Friday, November 6, 2015

தொலைக்காட்சி விவாதங்களின் அட்டூழியங்கள்

    
அவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும்.  தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளாக அரசியல் விவாதங்களைச் சொல்லலாம். தொலைக்காட்சிகளில் செய்திச் சேனல்கள் பெருகிவிட்ட நிலையில் அவை இரண்டு விதமாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஒன்று செய்திகள் தருவது………… அடுத்து அந்தச் செய்திகளுக்கான விவாதங்களை முன்னெடுப்பது…. (News and views)

இந்த விவாதங்களில் டைம்ஸ் நவ் சேனலில் வரும் அர்னாப்கோஸ்வாமி இந்திய டெலிவிஷன்களின் தாதாவாகத் தம்மையே வரித்துக்கொண்டவர். இன்றைய நாள்வரை அர்னாப்தான் இந்திய டெலிவிஷனின் மிகப்பெரிய சண்டியர் என்று கருதப்படுகிறார். அரசியலிலும், சமுகத்திலும் புகழ்பெற்ற பெரிய பெரிய ஆட்களையும் ஆளுமைகளையும் கூட்டிவைத்துக்கொண்டு ‘எல்லாருமே தமக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்ற பெயரில் அவர் அடிக்கும் கூத்துக்கள் கொஞ்சநஞ்சமல்ல.

“இதுதான் உண்மையான டாக்குமெண்ட்” என்று ஏதோ ஒரு பேப்பரைக் கையில்  வைத்துக்கொண்டு கத்திக் கூச்சல்போட்டு விவாதத்திற்கு வந்திருக்கும் ஆளுமைகளை  மிரளவைத்து கதிகலங்க வைக்கும் கலையை மேலைநாட்டு ஆங்கிலச் சேனல்களிலிருந்து எப்படியோ கடத்திக்கொண்டு வந்து விட்டார். “Shut your mouth, Close your mouth, ok ok stop talking” என்றெல்லாம் இவர் மிகப்பெரிய ஆளுமைகளை மிரட்டுவதும் அவர்களும் அதற்கு அடிபணிவதும் கண்கொள்ளாக் காட்சிகள்………….

சமீபத்தில்கூட அவர் சுஷ்மா ஸ்வராஜுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். “அவ்வளவுதான் வேறு வழியில்லை. இன்றைக்கு சாயந்திரம் சுஷ்மா இங்கே வந்தாக வேண்டும். என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்”

இந்த வரிசையில் அவர் யாரையும் விடுவதில்லை. ‘ஆளும் கட்சித்தலைவராக இருந்தாலும் சரி; எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி. இந்த நிகழ்ச்சிக்கு நான்தான் எஜமான். எல்லாரும் எனக்குக் கட்டுப்பட்டவர்களே’ என்ற பாணியில்தான் அவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதே அடாவடிப் பாணியைக் கடைப்பிடித்து ஈழ விவகாரத்தையும் சுப்பிரமணிய சாமி, சோ போன்ற தமிழ் எதிரிகளை வைத்துக்கொண்டு நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்த அர்னாபின் கனவு பல சமயங்களில் பல்லிளித்திருக்கிறது.. ஒருமுறை எழிலனும் சரி, திருமுருகனும் சரி அர்னாபின் வாயை அடைத்து மூக்கை உடைத்தார்கள். அந்தச் சமயங்களின் அர்னாபின் முகம் சுருங்கிய காட்சியைப் பார்க்கவேண்டுமே………………..!

சரி, அர்னாபை விட்டுவிட்டுத் தமிழ்ச் சேனல்களுக்கு வருவோம்.

இப்போதைய தமிழ் சேனல்களின் பிரதான போட்டியே தமிழில் ‘யார் அர்னாப்?’ என்பதுதான்.

தமிழில் நிறைய நியூஸ் சேனல்கள் வந்துவிட்ட நிலையில் எல்லா சேனல்களுமே அரசியல் விவாதங்களைக் கையிலெடுத்துவிட்டன. அந்தக் காலத்தில் சன் டிவி மட்டுமே இருந்த நாட்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு ‘நேருக்கு நேர்’ என்ற பெயரில் சன் டிவியில் ரபிபெர்னாட் நடத்திய அரசியல் விவாதங்கள் மிகவும் புகழ் பெற்றவை..

மலர்ந்த முகமும், அழகிய தமிழும், திருத்தமான உச்சரிப்புடனும் அவர் பிரபலங்களைக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு மடக்கியது ரசிக்கத்தக்கதாயிருந்தது. எத்தனைச் சிக்கலான விஷயங்கள் என்றாலும் மிகவும் கவனமாகக் கத்திமேல் நடப்பது போன்ற பாவனையில் விஷயங்களைக் கொண்டு செல்வதில் வல்லவர் அவர். (தமக்கு இதன்மூலம் கிடைத்த புகழைத் தக்கவைத்துக்கொண்டு அதற்கான பலனை அனுபவிக்கிறவராக இவரைத்தான் சொல்லவேண்டும். 

அந்தப் ‘புகழையும் திறமையையும்’ அப்படியே ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சமர்ப்பித்து அதிமுகவின் நியமிக்கப்பட்ட ராஜ்யசபை எம்பியாகிவிட்டார் லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்)

ரபி பெர்னாடின் விலகலுக்கடுத்து அந்த இடத்திற்கு வந்த வீரபாண்டியன் பிரபலங்களைப் பேட்டி காணும்போது ஏகப்பட்ட புள்ளிவிவரங்களைத் தயாராகக் கையில் வைத்துக்கொண்டு அவர்களை மடக்கியபோது அந்தப் பிரபலத்திற்கும் பார்க்கிறவர்களுக்குமே வியப்பு மேலிட்டது. பல ஆண்டுகளுக்கு மக்கள் நினைவில் இருந்த ‘விவாதக்களம்’ என்பது இதுமட்டும்தான்.

தற்போது செய்திச்சேனல்கள் அதிகமாகிப்போய்விட, அரசியல் விவாதங்களுக்கான தேவை பெருகிவிட்டது. தவிர அத்தகைய விவாதங்களுக்கான பார்வையாளர்களும் பெருகிவிட்டனர்.. எக்கச்சக்கப் பார்வையாளர்கள் இருப்பதனால்தான் ஏறக்குறைய எல்லா செய்திச்சேனல்களுமே இரவு எட்டு மணிக்குத் துவங்கும் விவாத நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரையும் அதனைத் தாண்டியும் மறுஒளிபரப்பும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அத்தனை தூரத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த நிகழ்ச்சிகளுக்கு இருக்கிறது.

சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா டிவி, தந்தி டிவி, புதிய தலைமுறை, நியூஸ் செவன் என்று எல்லா சேனல்களுமே விவாத நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணம் தந்து புகழ்பெற வைத்தவர்களாக புதிய தலைமுறை சேனலைத்தான் குறிப்பிட வேண்டும். அதைத் தொடர்ந்து தந்தி டிவியும் இந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களைப் பெருக்கிக்கொண்டது.

சன் டிவி மூலம் ரபி பெர்னாடும், வீரபாண்டியனும் புகழ் பெற்றதுபோல் தற்போது இந்த விவாதங்களின் மூலம் ரங்கராஜ் பாண்டே, மு.குணசேகரன், ஹரிஹரன், தம்பிராஜா, நெல்சன் சேவியர், சண்முக சுந்தரம், வெங்கட், தியாகச் செம்மல், ஜெனிபர் வில்சன், நிகிதா, கார்த்திகைச் செல்வன், செந்தில் என்று பலபேர் புகழ்பெற்ற முகங்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். 

                           

இவர்கள் நடத்தும் விவாதங்கள்தாம் இன்றைய தேதியில் அரசியலில் ‘ஹாட் டாபிக்’.
இவர்களில் மிகுந்த நிதானத்தோடு விஷயஞானத்துடன் விவாதங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக தம்பிராஜா, குணசேகரன், ஜெனிபர், செந்தில், மற்றும் நிகிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

தான் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் விவாதிப்பவர்கள் சொல்லவேண்டும் என்று வார்த்தைகளைப் போட்டு நிரப்பி அதனை எதிராளியின் வாயில் திணித்து அவர்களிடமிருந்து அந்த வார்த்தைகளைப்  பிடுங்குவது என்ற பாணியைக் கைக்கொள்கிறவர்களாக ரங்கராஜ் பாண்டே மற்றும் ஹரிஹரன் ஆகியோரைச் சொல்லலாம். இருவருமே தந்தி டிவியைச் சேர்ந்தவர்கள். 

(இதில் ரங்கராஜ் பாண்டேயின் நினைவாற்றலையும், பேசும் வேகத்தையும், கேள்விகேட்டு மடக்கும் தனிப்பட்ட பாணியையும் பாராட்டியே ஆகவேண்டும்.)

இவர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்த தியாகச் செம்மல் என்பவரும் அடக்கம். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு உள்வாங்கி அதற்கேற்ப விவாதங்களைக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணமெல்லாம் இவர்களிடம் கிடையாது. இவர்கள் ‘ஹோம் ஒர்க்’ செய்து ஒரு முடிவுடன் வந்திருப்பார்கள். அதற்கேற்ப பேசுகிறவர்கள் பேசிவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை. அதற்கு மாறாகப் பேசுகிறார்கள் என்றால் அதற்கும் தயாராகவே இவர்கள் வந்திருப்பார்கள். ஏனெனில் மாற்றுக்கருத்துடன் வருகிறவர்கள் என்னென்ன பாயிண்டுகளைக் கையிலெடுப்பார்கள் என்பது தெரியும் இவர்களுக்கு. அந்தப் பாயிண்டுகளை அவர்கள் கையிலெடுத்ததுதான் தாமதம், அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்கள்போல் வேறொரு விஷயத்தைச் சொல்லி அவர்கள் மேல் விழுந்துப் படுத்துப் பிறாண்டி அவர்களை மேற்கொண்டு ஒரு வார்த்தையும் பேசவிடாமல் செய்துவிட்டு அடுத்தவரிடம் போய்விடுவதுதான் அத்தனைப் பேருடைய பாணியும்.

இந்தப் போங்குத்தனத்திற்கு இவர்கள் பெரிதாக ஒன்றும் மெனக்கெடுவதில்லை. இவர்களின் நோக்கம், கொள்கை, எதிர்பார்ப்பு எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஆதரவு;

 திமுக மீதும் கருணாநிதி மீதும் எதிர்ப்பு. அதுவும் சாதாரண எதிர்ப்பல்ல, கண்மூடித்தனமான எதிர்ப்பு.


இந்த விஷயத்தில் தந்தியின் பாண்டேயும், ஹரிஹரனும் வேண்டுமானால் சில இடங்களில் விட்டுக்கொடுத்துவிடுவார்களே தவிர, புதிய தலைமுறையின் தியாகச்செம்மல் என்ற நபரிடம் அதெல்லாம் நடக்காது.

அவர் நேர்மை, நடுநிலை, சரியான பார்வை இவற்றையெல்லாம் தியாகம் பண்ணிவிட்டு வந்து உட்கார்ந்திருக்கும் செம்மல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. ‘கருணாநிதி தவறு செய்தவர்; அதைத்தான் இப்போது ஜெயலலிதாவும் செய்கிறார். அதனால் கருணாநிதியை ஆதரிப்பவர்களுக்கு ஜெயலலிதா செய்த தவறுகளைப் பற்றிப் பேச யோக்கியதை இல்லை. ஆகவே நீங்கள் அதுபற்றிப் பேசக்கூடாது. 

ஜெயலலிதா செய்யும் தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருங்கள்.’ – இந்த ஒரு விஷயத்தைத்தான் நாள்தவறாமல் எல்லா ‘நெறியாளர்களும்’ மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் அத்தனைப் பேருமே ஒரே ஒரு ஆயுதத்தைத்தான் கையாள்கிறார்கள். அதாவது நிறையப்பேருக்கு, நிறையப்பேருக்கென்ன நிறையப்பேருக்கு – தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லாருக்குமே ஒரே விதமான பார்வைதான் இருக்கிறது. இவர்களுடைய அரசியல் பார்வை என்பதே இதுமட்டும்தான்.

அதிமுக அரசியல் ரீதியாக ஏதாவது தவறுகளைச் செய்கிறதா?

உடனே, திமுக அதுபோன்ற தவறுகளைச் செய்ததில்லையா என்று தேடுகிறார்கள். (ஒரு இருபது வருடங்களுக்கு ஆட்சிக்கட்டிலில் இருந்த ஒரு கட்சிக்கு இப்படி எல்லாவிதமான தவறுகளுக்கும் முன்மாதிரிகள் நிச்சயம் இருக்கும்) உடனே “இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். திமுகவும் தவறு செய்தது அதே தவறை இப்போது அதிமுக செய்கிறது. அவ்வளவுதான் முடிந்தது விஷயம்” என்பதுபோன்று பேசுவார்கள்.

திமுக தவறு செய்கிறதா? கிடைத்தது கழுத்து.

மறந்துபோய்க்கூட அதிமுகவையோ ஜெயலலிதாவையோ அல்லது எம்ஜிஆரையோ நினைவுபடுத்தவோ, சம்பந்தப்படுத்தவோ மாட்டார்கள். பிளேட்டை அப்படியே திருப்பிப் போடுவார்கள். ‘இந்தக் கருணாநிதியே இப்படித்தான். ரொம்ப மோசம். நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதுதான் அவருடைய – அவர் குடும்பத்தாருடைய வேலை’ என்பதாகப் பேசுவார்கள்.

கவனியுங்கள்.

‘இந்தத் திராவிடக் கட்சிகளே இப்படித்தான். அதிமுகவும் இதைத்தான் செய்தது திமுகவும் இப்போது அதே தவறைச் செய்கிறது’ என்ற வாதம் இங்கே கிடையாது.

அதிமுக தவறு செய்தால் மட்டும் திமுகவையும் கருணாநிதியையும் சேர்த்து இழுத்துவந்து குற்றம் சாட்டி அதிமுகவைக் காப்பாற்றுகிறவர்கள், திமுக செய்யும் தவறுகளுக்கு திமுகவை மட்டுமே பொறுப்பாக்குவார்கள்.

இங்கே அதிமுகவையும் இழுத்து வந்து இந்த அதிமுக திமுக இரண்டுமே இப்படித்தான் என்று பேசுவது கிடையாது.

இந்த அயோக்கியத்தனமான பாணியை ஆரம்பித்துவைத்தவர் சோ என்று நினைக்கிறேன். இந்தப் பாணி இப்போது வளர்ந்து செழித்து நீக்கமற எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி வளர்ந்து கோரமான அரசியல் குப்பையாய்க் கிடக்கிறது.

திரும்பத் திரும்ப ஒரே கருத்தைச் சொல்வதன் மூலம் அதனை எவர் மண்டையில் வேண்டுமானாலும் சிரமமில்லாமல் நுழைத்துவிட முடியும் என்பதற்கு இந்தப் பாணி ஒரு அருமையான உதாரணம். ஏனெனில் மக்களே இப்போது இப்படிப் பேச பழகிவிட்டார்கள்.
திமுக சாராமல் அரசியல் பேசும் எல்லா அயோக்கிய சிகாமணிகளும் இந்தப் பார்வை கொண்ட ‘அரசியல் நேர்மையாளர்கள்’தாம்.

உதாரணத்திற்கு மதுவிலக்கு.

தமிழ்நாட்டில் பக்தவச்சலம் ஆட்சி முடிகிறவரைக்கும் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ‘ஒரு படி அரிசி ஒரு ரூபாய்’ என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார். (ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் அண்ணா. சென்னையிலும் கோயம்புத்தூரிலும் மட்டும் படி அரிசி ஒரு ரூபாய் என்ற அளவில் போட்டார். கேட்டதற்கு ‘மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்றுதான் சொன்னேன் என்று சொல்லிச் சமாளித்தார்) இந்தப் படி அரிசி திட்டத்திற்கு ஏகப்பட்ட செலவு பிடித்தது. சமாளிக்கமுடியாமல் போகுமோ என்ற கவலை வந்தது அண்ணாவுக்கு. அரசுக்கு அதிக வருமானம் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார் அவர்.

அதன்படி அதிக வருமானம் வேண்டும் என்பதற்காக அண்ணா கொண்டுவந்த திட்டம்தான் லாட்டரிச்சீட்டு.

லாட்டரிச்சீட்டைக் கொண்டுவந்து சூதாட்ட மனப்பான்மை எதுவுமே தெரியாமல் இருந்த தமிழர்களை முதன்முதலில் சூதாட வைத்தவர் அண்ணாதான்.

இன்றுவரைக்கும் இந்த சூதாட்ட மனப்பான்மையிலிருந்து விடுபட முடியாமல் சூதாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தமிழர்களைப் பார்க்கமுடியும். தமிழ்நாட்டில் லாட்டரி மறுபடியும் ஒழித்துவிட்டபோதும் பெங்களூருக்கும் ஆந்திராவுக்கும் சென்று லாட்டரி சீட்டுக்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்களும், பெங்களூரில் இருக்கும் நண்பர்களுக்கு பணம் அனுப்பி அவர்கள் மூலம் கட்டுக்கட்டாக லாட்டரிச்சீட்டு வாங்கிக்கொண்டிருந்தவர்களும் ஏராளம்.

லாட்டரி மனப்பான்மையே இல்லாமல் இருந்த தமிழர்களை லாட்டரிச்சீட்டிற்கு பழக்கப்படுத்தியவர் அண்ணா என்பதை யாரும்- ஆமாம் யாருமே- இதுவரை எந்த விவாதங்களிலும் சொன்னதே கிடையாது.

காரணம், கருணாநிதியைத் தவிர வேறு யார் மீதும் எந்தவிதமான அரசியல் குற்றங்களையும் யாருமே சொல்லக்கூடாது என்பது தமிழகத்தின் எழுதப்படாத விதி.

அண்ணா செய்த தவறுகளையோ எம்ஜிஆர் செய்த தவறுகளையோ யாருமே சொல்வதில்லை. சொல்வதில்லை. சொல்வதில்லை.

போகட்டும். மதுவிலக்கிற்கு வருவோம்.

மதுவிலக்கு அமலில் இருந்த தமிழகத்தில் 1967 க்குப் பிறகு மதுவைக்கொண்டு வந்தவர் கருணாநிதிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அண்ணா லாட்டிரிச்சீட்டைக் கொண்டுவந்தார். கலைஞர் மதுவைக் கொண்டுவந்தார்.
ஆனால் மதுவினால் நடைபெறும் சீரழிவுகளைப் பார்த்த கலைஞர் மறுபடியும் அவர் ஆட்சியிலேயே மதுவுக்கு மூடுவிழா நடத்திவிட்டார். ஆம், அவர் கையாலேயே மதுவை ஒழித்துக்கட்டினார் கருணாநிதி.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது எம்ஜிஆருடைய கட்சியிலே போய்ச் சேர்ந்தவர்கள் கலைஞர் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று “மறுபடியும் மதுவைக் கொண்டுவந்துவிட்டார்” என்பதுதான்.

அந்தச் சமயத்தில் பெங்களூரில் வசித்த அண்ணாவின் மகன் கௌதமன் அதிமுகவில் சேருவதற்கு இந்தக் காரணத்தைத்தான் சொன்னார்.

ஏனெனில் அவருடைய பரபரப்பான பேட்டியை அப்போது குமுதத்தில் எழுதியவனே நான்தான்.

அதிமுகவில் சேர்கிறவர்கள் மட்டுமல்ல எம்ஜிஆரே கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளில் கடுமையான குற்றச்சாட்டாக இதனைத்தான் வைத்தார். “ஒரு தலைமுறையையே கெடுத்துவிட்டவர் கருணாநிதி. மதுவை அறிமுகப்படுத்தி இளைஞர்களைக் கெடுத்துவிட்டார். 

தாய்மார்களின் சாபம் கருணாநிதியைச் சும்மாவிடாது” என்று சீறினார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் தாம் நடிக்கும் படங்களில் மதுவையே தொடாதவராகத்தான் நடிப்பார். மது அருந்தவேண்டும் என்ற கட்டாயம் அவருடைய கதாபாத்திரத்திற்கு வந்தபோதும் அவருக்கு வழங்கப்படும் மதுவை வாங்கி அங்கிருக்கும் பூத்தொட்டியிலோ வேறெந்த பாத்திரத்திலோ ஊற்றிவிட்டு மது அருந்துவதுபோல் ‘நடிப்பவராகத்தான்’ தம்மை முன்னிறுத்திக்கொண்டார் எம்ஜிஆர்.

ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு, அத்தைமகள் ரத்தினத்தைப்……… போன்ற பல பாடல்கள் அவர் மது அருந்திவிட்டுப் பாடுவதாகப் படத்தில் அமைந்திருக்கும். ஆனால் எம்ஜிஆர் குடிக்கவில்லை. எம்ஜிஆர் மது அருந்த மாட்டார். சும்மா அப்படிக் குடித்ததாக நடிக்கிறார் என்ற செய்தி பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

இப்படியெல்லாம் தம்மீது புனிதப் பிம்பம் வைத்திருந்த எம்ஜிஆர்தான் மீண்டும் மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்.

அதாவது கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு, மறுபடியும் அவராலேயே மூடப்பட்டுவிட்ட மதுவைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர்தான்.

எம்ஜிஆர் ஆட்சியில்தான் முதன்முதல் சாராய ஆலை தமிழகத்திலே தொடங்கப்பட்டது.
இந்தத் தகவல்களை தொலைக்காட்சி விவாதங்களில் சொல்வதும் இல்லை. 

சொல்லவருகிறவர்களை விவாதங்கள் நடத்தும் ‘நெறியாளர்கள்’ சொல்லவிடுவதும் இல்லை.

ஆக சூதாட்ட மனப்பான்மையை ஏற்படுத்திவிட்ட அண்ணா இங்கே புனித வளையத்தில். கருணாநிதி ஒழித்துக்கட்டிய மதுவை மறுபடியும் ஆறாக நாட்டில் ஓடவிட்ட எம்ஜிஆரும்  புனித வளையத்தில்……………..

ஆனால் கருணாநிதி மட்டும் குற்றவாளிக்கூண்டில்!

எந்த ஊர் நியாயமய்யா இது?

திமுகவை முற்று முழுதாக ஆதரித்து எழுதப்படும் பதிவு அல்ல இது. ஆனால் ஊடகத்துறை எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக சிலவற்றைக் கூறுபோட்டுக் காட்டவேண்டியிருக்கிறது.

சரி, தொலைக்காட்சி விவாதங்களுக்கு வருவோம்.

                                        


இந்தத் தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் பயனடைந்தவர்களாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒரு சிலரைத்தான் சொல்லவேண்டும். பக்கத்து வீட்டுக்காரனுக்குக்கூட யாரென்று தெரியாத நபர்கள் எல்லாம் இன்றைக்கு பாஜகவின் ‘பிரமுகர்கள்’. படு கெத்தாக இவர்கள் வந்து உட்கார்ந்துகொண்டு உலக அரசியல் பேசுவதும், பல முதிர்ந்த அரசியல் தலைவர்களை – குறிப்பாக கருணாநிதியை கேலி பேசுவதும், கேள்வி கேட்பதும், புத்திமதி சொல்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்…

இந்தத் தொலைக்காட்சி விவாதங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. எல்லா விவாதங்களுமே ஒரே நோக்கத்தோடுதான் நடத்தப்படுகின்றன.

தினசரி அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தும் ஏதாவதொரு பொருளை எடுத்துக்கொள்கிறார்கள். அதனைப் பற்றி ‘விவாதிக்கிறார்கள்’ என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் விவாதிக்கப்படும் அத்தனை விவாதங்களுக்குமான நோக்கம் ஒன்றே ஒன்றுதான்   
-திமுகவைக் குறைகூறுவது!

தமிழ்நாட்டில் நிகழ்ந்த அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமே திமுகவும் கருணாநிதியும், அவர் குடும்பமும்தாம் என்று கூறுவது; கருணாநிதியாலோ திமுகவாலோ தமிழ்நாட்டிற்குத் துளியளவும் நன்மை நடந்துவிடவில்லை என்று சாதிப்பது, இந்தியாவில் ஊழல் புரிந்த ஒரே கட்சி திமுகதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டுவது, இத்தகு காரணங்களால் வேறு எங்கு எவ்வளவு பெரிய ஊழல்கள் நடைபெற்றாலும் அதனைப் பற்றிப் பேசவோ கேட்கவோ திமுகவினருக்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்று ஒரேயடியாக திமுகவின் கதையை முடித்து வைப்பது.,,,,,,

பெரிய பெரிய ஜாம்பவான்களிலிருந்து விவாதங்களில் பங்குபெறும் குஞ்சுகுளுவான்கள்வரைக்கும் இது ஒன்றுதான் நோக்கம்; இது மட்டுமேதான் தாரகமந்திரம்.

இந்த விவாதங்களில் பங்குபெறுவோரின் எண்ணிக்கை நான்கு பேர் என்பதான பொதுவான வழக்கம் ஒன்றுண்டு. ஒரு கட்சிக்கு இரண்டு பேர் என்ற வீதத்தில் விவாதம் நடைபெறும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.

இந்த எண்ணிக்கையிலேயே குயுக்தியாய் தங்கள் கைவரிசையைக் காட்டி முடித்திருப்பார்கள் டெலிவிஷன் நிலையத்தினர். அதாவது அதிமுக சார்பாக இரண்டுபேர் பேசுவதற்குத் தயார் செய்திருப்பார்கள். ஒருவர் திமுக. அப்படியானால் திமுக சார்பாக இன்னொருவரும் வேண்டும்தானே? இங்கேதான் டெலிவிஷன்காரர்களின் குயுக்தி வேலை செய்யும். மூன்றுபேர் போக நீங்கலாக அந்த ‘மற்றொருவர்’ பத்திரிகையாளராக இருப்பார். அவர் பெரும்பாலும் நடுநிலையாளராக கருத்துத் தெரிவிப்பார். ஆக அதிமுகவுக்கு ஆதரவாக இரண்டுபேர். ஒருவர் திமுக, அடுத்தவர் நடுநிலையாளர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கும் நெறியாளராய் அந்தந்த டெஷவிஷன்காரர்கள் இருப்பார்கள் இல்லையா? இங்கேதான் பிரதான குத்து காத்திருக்கிறது. அந்த டெலிவிஷன்காரர்கள் ‘அறிவிக்கப்படாத’ அதிமுககாரர்………………..! இதுதான் தினசரி நடைபெறும் கூத்து.

‘அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவினரிடம்’கூட இல்லாத உச்சபட்ச வெறுப்பும் தீப்பந்தங்களும் இவர்களிடம்தாம் இருக்கின்றன. கருணாநிதி எந்தெந்த சமயத்தில் என்னென்ன விதமாய்ப் பேசினார், எந்தெந்த தவறுகள் செய்தார், யார்யாரை என்னென்ன மொழியில் ஏசினார் என்பதுபோன்ற விஷயங்கள் தவிர, திருக்குவளையில் சின்னப்பையனாக இருந்தபோது சாப்பாட்டுப் பந்தியில் எத்தனைப் பருக்கைச் சோற்றைக் கீழே சிந்தியிருக்கிறார் எங்கெங்கே எச்சில் துப்பியிருக்கிறார், எந்தெந்த சுவர்களில் ஒண்ணுக்கடித்தார் என்பதுவரையிலான பட்டியல் இந்த ‘நெறியாளர்களிடம்’ உண்டு.

நாவலர் நெடுஞ்செழியனை ஜெயலலிதா எந்த மொழியால் வசை பாடினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.

ஆனால் அனந்தநாயகிக்கு கருணாநிதி சட்டமன்றத்தில் என்ன பதில் சொன்னார் என்பது இவர்கள் கைகளில் தயாராக இருக்கும்.

ஒரு மாநிலத்தின் கவர்னர் மீது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன ஆபாசமாய்க் குற்றம் சாட்டினார் என்பது இவர்களுக்குத் தெரியாது.

ஆனால் இந்திராகாந்தியைக் கருணாநிதி என்ன விமர்சித்தார் என்பதுமட்டும் இவர்களுக்கு மூக்குக்குமேல் விடைத்துக்கொண்டு நிற்கும்.

டான்சி வழக்கோ, வருமான வரி கட்டாத வழக்கோ, வெளிநாட்டிலிருந்து வந்த டிடி வழக்கோ, சொத்து குவிப்பு வழக்கோ (இந்த வழக்கிற்கு தந்திடிவி சூட்டிய செல்லப்பெயர் ‘சொத்துவழக்கு’. சொத்துக் குவிப்பு வழக்கு அல்ல என்று குமாரசாமி தீர்ப்பிற்கு முன்பேயே இவர்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள்.) எந்த வழக்குபற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் 2ஜி வழக்கு தெரியும்; ஆ.ராசா வழக்கு தெரியும், கனிமொழி வழக்கு தெரியும்.

குன்ஹா கொடுத்த தீர்ப்பு பற்றித் தெரியாது. ஆனால் குமாரசாமி ‘விடுவித்தது’ பற்றி மட்டும் தெரியும். இவர்கள்தாம் நெறியாளர்கள்.

பாரதிய ஜனதா சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் பேச வரும் பிரமுகர்கள் பெரும்பாலும் வாதத்திறம் மிக்கவர்களாகவும், பேச வேண்டிய விஷயத்தை ஒட்டிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவர்களுடைய கருத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ அவர்கள் விஷயஞானத்துடன் வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸைச் சேர்ந்த கோபண்ணா, அமெரிக்கை நாராயணன், விஜயதாரணி, திருச்சி வேலுச்சாமி, இதயத்துல்லா, ஜோதிமணி எல்லாருமே திறமையாக விவாதம் புரிகிறவர்களாகவும் புள்ளிவிவரங்களுடன் வருகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அதேபோன்று பாரதிய ஜனதா சார்பில் வரும் ராகவன், நாராயணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோரும் வாதத்திறனும், அதிகபட்ச தகவல்களும் கொண்டவர்களாகவே உள்ளனர்.

அதிமுகவுக்கு வருகிறவர்களில் யாரையும் அப்படிச் சொல்வதற்கு இல்லை. சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், காசிநாத பாரதி என்ற மூன்றுபேர் அதிமுகவுக்கு நிரந்தரமாய் வருபவர்கள். 

இவர்களில் தீரன் ஒருவரைத்தான் விஷயஞானம் உள்ளவராகச் சொல்லமுடியும். அதிலும் 
பல்வேறு கட்சிகளுக்கும் பயணப்பட்ட தீரன் விஷயத்தையும் ஞானத்தையும் இறக்கிவைத்துவிட்டுத்தான் அதிமுகவுக்கு வந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் தீரன் வாதிடும்போது என்ன சப்ஜெக்ட் பேச வருகிறாரோ அதைப்பற்றிய கவலையை விடவும் ஜெயை விளிக்கும்போது ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’ என்ற சொல்லாடலை சரியாகச் சொல்கிறோமா என்பதிலேயே அவர் கவனம் முழுவதும் இருக்கிறது என்பதை விவாதங்களைப் பார்க்கிறவர்கள் சுலபமாகவே புரிந்துகொள்ள முடியும்.

சி.ஆர்.சரஸ்வதியைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. உலகின் எந்த விஷயம் பற்றியும் சி.ஆர்.எஸ்ஸை வைத்துக்கொண்டு எந்தமாதிரியான கொம்பனும் விவாத மேடையை நடத்தலாம் என்பதுதான் இவரிடமிருந்து நாம் பெறும் செய்தி. அவருக்கு என்ன தெரியுமோ அதை வைத்துக்கொண்டு எந்தவிதமான மேடையாக இருந்தாலும் சமாளித்துவிடுகிறார் அவர். ‘தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவுக்கு இணையானவர்கள் எவரும் இல்லை. அவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. அவருக்கு இருக்கும் செல்வாக்கு இங்கே யாருக்கும் இல்லை. நாற்பத்தைந்து சதவித ஓட்டுவங்கி அம்மாவுக்கு உண்டு. ஆகவே தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மாவை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.’ இதுதான் சி.ஆர்.சரஸ்வதியிடம் இருக்கும் சரக்கு. இதனை உலகின் எந்த விஷயமாயிருந்தாலும், அதனை வெளிப்படுத்தும் தளம் எதுவாக இருந்தாலும் அமெரிக்க செனட் சபையாயிருந்தாலும், நாசா விண்வெளி மையமாக இருந்தாலும் எதிர்கொள்வதற்கும் சொல்வதற்கும் சி.ஆர்.சரஸ்வதி தயார்.

சாதாரணமாய் கலைஞர் என்றும் தளபதி என்றும் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் கடந்துவிடும் திமுகவினர் மையக்கருத்து எதுவோ அதைப்பற்றிப் பேசுவதில் அக்கறை காட்ட ஆரம்பிப்பர். அதிமுகவினரின் நிலைமைதான் பரிதாபம். மாண்புமிகு தமிழக முதல்வர் என்று ஆரம்பித்து அரை நிமிடத்திற்கு மூச்சுவிடாமல் அவர்கள் தலைவியின் பெயரைப் புகழ் மாலைகளுடன்  சொல்லியாக வேண்டும் அவர்கள்.

பாமகவின் பாலு, மதிமுகவின் அந்திரி தாஸ்,  அதிமுகவின் காசிநாதபாரதி மற்றும் செ.கு.தமிழரசன். இவர்கள் நான்கு பேரையும் ஒரே லிஸ்டில்தான் சேர்க்கவேண்டும். வேறு யாரையும் எதுவுமே பேச இவர்கள் விடுவதில்லை. இவர்களின் வாதத்திற்கு முன்பு ‘மற்றவர்களின் வாதங்களெல்லாம் கால்தூசு’ என்பதான நினைப்பு இவர்களுக்கு உண்டு என்பதை இவர்கள் பேசும் விதத்தை வைத்தே அறிந்துகொள்ளலாம். இவர்கள் ஒன்றைச் சொல்லிவிட்டார்களென்றால் மற்றவர்கள் அடிபணிந்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். மீறி யாராவது பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் சம்பந்தப்பட்டவருடன் சேர்ந்து கடைசிவரைக்கும் கத்திக்கொண்டே இருப்பதுதான் இவர்களின் பாணி. அதிலும் செ.கு.தமிழரசன் தனிரகம். பதில் சொல்ல ஆரம்பித்தாரென்றால் நிறுத்தவே மாட்டார். மற்ற எல்லாரும் பேசும்போதும் குறுக்கிட்டு பதில் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பேசிக்கொண்டே இருப்பார். அதையும் தாண்டி அவரை நிறுத்திவிட்டு மற்றவர்களைப் பேசச்சொல்லும்போது “என்னைப் பேசவே விடமாட்டேன்றாங்க, என்னைப் பேசவே விடமாட்டேன்றாங்க” என்று இவர் புலம்புவது உச்சபட்ச காமெடி.

அதிமுக வரிசையில் சமரசம் என்று ஒருவர் வருவார். முன்னாள் எம்எல்ஏ.

என்னுடைய நண்பர் ஒருவர் “சமரசம் வருகிற எந்த நிகழ்ச்சியையும் மிஸ் பண்ணுவதில்லை” என்று சொல்வார். காரணம் பழமொழிகள்… சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் எந்த விஷயம் வந்தாலும் ஒரு பழமொழியுடன்தான் தமது வித்தியாசக் குரலில் பேசவே ஆரம்பிப்பார். “சமரசம் இருந்தால் சிரிப்புக்குப் பஞ்சமேயில்லை” என்பார் நண்பர்.

“மக்கள் நலக்கூட்டணியைப் பற்றிக் கலைஞர் இன்றைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்” என்று ஆரம்பித்து நெறியாளர் ஏதோ சொல்லப்போக சமரசம், “ஐயா பருப்பு சாம்பாருக்கு கருப்புக்கோட்டு போடக்கூடாது. அருப்புக் கோட்டையிலபோய் நெருப்புக் கோழி தேடக்கூடாது” என்று எதையோ எடுத்துவிடுவார். ஒருத்தருக்கும் ஒரு எழவும் புரியாது.

“மோடி தம்முடைய வெளிநாட்டுப் பயணத்தில்…” என்று நெறியாளர் எதையோ கேட்கப்போக-
“புளியங்கொட்டை வளைஞ்சிருந்தா கொடுக்காப்புளி ஆகாது. கொடுக்காப்புளியை வண்டியேற்றினா வாழைக்காய் வேகாது” என்பார்.

“ஸ்டாலின் நடைப்பயணத்தில் மக்கள் கூட்டம் அதிகமாய் சேர்கிறதே……” என்பதுபோல் யாரோ சொல்லப்போக ஒரு விசித்திரமான குரலில் சமரசத்தின் பதில் பாய்ந்து வரும் – “ஐயா காத்து வீசினா காஞ்சிபுரம் பாடும். களரி வீசினா சிலையெழுந்து ஆடும்” என்பார். கேட்பவர்களுக்குச் சிரித்துச் சிரித்து மாளாது.  

ரெகுலர் பேச்சாளர்கள் வரிசையில் இவர்களுக்குச் சற்றும் சளைக்காத இன்னொரு அப்பாடக்கர் சுமந்த் சி.ராமன்.

பல் டாக்டரான இவர் பொதிகை டிவியில் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்தியபோது  பார்க்கிறவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். விளையாட்டில் இவருக்கிருந்த அபரிமிதமான விருப்பமும், அர்ப்பணிப்பும், விஷயஞானமும் பார்க்கிறவர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த நிகழ்ச்சி மூலம் தாம் ஏற்படுத்திவைத்திருந்த இமேஜைக் குறைத்துக்கொள்ள இவருக்கு ‘அரசியல் களம்’ தேவைப்பட்டிருக்கிறது. நடுநிலையாளர், நடுநிலைச் சிந்தனையாளர் என்ற பெயர்களில் வரும் இவர் அதிதீவிர அதிமுக தொண்டனைவிடவும் மோசமாக அதிமுக பாட்டுப் பாடுகிறார். ‘வேறு யாரையுமே பேச விடாமல் நிகழ்ச்சி முழுவதற்கும் தாம் ஒருவரே பேசிக்கொண்டிருக்கவேண்டும்’ என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த இவர் முயலும் விதம் இவர் மீதான மரியாதையை வெகுவாகக் குறைக்கிறது.

அதிமுகவுக்கு இவர்கள் இல்லாமல் பேசக்கிடைக்கிறவர்கள் செ.கு.தமிழரசன், தனியரசு, மற்றும் மாபா பாண்டியராஜன். இவர்கள் மூவருமே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

மா.பா.பாண்டியராஜன் தேமுதிகவிலிருந்து வெளியேறியவர். அதிமுக தொண்டரைப்போல சரணம் சர்வகதி என்று சரணடையவும் முடியாமல், பெரிய மனிதத்தோரணையைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாமல் இவர் தவிக்கும் தவிப்புதான் இவரது ஹைலைட். அதனால் “இத பாருங்க,,,, இதபாருங்க” என்று டிஸ்கஷன் முடிகிறவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் இவரது பாணி.

திமுக சார்பாகப் பேச அப்பாவு, பரந்தாமன், சிவஜெயராஜ், கண்ணதாசன் என்று சிலர் வருகிறார்கள். இவர்களில் அப்பாவு ஒருவரைத்தவிர மற்றவர்கள் புதுமுகம். அப்பாவு காங்கிரஸிலிருந்து திமுகவுக்கு வந்தவர். தமது தொகுதியில் கட்சி அடையாளங்களை உதறி சுயேச்சையாக நின்று வெற்றிபெறுமளவுக்கு மக்கள் செல்வாக்கு மிகுந்தவர். அரசியலில் ஏகப்பட்ட அனுபவங்கள் மிக்கவர். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எந்த விஷயமாயிருந்தாலும் விவாதிப்பதில் வல்லவர்.

எத்தனை இருந்து என்ன? அப்பாவுவை இந்த ‘நெறியாளர்கள்’ பேச விட்டால்தானே?

“கலைஞர் தம்முடைய ஆட்சியில்” என்று அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “எம்ஜிஆர் மதுவிலக்கை மீண்டும் அமல் படுத்தியிருக்கலாம். திரும்பவும் கலைஞர் இருபதாண்டுக்காலம் ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் அமல் படுத்தவில்லை?” என்று மேற்கொண்டு பேசவிடாமல் கேள்வி கேட்பார்கள்.

“தளபதி ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தில்” என்று அப்பாவு துவங்கும்போது “ஸ்டாலினுக்கு எந்தக் கட்சித் துணையும் இல்லாமல் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதென்றால் எந்தக் கட்சித்துணையும் இல்லாமல் நாங்கள் தேர்தலைச் சந்திப்போம். எந்தக் கூட்டணியும் வேண்டாம் என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா?” என்று அடுத்த கேள்வியை வீசுவார்கள்.

“அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. ஜெயலலிதா கொடநாட்டில்…” என்று ஏதோ சொல்ல அப்பாவு ஆரம்பிக்கிறார் என்றால் “2ஜி வழக்கில் உச்சநீதி மன்றத்தில் கனிமொழியின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவர் வழக்கைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இத்தனை வழக்குகளை வைத்துக்கொண்டு திமுக எந்த தைரியத்தில் தேர்தலைச் சந்திக்கப்போகிறது?” என்று குறுக்குசால் ஓட்டுவார்கள்.
து அப்பாவு ஒருத்தருக்கு மட்டும் ஏற்படும் நிலைமை அல்ல. திமுக சார்பாக யார்யார் பேச வருகிறார்களோ அவர்கள் அத்தனைப் பேருக்கும் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்படும் கதி இதுதான். எந்த வகையிலும் திமுகவின் ‘வாய்ஸ்’ ஒலித்துவிடக்கூடாது என்பதுதான் ஊடகங்கள் எடுத்திருக்கும் கொள்கை சார்ந்த முடிவு.

அதாவது திமுகவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவின் பதில்கள் வந்துவிடக்கூடாது. அதேபோல் திமுக மற்றவர்கள் மீது - குறிப்பாக அதிமுகவின் மீதும், ஜெயலலிதாவின் மீதும் - எந்தவித குற்றச்சாட்டையோ விமரிசனத்தையோ வைத்துவிட அனுமதிக்கவும் கூடாது. இதில் மிகவும் கவனமாக இருப்பவர்களாக ரங்கராஜ் பாண்டே, ஹரிஹரன், தியாகச்செம்மல், கார்த்திகைச் செல்வன் ஆகியோரைச் சொல்லலாம். ஓரளவு பதில் சொல்ல அனுமதிக்கிறவர்களாக குணசேகரன், செந்தில் ஆகியோரைச் சொல்லலாம்.

நான்குபேர் கொண்ட குழு விவாதத்தைத் துவங்கும் என்பதாகப் பார்த்தோம். ஒரு விவாதப் பொருளைப் பேச ஆரம்பிக்கிறவர்களை வரிசையாகப் பேசச் சொல்வார்கள். திமுகவினரை நான்காவதாகத்தான் பேச அழைப்பார்கள். இதில் ஒரு பெரிய சூட்சுமம் இருக்கிறது.

அதாவது மூன்று பேரும் பேசி முடித்துவிட்டு நான்காவதாக இவர்களிடம் வருகிறார்கள் இல்லையா? இவர்கள் ஏதாவது சொல்லப்போக முதல் வார்த்தையிலேயை இடைமறித்து வேறொரு கேள்வி கேட்பது, அதற்கு திமுக பிரமுகர் பதில் சொல்ல ஆரம்பித்து முதல் வார்த்தைச் சொன்னதுமே மற்றொரு கேள்வி எழுப்புவது, அதற்கும் பதில் சொல்லமுனைந்தால் மறுபடி வேறொரு கேள்வி போடுவது என்று இருக்கிறார்கள் இல்லையா? அதையும் தாண்டி திமுகவினர் சமாளித்துக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருக்கவே இருக்கிறது அடுத்த பிரம்மாஸ்திரம். “ஒருநிமிஷம். நீங்க உங்க பதில்களை ஒரு பிரேக்குக்கு அப்புறம் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு இடைவேளை விட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

இடையிலேயே “என்னை பதில் சொல்லவே விடமாட்டேன்றீங்க. இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்” என்று திமுக பிரமுகர் சொன்னால் இவர்களிடம் ஸ்டாக் இருக்கும் ஒரே பதில். 

“நான் உங்க கிட்டேதான் வர்றேன். உங்களைத்தான் கேட்கறேன்”

இவர்களின் இந்த பாச்சாவை பலிக்காமல் செய்த பிரபலங்கள் சிலரும் உண்டு. குறிப்பாக வசந்தி ஸ்டான்லி. “இருங்க தம்பி. நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவே ஆரம்பிக்கலை. என்னைப் பேசவே விடாம நீங்க பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருந்தா என்ன அர்த்தம்? என்னை வைச்சுக்கிட்டு நீங்க பேசறதுன்னா என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்று ஒரு அதட்டல் போட்டு பதில் சொன்னவர் அவர். ஆனால் எல்லாப் பிரபலங்களும் இதனைச் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

அந்தக் காலத்திலெல்லாம் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஆங்கிலச் சேனல்களில் வெறும் சோ மட்டுமே வந்துகொண்டிருப்பார். தமிழில் ஞாநியை மட்டும்தான் வரவழைப்பார்கள். இப்போதுதான் எல்லாப் பத்திரிகையைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். இவர்களில் துக்ளக் ரமேஷ் என்ற ஒருவரைத்தவிர (இவர் மட்டுமே அதிமுக சார்பு) மற்ற எல்லாப் பத்திரிகையாளர்களும் நடுநிலையாளர்களாத்தான் இருக்கிறார்கள். அதுவும் திரு.மணியின் அலசல்கள் கவனத்துக்குரியவை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இம்மாதிரியான தடங்கல்களும், தடைக்கற்களும் எத்தனைப் போடப்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்துக்கொண்டு சுலபமாக ஸ்கோர் செய்துவிட்டுப் போகும் ஒரு சிலர் இருப்பார்கள் இல்லையா? அம்மாதிரியான ஒருவர்-
தமிழன் பிரசன்னா!

திமுகவைச் சேர்ந்த இளம் வக்கீலான இவரிடம் இந்த நெறியாளர்கள், வெறியாளர்கள் யாருடைய குயுக்தியும் செல்லுபடி ஆவதில்லை. எப்படிப் போட்டு வளைத்தாலும் அத்தனை வியூகங்களையும் உடைத்துக்கொண்டு வந்து தம்முடைய கருத்தை நிலைநாட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார் இந்த இளைஞர். அரசியல் விவாதங்களில் ஒரு நட்சத்திரம் போல் பவனி வருகிறார் இவர். இந்த இளைஞர் பங்குபெறும் விவாதங்களைப் பார்க்கும் நேயர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.

76 comments :

ஜோதிஜி said...

முழுமையாக படித்தேன். எனக்குள் சில கேள்விகள்.

ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவுக்கு அத்தனை நிகழ்ச்சிகளையும் எந்த அளவுக்கு பொறுமையாக பார்க்க முடிந்துள்ளது என்று தான் என் நினைப்பில் வந்தது.

பல பேர்களை நீங்க எழுதிய பின்பு தான் என் நினைவுக்கே வந்தார்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. அன்றிலிருந்து இன்று வரை, கருணாநிதி எதிர்ப்பு அரசியலை மங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஜோதிஜி said...

தொடர்ச்சி........

ஜோதிஜி said...

எனக்கு உரிமையிருப்பதால் உங்கள் செல்ல கோபத்தைத் தீண்டும் பொருட்டு உங்களிடம் இருந்து உருப்படியான பதில்கள் வரும் என்ற நம்பிக்கையில் பின்னூட்ட பதில்களை ஆர்வமாகப் படிக்க வரும் நண்பர்களுக்காக இந்தக் கேள்விகள்.

ஜோதிஜி said...

1. கலைஞர் செய்தி தொலைக்காட்சி ஒன்று இருக்கின்றது(?). அதில் உள்ள விவாதங்களைப் பார்த்து இருக்கீங்களா? பெயர் சுகிர்த்தா என்று நினைக்கிறேன். அதிகபட்சம் மனுஷ்யபுத்திரன் பேசிப் பார்த்துள்ளேன். ஏன் புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைக்காட்சியுடன் போட்டி போட முடியவில்லை. கையில் வெண்ணெய் வைத்திருப்பவர்கள் ஏன் நெய்க்கு அலைய வேண்டும்.

ஜோதிஜி said...

2. பகுத்தறிவு பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மாறன் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சி தான் தொடக்கம் முதல் பக்தி மார்க்கத்தைக் காசு பார்க்கும் கலையாக மாற்றிச் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கலைஞரால் வாழ்க்கை பெற்றவர்கள் திமுகவிற்கு ஆதாரமாக இருப்பதில்லையே?

ஜோதிஜி said...

3. கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பது காசுக்காக மட்டும் தானா? இதற்குப் பின்னால் வந்த புதிய தலைமுறை இந்த அளவுக்கு விதம் விதமான பலதரப்பட்ட செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சன் குழுமத்திற்கு மட்டும் ஏன் இன்று வரையிலும் அந்த ஆர்வம் துளி கூட இல்லாதது ஏன்? அதற்கான எந்த முயற்சியும் இன்று வரையிலும் நான் பார்த்தது இல்லை? கொள்கைகளைப் பரப்பத்தானே கட்சி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்ற ஊடகம். அல்லது ?

ஜோதிஜி said...

4. தங்கபாலு மற்றும் வசந்த் போன்றோர் நடத்தும் தொலைக்காட்சியில் கூட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கட்சி சார்ந்த பல நிகழ்ச்சிகளை, ஆவணத் தொகுப்புகளை நான் பார்த்துள்ளேன். மக்கள் தொலைக்காட்சி கூட அந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். கட்சிப் பிரச்சாரம் தான் முக்கியம் என்ற கொள்கை இவர்கள் அத்தனை பேருக்கும் உண்டு?

ஜோதிஜி said...


5. சன் தொலைக்காட்சியை விட்டு விடுங்க. கணக்கில் சேர்க்க வேண்டாம் என்று வைத்துக் கொள்வோம். கலைஞர் தொ.கா. கலைஞர் செய்திகள், முரசு, சிரிப்பொலி நான்கும் எந்த அளவுக்குக் கட்சிக்காக இருக்கின்றதா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

ஜோதிஜி said...

6. தமிழகத்தில் எல்லாக் கட்சியிலும் தொண்டர்கள் மட்டும் தான் உண்டு. ஆனால் கடந்த 40 வருடமாகத் திமுக வில் மட்டும் தான் ஒவ்வொரு தொண்டனும் பிரச்சாரப் பீரங்கியாக இருந்தார்கள். எந்தத் தொண்டரிடமும் பேசிவிட்டு நகர்ந்து போய்விட முடியாது. ஆழமாய் அகலமாய் உழுது தள்ளிவிடுவார்கள். விபரம் புரியாமல் பேசியவன் தொலைந்து போய்விடுவான். இது தவிர நட்சத்திர பேச்சாளர்கள் அதிகம் உள்ள கட்சியும் திமுக தான். ஆனால் இன்றைய நிலை தான் என்ன? நீங்கச் சொன்ன பிரசன்னா தவிர (அவரும் கூடச் சமீப காலமாகத்தான்) வேறு முக்கியமான ஆழமான பேச்சாளர்கள் எவரையும் எங்கும் பார்க்க முடியவில்லை. இதன் உள் அரசியல் என்ன?

ஜோதிஜி said...

நான் எப்போதும் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு மறைமுக ஆதாயம் உண்டு. இதையே அதிமுகவும் தொடக்கம் முதல் கடைப்பிடிக்கின்றது. இதன் காரணமாக ஒவ்வொருவரும் அதன் பின்னே போக ஆசைப்படுகின்றார்கள். ஆனால் திமுகவினால் ஆதாயம் பெற்றவர்கள் கூடப் பத்தடி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான் ஏன் என்றே புரியவில்லை.

ஜோதிஜி said...


அப்புறம் உங்கள் பார்வைக்கு மற்றொரு தகவல் நீங்க சுமந்த் சி ராமன் தான் எப்போதும் சுதந்திர தின விழாவில் குரல் கொடுப்பவர். ஆனால் இந்த முறை அவரை வேண்டாம் என்று சொல்லி விட்டனர். காரணம் ஏதோவொரு உரையாடலில் அவர் அதிமுக வை லேசாகக் குற்றம் சாட்டி விட்டாராம். இதை விட எனக்கு ஆச்சரியமான செய்தி என்னவென்றால் அதற்கு இந்தச் சுமந்த் சி ராமன் என்ன சொன்னார் தெரியுமா? இது இடையில் உள்ள அதிகாரிகள் மேலே நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக என் பெயரை நீக்கி உள்ளனர் என்கிறார்.
காறித்துப்பினாலும் மூஞ்சியில் நான் வாங்கிக் கொள்ளத் தயாராய் உள்ளேன். நான் நெடுஞ்சாண்கிடையாக வணங்கும் போது நீங்க ஏறி மதித்தாலும் காசு கிடைக்கும் பட்சத்தில் அதற்கும் தயார். என்பது தான் இதற்கு அர்த்தம்.
பல தரப்பட்ட சிற்றரசர்கள் உள்ள திமுகவில் இதற்கே வாய்ப்பே இல்லையே?

”தளிர் சுரேஷ்” said...

மிக விரிவான சிறப்பான் கட்டுரை! இந்த விவாத நிகழ்ச்சிகளை பெரும்பாலும் பார்ப்பது கிடையாது. டீவி சீரியலுக்காக அம்மாவும், போகோ பார்க்க குழந்தைகளும் டீவியை பங்கிட்டு விட்டார்கள்!

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவுக்கு அத்தனை நிகழ்ச்சிகளையும் எந்த அளவுக்கு பொறுமையாக பார்க்க முடிந்துள்ளது என்று தான் என் நினைப்பில் வந்தது.\\

வாங்க ஜோதிஜி, நீங்கள் சொல்வதுபோல் அத்தனை ஆழமாகவெல்லாம் பார்ப்பது இல்லை. அரசியல் என்பதால் மற்ற நிகழ்ச்சிகளைவிடவும் இதில் கொஞ்சம் ஈடுபாடு. மற்றபடி போகிறபோக்கில் பார்ப்பதுதான். சமயங்களில் ரம்பம் போடும் விவாதங்களையும், விவாதக்குழுக்களையும் அணைத்துவிட்டு ஓடிவிடுவதும் உண்டு.

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. அன்றிலிருந்து இன்று வரை, கருணாநிதி எதிர்ப்பு அரசியலை மங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.\\
ஆமாம் இளங்கோ சார், விவாதங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் அப்படித்தானே இருக்கின்றன. பாமகவையும், மதிமுகவையும், கம்யூனிஸ்டுகளையும் பாருங்கள்.... அதிமுகவை ஒரு பேச்சுக்குச் சும்மா அப்படி ஒரு செல்லத்தட்டு தட்டிவிட்டு திமுக மீது கோடரி கொண்டுதான் பாய்வார்கள்.
இதனை ஆரம்பத்தில் இருந்து 'கண்டுகொள்ளாமல் விட்டது' திமுக செய்த மிகப்பெரும் தவறு.

எம்.ஞானசேகரன் said...

மிக விரிவான அருமையான நடுநிலையான அரசியல் அலசல். தி.மு.க.வினர் கூட சில சமயம் இப்பட்டிப்பட்ட வாதங்களை வைக்கத் தவறிவிடுகிறார்கள். திட்டமிட்டே இவர்கள் தி.மு.வையும், கருணாநிதியையும் அரசியலிலிருந்தே அகற்றப்பார்க்கிறார்கள். பன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பலரும் ஏன் எல்லோரும் துணை போவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழ்நாடு சுடுகாடாகிப் போனால்தான் இவர்கள் அடங்குவார்கள். வெளி மாநிலங்களில் மாறிமாறி பயணிப்பதால் இப்படிப்பட்ட விவாதங்களைப் பார்க்கும் கொடுப்பினை(!?) எனக்கு இல்லை. ஆனால் சன் டி.வி.யிலும் கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஒரு அழுத்தமோ அல்லது தி.மு.க. சார்போ அதிகம் இல்லை என்பது அவர்களின் சுயநலத்தைத்தான் காட்டுகிறது. இப்படிப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து புத்தமாய்ப் போடுங்கள் அமுதவன் ஐயா. எதிர்கால சந்ததியினருக்கு இந்த கேவல அரசியலை புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\உங்களிடம் இருந்து உருப்படியான பதில்கள் வரும் என்ற நம்பிக்கையில் பின்னூட்ட பதில்களை ஆர்வமாகப் படிக்க வரும் நண்பர்களுக்காக இந்தக் கேள்விகள்......\\

ஜோதிஜி எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியாது. தெரிந்தவரைக்கும் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன். கலைஞர் செய்திகள் சேனலின் சுகிதா நல்ல விஷயம் தெரிந்தவர். அவரை வைத்து இன்னமும் சிறப்பான நிகழ்ச்சிகளைக் கலைஞர் டிவி நடத்தலாம் என்பதுதான் என்னுடைய எண்ணமும். பகல் பொழுதுகளில் தொடர்ச்சியாக ஒருவரையே வைத்து இந்தப் பெண்மணியை விட்டுப் பேசவைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களின் முக்காட்டை எதற்காக நீக்க மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

\\கலைஞரால் வாழ்க்கை பெற்றவர்கள் திமுகவிற்கு ஆதாரமாக இருப்பதில்லையே?\\

உண்மைதான். இதற்கு மிகப்பெரிய ஆதாரம் வைகோ. கலைஞர் மிகவும் நம்பியவர்கள் எல்லாம் அவருக்கு ஒரு கட்டத்தில் துரோகம் இழைத்துவிட்டுப் போகவே (என்னதான் அதற்காக அவர்கள் ஆயிரம் காரணங்கள் சொன்னபோதும்) யாரையுமே நம்பக்கூடாது என்ற எண்ணத்திற்கு அவர் வந்ததும் அதன்பிறகுதான் குடும்பத்தினரைத் தன்னைச் சுற்றிலும் வைத்துக்கொள்ளும் முடிவிற்கும் அவர் தள்ளப்பட்டார் என்ற செய்தியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நன்றாக யோசித்துப் பாருங்கள்.. எம்ஜிஆர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு இம்மாதிரி குடும்பத்தினரை அவர் கட்சிக்குள் நுழைத்தாரா என்பதை.........

\\கடந்த 40 வருடமாகத் திமுக வில் மட்டும் தான் ஒவ்வொரு தொண்டனும் பிரச்சாரப் பீரங்கியாக இருந்தார்கள். எந்தத் தொண்டரிடமும் பேசிவிட்டு நகர்ந்து போய்விட முடியாது. ஆழமாய் அகலமாய் உழுது தள்ளிவிடுவார்கள். விபரம் புரியாமல் பேசியவன் தொலைந்து போய்விடுவான். இது தவிர நட்சத்திர பேச்சாளர்கள் அதிகம் உள்ள கட்சியும் திமுக தான். ஆனால் இன்றைய நிலை தான் என்ன? நீங்கச் சொன்ன பிரசன்னா தவிர (அவரும் கூடச் சமீப காலமாகத்தான்) வேறு முக்கியமான ஆழமான பேச்சாளர்கள் எவரையும் எங்கும் பார்க்க முடியவில்லை. இதன் உள் அரசியல் என்ன?\\

அம்மாதிரியான பல தொண்டர்கள் இன்றைக்கு இல்லை என்பதும், அதற்கான காலகட்டமும் இது இல்லை என்பதும்தான் இதற்கான பதில். பல பேர் நீர்த்துப் போய்விட்டார்கள், அல்லது ஓய்ந்துபோய் விட்டார்கள். தங்கள் அரசியல் விளக்கங்கள் இன்றைக்கு எடுபடாது என்ற முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். தவிர அம்மாதிரியான விளக்கங்கள் எதையும் பொருட்படுத்தாத தலைமுறை இன்றைக்கு அதிக அளவில் இருக்கிறார்கள்.
பிரசன்னாவைப் பொறுத்தவரை அவர் பேச ஆரம்பித்தது முதற்கொண்டே கவனித்து வருகிறேன். பிரமாதமாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்.

\\அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு மறைமுக ஆதாயம் உண்டு. இதையே அதிமுகவும் தொடக்கம் முதல் கடைப்பிடிக்கின்றது. இதன் காரணமாக ஒவ்வொருவரும் அதன் பின்னே போக ஆசைப்படுகின்றார்கள். ஆனால் திமுகவினால் ஆதாயம் பெற்றவர்கள் கூடப் பத்தடி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான் ஏன் என்றே புரியவில்லை.\\

அதிமுகவில் உடனடிச் சலுகைகள் என்ற அஸ்திரம் ஆரம்பமுதலே கிடைத்துவருகிறது என்பது உண்மைதான். 'திமுகவில் ரொம்ப நாளைக்கு அண்ணா எழுதிய நூல்களையும், கலைஞரின் நூல்களையும்தாம் சன்மானமாகத் தருவார்கள் இது எவனுக்கு வேண்டும் இன்றைய நிலையில்?' என்று கோபத்துடன் என்னிடம் கேட்டார் என்னுடைய பத்திரிகை நண்பர் ஒருவர். எம்ஜிஆர் விஷயமாக செய்தி சேகரிக்கப்போகும்போது அந்த நாட்களிலேயே பிரீப் கேஸும் பணமும் கிடைக்கிறது என்ற கூடுதல் தகவலையும் சொன்னார். இம்மாதிரி ஒரு சில பிரிவினரிடம் 'காலமறிந்து நடந்துகொள்ளாததும்' திமுகவின் சரிவுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.







Amudhavan said...

தளிர்’ சுரேஷ் said...
\\இந்த விவாத நிகழ்ச்சிகளை பெரும்பாலும் பார்ப்பது கிடையாது. டீவி சீரியலுக்காக அம்மாவும், போகோ பார்க்க குழந்தைகளும் டீவியை பங்கிட்டு விட்டார்கள்!\\
வாங்க சுரேஷ், இந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும். நான் பார்க்கவிரும்பும் நிகழ்ச்சிகளை என்னுடைய வீட்டாரும் என்னுடன் சேர்ந்து பார்ப்பார்கள். (அதே சமயம் அவர்கள் பார்க்கவிரும்பும் நிகழ்ச்சிகளைத்தான் நான் அவர்களுடன் சேர்ந்து பார்ப்பதில்லை)


S.MAGINTHAN said...

சிறந்த பதிவு ஐயா, உங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
அதிலும் ;
"கருணாநிதி எந்தெந்த சமயத்தில் என்னென்ன விதமாய்ப் பேசினார், எந்தெந்த தவறுகள் செய்தார், யார்யாரை என்னென்ன மொழியில் ஏசினார் என்பதுபோன்ற விஷயங்கள் தவிர, திருக்குவளையில் சின்னப்பையனாக இருந்தபோது சாப்பாட்டுப் பந்தியில் எத்தனைப் பருக்கைச் சோற்றைக் கீழே சிந்தியிருக்கிறார் எங்கெங்கே எச்சில் துப்பியிருக்கிறார், எந்தெந்த சுவர்களில் ஒண்ணுக்கடித்தார் என்பதுவரையிலான பட்டியல் இந்த ‘நெறியாளர்களிடம்’ உண்டு. "
எனும் பத்தி சிறப்பு.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்! நலமா? பிளாஷ் பேக்ல கடைசி வரியிரிலிருத்து துவங்கலாம். பிரசன்னா வின் ஒரே விவாதத்தை மட்டும் காண நேர்ந்தது. பொய்க் கேஸ் ஜோடனையில் சமர்த்தா இருப்பார் போல இருந்தது அவரது வாதம். அவரைப் போய் டக்கர்ன்னு சொல்றீங்களே! திரைப்பட பாணியில் சொன்னா கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா வசனம்தான் நினைவுக்கு வந்தது. இப்ப எப்படின்னு தெரியல.

ஆங்கில விவாத மேடைகளுக்கும் தமிழ் விவாதங்களுக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் ஒருவர் பேசும் போது இடையில் புகுந்து கொள்வது. பெரும்பாலோர் குறிப்புகள் எடுக்காமல் பேசுபவர்களாக இருப்பதால் மறப்பதற்குள் மறுப்பு சொல்லி விடவேண்டுமென்று அவசரப்படுகிறார்கள்.ஒரே நேரத்தில் இரண்டு,மூன்று பேர் பேசுவது விவாதத்தின் அழகை கெடுக்கிறது.

சில புள்ளி விபரங்கள் தி.மு.கவிற்கு சாதகமாக பேசுவது போல் தெரிந்தாலும் சேம் சைடு கோல் அடிக்கிறீங்களேங்கிற மாதிரி பட்டது.உதாரணமாக
//ஆனால் அனந்தநாயகிக்கு கருணாநிதி சட்டமன்றத்தில் என்ன பதில் சொன்னார் என்பது இவர்கள் கைகளில் தயாராக இருக்கும். ஒரு மாநிலத்தின் கவர்னர் மீது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன ஆபாசமாய்க் குற்றம் சாட்டினார் என்பது இவர்களுக்குத் தெரியாது. ஆனால் இந்திராகாந்தியைக் கருணாநிதி என்ன விமர்சித்தார் என்பதுமட்டும் இவர்களுக்கு மூக்குக்குமேல் விடைத்துக்கொண்டு நிற்கும். டான்சி வழக்கோ, வருமான வரி கட்டாத வழக்கோ, வெளிநாட்டிலிருந்து வந்த டிடி வழக்கோ, சொத்து குவிப்பு வழக்கோ (இந்த வழக்கிற்கு தந்திடிவி சூட்டிய செல்லப்பெயர் ‘சொத்துவழக்கு’. சொத்துக் குவிப்பு வழக்கு அல்ல என்று குமாரசாமி தீர்ப்பிற்கு முன்பேயே இவர்கள் தீர்ப்பு எழுதிவிட்டார்கள்.) எந்த வழக்குபற்றியும் இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் 2ஜி வழக்கு தெரியும்; ஆ.ராசா வழக்கு தெரியும், கனிமொழி வழக்கு தெரியும்.//

ஜெயலலிதாவின் சார்புக்கும் கலைஞரின் எதிர்ப்புக்கும் சில காரணங்கள் உள்ளன. ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் கலைஞர் மாற்றுக் கருத்துக்களை உள் வாங்கி கொள்வார். ஆனால் இந்தம்மா போட்டு பிராண்டி விடும் என்கிற பயம். சமீபத்து உதாரணமாக வினவு தோழர்களின் சாராய பாட்டு.எப்பவும் லைம் லைட்டில் இருக்கும் ஊடகங்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல் படுகிறார்கள் என நினைக்கிறேன்.

மேலும் ஒரு முழு பூசணிக்காயை தி.மு.க சார்பாக மறைக்கிறீர்கள். கலைஞர் மீதான கடும் விமர்சனங்களுக்கு இரண்டு பெரும் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று குடும்ப அரசியலை கழகத்துக்குள் கொண்டு வந்தது.இரண்டாவது 2008-2009ம் வருட காலத்தின் தமிழக,ஈழ வரலாற்றை கலைஞரால் ஆட்சியிலிருந்து திருப்பி போட்டிருக்க முடியும் என இன்னும் ஏராளமானவர்கள் நம்புகிறார்கள். இவை இரண்டும் கலைஞரின் ஆட்சி நிர்வாகம்,தமிழர்கள் அடைந்த பலன்களை பின் தள்ளி விடுகிறது. இதையெல்லாம் கழக கண்மணிகளும்,உங்களை போன்ற தி.மு.க ஈரப்பதம் கொண்டவர்களும் சொல்லவே மாட்டீர்கள் :)

ஜெயலலிதா எவ்வளவு தகிடுதத்தம் செய்து நீதிமன்ற குற்றங்களிலிருந்து வெளி வந்தும் அதனை கொண்டாடுவதற்கு பலர் இருப்பதால் ஊழல் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும் பிரச்சினையில்லைங்கிற மாதிரி மனோபாவம் வளர்ந்து விட்டது.

டைம்ஸ் நவ் அர்னால்ட் அலப்பறை அதிகமாக இருந்தாலும் மாற்றாக சிலரை தமிழகத்தில் உட்கார வைப்பதை பாராட்டலாம். என்.டி.டி.வியை பாருங்க! சுப்ரமணிய சுவாமி நிரந்தர குத்தைகைக்கும் சோ அவ்வப்போது குத்தகைக்கும் விடப்பட்டிருப்பார்கள். இதுல கொடுமை என்னன்னா தமிழகத்தின் கள நிலவரங்களை அறியாமலே இருவரும் பீலா விடுவது. முன்பு எனக்கு தெரிந்து தேர்தலில் இந்த கட்சி ஜெயிக்கும்ன்னு சோ ஆருடம் சொன்னார்ன்னா அந்தக்கட்சி தோத்துப் போகும். சமீபத்தில் கூட இந்திய அகதி தமிழர்களுக்கு என்.ராம் வக்காலத்து வாங்கிட்டு எம்.கே.நாராயணனை கூட்டி வந்து மூக்கறுத்து அனுப்பி விட்டார்.

இவ்வளவு நினைவாற்றல்களோடு பழைய நினைவுகளை நினைவுக்கு கொண்டு வந்து பகிர்ந்தமைக்கு நன்றி.



ராஜ நடராஜன் said...

@ஜோதிஜி! அட்ரா!அட்ரா!அட்ரா:)

@அமுதவன்! எம்.ஜி.ஆருக்கு எதிராக மு.க முத்துவை சினிமாவில் களம் இறக்கிய போதெல்லாம் அவருக்கு குடும்ப பற்றே இல்லையாக்கும்:)

என்னைக்கேட்டா எம்.ஜி.ஆர் சும்மா ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளர் என ஷோ காட்டுனதோட சரி. ஜெயலலிதாவின் வளர்ச்சியின் பெரும் பங்கு கலைஞரையே சாரும்.

காரிகன் said...

அமுதவன் ஸார்,

சமயம் கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆரை மட்டம் தட்டும் உங்கள் பாணி இதிலும் தெரிகிறது. இதைச் சொல்வதால் நான் எம்ஜிஆர் ஆள் என்ற முத்திரைக்குள் என்னை அடைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மேலும் உங்களுடைய தி மு க பாசம் அதிகமாகவே தென்படுகிறது. கருணாநிதியோ எம்ஜி ஆரோ ஜெயலலிதாவோ தவறு செய்தவர்களை விமர்சனம் செய்வது சரியானதே. அண்ணா எம்ஜிஆர் போன்றவர்கள் இப்போது இல்லை என்பதால் அவர்களை குறித்து பேச வேண்டாம் என சிலர் நினைக்கலாம்.

தி முக விலிருந்து அதிமுக வந்ததால் எந்த பிரச்சினைக்கும் திமுகவை உதாரணம் காட்டுவது வசதியாக இருக்கிறது போல. கலைஞர், சன் போன்ற தொலைகாட்சிகள் தங்களுக்கு வேண்டிய விளம்பரத்தை செய்யலாமே? மற்றபடி அதிமுக ஆதரவு என்பதெல்லாம் சற்று மிகைப் படுத்தப்பட்ட கற்பனை போல் தெரிகிறது. சொல்லப்போனால் இந்த அரசியல் களத்தில் அதிகம் நக்கல் செய்யப்படுவது விஜயகாந்த்தான்.

Anonymous said...

திமுகவிற்கு கண்ணை மூடிக்கொண்டு நீங்க ஜால்ரா அடிக்கலயா. வசந்தி ஸ்டான்லி ஹரிஹரணிடம் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்ள் என்று விஜயகாந்த் சொன்னதை வைத்து ஒரு விவாதம் நடந்தது. அப்போது திமுக கூடத்தான் காசு வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னார் என்று ஹரிஹரன் சொல்ல அதை வசந்தி ஸ்டான்லி மறுக்க ஸ்டாலின் பிரசாரம் செய்யும் போது காசு வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னதை தந்திடிவி அப்போதே வீடியோவாக போட்டதும் வசந்தி ஸ்டான்லி முகத்தில் ஈயாடவில்லை. அந்த நெத்தியடியை நான் மிகவும் ரசித்தேன். ஊடகங்கள் திமுக செய்த அராஜகங்கள் கொஞ்சநஞ்சமா? 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளரகளை ஸ்டாலின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்தனரே. இந்த திமுகவுக்கு பரிந்து பேசவேண்டும் என்று சொல்கிறீர்களா? திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் பாராட்டு விழா எடுத்துக்கொண்டு நடிகர்களை மிரட்டி வரவைத்தார்களே திமுக ரவுடிகள். அதற்கு என்ன பதில்? யார் நிலம் வீடு வாங்கினாலும் உடனே அந்தந்த ஏரியா திமுக கவுன்சிலர் எம்எல்ஏ என்று மக்களை மிரட்டி வதைத்தார்களே. அதற்கு என்ன பதில். ஆதிமுக ஆட்சியில் ஆதிமுக காரர்களை கேள்வியாவது கேட்க முடிகிறது. இதே திமுக ஆட்சி என்றால் இந்த சேனல்கள் எல்லாம் எப்போதோ காணாமல் போயிருக்கும். திமுக என்றாலே ரவுடிகள் நடத்தும் ஆட்சி என்று மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்டது. இனி எக்காலத்திலும் திமுக ரவுடி கும்பல் ஆட்சிக்கு வரவே முடியாது. ஆதிமுக ஆட்சியில் திமுக குடும்ப நடிகர்கள் அருள்நிதி, உதயநிதி. போன்ற நடிகர் படங்கள் வெளிவருகிறதே அதுவே அதிமுக ஆட்சிக்கு நற்சான்றிதழ் தான். கருணாநிதி ஒரு தேசத்ரோகி. தோற்றால் மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்பார். இவர் தான் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற போகிறாரா? தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தான் ஊடகங்களுக்கு சுதந்திரமான ஆட்சி. அதனால் தான் ஊடகங்கள் அதிமுகவை அதிகம் விமர்சிப்பதில்லை. அப்படி விமர்சிப்பது திமுக ஆட்சிக்கு வழிவகுத்து விடும் பிறகு நம்மை திமுக வாழவே விடாது என்பதும் ஊடகங்களுக்கு தெரியும். அவர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. தோற்கும் போதே பத்திரிகையாளரகளை இப்படி அடிப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன அடாவடி நடக்குமோ என்று என்று நினைத்து தான் ஊடகங்கள் கூட்டாக சேர்ந்து திமுகவை ஓழிக்கிறது. திமுக அழியவேண்டிய கட்சி தான். வளர்க ஊடகங்களின் இந்த மகத்தான பணி.

Amudhavan said...

கவிப்ரியன் வேலூர் said...
\\மிக விரிவான அருமையான நடுநிலையான அரசியல் அலசல். தி.மு.க.வினர் கூட சில சமயம் இப்பட்டிப்பட்ட வாதங்களை வைக்கத் தவறிவிடுகிறார்கள். திட்டமிட்டே இவர்கள் தி.மு.வையும், கருணாநிதியையும் அரசியலிலிருந்தே அகற்றப்பார்க்கிறார்கள். பன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பலரும் ஏன் எல்லோரும் துணை போவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழ்நாடு சுடுகாடாகிப் போனால்தான் இவர்கள் அடங்குவார்கள்................................
சன் டி.வி.யிலும் கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஒரு அழுத்தமோ அல்லது தி.மு.க. சார்போ அதிகம் இல்லை என்பது அவர்களின் சுயநலத்தைத்தான் காட்டுகிறது. இப்படிப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து புத்தமாய்ப் போடுங்கள் அமுதவன் ஐயா. எதிர்கால சந்ததியினருக்கு இந்த கேவல அரசியலை புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.\\
கவிப்பிரியன் தங்களின் அப்பழுக்கற்ற கருத்து மனதைத் தொட்டது. கலைஞரும் திமுகவும் தமிழகத்தில் இல்லையென்றால் என்னென்ன இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என்ற சாதாரண உண்மையைக்கூடத் தெரிந்துகொள்ளாமல், அல்லது பிடிவாதமாகத் தெரிந்துகொள்ள மறுத்து தர்க்கம் செய்கிறவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
ஊடகங்களின் பணி நேர்மையைச் சொல்லுதல். அந்தப் பணியை இந்த ஊடகங்கள் செய்வதில்லை என்ற குறை எனக்குண்டு.
திமுக பற்றி எனக்கிருக்கும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் நடுநிலையான கட்டுரைகளை எழுதுவதையும் அதனை நூலாகக் கொண்டுவருவதையும் ஒரு திட்டமாக வைத்திருக்கிறேன். நல்ல சந்தர்ப்பம் அமைவதற்கு விரும்புவோம். தங்கள் வருகைக்கு நன்றி.



Amudhavan said...

S.MAGINTHAN said...
\\சிறந்த பதிவு ஐயா, உங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். அதிலும் ; "கருணாநிதி எந்தெந்த சமயத்தில் என்னென்ன விதமாய்ப் பேசினார், எந்தெந்த தவறுகள் செய்தார், யார்யாரை என்னென்ன மொழியில் ஏசினார் என்பதுபோன்ற விஷயங்கள் தவிர, திருக்குவளையில் சின்னப்பையனாக இருந்தபோது சாப்பாட்டுப் பந்தியில் எத்தனைப் பருக்கைச் சோற்றைக் கீழே சிந்தியிருக்கிறார் எங்கெங்கே எச்சில் துப்பியிருக்கிறார், எந்தெந்த சுவர்களில் ஒண்ணுக்கடித்தார் என்பதுவரையிலான பட்டியல் இந்த ‘நெறியாளர்களிடம்’ உண்டு. " எனும் பத்தி சிறப்பு.\\

தங்களின் அழகிய ரசனைக்கு நன்றி மகிந்தன்.

Amudhavan said...

ராஜ நடராஜன் said..
\\ஜெயலலிதாவின் சார்புக்கும் கலைஞரின் எதிர்ப்புக்கும் சில காரணங்கள் உள்ளன. ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் கலைஞர் மாற்றுக் கருத்துக்களை உள் வாங்கி கொள்வார். ஆனால் இந்தம்மா போட்டு பிராண்டி விடும் என்கிற பயம். சமீபத்து உதாரணமாக வினவு தோழர்களின் சாராய பாட்டு.எப்பவும் லைம் லைட்டில் இருக்கும் ஊடகங்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல் படுகிறார்கள் என நினைக்கிறேன்.\\

நடராஜன், நீங்களும் ஒரு நல்ல அலசலைத்தான் நிகழ்த்தியிருக்கிறீர்கள். இந்த பதிலே அதற்கொரு சாட்சி. கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது வேறு. ஒரு வன்மத்துடனும் வெறியுடனும் செயல்படுவது வேறு. திமுக மீதும் கலைஞர் மீதும் ஊடகங்களால் காட்டப்படும் வன்மத்தையும் வெறியையும்தான் நான் குறிப்பிடுகிறேன்.

\\மேலும் ஒரு முழு பூசணிக்காயை தி.மு.க சார்பாக மறைக்கிறீர்கள். கலைஞர் மீதான கடும் விமர்சனங்களுக்கு இரண்டு பெரும் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று குடும்ப அரசியலை கழகத்துக்குள் கொண்டு வந்தது.இரண்டாவது 2008-2009ம் வருட காலத்தின் தமிழக,ஈழ வரலாற்றை கலைஞரால் ஆட்சியிலிருந்து திருப்பி போட்டிருக்க முடியும் என இன்னும் ஏராளமானவர்கள் நம்புகிறார்கள். இவை இரண்டும் கலைஞரின் ஆட்சி நிர்வாகம்,தமிழர்கள் அடைந்த பலன்களை பின் தள்ளி விடுகிறது. இதையெல்லாம் கழக கண்மணிகளும்,உங்களை போன்ற தி.மு.க ஈரப்பதம் கொண்டவர்களும் சொல்லவே மாட்டீர்கள்\\
ஈழ விவகாரத்தில் கலைஞரின் நிலையைக் கண்டித்து என் பதிவுகளிலேயே பல இடங்களில் நான் எழுதியிருக்கிறேன். தமிழக அரசியலில் கலைஞர் எடுத்த பல முடிவுகளில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆனால் இந்த ஊடகங்களின் நிலை அதுவல்ல. இவர்களின் நோக்கமும் பின்னணியும் வேறு. அதைத்தான் சுட்டிக்காட்ட முனைந்தேன். தவிர, ஈழ விவகாரத்தில் கலைஞர் செய்தது சரியல்ல என்று சொல்லிக்கொண்டு ஈழம் பற்றிய எண்ணமே இல்லாதவர்கள் பின்னாலும், ஈழத்துக்கு முற்றிலும் முரண்பட்ட கருத்து வைத்திருப்பவர்கள் பின்னாலும் தமிழகம் செல்வதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈழ விவகாரத்தைச் சொல்லி வாழ்நாள் பூராவும் கலைஞரைத் தோற்கடித்துவிட்டு அதற்கு முரணானவர்களை வாழ்நாள் பூராவும் ஆதரித்துக்கொண்டா இருக்கப்போகிறீர்கள்?

:) ஜெயலலிதா எவ்வளவு தகிடுதத்தம் செய்து நீதிமன்ற குற்றங்களிலிருந்து வெளி வந்தும் அதனை கொண்டாடுவதற்கு பலர் இருப்பதால் ஊழல் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும் பிரச்சினையில்லைங்கிற மாதிரி மனோபாவம் வளர்ந்து விட்டது.\\

தங்களின் இந்தக் கருத்தும் ஏற்புடையதே. ஆனால் ஊடகங்கள் சரியான பாதையைத் தேர்வு செய்யவேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

ஜோதிஜி said...

எம்.ஜி.ஆர் சும்மா ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளர் என ஷோ காட்டுனதோட சரி. ஜெயலலிதாவின் வளர்ச்சியின் பெரும் பங்கு கலைஞரையே சாரும்.

அமுதவன் இந்தக் கருத்தை நீங்க எப்படி பார்க்குறீங்க? என்பதை நான் தெரிந்து கொளள் ஆவலாய் உள்ளேன்.
(வகையாக மாட்டிக் கொண்டீங்க??????)

Amudhavan said...

ராஜ நடராஜன் said...
\\பிரசன்னா வின் ஒரே விவாதத்தை மட்டும் காண நேர்ந்தது. பொய்க் கேஸ் ஜோடனையில் சமர்த்தா இருப்பார் போல இருந்தது அவரது வாதம். அவரைப் போய் டக்கர்ன்னு சொல்றீங்களே! திரைப்பட பாணியில் சொன்னா கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா வசனம்தான் நினைவுக்கு வந்தது. இப்ப எப்படின்னு தெரியல.\\

ஒரேயொருமுறை பிரசன்னாவின் விவாதத்தைக் கேட்டு நீங்கள் முற்று முழுதாக ஒரு முடிவுக்கு வந்திருந்தால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், பதிவின் இறுதியில் நான் எழுதியிருக்கும் இந்த வார்த்தைகளில் இப்போதும் உறுதியாக இருக்கின்றேன். ..'இளம் வக்கீலான இவரிடம் இந்த நெறியாளர்கள், வெறியாளர்கள் யாருடைய குயுக்தியும் செல்லுபடி ஆவதில்லை. எப்படிப் போட்டு வளைத்தாலும் அத்தனை வியூகங்களையும் உடைத்துக்கொண்டு வந்து தம்முடைய கருத்தை நிலைநாட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார் இந்த இளைஞர். அரசியல் விவாதங்களில் ஒரு நட்சத்திரம் போல் பவனி வருகிறார் இவர். இந்த இளைஞர் பங்குபெறும் விவாதங்களைப் பார்க்கும் நேயர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.'



Amudhavan said...

காரிகன் said...
\\சமயம் கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆரை மட்டம் தட்டும் உங்கள் பாணி இதிலும் தெரிகிறது. இதைச் சொல்வதால் நான் எம்ஜிஆர் ஆள் என்ற முத்திரைக்குள் என்னை அடைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மேலும் உங்களுடைய தி மு க பாசம் அதிகமாகவே தென்படுகிறது. கருணாநிதியோ எம்ஜி ஆரோ ஜெயலலிதாவோ தவறு செய்தவர்களை விமர்சனம் செய்வது சரியானதே. அண்ணா எம்ஜிஆர் போன்றவர்கள் இப்போது இல்லை என்பதால் அவர்களை குறித்து பேச வேண்டாம் என சிலர் நினைக்கலாம்............\\
எம்ஜிஆரைப் பற்றிய உள்ளும் புறமும் ஓரளவு தெரியும் என்பதால் மற்றவர்களுக்கு எம்ஜிஆர் மீதிருக்கும் 'கண்மூடித்தனமான பக்தி எனக்கில்லை' என்பது உண்மைதான். எம்ஜிஆர் அளவுக்கு ஒரு அற்புதமான மக்கள் மனம் தெரிந்த entertainer கலையுலகில் யாருமில்லை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அவரது அரசியல் விவகாரங்களில் நல்ல அபிப்பிராயம் கிடையாது. அண்ணா மற்றும் எம்ஜிஆர் மறைந்துவிட்டனர் என்பதற்காக அவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை எனில் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிய காரணங்கள் இங்கே நிறைய இருக்கின்றன. இதில் அண்ணாவை நான் பிரித்தே பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் அவரது அறிவுத்திறன் மீது எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது.
\\தி முக விலிருந்து அதிமுக வந்ததால் எந்த பிரச்சினைக்கும் திமுகவை உதாரணம் காட்டுவது வசதியாக இருக்கிறது போல. கலைஞர், சன் போன்ற தொலைகாட்சிகள் தங்களுக்கு வேண்டிய விளம்பரத்தை செய்யலாமே?\\
உங்கள் வாதம் என்னவோ சரிதான். ஆனால் எப்படி இருக்கிறது என்றால் திமுகவுக்கு ஆதரவான வாதங்கள் வைக்கும்போது நெறியாளர்கள் ஒரு அற்புதமான கேள்வி கேட்பார்கள். "அப்படியானால் நீங்கள் கோர்ட்டில்போய் இதனைத் தீர்த்துக்கொள்ளலாமே" என்று. அது ஏனோ நினைவுக்கு வருகிறது.



vijayan said...
This comment has been removed by a blog administrator.
vijayan said...

அன்புள்ள அமுதவன்,நாம் இருவரும் ஒரே பள்ளியிலிருந்து வந்தவர்கள்,ஒரே ரசனை உதாரணம் காமராஜ்,கண்ணதாசன்,சிவாஜி,ஸ்ரீதர்,MSV .ஆனால் எப்படி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற சரித்திர புகழ் பெற்ற வார்த்தைகளை மறந்தீர் என்று தெரியவில்லை.அதிமுக திமுகாவைவிட மட்டமான கட்சிதான்,ஆனால்,இத்தனை அரசியல் ,கலாசாரம் ,பண்பாடு ஆகிய துறைகளில் தமிழ்நாடு படு பாதாளத்திற்கு போனது யாரால் என்றும் ,அதற்க்கு பிள்ளையார் சுழி போட்டது யார் என்றும் யோசியுங்கள் பின்னர் சொல்லுங்கள்.இவர்களின் ஆரம்ப அடையாளம் தெரிந்தே நானெல்லாம் 70-களில் கர்நாடகத்தை அடைக்கலமாக கொண்டவன்.உங்கள் படைப்புகளின் ஈரத்தை என்றும் ரசிப்பவன் அன்பன் விஜயன்.

சார்லஸ் said...

சார்

காசுக்காக வேஷம் போடும் நிலைக்கு பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் தள்ளப்பட்டு பல காலம் ஆகிவிட்டது. பாதி உண்மை பாதி பொய் என்பதுதானே ஊடகங்களின் தர்மம் . அதனால் அரசியல் சார்ந்த விவாதங்களில் ஆரோக்கியப் போக்கு இருப்பதாக நான் நினைப்பதில்லை. ஆனால் உங்களின் எண்ணங்களுக்கு ஒத்துப் போகும் நிலையில்தான் நானும் உள்ளேன். தி. மு. க வை எல்லா ஊடகங்களும் அதிகமாகவே சாடுகின்றன .

மற்ற எந்த கட்சிகளிலும் ஆட்சிகளிலும் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது போலவும் தி. மு. க. வும் கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் மட்டுமே ஒட்டு மொத்த ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் போலவும் மக்களிடத்தில் ஒரு மாய பிரமையை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் காட்டும் அக்கறை நகைப்புக்குரியது. ஆனால் பொது ஜனங்களை அறிவிலிகள் என நினைத்துக் கொண்டு ஊடகங்கள் செய்யும் இந்த உளவியல் ஊடுருவல் சில நேரங்களில் தவறாகவும் மாறும். மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள்.

ஊடகங்கள் பல இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணம் எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளும் தி. மு. க . வின் மன நிலை , கருணாநிதி அவர்களின் சகிப்புத் தன்மை, தற்போது ஆட்சி செய்பவர்களை நினைத்து ஏற்படும் பயம் , திடீரென பாயும் அவதூறு வழக்குகள் , ஒளிபரப்பில் ஏற்படுத்தப்படும் இருட்டடிப்பு போன்றவைகளை சொல்லலாம் . ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்.

Amudhavan said...

Anonymous said...
\\"..............................................."\\

அனானி, நீங்கள் நிறையப் பேசியிருக்கிறீர்கள். மகாமகம், சந்திரலேகா, சேஷன், சுப்பிரமணியசாமிக்கான கோர்ட் வரவேற்பு, நீதிபதி சீனிவாசன் வீட்டிற்கு நேர்ந்த இடைஞ்சல்கள், ப.சி.மீதான தாக்குதல்கள், பிடிக்காதவர்கள் மீதான ஹெராயின் கஞ்சா வழக்குகள்,முத்துக்குமாரசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி,ஆடிட்டர் மீதான செருப்படி, விஷ்ணுப்பிரியா, கோவன் கைது.........இம்மாதிரியான விவகாரங்களில் நீங்கள் சொன்னது எதுவும் சரியாகக் கேட்கவில்லை. கொஞ்சம் உரத்துச் சொல்லுங்கள்.

Amudhavan said...

vijayan said...

\\ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற சரித்திர புகழ் பெற்ற வார்த்தைகளை மறந்தீர் என்று தெரியவில்லை.அதிமுக திமுகாவைவிட மட்டமான கட்சிதான்,ஆனால்,இத்தனை அரசியல் ,கலாசாரம் ,பண்பாடு ஆகிய துறைகளில் தமிழ்நாடு படு பாதாளத்திற்கு போனது யாரால் என்றும் ,அதற்க்கு பிள்ளையார் சுழி போட்டது யார் என்றும் யோசியுங்கள் பின்னர் சொல்லுங்கள்.இவர்களின் ஆரம்ப அடையாளம் தெரிந்தே நானெல்லாம் 70-களில் கர்நாடகத்தை அடைக்கலமாக கொண்டவன்.உங்கள் படைப்புகளின் ஈரத்தை என்றும் ரசிப்பவன்
அன்பன் விஜயன்.\\

விஜயன், தங்களின் அன்புக்கு நன்றி. காமராஜரின் புகழ்பெற்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த ஒரு வார்த்தைக்காக 'குட்டையில் ஊறிய இரண்டாவது மட்டையை 'மட்டுமே' உயர்த்திப்பிடிக்கும் ஊடக அறத்திற்குத் தலையாட்டிக்கொண்டிருக்க முடியாது இல்லையா?



Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\எம்.ஜி.ஆர் சும்மா ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளர் என ஷோ காட்டுனதோட சரி. ஜெயலலிதாவின் வளர்ச்சியின் பெரும் பங்கு கலைஞரையே சாரும். அமுதவன் இந்தக் கருத்தை நீங்க எப்படி பார்க்குறீங்க? என்பதை நான் தெரிந்து கொளள் ஆவலாய் உள்ளேன்.\\

ஜோதிஜி மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ராஜநடராஜன் சொன்ன கருத்து ஏற்புடையதுபோல் தோற்றமளிக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் மேலும் பல விஷயங்கள்..... எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததில் ஆரம்பித்து ஜெயலலிதா அரசியலுக்கு வந்தது, அவர் பயணப்பட்டது..... என்றெல்லாம் வரும்போது இந்திரா காந்தி ஆரம்பித்து, ராஜீவ்காந்தி,நரசிம்மராவ் என்று பலர் வருகிறார்களே அவர்களையெல்லாம் சேர்த்து யோசிப்பதுதான் சரியாக இருக்கும்.

Amudhavan said...

சார்லஸ் said...
\\மற்ற எந்த கட்சிகளிலும் ஆட்சிகளிலும் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது போலவும் தி. மு. க. வும் கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் மட்டுமே ஒட்டு மொத்த ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் போலவும் மக்களிடத்தில் ஒரு மாய பிரமையை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் காட்டும் அக்கறை நகைப்புக்குரியது. ஆனால் பொது ஜனங்களை அறிவிலிகள் என நினைத்துக் கொண்டு ஊடகங்கள் செய்யும் இந்த உளவியல் ஊடுருவல் சில நேரங்களில் தவறாகவும் மாறும். மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள்.

ஊடகங்கள் பல இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணம் எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளும் தி. மு. க . வின் மன நிலை , கருணாநிதி அவர்களின் சகிப்புத் தன்மை, தற்போது ஆட்சி செய்பவர்களை நினைத்து ஏற்படும் பயம் , திடீரென பாயும் அவதூறு வழக்குகள் , ஒளிபரப்பில் ஏற்படுத்தப்படும் இருட்டடிப்பு போன்றவைகளை சொல்லலாம் . ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்.\\

அருமை சார்லஸ், தங்களின் இந்தப் படப்பிடிப்பு இந்தத் தளத்தில் பலர் எழுப்பியிருக்கும், எழுப்பவிருக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வதுபோல் அமைந்திருக்கிறது. மிகவும் சரியான கணிப்பு உங்களுடையது.நன்றி.



காரிகன் said...

அமுதவன் அவர்களே,

மதுவை கருணாநிதி கொண்டுவந்தார் பின்னர் அதை தடை செய்தார் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கொண்டுவந்ததே முதல் தவறு. அதில் என்ன பிறகு தடை? இரண்டாவது இதில் எம் ஜிஆர் தான் மீண்டும் மதுவை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தார் என்பது இன்றைய தினத்தில் அவசியமில்லாத தகவல். தமிழகத்தில் 70 களின் இறுதி அல்லது எண்பதுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன் பலர் கள்ள சாராயம் குடித்து மொத்தமாக இறந்தது அப்போது பெரிய அளவில் விவாதமாகியது. அதன் பிறகே எம்ஜிஆர் கள்ள சாராயத்தை ஒழிக்க மதுவை மீண்டும் அமல்படுத்தினார். மதுவை யாராலும் ஒழிக்க முடியாது என்பதே நிதர்சனம். இன்றைக்கு ஊற்றிகொடுத்த உத்தமி என்று பாடல் பாடும் கோவன் வகையறாக்கள் கருணாநிதி இதையே செய்தபோது எங்கேயிருந்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் டாஸ்மாக் ஜெவால் ஆரம்பிக்கப்பட்டது என்று இப்போது பேசும் பலர் அதன் பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது அதை ஏன் தடை செய்யாமல் வளர்த்துவிட்டார் என்ற கேள்விக்கு பதில் சொல்வதில்லை.

திரு சால்ஸ் திமுகவின் சகிப்புத்தன்மை பற்றி சொல்லியிருந்தார். அவர் வசிக்கும் அதே மதுரையில்தான் எதோ உப்பு பெறாத கனெக்கெடுப்புக்காக மதுரை தினகரன் அலுவலகம் எரிந்தது. மூன்று உயிர்கள் சாம்பலாயின. நல்ல சகிப்புத்தன்மைதான்.

திமுக அதிமுக இரண்டும் மோசமான கட்சிகள் என்பது சிலரின் குற்றச்சாட்டு. ஆனால் இவை இரண்டும் இங்கே இல்லாவிட்டால் இன்றைய சூழலில் தமிழகத்தில் மதவாதம் காலூன்றிவிடும் அபாயம் இருப்பதை பலர் யோசிப்பதில்லை. திராவிட கட்சிகளின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் வரையே இந்த பாதுகாப்பு நமக்கு சாத்தியம். அதற்காகவாவது சற்று கருணாநிதி, ஜெயலலிதா பற்றிய தீவிர விமர்சனங்களை நாம் தவிர்க்கலாம்.

அரசியல் பற்றி அதிகம் நான் விவாதிப்பதில்லை. எனவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

Anonymous said...

உரக்க சொல்ரேன் கேட்டுக்கொள்ளுங்கள். அதிமுக ஆட்சி திமுக ரவுடி ஆட்சிக்கு எவ்வளவோ மேல் என்பது தான் எந்த கட்சியும் சாராத என்னை போன்றவர்களின் இன்றைய நிலை. நீங்கள் திமுகவின் அராஜகங்களை ஏற்றுக்கொண்டு அதிமுக அப்படி செய்யவில்லையா இப்படி செய்யவில்லையா என்கிறீர்கள். எந்த கட்சியையும் சாராத வாக்காளர்களின் ஓட்டு தான் வெற்றியை தீர்மானிக்கிறது. அதை கடந்த 2011 சட்டமன்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் பார்த்தோம். திமுக ஆட்சி வந்தால் அன்றாட வாழ்க்கையே போய்விடும். அதிமுக ஆட்சியில் இவ்வளவு தொல்லை அராஜகம் இல்லை. அதிமுக அரசியல் எதிரிகளை மட்டும் தான் டார்கெட் செய்யும் ஆனால் திமுக ஆட்சியில் பொதுமக்களை கூட நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்.

வருண் said...

அமுதவன் சார்: பொதுவாக இந்த விசயத்தில் என் "பார்வை" மற்றும் "கருத்துக்கள்" உங்க கருத்துடன் ஒத்துப் போகிறது என்பதை மறுபடியும் சொல்கிறேன்.

ஆனால் ஜெயா வை வளர்த்து விட்டது கருணாநிதி என்பது முழு அபத்தம்..ராஜிவ் இறந்தபோது அதை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி இந்தியப் பற்றை காட்டுவதுபோல் காட்டி ஆட்சியைப் பிடிக்க உதவியவர் கருணாநிதி அல்லவே. அதை செய்தது நம் ரத்தத்தின் ரத்தங்கள் தான். இன்னைக்கு ஈழ அன்னை என்று அவரைக் கொண்டாடுவது அதே திராவிட நாதாரிகள்தான்..

ரஜினிகாந்த் வளந்ததுக்கு கமலஹாசன் தான் காரணம்! ஜெயாவை வளர்த்துவிட்டது கருணாநிதிதான் னு சொன்னால அதில் அர்த்தம் நிரம்பியதுபோல்தான் தோனும். ஆனால் அதெல்லாம் சும்மா ஒருவர் வெற்றி பெற்ற பிறகு சொல்லப்படும் "உடாண்ஸ் தியரி"!

கருணாநிதியை விட்டுவிட்டு ஆழத்தோண்டிப் பார்த்தால் தமிழனின் மனநிலை எப்படியோ பார்ப்பனர்களை உயர்வாக நினக்கும் மனநிலையாக கேவலமானதாகத்தான் இருக்கிறது என்ற உண்மை புலப்படும். தமிழனுக்கு நடு நிலைமை னா என்னனே தெரியாது. அவன் பேசும் நியாயங்கள் இப்படித்தான் இருக்கும்..ஆனால் நம் கருத்தை நாம் ஆணித்தனமாகச் சொல்லத்தான் செய்யணும். நீங்க அதைத்தான் அழகாக செய்து இருக்கீங்க சார்!

Amudhavan said...

Anonymous said...
Anonymous said...
\\அதிமுக அரசியல் எதிரிகளை மட்டும் தான் டார்கெட் செய்யும் ஆனால் திமுக ஆட்சியில் பொதுமக்களை கூட நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்\\
அனானி, உங்களுடன் வரிக்கு வரி லாவணி பாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை. அரசியல் எதிரிகளை மட்டும் அதிமுக டார்கெட் பண்ணும் என்று எப்படிக்கூசாமல் பேசுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. தர்மபுரியில் பஸ்ஸில் சென்ற இளம் மாணவிகளை மறித்து உயிருடன் எரித்தார்களே, அந்தப் பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சியபோதும் அப்படியே பெட்ரோலை உள்ளே வீசிக் கொளுத்தினார்களே அது என்ன 'டார்கெட்?'
(உடனே மதுரை தினகரன் சம்பவம் என்று ஆரம்பிக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)

Amudhavan said...

காரிகன் said...
\\மதுவை கருணாநிதி கொண்டுவந்தார் பின்னர் அதை தடை செய்தார் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கொண்டுவந்ததே முதல் தவறு. அதில் என்ன பிறகு தடை?
இரண்டாவது இதில் எம் ஜிஆர் தான் மீண்டும் மதுவை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தார் என்பது இன்றைய தினத்தில் அவசியமில்லாத தகவல்.\\
\\மேலும் டாஸ்மாக் ஜெவால் ஆரம்பிக்கப்பட்டது என்று இப்போது பேசும் பலர் அதன் பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது அதை ஏன் தடை செய்யாமல் வளர்த்துவிட்டார் என்ற கேள்விக்கு பதில் சொல்வதில்லை.\\
அதாவது எம்ஜிஆர் செய்யும் தவறுகளுக்கு நியாயங்கள் உண்டு. ஜெயலலிதா செய்தால் அது தவறே இல்லை. அப்படியே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் செய்திருந்தாலும் பின்னால் வந்த கருணாநிதி அதனை ஏன் சரிசெய்யவில்லை? அப்படிக் 'கொண்டுவந்தது' எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ செய்த தவறு இல்லை. ஆனால் அதனை சரி செய்யாதது கருணாநிதி செய்த தவறு. யார் என்ன செய்திருந்தாலும் நாம் அவர்களுக்கெல்லாம் பரிவட்டம் கட்டித் தலையில் தூக்கிச் சுமக்கலாம். கருணாநிதியை மட்டும் போட்டுப் புரட்டி புரட்டி அடித்துக்கொண்டிருக்கலாம். நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம். அபாரம், அற்புதம்.





Amudhavan said...

வருண் said...
\\ஆனால் ஜெயா வை வளர்த்து விட்டது கருணாநிதி என்பது முழு அபத்தம்..ராஜிவ் இறந்தபோது அதை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி இந்தியப் பற்றை காட்டுவதுபோல் காட்டி ஆட்சியைப் பிடிக்க உதவியவர் கருணாநிதி அல்லவே. அதை செய்தது நம் ரத்தத்தின் ரத்தங்கள் தான். இன்னைக்கு ஈழ அன்னை என்று அவரைக் கொண்டாடுவது அதே திராவிட நாதாரிகள்தான்..

ரஜினிகாந்த் வளந்ததுக்கு கமலஹாசன் தான் காரணம்! ஜெயாவை வளர்த்துவிட்டது கருணாநிதிதான் னு சொன்னால அதில் அர்த்தம் நிரம்பியதுபோல்தான் தோனும். ஆனால் அதெல்லாம் சும்மா ஒருவர் வெற்றி பெற்ற பிறகு சொல்லப்படும் "உடாண்ஸ் தியரி"!\\

சரியாகச் சொன்னீர்கள். உங்களுடைய சாட்டையடி விமரிசனங்களுக்கு உட்படுவதற்கென்றே பலரும் பல கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதோ இப்போதுகூட கமல்ஹாசன் தமது பிறந்த நாள் கூட்டத்தில் பல அற்புதமான முத்துக்களை உதிர்த்திருக்கிறார்....

\\கருணாநிதியை விட்டுவிட்டு ஆழத்தோண்டிப் பார்த்தால் தமிழனின் மனநிலை எப்படியோ பார்ப்பனர்களை உயர்வாக நினக்கும் மனநிலையாக கேவலமானதாகத்தான் இருக்கிறது என்ற உண்மை புலப்படும். தமிழனுக்கு நடு நிலைமை னா என்னனே தெரியாது. அவன் பேசும் நியாயங்கள் இப்படித்தான் இருக்கும்..ஆனால் நம் கருத்தை நாம் ஆணித்தனமாகச் சொல்லத்தான் செய்யணும்.\\

பலரும் நமக்கென்ன வந்தது என்று நடுநிலைக் கருத்துக்களைச் சொல்லாமல் கடந்து போய்விடுவதால்தான் பலருக்கும் எந்த முடிவு எடுப்பது என்று தெரியாத குழப்பமும், பரப்பப்படுகிற செய்திக்கருத்தோட்டங்கள் எல்லாம் உண்மைதான் போலும் என்ற மாயையும் ஏற்பட்டுவிடுகிறது. அவர்களுக்குக் 'கிடைக்கும்' அந்த ஒரு சார்பான செய்திதான் உண்மை என்று அவர்கள் நம்பவும் ஆரம்பித்துவிடுகிறார்கள. அதனால்தான் முடிந்தவரை இதனை மாற்றலாம் என்று எண்ணம்.





Anonymous said...

மதுரை தினகரன் சம்பவம் ஒன்று இருக்கிறது என்று தெரிந்தும் நீங்கள் திமுகவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். நான் அதிமுக சிறந்த ஆட்சி என்று சொல்ல மாட்டேன். ஆனால் திமுகவின் ரவுடியிசம் அராஜக குடும்ப ஆட்சிக்கு அதிமுகவின் ஆட்சி எவ்வளவோ மேல். இந்த இரண்டு கட்சிகளும் தான் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கும் போது ஏன் ரவுடி திமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக ஆட்சி தான் ஊடகத்துறை மற்றும் பொதுமக்களுக்கு நிம்மதியான ஆட்சி. என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக இனி ஆட்சி அமைக்கவே முடியாது. நானும் பத்திரிகையாளன் தான். பலதரப்பட்ட மக்களிடம் பேசியதை வைத்து அடித்து சொல்கிறேன் அடுத்த ஆட்சி அதிமுக தான். தி.மு.கவிற்கு தான் ஆட்சி மாறவேண்டும் என்று சொல்லிகொண்டே இருக்கிறது. மக்கள் மனதில் இந்த ஆட்சி மீது எந்த பெரிய கோபமோ அதிருப்தியோ இல்லை. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். மதுவை கடந்த 6 மாதமாக தான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஏன் 2011, 12,13,14 இல் இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? திமுக 2006 இல் இருந்து 2011 வரை என்ன கிழித்து கொண்டு இருந்தது. இந்த ஞானோதயம் அப்போது எங்கே போயிற்று? அடுத்த வருட தேர்தலை மனதில் வைத்து தான் அனைத்து கட்சிகளும் மது விலக்கு பிரச்சினையை கையில் எடுத்து இருக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியும் மதுவை பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள். அவர்களின் அடுத்த சீசன் 2021 சட்டமன்ற தேர்தலிக்கு 6 அல்லது 8 மாதம் முன் தான் ஆரம்பமாகும்

ஜோதிஜி said...

தமிழ்மணத்தில் சூடான இடுகையில் முதலிடம் பெற்று நான் பார்த்தவரைக்கும் ஒரே நாளில் இரண்டாயிரம் பேருக்கும் மேல் படித்த இந்த கட்டுரையில் நீங்க காட்டிய உழைப்பு, உத்வேகம், உண்மைகள் அனைவருக்கும் போய்ச் சேர்ந்து விட்டது என்பது உங்களின் வெற்றியே ஆகும்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்! தியரிக்கும் ,நடைமுறை நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கூட பங்காளிகள் டமாரம் அடிப்பது இங்கே கேட்கிறது:)

கலைஞருக்கு தொழிலே அரசியல்தான்.எம்.ஜி.ஆருக்கு உப தொழில்ன்னு வேணுமின்னா சொல்லலாம். ஆனால் ஜெயலலிதாவை வெறும் அப்ரண்டிஸாத்தான் எம்.ஜி.ஆர் சேர்த்தார். எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் ஆளுமை துவக்கத்தில் ஜெயலலிதாவுக்கு இல்லை. கட்சி உடைப்பதில் கில்லாடியான கலைஞர் ஜெயலலிதா,ஜானகி உட்பூசல் காலத்திலேயே அ.தி.மு.க வை இல்லாமல் செய்திருக்கலாம்.என்னை அரசியல் செய்ய வைத்ததே கருணாநிதிதான் என்று ஜெயலலிதாவே வாக்குமூலம் கொடுத்த மாதிரி ஜெயலலிதாவின் நகை நட்டுக்களை தி.மு.க பறிமுதல் செய்ய உன்னை விட்டேனா பார் என்று நடு ராத்திரி கைது அரங்கேறி கேரளாவில் குருவாயூரோ ஏதோ ஒரு கோயிலில் திருஷ்டி கழித்ததெல்லாம் பழைய கதை.

தி.மு.க,அ.தி.மு.க இல்லாட்டின்னா தமிழகமே தலைகீழாக மாறிவிடும்ங்கிற மாதிரி மேலே பின்னூட்டம் காண நேர்ந்தது. அதெல்லாம் சும்மா ஹம்பக். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் வேறு மாற்றங்கள் ஏதாவது வரலாம். இரு கழகங்களின் தனி மனித ஆளுமைக்கும் அப்பால் ,குறைகளுக்கும் அப்பால் திராவிடத்தின் வேர்கள் இன்னும் தமிழகத்தில் வேரூன்றியே உள்ளது. பி.ஜே.பி , காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமிழகத்தில் நிலைபட முடியாது. இந்திய அரசியல் இன்னும் மாநிலங்களை சார்ந்தே இருக்கிறது.

நீங்க சொல்ல வந்த இரு பொருளாக தொலைக்காட்சி விவாதம்,தி.மு.க வை இப்படி போட்டு சாத்துறாங்களே என்கிற அங்கலாய்ப்பில் தொலைக்காட்சி விவாதம் பின்னோக்கியே நிற்கிற மாதிரி பின்னூட்டங்கள் உள்ளன.

ஜோதிஜி அழகான கேள்விகளை முன் வைத்தார். அதற்கு நேரடியாக பதில் சொல்லும் , வலுவில்லாத நிலையில் உங்களை தி.மு.க வைத்திருக்கிறது.

ஊடகம் மூலமாக சன் தொலைக்காட்சி கொண்டு வந்த கலாச்சார சீரழிவு,தமிழ் மொழிக்கே இடமில்லாமல் I am entertainment....entertainment ....entertainment என்ற இந்தி வசனம் மாதிரி!!! சன் டி.வியின் குறைகளில் தி.மு.கவும் ,கலைஞரும் துவக்க கால பங்குதாரர்கள். சரி! புதிதாக கலைஞர் தொலைக்காட்சி கொண்டு வந்து எந்த தமிழ் மக்களின் நலனை முன் வைத்தது. ஜாதி அரசியல் செய்த ராமதாஸ்,அன்புமணி கோஷ்டிகள் கூட மக்கள் தொலைக்காட்சியை மாற்றாக நடத்துகிறார்கள்.

தொலைக்காட்சி விவாதங்களை விட செய்தி வாசிப்போர்கள தனி ஆவர்த்தனம் செய்வது அழகாக உள்ளது.

ராஜ நடராஜன் said...

//பலரும் நமக்கென்ன வந்தது என்று நடுநிலைக் கருத்துக்களைச் சொல்லாமல் கடந்து போய்விடுவதால்தான் பலருக்கும் எந்த முடிவு எடுப்பது என்று தெரியாத குழப்பமும், பரப்பப்படுகிற செய்திக்கருத்தோட்டங்கள் எல்லாம் உண்மைதான் போலும் என்ற மாயையும் ஏற்பட்டுவிடுகிறது//

அமுதவன் சார்! நீங்க எங்கே நடுநிலைக் கருத்தை இந்த பதிவில் வைத்தீர்கள்.தி.மு.க பக்க சார்புடன் அல்லவா தென்படுகிறீர்கள்.

நடுநிலைக்கு சொந்தக்காரங்க முன்னாடியே இப்படி பேசறீங்களே:)

Amudhavan said...

Anonymous said...
\\நானும் பத்திரிகையாளன் தான்.\\

அனானி நண்பரே, நீங்கள் ஒரு அதிமுக ஆதரவாளராகவோ, அல்லது ஜெயலலிதாவின் ஆதரவாளராகவோ இருந்து இந்த பதில்களை எழுதியிருப்பீர்கள் எனில் நான் முன்னர் சொல்லியிருந்த பதிலின்படி எந்தவித மறுமொழியும் கூறாமல் பேசாமலேயே இருந்துவிட்டிருப்பேன்.
நீங்கள் ஒரு 'பத்திரிகையாளரும்கூட' என்று லேசாக உங்களை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். எனவேதான் இந்த பதில்.

\\ஆனால் திமுகவின் ரவுடியிசம் அராஜக குடும்ப ஆட்சிக்கு அதிமுகவின் ஆட்சி எவ்வளவோ மேல்.\\
\\தி.மு.கவிற்கு தான் ஆட்சி மாறவேண்டும் என்று சொல்லிகொண்டே இருக்கிறது.\\
\\மதுவை கடந்த 6 மாதமாக தான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விழிப்புணர்வு வந்திருக்கிறது.\\
\\அடுத்த வருட தேர்தலை மனதில் வைத்து தான் அனைத்து கட்சிகளும் மது விலக்கு பிரச்சினையை கையில் எடுத்து இருக்கிறது.\\
\\அவர்களின் அடுத்த சீசன் 2021 சட்டமன்ற தேர்தலிக்கு 6 அல்லது 8 மாதம் முன் தான் ஆரம்பமாகும்\\

இவையெல்லாம் மேற்கண்ட உங்கள் பதிலில் நீங்கள் எழுதியுள்ள வாசகங்கள். அதாவது, ஒரு சாதாரண மறுமொழி - அதுவும் ஒரு பத்து வரிகள் - எழுதுவதற்குக்கூட நீங்கள் ஒழுங்காகத் தமிழ் கற்கவில்லை.
அதிமுகவின் ஒரு தொண்டன் இப்படி இருக்கலாம்.
ஆனால் பலரும் படிப்பதற்காக எழுதும் ஒரு பத்திரிகையாளன் இவ்வளவு பிழைகளுடன் தமிழ் எழுதலாமா?
நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லி மற்றவர்களை அரசியல் ரீதியாகத் திருத்துவதற்கு முன்பு சரியான தமிழ் கற்று எழுதப் பழகுங்கள். பிறகு தாராளமாக விவாதங்களில் இறங்கலாம். வணக்கம்.








Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\தமிழ்மணத்தில் சூடான இடுகையில் முதலிடம் பெற்று நான் பார்த்தவரைக்கும் ஒரே நாளில் இரண்டாயிரம் பேருக்கும் மேல் படித்த இந்த கட்டுரையில் நீங்க காட்டிய உழைப்பு, உத்வேகம், உண்மைகள் அனைவருக்கும் போய்ச் சேர்ந்து விட்டது என்பது உங்களின் வெற்றியே ஆகும்\\

நன்றி ஜோதிஜி நன்றி.

Amudhavan said...

ராஜ நடராஜன் said...
\\அமுதவன் சார்! நீங்க எங்கே நடுநிலைக் கருத்தை இந்த பதிவில் வைத்தீர்கள்.தி.மு.க பக்க சார்புடன் அல்லவா தென்படுகிறீர்கள். நடுநிலைக்கு சொந்தக்காரங்க முன்னாடியே இப்படி பேசறீங்களே:)\\

அதாவது, இன்றைய தொலைக்காட்சி விவாதங்கள் எப்படி நடைபெறுகின்றனவோ அவற்றுக்கு மாறான பார்வையைத்தான் நான் முன்வைத்தேன். நான் வைத்த பார்வை பக்கசார்பு எனில் தொலைக்காட்சியினர் நடந்துகொள்ளும் விதம்தான் சரியானது என்று சொல்லவருகிறீர்களா?

Anonymous said...

மொபைலில் தமிழில் எழுதும் போது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஒவ்வொரு எழுத்தாக டச் செய்ய வேண்டி இருக்கும். கம்ப்யூட்டரில் எழதுவதுபோல் சுலபமாக இருப்பதில்லை. நான் எழுதி முடித்தவுடன் சரி பார்த்து தான் publish செய்வேன். அந்த கருத்தை சரிபார்க்க மறந்து விட்டேன். முதலில் திமுகவின் தவறுகளுக்கு பதில் சொல்லுங்க. அப்பறம் என்னை விமர்சிக்கலாம். என்னை விமர்சிக்கும் சாக்கில் நைசாக நான் திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் செல்லாமல் நழுவிவிட்டீர்கள். மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அதில் ஆதாயம் தேடி தான் திமுக இவ்வளவு காலம் தமிழர்களை ஏமாற்றி ஜெயித்தது. இனி திமுகவின் சூழ்ச்சி எடுபடாது. குடும்ப ஆட்சி முறையை திமுக விடாது. அதனால் அவர்களுக்கு இனி வெற்றியும் கிட்டாது என்பது திண்ணம்...

rajan said...

ஒரு இரண்டாயிரம் சொற்களுக்கு மேல் வேறொரு தளத்தில் எழுதி இங்கு பேஸ்ட் செய்து ஒரு பின்னூட்டம் எழுதினேன்.அதனை இறுதியாக பேஸ்ட் செய்து விட்டு preview என்பதை அழுத்தினேன்.மொத்தமும் காலி,

Arul Jeeva said...

அமுதவன் அவர்களுக்கு
எனது வாழ்த்துக்கள் .மிக நீண்ட பதிவாயினும் காலத்திற்கேற்ற ஓர் அற்புத பதிவு .படிக்காத மேதைகள் மட்டுமல்லாமல் படித்த முட்டாள்களும் படித்து தெளிவுற வேண்டிய அநேக செய்திகளைத் தந்தமைக்கு நன்றி. ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா அல்லது சர்வாதிகார ஆட்சியில் இருக்கிறோமா என்ற ஐயம் அவ்வப்போது எழுந்துகொண்டுதானிருக்கிறது . தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் 2ஜி வழக்கு பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று ஆட்சி மாற்றத்தையே கொணர்ந்த ஊடகங்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் பாராமுகமாயிருந்ததன் காரணம் யாரும் அறியாமலில்லை .காலம் பதில் சொல்லும் என்று நம்புவோம் .
தங்கள் இணைய நண்பர் காரிகன் அவர்கள் ஆமோதித்து எழுத முடியாது ஆவேசப்பட்டு பின்னூட்டம் இட வேண்டியதாயும் என்னைப் போன்றோருக்கு உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவும் இப்பதிவு உள்ளது . தொடரட்டும் உங்கள் சேவை .

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்! தமிழ் மண சூடான பகுதியில் இப்போது இல்லாமல் இருந்தும் இந்த பின்னூட்டாம் உங்களுக்காக.

தொலைக்காட்சிகள் விவாத களம் எப்படி என்பதை உங்கள் பார்வையும்,அதற்கான பட ஒட்டுதல்களும் சிறப்பாகவே இருக்கின்றன என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.ஆனால் தி.மு.க பற்றிய பார்வையில் உங்கள் விவாதமும்,பின்னூட்ட மறுப்புகளும் சறுக்குகின்றன.
திருதராஷ்டிரன் மாதிரி கலைஞர் இன்னும் அரசியல் செய்வதுவே தி.மு.க வின் Asset and Liability.

Jayadev Das said...

பதிவை படிக்கும்போதே அதற்குள் முடிந்துவிடக் கூடாதே என்று கடைசி வரி வரை பதைபதைக்க வைத்த பதிவு, நன்றி சார்.

ஜோதிஜி இந்த தடவை சில கிடிக்கிப் பிடி போடும் கேள்விகளைப் போட்டு மடக்கியிருக்காரு, கேள்விகள் அருமை.

பொதுவாக ஆங்கிலச் சேனல்களில் விவாதங்களைப் பார்த்தால், என்னடா இது வெட்டு குத்துன்னு போய் முடிஞ்சிடுமோன்னு பயப்படும் அளவுக்கு இருக்கும், ஆனால் பிரச்சினை பூதாகரமாக ஊதிப் பெரிதாக்கும் இவர்கள் சில நாட்களில் அடுத்த பிரச்சினை வந்தவுடனே இதைப் போட்டுவிட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள். பரபரப்பு, அதனால் சேனல் டிஆர்பி உயர்தல், இதைத் தவிர்த்து இவர்களுக்கு பிரச்சினைக்குத் தீர்வு, மக்களுக்கு விழிப்புணர்வு, நாட்டிற்கு நன்மை என்ற வகையில் இருக்கும்படியான நோக்கம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

Jayadev Das said...



தமிழ் சேனல்களில் ரங்கராஜ் பாண்டே தன்னுடைய தனித் தன்மையால் கவரும் வகையில் நிகழ்சிகளை நடத்துகிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவரது நினைவாற்றல், அந்தந்த சமயத்திற்கு கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி மடக்கும் விதம் வியக்க வைக்கிறது. புதிய தலைமுறை கொஞ்சம் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு மாதிரி இருக்கிறது. மேலும், இவர்கள் பின்னணி முன்னாள் சாராய வியாபாரம் என்பதால் பசுத்தோல் போர்த்திய புலிகளாகவே கண்ணுக்குத் தென்படுகிறார்கள்.

வருண் said...

***ராஜ நடராஜன் said... \\அமுதவன் சார்! நீங்க எங்கே நடுநிலைக் கருத்தை இந்த பதிவில் வைத்தீர்கள்.தி.மு.க பக்க சார்புடன் அல்லவா தென்படுகிறீர்கள். நடுநிலைக்கு சொந்தக்காரங்க முன்னாடியே இப்படி பேசறீங்களே:)\\ அதாவது, இன்றைய தொலைக்காட்சி விவாதங்கள் எப்படி நடைபெறுகின்றனவோ அவற்றுக்கு மாறான பார்வையைத்தான் நான் முன்வைத்தேன். நான் வைத்த பார்வை பக்கசார்பு எனில் தொலைக்காட்சியினர் நடந்துகொள்ளும் விதம்தான் சரியானது என்று சொல்லவருகிறீர்களா?***

உங்களுக்கும் உள்ள "உள்ள விஷம்" இப்போத் தெளிவாகப் புரிகிறது..

நீங்க கவனிச்சுப் பார்த்தால் பார்ப்பனர்களை வளர்த்து விடுவது இந்த "உயர்சாதி"னு சொல்லிக்கிட்டு அலைகிற திராவிட நாதாரிகள்தான். கேட்டால் கருணாநிதிதான் எங்களை ஈழத்தாயை வணங்க வைத்தாரு னு வெக்கங்கெட்ட தனமா ஒரு பதில் வரும்..நீயே திராவிட இன துரோகிதான்.. இதுல என்னத்தை கருணாநிதியை கையைக்காட்டுற? பார்ப்பானோட சேர்ந்து இன்னைக்கும் மாட்டுக்கறி சாப்பிடுறது தப்புனு நீ பிரச்சாரம் பண்ணுற! மாட்டுக்கறி சாப்பிடுறது யாரு? உன்னால் , பார்ப்பானால் "லோ கிளாஸ்"னு வரையுறுக்கப்பட திராவிடர்கள்தான்னு நான் சொல்லணுமா என்ன? நாலு விழுக்காடு உள்ள பார்ப்பான், ஹிந்துத்தவாவுக்கு நீ இன்னைக்கும் சொம்படிக்கிற! கேட்டால் கருணாநிதிதான் என்னை மாட்டுக்கறி உண்பதற்கு எதிரா பிரச்சாரம் செய்ய சொன்னாருனு வியாக்யாணம். நீ என்ன பண்ணுற? மாட்டுக்கறி சாப்பிடுறவன் நாட்டில் போயி அவனுக்கு சேவகம் செய்ற! இங்கே வந்து பார்ப்பானோட சேர்ந்து எருமைக்கறி சாப்பிடலாம், மாட்டுக்கறிதான் தப்புனு பேசிக்கிட்டு அலையிற! என்ன எழவை எடுத்தாலும் கருணாநிதான் என்னை செயா/மோடி ஆதரவாக்கிவிட்டாரு. எனக்கு பார்ப்பனர்கள் மேல் அன்பை வளர்த்துவிட்டதும் கருணாநிதிதான், நான் மாட்டுக்கறி சாப்பிடுறவனுக்கு சேவகம் செய்வதும் கருணாநிதியாலதான் னு வெக்கெங்கெட்டதனமா சொல்லிக்கிட்டு அலைறது..

Jayadev Das said...

கலைஞர் தொலைகாட்சி ஆரம்பித்த போது, அன்றைக்கிருந்த ஆணும் பெண்ணும் ஆட்டம் போடும் ஆபாச நிகழ்ச்சி தொடங்கி, காமடி செய்யும் போட்டி வரை ஈயடிச்சான் காப்பியடித்து கருணாநிதியின் அறிவாற்றலால் "மானாட மயிலாட" என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டு பழைய கள், அதே பழைய மொந்தையில், புதிய லேபிளுடன் என்றுதான் வந்ததே தவிர இது போன்ற விவாத நிகழ்சிகளை கொண்டுவரவில்லை. இவை அப்போதே இவ்வளவு புகழ் பெற்றிருந்திருந்தால் அதையும் காப்பியடித்திருப்பார்கள்.

Jayadev Das said...

கருணாநிதியை கவிழ்க்கும் வண்ணம் நிகழ்சிகள் உள்ளனவா என்று தெரியவில்லை, ஏனெனில் எல்லா சேனல்களும் நான் பார்த்ததில்லை. ஜெயலலிதாவை குற்றம் சொன்னால் "ஏன் கருணாநிதி திருக்குவளையில் சுவற்றில் உச்சா போகவில்லையா?" என்று தான் கேட்கிறார்கள் என்று ஆதங்கப் பட்டிருக்கிறீர்கள். அதே சமயம் கருணாநிதி பண்ணிய அட்டூழியங்கள் எதைச் சொன்னாலும் ஏன் அதை இந்தம்மா செய்யவில்லையா என்ற ரீதியில் தான் 'கலக'க் கண்மணிகள் மட்டுமல்ல நீங்களும் கேட்டு வந்திருக்கிறீர்கள் என்பதை இந்த பதிவிலும், பின்னூட்டங்களிலுமே காண முடிகிறது.

காமராஜர், கக்கன் இவர்களை கருணாநிதியுடன் ஒப்பிடு என்று சொன்னால், அவர்களுக்கும் இவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது என சந்தேகமேயில்லாமல் என்னால் சொல்ல முடியும், அதே சமயம் கருணாநிதியுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டு யார் கேவலமான ஆட்சி நடைத்தினார்கள் என்று கேட்டால் பெரிய பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு எடைக்கு எடை சமமாக இருப்பார்கள். ஊழலை ஒழிக்க முயற்சி பண்ணி அதையும் மீறி அவை நடந்து விட்டன என்பது வேறு, தேர்தலில் ஜெயிக்கும் முன்னரே எவ்வளவு கொள்ளையடிக்கலாம் அதற்க்கு தமிழகத்தின் நலனை எப்படி அடகு வைக்கலாம், விற்கலாம் என்று குள்ளநரி மாதிரி திட்டம் தீட்டி நுழைவது வேறு. கருணாநிதி, ஜெயலலலிதா இருவருமே இரண்டாவது இரகத்தைச் சார்ந்தவர்கள் தான்.

ஜெயலலிதா யோக்யமா என்று கேட்கும் திமுக கட்சியினர், மற்றும் அனுதாபிகளே, ஏன் உங்கள் தலைவர் காமராஜர், கக்கன் போன்றோர் மாதிரி ஆட்சி செய்து ஜெயலலிதா கையில் ஆட்சியே செல்லாமல் தக்க வைத்துக் முடியவில்லை என்ற கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியமா?



இந்தியா முழுவதும் நடக்கும் ஊழல்களை பற்றிய புள்ளி விவரம் சேகரித்து அவற்றை வைத்து கருணாநிதியின் ஊழல்களை நியாயம் படுத்தும் அதே சமயம் பக்கத்து மாநிலமான கேரளாவுடனும் அதன் முதல்வர்களுடனும்

பசுமை காத்தல்,
மணல் இயற்க்கை வளங்களை சுரண்ட விடாமல் தடுத்தல்,
மது ஒழிப்பு
எளிமை

சென்ற இரண்டு ஆட்சிகளில் மத்தியில் உள்ள கேரள அமைச்சர்கள் மூலம் தங்கள் மாநிலத்திற்கு நம்மை
போன்ற விஷயங்களில் ஏன் உங்கள் தலைவரை ஒப்பிடுவதில்லை?

Amudhavan said...

Arul Jeeva said...
\\மிக நீண்ட பதிவாயினும் காலத்திற்கேற்ற ஓர் அற்புத பதிவு .படிக்காத மேதைகள் மட்டுமல்லாமல் படித்த முட்டாள்களும் படித்து தெளிவுற வேண்டிய அநேக செய்திகளைத் தந்தமைக்கு நன்றி. ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா அல்லது சர்வாதிகார ஆட்சியில் இருக்கிறோமா என்ற ஐயம் அவ்வப்போது எழுந்துகொண்டுதானிருக்கிறது . தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் 2ஜி வழக்கு பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று ஆட்சி மாற்றத்தையே கொணர்ந்த ஊடகங்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் பாராமுகமாயிருந்ததன் காரணம் யாரும் அறியாமலில்லை .காலம் பதில் சொல்லும் என்று நம்புவோம் . தங்கள் இணைய நண்பர் காரிகன் அவர்கள் ஆமோதித்து எழுத முடியாது ஆவேசப்பட்டு பின்னூட்டம் இட வேண்டியதாயும் என்னைப் போன்றோருக்கு உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவும் இப்பதிவு உள்ளது . தொடரட்டும் உங்கள் சேவை .\\

அருள்ஜீவா தங்களின் மனமார்ந்த பாராட்டிற்கும், நல்ல அலசலுக்கும் நன்றி. சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய எந்த விவரமும்(தீர்ப்பு தவிர) வெளியிடப்படாத நடைமுறைகளெல்லாம் இந்த நாட்டில், அதுவும் தமிழகத்தில் மட்டும்தான் சாத்தியம். குன்ஹாவின் தீர்ப்பு குறித்து சில ஏடுகளில் விரிவாகச் செய்தி வந்ததே தவிர அது நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களில் பிரதான பத்திரிகைகளில் ஏன் சில வரிச்செய்திகளுடன் அந்த விவகாரம் மறைக்கப்பட்டது என்பதற்கெல்லாம் இந்த நாட்டில் பதிலில்லை.
திரு காரிகன் தமது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் கருத்துக்களால் கோபமோ வருத்தமோ நிச்சயம் இல்லை. அவர் தொடர்ந்து தமது பங்கினை ஆற்றட்டும். தங்களுக்கு மீண்டும் எனது நன்றி.

Amudhavan said...

ராஜ நடராஜன் said...
\\ஆனால் தி.மு.க பற்றிய பார்வையில் உங்கள் விவாதமும்,பின்னூட்ட மறுப்புகளும் சறுக்குகின்றன.\\

வாதத்திற்காக நீங்கள் இதனைக் கேட்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். எனக்கு மீண்டும் இந்தக் கேள்விதான் மனதில் இருக்கிறது. 'நான் வைத்த பார்வை பக்கசார்பு எனில் தொலைக்காட்சியினர் நடந்துகொள்ளும் விதம்தான் சரியானது என்று சொல்லவருகிறீர்களா?'



Amudhavan said...

வருண் said...
\\உங்களுக்கும் உள்ள "உள்ள விஷம்" இப்போத் தெளிவாகப்
புரிகிறது..\\
வருண், இதனைத் தொடர்ந்து நீங்கள் எழுதியிருக்கும் விஷயம் தெளிவாகப் புரிகிறது. நிஜமாகவே இந்தப் பகுதி புரியவில்லை.




Amudhavan said...

Jayadev Das said..
\\பதிவை படிக்கும்போதே அதற்குள் முடிந்துவிடக் கூடாதே என்று கடைசி வரி வரை பதைபதைக்க வைத்த பதிவு,\\

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ஜெயதேவ்.

\\பிரச்சினை பூதாகரமாக ஊதிப் பெரிதாக்கும் இவர்கள் சில நாட்களில் அடுத்த பிரச்சினை வந்தவுடனே இதைப் போட்டுவிட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள். பரபரப்பு, அதனால் சேனல் டிஆர்பி உயர்தல், இதைத் தவிர்த்து இவர்களுக்கு பிரச்சினைக்குத் தீர்வு, மக்களுக்கு விழிப்புணர்வு, நாட்டிற்கு நன்மை என்ற வகையில் இருக்கும்படியான நோக்கம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\\

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் அதற்கு இவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. வேறு விதமாய் பயணிக்கப் பார்த்தால் டிஆர்பி ரேட்டிங் கவிழ்த்துவிடும். அப்புறம் இப்போது கிடைத்துக்கொண்டிருக்கும் இந்த போர் விளம்பரங்கள்கூடக் கிடைக்காது.

\\கருணாநிதியின் அறிவாற்றலால் "மானாட மயிலாட" என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டு பழைய கள், அதே பழைய மொந்தையில், புதிய லேபிளுடன் என்றுதான் வந்ததே தவிர இது போன்ற விவாத நிகழ்சிகளை கொண்டுவரவில்லை.\\

இதுவும் ஒரு மிகச்சிறு பகுதி உண்மைதான். 'மானாட மயிலாட' மட்டுமில்லை. கலைஞரின் சங்கத்தமிழ் கலைஞர் தொலைக்காட்சியில் நிறைய நாட்கள் ஒளிபரப்பப்பட்டன. அவர் எழுதிய கவிதைகள் வாரந்தோறும் அவரைப் படிக்கவைத்தே ஒளிபரப்பப்பட்டன. திருக்குறள் விளக்கம் தினசரி ஒளிபரப்பப்பட்டது. பேராசிரியர் சுபவீ, பேராசிரியர் நன்னன் போன்றோர் தொடர்ந்து காலையில் தமிழ் பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசினார்கள். உடல்நலம் சார்ந்த அறிவு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பவே செய்தார்கள். இருந்தும் என்ன செய்வது? மக்களின் பாமர ரசனைக்கென்றே அவர்கள் போட்ட 'தீனி' 'மட்டுமே மக்களால் நினைக்கப்படுகிறது. நினைக்கப்பட்டவுடன் 'விமர்சிக்கவும்' படுகிறது.

\\பக்கத்து மாநிலமான கேரளாவுடனும் அதன் முதல்வர்களுடனும் பசுமை காத்தல், மணல் இயற்க்கை வளங்களை சுரண்ட விடாமல் தடுத்தல், மது ஒழிப்பு எளிமை சென்ற இரண்டு ஆட்சிகளில் மத்தியில் உள்ள கேரள அமைச்சர்கள் மூலம் தங்கள் மாநிலத்திற்கு நம்மை போன்ற விஷயங்களில் ஏன் உங்கள் தலைவரை ஒப்பிடுவதில்லை?\\

"ஐந்து முறை கலைஞர் முதல்வராயிருந்து ஆற்றிய பணிகளை விடவும் கடந்த முறை மிக அதிகப்பணிகள் ஆற்றினார்" என்று ஸ்டாலின் நேற்றைய புதிய தலைமுறை பேட்டியில்கூடச் சொன்னார். அதுபற்றிய பட்டியல்கள் அவர்களால் திரும்பத்திரும்ப வெளியிடப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் மக்கள் கவனத்தில் கொண்டுசெல்லாமல் திமுக செய்த ஊழல்களை மட்டுமே ஊடகங்கள் மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றன.
ஆயிற்றா? அதிமுகவின் ஊழல்கள், வழக்குகள், இன்னபிற மோசடிகள் எல்லாம் சுத்தமாக மறைக்கப்பட்டு 'திமுகவை விடவும் எவ்வளவோ மேல்' இமேஜை மட்டுமே மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதுதான் விஷயம்.
மற்ற மாநில முதல்வர்களுடன் ஒப்பிடும்போது பசுமை, மணல் இயற்கை போன்ற சில விஷயங்களைச் சொல்கிறீர்கள். அவற்றையெல்லாம் காலத்திற்கேற்ப இவர்களும் செய்வார்கள். மற்றபடி எளிமை என்று சொல்கிறீர்கள் பாருங்கள்..... கலைஞரிடம் எளிமைக்கெல்லாம் பஞ்சமேயில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவரிடம்போய்ப் பேசலாம். உங்களுக்கு நாற்காலி கொடுத்து உட்காரவைத்துப் பேசும் பண்பு அவரிடம் உண்டு.








வருண் said...

***வருண் said... \\உங்களுக்கும் உள்ள "உள்ள விஷம்" இப்போத் தெளிவாகப் புரிகிறது..\\ வருண், இதனைத் தொடர்ந்து நீங்கள் எழுதியிருக்கும் விஷயம் தெளிவாகப் புரிகிறது. நிஜமாகவே இந்தப் பகுதி புரியவில்லை.***

உங்களுக்கும் புரிஞ்சிருச்சு!!!னு சொல்ல வந்தேன் சார்..வேறொன்றுமில்லை

-------------------

அதாவது மேலோட்டமாக உங்க கருத்தை ஏற்பதுபோல் ஒரு சில சொல்லாடல்கள் இருக்கும். உண்மை என்னனா முழு "ஆத்தா பக்தன்" தான் என்பதுதான். அதுவும் தான் ஏன் ஆத்தா பக்தனேன்னென்பதுக்கு பதில் "கருணாநிதிதான் என்னை அப்படி ஆக்கிப்புட்டாரு"னு இருக்கும்.

ராஜீவ் மரணத்திற்கு பிறகு கருணாநிதியால் ஈழமக்களை காப்பாத்தி தனி ஈழம் வாங்கிக் கொடுத்து இருக்க முடியும் என்று சொலவது வடிகெட்டிய அயோக்கியத்தனம் இல்லைனா ஒரு அடி முட்டாளின் உளறல் என்பது என் உறுதியான எண்ணம்!

Amudhavan said...

வருண் said...
\\அதாவது மேலோட்டமாக உங்க கருத்தை ஏற்பதுபோல் ஒரு சில சொல்லாடல்கள் இருக்கும். உண்மை என்னனா முழு "ஆத்தா பக்தன்" தான் என்பதுதான்.\\

நீங்கள் சொல்வது நூறு சதம் உண்மை வருண். பிரச்சினை என்னன்னா உங்களைப் போல் என்னால் பட்டென்று போட்டு உடைக்கமுடிவதில்லை. நீங்கள் அதில் கைதேர்ந்தவர். வெட்டொன்று துண்டு இரண்டு என்பது உங்கள் பாணி. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை உடனடியாகச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். இவர்கள் இப்போதெல்லாம் இரண்டு வேடங்களைப் போடுகிறார்கள். ஒன்று நடுநிலை என்ற பெயரில் கருணாநிதியை 'மட்டும்' திட்டுவது; இரண்டாவது எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்ற பெயரில் ஜெயலலிதாவை லேசாகத் திட்டுவதுபோல் 'பாவ்லா காட்டிவிட்டு' கருணாநிதியை எதிர்க்க கோடரியைக் கொண்டு வருவது....... ரிசல்ட் என்னவோ ஒன்றுதான் 'ஜெ வின் பக்தர்கள்'.
\\ராஜீவ் மரணத்திற்கு பிறகு கருணாநிதியால் ஈழமக்களை காப்பாத்தி தனி ஈழம் வாங்கிக் கொடுத்து இருக்க முடியும் என்று சொலவது வடிகெட்டிய அயோக்கியத்தனம் இல்லைனா ஒரு அடி முட்டாளின் உளறல் என்பது என் உறுதியான எண்ணம்!\\
அதுமட்டுமல்ல, ஈழ விவகாரத்தில் கருணாநிதி முழு துரோகம் பண்ணிவிட்டார் என்று எழுதும் முக்கால்வாசிப்பேர்களுக்கும் ஈழ ஆதரவுக்கும் சம்பந்தமேயில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அது பற்றிய விரிவான கட்டுரையொன்றையும் வரும்நாட்களில் எழுத எண்ணம்..


சகபயணி said...

கழுத்தறுபட்டுச் சாவோமா! கழுவில் ஏற்றப்பட்டுச் சாவோமா! என விவாதிப்பது போல் வேடிக்கையாக உள்ளது இவற்றைப் படிக்கும்பொழுது. நம் சென்னைத் தமிழில் சொல்ல வேண்டுமானால் இரண்டு பேருமே சரியான மொள்ளமாறிகள், முடிச்சவிக்கிகள். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு என்ன நன்மை என்று தான் பேசமுடியுமே தவிர, மக்களாகிய நம் தலையில் துண்டுதான்! ஓட்டுப்போட ஒழுங்கனவன் எவனும் இல்லாமல் தமிழன் இன்று நாதியற்றுத் தவிக்கிறான். இவ்வளவுக்கும் பிறகு கூட இவர்களுக்குச் சார்புநிலை எடுத்துப் பேச ஆளிருக்கிறது என்பது தான் வேதனையான விஷயம்.

தமிழனுக்கு நேர்ந்த இந்தப் பரிதாப நிலையொன்றும் இன்று புதிதாக முளைத்தக் கேடு அல்ல. என்றோ செய்த தவறுக்கானப் பலனைத் தமிழன் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறான், தன் தலைமுறையினரையும் பலி கொடுத்து. திரையில் பேசிய வசனங்களை உண்மை என நம்பித் தலைகால் புரியாமல் ஆடி, காமராஜரைப் போன்ற உயர்ந்தோரை, மக்கள் நலன் நாடியோரைப் புறக்கணித்ததின் பலன். [காமராஜர் ஒரு பெரிய இவரா அவர் லட்சணத்தைச் சொல்கிறேன் பார் என ஒரு படை இந்நேரம் கிளம்பிவிட்டீர்களா? அப்படி என்றால் சரி! கிளம்பாமல் போனால் தான் வியப்பு!] திரைப்பட மோகத்தில் இரு சாக்கடைகளைக் கொண்டுவந்து நாடாள விட்டுவிட்டு இப்பொழுது இந்த நாற்றத்திற்கு அந்த நாற்றம் சற்று மணமாகப் படுகிறது எனப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ளோம். தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பார்களே! அது இது தான் போலும்!

Amudhavan said...

சகபயணி said...
\\திரைப்பட மோகத்தில் இரு சாக்கடைகளைக் கொண்டுவந்து நாடாள விட்டுவிட்டு இப்பொழுது இந்த நாற்றத்திற்கு அந்த நாற்றம் சற்று மணமாகப் படுகிறது எனப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ளோம். தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பார்களே! அது இது தான் போலும்!\\
எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கலாம். எத்தனை நொள்ளை சொள்ளை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் "மாற்று சொல்லு" என்றால் தலைதெறிக்க ஓடிவிடுவதும், அல்லது அமுங்கிப் பதுங்கிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டதனால்தான் 'இருப்பதில் எது பரவாயில்லை?' என்ற எண்ணம் வருகிறது. அதிலும் மாற்று பேசுபவர்களில் 'இரண்டு கட்சிகளுமே மோசம்' என்று ஆரம்பிக்கிற அத்தனை 'அறிஞர் பெருமக்களும்' கூசாமல் அதிமுக குட்டையில் லேண்ட் ஆகிற அற்புதத்தைத்தான் தமிழ்நாடு இதுவரையிலும் கண்டுவந்திருக்கிறது. இரண்டுபேருமே மோசம் என்று பேசுகிறவர்கள் அத்தனைப் பேரின் கடைசிப் புகலிடமும் அதிமுகவாகத்தான் இருக்கிறது.


Jayadev Das said...

@ சகபயணி

நச்............... இரத்தினச் சுருக்கம், அத்தனையும் உண்மை. எனது மனக்குமுறலும் இதே.

வருண் said...

***'இரண்டு கட்சிகளுமே மோசம்' என்று ஆரம்பிக்கிற அத்தனை 'அறிஞர் பெருமக்களும்' கூசாமல் அதிமுக குட்டையில் லேண்ட் ஆகிற அற்புதத்தைத்தான் தமிழ்நாடு இதுவரையிலும் கண்டுவந்திருக்கிறது. இரண்டுபேருமே மோசம் என்று பேசுகிறவர்கள் அத்தனைப் பேரின் கடைசிப் புகலிடமும் அதிமுகவாகத்தான் இருக்கிறது.***

சரியாக சொன்னீர்கள்..A = K னு சொல்றவங்கள்ல பொதுவா எல்லாருமே பச்சைப் புளுகர்கள்! = க்கும் > க்கும் அர்த்தம் தெரியாத அபத்த சிகாமணி "ஆத்தா பக்தர்கள்" தான். :)

சகபயணி said...

//ஆனால் "மாற்று சொல்லு" என்றால் தலைதெறிக்க ஓடிவிடுவதும், அல்லது அமுங்கிப் பதுங்கிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டதனால்தான் 'இருப்பதில் எது பரவாயில்லை?' என்ற எண்ணம் வருகிறது.//

அமுதவன் அவர்களே! நீங்கள் கூறுவதும் சரிதான்! மனதில் நியாய முல்லை நடுவில் நிறுத்திச் சற்று அலசிப் பார்த்தோமானால், மாற்றை ஆதரிக்கும் மனநிலை மக்களிடம் இல்லாததால் சரியான மாற்றத்திற்கான சூழல் ஏற்படவில்லையா? இல்லை! சரியான மாற்று இல்லாது போனதால் மக்கள் இவர்களின் பின் செல்ல நிர்பந்திக்கப் படுகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா என்பது போல் கடினமான கேள்வி... அப்படித்தானே?! மக்களிடம் மாற்றத்தை வரவேற்கும் மனப்பான்மை இல்லாததே காரணம் என்பது எனது தாழ்மையானக் கருத்து. வேறு விதமாகச் சொல்வதென்றால் மாற்றத்தை உருவாக்கும் உந்து சக்தியாக மக்களின் தேவையே இருந்திருக்க வேண்டும், இருக்கவும் முடியும். ஆனால் நிதர்சனம் என்ன! பெருவாரியான தமிழக மக்களிடம் இவர்கள் அல்லாத வேறு ஒன்று தமிழகத்தில் இப்பொழுது அல்ல எதிர்காலத்தில் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புக் கூட இல்லை. அத்தகைய எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் மறந்தும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கும் இவ்விரு கட்சிகளும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு அதற்கானக் களப்பணிகளைச் சிரத்தையுடன் ஆற்றி வருகிறார்கள்.
ஓட்டுக்குப் பணம் - அனைத்து கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு
மூளையை மழுங்கடிக்க மூலைக்கு மூலை மதுக் கடைகள் - நாட்டைக் காக்கப் பிறந்த ஆண் மகவுகளுக்கு
முழு நேரமும் மெய் மறந்து மூழ்கி முத்தெடுக்க 24 X 7 உருப்பிடாத தொலைக்காட்சி நிகழ்சிகள் - பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு
இலவசப் பிச்சைகள் - ஏழை ஏமாளிகளுக்கு
இவை எல்லாம் போதாக் குறைக்கு, எஞ்சிய மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இவர்களின் ஊழல் வழக்குக் கூத்துகள், அர்த்தமில்லா வசவுகள், ஊடகங்களின் கலந்துரையாடல் நாடகங்கள், குடும்பச் சண்டைகள், பகுத்தறிவுப் பிதற்றல்கள், இலங்கைத் தமிழர் ஆதரவு அரிதாரங்கள், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரித்தாளும் விளையாட்டுக்கள்
இவற்றையும் தாண்டி யோசிப்பவனுக்குத் தீணிபோட போதுமான அளவு உள்ளூர் பிரச்சினைகள்
எதிர் குரல் எழுப்புபவனுக்கு தேச துரோக/பாதுகாப்புச் சட்டங்கள்
பணக்கார, மேல் தட்டு வகேராக்களை கணக்கில் இவர்களே சேர்ப்பதில்லை, எப்படியும் இவர்கள் ஓட்டுப் போடப் போவதில்லை என்ற தைரியத்தில்
இப்படியாக அனைத்துத் தரப்பு மக்களுக்குமாக இவர்கள் ஆற்றி வரும் தொண்டு நீண்டுகொண்டே போகிறது.

சரி விசயத்திற்கு வருவோம். முதலில் எண்ணமும், தேவையும் விதைகளாக விழுந்தால் தானே ஏதோ ஒரு விதை நம்பிக்கையாகப் பிறப்பெடுத்து, முயற்சியாக முளைவிட்டு, துணிச்சலாக அரும்பி, களைகளைக் காலி செய்து, கோட்டை சென்று கொடியை நாட்ட முடியும். அது வெற்றியோ, தோல்வியோ! 'எங்களுக்கு மாற்றம் வேண்டும்' என்பதை இந்த நாடேத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாய் பதிவித்த டெல்லி மக்களின் முனைப்பு நம்மிடம் இல்லையே! எந்த முயற்சியும் இல்லாமல் மது அருந்திவிட்டு மல்லாக்கக் கிடந்தால் மாற்றம் எங்கிருந்து வருவது!

இன்னும் விவரமாகச் சொல்வதென்றால், நம் வீடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு அரசியல் எவ்வளவு தெரியும்? புரியும்? சரி ஏதோ ஒரு பிள்ளை அரசியலில் ஈடுபட விருப்பம் தெரிவித்தால், எத்தனைப் பேர் அனுமதிப்போம்? சரி அதையும் விடுங்கள், அனுமதித்து அவர்களும் பலர் அறியும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம், நீங்கள் கூறுவது போல் அ.தி.மு.க விடம் இருந்தே மிரட்டலோ அல்லது கண்ணைக் கவரும் சலுகைகளோ முன் வைக்கப்பட்டால், விலை போகாத வீரிய விதைகளையா வித்திட்டிருக்கிறோம்! அப்படியே அவர்கள் தேரிய நெல் மணியாக நின்றாலும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கத் தெரியாத பதர் என்று தானே பட்டம் வழங்குவோம்! நாம் இவ்வாறு இருக்க நமக்கு நல்லாட்சி மட்டும் வேண்டும். எங்கிருந்து வரும்! கொதிக்கும் உலையில் அரிசி இடாமலேயே சோறு மட்டும் பொங்க வேண்டும் என்றால் எப்படி! இந்நிலைத் தொடர்ந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி நமக்கும் நம் சொந்த மண்ணிலேயே ஏற்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றேப்படுகிறது. மக்களும் அறம் தவறி, ஊழலை ஏற்றுச் செல்வதைப் பார்க்கையில், பேசாமல் உலகின் வேறு தேசங்களுக்குப் புலம் பெயர்ந்து விடலாமா என்று கூடச் சில சமயங்களில் தோன்றுகிறது. :) இலங்கை போன்ற கையகல நாட்டின் ஒரு பிரிவினரின் புலம் பெயர்தலையே தாங்க ஒண்ணாது சிறுத்து விட்டது உலகம். மக்கள் தொகையில் மயில்கல் பதித்த நம்மை வேற்று கிரகத்திற்குத் தான் தூக்கி எறிவார்கள் என நினைக்கிறேன். :p

Amudhavan said...

சகபயணி said...
\\ஓட்டுக்குப் பணம் - அனைத்து கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மூளையை மழுங்கடிக்க மூலைக்கு மூலை மதுக் கடைகள் - நாட்டைக் காக்கப் பிறந்த ஆண் மகவுகளுக்கு முழு நேரமும் மெய் மறந்து மூழ்கி முத்தெடுக்க 24 X 7 உருப்பிடாத தொலைக்காட்சி நிகழ்சிகள் - பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசப் பிச்சைகள் - ஏழை ஏமாளிகளுக்கு இவை எல்லாம் போதாக் குறைக்கு, எஞ்சிய மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இவர்களின் ஊழல் வழக்குக் கூத்துகள், அர்த்தமில்லா வசவுகள், ஊடகங்களின் கலந்துரையாடல் நாடகங்கள், குடும்பச் சண்டைகள், பகுத்தறிவுப் பிதற்றல்கள், இலங்கைத் தமிழர் ஆதரவு அரிதாரங்கள், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரித்தாளும் விளையாட்டுக்கள் இவற்றையும் தாண்டி யோசிப்பவனுக்குத் தீணிபோட போதுமான அளவு உள்ளூர் பிரச்சினைகள் எதிர் குரல் எழுப்புபவனுக்கு தேச துரோக/பாதுகாப்புச் சட்டங்கள் பணக்கார, மேல் தட்டு வகேராக்களை கணக்கில் இவர்களே சேர்ப்பதில்லை, எப்படியும் இவர்கள் ஓட்டுப் போடப் போவதில்லை என்ற தைரியத்தில் இப்படியாக அனைத்துத் தரப்பு மக்களுக்குமாக இவர்கள் ஆற்றி வரும் தொண்டு நீண்டுகொண்டே போகிறது.\\

நண்பரே உங்கள் கருத்துக்கள் யாவும் வரவேற்கத்தக்கன. நல்ல சரியான கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இங்கே பின்னூட்டமிட்டுள்ள பல நண்பர்கள் உங்களைப் போன்ற சரியான கருத்துக்கள் கொண்டவர்கள் அல்ல. அவர்களுடைய நோக்கமும் சிந்தனையும் வேறு. அதனால் இங்கு சொல்லப்படும் பல்வேறு பதில்கள் உங்களைப் போன்ற சிந்தனைக் கொண்டவர்களுக்கு அல்ல. உங்கள் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன்.

Amudhavan said...

வருண் said...
\\சரியாக சொன்னீர்கள்..A = K னு சொல்றவங்கள்ல பொதுவா எல்லாருமே பச்சைப் புளுகர்கள்! = க்கும் > க்கும் அர்த்தம் தெரியாத அபத்த சிகாமணி "ஆத்தா பக்தர்கள்" தான். :)\\

வருண், இத்தகு 'பக்தர்கள்' பெரும்பான்மையினராக நின்று பரப்பும் கருத்துக்கள்தாம் இன்று பல அப்பாவிகளையும் சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் நம்முடைய கவலையும். 'இரண்டு கட்சிகளுமே மட்டமான கட்சிகள் ஊழல் கட்சிகள், தமிழகத்தை சீரழித்த கட்சிகள், தமிழ்நாட்டை விட்டு ஒழிக்கப்படவேண்டிய கட்சிகள்' என்று ஆரம்பிப்பார்கள். அவர்கள் 'ட்யூனுக்கு' மற்றவர்கள் வந்துவிட்டார்கள் என்பது புரிந்ததும், "ஆனால் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜெவும் மோசம்தான் என்றாலும் ஜெவுக்கு எதிராகப் போடப்படும் ஓட்டு கருணாநிதி ஆட்சியைப் பிடித்துவிட வழிசெய்யும். இங்கே ரவுடிக்கட்சி திமுகதான். துடைத்து எறியப்படவேண்டிய துர்சக்தி கட்டுமரம்தான். தமிழ்நாட்டை விட்டே ஓட்டப்படவேண்டிய நபர் மஞ்சத்துண்டுதான்" என்று 'விஷயத்துக்கு' வந்துவிடுவார்கள். ஆக, அதிமுகவினரின் பிரச்சார யுக்திகளில் இதுவும் ஒன்று.
அல்லது அவர்களின் மிகமிக சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வியக்கத்தக்க பிரச்சார யுக்தி இது என்பது அவர்களின் எண்ணம். இந்த எண்ணத்தின் பின்னாலுள்ள யுக்தி மக்களுக்குச் சொல்லப்படவேண்டும்.


ravi said...

அம்மா எப்போதும் பிரஸ் ஆட்களை கிட்டவே சேர்க்க மாட்டார்.. கேஸ் போட வாய்ப்பு அதிகம்..
கலைஞர் எதாவது சொல்வார்.அதற்கு எதிராக செயல்படுவார். அதிமாக இவர்கள் அவமானபடுவது,தேவை இல்லாமல் பேசுவதால் தான்..

வீரபாண்டியன் -- இன்று நீங்கள் சொல்லும் பாண்டேவுக்கும் , இவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.. கிட்டதட்ட திமுக வின் கொ.ப.செ தான் ..
சோ- தமிழ் எதிரியான இவரை ஏன் 1996 ல் கலைஞர் சேர்த்து கொண்டார் ??
இந்த பதிவையும் படித்தேன் .2011 திமுக தோல்வி பதிவையும் படித்தேன் .
மிக மோசமான ஆட்சியை கொடுத்த பிறகும் , ஏன் அதிமுக ஜெயிக்கிறது ??
ஈழ போர், ஊழல் போன்ற காரணங்கள் சொன்னாலும் , அதிமுக ஒன்றும் கண்டிப்பாக சுத்தம் கிடையாது .. அப்படி இருந்தும் ஏன் ??
மக்கள் அதிமுக விற்கு வோட்டு போடுவது ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பார்கள் என்பதற்காகவா .. கண்டிப்பாக இல்லை ...
2006-2011 முதல் நடந்த ரியல் எஸ்டேட் மோசடிகள்.. சர்வ சாதரணமாக திமுக வினர் , போலி பத்திரங்களை வைத்து செய்த நில மோசடிகள்.. கிட்ட தட்ட சாதாரண மனிதர்கள் , கட்சி சாராதவர்கள் அனைவரும் சேர்ந்து குத்தி தள்ளிவிட்டார்கள் ..
இதில் கொடுமை, இந்த மோசடிகளில் மாட்டியது சாதாரண மனிதர்கள் ..தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வாங்கிய நிலம்/மனை/வீடு ஆக்கிரமிப்பு செய்யப்படும் போது,மக்கள் என்ன செய்வார்கள்.?.போட்டு குத்தி விட்டார்கள் ..
இன்று ஸ்டாலின் பல இடங்களில் தடுமாறுவது இந்த விஷயத்தில்தான் ..குறிப்பாக சேலம்,மதுரை, சென்னை புறநகர் , கோவை போன்ற இடங்களில் மோசமான தோல்வியை சந்தித்தார்கள் .இந்த கெட்ட பெயர் போகும் வரை, திமுக ஜெயிப்பது கடினம் தான் ..

ravi said...

மற்றபடி , 24 மணி நேரமும் என்ன செய்தி சொல்லுவது .. ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்து கொள்வது , இருப்பவன் வாயை புடுங்கி ஏதாவது சொல்ல வைப்பது , அவன் சொல்வதை வைத்து புது செய்தி உருவாக்குவது !!!
சமீபத்திய மழை வெள்ளம் சார்ந்த செய்திகள் தான் .. ஜெயா மற்றும் சன் தொலைக்காட்சி .. உச்சகட்ட நகைச்சுவை தான் ..இரண்டாமவருக்கு மழை மட்டும் தான் பிரச்னை , முன்னரவருக்கு மழையை தவிர்த்து எல்லாம் பிரச்னை ..

சார்லஸ் said...

சார்

தங்களின் இந்தப் பதிவு முற்றிலும் உண்மை என்பதற்கு இன்று தி.மு. கழகம் அறிவித்திருக்கிற கீழ்க்கண்ட அறிக்கை ஒரு சான்று.

" ஆளுங்கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளும் அ தி மு க வுக்கு ஆதரவாகவும் தி மு க வை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருவது ஒரு சில ஊடகத்துறையின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடுநிலை என்ற பெயரை சூட்டிக் கொண்டுள்ள தந்தி தொலைக்காட்சி ஆளும் அ தி மு க வுக்கு ஆதரவாகவும் தி மு க வுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறது.

குறிப்பாக பல்வேறு விவாதங்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களை வைத்துக்கொண்டு உண்மைக்கு மாறாக , தி மு க தரப்பில் பதில் அளிக்க உரிய வாய்ப்பு அளிக்காமல் ஆளும் அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதால் விவாத நிகழ்ச்சியில் திமுக வைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. "

Anonymous said...

திமுகவிலிருந்து சரவணன் என்ற வழக்கறிஞரும் திறமையாகப் பேசுகிறார். இவருக்கும் தமிழன் பிரசன்னா வயதுதான் இருக்கும்.

சரவணன்

Amudhavan said...

ஆமாம் சரவணன் நன்றாகப் பேசுகிறார்தான். அதுமட்டுமின்றி பெங்களூருவில் குன்ஹா நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றபோது அந்த வழக்கில் ஆஜரானவர் அவர். ஆனால் நெறியாளர்கள் என்ற பெயரில் வரும் அதிமுக ஆதரவு நபர்களின் திசைதிருப்பல்களுக்கு சரிந்துபோய்விடுகிறார் அவர். பிரசன்னா, பரந்தாமன், சிவஜெயராஜ் ஆகியோர் போல 'நின்று' அவற்றைப் புறந்தள்ளி பேசினார் என்றால் நன்றாக இருக்கும்.

Post a Comment