடியே வளர்ந்து வருகிறான். எப்படி வேறு வாழ்க்கைக்கு அவன் செல்ல முடியும்?" என்கிறார். இசை, நடனம், புகைப்படம் இவற்றில் அவனைப் பழக்கி வருவதாகச் சொன்னார்.

"காதல் உட்பட எதையும் எழுத்துக்களால் சொல்ல முடியாது. ஒரு கோணத்தில் நூறு கோடி பாவங்களைக் கொண்டுவர முடியும்" என்கிறார் சற்றே இலங்கை வாடை அடிக்கும் உச்சரிப்பில். (பிறப்பினால் இலங்கைக்காரர்)

"தண்ணீர் தண்ணீர் மாதிரி ஒரு படம் வரும் என்றோ, வெற்றிகரமாக ஓடும் என்று ஒரு பத்து வருஷம் முன்பு நாம் கற்பனை செய்திருக்க முடியுமா?" என்றார்.

--லைட்ஸ் ஆன் - வினோத் (ரா.கி.ரங்கராஜன்)

Amudhavan said...

தங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி பாலஹனுமான். நீங்கள் பகிர்ந்திருக்கும் இருபெரும் எழுத்தாளர்களான ராகி.ரங்கராஜன் மற்றும் சுஜாதா ஆகியோரின் எழுத்துக்கள் பாலுமகேந்திரா என்ற கலைஞனின் மகத்துவத்தை நாம் மேலும் அறிந்துகொள்ள வகை செய்கிறது.

Anonymous said...

பாலு மகேந்திரா பற்றி R P ராஜநாயஹம்...

http://rprajanayahem.blogspot.com/2012/09/blog-post_24.html

Sep 16, 2008
நான் மேட்டூரில் கிருஷ்ணா லாட்ஜில் நடிகர் கல்யாண்குமார் அவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசிய விஷயங்கள் பிரமிக்க வைத்ததாக அந்த படத்தில் நடித்த நடிகை ஒருவர்(இவர் சாதாரணமாக என் பேச்சு, பாட்டு,உடை எல்லாவற்றிற்குமே ரொம்ப லயித்து போவார் )மற்றொரு நடிகையிடம் சொல்லிவிட்டார்.

அவர் எனக்கு அடுத்த அறையில் தான் தன் தாயாருடன் இருந்தார்.
நான் என் அறைக்குள் நுழைய போன போது என்னை அவர் அறையிலிருந்து 'சார் சார் ' - கூப்பிட்டார் .

இந்த நடிகை எப்போதுமே சாதாரணமாக என்னிடம் இலக்கியம் தான் பேசுவார். என்னைப்பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்தது.

தி. ஜா வின் கமலம் குறுநாவலை பற்றி என்னிடம் ' என்னமா எழுதுறார் சார் உங்க ஜானகி ராமன் '

'இது என்ன புஸ்தகம் சார் ஒங்க கையிலே.

’நான் 'அந்த்ராய் தார்கோவ்ஸ்கி பற்றிய புத்தகம் '

'நீங்க ஒருத்தர் தான் சார் இங்க வித்தியாசமான ஆள். '


'சார் உங்களை பத்தி ஒன்னு கேள்விப்பட்டேன். ஆன்மிகம் பற்றி பின்னி எடுத்துட்டீங்கலாம். எனக்கு ஒரு குருநாதர் இங்கே ஈரோடு பக்கம் உண்டு சார். அந்த ஆஸ்ரமத்துடைய பத்திரிகை இது. படிச்சி பாருங்களேன்.'

அடடா நம்மை பண்டார சன்னதிகளோடு சேர்த்து நினைக்கிறாரே. சாதாரண உரையாடல் சிலருக்கு எப்படியெல்லாம் அர்த்தமாகிவிடுகிறது ...இருந்தாலும் அவர் கொடுத்த அந்த பத்திரிகை யை கையில் வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்து புரட்ட ஆரம்பித்தேன்.

அதிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது.

அது ஒரு கடிதம். இந்த நடிகை எழுதியிருக்கிறார். இவர் அறிமுகமான படத்து இயக்குனருக்கு. அவர் மிக பெரிய இயக்குனர்.

ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருந்த நிலையில் பல வருடம் முன் ஒரு சிறந்த நடிகையை திருமணம் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டு அதனால் பல சிரமங்களுக்கு உள்ளானவர்.

அவரை இவர் பெயர் சொல்லி ஒருமையில் எழுதியிருந்தார். காதல் கடிதம் தான்.

"அன்று ஷூட்டிங் முடிந்து சேலம் ரயில் நிலையத்தில் கிளம்ப காத்திருந்த போது, உனக்கு நினைவிருக்கிறதா. நான் ரயில் நிலையத்தில் தலைக்கு பூ வாங்கி வைத்து கொண்ட போது நீ என்னருகில் வந்து பூவை முகர்ந்து பார்த்தாயே."

எனக்கு அப்போது மறைந்த அந்த நடிகை பற்றியும், இப்போது இந்த நடிகை அதே இயக்குனரிடம் காதல் கொண்டிருப்பது பற்றியும் எண்ணம் எந்த வகையில் என சொல்ல முடியாமல் பல சிந்தனை.

கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் அறைக்குள் நுழைந்து ' நீங்க கொடுத்த பத்திரிக்கையில் இருந்தது ' என்று கொடுத்தேன்.

அவர் அம்மா மகளை ஒரு பார்வை பார்த்தார்.

பொதுவாக சினிமாஉலகில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் பெரிய ரகசியமெல்லாம் கிடையாது. ஒருவேளை அந்த அம்மாவே கூட அந்த இயக்குனருக்கு எழுதப்பட்ட கடிதத்தை மகளுக்கு Dictate செய்திருக்கலாம் . அதனால் என்ன இப்படி கவனக்குறைவாய் இருக்கிறாய் என்ற பார்வை தான் பார்த்தார்.

அந்த நடிகை நன்றியோடு என்னை பார்த்தார்.'தாங்க்ஸ் சார் ...ரொம்ப தாங்க்ஸ் சார் ...'

அவருக்கு தெரியும். என்னை தவிர வேறு யார் கைக்காவது போயிருந்தால் ரகசியம் அம்பலமாகியிருக்கும். கிசுகிசு பத்திரிகை செய்தியாக கூட வந்திருக்கும்.

அந்த நடிகை சின்னத்திரை ரேவதி என பின்னால் பிரபலமானார்!

இப்போது இரண்டு மூன்று வருடம் முன் பாலு மகேந்திரா என் கணவர் தான் என்று பேட்டி கொடுத்த மௌனிகா தான்.

பாலு மகேந்திராவும் அவரை தன் இரண்டாவது மனைவி என்றே சொல்லிவிட்டார். இப்போது இந்த விஷயத்தை நான் எழுதுவதில் தவறில்லை தானே.

Anonymous said...

சுஜாதா பற்றி பாலு மகேந்திரா…

“போன டிசம்பர்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்கள் எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா.”

‘எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்கிராரு.’ ‘கற்றதும் பெற்றதும்’ தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார்.

முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனைச்சேன்.

‘பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது’ அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னது தான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்னு அமைதியா உட்கார்ந்திருந்தார்.

என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தைப் பார்த்துக் கேட்டார். ‘என்னப்பா ஆச்சு ?’

சொன்னேன்.

ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கணும். ஆனா அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கிட்டுச் சொன்னார்…

“பாலு, நீ பார்க்காத பிரச்சினையா? நீ அனுபவிக்காத துக்கமா ? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி… This is nothing… தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don’t let this unworthy person ruffle you. நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.

ஒரு Heart Problem ஒரு Stroke. இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn’t this wonderful ? Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ளே வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You still can create Magic.

உன் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ மாதிரி நீ இன்னும் அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don’t let these stupid things bother you. You are a king Balu. Don’t you ever forget that.”

அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காபி சாப்பிட்டுத் திரும்பி வர்றப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling.

Kasthuri Rengan said...

very nostalgic...
great people have great flaws

நம்பள்கி said...

உங்கள் பதிவு பிரமாதம்! அப்ப பின்னூட்டங்கள்?
அதை விட பிரமாதம்!

தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்; பழுத்த மரம் தான் கல்லடி படும்! இந்த இடுகைக்கு 66 கல்லடிகள், சாரி, பின்னூட்டங்கள்!

வாழ்த்துக்கள்!

நம்பள்கி said...

என் முதல் போனி!
ஒட்டு +1

Amudhavan said...

Mathu S said...

\\ very nostalgic...
great people have great flaws\\

வாருங்கள் மது....வருகைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டம் திரு பாலஹனுமான் தேடித் தேடிப் பகிர்ந்திருக்கும் நிறைய தொகுப்புகளுக்கு கட்டியம் கூறுவதுபோல் அமைந்திருக்கிறது. திரு பாலஹனுமான் அவர்களுக்கும் நன்றி.

Amudhavan said...

நம்பள்கி said...
\\தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்; பழுத்த மரம் தான் கல்லடி படும்! இந்த இடுகைக்கு 66 கல்லடிகள், சாரி, பின்னூட்டங்கள்!\\

நம்பள்கி, 'தங்களைப் போன்ற விஷயம் தெரிந்தவர்களின் பாராட்டுக்களும் கூடவே சேர்ந்து வருவதால்' சிலபேரின் கல்லடிகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நன்றி!

வவ்வால் said...

பால ஹனுமான்,

சுஜாதா அடிப்படையில் "சில ஒட்டுதல்களை" போட்டு ரொப்புறாரே அவ்வ்!

அமுதவன் அவர்கள் நெற்றிக்கண்ணை திறந்தாலும் பரவாயில்லை ,நானும் ஒரு குண்டை போடுறேன் :-))]


விமலாதித்த மாமல்லன் என்ற எழுத்தாளரின் அனுபவங்களை ஒட்டியுள்ளேன்,


//பாலுமகேந்திரா தம் கதையைப் படமாக எடுப்பதே தமக்குக் கிடைத்த பெரிய கெளரவம் என்று கருதாத இலக்கிய எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பார்களா என்பதுகூட சந்தேகம்.//

//கதையில் இருக்கும் போலி ஆசார அவஸ்தையும் இல்லை அந்த பிராமண குடும்பத்தின் மாதக் கடைசி வறுமையும் இல்லை அடுத்தடுத்த வீட்டு ஆனால் பேசுமொழியால் பேதப்பட்ட பிராமனர்களுக்கு இடையிலான மேலோட்ட சிநேகபாவமும் அடியோட்ட இடைவெளியும் இல்லை அலுவலகத்தில் வறுமைக்கூடாகவும் தலித்திடம் வெளிப்படுத்தும் கதாநாயகனின் ஜாதீய மனப்பான்மை, சாமர்த்தியத்துக்கு எதிராக உண்மையான உணர்வு உண்டாக்கும் நெகிழ்வு, பொய் சொன்னதற்கான குற்றவுணர்வு, அதற்காக மன்னிப்பு கேட்க நினைக்கும் இளக்கம்,பிராமணனாய் தான் பட்ட அவஸ்தையில் அணுவளவும் படாது சாவு விழுந்த பத்தர் வீட்டுக் குடும்பம் சாஸ்திரத்தை நடைமுறையில் லவலேசமாய்க் கடந்து செல்வது, காரியம் முடிந்தபின் இதுவென்ன பெரிய விஷயம் என்கிற அலட்சியத்துடன் ராவ்ஜி தம் யதாஸ்தானத்தையடைதல் என இவை எதுவுமே பாலுமகேந்திரா டிவிக்கு எடுத்த குறும்படத்தில் இல்லை.

படத்தில் அவன் எந்த ஜாதிக்காரன் என்பதே சாமர்த்தியமாய் இல்லாது ஜனநாயகனாகிவிட்டான். சாவு வீட்டில் சாப்பாடு கொண்டுவரும் தர்மசங்கடம் மட்டுமே தமாஷாகி இருக்கிறது. தலை எழுத்து.

எடுத்ததே பாதிகதை. அதையும் எடுத்தவிதம் எலும்பும் தோலும்.

இதையெல்லாம் எழுதப்பட்ட கதையில் உள்ளது உள்ளபடி, சினிமாவில், டிவியில், தமிழில், தமிழ் நாட்டில் எடுப்பது நடவாத காரியம் எனில் அதை எடுப்பதைத் தவிர்ப்பதே நுண்ணுணர்வுள்ள எவரும் இயல்பாய் செய்யக்கூடிய காரியம்.

இந்த விடுபடல்கள் சுந்தர ராமசாமி ஜேஜே சில குறிப்புகளில் சொல்வதுபோல்,

“சொல்லாமல் விடப்படும் பகுதிகள், உண்மையைத் தொகுக்க முன்னும் கலை மனத்தின் ஆவேசத்தில் கழிந்துபோனவை என்றால் குறைசொல்ல எதுவுமில்லை. கலை உண்மையை ஸ்பரிசிக்க, கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளும். தள்ள வேண்டியவற்றைத் தள்ளும். ஆனால் அவன் சொல்லாமல் விடும் பகுதி தந்திரபூர்வமானது. வாசகத் திருப்திக்குப் போடும் தூண்டில் அது.”

விவகாரங்களும் விகாரங்களும்

நமுட்டுச் சிரிப்பை வழவழைக்கும் கதை நிகழ்வுகளைக் காமெடி என்கிற பெயரில் எதோவாக்கி சில சினிமா தியேட்டர்கள் இடையிடையில் ட்யூப் நெகட்டிவில் கொடுக்கும் கிளுகிளுப்பு ஷொடாய்ங் டச்சை தொடக்கத்திலேயே கொடுத்து குறும்படமாய் சுருட்டுவதே பாலுமகேந்திராவின் நோக்கமும் உயரமும் என்றே தோன்றுகிறது//

//ட்ஜெட்டுக்குள் சுருட்ட எவ்வளவோ கதைகள் இருக்க இந்தக் கதையின் எள்ளளவு தீவிரம்கூட இல்லாது கெக்கபிக்கே என்று இப்படி எடுக்க அப்படி என்ன அவசியம்?

உண்மையிலே இலக்கிய வாசனையோ நுண்ணுணர்வோ தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்கிற அளவுக்கேனும் இருக்கிற ஒருவர், இந்தக் கதையை இவ்வளவு கேவலமாக எடுப்பாரா என்பதை, கதையையும் படித்து படத்தையும் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

இந்தக் கதை நேரம் எடுத்த காலகட்டம்தான் பாலுமகேந்திரா தம் வாழ்விலேயே மிகவும் கலாபூர்வமாகத் தன்நிறைவடைந்த நேரம் என்று பல்வேறு வார்த்தைகளில் பலமுறை சொல்லிக்கொண்டு இருக்கிறார் பாவம்.

21 வயது இளைஞனாக நான் எழுதிய கதையை, புகழ்த்தப்பட்ட கலைஞனாக பாலுமகேந்திரா இலக்கியத்துக்கு இழைத்த அநீதியை சுட்டிக் காட்டி விவாதிக்கும்பொருட்டே இரண்டையும் யூட்யூபில் ஏற்றி இருக்கிறேன் -//

http://www.maamallan.com/2014/02/blog-post.html

விமலாதித்த மாமல்லன், என்ற எழுத்தாளர், இவரும் வலைப்பதிவிலும் எழுதிட்டிருக்கார்,ஆனால் எல்லாரையும் வாரி விடுவார், ஹி...ஹி பால்லுமகேந்திராவை எவ்வித சமரசமும் இல்லாமல் வாரிவிட்டதே மேற்கண்டது!!!

வருண் said...

balhanuman : You have already published all these in a blog run by you! Why are you are copying and pasting here one more time!

You want some comments and criticisms??

You got it now!

What you need to know are:

சுஜாதாவுக்கும் பெண் உணர்வுகள் என்றுமே புரியவில்லை! பாலு மகேந்ந்திராவும் அதே கேஸ்தான். அதனால்தான் இந்த ஆண் மிருகங்கள் ஒண்ணுக்கு ஒண்ணு வக்காலத்து வாங்குதுக! இல்லைனா 15 வய்துப் பெண் ணா என்ன அவள் மனநிலை எப்படி இருக்கும்னு இந்த மிருகங்களுக்கு புரிந்து இருக்கும்!

என்ன புரியுதா?

கடவுள் விலங்குகளை மனிதனுக்காக படைத்தான்னு சொல்வதாக சொல்றானுக ஒரு சில மதப் புத்தகங்கள் படிச்சுட்டு. அதை நம்பி விலங்குகளை மனுஷன் இஷ்டத்துக்கு பயன் படுத்திக்கிறான். ஆனால் நாயை மட்டும் இவனுக மேலே அன்பு செலுத்த வளர்க்கிறாணுக! அதுவும் அவனுக தேவைக்காக!

அதேபோல் பெண்களை இவனுக தேவைக்காக படைத்தான் (சமைக்க, ரசிக்க, கசக்கிப் பிழிய) கடவுள்னு நெனச்சுட்டு (அதை வெகுகவனமாக வெளியே சொல்லாமல் ஏமாற்றிக்கொண்டு )திரிந்த கோஷ்டிதான் சுஜாதா மற்றும் பாலுமகேந்திரா. இவர்கள் பெண்களை உணராமலே உணர்ந்ததா நெனச்சு, அதே போல உலகுக்கு நடிச்சு அறியாமையில் வாழ்ந்து செத்தவனுக!

இதில் ஒருவருக்கு ஒருவர் வக்காலத்து வாங்குவதில் எந்த அதிசயமும் இல்லை!

ஆமா ஒலகநாயகனும்தான்.

பாலுமகேந்திராவை சுஜாதா புகழ்ந்தாரு, கமலஹாசன் புகழ்ந்தாருனு சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?

ஒரு கழுதைக்கு இன்னொரு கழுதை எந்த பேப்பர் டேஸ்டா இருக்கும்னு சொல்லிக்கிறமாரி. அதெல்லாம் ஆறறிவு உள்ள மூளையுள்ளவனுக்கு exciting ஆக இருக்காது!

வருண் said...

***தி. ஜா வின் கமலம் குறுநாவலை பற்றி என்னிடம் ' என்னமா எழுதுறார் சார் உங்க ஜானகி ராமன் '***

Who is Janaki raman? Is he not falling in the "same category" if you carefully analyze the characters he created for "Men world"??

ஜானகிராமன் உருவாக்கிய "அம்மணி" "அலங்காரம்" "ரங்கமணி" "யமுனா" எல்ல்லாம் ஆண்களின் அரிப்பை தீர்த்துக் கொள்ள ஆண்களே உருவாக்கிய பெண்கள் என்பதை புரிந்து கொள்ளணும்!

ஆண்களின் தேவைக்காக உருவாக்கப் பட்ட பெண்கள். அந்தப் பெண்களை ரசித்தவனும், விமர்சித்தவனும் கூட ஆண்கள்தான்!

இது புரியாமல் இந்த் ஆண் மிருகங்கள் ஒன்னை ஒன்னு புகழ்ந்துகொண்டு ஒளறிக்கொண்டு திரிகின்றன என்பதை பீத்துவது பரிதாபத்துக்குரியது!

காரிகன் said...

வருண்,
உங்களின் கருத்தோடு இணைந்து போவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இங்கு காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் பெண்ணுக்கான நீதி, கற்பு, அடக்கம் இன்ன பிற குணநலன்கள் எல்லாமே ஆண்களால் சாதுர்யமாக உருவாக்கப்பட்டவை.இதில் பாலு மகேந்திரா, சுஜாதா, பாலகுமாரன், கமலஹாசன், எல்லோருமே ஆண்களின் பிரதிநிதிகள். அவர்களிடம் என்னவிதமான உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. சுஜாதா தனது கதைகளில் என்றுமே பெண்களை அவர்களின் உண்மையான ஆளுமையோடு பதிவு செய்ததேயில்லை. இதையே ஜோதிஜி திருப்பூர் அவர்களின் என்றென்றும் சுஜாதா பற்றிய விமர்சனத்தில் ஒரு பெண்மணி தெரிவித்திருந்தார். சுஜாதாவின் பெண்கள் எல்லாருமே ஒரு வித ஆண்மைத்தனம் கொண்ட இச்சையின் முகமாக அவரின் எழுத்தில் வந்தவர்கள் தான் . பாலு மற்றும் கமல் போன்ற கலைஞர்கள் என்று அழைக்கப் படுபவர்களின் பெண்கள் பற்றிய சிந்தனை ஒரு சாமானியனின் புரிதலை விட எந்த விதத்திலும் மேன்மையானதல்ல.

வவ்வால் said...

காரிகன்,

//சுஜாதா தனது கதைகளில் என்றுமே பெண்களை அவர்களின் உண்மையான ஆளுமையோடு பதிவு செய்ததேயில்லை.//

நம்ம மக்களுக்கு பொழுது போக்கு வாசிப்பிற்கும், ஒரு நல்ல வாசிப்பிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை,எனவே பல்ப் ஃபிக்‌ஷன் படிப்பதையே நல்ல வாசிப்பாக நினைத்துக்கொண்டு அதில் நல்ல கருத்துக்களை தேடுவது அல்லது ,அதில் நல்லக்கருத்துக்கள் இருப்பதாக உருவகித்துக்கொண்டு அதனையே ஆக சிறந்த இலக்கியம் என பேசி "தங்களையே" ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

சுஜாதா,பாலகுமரன் போன்ற மாத,வார இதழ் எழுத்தாளர்களிடம் ஒரு அளவுக்கு மேல் ஆழமான "எழுத்தினை" எதிர்ப்பார்க்க இயலாது, அவங்க டார்கெட் ஆடியன்ஸின் "உள்ளக்கிளர்ச்சிக்கு" தீனி அளிக்கும் வகையில் எழுதலைனா மார்க்கெட்ல நிக்க முடியாது, எனவே "வெகுனஜன வாசக சந்தையில்" சிந்து பாடினார்கள் என்றே சொல்லலாம்.

எந்த ஒரு படைப்பினை "மொழியாக்கம் செய்து இன்னொரு மொழிக்கு கொண்டு செல்ல தேவைப்படவில்லையோ அவை எல்லாம் " குறுகிய கால" பொழுதுபோக்கு வகையே.அதில் ,அறம்,முறம், ஆளுமை என்பதெல்லாம் இருக்காது!

காக்கா ஒரு பறவை, குயில் ஒரு பறவை, ரெண்டும் கருப்பா இருக்கு,அதற்காக காக்கா குயில் போல பாடாது அம்புட்டுதேன்!

# போர்னோகிராபியில் கூட ரொம்ப காலத்துக்கு முன்னர் உருவானது எல்லாம் கிளாசிக்கல் போர்னோவாகிடும்,அதே போல அகஸ்து மகஸ்தா சுஜாதா வகையினரின் எழுத்தும் "கிளாசிக்கல் பொழுது போக்கு எழுத்திலக்கியமாக" தமிழ்நாட்டில் விளங்கக்கூடும்.

விமலாதித்த மாமல்லன் சொன்னதை முன்னர் காபி & பேஸ்ட் போட்டேனில்லையா,அவர் இன்னொரு பதிவில் "சுஜாதா எழுத்தாளர்களில் ஒரு சில்க் சுமிதா" என ஒரு மேடையில் சுஜாதாவை வைத்துக்கொண்டே சொன்னேன் என எழுதியுள்ளார் அவ்வ்!

எனவே பெண்ணிய அறம்,ஆளுமைக்கு எல்லாம் ரொம்ப தொலைவான எழுத்துக்கள் என்பதாகத்தான் "எழுத்துலகிலும்' எடைப்போடப்பட்டிருக்க வேண்டும்.

#//பாலு மற்றும் கமல் போன்ற கலைஞர்கள் என்று அழைக்கப் படுபவர்களின் பெண்கள் பற்றிய சிந்தனை ஒரு சாமானியனின் புரிதலை விட எந்த விதத்திலும் மேன்மையானதல்ல.//

அதை விட பெருசா எதிர்ப்பார்த்திருந்தால் அது நம்ம தப்பு தாங்க அவ்வ்!

அவர்கள் எல்லாம் சாமனியனை விட கொஞ்சம் கம்மியான "பொது அறிவைக்கொண்டு" கலைஞனாக ஆகிவிட்டவர்கள்,ஆனால் அவர்களுக்கு "கலையை வழங்கும்" இடம் கிடைத்ததால் கலைஞனாக வாழ்ந்தார்கள் எனலாம் எனவே சிந்தனையில் மட்டும் எப்படி சாமனியனின் நிலையை விட மேம்பட்டிருக்க முடியும்?

பொது அறிவு கம்மினு சொல்லிட்டேனேனு கோவப்படாதீர்கள், மேக் அப் நல்லா வரணும் என்பதற்காக "அத்தர் வாங்க" அலைந்தேன் ,தயாரிப்பாளர் கண்டுக்கவேயில்லைனு நாயகன் படம் பற்றி சொல்லும் போது ,லோகநாயகர் வருத்தப்பட்டிருப்பார், அத்தர் ஒரு வாசனை திரவியம் அதை பயன்ப்படுத்தி இருந்தாலும் "திரையில்" தெரியாவா போகுது? படத்தில யாராவது "அத்தர் வாசனை மூக்கை தொலைக்குது" என வசனம் பேசினால் தான்,அதன் பிரசென்ஸே பதிவாகும், அதுக்கு சும்மாவே அந்த வசனத்த பேசிடலாமே ,அத்தர் போட்டிருக்கணுமா என்ன?

கேமரா என்ற கருவியை நல்லா இயக்க கற்றுக்கொண்டிருந்தால் "காமிரா மேன்" தான். காமிராவை வைத்து "உருவாக்க தெரிய" வேண்டும்!

தாதா சஹேப் பால்கே முதலில் படமெடுத்த போது அவரும் ,அவர் மனைவியும் தான் காமிராவை இயக்கினார்கள்!!!

அவர்கள் என்ன தனியாக காமிரா இயக்க படித்தார்களா? உண்மையில் கேமிராவை வைத்து பெரும்பாலும் தமிழில் புதுசா எதுவுமே முயற்சிப்பதில்லை, எல்லாம் ஏற்கனவே செய்யப்பட்ட வழிமுறைகளை மீண்டும் செய்கிறார்கள். ரிபீட்டிங்க் தி மெதட் அவ்ளோ தான்.

மோஷன்ல ஒளிப்பதிவு செய்ய ஏற்ற கேமிரா இல்லாத போது , மெத்தை எல்லாம் போட்டு ,அம்பாசிடர் கார் டிக்கில கேமிராவை வைத்துக்கொண்டு அமர்ந்து படம் பிடிச்சு ,பிசிறில்லாமல் படமெடுத்து காட்டிய "கர்ணன்" போன்றவர்கள் எல்லாம் "ஒளிப்பதிவு படைப்பாளிகள் என்று சொன்னால் மிகையில்லை என்பேன்.

Anonymous said...

இந்த பின்னூட்டம் வருணுக்கு மட்டும். (வேறு எவரையும் நோக்கி வைக்கப்படவில்லை )

"பாலுமகேந்திராவை சுஜாதா புகழ்ந்தாரு, கமலஹாசன் புகழ்ந்தாருனு சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?

ஒரு கழுதைக்கு இன்னொரு கழுதை எந்த பேப்பர் டேஸ்டா இருக்கும்னு சொல்லிக்கிறமாரி. அதெல்லாம் ஆறறிவு உள்ள மூளையுள்ளவனுக்கு exciting ஆக இருக்காது!"

ஆமா ரஜினி கூட பாலு மகேந்திராவை புகழ்ந்திருக்கின்றார். அப்போ அவரையும் கமல் category க்குள் சேர்த்து கொள்வோம்.

இளவயது பெண் மீதான காதல் பற்றி வருண் பொங்கியிருக்கின்றார். ரஜினி ஆடாத ஆட்டமா ? அமலாவை படாத பாடு படுத்தலையா ... வக்கிரம் பிடிச்ச மிருகம்

வருண் said...

நான் என் தளத்தில் "anonymous person" கருத்து சொல்வதை எடுத்துவிட்டேன். ஏனென்றால் "anonymous wimps" எல்லாம் சீரியஸாக பதில் சொல்வது கேலிக்கூத்து. அப்படி பதில் சொல்றவன் "கிறுக்கன்/கிறுக்கச்சி"னுதான் பலர் நம்புறாங்க.
ஆனா, அப்பப்போ அனானியாக "அமலா" "லதா சேதுபதி" எல்லாம் வந்து தங்கள் அனுபவங்களை, உண்மையை கருத்தாகச் சொல்றாங்கலாம்! என்ன செய்றது? அந்த பாக்கியத்தை என் தளம் இழக்கிறதுனு புரிந்தும் அதை செயல் படுத்துக்கிட்டு இருக்கேன்.

* சினிமாக்காரன் கேவலமானவன்

* விமர்சகர்கள் அதைவிட கேவலமானவர்கள்

ஆனால் இந்த அனானிமஸா வந்து "இதுபோல் உண்மைகள" பின்னூட்டத்தில் சொல்றாணுக பாருங்க, அவனுகளைவிட ஈனப்பிறவிகள் உலகிலேயே இல்லை என்பது என் தாழ்மையான எண்ணம். அது "அமலாவா" இருந்தாலும் சரி "நாகார்ச்சுனாவாக" இருந்தாலும் சரி அது ஒரு ஈனப்பிறவிதான்!

I am sure, the anonymous bloggers who shared their opinion would wholeheartedly agree with me on this! Thanks! :)

காரிகன் said...

வவ்வால்,
நீங்கள் சொல்வது சரியே. ஆனால் சிலரை larger than life அளவுக்கு புகழ்வதால் வரும் எதிர்வினையையும் கருத்தில் கொள்வது அவசியம்.

Post a Comment